Author: தேமொழி

  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: வித்து இன்றிச் சம்பிரதம் இல்

     

    நாணின்றி ஆகாது பெண்மை. நயமிகு
    ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை – பேணுங்கால்
    கைத்தின்றி ஆகா கருமங்கள். காரிகையாய்!
    வித்தின்றிச் சம்பிரத மில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    நாண் இன்றி ஆகாது பெண்மை; நயமிகு
    ஊண் இன்றி ஆகாது உயிர் வாழ்க்கை; பேணுங்கால்,
    கைத்து இன்றி ஆகா கருமங்கள்;-காரிகையாய்!
    வித்து இன்றிச் சம்பிரதம் இல்.

    பொருள் விளக்கம்:
    நாணம் என்ற பண்பு இல்லாமல் பெண்மை என்ற குணம் அமைவதில்லை. நலம்தரும் உணவை உண்ணாமல் உயிர் வாழ்வது இயலாது. ஆய்ந்து நோக்கும்பொழுது கைப்பொருள் இன்றி நமக்குத் தேவையான செயல்களை நடத்திக்கொள்ள முடியாது. அழகிய பெண்ணே! விதைகள் இல்லாவிட்டால் விளைச்சலைக் காண்பதும் இயலாது.

    பழமொழி சொல்லும் பாடம்: கையில் பொருளின்றிக் காரியங்களைச் செய்து முடிக்க முடியாது. இக்கருத்து உண்ண உணவின்றி உயிர் வாழ்தலும் முடியாது, விதைக்க விதைகளின்றி விளைச்சலும் காண முடியாது என்ற உண்மைகள் மூலம் புலப்படுத்தப் படுகிறது. இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் தேவைப்படும் இன்றியமையாமையை விளக்க விரும்பிய வள்ளுவரும்,

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (குறள்: 247)

    பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை சிறப்பாக அமையாதிருப்பது போல கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமைய வழியில்லை என்று எடுத்துரைக்கிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 13, 2015

    இவ்வார வல்லமையாளர்கள்
    வல்லமைமிகு “தாஷி, நான்சி மாலிக் சகோதரிகள்” 

    Tashi and Nancy Malik

     

     

    முற்றிலும் மாறுபட்ட சாதனை ஒன்றினைப் புரிந்த இந்தியாவின் இரட்டையர்களை, தாஷி, நான்சி மாலிக் சகோதரிகளை இவ்வார வல்லமையாளர்களாக அறிமுகப்படுத்துவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதாகும் இரட்டையர்கள் பொதுவாக இந்தியர்கள் அதிகம் நுழையாத துறை ஒன்றில் சாதனையைச் செய்திருப்பது வியக்க வைப்பது.

    “தீரச்செயல் புரிவோரின் பெருவெற்றி” என அழைக்கப்படும் (எக்ஸ்ப்ளோரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் – Explorers Grand Slam) என்ற சாகசத்தை நிகழ்த்தியுள்ளனர் இந்த இரட்டையர். வட தென் துருவங்களை அடைவது, உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான மலைச்சிகரங்களை அடைவது என ஒன்பது இடங்களுக்கும் சென்றுவருவது எக்ஸ்ப்ளோரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் சாதனை என்று அழைக்கப்படுகிறது. இதில் மிகவும் கடினமான முறை ஒன்றும், மற்றொன்று சற்று சுலபமான ‘லாஸ்ட் டிகிரி கிராண்ட் ஸ்லாம்’ (Last Degree Grand Slam) என ஒன்றும் இருக்கிறது. முதல் வகையான எக்ஸ்ப்ளோரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் என்ற முறையில் குறிப்பிட்ட கடற்கரையில் இருந்து வட தென் துருவங்களுக்கு பனிச்சறுக்கில் (Skiing) சென்றடைய வேண்டும். ‘லாஸ்ட் டிகிரி கிராண்ட் ஸ்லாம்’ முறையில் இந்தத் தூரம் குறைக்கப்பட்டுள்ளது

    இங்கிலாந்தைச் சேர்ந்த ‘டேவிட் ஹெம்ப்ளிமேன் ஆடம்ஸ்’ (David Hempleman-Adams) என்பவரே முதன் முதலில் 1998 ஆம் ஆண்டில் இந்த ‘கிராண்ட் ஸ்லாம்’ சாதனையைச் செய்தவர். டேவிட் ஹெம்ப்ளிமேன் ஆடம்ஸ் உட்பட, இதுவரை பதினொரு பேர் இச்சாதனையைச் செய்துள்ளனர்.

    அடுத்து, ‘லாஸ்ட் டிகிரி கிராண்ட் ஸ்லாம்‘ என்ற தொலைவு குறைந்த சுற்றை இதுநாள் வரை 33 பேர் வெற்றிகரமாக முடித்துள்ளார்கள். இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த தாஷி, நான்சி மாலிக் சகோதரிகளும் அடங்குவர். பிப்ரவரி 2012 ஆம் ஆண்டு 19,340 அடிகள் உயரம் உடைய ஆப்பிரிக்க “கிளிமாஞ்சரோ” சிகரத்தை முதலில் தொட்டத்தில் அட்வெஞ்ச்சரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் சுற்றை இவர்கள் தொடங்கினார்கள். அடுத்து 2013 ஆம் ஆண்டு மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்கள். தொடர்ந்து மற்ற பிற ஐந்து கண்டங்களில் உள்ள மலைகளின் உயர்ந்த சிகரங்களையும், இந்த ஆண்டு வட தென் துருவங்களையும் அடையும் சுற்றினையும் முடித்து விட்டார்கள்.

    Tashi and Nancy Malik1முதன்முதலில்…
    குறைந்த கால அளவில் கிராண்ட் ஸ்லாம் சாதனையைச் செய்த முதல் இந்தியர்கள்,
    முதல் இந்திய, முதல் தெற்காசிய கிராண்ட் ஸ்லாம் சாதனையாளர்கள்,
    கிராண்ட் ஸ்லாம் சாதனை செய்த முதல் இரட்டையர்கள்,
    கிராண்ட் ஸ்லாம் சாதனை செய்த முதல் இளைய பெண்மணிகள்,
    எவரெஸ்ட்டைத் தொட்ட முதல் இரட்டையர்கள்,
    ஏழு கண்டங்களின் மலைச் சிகரங்களையும் அடைந்த முதல் உடன்பிறப்புகள்,
    வட மற்றும் தென் துருவங்களை பனிச்சறுக்கு மூலம் அடைந்த முதல் இரட்டையர்கள், இந்தியர்கள், இளவயதுப் பெண்மணிகள் என்று பல “முதன்முதல்” என்ற சாதனைப் பட்டியலை அட்வெஞ்ச்சரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் சாதனையில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் நிகழ்த்தியுள்ளார்கள்.

    இவர்களது ஃபேஸ்புக் தளம் இவர்களது சாதனைகள் பட்டியலையும், ஏழுகண்டங்களிலும் உயர்ந்த மலைச்சிகரங்களைத் தொட்ட நாட்களையும், வட தென் துருவங்களை அடைந்த தேதிகளையும் பட்டியலிடும் படத்தையும் கீழே காணலாம்.

    Tashi and Nancy Malik profile
    இந்தச் சாதனையின் சற்று வருத்தம் தரும் பகுதி என்னெவெனில், இந்த சகோதரிகளின் சாதனைகளுக்கு இந்திய அரசிடம் இருந்து உதவிகளோ, தனியார் ஆதரவு என்றோ எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. மிகவும் செலவு செய்ய வேண்டிய இந்தச் சாதனைக்கும், மலையேற்றப் பயணங்களுக்கும் இவரது பெற்றோர்கள்தான் இதுவரை உதவி வருகிறார்கள். எனவே நிதி நிலையில் அவர்கள் குடும்பத்திற்கு பெரும் கடன்கள் ஏற்பட்டுள்ளது இவர்கள் சாதனையில் விரும்பத் தகாத பக்க விளைவு. இந்திய அரசும், இந்திய மாநிலங்களும் மலையேற்றம் என்பதை விளையாட்டு வகையில் குறிப்பதா இல்லையா என்ற சிக்கலில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதாமாக இதை வரையறுக்கும் நிலை இவர்களுக்கு உதவிகரமாக இல்லை என்பதை இச்சகோதரிகள் பத்திரிக்கைகளுக்கு அளித்த செய்தி குறிக்கிறது.

    “இந்தச் சாதனை மிகவும் கடினமானது, சோர்வு தருவது. ஆனால் முயற்சிக்குக் கிடைத்த பலன் மகிழ்ச்சி அளிப்பது. எந்நேரம் முயற்சியைக் கைவிட்டு விடலாம் என்ற நிலையில் எங்களைத் தள்ள எத்தனையோ காரணங்கள் இருந்தன. இதனை நாங்கள் விடாமுயற்சியுடன் வெற்றிகரமாக முடித்தற்கு எங்களது ஆர்வம் மட்டுமே காரணம்.” என்று இரட்டையர்களில் இளையவரான நான்சி கூறியுள்ளார்.

    தற்பொழுது நியூசிலாந்து அரசு இவர்களுக்கு உதவித்தொகை வழங்கி அவர்கள் நாட்டின் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு விளையாட்டும், உடற்பயிற்சி-உளவியல் கல்வியும் (Sports and Exercise Psychology) பயில உதவி செய்துள்ளது. இது இளம் சாதனையாளர்களுக்கு என்று நியூசிலாந்து அரசு வழங்கும் சலுகை, இதைப் பெற்றதில் சகோதரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நியூசிலாந்தின் உயர்ந்த மலைச் சிகரமான குக் மலைச்சிகரத்தைத் தொடுவது இரட்டையர்களின் அடுத்த இலக்கு. இவர்கள் பெற்ற பயண அனுபவங்களை நூலாகவும் எழுத எண்ணியுள்ளார்கள்.

    இச்சகோதரிகளின் சாதனை இவர்களுக்காகச் செய்தது மட்டுமன்று; அது பாலினபேதத்தின் விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்கும், பாலின அடிப்படையில் பெண்களின் செயல்கள் எனப் பொதுமைப்படுத்தும் மனப்பான்மையைக் குறைப்பதற்கும் தங்கள் சாதனை உதவவேண்டும் என்று இச்சகோதரிகள் எதிர்பார்க்கிறார்கள். வாய்ப்பிருந்தால் பெண்களுக்கு சாதனைகள் செய்வதில் தடை இல்லை என்ற உணர்வையும், பெண்களின் வாழ்வும், உலகமும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடப்பதல்ல என்பதைச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற செய்தியை அளிப்பதும் இவர்கள் விருப்பம். இந்தியச் சிறுமிகள் இனி பெண்கள் என்பதற்காக தாங்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் இவர்கள் முயற்சி அமைவதில் மகிழ்ச்சியையும் அடைகிறார்கள் இச்சகோதரிகள். பெண்கள் தங்கள் திறமையில் நம்பிக்கை கொண்டு உயரும்பொழுது சமூகத்தில் பெண்கள் கண்ணியத்துடனும், மதிப்புடனும் நடத்தப்படுவார்கள் என்பது இவர்களது எதிர்பார்ப்பு.

    இந்த அட்வெஞ்ச்சரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் சாதனையை இவர்கள் நிகழ்த்த விரும்பியதன் முக்கிய நோக்கம் …”பெண்களாலும் சாதனைகள் புரிய முடியும்” என்பதை சமூகத்திற்கு உணர்த்தவும், சிறுமிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதற்காகவும், இவர்களது சாதனை கண்டு பெண்குழந்தைகள் பெருமிதம் கொள்ள வேண்டும் என்பதே இந்த இரட்டையர்களின் குறிக்கோள். பெண்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்க விரும்பும் இவர்களது நோக்கமும், செயலும் பாராட்டத் தக்கன.

    சாதனையாளர்களுக்கு வல்லமை இதழின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகின்றன.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்புக்கு:
    ஃபேஸ்புக் வலைத்தளம்: https://www.facebook.com/tashinungshi.malik.7
    இணைய வலைத்தளம்: http://www.nungshitashi.com/

    படங்களும் தகவல்களும் பேஸ்புக், இளையதளம், செய்திகளிலிருந்து திரட்டப்பட்டன.

    துணைபுரிந்த செய்திகள்:
    ‘Everest twins’ clinch Explorers Grand Slam
    http://www.dnaindia.com/india/report-everest-twins-clinch-explorers-grand-slam-2103179

    The feat was a tough one, but it was fully worth the effort: Tashi and Nancy Malik
    http://www.sportskeeda.com/mountaineering/feat-was-tough-one-but-it-fully-worth-effort-tashi-nancy-malik

    Indian Sisters, First Twins to Climb Mount Everest, Achieve Explorers Grand Slam
    http://www.ndtv.com/india-news/indian-sisters-first-twins-to-climb-mount-everest-achieve-explorers-grand-slam-779414

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: யாப்பினுள் அட்டிய நீர்

     

    நூக்கி அவர்வெலினும் தாம்வெலினும் வெஞ்சமத்துள்
    தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர்; அஃதன்றிக்
    காப்பி னகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல்
    யாப்பினுள் அட்டிய நீர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    நூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ் சமத்துள்
    தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர்; அஃது அன்றி,
    காப்பின் அகத்து இருந்து, காய்வார் மிக உரைத்தல்
    யாப்பினுள் அட்டிய நீர்.

    பொருள் விளக்கம்:
    போரில் பிறர் வென்றாலும், தான் வென்றாலும் (என வெற்றி யாருடையதாக இருப்பினும்), கொடிய போர்க்களத்தில் தாக்கி எதிர்ப்பவரே வீரர் எனக் கூறத் தகுதியுடையவர். அவ்வாறின்றி, பாதுகாப்பான அரணுக்குள் இருந்துகொண்டு, சினம் கொண்டவர் போல பேசும் வாய்ச்சொல் வீரம் என்பது வயலில் பாய்ச்சிய நீர் (பயிர் வளர உதவுவது போல, பகையென்னும் பயிரை வளர்க்கவே உதவும்).

    பழமொழி சொல்லும் பாடம்: அஞ்சாமையுடன் போர்புரிந்து, பகையழித்து வெற்றியை எதிர்கொள்பவரே வீரர்கள் எனப் பாராட்டத் தக்கவர்கள். வாய்ச்சொல் வீரர்கள் உண்மையில்  வீரர்களே அல்லர். குறள் கூறும் படைவீரர் கொண்டிருக்க வேண்டிய வீரர்களது பண்பாகக் குறிக்கப்படுவது,

    கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை. (குறள்: 765)

    உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலைக் கொண்டவரே படையினர் என்பதாகும்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: யார்க்கானும் அஞ்சுவார்க் கில்லை யரண்

     

    வன்சார் புடைய ரெனினும் வலிபெய்து
    தஞ்சார் பிலாதாரைத் தேசூன்ற லாகுமோ
    மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
    அஞ்சுவார்க் கில்லை யரண்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வன் சார்பு உடையர் எனினும், வலி பெய்து,
    தம் சார்பு இலாதாரைத் தேசு ஊன்றல் ஆகுமோ?
    மஞ்சு சூழ் சோலை மலை நாட! யார்க்கானும்
    அஞ்சுவார்க்கு இல்லை, அரண்.

    பொருள் விளக்கம்:
    வலிமை உள்ளவர்களைச் சார்ந்து இருப்பவராக இருந்தாலும், அவருக்கு வலிமையூட்டி, தனது சொந்த வலிமை இல்லாத ஒருவரைப் புகழ் பெறச் செய்தல் இயலுமா? மேகங்கள் தவழ்ந்து செல்லும் சோலைகளுடைய மலைநாட்டைச் சேர்ந்தவரே, யாராக இருப்பினும் அஞ்சி நடுங்குபவருக்கு எந்த அரண் தரும் பாதுகாப்பினாலும் பயனில்லை.

    பழமொழி சொல்லும் பாடம்: அஞ்சி நடுங்கும் ஒருவருக்கு எந்த அரணும் பாதுகாப்பு அளிக்காது, அதுபோல தனக்கே துணிவில்லாத ஒருவருக்கு அடுத்தவர் தரும் பாதுகாப்பு என்றும் உதவாது. இந்த உண்மையை எடுத்துரைக்கும் வள்ளுவர் தரும் குறள்,

    அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
    பொச்சாப் புடையார்க்கு நன்கு. (குறள்: 534)

    பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் அதனால் எந்த ஒரு பயனுமில்லை. அதைப் போலவே மறதி உடையவர்க்கு நல்லதொரு நிலை வாய்த்தாலும் அதனால் அவருக்கு பயன் இருக்காது என்று விளக்குகிறது.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 6, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு “அமெரிக்கத்தமிழர் வருண் ராம்” அவர்கள் 

     

    Varun-Ram

     

    வல்லமையின் இந்தவார வல்லமையாளர் என்ற சிறப்பைப் பெறுபவர் கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர், அமெரிக்கத்தமிழர் திரு. வருண் ராம் அவர்கள்.

    இருபத்தியிரண்டு வயதாகும் திரு. வருண் ராம் என்னும் வருண் இராமசாமி அவர்கள் இந்த ஆண்டு மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பில் முதன்மை மாணவராக  (3.99/4.00 GPA), நரம்பியல், உடற்செயலியல் என்ற இரு அறிவியல்துறைகளில் பயின்றுப் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் அவர் கூடைப்பந்தாட்டத்திலும் சிறந்து விளங்கி தனது மேரிலாண்ட் பல்கலைக் கழக அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த திறமையான ஆட்டத்தினால் வளரும் இளம் விளையாட்டுவீரர் என்ற பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.

    இந்தியக் குடும்பத்து மாணவர் என்றால் கணிதம், அறிவியல், தொழில் நுட்பம் படிக்க விரும்புபவர்; சிறந்த படிப்பாளிகள் என்று அமெரிக்க மக்கள் மனதில் ஒரு பொதுமைப்படுத்தும் எண்ணம் உருவாகும் வண்ணம் அயல்நாடுவாழ் இந்தியர்கள் இருந்துவருகிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் அவர்கள் படிப்பில், பிற தொழில்களில் மட்டுமல்ல, வாய்ப்புகள் அமைந்தால் விளையாட்டுத் துறையிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்ற செய்தியை அமெரிக்க மக்களுக்கு வருண் ராம் அனுப்பி இருக்கிறார். படிப்புடன் விளையாட்டிலும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையை அமெரிக்க இந்திய மாணவர்களுக்கும் தனது வெற்றியின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.

    பொதுவாக அமெரிக்கக் குடும்பங்களில் வளரும் பிள்ளைகள், தங்களுக்கு ஆர்வம் ஏற்படும் துறைகளில் முயன்று, தங்கள் திறமைக்கு ஏற்ற, மனதுக்குப் பிடித்த துறையில் வளரவேண்டும். அது கலையாகவோ, விளையாட்டாகவோ இருந்தாலும்கூட அவர்கள் விருப்பம் தடை செய்யப்படுவதில்லை என்ற நிலை அமெரிக்கர்களிடம் உள்ளது. இதற்கு மாறாக, இந்தியக் குடும்பங்களில் வளரும் குழந்தைகள் மருத்துவம், பொறியியல், கணினி சார் கல்விகள், தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் ஈடுபடுவது மட்டுமே எதிர்பார்க்கப்படும். கலை மற்றும் விளையாட்டு என்பவை பொழுதுபோக்கு என்ற வகையில் மட்டுமே கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வாழ்வாதாரத்திற்கு மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ, பேராசிரியராகவோ, வழக்கறிஞகராகவோ பணிபுரிவது மட்டுமே மதிப்பாக, உயர்வாக  எண்ணப்படும்.

    வருண் ராமின் பெற்றோர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் தொடர்ந்து நல்ல மதிப்பெண்கள் வாங்கும்வரை அவர் விளையாடலாம், அதுவரை  விளையாட்டிற்குத் தடையில்லை என்று முதலில் அனுமதித்தவர்கள், பின்னர் வருண் ராமின் திறமையைக் கண்டு அவர் வளர்ச்சிக்கு முழு ஆதரவும் கொடுத்து அவரது வாழ்வின் குறிக்கோளுக்கு உதவியாகவும் இருப்பவர்களானார்கள். இந்தியர்களின் பொதுவான பாதையில் இருந்து விலகி,  தன்னார்வத்தால் மட்டுமே விளையாட்டுத் துறையில் திறமையை வளர்த்துக் கொண்டு, தனது குறிக்கோள் நோக்கி முன்னேறியிருக்கிறார் வருண் ராம். இவர் குடும்பத்திலும் விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுத்த முதல் மனிதரும் இவர் மட்டுமே.

    வருண் ராமின் பெற்றோர்கள் திரு.கொழந்தவேல் இராமசாமி, முனைவர் சாந்தினி என்போர்.  பெற்றோர் இருவரும் சேலத்திலிருந்து சற்றொப்ப 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தவர்கள். இருவரும் அமெரிக்க அரசின் அரசுப்பணியாளர்களாக இருப்பவர்கள். அத்துடன் மேரிலாண்ட் தமிழ்ச்சங்கத்தின் பணிகளிலும் மிகவும் ஈடுபாட்டுடன் பங்கேற்பவர்கள்.

    அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் (National Basketball Association) விளையாடுவது வருண் ராமின் குறிக்கோள். தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் சிறந்த பல்கலைக்கழக விளையாட்டுக் குழுக்களுக்காக விளையாடித் திறமையை வெளிப்படுத்தி, தேசிய அணியினர் கவனத்தைக் கவரவேண்டும். அமெரிக்க பல்கலைக்கழக விளையாட்டுச் சங்கம் (National Collegiate Athletic Association – NCAA) பல்கலைக் கழகங்களின் விளையாட்டு அணியை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது. அவை பிரிவு I, பிரிவு II, பிரிவு III ( Division I, Division II, and Division III of NCAA) குழுக்களென முறையே மிகப்பெரும் புகழ்வாய்ந்த பெரிய பல்கலைக்கழகங்கள், நடுத்தர நிலை மற்றும் சிறிய பல்கலைக்கழகங்கள் என்பவையே அப்பிரிவுகள்.

    Varun-Ram-1

    பிரிவு I இல் இருக்கும் பெரிய கல்லூரிகளில் படித்தால் தேசிய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்புகளும் அதிகம். ஆனால், உயர்நிலைப் பள்ளி கல்விக்குப் பிறகு வருண் ராமிற்கு புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காது போக, அதற்காகவே ஓராண்டு மேலும் பள்ளிக் கல்வியை நீட்டித்து மறு ஆண்டும் பெரிய கல்வி நிறுவனங்களில் நுழைவுக்கு விண்ணப்பித்தார். மீண்டும் முயற்சி தோல்வியடைந்தாலும், பிரிவு III நிலையில் உள்ள கனக்டிகட் பல்கலையில் சேர்ந்து ஓராண்டு படித்துவிட்டு, அங்கிருந்து மறு கல்வியாண்டில் மாற்றல் வாங்கிக் கொண்டு, பிரிவு I நிலையில் இருக்கும் மேரிலாண்ட் பல்கலைக் கழகத்திற்கு வந்தார். இது போன்று மாற்றம் வாங்கினால் விளையாட்டு அணியில் இடம் கிடைக்காது என்ற மறுப்பு கூறியவர்களின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தின் ‘மேரிலாண்ட் டெர்ராபின்ஸ்’ (Maryland Terrapins) கூடைப்பந்து அணியில் தனது திறமையினால் இடம் பிடித்தவருக்கு விரைவில் அவரது திறமையான விளையாட்டால் அமெரிக்கர் அனைவரையும் அவரைத் திரும்பிப்பார்க்க வைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

    Varun-Ram-2

    சென்ற மார்ச் மாதம் ‘வலப்ரேஸோ க்ருசேடர்ஸ்’ (Valparaiso Crusaders) அணியுடன் போட்டியிட்ட மேரிலாண்ட் டெர்ராபின்ஸ் அணியின் வெற்றிக்கு வருண் ராமின் திறமையான விளையாட்டே காரணமாக அமைந்தது. அவரது கனவுகளை நிறைவேற வாய்ப்பளிக்கும் சிறந்த தருணமாகவும் அது அமைந்தது எனலாம். அமெரிக்க இந்திய மாணவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாக விளங்கும் வருண் ராமைப் பாராட்டி, சென்ற வார இறுதியில் ஜூலை 4 ஆம் நாள் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்திய “தமிழ்விழா – 2015” (FeTNA – 2015) நிகழ்ச்சியில் சிறப்பு விருது அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளார்.

    varunR2

     

    varunR
    தாய், தந்தையருடன் (வலது, இடது புறங்களில் நிற்போர்) வருண் ராம் பொன்னாடை போர்த்திப் பாராட்டப் பெறுகிறார்

     

    அவர் அவ்வாறு பாராட்டப்பட்ட பொழுதே, தமிழ்விழா – 2015 அரங்கிலேயே, வருண் ராம் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டும்படியும் பார்வையாளர்கள் சிலரால் பரிந்துரைக்கப்பட்டார். வருண் ராம் தனது கூடைப்பந்தாட்டக் கனவுகளை (Hoop Dreams) நிறைவேற்றுவதற்காக ஆங்கிலத்தில் “jumping through hoops” என்று சொல்வது போல பல தடைகளை எதிர்கொண்டு வெற்றிகண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அவரது குறிக்கோள்களான மருத்துவத்துறையில் பணியாற்றும் கனவு,  மற்றும் தேசியஅணியில் விளையாடும் கனவுகள் நிறைவேற வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    தொடர்புக்கு:
    டுவிட்டெர் சமூக வலைத்தளத்தில் வருண் ராம் – https://twitter.com/vram_21

     

    தகவல்கள் படங்கள் சேகரிக்கப்பட்ட இடங்கள்:
    ‘They ask, who is this kid?’: Varun Ram on life as an Indian basketball player
    [http://www.theguardian.com/sport/2015/mar/18/they-ask-who-is-this-kid-varun-ram-on-life-as-an-indian-basketball-player]

    Varun Ram is a star both on and off the court
    [http://ekalavyas.com/2014/12/20/varun-ram-star-off-court/]

    Wikipedia
    [https://en.wikipedia.org/wiki/Varun_Ram]

    அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டில் சாதித்துவரும் அமெரிக்கத்தமிழர் வருண் ராம்
    [http://www.valaitamil.com/tamizhar-varun-ram-college-basketball_10948.html]

    வருண் ராம் அவர்களின் படங்கள் அவரது டுவிட்டெர் தளத்தில் இருந்தும்,  மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தின் தளத்திலிருந்தும் சேகரிக்கப்பட்டுள்ளன

     

    நன்றி:
    FeTNA – 2015 படங்களுக்கு ஏற்பாடு செய்த திரு. பழமைபேசி அவர்களுக்கு சிறப்பு நன்றிகள் உரித்தாகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

     

    பழமொழி: கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல்

     

    கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்
    எடுத்துமேற் கொண்டவ ரேய வினையை
    மடித்தொழிதல் என்னுண்டாம் மாணிழாய்! கள்ளைக்
    குடித்துக் குழைவாரோ இல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்,
    எடுத்து மேற்கொண்டு அவர் ஏய வினையை
    மடித்து ஒழிதல், என் உண்டாம்?-மாணிழாய்!-கள்ளைக்
    குடித்துக் குழைவாரோ இல்.

    பொருள் விளக்கம்:
    கொடி பறக்கும் வலிமை பொருந்திய தேரினை கொண்ட மன்னவனின் தயவில், அவனது பொருளைக் கொண்டு தங்களது வாழ்வை நடத்தும் நிலையில் உள்ளவர், மன்னர் ஒரு செயலைச் செய்ய முடிவெடுத்து அதைச் செய்துமுடிக்க இட்ட கட்டளையை, தனது சோம்பலின் காரணமாக விரைவாகச் செய்யாமல் போவதால் என்ன பயன் உண்டாகும்? மாட்சிமை பொருந்திய அணிகலன்களை அணிந்தவரே, கள்ளைக் குடித்தபின்னர் துவண்டிருப்பவர் ஒருவரும் கிடையாது (கள் தரும் போதையினால் குடித்தவர் துணிகரச் செயல்களையும் செய்தல் போல அதிகாரத்தில் உள்ளவர் இட்ட கட்டளையை செயல்படுத்துவீராக).

    பழமொழி சொல்லும் பாடம்: அதிகாரமுடையோர் இடும் கட்டளையை அவரை அண்டிப் பிழைப்போர் சோம்பலின்றி விரைவில் முடித்துக் கொடுக்க வேண்டும். இப்பழமொழியின் சுட்டும் அதிகாரம் உடையவரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையை வள்ளுவர்,

    போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
    தேற்றுதல் யார்க்கும் அரிது. (குறள்: 693)

    ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால், தம் பங்கில் குற்றங்கள் நேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; அப்படி நேர்ந்து விட்டால், பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல என்ற குறள் வழி விளக்குகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: இழி தரு தண்புனல் நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை

     

    கல்வி யகலமும் கட்டுரை வாய்பாடும்
    கொல்சின வேந்தன் அவைகாட்டும் – மல்கித்
    தலைப்பாய் இழிதரு தண்புனல் நீத்தம்
    மலைப்பெயல் காட்டுந் துணை.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும்,
    கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி,
    தலைப்பாய் இழிதரு தண் புனல் நீத்தம்
    மலைப் பெயல் காட்டும் துணை.

    பொருள் விளக்கம்:
    பரந்துபட்ட கல்வி அறிவையும், சிறந்த நாவன்மையையும், எதிரியை அழித்துவிடும் கொடுஞ்சினத்தையும் கொண்ட மன்னவனின் திறமையானது அவனது அவையோரின் சிறப்புகளினால் அமைவது என அறிந்து கொள்ளலாம். (அது எவ்வாறென்றால்) பெருகிப் பொங்கி வீழ்கின்ற குளிர்ந்த புனலின் அளவினை மலை மீது பொழிந்த மழையின் அளவு காட்டி நிற்பது போலவாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: ஒரு சிறந்த அரசனின் கல்வியையும், நாவன்மையையும், வீரத்தையும் அவனது அவையோரின் திறம் கண்டே அறிந்துவிட முடியும். இவ்வாறாக அவையோரின் திறமையினால் மன்னன் புகழடைவதை வள்ளுவர் தரும் இரு வேறு குறள்களின் வழி அறியலாம்.

    சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
    சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். (குறள்: 445)

    தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், சிறந்த அறிவுரை கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.

    தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில். (குறள்: 446)

    தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 29, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு “கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம்” அவர்கள் 

    dorai sundaram

     

    தனது பணிநிறைவுக்குப் பின்னரும், ஆர்வத்துடன் தனது பொழுதை மக்களுக்கு உதவும் பொருட்டோ அல்லது தமிழ்க் கலாச்சாரத்தை உலகறியச் செய்யும் வகையிலோ தன்னார்வப்பணி செய்யும் தொண்டர்கள் பலர் பெருகி வருவது தமிழகம் பெற்ற பேறு. வல்லமையின் வல்லமையாளர் வரிசையில் அவர்களில் பலரை சிறப்பித்துப் பாராட்டி மகிழ்வதில் வல்லமை இதழும் பெருமை அடைந்து வருகிறது. அந்த வரிசையில் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர் கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. து.சுந்தரம் அவர்கள். இவர் அவினாசி பள்ளியிலும், கோவை அரசு கலைக்கல்லூரியிலும் படித்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றியவர். நடுவணரசுப் பணிநிறைவுக்குப் பின்னர் தொல்லியல் ஆர்வமும் கல்வெட்டறிவும் அமையப்பெற்றதால் கல்வெட்டுகளைத் தேடிச் சென்று, அவற்றை ஆராய்ந்து, தகவலைப் படித்து, கல்வெட்டுகளைப் படமெடுத்து, அவற்றைப் பற்றி தானறிந்த விவரங்களை “கொங்கு கல்வெட்டு ஆய்வு” என்ற தனது வலைத்தளத்தில் தொகுத்து பதிவு செய்து வருகிறார். அத்துடன் “கல்வெட்டு எழுத்துகள் கற்போம்” என்ற தொடரின் வழியாக கல்வெட்டுகளை எப்படிப் படிப்பது என்று கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சியை வழங்கும் பாடங்களையும் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழக வரலாற்றில், கல்வெட்டுகளில் ஆர்வம் உள்ள எவரும் அவரது பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதில் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

    இவரது இரு பதிவுகளில் இருந்து கருத்தைக் கவர்ந்த தகவல்களும் படங்களும் தொகுக்கப்பட்டு வல்லமை வாசகர்களுக்காக இங்கு வழங்கப்படுகிறது. விவரமான கட்டுரைகளை அவரது “கொங்கு கல்வெட்டு ஆய்வு” வலைத்தளத்தில் படிக்கலாம். தனது கல்வெட்டு பயணத்தை விவரித்து, கல்வெட்டு பற்றி சேகரித்த செய்திகளை படங்களுடனும் விளக்கங்களுடனும் இவரது கட்டுரையின் முதல்பகுதியில் அறியத் தரும் திரு. து.சுந்தரம் அவர்கள், கட்டுரையின் பிற்பகுதியை கல்வெட்டுப் பாடத்திற்காக ஒதுக்கி, அதில் கல்வெட்டின் வரிகளைக் கொடுத்து அவற்றைப் படிக்கும் முறையைக் குறிப்பிட்டு விளக்கமும் தருகிறார். இனி, அவர் கட்டுரையிலிருந்து …

    இராசகேசரிப்பெருவழி (The Rajakesari Highway) 

    இராசகேசரிப்பெருவழி, கல்வெட்டு:

    … தமிழகத்தின் மிகப்பழமையான பெருவழி என்று அறியப்படும் “இராசகேசரிப்பெருவழி” கொங்கு நாட்டில் அமைந்திருந்தது கொங்கு நாட்டின் பழமைக்கும் பெருமைக்கும் சான்றாகும். இராசகேசரிப்பெருவழி இந்திய நாட்டிலேயே மிகப்பழமையான சாலை என்று தொல்லியலார் கருதுகின்றனர்…

    … இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு எதிர்பாராது நிகழ்ந்த ஒன்று. 1976 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்துக் கல்வெட்டினைப் படித்து வெளிக்கொணர்ந்தவர் முனைவர் பூங்குன்றன் ஆவார்…

    rajakesari peruvazhi stone inscription-file photo

    கல்வெட்டுப்பாடம்:
    … “இக்கல்வெட்டில் மூன்று முறை நிழல் என்ற சொல் பயின்றுவருகிறது. இங்கு பயன்படுத்தப்பெறும் நிழல் என்ற சொல்லின் பொருளை விளங்கிக்கொள்ள கேரள மாநிலச் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றில் கிடைக்கும் சான்றுகளை அணுகவேண்டும். அந்த ஆவணங்களில் நிழல் என்ற சொல் நிழற்படை (Shadow Army) என்ற பொருளில் கூறப்பெறுகின்றது. அரசனைப் பாதுகாக்க இப்படை பயன்படுத்தப்பெற்றது. பெருவழிக் கல்வெட்டிலும் “நிழல்” என்ற சொல் (Shadow Army) என்ற பொருளில் வழங்கப்பெற்றிருக்கவேண்டும். நிழற்படை அரசனைமட்டும் பாதுகாக்கவில்லை. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று பெருவழியைக் கண்காணித்தனர் என்பதாகப் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்…

    தமிழக அரசர்கள் தங்கள் ஆட்சிக்கு உதவும் வகையில் நிழற்படை என்ற ஒரு படையை வைத்திருந்தார்கள் என்பதே பலருக்கு புதிய செய்தியாக இருக்கும். அடுத்து,

    பெள்ளாதி – நடுகல் சிற்பம் 

    புலிகுத்திக்கல்:

    … ஒரு தோட்டத்தில் அமைந்துள்ள நடுகல் சிற்பத்தைக்காணச்சென்றோம். இந்த நடுகல் சிற்பம் புலிகுத்திக்கல் என அழைக்கப்படுகிறது. கல்வெட்டுடன் கூடிய இந்நடுகல் பற்றி மேற்சுட்டிய தொல்லியல் துறைக்கல்வெட்டு நூலில் (தொடர் எண்: 936/2003) குறிப்பிடப்பெறுகிறது. மறவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கும், முல்லை நிலப்பகுதியில் ஆனிரை கவர்தலிலும், மீட்டலிலும் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கும் நடுகல் நட்டு மக்கள் வணங்கினர். (ஆனிரையில் ஆடுகளும் அடங்கும் எனலாம்) கோவைப்பகுதி பழங்காலத்தே பெருமளவில் முல்லை நிலப்பகுதியாக விளங்கியமையால் பட்டிகளில் ஆனிரை காத்த வீரர்கள் ஆடுமாடுகளைத் தின்னவரும் புலிகளுடன் போரிட்டு மடிவதுண்டு. (புலியைக்கொன்ற பின்னரே வீரன் மடிகிறான்) அத்தகைய வீரர்களுக்கு நடுகல் எடுத்து வணங்கினர். கோவைப்பகுதியில் இவ்வகை நடுகற்கள் புலிகுத்திக்கல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறன. இக்கற்களில் வீரன் புலியைக் குத்திக்கொல்லும் காட்சி புடைப்புச்சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். இந்நடுகற்கள் பெரும்பாலும் எழுத்துகள் பொறிக்கப்படாமல் இருக்கும். அரிதாகச் சில நடுகற்கள் எழுத்துப்பொறிப்பைக்கொண்டிருக்கும். நாங்கள் பார்த்தது எழுத்துடைய நடுகல் ….

                        kalvettukalvettu2

    கல்வெட்டுப்பாடம்:
    … நல்ல வெண்மையான நிறத்துடன் ஏறத்தாழ நான்கு அல்லது நாலரை அடி உயரத்தில் உள்ள இக்கல்லில் வீரன் புலியுடன் போரிட்டுக் கொல்லும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் கீழே ஆறுவரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனின் தலையில் தலைப்பாகை; காதுகளில் காதணிகள்; கழுத்திலும் அணிகள். கைகளில் தோள்வளை காணப்படுகிறது. வீரனின் இடைப்பகுதியில் இடைக்கச்சு. கால்களில் கழல்கள். வீரன் தன் வலக்கையால் நீண்ட வாளைப் புலியின் நடுமார்பில் பாய்ச்சிய நிலையில் வாள் புலியின் உடலைக் குத்தி உடலின் மறுபுறம் வெளிவந்த தோற்றம். இடக்கை புலியின் முகத்தருகே நெருங்கிய நிலையில் கைவிரல்கள் தோன்றாதவாறு காணப்படுவதால் இடக்கையில் இருந்த குறுவாள் புலியின் வாய்ப்பகுதியில் நுழைந்துவிட்டது புலனாகிறது. இடைக்கச்சில் குறுவாள் காணப்படாதது இதை உறுதிப்படுத்துகிறது. (வீரர்களின் சிற்பங்களில் இடையில் குறுவாள் தப்பாது இடம் பெறுகிறது.) புலி நின்ற நிலையில் ஒரு காலை வீரனின் தொடைப்பகுதியில் தாக்குகிறது. புலியின் நிமிர்ந்து நிற்கும் வால் புலியின் சினவெறியைக்காட்டும் எனக் கல்வெட்டு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் …

    மேலும்,
    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் 
    மதுரை அரண்மனை
    சுமை தாங்கி
    போன்ற பதிவுகளும் சுவையான வரலாற்றுச் செய்திகள் பல அடங்கியவை.

    தொல்லியல்துறை சொற்பொழிவுகளுக்கு சென்று அங்கு அத்துறை அறிஞர்களின் உரையில் கிடைக்கும் தகவல்களையும் திரு. சுந்தரம் தனது வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். ஆர்வத்துடன் தான் திரட்டும் தொல்லியல் செய்திகளை அனைவருக்கும் உதவும் வகையில் பதிவு செய்து, கல்வெட்டுகளைப் படிக்க பயிற்சியும் அளித்துவரும் திரு. சுந்தரம் தொடர்ந்து இப்பணியைச்செய்து தமிழக வரலாற்றைப் பற்றிய விரிவான பார்வையை பலரும் பெற உதவுமாறு தொடரவேண்டும் என்று பாராட்டி வாழ்த்துவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி கொள்கிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    தொடர்பு கொள்ள:
    திரு. து.சுந்தரம்,
    கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
    21, கிரீன்வியூ டெலிகாம் காலனி,
    விளாங்குறிச்சி சாலை,
    பீளமேடு, கோவை-641 004.

    அலை பேசி: 9444939156.
    மின்னஞ்சல்: doraisundaram18@gmail.com
    வலைத்தளம்: கொங்கு கல்வெட்டு ஆய்வு
    கூகுள் + : https://plus.google.com/116958920038237666409/

     

    படங்களும் தகவல்களும் வழங்கிய கொங்கு கல்வெட்டு ஆய்வு  இணையதளத்திற்கு நன்றி.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: மென்கண்ணன் ஆளான் அரசு

     

    எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்
    தங்கண்ண ரானும் தகவில கண்டக்கால்
    வன்கண்ண னாகி ஒறுக்க ஒறுக்கல்லா
    மென்கண்ணன் ஆளான் அரசு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    எம் கண் இனையர் எனக் கருதின், ஏதமால்;
    தம் கண்ணரானும் தகவு இல கண்டக்கால்,
    வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா
    மென்கண்ணன் ஆளான், அரசு.

    பொருள் விளக்கம்:
    (நீதி கூறுமிடத்து நடுநிலை தவறி) எனது கண் போன்றவர் இவர் என்றெல்லாம் கருதத் துணிந்தால் அது நீதிதவறும் குற்றமாகும். தமது கண்ணைப் போன்றவராகவே இருந்தாலும், தகாத குற்றச் செயலில் ஈடுபடுபவராக அவரைக் காண நேர்ந்தால், வன் கண்மையோடு சினந்து தண்டிக்கவேண்டும். தண்டிக்காது மென்மையாக மன்னித்து விடுபவர் அரசாளத் தகுதியற்றவர்.

    பழமொழி சொல்லும் பாடம்: நடுநிலை தவறாமல் நீதிவழங்குவது அரசாட்சி செய்பவரின் கடமை. இதனைக் குறிக்கும் வள்ளுவர் வாய்மொழி,

    ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்: 541)

    குற்றத்தை ஆராய்ந்து எவரிடத்தும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடு தக்க தண்டனையை வழங்குவதே நேர்மை தவறாத செயலாகும் என்று அறிவிக்கிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: குறும்பியங்கும் கோப்புக் குழிச் செய்வதில்

     

    எவ்வந் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை
    தெய்வ முடிப்புழி என்செய்யும்? – மொய்கொண்டு
    பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! குறும்பியங்கும்
    கோப்புக் குழிச்செய்வ தில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    எவ்வம் துணையாய்ப் பொருள் முடிக்கும் தாளாண்மை,
    தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் கொண்டு?-
    பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர!- குறும்பு, இயங்கும்
    கோப் புக்குழி, செய்வது இல்.

    பொருள் விளக்கம்:
    துன்பமே துணையாக (வரும் பொழுதில்), தான் செய்து முடிக்க விரும்புவதைச் செய்யும் முயற்சிகள், விதி வலியால் நடைபெறாது போக நேர்ந்தால் என்ன செய்யமுடியும், முயல்வதால் பலனில்லை. பூவுக்குள் வண்டு புகுந்து ஒலியெழுப்பும் ஊரைச் சேர்ந்தவரே, குறுநில அரசனால், எத்திசையும் வெற்றியை நிலைநாட்டி வரும் பேரரசன் ஒருவன் தனது நாட்டில் போரிடப் புகுந்தால் அடங்கிப் போவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது.

    பழமொழி சொல்லும் பாடம்: தனது முயற்சிக்கு எதிராக விதி சதி செய்யும் பொழுது முயற்சிகள் பயனளிப்பதில்லை. நாம் எவ்வளவுதான் முயன்றாலும், சில நேரம் நமது கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகள் நமது முயற்சிக்கேற்ற பலனைத் தருவதில்லை. இவ்வாறு நிகழும் கைமீறிய விளைவுகளுக்கு வள்ளுவர் ஊழினைக் காரணமாகக் காட்டுகிறார்.

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும். (குறள்: 380)

    ஊழை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வலிமையானவை வேறு எவை என்று கூறமுடியும் என்பது விதி வலியது என அறிவுறுத்தும் வள்ளுவர் வாக்கு.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 22, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு “சூப்பர் 30 – ஆனந்த் குமார்” அவர்கள் 

    Anand_Kumar

    கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வசதி குன்றிய நிலையில், ஆனால் நல்ல ஆர்வமும் கல்வித் திறனும் கொண்டு  பொறியியல் படிக்க விரும்பும் 30 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காததுடன் தங்குமிடமும் உணவும் கணிதப் பயிற்சியும் கொடுத்து மாணவர்களின் பொறியியல் கல்விக் கனவுகள் நினைவாக உதவும் “சூப்பர் 30” நிறுவனர் “ஆனந்த் குமார்” அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. பொதுநுழைவுத் தேர்வுகள் (The Indian Institute of Technology Joint Entrance Exam – IIT-JEE) மிகவும் கடினமான நுழைவுத் தேர்வுகள் என்று பெயர்பெற்றவை. நான்கு இலட்சத்திற்கும் மேல் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களில் 2.5% மாணவர்களே ஐ.ஐ.டி. யில் கல்விபெற தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அத்தேர்வின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும். நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்காகவே இலட்சம் ரூபாய்கள் வரை செலவழித்து பயிற்சி பெரும் செல்வநிலையை உடைய மாணவர்களுக்கு இடையே, தினக்கூலியாக வாழ்வை நடத்தும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இத்தேர்வுக்கான பயிற்சி என்பது ஓர் எட்டாதக் கனவு. இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் உள்ள இடைவெளியால் வாய்ப்புகள் தவறிப் போகும் நிலையில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை கொள்வோர் வெகு சிலரே. அவர்களில் ஒருவரான ஆனந்த் குமார், இந்த மாணவர்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்து, இந்திய தொழில்நுட்ப நிலைய நுழைவுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத்தி, ஒரு ஆண்டிற்கான முழுச்செலவையும் ஏற்று, அதில் பெரும்பாலானவர்களை வெற்றிபெற வழிசெய்து வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு இவரது சூப்பர் 30 திட்டம் துவக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, 30 மாணவர்கள் 2003 ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தேர்வுக்குச் சென்றார்கள். தொடர்ந்து இந்த ஆண்டுவரை, ஆண்டுக்கு 30 மாணவர்கள் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 390 மாணவர்களுக்கு கட்டணமின்றி, உதவிகளும் வழங்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 85% விழுக்காட்டினர் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று பொறியியல் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள். முன்னூறுக்கும் அதிகமான எளிய மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுத்துவது, அதுவும் யாருடைய நிதியுதவியும் இல்லாத நிலையில் இச்செயலைச் செய்வது ஒரு சாதனை என்பதை மறுப்பதற்கில்லை.

    வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் சென்று தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டால், அவர்களுடன் சேர்ந்து தாமும் மகிழும் பெற்றோர்கள் பலருக்குத் தங்கள் பிள்ளைகள் என்ன சாதனை செய்துவிட்டோம் என இவ்வாறு மகிழ்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை என்பதும்; ஐ.ஐ.டி. என்பதைக் கூட ஐ.டி.ஐ. என்று மாற்றிக் கூறும் அளவிற்குப் பெற்றோர் சிலர் பொறியியல் கல்வி பற்றியே அறிந்திராதவர்கள் என்பதும் ஒவ்வொரு ஆண்டும் வெற்றி பெரும் மாணவர்கள் தரும் நேர்காணல் செய்திகள் அறியத் தருகிறது. இதுவரை பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் குடும்பங்களும் கட்டுமானத் தொழிலில் உள்ளவர்கள், வயலில் வேலை பார்க்கும் தினக் கூலிகள், நடைபாதைக் கடை வைத்திருப்பவர்கள், பெட்டிக் கடை வைத்திருப்பவர்கள், வாடகை டாக்சி வண்டி, ரிக்க்ஷா வண்டி ஆகியவை ஓட்டுபவர்கள், காவல்காரர்கள், வீட்டு வேலை பார்ப்பவர்கள், தையல்வேலை செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள், ட்ரக் மெக்கானிக்கள் என்ற உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. ஆனந்த் குமார் உதாவாது விட்டிருந்தால், திறமையுள்ள இந்த மாணவர்களின் பொறியியல் கல்வி பற்றிய கனவு நிறைவேறாமல் வாழ்க்கையே திசை திரும்பியிருக்கும் என்பதுதான் உண்மையும் கூட.

    இது போன்ற பொருளாதார வசதியற்ற நிலையில் வாழ்க்கையைத் தொடங்கியவரே ஆனந்த் குமாரும். பீகார் மாநிலத்தில் அஞ்சல் அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரிந்தவர் இவரது தந்தை. ஆனந்த் குமார் ஐ.ஐ.டி. யில் படித்தவர் அல்ல. சிறுவயது முதலே கணிதப்பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டவர், கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் பயின்ற பொழுதே கணித ஆய்வு இதழ்களிலும், ஆய்வு பத்திரிக்கைகளிலும் இவர் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவரது திறமையைக் கண்ட இவரது ஆசிரியர் வெளிநாட்டிற்குச் சென்று படித்து இவரது கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ள ஆலோசனை கூறினார். அதையடுத்து ஆனந்த் குமார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துப் படிக்க இடமும் கிடைத்தது, ஆனால் வெளிநாட்டில் சென்று படிக்கவோ பணவசதி இவருக்கு இருந்திருக்கவில்லை. இவரும் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் முதற்கொண்டு பலரிடம் உதவி கேட்டுப் படியேறி இறங்கியிருக்கிறார், பலனில்லை. அரசியல்வாதிகள் ஆலோசனை வழங்க மட்டுமே தயாராக இருந்திருக்கிறார்கள். குழப்பத்திலிருந்த நேரத்தில் இவரது தந்தையும் இறந்துவிடவே குடும்பப் பொறுப்பை ஏற்றுத் தாய்க்கு உதவ வேண்டிய நிலையில் இருந்தார். கேம்ப்ரிட்ஜ் கல்விக்கு முற்றிலும் வழியில்லாது முற்றுப்புள்ளி விழுந்தது. தனது ஆர்வத்தின் காரணமாக கிடைத்த நேரங்களில் கணிதம் பயிற்சி செய்தாலும் தாயார் தொடங்கிய ‘பப்படம்’ செய்து விற்கும் தொழிலில் தாயுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். தானும் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து ‘இராமானுஜன் கணித கல்வி நிலையம்’ (Ramanujan School of Mathematics) என்ற பள்ளியைத் தொடங்கி கணிதப்பாடம் நடத்தி வந்திருக்கிறார்.

    கட்டணம் செலுத்தி பலர் இவரிடம் பயிற்சி பெற்றுவந்த காலத்தில், கூலித்தொழிலாளியின் மகன் ஒருவர் இவரை அணுகி ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. பொதுநுழைவுத் தேர்வுக்கு இவரிடம் பயிற்சி பெற விரும்புவதாகவும், ஆனால் கட்டணம் செலுத்த வசதி இல்லை என்று சொல்லியிருக்கிறார். அன்று தொடங்கியது “சூப்பர் 30” என்ற இவரது கட்டணமற்ற பயிற்சித் திட்டம். மற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை ஒதுக்கி தன்னைப் போன்று வசதியற்ற நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவ ஒரு திட்டம் தயாரித்தார். இவரது அன்னை உணவு தயாரித்து உதவ, சகோதரர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள, இவர் பயிற்சிக் கல்வி வழங்குவதை மேற்கொண்டார். முதன்முறையாக 30 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து 2003 இல் நுழைவுத் தேர்வுக்கு அனுப்பினார். இவர்களில் 18 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. யில் இடம் கிடைத்தது. பின்நாட்களில், 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் பயிற்சிபெற்ற 30 மாணவர்களுமே வெற்றி பெற்றார்கள். இந்த ஆண்டு 25 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள், முப்பதில் ஒருவர் தேர்வு எழுதவில்லை, அதற்குள் ஜப்பான் பல்கலைக்கழகத்தில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு கல்வியைத் தொடரச் சென்றுவிட்டார்.

    super-30-1

    super-30-1a

    Anand_Kumar3

    பொறியியல் கல்வித்திட்டத்தில் அரசு ஏதேனும் ஒரு மாற்றம் அல்லது  திட்டம் அறிவித்தால், உடனே அது   பொருளாதாரத்தில் பின்னடைந்தவர் அல்லது கிராமப்புற பள்ளிமாணவர் வாய்ப்பில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்று ஆராய்வது இவரது வழக்கம். விளைவுகள் மாணவர்களுக்கு எதிராக இருந்தால் அதனை அரசுக்குத் தெரிவிப்பதைத் தனது கடமையாகக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் கணிதம் பொறியியல் கல்விகளில் எவ்வாறு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற தனது கோணத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களையும், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும் சந்தித்து விளக்கியுள்ளார்.

                   Photo-1-Shri_Anand_Kumar_meeting_with_Hon_ble_PresidentPhoto-1-Shri_Anand_Kumar_meeting_with_Hon_ble_Prime_Minister4-741x517

    கல்வியில் சிறந்த மாணவர்களையும் சராசரி மாணவர்களையும் தனித்தனியே பிரித்து பள்ளிகளில் பாடம் நடத்துவது சிறந்த மாணவர்களை மேலும் விரிவான வகையில் பாடங்களைப் பற்றி சிந்திக்க வாய்ப்புகளை உருவாக்கும்; கிராமப்புற பள்ளி மாணவர்களின் பின்தங்கிய நிலையை உணர்ந்து அவர்களுக்கு ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வுகளில் மூன்றுமுறை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

    இதுவரை இவரது சூப்பர் 30 வழங்கிய தொண்டைப்  பாராட்டியவர்கள் பல நாடுகளும், உள்நாட்டு அயலக ஊடகங்களும், அரசியல்வாதிகளும், அமைச்சர்களும், பெருந்தலைவர்களும் எனப் பற்பலர். டிஸ்கவரி சேனல், ஜப்பான் தொலைக்காட்சி ஆகியவை இவரது கல்வித் தொண்டைப் பற்றிய டாக்குமெண்டரிகள் தயாரித்துள்ளன. நியூ யார்க் டைம்ஸ், டைம் மேகசின், நியூஸ் வீக் மேகசின், பி.பி.சி. போன்ற அயல்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் இவர்பற்றிய சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பாராட்டைத் தெரிவித்தத்துடன், நிதிஉதவியும் அளிக்க இயலும் என்ற செய்தி அனுப்பியிருக்கிறார். ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழகம் இவரது முயற்சியில் உருவான இந்திய மாணவர்களுக்குத் தங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பளிக்க ஆர்வத்தை வெளியிட்டுள்ளது. இவர் சிறப்புரையாற்ற வேண்டும் என்று கோரி பலநாடுகளில் இருந்தும், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம் போன்ற உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்தும் வரவேற்கப்பட்டுள்ளார். உலகின் சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த பள்ளிக்கான விருது போன்ற விருதுகளும் வழங்கப்பட்டு பாராட்டப் பட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருதுகளும் பெற்றுள்ளார். கோவையின் கற்பகம் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கிப்  பெருமைப்படுத்தியுள்ளது.

    திட்டத்தை விரிவுபடுத்தி 30 மாணவர்களுக்கு மேல் உதவவேண்டும் என்ற எதிர்காலத் திட்டமும் ஆனந்த் குமாருக்கு உண்டு. இவரது வெற்றியை அறிந்த பின்னர் இவரது திட்டத்திற்கு நிதி உதவி, நன்கொடை வழங்க  எனப் பலர் உதவ முன் வந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் இத்திட்டத்தை தனது சொந்த முயற்சியாக, இராமானுஜம் கணிதக் கல்விநிலையம் மூலம் கிடைக்கும் நிதிகொண்டே நடத்த விரும்புகிறார். ஆனால், இவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி இது போன்ற பல பயிற்சிப் பள்ளிகள் உருவாக்க உதவி செய்து வருகிறார். தற்பொழுது நலிவடைந்த இஸ்லாமிய மாணவர்களுக்கு என்பது போன்று மேலும் சில நிறுவனங்களும் பயிற்சிகள் தொடங்கி வெற்றி பெற்று வருகின்றன. அந்த பயிற்சிப்பள்ளிகளின் மாணவர்கள் வெற்றி பற்றிய செய்திகளும் “சூப்பர் 30” செய்திகளுடன் சேர்ந்தே வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திறமையை சரியாகப் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன், அதையே என் மாணவர்களுக்கும் சொல்லித் தருகிறேன் என்று கூறுகிறார் ஆனந்த் குமார். மேலும் , தெளிந்த மனநிலை, உறுதியான லட்சியம். திட்டமிட்ட பாதை இதுதான் “சூப்பர்-30′ பயிற்சி நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம் என்று கூறும் ஆனந்த் குமார், பொருளாதார வசதியின்மையால் தனது உயர்கல்விக் கனவுகள் தகர்ந்தாலும், தன்னால் இயன்றவரை தனது சொந்த முயற்சியில் வசதிவாய்ப்பு அற்ற மாணவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களது பொறியியல் கல்லூரிக் கனவுகளை நினைவாக்க உதவி  வருகிறார். திரு. ஆனந்த் குமார் அவர்கள் மேலும் பல மாணவர்களுக்கு பயிற்சியளிக்க விரும்பும் திட்டம் வெற்றியடையவும், அவர் முயற்சியால் மேலும் பலரது வாழ்வில் நல்லதொரு திருப்பங்களை ஏற்படுத்தவும் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

    தொடர்பு கொள்ள:
    Postal Address:
    Ramanujan School of Mathematics
    Shanti Kutir, Chandpur Bela, Patna 800 001
    email: mail@super30.org
    Web Site: http://www.super30.org/

    படங்களும் தகவல்களும் வழங்கிய www.super30.org இணையதளத்திற்கு நன்றி.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: தீயன ஆவதே போன்று கெடும்

     

    அல்லது செய்வார் அரும்பொரு ளாக்கத்தை
    நல்லது செய்வார் நயப்பவோ? – ஒல்லொலிநீர்
    பாய்வதே போலும் துறைவ! கேள் தீயன
    ஆவதே போன்று கெடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
    நல்லது செய்வார் நயப்பவோ?-ஒல் ஒலி நீர்
    பாய்வதே போலும் துறைவ! கேள்;-தீயன
    ஆவதே போன்று கெடும்.

    பொருள் விளக்கம்:
    அறநெறி வழியல்லாத செயல்களில் ஈடுபட்டு ஒருவர் ஈட்டிய செல்வத்தை நன்னெறியினைக் கடைப்பிடிப்பவர் விரும்புவார்களோ? (விரும்புவதில்லை, எனவே) ஒலியுடன் பாறையில் நீர் பாய்வது போன்று அமைந்த துறையைச் சேர்ந்தவரே, கேட்பாயாக. தீயவழியில் சேர்த்த செல்வம் பெருகுவது போலத் தோற்றம் தந்தாலும் விரைவில் அழிந்துவிடும்.

    பழமொழி சொல்லும் பாடம்: தீயவழியில் பொருள் சேர்க்கக்கூடாது. நல்வழி நடப்போர் தீயவழியில் வந்த பொருளை விரும்புவதில்லை, தீயவழியில் சேர்த்த செல்வமும் வளர்வது போன்று தோன்றினாலும் அழிந்து போகும். இக்கருத்தையே வள்ளுவரும்,

    களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
    ஆவது போலக் கெடும். (குறள்: 283)

    கொள்ளையடித்துப் பொருள் குவிப்பதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோற்றத்தைத் தந்தாலும், தீய வழியில் ஈட்டிய பொருளானது முன்னர் சேர்த்திருந்த செல்வத்தையும் இல்லாது அழித்துவிடும் என்று அறிவுறுத்துகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: சேணோக்கி நந்துநீர் கொண்டதேபோன்று

     

     

    தந்தம் பொருளும் தமர்கண் வளமையும்
    முந்துற நாடிப் புறந்தர லோம்புக
    அந்தண் அருவி மலைநாட! சேணோக்கி
    நந்துநீர் கொண்டதே போன்று.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    தம் தம் பொருளும், தமர்கண் வளமையும்,
    முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக
    அம் தண் அருவி மலை நாட! சேண் நோக்கி,
    நந்து, நீர் கொண்டதே போன்று!

    பொருள் விளக்கம்:
    தத்தமது பொருளின் அளவினையும், தன்னைச் சார்ந்திருப்போரது செல்வத்தின் நிலையையும் முற்றிலும் நன்கு ஆராய்ந்து, பின்னாளில் உதவும் பொருட்டு தகுந்த அளவு பொருளைச் சேமித்து வாழ வேண்டும். அழகிய குளிர்நீர் அருவிகள் பாயும் மலைநாட்டில் வாழ்பவரே, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நத்தை நீரைச் சேமித்துக் கொள்வது போல வாழ வேண்டும்.

    பழமொழி சொல்லும் பாடம்: நத்தை நீரை சேமித்துக் கொண்டுவாழ்வதுபோல, எதிர்காலத்தில் துன்பமின்றி வாழ்வதற்காகத் திட்டமிட்டுப் பொருள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, எதிர்காலத்திற்காகத் திட்டமிடலை வலியுறுத்த வள்ளுவரும்,

    எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
    அதிர வருவதோர் நோய். (குறள்: 429)

    வரப்போவதை முன்னே அறிந்து தன்னைக் காத்துக் கொள்ளும் திறன் கொண்ட அறிவுடையவர்க்கு, அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது, என்றும் அவ்வாறு திட்டமிடுதலை அறிவுடைமை என்பதனைக் குறிக்க,

    ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். (குறள்: 662)

    இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம், என்றும் குறிப்பிடுகிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 15, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு ‘மல்ட்டி ஃபன்’ குழு மாணவர்கள் 

    20150527_499_HR_042

    ஏர்பஸ் விமான நிறுவனம் யூனெஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கான உலகளாவிய போட்டியாக “ஃப்ளை யுவர் ஐடியாஸ்” (Unesco-Airbus ‘Fly Your Ideas’ global student competition) என்ற போட்டியை நடத்தி வருகிறது. மாணவர்களிடம் வானூர்தி தயாரிப்பின் தொழில் நுட்ப ஆர்வத்தைத் தூண்டுவதும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க ஊக்கமூட்டுவதுமே இப்போட்டியின் அடிப்படை நோக்கமாகும். நான்காவது முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிபெற்ற “மல்ட்டி ஃபன்”(Multifun) என்ற இந்திய மாணவர் குழுவினரை இவ்வார வல்லமையாளர்களாகப் பாராட்டி வாழ்த்துவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். மல்ட்டி ஃபன் மாணவர் குழுவினரை வல்லமையாளர்களாகப் பரிந்துரைத்தவர் வல்லமை இதழின் நிறுவனர் முனைவர் அண்ணா கண்ணன் அவர்கள். அவரது பரிந்துரைக்காக அவருக்கு நன்றியை வல்லமைக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

    Team Multifun2

    இந்த ஆண்டு இப்போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3,700; 104 நாடுகளில் இருந்து பலதுறைகளையும் சேர்ந்த 518 குழுவினர் போட்டியிட்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஆசியா பசிஃபிக் நாடுகளின் மாணவர்கள் 45%, ஐரோப்பியர் 35%, அமெரிக்கர் 15%. இவர்களில், 71% குழுக்கள் பலவகைப் படிப்புகளைக் கொண்ட மாணவர்களையும், பலநாடுகளில் வாழும் மாணவர்களையும், ஆண்களும் பெண்களும் எனப் பல பிரிவினரும் இணைந்த குழுக்களாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் செயல்திறன் மேம்பாடு, பயணிகளின் வசதி அதிகரிப்பு, எரிபொருள் சேமிப்பு, எளிய செயல்படுத்தும்தன்மை, பயணப் பாதுகாப்புக்கு உதவி, மக்கள் தொடர்பு மேம்பாடு என விமானப்பயணத்தினை மேம்படுத்தும் வகையில் குறிப்பிட்ட இந்த ஆறு பிரிவுகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து தங்கள் திட்டத்தை மாணவர்கள் ஏர்பஸ் நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.  இவ்வாறு மாணவர்கள் சமர்ப்பித்த திட்டங்களைப் பரிசீலித்த பின்னர், சென்ற ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற முதல் சுற்றில் 100 குழுவினர் இரண்டாம் சுற்றுக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். சென்ற மாதம் மே 27 ஆம் தேதி அன்று நடந்த இறுதிச் சுற்றில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டவர்கள் பிரேசில், சீனா, ஜப்பான், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 5 குழுவினர்.

    Finalists on the stage collage

    நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (Delft University of Technology, Netherlands) பயிலும் இந்திய மாணவர் சதீஷ்குமார் அனுசூயா பொன்னுசாமியின் தலைமையில் நான்கு நாடுகளில் படிக்கும் ஐந்து இந்திய மாணவர்கள் ‘மல்ட்டி ஃபன்’ என்ற ஒரு குழுவாக இணைந்தார்கள். தாமோதரன் வீராசாமி (சிட்டி யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன்), மொஹித் குப்தா (ஜியார்ஜியா டெக் யுனிவர்சிட்டி, அமெரிக்கா) , சஷாங்க் அகர்வால் மற்றும் அஜித் மோசஸ் (இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு) என உலகின் பல பகுதிகளில் படித்துவரும் இந்திய மாணவர்கள் தொலைத்தொடர்பு வழியாகவே இணைந்து பணியாற்றினார். இவர்கள் பொறியியல் துறையிலும், விண்வெளிப் பொறியியல் துறையிலும், வானியல் துறையிலும் உயர்கல்வி, முனைவர் ஆய்வுக்காகப் பயிலும் மாணவர்கள். மொஹித் குப்தாவைத் தவிர்த்து பிறர் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை வழி நடத்தியவர் இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸின் பேராசிரியர் தினேஷ்குமார் ஹருர்சம்பத் அவர்கள். கடந்த ஆறு மாதங்களாக இணையவழி ஒருங்கிணைந்து பணியாற்றிய பின்னர், ஜெர்மனியில் நடந்த இறுதிப் போட்டியில் நேரடியாக முதன்முதலில் சந்தித்து தங்களது அறிவியல் கருத்தை போட்டியின் நடுவர்களிடம் மல்ட்டி ஃபன் குழுவினர் விளக்கினர்.

    மல்ட்டி ஃபன் குழு ஏர்பஸ் நிறுவனத்தின் போட்டியில் முன்வைத்தத் திட்டம்:

    Team Multifun3
    விமானப்பயணத்தின் பொழுது ஏற்படும் அதிர்வுகளைப் பயன்படுத்தி அவற்றில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, மின்கலங்களில் அந்த மின்சாரத்தைச் சேமித்து விமானப்பயணத்தின் பொழுது தேவைப்படும் விளக்குகள், கேளிக்கை பயன்பாட்டிற்கான மின்திரைகள் ஆகியவற்றை இயக்கப் பயன்படுத்துவது இவர்கள் முன்வைத்த திட்டமாகும். விமானப்பயணத்தில் ஏற்படும் அதிர்வுகள் யாவும் இதுநாள்வரை விரயமாகின்றன. ‘பைஸோஎலக்ட்ரிக் இழைகள்‘ (Piezoelectric fibres) சிறு அதிர்வுகளால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இந்த இழைகளால் ஆன உறையை விமானத்தின் இறக்கைகளின் மேல் அமைத்து அதன்மூலம் பெறும் பெறும் மின்சக்தியை மின்கலத் தகடுகளில் சேமித்து பயன்படுத்த இயலும். நீண்ட தூர விமானப்பயணத்தில் விமானம் 12 மணி நேரம் வரை பறக்கும், அப்பொழுது கிடைக்கும் மின்சக்தியே விமானத்தின் விளக்குகளை ஒளிர்விக்கப் போதுமானது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் விமானப்பயணத்தில் எரிபொருள் சேமிப்பிலும் முன்னேற்றம் காணலாம் என்று மல்ட்டி ஃபன் குழுவினர் நடுவர்களுக்கு விளக்கினர். இவர்களது திட்டம் நடைமுறைப்படுத்தவும் எளிதானது, தொலைநோக்குப் பார்வை கொண்டது, முன்னர் இதுவரை எவரும் முன்வைக்காத ஒரு புதிய கோணம் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 30,000 யூரோ வெள்ளிகள் பரிசளிக்கப்பட்டனர்.

    SKETCH_Multifun 1

    வெற்றிபெற்ற குழுவின் தலைவர் சதீஷ்குமார் அனுசூயா பொன்னுசாமி, தனது குழுவினர் யாவரும் இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸில் ஒன்றாகப் படித்த மாணவர்கள், இந்தியாவின் பின்புலம் கொண்ட மாணவர்கள் என்றாலும் பல்வேறு மொழிகளையும் பேசும் பின்புலம் கொண்டவர்கள் என்றும், அவர்களது பலவிதப் பின்னணியே மல்ட்டி ஃபன் என்று குழுவிற்குப் பெயரிடக் காரணமானது என்று வெற்றிபெற்ற பின்னர் பத்திரிக்கைகளுக்கு அளித்த நேர்காணலில் கூறினார். இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸின் கல்விச் சூழ்நிலையும், வழங்கும் பயிற்சியும் புதுமையான எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது என்றும் கூறியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றி, புதுமையான திட்டமொன்றை முன்வைத்து, உலகளாவிய போட்டியில் வெற்றிபெற்று தாய்நாட்டின் பெருமையை உயர்த்திய இம்மாணவர்களை வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பாராட்டிப் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தகவல்களும் படங்களும் வழங்கிய இணையதளம்: http://www.airbus-fyi.com/article/769/team-multifun

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: வேல்குத்தின் காணியின் குத்தே வலிது

     

    தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
    பொருளா லறுத்தல் பொருளே – பொருள்கொடுப்பின்
    பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேற்குத்தின்
    காணியின் குத்தே வலிது.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்
    பொருளால் அறுத்தல் பொருளே; பொருள் கொடுப்பின்,
    பாணித்து நிற்கிற்பார் யார் உளரோ?-வேல் குத்தின்
    காணியின் குத்தே வலிது.

    பொருள் விளக்கம்:
    தனது தகுதியை உணராது ஆணவத்துடன் செயல்படும் திறமையற்றப் பகைவரை, பொருள் கொண்டு அழித்தலே சரியான நடவடிக்கை. (அந்த எதிரியை ஒழிக்கும் நோக்கில் கைக்கூலியாக) தேவையானப் பொருளைக் கொடுத்தால் பகையை நீக்கத் தயங்குபவர் யாராவது உள்ளார்களா? கூரிய வேலைக் கொண்டு அழிப்பதைக் காட்டிலும் பணத்தால் அடிப்பதே வலிமையானது.

    பழமொழி சொல்லும் பாடம்: எல்லோருக்கும் ஒரு விலையுண்டு, பணம் எதையும் சாதிக்க வல்லது என்பதால் செல்வதைத் தக்க முறையில் பயன்படுத்தி எதிரியின் இடையூறை நீக்க வேண்டும்.

    காணி என்பது பெருஞ்செல்வத்தில் ஒரு சிறு பகுதி, அதனைப் பயன்படுத்தி எதிரியின் இடையூறை நீக்க வேண்டும். இந்தப் பழமொழி கூறும் பொருளில் உள்ள திருக்குறள்,

    செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃகதனிற் கூரிய தில். (குறள்: 759)

    பகைவரின் செருக்கை அழிக்கத் தகுதியான கூர்மையான ஆயுதம் செல்வம் போன்று வேறொன்று இல்லை என்பதால் செல்வத்தை ஈட்டுவது தேவையாகிறது என்று அறிவுறுத்துகிறது.

    இந்தப் பழமொழியின் கருத்தை ஒத்த பல பழமொழிகள் தமிழில் உண்டு. ஈட்டி எட்டியவரைப் பாயும், பணம் பாதாளம் வரை பாயும். பணம் பத்தும் செய்யும். குரைக்கும் நாய்க்குப் போடும் எலும்புத்துண்டு நாயை அமைதிப்படுத்தும். இக்காலத்து அரசியலில் எதிரியை ஒழிக்க அல்லது விலைக்கு வாங்கிவிட உதவுவது பணம். இப்பழமொழியை ஒத்த ஆங்கிலப் பழமொழிகள் “A golden dart kills where it pleases”, “A golden hammer breaks an iron gate” ஆகியன.

    Share