பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: இழி தரு தண்புனல் நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை
கல்வி யகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின வேந்தன் அவைகாட்டும் – மல்கித்
தலைப்பாய் இழிதரு தண்புனல் நீத்தம்
மலைப்பெயல் காட்டுந் துணை.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும்,
கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி,
தலைப்பாய் இழிதரு தண் புனல் நீத்தம்
மலைப் பெயல் காட்டும் துணை.
பொருள் விளக்கம்:
பரந்துபட்ட கல்வி அறிவையும், சிறந்த நாவன்மையையும், எதிரியை அழித்துவிடும் கொடுஞ்சினத்தையும் கொண்ட மன்னவனின் திறமையானது அவனது அவையோரின் சிறப்புகளினால் அமைவது என அறிந்து கொள்ளலாம். (அது எவ்வாறென்றால்) பெருகிப் பொங்கி வீழ்கின்ற குளிர்ந்த புனலின் அளவினை மலை மீது பொழிந்த மழையின் அளவு காட்டி நிற்பது போலவாகும்.
பழமொழி சொல்லும் பாடம்: ஒரு சிறந்த அரசனின் கல்வியையும், நாவன்மையையும், வீரத்தையும் அவனது அவையோரின் திறம் கண்டே அறிந்துவிட முடியும். இவ்வாறாக அவையோரின் திறமையினால் மன்னன் புகழடைவதை வள்ளுவர் தரும் இரு வேறு குறள்களின் வழி அறியலாம்.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். (குறள்: 445)
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், சிறந்த அறிவுரை கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். (குறள்: 446)
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.