Author: அவ்வை மகள்

  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 12

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 12

    அவ்வைமகள்

    (பேராகிப் பேருக்கோர் பொருத்தமாகி)

    சமயம் எனும் உயர் அறிவியலை விவாதித்த பின், சமயத்திலும், அறிவியலிலும் புரட்சிகள் முளைப்பதன் தன்மையைக் காணுதல் பொருத்தமானதாகும்.

    சமுதாயத்தில் புரட்சிகள் உருவாகுவதற்கு, பல்வேறு காரணங்கள் உண்டு என்பது அறிஞர்களின் பொதுக்கூற்று [1]. இத்தகு காரணங்களை, பொதுவாக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் என்று இருவகையாகக்  கூறு படுத்தி, அவர்கள் அலசுவது வழக்கம். எனினும், பொருளாதார, அரசியல் காரணங்களைக் காட்டிலும், ஒரு புரட்சிக்கு, சமூகத் தீர்மானிகள்  (Social Determinants) தாம் மிகுந்த வலிமையான காரணங்களாக இருக்கின்றன என்பது ஒரு சார் அறிஞர்களின் கோட்பாடு (Theory).  அதே நேரத்தில், அறிஞர்களில் மற்றொரு சாரார் முன்வைப்பது, யாதெனில். பொருளாதார, அரசியல், மற்றும் சமூகத் தீர்மானிகள் ஆகிய இவை மூன்றையும் தாண்டி, தேசத்திற்கு வெளியே இருந்து வரும் புறக்காரணிகள் (External Factors)  தாம் ஒரு புரட்சியை உருவாக்குகின்றன என்பதே.

    இவ்வாறு வகுத்தும் பகுத்தும் பற்பல அறிஞர்கள் காட்டியுள்ள புரட்சிக்கான பல்வேறு காரணங்களை அலசி ஆராய்ந்துவிட்டு, அவற்றைச் சற்றே நெறிப்படுத்தி, புரட்சியின் முதன்மைக் காரணங்கள் இவைதாம் என  அறிஞர்கள் கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிடுகிறார்கள்:

    • வீரியம் குறைந்த பொருளாதார வளர்ச்சி (Mid-level Economic Development)
    • சுயமான குடியாட்சி அல்லாமல் வாழுதல் (Nondemocratic Regime)
    • அரசின் திறனற்ற தன்மை (State Ineffectiveness)

    தேசத்திற்கு அப்பாலிருந்து வருகிற புறக்காரணிகள் பற்றி அறிஞர்கள் பேசுவது யாதெனில், அவை புரட்சிக்கு முதன்மைக் காரணிகளாக அமைவதில்லை என்றாலும் புரட்சியைத் தூண்டுவதில் வெகுவலிமையான துருப்பாய் – பொறியாய் விளங்குகின்றன என்பதே.

    சமூகப் புரட்சிகள் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்கள் இவ்வாறு வழங்கியிருக்கிற சாராம்சத்தை நம் மொழியில், எளிமையாக, நமக்கு நாமே ஒரு விளக்கமாக அளிப்போமேயானால்,

    தாம் வாழும் தேசத்துக்கு அப்பாலிருந்து வரும் புறக்காரணிகள், மனித சிந்தனையைத் தூண்டிவிட, அத்தூண்டுதல் தரும் உத்வேகத்தில், புதியதோர் வெளிச்சம் பிறக்க, அவ்வெளிச்சத்தில், தன் சமூகத்தை பீடித்துள்ள வீரியம் குறைந்த பொருளாதார வளர்ச்சியும், தம் மக்கள், சுயமான குடியாட்சி அல்லாமல் வாழும் அவதியும், தம்மை ஆளுகின்றவனின் ஆட்சியின் திறனற்ற போக்கும், ஒருவருக்கு அறிவுப் பூர்வமாயும், உணர்வுப் பூர்வமாயும் புலப்படும்போது, அங்கே  புரட்சி உருவாகிறது.

    என்று கொள்ளலாம்.

    வள்ளலாரை, ஒரு புரட்சியாளர் என்று நம்மில் அனைவரும் கருதுகிற வேளையில், வள்ளலார், புரட்சியை வித்திடுவதற்கு ஏதுவாக மேற்கண்ட சூழல்கள் ஏதேனும் இருந்தனவா என்று இப்போது கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

    இதுபற்றி சிந்திப்போம்:

    வள்ளலார் வாழ்ந்த காலம்: அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874

    நமது வரலாற்றை ஒரு பின் நோக்குப் பார்வையாகப் பார்க்கிறபோது, வள்ளளார் பிறந்த ஆண்டே ஒரு பிரிட்டிஷ் இந்தியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு என அறிகிறோம் [2]. அதையடுத்து, அவர் ஐம்பத்தியொரு ஆண்டுகள் வாழ்ந்த முழு வாழ்க்கையின்  காலமானது, இந்தியாவின் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் என்பதும் புலனாகிறது [3]. அக்ககாலக் கட்டத்தின் நிகழ்வுகளை (குறிப்பாக அவர் சென்னையை விட்டு வெளியேறிய காலகட்டம் – 1858 – வரை) இங்கே கீழே பட்டியலிடுகிறேன்:

    • அனுபவமின்மைக்கும் தற்குறித்தன்மைக்கும் பெயர்போன பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக, ஆம்ஹெர்ஸ்ட், 1823 ஆகஸ்ட் 1 அன்று பதவியேற்று, முதல் பர்மியப்போர் எனப்படும் முதலாவது பர்மாச் சண்டைக்கு வித்திடுகிறார்.
    • 1824 நவம்பர் 1, 2 தேதிகளில் பாரக்பூர் கிளர்ச்சி வெடிக்கிறது.

    முதலாம் பர்மாச் சண்டையில் சென்று போரிடுமாறு இந்திய சிப்பாய்கள் பணிக்கப்பட்டு, போர்க்கப்பல்களில் ஏறிப்போய் பர்மா சென்று போர்புரிய உத்தரவிடப்படுகிறது. “இது அதர்மம்” என்று இந்தியச் சிப்பாய்கள் மறுக்க, அவர்களது மறுப்பினை  ஏற்க மறுத்த ப்ரிட்டிஷ் இராணுவ அதிகாரிகள், இந்தியச் சிப்பாய்கள், கட்டாயம் பர்மா சென்று போர் புரிந்துதான் ஆக வேண்டும் என்று கட்டளையிடுகிறது.  இதன் விளைவாக எழுந்தது தான், இந்திய சிப்பாய்களின் பாரக்பூர் கிளர்ச்சி. பிரிட்டிஷ் இராணுவம், கிளர்ச்சியாளர்கள்  மீது பீரங்கி தாக்குதல் நிகழ்த்த, அதில் 180 இந்தியச் சிப்பாய்கள் சுட்டுப்பொசுக்கப்பட்டார்கள். அடுத்து, 12 பேர் தூக்கிலடப்பட்டனர். சிப்பாய்த் தலைமையில் இருத்த அனைத்து இந்தியர்களையும் நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக ஆங்கிலேயர்களே நியமிக்கப்படுகிறார்கள்.

    • பிரிட்டிஷ் இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் நடந்த சண்டை முதல் பர்மியப்போர். வீரர்கள், போர்க்கருவிகள் என மனித இழப்பும் பொருள் இழப்புமாக மிகப்பெரிய அளவு நட்டத்தை இரு நாடுகளுமே சந்தித்தன. முதல் பர்மியப் போரின் இறுதியிலே மிகபெரிய பொருளாதார வீழ்ச்சியை பிரிட்டிஷ் இந்தியா சந்தித்து அதனால் அக்காலக் கட்டத்தில், பஞ்சம், பட்டினி, நோய்கள், என்  இந்திய மக்கள் அவதிப்பட்டதை நாம் அறிகிறோம்.
    • பணம் சம்பாதிப்பதுதான் எம் கொள்கை, என்கிறதான் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை, ஆம்ஹெர்ஸ்ட் ஏற்படுத்திய மனித நட்டம், பொருள் நட்டம், போராயுத நட்டம், பண நட்டம் என எல்லா நட்டத்தையும்  கூட்டிப்பார்த்துவிட்டு, “தலைமைப் பொறுப்புக்கு லாயக்கற்றவன்” என்று முடிவு கட்டி, அவரை, 1828 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 13,ஆம் நாள் பதவியிலிருந்து விலக்க, அவர், பிரிட்டனுக்குத் திரும்பிபோக ஆணையிடப்பட்டு வெளியேற்றப்படுகிறார்.
    • 1835 ல், மெக்காலேவின் பரிந்துரையின் பேரில் ஆங்கிலக் கல்விச் சட்டம் அமுலுக்கு வருகிறது. இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மேற்கத்தியப் பாடங்களை, இந்தியர்கள் ஆங்கிலத்தின் மூலம் படிக்க ஏற்பாடாகிறது. இந்தியமொழிகளின் வாயிலாகக் கல்வி பயிலுவதற்கு மானியங்கள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன அல்லது மறுக்கப்படுகின்றன. இந்தியப்பாரம்பரிய முறையில், நடந்து வந்த கல்விக்கூடங்கள் (ஒரு சிலவற்றைத் தவிர) இனி இயங்கலாகாது என்று அறிவிக்கப்படுகிறது. வெளி நாட்டிலிருந்து கிறித்துவ மத அமைப்புகள இந்தியாவில் கல்வி கூடங்கள் அமைக்க, ஊக்கம் அளிக்கப்படுகிறது (இதில் நம்மவரான ராஜா ராம் மோகன் ராய்க்கு பெரும் பங்கு உண்டு) [4].
    • டல்ஹசி பிரபுவின் அவகாசியிலிக் கொள்கை (1848 லிருந்து

    1856 வரை) அமுலுக்கு வந்து சதாரா, ஜெய்பூர், சம்பல்பூர், நாக்பூர், சான்சி, தஞ்சாவூர், உதய்பூர் ஆகிய மன்னர் சமஸ்தானங்களை பிரிட்டிஷ் அரசு அபகரித்துக் கொண்டது

    • முடிந்ததது போல் தெரிந்த பர்மாச் சண்டை, இரண்டாம் பர்மாச் சண்டையாக வெடிக்கிறது (Apr 5, 1852 – Jan 20, 1853).
    • 1857 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 29, மங்கள் பாண்டே எனும் இந்தியச் சிப்பாய், பாரக்பூரில் நிகழ்த்தியதோர் துணிச்சலான களேபரத்தால், அதனைத் தொடர்ந்து அவன் ஏப்ரல் 8, 1887ல் தூக்கிலடப்பட்டுக் கொல்லப்பட்டதும், நாடு முழுவதும் அதிர்ச்சியும் கலக்கமும் ஏற்படுகின்றன.
    • 1857 மே மாதம் 10 ஆம் நாள் வெடித்த சிப்பாய்க் கலகம் – நாடு முழுவதும் பரவுகிறது.
    • மே 31, 1857 ல்,சென்னை திருவல்லிக்கேணியில் முஸ்லிம்கள் கூடி, ஹைதராபாத் நிஜாமின் அழைப்பை ஏற்று,  பிரிட்டிஷுக்கு எதிராக, புனிதப்போர் நடத்த அறைகூவல் விடுக்கிறார்கள்.
    • 1858 ஜூன் 20 ஆம் நாள் சிப்பாய்க் கலகத்தை, குவாலியரில். பிரிட்டிஷ் இராணுவம் வெற்றிகொள்ள அதனால் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி, அவமானம், கெடுபிடிகள், கொடூரச்செயல்கள் என இந்திய தேசம் படாத பாடுபடுகிறது.
    • 1858 ஆகஸ்ட் 2 ஆம் நாள், இந்திய அரசாங்கச் சட்டம் (Government of India Act) அரங்கேறுகிறது இதன் படி, இந்தியா, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகையிலிருந்து நீக்கப்பட்டு, இங்கிலாந்தில் உள்ள British Crown எனப்படும் உச்சபட்ச ஆட்சி அமைப்பின் நேரடிப் பொறுப்பில் கொண்டுவரப்படுகிறது. சிப்பாய்க் கல்கத்தால் ஏற்பட்ட பின்விளைவு இது. இந்தியாவில், இன்னமும் கெடுபிடித்தன்மையின் கடினத்தை அதிகரிப்பதற்கான முதன்மை ஏற்பாடு இது.

    இந்நிலையில் தான் வள்ளலார், சென்னையிலிருந்து இடமாற்றம் செய்துகொண்டு சிதம்பரம் சென்று, அங்கிருந்து கருங்குழிக்குச் சென்று அங்கு 9 ஆண்டுகள் வாழ்ந்திருந்தாவாறு  இருந்த நிலையில், அவரது சமரச வேத சன்மார்க்க சங்கம் முதலான பணிகள் தொடர்கின்றன.

    மேலே வரிசைப்படுத்தியிருக்கிற 12 இத்யாதிகளையும் உற்று நோக்கினால், வள்ளலாரின் புரட்சிக்கு, அரசியல், பொருளாதாரக் காரணங்களோடு சமூகத் தீர்மானிகளும், புறக் காரணிகளும்  அமையப்பெற்றன என்பது புலனாகின்றது. (வெளிப்படையாக இருப்பதால், எந்தெந்த இத்யாதிகள் எவ்வெவை என வகைப்படுத்தத் தேவையில்லை).

    புரட்சிக்கு வித்தாக அமைவதான அனைத்து அம்சங்களும் ஒருவரது சிந்தையிலே, இறங்கி, அங்கே அவை ஒன்றுடன் ஒன்று உறவு கொண்டு சங்கமித்து  புதியதோர் பரிணாமத்துடன் முளையாய் வீறிடும் தருணம்,  அந்தப் புரட்சி எவ்வகையான புரட்சியாய் அமையும் என்பது புரட்சியாளனின் தனித்துவ குணாதிசயங்களைப் பொறுத்தது என்பதோடு அவன(ள)து இலக்கு எது என்பதையும் அவன(ள)து தீர்க்கதரிசனத் திறனையும் பொறுத்தே  அமைகிறது.

    புரட்சியாளனின் குணாதிசயங்களைப் பற்றிப் பேசுகிறவர்கள், பொதுவாக, கீழ்க்காணுபவற்றைக் குறிப்பிடுவார்கள்:

    • சுயநம்பிக்கை
    • விடாப்பிடித்தனம்
    • கொள்கை வெறி
    • சினம்
    • அச்சமின்மை
    • தீவிரம்

    ஆனால், வெறும் முப்பத்தி ஒன்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து போயின, (சுட்டுக் கொல்லப்பட்ட) கொரில்லாப் போராளியும், ஆர்ஜன்டின மார்க்சிஸ்ட் தீவிரனும். கியூபப் புரட்சியின் வேந்தனுமான ஏர்நெசஸ்டோ கேவேரா (Ernesto Guevera) [5] சொல்லுவான்: “ஒரு புரட்சியாளனுக்கு வேண்டிய  ஒன்றே ஒன்று அன்பு எனும் உணர்வு தான். இந்தப்பண்பு இல்லாத எவரையும் ஒரு உண்மையான புரட்சியாளனாக எண்ணவும் முடியாது!” என்று. (“At the risk of seeming ridiculous, let me say that the true revolutionary is guided by a great feeling of love. It is impossible to think of a true revolutionary lacking in this quality”)  [6].

    கேவேரா சும்மா அல்பசொல்பமானவன் அல்லன். “கொரில்லாத் தலைவன் தானே!” என்று எவரும் அவனை மூர்க்கன் என்று மட்டமாய் எடை போட்டுவிட முடியாது – அவன் மெத்தப் படித்தவன் – ஒரு மருத்துவன் – ஒரு எழுத்தாளன் – ஒரு ராஜதந்திரி – ராணுவக் கோட்பாளன் (Military Theorist).

    சரி, உண்மையான புரட்சியாளனுக்கு, அன்பு உணர்வு எனும் பண்பு  இருக்கவேண்டும் என்பது இன்றியமையாதது என்றால், வள்ளலாருக்கு, இந்தப் பண்பு இருந்ததா என்ற வினாவை நாம் எழுப்பத் தேவையில்லை ஏனெனில் அவரது, ஜீவகாருண்யத்தினை  உலகே அறியும். சென்னையை விட்டுத்  தான் ஏன் வெளியேறினார் என்று வெளிப்படுத்தும்  வள்ளலாரின்  “பிள்ளைப் பெரு விண்ணப்பம்” (ஆறாம் திருமுறை) இப்புரட்சியாளனினின் புரட்சியை உருவாக்கி, வழிநடத்தியது அவனுக்குள் ஊறி விளைந்திருந்த அன்பு உணர்வு என்னும் பண்பு மட்டுமே எனபதை எவருக்குமே வெளிப்படையாகத் தெரிவிக்கிறது. இப்பாடல் வரிகளைக் இக்கட்டுரைக்குக் கீழே காண்க:

    அன்பு என்றால் உலப்பிலா அன்பு கொண்டவர் சிதம்பரம் ராமலிங்கம். எல்லா உயிருமாய்த் தழைத்து, பிழைத்தவையல்லையாய்  நிற்கும் அனைத்தின் மீதும் இராமலிங்கன்  கொண்ட அந்த உலப்பிலா அன்பினால் தான், “அடிகளார்” என்றதான  அந்த சிறு வித்து “வள்ளலார்” என்கிற ஆன்மீகப் புரட்சியாளனாக வெகு இயல்பாய் வீறிட்டது.

    புரட்சி இயல் அறிஞர்கள், புரட்சிகளின் தன்மையை இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள் [1]: துரிதப் புரட்சி, திட்டமிட்ட புரட்சி என்று.

    துரிதப் புரட்சிகள் – அவ்வப்போது அடிக்கடி நிகழ்பவை. திட்டமிட்ட புரட்சிகள் எப்போதோ நடப்பவை. துரிதப் புரட்சிகள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும்  மூலதனமாய் வைத்து எழுபவை – இவற்றிற்கு அறிவும் விவேகமும் தேவை என்றாலும், பெரும்பாலும், உணர்ச்சிக் கொந்தளிப்பில் வேகவேகமாக நடத்தப்படுவதால், அறிவும் விவேகமும் முழுமையாகப் பயன்படுத்தப் படாததாலும், பின்விளைவுகளைப் பற்றிய போதிய அனுமானமும் அளவீடும் இல்லாது போவதால் – பெரும்பாலும் அவை, தோல்வியையேத் தழுவுவன. சொல்லப்போனால், துரிதப் புரட்சிகளை நடத்துவது சுலபம்.

    வள்ளளார் பிறப்பதற்குக் கொஞ்சம் முன் (1802) நடந்த வேலூர்க் கலகம், அவர் பிறந்த பின் நடந்த பாரக்பூர் கலகங்கள், சிப்பாய்க் கலகம் ஆகியனவெல்லாம் வெகு சிறப்பாகத் திட்டமிட இயலாத காரணத்தால் எதிர்ப்பார்த்த வெற்றியைத் தராமல் தோற்றுப் போயின. அது போன்றே ராஜா ராம் மோகன் ராயின் புரட்சிகரமான நடவடிக்கைகள், குறுகிய கால நோக்கில், முழுமையான ஆலோசனையின்றி, உடனடி சுயலாப நோக்கினைக் குறிவைத்து – செய்யப்பட்டதால், நாட்டிற்கு, இடர்பாடாகவே முடிந்திருந்த  நிலையினையும் அன்று வள்ளலார் தனது சிந்தையில் ஆய்வு செய்திருக்க  வேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. எனவே தான், வள்ளலார், நீண்ட நெடிய கால அவகாசம் எடுத்துக் கொண்டு,  சரியான காலம் கனியும் வரைக் காத்திருந்து பருவத்தே புரட்சிப் பயிர் விளைக்கவேண்டியதாயிற்று என்பதாக உணர்கிறோம்.

    வேலூர்க் கலகம், பாரக்பூர் கலகங்கள், சிப்பாய்க் கலகம், இவையாவற்றிலுமே இருந்தது ஒரே ஒரு அடிப்படைக் காரணம் தான். இந்தியமண்ணில் அன்று வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத உணர்வைக் கொச்சைப் படுத்தியும், புண்படுத்தியும், மதத்திற்குப் புறம்பான நடவடிகைகளில் இந்தியச் சிப்பாய்கள் ஈடுபடுமாறு அவர்களை வற்புறுத்தியும் ப்ரிட்டிஷார் நடந்து வந்தனர் என்பதாலும், கிறித்துவ மதத்தைப் பரப்புமுகமான செயல்களில் அவர்கள ஈடுபட்டனர் என்பதாலும் தான் இக்கலகங்கள் எழுந்தவையே.

    இக்கலகங்களை உற்று நோக்குங்கால், மதம் என்கிற அதி அற்புதமான நுண்மை, ஒரு சமூகக் கலாச்சாரப் பெட்டகம் என்பதை அறியா அதிகாரப் போக்கு அங்கே தெரிந்தது.

    மதத்திலே, தெய்வம் மட்டுமில்லை, தேசமும், மொழியும், இலக்கியங்களும், ஆடல்-பாடல்-ஓவியம் – சிற்பம் முதலான கலைகளும், மனிதர்களின் பழக்கவழக்கங்களும், மண்ணும், நதிகளும், காடும், மலையும், ஆகாயமும், காற்றும், மூச்சும், நம்பிக்கையும், உறவும், சுற்றமும், நட்பும், உடையும் உணவும், அணிகலன்களும், அணியாகக் கலன்களும், அலங்காரமும், புழக்கும் பொருட்களும் கூட உண்டு என்கிற உண்மையை அறியாத அல்லது ஏற்றுகொள்ள மறுத்த எஜமானத்தனம் தெரிந்தது. ஆனால் அந்த எஜமானனுக்கு, பராக்ரம பலம் இருந்தது, சேனை இருந்தது, துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தன, ஆட்சி அதிகாரம் இருந்தது.

    “நான் நினைப்பதை நான்  நடத்தியாக வேண்டும் – நீ வெறும்  அடிமைதானே – சொல்வதைச் செய் – அன்றேல்  உன் வாழ்வு என் வசம் தானே – செத்துத் தொலை!” என்கிற ராட்சதம் இருந்தது. சொல்லொணாக் கொடூர நிலையில் இருந்தது இந்தியா. இத்தகைய நிலையில், இடம், பொருள், ஏவல் என எல்லாவற்றையும் சரிவரத் தயார் செய்து கொள்ளாமல் எதனையும் செய்யமுடியாது என்கிற சூழல்.

    இடனறிதலில் வள்ளுவர் கூறுவார்:

    முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்  அரண்சேர்ந்தாம்
    ஆக்கம் பலவுந் தரும்

    பகைவர்களிடையே வாழும்போது, நாம் நினைத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்யவேண்டுமென்றால் அதற்குச் சரியான, பாதுகாப்பான, இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது இக்குறளின் எளிமையான பொருள்.

    1858 ல், பிரிட்டிஷ் மகுடம் (British Crown) என்ற உச்ச பட்ச பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ், இந்தியா வரவும், விக்டோரியா மகாராணியின் ஆட்சி தொடங்கவும், சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை வெகு மும்முரமாகிறது. கூடுதல் இராணுவப் பொறுப்புக்களை இக்கோட்டையில் வைத்து நடத்தும்படியாகிறது. சென்னையில், சாலைகள், பாலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டப்  பல்வேறு நிலைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. 1852-53ன், இரண்டாவது பர்மியப்போரின் அனுபவத்தின் அடிப்படையில், சென்னைத் துறைமுகம் விரிவாக்கத் திட்டம் தீட்டப்பட்டு, பணிகள் துவங்குகின்றன. பிரிட்டிஷ் மகுடத்தின் நேரடிப் பார்வையில் வந்த பிறகு, ப்ரிட்டிஷரரின் மிகமுக்கியமான தலைமைப் பீடங்களுள் ஒன்றானது சென்னை என்பதால், மிக அதிகமான அளவு இராணுவப் படைகள் சென்னையில் நிறுத்தப்படுகின்றன. அத்தனை இராணுவ வீரர்களுக்கும், இராணுவ அதிகாரிகளுக்குமான குடியிருப்பு, அவர்களது உல்லாச நடவடிக்கைகளுக்கான தலங்கள் என புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியும், துறைமுகத்தைச் சுற்றியும் உள்ள இடங்களும், முதல் கடற்கரைச் சாலை  (First Line Beach) மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் வெகு அளவில் பிரிட்டிஷாரின் நடமாட்டப் பகுதிகளாகின்றன.

    வள்ளலார் அப்போது சென்னையில் வாழ்ந்துவந்த ஏழு கிணறு, வீராசாமி பிள்ளைத் தெரு இருந்தது (இருப்பது) இந்தப் பகுதியில்தான். கந்த கோட்டம் இருந்ததும் (இருப்பதும்) இப்பகுதியில் தான்.

    சிப்பாய்க் கலகத்தின் போதுகூட அமைதியாகவே காணப்பட்டது சென்னை என்று வரலாற்று ஏடுகளிலே அறிகிறோம். “தருமமிகு சென்னை” என்று வள்ளலாரே வாயரப்புகழ்ந்த சென்னை தானே!. ஆனால், பிரிட்டிஷ் மகுடத்தின் நேரடிப் பார்வையில் வந்த வகையில்,  இப்போது, சென்னை, அளப்பிலா அந்நிய ஆரவாரத்தோடும், ஒருவித கெடுடுபிடியோடும் மாறிவிட்டதை  அறிகிறோம்.

    எனவே தான், தனது திட்டமிட்டப் புரட்சிக்கு, சரியான இடத்தை தேர்ந்தெடுத்து நடத்தவேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தவராக. அன்றைய நிலையில், பிரிட்டிஷாரின் ஓயாதத் தொந்தரவுகள் நிரம்பி வழிந்த சென்னையைக் காட்டிலும், வேறு இடத்தில் தனது  புரட்சியை விளைவிக்க. வள்ளலார் புறப்பட்டிருக்கவேண்டும்  என்றே நம்மால் காணமுடிகிறது.

                                                                                  (மேலும் பேசுவோம்)

    குறிப்புகள்

    “பிள்ளைப் பெரு விண்ணப்பம்” (ஆறாம் திருமுறை).

    http://www.thiruarutpa.org/thirumurai/v/T248/tm/pillaip_peru_vinnappam

    1. உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால்
      கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில்
      புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
      தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.
    2. மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை மதித்துளம் வருந்திய பிறர்தம்
      கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
      நண்ணிநின் றொருவர் அசப்பிலேஎன்னை அழைத்தபோ தடியனேன் எண்ணா
      தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.
    3. தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும்219 என்றுளம் பயந்தே
      நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
      காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை
      ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தைநீ அறிந்தது தானே.
    4. என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலோ என்கொலோ இவர்தாம்
      துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே
      வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய்
      அன்புடையவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே.
    5. காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
      ஏணுறு மாடு முதல்பல விருகம்221 இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
      கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
      வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
    6. பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் பின்முன்நோக் காதுமேல் நோக்கி
      அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் அவர்புகன் றிட்டதீ மொழிகள்
      பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் புண்ணியா நின்துதி எனும்ஓர்
      முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.
    7. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
      வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
      நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
      ஈடின்மானிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

    [1] Gizachew Tiruneh (2014). Social Revolutions: Their Causes, Patterns, and Phases   https://doi.org/10.1177/2158244014548845

    [2] Ernest Guevara https://en.wikipedia.org/wiki/Che_Guevara

    [3] P.N. Chopra, B.N. Puri, M.N, Das, and A.C. Pradan (2003). A Comprehensive History of India; Sterling Publishers.

    [4] Poonam Upadhyaya Social, Political, Economic, and Educational Ideas of Raja Rammohun Roy

    [5]  “Socialism and Man in Cuba” Archived 2008-03-23 at the Wayback Machine A letter to Carlos Quijano, editor of Marcha, a weekly newspaper published in Montevideo, Uruguay; published as “From Algiers, for Marcha: The Cuban Revolution Today” by Che Guevara on March 12, 1965

    [6] Guevara, Che. “Socialism and man in Cuba”. www.marxists.org. Archived from the original on 10 August 2017. Retrieved 6 May2018.

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 11 – உயிரிகள் உயிரற்றவற்றை விட பலம் மிக்கவர்கள் எனலாமா?

     

     

    அவ்வைமகள்

     

    வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவருமே மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்கள்; பிறவியிலேயே உண்மையான ஆய்வுணர்வு கொண்டவர்கள் எவரும், கடந்ததையும், கடப்பதையும், கடக்கப்போவதையும் அக்கு வேறு ஆணிவேறாய் நோண்டித் துருவி, பகுத்து, வகுத்து, துண்டங்களாய்க் கூறுபோட்டு, பிறர் காணுமாறு அவற்றை காட்சிக்கு வைத்து விடுவார்கள். இந்த ஆய்வுத்திறனால், அவர்கள் போற்றப்பெறுவது உண்டு. அனால் வெகு பெரும்பாலும் இவர்களது ஆய்வுகள் அவர்கள் வாழும் காலத்தில் உணரப்படாது – போற்றப்ப்படாது என்பது மட்டுமல்ல இகழ்வுக்கும் தூற்றுதலுக்கும் அவர்கள் இலக்காகவதும் ஆகும். வெகு பின்னாளில் அவர்கள் மறைவுக்குப்பின் மட்டுமே அவர்களது சிந்தனா சக்தியும், அதனால் அவர்கள் எத்தனை தீர்க்கதரிசகளாக இருந்தனர் என்பதும் அவர்களை பட்ட கட்டமும் நட்டமும், முழுமையும் வெளிவரலாகும். இவ்வகையில் வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவருமே அவர்கள் வாழ்ந்தக் காலம் கடந்தபின் உணரப்படுவது காண்க.

    ஸ்டீவ் ஜாப்ஸ் மேற்கொண்ட ஆய்வு பற்றி சிலபல நாம் அறிவோம் எனினும், அதுபற்றி விவரமாக விரைவில் பேச இருக்கிறோம். முதலில் வள்ளலாரின் ஆய்வுச் சிந்தையைச சற்றே கவனிப்போம்.

    சென்ற பகுதியில் நாம் கண்ட சமயம் என்பது யாது என்கிற ஆய்வைத்தொடர்ந்து, சமயமெனும் அறிவியல் எத்துனை உயர்வானது – எத்தனைத் திடமானது – எத்தனை வேரோட்டம் கொண்டது – எத்துணை நீரோட்டம் கொண்டது, எத்தனை உயிரோட்டம் கொண்டது என்பதை இப்போது கவனிப்போம்.

    இந்த அலசலை எளிது படுத்துவதற்காக, நாம் வாழும் பூமியின் சூரிய குடும்பத்தை மட்டும் இப்போது சிந்திப்போம். நமது சூரிய குடும்பம் பால்வண்ணப் பாதை எனப்படும் நாட்டிய மேடையில் அமைந்திருக்கிறது. இந்தப்பால்வண்ணப் பாதையில் மட்டும் 200 பில்லியன் அதாவது 2000 கோடி சூரியன்கள் உள்ளன என்பது ஒரு அறிவியல் மதிப்பீடு. இத்தனை சூரியன்களில், நமது சூரியன் ஒரு சூரியன் அவ்வளவே. நமது சூரிய குடும்பம் என்பது ஞாயிறு என்று நாம் அழைக்கும் சூரியனை மையமாக வைத்து, ஒன்பது கோள்கள் தன்னில்தான் சுழன்றபடி, சூரியனை வலம் வந்து கொண்டிருக்கின்ற ஒரு குடும்பமாகும். இந்தக் கோள்களை இருவகையாகப் பிரிக்கலாம்: உடுக்கோள் பட்டைக்கு (Asteroid Belt) உள்ளீடான கோள்கள் மற்றும் உடுக்கோள் பட்டைக்கு வெளியீடான கோள்கள் என்று.

    உடுக்கோள் பட்டை புதனுக்கும் வியாழனுக்கு இடையில் உள்ளது. பெரும்பாலான உடுக்கோள்கள் இந்த உடுக்கோள் பட்டையில் சுழன்று கொண்டிருப்பினும், லட்சக்கணக்கான உடுக்கோள்கள், வியாழனின் வட்டப் பாதையிலேயே பொருந்தியவையாய், வியாழனுக்கு கிழக்கே 60 டிகிரியிலும், மேற்கே 60 டிகிரியிலும் பொருந்தியிருக்கின்றன. ஆக, நம் சூரிய குடும்பத்தில் நாம் காணுவது என்னவென்றால், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், உடுக்கோள் பட்டை, வியாழன், சனி, நெப்ட்யூன், ப்ளூட்டோ ஆகிய கோள்கள் ஒரு சரஅடுக்காய் தம்மைத் தகவமைத்துக்கொண்டு சூரியனைச் சுழன்றபடி சுற்றிவருகின்றன என்பதே. இந்த அமைப்பில், ஒவ்வொரு கோளுக்கும், சுழலுதல் (spinning on its own axis) மற்றும் சுற்றுதல் (revolution), எனும் இருபெரு இயக்கங்களும், எடை, அளவு, வேகம், ஒளி, எத்தனைத் துணைக்கோள், சூரியனிலிருந்து எத்தனைத் தொலைவு ஆகிய ஆறு அளவீடுகளுமாக எண்குணங்கள் உள்ளன.

    சிறிது காலத்திற்கு முன்பு -ப்ளூட்டோவை, கோள் அழைத்த அறிவியல் இப்போது அது கோள் இல்லையென்று தன்னைத் தானே குழப்பிக்கொள்ளும் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய அறிவியலோ அன்றே ப்ளூட்டோவை கோள் என்று மட்டுமே உறுதி செய்தது; அதனை இன்றும் என்றும் கோளாகவேயே நிலைநிறுத்தி வருகிறது.

    ராகு- கேது என இரட்டைக்கோள்களாய் நெப்ட்யூனையும் ப்ளூட்டோவையும் காட்டிய இந்தியப் பண்டை அறிவியலை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் புதுப்புது உவகை பிறக்கும். அதுபோன்றே இன்னொரு அறிவியல் குழப்பத்தையும் அன்றே, பாரதத்தின் பண்டைய விஞ்ஞானம் தெளிந்தேற்றியது; அதுதான் நிலவு. பூமியைச் சுற்றி வருவதால் நிலவை ஒரு துணைக்கோள் என்று கொள்வது பொருத்தம் எனினும், அது உற்பத்தியான விதத்தை வைத்துப் பார்த்தால் அதனை ஒரு கோள் எனக் கொள்வதே தகும் என்பது பாரத விஞ்ஞானத்தின் பார்வை. ஏனெனில், பிற கோள்களின் துணைக்கோள்கள் உருவானது போல நிலவு உருவாகவில்லை

    முதலில் தோன்றிய பூமி (சிறிதாய் இருந்தது), ஒரு வலிய உடுக்கோளால் மோதப்பட, அப்போது அவ்வுடுக்கோள் பூமியுடன் இணைந்து, பெரிதாகியது. தொடர்ந்து அது பிளவுற்று நிலவாகவும் இப்போதைய பூமியாகவும் மாறியது. எனவே ஒரே அன்னையின் இரு குழந்தைகள் என்றவாறு இருப்பதால் நிலவை, கோளாக பாவித்தது பாரத விஞ்ஞானம். பிற கோள்களின் துணைக்கோள்கள் வேவ்வேறு உருவாகின என்றால் பெருவெடிப்பின் போது, துண்டங்களும், துகள்களும், வாயுக்களும் சேர்ந்து லட்டு உருண்டை போல மாறி அவை உருவாகின.

    இது நிற்க.

    மேற்கண்ட விளக்கித்திலிருந்து, கோள்களை ஆதிமூலத்தின் பகுதியாய் எடுத்துக்கொள்வது பொருத்தமாய்த் தெரிகிறது அல்லவா?

    இவ்வகையில் தொடர்ந்து சிந்தனையை செலுத்தும்போது நமக்குப் பொறிதட்டுவது கோள்கள் வெற்றுப் பொருட்கள் அல்லவே என்பதே! கோள்களில் பலபொருட்கள் உள்ளனவே! மலைகள், பள்ளத்தாக்குகள், பாறைகள், மண், கல், தூசி என ஓராயிரம். பூமியில் கூடுதலாக கடல்கள், நதிகள், தாவரங்கள், விலங்குகள் எனப் பல்பல்லாயிரம்!

    ஒரு கோள் இயங்குகிறது என்றால் அக்கோளில் இருக்கிற பொருட்களும் தாமே இயங்குகின்றன என்பது அடிப்படை. எனவே கோள்கள் ஆதிமூலத்தால் இயங்குவன என்றால், கோள்களாம் பருப்பொருட்களுக்குள் உள்ள பொருட்கள் யாவுமே ஆதிமூலத்தின் இயக்கத்தில் தானே இயங்குகின்றன!

    இப்போது பொருட்களைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம்:

    பொருட்கள் இருவகைப்படும் என அறிவோம்: உயிருள்ளவை; மற்றும் உயிரற்றவை. உயிரியா இல்லையா என்கிறது அல்லாமல் இவ்விரண்டையும் பார்த்தால், மூலத்தின் -அதாவது கோளின் இயக்கமன்றோ இரண்டிலும் உள்ளது. உயிரியின் இயக்கம் பார்க்க ஒருவகையாக இருக்கலாம்; உயிரற்றதின் இயக்கம் பிறிதொரு வகையாய் இருக்கலாம்; எனினும் இரண்டுமே ஒரு மூலத்தின் பிள்ளைகள் தாமே! அந்த மூலம் எது? அதுதான் கோள் – அந்தக்கோள் தான் இரண்டின் வசிப்பிடமுமே! அந்தக் கோளின் தரையிலேதான் உயிரிகளும் உயிரற்றவைகளும் நின்றும், அமர்ந்தும், கிடந்தும், பறந்து, ஊர்ந்தும், நகர்ந்தும், பறந்தும் வசிக்கின்றன. ஆக, தரை அல்லது நிலம் என்கிற ஆதாரமின்றி உயிரோ உயிரற்றவையோ எக்கோளிலும் வசிக்க இயலாது என்பது தானே உண்மை!

    சலனம் என்பது உயிரிகளின் இயக்க அடையாளம் என்கிறது அறிவியல். அதில் விலங்கினங்களுக்கு ஓட்டுமொத்தமான இடப்பெயர்வு சலனம் உண்டு என்றும் (இதனை locomotion என்பர்) தாவரஙகளுக்கு ஒட்டுமொத்த இடப்பெயர்வு சலனம் இல்லை என்பதும் ஒரு அறிவியல் புரிதல். சலனத்தை வைத்துக்கொண்டு உயிருள்ளது உயிரற்றது என வகைப்பாடு நிகழ்த்திய அறிவியல் உயிரிகளுக்கு வளர்சிதை மாற்றம் என்று ஒன்று இருப்பதாகவும் உயிரற்றவற்றுக்கு வளர்சிதை மாற்றம் இல்லை என்றும் கூறுகிறது.

    அப்படியென்றால் உயிரற்றவை வளர்வதில்லையா சிதைவதில்லையா? உயிரற்றவை சலனமிடுவதில்லையா? என்கிற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு, இன்றிய நவீன அறிவியல் உயரற்றதென வகைப்படுத்தியிருக்கும் காற்று, நெருப்பு, நீர் ஆகியவனற்றைக் கொண்டு ஆராய்வோம்.

    நீரும், நெருப்பும், காற்றும் சலனமுடையவை – அதுவும் அவை சுயமான சலனம் உடையவை – நிரந்தர சலனம் உடையவை – அவை ஒருக்காலும், உயிரிகளைப்போல உறங்கி ஓய்வெடுப்பவை அல்ல. மேலும், ஒரு உயிரியை உயிரியாய் அடையாளம் காட்டுபவை சூடும், நீரும், காற்றும் மட்டுமே! ஒருவனின் சுவாசம் நின்றுவிட்டதென்றால், அவனின் சரீரம் நீரைப்பருகி, நீரைச் சிறுநீராய் வெளியேற்றவில்லையென்றால், அவனின் உடல் சூடின்றி சில்லிட்டு விட்டதென்றால், அவனை உயிரற்ற ஜடம் என்று தானே அழைக்கிறோம்?

    ஆக, ஒரு உயிரிக்குள் நீரும், காற்றும், சூடும் சலனமிடவில்லையென்றால் அந்த உயிரி உயிரற்றதாய் கொள்ளப்படுகிறது. எனவே காற்றும், நீரும், சூடும் உயிர்மைத் தன்மை உடையன என்று கொள்வதுதானே பொருத்தம்? உயிருக்கு உயிர் அளிப்பவை என்ற வகையில் சூடும், நீரும், காற்றும் முதன்மை உயிரிகள் ஆகின்றன. நாம் உயிர்கள் என்று தம்பட்டம் அடித்துச் சொல்லும் அசடுகள் உண்மையில் உயிரிகள் அல்ல என்பது இப்போது தெற்றென விளங்குகிறது அல்லவா?

    அதேபோல், நீரும், நெருப்பும், காற்றும் என்றும் வளர்பவை தேய்பவை – இவையும் வளர்சிதை மாற்றங்கள் தாமே! காற்றையும், நெருப்பையும், நீரையும் உயிரித்தன்மை கொண்டவை என்று சொல்ல என்ன தடை? அதே போல உயிரிகளுக்கு வசிப்பிடமாய் இருப்பதால் நிலமும் உயிர்த்தன்மை உடையதே!

    சூடும், நீரும், காற்றும் ஆகாயத்தில் வியாபிப்பவை, ஆகாயத்தில் உற்பத்தியாபவை. ஆகாயம் என்பது கோளின் எல்லாத் திசைகளிலும் ஒட்டுமொத்தமாய் கபடமற்று தழுவிக் கிடப்பது. வெளி, கோளைத் தழுவும் சங்கமத்தின் சாட்சியே ஆகாயமென்பது. ஆக, ஆகாயமென்பது, கோளில் பொருத்தப்பட்டுள்ள வெளியின் வாசல். எனவே உயிர்மைப்பொருட்களின் பிறப்பிடம் எனும் வகையில் ஆகாயமும் ஒரு உயிர்மைப்பொருளேயாகிறது!

    ஆக, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய ஐந்தும் உயிர்த்தன்மை உடையவை என்பதை நம்மால் பரிபூரணமாக உணரமுடிகிறது.

    சரி, உயிரற்ற பொருட்களைக் கொஞ்சம் இப்போது கவனிக்கலாமா? மலை மேல் அருவிகளும் – மலைக்குள் சுனைகளும், மலையடிவாரத்தில் நதிகளும் சலனமிடவில்லையா?

    மலை மேல் காற்றும், மலைக்குள் காற்றும், மலையின் கீழ் காற்றும் சலனமிடவில்லையா? மலைமேல் சூடும், மலைக்குள் சூடும், மலையின் கீழ் சூடும் சலனமிடவில்லையா? மண்ணுக்குள்ளும், மண்ணின் மேலும் காற்றும், நீரும், சூடும் நித்தமும் சலனித்துக்கொண்டிருக்கின்றனவே! கோளின் உள்நடுவே இன்னும் ஆற்றொணா வெப்பம் இன்னமும் எப்பவும் தகித்துக்கொண்டிருக்கிறதே!

    மேலும், குன்றுகளும் மலைகளும் தொடர்ந்து வளருகின்றனவே. இமயமலை மட்டும் ஒவ்வொவொரு ஆண்டும் 0.2 அங்குலம் வளருகிறதே! பல குன்றுகள் காலத்தால் குறைந்தும் கரைந்தும் மறைந்து போகின்றனவே! பாலைவனத்தில் மணல்மேடுகள் வளர்வதும் சிதைவதும் நித்தம் நடக்கிறதே – இவையெல்லாம் வளர்சிதைமாற்றங்கள் இல்லையா? இவையெல்லாம் உயிர்மை நிகழ்வுகள் இல்லையா?

    சொல்லப்போனால் காற்றையும், நெருப்பையும், நீரையும் உயிருள்ளதா உயிரற்றதா என்று வகைப்படுத்த முயன்றபோது அறிவியல் அப்படியே ஆடிப்போய் விட்டது. இவற்றை வகைப்படுத்தும் வல்லமை அதற்கு இல்லை. அறிவியலின் திறன் அம்மட்டே! அறிவியலின் இந்தக் கையலாகாத்தனத்தை என்னென்பது? ஆக அறிவியல் வகைப்பாட்டில் பற்றாக்குறைகள், குளறுபடிகள் இருப்பதை உணர்க.

    இது நிற்க.

    சுருங்கச் சொல்லின், உயிர்மைத்தன்மை உடைய காற்றும், நீரும், சூடும் – மும்மாலையாய், நிலத்துடனும், ஆகாயத்துடனும் ஒருங்கிணையும்போது மட்டுமே அங்கே கோளில், உயிர்மைச் சலனம் சுழன்று சுழன்று ஜீவித்து நிற்கிறது எனக் காண்கிறோம். ஒரு கோளே உயிர்மைத்தன்மை உடையதாக இருக்கும்போது அதில் உள்ள யாவற்றுக்குமே உயிர்மைதன்மை இருப்பதாகத்தானே பொருள்?

    இந்நிலையில், உயிருள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் நாம் இதுகாறும் நாம் கூறி வந்திருக்கிற வேறுபாடுகள் – விளக்கங்கள் யாவும் அர்த்தமற்றவையாகி விடுகின்றன அல்லவா?

    இருசார் பொருட்களுக்கும் ஆதிமூலம் ஒன்று தான் என்பது விளங்குகின்றது அல்லவா?. உயிருள்ளதும் பரம்பொருளே! உயிரற்றதும் பரம்பொருளே என்பதும் புரிகின்றது அல்லவா!

    மேலும், நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்தும் விடயம் என்னவென்றால், உயிரற்றவை நிலைத்ததாகவும் உயிருள்ளவை மடிவதுமாக இருக்கின்றன என்பதுதான்! மடிகிற உயிரிகள் யாவும் ஜடமாகின்றன. நடமே ஜடம்! என்னே இந்த வேடிக்கை என வியந்து வியக்கிறோம்.

    அப்படியென்றால், உயிரிகள் ஜடமாய் முடிவதால், ஜடத்திலிருந்து தான் உயிரிகள் பிறந்தாக வேண்டும் என்பது வெளிச்சம். ஆக, ஜடத்திலிருந்து உயிரிகள் பிறந்து மீண்டும் அவை இறப்பில் ஜடமாகின்றன என்பதே தான் உண்மையல்லவா? எனவே, உயிரிகளை ஜடத்தின் உட்பிரிவு என்று கொள்வது தானே சாலப்பொருந்தும்?

    இவாறு நாம் பேசும்போது, உயிரற்ற ஜடம் என்று நாம் சொல்லும் ஒவ்வொன்றினுள்ளும் ஒரு உயிர்ப்பொறி இருந்தவாறே தான் இருக்கிறது என்பதுதானே இதன் பொருள்? அந்த உயிர்ப்பொறி, காற்று, சூடு, நீர் ஆகிய மூன்றையும் உடலுள் செலுத்தியும் வெளித்தள்ளியும் வேலை செய்தவாறு இருக்கும் வரை அந்த ஜடம் உயிரி எனும் சொல்லும்படியான அடையாளங்களுடன் சலனம் செய்கிறது அன்றேல் அச்சலனம் ஓய அது சவமாகிவிடுகிறது என்று கொள்வதுதானே பொருத்தமாக இருக்கும்?

    சரி இப்போது ஒரு வினாவை எழுப்புவோம்: கோளில் உள்ள ஒவ்வொவொரு உயிரியிலும் உள்ள அந்த நுட்பமான உயிர்ப்பொறியை இயக்கும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? ஜடப்பொருளிலிருந்து வந்ததா? சாத்தியம் இல்லை. ஏன்? ஜடப்பொருளிலிருந்து வருவதாக இருந்தால் எல்லா ஜடப்பொருட்களுமே தாமே உயிரிகளாகிவிட ஆகிவிடமுடியுமே! அல்லது அவைகளை நாம் உயிரிகளாக்கிவிட முடியுமே! அது அவ்வாறு நடப்பதில்லை அல்லவா? – நடத்தப்பட முடிவதில்லை அல்லவா?

    எனவே உயிரற்ற பொருளும் உயிருள்ள பொருளும் எல்லாவகையிலும் ஒன்றே தான் என்றாலும், உயிரற்ற பொருளில் இல்லாத ஒன்று உயிரிகளிடம் இருக்கிறது – அதுதான் உயிர்ப்பொறி என்று பொருள் கொள்ளலாமல்லவா?

    அப்படியெனில், உயிர்ப்பொறியை இயக்கும் ஆற்றல் ஜடத்திற்குப் புறத்தேஇருந்து வருவது என்பதுதானே பொருள்?

    உயிர்ப்பொறியை விசைக்கவல்ல ஆற்றல் ஜடத்தில் இல்லையென்றால் அது கோளில் இல்லை என்பது பொருள் – கோளில் இல்லையென்றால் – அது ஆகாயத்தில் இல்லையென்று பொருள் – ஆகாயத்தில் இல்லையென்றால் – அது வெளியில் இல்லை என்று பொருள் – வெளியில் இல்லையென்றால், அது பரவெளியில் இல்லை எனலாமா? பரவெளியில் இல்லாத ஒன்று உயிருள்ள ஒவ்வொன்றினுள்ளும் இருக்கிறது என்றால் அது பரவெளியின் மூலமான ஆதிமூலமாம் ஆதிப்பரவெளியாம்பரம்பொருளிலிருந்து மட்டும் தான் வர முடியும் என்று தெளிவுக்கு வருகிறோம்.

    எனவே, உயிரிகளையும் உயிரற்றவற்றையும் ஓத்தே படைத்தினும் சற்று கூடுதலான ஒரு சங்கதியை ஆதிமூலமாம் பரம்பொருள் உயிரிகளிடம் சேர்த்த வித்தையை என்னென்பது.

    இந்த உயிர்ப்பொறி பொருத்தப் பட்டதால், உயிரிகள் உயிரற்றவற்றை விட பலம் மிக்கவர்களானார்கள் எனலாமா?

    உயர்ந்தவரானார்கள் எனலாமா? என்று வினவத்தோன்றுகிறது அல்லவா?

    நல்ல கேள்விகள் தாம்!

    மேலும் பேசுவோம்!

    Share
  • தமிழில் புலி

    அவ்வைமகள்

     

    புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது நமக்கெல்லாம் பரிச்சயமான பழமொழி. இதனை, இதன் சரியான பொருள் தெரியாமல் பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்ற நிலையில் நம் சிந்தனையைக் கொஞ்சம் தமிழில் புலியின் பால் செலுத்துவது நல்லது.

    (புல் + இ = புலி) புலி எனும் வனவிலங்கு வாழ, புல் இன்றியமையாத ஒன்று. புல் இன்றி வாழாப்புலி என்பதே புலியின் இலக்கணம். புல்வெளிகளும், புதர்களும், பெரிதான நீர்வளம் கொண்ட அடர்வனங்களும் நிறைந்து இருக்கும் சூரிய ஒளி மிகுந்த, விஸ்தாரமான, பூகோளப்பகுதியிலே மட்டும் புலிவாழும்.

    புல்லையும், இலைதழைகளையும் உண்டு வாழும் மான்களும், காட்டுமாடுகளும், இலைதழைக்ளோடு, கிழங்குகளையும் பெயர்த்து உண்ணும் காட்டுப்பன்றிகளும், புலியின் பிரதான உணவு என்பதால் புல்லின்றிப் புலி இல்லை என்பதே உண்மை. அதுமட்டுமல்ல, புலியும் கூடப் புல்லை உண்ணும். புலி புல்லை உண்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு: (1) உண்ணும் உணவு – செரிக்க, (2) செரிமானக்கோளாறுகள் நீங்க, (3) விரதமிருந்து செரிமானமண்டலத்தைத் தூய்மைப்படுத்த.

    பசிக்காக ஒரு மிருகத்தை வேட்டையாடி உண்ணும் புலி – தனது ஒவ்வொரு சாப்பாட்டிற்குப் பின்னும் புல்வெளியில், புல்மெத்தையில் சாவதானமாய்ப் படுத்து அடிவயிறு புல்லில் நன்கு ஸ்பரிசுக்குமாறு உடலை லாவகம் செய்து மசாஜ் செய்தபடி, அங்குள்ள புல்லையும் பிடுங்கி உண்ணுகிறது. புல் மசாஜ் வெளிப்புறத் தூண்டுதலை உண்டாக்குகிறது, உள்ளே சென்ற புல்லோ, உண்ட உணவு செரிமானம் அடையவும் – கூடுதல் ஊட்டச்சத்துக்கள் உணவோடு சேரவும் உதவுகிறது; கால்சியம், மெக்னீசியம், மற்றும், உப்பு புலிக்குப் புல்லின் நன்கொடை.

    அதுமட்டுமல்ல, செரிமானக்கோளாறு எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் புல்லை உண்பது புலியின் வாடிக்கை. இன்னொரு ஆச்சரியமான நிகழ்வு என்னவென்றால் புலி வகையறாக்கள், மாதத்தில் ஒருநாள் வேறெதையும் உண்ணாது புல்மட்டுமே உண்டு விரதமிருக்கும். வளர்பிறையில் பதினோராம் நாளான ஏகாதசியன்று பூனைகள் அருகம்புல்லும் கற்பூரவல்லியும் மட்டும் உண்டு விரதம் இருப்பதை நாமறிவோம். தங்கள் செரிமான மண்டலத்தைப் பூனைகள் இவ்வாறு தாமே சுத்தம் செய்து கொள்ளும். புல்லை அரைத்து மெல்லும்போது சுரக்கும் உமிழ்நீர் வளப்பமும், அரைத்து மென்ற புல்லின் கொரகொரப்பும் சக்கையும் சேர்ந்து, பூனைகளின் இரைப்பையையும் குடலையும் “பிரஷ்” போட்டுத் தூய்மை செய்வதுபோல் தூய்மை செய்துவிடும். ஆனால், புல்லை பிரதானமான உணவாக உண்ணும் செரிமான மண்டலம் புலிக்கு இல்லை. எனவே புல் என்பது புலியின் உணவல்ல – அது ஒரு உணவு உதவிப்பொருள் மட்டுமே – ஒரு சுத்திகரிப்புச் சாதனம் மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

    புல்லை உண்ணும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அசைபோடும் பிராணிகள் என்கிறோம். அவை முதலில் உணவை அவசர அவசரமாய் விழுங்கி – இரைப்பையில் முதல்தளப் பதனத்தை ஏற்படுத்திவிடுகின்றன; அடுத்து, அவ்வாறு இரைப்பையில் பதனமான உணவை மீண்டு வாய்க்குள் கொண்டுவந்து – சாவதானமாய் அசைபோட்டு அரைத்து, மீண்டும் இரைப்பைக்குள் செலுத்தி செரிக்கும் நுட்பமான செரிமான மண்டல அமைப்பைக் கொண்டவையாக அவை இருக்கின்றன. (அவற்றின் இரைப்பையில், டீசல் எஞ்சினில் இருப்பதுபோல் நான்கு அறைகள் உண்டு). ஆனால், புலியின் செரிமான மண்டலமோ மிகவும் எளிமையானது. எனவே அதற்கு, உணவை செரிக்க, கூடுதல் உதவி தேவைப்படுகிறது. எனவே, உணவின் மேலீடாக, புல்லையும் உடன் உண்ணவேண்டிய அவசியம் புலிக்கு உள்ளது. ஆக, புல்லின் துணையின்றி புலியால் வாழ இயலாது என்பது தெளிவு. புலி மட்டுமல்ல – பற்பல விலங்குகளுக்கும் – உணவின் மேலீடாக புல்லையும் இன்னபிற இலைதழைகளையும், (ஏன் கல்லையும் மண்ணையும் கூட) உண்ணவேண்டிய அவசியமும் – பரிணாம வழக்கும் உள்ளது.

    உணவு மேலீடாக மட்டுமில்லாமல் காயங்களை ஆற்றிக்கொள்ளவும் கூட புல் உள்ளிட்ட இலைதழைகளை மிருகங்கள் நாடுகின்றன. இவ்வகையில் வல்லாரைக்கொடி, புலியின் உற்ற தோழன். வேட்டையிடும்போதும், வலிய மிருகத்தின் அழுத்தமான மாமிசத்தை எலும்புகளிலிருந்து இழுத்தும் கிழித்தும் உண்ணவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் புலிக்கு ஓயாமல் காயங்கள் ஏற்படும். இந்தக் காயங்களை, வல்லாரையின் மீது புரண்டும், அதன் இலை-தண்டுகளைக் கசக்கிக் காயத்தின் மேல் இட்டும் புலி தனக்குத் தானே சிகிச்சை செய்துகொள்ளுகிறது. இவ்வாறு, புலியின் ஆத்மார்த்த மருந்தாய் வல்லாரை விளங்குவதால் அதனை, “புலிப்புல்” என்றே தமிழுலகம் வழங்குகிறது. அதே போல, புலிக்கு, சமிக்ஞைகள் தருவதில் ஒரு குருவிக்கு பிரத்யேக அக்கறை இருக்கிறது. அக்குருவியை, “புலி வானம்பாடி” என்றே அழைக்கிறார்கள். அக்குருவியின் சிறகு கூட ஏறக்குறைய புலி வண்ணத்தில் கோடுகளுடன் காணப்படும். இவ்வாறு விலங்குகள் தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்வதை, இன்றைய அறிவியல், “Zoopharmacognosy” என்று பெயரிட்டு, அதனை, ஒரு தனித்துறையாக வைத்து ஆய்வு செய்து ருசிகரமான தகவல்களை அறிந்து அறிவித்து வருகிறது.

    ஆக, சாப்பாட்டிற்குப் பிறகு தாம்பூலம் என்கிற கதையாய், புல்லை உண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் புலி இருக்க, “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்று பழமொழி வருகிறதே என்ற எண்ணம் எவருக்கும் ஏற்படுவது இயல்பே. இப்பழமொழியின் உண்மையான பொருளை அறிந்து கொள்ளவேண்டுமென்றால், “புலி ” என்னும் சொல் தமிழில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

    பார்க்கப்போனால், “புலி” எனும் தமிழ் வழக்காடல் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும் சுகானுபவத்தை அள்ளிஅள்ளித் தருகிறது . இதோ காணுங்கள் கவி ரசம் சொட்டும் ஓர் அற்புத புலிக் கவிதையை (தனிப்பாடற்றிரட்டு: இரண்டாம்பாகம்; திரட்டியவர்: கா இராமசாமி நாயுடு; வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், 1914; இந்நூலை சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் நான் வாசித்திருக்கிறேன்; பெயர் தெரியாத கவிகள் பலர் இயற்றிய பாடல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன).

    புலியைக்கொடுத்து பசுவாங்கியோர் புலிப் பூங்குழலாள்
    புலியைப்பசுத்தின்னவிட்டுப் புலியைத்தினாதகற்றிப்
    புலியையரைத்துப் பலகாரஞ்செய்து பொருந்துமுகப்
    புலியைக்களிப்புடன் சாறுவைத்தாடன் புருஷனுக்கே

    புலி = பொன் ; புலி = புலி மலராம் வேங்கை மலர் ; புலி = நெல்லின் வைக்கோல்; புலி = சோளக்கதிர் ; புலி = துவரை-உளுந்து ; புலி = வடை

    இப்பாடலின் பொருள் யாதெனில்: பொன்னைக் கொடுத்து ஒரு பசுவை வாங்கியவளான, வேங்கை மலரைக்குழலில் செருகியிருந்த ஒரு பெண், நெல்லின் வைக்கோலை அப்பசு உண்ணுமாறு செய்து, சோளக்கதிரை அப்பசு தின்னாதவாறு அதனை அகற்றி விட்டு, உளுந்தையும் துவரையையும் அரைத்துப் பலகாரம் செய்து – பொரித்ததால், பொருந்திய முகத்தை உடைத்தான வடையை நன்கு புளித்த மோராலான குழம்பிலிட்டு வைத்தாள் தனது புருஷனுக்காக.

    ஆக, புலி என்பதற்கு பல பொருட்கள் உண்டு என்பது வெளிப்படை. இதுமட்டுமல்ல;

    இதேபோல், புல் எனும் சொல் பசும்புல் என்பதைத்தவிர இன்னபிற பயன்பாடுகளையும், தமிழ் வழக்கில் கொண்டுள்ளதைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக: புல்லர் (வேடர்), புல்லியர் (கீழோர்), புல்லார் (பகைவர்), புல்லல் (அணைத்தல்), புல்லிது (பாழ்பட்ட அல்லது பாவம் சோர்ந்த); புல் (களை) எனப் பல பயன்பாடுகள். புலி எனும் ஒற்றைச் சொல்லின் பயன்பாட்டையும்; புல் எனும் ஒற்றைச் சொல்லின் பயன்பாட்டையும் வைத்துப் பார்த்தால், தமிழை, மொழிகளில் புலி என்று சொல்வது தானே பொருத்தமாக இருக்கும்!

    இது நிற்க.

    இப்போது பழமொழிக்கு மீண்டும் வருவோம்: “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்கிற பழமொழியில் “புல்” என்பது பச்சைப்புல்லைக் குறிப்பதாகக் கொண்டால் – புல்லைத்தின்னும் பழக்கமுள்ள புலி என்ன பசித்தாலும், புல்லை, புலால் உண்ட பின் உணவு மேலீடாக மட்டும் உண்ணுமே தவிர ஆடுமாடுகள் போல் புல்லை, பிரதான உணவாகக் கொண்டு புல்மேய்ந்து வாழாது என்பதாகக் கொள்ளலாம்.

    எனினும், தமிழ் தர்மமாகப் பார்த்தால், இப்பழமொழியில், புல் என்பதை பசும்புல் எனக்கொள்ளாமல், “தரம் தாழ்ந்த உணவு” என்று கொள்வது தான் பொருத்தம்.

    என்னதான் பசித்தாலும் – அளவில் பெரிய – வலிய மிருகங்களை மட்டுமே புலி தானே வேட்டையாடி உண்ணுமே தவிர அற்பசொற்பமான மிருகங்களான – முயல் – எலி – பறவைகள் – பாம்பு போன்றவற்றை ஒருக்காலும் சீண்டாது. மேலும், புலியானது, என்னதான் பசித்தாலும், ஒருக்காலும் பிறர் வாய்வைத்த உணவை உண்ணவே உண்ணாது. அது மட்டுமோ? அதன் உணவை அதுவும் அதன் குடும்பமும் சுயமாக வேட்டையாடி வென்று உண்ணவேண்டும் என்பது கட்டளை. அதுவும், அது வேட்டையாடிய உணவை, அதுவும் அதன் குடும்பம் மட்டுமே முதலில் உண்ண வேண்டும் என்பது புலிக்கு மிகவும் முக்கியம். குறிப்பாக, குழந்தைகளும், பெண்ணும் உண்டபின்பே ஆண் புலி உண்ணும். வேறு ஏதாவது மிருகம் அவர்கள் உண்ணும்போது வந்து, உணவில் வாயை வைத்துவிட்டால் கடுமையான சண்டை ஏற்படும். பிறர் வாய் வைத்த அந்த உணவை அப்படியே துறந்துவிட்டுப் போகவும் புலி தயங்காது.

    இதுமட்டுமல்லாது- புல்லைத் தாண்டி, சில கூடுதல் செய்திகளையும் இங்கு தெரிந்து கொள்வது நல்லது. புலிக்கும், புல்வெளிக்கும், காடுகளுக்கும், வலிய மரங்களுக்கும்-காடுகளுக்கும் அதிநெருங்கியத் தொடர்புண்டு. முதன்மையாக, அடர்க்காடுகளும் அடர்ந்த புல்புதர்களும் புலிக்கு, உருமறைவுக்கு (Camouflage) உதவுகின்றன. (படம் காண்க: https://www.asiangeo.com/gallery/tiger-tiger-burning-bright/). ( பல உயிரிகளின் வாழ்வாதாரத்திற்ககு உருமறைவு இன்றியமையாதது என்பதை நாமறிவோம். அல்லவா?)


    அடுத்து, மரக்கிளைகளில் அமர்ந்து கால்களை ஹாயாகத் தொங்கவிட்டபடி இளைப்பாறுவது என்பது புலிகளுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு (படம் காண்க: dreamstime.com).

    மரத்தின் மேல் இளைப்பாறும்போது தனது எல்லைவரையறையும் சுற்றுப்புறசூழலும் சரியாக இருக்கின்றனவா என்பதை புலி சரிபார்த்துக்கொள்ளும். தனது எல்லை வரையறையை, பிற புலிக்குடும்பம் ஏதாவது திருடிக்கொள்ள முயன்றால் அங்கே ரணகளம் ஆகிவிடும் உயிர்ச்சேதம் தடுக்கவியலாது. மேலும், மேலேறிப் பார்க்கும்போது அடுத்து தன வேட்டையை எங்கு துவக்கலாம் என்பதையும் புலி தனக்குள் தீர்மானித்துக்கொள்ளும்.

    பொதுவாக, ஒரு புலிக்குடும்பம் தனக்கென்று விஸ்தாரமான பிரதேசத்தை வரையறுத்துக் கொள்கிறது; குறுகிய இடங்களில் புலியால் வாழ முடியாது. ஆடியும், சாடியும், ஒடியும், உடலுறவு கொள்ளவும், தன் குழந்தைகளுக்குப் பயிற்சி தரவும், என நிறைய இடம் தேவைப்படுகிறது ஒரு புலிக்குடும்பத்திற்கு. அதுவும் பெண் புலி, பிரசவத்திற்காக, தராளமான இடத்தை விரும்புகிறது. பிறந்த குட்டிகளை பெரிதாகும் வரை, மரங்களுக்கு கீழே – புதர்களில் குட்டிகளை மறைத்து வைப்பது புலியின் வழக்கம்.

    புலிகளின் பரிணாம வளர்ச்சியிலேயே அவை காட்டின் அவதாரமாகவே – சூழ்நிலையின் பிள்ளைகளாகவே படைக்கப்பட்டிருக்கின்றன. புலித்தோலின் மேலுள்ள வரிச் சித்திரம் நெருங்கிய மரகிளைகளையே குறிக்கிறது. இதன் காரணமாகவே, நெருங்கிய காட்டுப்பகுதிகளை – (புலியே இல்லையென்றாலும் கூட) அவற்றைப் புலிக்காடுகள் – புலிப்புதர்கள் என்றே அழைப்பதுண்டு (படம் காண்க: https://en.wikipedia.org/wiki/Tiger_bush)

    இறுதியாக, ஒன்றை நினைவிலூட்டிக்கொள்ளுவது நல்லது: வனங்களை நேசிக்கும் புலிகளுக்கு மனிதர்களைப் பிடிக்காது. மனிதர்களை விடுத்து வெகுதூரத்தில் வசிக்கவே அவை ஆசைப்படுகின்றன.+

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 10 – சமயம் எனும் உயர் அறிவியல்

    அவ்வை மகள்

    வள்ளலார் பற்றிய நமது இறையியல் சிந்தனைகளில், சமயம் எனும் உயர் அறிவியல் பற்றி பேசுவது வேண்டும். சமயம் என்பது யாது என வரையறை செய்வோமேயானால், சுய அறிவால் கடவுளை உணர்ந்து புரிந்து கொள்வது எனலாம். கடவுள் என்பது யாது என வரையறை செய்வோமேயானால், கடவும் ஆற்றலே கடவுள் எனலாம்.

    இந்நிலையில், அடுத்ததாக எந்த ஆற்றல் அது, அது எதனைக் கடவுகிறது என்கிற இரண்டு வினாக்கள் எழுகின்றன.

    இவற்றிற்கான விடையை அறியும்போது, எந்த ஆற்றல் அதிபகிரண்டமாம் ஆடலியக்கம் நிரம்பிய ஆதிப்பரவெளியை இயக்குகிறதோ அதுவே கடவுள் எனக் கொள்கிறோம். அக்கடவுள் கடவுவது என்ன என உற்றுப் பார்த்தால் ஆதிபரவெளியாம் அதிபகிரண்டத்தில் உள்ள பகிரண்டங்களாம் பல கோடி பரவெளிகளையும், அப்பரவெளிகள் ஒவ்வொன்றிலும் உள்ள கோடானுகோடி நாட்டிய அரங்குகளாம் அண்டங்களில் (காலக்ஸி) அனாயாசமாய்த் தொங்கியபடி நடமாடிக்கொண்டிருக்கிற சூரியன்கள்,நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள், உடுக்கோள்கள், உள்ளிட்ட மாபெரும் பருப்பொருட்கள் யாவற்றையும் கடவுள் கடவிக்கொண்டிருக்கிறது எனப் புரிகிறது.

    இவ்வாறாக அந்தரத்திலே நடமாடிக்கொண்டிருக்கிற அப்பருப்பொருட்களுக்கிடையே எவ்வித நூலிணைப்பும் இல்லை! நூலின்றியே – வரிசையாய்க் கோர்க்கப்பட்டிருக்கிற சரமாலையாய் – என்றும் வீழாத சரமாலையாய் – தேர்ந்த அணிவகுப்பாய் – பொருண்மையும் ஆற்றலும் ஒன்றிணைந்த சராசரமாய் அவை தொங்கிக்கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல – அவை சும்மா தொங்கிக்கொண்டிருக்கவில்லை; ஒவ்வொரு சரத்தில் உள்ள ஒவ்வொவொரு சரமணியும் தொங்கலிட்டபடியே, தனது அச்சில் தானே சுழன்றும், ஒரு மையப் பொருளைக் கவனத்தில் கொண்டபடி அந்த மையப்பொருளைச் சுற்றிச் சுற்றி ஓயாமல் வலம் வந்தபடி நடனமாடுகிறது. ஓவ்வொரு சரமணியும் இவ்வாறு தன்னில் தானே லாவகமாய்ச் சுழன்று மற்றொன்றைச் சுற்றிச் சுற்றி மெய்மறந்தவாறு சுழல் நடனமாய் நாட்டியமாட, ஒரு ஒட்டுமொத்தப் பார்வையாய் அனைத்து சரமணிகளின் நடனத்தையும் ஒருசேரப் பார்த்தால் அது அளப்பரியதான – சொற்களால் விவரிக்க இயலாத மாமாமா பிரம்மாண்டம்! அதுவும் அவை ஏனோ தானோவென்று தான்தோன்றித்தனமாய் நடனமாட வில்லை – அவற்றின் ஆடலில் – அசைவில் – நாட்டிய இயக்கத்தில் ஒழுங்கும், முறைமையும், நியதியும் இருக்கிறது. ஒரு துளி பிசகினாலும் சொல்லொணாப் பேராபத்து என்பதான நிலையில், மிகத்துல்லிய கணக்கீடு அவற்றின் சுழற்சி வேகத்திலும், இடைவெளியிலும், விட்ட அளவிலும், அவற்றின் பொருண்மையிலும், வேகத்திலும் காணப்படுகிறது.

    மேலும், ஒரு பகிரண்டத்தில் நடனமாடும் பருப்பொருட்கள் யாவும் குடும்ப உறவு கொண்டு வசித்து வருகின்றன. இந்த உறவுகளில், துணை மற்றும் பிள்ளைகள் அடங்கிய குடும்பம், உபபெருகுடும்பம், பெருகுடும்பம், மாபெரும் குடும்பம் எனத் தொகுதி-பகுதிகளான உறவு முறைகள் அமைந்திருக்கின்றன. அவை அங்கே குடும்பத்தொகுதிகளாய் ஒருங்கே ஒருமித்துச் சுழல் நடனமிடுகிற காட்சி கற்பனை எல்லைகளுக்கு அப்பாற்பட்டதொரு விந்தை. அப்பருப்பொருட்களில் பலவும் பிரமாண்டமான உஷ்ணமும், ஜ்வாலையும், சூறாவளியும் கொண்ட சீற்றத்தோடும் தீட்சணியத்தோடும், தலைவிரிகோலமாய் வெப்பக்கொழுந்துகளை அள்ளிவீசியப்படி அகோரமாய் சுழன்று கொண்டிருக்கின்றன. சில பொருட்கள் தண்மையோடு, ஆரவாரம் இல்லாமல் அமைதியாகவும், மெதுவாகவும் சுழன்று வலம் வந்து கொண்டிருக்கின்றன. சிலபொருட்கள் ஒட்டியாணம் அணிந்து ஒயிலாக விளங்க, சில அணிகலனினின்றி எளிமையாய் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொவொரு நிறம்; ஒவ்வொருபொருளுக்கும் ஒவ்வொவொரு வகை ஒளி. மேலும், சிறிது, பெரிது, மத்திமம் என உருஅளவீட்டில் அவை வெவ்வேறு. இப்பொருட்களில் பெரியவை யாவும் பெரும்பாலும் உருண்டைப்பந்துகள் போன்ற வடிவே என்றாலும், பிறவற்றில் பல உடுக்கை போன்றும், எலும்பு போன்றும், மண்டை ஓடு போன்றும், பிடித்த களிமண் பிடி போன்றும் வெவ்வேறு வடிவங்கள் கொண்டவையாய் இருக்கின்றன.

    ஒரு பகிரண்டத்தில் உள்ள காலக்சி எனப்படும் ஒரு நாட்டிய அரங்கு ஒன்றின் வடிவமைப்பைக் கொஞ்சம் உற்று நோக்குவோம். காலக்சி என்பது சுழல் கொண்ட ஒரு பறக்கும் முறுக்குச் சக்கரம் – எளிமையாகச் சொல்லப்போனால் – அது ஒரு மழுவாயுதம். காலக்சியின் மத்தியில் ஒரு திட்டு போன்ற மேட்டுப் பகுதி உள்ளது. Galactic Bulge என்றழைக்கப்படும் சிவப்பு நிறத்தில் உள்ள இந்தத் திட்டுப்பகுதியில்தான் முதிர்ந்த நட்சத்திரங்கள் செறிந்து காணப்படுகிறன. முதிர்ந்த நட்சத்திரங்கள் சிவப்பு நிறம் என்பதால் இது அழுத்தச் சிவப்பு நிறமாக இருக்கிறது. இந்த சிவப்பு மேட்டுக்கு நடுவிலே அதி உக்கிரமான ஒரு ஓட்டை – அதாவது சுழல் மையம் உள்ளது. இதுதான் காலக்சி மழுவின் – சுழற்சி மூலம். இதனை காலக்சியின் தொண்டை – நெஞ்சுக்குழி என்பது பொருத்தமாக இருக்கும். இந்த நெஞ்சுக்குழிக்கு அளப்பரிய உறிஞ்சுத்தன்மை உண்டு.

    அடுத்து காலக்சியின் கரங்களுக்கு வருவோம். காலக்சியாம் மழுவுக்குக் கரங்கள் இருக்கின்றன. நவீன அறிவியலும் இவற்றைக் கைகள் என்றே அழைக்கிறது. இந்தக்கரங்களின் தன்மை என்னவென்றால் இவற்றிற்கும் சுழலிட்டபடி சுருட்டி இயங்கும் தன்மை உண்டு. மேலும், இக்கரங்கள் பொதுவாக சிவப்புப் பின்னணியில் நீலப்புட்டாக்கள் வைத்தாற் போன்றிருக்கும். காலக்சியின் கரங்களில் புது நட்சத்திரங்கள் ஓயாமல் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. புது நட்சத்திரங்கள் பொதுவாக நீல நிறத்தத்தில் இருக்கும் என்பதால் நீல நிறப் புட்டாக்கள். பொதுவாக, ஒரு சுழல் காலக்சிக்கு (Spiral Galaxy) நான்கு பிரதான கரங்கள் உண்டு. நமது காலக்சியான பால்வண்ணப்பாதை எனும் நடன அரங்குக்கு, எட்டு கரங்கள் இருப்பதாக இந்தியாவின் சந்திராயன் வழங்கியுள்ள பதிவுப் படத்திலிருந்து அறிகிறோம். (காண்க: http://chandra.harvard.edu/photo/2006/w3/milkyway_ill.jpg). நமது காலக்சியின் அமைப்பை உற்றுப்பார்த்தால், நடுவில் உள்ள திட்டு போக , தேகம் முழுவதும் சுற்று முறுக்காய் எட்டு கரங்களும் எட்டு திசைகளிலும் சுழன்று வியாபித்திருக்கின்றன.

    நமது பால்வண்ணப் பாதை எனும் நடன அரங்கு, தடுப்பு உள்ள முறுக்குச் சுழல் சக்கரமாகும் (Barred Spiral Galaxy), தடுப்பு என்றால் உண்மையில் தடுப்பு அல்ல; தடுப்பு இருப்பது போன்ற தோற்றம். காலக்சியின் செவ்வுடலுக்கு மேலே ஒரு வெள்ளொளிப் பூச்சு சீராக அமைந்திருக்கிறது. இந்த வெண்பூச்சு காலக்சியின் கரங்களின் மேல் நெடிது ஓடுகிறது. கரங்களின் வியாபமே காலக்சியின் உடலில் பெரும் பகுதி என்பதால், நமது பால் வண்ண காலக்சி என்பது உடல் முழுவதும் வெண்ணீறு பூசப்பட்ட சிவந்த உடலாய் மிக அழாகான தோற்றம் கொண்டு விளங்குகிறது.

    காலக்சியின் கரங்களில் நட்சத்திரங்கள் தொடர்ந்து உருவாகிறது என்றோம். அந்த உருவாக்கத்தில் வாயுக்கள் விளைகின்றன. இவ்வாயுக்களில் பெரும்பகுதி ஹைட்ரஜன் வாயு. ஹைட்ரஜன் என்பது முதல் தனிமம். தனிமங்களின் ஆதி இது தான். அனைத்து வேதிமங்களுக்கும் மூல காரணம் ஹைட்ரஜன் தான். எடுத்துக் காட்டாக, நமது சூரியனில்,ஹைட்ரஜன் அணு உட்கரு சேர்க்கைக்கு உடன்பட, அங்கே இரண்டாம் தனிமமான ஹீலியம் பிறக்கிறது.

    இவ்வாறு தொடர் அணுக்கரு இணைப்பு வினைகள் தொடர்வதால், பிற தனிமங்களும் காலக்சியில் நட்சத்திரங்களின் உருவாக்கலில் விளைகின்றன. இவ்வாறான அணு உட்கரு வினைகள் காலக்சியின் கரங்களில் நிகழும்போது – கரங்கள் (தம் முறுக்குச் சுருள் விசையால்), அங்கு விளையும் வாயுக்களை, காலக்சியின் மையத்தை நோக்கி வாரி வீசுகின்றன. அவ்வாறு வீசப்படும் வாயுக்களை காலக்சியின் மையத்தில் உள்ள தொண்டை உறிஞ்ச முற்படுகிறது; (உரலில் மாவு அரைப்பதாய் கொஞ்சம் நினைவில் கொண்டு வாருங்கள் – மையத்தை நோக்கி வீசுதல் என்றால் என்னவென்று புரியும்). அப்போது, அந்த வாயுக்கள், சுழல் ஓட்டையின் வட்டவிளிம்பில் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு தான், ஒவ்வொரு காலக்சியும் தன் தொண்டையில் வாயுக்களையும், மற்ற தனிம ஆவிகளையும் (vapors of elements) உள்ளிழுத்து நிறுத்துகிறது. (இந்த வாயுக்களுடன், நீராவி கலந்திருக்க பெரும் வாய்ப்பு உள்ளது. காலக்சியின் குளிர்ப்பிரதேங்களில் பனிக்கட்டி நிரவிப்பரவி இருப்பதிலிருந்து இதனை உணரலாம். உடுக்கோள்களுக்குள்ளே நீராவித்துகள்கள் இருப்பதையும் அறிவியல் கூறுகிறது.)

    தன்னுடைய நெஞ்சுக்குழியில், மிடறு விழுங்கி – அதனை முழுங்கிக் கீழே தள்ளாமல் ஒரு மனிதனால் நிறுத்தமுடிவதைப் போல், வாயுக்களை, காலக்சி உள்ளிழுத்து நிறுத்துகிறதால் ஏற்படும் ஆற்றல் இயக்கத்தால், காலக்சியாம் மழு தங்குதடையில்லாமல் சிரஞ்சீவியாய் இயங்கிக்கொண்டே இருக்கிறது. மழுவின் தொண்டை இவ்வாறாக அடர்த்தியான வாயுக்களைத் தொண்டைக்குழியில் இருத்தி வைத்துக் கொள்ளவில்லையென்றால் மழு சரியாக விரைவாக இயங்க வாய்ப்பில்லை. எனவே காலக்சியில், தொண்டைத் தேக்கம் அதாவது மிடறு அடக்குதல் என்பது மழுவின் சுய இயக்கத்த்திற்கு ஒரு இன்றியமையாத தேவையாக இருக்கிறது என்பதை உணர்க. இந்த நுணுக்க அமைப்பை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நம் மெய் சிலிர்க்கிறது.

    அதுமட்டுமல்ல காலக்சியாம் மழு, கிடைமட்டமாகச் சுற்றவில்லை. அது சரிந்த கோணத்தில் பறக்கிற ஒரு முறுக்குச் சக்கரமாகும். சுருங்கச்சொல்லின், பகிரண்ட நடனத்தில், நடனமிடும் மேடையே சுழல்மேடை! அதுவும் அது சரிந்து சுழல்கிற மேடை!! – அதுவும் அது சும்மா அற்பசொற்பமாய்ச் சுழலவில்லை!!! வேகம் என்றால் பகீரத வேகம். பற்றாக்குறை மிகுந்த நவீன அறிவியலின் பற்றாக்குறை அளவீடுகள் படியும், அதனது பற்றாக்குறை கணக்கீட்டின் படியும், நமது பால்வண்ண காலக்சியும் , அதன் உடனிணைக் குழுவும் (Local Group), ஒரு நொடிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்று வலம் வருவதாக அறிகிறோம். அப்படியெனில், நமது காலக்சி மழுவின் இயக்கம் எத்தனை பயங்கரமானதாக இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். இது ஊனை-உயிரை ஒடுக்கி நம்மை மயிர்க்கூச்செறியவைக்கும் சர்க்கஸ் காட்சி போன்றது!

    காலக்சி மழுவின் தொண்டைத் தேக்கமும், கர இயக்கமும், அதன் வெண் பூச்சும் மட்டும் சொற்பதம் கடந்த பிரம்மாண்டம் கொண்டவை அல்ல. அதனைச்சுற்றி அமைந்திருக்கிற ஒளிவட்டமும் (Halo) அளப்பிடற்கரியது. ஒளி என்றால் அது பிரத்யேகமான ஒளி என்பதான அரிய ஒளி அது. வெள்ளொளியும் கருமையும் ஒருசேர இருக்கும் புதின ஒளி அது. இந்த ஒளியை அளவிடக் கருவிகள் இல்லை – இந்த ஒளியை வருணிக்க அளபெடைகள் இல்லை.

    காலக்சி மழுவில் உள்ள கரு ஒளி Dark Halo எனப்படுவது; இந்தக் கரு ஒளி, காலக்சி மழுவின் தொண்டையைச்சுற்றித் துவங்குவது போல் இருக்கிறது. அங்கிருந்து அது அப்படியே காலக்சி முழுவதும் இலாவகமாய்ப் பரவி விரிந்து காலக்சியின் வெளி விளிம்பைத் தாண்டி அதன் வெளிவட்டத்தில் உள்ள வெள்ளொளியோடு இரண்டறக்கலந்து நீக்கமற நிறைந்து நிற்கிறது. இந்தக் கரு ஒளியை விளக்க இன்றைய அறிவியல் பெரும்பாடுபட்டு வருகிறது. பொதுவாக இவ்வாறு, ஒரு பொருண்மை ஒளி ஒரு பொருளின் மையப்பகுதியிலிருந்து கிளம்பி உள்ளிருந்து வெளியீடாகச் சென்று, அதன் புறவட்டத்தைக் கடக்கிறது என்றால் அப்பொருளின் வேகம் குறையும். ஆனால், நமது காலக்சியின் வேகம் குறைவதில்லை. இன்றைய அறிவியல், காலக்சியின் கரு ஒளியை விளக்க வழிதெரியாமல் தன கையாலாகாத்தனத்தை இவ்வாறு கூறுகிறது: “நமது பால்வண்ணப் பாதையில் உள்ள கரு ஒளி அதிநுட்ப விசித்திரமாய் இருக்கிறது – இதில் என்ன இருக்கிறது என்று சொல்ல இயலவில்லை; ஏனெனில் அது காட்சிக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. விளக்க இயலாத ஓரிரு பொருட்கள் கொஞ்சம் தென்படுகின்றன என்று கொள்ளலாம் – அவை வரையறைக்கு உட்படுத்தமுடியாத நட்சத்திரங்களா? புரியவில்லை! ஆனால் இன்னமும் ஏதேதோ – ஏதோதோ இருக்கின்றன என்றே உறுதியாக ஹேஷியம் கூறமுடியும்! ஆனால் அவற்றையும் இக்கரு ஒளியையம் இதுகாறும் நாம் பயன்படுத்தி வந்திருக்கிற – எமக்குத் தெரிந்த ஈர்ப்பு சக்தி தியரியால் (Gravitational Theory) விளக்க வழி இல்லை.” (காண்க, இங்குள்ள முதன்மை ஆய்வுக்கட்டுரைகளை; https://en.wikipedia.org/wiki/Dark_matter_halo)

    பகிரண்டத்தின் இயக்கத்தின் முன்னே அறிவியல், கைகட்டி வாய்பொத்தி, “அவர் தலைவர்!அன்னவர்க்கே சரண் நாங்களே!” என நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து சரணாகதி ஏற்பதைக் காண்கிறோம். தனது பற்றாக்குறை கணக்கின் படி அதிபகிரண்டத்தில் சுமார் 2000 கோடி காலக்சிகள் இருக்கலாம் என்று ஊகிக்கிறது இன்றைய அறிவியல். ஆப்படியெனில் 2000 கோடி காலக்சி மழுக்களின் ஒட்டுமொத்த இயக்கம் எத்தன்மையதாய் இருக்கும் என்று மீண்டும் நீங்களே ஊகித்துக்கொள்ளவேண்டும். அதிலும் 75% காலக்சிகள் முறுக்குச் சுற்று காலக்சிகளே! ஆக்கபூர்வமான இந்த சிருஷ்டிப் பிரளயத்தை எடுத்துச் சொல்ல எந்த மொழிக்கும் எந்த கவிக்கும் திராணி இல்லை.

    ஒரு பகிரண்டத்தில் நடக்கிற நாட்டியதொகுப்பைப் பார்க்கிறபோது, அந்த நடனத்தில், மிகக்கடுமையான கட்டுப்பாடு தெரிகிறது. பிசகில்லா தர்மமும் அங்கே தலை யெடுத்து நிற்கிறது. ஒன்றை ஒன்று சார்ந்தவாறு ஒருங்கிணைந்து, வேகத்தகவமைப்பு செய்து கொண்டு அங்குள்ள பொருட்கள் அதியற்புதமானதோர் கூட்டு நடனம் செய்வதும் தெரிகிறது. அந்த நடனத்தில் தெரிகிற கட்டுப்பாடு மட்டுமின்றி அங்கே உள்ள சகிப்புத்தன்மையும் போற்றுதலுக்கு உரியது.

    பகிரண்டத்தில், ஆக்ரோஷணப் பொருட்கள் அமைதிப்பொருட்களுக்குக் கட்டுப்படுகின்றன. அமைதிப்பொருட்களோ ஆக்ரோஷணப் பொருட்களைக் கண்டு பயந்தொடுங்காமலும், அவற்றை வெறுக்காமலும், அவற்றின் இயல்பைப் பொறுத்துக்கொண்டு, அவற்றுடன் அனுசரித்தும் சமரசம் செய்து கொண்டும் வெகுஇயல்பாய்த் தம் பணியில் முழுக்கவனம் செலுத்தி இயங்குகின்றன. ஒவ்வொரு பொருளின் தனித்துவத் தன்மையும், அனைத்தின் கூட்டுப்பண்பும் சிறப்பு குணாதிசயங்களாகப் புலனாவதுதான் ஒரு பகிரண்டத்தின் அடையாளம். ஒவ்வொரு பொருளும் அதன் ஒளிநிலைக்கு ஏற்றாற்போல் நடனமிடுகிறது என்பதும் மாபெரும் விந்தை.

    ஒட்டுமொத்தமாக சுருங்கச் சொல்லவேண்டுமெனில், பகிரண்டத்தில் உள்ள பொருட்களுக்கு இடையே இருக்கிற வித்தியாசங்கள் மலைக்கும் மடுவுக்கும் போல. இருப்பினும், மாறுபாடுகளை மறந்து அவை ஒற்றுமையாய்க் களிநடம் செய்யும் விதத்தைப் பாக்கிறபோது எவருக்கும் பேரானந்தம் ஏற்படும் எனலாம். “அன்னை- அன்னை ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை!” என்ற பாரதியின் எளிய வாசகம் காண்க.

    ஒரு பகிரண்டத்தில் நிகழும் நடனத்தைக் கண்ட நாம், இப்போது பகிரண்டங்களின் தொகுப்பான அதிபகிரண்டத்து கூட்டு நடனத்தை – கூத்தைச் சிந்திப்போமென்றால், அது எத்துணை – எத்துணை ஏகாந்தமாய் இருக்கும் என்பதை நாம் உய்த்துள்ள முடியும். எவரோ இசைக்கும் தாள, சுருதி, லய இசைக்குப் பொருத்தமாய் தான் அதிபகிரண்டக் கூத்து – அக்களி நடனம் அடி தப்பாமல் வெகு சிரத்தையோடு செவ்வனே நித்தம் நடைபெறுகிறது என்பதை அறிவுப்பூர்வமாய் உணருவது நமக்கு எளிதாகிறது. அந்த இயக்குனரின் மையத்தலைமையின் இசைத்தல் இல்லையேல் – அசைத்தல் இல்லையேல் – ஆக்கினை இல்லையேல் – எந்த பகிரண்டமும், ஆதி பகிரண்டமும் இசைந்து இயங்க வாய்ப்பில்லை என்பதை நம்முள்ளம் மறுத்து மொழிய வாய்ப்பில்லை.

    மேற்கண்ட அலசலின் இறுதியில், நாம் உணர்வது யாதெனில், சத்தியமாம் – நித்தியமாம் – பகிரண்டக் கூத்தின் சீர்மையை உணருங்கால், அச்சீர்மையைத் தொழுதும் போற்றியும் குதூகலிக்கும் பக்திப் பரவசம் எவருக்கும் பிறக்கும் என்பதே.

    சிந்தித்துப் பாருங்கள் – குடியரசு நாளன்று நடக்கும் இராணுவ அணிவகுப்பைப் பார்க்கும்போதே நமக்கு உடல் புல்லரிக்கிறது என்றால். பகிரண்டத்தின் அணிவகுப்பு தரும் உணர்வை, பக்தியை, பரவசத்தை என்னெற்றுரைப்பது?

    “ஐயா!” என ஓங்கிப் புலம்பி, ஆழ்ந்தகன்று உணர்ந்து, “ஏகாந்தம்! ஏகாந்தம்! ஏகாந்தம்!” என்று ஊனும், உள்ளும் நைந்து கரைந்து, அதிபகிரண்டமாம் இந்த ஏகாந்தத்தை உருவாக்கியது யார்? இந்த ஏகாந்தத்தை வழிநடத்துவது யார்? இந்த ஏகாந்தத்தை நெறிபிறழாமல் காப்பது யார்? என்று வினாத்தொடர் கொப்புளிக்க ஆங்கு அதிபகிரண்டத்தில் நிகழும் ஒருங்கிணைந்த ஆற்றல் எழுச்சியின் பால் உயர் மரியாதை உணர்வையும், உள்ளார்ந்த பணிவையும், அச்சத்தையும் கொண்டவராகிறோம்.

    நம்முள் அதிபகிரண்டத்தின் துவக்கம் எது, எவர் அதைத் தொடக்கி வைத்தது, என்ற வினாக்கள் முளைத்து விட்டதென்றால் நமக்கு ஏற்கனவே ஒரு புரிதல் ஏற்பட்டுவிட்டது என்று பொருள்: அதாவது, தொடர் இயக்கத்தில் உள்ள அதீதப் பருப்பொருட்களை நிலைநிறுத்த ஒரு ஆற்றல்மிக்க மூலப்பொருள் நிச்சயம் அவசியம். அந்த முலமே, ஆதிப்பரவெளியாம் அதிபகிரண்டத்தில் உள்ள பகிரண்டமாம் பரவெளிநிலைகளில் காணப்படும் அனைத்து ஆற்றல்களின், அனைத்துப் பருப்பொருட்களின் துவக்கமாய் – ஆதியாய் – அமைந்திருக்க முடியும் என்பதும் உறுதியாகிறது. ஏனெனில் ஆதி இல்லாமல் எதுவும் உற்பத்தி ஆகமுடியாது. தலைமை ஆற்றல் இல்லாமல் எதுவும் இயங்கவும் வாய்ப்பில்லையே.

    மேலும், பகிரண்டத்தில் உள்ள இயக்கங்கள் யாவும் தொடர் இயக்கங்கள் – அதுவும் அவை நிலைத்ததான, சிரஞ்சீவியான உறுதித் தொடர் இயக்கங்கள் என்பதால் – இவற்றின் உற்பத்தித் தானமான அந்த பரஆற்றலாம் ஆதிமூலம் என்றும் சிரஞ்சிவியாய் நின்று அழிவற்றதன்மையுடன் அனைத்து ஆற்றல்களையும் தொடர்ந்து கண்காணித்து இயக்கும் வல்லமை உடையதானதொரு இயங்கு சக்தியாய் இருந்தாகவேண்டும் என்பதும் அவசியம். அத்தகையதான அந்த ஆதிமூலம், ஒரே க்ஷணத்தில் பொருண்மைக்குப் பொருண்மையாகவும் ஆற்றலுக்கு ஆற்றலாகவும் விளங்குவதாக ஒப்பற்ற துவிய (dual) பரம்பொருளாய் – உருவாய், அருவாய், அருஉருவாய் அமையப்பெற்றிருக்க வேண்டும் என்பதும் உறுதி.

    இப்போது, கீழ்வரும், அப்பர் அருளிய தேவாரப் பாடலைக் கொஞ்சம் உங்கள் சிந்தனைக்கு கொண்டு வாருங்கள்:

    குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,

    பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
    இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
    மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

    இப்போது, சமயம் என்பது எத்தனை உயர் அறிவியல் என்பது விளங்கும்.

    மேலும் பேசுவோம்

     

    Share
  • எழுவகைப் பெண்கள்: 12

    ரேணுகா ராஜசேகரன்

    உடல்நலம் காக்கும் புடவையும் இரவிக்கையும்

    மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக் காலால் எழுப்பும் கருத்து எம் பெண்களின் நடையிலும் உடையிலும், தினசரிப் பழக்க வழக்கங்களிலும் பிணைக்கப்பட்டது என்றேன் அல்லவா?.

    விரிந்து சுருங்கும் துருத்தியாம் பெரினியத்தை இரு கால்களால் இயக்குவதும், அவ்வியக்கத்தால் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை உடல் பூராவும் பரப்புவதுமான வித்தை என்பது தமிழ்ப்பெண்கள் வாழ்வில் நித்தியக்கட்டளையாக்கப்பட்டது என்றால் அதற்கு பெண்களுக்காகத் தெரிவு செய்யப்பட ஆடை முதற் காரணமாகும் என்று அந்த அமெரிக்க இராணுவ அதிகாரியிடம் என் உரையாடலைத் தொடர்ந்தேன்.
    எங்கள் பெண்களின் ஆடைகளின் வடிவமைப்பு ஒரு மிகப்பெரிய விஞ்ஞான அதிசயம் என்று ஆரம்பித்தேன்.
    எப்படி? என்று வினவினார்.
    அதற்கு, எளிமையான நான்கு காரணங்களை முன்வைக்கிறேன் என்று அவற்றைச் சொன்னேன்: (1) எங்கள் பாரம்பரிய இடுப்பணி பெண்ணாடைகள் கீழ்ப்புறம் திறந்திருக்கும். இரண்டு கால்களுக்கிடையே வெகு தாராளமாய்க் காற்று நுழையுமாறு செய்த ஏற்பாடு இது. அதுமட்டுமல்ல எங்களது ஆடைகள் விசாலமாய் விரியும்; இதனால், நடக்கும்போது, இந்த ஆடைகள் வெளிக்காற்றை வாகாய் சேகரித்துத் தொடர்ச்சியாய் தொடைகளுக்கிடையே விசையுடன் வீசிவிடும், இதனால் நடக்கும்போது தொடைஇடுக்குகளின் ஊடே உள்செல்லும் காற்று, விரிந்து சுருங்கும் பெரினியத்தின் வழி உள்ளீடாய்ச் செல்லும். (2) பெண்ணுறுப்பும் கருக்குழியும் எப்போதும் காற்றோட்டத்துடன் இருக்கவேண்டும் என்பது எங்கள் உடையின் நியதி; எனவே எங்கள் பெண்கள் “பாண்டீஸ்” அல்லது “ஜட்டி” எனப்படும் அடி -உள் ஆடைகளை அணியாமல் இருப்பது நெடுங்காலப் பழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. (3) எங்கள் பெண்களின் – வயிற்றில், மார்பில், மற்றும் மார்பகங்ளுக்கு நடுவில் – சூடு சேர்மானம் அடையாமல் – உடனுக்குடன் அச்சூடு உடம்பை விட்டு வெளியேறுமாறு எங்கள் மேலாடைகளும் கூட வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    அப்படியென்ன உடை அதன் பெயர் என்ன? என்றார்

    வயதுக்கு ஏற்றார் போல் கொஞ்சம் உடைத்தோற்றம் மாறுபடும் அதன் பெயரும் கொஞ்சம் மாறுபடும்.
    மிகச்சிறு பெண் என்றால் – பாடிப்பாவாடை
    சிறு பெண் என்றால் : பாவாடை – மேற்சட்டை
    பருவ வயதுப்பெண் என்றால் – பாவாடை – தாவணி – ரவிக்கை
    இளம்பெண்களிலிருந்து மூத்த பெண்கள் வரை – உள்பாவாடை – புடவை- ரவிக்கை
    இவற்றில் பாவாடை – ரவிக்கை ஆகியன தைத்த உடுப்புக்கள்; தாவணி, புடவை ஆகியன தைக்காத உடுப்புக்கள். தேவைப்பட்டால் தாவணி, புடவை இரண்டிற்கும் ஓரம் அடிப்போம். பல சமயங்களில் சேலையின் ஒரு ஓரமும் தாவணியில் இரு ஓரங்களும் பின்னல் முடிப்போடோ அல்லது குஞ்சத்தோடோ அல்லது பின்னலும் குஞ்சமும் சேர்ந்த வகையிலோ வெகு ஜோராக முடிக்கப்பட்டிருக்கும். அவற்றிற்கு ஓரம் அடிக்கும் வேலை மிச்சம்.

    உள்பாவாடையை – தைத்த உடுப்பாக அணியாமல் அதற்குண்டான துணியைப் புடவையிலேயே சேர்த்து – உள்பாவாடையைத் தவிர்க்கும் புடவைகளும் உண்டு என்று தொடர்ந்தேன்.

    எங்கள் உடைகளைத் தயாரிக்கும்போது அவ்வுடைகளில் நாங்கள் உடைக்கேற்ற படி குறிப்பிட்ட வகையிலே குறிப்பிட்ட டிசைனில் pleats அதாவது கொசுவங்கள் வைத்துத் தைக்கிறோம். இந்த கொசுவங்கள் எங்களுக்கு மிகுந்த முக்கியமானவை. தைத்ததுணியாலான உடுப்புகளாகட்டும் ஆடையாய்த் துணியை அப்படியே உடுத்தும் உடுப்புகள் ஆகட்டும் கொசுவங்களின் பால் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி, கொசுவ மடிப்புகளை ஒழுங்காய் ஒருங்கே உருவாக்கி அணிவோம் என்றேன்.

    ஓ அப்படியா? இங்கே தான் நீங்களே பார்க்கிறீர்களே நாங்கள் சில கொசுவம் வைத்த உடைகளை முக்கிய விழாக்கள் – திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு மட்டுமே உடுத்துகிறோம். ஏன் – உடுத்தமுடிகிறது என்று தான் சொல்லவேண்டும். தினம் தினம் அணிவது சாத்தியமே இல்லை – அவ்வுடுப்புக்கள் யாவும் மிகமிக விலை அதிகம். நீங்கள் எப்போதுமே அங்கு உயர்மரியாதை உடையிலே இருக்கிறீர்கள்! எனக்கு உங்களைப் பார்த்துக் கொஞ்சம் பொறாமையாகவே இருக்கிறது என்றார் சிரித்த்துக்கொண்டே.

    மிகச்சரியாகச்சொன்னீர்கள் எஙகளுக்கு உடுப்பு என்பது மிக மிக உயர்வானது – அதுவும் அதனைச் சரியாய் உடுத்தவேண்டும் – முறையாய் உடுத்த வேண்டும் – அழகாய் உடுத்தவேண்டும் என்று மிகவும் பிரயாசைப்படுவோம் – உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. சொல்லப்போனால் இங்கு கிடைக்கும் அந்த சில உயர்மரியாதை ஆடைகள் கூட பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வை தானே!எனச்சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன.

    உடையில் மதிப்பு என்பது ஒருபுறம் இருக்க உடையின் உடல்நலப் பயன்பாடுதான் எங்களது முக்கிய குறிக்கோள். கொசுவங்களை வைத்து நாங்கள் உருவாக்கும் பெண்களுக்கான உடைகள் யாவும் அவரது உடல் நலம் பேணுவதற்காகத்தான். அழகு என்பது ஒரு உடன் விளைவு அவ்வளவே. எங்கள் பெண்களின் உடையைத் தயாரிப்பது என்பதை மிக நுட்பமான பொறியியல் திறன் என்றே சொல்லமுடியும். நாங்கள் பெண்கள் உடையில் வைக்கும் ஒவ்வொரு வகை கொசுவத்திற்கும் ஒவ்வொரு பணி உண்டு. அதாவது வைத்த கொசுவத்திற்கேற்ப எங்கள் உடை இயங்கும் – அவ்வாறு அது இயங்கும்போது – வெப்ப இயக்க வினைகள் உண்டாக்கும் – அதனால் எங்களுக்கு உடலில் நலம் சேரும். பிணிகள் – தொற்றுக்கள் அகலும் என்றேன்.

    கேட்கக்கேட்க ஆச்சரியமாய் இருக்கிறதே – உங்கள் கொசுவங்களின் டிசைன் பற்றி இன்னும் கொஞ்சம் விவிரம் தாருங்களேன் என்றார்.

    முதலாவது, உடை இடுப்பில் சேரும் சுற்றளவுக்கும், உடையின் அடிச்சுற்றளவுக்கும் குறைந்த பட்சம் ஒன்றுக்கு மூன்றரை எனும் விகிதாச்சாரம் இருக்கும். இது ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதாச்சரம் வரையிலும் கூடச் செல்லும். எனவே ஒரு உடுப்புக்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் துணியின் அளவு அதிக தாராளமாக இருக்கும். அடுத்து, தைக்கும்போது, எங்கள் உடைகளை கோர் எனப்படும் பகுதிகளாக வெட்டி அந்த வெட்டுத்துண்டுகளை மட்டுமே இணைக்கிறோம். இந்த கோர்களை நாங்கள் பல வடிவங்களில் கத்தரித்துக்கொள்ளலாம்; எடுத்துக்காட்டாக அம்ரெல்லா கட் அதாவது குடை வடிவம். இதுபோன்றே சர்குலர் கட் எனப்படும் வட்ட வடிவம், , கோனிகல் கட் எனப்படும் கூம்பு வடிவம் ஆகிய பல வெட்டுக்கள் உள்ளன. இந்த வெட்டுக்கள் எங்கள் உடைகளின் அடிப்படை இன்ஜினியரிங் டிசைன் எனலாம்.

    அடுத்து, இந்த வெட்டுத்துண்டங்களை இணைக்கும் போது, இடுப்பு சேரும் இடத்தில் துணியைச் சுருக்கவேண்டும் அல்லவா? அங்கேதான் உடைக்கேற்றபடி பற்பல வடிவக் கொசுவங்களை உருவாக்கிச் சுருக்குகிறோம். என்ன டிசைனில் கொசுவம் உண்டாக்கப்பட்டது என்பது அந்த உடுப்பு, அதனை உடுத்துபவர், அவ்வுடுப்பை உடுத்திக்கொண்டு நடக்கும்போது எப்படி விரியும் எப்படிச்சுருங்கும் என்பதை முடிவு செய்யும். அது விரிந்து சுருங்கும் தன்மைக்கேற்ப கால்களுக்கிடையில் காற்று உள் வீசப்படும். இவ்வாறு வீசப்படும் காற்று பெண்ணின் மறையுறுப்பை வருடி ஒத்தடம் தந்து அங்குள்ள ஈரம், உப்புப்படிவு, இறந்த செல்கள், மற்றும், இன்னபிற அழுக்குகளைக் களையும். அதன் ஒரு பகுதி அங்கே வாழும் நன்மை தரும் நுண்ணுயிர்களுக்கு ஊட்டச்சத்தாகும், இன்னொரு சிறுபகுதி பெண்ணுறுப்புக்குள்ளே உறிஞ்சப்படும். இதுதான் சாராம்சம்.

    ஆக, ஆடைகளின் கொசுவம் தான் விசிறி போல செயல்படுகிறது என்கிறீர்கள் அல்லவா?

    ஆம்! எனத் தொடர்ந்தேன். ஆடைகளில் கத்திக் கொசுவம், பெட்டிக்கொசுவம், இரட்டைபெட்டிக்கொசுவம், அடுக்குக்கொசுவம் ஆகிய டிசைன்களை உபயோகிக்கிறோம்.
    சட்டை மற்றும் ரவிக்கைகளின் கையில் கார்ட்ரிட்ஜ் கொசுவத்தை வைத்து கஃப் கை, மிளகாய்க் கை என உண்டாக்குவர் அல்லது ஆணின் சட்டைபோல தளர்வாய் மூக்கு வைத்து, கை அமைப்பர். பாவாடைமேல் அணியும் சட்டைகளின் கழுத்தில் “வாட்டியோ” வகைக் கொசுவங்களை வைப்பர்.

    புடவை என்பது துணி – தைத்த உடுப்பல்ல என்றேனல்லவா? இதை உடலில் கட்டிக்கொள்ளவேண்டும். அவ்வாறு கட்டிக்கொள்ளும்போது, புடவையில் எங்கள் பெண்கள் வைக்கும் கொசுவத்திற்கு ஈடு இணையே இல்லை என்பேன். 5.5 மீட்டர் நீளமும் ஏறக்குறைய 1.5 மீட்டர் உயரமும் கொண்ட துணை தான் புடவை என்றேன்.

    அடேங்கப்பா! அது அத்தனைப்பெரிசா? சாரி என்பார்களே அதுபோன்றதா உங்கள் புடவை என்றார்.

    சரிதான். மிகச்சரியாய் பிடித்தீர்கள் சாரியை; சாரியைத்தான் தமிழில் சேலை என்கிறோம் அது மருவிவந்த பெயர். புடவை என்பது தமிழில் நிஜப்பெயர்.

    புடவை, இரவிக்கை இரண்டுமே காரணப் பெயர்கள் – வினையாலணைந்த பெயர்கள் – Action nouns
    புடம் என்றால் கனல் அல்லது தணல் (Ember); அவி என்றால் இரு பொருட்கள் உண்டு: சூட்டை அணைத்தல் அல்லது சூட்டை உபயோகித்துச் சமைத்தல். அதனால், புடவை என்றால் நெருப்பை அவிக்கும் ஆடை என்பது பொருத்தமாய் இருக்கும் என்றேன்.
    இரவி என்றால் சூரியன்; கை என்பது பொதுவாக மேற்கையைக் குறிக்கும் ஏனெனில் கையின் பிற பாகங்களுக்கு தனித்தனியே பெயர்கள் உள்ளன. சூரியனை உடல் தாக்காதவாறு மறைக்கும் கையுடைய உடுப்பு என்பதே இரவிக்கை என்பது என்றேன்.
    பொதுவாக, இரவிக்கைகளுக்கு வைக்கும் கழுத்தின் அகலமானது, தோள்பட்டை, விலாஎலும்பு, மேல்முதுகு ஆகியவற்றைக் காட்டக்கூடாது எனவும், அது, முன்புறம் மார்பகப் பிளவு தெரியும்படியாக வெகு தாழ்வாக இருக்கக்கூடாதென்றும் என்பது பொது விதி. இப்பாகங்களில் வெயில் பட்டால் தோல் புற்று நோய் வரும் என்பது இன்று அனைவரும் அறிந்த உண்மை. எனவே வெய்யிலை மறைக்கவேண்டிய இடங்களில் கட்டாயம் மறைக்கும் கைகள் இரவிக்கைக்கு வைக்கப்பட்டன.

    உங்களுக்கெல்லாம் நிறையவே முன்யோசனை இருந்திருக்கிறது! கொசுவங்களைப்பேசுங்களேன்! என்று தொடர்ச்சி தந்தார்.

    அவர் ஆர்வம் என்னை மேலும் உற்சாகப்படுத்தியது. புடவையில் இரு இடங்களில் கொசுவம் வரும்; இடுப்பில் மற்றும் தோளில் என. எங்கள் பெண்கள், புடவைகளில் விதம் விதமான பாணிகளில் இவ்விரண்டு கொசுவங்களையும் வைப்பர். உடுத்தும் திசைகளும் மாறும் – இடமிருந்து வலம் அல்லது வலமிருந்து இடம். அரிஅரியாய்க் சிறு கத்திக் கொசுவம் வைப்பர் அல்லது ஜாணகலம் பெட்டிக் கொசுவம் வைப்பர்; நான்கு விரற்கிடை ரெட்டைப் பெட்டிக் கொசுவம் வைப்பர் அல்லது மாற்றெதிர்க்கொசுவம் என ஒருதிசையில் கொசுவி எதிர்த்திசையில் திருப்பி அதன்பின் இடுப்பில் செருகுவர். இடுப்பில் செருகும்போது, கொசுவம் முன்னே வரும்; பின்னே வரும்; பக்கவாட்டில் வரும் என வகை என்றால் வகையோ வகை என படு அட்டகாசமாயிருக்கும்!

    உள்பாவாடை எனப்படும் உடுப்பு தைக்கப்படுவது; இது கொசுவம் இல்லாதது அதிக விஸ்தாரம் இல்லாதது. அதனால் இதனை அப்படியே ஏனோதானோவென்று தைத்துவிடமுடியாது. இதற்கும் கோர் வேண்டும் – குறைந்த பட்சம் நான்கு கோர்களிலிருந்து பத்து கோர்கள் வரை கூம்புப் பகுதிகளாக வெட்டி, அப்பகுதிகளை இணைக்கவேண்டும். சிலநேரம் குறைவான கோர் உடைய உள் பாவாடைகளில் சிறுசிறு கத்திக் கொசுவம் வைக்கப்பட்டிருக்கும்; குறைந்த கோரை ஈடுசெய்யும் ஏற்பாடு இது. உள்பாவாடை என்பது உடையின் ஒரு தொடக்கம் அவ்வளவுதான். இதன்மேல் உடுக்கப்படும் புடவையை நெறிப்படுத்தும் பொறியியல் சிறப்பு கொண்ட பொறுப்பான ஒரிழை (single layer) உடை இது. இரண்டுகால்களை வீசி நடக்கும்போது கால்களைத் தடுக்காதபடியான விஸ்தாரதத்துடன் மட்டுமே இருக்கும் உள்பாவாடையின் இடுப்பிலே நாடா கோர்க்கப்பட்டிருக்கும். தன் இடையின் அகலபருமனுக்கு ஏற்ப, உடுத்தும் பெண், நாடாவாவை இறுக்கி உள்பாவாடையை அணியவேண்டும். அணிந்துவிட்டால் இடுப்பின் அசைவுக்கு ஏற்ப, நாடா அந்த இடுப்பின் அசைவை ஒரு விசையாக பாவாடையின் கூம்பு கோர்களின் குறுகிய மேல் நுனியில் செலுத்துகிறது. கூம்பு கோர்களின் அகலம் கீழ்வாகில் அதிகமாவதால், இப்போது மேலிருந்து விசை கீழே கிடுக்கிவெனப்பரவ, பாவாடையின் அடி, வட்டமாய் விரியலாகும் ஆனால் நடக்கும் காலோ விரியும் பாவாடையின் அடிவட்டத்தை, ஒரு தூளியை அசைப்பதுபோல் கிடைமட்ட நேர்க்கோட்டில் முன்னும்பின்னுமாய் வெகு விசையுடன் வெகுநேர்த்தியாய் மாற்றி மாற்றி அசைக்கிறது எனவே அதியற்புதமானதொரு பொரிவிசைச் சங்கமம் அங்கே ஏற்பட்டு பாவாடைக்குள்ளே கூம்புச்சுழலாய் காற்று உள்புகுகிறது. ஆக, புடவை என்பது சொற்பதம்கடந்த மிகப்பிரமாதமானதொரு பொறியியல் கண்டுபிடிப்பு என்பதே பொருத்தமானது.

    உள்பாவாடை இல்லாத புடவைகள் எப்படி இருக்கும்? என்றார்.

    உள்பாவாடை இல்லாத புடவைகள் இருவகைப்படும்: எட்டு கஜம் மற்றும் ஒன்பது கஜம். எட்டுகஜம் புடவைகள் கொஞ்சம் எளிதானவை. உள்பாவாடைக்கான இரண்டு கஜம் பகுதியை இடுப்பில் ஒருமுடிச்சு போட்டுக் கட்டிக்கொண்டுவிடுவார்கள், அதற்கு மேலே மிச்சம் உள்ள துணியை, புடவையாய் உடுத்திக்கொள்வார்கள். ஒன்பது கஜம் புடவைகளில், உடுத்தும் பாணி பலபடிநிலைகளைக் கொண்டது; சிக்கலானது; உடுத்திக் கொண்டுவிட்டாலோ இயங்க வெகுவசதியாக இருக்கும். சிலகுலத்தினர் ஒன்பது கஜம் புடவைகளை தினசரி உடுத்துவர்; சிலர் அதனை விசேஷ நாட்களில் மட்டுமே உடுத்துவர்.

    எவ்வகைப்புடவையாயினும், பொதுவாக, புடவை கட்டிக்கொள்வது என்பதே பலபடிநிலைகளைக் கொண்ட செயலாகும். புடவை உடுத்த சிரத்தை வேண்டும்; உரிய கால அவகாசம் எடுத்துக்கொண்டுதான் புடவையை உடுத்திக்கொள்ளமுடியும். புடவை கட்டிக்கொள்வது என்பது முதலில் பழகும்போது பலவித சவால்களை உள்ளடக்கிய மாபெரும் வீரவிளையாட்டில் ஜெயிப்பதுபோல் தெரியும். பழகப்பழக அது கைவந்த கலையாகும். குறைந்த நேரத்தில், நேர்த்தியாய்ப்புடவை உடுத்த விரைவாகவே கற்றுக்கொள்ளமுடியும்.

    மொத்தத்தில், ஆபாசமில்லாமல், கவுரவத்தோடு, அழகும், உடல் நலமும் கொடுக்கும் ஆடை புடவை எனலாம்.

    அப்படியென்றால் உங்கள் பிரதான உடை “புடவை “என்று கொள்ளலாமா? என்றார்.

    ஆம்! குழந்தை வயது மற்றும் பருவ வயது ஆகியன விரைவாக நகர, எங்கள் பெண் தன் முக்கால் வாசி வாழ்நாட்களையும் புடவையிலேயே வாழ்கிறாள். எனவே எங்கள் பெண்களுக்கு, புடவை என்றால் வெகு பிரியம். அதுமட்டுமல்ல – மானம் காப்பது உடை என்பார்கள் அல்லவா? அதற்கும் ஒருபடி போய் மானத்தோடு, மகிழ்வையும், அழகையும், உடல்நலத்தையும் ஒரு சேர அளிக்கும் ஒரே உடை என்பதால் புடவை என்பது எங்கள் ஊனுக்கும் உயிருக்கும் மேலானது; மற்ற பெண்களுக்கு, புடவையும் இரவிக்கையும் வாங்கித்தருவது என்பது எங்களுக்கு பழக்கம். உறவினர் என்றல்லாது, நண்பர்கள், தெரிந்தவர் தெரியாதவர் என எவருக்குமே புடவை-இரவிக்கை வாங்கித்தருவோம். எங்கள் திருக்கோயில்களில் அம்மனுக்குப் புடவை வாங்கி சாத்துவோம். இது எங்கள் மண்ணின் உயரிய பண்பாடு. புடவையை, கோடி என்றும் எங்களில் சிலர் அழைக்கிறார்கள்; கோடி என்பது ஒரு இந்தியப் பண அளவை; கோடி என்பது யு எஸ் டாலரில் ஏறக்குறைய 160,000 டாலர்கள். அத்தனைப் பெரிய பணமதிப்பு அது. ஒரு புடவையைப் பிறருக்குத் தருவது அல்லது பிறர் தர அதனைப் பெற்றுக்கொள்ளுவது என்பது கோடி பணம் பெறுவதைப்போன்றது என்பது பொருள்.

    எது எப்படியாகினும், எங்கள் பெண்களுக்காக எங்கள் மூதாதையர்கள் தெரிந்தெடுத்துத்தந்த ஆடைகள் அல்லது உடுப்புக்களின் ஒரே நோக்கம் உடலில் காற்றோட்டத்தைத் தொடர்ந்து ஏற்படுத்துவதே.

    அப்படிஎன்றால் காற்றோட்டத்தின் மூலம் பெண்ணுக்குள்ளே விளையும் நெருப்பை ஆக்க சக்தியாக மாற்றுவதற்கான கருவிகளே உங்கள் பெண்ணுடைகள் எனலாமா என்றார்.

    நன்று சொன்னீர்கள்! ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். பெண்ணின் மறையுறுப்புக்குள்ளே பெரினியக்குழியில் வெப்பம் உண்டாகிறது. அவ்வாறு உண்டாகும் உஷ்ணத்தைப் புடமாக்கி, அதன்மூலம் அவளது கருவறை முழுவதையும் தூய்மைப்படுத்தி, அங்கே ஜீவாதார நிகழ்வுகள் ஒழுங்காய் நடக்குமாறு அங்கு ஏற்படும் வேதிவினைகளைச் கவனமாய்ச் சரி செய்யக் காற்று தேவை. அது போன்றே நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வளரவும் – தீமை செய்யும் பாக்டீரியாக்கள் ஒழியவும் காற்று தேவை!

    ஜீவாதார நிகழ்வுகளை விளக்குங்களேன் என்றார்

    மாதவிடாய் முறையே நிகழ்தல், முட்டை உண்டாகுதல், முட்டை வெளியேறுதல், தாம்பத்ய உறவு கொள்ளாத நிலை அல்லது தாம்பத்ய உறவு கொள்ளுதல், கருத்தரித்தல், கரு வளருதல், பிரசவம் நிகழுதல் , பிரசவத்துக்குப்பின் கழிவு வெளியேறுதல், தசைகள் சுருங்குதல், மாதவிடாய் இறுதியில் நின்று போவதற்கு முன் பெரும்பாடாக மாறும்போது, கோளாறு ஏற்படாது மாதவிடாயை முடிவுக்குக் கொண்டுவருதல், ஆகிய யாவற்றையும் ஜீவாதார நிகழ்வுகள் எனலாம்.

    மேலும், பெண்ணின் கருவறை மண்டலம் மற்றும் அங்கு உருவாகும் சிசு ஆகிய இவை இரண்டிற்கும் ஒத்தாசை செய்யும் நுண்ணுயிர்கள் உண்டு. அவை அங்கே இருந்தால் தான் பெண்ணாலும் பெண்ணும் உருவாகும் சிசுவாலும் நலமாய் ஜீவிக்கமுடியும். ஆண் -பெண் தாம்பதிய உறவுக்கும் இந்த நுண்ணுயிர்கள் தோதானவை. அவற்றுக்கு உயிர் வார்த்து வளர்த்து அவற்றை பெண்ணின் மறையுருப்பில் நிலைநிறுத்தவேண்டுமென்றால் அவற்றிற்குக் காற்று தேவை; இலேசான இள வெளிச்சம் தேவை. ஏனெனில் அவை காற்று விரும்பிகள்; லேசான இள வெளிச்ச விரும்பிகள்; காற்று இல்லையென்றால் இந்த நுண்ணுயிர் நண்பர்கள் மறைந்தொழிந்துவிடுவார்கள்.

    மாறாக, காற்று இல்லையேல், தீமை செய்யும் நுண்ணுயிர்கள் மற்றும் காளான்கள் அங்கே ஏராளமாக முளைத்து நிரந்தரக் குடியுரிமை பெறுவார்கள். இந்தத் துன்பம் செய்யும் நுண்ணுயிர்களுக்கும் காளான்களும் பெண்ணுறுப்பில் மிகச்சட்டென்று வளர்ந்துவிடுவன – ஏனெனில் பெண்ணின் மறையுறுப்பு ஒரு விளைநிலம்போன்றது. ஈரப்பதமும், உப்பும், வெப்பமும், இறுக்கமும், இருட்டும், இன்னபிற எருக்களுமாக அங்கே தீமை நுண்ணுயிர்களுக்கும் காளான்களுக்கும் போஷாக்கான சூழல். ஆனால், அவற்றிற்குக் காற்று எமன். ஆகவே, பெண்ணின் மறையுறுப்பு காற்றை சுவாசிக்கவில்லையென்றால் – அதற்கு நாம் காற்றை ஊட்டவில்லயென்றால் – மானுடத்தின் அழிவு அங்கேயே துவங்கத் தடையேதுமில்லை என்றேன்.

    நீங்கள் சொல்வது உண்மையா ? இங்கே எங்கள் பெண்கள் பெரும்பாலும் இறுக்க உடைகளைத் தானே அணிகிறார்கள் . அப்படியென்றால் எங்கள் பெண்களின் உடல் நிலை ஆரோக்கியமாய் இல்லை என்கிறீர்களா என்றார் .

    உங்கள் பெண்கள் மட்டுமல்ல எங்கள் பெண்களும் கூட இறுக்க உடைகள் உடுத்தத் தொடங்கி யாயிற்று . 1993யிலேயே உங்கள் நாட்டில் இறுக்க உடைகளால் உடல்நலக்கோளாறு விளைவதை மருத்துவ உலகம் வெளியிட்டது. அதற்கு , “Tight Pant Syndrome” என்று பெயர் வைத்தது. மறையுறுப்பு சம்பந்தமான பிரச்சனைகளோடு மருத்துவரிடம் வரும் பெண்களின் எண்ணிக்கை உங்கள் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் மிக அதிகமாக அதிகரித்திருக்கிறது. எங்கள் நாட்டில் அது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலோர் இளம்பெண்களே. மறையுறுப்பு சம்பந்தமான பிரச்சனைகளோடு வரும் பெண்களில் இன்று 96% வெள்ளைப் படுதலுடன் வருகிறார்கள் (முன்பெல்லாம் வெள்ளைப்படுதல் என்று அழைத்தது இப்போது மஞ்சள் படுதல் பச்சைப்படுதல் என்று சொல்லுமளவுக்கு , கொஞ்சம் காட்டமான தொற்று காணப்படுவதாக அறிகிறோம்); இவர்களில் 17% பெண்களுக்கு மறையுறுப்பில் நமைச்சலும் எரிச்சலும் உள்ளது; இவர்களில் 5% பெண்கள் மிகுந்த துர்வாடையோடு வருகிறார்கள்; 3% பெண்கள் அடிவயிற்றில் வலியோடு வருகிறார்கள் ; 2% பெண்கள் சிறுநீர் கழிக்கும்போது தாங்கொணா வலியோடு வருகிறார்கள் எனப்பார்க்கிறோம் . மேலும் கருத்தரிக்க இயலாத பிரச்சனை இன்று உலக அளவில் அதிகரித்து வருகிறது.

    அவருடன் நான் தொடர்ந்து பேசியது பற்றி மேலும் பேசுவோம்.

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 9

    அவ்வை மகள்

    வேட்கை இருந்தால் மட்டுமே உலகை மாற்ற முடியும்

    இறையியல்-சிந்தனைகள்

    ‘People with Passion can change the world for the better’ என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் பொன்மொழி. உலகை இன்னும் சிறப்புறடைத்ததாய் மாற்ற வேண்டும் என்கிற வேட்கை ஸ்டீவ் ஜாப்ஸிற்கும் வள்ளலாருக்கு ஒன்று போல் இருந்தது. இவ்வகையில் இவர்களிருவரையும் ஒப்பிட்டு நோக்கவேண்டுமெனில், உலகை மாற்றவேண்டும் என இருவரும் ஏன் வேட்கை கொண்டனர் என்பதிலிருந்து துவங்குவது நல்லது.

    19-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய சமூக-சமய சீர்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் வள்ளலார். ஆன்மிகம் ஒரு தலையாய இக்கட்டில் இருந்த காலகட்டத்தில், ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே அங்கு, சமூகத்தில் நிலவும் தாழ்வுகளைக் களையமுடியும் என்பதான வேட்கை கொண்டவர் வள்ளலார். எனவே தனது ஆன்மீகப்பாண்டித்தியத்தை மிகச் சரியாகப் பதப்படுத்தி – அதனைப் பயன்படுத்தி – சமுதாய சீர்திருத்தங்களை சமய உணர்வு வாயிலாக விளைத்தவர் அவர்.

    21-ம் நூற்றாண்டில் உலகில் தோன்றிய தொழில்நுட்பச் சீர்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். தொழில் நுட்பம் ஒரு தலையாய இக்கட்டில் இருந்த காலகட்டத்தில், தொழில் நுட்ப விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே அங்கு, சமூகத்தில் நிலவும் தாழ்வுகளைக் களையமுடியும் என்பதான வேட்கை கொண்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். எனவே தனது தொழில்நுட்பப் பாண்டித்தியத்தை மிகச் சரியாகப் பதப்படுத்தி – அதனைப் பயன்படுத்தி – சமுதாய சீர்திருத்தங்களை தொழில்நுட்ப உணர்வு வாயிலாக விளைத்தவர் அவர்.

    ஆக, சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் இவர்கள் பார்வையில் பட்டதன் காரணம் – இவர்களது இயக்கம் எழுந்தது என்றே கொள்ளலாம். ஆனால், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்பவை பூமியின் நிலப்பரப்பிலே எங்கோ ஓரிடத்திலே ஏற்படும் சிறு பள்ளமோ சிறு மேடோ அல்ல. சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் பரிமாணம் வெகுபெரியது. நீள -அகல-ஆழ அளவீடுகள் கொண்டு பார்த்தால், பூகோளத்தைத் தீண்டி, புலம் பல கடந்து, புலன்களைத் தழுவி நிற்கும் மனப்பிரதேசங்களினூடே மனிதர்கள் பற்றி நிற்கும் நம்பிக்கைகளுக்குள், அவர்களது பழக்கவழக்கங்களுக்குள், அவர்தம் தலைமுறைக் கடப்பாடுகளுக்குள், பூடகமாகவும் உறுதியாகவும் விளைந்தெழுந்து பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்பவையே ஏற்றத் தாழ்வுகள். இவை ஒரு நாளில் உருவாவதில்லை ஆனால் ஒவ்வொரு நாளும் முளைப்பவை – வளர்பவை-வேர்விடுபவை. எனவே, நேற்றைய விருட்சத்தின் ரூபம் இன்று – மெருகேறுகிறது – பலப்படுகிறது, வலிதாய்ப் பொலிகிறது; நாளை இன்னமும் பெரிதாய் திடமாய் அது வேரூன்றும் எனும் கதையாய், பரிணாம வளர்ச்சி காண்பவை ஏற்றத் தாழ்வுகள்.

    மேலும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சும்மாவேனும் எவரும் ஓரிரவில் ஏற்பட்டுவிடமுடியாது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்த வலிதான விசை வேண்டும்; நீண்ட கால அவகாசம் வேண்டும்; பலபேர் வேண்டும். எனவே மிகப்பெரிதாக பிரயத்தனம் செய்ய வேண்டும். இவ்வாறான தன்மையுடன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நிற்கிற நிலையில், அவை பலதருணங்களில், பலகாரணங்களாலும் விரும்பப்படுபவையாக – ஏற்றுக்கொள்ளப்படுபவையாக, வசதிகளை, சலுகைகளை அளிப்பவையாக உள்ளன என்பதால் அவை அவ்வப்போது பிரியமாகவே ஏற்படுத்தப்படுபவை – ஏற்படுத்திக் கொள்ளப்படுபவை என்பதும் இங்கே உணரப்படவேண்டும்.

    ஆக, சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் உள்ள சவால்கள் கொஞ்சம் நஞ்சமில்லை.

    இந்நிலையில், சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நிரவிச் சமன்படுத்த எவரேனும் முனைகிறார் என்றால் – முதலில் அவர் சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் தன்மையை உள்ளது உள்ளவாறு முற்றும் உணர்ந்த, அசாத்தியமான அனுபவம் கொண்டவராக இருக்கவேண்டும். மேலும், அவர், ஒரு தீர்க்கதரிசியாக இருக்கவேண்டும்: தான் மேற்கொள்ளப்போகும் அணுகுமுறைகளின் ஏற்றத்தாழ்வுகளையும், அவை சந்திக்கப்போகும் சவால்களையும், பல்வேறு நிலைகளில் நின்று, பல்வேறு கோணங்களில் பார்த்துப் பழகும் திறமையும் பொறுமையும் கொண்டவராக இருக்கவேண்டும். அடுத்து, அவர், தமது அணுகுமுறைகளைத் தகவமைப்பு செய்து, காலப் பகிர்வீடு செய்து, தளம் தளமாய் தரநிர்ணயம் செய்யவேண்டும். இதற்கு வேகம் வேண்டும்; விவேகமும் வேண்டும் – இவை இரண்டினையும் எவ்வாறு எவ்வளவீட்டில், எப்போது கலப்பது என்பதும் அந்தக் கலவையை எப்போது, எவ்வாறு, எத்தனை வேகத்தில், எங்கு உபயோகிப்பது என்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் அளவெடுத்து இயங்கும்போதும் அவருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை, அவதூறுகளை அவர் தாங்கியவாறு, எத்தனைக்காலம் தாமதம் ஏற்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் அளப்பரிய மனோதிடமும், காலம் கனியக் காக்கும் பொறுமையும் கொண்டவராகவும் அவர் இருக்க வேண்டும். இது மிகப்பெரிய கலை – மிகப்பெரிய திறன் – மிகப்பெரிய ஆளுமை. இக்கலையும், திறனும், ஆளுமையும் மிகச்சரியான விகிதாரச்சத்திலே வாய்க்கப்பெற்றவர்கள் மட்டுமே சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நிரவு செய்யும் மாபெரும் சவாலை எதிர்கொள்ளும் முயற்சியில் இறங்கும் இலாயக்கு பெறுகிறார்கள். மற்றவர்கள் எண்ண நிலையிலயோ, முனைப்பிலேயோ, அல்லது வழியிலோ மாய்ந்துபோகிறார்கள்.

    இருபதாம் நூற்றாண்டில் உதித்த மிகப்பெரும் உலகதத்தலைவர்களுள் மகாத்மா காந்தி எவரும் அடையமுடியாத மிகமிக உயர்நிலையில் இருத்திவைத்துப் போற்றப்படுகிறார் என்றால், அதற்கு அவர் சாதித்துக் காட்டிய இந்திய விடுதலை தான் காரணமா என்றால், அது இல்லை. அவர் உண்மையில் சாதித்தது ஆன்ம வெற்றி மட்டுமே. ஆன்ம வெற்றி என்பது என்ன என்றால், எவரொருவது அணுகுமுறை, பிறரின், பார்வையை, உள்ளத்தை, அறிவைத் தாண்டி, அவரது ஆன்மாவைத் தீண்டுகிறதோ அது மட்டுமே ஆன்ம வெற்றி. காந்தி, தமது அணுகுமுறையினால் உலகில் ஒவ்வொரு ஆன்மாவையும் தீண்டினார்.

    அன்று, சிகாகோ நகரத்து பன்னாட்டு மத மாநாட்டில், விவேகானந்தர் கண்டது ஆன்ம வெற்றி, வள்ளுவன் கண்டது ஆன்ம வெற்றி, கட்டபொம்மன் கண்டது ஆன்ம வெற்றி, கண்ணகி கண்டது ஆன்ம வெற்றி. சமகாலத்தவரும், பிற்காலத்தவரும், முற்காலத்தவரும் என எவருமே காட்டியிராத அணுகுமுறையை இவர்கள், எவ்வித இலாப நோக்குமின்றி, விளம்பரத் தேடலுமின்றி, சுயம்புவாய், மிகக் கடப்பாட்டுடன் காட்டிய அந்த நொடியில் தான் மற்றவர்க்கு ஆன்ம வெற்றி தந்தார்கள். மற்றவர்க்கு இவர்கள் ஏற்படுத்தித் தந்த ஆன்ம வெற்றியினால் இவர்களை, உலகம், பெற்றியாளர்களாகக் கொண்டாடுகின்றது.

    வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவருமே ஆன்மவெற்றி கண்ட பெற்றியாளர்களே. நான் ஏற்கனவே கூறியது போல, பிற்காலத்தவரும், முற்காலத்தவரும், தற்காலத்தவரும் என எவருமே காட்டியிராத அணுகுமுறையை இவர்கள் காட்டிப் போயிருக்கிறார்கள். வள்ளலாரின் சமரச சன்மார்க்கம் என்பது மிக மிக மிக கவனத்துடன் எடுத்தாளப்பட்ட வாசகம், மொழியளவிலாகட்டும் பொருளளவிலாகட்டும் சமரச சன்மார்க்கம் என்பது சட்டென்று, விரைவாய், புலன்களைக் கடந்து, உள்ளத்தையும், அறிவையும் கடந்து கடைக்கோடி மனிதனது ஆன்மாவை ஆலிங்கனம் செய்யும் அற்புதமான ஆனால் எளிதான சித்தாந்தம்.

    சமரசம் (Harmony) என்பது வசீகர வார்த்தை – இதனை பரம ஆமோதிப்பு எனலாம்; மார்க்கம் என்பது “வழி” (pathways) என்பதாகிறது. சமரச சன்மார்க்கம் என்பது – “உனக்குள்ள வழிகளுக்கெல்லாம் – உனக்கு வேண்டும் வழிகளுக்கெல்லாம் இங்கே வழி உண்டு” என்பதான அழைப்பை அளிக்கும் அற்புத வாசகம். அப்படியென்றால், “நீ இதுகாறும் எவ்வழியில் சென்றிருப்பினும், நீ இந்த சமரச சன்மார்க்கம் வந்தாயென்றால், நீ உன்வழியிலேயே செல்லலாம் – அதுமட்டுமல்ல நீ உன்வழியே சென்று, உனது விருப்பம்போல் நன்மை சேர்க்கும் இன்னபிற புதுவழிகளையும் இங்கே காணலாம்!” என உற்சாகத்துடன் வற்புறுத்தலின்றி, சமாதானமாக, அனைவரையும் அழைக்கும் சீரிய குரலது. உரக்க வேண்டுபவர்க்கு உரத்ததாயும், சன்னமாய் வேண்டுவோர்க்கு சன்னமாயும் ஒலிக்கும் ஒலித்தகவமைப்பை சமரச சன்மார்க்கம் எனும் வாசகத்தில் காண்கிறோம். இந்த வாசகத்தைத் தேர்ந்தெடுக்க வள்ளலார் பெரிதும் பெரிதும் எண்ணியிருக்கவேண்டும். அன்றைய காலகட்டத்தில் நிரவிப்பரவியிருந்தவை உள்நாட்டுச் சமயங்கள் மட்டுமல்ல; இறக்குமதியாகியிருந்த பிறநாட்டு சமயங்களும் தாம். பிறர் ஆளுகைக்கு உட்பட்டதால் நமக்குள் அன்று பிளவு சக்திகள் ஏராளமாகவே விளைக்கப்பட்டிருந்தன. இவையாவும் ஒன்றுக்கொன்று எதிரணிக்கொள்ளும் அபாயம் அன்று நிரம்பியிருந்ததும், மக்களின் ஏற்றத்தாழ்வுகளைப் பயன்படுத்திப் பிறநாட்டுச் சமயங்கள் மண்ணின் மூலச்சமயங்களிலிருந்து மக்களை இடமாற்றம் செய்துகொள்வதுமாயும் இருந்த நிலைமையையும் வள்ளலார் உற்று நோக்கியிருக்கிறார்.

    சாதிகள் எனும் மனிதகுல வகைப்பாடு ஏற்புடையது அல்ல என்றாலும் வெவ்வேறு சாதியினர் அன்று பரஸ்பரம் நல்லிணக்கத்துடன் ஒருங்கிணைந்தே வாழ்ந்தனர் என்ற நிலையில், மாபெரும் சதி நடந்தது. சாதியை அயலாரும் அயலார் தூண்டுதலில் நம்மாருமே ருசுப்படுத்தி – பூதாகரமாக்கி அமைதியைக் குலைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் கிளம்பலாயின. அதனை வள்ளலார் கவனித்தவரானார். இவற்றில், ஊரிரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதாக, அந்நியர் மதத்தாலும் ஆட்சியாலும் காலூறும் சாதுரியத்தையும் அவர் காணாதவரில்லை. அன்றைய காலகட்டத்தில், ஜான் ஸ்டூவர்ட் எழுதிய பிரித்தானிய இந்தியாவின் வரலாறு (History of British India) என்னும் நூல் 1817-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. இப்புத்தகத்தில் இந்தியர்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் எத்தனை இழிவாகப் பேசமுடியுமா அத்தனை இழிவாகப் பேசப்பட்டிருக்கிறது. நமது பண்பாடு காட்டுமிராண்டித்தனமானது, எதிர்மறையானது, நாமனைவரும் மோசமானவர்கள் என்று இந்நூல் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது. இந்நூல் ஏன் எழுதப்பட்டது என்றால் ஆங்கில அதிகாரிகள் இந்தியா வருவதற்கு முன் அவர்களுக்குப் பயிற்சி தருவதற்காகத்தான். இது ஒரு உளவியல் யுக்தி – ஆங்கிலேய அதிகாரிகளின் உளப்பாங்கை முன்கூட்டியே இந்தியருக்கு எதிராய் மாற்ற இப்புத்தகத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள். இந்திய மக்களுக்கு சதிசெய்யும் – வன்முறை செய்யும் – அதிகாரம் ஓச்சும் படியாக அதிகாரிகளின் உளப்பாங்கை முன்கூட்டியே தயார்நிலைக்குக்குக் கொண்டுவரும் Psychological Conditioning இது. ஆக, இந்தியா வந்திறங்கும் முன், ஆங்கிலேய அதிகாரிகள் மேற்கொள்ளும் முன்பயிற்சியில் History of British India என்பது ஒரு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டது – அதனை அவர்கள் கற்றுத்தேறவேண்டும் – இப்புத்தகத்தின் சார்பாக இந்தியனை எப்படி ஆளுவது – கையாளுவது – என்பதான யுக்திகள் – அதிகாரிகளின் முற்பயிற்சியிலே வடிவமைக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கும் – அந்த யுக்திகளில் அவர்கள் ஜெயிக்கவேண்டும் என்பதான ஏற்பாடு இது.

    “Divide and Rule” எனும் விரிவான மகாயுக்தி ஆங்கிலேய அதிகாரிகளின் முற்பயிற்சியின் முக்கிய அங்கம். Divide and Rule என்பதன் பொருள் என்னவென்றால், ” the policy of maintaining control over one’s subordinates or subjects by encouraging dissent between them.” அதாவது, தாம் ஆளத்துடிக்கும் – அடிமைப்படுத்தத் துடிக்கும் ஒரு மக்கள் கூட்டத்திற்குள் பிரிவினை பேதங்கள் வளர்த்து அவர்களிடையே ஒற்றுமை உருவாகாதவாறு வேற்றுமையையும் வெறுப்பையும் உருவாக்குவது” என்பது. இவ்வாறான தந்திரம், ஆங்கிலேயனது கால்பதிப்பிற்கும், வேரூன்றலுக்கும் பெரிதும் உறுதுணைபுரியும் என்பதுதான் ”Divide and Rule” ன் பிரதான உள்நோக்கம். மக்களுக்கிடையே பிரிவினை செய்வது எப்போது சுலபமாகும் என்றால் மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக ஊதிவிடுவதால் மட்டுமே. அதற்கு அவர்கள் தோதாக எடுத்துக்கொண்டது நமக்குள்ளே இருந்துவந்திருந்த பன்முகத்தன்மை ( “diversity” ). நமது நம்பிக்கைகளிலும் – பழக்கவழக்கங்களிலும் – நமக்குள்ளே பல ஒற்றுமைகள் இருந்தபோதும் பல மாறுபாடுகளும் இருந்தன. இந்த மாறுபாடுகள் எல்லாம் வேறுபாடுகள் அல்ல. அவை ஒன்றின் பலபரிமாணங்கள். ஒன்றின் எல்லாப் பரிமாணங்களையும் “நம்ம அஞ்சு விரலும் என்ன ஒண்ணுபோலயா இருக்குது?” என்றவாறு வெறுப்பின்றி அனைவரும் சுலபமாய் ஏற்றுக்கொண்டு ஒத்து வாழ்ந்த அமைதி உலகத்தில் தான் நாம் இருந்துவந்தோம்.

    ஆனால் அப்போதோ நம் மக்களை மிகமோசமாகப் பிரிவினை செய்ய நமது மதங்களை – சாதிவகைப்பாட்டை – ஊதிக்கிளப்பும் களவு நெஞ்சத்துடன் ஆங்கிலேயர்கள் உள்ளேவந்தனர். சாதுரியமும், கள்ள நெஞ்சும் கொண்டவாறு தயார் நிலையில் வந்த அவர்கள் நம் விஷயங்களை நன்கு அறிந்தவர் தந்திரமொழிகளில் நம்மைப் பற்றி நம்மிடமே பேசலாயினர். நம்மைப் பற்றிய விஷயங்கள் ஒருதலைப்பட்சமாக, கபடமாகவே நமக்கே அறிமுகப்படுத்தப்பட்டது. நம் மதங்களைப் பற்றி மோசமான எண்ணமும், நாம் பிற்போக்கு வாழ்க்கை வாழ்பவர்களே என நம்மை நாமே நம்பிக்கொள்ளும் வண்ணம் உளவியல் யுக்திகள் நம்முள் செலுத்தப்படலானது. நாம் யாரில்லையோ அதுவாக நம்மை நாமே ஏற்றுக்கொள்ளும் மனோநிலைக்கு நாம் தள்ளப்பட்ட ஒரு துர்பாக்கிய காலமது. ஆட்சிப்பிடிக்கவும் மதம் பரப்பவுமென ஆட்சியாளர்களும், மதபோதகர்களுமாக அன்று மக்களை சிந்திக்கவிடாமல் திக்குமுக்காட வைத்தனர். அவ்வாறானதொரு காலத்தின் கட்டாயத்தில், போக்கறியா மக்கள், தம்மைப் பற்றிப் பிறர் சொல்லக்கேட்டு அதனை நம்பினர். அதில், புரட்டும் பொய்யுரைகளும் வார்க்கப்படுவதை அவர் அறியார். அந்த நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை பின்னாளில் வந்த பாரதி கொதித்தெழுந்து குமுறிய, “ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? என்ற தொனியில் தெரிந்துகொள்ளலாம்.

    அவ்வாறானதொரு நிலையில் தான், சொந்த மண்ணின் மதங்களையே முற்றும் அறிந்திராத மக்களின் அறியாமையை விலக்கியாகவேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதை வள்ளலார் உணருகிறார். எனவே, சொந்த மண்ணில் உதித்தெழுந்த நம் உன்னத மதங்களின் சாராம்சங்களைப் பிழிந்துச் சாறெடுத்து, அச்சாற்றமுதுகளை இணைத்துச் சேர்த்து விழுமியதான ஒரு பொது மதம் நமக்குத் தேவை என்கிற தீட்சண்யம் அவருக்குள்ளே எழும்பியிருக்கிறது. அந்த தீட்சணியத்தினால்தான், நம் உயரிய மதங்களின் உன்னத சங்கமத்தை உருவாக்கும் பொறுப்பைத் தானே மேற்கொண்டிருக்கிறார் அவர். பன் மார்க்கங்களும் சன்மார்க்கத்தில் சமரசமாய் சங்கமிக்கும் நிலையே சமரச சன்மார்க்கம். “புற மதங்கள் அண்ணாந்து வியந்து பார்க்கும் அளவிற்கு இங்கே அளப்பரிய பொக்கிஷங்கள் உள்ளனவே. எம்மார் மதங்களில் உள்ள தேனமுதை, கற்கண்டை எம்மக்கள், எடுப்பாய்ப்பிடித்து, சுவைத்து உண்டுமகிழ, இதோ வாகானதொரு பொற்கலத்தில் நான் வார்த்தளிக்கிறேன்!” என வள்ளலார் செய்த புதுப்புரட்சியே சமரச சன்மார்க்கம். இந்த மதவிணைப்பு (Synthesis of Religions) முனைப்பிலே நமது சமயங்களின் பலத்தை வீணாக்குமாறு கிடக்கிற சாதி வேறுபாடுகள் முற்றிலும் நீக்கப்படவேண்டும் என்பதிலே வள்ளலார் கொண்ட உறுதி வார்த்தை வர்ணனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அவரது அம்முயற்சிகளை உணர்வால் மட்டுமே காணமுடியும்.

    இவ்வகையில், கடவுள் எனப்படுபவர் யார் அவரது உண்மைத்தன்மை தான் யாது என்பதனை விளக்கமுற்படும்போது, “அருட்பெருஞ்சோதி – அருட்பெருஞ்சோதி – தனிப்பெருங்கருணை – அருட்பெருஞ்சோதி!” என்கிறார். வள்ளலாரின் இந்த வாசகம் பிரபலமானது. இவ்வாசகத்தை க்கேட்ட மாத்திரம், “வள்ளலார்” என்று கேட்டவர் வாய் தானே மொழியும். இறைவனை ஜோதியாகப் பார்ப்பதும், திருவருட்பாக்களுக்கு “திருமுறை’ என்றே பெயரிட்டிருப்பதும், சிவனே ஜோதி – என்பதுவும் சைவசித்தாந்தத்தை ஆணிவேராய்க்கொண்டுதான் சமரச சன்மார்க்கம் கட்டமைக்கப்படுவது என்பது வெள்ளிடைமலை. சமரச சன்மார்க்கக்கட்டமைப்பை வள்ளலாருக்கு முன்சென்ற தாயுமானவர் சிந்தனைகளிலும் காணமுடியும் என்றாலும் சமரச சன்மார்க்கத்திற்கென ஸ்திரமானதொரு வழிமுறை நிலைப்பாட்டை நிறுவிப்போந்த பெருமை வள்ளலாரையே சாரும். இக்கட்டமைப்பிலே வைணவ, சமண, புத்த மதங்களின் சிலபல வெளிப்படை அடையாளங்களையும் கூட நம்மால் காணமுடியும் என்றாலும் கடவுளைப் பற்றிய உருவகத்தை, சைவமுறைப்படி ஜோதியாகவே அன்று உறுதிப்படுத்திய பாங்கிலே வள்ளலாரது அறிவியல் அணுகுமுறைகளையும் நாம் சிந்தித்தாகவேண்டும்.

    வள்ளலார் காலத்தில் நியூட்டன் மிகப்பிரபலமானவர். வள்ளலாருக்கு ( (5 October 1823 – 30 January 1874) முந்தையவர் நியூட்டன் ( 25 December 1642 – 20 March 1726). ஆங்கிலேயர் என்பதால், நியூட்டனை வெகு அதிகமாகவே நாம் புகழும் – புகழவேண்டிய கால நிலை அன்று நிலவிவந்தது. நியூட்டனின் ஒளி பற்றிய கண்டுபிடிப்புகள் கல்விப்பாடமாக இங்கு அன்று நிறைவேறப்பட்டன. நியூட்டனின் ஒளிப் பரிசோதனைகளை அந்நாளில் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் (1818: செரம்பூர் கல்லூர, ஹவுரா ; 1847: இந்தியத் தொழில்நுட்பக்க கழகம், ரூர்கி; 1857: பம்பாய் பல்கலைக் கழகம்; 1857: சென்னைப் பல்கலைக்கழகம்; 1857: கல்கத்தா பல்கலைக்கழகம்), அங்கு மாணாக்கர்கள் செய்துபார்க்கும் வகையில் பரிசோதனைக்கருவிகள் மற்றும் பயிற்சிமுறைகளாக நம்மவரிடையே பிரபலமாகின. அவ்வேளையில், நம் மதத்தின் அறிவியல் கூறுகளை எடுத்தியம்ப வள்ளலார் துடித்திருக்கக்கூடும். மூடநம்பிக்கைகள், பிற்போக்குச்சிந்தனை என்று மதத்தை இழித்தும் பழித்தும் காட்டும்போது நமது மதங்கள் அறிவியலுக்குப் புறம்பானவை என்று சாகசப் பேசசு பேசுவது அன்றைய நாசசக்திகளின் பாணியாகவே இருந்துவந்தது. எனவே, “நீ அறிவியல் என்று பேசுகிறாயே அந்த அறிவியல் வழி நீ காட்டும் ஒளிக்கோட்பாடுகள் உமக்குப் புதிது ஆனால் எமக்கு அவை முன்னமே தெரியும்! கேட்டுக்கொள் – ஒளி என்பது பிரபஞ்சத்தின் ஜீவாதாரம் என்பதை யாமென்றோ அறிவோம். ஒளி என்பது யாம் வணங்கும் தெய்வம்! ஒளி எங்கள் எங்கள் வாழ்முறை!” என்று நெஞ்சுநிமிர்த்திச் சொல்லும் அறிவியல் பரிஷையை பாமர மக்களின் தினசரி மொழியாக்கும் உத்வேகம் வள்ளலாருக்கு இருந்திருக்கவேண்டும் என்றே நாம் காணமுடிகிறது.

    “அருட்பெருஞ்சோதி – அருட்பெருஞ்சோதி – தனிப்பெருங்கருணை – அருட்பெருஞ்சோதி!” என்ற வள்ளலாரின் குரல் ஒலிக்குரல் அல்ல அது ஒளிக்குரல் – அது மணிக்குரல் அல்ல மாணிக்கக்குரல். அது அன்றே அவர் விடுத்த நாட்டின் விடுதலைக்கான அழைப்பு – தனிமனிதனின் ஞான விடுதலைக்கான அழைப்பு.

    கருணை என்பது இந்தியதேசத்து மதங்களில் இணையறக் கலந்திருக்கிறது எனினும், கருணை என்பதை சமரச சன்மார்க்கத்தில் முந்துறுத்தி இருப்பது – கிருத்துவப் பரப்புரைக்கு இணையான யுக்தி எனவே கொள்ளலாம்.

    வடலூரில் அவர் நிறுவிய சத்ய ஞான சபை எண்ணுந்தோறும் – எண்ணுந்தோறும் – புதுப்புதுப் புரிதலை நம்முள்ளே வார்க்கும் அற்புதக் கோட்டம். எண்கோண வடிவம் – மூன்று சபைகள் (சிற்சபை, பொற்சபை, ஞான சபை) என உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கருவறைக்கு ஏழு திரைகள். வடலூர் ஆலயத்தின் வடிவமைப்பை பல்வேறு சித்தாத்தங்களிலிருந்த விளக்க முடியும். வள்ளலாரது அறிவியல் வழிப்படி சென்று ஒளிவழி பார்த்தால் ஒளியின் உருவாக்கமே இக்கோயில்.

    ஒளிக்கு எட்டு குணங்கள் உண்டு – பிரதிபலிப்பு, விலகல், உள்ளீட்டுப் பிரதிபலிப்பு, பரவல், சிதறல், விளிம்பு விலகல், படிதல், முனைவாக்கம் (Reflection, Refraction, Total Internal Reflection, Dispersion, Scattering, Diffraction, Interference, Polarization).

    ஒளிக்கு மூன்று நிலைகள் உண்டு – துகள் நிலை, அலைநிலை, துகளலை நிலை (particle nature, wave nature, wave-particle dualism).

    வெள்ளொளிக்கு – ஏழு பாகங்கள் உண்டு – ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு (VIBGYOR).

    தைப்பூசத்தன்று வடலூரில் ஏழுதிரைகளும் திறக்கப்படுவது – ஒளியின் ஏழுபாகங்களும் இணைந்து ஒன்றென வெள்ளொளியாய்த் திகழ்வதைக் குறிக்கிறது. அன்று பவுர்ணமி என்பதும் காண்க.

    அறிவியல் அடித்தளம் இடுவது மட்டுமே வள்ளலாரின் நோக்கமில்லை. நாட்டின் பல அடையாளங்களுள் மதம் என்னும் அடையாளமும் முக்கியமானது – அதுவும் உலகோருக்கெல்லாம் வாரிவாரி வழங்கக்கூடிய கருவூலமாய் நல்லதொரு மதப்பின்னணி உள்ள ஒரு நாட்டில் – பொன்னும், வைரமும், பொக்கிஷமுமாய் – மதக் கோட்பாடுகள் காணப்பெறுகிற ஒரு நாட்டில் – வேற்று மதம் தேடிபோகும் தேவையில்லையே – இங்குள்ள பொன்னையும், வைரத்தையும், பொக்கிஷங்களையும் திரட்டி, இருத்திப் பாதுகாத்து உலகுக்கு அளிப்பதே இன்றைய தலையாய பணி என்பதை அவர் அன்று உணர்ந்த வாக்கில் சத்யஞான சபை உருவானது என்பதை வள்ளலாரது வாக்கே காட்டுகிறது.

    “எச்சபை பொதுவென இயம்பினர் அறிஞர்கள்
    அச்சபை யிடங்கொள்ளும் அருட்பெருஞ் ஜோதி”

    ஒட்டுமொத்தத்தில், நம் மண்ணின் மூலமதங்கள் யாவும் எத்தனைச் சிறப்பானவை – இவற்றின் விழுமிய சாரம் எத்தனை ஆனந்தம் அளிக்கிறது – பற்ற இது எத்தனை இலகுவாய் இருக்கிறது – இதனைப் பாட எத்தனைப் பரவசம் பிறக்கிறது என மக்களுக்கு வெறியின்றி, நிதானமாய் எடுத்துரைக்க எழுந்த வள்ளலாரின் அமைதிப்புரட்சி ஒரு அனாயாசப்பபுரட்சி. இந்த சமயத்திரட்சியை ருசிக்கும் எவரும் புறமதங்களில் சொல்லப்படுகிற யாவும் அதற்கு மேலேயும் கூட நம் சமயங்களில் ஏற்கனவே உள்ளன என்பதை அறிவார்ந்த அறிவால் உணரமுடியும். வள்ளலாரது தர்மசாலையும், இயற்கை வாழ்வும் மானுட சேவையின் மற்ற பரிமாணங்கள். இவை பற்றி பேசுவோம்.

    Share
  • எழுவகைப் பெண்கள்- 11

    அவ்வை மகள்

    பெண்ணார்ந்த சூட்சமங்கள் யாவற்றையும் விநாயகர் அகவலில் பொதித்து

    மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் அவ்வையின்  கருத்து என்ன என்று சொல்வதாகச்  சொன்னீர்களே என்று அந்த இராணுவ அதிகாரி தொடர்ந்து வினவினார்  –  என் உரையாடல் தொடர்ந்தது.

    பெண்ணின் மூலாதாரத்தில் வெப்பம் உருவாகிறது என்றும் அந்தக் கனலின் உஷ்ணத்தை, பெண்ணின் பலவேறு உறுப்புக்களில் காணமுடிகிறது என்றும் பார்த்தோம் அல்லவா?.  பெண்ணின் பல்வேறு  உறுப்புக்களில் உஷ்ணம் எதிரொளித்ததாலும், மூலாதாரத்தில் உஷ்ணம்  தேங்கி – அங்கேயே தங்கி – செறிவடைகிறதான உடலியல் பெண்ணினுடையது. ஏனெனில் பெண்ணானவள், சிருஷ்டி கர்த்தாவானதால், எந்நேரமும் படைப்புப் பணிக்குத்தேவையான வெப்ப ஆற்றலோடு அவள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதே அவளுக்கு இடப்பட்டிருக்கிற இயற்கைப் பணி.

    ஆனால், இந்தக் கனலை மூலாதாரத்திலேயே தங்கவிட்டால் – தொங்கவிட்டால்- தூங்கவிட்டால் – பலப்பல விளைவுகள் எழும்:

    1. பெண்ணுக்கு, புற உடலுறுப்புக்களில் இருக்கவேண்டிய உஷ்ணம் குறைந்துவிடும் – இதனால் அவளது உடலியக்கத்தில் அவளுக்கு களைப்பும் அசதியும் ஏற்படும்.
    2. பெண்ணுக்கு அடிவயிற்றில் உஷ்ணம் அதிகரித்து அதனால் அதிக கோபம், ஆத்திரம், கடுமையான பேச்சு ஆகியன எழும் – அல்லது கடும் தலை வலி – தலைச்  சுற்றல் ஏற்படும்.
    3. பெண்ணுக்கு மலச்சிக்கல்,  நீர்க்கடுப்பு, ஆகியன ஏற்படும்.
    4. அவளுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்படும்.
    5. அவளது உணர்வலைகள் தாறுமாறாக இருக்கும்.
    6. வெள்ளை படும்.
    7. பெண்ணின் மறையுறுப்பில் அரிப்பு ஏற்படும் – கொப்புளங்கள் உண்டாகும்.
    8. அவளுக்கு ஜீரணக்  கோளாறுகள் ஏற்படும்.
    9. அவளது வயிறு உப்பும் – அல்லது கடும் வலி காணும்.
    10. தலைமுடி கொட்டும், பொடுகு வளரும்.
    11. தோல் வறட்சி ஏற்படும்.
    12. பாத வெடிப்புக்கள் உண்டாகும்.
    13. உடலின் முப்பெரும் உறுப்புக்களான – கல்லீரல் (பித்தகம்), நுரையீரல் (கபமகம்), மற்றும் பெருங்குடல் (வாய்வகம்) ஆகியன பாதிக்கப்படும். இதனால் பெண்ணுக்கு ஏப்பமும் குதவழி வாயு வெளியேற்றமும் அதிகம் ஏற்படும். மூக்கடைப்பு – தொண்டைப் பிரச்சினைகள் ஏற்படும் – அதிகப் பசி உணர்ச்சி ஏற்படும். எவ்வளவு நீர்ப் பருகினாலும் கூட – உடலில் நீர்ச் சத்து காணாமல் போகும் – தோல்  வறண்டே இருக்கும் – குறிப்பாகக் கால் பாதங்கள் வெகுவில் களைப்படையும் – பாத மேல்  தோல்  சாம்பல் பூச்சோடு – வறண்டு உலரும்.
    14. உடல் நிமிர்ந்து நிற்கமுடியாமல் முதுகெலும்பு  வளையும்.
    15. வாய்- உதடுகள் – நாசித்துவாரங்கள் – முகத்தோல் ஆகியன வறண்டு போகும்.
    16. கழுத்தும் தோளும் பொலிவிழந்து நோகும்.
    17. சிறிய பிரச்சினைகளையும் கண்டு மிரளுவாள் – பயப்படுவாள், பிறருடன் பழக முனைய மாட்டாள், பிடிவாதம் மிகும்.

    மொத்தத்தில் ஓரு  பெண், எரிச்சல் உணர்ச்சியோடு – தலைபாரத்தோடு, உடல் – உள  அவதியோடு உங்களுடன் வசிப்பாள். அவளை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள் – தகாத வார்த்தைகள்  பேசி அவளை  வைவீர்கள் – அல்லது கொடிய, இழிய  வார்த்தைகளால் அவளை வருணிப்பீர்கள். அவளுக்கு வேண்டியன செய்யாமல்  அவளைப் புறக்கணிப்பீர்கள்-கொடுமை செய்வீர்கள். அவளை ஒதுக்கிவிட்டு வேறு பெண்துணையைக் கூடத் தேடப் போவீர்கள். ஏனென்றால் பொதுவாகவே பெண் என்றால் அவளை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் – நடத்தலாம் -என்பது இங்கே வாடிக்கை.”

    “Yes. Yes. Yes!!! – you are absolutely correct! We men really do not get to understand females at all! As you said, we take them for granted! I think this is mostly the problem of the western culture” என்றார்.

    “சரியாகச் சொன்னீர்கள் பெண்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதேச்சையாகக் கையாளும் போக்கு  ஆண்களுக்கு கைவந்த கலை. சொல்லப்போனால், ஆண்களின் இந்தப் போக்கு எல்லாக் கலாச்சாரங்களிலும் எல்லாக்  கால காலக்கட்டத்திலும் இருந்திருக்கிறது. ஆனால் கலாச்சாரங்கள் இப்பிரச்சினையை எவ்வாறு கையாண்டான – இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு கண்டன என்பதிலேதான் கலாச்சாரங்களின் உயர்வும் தாழ்வும் அமைகிறது. கிழக்கத்திய கலாச்சாரங்களில் பல  ஒற்றுமைகள் இருக்கின்றன தான் என்றாலும் என்றாலும் எங்கள் தமிழ்ச்சமுதாயம் பெண்களின் முக்கியத்துவத்தை  உணர்ந்த அளவிற்கும் – அவர்களை அரவணைத்துக்  காத்த அளவிற்கும் ஈடு இணை இல்லையென்றே  சொல்லமுடியும். பெண்களை மையமாகவைத்தே அவர்கள் எங்கள் தமிழ்ச் சமுதாயத்தைக் கட்டமைத்தார்கள் என்றால் அவர்களது பெண்மைப் போற்றுதலை நீங்களே புரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் நீங்கள் சொல்லியது போல, மேற்கத்திய கலாச்சாரம் ஆழ்ந்த ஷரத்துக்கள் இல்லாத துர்ப்பாக்கிய நிலை உடையது  என்பது உண்மையே. அதனிடம் ஒன்றும் இல்லை என்ற நிலை இருப்பினும் பல்வேறு  காரணங்களால் அது விரவிப்பரவுகிறது ஒரு தொற்று நோயைப்போல.  ஆரோக்கியமான கலாச்சாரங்களில் இருக்கிற பலரை அது பீடித்து – அவர்களைத் தன் வசப்படுத்தி – அவர்களின் பாரம்பரிய செல்வங்களை கபளீகரம் செய்கிறது – அவர்களின்  கண்களை மறைக்கிறது – அவர்களின் மூளையை  மழுங்கச்செய்கிறது.

    எங்களைப் பொறுத்தவரை – நாங்கள் வேண்டியும் – வேண்டாமலும் – எமக்குள் நுழைந்த மேற்கத்திய கலாச்சாரம் – இந்த இருநிலைகளிலும் எங்கள்  கலாச்சாரத்தை மூடுதிரைபோட்டு மூடிவிட்டிருக்கிறது.  மாணிக்கம் போன்ற  எங்கள் கலாச்சாரத்தின் மீது தூசி படிந்து மணியின் ஒளி குறைந்திருக்கிறது –  இத்திரையை விலக்கி – மாசு களைந்து – தூசி துடைத்து – எங்கள்  மணி ஒளியை மீண்டும் எமக்கும் உலகிற்கும்  வழங்க நாங்கள் முனைந்தாக வேண்டும். அந்த உணர்வை எனக்குள் மீண்டும் நான் உணர உங்கள் வாசகம் உதவியது. மிக்க நன்றி.” என்று தொடர்ந்தேன்.

    “சொல்லப்போனால், நாம் பேசிவரும்  அவ்வை எனும் இந்தப் பெண், பொல்லாத  ஆண் உலகில் படாத பாடுபட்டவள் தான். இன்று நாம் “professional women” என்று சொல்லக்கூடிய பணியிடப் பெண்களுக்கான பிரச்சினைகளைப்  பற்றிப்    பேசி வருகிற  இந்தத் தருணத்தில் அவ்வையின் பணியிடப் பிரச்சினைகளையும் கூடக்  கருத்தில் கொள்ள வேண்டும்.  அந்நாளில் மன்னராட்சியில் –  புலவராக, எழுத்தாளராக, Governance எனப்படும் அரசாட்சி நுணுக்கங்களில் விற்பன்னராக – அரசவையில் மன்னருக்கு ஆலோசகராக, மக்கள் தொடர்பு மிகக் கொண்ட மக்கள் பிரதிநிதியாக, சமயத் தலைவராக, இறை அன்னையாக,  மாதர்குலத் திலகமாக இருந்திருக்கிற  மிக அசாதாரணமான பெண் அவ்வை. உலகின் எந்த கலாச்சாரத்திலும் அவ்வையைப் போன்ற ஒரு professional woman – பெண் அதிகாரியை – நீங்கள் காணமுடியாது.  பன்முக ஆற்றலும் பரிமாணமும், சொல் வன்மையும், கடப்பாடும், கட்டுப்பாடும், இறை சிந்தனையும்  கொண்டு விளங்கிய பெண் அவ்வை. மனித குலத்துக்கு மாதர்களின் மேன்மையை அறிவிக்கும் விநாயகர் அகவல் என்கிற புனித நூலை இயற்றி அவள் மனித குலத்துக்கு ஒப்பற்ற சேவை சேவை செய்திருக்கிறாள். இது உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியாகவேண்டும்.

    சொல்லப்போனால்  இந்திய கலாச்சாரத்தில், கணபதி என்னும் கடவுள், பெண்ணின் உடலின் உயர் இலக்கணங்களை – அவளது உடலில் பொதிந்திருக்கும்  ஒப்பற்ற இறைமையின் அடையாளங்களைக் காட்டுமுகமாக உலகிற்குத் தோற்றம் அளித்தவரே.

    அத்தகைய கணபதி எனும் விநாயகக் கடவுள் காட்டும் பெண்ணார்ந்த சூட்சமங்கள் யாவற்றையும் பொதித்து, அவள் – இவ்விநாயகர் அகவலை ஓதுகிறாள் –  அந்நிலையில், அவளது மனித குல சேவையைப் பாராட்டியவாறு அருள்பாலித்து கடவுள்அவளைத் தன்னுடன் ஐக்கியமாக்கி அவளுக்கு இறைபதவி அளிக்கிறான் என்பது வரலாறு.

    அவ்வை எனும் ஒரு professional woman, பெண்களுக்கான முழுமையான வேதமாக விநாயகர் அகவலை ஆக்கிப் படைத்திருக்கிறாள்  என்பதை நாம் உற்று நோக்கவேண்டும். எவரும் பேசத் தயங்கும் அல்லது கொச்சைப்படுத்தி இழிவு செய்யும் ஒரு முக்கியமான சமாச்சாரத்தை, professional woman என்ற வகையிலும், சாதாரணப்பெண் என்ற வகையிலும் இரு நிலைகளில் நின்று, அவ்வை ஆய்ந்து எழுதியிருப்பது விநாயகர் அகவல். பெண்கள் பிரச்சினைகளை அவள் எத்தனை அகலம் சென்று – எத்தனை ஆழம் சென்று  புரிந்துகொண்டிருந்தாள் என்பதைக்  காட்ட இந்த  விநாயகர் அகவல் ஒன்றே போதும்   இது ஒரு அசாத்தியமான படைப்பு. விநாயகர் அகவலின் ஒவ்வொரு சொல்லும் ஒரு காவியம். professional woman என்கிற வகையில் விஞ்ஞானியாக என் முப்பதாண்டு காலப்  பணி  அனுபவம், பன்னாட்டுதொடர்பு,  அரசுப்பணி, எழுத்துப் பணி,  பதிப்புப் பணி  என அடிமட்ட அடியேனுக்கு ஏற்பட்ட ஒரு சிறு வாழ்வியல் அனுபவத்தில் அவ்வையின் முழுப் பரிமாணங்களையும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. அவ்வை என்பவள் இலக்கியவாதி மட்டுமல்ல, மருத்துவத்தில் தலை சிறந்தவளாக, வர்ம மருத்துவக்கலையில் ஒப்பற்ற  நிபுணராக,  மிகப்பெரிய பெண் யோகியாக, பெண்ணின் உடலியல் பற்றிய ஞானங்களில் தலைசிறந்த ரிஷியாக, மக்களோடு மக்களாய் வாழ்ந்து அவர்களுக்குச்  சேவை செய்த மனிதகுல முழுமருத்துவராய் என்னால் அவ்வையைப் பார்க்க முடிகிறது. அந்நாளில் எங்கள் ஊரில் பெண் மருத்துவச்சிகள் இருப்பார்களாம். வீட்டுக்கு வீடு சென்று பிரசவம் பார்ப்பதும் பிள்ளை பேணுவதும் அவர்களது சேவைப் பணியாம். அவ்வை ஒரு மருத்துவச்சியாக இருந்திருக்க வேண்டும். எண்ணற்ற பிரசவங்களை அவள் பார்த்திருக்கவேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    நான் ஏற்கனவே சொன்னது போல, விநாயகர் அகவல் என்பது  முழுக்க முழுக்க ஒரு பெண் மருத்துவ உடலியல் விளக்கம்.  தேர்ந்தெடுத்த – மிகப்பொறுப்பான – மிகப்பொருத்தமான வாசகங்களை மிக எச்சரிக்கையுடன் – மிக நுணுக்கமாக அவ்வை, தனது  விநாயகர் அகவலில்  கையாண்டிருக்கிறாள். “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்கிறபடியாய், “சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து” என அவள் இங்கே ஒவ்வொரு சொல்லையும் வெகு நேர்த்தியாக உபயோகிக்கிறாள். எழுத்துலகில், விநாயகர் அகவல் ஒரு இலக்கிய விருந்து என்றால், மருத்துவ உலகில், இது ஒரு மாபெரும் Source Book என்பேன். மருத்துவ பரிபாஷையில் விநாயகர் அகவலை விளக்கப் புகுந்தால் பல மருத்துவ நூற் தொகுப்புக்களை நம்மால் வெளிக்கொணர முடியும். நவீன மருத்துவக்  கல்வியில் விநாயகர் அகவலை இணைக்கும் ஒரு காலம் கனியுமெனில் அது இவ்வுலகின் ஒரு மிகப்பெரிய பொற்காலமாகும்.

    குறிப்பாக, மூலாதாரக்கனல் பற்றி அவ்வை சொல்லியிருப்பது மருத்துவ உலகில் ஆணித்தரமான ஞானக்கருவூலம். உலகில் இதுகாறும் வெளிவந்திருக்கிற எந்த நவீன மருத்துவ அறிவியல் வெளியீடும் வெளிக்கொணர்ந்திராத  அசைக்கவியலாப் பேருண்மைகளை அவ்வை  ‘மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்து’ என ஒற்றை  வாசகத்தில் சேர்த்தளிக்கிறாள்” என்றேன்.

    “மூலாதாரத்தில் உண்டாகும் உஷ்ணம்  என்பது எத்தனைப் பெரிய  விஷயம்!  இது தெரியாமல் ஐம்பது வருஷங்களாய் வீண் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேனே!” என்று அவர் தன்னை நொந்து  கொண்டார்.

    “எங்கள் ஆடவர்களில் பலருக்கும் – ஏன் எங்களின் பல   பெண்களுக்கும் – உலகின் எண்ணறிந்த பெண்களுக்கும் கூட  இதே நிலைதான். அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த விளக்கம் – கவலைப் படாதீர்கள்- அறியாமை விலகிட  வேண்டுமெனில் அறிவுக்கண்களை நாம் நாம் திறக்க வேண்டுமல்லவா!” என்று நான் தொடர்ந்தேன்.

    முதலில் மூலாதாரக்கனலின் இருவேறு நிலைகளைக் காணவேண்டும் – ஒன்று: மூலாதாரத்தில் மூளும் கனல் சரியாக, முழுமையாகக் கனியாமல்  இருக்கும் நிலை; இரண்டு: மூலாதாரக்கனல் நன்கு  கனன்று அங்கேயே செறியும் நிலை ஆகியன.

    இந்த இரு நிலைகளிலும் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை நன்கு அக்கினியாக்கி அதனை ஜ்வாலையுடன் ஒளிறும்படியாய் கனற்றி, அதனை அங்கிருந்து எழுப்பி, அவ்வெப்பத்தைப் பெண்ணின்  உடல் முழுதும் பரப்பி – உடலுக்குத் தேவையானது போக உள்ள மிச்சத்தை உடலினின்று  விட்டு வெளியேறச் செய்ய வேண்டும். இது ஒன்று தான் பெண்ணை – சரியான அளவீடுடைய அப்பு எனப்படும் நெருப்புடன் காக்கும். முதலில் மூலாதார அங்கங்களின் அமைப்பை நாம் கீழ்வரும் படங்களின் மூலம் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.

    படம் 1 (இடது) முதுகெலும்பும் திருவெலும்பும் இணையும் பாங்கு https://www.studyblue.com/notes/note/n/antphy-181-study-guide-2012-13-torry-/deck/9726113 திரிவெலும்பின் காஸிக்ஸ்  எனப்படும் வால்  எலும்பு; ; நடு: காஸிக்ஸ் எனப்படும் திருவெலும்பின் நுனியின் பின்றத்தோற்றம் –  காஸிக்ஸ் முன்ன்புறமாக வளைகிறது (http://www.healthhype.com/broken-coccyx-causes-and-symptoms-2.html) . (வலது) காஸிக்ஸ் பின்புறம் வளைந்து பெரினியத்தின் உளதளத்தைத்  தாங்குகிறது  (http://i0.wp.com/exhaletomove.com/wp-content/uploads/2011/02/pelvicfloor1-11.jpg).   படங்களின் உதவிக்கு நன்றி; வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். THese pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

     

    படம் 2. (இடது) பின்புறம்  வளையும் காஸிக்ஸின் நுனியில் வெப்ப உற்பத்தி நிகழ்தலின் மாதிரிப் படம் ; (வலது) திருவெலும்பில் உஷ்ணம் செறிதலின் மாதிரிப் படம்  . http://www.iatropedia.gr/ygeia/ponos-stin-oura-eties-ke-tropi-anakoufisis/41465/. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    படம் 3. திருவெலும்பு யானையின் முகத்தோற்றம் போன்ற வடிவும், நான்கு ஜோடி  தோள்களும்  (shoulders) ஐந்து கரங்களும் (limbs)  உடையது. படத்திற்கு நனறி: http://www.healthhype.com/sacrum-and-coccyx-tailbone-of-the-spine-anatomy-and-pictures.html. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    படம் 4. பெரினியத்தின் உட்புறத்தோற்றங்கள்.  http://www.sspphysio.com.au/coccyx-pain.html. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

                                           

    படம் 5. (இடது) முதுகெலும்பு வில் போன்ற தோற்றம் கொண்டது  http://www.urgentcarefl.com/bruised-tailbone-see-doctor-pain-falling/. முதுகெலும்பின் நரம்புகள்  ஜோடி ஜோடியாய்ப்  பிரிகின்ற்னhttp://www.urgentcarefl.com/bruised-tailbone-see-doctor-pain-falling/. முதுகெலும்பின்  தொடர்ச்சியாக வரும்  திருவெலும்பின் கடைக்கோடியில் முன்னோக்கி வளைந்தபடி அமையும் வால்  எலும்பு எனப்படும் காஸிக்ஸிலிருந்து ஒரு ஜோடி நரம்புகள் பிரிகின்றன. காஸிக்ஸின் அமைப்பு பாம்பின் பல்லைப்  போன்றும்  அதனிலிருந்து பிரியும் ஒரு ஜோடி நரம்பு தொங்கும் பாம்பின் பிளந்த நாக்கைப்போலவும் இருக்கும். திருவெலுப்பின் அமைப்பு யானையின் முகத்திப்போல இருப்பதைக் காண்க. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன.                 இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    படங்களின் மூலம் அமைப்பைப் புரிந்து கொண்ட நிலையில், மருத்துவ ரீதியாக, பொறியியல் ரீதியாக, பெண்ணின் உடலினைப் பார்க்க வேண்டும்.  உடலில், சிரசுக்கும் கால்களுக்கும் மத்தியில் இடையாக வருவது இடுப்பு. இடுப்பும் மார்புக்கூடும் என்றும் நேராக இணையாது. இரண்டும் அப்படியே தனித்தனியாய்க்  கிடைக்க  – இந்த இரண்டையும் ஒரு  கம்பிச்சுருள் பாலத்தால் இணைப்பது முதுகெலும்பு. முதுகெலும்பின் துவக்கம் சிரசின் பின்பகுதியான் முகுளம் – அதன் முடிவு இடுப்பெலும்பின் பின் மையத் தொக்கலான  திருவெலும்பு.  திருவெலும்பின் அமைப்பு வெகு நுட்பமானது என்றால்  திருவெலும்பின் நுனியானது  வெகு-வெகு நுண்ணிய நுட்ப வடிவ அமைப்பு கொண்டது.  இந்த நுனியை காஸிக்ஸ் என்பர். இந்த காஸிக்ஸில் தான் முதுகெலும்பின் நரம்புத் தொகுதியின் கடைசித் தொங்கு நரம்பிரட்டை முடிகிறது. இது அசப்பில் பார்க்க பாம்பின் நாவைப்போன்று இருக்கும்.

    இந்தத் திருவெலும்பானது   இடுப்புக்குள்  இருப்பது. இங்கே இடுங்கி ஒளிந்து கொண்டு இருப்பது தான் பெரினியம் எனும்  மூலாதார வாயிலும் அதனுள் உள்ளக் குழியும். குறிப்பாக, இடுப்புடன் கால்கள்  இரண்டும் வந்து இணையும் இடைச்சந்தியில் தான் இந்த பெரினியம் மிகப்பொருத்தமாக – மிக பத்திரமாகப்  பொருத்தப்பட்டிருக்கிறது. பெரினியம் முழுக்க முழுக்க திசுஇழைகளால்  ஆக்கப்பட்டிருக்கிறது (சேயிழையார் என்று பெண்கள் அழைக்கப்படுவது பெரினிய அமைப்பில்தான் என்று ஏற்கனவே பார்த்தோம்).

    பெரினிய அமைப்பை உற்றுக்கவனித்தால் நமக்கு ஒன்று புரியும். இரண்டு கால்களின் கடை முடிவுகள் இடுப்புடன் வந்து இணையும் இரு அடிப்பகுதிகளையும் ஒன்றாக தசைநார்களைக் கொண்டு இணைத்துத்  தைத்ததால் ஏற்பட்ட ஒரு   துருத்தியே பெரினியம் என்பது விளங்கும்.

     பெரினியத் தசை நார்கள் பிற உறுப்புக்களில் உள்ள தசைநார்களிலிருந்து வித்தியாசமானவை. மிக அதிக இழுப்பு விசைகொண்ட உறுதியான ரப்பர் நார்கள் இவை. உடலிலுள்ள பிற தசைநார்கள் குறித்த அளவே நீளும் ஆனால் பெரினிய தசைநார்களோ 10 மடங்கு அதிகம் நீளும். அது மட்டுமல்ல விரிந்தபின் மீண்டும் இயல்பாய் சுருங்கி பெட்டகம் போல் மடிந்து கொள்ளும். புடவைக்கு கொசுவம் வைப்பதைப்போல நுண்ணிய மடிப்புக்களில் டக்கென மடிந்து சுருங்கிக்கொள்ளும் தன்மையான இழைநார்கள் இவை. உற்றுப்பார்த்தால் இழைக்கோர்த்து நெய்தாற்போல் – உறுதியான தோலாலான மடல்களைப்போல அத்தனை நேர்த்தியாய் இந்த அமைப்பு இருக்கும். பெரினியத் தசைநார்களின் இன்னுமொரு சிறப்புப் பண்பு என்னவென்றால் எட்டு வெவேறு விதமான தசைநார்கள் ஒன்று சேர்ந்து பெரினியத்தை உருவாக்குகின்றன. மேலும். இது தசைநார்களில் கொழுப்புச் சத்தும் மிகுந்திருக்கிறது – தோல் போன்ற தடிமன் குறைந்த மெலிதான தன்மையும் மீள்விசையும் இந்தக் கொழுப்புச் சத்தால் வருவனவே.

    Inline image 1

    படம் 6. பெரினியத்தை இணைந்து உருவாகும் வலுவான தசைநார் இழைமடல்களின் மாதிரி. இந்த இழைமடல்கள் மிகுந்த இழுப்பு விசையும் மீள் வீசையும் கொண்டவை. http://www.buyamag.com/pelvis_model.php. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    பெரினியத்தின் ஒட்டுமொத்த வடிவம் அகலின் தீபம் போல் இருக்கும். அகல் விளக்கும் கூட பெண்ணின் பெரினியத்தின் அமைப்பையையும், அதனுள் எழும் அனலையும் குறிப்பிடவே உருவாக்கப்பட்டதாக ஐதீகம் உண்டு.

    இது நிற்க. பெரினியத்தைத் துருத்தியை ஒத்த ஒரு கருவி என்றோம். துருத்தி என்றால் அதற்கு சுருங்கி விரியும் வாய் உண்டு. பெரினியத்தின் பெண்ணுறுப்புத் துளை அளப்பரிய விரிந்து சுருங்கும் ஆற்றல் உடையது என்கிற விஷயம் நாமெல்லாம் அறிந்த ஒன்று தானே!- ஒரு குழந்தையின் தலை அந்தத்  துளையில் வழியே தானே வெளிவருகிறது! பிரசவமான  பின்பு சுருங்கி மீண்டும் சாதாரண இயல்பு நிலைக்குத் திரும்பும் அசாத்திய ஆற்றல் அதற்கு உண்டு அல்லவா?

    படம் 7. பிரசவத்தின் போது பெரினியத் தசை நார்கள் விரிய, உள்ளிருந்து வெளியே பிரவேசிக்கும் சிசு. http://sydney.edu.au/medicine/nepean/research/obstetrics/pelvic-floor-assessment/English/sydney%20pelvic%20floor%20body/After%20Birth/Anal%20Sphincter%20Muscle/Anal%20Sphincter%20Muscle%20html.html. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன.                 இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    இப்போது பொறியியலில் கவனம் செலுத்துவோம். கருவி எனும் வகையில், துருத்தி என்பது காற்றுக்  கருவி. கொல்லர்கள் பயன்படுத்துவது. சிறு அடுப்பில், இரும்பையும் கூடப் பழுக்கக் காய்ச்சும் அளவுக்கு உஷ்ணத்தை உருவாக்க துருத்தியைக்  கொல்லர்கள் பயன்படுத்துவார்கள். விரிந்து சுருங்கும் தோல் வாயும் – அவ்வாயை விரித்துச் சுருக்க இரு கால்களும் துருத்திக்கு உண்டு. துருத்தியில்   காலிரண்டும் இணைந்து ஒற்றைக் கண்மாயாயாக மாறி ஒரு துவாரத்தில் சென்று பொருந்தும். துருத்தியின் கால்களை அசைக்க, துருத்தி காற்றை உள்ளிழுத்து, அக்காற்றை, கண்மாயின் துவாரம் வழியே அடுப்புள் இருக்கும்  தணலில்  மீது குவித்து அத்தணலைக்  கனன்று எரியவைக்கும்.

    படம் 8. துருத்தி எனும் தோல் கருவியைபப்  பயன்படுத்தி அடுப்பில் உள்ள கனலை  கொழுந்துவிட்டு  எரியவைக்கும் காட்சி. http://warehamforgeblog.blogspot.com/2008_07_01_archive.html. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன.                 இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.


    இவ்வகையில் விரிந்து சுருங்கும்  துருத்தியாம் பெரினியத்தை இரு கால்களால் இயக்கி, பெரினியக்குழியாம் அடுப்பைபோன்ற இடுப்புக்குழி எனும் அக்கினிக் குண்டத்தில் மூளும் நெருப்பை அங்கே தாங்காமல் எழுப்பி அவளது உடல் பூராவும் பரப்பும் வித்தையை எங்கள் தமிழ்ச்சமுதாயம் நடத்திக் காட்டியது” என்றேன்

    “ஒரு சந்தேகம்” என்றார். தொடர்ந்தார். “பெண்களுக்கு கால்கள் பலவீனமாயிற்றே – அவர்களால் இது எப்படி முடியும்? ஒரே குழப்பமாய் இருக்கிறதே” என்றார்.

    இதிலே குழம்ப ஏதுமில்லை. பிற கலாச்சாரங்களால் சாதிக்கமுடியாததைச் சாதித்தது எங்களுடைய கலாச்சாரம். எங்கள் பெண்கள் மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கலை தெரிந்தவர்கள். இந்தக் கலையை அவர்களது அனுதின வாழ்வாக்கி, அக்கலையை அவர்களது நடையிலும் உடையிலும், தினசரிப் பழக்க வழக்கங்களிலும் இழைத்தும் குழைத்தும் நிறுத்தியது எங்கள் கலாச்சாரம். உலகின் வேறெந்த  சமுதாயமும் காணாத மாபெரும் வெற்றி இது என்றேன்.

    மேலும் பேசுவோம் .

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 8

    அவ்வை மகள்

    மனித நேயமும் – மனிதச் சேவையும் தொழிநுட்பத்தின் இரு கண்கள்

    இறையியல் சிந்தனைகள்

    உலகிற்கு என்ன தேவை என்பதனை மிகச்சரியாக உணர்ந்து, அதனை மிகச்சரியான தருணத்தில், மிகச்சரியான அளவிலே தருகிறவர்கள் உலகில் வாழும் கடவுள்களாகிறாகள். துறை எதுவாகினும் எந்தத்துறைக்கும் இது பொருந்தும். மதமா? அரசியலா? மருத்துவமா? உளவியலா? தொழில்நுட்பமா? எந்தத்துறையும் இதற்கு விதிவிலக்கில்லை.

    அரண்மனை வாயிலில் மணி கட்டி – மக்கள் குறை அச்சமின்றி அரண்மனை வந்து குறை அறிவிக்கச் செய்து – அவர்கள் குறைதீர்த்த மனுநீதிச் சோழனும் உயிர்த் துன்பம் இனி செய்யேன் எனப் போர் துறந்த அசோகச் சக்கரவர்த்தியும், ஆராயாது தவறிழைத்ததால் அவையில் உயிர்துறந்த நெடுஞ்செழியப் பாண்டியனும், எங்கள் தமிழகத்தில் சிறப்பான அறிவியல் ஆய்வகம் வேண்டும் என்று சொந்த நிலத்தின் பத்திரத்தையும் சொந்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு டில்லி வரை சுருக்கென சென்று – மையஅரசுக்கு வழங்கி மையமின்வேதியியல் ஆய்வகம் தமிழ் மண்ணில் – காரைக்குடியில் நிலைபெற காரணமாயிருந்த வள்ளல் அழகப்பரும் அரசியல்துறையில் வாழும் கடவுள்கள்.

    அம்மை நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் மருத்துவத்துறையில் வாழும் கடவுள்.

    ரேடியோவைக்கண்டுபிடித்த மார்க்கோனி – விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் – வெடிமருந்து கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல், – இவர்கள் எல்லாம் அறிவியல் – தொழில்நுட்ப உலகில் வாழும் கடவுள்கள்.

    வாகன உற்பத்தியில் டாடாவும், அசோக் லேலண்டும்; வேதி உற்பத்தியில், தூத்துக்குடியிலன் தரங்கதாரா கெமிக்கல்ஸ், மேட்டூரில், மேட்டூர் கெமிக்கல்ஸ் மற்றும் கெம்பாப் தொழிற்கூடம், பொள்ளாச்சியின் சக்தி நிறுவனங்கள், ஆகியனவற்றின் நிறுவனர்கள் தொழில்நுட்பத்துறையில் கடவுள்கள். இன்று உலகம் வியக்கும்படியாக Fuel Cells எனப்படும் சக்திக் கலங்களை உலகெங்கும் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தின் உரிமையாளர் தமிழர் கே. ஆர். ஸ்ரீதர் ஆற்றல் தொழில்நுட்பத் துறையில் வாழும் கடவுள்.

    இவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்த (அல்லது வாழ்ந்து வருகிற) காலகட்டத்தில் உலகிற்கு என்ன தேவை என்பதனை மிகச்சரியாக உணர்ந்து, அதனை மிகச்சரியான தருணத்தில், மிகச்சரியான அளவிலே தந்தவர்கள்.

    சமயங்கள் எனும் வகையில், ஆதி சங்கரர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரமணர், வள்ளலார். இயேசுபிரான், நபிகள் நாயகம் ஆகியோர் அன்றும் இன்றும் வாழும் கடவுளானவர்கள். ஆன்மீக விஷயங்களில், உலகோர்க்கு எப்போது என்ன தேவை என்பதைச் சரியாக உணர்ந்து அந்தத் தேவையை நிறைவு செய்த பெருமை இவர்களுடையது.

    பிரபஞ்சவியல் மற்றும் உடலியல் துறையில் சித்தர்கள் கடவுள்களே. உலகில் வேறெவரும் கிட்டே நெருங்கமுடியாத அள்வுக்கு உயரே சென்று உய்யஆய்ந்து நம் சித்தர்கள் நிலைநாட்டியிருக்கிற கண்டுபிடிப்புக்களை அறிந்து கொள்ள மட்டுமே பல யுகம் வேண்டும். இன்றும் என்றும் ஓப்பது மிக்கதும் உள்ளது ஏதும் இல்லை என்ற அளவுக்கு உண்மைக் கருவூலங்களை நமக்காய் விட்டுச் சென்றிருக்கிற வித்தகர்களான சித்தர்கள் என்றும் கடவுளாகவே நிலை பெறுவர்.

    கணினித் தொழில்நுட்பம் என்பது இன்றைய காலகட்டத்தின் இன்றியமையாத தேவையாக இருக்கிறது. உண்ணவும், உறங்கவும், கனவு காணவும் கூட கணினி என்றாகிவிட்ட இக்கால நிலையில் – கண்ணெல்லாம் கணினி – கணக்கில்லாக் கணினி என்பதே பரிபாஷையாகி- அடையாளமாகி – விட்டது. கணினியின்றி எவரும் வாழமுடியாது என்கிற காலக் கட்டாயத்தில் நாம் வாழ்கிறோம்.

    ஆனால், இன்று நம் கையில் இருக்கும் கணினித் தொழில்நுட்பம் சும்மா வந்தவிடவில்லை. இந்த செம்மாந்த வளர்ச்சிக்கு நீண்ட பின்புலம் இருக்கிறது. கணினி வளர்ச்சி கடந்து வந்திருக்கிற பாதை நெடியது – கடியது. இந்தப் பாதை கரடு முரடானது – கொடிய முகடுகள் கொண்டது – பயங்கரப் பள்ளத்தாக்குகளில் இறங்கி ஏறி வந்தது, சறுக்கிவீழ்த்தும் பிடிமானமில்லாத வழுக்குப்பிரதேசங்களைக் கடந்தது வந்திருப்பது. நினைத்தாலே நடுக்கம் கொள்ளவைக்கும் பிரம்மாண்டாமான மனிதஉழைப்பை இந்தக் கணினி வளர்ச்சி முதலீடாய் விழுங்கியிருக்கிறது. உலகின் வேறெந்த தொழிநுட்ப வளர்ச்சியும் இந்த அளவு மனித முதலீட்டை கபளீகரம் செய்யவில்லை என்றே சொல்லமுடியும். இன்று உலகளார்ந்த அளவில் பலுகிப்பெருகியிருக்கிற கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எண்ணிறந்த இந்தியர்கள் உழைப்பு நல்கி இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும் – குறிப்பாக – நம் தமிழர்கள் தந்திருக்கிற ராப்பகல் உழைப்பு அளப்பரியது. இடம் பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும், தனிமனித சவுகரியங்களை இழந்தும், சொல்லொணாப் பல குடியேற்றப் பிரச்சினைகளைச் சந்தித்தும் – உலகில் அனைவருக்கும் கணினித் தொழிநுட்பம் கிடைக்க வேண்டும் என்கிற ஒரே சிந்தனையோடு மனிதவள முதலீட்டை வழங்கியிருக்கிற பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களை வாழ்த்தி வணங்குதல் நன்று.

    கணினி வளர்ச்சி இவ்வாறானது என்றே இருப்பினும், கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உண்மையிலேயே முதன்மையான முதலீடு ஒன்று உண்டு. அது என்னவென்றால்: “தீர்க்கதரிசனம்.”

    அம்மைத் தடுப்பூசியின்றி மக்கள் வாழமுடியாது என்றது ஜென்னரின் தீர்க்கதரிசனம் – ரேடியோவின்றி மக்கள் வாழமுடியாது என்றது மார்க்கோனியின் தீர்க்க தரிசனம். மனிதர்கள் நோயுடன் வாழமுடியாது என்றது சித்தர்களின் தீர்க்க தரிசனம். சமரச சன்மார்க்கம் இன்றி மக்கள் ஒருமையுடன் வாழமுடியாது என்றது வள்ளலாரின் தீர்க்கதரிசனம்.

    கணினியின்றி மக்கள் வாழமுடியாது என்றது ஸ்டீவ் ஜாப்ஸின் தீர்க்கதரிசனம். மக்களுக்கான கணினித் தேவையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அனைவர்க்கும் கணினித் தொழில்நுட்பவசதி கிடைக்கவேண்டும் என்று மனப்புலனில் வடிவமைத்து – திட்டமிட்டு – கனவு கண்டு – ஓய்வு ஒழிச்சல் இல்லாது உழைத்த ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் இன்று வாழும் கடவுளாகவே காண்கிறது.

    கணினி வாழ்வின் அடிப்படை ஆதாரவசதி என்றாகிற காலம் வந்துகொண்டேயிருக்கிறது, அதற்காக, கணினித்தொழில்நுட்பத்தைப் பல்லோரும் பயனடையுமாறு பதப்படுத்தி, பலப்படுத்தி, பன்மைப்படுத்திட வேண்டும். அனைவருக்கும் அனைத்துக்கும் கணினித் தொழில்நுட்பம் என்று இத்தொழில்நுட்பத்தை எளிமைப்படுத்தி அதனை அனைத்து மனித சாதனமாய்த் தயார்செய்து வைத்தாலொழிய, கணினி அனைவருக்கும் கிடைக்காது என்று எண்ணினார் ஸ்டீவ் ஜாப்ஸ். இவ்வாறு எதிர் வரும் ஒரு தேவையை முன்கூட்டியே – ஏறக்குறைய ஒரு கால்நூற்றாண்டுக்கு முன்னேயே ஞான திருஷ்டியால் பார்த்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னேயே சுதந்திரத்தை ஞான திருஷ்டியால் பார்த்து “ஆடுவோமே பள்ளு பாடுவோமே!” என்று ஆனந்தக் கூத்தாடச் சொன்ன பாரதியின் உறுதியை ஸ்டீவ் ஜாப்ஸின் தேவை உணர்தலில் காணமுடிகிறது.

    தேவையை உணர்தல் சிறப்பான விஷயம் தான் ஆனால் வெறுமனே உணர்தலால் என்ன பிரயோஜனம்? உணர்வை ருசுவாகவேண்டும் – எண்ணத்தைச் செயலாக்க வேண்டும் – சாதனைப்படைக்க வேண்டும் அல்லவா?

    சாதனை ஒன்றைப்படைக்க வேண்டுமென்றால் விடாப்பிடியான கொள்கைப் பற்று வேண்டும் – இலக்கினின்று விலகா சிந்தை வேண்டும். கடுமையான பழக்கவழக்கங்கள் வேண்டும் – காலநேரம் விரயமாகக் கூடாது.

    அதுவும் கண்ணினித் தொழில்நுட்பம் என்பது பலபேரை இணைத்தும்- இணைத்த அந்தக்குழுவைச் சிதையாமல் தன்னுடன் இணைத்தும் – உடன் அழைத்தும், உடன் இழுத்தும் செல்லவேண்டிய பணி. வேண்டும்போது குழுவை முன் தள்ளியும் – தேவைப்படும்போதெல்லாம் குழுவை மறைவில் கிடைக்கச் சொல்லியும் மாற்றுக் கட்டளைகள் பிறப்பிக்கவேண்டிய பணி. பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளைக் குழுபின்பற்றுமாறு கட்டுப்பாட்டுடன் ஒருங்கமைத்தல் ஆகியன மிகவும் முக்கியம். இப்பணியில் பலபேருடன் உரசல்கள் ஏற்படும் – மோதல்கள் நிகழும் – கஷ்டநஷ்டங்கள் உருவாகும் – பசி– பட்டினி – தாகம் பொறுக்கவேண்டும் – உறக்கம் விடுக்க வேண்டும் – அடிக்கடி தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் – கூட்டங்கள் நடத்தவேண்டும் – கூட்டங்களில் கலந்தது கொள்ளவேண்டும் – உரை நிகழ்த்தவேண்டும் – உரையாடவேண்டும் – பிறரை தன் கருத்துக்கு இணக்கம் சொல்லவைக்க வேண்டும் – பணவிஷயத்தில் கராறாய் இருக்கவேண்டும் – உடன் பணிபுரியும் அனைவருக்கும் சம்பளம் வழங்கவேண்டும் – என ஓராயிரம் நிர்ப்பந்தங்கள். இதற்கிடையில் வளர்ச்சியைப் பொறுக்கமாட்டா பிறரின் வசைவையும் – தொந்திரவையும் – அவர் செய்யும் தீங்கையும் பொறுத்துக்க கொள்ளவேண்டும் என்ற சோதனைகளை வேறு.

    இந்நிலையில் ஒருவன் ஒரு தொழில்நுட்ப முன்னோடியாக – கணினித் தொழில்நுட்பத் தந்தையாக உயர்த்துவது என்பது அற்ப சொற்பமான செயலன்று. சொல்லப்போன்னால் ஒருதனிமனிதனாக நின்று ஸ்டீவ் ஜாப்ஸ் மேற்சொன்ன அனைத்தையும் சந்திக்கவேண்டியிருந்தது. ஏனெனில் கணினித் தொழில்நுட்பத்தில் சுயம்புவாக உருவானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

    ஸ்டீவ் ஜாப்ஸ்கொண்டிருந்த கணினித் தொழில்நுட்பப பற்றை, தொழிநுட்ப வெறி எனலாம். உண்பதும் உறக்கமும் கணினி என்றான வாழக்கை. யாருக்காய்க் கணினி என்றால் இந்த உலகின் உள்ள மக்கள் யாவருக்கும் கணினி என்கிற கனவு – எவர் கையிலும் கையிலும் கணினி என்கிற பார்வை – தொலைபேசியையும் கணினியையும் சங்கமித்து கையகக் கணினிகளை உருவாக்கவேண்டும் என்றத் தணியா ஆவல். இதை அவர் ஏன் செய்தார் என்றால் – அவரே கூறாக காண்க: “நான் மனித நேயன் – ஆனால் சிறுவயதுமுதலே எனக்கு மின்னணுக் கருவிகளின் பால் மிகுந்த நாட்டம் இருந்தது – என்னுடைய ஹீரோவாக நான் கொண்டிருந்தவர் போலராய்ட் கேமராவைக் கண்டுபிடித்த துவின் லேண்ட் – அவர் – அறிவியல் தொழிநுட்பக் கண்டுபிடுப்புகளில் மக்களே முதன்மையான இலக்கு என்கிறார் – அவர் வழியே எனக்குள்ள மனித சிந்தனையினையும் – தொழிநுட்பத் திறனையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று விரும்பினேன்!’ என்று.

    ஆம்! எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் மக்களுக்கான பயன்பாடே. மனித நேயமும் – மனிதச் சேவையும் தொழிநுட்பத்தின் இரு கண்கள் போன்றவை.
    மனித நேயமும் – மனிதச் சேவையும் இல்லாத எந்தத் தொழில்நுட்பமும் – தொழில்நுட்பமாய் இருக்க லாயக்கில்லை என்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

    மேலும் பேசுவோம்

    Share
  • எழுவகைப் பெண்கள்: 10

    அவ்வைமகள்

    துவாரபாலகர்களும் துளைநிலை ஒழுக்கமும்

    அமுத நிலையம் ஆதித்தன் இயக்கமும் என்ற உங்கள் அவ்வையைப் இவ்வுலகின் தலைசிறந்த பெண்மைப் பாதுகாவலர் என்றே சொல்லத் தோன்றுகிறது என்றார் அந்த இராணுவ அதிகாரி.

    “நான்கு மனைவிகள் – எத்தனையையோ பெண் தோழிகள் என்று என் காலம் இதுகால் ஓடியிருக்கிறது. பெண்ணின் உடம்பை – புணர்ந்திருக்கிறேனே தவிர உணர்ந்தவன் இல்லை. நான் சொல்கிறேன் எனத் தப்பாக நினைக்காதீர்கள – ஆண்மை மிதர்ப்புக்குக் கண்ணும் தெரியாது – காதும் கேட்காது – மூளையும் விளங்காது – துவாரம் மட்டுமே இலக்கெனக்கொண்டு எப்படியாகிலும் அவளை வீழ்த்தி ஜெயிக்கும் கொடூர குணம் கொண்டது ஆண் எழுச்சி, அந்த எழுச்சியால் பெண்மையின் மேன்மைகளை உணர்வது கடினம் – நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கிறேன். பெண்கள் பற்றிய புரிந்து கொள்ளல் கொஞ்சம் இருந்தது என்றாலும் – அவர்களைப் பற்றிய சரியான ஞானம் இல்லாமலேயே என் வாழ்நாளைக் கழித்திருக்கிறேனே என்று இப்போது உணர்கிறேன் – ஒருவேளை உங்கள் கலாச்சாரம் போன்று எங்கள் கலாச்சாரத்திலும் பெண்களின் நலன் என்பது முத்தாய்ப்பான விஷயமாக இருந்திருக்குமேயானால் நான் உங்கள் ஆடவர்களைப் போல ஒரே ஒரு மனைவியோடு நல்விதமாய் வாழ்ந்து – இப்படி அழிந்தொழியாமல் – அலைந்துகெடாமல் ஒழுங்காய் இருந்திருப்பேன் என்றே எண்ணுகிறேன்.” என்கிறார்.

    அந்த வெளிப்படையான நேர்மையைப் பாராட்டி விட்டுச் சொன்னேன், உங்கள் வாக்கின் சாட்சியாக எங்கள் ஆடவர்களை மீண்டும் நிலைக்கழைக்கும் பணி எங்களுக்கு இருக்கிறது என்பதை நான் எனக்கு மீண்டும் நினைவூட்டிக்கொண்டேன். சொல்லப்போனால், ஆண்களால் தான் ஒரு நாடு தாழ்வுறுகிறது என்பதை அவ்வையே சுட்டிக் காட்டியிருக்கிறார். நாடு எதுவாகினும், அது எத்தகைய நிலத் தன்மையைக் கொண்டதாகினும், அந்நிலத்தில் உள்ள ஆடவரின் தராதரத்தைக் கொண்டே அந்நிலத்த்தின் தராதரமும் அமையும் என்கிறார் அவ்வை என்றவள் தொடர்ந்து.

    அவ்வையின்

    “நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ
    எவ்வழி நல்லவ ராடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே.”

    என்ற பாடலை மொழிபெயர்த்துச் சொன்னேன். அந்நொடி, “அப்படியா – அப்படியா – அப்படியா?” என்று தொடர்ந்து கூவி வியந்தார் – மேலும் தொடர்ந்தார்.

    “இது எத்தனைப் பெரிய சமூகப் பொருளாதாரத் தத்துவம் தெரியுமா? ஆடவனின் நடத்தை – அவனது பழக்க வழக்கங்கள் – அவனது பெண்ணறம் பேணும் பாங்கு ஆகியன உண்மையிலேயே ஒரு சமூகத்தை அழிக்கும் அல்லது வாழவைக்கும். ஆடவனின் இளமை ஆற்றல் வெகுபெரும்பாலும் விரயமாகிறது – ஆனால் பெண்ணோ துடித்தெழுகிறாள் – காவல் தெய்வமாய் அவதாரம் எடுக்கிறாள். தன் வீட்டை – தனது சமூகத்தைக் காக்க – பெண் எத்தனைப் பாடுபடுகிறாள் என்பதை நான் அறிவேன் – சொல்லப்போனால் உங்கள் அவ்வையின் வாசகம் எனக்கு மிகவும் பொருந்தும் – என்னை வழிநடத்திச் செல்ல என்வாழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு பெண்ணும் முயன்றாள் – என் தாயிலிருந்து – நான் பழகி விலகிய அனைத்துப் பெண்கள் வரை! ஆனால் நான்? உதாசீனம் செய்தேன் – புறக்கணித்தேன் – அவர்கள் யாவரையும் உடுப்பாய்ப் பயன்படுத்தி, என் வாழ்விலிருந்து கழற்றி எறிந்தேன். உண்மையில் சொல்கிறேன் மோசமான ஆடவர்கள் எந்த சமூகத்துக்கும் அடுக்காது. உங்கள் அவ்வை, ஆடவர்கள் பற்றி நூற்றுக்கு நூறு சரியாய்ச் சொல்லியிருக்கிறாள்.” என்றார். அவரது களங்கமற்ற உண்மையின் வெளிப்பாட்டை மீண்டும் பாராட்டித் தொடர்ந்தேன்.

    “துவாரம் மட்டுமே இலக்கெனக்கொண்டு எப்படியாகிலும் அவளை வீழ்த்தி ஜெயிக்கும் கொடூர குணம் கொண்டது ஆண் எழுச்சி, அந்த எழுச்சியால் பெண்மையின் மேன்மைகளை உணர்வது கடினம்” என்றீர்களே அந்த வாசகம் என் சிந்தனையைக் கிளறியது. துவார பாலகர்களின் – Hole Guards நினைவு வந்தது என்றேன்.

    “அப்படியா அவர்கள் யார்?” என்றார்.

    “எங்கள் கோயிலில் மூலவர் எனப்படும் பிரதானக் கடவுள் கருவறையில் இருப்பார் என்று முன்னம் சொன்னேன் அல்லவா? எங்கள் கோயில்களில் கருவறையின் பிரதான துவாரத்தில் – அதாவது நுழைவாயிலில் – இருபுறமும் துவார பாலகர்கள் எனும் காவல் தெய்வங்கள் இருவர் இருப்பர் -இவர்கள் கர்ப்பக்கிரகத்தின் தலைமை துவாரத்தில் பக்கத்திற்கு ஒருவராக நிற்பர். பாலகன் என்றால் ஆண்பிள்ளை என்பது பொருள்.

    நெடிய தோற்றமும், ஊடுருவி வினவும் வியப்புக் கண்ளும் – கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி நிற்பர் துவார பாலகர்கள். இதில் குறிப்பிடத்தக்க விசேஷம் என்றால் – துவார பாலகரின் இருகால்களில் ஒரு கால் மட்டுமே கீழே பதிந்திருக்கும் – இரண்டாவதுகாலைத்தூக்கி – தூக்கிய அக்காலை மாறுகோணமாய்ச் செலுத்தி – அக்காலைக் கொண்டு – எழுச்சியுடன் கர்ச்சிக்கும் ஒரு ஆண் சிங்கத்தை அடங்குவார் துவாரபாலகர். அந்த காட்சியைக் கொஞ்சம் உற்று கவனிக்க வேண்டும். துவாரபாலகரின் கோணத்தில் தூக்கிய காலானது, ஒரு ஆண்சிங்கத்தின் தலைமீது நன்கு அழுத்திக்கொண்டிருக்கும்- அந்த சிங்கமோ “ஏய் நான் ஒரு சிங்கராஜா! என்னை நீ இப்படிச் செய்கிறாயே” என்று மிதர்ப்போடு அச்சிங்கம் அலறுவதுபோல் காட்சி இருக்கும்.

    அதற்கு துவாரபாலகர், “ஏய்! நீ சிங்க ராஜாவானால் எனக்கென்ன? உன் ஆம்பளைத் திமிரோடு இங்கே நுழைந்தாய் என்றால் அசிங்கப்படுவாய் ஜாக்கிரதை!” என்றபடியாக பதிலிருப்பார். ஒருவித அசாத்திய புன்னகையோடு – அச்சிங்கத்தை – அதாவது ஆண் செய்யக்கூடிய அசிங்கத்தைத் தரையோடு தரையாக அமுக்கி – அதனை எழும்பாமல் – மிதித்தபடி நிற்கிறார் எங்கள் துவாரபாலகர்.

    உண்மையில், எங்கள் துவாரபாலகர்களின் ஒய்யாரத்தையும் கம்பீரத்தையும் உடல்முத்திரை இலக்கணத்தையும் சொல்ல வார்த்தைகள் போதா. சொல்லப்போனால், இந்த துவார பாலகர்கள் ஏன் இங்கு கருவறை வாயிலில் நிற்கிறார்கள் – இவர்கள் கூறுவது என்ன என்று சிறுவயது முதல் நான் யோசித்ததுண்டு. அப்போதெல்லாம் புரியாதது – நவீன மருத்துவ அறிவியலில் கல்வி பெற்று – தொழில் மேற்கொண்டதால் – பின்னாளில் புரிந்தது. எங்கள் பாட்டியின் அம்மா ஓயாமல் சொல்லுவாள் “பலகாரமும் பலதாரமும் பாடைக்குப் பக்கம்” என்று அதுவும் கூட இந்த மருத்துவ அறிவியல் ஞானத்திற்குப் பின்பு மட்டுமே புரிந்தது. பலகாரம் -snack சாப்பிடுவதுபோல் பலபெண்களுடன் உறவு கொள்ளுவதா என்பதே அவள் கூறிய பழமொழியின் பொருள்.

    மருத்துவ அறிவியலில், பலதாரம் கொள்பவனுக்கு இதயக் கோளாறுகள் டக்கென வருகின்றன என்பது கண்டு ஆச்சரியப்பட்டேன் – பல பெண்களோடு உறவு கொள்ளும் ஆணுக்கு உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது அவனுடலில் – T helper செல்கள் பாதிக்கப்படுகின்றனவே என்று வியந்தேன். இந்த வாழ்வியல் அனுபவங்களின் விளைவால் எங்கள் கலாச்சாரத்தின் உன்னதத் தன்மையும் – எங்கள் மூதாதையர்கள் நாட்டியிருக்கிற மூலவேர்களையும் கொஞ்சம் கூடுதல் தெளிவுடன் பார்க்கும் சிந்தையும் என்னுள் வளர்ந்தது.

    ஆக, ஆண்களுக்கு இருக்கின்ற துவாரம் தேடும் எழுச்சியின் கடும் விளைவுகளின் விளக்கம் தான் துவாரபாலகர்கள் என்பேன். இளமையின் எழுச்சியால் உந்தப்பட்டு – பெண்ணின் கருவறையின் முகப்பான பெரினிய துவாரத்துக்குள் நுழையும் ஆண்மை எழுச்சிக்கு துவாரபாலகர்கள் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார்கள் என்பேன்: “மறையுறுப்புக்கள் ஆயுதம் போன்றவை – நெறிபிறழும்போது பதம் பார்த்துவிடுபவை – மனிதா நீ இதை புரிந்து கொள்! இந்தத் துவாரத்துக்குள் புனித அக்கினிக் கனல் இருக்கிறது – இந்த துவாரத்துக்குள் நுழையும் ஆண்மை எழுச்சி தூய்மையானதென்றால் – நியாமானதென்றால் – இங்குள்ள அக்கினி அந்த எழுச்சியைப் புடம்போட்டுத் தங்கமாக்கும் – நுழைந்த நல் எழுச்சியின் பிரதி பலனாய் – எழுச்சிமிக்கப் பரிசாய் நல்ல உறவு தரும் – நல்ல பிணைப்பு  தரும் – நல்ல ஆரோக்யம் தரும் – தங்கமான வாரிசு தரும். அன்றேல், இந்த துவாரத்தில் உள்ள அக்கினி உன் தீய எழுச்சியைக் கொய்து உன்னையே பொசுக்கிவிடும் ஜாக்கிரதை!” என்று துவாரபாலகர்கள் சொல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது!” என்றேன்.

    பார்க்கப்போனால், பெரினியத் துவாரத்துக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு ஆணும் துளைநிலை ஒழுக்கத்தோடு மட்டுமே நுழையமுடியும் என்னும் எங்கள் ஆன்மீக விளக்கங்கள் இன்றைய மருத்துவச் சான்றுகளின் கருத்தையே என்றோ அனாயாசமாய்ச் சொல்லிப்போயின என்பேன். சொல்லப்போனால் கற்பு என்கிற ஒரு கோட்பாட்டை எங்கள் கலாச்சாரம் நேரிடையாகவும் – மறைமுகமாகவும் வாழ்க்கைக் கோட்பாடாகவே முன்வைக்கிறது எனலாம்” என்றேன்.

    “What you said really makes sense” என்றார். “Chastity” அதாவது கற்பு என்பது ஆணுக்கு மிகவும் முக்கியம் – அதனை நான் இந்நிலையில் வெகு ஆணித்தரமாகச் சொல்லமுடியும் – என் தனிமனித வாழ்வின் பலாபலன்கள் அடிப்படையில் என்றார். கற்பை உலகின் பல கலாச்சாரங்கள் கோடிட்டேனும் காட்டுகின்றன – ஆனால்  உங்கள் கலாச்சாரம் பல்லாயிரம் படிகள் மேலே போய் அதனை வாழ்வின் இன்றியமையாக் கூறாகக் காட்டுவது உண்மையில் மிகப்பெரிய சாதனை!” என்றவர் நான் இன்னொன்றையும் சொல்லவேண்டும் என்று தொடர்ந்தார்.

    “ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் ஆயுசு பரியந்தமும் வாழமுடியும் என்று உங்களைப்போலவே இங்கு சில வெள்ளையர்களும் காட்டிவருகிறார்கள். ஏகபத்தினி விரதத்தோடு வாழும் பாக்கியம் எனக்கு இல்லை என்றாலும் – அப்படி இருந்திருக்கலாமே என என் எண்ணம் இப்போது ஏங்குகிறது. ஏனெனில் – எனக்குத் தெரிந்து ஏகபத்தினி விரதம் கடைபிடிக்கும் நபர்களின் குடும்பங்கள் உண்மையிலேயே, ஸ்திரமாய் – சவுக்கியமாய் – வளமுடன் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றன. கிளைபட்டு – கிளைபட்டு branching செய்பவன் உண்மையிலேயே சீக்கிரம் ரோகியாகிறான் – இதில் நானும் அடக்கம் என்றார். ஒரு பெண்ணைத் தாண்டி இன்னொரு பெண்ணைப் புணரும்போது உண்மையிலேயே – அது கொடூர எண்ணம் தான் என நான் எங்கும் கூறுவேன்” என்றார்.

    சரி, மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் அவ்வையின் கருத்து என்ன என்று சொல்வதாகச் சொன்னீர்களே என்று தொடர்ந்து வினவினார் – என் உரையாடல் தொடர்ந்தது.

    Share
  • எழுவகைப் பெண்கள்: 9

    அவ்வை மகள்

     பெண்ணின் மூலாதாரக்கனலில் அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

    பெண்ணின் பெரினியத்தை அக்கினிப் பாண்டம் என்கிறோம் – படைப்பாற்றலின் குண்டமாக – பாத்திரமாக – செயல்படுவதால் அங்கே உஷ்ணம் உற்பத்தியாகிறது என்றோம். இந்த அக்கினி என்பது – எத்தகையது என்று பார்த்தால் அது ஒரு எண்ணெய் விளக்கைப் போன்றது. திரிபோட்டு, எண்ணெய் விட்டு ஏற்றப்பட்ட விளக்கு எவ்வாறு எரிந்து வெப்பம் தருகிறதோ அதுபோன்றே பெரினியத்தின் உள்ளே விளக்கின் அழல் போல் கனல் தோன்றி அங்கே வெப்ப சக்தி உண்டாகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல இந்த வெப்பசக்தி பெண்ணில் உடலில, பூப்பெய்தும் நாளிலிருந்து சுயம்புவாக உருவாவது – தொடர்ச்சியாக உருவாவது. இதுதான் மூலாதாரத்தின் மூண்டெழுகனல்.

    ஆதித்தன் எனப்படும் சூரியனானவன் சுயம்புவாக, தனக்குள் தானே உட்கருவினையால் ஒரு அக்கினிப் பொறியை உண்டாக்கி, அந்த ஆரம்பப் பொறியைக்கொண்டு தன்னுள் அக்கினியைத் தொடர்ந்து மூட்டி – மூட்டி – கொழுந்தாய் ஜ்வாலை விட்டு எரியும்படியான நெருப்பு வளர்க்கும் ஆற்றல் மிக்கவன். அதாவது – தன்னுள் தானே ஆற்றலை உருவாக்கிப் பெருக்குவது என்கிற ஆற்றல் வித்தை என்பது சூரியனது தனிப்பெரும் குணாதிசயம். பிரபஞ்சத்தின் அண்டபகிரண்டங்களுக்கும் ஆற்றல் வழங்குவது யாரென்றால் – சூரியனே. இலக்கியங்களும் அறிவியலும், ஆன்மீகமும் ஒருசேர ஓர் அணியில் நின்று ஆமோதிக்கும் ஒப்பற்றப் பேருண்மை இது. பிரபஞ்சத்தில் 20 பில்லியன் சூரியக்குடும்பங்கள் இருப்பதாகவும் – அவற்றில் ஒரு சூரிய குடும்பத்தில் உள்ள பூமியில் நாம் வாழ்வதாகவும் சொல்லப்படுவது நாமறிந்த உண்மையே.

    ஆக, பிரபஞ்சத்தின் ஆற்றல் பிரதிநிதியான சூரியனது ஆற்றல் ஜனனத்தின் இயக்கம். இந்த இயக்கம் மனிதகுலத்தின் ஆற்றல் பிரதிநிதியான பெண்ணின் மூலாதாரத்தில் தத்ரூபமாய் நிகழ்கிறது. ஆனால் உஷ்ணம் பரவும் முறையில் பெண் சூரியனிலிருந்து வேறுபட்டவள். சூரியனது வெப்பமானது சூரியனிடம் மட்டுமே நில்லாமல், பிரபஞ்சம் முழுவதிலும் பரவுவதன் காரணம் – சூரியன் தன் அச்சில் தானே சுழன்று கொண்டு பெரு நீள்வட்டப் பாதையில் அண்ட வெளியில் சுழலுகிறான் என்பதால்.

    இப்பொழுது ஒரு காட்சியை உங்கள் கற்பனையில் ஓட்டிப் பாருங்கள்: ஒரு அக்கினிப் பாண்டம் இருக்கிறது – அதில் அக்கினி தொடர்ந்து உற்பத்தியாகிறது. அவ்வாறு அந்தப் பாண்டத்தில் உருவாகும் அக்கினியின் வெப்ப ஆற்றலானது அப்பாண்டத்திலிருந்து வெளியேறாமல் சுற்றிலும் பரவி விநியோகம் செய்யப்படாமல் இருக்குமேயானால் என்னவாகும் என எண்ணிப் பாருங்கள்.

    உருவாகும் வெப்பம் அங்கேயே தங்கி செறிவடையும் அல்லவா?!

    இப்போது இன்னொன்றைச் சிந்தியுங்கள்: ஒரு இடத்தில் வெப்பம் தொடர்ந்து உற்பத்தியாகும் ஒருநிலையில், அந்த வெப்பம் அங்கிருந்து வெளியேற்றப்படாமல் அங்கேயே தங்கிச் செறியுமானால், என்னவாகும்?

    அங்கு, அப்பாண்டத்தில் போடும் பொருட்களும், அப்பாண்டத்தைச் சுற்றியுள்ள பொருட்களும் சுருங்கி, வெந்து, வறண்டு, உலர்ந்து, கருகி எனப் பல்வாறானும் பாதிக்கப்படுமல்லவா? ஏன் – தீக்காயங்களும் – தீவிபத்துக்களும் கூட நிகழுமே. பொருட்களும் ஏன் அந்த பாண்டமே கூட வெடித்தும் சிதறுமே!

    ஆக, ஓரிடத்தில், வெப்பசக்தி செறிவடையுமேயானால் பற்பல இணைவிளைவுகள் நிகழும் என்பது வெள்ளிடைமலை.

    பெண்ணின் மூலாதாரக்கனல் இவ்வாறுதான் அவளது பெரினியம் எனும் உற்பத்திஸ்தானத்தினுள் செறிகின்றது. இவ்வாறு அந்த அக்கினி அங்கேயே செறிகிறது எனபதை நீங்கள் உணரவேண்டும் என்றால், பெண்ணின் உடலியல் விஷயங்களை நீங்கள் கவனிக்கவேண்டும். பெண்ணின் மூலாதாரத்தில் அக்கினி சேருகிறது என்பதற்குப் பல சான்றுகள் – பல அடையாளங்கள் உள்ளன.

    முதலாவது அடையாளம்: பெண்ணின் ஆசனவாய் (குதம் அல்லது மலப்புற வழி) வெப்ப நிலை (Anal temperature or Rectal temperature) ஆணின் ஆசன வாயின் வெப்பநிலையைவிட சுமார் 0.5 டிகிரி கூடுதலான சூட்டுடன் உள்ளது. (எங்கள் வகுப்பறைகளில் நாங்கள் தப்பாமல் காணுகிற காட்சி – ஒன்றிலிருந்து ஒன்றரை மணிநேரம் ஒரு வகுப்பில் ஒரு சேர ஒரு மாணவி அமர்ந்துவிட்டு எழுந்தாள் என்றால், அவள் அமர்ந்திருந்த இருக்கை தகிக்கும். ஒருவகுப்பு முடிந்து இன்னொரு வகுப்பு வரும்போது ஒரு பெண் மாணவி அமர்ந்து விட்டு எழுத்துச்சென்ற இருக்கையில் ஒரு மாணவன் வந்து அமர நேரிட்டால் – அலறுவான் – “Why is the so hot?” என்று).

    இரண்டாவது அடையாளம்: மலச்சிக்கல் ஆணைவிடப் பெண்ணுக்கே அதிகம் ஏற்படுகிறது. ஐந்து பெண்க்ளுக்கு ஒரு ஆண் என்கிற விகிதாச்சாரத்தை மலச்சிக்கல் வியாதியில் காண முடியும். பெண்ணின் ஆசனவாய் சுருகி -இறுகி அதனால் ஏற்படும் மலச்சிக்கல் வகையைப் பெண்களிடம் காணமுடியும் – ஆணின் மலச்சிக்கல் வகை பெரும்பாலும் செரிமானக் கோளாறுகளால் ஏற்படுவதாக இருக்கிறது.

    மூன்றாவது அடையாளம்: ஆசன வாயின் வழியே வெளியேறும் வாயு ஆணைக்காட்டிலும் பெண்ணுக்கு அதிக உஷ்ணத்துடன் அதிக அடர்த்தியுடன் வெளிவருகிறது. ஏனெனில் பெண்ணுக்கு உடலில் ஆணை விட அதிக மீத்தேன் வாயு உண்டாகிறது. மீத்தேன் வாயுவை இயற்கை வாயு (Natural Gas) என்பர். இந்த இயற்கை வாயு வெப்ப ஆற்றலும் – மின் ஆற்றலும் கொண்டது. பெண்ணினுள்ளே எத்தனை வெப்பச் செறிவு நிகழ்கிறது என்பதற்கு இது ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.

    நான்காவது அடையாளம்: நாசியின் வழியே வெளிவிடும் மூச்சு, ஆணின் வெளிவிடும் மூச்சை விட சுமார் 0.5 டிகிரி கூடுதலாக உள்ளது. பெண்ணின் உள்வாய் வெப்ப நிலை ஆணின் உள்வாய் வெப்ப நிலையை விட சுமார் 0.6 டிகிரி கூடுதலாக உள்ளது.

    ஐந்தாவது அடையாளம்: பெண் ஆணைவிடவும் குறைவாகவே வியர்ப்பாள் (வியர்வை என்பது சுற்றுச்சூழலின் வெப்ப அளவு அதிகமாகும்போது உடலின் வெப்பம் அதிகரிக்க, அந்த அதிகரிப்பைக் குறைத்து, சாதாரண இயல்பான உடல்வெப்ப நிலைக்கு உடலை மீண்டும் வரவழைக்கவென உடலில் உண்டாகும் குளிர்விப்பு இயக்கமாகும். பெண்ணின் உடல் வெப்ப நிலை ஆணின் உடல் வெப்ப நிலையைவிட சுமார் 0.3 டிகிரி அதிகம் என்பதால், அவளது உடலை இயல்பு நிலைக்கு கொண்டுவர குறைவான அளவு வியர்வையே போதும்,)

    ஆறாவது அடையாளம்: உடலில் தசை இல்லாத நிலையிலும், பெண் ஆணைவிடவும் அதிகநேரம் தளராது சீராக வேலை செய்வாள்.

    ஏழாவது அடையாளம்: பெண் எந்த ஒரு செயலையும் வெகு அகல-ஆழ்ந்து ஆராய்ந்து, வெகு சிரத்தையோடு, கடும் நுணுக்கங்களை முதலீடு செய்து செய்வாள்.

    எட்டாவது அடையாளம்: பெண் ஆணைவிடவும் அதிக எச்சரிக்கை விழிப்புடன் இருப்பாள் – தூக்கத்திலும் கூட அவளுக்கு விழிப்புணர்வு மிகுந்திருக்கும். வீட்டுக்குள் ஏற்படும் மிகச் சன்னமான ஒளிமாற்றத்தைக்கூட தூங்கிக்கொண்டிருக்கும்போதே கூட அவளால் உணரமுடியும். ஹைப்போதலமஸ் எனப்படும் பிடரியில் உள்ள பின்மூளைப்பகுதியும் மூளைத்தண்டும் இணையும் பகுதி உடல் வெப்பத்தைக் கண்காணிக்கும் அதிபதி – பெண்ணுக்குச் சற்றே கூடுதல் நுணுக்கத்துடன் இந்த ஹைப்போதலமஸ் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே பகுதிதான் விழிப்புணர்வுக்கும், ஹார்மோன்களுக்கும் பொறுப்பான பகுதியாகும். எனவே, உடல் வெப்பமும் – விழிப்புணர்வும் தொடர்புடையவை எனக் காண்க.

    ஒன்பதாவது அடையாளம்: பெண்ணின் செவிப்பறை வெப்பம் (Tympanic temperature) ஆணின் செவிப்பறை வெப்பத்தைவிட 0.3 டிகிரி கூடுதலாக உள்ளது. இந்த வெப்ப அதிகரிப்பால் – அவளது செவிப்பறை சவ்வு மெலிதாய் நன்கு விரிந்து – இறுக்கமாய் இருப்பதால் – மிக மிக சன்னமான ஒலியையும் பெண்ணால் உணரமுடியும்.

    பத்தாவது அடையாளம்: பெண்ணின் நரம்பு மண்டலம் ஆணின் நரம்பு மண்டலத்தைவிட வெகு நுட்பமானது. உறங்கும்போதும் கூட – தன்னை இன்னார் தொடுகிறார் – இன்னது தொடுகிறது என்று அவளால் க்ஷணத்தில் உணரமுடியும் – பெண்ணின் ஹைபோதலமஸின் ஒப்பற்ற நுணுக்கத்தின் ஆசீவாதம் இது.

    பதினோராவது அடையாளம்: பெண்ணுக்கு ஆணை விடச் சுருக்கென்று கோபம் வரும்.

    பன்னிரெண்டாவது அடையாளம்: படுத்த நிலையிலுருந்தோ தரையில் குந்தி அமர்ந்த நிலையிலிருந்தோ பெண்ணால் ஆணைவிட வெகுசீக்கிரமாக எழும்ப முடியும், இவ்வாறு எழும்புவது என்பது அதிக வெப்ப ஆற்றல் கோரும் செயலாகும். ஆணுக்கு மூலாதார வெப்ப ஆற்றல் குறைவு என்பதால் பிற எல்லா இயக்கங்களிலும் பெண்ணைவிட ஆண் (தசை வலிமையால்) வல்லவனே தான் என்றாலும் படுத்தெழுதல் – குந்தி எழுதல் என்பவற்றில் ஆண் கொஞ்சம் பின் நிலை தான்.

    பதின்மூன்றாவது அடையாளம்: பெண்ணின் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் ரேகைகள் ஆணின் ரேகைகளைக் காட்டிலும் அதிக ஆழத்துடன் இருக்கின்றன. பெண்ணின் தோல், வெப்பமாற்றங்களுக்குத் தோதாக இலகுவாக அமையப்பெற்றிருப்பதால் இந்த ரேகை ஆழம் உள்ளது.

    ஆக, ஆதித்தனது சாயலாக தனக்குள் தானே அக்கினி வளர்த்து அதனை தனக்குள் செறிவு செய்துவைத்துக் கொள்ளும் இயல்பான சக்தி பெண்ணுக்கு இருக்கிறது.

    சூரியனின் சாயலாக, பெண்ணுள் நடக்கும் இன்னொரு விந்தை என்றால் அவளது உடல் வெப்பத்தில் ஏற்படும் இரவு- பகல் மாற்றங்கள் – இரவில் குறைந்தும் பகலில் கூடியும் இருக்கும் அவள் உடல் வெப்ப நிலை – பகல் பனிரெண்டு மணியில் உச்சத்தில் இருக்கும் – இரவின் நடுநிசியில் வெகு தாழ இருக்கும்.

    அதே நேரத்தில் பெண்ணின் மூலாதார வெப்பமும் – அதன் பதின்மூன்று அடையாளங்களும் அவளுடலில் ஏற்படும் மாதவிடாய்ச் சுழற்சியோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. சிருஷ்டிப் பணிக்காக, பெண்ணின் உடலில் உருவாகும் பெண் ஹார்மோன் செய்யும் மாயமிது. பெண்ணின் கரு முட்டை நிலையின் தன்மையை திரவமாய் அறிவிக்கும் சுரோணிதம் “அமுது” எனும் சொல்லுக்குப் பொருளாய்க் கொள்ளமுடிவதாக உள்ளது. ஏனெனில், அமுது என்பதற்கு உயிரின் வேர் உயிரின் முதற்புள்ளி என்று பொருள் – அமுது என்பதை, சிசு என்றும் சொல்லுவர். சீம்பால் என்றும் கூறுவர். கிராமப்புறங்களில், பிரசவமான பசுவின் உடலிலிருந்து சிசுவைப் பிரிக்கும்போது வெளித்தள்ளப்படும் தொப்புள்கொடி-மற்றும் நஞ்சின் தொகுப்பை அமுது என்று அழைப்பதே வழக்கம்.

    பிரசவமான பசுவின் அமுதை மிகுந்த பயபக்தியடன் சேகரித்து அதனை சில பொருட்கள் சேர்த்துப் பதனப் படுத்தி – சுத்தமான துணியில் கட்டி, அதனை உரிய சம்பிரதாயங்களோடு ஆலமரத்தில் கட்டித் தொங்கவிட்டு, சூரியனைப் பிரார்த்திப்பது என்ற வழக்கம் வெகு காலமாக இருந்திருக்கிறது. வீட்டில் பிரசவம் நடந்த கால கட்டங்களில் தமிழகக் கலாச்சாரத்தில், மனிதப் பெண்ணின் பிரசவ நஞ்சும் கூட இவ்வாறு சில சடங்குகளுடன் சூரியனுக்குப் படைக்கப்பட்டதாய் 103 வயதாகும் தமிழ் மூதாட்டி ஒருவரிடம் அறிந்து கொண்டேன். இந்தச் சடங்கில் குல ஒழுக்கங்களில் வித்தியாசம் இருந்தாலும் – பொதுவாகப் பெண்ணின் உடலிலிருந்து வெளியேறிய நஞ்சு – நாய் – நரி – பாம்பு – பறவைகள் ஆகியன கண்ணில் படாமலும் – நீர் நிலைகளில் எறியப்படாமலும் – பூமியில் புதைக்கப்படாமலும் பார்த்துக்கொள்ளப்பட்டது என்றும் – பல குலத்தார் அதனை அக்கினியில் வார்த்தனர் என்றும் – சிலர் அதனை தீபமாக்கினர் என்றும் அவர் கூறினார்.

    இன்று பெண்ணின் 28 நாள் மாதவிடாய்ச் சுழற்சியில் அவளின் உடலின் வெப்ப ஏற்றத்தாழ்வுகளை மருத்துவ உலகம் ஆய்ந்திருக்கிறது. இன்றும் கூட – கருத்தரிப்பு மருத்துவ வல்லுநர்கள் – பெண்ணின் பெரினிய வெப்பத்தைத் தொடர்ச்சியாக அளவிட்டு – அந்த வெப்பநிலையைக் கணக்கில் கொண்டு – அவள் உடலில் முட்டை உண்டாகி இருக்கிறதா இல்லையா எனச் சட்டென அறிந்து கொண்டு – அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கிறார்கள்.

    அவ்வை, “அமுதநிலையும் – ஆதித்தன் இயக்கமும்” என்று விநாயகர் அகவலில் குறிப்பிடுவது பெண்ணின் உடல் உஷ்ணம் பற்றியே என்பதும் பெண்ணின் உடல் உஷ்ணதத்திற்கும் அவள் உடலில் கருமுட்டை தோன்றும் – விலகும் சுழற்சிக்கும் தொடர்பு உள்ளது என அவள் நம்மை உணரவைப்பதும் நமக்கு இப்போது புரிகிறது. இந்நிலையில் ஒரு பெண், ஒரு தாய், மருத்துவ அறிவியலில் மூழ்கி இருப்பவர் என்கிற வகையில் அவ்வையின் உயிரோட்டமான இந்த “அமுதநிலையும் – ஆதித்தன் இயக்கமும்” என்கிற வாசத்தை நான் எண்ணி எண்ணிப் பரவசப் படுவதுண்டு.

    பகவத் கீதையின் பதின்மூன்றாம் அத்தியாயம் ஷேத்திரம் எனும் உடலியலை விளக்குகின்றது. இந்த அத்தியாயத்தில் – அமுது என்பதன் சூட்சமங்களைக் கண்டேன்: உடம்பிலிருந்தபடி எது உயிர் உருவாகும் வண்ணம் உடலை மேற்பார்வை பார்க்கின்றதோ – எது உயிர் உருவாக அனுமதி தருகிறதோ – எது உயிர் உருவாகத் தான் உண்ணுகிறதோ – அதுவே பரமாத்மா எனப்படுவது. என்கிறது கீதை.

    அவ்வை காட்டும் அமுதமும் – பகவத் கீதை சொல்லும் பரமாத்மாவும் மருத்துவ அறிவியல் பார்வையில் பெண்ணின் கரு முட்டையே எனக் கூறமுடிகிறது.

    ஆக, பெண்ணின் மூலாதாரத்தின் மூண்டெழும் கனல் அங்கேயே தங்கிவிட்டதென்றால் பல எதிர் விளைவுகள் நிகழும் – அதனை அங்கு தங்காமல் எழுப்பியே ஆகவேண்டும் என்கிறாள் அவ்வை. இன்று மருத்துவ உலகம் பெரும்பாடுபட்டு ஏதோ கொஞ்சம் அறிந்து கொண்டு – அறிந்துகொண்ட அந்த கொஞ்சத்தையும் கூட சொல்லத்தெரியாமல் தத்துபித்தென்று உளறிக்கொண்டிருக்க – வெகு அனாயசமாக அமுத நிலையம் ஆதித்தன் இயக்கமும் என்று சொல்லிப்போன அவ்வையையும் – இதுபோன்றே பல மருத்துவ உடலியல் ஷரத்துக்களை வெகு யதார்த்தமாக இயம்பிச்சென்றிருக்கிற திருமூலர் மற்றும் எண்ணிறந்த சித்தர்களையும் வாழ்த்தி வணங்க வாழ்நாள் போதாது.

    மேலும் பேசுவோம்

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 7

    அவ்வை மகள்

    திரிகரணத்தைப் பறைசாற்றும் மும்முகச் சிம்மம்

    இறையியல் சிந்தனைகள்

    திரிகரண சுத்தியும் அத்வைதமும் வள்ளலாரின் இறைமார்க்கத்தில் இரண்டறக் கலந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது என்றோம். திரிகரண சுத்தியை சைவ சித்தாந்தம் வெகுமிக முக்கியமாக வலியுறுத்தும் பாங்கு வெகு நேர்த்தியான விஷயம். பதஞ்சலி எனும் ஆத்ரேயரிடம் திரிகரணசுத்தியின் வாக்கு வடிவத்தின் ஆரம்பப்புள்ளியைக் காணலாம் என்பர். திருமூலரும் திரிகரண சுத்தியைப் பற்றிப் பகர்வதாகவும் காண்கிறோம்.

    உடல், சொல், மனம் என்கிற மூன்று ஜீவாதார மையங்கள் மனிதனது இயக்கங்களுக்கு ஓயாமல் அடிமைகளாகி, அவனது/அவளது இயக்கங்களால் பாதிக்கப்பட்டு – உருமாற்றம் அடைந்து, அவன்/அவள் எத்தகையவர் என்பதை அவரறியாமலேயே பரிபாஷையாக பிறருக்கு அப்பட்டமாய் அறிவிக்கின்றன. அந்த அறிவிப்பால் பிறருக்கு சிலபல பாதிப்புகள் எழுகின்றன என்பதால், இந்த மூன்றையும் ஒவ்வொரு தனி நபரும் சுத்தி செய்வது அவசியமாகிறது. ஆக, தனிமனிதர்களின் மெய், வாக்கு, சிந்தையின் தூய்மையானது – சமுதாயத்தின் – பிரபஞ்சத்தின் – புனிதத்தின் – இறைமையின் இலக்கணம் என்பது திரிகரண சுத்தியின் அடிப்படை.

    உடல், சொல், மனம் என்கிற மூன்றும் ஏன் அதிமுக்கியமானவையாகின்றன என்றால் அவை மனிதனால் ஓயாமல் கையாளப்படும் கரணங்களாய் அதாவது ஆயுதங்களாய் இருக்கின்றன.

    உணவும், உடுப்பும், உறையுளும், மனிதனது உடல் அவனுக்காய்ப் பேசுகின்ற பாஷையாகின்றன. மனிதன் பேசுகின்ற சொல் அவன்/அவள் குலத்தையும், ஒழுக்கததையும், பூர்வீகத்தையும், பக்குவத்தையும், முதிர்ச்சியையும், சகவாசத்தின் தன்மையையும் வெளிக்காட்டும். மனிதனின் மனம் அவனது இலக்கு, சிந்தனை, கருத்து ஆகியவற்றில் புலப்படும்.

    குடித்திருப்பவனின் உடல் தள்ளாட்டம் காணும் அல்லவா?. கேவலமான வார்த்தை பேசுகிறவனிடம் ஒழுக்கம் இருக்காது தானே? பேருந்தில், “மகளிர்” என்று பேர் போட்டிருக்கிற சீட்டில் அமர்ந்துகொண்டு நிற்கும் பெண்ணுக்கு இருக்கையை காலி செய்து அவள் உட்கார இடம் கொடுக்காமல், பார்த்தும் பாராமுகமாய் வேண்டுமென்றே அழுத்தமாய் அமர்ந்திருக்கிறவனின் உள்ளத்தில் பெண்ணார்ந்த சிந்தனை நல்லதாக இல்லை என்று வெளிப்படையாய் அவன் நடத்தை சொல்லுகின்றதல்லவா?

    ஆக, மெய், வாக்கு, மனம் எனும் மூன்றுமே தாமே முந்துறுத்தி வந்து ஒருவன் அல்லது ஒருத்தியின் தராதரத்தை வெளிக்காட்டும் வல்லமை உடையன எனக் காண்கிறோம்.

    இப்போது சிலர் கேள்வியை எழுப்பலாம்: அவனவன் சொந்த வாழ்வில் எப்படியோ பேசட்டுமே, எப்படியோ நடந்து கொள்ளட்டுமே – அப்படியே கெட்டும் கூடப் போகட்டுமே. அது அவனது தனிப்பட்ட விஷயம். அவன் தனிவாழ்வால் இங்கே என்ன குடி முழுகிப்போய்விடுமா என்று.

    நல்ல கேள்வி தான்.

    இத்தகைய கேள்வியை எழுப்புவோர்கள் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால், தனிமனிதர்களின் நடத்தைதான் குடியை – குலத்தை – சமுதாயத்தை ஆக்குகிறது அல்லது பாழாக்குகிறது என்பதையே.

    குடும்பங்கள்-சமுதாயம் இரண்டும் பிரிக்கவியலா ரெட்டையர்கள். இந்தப் பிரிக்கவியலா அமைப்பை Domino விளையாட்டுடன் ஒப்பிடலாம். சமுதாயம் என்பது Domino விளையாட்டின் கடைசிப் பலகை போன்றது. குடும்பங்கள் Dominoவின் பிற பலகைகள். கடைசிப் பலகைதான் எல்லாப்பலகைகளிலும், மிகப் பெரிதானதும் வலிதானதுமான பலகையாகும். இந்த வலிய பலகை சரிந்து வீழ நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் – அங்குள்ள பலகைகள் யாவற்றுக்குள்ளும் மிகமிகச் சிறியதான அந்த “தம்மாத்துண்டு” எனும்படியான குட்டிப்பலகையை இலேசாக அசைத்தால் போதும். காண்க Domino விளையாட்டை:

    https://www.youtube.com/watch?v=y97rBdSYbkg

    Domino effect எனப்படும் தொடர் வினை எவ்வாறு நிகழ்கிறதோ அவ்வாறே தான் குடும்பங்களின் தாழ்ச்சியும் வீழ்ச்சியும் சமுதாயத்தைத் தாழ்த்துகின்றன.

    maxresdefault

    சிந்தித்துப் பாருங்கள்: பக்கத்துவீட்டுக்காரர் குடித்துவிட்டு வந்து அவர் வீட்டுக்குள் அவர் அட்டகாசம் செய்ய நாம் நம் வீட்டை காலி செய்துகொண்டு வேறிடம் குடிபுகும் முயற்சியில் இறங்குகிறோம். எதிர் வீட்டு ஆளின் பார்வை சரியில்லை – மனைவியை ஒரு மாதிரி பார்க்கிறான் என்று அந்த ஊரையே விட்டு வெளியேறுகிறோம். மகனுடன் படிக்கும் குழந்தைகள் மிக்க கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்துப் பேசுகிறார்கள் என்று நம் குழந்தையை வேறு பள்ளிக்கூடத்துக்கு மாற்றுகிறோம் அப்பள்ளி எத்தனைத் தொலைவானாலும் பரவாயில்லை என்று. இவற்றையெல்லாம் நாம் ஏன் செய்கிறோம் என்றால் பிறரது மெய், வாக்கு, மனம் ஆகியனவற்றால் நாம் பாதிக்கப்படுவதால் தான்.

    இங்கு வாக்கு என்பதனை பேச்சு என்று மட்டும் கொள்ளாமல் எழுத்து என்றும் கொள்வது வேண்டும். இன்றைய ஊடக யுகமான காலகட்டத்தில், தனி நபர்களின் எழுத்துக்கள் – சினிமாப் பாடல்கள் – சினிமா வசனங்கள் – சில அரசியல்வாதிகளின் கூக்குரல்கள் – சில மதவாதிகளின் அணுகுமுறைகள் – சில பயங்கரவாதிகளின் கொடூரச் சிந்தனைகள் – மாமிசத்துக்காய் பசுக்களையும் இளம் கன்றுகளையும் கொன்றுகுவிக்கும் சில புலால் வர்த்தகர்களின் வலைப்பின்னல் வசனங்கள் ஆகியன – எத்தனை ஆக்ரோஷணமாய்ச் சென்று சமுதாயத்தைச் சின்னாபின்னமாக்குகின்றன என்பதனை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். தனிமனிதனின் வாக்கிலே விஷமும், நெருப்பும், போதையும், ஏமாற்றும் கலந்து போவதன் விளைவுகளை நாம் நம் கண்முன்னே காண்கிறோம். கெடுதல் செய்யும் உள்ளெண்ணம் உள்ள மனிதர்களின் நாக்கு, பிண்ணாக்காய் நஞ்சு கக்குகிறபோது சமுதாயமே கொலைக்களமாகிறது.

    ஆக, தனி மனிதர்களே சமுதாயத்தை உயர்த்தவும் தாழ்த்தவும் வல்லவர்கள் என்பதை உணர்க. இது நிற்க.

    பொதுவாக, நம் வழக்கில், ஒருவர் சொல்வதை பிறர் கேட்கிறார்கள் என்றால் அவரை செல்வாக்கு நிறைந்தவர் என்கிறோம். செல்லுபடியாகும் வாக்கு வைத்திருப்பவர் அவர்.

    வள்ளுவர் கூறுவார்:
    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்

    என்று.
    ஒரு நிலத்தில் நிலைத்துத் தங்கியிருக்கும் வேதங்களும், சாத்திரங்களும், பழமொழிகளும், இலக்கியங்களும் அம்மண்ணில் வாழ்ந்த – வாழுகிற மேலோர்கள் எத்தகையவர்கள் என்பதையே காட்டுகிறது என்பதை வள்ளுவர் வெகு அனாயாசமாகச் சொல்லிப்போனார்.

    ஆக, சமுதாயம் என்பது ஒரு ஜடப் பொருள் அல்ல என்பதைத் தெளிவாய்ப் புரிந்து கொள்கிறோம்.

    ஆம்! சமுதாயம் என்பது ஜீவிதம் நிறைந்தது மட்டுமல்ல – அது அங்கு வாழும் அனைத்து மக்களின் ஜீவாதாரத்தின் அடிப்படைத் தளமுமாகும். மேலும், சமுதாயம் என்பது எந்நாளும் ஒரு சிறுகுழந்தையைப் போன்றது. ஒரு சிறு குழந்தை தன் இயக்கங்களுக்கும் போக்கிற்கும் டக்கென்று பார்த்து – டக்கென்று பழக பளிச்சென்ற முன்னுதாரணங்களை எதிர்பார்த்து நிற்கிறது. அதைப்போலத்தான் எந்த ஒரு சமுதாயமும், டக்கென்று பார்த்து – டக்கென்று பழகவென பளிச்சென்ற முன்னுதாரணங்களை எந்நாளும் எதிர்பார்த்து நிற்கின்றது. இந்நிலையில் சமுதாயத்தில் கிளப்பப்படும் முன்னுதாரணங்கள் நல்லவையானால் சமுதாயம் நல்லதாகும் அம்முன்னுதாரணங்கள் அல்லவை என்றால் சமுதாயமும் அல்லவையாகும்.

    மனிதன் வாசம் செய்வதாக அவன் வசிக்கும் இடத்தில், அக்கம் பக்கம் உள்ள மனிதர்களின் பழக்க வழக்கங்கள், சொல், சிந்தனை ஆகியவை எவ்வாறு மனிதனை வடிவமைக்கின்றன – எவ்வாறு அவனை அடையாளம் காட்டுகின்றன என்று பார்க்கவேண்டும் என்றால் – நம் வாழ்வில் நாம் எப்போதாவது சந்தித்தேயாகவேண்டிய ஒரு நிகழ்வைப் பார்ப்போம். நீங்கள் ஆணாக இருந்து எங்கோ வெளி ஊருக்குப் போயிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம் – அப்போது அங்கு நீங்கள் சென்றுள்ள இடத்தில், உங்களைப் பார்த்து ஒரு பெரியவர் கேட்கிறார், “நீங்கள் எந்த ஊர்?” என்று. ஏன் அவர் அவ்வாறு கேட்கிறார் என்றால் ஊர் எனும் சமுதாயத்தை நீங்கள் சுமந்து கொண்டபடியே எங்கும் செல்கிறீர்கள் என்பதால் தான். அவரது கேள்விக்கு நீங்கள், “நான் மும்பையிலிருந்து வருகிறேன்” என்று சொல்வதாக வைத்துக் கொள்ளவோம். “மும்பையா அது? பாம்பாய் தானய்யா அது! பேரைத் தான் மாத்திப்புட்டானுகளே! அது சரி, அந்த ஊர் அப்படி இப்டின்னு கேள்விப்பட்டிருக்கேனே – ரெட் லைட் ஏரியாக்கள் சர்வ சகஜமா இருக்குமாமே – நீயும் அங்கல்லாம் போனதுண்டா?” என்பார். உங்களுக்கு அவர் சொன்னது அசவுகரியமாகக் கூட இருந்திருக்கும் – உங்களுள் கோபம் கூடக் கொப்புளித்திருக்கும் – இப்படிப் பச்சையாய்ப் பேசிவிட்டாரே என்று கொதிப்பீர்கள். ஆனால் உள்ளத்தில் உள்ளதுவாறு அவர் பேசுகிறார். அவர் பேசியது மும்பையைப்பற்றி அவரறிந்த உண்மை. அவர் வாய் பேசியதெல்லாம் அவர் உள்ளத்து மொழி. அவர் கள்ளம் கபடம் அல்லாதவர் – இதுவரையிலும் மும்பை செல்லாத காரணததால் அறிவுத்தேடலோடு தன் சிற்றறிவை வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவே.

    நாம் வெளியிடத்துக்கு எங்கு சென்றாலும் பிறர் நம்மை இவ்வாறு விசாரிப்பத்து வெகு சகஜம். இதில் சங்கோஜப்பட்டோ – கோபப்பட்டோ இலாபமில்லை – ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் நம் சமுதாயத்தை தேகத்திலும், அங்கத்திலும், தோற்றத்திலும், பார்வையிலும், பேச்சிலும் சுமந்தபடியே செல்கிறோம். இவ்வகையில் நாம் நம் சமுதத்தின் பிரசிங்கிகள் – அரசாங்கம் நியமிக்கும் ஏதோ ஓரு பிரசிங்கியா (Ambassador) நம் ஊரை – நம் நாட்டை – நம் கலாச்சாரத்தைப் பரப்புகிறார்? நாம் தாமன்றோ உண்மைப் பிரசிங்கிகள்?

    இன்னொன்றையும் பாருங்கள்: ஒரு நாட்டின் தலைவராக ஒருவரை நியமிக்க பல தகுதிகளை – பல யோக்கியதாம்சங்களை முன்வைக்கிறார்கள். அது ஏன் என்று நிச்சயம் நீங்கள் யோசித்திருப்பீர்கள். இருப்பினும் சுருக்கமாக அதனைக் கொஞ்சம் பார்ப்போம். நன்னடத்தையும், நற்சிந்தையும், ஒழுக்கமான பரிபாஷைகளும் கொண்ட ஒருவர் மட்டுமே சமுதாயத்தில் ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்து இந்த சமுதாயத்தை வழிநடத்த முடியும் என்கிற ஒரே காரணம் தான் நாட்டின் தலைவருக்கு வைக்கப்படும் யோக்கியதாம்சங்களின் அடிப்படை.

    சமுதாய மனித முன்னுதாரணங்களை, சமுதாயப் பிரதிநிதிகளைப் பற்றி, வெகு எளிமையாக – வெகு அருமையாகப் பேசிப்போயிருக்கிறவர் வள்ளுவர்:

    காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
    மீக்கூறும் மன்னன் நிலம்

    விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்

    தக்காங்கு நடித்த தலைச் செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

    அல்லவைதேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்

    சமுதாயத்தை நெறிநடாத்திச் செல்லும் தனிமனிதர்களின் திரிகரண சுத்தியின் தனிப்பெரும் வல்லமையை வள்ளுவர் வெகு சாதுரியமாகவே சொல்லிப் போஇருக்கிறார் அல்லவா?

    இவ்வகையில் வள்ளலார் முன்வைத்த சமரச சன் (சத்) மார்க்கம் என்பது தனிமனிதர்களின் திரிகரண சுத்திக்கு முதன்மை ஸ்தானம் அளித்தது. கரணம் எனும் சொல்லுக்கு – ஆயுதம் – வித்தை – ஒரு கால அளவு என்று பல அர்த்தங்கள் இருக்கின்றன. இவற்றில், திரிகரணம் எனப்படும் மும்முனைத் தூய்மையில், மெய், வாக்கு, மனம் என்கிற மூன்று ஆயுதங்களைக் கையாளுவதிலே அப்பழுக்கற்ற தூய ஆளுகை வேண்டும் என்பது முன்னிறுத்தப்படுகிறது. கரணம் தப்பினால் மரணம் என்பதன் பொருளை இங்கு முழுமையாக உணரமுடிகிறது. மெய், வாக்கு, மனம் என்ற மூன்றும் ஆயுதங்கள் எனும்போது, ஒரு கத்தியைப் போல், ஒரு சுத்தியைப்போல், ஒரு கோடரியைப் போல், ஒரு துப்பாக்கியைப்போல் இவை செயல்படும் வீரியம் கொண்டவை என்பதையும், இவற்றைக் கையாளுபவர்கள் நெறிபிறழும்போது இந்த ஆயுதங்கள் பதம் பார்த்துவிடும் என்பதும் புலப்படுகிறது.

    கரணத்தின் பிற இரண்டு அர்த்தங்களும் கூட, திரிகரண சுத்திக்கு மிகவும் பொருந்துகின்றன. எப்படியெனில், திரிகரண சுத்தியை, பிள்ளைப் பிராயத்திலேயே வேரூன்றவேண்டும் – அப்போது தான் அது தனிமனிதர்களின் வாழ்வில் நிலைபேற்றுக்கு நிற்கும். வளர்ந்த பிறகு கற்றுக்கொள்ளலாம் என நினைப்பது – கடல் ஓய்ந்தபின் – குளிக்கலாம் எனக் காத்திருப்பதை போன்றது. ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையுமா என்பார்கள் அல்லவா? இளமையிற் கல்வி சிலைமேல் எழுத்து என்பது சத்தியம் மட்டுமல்ல – சாத்தியமான விஷயமும் ஆகும். திரிகரண சுத்தியை, அன்றாட நடைமுறைக்குக் கொணர்ந்து நிறுத்த – சரியான பெற்றோர்கள் – சரியான பள்ளி போதனைகள் – சரியான ஆசிரியர்கள் – சரியான இறைமை சிந்தனைகள் உள்ள மக்கட்பிரதிநிதிகள் என நாம் சமுதாய விஸ்தாரத்துக்குள்ளே தான் மீண்டும் பயணிக்க வேண்டி இருக்கிறது.

    இளம் பிராயத்தில் திரிகரண சுத்தியை நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தந்துவிட்டோமேயானால் – அது தனிமனிதர்களின் வாழ்வியல் வித்தையாக – சமுதாயத்தின் ஒருமித்த வாழ்வியல் வித்தகமாக எழுமிக்கிறது. அந்நிலையில், நம் சமுதாயம் தாழ எந்நாளும் வாய்ப்புகள் இல்லை. இல்லறவாழ்வில், குடும்பங்களில் இருப்பவர் யாவரும் வாய்மையை மேவினால் அது

    மனத்தொடு வாய்மை மொழியும் தவத்தோடு
    தானஞ்செய் வாரின் தலை

    என்ற வள்ளுவரின் வாக்கை மனதில் அசைபோட்டபடியே நம் நாட்டின் அசோக சக்கரச் சின்னத்தைப் பாருங்கள், “வாய்மையே வெல்லும்” என்று நம் சின்னத்தின் மூன்று சிம்மக்குரல்களும் உலகம் முழுதும் ஒலிக்கும்படி கர்ஜிப்பது என்ன? “எங்கள் நாட்டில் தனிமனிதர்கள் யாவரும் மெய், வாக்கு, மனம் என்கிற திரிகரணங்களால் வாய்மை பயிர் செய்து, வாய்மை அறுவடை செய்து, வாய்மையையே உணவாகவும், நீராகவும், மூச்சாகவும் கொண்டு வாழ்கின்றார்கள்” என்பதல்லவா?

    ஆன்ம நேயத்தில், திரிகரண சுத்தியில் அசோகச் சக்கரவர்த்தி ஒரு தலைசிறந்த சமுதாயப் பிரதிநிதி. இவ்வகையில் ஞானத் துறவியாகிய வள்ளலாரும், தொழில்நுட்பத் துறவியாக ஸ்டீவ் ஜாப்ஸும் கொண்டிருந்த வாய்மை ததும்பிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டுச் சிந்தனை பிரிந்தும் ஒத்ததாய் விளங்கும் சீர்மை ஒரு சிறப்புறு மேன்மை. சமுதாயச் சிந்தனையில், திரிகரண சுத்தியையும் அருள், ஒளி, கருணை என்கிற திரிசூலத்தையும் இவர்கள் இருவரும் கலந்த இலகுவை உணர்தல் பேரின்பமே.

    மேலும் பேசுவோம்

    Share
  • எழுவகைப் பெண்கள்: 8. பெண் உடலியல் வேதத்தைத் துறந்தோம் – மறந்தோம்

    அவ்வை மகள்

    மூலாதாரம் என்கிறீர்களே அது பற்றி மேலும் விளக்கமுடியுமா என்றவரிடம், “மூலாதாரத்தை விளக்கவேண்டுமெனில், அதற்கு நான் அவ்வையைத் துணைக்கழைக்க வேண்டும். அவ்வை எங்கள் ஊரில் ஒரு சிறப்பு மிக்க பெண் புலவர் – விவேகி” என்றேன்.

    “விவேகி என்று நீங்கள் சொன்னதும் எனக்குப் பெண்களின் விவேகம் பற்றிய எண்ணம் எழுந்தது அதுபற்றி பேசிவிட்டு மூலாதாரம் பற்றிப் பேசலாமா அல்லது மூலாதாரம் பற்றிப் பெண்களின் விவேகம் பற்றிப் பேசலாமா?” என்றார்.

    “ஏறக்குறைய நானும் அதே மனோநிலையில் தான் இருந்தேன். நான் உங்களைச் சந்திக்கும் முன்பு, ஒரு ஆண் போலீஸ் அதிகாரியைச் சந்தித்துப் பேசினேன். பெண்களின் விவேகம் பற்றி அவர் சொன்னவற்றை என் சிந்தனையில் தடம் பதித்து வைத்திருக்கிறேன்.

    உங்களிடமும் பெண்களின் விவேகம் பற்றிப் பேசவே எண்ணியிருந்தேன். நீங்களே அதனை முன்வைத்ததற்கு நன்றி. மூலாதாரம் பற்றிப் பேசிவிட்டு விவேகத்திற்கு வருவோமே!” என்று தொடர்ந்தேன்.

    மூலாதாரம் என்பதனை Ultimate Origin என்றேன் அல்லவா?. மூலாதாரம் என்பதில், மூலம் மற்றும் ஆதாரம் ஆகிய இரண்டு தனிப்பெரும் சொற்கள் அடக்கம். இந்த இரண்டு சொற்களும் சொற்பச் சொற்கள் அல்ல வெளிப்பார்வைக்கு எளிமையாய் இருப்பினும் இவை பன்முகப் பரிமாணம் கொண்ட பவித்ரமான நுட்பச் சொற்கள்.

    முதலில், “மூலம்” எனும் சொல்லை கவனிப்போம். மூலம் என்றால் அதற்கு ஐந்து பிரதானமான அர்த்தங்கள் உண்டு. ஒன்று: Starting Point; இரண்டு: Roots; மூன்று:Seedling; நான்கு: Passage; ஐந்து: Gate. தமிழில் முறையே, அடிப்படைப் புள்ளி, வேர்கள், நாற்று, வழி, வாயில் ஆகியன.

    “வேர்கள்” என்று பார்த்தால் முவ்விதமான வேர்கள் இருக்கின்றன: (1) ஆணி வேர் (Tap Rot); (2) சல்லி வேர் (fibrous Root); (3) இணை வேர் (Adventitious Root) .

    ஆதாரம் என்பதும் ஒருபன்முகச் சொல். Foundation அல்லது Basement அல்லது Anchor அல்லது Basic Constructional Frame அல்லது Fundamental Structural Unit எனப்பொருள்படும். இவற்றை முறையே தமிழில், அஸ்திவாரம்/கடை கால், அடித்தளம், நங்கூரம், அடிப்படைக் கட்டிடச் சட்டம், அடிப்படை அச்சு என்று கூறலாம்.

    பெரினியம் என்பது நான் மேற்குறிப்பிட்ட பன்முகங்களிலும் மூலமாகவும் ஆதாரமாகவும் செயல்படுவதால் அதற்கு மூலாதாரம் என்று பெயர். ஆணின் மறை உறுப்புச் சந்தியும் கூட, பெரினியம் என்றேதான் அழைக்கப்படுகிறது என்றாலும், பொதுவாக, மூலாதாரம் எனும்போது அது பெண்ணின் பெரினியத்தையே பெரிதும் குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது. இது ஏனெனில் ஆணின் பெரினியத்திற்கு சிருஷ்டி ஆற்றல் கிடையாது. அங்கே ஜனனம் நிகழ்வதில்லை. சொல்லப்போனால், பெண்ணின் பெரினியத்தை சிருஷ்டி அடுப்பு என்றும் அக்கினி குண்டம் என்றும் அழைக்கின்றனர். அக்கினி என்றால் Fire – அது தீ – நெருப்பு – வெப்பக்கனல்.

    ஆணின் பெரினியத்தில் அக்கினி இல்லை – வெப்பம் என்பது விந்து உற்பத்திக்கு எதிரி. ஆணின் சொந்த உடலின் வெப்பத்தைக் கூட விந்து உற்பத்தி தாங்காது என்பதால் அவனது உடலில், ஆணுறுப்பு உடலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கிறது. உடலின் வெப்பம் ஆணுறுப்பில் இடிக்காமல் (Conduction) – படராமல் (Convection), வீசாமல் (Radiation) இருக்க இயற்கை செய்துள்ள ஏற்பாடு இது.

    ஆனால், சிருஷ்டி ஆற்றலின் கர்த்தாவான பெண்ணுக்கோ, அவளுடலினுள்ளே அவள், உயிருள்ள உருவங்களைச் சமைக்கும் பணி – பணிக்கப்பட்டிருக்கிறது.

    தனது கருவிலே ஒரு ஆன்மாவிற்கு, உயிரூட்டி, அதற்கு உடல் சமைக்கும் பணி அவளுடையது. அந்த சமையல் பணிக்கு அக்கினி வேண்டும் அல்லவா? அதுதான் இந்த அக்கினி – உண்மையில் – பெண்ணுக்கு பெரினியக் குழியில், சிருஷ்டிக்கென, அதி வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது.

    “கொஞ்சம் இதை “this heat requirement” மேலும் விளக்க இயலுமா/” என்றார்.

    கொஞ்சம் அடிப்படையிலிருந்து வந்தால் இது விளங்கும். விலங்கின சிருஷ்டியில் இருவித சிருஷ்டி வகைகள் உள்ளன – ஒன்று முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது மற்றொன்று குட்டி போடுவது. முன்னதை Oviparous Germination என்போம்; பின்னதை, Viviparous Germination என்போம்.

    தவளை, பாம்பு, பல்லி, ஆமை, பறவைகள் ஆகியன முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதைப் பார்த்திருப்பீர்களே. தவளையின் முட்டை நீருக்குமேலே மிதக்கும் பாசிக்கு மேலே அமர்ந்துகொண்டு ஒய்யாரமாய் மிதந்தபடி வெயில் காயும், ஆமையின் முட்டையும், பாம்பு மற்றும் பல்லியின் முட்டையும் மணலுக்குக் கீழே வெப்பம் காணும்- பறவைகளோ முட்டைமேல் அமர்ந்து அமர்ந்து – அடைகாத்துச் சூடேற்றி முட்டைக்கு வெப்பம் ஊட்டும். இந்தக் காட்சிகள் எல்லாம் சிருஷ்டிக்கு வெப்பம் தேவை என்பதை விளக்கவில்லையா? தவளை, பாம்பு, பல்லி, ஆமை ஆகியன குளிர் இரத்தப் பிராணிகள் – அவைகளுக்கு நிறைய சூடு தேவை. பறவைகளோ குறைவெப்ப இரத்தப் பிராணிகள் அவைகளுக்கு சாதாரண வெளிப்புறச் சூட்டோடு – கொஞ்சம் தாயின் வெப்ப ஒத்தடமும் தேவை.

    மனிதன் எனும் உயிரியோ – உயர்வெப்ப இரத்தப் பிராணி – அதிகக்கடினமான – அதிக அழுத்தமான – அதிக பொருண்மை கொண்ட உடல் கொண்ட உயிரி – அதுவும் முட்டையாக மனிதன் வெளியே இடப்படுவதில்லை – முட்டையிலிருந்து மனிதன் பொரிக்கப்படுவதில்லை. பெண்ணின் உள்ளேயே கருஉருவாகி – உள்ளேயே – அது வளர்ந்து – சிசுவாகி – வெளிவரத் தயரான அந்த ஒரு நாளில், கருவறையின் உள்ளிருந்து வெளியே பிரசவமாகும் – குட்டி அல்லவா மனித உயிரி? எனவே மனித சிசுவை உருவாக்குவதற்கு உண்மையிலேயே அதிக வெப்பம் தேவைப்படுகிறது என்பது புரிகிறது அல்லவா?

    எனவேதான், படைத்தல் தொழிலின் எழுவாயும், பய நிலையும், செயபடுபொருளுமாயும் இருக்கிற பெரினியத்தின் குழியிலே பெண்ணுக்கு, அவளது படைப்புத் தொழிலுக்குத் தேவையான எரிபொருள் வார்க்கப்பட்டிருக்கிறது. எனவே பெண்ணின் பெரினியக்குழி உண்மையிலேயே ஒரு அக்கினி குண்டத்தைப் போன்றது என்பதை அறிவியல் வழியாகவும் உணரமுடிகிறது.

    “சரி, இந்த அக்கினிக்கு குண்டம் , ஒரு பெண் குழந்தை பிறக்கும்போதே இருக்கிறதா?” என்றார்

    “ஆம் இருக்கிறது” ஆனால் அது சும்மா கிடக்கிறது வெறுமனே, அவள் பருவம் எய்தும் வரையில்.

    ஒரு பெண்குழந்தை ருதுவாகும் அந்தத் தருணம்தான் இந்த எரிபொருள் அவளுடலிலே தனக்குத்தானே சுயம்புவாய் உள்ளிருந்து வார்க்கப்படுகிறது . இயற்கை அமைப்பில் – இறைமாட்சிமையின் ஒப்பற்ற ஏற்பாடு இது. உயிர்களைச் சமைக்கும் இறைவனின் மகத்தான பணியில் இறைவனின் பிரதிநிதியாகப் பெண் இயங்குவதால், எங்கள் தமிழ்க் கலாச்சரத்தில், ருதுவாகும் பெண்ணைப் பற்றிக் குறிப்பிட்டால், “பெண் சமைந்திருக்கிறாள்” என்பர். இந்த வழக்கு மொழியின் எளிமையையும் நயத்தையும் மட்டுமல்ல பெண் குழந்தை ருதுவாகும் நிகழ்வை, மஞ்சள் நீராட்டு விழா என்று ஒரு விழாவாக எடுக்கும், ஒப்பற்ற பெண் உடலியல் புரிந்து கொள்ளலையும் எங்கள் சமுதாயத்தில் பார்க்க முடியும்.

    சமுதாயத்தில் உள்ள பெண் ருதுவாகுவது என்பது – “எங்கள் – சமுதாயத்துக்கு, எங்கள் மாநிலத்திற்கு, எங்கள் நாட்டுக்கு எதிர்கால சந்ததிகள் வருவது உறுதி – எங்கள் குலம் வாழும் – எங்கள் மண்ணுக்கு என்றும் தாழ்வில்லை!” என்று அப்பெண்ணின் குடும்பம் மட்டுமல்ல அந்த பெண்ணைச் சுற்றியுள்ள சிறு சமுதாயமே குதூகலிக்கும் ஒரு மனிதவள வைபவம் இது. இது பெருந்தன்மையோடு விசாலப் பார்வையோடு பார்க்கப்படவேண்டிய விஷயம். மட்டமான எண்ணங்கள் இங்கு கூடாது.

    “எனக்கு ஸ்ரீலங்கன் நண்பர் இருந்தார் அவரும் இந்த “female puberty ritual” பற்றிச் சொன்னார்” என்றார் அந்த இராணுவ அதிகாரி.

    ஸ்ரீ லங்காவும் தமிழ்க்கலாச்சாரம் உள்ள ஒரு நாடு தானே – ஒரு காலத்தில் – கடல் கொள்ளாது – மண்ணோடு மண்ணாய் நாமும் ஸ்ரீலங்காவும் ஒன்றாகவே இருந்திருக்கிறோமே. அங்கும் தமிழர்கள் இருந்தனர் – இன்னமும் இத்தனை நடந்தும் அங்கு தமிழர் இருக்கின்றனர் – எனவே அங்கும் மஞ்சள் நீராட்டு விழா நடக்க நிறையவே சாத்தியக் கூறுகள் உள்ளன. பொதுவாக, தமிழ்க் கலாச்சாரம் உள்ள அல்லது பரவியிருக்கிற இடங்களில் இந்தச் சடங்குகள் நடப்பதோ அல்லது பேசப்படுவதோ இயல்புதான். மலேசியாவில் கொண்டாடுகிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரும் கூட, தாங்கள் வாழும் நாடுகளில் இன்றும் கூட இந்த வைபவத்தைக் கொண்டடாடுகிறார்கள்.

    ஆனால் – நான் இதைச் சொல்கிறேன் என்று நீங்கள் தவறாக எண்ணக்கூடாது. “I had had very wrong notions about this female puberty ritual; when my Sri Lankan friend told me about it – I and other friends laughed and cut very nasty jokes at him – I was also very young at that time!’ என்றார்.

    சார், உங்களுக்கு ஏற்பட்டிருந்த தவறான அபிப்ராயத்திற்கு உண்மையில் என்ன காரணம் என்று சொல்லமுடியுமா? என்றேன்.

    “சடங்குகளுக்குள்ளே உண்மைகள் உள்ளன என்பதை உணராத அறியாமை” என்றார்.
    சரியாகவே சொன்னீர்கள் – இந்த அறியாமை நிறைய பேரிடம் உள்ளது – அதுவும் பெண்கள் பற்றிய விஷயம் என்றால் எல்லோருக்கும் அது புரட்டிப் பேசவும் புரட்டு பேசவும் சல்லீசான விஷயமாகப் போய்விட்டது. இதில் இன்றைய எங்கள் சமுதாயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இன்றைய எங்கள் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் எங்கள் கலாச்சாரத்தின், உண்மைகளை உணவுபோல் ஊட்ட வசதி வாய்ப்புகள் உருவாக வேண்டும். காளான்கள் போல் மலிந்துகிடக்கிற கீழ்த்தரமான பெண் வர்ணனைகளும் – அதனால் மனிதர்கள் பெறுகிற அற்பமான இழி இன்பங்களும் சாடப்பட வேண்டும் – கண்டிக்கப்பட வேண்டும் – தண்டிக்கப்பட வேண்டும்!” என்றேன்.

    “Amen – True – True – True” என்று கைகூப்பி வணக்கம் சொன்னார். நன்றி பாராட்டினேன் அவரது உண்மை விளம்பலுக்காக.

    கடவுள் சாட்சியாக உண்மை – உண்மை – உண்மை!” என்று சொன்னவர், இந்த மஞ்சள் நீராட்டு விழாவில் வேறென்ன நான் தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

    நமது உரையாடலே பெண்ணின் உடலியலைப் பற்றியது – குறிப்பாக நாம் இன்றைய பணி செய்யும் பெண்களின் – இடை – தொடை – கால் பற்றிப் பேசிக்கொண்டு வருகிறோம். எனவே மஞ்சள் நீராட்டு விழாவில் பெண் உடலியல் சார்ந்த சாராம்சங்களைக் கொஞ்சம் கவனிக்கலாம் என்றேன்.

    மஞ்சள் நீராட்டு விழாவில், ருதுவான பெண்குழந்தையின் இடுப்பெலும்பு உறுதிப்பட அதற்குரிய ஊட்டச்சத்து உணவுகள் – குறிப்பாக – உளுந்து எனப்படும் – Black gram கொண்டு தயாரிக்கப் பட்ட களி அவளுக்குத் தரப்படும். வெல்லப்பாகில் வறுத்த வேர்க்கடலை சேர்த்தது செய்த உருண்டைகளும் , பொரிவிளங்காய் உருண்டைகளும் தருவர். பொரிவிளங்காய் உருண்டை என்பது பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய இருவகைப் பருப்புக்களும் , கோதுமை, அரிசி ஆகிய இருவகை தானியங்களும் வறுத்து – இடித்து – அதில் பசு நெய் – வெல்லம், ஏலக்காய் – சுக்கு ஆகிய நறுமணம் மிக்க மருத்துவ நலம் தரும் திரவியங்களும் சேர்த்து உருட்டிச் செய்வது. இதைத்தவிர முட்டையின் வெள்ளை தரப்படும். புலால் மறுக்கப்படும். கீரை வகைகள் அதிகம் சேர்க்கப்படும் – இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை சேர்த்துச் செய்த கேழ்வரகு ரொட்டி தரப்படும் – இரும்புச் சட்டியில் செய்த விறுவிறுப்பான புளிக்குழம்பு சோற்றுடன் பிசைந்து தரப்படும். உளுந்து அப்பளம் அதனுடன் தரப்படும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இளநீரும் – இஞ்சி கருவேப்பிலை, வறுத்த வெந்தயத்தின் பொடி கலந்த மோர் தொடர்ந்து வழங்கப்படும். அவித்த உணவுகளே அதிகம் இருக்கும் – நார்ச்சத்து உணவில் கட்டாயம் மிகும் – பழங்கள் தப்பாமல் இருக்கும் – குழந்தைக்கு மலச்சிக்கலோ வேறு எந்த உபாதையோ நிகழாமல் பார்த்துக் கொள்வர்.

    தன் உடலில் ஏற்பட்டிருக்கிற – ஏற்பட்டுக்கொண்டிருக்கிற மாற்றங்களை அப்பெண் குழந்தை, தானே சுதந்திரமாய் அறிந்து கொள்ளும்படியாக – அவளுக்குத் தனிமைச் சுதந்திரம் வழங்கப்படும் – அவளுக்கென்று தனியிடம் வழங்கப்படும் – அவளை எவரும் வீணே தொந்திரவு செய்வது தடுக்கப்படும். தாயோ – மூத்த சகோதரியோ அல்லது பிற மூத்தப் பெண்மணிகளோ மட்டுமே அவளது தனியிடத்தத்துக்குள் நுழையமுடியும் – அதுவும் – அவர்கள், தான் வருவதை அவளுக்கு உணர்த்திய பின்னரே நுழைவர். திடீரென நுழைந்து அதனால் – அவள் எவ்விதத்திலும் அதிர்ச்சி அடையக்கூடாது என்பதிலே அனைவரும் கவனம் வைப்பர். ஒவ்வொரு நாளும் சிறிதளவு எள்ளுருண்டை தருவர். இந்த எள்ளுருண்டை வறுத்த எள்ளும் வெல்லமும் சேர்த்து தயாரிக்கப்படுவது. பெண் குழந்தையின் இரத்தப்போக்கில் இரத்தக்கட்டிகள் இடையூறு செய்யாமல் இலகுவாய் வெளியேற உதவும் உணவார்ந்த மருந்து இது. மேலும், மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு கட்டாயம் தாம்பூலம் அருந்தச் சொல்வர். தாம்பூலம் – வெற்றிலை, சிறிதளவு பாக்கு, இலவங்கம், வெள்ளரி விதை , ஜாபத்திரி போன்ற பொருட்களோடு துளி சுண்ணமும் கலந்தது. அக்குழந்தைக்கு ஜீரண சக்தியும் கால்சிய சக்தியும் ஒருங்கே கிடைக்க இது உதவும்.

    ஒவ்வொரு காலையும் மாலையும், தாயோ அல்லது வேறு ஒரு மூத்தப் பெண்மணியோ அப்பெண்ணுக்கு உடைமாற்ற உதவுவர். அவளுக்கு அழகாய்த் தலைவாரி – பூமுடித்து – முகம் திருத்தி – அவளது இருப்பிடத்தைச் சுத்தம் செய்து – கோலமிட்டு விளக்கேற்றி வைப்பர். உடைமாற்றும் முன் அவளது இடுப்பின் திருவெலும்பில் – வறுத்த தவிடு கொண்டு ஒத்தடம் தருவர். அங்கு இரத்த ஓட்டம் சீர்படுவதற்காக. இடைப்பட்ட பகல் வேளையில் அப்பெண்குழந்தையை ஒரு மணி நேரம் தூங்கச் சொல்லுவார்கள். அதிக நேரம் தூங்காமல் தடுப்பார்கள் – ஏனெனில் இரவு தூக்கம் கெட்டுவிடுமே! பகலில் மூத்த பெண்மணிகளில் யாராவது ஓரிருவர் அவளுடன் போய் – தாயம் – கல்லுக்காய் -பல்லாங்குழி -பரமபதம் ஆகிய விளையாட்டுக்கள் ஆடுவர். புதிய கோலங்கள் வரைவர். அப்போது – அக்குழந்தையுடன் பேச்சுக் கொடுத்து அவளுக்கு ஏதேனும் உபாதை இருக்கிறதா – அசவுகரியங்கள் ஏதேனும் இருக்கிறதா எனவும் விசாரித்து அறிந்து கொள்வர். அவளை கழிப்பிடத்துக்கு அழைத்துக்கொண்டு சென்று வருவர். ஒவ்வொரு இரவும், தாயோ அல்லது பாட்டியோ அக்குழந்தையுடன் உறங்குவர். ஒன்பது நாள் கழிய – பத்தாம் நாள் – அவரவர் குல ஒழுக்கத்த்துக்கு ஏற்ப மஞ்சள் நீராட்டுவிழா வைபவம் நிகழும் – மஞ்சள் கரைக்கப்பட்டப் புனித நீரில் குழந்தையை, சுமங்கலிகள் எனப்படும் மங்கல மங்கையர் நீராட்டுவர் வெல்லமும் அரிசி மாவும் சேர்த்து அவித்துச் செய்வதான பிட்டு எனும் உணவைச் சுற்றுவர் – திருஷ்டி கழிப்பர். சுற்றமும் நட்பும், சமூக அன்பர்களும், சூழவந்திருந்து குழந்தையை வாழ்த்துவர் -பல்வகையான பரிசுகள் வழங்குவர். குழந்தை வீட்டுக்குள் புஷ்பவதியாக வலது கால் எடுத்து வைத்து நுழைவாள்.

    மிக சுவாரசியமாக இருக்கிறதே! “Blackgram என்று சொன்னீர்களே அதற்கு ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா?” என்றார்.

    உளுந்து மாவு என்பது எலும்பு உளுத்துப்போகாமல் உறுதிப்படுத்தும் தன்மை உடையது. எங்கள் கலாச்சாரத்தில் தமிழ் மருத்துவம் என்கிற தனி மருத்துவம் உண்டு. அதனை நாட்டு மருத்துவம் என்றும் சொல்லுவர். எங்கள் நாட்டு மருத்துவத்தில், எலும்பு முறிவுக்கு உளுந்துமாவைப் பயன்படுத்தியே முறிந்த எலும்புகளை இணைப்பர் – Plaster of Parris பயன்படுத்துவது கிடையாது. எங்கள் ஊரின் கோட்டைகளும் பல கோயில்களும் உளுந்துமாவை சிமெண்ட் ஆகப் பயன்படுத்தியே கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த சிமெண்ட் தயாரிக்க உளுந்து மாவுடன் சுண்ணப்பொடியையும் கள்ளிப்பாலையும் – கோழி முட்டையின் வெள்ளைக் கருவையும் கலந்தே உருவாக்கியதாகவும் அறிகிறோம்.

    “நீங்கள் உங்கள் பெண் குழந்தைக்கான உணவு வகைகளில் jaggery எனப்படும் வெல்லத்தை அதிகம் பயன்படுத்த்துவதாக உணர்ந்தேன். சர்க்கரையைப் பயன்படுத்தாமல் வெல்லத்தைப் பயன்படுத்த்துவது ஏன்?” என்றார்.

    வெள்ளைச் சர்க்கரையின் பலாபலன்களை இன்று இவ்வுலகமே உணர்ந்து விட்டது – வெள்ளைச் சர்க்கரை அழிவின் தொடக்கம் – இதனை எங்கள் மூதாதையர் அன்றே அறிந்து கொண்டிருந்தனர் என்றே சொல்லவேண்டும். எனவே வெல்லப் பழக்கம் எங்களிடம் வெகுகாலமாக இருந்து வருகிறது. இந்த வெல்ல வகைகளில் ஒருபடி மேலே போய் – பனைவெல்லம் பயன்படுத்தும் பாரம்பரியமும் எங்களிடம் உள்ளது. இயன்ற போதெல்லாம் பனைவெல்லம் பயன்படுத்துவோம். வெல்லம் – என்பது – வெளுக்கப்படாத – இயற்கைச் சர்க்கரை – இதில் நார்ச்சத்துடன் நிறைய உயிர்ச் சத்துக்கள் உள்ளன. மேலும் குடலுக்கும் – கல்லீரலுக்கும் இணக்கமானது. குடலில் ஓட்டைகள் ஏற்பட்ட நோயாளிக்கு தமிழ் மருத்துவ முறையில், வெல்லம் மூலமாகவே அறுவைச் சிகிச்சை இன்றி, குடலை ஒட்டவைத்ததாக – குணப்படுத்தியதாக அறிகிறோம். இன்றும் கூட, எங்கள் வீடுகளில், நாங்கள் பயன்படுத்தும் மட்பாண்டங்களோ – சிமெண்டாலான தொட்டிகளோ வீரல் விட்டாலோ உடைந்தாலோ சுண்ணமும் வெள்ளமும் கலந்து பூசி ஓட்டையை அடைத்துவிடுவார்கள்.

    வெல்லம் நல்லது என்பதற்காக, வெல்லத்தையே முழு உணவாய்க் கொள்ளமுடியாது. அதனைத் தேவைப்படும்போது தேவைப்படும் அளவில் மட்டுமே பயன்படுத்தும் கட்டுப்பாடும் இருந்தது.

    “அப்படியென்றால், உனக்குள் தமிழ்ப்பெண்கள் மிகுந்த பலசாலிகளாக – மிகுந்த ஆரோக்கியம் கொண்டவர்களாக இருக்கவேண்டுமே!”

    “அப்படித்தான் பலகாலம் இருந்திருக்கிறது. புலியையும் கூட முறத்தால் துரத்தியிருக்கிற வீரப்பெண்களாகவே எங்கள் பெண்கள் இருந்திருக்கின்றனர்”என்றேன்.

    “இப்போதும் உங்கள் பெண்கள் அதே பலத்தோடு இருக்கவேண்டுமே!” என்றார்.

    துரதிருஷ்டவசமாக, உங்கள் கேள்விக்கு நான், “இல்லை” என்ற பதில் சொல்லவேண்டி இருக்கிறது. இன்று இடுப்பு மற்றும் கீழ் முதுகுப்பகுதி வியாதிகள் எனும் உடல் நலக்குறைபாட்டுடன் இருக்கும் பெண்களின் உலக எண்ணிக்கையில் எங்கள் பெண்கள் கவனம் பெற்றிருக்கிறார்கள்.

    அதிர்ந்தார் – உண்மையாகவா? இது எவ்வாறு நிகழ்ந்தது – என்ன காரணம் என்றார்.

    அவ்வை எனும் தெய்வப் பெண்மணி, பெண்களுக்கான எங்களுக்காய் எழுதிவைத்துவிட்டுப்போன விநாயகர் அகவல் எனும் மருத்துவ -பெண் உடலியல் வேதத்தைத் துறந்தோம் – மறந்தோம் – எங்கள் பெண் குழந்தைகளுக்கு – அந்த வேதத்தைச் சொல்லிக்கொடுக்கும் கடமையில் தவறினோம்- விநாயகர் அகவல் எனப்படும் பெண் உடல்நல மருத்துவ வேதத்தின் ஒழுக்க நெறிப்படி எங்கள் மூதாதையர்கள் எங்களுக்காய் ஏற்படுத்தி வைத்திருந்த அன்றாடப் பழக்கவழக்கங்களைத் தூக்கி எறிந்தோம். சுருங்கச் சொன்னால், Modernism எனப்படும் படுமாயையான கவர்ச்சியில் மூழ்கித்தொலைந்தோம்.

    பெண்கள், தமது மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தை அவள் அறிந்து எங்களுக்குச் சொன்னதை உதாசீனம் செய்தோம். இன்றைய நிலைக்கு நாங்களே காரணம். சொல்லப்போனால், கடந்த முப்பது ஆண்டுகளில், எங்களையும் நாங்கள் சரியாய் கவனித்துக் கொள்ளவில்லை எங்கள் பெண் குழந்தைகளையும் நாங்கள் சரியாய் கவனித்துக் கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்.

    மேலும் பேசுவோம்

    Share
  • இறையியல் சிந்தனைகள்: 6 ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்

    அவ்வை மகள்

    6. துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்திலும் ஓங்கார நாதம்

    இறையியல் சிந்தனைகள்

    முனைப்பாடியார் தனது அறநெறிச் சாரத்தில் கூறுவார்:

    நோற்பவ ரில்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
    நோற்பவருக்குச் சார்வா யறம்பெருக்கி–யாப்புடைக்
    காழுங் கிடுகும்போல் நிற்குங் கயக்கின்றி
    ஆழிசூழ் வையத் தறம்.

    என்று. இல்லறமும், துறவறமும் ஒன்றுடன் சார்ந்து இயங்குதலே இவ்வையத்தின் அறம் எனக்காட்டும் இக்காட்சி உய்ந்துணரத்தக்கது. “காழும் கிடுகும் போல்” என்கிற உவமை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் புதுப்புது சிந்தனைகளைக் கிளப்பவல்லது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் – இது மிகப்பெரிய ஆற்றல் சங்கமத் தத்துவம்.

    முனைப்பாடியார் காட்டும் காட்சியைக் கூர்ந்து பாருங்கள் – இல்லறம் என்பது கிடைமட்டமாய்ப் போடப்படும் உத்திரமாம். துறவறம் என்பது நெட்டுக்குத்துத் தூணாம். இவையிரண்டும் ஒன்றுடன் ஒரு ஒரு சார்வாகி இணையுமேயானால், அவை கயங்கின்றி ஒரு கட்டிடத்தைத் தாங்குமாம். அந்த கட்டிடம் எதுவென்றால் ஆழிசூழ் வையகத்தின் அறமாம்.

    ஆக, உலக தர்மம் இல்லங்களில் தாம் உருவாகிறதாம், அவ்வாறு உலக தர்மத்தை உருவாக்கும் அவ்வில்லத்தார்க்குச் சார்பாய் துறவிகள் நிற்பார்களாம். இல்லத்தவர்களோ உலக தர்ம உற்பத்தியில், தமக்குச் சார்பு தரும் துறவிகளுக்குச் சார்பாய் இருப்பார்களாம். இது ஒரு அற்புத எடுத்துக் காட்டு – அறிவியலில் cyclical relationships – வளைய உறவுகள் என்பார்கள். எது ஆதி எது அந்தம் என்று சொல்லமுடியாத பந்தம் இது. சொல்லப்போனால் இல்லறமும் துறவறமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலானவையே எனும் அற்புதக் காட்சியை முனைப்பாடியார் காட்டுகிறார்.

    இங்கு வையகம் என்று சொல்லாமல் ஆழிசூழ் வையகம் என்று சொன்னது உய்ந்துணர்த் தக்கது. எதுகை மோனைக்காக “ஆழி” உபயோகப்படுத்த்தப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஓயாமல் கொந்தளிக்கும் கடல்கள் இருப்பதால் இந்த வையகம் என்றுமே என்றும் ஒரு நிலைப்பாடாய் நிற்காமல் ஓயாமல் அதிர்ந்துகொண்டேயிருப்பது போல, இவ்வுலகத்தில் தர்மம் கூட ஒருவித அதிர்வுக்கு ஓயாமல் இலக்காகிறதாம் என்பதை முனைப்பாடியார் சுட்டிக்காட்டுகிறார். அப்படிப்பட்டதான அதிர்வுள்ள ஒரு கட்டிடமான உலக தர்மத்தை, கயங்கின்றி இந்த உத்திரமும் (இல்லறமும்) தூணும் (துறவறமும்) தாங்குகின்றனவாம்.

    கயங்கு என்பதை அறிவியல் மொழியில் “Strain” என்று கொள்ளலாம். “Strain” என்பதை எளிய தமிழில் சுணக்கம் எனலாம், சிரமம் எனலாம்; சுணக்கமும் சிரமுமின்றி இலகுவாக பாரம் மிகுந்த கட்டிடத்தைத் தாங்கும் வல்லமை கிடைமட்ட விசையும் நெட்டுக்குத்து விசையும் சார்புடன் பொருத்தும்போது மட்டுமே பிறக்கிறது என்பதை நாமறிவோம் என்பதால் இல்லறமும் துறவறமும் கைகோர்த்துச் செல்வது தான் உலக க்ஷேமதத்திற்கு இலக்கணம் என்பது நமக்குத் புரிகிறது,

    “அறம் செய்ய விரும்பு” என்றும் “அறனை மறவேல்” என்றும் அவ்வை இடித்துச் சொன்னது ஏன் என்பதை இங்கு நாம் நன்கு புரிந்து கொள்கிறோம். தனிமனிதரோ பொது மனிதரோ அவர் எவராயினும் அனைவருக்கும் அறம் செய்வது என்பது அடிப்படைக் கடைமை என்றே ஆகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.

    தனிமனித நெறி தான் அனைத்து நெறிகளுக்கும் முதலாவது என்பதை முனைப்பாடியார் மீண்டும் நன்னெறிச் சாரத்தில் கூறுவதை பாருங்கள்:

    “காட்சி யொழுக்கொடு ஞானந் தலைநின்று
    மாட்சி மனைவாழ்த லன்றியு–மீட்சியில்
    வீட்டுலக மெய்தல் எனவிரண்டே நல்லறங்
    கேட்டதனா லாய பயன். “

    இந்தப் பாடலில் முனைப்பாடியார் வலியுறுத்துவது என்னவென்றால்: தனிமனிதர்கள் தோற்றத்தில் ஒழுக்கம் கொண்டவராகவும், ஞானம் எனும் விவேகத்தைத் தலையாயக் கொள்கையாய்க் கொண்டவராகவும் கவுரவத்தோடு மனையில் வாழவேண்டும் என்பதே. துறவிகளும் தனிமனிதர்களே தாம். அவர்களுக்கும் இந்த அறநெறிச் சாரம் பொருந்தும்.

    “காட்டுக்கோ இமயமலைக்கோ சென்று எதனையும் பிரயாசை செய்யத் தேவையில்லை” அது சாதனை ஆகாது – உன் சொந்த இடத்தில் இருந்தபடி, உன் மக்களோடு இருந்தபடி, தோற்ற ஒழுக்கத்தோடு, விவேகம் கொண்டு கவுரவமாய் வாழு என்று முனைப்பாடியார் சொன்ன எளிமையான – ஆனால் பெருத்த வலிமையான இந்த வழி காட்டுதலைத் துறவிகள் கொள்வதும் மிகப் பொருத்தமே. இங்கு வள்ளலாரின் தோற்ற ஒழுக்கம் மிகவும் போற்றத்தக்கது. அன்றைய நாளில் மட்டுமல்ல இன்றும் கூட வள்ளலாரின் தோற்ற ஒழுக்கம் பெரிதும் போற்றத்தகதே.

    துறவி என்ற ரீதியாக வள்ளலாரைப் பார்த்தவர்கள் அவரை ஞானத் துறவிகள் வரிசையில் வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஏனெனில் வள்ளலார் ஒரு முழுமையான ஞானியே என்பதால் தான்.

    அதே நேரத்தில் அவர் துறவிதானா என்று பார்த்தால் – மற்ற துறவிகளைப் போல் துறவற இலக்கணங்களை ஒழுகி துறவறம் பூண்டாரா என்று பார்த்தால் அவர் துறவி இல்லை என்றே கூட எண்ணம் தோன்றக்கூடும். ஏனெனில் எவ்விதமான துறவற படாடோபங்களும் அலங்காரங்களும் இன்றி – வெகு இயல்பாய் – ஒரு சர்வசாதாரணப் பிரஜையாய் – மக்களோடு மக்களாக வாழ்ந்து போனவர் வள்ளலார்.

    ஒரு சர்வ சாதாரண மனிதராக இருந்தபடியே இறைமை எனும் பெருநிலைக்கு நம்மை வழிகாட்டிப்போந்த வள்ளலார் அந்நாளில் மட்டுமல்ல இன்றும் ஒரு மாபெரும் புரட்சியாளர்தான். மக்களோடு மக்களாய் வாழும் யதார்த்தம்தான் வள்ளலாரின் முக்கிய வசீகரம் எனலாம். இந்த வசீகரம் அந்நாளில் (ஏன் இந்நாளில் கூட) பலரை மிகவும் சிந்திக்க வைத்திருக்கிறது. வள்ளலாருக்குப் பின்னால் வந்த இன்னொரு ஞானத்துறவியான ரமணரும்கூட எளிமை – யதார்த்தம், மக்களோடு மக்களாய் வாழும் அடிமட்ட எளிமை என்ற வசீகரங்களோடு, மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவராக விளங்கினார் என்றே அறிகிறோம்.

    அடுத்ததாக, வள்ளலாரின் மொழியாளுமை வெகு வசீகரமானது. தமிழை இப்படி அப்படி என்று வார்த்தைகளால் வரையறுக்கமுடியாதபடி அத்தனை அனாயாசமாகக் கையாண்டிருக்கிற நேர்த்தி வள்ளலாரை ஒரு மிகப்பெரிய எழுத்துச் சித்தராய்க் காட்டுகிறது. திருவருட்பாவின் திருமுறைகளில் நாம் காணும் எழுத்துச் சிலம்பம் அப்பப்பா எத்தனை அட்டகாசம்! – ஆண்டவா இயன்றால் இன்னுமொருமுறை வள்ளலாரை இங்கே அனுப்பிவையேன் எனும்படியாக இறைவனிடம் நம்மைக் கோரிக்கை வைக்கத் தோன்றுகின்றது அவரது எழுத்து. அவரெழுத்தில் காணப்படும் எளிமையும், நீரோட்டமும், நாதமும், எதுகை மோனையும், அந்தாக்ஷரமும் உண்மையில் படு ஜோர்!

    இறைமை என்பது யாதென வள்ளலார் சொன்ன எளிமை ஒப்பிடற்கரியது. இறைமை என்பதை வாழ்விலிருந்து புறத்ததான விஷயமாகக் கொள்ளாமல் அதனை வாழ்வோடு வாழ்வாய் வாழும் ஒரு கூறாகக் காட்டி வள்ளலார் நடத்திக் காட்டிய அனாயாச எளிமை சாதனங்களை – எளிமை சாதகங்களை வேறு எந்தத் துறவியும் நடத்திக் காட்டியதில்லை. ரமணரிடம் வள்ளலாளரின் சில பல சாயல்களைக் காணமுடிகிறது என்றாலும், வள்ளலாரின் போக்கு வெகு முற்போக்கு எனபதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

    “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி – தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி” எனும் இந்த வாசகம் வள்ளலாரை அனைவருக்கும் அடையாளம் காட்டும் வாசகம். கூர்ந்து கவனித்தால், இறைவனுக்கு வள்ளலார் காட்டுவது மூன்றே மூன்று அடையாளங்கள்:

    அருள், ஒளி, கருணை.

    இந்த மூன்று இறைவனிடம் எவ்வாறு இருக்கின்றன எனபதை அவர் விளக்கும் பாங்கே தனி.

    அருள், ஒளி, கருணை -இந்த மூன்றும் இறைவனிடம் எவ்வாறு உள்ளன என்றால் – அருளானது பெரும் ஜோதியாக உள்ளதாம் – கருணையானது தனிப்பெருங்கருணையாக இருக்கிறதாம் – அந்த தனிப்பெருங்கருணையே அருட்பெருஞ்ஜோதியாகுமாம். ஆஹா! ஆஹா! ஆஹா! என்று எத்தனை முறைக் கூவினாலும் தகும்! வேறு எவரே இவ்வாறு சொல்லினர் அல்லது சொல்லமுடியும்? இங்கு திருவாசகத்தின் – சிவபுராணத்தின் சார்பு தெரிந்தாலும் – அதிலிருந்து நூறுபடி மேலே சென்று விட்டார் வள்ளலார்.

    கூர்ந்து நோக்கினால், ஓங்காராத்தின் மும்முனையையும் – மும்முளையையும் – முவ்வேரையும் வள்ளலார் அருள், ஒளி, கருணை என்றே காட்டுவதாகத் தெரிகிறது. ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும் என்பதை நாம் அறிவோம். அம்மூன்றும் முறையே அருள், ஒளி, கருணை என்று சமனிடும் அற்புதக் கணிதத்தை வள்ளலார் பிரயோகிப்பதை இங்கு நாம் காண்கிறோம். ஓங்காரத் தத்துவப் பொருளை உணர்த்த அவர் விழைவது இன்னொரு இடத்திலும் கூட புலப்படுகிறது: “முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய் எச்சுடரும் போதா இயர்ச்சுடராய்” என்று திருவருட்பாவில் முதல் திருமுறையில். இங்கு, இயர்ச்சுடர் என்பதை இயற்கையின் இயல்பான சுடர் என்று கொள்ளலாம். இயற்கைச் சுடரின் இயல்பு எவ்வாறானது என்றால் எந்தச் சுடராலும் அதனை “மாடல்” செய்து காட்டமுடியாத தனிப்பெரும் தன்மை உடையது.

    என்ன தனிப்பெரும் தன்மை என்றால் – இயற்கைச் சுடருக்கு அளப்பெரும் ஆற்றலும் (power) அளப்பெரும் ஜோதியும் (radiance), அளப்பெரும் நிறமும் (luminescence), அளப்பெரும் வெப்பமும் (enthalpy) உள்ளன (குளிரேயானாலும் அதுவும் ஒரு வெப்ப அளவே என உணர்க)! இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் இயற்கைக் சுடரில் இருப்பது நாதம் – ஓசை!

    இயற்கையின் இயல்பான சுடரில் என்ன ஓசை – என்ன நாதம் இருக்கிறது என்றால் அதுதான் ஓங்காரம். இந்த ஓங்கார நாதத்தை பிதாகரஸ் எனும் கணித மேதை கண்டுபிடித்திருக்கிறார், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இந்த நாதத்தைப் பதிவு செய்திருக்கிறது. (காண்க: https://www.youtube.com/watch?v=TfoRAdDolqA). ஆனால் நம் உலகின் ஒப்பரிய பொக்கிஷமாய்க் கருதப்படும் – நம் நாட்டில் தோன்றியதான இயற்கை மதமான இந்துமதம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓங்காரத்தை அடையாளம் கண்டுவிட்டது. ஓம் எனும் நாதம் இயற்கையின் உயிரோட்டம். துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்திலும் இயற்கை என்றும் ஒரு சீராய்க் கொள்ளும் நாடித்துடிப்பின் இசை ஒலிதான் ஓங்காரம்.

    எனவே, அருள், ஒளி, கருணை என்கிற மூன்று ஆற்றல்களையும் ஒன்றிணைத்த வள்ளலார் அந்த விழுதை ஒரு தார்மீக மந்திரமாக – உயிர்மூச்சாக – ஓங்கார நாதம் போல் செய்தார். மாபெரும் புரட்சி இது ஆன்மீகப் புரட்சி என்ற வகையில் மட்டும் இது புதுமையானது அல்ல. அறிவியல் வாயிலாகப் பார்த்தாலும் கூட, இது அறிவியல் முன்னேற்றஙகளுக்கு ஒரு முன்னோடி எனவும் கொள்ளத்தக்கது.

    ஏனெனில், இதுவரையிலும் தோன்றியிருக்கிற – தோற்றப்பட்டிருக்கிற அறிவியல் தியரிகள் யாவும் இரண்டு சங்கதிகள் ஒருமித்து நிகழ்வதாக (simultaneity) மட்டுமே காட்டும் வல்லமை பெற்றனவாய் உள்ளன. மூன்று சங்கதிகளை ஒருமித்து நிகழ்த்தும் திறமை அறிவியலுக்கு இல்லை. அறிவியலின் பவுதீக – கணித – புள்ளியியல் திறனுக்கு உள்ளப் பற்றாக்குறை நிலை இது. இந்தப் பற்றாக்குறையை நான் பலவிடங்களில் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது – ஏனெனில் அறிவியல் என்பது ஞானத்தின் ஒரு பகுதியே. அதில் பல கூறுகள் வெற்றாய் இருக்கும். அதிலே உள்ள பற்றாக்குறைகளை இட்டு நிரப்ப எதனால் முடியும் என்றால் – மெய் ஞானத்தால் மட்டுமே முடியும்.

    அருள், ஒளி, கருணை என்கிற மூன்று ஆற்றல்களை வள்ளலார் கையாண்ட விதமும் அவற்றை அவர் தொகுத்து வினைவகை செய்த வித்தகமும் கற்றுணரத் தக்கன. சத்ய சன்மார்க்கமும் ஜீவ காருண்யமும் அருள், ஒளி, கருணை என்கிற மும்முனைக்கருவியால்உருவாக்கப்பட்டவையே. இந்த சாதனையில் மணிவாசகரின் திரிகரண சுத்தியையும் சங்கரரின் அத்வைதத்தையும் நம்மால் உணரமுடிகிறது.

    மேலும் பேசுவோம்.

    https://youtu.be/TfoRAdDolqA

    Share
  • எழுவகைப் பெண்கள்: 7

    அவ்வை மகள்

     பெண்ணின் “பெரினியம்” எனப்படும் மூலாதார யோகமுத்திரை

    பெண்ணியம் என்பதை விடப் பெண்ணியலும் பெண்ணறமும் தான் மிகவும் முக்கியம் என்ற அந்த இராணுவ அதிகாரியைப் பார்த்துக்கொண்டே அப்படியே எழுந்து ஒரு சல்யூட் அடித்துவிட்டு உட்கார்ந்தேன். “என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படிப் பரவசப்படுகிறீர்கள்!” என்றார். “ஐயா! நான் நெகிழ்ந்ததன் காரணம் சொல்கிறேன் கேளுங்கள்” என்று சொன்னேன்:

    ‘“வங்கக் கடல்கடைந்த
    மாதவனைக் கேசவனைத்
    திங்கள் திருமுகத்துச்
    சேயிழையார் சென்றிறைஞ்சி”

    என்ற எங்கள் மொழியில் உள்ள ஒரு பாசுரம் நினைவுக்கு வந்தது. குறிப்பாக, அதில் வரும் “சேயிழையார்” என்கிற சொல் என் முழு கவனத்திலும் வியாபித்தது. அதன் பொருளை நான் இந்நாள் வரை முழுதுமாய்ப் புரிந்துகொள்ளவில்லை – ஞானோபதேசம் செய்தீர்கள். நீங்கள் பேசப்பேச என்னுள், எங்கள் மொழியில் எங்கள் மூதாதையர்கள் சொல்லிவிட்டுப்போயிருக்கிற “சேயிழையார்” என்ற அந்தச் சொல்லின் ஆழ்ந்த பொருளும் அதிலே அவர்கள் சேர்த்துவிட்டுப் போயிருக்கிற அளப்பிலா நுட்பமும் புரிந்தது – நன்றி மீண்டும்” என்றேன்.

    என்ன மொழி என்றார் – “இந்த உலகில் உள்ள எல்லா பேசப்படும் மொழிகளுக்கும் மூத்தமொழி எம்மொழி” என்றேன். பெயர் கேட்டார், “தமிழ்” என்றேன். என்றேன். அதற்குச் செம்மொழி தகுதியும் கூட உண்டோ? என்றார். “ஆம் ஐயா!” என்றேன். கணினி சென்றார் – உங்கள் நாடு இரண்டு செம்மொழிகளை வைத்திருக்கிறதே என்றார். சமஸ்கிருதமும் தமிழும் தொடர்புடையவையா என்றார். “ ஆம்! இரண்டிற்கும் பல பொதுப் பண்புகளும் உண்டு. பல தனிப் பண்புகளும் உண்டு” என்றேன். “Bravo!” என்று சொல்லி எழுந்து நின்று கை தட்டினார் – கை குலுக்கினார். உங்கள் திராவிட மொழிகளில் கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவையெல்லாம் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் கலந்து உருவானாவை போல் தெரிகின்றனவே என்றார். மனதுக்குள் ஒரு நிமிடம் நம்மூரில் மொழி நிலைமை திரையோடியது – “மொழியைப் புரிந்து கொள்ளும் இந்த இந்த எளிமை அங்கும் வர வேண்டுமே1” என்று எண்ணம் வேண்டியது.

    “சரி விஷயத்திற்கு வருவோம், சேயிழையார் என்று ஏதோ சொன்னீர்களே அது என்ன?” என்றார். “நீங்கள் பெண் உடல் பற்றி சொன்ன யாவற்றையும் “சேயிழையார்” என்கிற ஒற்றைச் சொல்லில் எங்கள் மூதாதையர்கள் இரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்தச் சொல்லை நாங்கள் அறிவோம் என்றாலும் அதனை மேலோட்டாமாகப் பேசிப் போந்தோமே தவிர அதன் தாத்பரியத்தை உணர்ந்து கொள்ளவில்லை. இன்று அவற்றை உணர்ந்தேன் உங்கள் பேச்சின் மூலம்” என்றேன்

    சேயிழை என்கிற சொல் எங்கள் மொழியில் எண்ணிறந்த இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்படுகிறது – பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் “சேயிழை” என்ற சொல் வரும். அதனை நாங்கள் பெரும்பாலும் அழகிய அணிகலன்களை அணிந்த சிவந்த நங்கையர் எனவே அறிந்து கொள்வோம். அந்த சொல்லுக்குப் பிற அர்த்தங்களும் உண்டுதான் – ஆனால், நாங்கள் அவற்றை அதிக சிரத்தையோடு பார்த்ததில்லை. உங்கள் பேச்சு என் சிந்தனையைத் தூண்டியது!” என்றேன். “என் மருத்துவ அறிவியலின் வழியே புதிய சிந்தனைகள் பிறந்தன!” என்றேன்.

    “Quite interesting” மேலே தொடருங்கள் என்றார். அவருக்கு நான் அளித்த பதில் இதோ:

    “ சேயிழை – இங்கு இழை என்பதை இடை எனும் சொல்லும் அந்த இழைக்குள் இருப்பதாகக் கொள்ளவேண்டும். ஏனெனில் பெண்களுக்கு இடையே பிரதானம். அதுவும் அவர்களுடைய இடை – நெய்ய்ந்து பின்னியதோர் அமைப்புள்ள எலும்பால் ஆக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல பெண்ணுக்கு இடையே பிரதானம் என்பது விளங்கும் படியாக, பிரம்மன், பெண்ணின் இடையுடன் அவளது மூளையையும் இருதயத்தையும் மட்டுமல்ல பிரபஞ்சத்தையே இணைத்து வைத்திருக்கிறான்.

    பெண்ணின் இடையில் பிரபஞ்சம் அடக்கம் என்பதற்கு எடுத்துக் காட்டாக, நிலவின் இயக்கம் பெண்ணின் இடையில் நிகழ்வதைக் காண்கிறோம். அவளது மாதவிலக்கின் காலச் சுழற்சியின் கால அளவும் நிலவின் சுழற்சியின் கால அளவும் ஒன்று. ருதுவான பெண்ணுக்கு, மாதவிடாய் என்பது ஒவ்வொரு 28 நாட்களிலும் நிகழ்வது. இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமிகளுக்கு இடையில் உள்ள காலம் 28 நாட்கள் என்பதை நாம் அறிவோம். நிலவுக்கு வளர் பிறை பாதி – தேய் பிறை பாதி என்பது போல. பெண்ணின் இடுப்பில் உள்ள சூலகத்தில் கரு முட்டை இருப்பது பாதி நாட்கள் – இல்லாமல் இருப்பது பாதி நாட்கள். ஒவ்வொரு மாதமும், அமாவாசையிலிருந்து மூன்றாம் பிறை – மொத்தம் நான்கு நாட்கள் – ஒவ்வொரு மாதமும் பெண் குருதி சொரியும் முக்கியமான நாட்கள் நான்கு. மாதவிலக்கு முடிந்த நான்காம் நாள் பெண்ணின் உடலில் மகோன்னத எழிலும் சக்தியும் செறிந்து நிற்கின்றன. முழு நிலவை விட மூன்றாம் பிறையை எழிலுக்கும் வசீகரத்துக்கும், புனிதத்துக்கும், எடுத்துக்காட்டாய் முதன்மைப்படுத்தி வளர் பிறையின் மூன்றாம் பிறையை மிக முக்கியமான நாளாக நிலவின் இயக்கத்தில் காண்பிப்பது இது பற்றியே.

    அது மட்டுமல்ல பெண்ணின் இடையில் கடவுளே கூட இணைந்திருக்கிறான். எங்கள் ஆலயங்களில் கர்ப்பக் கிரகத்தில் தான் மூலவர் இருப்பார். எங்கள் ஆலயத்தில் “Sanctum sanctorum” என்னும் மூலஸ்தானத்திற்குப் போகும் வழியில் நாங்கள் சில வாசல்களைக் கடந்து செல்ல வேண்டும் – பெண்ணுறுப்பில் உள்ள வாசல்களின் – துளை நிலைகளின் சாட்சிகள் அவை” என்றேன்

    அப்படியா? ஆச்சரியமாய் இருக்கிறதே! மேலே சொல்லுங்கள் என்றார் – தொடர்ந்தேன்.

    சேயிழை என்பதில் உள்ள “சே” எனும் எழுத்து “சிவப்பு” என்று பொருள் படும். எங்கள் ஊர் வெப்பப் பிரதேசம் – அங்கே சிவந்த நிற மங்கையர் இல்லை எனவே இங்கு சிவப்பு என்பது பெண்களின் தோலை – மேனியைக் குறிப்பதாகக் கொள்ளமுடியாது. எனவே சேயிழை என்பதை சிவப்பு இழை என்றே கொள்ளவேண்டும். இடை என்பது இழையில் ஏற்கனவே ஒளிந்திருக்கிறது என்பதை நான் குறிப்பிட்டேன் அல்லவா? அதன் வழியில் சென்று, இங்கு இழை என்பது எதைக்குறிக்கிறது என்று நீங்கள் கேட்டால் அது பெண்ணின் இடுப்பில் பொருந்தியிருக்கிற, முற்றிலும் இழையாலான, உறுப்பான பெரினியத்தை (perineum) குறிக்கிறது என்பேன்.

    ஒரு பெண் என்ற முறையிலும் – ஒரு தாய் என்ற முறையிலும் – மருத்துவ அறிவியலில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உழன்று கொண்டிருப்பவள் என்ற முறையிலும் பெண்ணின் பெரினியத்தின் தன்மைகளை நான் மிகவும் அறிந்தவள். எந்த நிறப் பெண்ணாக இருந்தாலும் சிவப்பு நிறத்தில் முற்றிலும் திசு இழைகளால் மட்டுமேயான ஒரு உறுப்பு எல்லாப் பெண்களிடமும் இருக்கிறது என்றால் அதுதான் பெரினியம். எனவே “சேயிழை” என்பதை உடல் மருத்துவ ரீதியாகப் பார்த்தால் அது பெரினியமே எனக் கொள்ளலாம்.

    சொல்லப்போனால் இந்தப் பெரினியத்தின் தன்மையை மருத்துவ அறிவியல் தொழிலுக்கு வருவதற்கு முன்பே நான் அறிந்து கொன்டேன். எப்படி என்றால் எனக்குப் பதினாறு வயது இருக்கும்போது ஓரிரவு மதுரை சென்று கொண்டிருந்தேன். அக்காவின் கணவருக்கு, விபத்து ஏற்பட்டுப்போய் தகவல் வர, உதவிக்கு என்னை உடனடியாக அனுப்பி வைக்க, சென்னையிலிருந்து செல்கிறேன் -அந்த சமயத்தில் ஒரு பெண்ணுக்கு பஸ்ஸிலேயே பிரசவம் ஏற்படலானது. அவளுக்கு உதவி செய்யப்போனேன். அப்போது பெரினியத்தின் தரிசனம் கிடைத்தது – அதன் வடிவைப் பார்த்து அப்படியே அசந்து போய்விட்டேன். அவ்வுறுப்பின் நிறமும் தெய்வீக வடிவும், அந்த சிசு அதனுள் உட்புறமிருந்து பிரவேசிக்கும் அந்தப் பிரசவத்தின் ஆற்றல் வெளிப்பாடும் என்னுள் அன்று மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கின. அன்று நான் கண்ட தொப்புள் கொடியையும் – வெளிவந்த குருதி வெள்ளத்தையும், வெளித்தள்ளப்பட்ட நஞ்சையும், சிசுவின் மேலிருந்த சாம்பல் பூச்சையும், வெளிக்காற்றை அனுபவித்த நொடி அந்த சிசுவின் உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பையும் – அந்த சிலிர்ப்பில் அது கண் திறந்த அந்த க்ஷணத்தையும் நான் இறக்கும் வரை மறவேன்.

    அதுவும் அத்தருணம், தமிழில் பெரினியத்திறகு இட்டுள்ள பெயர் என் நினைவுக்கு வரவும் அது என்னை அப்படியே ஒரு உலுக்கு உலுக்கி என்னை நிறுத்திச் சொன்னது, “அடி பெண்ணே! நீ ஒரு பொக்கிஷம் – நீ ஒரு முழு முதல் தெய்வம் – நீ ஒரு பிரம்மா மட்டுமல்லடி – நீ ஒரு தாய் – தாய் என்பவள் மூன்று தெய்வங்களும் சேர்ந்த முழுமுதல் தெய்வம் – நீ படைக்கிறாய் – படைத்ததைக் காக்கிறாய் – படைத்தலும் அதைக் காத்தலும் என்ற பணியில் – உன் படைப்புக்கு எதிரிடையாய் வரும் அனைத்துத் தீய சக்திகளையும் அழித்தெறிகிறாய்! நீயே சக்தி! – உன்னால் தானடி இங்கு உள்ளவை யாவும் – நீயே அனைத்தும் நீயே பிரபஞ்சம்!” என்றது.

    இத்தனை முக்கியத்துவமா – இத்தனைப் புளகாங்கிதமா என்றார் – என் நா தொடர்ந்து.

    உண்மையில், பெண்ணின் பெரினியத்தின் வடிவம் ஒரு யோக முத்திரையாகும். – ஒரு பெண்ணின் உடலம் ஒரு யோக முத்திரையில் அமர்ந்திருக்கும் காட்சி பெண்ணின் பெரினியத்தில் தெரியும் – இந்த வடிவை உற்று நோக்கினால் அதற்குள்ளே அண்ட சராசரங்களும் பொருந்தியிருப்பது புரியும் எங்கள் ஊரில் ஐயப்ப சாமி ஏறக்குறைய இந்த முத்திரையோடு தான் அமர்ந்திருப்பார்.

    பேசிக்கொண்டே கணினியில் சென்று எதையோ அவர் பார்த்த அந்நொடியில் அவருள் என்ன தோன்றியதோ தெரியாது – கண் பளபளத்தது.

    சரி, உங்கள் மொழியில் பெரினியத்தின் பெயர் என்னவென்றார்
    “மூலாதாரம்” “The ultimate origin” என்றேன்.

    கண்ணில் நீர் திரண்டு முத்தாய் இறங்கியது

    கலாச்சாரம் வேறு – நாடு வேறு – இருப்பதோ இராணுவப் பணி – முரடும் – கடினமும் – கொண்ட ஆள் – வாழ்வில் எத்தனையோ பெண்களைப் பார்த்தவர் – மூன்று முறை டைவர்ஸ் செய்திருக்கிறவர். ஐம்பது வயதில் நான்காம் திருமண பந்தம் ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். அப்படம் கண்டு நெகிழ்ந்தார்.

    நீங்களும் பார்க்கலாம் – வயதுவந்தவராக இருந்தால்

    https://en.wikipedia.org/wiki/Pelvis#/media/File:Gray408.png

    What can be more noble than the female body? என்றார்.

    உங்கள் மொழியும் உங்கள் கலாச்சாரமும் இத்தனை உயர்வாய் இருக்கிறதே என்றார். மூலாதாரம் என்கிறீர்களே அது பற்றி மேலும் விளக்கமுடியுமா என்கிறார். அதற்கு நான் அவ்வையைத் துணைக்கழைக்க வேண்டும். அவ்வை எங்கள் ஊரில் ஒரு சிறப்பு மிக்க பெண் புலவர் – விவேகி என்றேன்.

    மேலும் பேசுவோம்

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 5

    அவ்வை மகள்

    நெஞ்சகம் நைந்து தொலைந்தழுத நோன்பு

    இறையியல் சிந்தனைகள்

    உறவுதான் உயிரிகளின் அடையாளம் என்றோம். உறவில் உதிப்பதே உயிரி. உறவுகொண்டொழுகலே உயிரியின் இயக்கம். முட்டையிலிருந்து கோழியா கோழியிலிருந்து முட்டையா என்பார்களே அதைப்போன்றது உயிரி – உறவின் தன்மை. சந்யாசிகள் கூட உறவு கொண்டு ஒழுகுபவர்களே. சன்யாசம் பூணும் முன் இருந்த உறவுகள் எத்தனையோ என்றாலும் சன்யாசம் பூண்ட பின், மதம், ஆச்சாரம் என்கிற ஷரத்துக்களுக்காய், குருவுடனும், சிஷ்யர்களுடனும் உறவு நீள்கிறது. பொதுஜனத் தொடர்பெனும் உறவு பெரிதாய் நீள்கிறது – பிற சொந்தங்களை விலக்கினாலும் கூட, தாயுடன் உள்ள உறவு விடாது பின் தொடருகிறது.

    சொந்தம் – சமூகம் என்னும் இந்த இரு வட்டங்களைத் தாண்டி தலைமை உறவாக – சன்யாசம் பூண்ட நிலையில் கொள்ளும் சிறப்பு உறவு இறைவனிடம் – இறைமையிடம் – அதுவும் சமூகப் பிரக்ஞையுடன் (வடமொழியில், லோக க்ஷேமம்) எழுகிறது. எனவே, காஷாயம் தரிப்பது என்பது உறவுகளை வெட்டிவிட்டுத் தனியே செல்வது அல்ல, உறவுகளை வலுப்படுத்தும் செம்மாந்த இலக்கை ஒட்டித்தான்.

    உறவு என்பது பசுஞ்செடி. அதிகமாகக் கிளைக்கும்போது செடியின் கிளைகளை வெட்டி எறிந்து, மிச்சமிருப்பவற்றை இழுத்துக் கட்டி, தேவைப்பட்டால், ஒரு கோலை நாட்டி, இன்னமும் தேவைப்பட்டால், கம்பி வலையையோ அல்லது முட்படலையோ சுற்றிலும் கட்டி, செடி எவ்வாறு பாதுகாப்புடன் போஷித்து வளர்க்கப் படுகிறதோ அவ்வாறு வளர்க்கப்படுவது உறவு.

    ஒரு மனிதனுக்கு உறவு எப்போது முளைக்கிறது என்று பார்த்தால் அது ஆதியிலே ஏற்பட்டுப்போவதைப் பார்க்கிறோம்.

    பிறந்த குழந்தை, தாயின் முகத்தை மூன்றாவது மாதமே அடையாளம் கண்டு கொள்கிறது. அப்படியென்றால் அதற்கு முன் தாயை அக்குழந்தை அறியாதா எனக் கேட்கலாம். பிறந்த நிமிடமே குழந்தை, தாயின் மார்பகத்தை அடையாளம் கண்டு கொள்கிறது. பிரசவத்தின் போது தாயின் புறவழியை அடையாளம் கண்டு கொள்கிறது. உருவாகும்போது தாயுடன் தந்தையையும் அடையாளம் கொள்கிறது. அவர்கள் இருவரின் என்னென்னெ க்ரோமோசோம்களின் கலவையில் தான் உருவாக வேண்டும் என்றும் கூட அதுவே தான் முடிவு செய்கிறது – அந்த முடிவை எடுக்கும் உள் ஆற்றல் அதற்கு இருக்கிறது! அவ்வாறு உருவான அந்த நொடி, தாயின் கருப்பைச் சுவற்றை அடையாளம் கண்டு கொண்டு அங்குபோய்ச் சேர்ந்து அங்கே ஒட்டிக்கொள்கிறது. உறுப்பென்று ஏதும் இல்லா நிலையில் விகுதிப்பகுதிகள் நிகழாது ஒற்றைச் செல்லாக இருக்கும்போதே ஒரு சிசு உறவு கோல் நாட்டி உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தெடுத்துக் கொள்ளுகிறது உயிரியான தனது அடையாளத்தை.

    ஒரு சிசு இந்தச் சாயலோடு இந்த உளப்பாங்கோடு உருவாகிறது என்பதைப் பெற்றோர் நிர்ணயிக்க முடியாது – அதனை நிர்ணயிக்கும் வல்லமை உருவாகும் அந்த சிசுவுக்கு மட்டுமே உண்டு. இந்த நிர்ணயத்தை நாத்திகர்கள் புள்ளியியல் வாயிலாக, “probability” என்பர். நாத்திகர்கள் விளக்கம் இவ்வாறு இருக்கும்: “Chance Theory” யின் படி அன்னை-தந்தை இருவரின் க்ரோமோசோம்கள் கலக்கும்போது சாத்தியமாகக் கூடிய எத்தனையோ கலப்பு விகிதாசாரங்களில் (permutation/combination), உருவாகும் சிசுவின் விகிதாச்சாரம் ஒன்று என்பதால் அது அவ்வாறு உருவாகிறது.” ஆனால், “ஏன் அந்த விகிதாச்சாரம் இந்தத் தருணத்தில் நிகழ வேண்டும் வேறு விகிதாச்சாரம் இப்போது நிகழக்க்கூடாதா” என்று அவர்களைக் கேட்டால் திரு திருவென முழிப்பர். “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?” அறிவியலில், கணிதத்தில் உள்ள ஷரத்துக்களின் பற்றாக்குறை நிலை இது. இறையியலோ இந்த நிகழ்வை மிக எளிதாக “சஞ்சித பாவம்” என்று அனாயாசமாகச் சொல்லிப் போந்தது. இதிலே “பாவம்” என்பதை நம்மவர்கள் Paavam என்று பொருள் கொள்வது சரி என்றாலும் அது சஞ்சிதத்தின் ஒரு பக்கமே. பாவம் என்பதை Bhaavam என்றும் கொள்வதும் மிகப் பொருத்தமாக இருக்கும். இது பாவத்தின் இன்னொரு பக்கம். Bhaavam என்பதை அவதாரம் என்று கொள்ளலாம். வடிவு, கோலம், ஒளி (Form, Appearance, and Radiance) ஆகிய மூன்றும் அவதாரத்தில் அடக்கம். ஒரே பிரசவத்தில் உருவான இரட்டையர்களைக் கவனித்துப் பார்த்தால் வடிவு, கோலம், ஒளி ஆகிய மூன்றும் ஒவ்வொரு ஜீவிக்கும் வேறு என்பது புலப்படும்.

    இறையியல் காட்டும் “சஞ்சிதம்” என்பது என்ன என்ற கேள்வி இப்போது எழுகிறது. சஞ்சிதம் என்றால் “ஏற்கனவே உள்ள அறிவு” (pre-existing knowledge) என்று பொருள். அப்படியென்றால், ஒரு சிசு ஏற்கனவே எதையோ தெரிந்துவைத்துக்கொண்டு தான் இங்கு வந்து ஜனிக்கிறது என்று புரிந்து கொள்கிறோம். எனவே சிசு சும்மா வரவில்லை எதையோ எதையோ தன்னுடன் எடுத்துக்கொண்டு எந்த காரணம் பற்றியோ இங்கு வந்து சிருஷ்டியாகிறது என்பது விளங்குகிறது. அது மட்டுமல்ல ஒரு சிசு இங்கு வரும் அதன் நோக்கம் நிறைவேறத்தேவையான சக்தியோடு, உருவத்தோடு, ஆயுளோடு அது உருவாகிறது. அந்த நோக்கம் நிறைவானவுடன் அது வேறு இலக்கு நோக்கிப் பயணிக்கிறது. ஆக, சஞ்சிதம் எனப்படும் “ஏற்கனவே உள்ள அறிவு” என்பது தான் சிசுவின்- ஜீவனின் “பூர்வ ஜென்மப் பலன்” என்பதே ஆன்மீகஆய்வியலின் குறிப்பாகும்.

    இன்று, கணித – பௌதீக – புள்ளியியல் – ஆய்வாளர்கள் ஏன் ஒரு கலப்பு ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் ஒரு தருணம் நிகழ வேண்டும் என்பதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்கிறார்கள் – ஒரு புதிய கலவை உருவாகிறபோது பழைய கலவை விகிதாச்சாரங்கள் நிகழ்வதில்லை என்பதை இப்போது அவர்கள் உணர்ந்து விட்டார்கள் – மேலும் ஏதோ ஒரு காலக்கணக்கும் பழைய சரித நினைவும் (time and past history) கொண்டதாய் ஒவ்வொரு கலவையும் ஜனிப்பதாகவும் அவர்கள் உணர்ந்து விட்டார்கள்- ஆனால் – அதனை விளக்கத்தெரியாமல் அவர்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதேதோ கணித சமன்பாடுகளைப் போடுகிறார்கள் – ஒருவருக்கொருவர் விதண்டாவாதம் செய்கிறார்கள் (காண்க: http://philosophy.fas.nyu.edu/docs/IO/4990/meacham.pdf). இவ்வாறு அவர்கள் விதம் விதமாக தர்க்கம் செய்தாலும் கூட – Chance-credence எனப்படும் வாய்ப்புக்கும் – உண்மையான ஜனனத்துக்கும் உள்ள தொடர்பில் காலக்கணக்கும் பழைய சரிதமும் இருப்பதை அந்த விதண்டாவாதிகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிப் பேசுவதைக் நிதர்சனமாய்க் காண்கிறோம். அறிவியல் எப்போதும் ஜரூராகச் செல்லும் ஆனால் ஓரிடம் வரை போய் நின்று விடும் – அங்கிருந்து அதை மேலும் இட்டுச் செல்ல ஆன்மீகத்தால் மட்டுமே முடியும்.

    எது எப்படி இருப்பினும், Time and Past History எனும் காலச்சரிதம், மற்றும் Bhaavam எனப்படும் அவதாரம் (credence) இரண்டையுமே Chance-Credence theory மூலம் நிரூபித்து, சஞ்சித பாவத்தை அறிவியல் வாயிலாக அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தி இருப்பதை நம்மால் கவனிக்க முடிகிறது.

    இது நிற்க.

    ஸ்டீவ் ஜாப்ஸ் எவ்வாறு ஜனித்தார் என்பது இன்று உலகம் அறிந்த உண்மை. திருமணமாகாத நிலையில் ஆணும் பெண்ணும் உருவாக்கிய சிசு அவர். அந்த ஆண்-பெண் இருவரும் வெவ்வேறு மதம் மற்றும் கலாச்சாரம் என்ற காரணத்தினாலும் – மகளுக்கு ஏற்ற துணைவன் இவன் இல்லை என்று பெண்ணின் தந்தை கருதியதாலும் – அந்த ஆணும்-பெண்ணும் இருவருமே கூட – தாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழும் முதிர்ச்சி அற்றவர்கள் என்று எண்ணியதாலும் – இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் கூடத் தடையானது. அதே நேரம், கருச்சிதைவு செய்யலாகாது என்று சட்டம் இருந்த கால நிலைமை இருந்ததால் – மறைவில் ஒளிந்து வாழ்ந்து – கர்ப்ப காலத்தைக் கழிப்பது – குழந்தையைப் பிரசவித்து உடனே தத்து கொடுத்து விடுவது என்று முடிவானது. குழந்தை அவ்வாறே பிரசவிக்கப் படுகிறது. மதப்பற்று நிரம்பிய, படித்த, பணவசதி உள்ள பெற்றோரிடம் மட்டுமே தன் பிள்ளையைத் தத்து கொடுக்க வேண்டும் என்று தாய் ஆசைப்படுகிறாள் – பிரயாசையும் படுகிறாள் – அவ்வாறே ஒரு ஜோடி கிடைக்கிறது – குழந்தையை தத்து எடுத்துக் கொள்கிறேன் என்று இணங்கி வந்தவர்கள் ஏனோ கடைசி நிமிடம் மனம் மாறி – வேண்டாம் என்று பின்வாங்கிக்கொள்கின்றனர் – தேடல் தொடர்ந்தது – ஆனால் இறுதியில் கிடைத்ததோ, படிக்காத பெற்றோர் மட்டுமே – அமெரிக்காவில் பள்ளி செல்ல வேண்டும் என்பது சட்டமே என்பதால் இருவரும் பள்ளிப்படிப்பு பெற்றிருந்தனரே தவிர – கல்லூரி சென்றவர்கள் அல்லர். எனவே குழந்தையின் தாய்க்கு, அவர்களிடம் குழந்தையைத் தத்து கொடுக்க மனம் வரவில்லை – ஆனால் குழந்தையை வளர்க்கும் அருகதை அற்றவள் என்பதால் தத்து கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதையும் அவள் விரும்பவில்லை. எனவே தத்து எடுக்கும் பெற்றோர்கள் இருவரும் – கல்லூரிப் படிப்பு படிப்பேன் என்று சத்தியம் செய்தாலொழிய என் குழந்தையை தத்து கொடுக்க மாட்டேன் என்று நீதி மன்றம் வரை சென்று உறுதி மொழி வாங்கிய பின்பே தத்து கொடுக்கும் படலம் நிறைவு பெறுகிறது. இருப்பினும் தத்து எடுத்தப் பெற்றோர்கள் குழந்தையிடம் முதலில் அன்பு காட்ட மறுத்தனர் – கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன் எந்த காரணம் காட்டி குழந்தையைத் தாய் எடுத்துக் கொண்டு போய்விடுவாளோ – அன்பு செலுத்திவிட்டுப் பின்னால் பிரிவில் துயருறக் கூடாது என்றே அந்த வளர்ப்புப் பெற்றோர் – அன்பு மறுத்ததனர். சட்டப்படியாக அளிக்க வேண்டிய உணவும், இருப்பிடமும், பராமரிப்பும் மட்டுமே முதல் ஆறு மாதம் அந்த குழந்தைக்கு கிடைத்தன. இருப்பினும் கருத்தரிக்க இயலாத உடல் நிலை (இனப்பெருக்க மண்டலாக் கோளாறு காரணமாக) கொண்ட அந்த வளர்ப்புத் தாய் குழந்தையின் மதிப்பு அறிந்தவள் எனவே – கல்லூரிப் படிப்பு படித்தால் தான் சட்டப்படி குழந்தையின் தாயாக முடியும் எனும் நிர்ப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெல்கிறாள் என்றாலும் – இக்கால கட்டத்தில் குழந்தைக்கு இரண்டு வயதாகிவிடுகிறது. “நானே தாய்” என்று வழக்கில் வெற்றி பெற்றபின் – குழந்தையை அணுகிப் பார்த்தால் – குழந்தை பிடிவாதம் கொண்ட குழந்தை என்பது புலப்படுகிறது. குழந்தைக்குப் பிறருடன் பழகும் பாங்கு இல்லை என்பதும் புலப்படுகிறது. இருப்பினும் குழந்தையை வெறுக்காமல் அவள் வளர்க்கிறாள்.

    அடுத்தடுத்து அதிர்ச்சிகள் – குழந்தைக்குப் – பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை ஏனெனில், அங்கு ஆசிரியர்களுக்குத் தெரிந்திருப்பதை விட, குழந்தைக்கு அதிகம் தெரிந்திருக்கிறது – புத்தகங்களில் இல்லாததையே குழந்தையின் மனம் நாடுகிறது – பிற மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு குறும்புத்தனம் நிறைய பண்ணுகிறது – மொத்தத்தில் பொல்லாப் பிள்ளையாகக் குழந்தை பார்க்கப்படுகிறது.

    தாய் கொஞ்சம் கலவரப்பட்டாலும் வளர்ப்புத் தந்தை அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சிறுவயதில் பல்விதக் கொடுமைகளுக்கு ஆளானவர் அவர் என்பதால் வளர்ப்புக்கு குழந்தையின் நிலைமையை உணர்ந்தவராகவே தெரிந்தார்.

    ஏறக்குறைய இதே நிலைமையை வள்ளலாரின் சரித்திலும் காண்கிறோம். கலாச்சார வேறுபாடுகள் மற்றும் நிகழ்வுகளின் தன்மையில் வேறுபாடுகள் ஆகியன இருப்பினும், நிஜப் பெற்றோர்கள் இன்றி அண்ணன் அண்ணியின் பராமரிப்பில் வள்ளலார் வாழ்ந்ததையும் – பள்ளிப்படிப்பில் – குறும்பு செய்தததையும் – சட்டாம்பிள்ளையைக் காட்டிலும் அவருக்கு குழந்தைப் பருவத்திலேயே அதிகமாகத் தெரிந்திருந்தையும் அறிகிறோம். ஸ்டீவ் ஜாப்ஸ் – வள்ளலார் இருவருமே conventional system of education எனப்படும் முறைசார் கல்வியில் ஈடுபாடு அற்றவர்களாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

    இருவருக்குமே தம் பிறவியின் தாத்பரியம் பற்றி அறிந்து கொள்ளும் முனைப்பு சிறுவயதிலேயே இருந்திருக்கிறது. ஆறு மாதத்தில் கோயிலில் செம்மாந்து வள்ளலார் சிரித்த நிகழ்வை இங்கு கவனத்தில் கொள்ளலாம். ஸ்டீவ், வள்ளலார் இருவருமே தம் பிறப்பு பற்றி அறிந்து கொண்ட தெளிவை பின்னாளில் அவர்கள் வாய்மொழியே காட்டுகிறது.

    இதில், ஸ்டீவிற்கு தன் உடலாய்ந்த (bodily) பிறப்பு பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இருந்த நெருக்கடி வள்ளலாருக்கு இல்லை. எனவே ஸ்டீவ் தன் நிஜப் பெற்றோர்கள் எவரென அறிந்து கொள்ளும் வேட்கை கொண்டவராக இருந்தார். பெற்றோர் யாரென அறியாமல் குழந்தைப் பருவத்தில் நெஞ்சகம் நைந்து நொந்து அவர் வாடியிருக்கிறார். தன் “மூலம்” எதுவென அறிய வெகுபிடிவாதமாய் முயன்றிருக்கிறார். இந்தத் தேடல் எத்தனை கொடுமையானது என்பதை விவரிக்க வார்த்தைகள் போதா. ஆனால் அந்த நோன்பின் பயனாய், தனது 27ஆம் வயதில் தான் தாயைக் கண்டிருக்கிறார். தந்தையை – (இருவருக்குமே தான் தான் தந்தை தான் தான் மகன் என்று தெரியாமலேயே) ஒருமுறை பார்த்திருக்கிறார். ஆனால், இறக்கும் வரைத் தந்தையை நேரில் சந்தித்ததில்லை. விரும்பவில்லை – முயலவும் இல்லை என்றே படுகிறது. தாயிடம் சிறிது நாள் தொடர்பு இருந்திருக்கிறது ஆனால் நிலைத்ததாய் எவ்விதத் தொடர்பையும் பெற்ற தாயிடம் கூட ஏற்படுத்திக்கொள்ளவில்லை. செஞ்சோற்றுக்கடன் எனும் எல்லை தாண்டி தான் வளர்ப்புப் பெற்றோரை அவர் நேசித்தது தெரிகிறது. “என் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள்” என்று வளர்ப்புப் பெற்றோரைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார் ஸ்டீவ் . இதே போன்று தன்னை வளர்த்த அண்ணன் அண்ணியின் மீது வள்ளளார் உயர்ந்த அன்பும் அபிமானமும் கொண்டிருந்தார் எனவும் அறிகிறோம்.

    தன்னைப் பெற்ற நிஜப் பெற்றோர்களைப் பற்றி ஸ்டீவ் குறிப்பிடும்போது, “எனது விந்து-முட்டையின் வங்கி” என்று கூறுகிறார். “my sperm and egg bank. That’s not harsh, it’s just the way it was, a sperm bank thing, nothing more.”

    இருவர் வாழ்விலும் ஜீவிகளின் சிருஷ்டிக்கு ஒரு தாயும் ஒரு தந்தையும் கருவிகளைப் போன்ற வகையில் மட்டுமே இயங்குகின்றனர் என்பதைக் காண்கிறோம். சிசுவின் சிருஷ்டியின் நோக்கத்தை பெற்றோர் கட்டுப்படுத்தும் அமைப்பு இயற்கையில் இல்லை என்பதும் புலப்படுகிறது. அதே நேரத்தில், சிருஷ்டிகள் தாய்-தந்தை எனும் உறவின்பால் மிகுந்த பக்தி கொண்டிருந்ததைக் காண்கிறோம். திருவருட்பாவில் தாயும் தந்தையும் அவர்களது அன்பும் எண்ணிறந்த வகையில் கையாளப் படுவதைக் காண்க

    அவதார புருஷர்களின் உறவு உடலாய்ந்த உறவு எனும் நிலையை விட்டு உணர்வாய்ந்த நிலையை எட்டி அங்கிருந்து அடுத்த நிலைக்குச் செல்ல ஆயத்தமாவதைக் காண்கிறோம். இதில் ஸ்டீவ் மற்றும் வள்ளலார் கொண்டிருந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் ஒப்பிடற்குரியது.

    மேலும் பேசுவோம்

    Share