Author: ஏறன் சிவா

  • மனத்துக்கு உரைத்தல்!

    மனத்துக்கு உரைத்தல்!

    ஏறன் சிவா

    மனமே மனமே மயங்காதே — ஒரு
    மழலை போலே கலங்காதே!
    தனியே தனியே புலம்பாதே — விழித்
    தண்ணீ ரில்நீ தளும்பாதே!

    உளமே உளமே ஒடுங்காதே — வரும்
    உயிர்த்துன் பத்தால் நடுங்காதே!
    குளமாய்க் கண்கள் நீர்பெருக — உன்
    கோலம் நொந்து குறுகாதே!

    நெஞ்சே நெஞ்சே விசும்பாதே — வரும்
    நினைவுத் துயரால் பொசுங்காதே!
    அஞ்சி யஞ்சி நடவாதே — நீ
    அழுகைக் கல்பட் டிடறாதே!

    துன்பம் நிழலாய்த் தொடர்ந்துவரும் — அது
    துயரம் கோடி தூக்கிவரும்!
    கண்ணே அதனைக் எண்ணாதே — இனி
    கவலைத் தீயை உண்ணாதே!

    தோளின் மீதோர் அணிகலனாய் — நீ
    தூக்கி நடப்பாய் துணிவினையே!
    காலம் மெல்லக் கனிந்துவரும் — உன்
    கைக்குள் உலகம் பணிந்துவிழும்!

    Share
  • ஒருநாள் ஒருத்தி!

    ஒருநாள் ஒருத்தி!

    ஏறன் சிவா

    முன்னொரு நாளில் வானத்தில்
    முழுமதி உலவும் நேரத்தில் — உன்
    கண்ணிரண் டில்நல் ஒளிகண்டேன்
    காதல் என்னும் வழிநடந்தேன் — உன்
    பொன்னிரு கைகள் தீண்டியதால்
    பொழில்தரு மயக்கம் நானுணர்ந்தேன் — என்
    விண்ணிரன் டாகி விரிந்ததடி — பெரு
    வியப்பினில் உள்ளம் குளித்ததடி!

    பின்னொரு நாளில் வானத்தில்
    பிறைமதி உலவும் நேரத்தில் — நீ
    தனியோர் இடத்தில் தவித்திருந்தாய்
    தாமரை முகமாய்ச் சிவந்திருந்தாய் — உன்
    பண்செவிக் குழியில் பாய்ந்ததடி — உன்
    பார்வையில் உள்ளம் சாய்ந்ததடி! — அன்று
    பன்னிரு கோணம் உனில்கண்டேன்
    பனிநில வடியில் உனையுண்டேன்!

    இன்னொரு நாளில் வானத்தில்
    இருள்மதி சூழ்ந்த நேரத்தில் — உன்
    கண்ணொரு குளமாய் மாறியதேன்? — அது
    கடல்தரு நீராய்க் கரித்ததுமேன்? — அடி
    என்னொரு இதயம் பறித்தவளே
    எதற்குளங் கலங்கி இருக்கின்றாய் — சொல்
    உன்னொருத் திக்கே வாழ்கின்றேன் — உன்
    ஒளிமுகத் தால்தான் நீள்கின்றேன்!

    Share
  • பெருஞ்சித்திரனார் வீட்டைப்போல்!

    பெருஞ்சித்திரனார் வீட்டைப்போல்!

    ஏறன் சிவா

    ஓடுடைந்து விதவிதமாய்
    உறுத்துகின்ற பல்பூச்சிக்
    கூடடைந்து மனைக்குரிய
    கோலந்தான் முற்றழிந்து
    வீடிடிந்து ஒளிவீசும்
    விளக்கிழந்து நிற்பதைப்போல்
    நாடிழந்து நிற்குதையா
    நற்றமிழர் பேரினந்தான்!

    நடையிழந்து குருதிபாயு
    நரம்பிழந்து வானுயர்ந்த
    கொடியிழந்து  வளையாச்செங்
    கோலிழந்து மறவரெனும்
    படையிழந்து பார்ப்பதற்குப்
    பேய்வீடாய் நிற்பதைப்போல்
    உடையிழந்து உயர்மானம்
    இழந்ததையா தமிழினந்தான்!

    காலங்கள் மாறுமையா
    கனித்தமிழர் எழுச்சிவரும்
    வேல்எங்கள் பகைவர்தம்
    வீதிகளை வெற்றிகொள்ளும்
    கோலங்கள் மாறிவிடும்!
    கோட்டைஎழும்! கொடிபறக்கும்!
    வாழுங்கள் அதுவரையில்
    வண்டமிழர் நெஞ்சத்தே!

    (மார்ச் 10, பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள்)

    Share
  • தீயேறு

    தீயேறு

    ஏறன் சிவா 

    சருகாய் மண்ணில் புரளாதே — மனச்
    சத்தை இழந்து மிரளாதே!
    பருந்தாய் நீயும் மாறிவிடு — வான்
    பரப்பின் மீதே ஏறிவிடு!

    துளியாய் இலைமேல் தூங்காதே — படும்
    துயர்கள் கண்டே வீங்காதே!
    உளியாய் நீயும் மாறிவிடு — இவ்
    உலகம் எனக்கெனக் கூறியெடு!

    இருளின் வலையில் சிக்காதே — என்னால்
    இயலா தென்றே நிற்காதே! — ஒளிப்
    பொருளைக் கையில் ஏந்திவிடு — அட
    போடா தடைக்கல் தாண்டிவிடு!

    கல்லைப் போலே கிடக்காதே — தக்கைக்
    கழிபோல் வீணாய் மிதக்காதே!
    எல்லை கிழித்து நீகடப்பாய் — உன்
    இலக்கை வென்றும் நீநடப்பாய்!

    பனியில் நடுங்கி உறையாதே! — இழிப்
    பகைவர்க் கடங்கி மறையாதே!
    மனதால் இன்னும் மெருகேறு — இம்
    மண்ணை அடக்கும் செருக்கேறு!

    எதைக்கேட் டாலும் இருமாதே — உன்னில்
    இருக்கும் துணிவை மறவாதே!
    பதராய் வாழ்ந்தாய் போதுமது — இடர்ப்
    பாதை தகர்க்க மோதிவிடு!

    எரியும் நெருப்பில் வெந்தழிந்து — நீ
    இங்கே கரியாய் போவதுவோ?
    புரியும் புரியும் நீமாறு — இப்
    புவியை வெல்லத் தீயேறு!

    காற்றைப் போலே நீபரவு — ஆழ்
    கடல்போல் கொள்வாய் உள்தெளிவு!
    வீற்றி ருப்பாய் உயரத்தில் — ஒரு
    வெற்பின் மீதோர் வெற்பெனவே!

    Share
  • இவனை என்செய்வேன்!

    இவனை என்செய்வேன்!

    ஏறன் சிவா

    உலகத்தில் முதல்மொழியெம்
    முத்தமிழ்தான் என்பான் — சொல்
    ஒன்றுமட்டும் உதிர்த்துவிட்டு
    ஆங்கிலமே தின்பான்!

    இலக்கணத்தில் நமக்கிங்கோர்
    இணையில்லை என்பான்! — அதில்
    இருக்குமொரு சூத்திரத்தில்
    ஏதோன்றும் அறியான்!

    இலக்கியங்கள் நம்தலைமேல்
    இருக்குமுடி என்பான் — அதில்
    எந்நூலும் பொருள்படித்து
    இதுவரையில் அறியான்!

    தாய்மொழிக்குத் தாய்மொழியெம்
    தமிழ்மொழிதான் என்பான் — ஒரு
    நாய்கூட “வள்”ளென்கும்
    இவன்தமிழைக் கொல்வான்!

    கலைகட்கெலாம் தாய்க்கலையெம்
    தமிழ்க்கலையென் றுரைப்பான் — நீ
    ஒருகலையை உருப்படியாய்
    கல்லென்றால் முறைப்பான்!

    உலகுக்கே ஒழுக்கம்தந்தோர்
    தமிழரென்று கதைப்பான் — அந்த
    ஒழுக்கத்தை இன்றிவனே
    பாடையேற்றி புதைப்பான்!

    என்சொல்லி எப்பயனும்
    எம்மாற்றமும் இல்லை — தமிழா நீ
    என்றுயர்த்திப் பிடிப்பாயோ
    புலியொடுமீன் வில்லை!

    வெல்லவெமை உலகத்தில்
    வீரனில்லை என்பான் — இவன்தன்
    தலைவன்யார் பகைவன்யார்
    தரம்பிரிக்கத் தெரியான்!

    உலகாண்ட இனமென்றே
    ஊர்முழுக்கச் சொல்வான் — தன்
    நிலங்காக்க ஒருநாளும்
    நெஞ்சுயர்த்தி நில்லான்!

    மருத்துவத்தில் நாமெல்லாம்
    மலையுயர்ந்தோம் என்பான் — தன்
    மனநோயாம் மடம்போக்க
    ஒருமருந்தும் தேடான்!

    யாவருமே கேளிரென்றே
    எவரெவர்க்கோ சொல்வான் — தன்
    இனக்குடியைக் கீழ்மேலெனும்
    வேற்றுமையால் கொல்வான்!

    என்சொல்லி எப்பயனும்
    எம்மாற்றமும் இல்லை — தமிழா நீ
    என்றுயர்த்திப் பிடிப்பாயோ
    புலியொடுமீன் வில்லை!

    இன்றுபோல காலமென்றும்
    இருப்பதுவும் இல்லை — உலகம்
    அன்றுசொல்லும் “தமிழனெ”ன்ற
    தலைமந்திரச் சொல்லை!

    Share
  • தமிழ்த்தீ!

    தமிழ்த்தீ!

    ஏறன் சிவா 

    சோலைதரும் எழிலென்றும் அங்கே தோன்றித்
    துள்ளிவந்து குளுமைதரும் தென்றல் என்றும்
    ஆலைதரும் அடிக்கரும்புச் சாறே என்றும்
    அமுதென்றும் அறமென்றும் நல்லன் பென்றும்
    பாலைதரும் கள்ளென்றும் பறவை பேசும்
    பனியொத்த ஒலியென்றும் இசைப்பாட் டென்றும்
    கோலமிகு மொழியென்றும் தமிழைக் கொஞ்சிக்
    குலைத்ததெல்லாம் போதுமினித் தீயே என்போம்!

    கனியென்றும் சுளையென்றும் அதிலெ டுத்த
    களிப்பூட்டும் கனிச்சாறே என்றும் நல்ல
    அணியென்றும் அணிதந்த அழகே என்றும்
    அரும்பென்றும் மலரென்றும் அதன்தேன் என்றும்
    பனியென்றும் பனிபோன்ற குளுமை என்றும்
    பஞ்சென்றும் பஞ்சொத்த மென்மை என்றும்
    இனியென்றும் தமிழ்த்தாயை இவ்வா றெல்லாம்
    இயம்பாதீர் தீயென்றும் இயம்பு வீரே!

    இறைமுகத்தை எல்லோரும் அறிவார்! உன்றன்
    எழில்முகத்தை எல்லோரும் அறிவார்! தூய
    அறமுகத்தை அகமுகத்தை அறிவார்! நல்ல
    அன்பொத்தத் தாய்முகத்தை அறிவார்! உன்றன்
    கறையில்லா கனிமுகத்தைக் கண்ட போதும்
    கடுகளவும் காணவில்லை பகைவர் உன்றன்
    புறமுகமாய்ப் பொங்கியெழும் தீ முகத்தை
    புறப்படுவாய் அம்முகமும் காட்டு வாயே!

    மென்காற்றும் ஒருநாளில் புயலாய் மாறும்
    மேல்வானும் சினம்வந்தால் இடியாய்ச் சீறும்
    அன்பினையே தந்தவளாய் இருந்தாய் போதும்
    அடங்காத சினத்தீயை இங்கே காட்டி
    முன்னைக்கும் முன்பிருந்த வளமை யோடு
    முடிதாழா முடிசூடும் நிலைய டைந்து
    தென்மொழியே பெருந்தீயாய்ப் பரவ வேண்டும்
    தமிழென்றால் தீயென்றும் காட்டல் வேண்டும்!

    Share
  • விண்ணேறு!

    விண்ணேறு!

    ஏறன் சிவா

    எத்தடை வரினும் முன்னேறு — மன
    இடரினைக் கிழித்தே விண்ணேறு! — கடல்
    முத்தினைப் போலே ஒளிவீசு! — நீ
    மூடரைச் செதுக்கும் உளிவீசு!

    கத்தியின் மீதும் நடைபழகு — சில
    கயவரை ஒழிக்கும் படைபழகு! — உன்
    முத்திரை பதிப்பாய் காலடியில் — கொஞ்சம்
    முயன்றால் அடைவாய் நாலடியில்!

    புல்லையும் வில்லாய் நீமாற்று — வரும்
    புயலிலும் அணையாத் தீஏற்று! — பெருங்
    கல்லையும் நொறுக்கும் வலிமைபெறு — எவரின்
    கண்களின் முன்னும் எளிமைபெறு!

    முல்லையைப் போலே மணம்பரப்பு! — பொய்
    மூச்சினர்க் கெதிராய்ச் சினம்பெருக்கு!
    சொல்லிய சொல்லில் பொலிவுபெறு — நீ
    சொல்கிற சொல்லில் தெளிவுபெறு!

    தாள்களை வேல்போல் கூராக்கு! — இத்
    தரையினை முயன்றே நேராக்கு!
    தோள்கள் இரண்டை நீநிமிர்த்தி — இனித்
    தொடங்குக வாழ்க்கைப் பெரும்போரை!

    சேற்றினுள் உன்னைப் புதைத்தாலும் — நற்
    செந்தா மரைபோல் வெளியெழுவாய்!
    ஆற்றினில் தூக்கி எறிந்தாலும் — ஒரு
    அழகிய படகாய் நீமிதப்பாய்!

    பெருஞ்சுடர் நடுவே எரிந்தாலும் — உனைப்
    பெரும்புவி நினைவில் கொள்ளும்படி,
    அரும்பெருஞ் செயலே நீசெய்வாய் — அதில்
    அடையுமிவ் வுலகம் நற்பேறே!

    Share
  • ஏறன் தமிழ்த்தாய் வாழ்த்து!

    ஏறன் தமிழ்த்தாய் வாழ்த்து!

    ஏறன் சிவா

    சிந்தனை மிகவே தந்தும்;
    சிறுமைகள் விலகச் செய்தும்;
    நிந்தனை செய்தார் பேச்சின்
    நிலைகடந் தேற வைத்தும்;
    சந்தனம் போல் மணக்கும்
    பாடலைத் தாளில் தந்த,
    செந்தமிழ்த் தாயே நின்றன்
    திருவடி வாழ்த்து வோமே!

    அறவொளி; உயிர்கள் மீதே
    அன்பொளி; நமை வளர்க்க
    அறியாமை மறைய வைக்கும்
    அறிவொளி; நாட்டைக் காக்கும்
    மறம்திறம் இரண்டும் ஊணில்
    மனத்தினில் ஊற வைத்த
    நறுஞ்சுவைத் தமிழே நின்னை
    நாளெலாம் வாழ்த்து வோமே!

    உண்மைகள் உணர வைத்தும்;
    உரிமையை உரைக்க வைத்தும்;
    பெண்மையை மதிக்க வைத்தும்;
    பெரும்பொருள் ஆசை பற்றும்
    புன்மைகள் புதைய வைத்தும்;
    பொழுதெலாம் பயனாய்ச் செய்யும்
    வண்டமிழ்த் தாயே உன்றன்
    மலரடி வாழ்த்து வோமே!

    இலையிடை ஆட வைத்தும்;
    இசையிடைப் பாட வைத்தும்;
    மலையிடை மயங்க வைத்தும்;
    மலரிடை மணக்க வைத்தும்;
    சிலையிடை உயிரே உள்ள
    சிலைபோல நிற்க வைத்தும்;
    கலையிடைப் பணிய வைத்த
    கனித்தமிழ் வாழ்த்து வோமே!

    எத்தனை கலைச்செல்வங்கள்!
    எழில்மிகு தோற்றம் கண்டோம்!
    அத்தனை இன்பம் யாவும்
    அருளிய உமக்கெம் ஆவி
    மொத்தமீந் தாலும் சற்றும்
    முற்றாதெம் பற்றே என்று
    முத்தமிழ்த் முகையே நின்னை
    முடிதாழ வாழ்த்து வோமே!

    Share
  • இனச்சுடர் எழுக!

    இனச்சுடர் எழுக!

    ஏறன் சிவா

    வான்தரும் சுடர்போல் வண்டமிழ் இனத்தார்
    மனங்களில் ஒளிவிடும் சுடரே!
    தீந்தமிழ் என்னும் தென்னவள் வயிற்றில்
    திடமுள மழலையாய்ப் பிறந்தாய்!
    மீன்புலி வில்லை ஏந்திய வேந்தர்
    அரியணைக் கட்டிலில் தவழ்ந்தாய்!
    பைந்தமிழ் மக்கள் தோள்களில் ஏறிப்
    பாரெலாம் ஊர்வலம் புரிந்தாய்!

    பொன்னிறத் தட்டில் பொலிவுறு மணியாய்ப்
    புகழுடன் வளமுடன் திகழ;
    மண்பிறப் பில்..நீ மாபெரும் பிறப்பை
    அடைந்ததை வெறுக்கிற சிலரோ;
    நற்றமிழ் மொழியை நவில்வதால் தமிழ்த்தாய்ப்
    பிள்ளைமேல் இனக்கொலை தொடுத்தார்!
    எற்றைக்கும் சுடரை இருள்கரம் மறைக்காது
    என்பதை அறிகிலார் மூடர்!

    பெருகுக விரைந்து பெருவெளி முழுதும்
    பெருகுக பெருகுக சுடரே!
    உருகுக தமிழர் உளத்தினைக் குழம்பாய்
    உருக்குக உருக்குக சுடரே!
    பருகுக பகைவர்ப் படையினை முற்றாய்ப்
    பருகுக பருகுக சுடரே!
    செருகுக தமிழ் இனச்சுடர் நெருப்பு
    திசையெலாம் எழுந்தவுண் மையை!

    Share
  • ஏறன் சிவாவின் துளிப்பாக்கள்

    ஏறன் சிவாவின் துளிப்பாக்கள்

    ஏறன் சிவா

    புகார் தெரிவித்ததும்
    உடனே நடவடிக்கை எடுத்தனர்!
    புகார் கொடுத்தவர் மீது!

                      ****

    இடைவிடாமல் தொடர்கிறது
    உண்ணாவிரதப் போராட்டம்
    ஏழையின் வீடுகளில்!

                      ****

    சாலையைப் புதுப்பிக்கக்
    கொஞ்சம் நிதி ஒதுக்கப்பட்டது
    அரசியல்வாதிக்கு!

                      ****

    Share
  • ஏறன் சிவா துளிப்பாக்கள்

    ஏறன் சிவா துளிப்பாக்கள்

    ஏறன் சிவா

    வீசப்பட்ட விதைகள்
    முளைத்து வந்தது
    நம்பிக்கை!

                   ****

    துள்ளியோடிய அணில்
    ஏறி அமர்ந்துகொண்டது
    மனத்தில்!

                    ****

    சோற்றுக்கே வழியில்லை
    வீடு கட்டுகிறான்
    சிலம்பப் பயிற்சி!

                    ****

    வீட்டுக்கு வரும் விருந்தினர்
    ஓடி ஓடி வரவேற்கிறான்
    நாய்க்குட்டி!

                     ****

    யாரும் மதிக்காததால்
    வெளியிலேயே நின்றுவிட்டது
    செருப்பு!

                      ****

    ஆற்றில் விழுந்த பொம்மை
    அடித்துச் செல்கிறது
    மழலையின் மனம்!

                       ****
    நூலகம் மூடப்பட்டதும்
    புதிதாகத் திறக்கப்பட்டது
    மதுக்கடையும் சிறைச்சாலையும்!

                       ****
    கைவிடப்பட்ட குழந்தைகள்
    குப்பையில் தேடுகிறார்கள்
    தங்கள் வாழ்க்கையை!

                       ****

    கோடைக்காலப் பயிர்கள்
    வாடுகிறது
    உழவனின் குடும்பம்!

                        ****

    நனைக்காமலேயே நம்மைக்
    குளிப்பாட்டி விடுகிறது
    குளிர்ந்த தென்றல்!

    Share
  • தமிழரின் நாக்கு!

    தமிழரின் நாக்கு!

    ஏறன் சிவா 

    மீன்புலிவில் வேந்தருடை
    மெய்யுரைக்கத் தமிழர்நா கூசாது! — அவர்
    வான்முட்டும் வரலாற்றை
    வகுத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — இங்கே
    காண்!தமிழர் அறிவியலைக் கணத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — பாரில்
    நான்தமிழன் எனப்பெருமை
    நவில்வதற்குத் தமிழர்நா கூசாது!

    வெல்நாட்டுப் போர்வெற்றியை
    விளக்குதற்குத் தமிழர்நா கூசாது!  — அவர்
    வல்கோட்டைக் கட்டியதை
    வாயுரைக்கத் தமிழர்நா கூசாது! — அணைக்
    கல்கோட்டைக் காலத்தைக்
    கணித்துரைக்கத் தமிழர்நா கூசாது! – தமிழ்ச்
    சொல்கோட்டைப் பெரிதென்றுச்
    சூளுரைக்கத் தமிழர்நா கூசாது!

    நெல்விளைக்கும் வேளாண்மையின்
    நெறியுரைக்கத் தமிழர்நா கூசாது! — கருங்
    கல்விளைக்கும் சிற்பத்தின்
    கலையுரைக்கத் தமிழர்நா கூசாது! — அங்கே
    பல்துறையின் பண்புகளைப்
    பகுத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — திரு
    வள்ளல்களின் கொடைத்திறனின்
    வளமுரைக்கத் தமிழர்நா கூசாது!

    பொன்வளத்துக் குன்றேறிப்
    புகழுரைக்கத் தமிழர்நா கூசாது! — தங்கள்
    மண்வளத்து எழிலுரைக்க
    மணித்துளியும் தமிழர்நா கூசாது! — இரு
    கண்போன்ற இலக்கியத்தின்
    கடலுரைக்கத் தமிழர்நா கூசாது! — வாழும்
    தென்மொழியின் திறமுரைக்கத்
    தீநடுவும் தமிழர்நா கூசாது!

    அம்பாலே உலகாண்ட
    அழகுரைக்கத் தமிழர்நா கூசாது! — அவர்
    தம்அறமும் மறம்;திறமும்
    சாற்றுதற்குத் தமிழர்நா கூசாது! — கொண்ட
    அன்பாலே இழந்ததனை
    அடித்துரைக்கத் தமிழர்நா கூசாது! — ஆனால்
    தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில்
    தமிழரோடு தமிழ்ப்பேசத் தான்கூசும்!

    Share
  • மூவர் வாழ்க!

    மூவர் வாழ்க!

    ஏறன் சிவா 

    தன்நாட்டின் எல்லைக்குள் தொழில்கள் செய்யத்
    தரையிரங்கி வந்தவர்கள்; இங்கி ருக்கும்
    பொன்வளத்தைக் கண்டுமனப் பேரா சையால்
    போர்செய்து; தந்திரங்கள் பலவுஞ் செய்து;
    மண்பிடித்தார்! மக்களினை அடிமை செய்து
    மலைவளங்கள் தொடங்கி,கடல் வளத்தை யெல்லாம்
    அன்னியர்கள் சுரண்டுகின்ற அவலங் கண்டே
    அகங்கொதித்தார் எரிமலைபோல் அங்கே மூவர்!

    அயலானை விரட்டுதற்கு அமைதிப் போரா?
    ஆகாது அகிம்சையின் பாதை என்று
    புயமுயர்த்தி, தோளுயர்த்தி, குரலு யர்த்தி
    போர்செய்யப் புறப்பட்டார் அந்த மூவர்!
    புயலொன்று குடிசைக்குள் புகுந்தாற் போல
    புகுந்தார்கள் அன்னியர்தம் கோட்டைக் குள்ளே!
    பயமின்றி, சிறுதுளியும் தயக்க மின்றி
    பற்றவைத்தார் விடுதலையின் ஒளியைக் கண்டார்!

    சுகதேவும், இராசகுரு, பகத்து சிங்கும்
    சுண்டிவிட்ட அந்நெருப்பு சுற்றி யுள்ள
    திக்கெல்லாம் பரவியது! அன்னி யர்;அத்
    தீயணைக்க மூவருடைத் தலையைக் கேட்டார்!
    மக்களுக்கே உழைத்ததனால் மூவ ரையும்
    மாட்டினார்கள் தூக்கினிலே! உலகில் என்றும்;
    எக்காலும் புரட்சியாளர் சிந்த னைகள்
    இறக்காது! இறக்காது! வாழ்க மூவர்!

    (மார்ச்சு 23, 1931 அன்று விடுதலைப் போராட்ட வீரர்கள் சுகதேவ், இராஜகுரு, பகத் சிங் மூவரும் தூக்கிலிடப்பட்டார்கள்)

    Share
  • தமிழர் திருநாள் வாழ்த்து!

    ஏறன் சிவா

    வீடெலாம் தோரணங்கள்!
           வியத்தகு கோலம் கொள்ள!
    மாடெலாம் அணிகள் பூண்டு
           மகிழ்ச்சியில் எம்பித் துள்ளக்
    காடெலாம் கழனி எல்லாம்
            காய்,கனி குலுங்கித் தள்ளப்
    பாடலாம் வாரீர் என்றே
            பைந்தமிழ் வாழ்த்தைச் சொல்வோம்!
     
    ஏடெலாம் இழந்த தாலே
             இழந்தநம் சிறப்பை மீட்கக்,
    கூடலாம்! புதிதாய்ச் செம்மைக்
            கொள்கைகள் வகுத்து இந்த
    நாடெலாம் அறிஞர் கூட்டி
             நம்முடை வேரின் ஆழம்
    தேடலாம்! வாரீர் என்றே
             தீந்தமிழ் வாழ்த்தைச் சொல்வோம்!
     
    கலைபல வளர்ப்ப தற்குக்
             கலைமன்றம் செய்வோம்! வீழ்ந்த
    நிலைதனை உயர்த்து தற்கு
             நெறிமுறை வகுப்போம்! நம்மின்
    தலைமுறை வாழு தற்குத்
             தமிழ்முறை செய்வோம் என்றே
    தலைதனைத் தாழ்த்திச் சொல்வோம்
             தமிழரின் திருநாள் வாழ்த்தை!
              
    பழித்திரை போக்கு தற்குப்
              பல்துறை அறிவு வேண்டும்!
    விழித்திரை போக்கு தற்கு
              விழிப்புடன் வாழ வேண்டும்!
    வழித்திரை போக்கு  தற்கு
              வல்லமை பெறவும் வேண்டும்!
    மொழித்திரை போக்க மூச்சை
               மொழியுடன் கலக்கச் சொல்வோம்!
    Share
  • எனக்குரைத்தல்!

    எனக்குரைத்தல்!

    ஏறன் சிவா

    உண்மை நெஞ்சம்
    உடையோ ருக்கே
    உயரம் தாழுக முடியே!

    கண்ணின் பார்வை
    கலையும் வரையும்
    நூலே தேடுக விழியே!

    வன்சொல் ஒழித்துன்
    வழியே நல்ல
    சொல்லே அனுப்புக செவியே!

    என்றும் “முடியும்”
    என்றே மூச்சுக்
    காற்றில் எழுதுக துளையே!

    அன்பு,  அமைதி
    அதிகம் ஓதி
    இன்பம் பருகுக இதழே!

    திண்மை கொண்டு
    தீயோர் தன்னைத்
    தீயில் அனுப்பு! தோள் திடமே!

    வன்மை இருக்கும்
    வரையில் எழுதும்
    கோலை ஏந்துக விரலே!

    நன்மை செய்யும்
    நோக்கங் கொண்ட
    நல்லோர்க் குதவுக கரமே!

    துன்பம் கண்டு
    துவண்டோர் தமையே
    தூக்க விரைக! கால் தசையே!

    எண்ணத் தூய்மை
    எழுவோ ரிடையே
    எண்ணம் செலுத்துக உணர்வே!

    மண்ணில் உடலோ
    மாய்ந்த பின்னும்
    தமிழே தாங்குக உயிரே!

    என்றும் இதனை
    இதயம் வைத்தே
    விலகா தொழுகுக உளமே!

    Share