Author: தேமொழி

  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 30, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  திரு. எல். கனக சுப்பிரமணி  அவர்கள்

    L.Kanaga Subramani
    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் நடத்துனராகப் பணிபுரியும் திரு. எல். கனக சுப்பிரமணி அவர்கள்.   கனக சுப்பிரமணியின் தமிழ்ப் பற்று பற்றியும், சமுதாதய அக்கறை பற்றியும் பேஸ்புக் உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட தகவலைப் படித்து வியந்து இவரை வல்லமையாளர் விருதிற்குப்  பரிந்துரைத்தவர் வல்லமையின் நிறுவனர் அண்ணாகண்ணன். அவரது பரிந்துரையை வழிமொழிந்தவர் வல்லமையின் வாசகரும் எழுத்தாளருமான திரு. சொ.வினைதீர்த்தான் அவர்கள்.   

    தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு திருக்குறளுக்கு பொருள்விளக்கம் படித்த பின்னரே தனது நாளைத் துவக்குபவர் கனக சுப்பிரமணி.  மேட்டுப்பாளையம்  உதகை வழித்தடத்தில் பேருந்து நடத்துனராக பணிக்குச் செல்லும்பொழுது தன்னுடன் சில தமிழ் நூல்களையும் கொண்டு செல்கிறார்.  வழியில் கல்லாரில் காலை 7:15க்கு பேருந்து நிற்கும்பொழுது, பயணிகளின் கவனத்தை ஓர் இரு நிமிடங்களுக்கு தனக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து போக்குவரத்து பாதுகாப்பைக் கடைபிடிக்கவும், சுற்றுப்புறச் சூழிலின் தூய்மை அவசியம் பற்றியும் எடுத்துரைக்கிறார்.  “ஓடும் பேருந்தில் ஏறாதீர்கள், மரங்களை நட முடியாவிட்டாலும் சரி, அவற்றை அழிக்காதீர்கள், குப்பை போடாதீர்கள், குருதிக் கொடை அளியுங்கள்” போன்ற அறிவுரைகளைக் கூறுகிறார்.

    அத்துடன் தினம் ஒரு திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அதற்கு பொருள் விளக்கமும் அளிக்கிறார்.  அன்று பயணிகளில் யாருக்காவது பிறந்தநாளாகவோ, திருமணநாளாகவோ இருந்தால் வாழ்த்துகளுடன் தன்னுடன் எடுத்துச் சென்ற திருக்குறள் நூல்களை பரிசாக அளிக்கிறார்.  யாருக்கும் அன்றைய நாள் அவ்வாறான  சிறப்பு நாள்களில் ஒன்றாக அமையாவிட்டால், அந்த நூல்களை பயணிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், காவல்துறையினர்  யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அளிக்கிறார். பயணிகள் யாரேனும் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளாக இருந்தால் அவர்களைப் பாராட்டி வாழ்த்தவும் செய்கிறார். பேருந்தில் எழுதியிருக்கும் குறளை சுட்டிக் காட்டிய பயணி ஒருவர், இக்குறளின் பொருள் என்னவென்று நடத்துனருக்கோ ஓட்டுனருக்கோ தெரியுமா என்று ஒருமுறை கேட்ட பொழுது தினம் ஒரு குறள் என்ற கொள்கையைத் துவக்கி இருக்கிறார் இவர்.

    தினசரி வாழ்க்கையில் பலவித மக்களை எதிர்கொண்டு சேவை செய்யும் முன்னணி பணியாளர்களுக்கு அது மிகவும் மனஅழுத்தம் தரும் பணியாகவே இருக்கும்.  நடத்துனர் பணியிலும்  அவ்வாறே பலவித உணர்வுகள்  கொண்ட மக்களை எதிர் கொள்ளும்பொழுது இன்முகத்துடன் பணியாற்றுவது என்பது  ஒரு சவாலாக அமைந்துவிடும்.  இந்தச் சூழ்நிலையிலும்  சமுதாயப்பணிக்கும், தமிழ்ப் பணிக்கும் ஓர் இரண்டு நிமிட நேரத்தை ஒதுக்கி பயணிகள் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார் கனக சுப்பிரமணி. இதனை தினமும் பத்தாண்டுகளுக்கு மேலாகவும் செய்து வருகிறார் எனபது மிகவும் வியப்பளிக்கும் செய்தி. கனக சுப்பிரமணியைப் பொறுத்தவரை பேருந்துப் பயணமாக இருந்தாலும் அதன் வழியே பயணிகள் கல்வி, தகவல் ஆகியவற்றைப் பெற்று அவர்களுக்கு அது  வசதியான பயணமாக அமைய வேண்டும். கனக சுப்பிரமணிக்கு  அவரது பயணிகள் அவரது குடும்ப உறுப்பினர்கள் போல.

    கோவை மத்தியச் சிறைச்சாலை கைதிகளுக்காக “செந்தமிழ் அறக்கட்டளை” என்ற அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி ஓய்வு நேரங்களில் கைதிகளின் மறுவாழ்விற்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான  வழிகளில் பணியாற்றுகிறார்.  இசை வகுப்புகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தி பரிசு வழங்குதலை  தனது அறக்கட்டளை வழியாகச் செய்கிறார். இதுபோன்ற சமுதாயச் சேவைகள் செய்வதற்கு தனது ஆசிரியர் அற்புதராஜும், மக்கள் திலகமும் முன்னோடிகள் என இவர் கூறுகிறார்.   இளமைக்காலத்தில், சிரமமான காலங்களில் இவரது  ஆசிரியர் அற்புதராஜ்  அவர்கள் இவருக்கு  உணவும் உடையும் அளித்து  பராமரித்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.   உற்சாகமூட்டும் உரைகள் வழங்குவதையும் ஊக்கமூட்டும் செயல்கள் செய்வதையும் தனது கடமையாகக் கருதி வரும் கனக சுப்பிரமணி எம்.ஜி.ஆர் அவர்களை தனது சிறந்த வழிகாட்டியாகக் கருதுகிறார். மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான இவருக்குப் பிடித்த பாட்டு “தாயில்லாமல் நானில்லை”. இதனைக் கைதிகளுக்காக இவர் பாடுவதும் உண்டு.   எம்.ஜி.ஆர்  பாடல்களில் ஒன்றினை எப்பொழுதும் தனது உரைகளில் ஒரு பகுதியாக்கிக் கொள்கிறார்.

    தனது தமிழார்வத்தையும், சமுதாய அக்கறையையும் இணைத்து தனது தினசரி வாழ்வில் ஒரு சிலர் வாழ்விலாவது மாற்றம் கொண்டுவர விரும்பி தொடர்ந்து ஆர்வமுடன் செயலாற்றும்  கனக சுப்பிரமணி  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
    (இவரைப் பாராட்ட விரும்புவோர் கவனத்திற்கு,  இவரது தொலைபேசி எண்:  96009-87811)

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

     

    படம்  மற்றும்  தகவல்கள் இந்து நாளிதழில் இருந்து பெறப்பட்டது. நன்றி இந்து.
    http://www.thehindu.com/features/metroplus/from-tickets-to-the-thirukkural/article2896247.ece

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 23, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு  செய்யப்பட்டவர்

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திரு.  வாசு ரெங்கநாதன்  அவர்கள்

    Vasu Renganathan
    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரியும் திரு.  வாசு ரெங்கநாதன் (http://plc.sas.upenn.edu/people/faculty/vasurenganathan) அவர்கள்.

    இவரைப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகர், முனைவர் நா. கணேசன் அவர்கள்.  திரு. வாசு ரெங்கநாதன் அவர்கள் அமெரிக்க கல்விக் கழகம் நிதி உதவியில்,  கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் நிர்மானித்து பராமரித்து வரும் தமிழ் பயிற்சி வலைத்தளத்தில்  (வலைதளத்தின் முகவரி: http://www.thetamillanguage.com/),  பண்டைய தமிழ் இலக்கியங்களை படிப்பவர்களுக்கு உதவக்கூடிய  முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இணையத்தில் உள்ள சங்கத்தமிழ் இலக்கியங்களை.  எளிதில் பொருள் விளங்கிக் கொள்ளும் வகையில், கணினித் திரையில் தோன்றும் ஒவ்வொரு சொற்களையும் கணினித் திரையில் சுட்டினாலே அகராதியில் இருந்து அந்த சொல்லின் பொருள் திரையில் தோன்றும் வகையில் அகராதியுடன் இணைத்துள்ளார்.

    உதாரணமாக நற்றிணைப் பாடல்களை இந்த பக்கத்தில் காணலாம் : http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0296.html

    “நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;
    என்றும் என் தோள் பிரிபு அறியலரே”
    என்று தலைவி தோழியிடம் சொல்வதில், ‘பிரிபு’ என்றால் எதைக்குறிக்கிறது என்று எண்ணி திரையில் அச்சொல்லைச் சுட்டினால், உடனே  அகராதியில் இருந்து பொருள் விளக்கம் காட்டப்படுகிறது.

    இவ்வாறாக சங்கப்பாடல்களைப் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள், எளிதில் பொருள் தேடி அறிய இணைய அகராதியுடன் பாடல்களின் சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    இது போல மதுரைத்திட்டம் வழங்கும் இணைய இலக்கியங்கள் யாவற்றையும்  (http://www.projectmadurai.org/pmworks.html) இவ்வாறு படிக்க இயலும்.

    காட்டாக:
    http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=
    என்ற சுட்டியின் பின்னர் ‘மதுரை திட்டம்’ வழங்கும்  கொன்றை வேந்தன் பாடல்களைப் படிக்க விரும்புபவர், அந்த இலக்கியத்திற்கான இணையதள சுட்டியான http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html என்பதை http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url= க்குப்பிறகு  இணைத்து
    http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html என்ற இணையதள முகவரியாக மாற்றிய பின்னர் இணையத்தேடல் பொறியில் வெட்டி ஒட்டி சொடுக்கினால் போதும்.

    http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0002.html
    பொருள் விளக்கம் அறியும் வகையில் கொன்றைவேந்தன் உங்கள் விரல்நுனிகளில் கிடைக்கும்.

    பள்ளி வகுப்புகளுடன் தமிழிலக்கியம் படிப்பது தடைபட்டு, பின்நாளில் சொந்த முயற்சியில் படிக்க விரும்புபவர்களுக்கு தமிழிலக்கிய நூல்களும், அவற்றின் பொருளை  விளக்கும் உரைநூல்களும்  கிடைப்பது இனி அரிதான ஒன்றே அல்ல.

    இந்த எளிய முறையை சென்றவாரம் தமிழுலகிற்கு உருவாக்கித் தந்த  திரு. வாசு ரெங்கநாதன்  அவர்களை வல்லமையாளர் விருதுக்கு பரிந்துரைத்த முனைவர் கணேசன்,   அவரைப்பற்றி பற்றி கீழ் வருமாறு அறிமுகப்படுத்தி எழுதியுள்ளார்.

     

    பேரா. வாசு ரெங்கநாதன் தமிழ் மொழியியலில் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். ஆய்வியல் அறிஞர் செ. வை. சண்முகம் அவர்களிடம் அண்ணாமலைப் பல்கலையிலும், பின்னர் பென்சில்வேனியா பல்கலையில் ஹெரால்ட் ஷிப்மனிடமும் பயின்ற வாசு ரெங்கநாதன் இப்பொழுது ‘பென் மொழிகள் மையம்’ (Penn Language Center) என்னும் அமைப்பில் பணிபுரிகிறார். தமிழ்க் கல்லூரி ஆசிரியர்கள் கணினிப் பக்கமே போகாத நிலை இன்னும் தமிழ்நாட்டில் நிலவுகிறது. அந்நிலை மாற வழிவகுப்போரில் முனைவர் வாசு முக்கியமானவர். வாசு ரெங்கநாதன் கணினியின் மூலமாக தமிழைக் கற்பிக்கும் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் தட்டச்சு விசைப்பலகையை முதலில் கணினிக்கு ஏற்ற வகையில் வடிவமைத்ததால் இலங்கையில் ‘ரெங்கநாதன் விசைப்பலகை’ என்று அறியப்படுகிறது. அமெரிக்காவில் தமிழரல்லா பிற மொழியினருக்குத் தமிழ் கற்பிக்கும் முறைகளில் அனுபவமும் திறமையும் மிக்க இவர் இணையத்தில் தமிழ் போதிக்க வலைத்தளங்கள் அமைத்துள்ளார். அமெரிக்க தமிழ் அகாதமி என்ற புதிய அமைப்பு பொதுமக்கள் பயிலும் பள்ளிகளில் அங்கீகாரம் பெற்ற பாடமாகத் தமிழை அறிமுகப்படுத்த ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. அமெரிக்கன் தமிழ் அகாதமிக்கு ஆலோசகராக நல்ல பல ஊக்கங்களை அளித்துவருகிறார்.

    உத்தமம் என்ற பல்நாட்டுத் தமிழ்க் கணினித் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாநாடுகளை நடத்தப் பெரும்பங்கு ஆற்றும் வாசு இந்த ஆண்டு உத்தமம் அமைப்பின் தலைவர். புதுச்சேரியில் நடக்கும் 13–ஆம் ஆண்டு கருத்தரங்கம் பல அரசியல் தலைவர்களியும், உத்தமத்தினரையும், கல்லூரி ஆய்வாளர்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அண்மையில் ஒரு வலைப்பக்கத்தைக் கொடுத்தால் அதைத் தமிழாகப் படிக்கும் தானியங்கி மென்கலனை உருவாக்கி தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார். இன்று தந்துள்ள சேவையின் மூலம், பழைய சங்கப் பாடல்களைப் பொருள் புரிந்துகொள்ள எளிதாகிறது. ஒரு சொல்லியின் மீது கணியெலிச் சுட்டியை வைத்தால் அச் சொல்லின் பொருளைக் காட்டுகிறது.

    இயற்கை மொழி கணியாய்வில் (Natural Language Processing) தனது கணினி திறனையும், தமிழார்வத்தையும் இணைத்து, பழந்தமிழ் இலக்கியங்களை அனைவரும் எளிதில் படித்திட வகை செய்த திரு. வாசு ரெங்கநாதன்  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    படங்கள்  மற்றும்  தகவல்கள் இணையத்திலிருந்து.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 16, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  பெனோ செபீன்  அவர்கள்

    BENO
    இவ்வார வல்லமையாளர் விருதிற்காக ஐவரிடம் (விருது அறிவிப்பாளராகிய என்னையும் சேர்த்து) இருந்து  ஐந்து சாதனையாளர்களின் பெயர் முகநூல், மின்னஞ்சல்கள் வழியாகப்  பரிந்துரைக்கப்பட்டது.  அந்த சாதனையாளர்களில், வல்லமை இதழின்  வாசகர் திரு. ரவி சுப்பிரமணியன் அவர்கள் பரிந்துரைத்தவர்களில் ஒருவரான  ‘பெனோ செபீன்’ (Beno Zephine) அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்து அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மழ்கிழ்சி அடைகிறோம்.

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,)  நடத்திய 2013 ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில்,   அகில இந்திய அளவில் 1,122 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 109 பேர்.  இவர்களில் சென்னையை சேர்ந்த, பிறவிலேயே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பெனோ  செபீனும் ஒருவர்.  ஐ.ஏ.எஸ். படிக்க  வேண்டும் அதன்மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் படித்து, தேர்வில் வெற்றி பெற்று (343 வது இடம்) சாதனை படைத்துள்ளார்.

    Beno Zephine3

    ரயில்வேயில் ஊழியராகப் பணியாற்றி வரும் இவரது தந்தை சார்லஸ் மற்றும்  இல்லத்தரசியான தாய் மேரிபத்மஜா ஆகியோரின் மகளான 24 வயது பெனோ  நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர். விழியற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வென்ட்டில்  பள்ளிப்படிப்பையும், ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.ஏ.(ஆங்கில இலக்கியம்),  லயோலா கல்லூரியில் எம்.ஏ படித்தவர். ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் வார இறுதி ஐஏஎஸ் பயிற்சி வகுப்பில் படித்தவர்.  தகுதிநிர்ணயநிலையில் தற்போது இவர்  திருவள்ளூரில் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டே பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்டியும் படித்து வருகிறார்.

    இவரது சிறப்புத் தேவைகளை கருதி இவருக்கான பாடத்திட்டங்களை சிடியாக தயாரித்து பயிற்சி நிறுவனம் வழங்க, அதை பெனோ பிரெய்லி முறையில் மாற்றிப் படித்துள்ளார். இவருக்கு கல்லூரியில் வகுப்பு இருக்கும் நாட்களில் இவரது தந்தை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பாடங்களை ஒலிப்பதிவு செய்து எடுத்துச் செல்வாராம். அதை கேட்டு பெனோவும் பயிற்சி பெற்றிருக்கிறார்.  சிறு வயதிலிருந்தே இவரது முன்னேற்றத்தை முதல்  கடமையாகக் கொண்ட பெற்றோர்கள் தொடர்ந்து இவருக்காகப் பாடங்களையும், செய்தித்தாள்களையும் படித்துக் காட்டி உதவி செய்திருக்கிறார்கள்.

    Beno Zephine2
    விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஒப்பாக பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பற்பல  போட்டிகளில், குறிப்பாக பேச்சுப் போட்டிகளில்  பரிசு பெற்றவர் பெனோ.  இவரது துடிப்பான ஆற்றல், இவரது பள்ளி நாட்களில் அவரது பள்ளிக்கு வருகை தந்த அந்நாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கவர்ந்திருகிறது.   துணை முதல்வர் ஸ்டாலினிடம் தனது பிறந்தநாள் பற்றி கூற அவரும் பெனோவின் இல்லத்திற்கு தவறாது வந்து பிறந்தநாள் கேக் ஊட்டி வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

    Beno Zephine
    மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் பொழுது, மாற்றுத் திறனாளிகளில், விழியிழந்தோரில் முதலிடம் பெறுபவர்களுக்கு ஏன் மாநில அளவில் பாராட்டுகள் வழங்கப்படுவதில்லை என்ற கேள்வியை எழுப்பி, அந்நாள் முதல்வர் கருணாநிதியிடம் பெனோ கோரிக்கையை  வைக்க, முதல்வரும் கோரிக்கையை ஏற்று  பரிசீலனை செய்து அரசாணையும்  பிறப்பித்துள்ளார்.  பொதுவாழ்விலும், சேவையிலும், தலைமைப் பண்பிலும் இதுபோன்ற இவரது தொடக்கமே வியப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது.

    Beno Zephine5

    இவரது கல்லூரி நாட்களில், 2008  ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பெனோவிற்கு அழைப்பு வந்தபோது, தனது குடும்பத்தினரால் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என்பதை உணர்ந்த பெனோ,  மு.க.ஸ்டாலின் அவர்களை அணுகி தனது கோரிக்கையை வைத்துள்ளார். துணை முதலவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களும் அரசு சார்பில் ரூபாய் ஐந்து  லட்சம் வழங்கி அமெரிக்காவுக்கு இவரை அனுப்ப  உதவியதுடன், அவரது நண்பர் இல்லத்திலேயே பெனோவைத் தங்க வைத்து, பெனோவிற்குத் தேவையான உதவிகளை வழங்கவும்  ஏற்பாடு செய்துள்ளார்.  பெனோவின் உரை மாநாட்டில் அனைவரையும் கவருமாறு அமைய பெனோ நல்ல பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

    Beno Zephine6

    இதனை அவரே விவரிப்பதை இந்தக் காணொளியில் காணலாம்: -http://youtu.be/aGq9d9q2YBs

    சிறுவயதில் இருந்தே, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட  பெனோ,

    “எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்”

    என்று நமக்கு அறிவுரையும்  கூறுகிறார்.

    வல்லமையாளரை பா எழுதி பாராட்டுகிறார் கவிஞர் காவிரி மைந்தன்

    முழுமை பெற்ற மாந்தரிலே மூடர் பலர் இருக்கையிலே…
    புலன்குறைவாயிருந்தாலும் புரட்சிதான் புரிகிறாரே…
    இதை இவரால் செய்துவிட முடியுமா என்னும் கேள்விக்கு
    கதை முடித்து முதல் நபராய் வெற்றி பெற்று திகழ்கிறாரே!!

    இவர்தம் வளர்ச்சிக்காய் இதயங்கள் இரண்டிணைந்து இயங்குவதை..
    ஈரமுள்ள விழிமலரால் காணத்தான் முடிகிறதே…
    திறமைக்கு கண்ணில்லை.. முயற்சிதான் முக்கியம் என்பதை
    அருமையாய் உணர்த்திட்ட பெனோ செபீன் வாழியவே…

     

    தனது பிறவிக்குறையை ஒரு குறை என்று எண்ணி துவண்டுவிடாமல் சாதனை புரிந்து, அனைவருக்கும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று வாழ்ந்து காட்டிவரும் இளம்பெண்மணி பெனோ செபீன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

     

    படம், தகவல்கள்  செய்தித்தாள்கள் மற்றும் இணையத்திலிருந்து.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 9, 2014 

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திருமிகு. கீதா மதிவாணன்  அவர்கள்

    geetha mathivaanan

    சென்ற வாரம் வல்லமை வாசகர்களுக்காக இவர் வழங்கிய “உன்னைப் போலவே…” என்ற கவிதைக்காக இவர் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

    ஆஸ்திரேலியா வாழ் இந்தியத் தமிழரான கீதா மதிவாணன் தமிழிலக்கியங்களைப் படிப்பதிலும் படைப்பதிலும் ஆர்வம் மிக்கவர்.  மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார் பாடிய பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்றான “நெடுநல்வாடை“யின் இலக்கிய  நயத்தில் தன்மனதினைப் பறிகொடுத்தவர். அதன் விளக்கத்தை எளிமையான வரிகளால்  புதுக்கவிதை போன்ற பாணியில் இக்காலத் தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்;  அதனை அவர் தளத்தில் படித்து மகிழலாம் (http://geethamanjari.blogspot.com/2013/05/blog-post.html).  பல சிறுகதைகளும், கவிதைகளும், விமர்சனங்களும்  எழுதியுள்ள கீதா “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?”  என்ற 30 அத்தியாயங்களுக்கும் மேற்பட்ட நெடுங்கதையையும் (http://geethamanjari.blogspot.com/2011/06/1.html) எழுதியுள்ளார்.

    வல்லமை இதழிலும் சற்றேறக் குறைய மூன்று ஆண்டுகளாக கீதா தனது படைப்புகளை  வழங்கி வல்லமை வாசகர்களை மகிழ்வித்து  வருகிறார்.  கவிதை, சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, இலக்கியம், விமர்சனம் என இவரது எழுத்தாற்றல் பல வகைகளிலும் பரந்து விரிந்திருப்பது மட்டுமல்லாமல் அவற்றிற்காக பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார்.  வல்லமையின் கடித இலக்கியப் போட்டி முதற்கொண்டு,  பிற இதழ்கள் நடத்திய தைப்பொங்கல்  கட்டுரைப் போட்டிக்கான  பரிசு, சிறுகதை விமர்சனப் போட்டிக்கான பரிசு, சிறந்த வலைதள எழுத்தாளருக்கான  பரிசுகள் என்று பல பரிசுகள் வென்றுள்ளார். இவர் கவிதைகள் பெரும்பாலும் மனித நேயத்தை அடிப்படைக் கருத்தாகக் கொண்டு அமைந்துள்ளன. பெண்களின் நிலை, தன்னம்பிக்கை, மாற்றுத் திறனாளிகளின்பால் காட்டும் நேயம், ஒற்றுமை போன்ற கருத்துகளை உள்ளடக்கியவை இவரது கவிதைகள்.  இவ்வார வல்லமையில் இவர் எழுதிய கவிதை தனக்கெனப் போராட வழியற்ற, தனக்காக வாழும் உரிமை கேட்கத் திறனற்ற, கருவிலேயே அழிக்கப்படும் உயிர்களுக்காகக் குரல் கொடுக்கிறது….

    அந்தக் கவிதை வரிகள் இங்கே…

    உன்னைப் போலவே…

    (http://www.vallamai.com/?p=46228)


    ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை
    ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு!
    பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை
    ’ப்பூ’வென்று புறந்தள்ளிப் புழுதியிற் புரட்டுவதற்கு!

    உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி
    உயிர்க்குடத்தில் கருவானது!
    உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
    உடுத்தவும் உரிமையுடையது!
    உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
    சிந்திக்கவும் கூடியது!

    உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
    அணைக்கவும் தலைப்பட்டது!
    உன்னைப் போலவே உணரவும் புணரவும்
    மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!

    சாமான்யமாய் எண்ணிவிடாதே…
    சாபத்துக்கு ஆளாகிவிடும்
    சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!

    மனிதநேயத்திற்காக, கருச்சிதைவினை எதிர்த்து பிறக்காத குழந்தைகளும் உயிர் வாழவேண்டிய நியாயத்திற்காகக் கவிதை வடித்த கீதா மதிவாணன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • நான் எழுவேன் – கவிதை

    –தேமொழி

    நான் எழுவேன் !!!

    Maya Angelou

    கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ
    மொழிபெயர்ப்பு – தேமொழி

    நீ வரலாற்றில் என்னைப் பற்றி எழுதலாம்
    உனது கசப்பான சரடுகளை
    நீ என்னை மண்ணோடு மண்ணாகப் புதைக்கலாம்
    எனினும், நான் தூசு போல மேலெழுவேன்

    எனது துடுக்குத்தனம் எரிச்சலூட்டுகிறதா?
    எதனால் நீ சோர்வில் மூழ்கினாய்?
    வீட்டிலேயே எண்ணைக் கிணறுள்ள  செல்வச்
    சீமாட்டிபோல நான் வலம் வருவதாலா?

    நிலவினைப்போல கதிரவனைப் போல
    நிரந்தரமான அலைகளைப்போல
    மேலெழும் நம்பிக்கை போல
    நானும் மேலெழுவேன்

    என்னை மனமுடைந்தவளாகக் காண விருப்பமா?
    கவிழ்ந்த தலையுடன்  தாழ்ந்த கண்களுடன்
    தொங்கிய தோள்களையும் உறுதியிழந்து  உயிரை
    உருக்கும் அழுகையையும்  என்னிடம்  எதிர்பார்த்தாயா?

    எனது செருக்கு உன்னைப் பாதிக்கிறதோ?
    அதனைக் கண்டு நீ சோர்வு கொள்ளாதே
    ஏனெனில் நான் நகைப்பேன் என் வீட்டுத்
    தோட்டத்தில் தங்கச்சுரங்கம் வைத்திருப்பவள் போல

    நீ என்னைத் தாக்கலாம் உன் சொற்களால்
    நீ என்னை கண்டிக்கலாம் உன் பார்வையால்
    நீ என்னைக் கொல்லவும் செய்யலாம் உன் வெறுப்பால்
    எனினும், உயரும் காற்றாக நான் மேலெழுவேன்

    எனது கவர்ச்சி உன்னை வருத்துகிறதா?
    எனது துள்ளாட்டம் வியப்பளிக்கிறதா?
    மடியிலேயே வைரச் சுரங்கம் கொண்டவள் போல
    நானாடும் நடனம் வியப்பளிக்கிறதா?

    வரலாற்றின் அவமானக் குடில்களில் இருந்து
    நான் எழுவேன்

    வேரூன்றிப் போன கடந்த காலத்தின் வலிகளில் இருந்து
    நான் எழுவேன்

    கொந்தளித்து எழும்பும் அலைகளுடன்
    நானொரு பரந்து விரிந்த கருங்கடலாக
    இரவுகளின் திகிலையும் அச்சத்தையும் பின்தள்ளி
    நான் எழுவேன்

    புலரும் வேளையில் தெளிவான பொழுதில்
    நான் எழுவேன்

    என் முன்னோர் வழங்கிய பரிசுகளுடன்
    ஒரு அடிமை காணும்  கனவாக,  நம்பிக்கையுமாகவும்
    நான் எழுவேன்
    நான் எழுவேன்
    நான் எழுவேன்

     

     

    மாயா ஆஞ்சலூ கவிதைகளின் மொழி பெயர்ப்பு:
    நான் எழுவேன் !!! (Still I Rise – Poem by Maya Angelou)
    கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? (Caged Bird – Poem by Maya Angelou)
    தனிமையிலே … (Alone – Poem by Maya Angelo)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 2, 2014

     

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

    இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

    திரு. கேசவ் வெங்கட்ராகவன் அவர்கள்

    keshav-0

    இந்தியாவின் முன்னணி பத்திரிக்கையான ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் துணையாசிரியராகவும், கால்நூற்றாண்டிற்கும் மேலாக அந்த நாளிதழில் கருத்துப்படம் வரைபவராகவும் பணியாற்றிவரும் திரு. கேசவ் அவர்கள் இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சென்ற வாரம், இந்தியாவின் புதிய தலைமை அமைச்சராகப் பதவியேற்ற திரு. நரேந்திர மோதி அவர்களின் பதவியேற்பு விழாவினை ஒட்டிய கருத்துப் படங்களுக்காக இவர் இவ்விருதினைப் பெறுகிறார்.

    தன்னைப்பற்றிக் கூறுகையில் “Cartooning is my profession. Painting is my passion” என்றும் விவரிக்கின்றார் கேசவ். கேசவ் அவர்களும், அவரது வண்ண ஓவியங்களும் வல்லமை வாசகர்களுக்கு புதியதல்ல. இவரது நண்பரும், வல்லமை இதழில் ‘தினம் ஒரு திருமால் திருப்புகழ்’ எழுதும் கவிஞர், பலகலைகளிலும் திறமைபெற்ற திரு. கிரேசி மோகன் அவர்களின் பாடல்களுக்குச் சுவை சேர்த்து வருபவை கேசவ்வின் வண்ண ஓவியங்கள். இதிகாசங்கள், புராணக் கதைகளின் நிகழ்வுகளை நீர் மற்றும் எண்ணை வண்ண ஓவியங்களாக வரைவதில் மிக்க ஆர்வமும் திறமையும் கொண்டவர் இவர்.

    keshav-5

    தனது “அம்பாள் பஞ்சகம்” பதிவில் கேசவ் வரைந்த அழகிய “கற்பகாம்பாள்” கோட்டோவியத்தைப் பகிர்ந்து கொண்ட கிரேசி மோகன், “கல்லூரி நாட்களில்…இந்த ஓவியம் வந்தவுடன் என் அறைதான் கர்பக்கிருகம்….இந்த ஓவியம்தான் மூலவர் என்றாகிவிட்டது” என்று கூறுகின்றார்.

    இவரது 80 க்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்கள் வல்லமை இதழில் வெளியாகியுள்ளன. இவையாவும் வல்லமையின் முகநூல் பகுதியிலும் தொகுக்கப் பட்டுள்ளன [https://www.facebook.com/media/set/?set=oa.810805988930871&type=1]. கண்ணனை இவர் பற்பல கோணங்களில் வரைந்துள்ளார், ஒரே கோட்டில் துவக்கி முடித்த கண்ணனின் ஓவியங்கள் புதுமையாகவும் கண்ணுக்கு விருந்தாகவும் அமைந்தவை.

    அத்துடன் ஒருவரின் குணநலன்களை மிகைப்படுத்தி விவரிக்கும் பகடிப் படங்களும் (caricature) இவருக்குக் கை வந்த கலை. பற்பல இசைக்கலைஞர்களின் படங்களையும் இவர் வரைந்துள்ளார். அப்படங்களை Keshavcaricatures: http://keshavcaricatures.blogspot.com என்ற தளத்தில் காணலாம். இங்கு மாதிரிக்காக கே. ஜே. ஜேசுதாசின் படம் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது

    மேலும் இவரது படங்கள் கீழுள்ள வலைதளங்களிலும் …
    Kamadenu: http://kamadenu.blogspot.in/
    Srimadbhagavatham: http://bhagavatham.blogspot.com/?view=flipcard
    Keshav cartoons: http://keshavcartoons.blogspot.com/
    Keshav caricatures: http://keshavcaricatures.blogspot.com
    Keshav illustrations: http://keshavsketches.blogspot.com/

    சமூக வலைதளங்களிலும் …
    Twitter: https://twitter.com/keshav61/media
    Facebook: http://facebook.com/keshav.keshav
    Google Plus: https://plus.google.com/112286640734369272376/posts
    Pinterest: http://www.pinterest.com/keshav61/my-drawings/
    WordPress: http://keshavgallery.wordpress.com/
    இவரால் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

    இவ்வாறு பலவகைப்பட்ட ஓவிய பாணிகளில் இவர் தனது திறமையை வெளிப்படுத்தினாலும், தொழில்முறையில் இவர் இந்து நாளிதழில் கருத்துப்படம் வரைந்து வருபவர். கடந்த மே 26 ஆம் தேதி, இந்தியாவின் 15 ஆவது தலைமை அமைச்சராக பதவியேற்ற திரு. நரேந்திர மோதி அவர்களின் பதவியேற்பு பற்றிய கீழ் காணும் கருத்துப் படங்களை இவர் வரைந்துள்ளார்.

    Another swearing-in:- https://pbs.twimg.com/media/Bom5vjXIEAAFcIv.jpg

     

    Modi and the half-empty glass:- https://pbs.twimg.com/media/BoScJOPCMAIgIux.jpg

     

    The cabinet cube:- https://pbs.twimg.com/media/BoNJsVnCcAA3xpW.jpg

     

    Namo, Nomy, Economy:- https://pbs.twimg.com/media/BosACNbCUAAauQ1.jpg

    இந்திய மக்களின் மத்தியில் பெரிதும் சர்ச்சையைக் கிளப்பிய ஒரு நிகழ்வை, திரு. மோதி அவர்களின் பதவியேற்பு விழாவில் வரவேற்கப்பட்ட தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களின் பங்கேற்பை தனது கருத்துப் படம் மூலம் பிரதிபலித்ததற்காக கேசவ் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    மே 26, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

    இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

    திரு. பூவை. பி. தயாபரன் அவர்கள்

    dhayaparan

    சென்றவாரம் திரு. தயாபரன் அவர்களின் தொண்டைப் பற்றி இந்து நாளிதழின் “மனதுக்கு இல்லை வயது” பகுதியில் வெளியான செய்திக் குறிப்பைப் படித்து, மனம் நெகிழ்ந்து, “இதோ வல்லமையாளருக்காக ஒரு சிபாரிசு … திரு தயாபரனின் தயாள குணத்தைப் பாராட்டுவதா அல்லது திருவள்ளுவச் செல்வம் எப்படியெல்லாம் பரப்பப்படுகின்றது என்பதை நினைத்து மகிழ்வதா…” என்று அவரை இவ்வார வல்லமையாளராகப் பரிந்துரைத்தவர் நண்பர் திரு. திவாகர் அவர்கள்.
    தயாபரன்2

    திருக்குறள், எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்குமான ஒரு பொது மறை, இதை வழங்கியிருப்பது நம் தமிழ் மொழி மட்டுமே என்பதில் நம் அனைவருக்குமே பெருமை உண்டு. இந்தப் பெருமித எண்ணத்தினால் ஓர் அறக்கட்டளையும் அமைத்து, திருக்குறளின் பெருமையை அடுத்த தலைமுறையினரும் போற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தன்னார்வத் தொண்டு செய்பவர் பூவை. பி. தயாபரன் அவர்கள்.

    திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. தயாபரன் அவர்கள். இவர் தனது தமிழ்ப் பற்றுக் காரணமாக இன்றும் மாலை வேளையில் மாணவர்களுக்கு திருக்குறள், மூதுரை, ஆத்திச்சூடி, நல்வழி, கொன்றை வேந்தன் ஆகியவற்றை இலவசமாக கற்பித்து வருகிறார். அத்துடனின்றி, திருக்குறளுடன் அவரது மகன் திருமூலநாதன் பெயரையும் இணைத்து “திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை” என்ற அமைப்பை 1997-ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். இவரது மகன் திருமூலநாதனும் தனது நான்கு வயதிலேயே திருக்குறள் முழுமையையும் ஒப்பித்து 1996 இல் லிம்கா சாதனையாளர் நூலில் இடம் பெற்றவர்.

    தனது ஓய்வூதியத்தை அந்த அறக்கட்டளைக்கு நிதியாக்கி, அந்த நிதியில் கடந்த 17 ஆண்டுகளாக திருக்குறள் திருவிழா நடத்தி வருகிறார். அந்த விழாவில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 1,330 குறள்களையும் ஒப்பிக்கும் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கி இளைய தலைமுறையினரை திருக்குறள் கற்க ஊக்குவிக்கிறார்.

    1330 திருக்குறள்களையும் சீர்களைச் சிதைக்காமல், தடுமாற்றமின்றி, சரியான உச்சரிப்புடன் ஒப்பிப்பவர்களுக்கு தலா ரூ.1,500ம் அத்துடன் விருதும் வழங்கப்படுகிறது. வயதில் சிறியோர்களின் சிரமத்தைக் குறைக்க தவணைமுறையிலும், அதாவது முதல் தவணையாக 500 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.500 பரிசும் , பிறகு அடுத்த ஆண்டு மீதமுள்ள 830 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.830 பரிசு வாங்கிக்கொள்ளலாம் என்ற வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளில் இதுவரை 161 மாணவர்கள் ரொக்கப் பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளனர்.

    பரிசு பெறுவோருக்கு “திருக்குறள் செல்வன் அல்லது “திருக்குறள் செல்வி” என்ற விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரம் இப்போட்டி நடத்தப்பெறும். இந்தப் போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளியில் படித்து இடைநின்றோரும் பங்கேற்கலாம். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தமது பெயர் மற்றும் தன்விவரக் குறிப்பை “பூவை பி.தயாபரன், 25, திருக்குறள் தெரு, புள்ளம்பாடி, 621 711′ என்ற முகவரிக்கு ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் அஞ்சலில் அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் தகவலுக்காக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 97865 86992. இணையத்தள முகவரி: https://sites.google.com/site/thirumoolanathand/thirukkural-thirumoolanathan-arakkattalai

    தான் ஓர் எளிய வாழ்கை முறையினைப் பின்பற்றி வாழ்ந்தாலும், பிறரிடம் இருந்து எந்த நிதி உதவியும் பெறாது, திருக்குறளையும் தமிழையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பூவை. பி. தயாபரன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    மே 12, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

    இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

    திரு. கே.எஸ்.சுதாகர் அவர்கள்

    Untitleda

    ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர் திரு. கே.எஸ்.சுதாகர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றார். பொறியியல் பட்டதாரியான இவர் சுருதி, கதிரொளியான் என்னும் புனைபெயர்களிலும் எழுதுவதுண்டு.

    இலங்கை, இந்தியா, மலேஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் வெளியிடப்படும் பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. குறிப்பாகப் மரத்தடி, திண்ணை, திசைகள், பதிவுகள், கீற்று, ஈழநேசன், வல்லினம், அப்பால் தமிழ், அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, எதுவரை? வல்லமை எனப் பல இணைய தமிழ் மின்னிதழ் தளங்களிலும் இவரது கட்டுரைகளையும் கதைகளையும் இவர் எழுதியதால் தமிழ் இணைய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

    கே.எஸ்.சுதாகரின் சிறுகதைகள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றவை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஞானம் சஞ்சிகை, நார்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (ஆஸ்திரேலியா), பூபாள ராகங்கள் (இங்கிலாந்து), மரத்தடி இணையம், தென்றல் (அமெரிக்கா), தாய்த் தமிழ்ப்பள்ளி (ஆஸ்திரேலியா), வல்லமை உட்பட மொத்தம் 20 சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். ‘எங்கே போகின்றோம்’ ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத்தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான கே.எஸ்.சுதாகர் தற்போது இந்த அமைப்பின் நிதிச் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

    சென்றவாரம் இவர் வல்லமை வாசகர்களுடன் அவருடைய “அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்” என்ற சிறந்த கட்டுரை ஒன்றினைப் பகிர்ந்து கொண்டார்.

    அக்கட்டுரையில் கருத்தைக் கவர்ந்த ஒரு சிறு பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரு பகுதிகளாக வெளிவந்த இக்கட்டுரையின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 1

    அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 2

    ……பண்டைய தமிழர்கள் ஓடித் தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கு ‘வளரி’ என்ற ஆயுதத்தைப் பாவித்தார்கள். சங்க கால இலக்கியமாகிய புறநானூற்றுப் பாடலில் (பாடல் எண் 233) வரும் ‘திகிரி’ என்னும் பதம் இந்த ‘வளரி’யையே குறிக்கின்றது.

    பாடல் எண். 233 – பொய்யாய்ப் போக!
    பாடியவர் : வெள்ளெருக்கிலையார்

    “பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
    பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
    சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
    பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!”

    என்று செல்கின்றது அந்தப்பாடல்.

    ‘வளைதடி’ என்று தமிழில் சொல்லப்படும் இந்த ‘வளரி’ என்ற ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. இந்த வளரியைப் போன்று அவுஸ்திரேலியா ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம் ‘பூமராங்’ (boomerang) ஆகும். எனவே இந்த ஆயுதம் தமிழருக்கும் அவுஸ்திரேலியா ஆதிவாசிகளுக்கும் பொதுவானதாகின்றது. இது ஒருமுனை கனமாகவும் மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறை வடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படுகிறது. இதை ஆதிவாசிகள் ஒரு இலக்கை நோக்கி எறிவார்கள். இலக்கு தவறும் பட்சத்தில் அந்த பூமராங் எறிந்தவரின் கைகளுக்குத் திரும்பி வந்து விடும். இதை ஆதிவாசிகள் வேட்டையாடுவதற்கு உபயோகித்தார்கள்.

    மத்திய அவுஸ்திரேலியாவில் இருந்த பழங்குடிகளின் இனத்தின் பெயர்களாக (Tribes Names) – வாகை (Waagai), சிங்காலி (Chingali), இளம்பிறை (Ilpirra), வால்பாறை (Walpari), அருந்தா (Aruntha) போன்ற பெயர்கள் இருப்பதைக் காணலாம். Alice Springs போன்ற இடங்களில், சிறுசிறு குழுக்களாக பரந்த அளவில் ‘அருந்தா’ இனக்குழுவினர் உள்ளனர். மேலும் இவர்கள் விலங்குகள், மரங்களின் பெயர்களைக் கொண்டும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஏமு மனிதன் (Emu man), கங்காரு மனிதர்கள் (Kangaroo men), பிளம் மர மக்கள் (‘Plum tree’ people) போன்றவறை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

    பழங்குடி மக்களின் பெரும்பாலான உரையாடல்களில் தமிழின் உச்சரிப்பைக் காணலாம். ‘Ten Canoes’ என்ற அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அபரிஜினல் மக்களைப் பற்றிய படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம். அவர்கள் பாவிக்கும் சில சொற்களிற்கும் தமிழ்ச் சொற்களுக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம்.

    சிட்னியில் ‘விண்மலே’, ‘காக்காடு’ என இரு இடங்கள் இருக்கின்றன. ஆகாயமும் (விண்) மலையும் ஒட்டி நிற்பதைப் போல இருக்கும் அந்த அற்புதமான இடத்திற்கு winmalle (விண்மலை) என்று பெயர். ‘கா’ என்றால் சோலை, காடு என்றால் வனம். உண்மையிலே சோலைவனம் போல ஏராளமானவர்களைக் கவர்ந்திழுக்கும் அந்த இடத்திற்கு kakadu என்று பெயர் வழங்குகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் மதுர (Madura) என்று இன்னொரு இடம் இருக்கின்றது. இன்னொரு ஆதிவாசி இனம் அதிகம் பாவிக்கும் சொற்றொடர் ‘பூனங்கா யிங்கவா’. அதன் அர்த்தம் ‘பெண்ணே இங்கே வா’. ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதியே அவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்.

    ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனிதர்கள் தெற்குப்பக்க கடற்கரை வழியாக வந்து இந்தியாவினூடாக அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கக்கூடும் என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகின்றது. இந்தக்கருத்தை இந்தியாவிலுள்ள Dr Raghavendra Rao என்பவருடைய ஆய்வு உறுதி செய்கின்றது. இவரது குழுவின் மனிதவர்க்கசாஸ்திர ஆய்வின்படி (Anthropological Survey), திராவிடப்பழங்குடிமக்களிற்கும் தற்போதைய அபரிஜினல் இனத்தவருக்கும் பொதுவான DNA மரபணு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவர்களின் கருத்துப்படி 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் அபோர்ஜினமக்கள் தென்னிந்தியா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்து குடியேறியதாகவும், தற்போதைய அபரிஜினமக்களுக்கும் இந்தியக்குடிமக்களுக்கும் பொதுவான முன்னோர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்……..

    தமிழர்களின் பரவலுக்கு சான்றாக அமையக்கூடிய கருத்துக்களை தனது கட்டுரையின் வழியாகப் பகிர்ந்து கொண்ட திரு. கே.எஸ்.சுதாகர் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    மே 5, 2014

    வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

    **************************************************************************************

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா அவர்கள்

    **************************************************************************************

    வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா அவர்கள்.

    இலண்டனைச் சேர்ந்த 33 வயதான திரு. ராஜா கார்த்திக் கண்ட்டா என்பவர் பெரும்பான்மையான இந்திய இளைஞர்களில் தனிப்பட்டவராகப் பிரகாசிக்கிறார். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த மாநிலமான ஐதராபாத்திலிருந்து இலண்டன் சென்று அங்குள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்காகப் பணியாற்றுபவர். சமீபத்தில் (ஏப்ரல் 30, 2014 ) ஆந்திராவில் நடந்த மக்களவைத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்யும் பொருட்டு இந்தியா வந்திருப்பவர். உள்ளூரில் இருந்து கொண்டே தாய்நாட்டு நலனில் அக்கறையின்றி வாக்குப் பதிவு செய்யாமல் அலட்சியமாக இருக்கும் சிலருடன் ஒப்பிடும்போது இவர் வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து சொந்த மண்ணிற்கு வந்திருப்பது பாராட்டிற்குரியது.

    ராஜா கார்த்திக் கண்ட்டா இதற்கும் ஒருபடி மேலே சென்று, தனக்குச் சிறப்புச் சலுகையை எதிர்பார்த்து, மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிக்காமல் அனைவரையும் முந்த நினைத்த மத்திய அமைச்சரும், அரசியல் தலைவரும், நடிகருமான திரு. சிரஞ்சீவியின் செயலுக்கு வெளிப்படையாகத் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். இவரது எதிர்ப்பினால் வேறு வழியின்றி ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய வந்த சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு கூடியிருந்த மற்றவர்கள் போலன்றி, அவர் மத்திய அமைச்சர் என்ற பெரும் பதவியில் இருப்பவராயினும் அவரும் பொது மக்களைப் போலவே வரிசையில் நின்றுதான் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்று துணிச்சலாக அவரைத் தட்டிக் கேட்டு, ஒரு சிறந்த குடிமகனாகத் தன் கடமையைச் சரிவர நிறைவேற்றிய இவருடைய செயல் பாராட்டுதலுக்குரியது. இவரது இந்த செயலை ஆதரித்து வரிசையில் காத்திருந்த மற்றவர்களும் கரவொலி எழுப்பித் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியின் காணொளி சுட்டி இங்கே: http://youtu.be/LPyL5X8oThw

    Chiranjeevi got disciplined

    இது குறித்து செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த ராஜா கார்த்திக், “நான் அயல்நாட்டில் வசிக்கும் இந்தியன், எனது வாக்குரிமையை நிறைவேற்றவே இந்தியா வந்தேன். சிரஞ்சீவி முதியவரோ, மாற்றுத்திறனாளியோ அல்ல, அதனால்தான் நான் அவரிடம் உங்களுக்குச் சிறப்புச் சலுகை வேண்டுமா எனக் கேட்டு அவரை வரிசையில் நிற்கச் சொன்னேன், சிரஞ்சீவியை நான் மதித்தாலும் அவர் விதிமுறைகளை மீறுவதை அனுமதிக்க முடியாது,” என்று சொல்லியிருக்கிறார். இது போன்று அதிகாரத்திற்கு அஞ்சாது துணிச்சலுடன் இந்திய அரசியல்வாதிகளைக் கண்டிக்கப் பலர் முன் வர வேண்டும்.

    சிறப்பு மிக்க நடத்தையால், இந்திய இளைய சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக விளங்கிய திரு. ராஜா கார்த்திக் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    செய்திகள் பல செய்தித் தளங்களில் இருந்து திரட்டப்பட்டன.
    படம் உதவி: www.ndtv.com

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 28 , 2014

    வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

    **************************************************************************************

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள்

    **************************************************************************************

    pichinikkadu elango

    வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் திரு. பிச்சினிக்காடு இளங்கோ (https://www.facebook.com/pichinikkadu.elango.9) அவர்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தத் தமிழகக் கவிஞர் வல்லமை இதழ் வாசகர்களுக்கு மிகவும் பழக்கமானவர், இன்றுடன் இரண்டு ஆண்டுகளாக (April 27, 2012 இல் இவரது முதல் வல்லமை பதிவு) வல்லமையின் வாசகர்களை தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வரும் திரு. பிச்சினிக்காடு இளங்கோ ஒரு வேளாண்மைப்பட்டதாரி. இவர் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிராமத்தில் குக்கிராமமான பிச்சினிக்காட்டில் பிறந்தவர். திருச்சி அனைத்திந்திய வானொலி நிலையம், சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழம், சிங்கப்பூர் MDIS (Management development Institute of Singapore) என்கிற கல்வி நிறுவனம் எனப்பல நிறுவனங்களும் இவர்  பணியால் சிறப்புற்றிருக்கிறது. சிங்கைச்சுடரின் முன்னாள் ஆசிரியரான இவரது கவிதைகள் தமிழகத்தின் குமுதம், விகடன் போன்ற முன்னணி பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.

    கவிஞனாகிறேன்  என்ற கவிதையில் தான் எப்படிப்பட்ட கவிஞன் என்று தன்னைப்பற்றிக் கூறியுள்ளார்.

    இதை இதை
    எழுதவேண்டுமென்று
    எண்ணியதில்லை
    எண்ணுவதுமில்லை

    அது அது
    வந்து நச்சரிப்பதால்தான்
    எனது எழுதுகோல்
    உச்சரிக்கிறது …..

    இதுவரை இவரது பத்து கவிதை நூல்கள் வெளி வந்துள்ளன. இவர் நெடுங் கவிதைகளையும் எழுதுவதுண்டு. இவரது முதல் தொகுதியான “வியர்வைத்தாவரங்கள்” படித்து விட்டு மறைந்த டாக்டர் பாலா நெடுங்கவிதைகள் எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்திய கவிப்பேரரசு திரு. வைரமுத்து அவர்கள் “உங்களுடைய நெடுங்கவிதை நாவல்போல் உள்ளது” என்றும் பாராட்டியுள்ளார். இவாரத்தில் வல்லமை இதழில் வெளிவந்த இவரது கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன் என்ற கவிதையும் ஒருவகையில் நெடுங்கவிதையே.

    இவருக்கு ஒரு நூலைப் படிப்பது, பேருந்துப் பயணத்தில் ஒரு நிகழ்வைப் பார்ப்பது என அனைத்துமே கவிதைகளை எழுதத் தூண்டுகோலாக அமைந்து விட்டிருக்கிறது. அக்குறிப்புகளையும் இணைத்து கவிதைகளுடன் வழங்கியுள்ளார்.

    இம்முறை இராஜாஜியின் மகாபாரதம் படித்த பிறகு கர்ணன் மேல் கொண்டிருந்த இவரது எண்ணம் மாறிவிட்டிருக்கிறது. நாம் அனைவரும் நட்பிற்கு இலக்கணமாகக்  கர்ணனைப் புகழ்வோம். செஞ்சோற்றுக் கடன் தீர்க்க தனது தம்பிகளையும் எதிர்த்தவன் எனப் பாராட்டுவோம். ஆனால் இவரோ கர்ணன் பெரிய வள்ளலாகத்தான் இருக்கட்டுமே அதனால் என்ன? அவன் நியாயவான் அல்ல … என்று தனது வாதத்தை முன் வைக்கிறார்.

    துவைத வனத்தில் சித்திரசேனனிடம் துரியோதனன் சிக்கிய பொழுது கர்ணன் உதவாமல் தப்பி ஓடினான். தனக்கு நாடு தந்து அவமானம் துடைத்து அழகு பார்த்த துரியோதனனை தவிக்க விட்டவன் கர்ணன். அவன் நியாயத்தின் பக்கம் நின்றதே இல்லை. கௌரவர் சபையில் பாஞ்சாலிக்கு நடந்த கொடுமையில் பாஞ்சாலிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவன் விகர்ணன்தான். கர்ணன் துச்சாதனனுக்கு துகிலுரிக்கச் சொல்லி தூபம் போட்டவன். பாஞ்சாலிக்கு ஆதரவாகப் பேசிய விகர்ணனைக் கண்டித்தவன் கர்ணன்.  இந்தக் காரணத்தால் இக்கவிஞர் கர்ணனை மன்னிக்கத் தயாராக இல்லை.

    கௌரவர்களில் நூற்றில் ஒருவனாக இருந்தாலும் பாஞ்சாலிக்கு நடந்த அநியாயத்திற்கு உடன்படாத விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன் என்று தனது எண்ணத்தைக்  கவிதை மூலம் வடித்துள்ளார். இது போன்ற வேறு விதக் கோணம் கொண்ட விவாதம் இவரது கவிதையை சிறப்புறச் செய்கிறது.

    அக்கவிதையின் சுருக்கமான சாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்
    [முழுக் கவிதையின் சுட்டி: http://www.vallamai.com/?p=44441]

    எல்லாரும்
    எல்லா இடத்திலும்
    கர்ணனையே வியக்கிறார்கள்
    நான் வேறுபடுகிறேன்

    உலகத்தோடு
    நான்
    ஒத்துப்போக விரும்பவில்லை
    எல்லாரையும்போல
    ஓபோட
    விரும்பவில்லை

    கொடை
    கொடுக்கும் இடத்திலும்
    குலம்கேட்ட இடத்திலும்
    நான்
    கர்ணன்பக்கம்தான்

    திறன்காட்டவிடாமல்
    குலம்கேட்டது கொடுமைதான்
    அதற்குமேல்
    அவன்மேல்
    மரியாதையில்லை
    நான்
    அவன்பக்கமில்லை

    செஞ்சோற்றுக்கடன்
    தீர்த்ததிலும் பெருமையில்லை

    பாண்டவர் கெளரவர்
    மற்றும் வேடிக்கை
    பார்ப்பவர்
    நிறைந்த அவையில்
    பாஞ்சாலிக்காக
    யார்பேசினார்கள் நேர்மையாய்?

    பெண்ணெனப்
    பார்த்தவர் அதிகம்
    பெண்ணென்று
    பரிவுகாட்டியவர் யார்?

    சுதந்தரம் இழந்தவன்
    என்னை இழக்க
    என் சுதந்தரத்தை இழக்க
    என்ன உரிமையுண்டு?

    பாஞ்சாலி கேள்விக்கு
    அவை ஆண்மையற்று
    அன்று ஆமைபோல் இருந்தது

    பாஞ்சாலி பேசுவது
    சரியென்று குரல்கொடுத்த
    விகர்ணனைக்
    கண்டித்த கர்ணனைக்
    கண்ணைமூடிக்கொண்டு ஏற்பது
    ஏற்புடையதல்ல எனக்கு

    விகர்ணன்
    அவையில் சின்னவன்
    பெண்ணுக்காய்ப்பேசிய
    பெரியவன் அவன்தான்

    துச்சாதனனைத்
    துகிலுரியத் தூண்டியதே
    கர்வக்காரன் கர்ணன்தான்

    இனி எப்போதும்
    நான் விகர்ணன் பக்கம்

    இராமயணம் என்றால்
    நான்
    கும்பகர்ணன் பக்கம்

    காரணம்
    விகர்ணன்
    நியாத்தின் பக்கம்

    அவன்
    கெளரவர்களுக்கு
    கெளரவம் தந்தவன்

    அவன்
    நூற்றில் ஒருவனல்ல
    ஆயிரத்தில் ஒருவன்

    சிறப்பு மிக்க கவிதை ஒன்றை வல்லமை வாசகர்கள் படித்து மகிழ வழங்கிய திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • அன்பு மணிமொழிக்கு …

    அன்பு மணிமொழிக்கு,

    உன் அக்கா தேமொழியின் அன்புக் கடிதம். ‘அன்பு மணி’ என்றுதான் எழுத நினைத்தேன்…ஆனால் நான் உன்னை ‘மணி’ என்றழைத்தால், “மணி என்று நாய்க்குட்டிக்குத்தான் பெயர் வைப்பார்கள், நான் என்ன நாய்க்குட்டியா? மணிமொழி என்று கூப்பிடு” என்று நீ அதட்டுவதும் நினைவு வந்தது.

    letter to manimozhiநமக்குள் ஒரு வயதே வித்தியாசம் (சரியாக எனக்குப் பிறகு 500 நாட்கள் கழித்துப் பிறந்தவள் நீ) என்ற காரணத்தால் நம்மிருவருக்கும் சகோதரிகள் என்பதைவிடத் தோழிகள் என்ற அளவிற்கும் உறவு இருந்தது.

    எத்தனை எத்தனை இனிய நினைவுகள் நாம் வளர்ந்த காலத்தில்… என்னை நீ “ஏய்…தேமொழி” என்று அழைப்பதைக் கேட்டு நம் பாட்டிக்கு வருமே கோபம் அதையும் நான் மறப்பதற்கில்லை. அந்தக் கோபத்தில் தனது பொக்கை வாயில் இல்லாத பற்களை அவர்கள் கடிக்கும் பொழுது, அதைப் பார்த்து உனக்கு வருமே சிரிப்பு, அதையும் நான் மறப்பதற்கில்லை. அவர்களுக்கு கோபம் வரவழைக்கவே நீ மீண்டும் மீண்டும் “ஏய்.. தேமொழி” “ஏய்.. தேமொழி” என்றழைத்து அவர்களுக்கு எரிச்சலூட்டுவாய்.

    அவர்கள் எதிர்ப்பை நீ பொருட்படுத்தியதே இல்லை. அவர்கள் மட்டுமா நீ அவ்வாறு அழைப்பதை மாற்ற முயன்றார்கள். அப்பாவும்தான் முயன்று பார்த்தார்கள். அதற்காக அப்பாவும் முன்னுதாரணமாக இருக்க விரும்பி என்னை “அக்கா” என்று கொஞ்ச காலம் கூப்பிட்டுப் பார்த்தார்கள். ஆனால் நீயோ அல்லது தம்பியோ அவ்வாறு என்னை “அக்கா” என்று அழைக்காமல் பெயர் சொல்லித்தான் அழைத்தீர்கள். கடைசியில் “அக்கா” என்றழைத்தது அப்பா மட்டுமே என்ற ஒரு நிலை வந்ததும் அப்பாவும் அவர்களது முயற்சியை கைவிட்டு விட்டார்கள்.

    முதல்வர் ஜெயலலிதாவை எல்லோரும் ‘அம்மா’ என்றழைப்பது போல, உனது தோழிகள், நம் தம்பியின் நண்பர்கள், கல்லூரியிலும் பள்ளியிலும் பயின்ற காலத்தில் என்னைவிட இளைய மாணவர்கள் பலரும் அந்த நாட்களில் என்னை “அக்கா” என்றுதான் அழைத்தார்கள். பிறகு இப்பொழுது கூகிள் குழுமங்களிலும் என்னைப் பலர் அப்படி ‘அக்கா’ என்றுதான் அழைக்கிறார்கள்.

    இப்பொழுதெல்லாம் நாம் வளர்ந்தபொழுது நிகழ்ந்த பல இளம் பருவ நினைவுகளை அசைபோடுவது எனக்கு வாடிக்கையாகிவிட்டது. அம்மாவுக்கு இருந்த ஆசையில் நமக்கு ஒரே துணியில் சீருடை போன்று அணிவித்த கவுன்கள், பாவாடை சட்டைகளில் உலாவந்தது நினைவிற்கு வருகிறது. என்னதான் ஒரே போன்ற ஆடை உடுத்தினாலும் பம்ப்ளிமாசாக இருந்த…இருக்கும் நானும், காற்றில் பறந்துவிடும் அளவிற்கு எலும்பு மேல் தோல் போர்த்திய அளவிற்கு மெல்லிய உருவமான நீயும் ஒரே போன்று என்றுமே இருந்தில்லை. விவேகானந்தர் பாறைக்கு நாம் சென்ற பொழுது பலமாக வீசிய காற்றில் நீ தள்ளாடுவதைப் பார்த்த அப்பாவின் நண்பர், “மணி, அக்கா கையப் பிடிச்சிக்கோம்மா, காத்தில பறந்திடப் போற” என நம்மிருவரையும் ஒரே சமயத்தில் கலாய்த்ததும் நினைவு வருகிறது.

    உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் நாம் இருவரும் என்றுமே இரு துருவமாகத்தான் இருந்திருக்கிறோம். அம்மா என்னுடைய மனம் கல் என்று என்னைத் திட்டுவார்கள், கண்ணில் சுலபமாக கண்ணீர் வரவே வராது, அப்படியே உனக்கு உன் அப்பாவின் குணம் என்று சொல்வார்கள். ஆனால் நீ அம்மா இறந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவர்களைப் பற்றிப் பேச்சு வந்தால் பொசுகென்று அழுதுவிடுவாய், பொல பொலவென்று கண்ணீர் வரும், அம்மாவைப் போலவே மென்மையான, இளகிய மனம் உனக்கு.

    எத்தனை எத்தனை சுவையான இனிய இளம் பருவ நினைவுகள் நமக்கு. இருவரும் செவன்த் கிராஸ் முக்கில் இருக்கும் பாய் கடைக்கு ஓடிப் போய் பட்டம் வாங்குவோம். எனக்கு எப்பொழுதும் வயலெட் வண்ண பட்டம்தான் வாங்குவேன். உனக்கு “என்ன பாப்பா உனக்கு ருக்குமிணி கலர் பட்டமா?” என கடைக்கார பாயே கேட்டு சிரித்துக் கொண்டே வெளிர் நீலவண்ணப் பட்டத்தை உனக்குக் கொடுப்பார். அவருக்கும் உன் விருப்பம் நன்கு தெரியும். “ருக்குமணியே பர பர” என்றப் பாட்டு பிரபலமான காலம் அது. “அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா” என்று நாமிருவரும் சேர்ந்து நடனம் ஆடுவோம். டர்க்கி டவலை முந்தானை போல தோளில் போட்டுக் கொண்டு டீச்சர் விளையாட்டும் விளையாடுவோம்.

    உனக்கு எப்பொழுதும் நீதான் கடைசி வார்த்தை சொல்ல வேண்டும். எந்த விவாதம் என்றாலும் நீ சொல்வதுதான் கடைசி வார்த்தையாகவும் இருக்கும், last word freak என்று ஆங்கிலத்தில் அழைப்பார்களே, அது போல என்று நினைத்துக் கொள்வேன். அது போலவே நீதான் முதலில் வரவேண்டும் என்று செயல்படுவதைப் பலமுறை பார்ததுண்டு. ஒருமுறை, சிறுமியாக நீ பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது எதிர் திசையில் வேலையிலிருந்து அப்பாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். உடனே நீதான் முதலில் வீட்டிற்குப் போக வேண்டும் என்று வீட்டை நோக்கி ஓட, அப்பாவும் பதிலுக்கு விளையாட்டாக வீட்டை நோக்கி ஓட ஆரம்பிக்க, தெருவில் போனவர்கள் அந்தப் போட்டியைப் பார்த்து சிரிக்க, அது நல்ல வேடிக்கையாக அன்று இருந்தது.

    அது மட்டுமா, பள்ளி செல்லும் பொழுது வக்கீல் வீட்டுப் பெண் சித்திராவை வழியில் பார்த்தால் நீ ஓட்டமும் நடையுமாக முந்தப் பார்ப்பாய், அந்தப் பெண்ணும் சளைக்காமல் வேகமெடுக்க, பிறகு பள்ளிக்குச செல்வது உங்களிருவருக்கும் ஓட்டமும் நடையுமாகத்தான் இருக்கும். ப்ளஸ் டூ படிக்கும் பொழுது, உன் தோழி வாசுகிக்கு ஃபோன் போடுவாய். அந்தப் பக்கம் வாசுகி இந்த இந்தப் பாடம் படித்தேன் என்றால், உடனே போட்டி தொடங்கிவிடும். நீயும் முந்துவதற்ககாக விழுந்து விழுந்து படிப்பாய். அந்த ஆரோக்கியமான போட்டியினால் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்கும் சென்றாய்.

    ஒருமுறை அம்மா என்னிடம், இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்ததே என்று நீ பிறந்த பொழுது கொஞ்சம் வருத்தமாக இருந்ததென்றும், ஆனால் நீ அப்பாவுக்கு அசிஸ்டெண்ட் போல ஸ்டெத்தஸ்கோப் அணிந்து அப்பாவுடன் ஹாஸ்பிட்டல் வார்டில் சுற்றி வருவதைப் பார்த்துப் பிற்காலத்தில் பெருமையாகவும் இருந்தது என்றும் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு நம்மூவரிலும் அம்மா உயிருடன் இருக்கும்பொழுது அவர்களைப் பெருமைப்பட, மனம் மகிழ வைத்தது நீதான். இவ்வாறு மருத்துவம் படிக்க உனக்கு உதவியது படிப்பில் முந்த வேண்டும் என்ற உனது மனப்பான்மை.

    ஆனாலும் மணி, எல்லாவற்றிலும் முந்த வேண்டும் என்ற எண்ணம் உனது குணமாகிப் போனதில், இப்படி எங்கள் அனைவருக்கும் முன்னரே உலகை விட்டு மறையவும் முந்துவாய் என நான் நினைத்தும் பார்த்ததில்லை. மனம் ஒப்புக் கொள்ள இயலாத அதிர்ச்சிதான் இது. அயல் நாட்டில் வாழ்பவர்களின் இயலாமைகளில் ஒன்று வீட்டில் நடக்கும் பல நிகழ்வுகளில் பங்கு பெற இயலாமல் போவது. நான் உனது பட்டமளிப்பையும் பார்த்ததில்லை, திருமணத்திற்கும் வந்ததில்லை, உனது மகன் பிறந்தபொழுதும் செய்திதான் கேட்டேன், சென்ற 2013 அக்டோபரில் நீ இறந்த பொழுதும் வரமுடியாது போனது.

    வல்லமையில்’சிறுகதைப் போட்டி’ முடிந்து அதைத் தொடர்ந்து ‘புத்தக மதிப்புரை’ போட்டி பற்றிய அறிவிப்பு வந்த நேரம் அது. உன் நினைவாக வல்லமை இதழில் நானும் ஒரு கவிதைப் போட்டியை அறிமுகப்படுத்தி அதற்குப் பரிசு வழங்கினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. புத்தக மதிப்புரை போட்டி முடிவுக்கு வந்த பிறகு (அதில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது, ஆனால் அதை உன்னிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்பில்லாது போனது ஒரு சோகம்) வல்லமை இதழின் ஆசிரியர் பவள சங்கரியையும், நிறுவனர் அண்ணாகண்ணனையும் அணுகி என் வேண்டுகோளை வைத்தேன்.

    போட்டியை எனது எண்ணப்படி கவிதைப் போட்டியாக வைக்கலாமா? அதற்கு இசைக்கவி இரமணன் நடுவராக இருக்க சம்மதிப்பாரா? போட்டியில் மணிமொழி என்ற தலைப்பு இருக்க வேண்டும் என்று நான் வைக்கும் வேண்டுகோள் கவிதை எழுதுபவர்களில் சிந்தனை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாதா? ஏற்கனவே கதை, கட்டுரை போன்ற போட்டிகளை அறிவித்தாகிவிட்ட நிலையில் மீண்டும் அது போன்ற போட்டிகளையே தேர்ந்தெடுக்கத் தேவையா? என்றுப் பலப்பல கேள்விகளை வல்லமையின் நிர்வாகக் குழு அலசி ஆராய்ந்து, அதற்கு பல யோசனைகளும் முன் வைக்கப்பட்டன. அதில் அண்ணாகண்ணன் முன் வைத்த ‘கடித இலக்கியப் போட்டி’ குழுவினருக்குப் பிடித்துப் போய்விட அந்த வழியிலேயே தொடர்ந்து போட்டியும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் சொன்னால் நீ நம்ப மாட்டாய் மணி, அறுபதுக்கும் மேற்பட்ட “அன்புள்ள மணிமொழிக்கு” கடிதங்கள் போட்டிக்காக அனுப்பப்பட்டன. r u ok? LOL, how r u? என்று குறுஞ்செய்திகளில் பழகிப்போன நம் மக்கள் ஆர்வத்துடன் கடிதங்கள் எழுதினார்கள். கடித இலக்கியப் போட்டி என்ற ஒன்றை அறிவித்ததற்காக எனக்குப் பல பாராட்டுகளும் கிடைத்தன. ஆனால் அத்தனைப் பாராட்டிற்கும் உரியவர் நிறுவனர் அண்ணாகண்ணன் அவர்கள்தான். அவர் முன்மொழிந்த ‘கடித இலக்கியப் போட்டி’ என்ற யோசனை ஒரு நல்ல யோசனைதான். நானும் வல்லமை நிர்வாகக் குழுவினர் போட்டியை முன்னின்று நடத்தும் பொழுது இடையில் உண்மை விளம்பியாக, இதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர் அண்ணாகண்ணன் என்று அறிக்கைகள் விட்டுக் குளறுபடி செய்யக் கூடாது என்று பொறுமை காத்தேன்.

    போட்டியின் முடிவுகள் வெளியாகிவிட்டன. இனி இந்தத் தகவலை, பாராட்டிற்கு உரியவர் அண்ணாகண்ணன்தான் என்று நான் சொல்லிவிட்டால் எனக்கும் நிம்மதி. சிறந்த கடிதங்களை நடுவர் இசைக்கவி இரமணன் தேர்ந்தேடுத்தார். நான் நினைத்தது போலவே, அவரும் இத்தனை அருமையான கடிதங்களில் எவ்வாறு சிறந்த கடிதங்கள் என்று மூன்றையும், ஆறுதல் பரிசுகளுக்கு என்று மேலும் ஒரு மூன்றையும் மட்டும் தேர்ந்தெடுக்க முடியும், அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததாக இல்லையே என்று கருதி அவரும் மேலும் ஆறு சிறப்புப் பரிசுகளை வழங்கிவிட்டார். இதற்கும் மேல் போட்டிக்கு வந்த கடிதகளின் சிறப்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

    ஆனால் நீ எதையும் படிக்கப் போவதில்லை மணி, அதனால் அதற்காக நான் வருந்தப் போவதுமில்லை. பள்ளி நாட்களில் உனக்கு தமிழ் இரண்டாம் தாளில் கற்பனைக் கட்டுரையாக ‘இரயில் தனது வரலாறு கூறுதல்” பற்றி எழுதச் சொன்னாலே உனக்கு கற்பனை வராமல் அழுகைதான் வரும் என்பது எனக்குத் தெரியும். இது போன்ற இலக்கியப் போட்டிகளில் என்றும் உனக்கு ஆர்வம் இருந்ததில்லை. கதை படிக்கும் பொழுது, பெரிய பெரிய பத்திகளாக இருந்தால், அவற்றைத் தவிர்த்துவிட்டு, தாவித் தாவி மேலே படிப்பாய். பின்னர் முடிவைப் படித்த பிறகு கதை உனக்குப் புரியாமல் போகும். நானும் தம்பியும்தான் உனக்குக் கதையினைச் சொல்லி விளங்க வைக்க வேண்டி வரும், எனக்கு அது மறக்குமா?

    நீண்ட கட்டுரைகள், கடிதங்கள் உனக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் நான் எழுதும் மிக நீண்ட கடிதம் இது. நீதானே சொல்லுவாய், “சும்மா நீள நீளமாகப் பேசிக்கொண்டே இருக்காதே, நீ சொல்ல வேண்டியதை எல்லாம் எழுதி ஒரு புத்தகமாகப் போடு, எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது படிக்கிறேன்,” என்று அதுவே என் நினைவில் இப்பொழுதும் இருக்கிறது. அதனால் நான் நினைப்பதை நீண்ட கடிதமாகவும் எழுதிவிட்டேன், நான் ஒரு சிறுகதைப் புத்தகமும் எழுதி வெளிவந்துவிட்டது, ஆனால் உனக்குத்தான் இப்பொழுது இவற்றையெல்லாம் படிக்க நேரமில்லாது போய்விட்டதே என்ற ஆற்றாமையும் வருகிறது. என்றும் என் நினைவில் நீங்காதிருப்பாய் என் அன்பு மணிமொழி.

    உன் அன்பு அக்கா,
    தேமொழி

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 21 , 2014

    வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

    **************************************************************************************

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. எம்.மணிகண்டன் அவர்கள்

    **************************************************************************************

    வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் மதுரையைச் சேர்ந்த, டி.வி.எஸ்., சமுதாயப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்றுனராக (a demonstrator at TVS Educational Research and Development Centre’s Community College) இருக்கும் திரு. எம். மணிகண்டன் ஆவார். மணிகண்டன், கோவில்பட்டியை அடுத்த, நாலாட்டின்புத்தூரைச் சேர்ந்தவர். சென்ற திங்களன்று (ஏப்ரல் 14, 2014) திருநெல்வேலி, சங்கரன்கோவில் அருகில் குத்தாலப்பேரியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஹர்ஷன் என்ற மூன்று வயதுச் சிறுவனை மீட்டதில் இவருக்கு கணிசமான பங்கு இருக்கிறது. இவர் வடிவமைத்த, இவரது கண்டுபிடிப்பான ஆழ்துளைக் கிணற்றுக் கருவியுடன் (‘Borewell Robot’), இவரும் இவரது மீட்புப் பணிக் குழுவினரும் விரைந்து சென்று சிறுவனை மீட்டுள்ளார்கள். இவருடன் காவல்துறை, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தீயணைப்புப் படையினர், ஊர் மக்கள், மாவட்ட ஆட்சியாளர் வரை தளத்தில் இருந்து ஒருங்கிணைந்து பணியாற்றியதில் சிறுவன் உயிருடன் மீட்கப் பட்டிருக்கிறான். அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த மீட்புப் பணியை வெற்றி பெறச் செய்ததில் மணிகண்டனுக்கும் அவரது கண்டுபிடிப்புக்கும் பெரும் பங்கு உண்டு.

    http://youtu.be/WAwRcJoKUpU

    மீட்புப்பணிக் காணொளி: http://youtu.be/WAwRcJoKUpU

    இந்தியாவில் குழந்தைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்வதில் இந்த நூற்றாண்டில் பற்பல புதுமையான நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று சில குழந்தைகள் நிகழ்த்தும் சாகச நிகழ்ச்சியான ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து எழுவதும் ஒன்றாக இடம் பெற ஆரம்பித்துள்ளது. அக்காலம் போல பிள்ளைத்தமிழ் பாடும் வழக்கம் இருந்திருந்தால் பத்து பருவங்களையும் இற்றைப்படுத்தும் பட்டியலில் குழந்தைகளின் இந்த வீர விளையாட்டையும் ஒன்றாகச் சேர்க்கலாம் போலிருக்கிறது.

    விவசயாத்திற்கு நீர் பற்றாக்குறையும், தொழில்நுட்ப வளர்ச்சியும் பல விவசாயிகளை ஆழ்துளைக் கிணறு தோண்டச் செய்கிறது. அவ்வாறு தோண்டிய ஆழ்துளைக் கிணறுகளில் நீரில்லாவிட்டால் அதனைக் கையோடு மூட வேண்டியதும் தோண்டிய நிறுவனங்களின் கடமையாக இருக்க வேண்டும் என்பது பொது அறிவுக்கு உட்பட்டது. அதைச் செய்யாத நிறுவனங்களின் தொழில் உரிமம் பறிக்கப்படும் என்பதைச் சட்டம் போட்டு நடவடிக்கை எடுத்ததாக இதுவரை தெரியவில்லை. சிறு குழந்தைகளும் வழக்கம் போல் கண் மூடி கண் திறப்பதற்குள் அங்குமிங்கும் ஓடி எளிதில் விபத்துகளைச் சந்திப்பார்கள்.

    இவ்வாறு நேரும் விபத்துகளில் ஏறத்தாழ ஒன்றரை அடி விட்டமுள்ள இதுபோன்று திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து விடுவதும் ஒன்றாகிப் போய் விட்டது. உடனே அவசர நடவடிக்கைகள் துவங்கி, சில நேரங்களில் இராணுவத்தையும் உதவிக்கு அழைக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிடுகிறது. தொலைக்காட்சிகளில் பரபரப்புச் செய்திகளும், நேரடி ஒளிபரப்புகளும் வாடிக்கையாகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நல்லதொரு முடிவாக அனைத்துக் குழந்தைகளும் உயிருடன் மீட்கப்படுவதுமில்லை என்பதைக்  கீழ் வரும் படங்களில் சில காண்பிக்கும்.

    borewell accidents

    பத்தாண்டுகளுக்கு முன்னர் மணிகண்டனின் மகன் சிறுவனாக இருந்தபொழுது இது போன்ற விபத்து ஒன்று நடக்க இருந்து, தடுத்துக் காப்பாற்றிய மணிகண்டனுக்கு இது போன்ற கருவி ஒன்றினை வடிவமைக்க எண்ணம் எழுந்ததாகவும், தனது சொந்த செலவில் வடிமைத்த பிறகு அதனை மேலும் செம்மைப்படுத்த இவர் பணியாற்றும் டி.வி.எஸ். கல்வி ஆராய்ச்சி மையம் உதவியதாகவும் கூறுகிறார் திரு. மணிகண்டன்.

    இனி மணிகண்டனது ஆழ்துளைக் கிணற்றுக் கருவி வேலை செய்யம் விதத்தை அவரே விளக்குவது இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    manikandans borewell robotஆழ்துளைக் கிணற்றில் ஆயிரம் அடி ஆழத்தில் குழந்தைகள் சிக்கி இருந்தாலும் கூட, இக்கருவியின் உதவியால் மீட்க முடியும். `12 வி’ பேட்டரி, டிசி மோட்டார் மூலம் இந்த கருவி இயங்குகிறது. குழந்தைகளைப் பற்றிப்பிடிக்கும் வகையிலான இயந்திர கை தானாக சுருங்கி விரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மின்சப்ளை இல்லாத இடங்களில் பேட்டரி மூலமும் இதை இயக்க முடியும். குழந்தையை மீட்டு வரும்போது, குழந்தை நழுவி விடாமல் இருக்க மடங்கும் விரல்கள் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

    மொத்தம் 2 அடி உயரம், 5 கிலோ எடை உள்ள இந்த இயந்திரத்தை எங்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். குழிக்குள் சிக்கிய குழந்தையை அழுத்தும்போது ஏற்படுத்தும் அழுத்த அளவை துல்லியமாக அறிந்து கொள்ள, `பிரஸ்ஸர் கேஞ்ச்’ அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

    குழிக்குள் தவறி விழுந்த குழந்தையின்மீது மண் சரிவதால் மீட்புப் பணியில் ஏற்படும் சிரமங்களை நீக்க மண் அள்ளும் இயந்திரம், வாக்குவம் பம்ப் ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை ஐ.ஐ.டி. இந்த இயந்திரத்துக்கு 2006-ல் விருதும், அங்கீகாரமும் அளித்திருக்கிறது. 2007-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் குடியரசு தினவிழாவில் நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது.

    இக்கருவியை மாவட்டம்தோறும் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

    குறிப்பாக தீயணைப்பு நிலையங்கள் தோறும் இக் கருவியை வைத்துக்கொண்டால், மீட்பு பணிகளுக்குப் பயன்படுத்தி குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.

    இக்கருவியை யார் வேண்டு மானாலும இயக்க முடியும். இதைத் தயாரிக்க ரூ. 60,000 வரை தான் செலவாகும்.

    இது ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி

    அரியதொரு கண்டுபிடிப்பால் உயிர்காக்க உதவிய எம்.மணிகண்டன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    செய்திகள் வழங்கிய ‘தி இந்து’ நாளிதழுக்கு நன்றி [http://tamil.thehindu.com/tamilnadu/article5913951.ece]

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 14 , 2014

    வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

    **************************************************************************************

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு சொ.வினைதீர்த்தான் அவர்கள்

    **************************************************************************************

     

    vinay3முத்துச்சிவிகை; முத்துக்கள் இழைத்து அலங்கரித்த பல்லக்கு. இதனை ஒருவரை பெருமை படுத்த வழங்கியதாக தமிழ் இலக்கியங்கள் அறிவிக்கின்றன. செங்குந்தர் குலத்தைப் போற்றி ‘தக்கயாகப் பரணி’ இலக்கியம் படைத்த ஒட்டக்கூத்தருக்கு செங்குந்தர்கள் மனம் மகிழ்ந்து முத்துச்சிவிகை அளித்து அவரைப் பெருமைப் படுத்தினார்கள் என்பது வரலாறு.

    பெண்ணாடகம் சென்று வழிபட்ட பின்னர் நெல்வாயில் அரத்துறையைத் தரிசிக்க திருவுள்ளம் கொண்டார் திருஞானசம்பந்தர். செல்லும் வழியில், மாலைப்  பொழுதாகிவிட, களைப்பு மேலிட திருமாறன்பாடியில் இரவு தங்கினார். அவ்வூர்வாசிகளின் கனவில் தோன்றிய சிவன், “எனது பக்தன் சம்பந்தன் களைப்பு மேலிட சத்திரத்தில் உறங்குகின்றான். அவனுக்காக எமது கோயிலில் முத்துச்சிவிகை, முத்துச் சின்னம், முத்துக்குடை முதலியவற்றை அளித்துள்ளோம். அவற்றை அவனுக்கு வழங்கி என்னிடம் அழைத்து வருக,” என ஆணையிட்டார். விழித்தெழுந்த அவ்வூர் மக்கள் கனவில் தோன்றிய சிவன் உரைத்தபடியே கோயிலில் முத்துச்சிவிகை, குடை, சின்னம் ஆகியவை இருக்கக் கண்டு வியந்து, அவற்றுடன் சென்று சம்பந்தரை வரவேற்றதாக திருமாறன்பாடி தலவரலாற்றில் கூறப்படுகிறது.

    இந்த திருமாறன்பாடி நகரில் உள்ள அருணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 170 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தும் வாய்ப்பு அமைந்தது இந்த வார வல்லமையாளர் திரு. சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு.

    vinay2காரைக்குடியைச் சேர்ந்த திரு. வினைதீர்த்தான் அவர்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தவர். பணி ஓய்விற்குப் பிறகு, தனது பொழுதை பயனுள்ள வகையில் பல தன்னார்வப் பணிகளில் செலவிட்டு வருகிறார். அவற்றில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டது போல பள்ளி மாணவர்களுக்கு தன் முன்னேற்றப் பயிலரங்கங்கள் நடத்துவதும் ஆகும். இம்முறை இப்பள்ளியில் பயிலரங்கம் நடத்திய பொழுது மாணவச் செல்வங்களின் மனதில் பதியும் வண்ணம் அவ்வூர் தல வரலாற்றையும், முத்துச் சிவிகையையும் தொடர்பு படுத்தி உரையாடி இருப்பது அவர் வல்லமையில் பகிர்ந்து கொண்ட அவரது கட்டுரை [http://www.vallamai.com/?p=44002] அறியத் தருகிறது. அதில், முத்துச்சிவிகையை அடைவதை குறிக்கோளை அடைவதுடன் ஒப்பிட்டுள்ளார். இதன் பிறகு அவ்வூரில் பயிலரங்கத்தில் பங்கேற்ற மாணவர்கள் எக்காலமும் இப்பயிலரங்கம் குறிப்பிட்டதை மறக்க வழியுண்டா? இனி இப்பயிற்சிகளைப் பற்றி அவரே விவரித்ததை வழங்குவதே பொருத்தமாக இருக்கும். அக்கட்டுரையில் இருந்து சில வரிகள் கீழே…..

    “பயிலரங்கில் முதற் செய்தியாகத் தல வரலாறைப் பகிர்ந்துகொண்டு முயற்சியும் ஆர்வமும் இருந்தால் என்ன நிகழும் என்பதற்கு இத்தலமே ஒரு காட்டு என்று சுட்டினேன். முத்துச்சிவிகை என்பது என்ன? அது குறிக்கோளை எளிதல் அடைய உதவும் ஒரு சாதனம். அந்த ஊர்தி நமக்குத் தருவது குறிக்கோளை நோக்கியான வேகமான நகர்வு. குடையும், பொற்சின்னமும் குறிப்பது ஒரு உயரிய, கௌரவ, சமுதாய அடையாளம். முயற்சியும், பயிற்சியும், கொண்ட குறிக்கோளில் தணியாத ஆர்வமும் மாணவர்களிடமிருந்தால் அவர்களுக்குச் சமுதாயத்தில் ஏற்றமும், கௌரவமும், வாழ்வில் உயர்வும் ஏற்படுமென்பதற்குத் திருஞான சம்பந்தர் வாழ்க்கை நிகழ்வை மனதில் எண்ணி அயராது முயல வேண்டுமென்றேன்.

    அடுத்து அந்தக் குறிக்கோளின் வரையறையை S M A R T வழியில் விளக்கிக் குறிக்கோளை நிர்ணயித்தலை எடுத்துக்கொண்டேன். 4 “M” Goals – Micro, Mini, Middle, Mega goals – 1.ஒவ்வொரு நாளுக்கான செயல்பாடுகள் 2. பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் எடுத்தல் 3. அடுத்துப் பட்டப் படிப்பு வாய்ப்புக்கள், படிப்பினைத் தெரிவு செய்தல், பட்டம் பெறல் 4. அடுத்த நீண்ட காலக் குறிக்கோளான தொழிலும் வாழ்வும் சமுதாயப் பணிகளும் என்ற நோக்கில் பயிற்சி அமைந்தது.

    S W O T – பலம், பலவீனம், வாய்ப்புக்கள், தடங்கல்கள் என்ற வகையில் மாணவச் செல்வங்களை எண்ணிப் பார்க்கச் செய்தேன். அவர்களைத் தன் திறமைகளையும், துணையாக அமையக் கூடியவர்கள் உதவக் கூடிய வழிகளையும் பட்டியிலிட வைத்தேன். பலவீனங்களையும் பட்டியலிட்டார்கள். பலத்தைப் பெருக்கும் வழிகளும் பலவீனத்தைத் தவிர்க்கவுமான வழிகளும் அவர்களே கூற ஆராயப்பட்டன. பலம் பெருகும்போது சந்தர்ப்பங்கள் “மடி தற்றித் தான் முந்துறும்” என்பது போல வந்தெய்துகின்றன என்பதை உணர்த்தினேன்.”

    ஓய்வு பெற்றாகிவிட்டது, இனி சாய்வு நாற்காலியில் சாய்ந்தமர்ந்து, தினசரிகள் சில படித்து, அரட்டைகள் பல அடித்து பொழுதைக் கழிக்கலாம் என்று இயல்பாகத்  தோன்றும் எண்ணத்தைத் தவிர்த்து, ஓய்வு காலத்தை பயனுள்ளதாக மாற்றி வாழ்ந்து வரும், தனது செயலின் வழியாக பிற பேரிள மக்களுக்கு முன்மாதிரியாகவும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் செயலாற்றி வரும் சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 7 , 2014

    வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

    **************************************************************************************

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள்

    **************************************************************************************

    M.Rishan Shareef

    எம்.ரிஷான் ஷெரீப் இணையத் தமிழ் வாசகர்களை தொடர்ந்து தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வருபவர்.

    இலங்கையின் மாவனல்லையைச் சேர்ந்த எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள் கவிஞர் என்ற வகையில் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், ‘வீழ்தலின் நிழல்’ என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தாலும், அவரைக் கவிஞர் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் நம்மால் அடக்க இயலாது. இத்தமிழ் எழுத்தாளர் ஒரு கவிஞர் மட்டுமின்றி ஒரு சிறந்த ஊடகவியலாளரும் ஆவார்.

    எம்.ரிஷான் ஷெரீப் தனது படைப்பாற்றலை கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, புகைப்படம், ஓவியம், எனப் பல துறைகளின் வழியாகவும் வெளிப்படுத்தி வருபவர். இதுவரை இவரது படைப்புகள் இலங்கையிலிருந்து வெளிவரும் இதழ்கள், தமிழகத்தின் பிரபலமான இதழ்கள், மற்றும் மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளின் பத்திரிக்கைகள், இணைய இதழ்கள் எனப் பலவற்றிலும் வெளிவந்துள்ளன. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இவரது மொழிபெயர்ப்பு நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருதும் கிடைத்துள்ளது.

    இவரது பலதுறை பங்களிப்புகளின் அடிப்படையாக உள்ள ஓர் இழை சமுதாய அக்கறை என்பதாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் வல்லமையில் நூலறிமுகக் கட்டுரைக்காக இவர் தேர்ந்தெடுத்த நூல் அன்றைய இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக பலியிடப்பட்ட மக்களைப்பற்றிய ‘சயாம் – மரண ரயில் பாதை’யைப் பற்றி இருந்தது என்றால், இவர் எழுதும் செய்தி விமர்சனக் கட்டுரை பள்ளியில் அவமானப்படுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததற்கு பள்ளி நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில் அமைந்தது. இவையாவும் வல்லமை வாசகர்களுடன் ரிஷான் ஷெரீப் முன்னர் பகிர்ந்து கொண்டவையே.

    ஆனால் இவ்வாரம் ரிஷான் ஷெரீப் மீண்டும் அவரது வழக்கமான கவிஞர் என்ற கோணத்தில் தன்னை இருத்திக் கொண்டு இரு சிறப்புமிகு கவிதையை வல்லமை வாசகர்களுக்கு வழங்கியுள்ளார். “பனிபடர்ந்த இரவின் காலம் எனது கைவிரல்களை ஒற்றியொற்றி உன் நேசத்தைச் சொல்லிற்று” என்று மனதிற்கு இதம் தரும் சூழலில் அறிமுகமாகி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட தோழமை ஒன்று தன்னை விட்டு விலகித் தொலைதூரம் சென்றுவிட்ட சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘நுழைதல்’, ‘விலகல்’ என்ற இரு கவிதைகள் மூலம் உறவை இழந்த பின்னர் மனதில் தோன்றும் வெறுமை உணர்வை அருமையாக வடித்துக் கொடுத்துள்ளார். ஒரு சில வரிகள் கீழே….

    நுழைதல்
    http://www.vallamai.com/?p=43635

    எல்லாம் கடந்துவிட்டன
    நேற்றிருந்த மேகத்தைப் போல
    இக் கணத்து நதி நீர் போல
    உனது பயணங்கள் முடிவற்றன
    எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன
    ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து
    அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது
    பாளங்களாய்க் கனன்றெரிந்து
    உன் வாழ்வின் கதைகள் பேசிற்று
    உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட
    தெப்பமென நனைந்தேன்

    விலகல்
    http://www.vallamai.com/?p=43769

    பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
    புற்றெழுப்பும் கரையான்களைக்
    கொத்த வரும் சாம்பல்குருவிகளை
    பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
    வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்
    நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
    எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
    வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
    விடிகாலையில்
    அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
    தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
    உன்னைப் போலவே

    இவ்வாறு ஈழத்தமிழர் ஒருவர் பிரிவுத் துயரக் கவிதை வடிக்கும் பொழுது, அந்த உறவு பிரிந்து சென்றுவிட்ட காரணம் புலம் பெயரவேண்டிய கட்டாயச் சூழலோ என்றும் தோன்றுகிறது. இவர் வெளிப்படுத்தும் ஏக்கம் உண்மையில் எத்தனை மக்களின் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதோ என்ற கலக்கத்தையும் ஏற்படுத்தும் கவிதை வரிகள் இவை.

    இது போன்ற உணர்வு மிகுந்த இவரது கவிதை வரிகளைப் படிக்கும் பொழுது, ரிஷான் ஷெரீப் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒரு சமுதாய அக்கறை கொண்ட துடிப்புமிக்க இளைஞர் ஒருவர், வருங்கால உலகம் பற்றி நினைக்கும் பொழுது நமக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத்  தெரிபவர் என்ற எண்ணமே. இவ்வாறு தனது எழுத்துப் பணியின் மூலம் இக்கால இளைஞர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழும் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    மார்ச் 31, 2014

    வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

    **************************************************************************************

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  முனைவர். ராஜம் ராமமூர்த்தி அவர்கள்

    வீ எஸ் ராஜம்

    **************************************************************************************

    முனைவர். ராஜம் பற்றி அறியாத இணையத்தமிழர்கள் இருப்பது அரிது.

    தமிழ் இலக்கணம் பயிற்றுவிக்க வலைத்தளம் (http://www.letsgrammar.org) ஒன்று உருவாக்கி இன்றும் தமிழ்ப்பணி செய்பவர் இவர்.  அத்துடன் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம், உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகம், முனைவர். ராஜமும், இவருடன்  இணைந்து பணியாற்றிய மற்றொரு ஆராய்ச்சியாளரும் உருவாக்கிய ஆய்வு நூலை வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது ( The Earliest Missionary Grammar of Tamil, Harvard Oriental – Series 76, Fr. Henriques’ Arte da Lingua Malabar: Translation, History, and Analysis, Translated with commentary by Jeanne Hein and V. S. Rajam – http://www.hup.harvard.edu/catalog.php?isbn=9780674727236&content=bios).

    முனைவர். ராஜம் அவர்களது சிறப்பு, அவர் பல துறைகளில் (கணிதம், கணினி தொழில் நுட்பம், தமிழிலக்கியம்) வல்லவராக இருப்பது.  அத்துடன் அத்திறன்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழ் வளர்சிக்காக தனது பங்கினை சிறப்புற அளிப்பது.

    இவர் திறமையை நான் சொல்லுவதை விட சமீபத்தில் மற்றொரு தமிழறிஞர் முனைவர். ராஜம் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டதை (கற்றாரைக் கற்றாரே காமுறுவர் அன்றோ?) சொல்வதில்தான் அவரது சிறப்பு மேலும் சிறப்புற விளங்கும். இந்த வாரம் சென்னையில் நடைபெறும் “கணிணித்தமிழ் வளர்ச்சி – இரண்டாம் மாநாடு” நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் முனைவர். பேராசிரியர். ந. தெய்வசுந்தரம் அவர்கள், முனைவர். ராஜம் பற்றிக் குறிப்பிட்டது இங்கு  உங்கள் பார்வைக்கு…

    “பேராசிரியை இராசம் அவர்களுக்கு தமிழாய்வு உலகில் ஒரு சிறந்த இடம் உண்டு. குறிப்பாக, தமிழ்க் கணினிமொழியியல் துறையில் மிகச் சிறந்த இடம் உண்டு. இந்த ஆய்வில் ஈடுபட்ட முதல் ஆய்வாளர் என்றுகூட அவர்களைச் சொல்லலாம். பலருடைய பங்களிப்பு வெளியுலகில் தெரியாமல் இருந்துவிடுகிறது. அவர்கள் பெயரெல்லாம் ஆய்வுலகில் நிலைக்க நாம் வழிசெய்யவேண்டும்.”

    –பேராசிரியர். ந. தெய்வ சுந்தரம்

    ஆம், இது உண்மை. பேராசிரியர். ந. தெய்வசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டது போல முனைவர். ராஜம் கணிணித்தமிழ் வளர்ச்சியில் ஒரு முன்னோடி. இவர் 1978-இலிருந்து தமிழைக் கணினிக்குள் புகுத்த வேண்டிப் பல கணினி மொழிகள் படித்துள்ளார்  (APL,  C, C+, FORTRAN, Java, Javascript, LISP, Macro-11 [Assembly Language], Pascal, PHP, SQL, XML, …). அவரது பல்கலைகழக நாட்களில், அதாவது ஒரு முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கும் முன்னரே தொடங்கிவிட்டது இவருடைய கணிணித்தமிழ்ப்பணி.

    தமிழிலக்கிய நூல்களில் நாம் ஒரு சொல்லைத் தேட வேண்டியிருப்பின்,  நூலின் பின்பகுதியைப் புரட்டி அங்கு கொடுக்கப் பட்டுள்ள சொற்களின் பட்டியலில் அச்சொல் எங்கு வருகிறது என்று தேடுவோம். பிறகு அப்பக்கத்தைத் திருப்பி அச்சொல் எவ்வாறு, என்ன பொருளில் குறிபிடப்பட்டுள்ளது என்று தொடர்ந்து ஆராய்வோம். இவ்வாறு  தமிழில் சொல்லடைவு, தொடரடைவு இரண்டும் நமக்குத் தேவை (சொல்லடைவு எனில் ஒரு பாடலில் உள்ள சொற்களையும், அப் பாடலில் ஒவ்வொரு சொல்லும் வருமிடங்களையெல்லாம் அகரவரிசையில் தொகுத்துக்கூறுவது – Word Index எனலாம்.  தொடரடைவு  எனில், ஒவ்வொரு சொல்லுடன், அது வரும் அடிகளையே கொடுப்பது – concordance)

    காட்டாக, இராமாயணத்தில் ‘அங்கதன்’ என்ற சொல் வருமிடங்கள்…

    அங்கதன் (41 இடங்களில் ஒரு சில …)

    அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கிட்:9 33/3
    அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் – கிட்:10 66/1
    அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய – கிட்:11 100/1
    அங்கதன் உடன் செல அரிகள் முன் செல – கிட்:11 118/1  (இவ்விளக்கப் பகுதி முனைவர். பாண்டியராஜா பதிவு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது)

    ஒரு கணிநிரல் (Program) சில விநாடிகளில் ஒரு சொல்லடைவையோ அல்லது தொடரடைவையோ தொகுத்து வழங்கிவிடும்.  ஆனால் அந்த நிரலை எழுதும் முயற்சிக்கு எத்தனை எத்தனையோ மணிநேரங்கள் தேவைப்படும். ‘ஜாவா’ நிரல் எழுதினாலும் பல கோப்பைகள் ‘ஜாவா’ (காஃபி) அருந்திய பின்னரும், பலநாள் தூக்கம் தொலைத்த பின்னரும் நிரல் எழுதுபவர் விரும்பிய வண்ணம் அது அமைந்ததா  என்பதை கணினிநிரல் எழுதியவரே வந்து சொன்னால்தான் உண்டு.

    ஆனால் அது போன்ற நிரல்களை, தனது பல்கலைகழக மாணவப் பருவத்திலேயே எழுதி ஐம்பது மதிப்பெண் வழங்கும் ஒரு தேர்வில் அறுபது மதிப்பெண்கள் (தவறு என்று சந்தேகிக்க வேண்டாம், சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளேன் 60/50 மதிப்பெண்கள்) வாங்கியவர் முனைவர். ராஜம் ராமமூர்த்தி.

    doctor rajam

    அவரது மாணவப் பருவத்தில் அவர் எழுதிய தொடரடைவு (Concordance) உருவாக்கம் நிரலிக்கு அவர் தேர்ந்தெடுத்த பாடல் ஒளவையார் எழுதிய குறுந்தொகைப் பாடல் ஒன்று.


    அகவன் மகளே அகவன் மகளே
    மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
    அகவன் மகளே பாடுக பாட்டே
    இன்னும் பாடுக பாட்டே அவர்
    நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.

    — ஒளவையார், குறுந்தொகை: 23

    [பாடலின் பொருள்: காதல் நோய் தாக்கி உடலும் மனமும் நலிவடைந்த தலைவியினைக் கண்டு வருந்திய பெற்றோர், அகவல்மகள் என்னும் குறிக்காரியிடம் சென்று குறி கேட்கிறார்கள்.  குறிசொல்லத் தொடங்கும் அவளது கடவுள் வாழ்த்துப்பகுதி மலைநாட்டுத் தெய்வத்தின் புகழ் பாடுகிறது அத்துடன் அது தலைவியின் உள்ளத்திலிருக்கும் தலைவனை வாழ்த்துவது போலவும்  அமைந்துவிடுகிறது. அதனைக் கேட்ட தோழி அவன் குன்றத்தைப் பாடிய பாட்டை இன்னும் பாடுக என்கிறாள்.  அதாவது தோழி அறத்தொடு நிற்பது என்ற நிலையில் அடங்கும் வகையில், தலைவியின் காதலைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் அமைகிறது இப்பாடல். இவ்வாறு இவள் சொல்வதிலிருந்து தலைவியின் சுற்றத்தார் தலைவியின் தலைவனை பற்றித்  தெரிந்துகொள்வார்களாம்.]

    சென்ற வாரம் குழும மடலாடல் ஒன்றில் கணிணித்தமிழ் கொண்டு எவ்வாறு கணிணித்தமிழ் வளர்ச்சியில் பங்களிப்பது என்பது பற்றிய விவாதத்தில் பங்கேற்ற முனைவர். ராஜம் அவர்கள், மேலே குறிப்பிட்ட பாடலுக்கு, அவர் படித்த UNIX வகுப்பில் இறுதித் தேர்வுக்காக எழுதிய நிரல்களை பகிர்ந்து கொண்டார் ( “Unix visits South India” project – http://www.letsgrammar.org/oldProjects/UNIX_Project_Rajam.pdf).

    இது போன்று கணிணித்தமிழ் வளர்ச்சிக்கு இக்கால மாணவர்களை ஊக்குவிக்கும் கட்டுரை ஒன்றினைப் பகிர்ந்து கொண்ட முனைவர். ராஜம் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறார்கள்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share