Tag: க.பாலசுப்பிரமணியன்

  • கற்றல் ஒரு ஆற்றல் -88

    க.பாலசுப்பிரமணியன்

    கற்றலும் சுயகட்டுப்பாடும்

    education-1-1

    ஒரு மனிதனுக்கு எவ்வளக்கெவ்வளவு தன்னம்பிக்கை தேவையோ அதே அளவுக்கு அவனுக்கு சுயகட்டுப்பாடும் தேவை. பல நேரங்களில் மாணவர்கள் வளரும் பருவங்களில் அதிகமான தன்னம்பிக்கையோடு வளர்ந்தாலும் சுயகட்டுப்பாடு இல்லாததால் வாழ்க்கையின் சிறப்பான குறிக்கோள்களையும் வெற்றிப்படிகளையும் தவற விட்டுவிடுகின்றார்கள். காலம் தவறியபின் வருந்தும் நிலையில் அவர்கள் தள்ளப்படும் பொழுது தங்களுடைய சுயகட்டுப்பாடின்மையையும். வெளி கட்டுப்பாடுகளுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ளாமல் தவறுகளை தொடர்ந்து செய்ததையும் நினைத்து வேதனைப்படுகின்றனர். ‘சுயகட்டுப்பாடு’ என்பது நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் ஒரு வேலி. அது நம்மைப் பல துயரங்களிலிருந்து சரியான நேரங்களில் காப்பாற்றும். சுயகட்டுப்பாடு இயலாமையின் அறிகுறி அல்ல. அது ஒரு மனிதனின் பயத்தையோ அல்லது அறியாமையையோ காட்டுவதாக எண்ணுதல் தவறான கருத்தாகும். ஒரு கருத்தையோ அல்லது நிகழ்வையோ நன்றாக ஆராய்ந்து அறிவுப்பூர்வமாக நாம் எடுக்கும் ஒரு முடிவே சுயகட்டுப்பாடாகும். கற்கும் காலங்களில் இதை நல்ல அறிவாற்றல் மூலமாகவும் முடிவெடுக்கும் திறன்கள் மூலமாகவும் நாம் வளர்த்துக்கொள்ளலாம். சுயகட்டுப்பாடு இல்லாத மனிதர்கள் திக்குத் தெரியாத காட்டில் வழி தேடுவது போல் வாழ்க்கையில் அலைவது பல நேரங்களில் பார்க்க முடிகின்றது.

    வளரும் பருவங்களில் சுயகட்டுப்பாட்டிற்கான நெறிகளை வளர்ப்பதற்கு பள்ளிகளை விட பெற்றோர்களின் பங்கே முதன்மையாகவும் அவசியமானதாகவும் தென்படுகின்றது. வீடுகளில் உள்ள பழக்க வழக்கங்கள் சுய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருந்தால் அதுவே மறைமுகமான கற்றலின் வித்தாக அமைந்து அத்துடன் சார்ந்த திறன்களையும் பழக்கங்களையும் வளர்ப்பதற்கு ஏதுவாக அமையும். பல வீடுகளில் தங்கள் குழந்தைகளின் மீது அளவற்ற அன்பு காட்டும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உதவி செய்வதாகக் கருதி அல்லது தங்கள் அன்பின் வெளிப்பாட்டாகக் கருதி கட்டுப்பாடற்ற சூழ்நிலைகளுக்கு வழி வகுக்கின்றனர்.  பிற்காலத்தில் இந்தப் பழக்கங்களுக்கு அடிமையான வளரும் குழந்தைகள் அந்தச் செயல்களுக்கு மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பது மட்டுமின்றி அவைகளைத் தங்கள் இயலாமையின் அறிகுறியாக ஏற்றுக்கொள்கின்றனர். சுயகட்டுப்பாட்டிற்கு குழந்தைகளை உருவாக்குவது எந்த வகையிலும் அவர்களிடம் நம்முடைய அன்பின் குறைபாடாகக் நினைக்கக் கூடாது. உண்மையில் அது அவர்களை பிற்காலத்தில் பல எதிர்மறையான விரும்பத்தகாத சூழ்நிலைகளிலும் நிகழ்வுகளிலும் தடுமாற்றமின்றி சந்திப்பதற்குத் தேவையான உள்ளத் திறனை வளர்ப்பதற்கு உதவும்.

    சுய கட்டுப்பாடு என்பது ஒரு தனி மனிதனின் சுதந்திரத்திற்கோ தேடலுக்கோ விருப்பு வெறுப்புக்களுக்கோ அல்லது மகிழ்விற்கோ எதிர்மறையான கருத்து அல்ல. மாறுதலாக, அந்தத் தேடல்களையும் அதற்கான முயற்சிகளையும் சுயகட்டுப்பாடு பாதையிட்டு வளப்படுத்தி சிறப்புற உதவி செய்யும்.

    வீடுகளில் பெற்றோர்கள் கற்றலின் ஒரு பகுதியாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கக் கூடிய சில முக்கியமான சுயகட்டுபாட்டுத் திறன்கள்:

    1. தங்கள் இடங்களைத் தாங்களே தொடர்ந்து சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்
    2. தங்கள் துணிமணிகளை தாங்களே சுத்தப்படுத்தி தயாரித்து வைத்துக்கொள்ளுதல்
    3. பள்ளிகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டில் சரியான முறையான இடங்களில் வைத்துப் பாதுகாத்தல்
    4. தாங்கள் உணவுண்ட இடங்களையும் பொருள்களையும் தாங்களே சுத்தப்படுத்துதல்
    5. தங்கள் நேரங்களை ஒழுங்குபடுத்தி முறைப்படுத்துதல்
    6. தங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடித்தல்
    7. தங்களுக்குத் தேவையில்லாத உறவுகளையும் பேச்சுக்களையும் தவிர்த்தல்
    8. புறம்பேசுதலைத் தவிர்த்தல்
    9. நேர்மையற்ற செயல்களுக்குத் துணைசெல்லாது இருத்தல்
    10. தங்களுடைய தேவைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளுதல்
    11. மற்றவர்களுடைய எண்ணங்களுக்கோ அல்லது பொருள்களுக்கோ விருப்பமுற்று அடிமையாகாமல் இருத்தல்
    12. சரியான நேரங்களில் சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு உடல்நலம் காத்தல்
    13. தினசரி ஒரு முப்பது மணித்துளிகளுக்காவது உடற்பயிற்சி செய்தல்
    14. நித்தம் சிறிது நேரம் மனத்தை அலைபாயாமல் நிறுத்த தியானப் பயிற்சி செய்தல்
    15. தங்கள் உறங்கும் இடங்களையும் நேரத்தையும் சிறப்பாக முறைப்படுத்துதல்

    கற்றல் என்பது வெறும் புத்தகங்களை சார்ந்த அறிவு ஈட்டல் மட்டும் அல்ல. சிறப்பான வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்வதே கற்றலின் அடிப்படை நோக்கமாகும்.

    இந்த சுய கட்டுப்பாட்டுத் திறன்களையும் பழக்கங்களையும் கற்றலின் ஒரு பகுதியாக நாம் ஏற்றுக்கொண்டு மேன்மைப்படுத்திக்கொள்ளும் பொழுது வாழ்வின் பிற்காலத்தில் அது பல நல்ல போற்றலுக்குடைய திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும்.

    உதாரணமாக, சுயகட்டுப்பாடுள்ளவர்களின் கீழ்கண்ட திறன்கள் சிறப்படைவதாக மனநல வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

    1. இலக்குகளின் தெளிவு
    2. தெளிவான செயல் முறைகள்
    3. ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன்
    4. மன அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பு
    5. நேரம் பேணுதல்
    6. தோல்விகளில் துவளாமை
    7. தொடர் முயற்சிக்கும் வல்லமை
    8. பொருள்வளங்களைப் பேணும் திறன்
    9. சிந்தனைச் சீரமைப்பு
    10. மன நிறைவு

    சுயகட்டுப்பாட்டின் மூலம் தன்னை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்திக் கொள்ளாத ஒருவனால் எப்படி மற்றவர்களை கட்டுப்படுத்தவோ ஒழுங்குபடுத்தவோ முடியும்? சப்பானிய சிந்தனையாளர் லா-திசு என்பவர் கூறுகின்றார் : “மற்றவர்களை வெற்றிபெற படை தேவை. தன்னை வெற்றிகொள்ள வலிமை தேவை.” (Conquering others requires Force; Conquering the self requires strength- Lao-Tzu)

    இந்த வல்லமைக்கு வலிமைக்கும் கற்றல், வீட்டிலும் பள்ளியிலும் வழி வகுத்தல் மிக்க அவசியம்.

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்- 87

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலும் தன்னம்பிக்கையும்

    education-1

    கற்றலைப் பற்றிய சிந்தனைகள் தோன்றி அதன் குறிக்கோள்களையும் வளர்முறைகளையும் பற்றி ஆராய்ச்சிகள் நடக்கும் காலம் தொட்டே கற்றலுக்கும் வாழ்விற்கும் உள்ள தொடர்புகள், இணைப்புகள் பற்றிய சிந்தனை ஆரம்பித்தது. “கற்றலின் நோக்கமே வாழ்வில் வளம்பெருக்க’  என்ற ஒரு கருத்தும், கற்றலின் நோக்கம் ‘ஒரு தனிமனிதனின் தேவைகளை பெருக்குதல் ‘என்றும், கற்றலின் நோக்கம் ‘சமுதாயச் சிந்தனைகளை வளர்த்துப் போற்றுதல்’ என்றும், “கற்றலின் நோக்கம் பொருளீட்டு அதற்கான திறன்களை வளர்த்தல் ‘ என்றும் பல விதமான கருத்துக்கள் பல காலக் கட்டங்களில் கூறப்பட்டு, ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு சமுதாய காலகட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டும் பின்பு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டும் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் எல்லா காலகட்டங்களிலும் ஒரு வளரும் குழந்தையின் ‘தன்னம்பிக்கைக்கு’ கற்றல் ஒரு விதையாகக் கருதப்பட்டது. ஆகவே எந்த ஒரு பாடத்திட்டமாக இருந்தாலும் எந்த மொழியிலோ, எந்த சமூக சூழ்நிலைகளில் அது உருவகிக்கப்பட்டாலும் கற்றலின் உள்நோக்கம் அந்த மாணவனின் தன்னம்பிக்கையை வளர்ப்பது மட்டுமின்றி, அந்தத் தன்னம்பிக்கையின் உள்ளூற்றை வளப்படுத்தி சிறப்படையச் செய்வதாக அமைந்தது.

    எந்த ஒரு பொருளைப் பாடமாக எடுத்துக்கொண்டாலும், எந்த ஒரு மொழியின் அடிப்படையில் கற்றல் ஏற்பட்டாலும், எந்த மாறுபட்ட கற்றல் சூழ்நிலைகளில் கற்றலின் வளர்ச்சி ஏற்பட்டாலும் அது தன்னம்பிக்கையையும் அதன் சார்ந்த அறிவு, உணர்வு மற்றும் கைத்திறன்கள் சார்ந்த தன்னம்பிக்கையை விதைக்கவும், வளர்க்கவும், போற்றவும் சார்பாக இருக்கவேண்டும் என்ற கருத்துக்கு எந்த காலகட்டத்திலும் மாற்றுக்கருத்து இருந்ததாகத் தெரியவில்லை. ஆயின், இந்த தன்னம்பிக்கையை உணர்த்துவதற்கும், வளர்ப்பதற்கும் தேவையான போதிக்கும் முறைகள், அதனைச் சார்ந்த உள்ளீட்டுக்கள் சமுதாயத்தின் அரசியல் மற்றும் கலாச்சார முறைகளுக்கு ஏற்றவாறும் அவைகளை போற்றியவையாகவும் அமைந்திருந்தன. பொதுவாக அத்தனை முறைகளுக்கும் அடிப்படையாக இருத்த கருத்துக்களில் சில கீழ்க்கண்டவை.

    1. தன்னைப் பற்றிய அறிவு

    நான் யார் என்ற அறிவு தன்னம்பிக்கைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இந்த அறிவு தன்னைப் பற்றிய ஒரு சிந்தனையில் தன் திறன்கள், தன் குறைகள், தன்னுடைய குறிக்கோள்கள், தன்னுடைய நடந்து செல்லும் பாதையின் சிறப்புக்கள், தடங்கல்கள் ஆகியவற்றை அறிந்து அதற்கான வழிமுறைகளை வகுப்பதற்குத் தேவையாகவும் உதவியாகவும் இருக்கும். ஆனால், இந்த விவாதங்களில் தன்னைப்பற்றிய குறைவான தாழ்ந்த எண்ணங்களை ஊன்றவோ அல்லது வளரவோ  அனுமதித்தால் அது எதிர்மறையான பலன்களை அளிப்பதற்கான வாய்ப்புகளைத் தருகிறது. ஆகவே, தன்னை ஒரு ஆக்க சக்திக்கு உள்ளீட்டப்பட்ட பொருளாகக் கருதி ‘முன்னோக்கான பார்வைகளை’ வளர உதவி செய்ய வேண்டும். எனவே, கற்றலின் உள்ளீடுகள் ஆக்கப்பூர்வமான  சிந்தனைகளை வளர்ப்பதற்கு ஏற்றதாக அமைதல் வேண்டும்.

    2, முயற்சி

    தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஏணிப்படியாக இருப்பது “முயற்சியே’. “என்னால் முடியும்” என்ற எண்ணத்துடன் எந்த ஒரு அறிவையும் திறனையும் பெற்றுக்கொள்ள முதல் அடி எடுத்துவைத்தல் தன்னம்பிக்கையின் அறிகுறியாகும். ஏணிப்படிகளில் ஏறும்பொழுது தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதிலிருந்து தவறி கீழே விழுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு.  ஆனால்  ஆங்கில மேதை ஆலிவர் கோல்ட்ஸ்மித் கூறியது போல் “ஒரு மனிதனின் மேன்மை ஒவ்வொரு முறை கீழே விழும் போதும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் இருக்கின்றது.” என்ற கருத்தை நினைவில் கொள்ளுதல் அவசியம். எவெரெஸ்ட் சிகரத்தை  எட்மண்ட் ஹில்லாரி என்ற வீரர் முதன் முறை முயற்சியில்  தோல்வி அடைந்த போது அந்த  சிகரத்தின் அடிவாரத்தில் நின்று கொண்டு மீண்டும் ஒரு முறை பார்த்துச் சொன்னாராம் “ஏ சிகரமே! இந்த முறை நான் தோற்றிருக்கலாம். ஆனால் மீண்டும் உன்னை வெல்ல நான் வருவேன். ஏனென்றால் இதற்கு மேல் உன்னால் வளர முடியாது. என்னால் வளர முடியும் “. இது அவருடைய நிகரற்ற தன்னம்பிக்கைக்கு உதாரணமாக  விளங்குகின்றது. கற்றலின் உள்ளீடுகளுக்கும்  போதிக்கும் முறைகளும், கற்றலுக்கான சூழ்நிலைகளும் இந்தத் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருத்தல் மிக்க அவசியம். ஆயின், பரீட்சைகள் என்ற போர்வைக்குள் கற்றலை மூடிவைத்து அதை மூச்சு விட முடியாமல் திணற வைப்பதாக பல  பாடத் திட்டங்கள் அமைந்துள்ளது வருந்தத்தக்க  நிலை. கற்றலின் பொழுது  நடக்கும்   மதிப்பீடுகள் கற்றலின்ஆர்வத்தை  மேம்படுத்துவதாகவும் கற்றலின் வேகத்தையும் அது சார்ந்த திறன்களையும் வளப்படுத்துவதாகவும் அமைத்தல் மிக்க அவசியம்

    1. தோல்விகளின் பொறுப்பேற்றல்

    நம்முடைய போராட்டங்களில் வெற்றி தோல்வி என்ற இரு பகுதிகள் உண்டு. இரண்டையும் சம நோக்குடன் பார்த்துப் போற்றத் தெரிந்துகொள்ள வேண்டும்.   தோல்விகளை பொதுவாக ஒரு முயற்சியின் முற்றுப்புள்ள்ளிகளாகக் கருதும் நோக்கம் பரவலாக இருக்கின்றது. மாணவர்களிடமும் நாம் பழகும்போதும் பேசும்பொழுதும் தோல்விகளால் வாழ்க்கை இடிந்து பாழாகிவிடுவது போன்ற ஒரு கருத்து உருவகத்தை முன் வைக்கின்றோம். இது மிகவும் தவறான போக்கு. தவறான குறிக்கோள்கள், தவறான பாதைகள், வழிகள்,   பாதைகளில் வரும் இடைச்செருகல்கள், கவனக்குறைவுகள். கவனச் சிதறல்கள், போட்டி மனப்பான்மைகளால் ஏற்படும் நோக்கத் தடுமாற்றங்கள் போன்ற பலகாரணங்கள்  தோல்விக்கு வழிவகுக்கும்  உள்ளீடுகளாக  அமைகின்றன.ஆகவே, தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்கின்ற  திறன்களை கற்றலின் ஒரு பகுதியாக அமைத்தல் அவசியம். பொதுவாக சிறு வகுப்புகள் முதற்கொண்டே பள்ளிகளில் ‘தவறுகளைச் சுட்டிக்காட்டும் ‘ பழக்கம் இருக்கின்றதே தவிர, அந்தத் தவறுகளுக்கான காரணங்களை அலசி அறியும் முறைகள்  சொல்லிக்கொடுப்பது  இல்லை. “Error Analysis” என்று சொல்லப்படும் தவறுகளை அலசி ஆராயும் திறன்கள் வளர்க்கப்பட வேண்டும்.  மேலும்  தவறுகளுக்கான முழு பொறுப்பேற்றும் பழக்கத்தையும் அதைத் தன்   குறையாகக்  கருதி தன்னம்பிக்கையை இழக்கவோ அல்லது தன்னை துன்பங்களுக்கு வித்தாக ஆக்கிக்கொள்ளவோ கூடாது. சில நேரங்களில் தேர்வுகளில் தோற்றுப் போனதாக அறிவிக்கப்படும் மாணவர்கள், தங்கள் தகுதிக்கோ அல்லது எதிர்பார்ப்புக்களுக்கோ குறைவாக மதிப்பீட்டும் மாணவர்கள் தங்கள் வாழ்கையையே முடித்துக்கொள்ளும் பரிதாபகரமான நிகழ்வுகளைப்பார்க்கும் பொழுது நமது கல்விமுறைகள் செயல்படும் நடைபாதைகளில் உள்ள தவறுகள்  போட்டுக் காட்டப்படுகின்றன.

    (தொடரும் )

    Share
  • திருமந்திரத்தில் சில  சிந்தனைத் துளிகள் 18

    க. பாலசுப்பிரமணியன்

    உள்ளத்தில் உறவாடும் இறைவன்

    திருமூலர்-1-3

    இறைவன் நம்மை எப்படி ஆட்கொள்ளுகின்றான்? அவன் எவ்வாறு நம்மை அவனுக்கே உரியவனாக ஆக்கிக்கொள்ளுகின்றான்? அவனோடு நமக்கு உறவு எவ்வாறு ஏற்படுகின்றது? இந்த உறவை ஏற்படுத்த  முயற்சி செய்வது நாம அல்லது இறைவனா? அவன் எவ்வாறு நமது உள்ளத்துக்குள் வந்து அமருகின்றான்?

    திருமூலர் கூறுகின்றார்:

    பிறவாநெறி தந்த பேரருளாளன்

    மறவா அருள் தந்த மாதவன் நந்தி

    அறஆழி அந்தணன் மாதவன் பராபரன்

    உறவாகி வந்து உளம் புகுந்தானே 

    உடல் பொருள் ஆவி  என்ற மூன்றையுமே இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால்  நமக்கு வேறு கவலை ஏது  என்று நாம்  நினைக்கின்றோம்.  ஆனால்  இத்தனையும் அவனுக்கு  அர்ப்பணித்த பின்னும் கூட அவன் நம்மைத் தனியாக விட்டு விட மாட்டான் என்று எப்படி  நம்பும் இந்த  உள்ளம்?  எல்லாம் அவனுக்கே உரிமையென்று  ஆன  பின்னே அவன் அதற்கு உரிமையாளனாக  விடுகின்றான். அவன் அதை என்ன செய்தல் நமக்கென்ன?

    ஆனால்  மாணிக்க வாசகருக்கோ எந்த  நிலையிலும் இறைவன் தன்னைக் கைவிட்டு விடக்கூடாது என்ற விருப்பம். ஆகவே அவர் இறைவனுக்கு அளிக்கும் விண்ணப்பம் என்ன தெரியுமா ?

    இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கோள்

    ஒற்றி வை  என்னின் அல்லால்

    விருந்தினனே விடுதி கண்டாய்

    மிக்க  நஞ்சு அமுதா

    அருந்தினனே மன்னும்  உத்தரகோச

    மங்கைக்கு அரசே

    மருந்தினனே  பிறவி பிணிபட்டு

    மடங்கினர்க்கே

    என்னே ஒரு வேண்டுதல் ! என்னே ஒரு ஈடுபாடு !

    இவ்வளவு  அன்பு காட்டும் இறைவனின் திருவடிகளை நாம் எப்படி அடைய முடியும்?  எவ்வாறு அவன்  பொற்பாதங்களின் தரிசனம் நமக்குக் கிட்டும் ? அவனை அடைய ,மகிழ்விக்க  எந்த வழியைக் கடைப்பிடிக்கலாம் ? அது எளிதானதா அல்லது மிகவும் கடினமானதா?

    இப்படியே உலகிலுள்ள அனைவரும் இறைவனின் பாதங்களை நாடினால் அவனுக்கு நம்மை கவனிக்க சற்றேனும் நேரம் கிடைக்குமா? அல்லது அவன் தன் அடியார்களை வரிசைப்படுத்தி அருள் கொடுப்பானா? இந்த ஐயத்திற்கு சற்றும் இடம் கொடுக்காமல் வள்ளலார் கேட்கின்றார் :

    யார்மீது உன் மனமிருந்தாலு முன்கடைக்

    கண்பார்வை யது போதுமே !

    திருநாவுக்கரசரோ உடலையும் உள்ளத்தையும் உயிரையும் அவனுக்கே அர்ப்பணித்து வேண்டி நிற்கின்றார் அவனுடைய பொற்பாதங்களின் தரிசனத்திற்காக.

    உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகழியாக

    மடம்படு முணர் நெய்யட்டி உயிரெனும்  திரிமயக்கி

    இடம்படு ஞானத்தீயால் எரிகொள் இருந்து நோக்கின்

    கடமபர் காளை தாதை கழலடி காணலாமே 

    திருமூலரோ இறைவனின்  தரிசனத்திற்கு அன்பு மட்டும் இருந்தால் போதும் . உண்மையான அன்புடன் இறைவனை அணுகினால் அவன் உள்ளம் நெகிழ்ந்து விடும்.  இதற்க்கெல்லாம் நமக்கு  திருமூலரிடமிருந்து  விளக்கமான பதில் கிடைக்கிறது :

    ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை

    ஈரம் உடையவர் காண்பார் இணையடி

    பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்

    கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

    அது மட்டுமல்ல. “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் ” என்று நாரணனை பிரகலாதன் வர்ணித்தது போல் அரனை எங்கே காணலாம் என்ற வினாவுக்கு திருமூலர் தெள்ளத் தெளிவாக பதில் அளிக்கின்றார்

    அன்பின்உள் ளான்புறத்தான் உட லாயுளான்

    முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்

    அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்

    அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

    (தொடரும்)

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் (86)

    க. பாலசுப்பிரமணியன்

    மறைமுகமான பாடத்திட்டத்தின் சில குறிக்கோள்கள்  (Salient features of the Hidden curriculum)

    education

    வெளிப்படையான  பாடத்திட்டங்களைக் காட்டிலும் மறைமுகமான பாடத்திட்டத்தின் குறிக்கோள்கள் மிக முக்கியமானவையாகவும் அவசியமானவைகளாகவும் அமைகின்றன. வெளிப்படையான பாடத்திட்டத்தில் ஒரு மாணவனுக்குத் தேவையான பல கற்றல் துறைகளின் (disciplines  of  learning) அறிமுகமும்  அவைகளைச் சார்ந்த நல்லறிவும் திறனும்  கிடைக்கின்றது. உதாரணமாக கணிதம், இயற்பியல், வேதியல் , பொருளாதாரம், சரித்திரம், புவியியல் போன்ற  வாழ்க்கைக்கும் பிற்காலத்  தொழில்களுக்கும் தேவையான  அறிவும் பயிற்சிகளும் கிடைக்கின்றன. ஆனால் மறைமுக பாடத்திட்டத்தில் வாழ்க்கைக்கல்வி, பாரம்பரியங்கள் பற்றிய அறிவு, சமுதாயக் கண்ணோட்டம் , சிந்திக்கும் திறன்கள்,  முடிவெடுக்கும் திறன்கள், அரசியல் மற்றும் அறிவியல் கண்ணோட்டங்கள், சமூகச் சீரமைப்பு, நாட்டு நலன், தேசீய பண்பாட்டுக் கண்ணோட்டங்கள் போன்ற பல அறிவு சால் திறன்கள் வெளிப்படுகின்றன. இவைகள் பாடத்திட்டங்களில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், வெளிப்படைப் பாடத்திட்டங்களின் உள்நோக்காக அமைகின்றன

    வாழ்க்கைக் கல்வி

    கற்றலில் வாழ்க்கைக் கல்வி மிக முக்கியமான மற்றும் அவசியமான பங்கு வகிக்கின்றது. கல்வியின் முக்கிய நோக்கமே வாழ்க்கையை சீராகவும் வெற்றிகரமாகவும் அமைதியாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதற்கான திறன்களை வளர்ப்பதாகக் கருதப்படுகின்றது. எனவே, ஒரு மாணவன் அறிவில் எவ்வளவு சாலச் சிறந்தவனாக  இருந்தாலும் வாழ்க்கையைத் திறனுடன் சமாளிப்பதற்கான அறிவினைப் பெற்றிருத்தல் மிக அவசியம்.

    இதற்கான வித்துக்கள் இளமையில் பள்ளியின் ஆரம்ப நாட்கள் முதலிருந்தே விதைக்கப்படுகின்றன. இந்த வளரும் பருவத்தில் இளம் சிறார்களுக்கு தன்னைப் பற்றிய அறிவு (Self-concept) பெற்றுக்கொள்வதற்கான சூழ்நிலைகளை பள்ளிகளும் பெற்றோர்களும் உருவாக்க வேண்டும். இந்த நிலையில் அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய கருத்துக்கள்:

    1. நான் யார்?
    2. என் உறவுகள் யார்?
    3. குடும்பம் என்றால் என்ன?
    4. என்னைச் சுற்றி அமைந்திருக்கும் சூழ்நிலைகள் என்ன?
    5. நான் என்னை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும்?
    6. என்னைச் சார்ந்தவர்களிடமும் என்னோடு உறவாடுபவர்களிடமும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?

    இது போன்ற கருத்துக்கள் தன்னறிவை உருவாக்குவதற்கும் தன்னைப் பற்றிய சரியான உணர்வுகளையும் சிந்தனைகளையும்  ஏற்படுத்திக்கொள்ளுவதற்கும் ஏதுவாக இருக்கும்.

    இதை அடுத்து இரண்டாவது படியாக அமைவது தன்னம்பிக்கை.(Self-confidence) வளரும் பருவத்தில் தன்னம்பிக்கையின் வித்துக்களை விதைத்தல் ஒரு வாழ்க்கைப் பயணத்திற்கு மிக அவசியமாகின்றது .தன்னம்பிக்கை வாழ்க்கையில் வெற்றிக்கு ஆணிவேர். பல நேரங்களில் அதிக அளவில் கல்வியில் வெற்றி பெற்றவர்கள் கூட வாழ்க்கையில் சாதிக்க முடியாமல் தோல்வியுற்றோ அல்லது துவண்ட உள்ளதோடு இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இதற்கு எதிர்மாறாக கல்வியில் சிறப்பாகச் சாதிக்காதவர்கள் கூட வாழ்க்கையில் சாதனைகள் புரிந்திருப்பதை பார்க்கின்றோம். இவர்கள் வாழ்க்கைக் கல்வியில் அதிகத் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகின்றனர். பல நாடுகளில் இளம் பிராயம் முதற்கொண்டே மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய அறிவூட்டல்களையும் கைத்திறன்களையும் வளர்ப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கித் தருகின்றனர். இந்த தன்னம்பிக்கையை வளர்க்கும் சூழ்நிலைகளை சுமார் 7 அல்லது 8 வயது முதற் கொண்டே நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த சூழ்நிலைகளை கற்றல் நேரங்களிலும் கற்றல் நடக்கும் இடங்களிலும் எவ்வாறு ஏற்படுத்தலாம்?

    1. மாணவர்களை கற்றலில் பங்குதாரர்களாக ஆக்கவேண்டும். ஏதோ ஒரு மலை உச்சியில் இருந்து அறிவு பெருகி ஓடி வந்து அவர்களை அடைவது போன்ற ஆணவப் போக்கை வகுப்பறைகளிலிருந்து நீக்கி கற்றலை அவர்களின் முயற்சியாகவும் அவர்களின் ஆக்க சக்தியின் பலனாகவும் ஆக்கும்பொழுது அந்தக் கருத்துக்களுடன் அவர்களுடைய சொந்தமும் உரிமையும் அதிகமாகின்றது (Ownership in learning ). அந்த நேரங்களில் கற்றல் ஒரு அனுபவ பூர்வமான நிகழ்வாக மாறி  (Experiential  Learning) சிறப்படைகின்றது
    1. கற்றல் நடக்கும் நேரத்தில் மாணவர்களை கருத்துக்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் அவைகளை கேள்விக்கணைகளால் துளைத்தும். அவைகளை அலசி ஆராய்ந்தும், அவற்றிற்கு எதிர்மறையான கருத்துக்களால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று விவாதித்தும் தங்கள் ஆர்வங்களை பகிர்ந்துகொண்டும் பங்கேற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பல நேரங்களில் வகுப்பறைகளில் மாணவர்கள் வினாக்களை எழுப்பும் பொழுது ஆசிரியர்கள் அவர்கள் தங்களை சோதிப்பதாகவோ அல்லது ர்ப்பதாகவோ அல்லது விளையாட்டுத்தனமாக நேரத்தை வீணடிப்பதாகவோ கருதி உதாசீனப் படுத்தி விடுகின்றனர். இது ஒரு தவறான போக்காகும். வகுப்பறையின் நோக்கமே வினாக்களை எழுப்பி அதற்க்கான தகுந்த பதில்களையும் தீர்வுகளையும் காண்பதுவே. இதற்கெல்லாம் நேரம் எங்கே கிடைக்கின்றது என்று பொதுவாக எழுப்பப்படும் கேள்வி சில நேரங்களில் விவாதத்திற்கும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு தேவையானதாக இருந்தாலும் அவை மாணவர்களின் வாழ்க்கையில் அவர்களுடைய சீரிய சிந்தனைத் திறன்களை வளர்ப்பதற்கு உதவுவதாகத் தெரியவில்லை.
    1. மூன்றாவதாக, ஒரு கோட்பாட்டையோ அல்லது கருத்தையோ சொல்லிக்கொடுக்கும் நேரங்களிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் நேரங்களிலும், ஆசிரியர்கள் மாற்றுக கருத்துக்களை வரவேற்க வேண்டும். அவை தவறான கருத்துக்களாக இருந்தாலும், அவற்றை ஒதுக்காமல், அவற்றை கண்டனம் செய்யாமல், அந்தக் கருத்துக்கு அந்த மாணவர் வந்த வழியையும் போக்கையும் விளக்கி தவறுகளை திருத்துதல் அவசியம். பெரும்பாலும் நமது பள்ளிகளில் இருக்கும் “சரியான விடை” என்ற ஒரு போக்கு காலம்தொட்டு நிரந்தரமாக பின் போற்றப்பட்டு வந்தாலும் போற்றத்தக்கதாக பல கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வினாக்களுக்கு கொடுக்கப்படும் மாற்று விடைகள், மாற்றுச் சிந்தனைகளின் வடிவங்கள், மாற்று வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு பாராட்ட தயக்கம் காட்டக் கூடாது. மாற்றுச் சிந்தனைகளும், மாற்றுக கருத்துக்களும் தான் புதிய உத்திகளுக்கும் புதிய கண்டுபிடிஉப்புக்களுக்கும் முன்னோடியாக விளங்குகின்றன.

    “நான் என்னுடைய மாணவர்களுக்கு எதையும் சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்கள் கற்றுக்கொள்ளுவதற்கான சூழ்நிலைகளை மட்டும் ஏற்படுத்துகின்றேன் “ – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

    (தொடரும்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (17)

    க.பாலசுப்பிரமணியன்

    இறைவனை எங்கெல்லாம் தேடுவது ?

    திருமூலர்-1-3

    பலநேரங்களில் நாம் இறைவனிடம் நம்முடைய பிரார்த்தனை வீணானதோ  என்ற ஒரு சந்தேகத்திற்கு உட்படுகின்றோம். இறைவன் சிலருக்குத்தான் அருள் புரிகின்றான்,. நான் வேண்டும்போது இந்த அண்டத்தின் எந்த மூலையில் அவன்  இருந்தானோ,   அவன் காதுகளில் நம் குரல் விழுந்ததோ,  இல்லை, அதை அவன் கேட்டும் கேட்காமல் இருக்கின்றானோ என்ற  ஐயம் நமது உள்ளத்தில் தோன்றுகின்றது.

    மனிதடைய இந்த அறியாமையை விளக்கும் கபீர்தாஸ் மனிதனைப் பார்த்துக் கூறுகினு ன்றார். மூடனே! எவ்வாறு ஒரு கஸ்துரி மான் தன நாபியிலிருந்து வருகின்ற ஒரு வாசத்தை எங்கோ வெளியிலிருந்து வருகின்றது என்று நினைத்து  இங்கும் அங்குமாக ஓடுகின்றதோ, அது போல் உன் உள்ளிருக்கும் இறைவனை அறியாமல் நீ இங்கும் அங்கும் ஓடுகின்றாய்.”

    திருமூலரோ இந்த  உடலே ஒரு திருக்கோயில். இதன் உள்ளே இருக்கும் இறைவனை உன்னால் ஏன் காணமுடியாது? அப்படிக்  காண்பதற்கு உன் உள்ளக்கதவுகளைத் திறந்து உள்ளிருக்கும் சிவனை நீ அறிந்து கொள்ள வேண்டும். தரிசனம்  செய்ய வேண்டும்  என்ற கருத்தை முன் வைக்கின்றார்.

    உள்ளம் பெருங்கோயில்  ஊனுடம்  பாலயம்

     வள்ளற் பிரானார்க்கு  வாய்க்கோ  புரவாசல்

    தெள்ளத்  தெளிந்தோர்க்குச் சிவன் சிவலிங்கம்

    கள்ளப்  புலனைந்துங் காளா மணிவிளக்கே .”

    இந்தப் பாடல் இறையின் திருவருள் எங்கும் பரவி நிறைந்திருப்பதற்கு  அத்தாட்சியாக  இருக்கின்றது

    குமரகுருபரரோ மீனாட்சி பிள்ளைத் தமிழில் அன்னையைப் பாராட்டும் பொழுது ” அகந்தைகே கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு  ஏற்றும் விளக்கே”  எனச் சொல்லி “அகந்தையை நீக்கிவிட்டு தூய மனதோடு இருப்போரின் உளக் கோயிலில் உள்ள விளக்கை ஏற்றுபவளே”  என விளிக்கின்றார்.

    இந்தக் கருத்தை வலியுறுத்தும் பட்டினத்தாரோ நம்முடைய புறக்கண்களை நீக்கிவிட்டு அறிவுக்கண்களோடு அவனை நோக்கினால் அவன் புலப்படுவான் என்ற கருத்தை சுருக்கமாக விளக்கியுள்ளார்

    உளகண்ணுக்  கல்லா தூன்கண்ணா  லோருமதோ

    விளக்குச் சுடரொளிபோல் மேவி யிருந்தாண்டி.

    ஊனக்கண்ணால்  அவனை அணுகாமல் ஞானக்கண் கொட்டிண்டு அவனை அணுகுதல் வேண்டும்.

    இதே கருத்தை நிலைநிறுத்தும் வண்ணம் அமைகின்றது திருமூலரின் பாடல்

    திரிகின்ற முப்புரஞ் சென்ற பிரானை

    அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா

    புரிவுடுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்

    பரிவோடு நின்றுபரிசறி வானே.”

    “ஈசன் எங்கோ மிகதூரத்தில் இருக்கிறான்; நம் பிடிப்பிற்கு அப்பால் இருப்பவன் என எண்ணுதல் வேண்டாம். “புரிந்துகொண்டு” அவனை நாடுபவர்கட்கு என்றும் அருகாமையில் இருப்பவன் ஈசன். என்ற நம்பிக்கையை நம் மனதில் ஊன்றுகிறார்.

    அந்த ஆண்டவனைச் சிந்தையில் வைத்து நாம் எப்படிப் பற்றிக்கொள்ளவேண்டும்? இதை விளக்குமாறு அமைகிறது திருவாசகத்தில் மாணிக்கவாசகரின் அருள்வாக்கு “

    “கொழும்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி

    வம்பு பழுத்த்துடலம்  மாண்டிங்கன்  போகாமே

    நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும்

    அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக்  கொண்டன்றே

     வள்ளலாரோ ‘இத்தனை முயற்சி எதற்கு?” – அன்பே வடிவான பரம்பொருளை அன்பால் அணைத்தால் போதாதோ? நமது அன்பின் குரலுக்கு அடிபணிந்து அவன் நம்மை ஆட்கொள்ள மாட்டானோ ? எனக் கேட்கின்றார்

    அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

    அன்பெனும் குடில் புகும் அரசே

    அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே

    அன்பெனும் கரத்து அமர் அமுதே

    அன்பெனும் கடத்துள் அடங்கிடும் அமுதே

    அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே

    அன்பெனும் அணுவுள் அமைந்த பேர்ஒளியே

    அன்புருவாம் பரசிவமே !

    “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என வள்ளுவர் கூறியது சரிதானே ?

    தொடரும்..

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் (85)

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலைக் காட்டும் வரைபடங்கள் (Learning  Curves)

    education

    கற்றலைப் பற்றிய  ஆராய்ச்சிகள் மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால் “கற்றல் தொடர்ச்சியாக நிகழும் செயல்.”  பல நேரங்களில் அது நமக்கு வெளிப்படையாகத் தெரியும் வகையில் நடக்கின்றது. பல நேரங்களில் நமக்கு அறியாமலேயே அது நடந்து கொண்டிருக்கின்றது. இதன்  தாக்கங்கள் நமக்கு சில நேரங்களில்  புலப்படுகின்றன.சில நேரங்களில் அதன் தாக்கங்கள் மறைந்து உள்நிற்பதால் அது நமக்குப் புலப்படுவதில்லை ஆகவே இவ்வாறு வெளிப்படையாக நமக்குப் புலப்படாத தாக்கங்களை அறிந்துகொள்ள முயற்சி அதிகம் தேவைப் படுகின்றது .

    கற்றலை  ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்புக்கள், வாழ்க்கை குறிக்கோள்கள். குடும்பச் சூழ்நிலைகள். பொருளாதார நிலைகள் போன்ற  பல தாக்கங்கள் பாதிப்பதால் அது செழுமைப்பட்டோ அல்லது வளமையின்றியோ இருப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் வாழ்க்கையின் எந்த ஒரு நிலையிலும் சூழ்நிலைகளையும் அல்லது தாக்கங்களையும் மாற்றி கற்றலை வளப்படுத்த, மேம்படுத்த, செம்மைப்படுத்த முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    மேற்கூறப்பட்ட காரணங்களால் ஒரு மாணவனின் கற்றலின் வேகம், (speed of learning) ஆழம்.(depth of learning) ஈடுபாடு,((commitment) வளமை (richness) மற்றும் மேன்மை  இன்னொரு மாணவனிடமிருந்து மாறுபட்டிருக்கும். இந்த நிலை ஒரு குடும்பத்தைச் சார்ந்த இரு குழந்தைகளுக்கும் மாறுபட்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே இரு மாணவ மாணவிகளின் கற்கும் திறனையும், கற்றலின் ஈடுபாடுகளையும், கற்றல் வளத்தையும் ஒப்பிடுதல்  விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, ஒவ்வொரு தனி மாணவனின் கற்றலின் போக்கைக் காட்டும் வரைபடங்கள் (Learning Curve) தனித்தனியாக கவனிக்கப்பட்டு அதற்கான சரியான உத்திகளை முன்வைத்தல் அவசியமாகின்றது

    ஒரு தனி மாணவனின் கற்றலை வெளிப்படுத்தும் வரைபடம் அந்த மாணவனின் உடல், உள்ள வளர்ச்சி, மன நலம், சுற்றுச்சூழல் ஆகிய பல காரணங்களால் சில நேரங்களில் குறுகிய காலத்தில் பாதிப்புக்களுக்கு உட்பட்டு கற்றலில் ஒரு வறுமையான போக்கைக் (Inadequacy of Learning) காட்டலாம். ஆனால் சூழ்நிலைகள் மாறும்பொழுது இந்தக் குறைபாடுகள் நீங்கி வளர்ச்சியையும் செழுமையும் காட்டும். அது மட்டுமல்ல, இப்படிப்பட்ட கற்றல் வரைபடங்கள் ஒவ்வொரு தனி பாடத்திட்டத்திருக்கும் மாறுபட்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு. எனவே ஒரு சில பாடங்களில்  ஒரு மாணவனின் கற்றல் திறனின் மேம்பாட்டையும் ஒரு சில பாடங்களில் பிற்போக்கான  நிலையையும் வெளிப்படுத்த வாய்ப்புக்கள் உண்டு. எனவே, ஒரு மாணவனின் கற்றல் திறனையும் கற்றலில் வல்லமையையும்  ஏதாவது  ஒரு வரைப்படத்தை (learning curve) முன்னிறுத்தி கணித்தல் தவறான கணிப்புக்களைக் கொடுக்கும். எனவே ஒரு மாணவனின் கற்றல் திறன்களை ஆராயும் பொழுது பொது கணிப்புக்களைத் தவிர்த்து குறிப்பிட்ட துறையிலும் குறிப்பிட்ட திறனிலும் அவனது ஈடுபாடுகள், முயற்சிகள், முன்னேற்றங்கள் ஆகியவற்றை  பரிசீலித்தல் அவசியமாகத் தென்படுகின்றது.

    சில நேரங்களில் சிறப்பான கற்றல் திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்கள் வீடுகளில் ஏற்படும் துயரச் சம்பவங்கள் மற்றும் மன நலத்தை பாதிக்கும் சண்டை சச்சரவுகள், விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக கவனச் சிதறல் (noncentral loss) மற்றும் மன அழுத்தங்கள் (Stress) ஏற்பட்டு தங்கள் கற்றலில் உள்ள ஈடுபாடுகள் மற்றும் ஆர்வங்களை இழந்து அதன் பலன்களை எதிர்நோக்கவும் வாய்ப்புக்கள் ஏற்படலாம். இந்த நிலைகளில் அவர்கள் மன நலத்தை சரிப்படுத்த தேவையான முயற்ச்சிகள் வீடுகளிலும் மற்றும் மனநல வல்லுநர்கள் துணையுடனும்  எடுத்தல் அவசியம். இந்த பாதுப்புக்களை கவனிக்காமல் ஒதுக்கிவிட்டால் அவை நிலைப்பட்டு காலப்போக்கில் கற்றலின் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஒரு தாழ்வு மனப்பான்மைக்கும் வழிவகுக்கலாம் .

    \பொதுவாக  ஒரு தனி மனிதனின் கற்றலைக் குறிக்கும் வறைபாடுகள் (individual learning curves) காலப்போக்கில் மாற்றங்களைக் காண்பது நிதர்சனம். இந்த மாற்றங்களின் அடிப்படிக் காரங்களை அறைந்து அதற்குத் தகுந்த முயற்சிகள் எடுத்தால்  அவர்களின் கற்றலின் தலையெழுத்தை மாற்றி எழுத முடியம். எனக்குத் தெரிந்த வரியில் பள்ளிக்கு காலங்களில் மிகச் சாதாரணமான வெற்றிப்படிகளிக்கூடாத தொடமுடியாத பல மாணவர்கள் பிற காலத்தில் கல்வியில் சான்றோர்களாக வளர்ந்ததையும். பள்ளிக்காலத்தில் மிகச் சிறப்பான  மதிப்பெண்களுடன் தேர்வடைந்தவர்கள் வாழ்க்கைப் பாதையில் தடுமாறியதையும்  காண முடிந்திருக்கின்றது.

    பல  நேரங்களில் பள்ளிக்காலத்தில் கல்வி கற்கும் பொழுது ஏற்பட்டிருக்கும் தடங்கல்கள்,(Roadblocks) போராட்டங்கள் (challenges) ஆகியவற்றை தங்கள் வாழ்க்கைக்கு ஒரு முதலீடாக மாற்றி வெற்றியையும் சாதனைகளையும் படைத்தவர்களைக் கொண்டிருக்கின்றோம். அவர்களுடைய கற்றல் வெறும் புத்தகத்தில்  எழுதப்பட்டிருக்கும் கருத்துக்களை மட்டும் மூலதனமாகக் கொள்ளாமல் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களையும் மூலதனமாகக் கொண்டு முன்னேற்றத்திற்கு வழிவகுத்திருக்கின்றது. ஆகவே  கல்வியாளர்கள்  பாடத்திட்டத்தின் வரைமுறைகளை வகுக்கும்பொழுது  வெளிப்படையான பாடத்திட்டம் (visible curriculum)  என்றும்  மறைமுகமான  பாடத்திட்டம் (Hidden curriculum) என்றும் வகுத்து   அதற்கான வரைமுறைகளையும் உள்ளீட்டுக்களையும் பதிவு செய்கின்றனர்.

    இதை தொடர்ந்து  அறியலாம்

    (தொடரும் ).

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் – 16

    க. பாலசுப்பிரமணியன்

    பற்றற்ற நிலை 

    திருமூலர்

    ஐம்புலன்களையும் அதன் தேடல்களால் ஏற்படும் ஆசைகளையும், இவை அத்தனையையும் ஆட்டுவிக்கும்  “நான்” என்ற அகந்தையையும் அடக்கி அவற்றிலிருந்து நாம் விடுபட்டால்தான் இறைவனின் அருளை பூரணமாகப் பெறத் தகுதி உள்ளவர்களாக இருப்போம். ஆனால் இது அவ்வளவு சுலபத்தில் நடக்கக் கூடிய காரியமா? எண்ணம் ஒரு பக்கம், சிந்தனை ஒரு பக்கம், செயல் ஒரு பக்கம் என நம்முடைய வாழ்க்கைப் பயணம் நடந்து கொண்டு இருக்கும் பொழுது இந்த இலக்கை நோக்கி எவ்வாறு செல்ல முடியும்?

    இந்த நிலையை விளக்கும் வண்ணம் பட்டினத்தார் மிக அழகாகச் சொல்லுகின்றார் :

    கை ஒன்று செய்ய விழி ஒன்று நாடக்

    கருத்தொன்று எண்ணப்

    பொய் ஒன்று வஞ்சக நாஒன்று பேசப்

    புலால் கமழும்

    மெய்யொன்று சாரச் செவியொன்று

    கேட்க  விரும்புமியான்

    செய்கின்ற பூசை எவ்வாறு  கொள்

    வாய்வினை தீர்த்தவனே.

    இந்தத் துயரம் நல்ல அறிவு உள்ளவர்களுக்கும் சான்றோர்களுக்கும் கூட இருக்கின்றது. என்னதான் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் சரி, வேதங்களை நல்ல முறையில் கற்று அறிந்திருந்தாலும் சரி, மனம் பற்றற்ற நிலையை அடையும் வரை இறைதத்துவத்தின் உண்மை விளங்காது. இதை வலியுறுத்தும் வகையில் திருமூலர் எழுத்திய பாடல் இதோ:

    வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்

    வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்

    வேதாந்தமாவது வேட்கை ஒழிந்திடம்

    வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே

    வேட்கையை விடுதல் என்பது மிகக் கடினமான காரியம். ஏதோ ஒரு மந்திரக் கோலை ஆட்டுவதால் அது நம்மிடமிருந்து விலகிவிடும் என்பது இல்லை. இதற்க்கு தொடர்ந்த ஒருமித்த மனத்துடன் கூடிய பயிற்சி தேவை.

    மண்ணாசை பட்டனே  மண்ணுண்டு போட்டதடா

    பொன்னாசை பெண்ணாசை போகேனே யென்குதே

    என பட்டினத்தார் தனது உள்ள நிலையை வெளிப்படுத்துகிறார்.

    மாணிக்க வாசகரோ மக்க்களிடம் இந்த உலகப் பற்றை நீக்கி பற்றில்லான் பாதத்தில் பற்று வைக்க அழைக்கின்றார் :

    பற்றங்கலை  அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி

    நற்றாங்கதி  அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின்

     

    மாணிக்க வாசகரின் பற்றற்ற நிலையை திருமூலர் தனக்கே உரிய பாணியில் எடுத்து விளக்குகின்றார்

    பற்றற்  றவர்பற்றி நின்ற பரம்பொருள்

    கற்றற்  றவரகற்றுக் கருதிய கண்ணுதல்

    கற்றற்  றவர்சுற்றி நின்ற என் சோதியைப்

    பெற்றற்  றவர்கள்  பிதற்றொழிந்  தாரே.  

     

     

    இதையே வள்ளுவரோ  இரண்டே அடிகளில் சுருக்கமாகவும் தெளிவாகவும் முன்வைத்துள்ளார்

    வேண்டுதல் வேண்டாமை இலான் தாள்சேர்ந்தார்க்கு

    யாண்டும் இடும்பை இல. 

    (தொடரும் )

    Share
  • கா… கா….

    க. பாலசுப்பிரமணியன்

    “க் …க் .. ஆ ” அந்தக் காகம் “கா..கா.. ” என்று கத்த முயற்சித்துக் கொண்டிருந்தது. காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எனக்கோ ஒரே வியப்பாக இருந்தது.. ஏன் அதனால் சரியாகக் கத்த முடியவில்லை?

    “க் … க் ….” அதன் தொண்டையிலிருந்து குரல் எழும்பவே இல்லை.

    ஒருவேளை அதற்குத் தொண்டை கட்டிக்கொண்டிருக்குமோ ?

    “அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க… அது பக்கத்திலே எங்கையாவது எலும்புத் துண்டை பதம் பார்த்திருக்கும். அதிலுள்ள முள் ஏதாவது தொண்டையில் குத்தி குரல் போயிருக்கலாம்” இது அருகில் நின்ற என் மனைவி.

    “எந்த எலும்புத்துண்டிலே முள் இருக்கு என்பதும் உனக்குத் தெரிந்திருக்குமே!”  என் பதிலை கேட்டு தன் முகத்தைச் சுளித்துக் கொண்டு சென்று விட்டாள்.

    தன்னுடைய ஒன்றரைக்கண்ணால் அந்தக் காகம் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தது.

    “க் ..க.. ” மீண்டும் தன் குரலை இழுத்தது. அதன் குரலில் ஏதோ ஒரு வேதனை தெரிந்தது.,

    இரண்டு காகங்கள் அதன் அருகில் வந்து உட்கார்ந்தன ” என்ன ஆச்சு உனக்கு?.” என்று தன் கழுத்தை திருப்பிக் கேட்டுக்கொண்டிருந்தன.

    “க.. க ..” குரல் எழும்பவில்லை… “எங்கேயாவது கண்ட சாப்பாட்டை பார்த்து ஆசை பட்டிருப்பான்..” என்று ஏளனமாகச் சொன்னது.முதல் காகம்.

    “வேறே ஒன்னும் இருக்காது. யாரவது ஐஸ் கிரீம் சாப்பிட்டுவிட்டு அந்த டப்பாவைக் கீழே போட்டிருப்பாங்க.. இது ஐஸ் கிரீம் ஆசையில் அதை சாப்பிட்டிருக்கும். காலங்கெட்ட நேரத்திலே ஐஸ் கிரீம் சாப்பிட்டால் இப்படித்தான் வரும்..” இது இன்னொரு காகத்தின் எண்ணம்.

    பதில் சொல்லமுடியாமல் அந்தக் காகம் தன் கழுத்தை சொரிந்து விட்டுக்கொண்டது.

    “க்க்க்க் ..” ஏப்பம் விடுவது போல் இன்னொரு இழுப்பு… இரண்டு காகங்களும் கேலி செய்வதுபோல் சிரித்துக்கொண்டே அந்த இடத்தைக் காலி செய்தன.

    தனக்கு நேர்ந்த இந்த விபரீதத்தை நினைத்து தாழ்வு மனப்பான்மையுடன் முகத்தை மறைத்துக்கொள்ள அந்த காகம் இலைகள் நிறைந்த இன்னொரு கிளையில் சென்று அமர்ந்தது.

    “ஹாய்…” ஒரு பெண்காகம் இதனருகில் வந்து அமர்ந்தது.

    “இவ ..எங்கே.. இந்த நேரங்கெட்ட நேரத்திலே…”

    “என்ன.. ஒரு ஹாய் கூட சொல்லமாட்டியா. “

    “க்க.. “

    “என்ன ஆச்சு இந்த தொண்டைக்கு…யாரையாவது கிண்டலடித்துப் பாடி வாங்கி கட்டிக்கொண்டாயா.? தொண்டையைப் பார்த்து அடிச்சுட்டாங்களா?..”

    தன்னுடைய கோபத்தை காட்டுவதற்குத் தன் சிறகை வேகமாகப் பல முறை அடித்துக்கொண்டது.

    “உன்னை எங்க அப்பாவுக்கு அறிமுகம் பண்ணலாமென்று நினைத்து இங்கே வந்தேன்..  கேவலமான குரலோடு உன்னை அழைத்துக் கொண்டுபோனால்  .. அய்யய்யோ.. நினைத்தே பார்க்க முடியவில்லை…

    சீக்கிரம் சரி செய்து கொண்டு என்னை வந்து பாரு…” பறந்து சென்றது.

    தன் அழகான காதலியை நினைத்து ஏங்கி நின்ற காகத்தால் அவளைக் கூப்பிடத் திராணி இல்லை.

    “க்க ..” வலித்தது..

    வருத்தத்துடன் சிறிதே தன்  திருப்பியதும் அதற்குக் கண்ணில் பட்டதோ பக்கதது வீட்டு சன்னல். உள்ளே அந்த வீட்டு பெரிய மனிதர் ஒரு கரும்பலகையில் எழுதி வைத்திருந்தார்: “முயற்சி திருவினையாக்கும்.”

    இது எங்கிருந்தோ வந்த நம்பிக்கை ஒளி…

    “க் க ….க்  க ..” மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது.

    “தம்பி…” இது ஒரு புதிய வருகை…

    “என் பெயர் சின்ன கருப்பன்.. வைத்தியம் பார்க்கிறேன்.. கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு  பொண்ணு வந்து உனக்கு ஏதோ தொண்டையில் பிரச்சினை.. கொஞ்சம் உதவி செய்யுங்க..” என்று சொல்லிவிட்டுப் போனாள் .

    பெரியவர் கிளையில் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

    “கொஞ்சம் தொண்டையக்  காட்டு பார்க்கலாம்.”

    பரிசோதனை தொடங்கியது.. :”என்ன பண்றே.. கொஞ்சம் வேப்ப மரத்துக்குப் போய் நாலு பழுத்த வேப்பம் பழத்தை சாப்பிடு..சீக்கிரம் சரியாகிவிடும்.. “

    “என்ன பெரிய தலைவலி! ..தொண்டையில் வந்து சனி பகவான் உட்கார்ந்து விட்டானா.?..எல்லோரிடமும் இப்படி அவமானப் பட வேண்டியிருக்கே..

    “இவனுக்கென்ன ஆண்பிள்ளைக் குரலா?.. இல்லை பெண்பிள்ளைக குரலா?  அருகில் பரந்த இரு காகங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து  கொண்டன.

    “அங்கே பாருடா…. காக்காய்.. எப்படிக் கத்துதுன்னு.. நீயும் அது மாதிரி “கா.கா.” ன்னு சொல்லு…. தன் பேரனை இடுப்பில் ஏந்திக்கொண்டு வந்த பாட்டிக்கு இந்தக் குரலை கேட்டு ஒரே குஷி.

    குழந்தையும் அந்த காகத்தைப் பார்த்து ..”க்…க் .. ” என்று கேலி செய்தது.

    கோபத்தில் கண் சிவந்த காகம் பாட்டியையும் பேரனையும் சுற்றி வந்தது. பயந்துபோன பாட்டி அருகில் இருந்த கம்பினால் ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட.. அது இதன் சிறகில் பட..

    அது பறந்து போய் பக்கத்து மைதானத்தில் உள்ள ஒரு மரக்கிளையில் அமர்ந்தது…

    “மயில் அகவும் .. காகம் கரையும் ”  பக்கத்தில்  உள்ள பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் சொல்லிகொடுத்துக் கொண்டு இருந்தாள் …

    “பசங்களா… சொல்லுங்க.. காகம் எப்படி கரையும்?”

    உடனே எல்லா மாணவர்களும் “கா.. கா. ” என்று கத்த  ஆரம்பித்துவிட்டனர்.

    “ஆண்டவா.. இது என்ன சோதனை. எனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறாங்களா..”

    “க் … க் … என்று ஒருமுறை இழுத்தது..

    “மிஸ்.. மிஸ்.. அந்தக் காகத்தைப் பாருங்கள் .. அது  “கா.. கா.. ” என்று கத்தவில்லை.. “க்… க் .. ” என்று கரைகிறது..

    “டேய் .. அவங்க கூட்டத்துக்கு அது ஒரு மியூசிக் டைரக்டர்டா..  ட்யூன் போட்டுக்கொண்டு இருக்கின்றது.. “

    “போதும்.. போதும்.. பாடத்தைக் கவனியுங்கள்.. இல்லைனா .. நீங்களும் அந்த காக்கா மாதிரி தெருத்தெருவா அலையவேண்டியது தான்.

    “பாவம்டா  அந்த காக்கா. . “

    “பரவாயில்லையே .. ”  மனித ஜாதியில் இன்னும் சில நல்ல உள்ளங்கள் இருக்கின்றனவே.. மற்றவர்களுடைய துன்பத்தைக் கண்டு சிரிக்காமல்..பரிதாபப்படும் உள்ளங்கள்…

    திடீரென்று ஒரு கல்..  கீழேயிருந்து …ஒரு சிறுவன் அந்த மாமரத்தில் உள்ள மாங்காயை நோக்கி அடிக்க.. அது குறி தவறி இந்த காகத்தின் மேல் விழ…

    “கா .. “வலி தாங்க முடியாமல் ஒரே அலறல் ,,  அடுத்த கல் விழுவதற்கு முன்னால்

    “கா.. கா.. ” அது கரைந்து கொண்டே பறந்தது. சில நேரங்களில் ஆண்டவன் நமக்கு எதற்கு துன்பங்களைத் தருகிறான் என்பது நமக்கே தெரியாது.

    “கா.. கா.. ” தன் சுய மரியாதை மீண்டும் கிடைத்ததை நினைத்து பெருமையுடன் பறந்து கொண்டிருந்தது.

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் (84)

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலும் அதனைச் சார்ந்த கொள்கைகளும்

    education

    விழி, செவி மற்றும் செயல் சார் கற்றல் முறைகளின் பாதிப்புகள் கற்றலில் மட்டுமின்றி பொதுவாகவே வாழ்க்கையின் பல நடைமுறைகளில் தங்கள் அடையாளங்களைக் காட்டுகின்றன. பொருள்களைத் தேர்ந்தெடுத்தல், உரையாடும் முறைகள், செயல்படும் முறைகள், நம்முடைய நிரந்தரமான பழக்க வழக்கங்கள் ஆகிய பல வாழ்க்கை வழிகளில் இவைகளின் ஆதிக்கமும் ஊடுருவல்களும் காணப்படுகின்றன. ஆகவே, வளரும் பருவங்களில் கற்றலின் போது இந்த ஆதிக்கங்களுக்கு ஏதுவான முறையில் கற்றல் ஏற்படுமானால் அவை அந்தத் தனி நபரின் வளர்ச்சிக்கும் மனநலத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் ஏணிப்படியாக அமையும் என்பது பொதுவாக மன, மூளை-நரம்பியல் நிபுணர்களின் கருத்து.

    மூளையில் கற்றலின் தாக்கங்களை ஆராய்ச்சி செய்த  “காண்டல்” என்ற அறிவியல் நிபுணர் -“கற்றல் மூளைநரம்புகளின் இணையத்தைப் பொறுத்து அமைகின்றது ” (Learning is a neural connect)  என்ற ஒரு கருத்தை முன்வைத்து கற்றலின் பொழுது மூளை நரம்புகள் தங்களுடைய பழைய இணைப்புகளை விலக்கி புதிய இணைப்புகளை ஏற்படுத்திக்கொள்கின்றன என்ற ஒரு ஆய்வினை வெளிப்படுத்தினார். இதற்கான நோபல் பரிசு அவருக்கு 2000-மாவது ஆண்டில் வழங்கப்பட்டது .

    இந்த ஆய்வினால் வெளிப்படும் ஒரு முக்கியக் கருத்து “வகுப்பறைகளில் கற்றலின் பொழுது இருக்கின்ற சூழ்நிலைகள் கற்றலுக்கான உள்ளமைப்புகள் மூளையில் ஏற்படும் இந்த இணைப்புகளுக்கும் இணையங்களுக்கும் துணையாகவும் அவற்றை வளப்படுத்துவதாகவும் அமைதல் அவசியம் என்பதே”. எனவே  பள்ளிச்சூழ்நிலைகள், பாட அமைப்புக்கள், பாடங்கள் நடத்தப்படும் விதங்கள், பள்ளிகளில் உறவாட அமையும் சூழ்நிலைகள் போன்ற பல இந்த இணைப்புக்களுக்கு உதவியாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்க வாய்ப்புண்டு. அதை சரியாக அமைப்பது சமுதாயத்தின் முக்கிய  கடமை.

    மூளை தொடர்ந்து கற்றலில் ஈடுபட்டு வருகின்றது. கருவறையிலிருந்து கடைசி மூச்சு வரை கற்றல் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ நடந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக மூளையின்  நியூரோன்களின் கட்டமைப்புகள் தொடர்ந்து மாறிக்கொண்டும்  புதிதாகிக்கொண்டும் இருக்கின்றன. இது நாம் விரும்பியோ விரும்பாமலோ நடக்கின்ற செயல். இதன் மேல் நமக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது.

    கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே “இளமையில் கல் ” என்ற கருத்து வலுவாக இருந்தது. பொதுவாக கற்றலின் வேகமும் ஆழமும் இளமையில் அதிகமாக இருக்கும் என்றும் மேலும்  சுமார் முப்பது வயதுக்கு மேல் கற்றலின் வேகமும் முழுமையும் குறைந்துவிடும் என்றும் கருதப்பட்டது. ஆனால் இந்த கருத்து தற்போது முழுமையாக நிராகரிக்கப்பட்டு  “கற்றல் எந்த வயதிலும் நடக்கலாம் .. கடைசி மூக்சுவரை மூளை கற்றலுக்குத் தயாராகவே இருக்கின்றது” என்ற சீரிய கருத்து ஏற்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    நரம்பு நெகிழின்மை  (நியூரோ-பிளாஸ்டிசிடி )  என்ற புதிய அறிதல் மூலமாக நமது மூளையின் வேலைத்திறன்கள் பற்றிய புதிய கருத்துக்கள்  கற்றல் பற்றிய நமது பழைய கருத்துக்களை வெகுவாக மாற்றியுள்ளன. மாணவர்களின் கற்றல் திறன்கள், கற்றலின் ஆழம், கற்றல் பற்றிய விருப்பு- வெறுப்புகள், ஆகியவை பற்றி புதிய கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த கண்டுபிடிப்புகளின் காரணமாக கற்றலைப்  பற்றிய கொள்கைகளில் பலவித மாற்றங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன  ஒரு  நூறு ஆண்டுகளுக்கு முன்பு கற்றலின் இலக்கு கற்பவரின் நடவடிக்கைகளில் ஏற்படும் சிறப்பான பயனுள்ள மாற்றங்கள்  (Behavioural  outcomes ) என்பதை அடிப்படையாகக்கொண்ட “Behaviourism” என்பதாக இருந்தது . பின்னொரு காலகட்டத்தில் வல்லுநர்கள் “அறிவாற்றல்” இருந்தால்தான் நடைமுறை மாற்றங்கள் ஏற்படும் என்ற கருத்தை முன்னிறுத்தி “அறிவாற்றல் இயல்” (Cognitivism)  என்ற ஒரு கொள்கையை முன்வைத்தனர்

    பின்னொரு காலகட்டத்தில் “கற்றல்” என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் மூளையில் நடக்கும் ஒரு சிந்தனை சார்ந்த செயல்; எனவே ஒவ்வொரு கற்றலும் ஆக்கப்பூர்வமானது”  என்ற கருத்தை மேற்கொண்டு Constructivism”  என்ற புதியதோர் கருத்தை முன் வைத்தனர்.

    அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக கற்றலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து கற்றல் ஒரு தனிப்பட்ட செயலாக இருந்தாலும் அது வெளியுலகின் துணையோடும் தாக்கங்களினாலும் உருவாக்கப்படுகின்றது  என்ற கருத்தை மேற்கொண்டு “connectivism என்ற ஒரு கருத்தை ஏற்று “கற்றல் என்பது ஒரு சமூக அறிவாக்கச் செயல் “(KNOWLEDGE IS  A SOCIAL CONSTRUCT )  என்ற கருத்தை முன்னிறுத்தியுள்ளனர்

    எனவே கற்றலைப் பற்றியும் அறிவாக்கத்தைப் பற்றியும் நமது கருத்துக்களும் சிந்தனையும் காலப் போக்கில் மாறிக்கொண்டும் புதிதாக உருவாகிக்கொண்டும் வருகின்றது.

    (தொடரும்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  15

    க. பாலசுப்பிரமணியன்

    ஆசைகளை அடக்குவதெப்படி? 

    திருமூலர்-1-3

    ஆசைகளுக்கு  அடிப்படைக் காரணமே அறியாமைதான். தன்னிடம் இல்லாத பொருளைத் தேடியும், தனக்கு உரிமையில்லாத  பொருள்களை நாடியும் மற்றும் மற்றவர்களிடம் உள்ள பொருள்களை விரும்பியும் மனம் அலைபாய்கின்றது. இந்த அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமான காரியம். பல்லாயிரம் ஆண்டுகளாக முனிவர்களும்  வாழ்க்கையை விலக்கி துறவு நாடி போராடிக்கொண்டிருக்கின்ற நிலையை நாம் காண்கின்றோம். 

    இந்த நிலையை அழகாக முன் நிறுத்தும் திருமூலர் கூறுகின்றார் : 

    “அஞ்சு மடக்கடக் கென்பர் அறிவிலார்

    அஞ்சு மடக்கும் அமரரும் அங்கில்லை

    அஞ்சு மடக்கில் அசேதன மாமென்றிட

    அஞ்சு மடக்கா அறிவறிந்த தேனே . “ 

    ஐம்புலன்களையும் அடக்க முடியாத நிலை அமரருக்குமுண்டோ ? இந்த ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது மனதன்றோ? 

    இந்த மனம் நம்மை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கின்றது ? அது படுத்திய அல்லல்களிருந்து விடுபட்ட பட்டினத்தார் தன் மனதை எவ்வாறு சாடுகின்றார் தெரியுமா ? 

    மண்காட்டிப் பொன்காட்டி மாய விருள்காட்டிச்

    செங்காட்டி லாடுகின்ற தேசிகனைப் போற்றாமல்

    கண்காட்டும் வேசியர்தங் கண்வலையில் சிக்கிமிக

    அங்காடி நாய்போ லழைந்தனையே நெஞ்சமே .

    பத்திரகிரியாரோ இந்த ஐம்புலன்களையும் அதில் பிறக்கும் உணர்வுகளையும் எரித்துச் சாம்பலாக்கிவிட வேண்டும் ; அது நடப்பது எக்காலம்? என இறைவனையே கேட்கின்றார்.

     ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்

    தூங்கமரத்தூக்கி சுகம் பெறுவதெக்காலம் ?

     இந்த ஆசையை அடக்க ஒரே வழி. இறைவனின் பாதங்களை நம்பிக்கையுடன் உறுதியாகப் பிடித்துக்கொள்வதுதான். எவ்வாறு ஆமை வெளியிலிருக்கும் சூழ்நிலைகளைக் காண்டதும் தன உறுப்புக்களை உள்ளே இழுத்துக் கொள்கின்றதோ அதே போல் இந்த மனமும் ஆசைகளை உள்ளே இழுத்துக்கொள்ளும். 

    ஆகவே மனதில் இருக்கின்ற மாசினையும் இருளையும் நீக்கி மனதில் ஒளியை வரவழைத்தால் இந்தத் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். இந்தக் கருத்தை வலியுறுத்தும் திருமூலர் : 

    மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்

    சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி

    அனைத்து விளக்குத் திரியோக்கத் தூண்ட

    மனத்து விளக்கது மாயா விளக்கே.

     என அழகாக விளக்குகின்றார்.

     ஒரு முறை அகத்தில் இந்த ஒளி நிறைந்து விட்டால் அது அகத்தை விட்டு புறம் நோக்கிச் செல்லாது. ஆசைகளுக்கு அடி பணியாது. ஆனந்தக் கூத்தில் தன்னை மறந்து இன்புறும். இந்த உன்னத நிலையை அனுபவித்த மாணிக்க வாசகர் பாடுகின்றார்

     வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும்

    வேண்டேன்பிறப்  பிறப்புச் சிவம் வேண்டார் தமை நாளும்

    தீண்டேன் சென்று சேர்ந்தேன் மண்ணு திருப்பெருந்துறை இறைதான்,

    பூண்டேன் புறம் போகேன் இனிப் புறம் போகலொட்டேனே . 

    ஆகவே அகத்தை ஒளிமயக்கும் அறிவும் கல்வியும் பயனுள்ளதாகவும் அமைதியத் தருவதாகவும் அமைகின்றது.

    தொடரும்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -83

    க. பாலசுப்பிரமணியன் 

    வகுப்பறைகளில் கற்றலின் வேறுபட்ட முறைகளின் பாதிப்புக்கள்

    education-1-1-1-1

    பார்வைகளின் உந்துதல்களால்(visual inputs)ஏற்படும் கற்றல் மற்றும் செவி, செயல் சார்ந்த  (auditory and kinesthetic ) உணர்வுகளின் உந்துதல்களால் ஏற்படும் கற்றல் திறன்கள் அநேகமாக அனைவருக்குமே உண்டு. ஆயின், சிலருக்கு ஒரு குறிப்பிட்ட முறையின் அதிகபட்ச தாக்கம் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. இத்தகைய அதிக பட்சத் தாக்குதல்களால் மற்ற வகையான கற்றல் முறைகள் ஒதுக்கப்பட்டு அவற்றின் பலன்கள் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்படலாம். ஆகவே, இந்த மூன்று விதமான தாக்கங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் உறவுகள், பயிற்சிகள் அமைதல் அவசியம். ஆசிரியர்கள் ஏதாவது ஒரு முறையில் ஏற்படும் கற்றலுக்கோ பயிற்சிக்கோ அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் வகுப்பறைகளில் பாதிக்கும் மேலான மாணவர்கள் அந்த பயிற்சிகளில்  ஈடுபாடு இன்றியோ அல்லது அந்த  நேரங்களில் தங்கள்  கவனத்தை மற்ற பொருள்களிலும் மற்ற ஆர்வத்தை ஈர்க்கும் காட்சிகள் ஏற்படுத்தும்  கற்றலின் உந்துதல்களில் ஈடுபடுத்தியோ இருப்பார்கள். இதனால் அந்த வகுப்பறைகளில் கற்றலின் தாக்கங்கள் மிகக் குறைவாக இருப்பதால் நேரத்தின் பயன்பாடுகள் மிகக் குறைவாக இருக்க அதிக வாய்ப்புக்கள் உண்டு.

    உதாரணமாக, ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் ஒரு பாடத்தை பற்றி பேசும்பொழுதோ பொழுது, பார்வைசார் கற்றலில் சிறந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் “அய்யா, தங்கள் சொல்லுவதை சற்றே கரும்பலகையில்  எழுதுங்கள்” என்று கேட்பார்கள். அல்லது, அவர்கள் தங்கள்  கவனத்தை  ஆசிரியர்களிடமிருந்து விலக்கி அருகிலிருக்கும் சன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்த வகுப்பறைக்கு வெளிப்பக்கமாக எத்தனை பேர் வந்தார்கள், போனார்கள் என்ற துல்லியமான கணக்கு அவர்களிடம் இருக்கும். மாறாக, ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் செவிசார் கல்வியில் சிறந்த மாணவர்கள், கரும்பலகையிலிருந்து தங்கள் கவனத்தை விலக்கி அருகிலுள்ள மாணவர்களிடம்  பேசிக்கொண்டிருப்பார்கள். செயல் சார் கல்வியில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் இருக்கும் இடத்தை விலக்கி வேறு எங்காவது செல்ல முயற்சித்துக் கொண்டும் அல்லது ஏதாவது ஒரு பொருளால் மற்றவர்களுடைய கவனத்தை தங்களிடம் ஈர்த்துக்கொண்டும் இருப்பார்கள்

    அதே போல், ஆசிரியர்கள் மாணவர்களை ஏதாவது ஒரு பாடத்தை உரக்கப் படிக்கச் சொல்லும் பொழுது, பார்வைசார் கற்றலில் (visual) சிறப்பான மாணவர்கள் வேறு எங்காவது தங்கள் கவனத்தைச் சிதறவிட்டோ அல்லது ஆசிரியர்கள் சொல்வதைக் காதில் வாங்கி கொள்ளாமல் அவருடைய முகத்தை மற்றும் பார்த்துக் கொண்டோ இருப்பார்கள். அதே நேரத்தில் செவிசார் கற்றலில் (auditory) மாணவர்கள் “எந்தப் பாடம் படிக்கச் சொன்னீர்கள் ? எந்தப் பக்கத்தில்? எந்த வரிகள் ” என்று பல விதமான கேள்விகளைக் கேட்டு ஆசிரியர்களோடு தொடர் உரையாடலில் ஈடுபடுவார்கள். செயல்சார் ( kinesthetic) மாணவர்களோ புத்தகங்களில் பக்கங்களை ஒன்றொன்றாகத் திருப்பிக்கொண்டும் புத்தகங்களால் மேசைகளைத் தட்டிக்கொண்டும் இருப்பார்கள். பொதுவாக அவர்களுக்கு ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும்

    இது போன்று கற்றல் முறைகளின் மாறுபாடுகளாலும், மற்றும் ஏதாவது ஒரு முறையின் சிறப்பான தாக்கத்தாலும் வகுப்பறைகளில் கற்றலில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. இந்த மாதிரியான மாணவர்களின் கற்றல் திறன்களை ஆராய்ச்சி செய்துள்ள கல்வியல்  மற்றும் மூளை- நரம்பியல் வல்லுநர்கள் கண்டுபிடிப்புக்கள் சில ஆச்சரியமாக உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக பார்வைசார் கற்றலில் சிறப்பான மாணவர்கள்  மொழிகள் கற்பதிலும், ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கற்பனையைத் தூண்டும் கலைகளிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மொழிகளில் எழுதும்போது அவர்களுடைய சொற்தொடர்களில் மொழி வல்லமை, வண்ணங்களைச் வார்த்தைகளின் ஆதிக்கம், சரியான உச்சரிப்புக்கள் ஆகியவை மேலோங்கியிருக்கும். சிறந்த கட்டுரை ஆசிரியர்கள், எழுத்தாளர்களும்  இந்தத் திறன்சார்ந்தவர்களாக இருப்பார்கள்

    மேலும் ஆராய்ச்சிகளின் மூலமாக நமக்கு வெளிப்படுவது யாதெனில் – செவிசார் கற்றலில் அதிக ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கணிதம் போன்ற பாடங்களில் குறைவான அக்கறை இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில், கணிதம் போன்ற பாடங்களில் அதிகமான உரையாடல்களும் பேச்சுகளுக்கு வாய்ப்புக்கள் இல்லை. இவர்கள் மேடைப்பேச்சாளர்களாகவும், பாடகர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களைத் தேடுவதிலும், நண்பர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அலைபேசிகளின் ஆருயிர்  நண்பர்கள்.! இவர்களுடய பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினம்.

    செயல்சார் மாணவர்கள் நாடகம், விளையாட்டுகள், பரிசோதனைகள், பொறியியல்சார் வேலைகளில்  ஆர்வம்  உடையவர்கள்; பள்ளிகளில் அலங்கரித்தல், கண்காணித்தல், தலைமைப் பொறுப்புகள் ஏற்றல் போன்ற செயல்களில் ஈடுபாடு அதிகம் உண்டு. வகுப்பறைகளில் பாடங்கள் சொல்லிக்கொடுக்கும்பொழுது மேசைகளைத் தட்டிக்கொண்டோ அல்லது தங்களுடைய செயல்களால் மற்றவர்கள் கவனத்தை சிதறடித்து ஆனந்தப்படுவதிலோ இவர்களுக்கு இன்பம் அதிகம். வகுப்பறைகளில் ஏதாவது சில்மிஷங்கள் நடத்தி அதிகம் பிடிபடக்கூடிய  வகையைச்  சார்ந்தவர்கள்.

    இந்தச்  சூழ்நிலையில் அத்தனை வகையைச் சார்ந்த மாணவர்களின் கவனத்தையும் ஒருங்கிணைத்து அவர்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பி கற்றலில் அவர்கள் ஆர்வத்தை தக்கவைத்தும் மேம்படுத்தியும் சிறப்படையச் செய்தும் மற்றும் அவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேவைகளுக்கு ஈடுகொடுத்தும் செயல்படும் ஆசிரியர்கள் உண்மையிலேயே மிகப் பொறுப்பான தொழிலில் ஈடுபடுபவர்கள். போற்றத் தக்கவர்கள்!

    (தொடரும்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்… (14)

    க. பாலசுப்பிரமணியன்

    ஆசைக்கு அளவேது?

    திருமூலர்-1

    ஒரு முறை ஒரு நாட்டின் அரசன் தன் நாட்டின் முக்கிய அமைச்சரை அழைத்து “நாட்டில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இறுக்கின்றனரா?எனக் கேட்டான். உடனே அமைச்சர் “மன்னா, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் அவர்களுக்குத் தேவை என்பது ஏதுமே இல்லை.” என்று பதிலளித்தார். இதனால் மன்னன் மிக்க மகிழ்ச்சி அடைந்தாலும் எதற்கும் தான் ஒருமுறை சென்று சோதித்து வரலாம் என்ற எண்ணத்தில் அன்று இரவு மாறுவேடம் அணிந்து நகர்வலம் வந்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில் நள்ளிரவில் முக்கிய  வீதி ஒன்றில் ஓர் இளைஞன்  ஓடுவதைக்கண்டு அவனை நிறுத்தி “ஐயா, தாங்கள் இந்த நள்ளிரவில் எதற்கு இவ்வளவு வேகமாக ஓடுகின்றீர்கள்?” என வினவினான்.

    உடனே அந்த இளைஞன் “நண்பா, இன்று மதியம் நான் இந்தக் கோட்டையின் கதவருகே கூலிவேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே மண்ணைத் தோண்டும்பொழுது ஒரு தங்க நாணயம் கிடைத்தது. நல்லவேளை அதை யாரும் பார்க்கவில்லை. ஆகவே அதை அங்கேயே மண்ணில் புதைத்திட்டுவிட்டு வந்து விட்டேன். அதை எடுத்துக்கொள்ளத்தான் இப்போது அவசரமாகச் சென்றுகொண்டிருக்கின்றேன்.” என்று பதிலுரைத்தான்.

    அதிர்ச்சி அடைந்த மன்னன் தன்னுடைய வேடத்தைக் கலைக்காமல் “நண்பா, போயும் போயும் ஒரு தங்கக் காசுக்காகவா இவ்வாறு ஓடுகின்றாய். என்னிடம் நிறையப் பணம் உள்ளது. இதோ பத்து தங்கக் காசுகள் வைத்துக்கொள். வீடு சென்று அமைதியாக உறங்கு.” என்றார்.

    மிக்க நன்றி நண்பா. இந்த பத்துக்காசும் இரண்டு மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ உதவும். ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்தக்காசு  நான் வைத்த இடத்தில இருக்குமா என்பது தெரியாது. ஆகவே அதை இப்பொழுதே எடுத்துக்கொள்ளுவதுதான் சாலச் சிறந்தது.” என்றான்.

    மீண்டும் அதிர்ச்சியுற்ற மாறுவேடத்திலிருந்த அரசன் “அப்படியானால் உனக்கு நூறு தங்ககாசுகள் தருகின்றேன். நீ அமைதியாக வீடு செல்.” எனச் சொல்லுகின்றார்.

    அளவற்ற மகிழ்ச்சி நண்பா. இது எனக்கு ஆறு மாதங்களுக்கு மேல் உதவும். ஆனால் அதற்குப் பின் அந்த தங்கக் காசு அங்குதான் இருக்கும் என்பதை உறுதி செய்ய முடியாது. ஆகவே, அதையும் இப்பொழுது எடுத்துக் கொள்கின்றேன்.” என்று பதில் சொன்னான் அந்த இளைஞன்.

    இவ்வாறு பேரங்கள் தொடர, ஒரு நிலையில் மன்னர் தன்னுடைய வேடத்தைக் கலைத்து “இளைஞனே, நான் இந்த நாட்டின் மன்னன். உன்னுடைய அளவற்ற ஆசையைக் கண்டு அதிர்ச்சியடைகின்றேன். மன்னன் என்ற முறையில் உன்னை மகிழ்ச்சியுடன் காணத் துடிக்கின்றேன். ஆகவே என்னுடைய நாட்டின் பாதிப் பகுதியை உனக்கு பரிசாக அளிக்கின்றேன். அப்படியாவது நீ மகிழ்ச்சியுடன் இருந்தால் போதும்.”

    உடனே அந்த இளைஞன் “மன்னா, என்னை மன்னித்து விடுங்கள். மன்னன் என்று அறியாமல் உங்களிடம் தவறாக நான் பேசிவிட்டேன். ஆனாலும், தாங்கள் என்னை அறிந்து எனக்காக பாதி நாட்டை பரிசாகத் தருவதைக் கண்டு வியக்கின்றேன். ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம். தாங்கள் பாதி அரசை எனக்குக் கொடுக்கும் பொழுது அந்த வாயில் உள்ள பகுதியாகப் பார்த்துக் கொடுங்கள். நான் எப்பொழு வேண்டுமானாலும் சென்று அந்த தங்கக் காசை எடுத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.”

    இவ்வாறே நம்மில் பலர் இருக்கும் மற்றும் கிடைக்கும் வசதிகளையும் வாழ்க்கையையும் மறந்து, அதைத் தொலைத்து, இல்லாததற்க்காக ஏங்கும் நிலையில் நம்மை வருத்திக்கொள்கின்றோம். ஆசைகளுக்கு அளவேது?

    இத்தகைய  ஆசைகளைத் தூண்டிவிப்பதே  ஐம்பொறிகள் தானே?  ஆகவே ஆசைகளை அடக்குவதற்கு  ஐம்பொறிகளை  கட்டுப்படுத்த வேண்டும். அவைகளை வென்றுவிட்டால் வாழ்க்கையில் ஐம்பொறிகளை அடக்க  வேண்டும். அவைகளை வென்றுவிட்டால் அமைதிப் பாதைக்கு  வழிதெரியும். இந்தக்கருத்தை வலியுறுத்தும் திருமூலர்  என்ன கூறுகின்றார்:

    ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்

    ஞானத் திரியை கொளுவி அதனுட்பு

    கூனை இருளற நோக்கும்  ஒருவர்க்கு

    வானக மேற வழியெளி  தாமே

    மிகப்பெரிய வரவுகள் இருந்தாலும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட்டுவிட்டு சில சிறிய இன்பங்களுக்காகவும் வரவுகளுக்காவும் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டு இருக்கின்றோம்.

    மீண்டும் மீண்டும் மனத்தை அடக்கி  ஆள வேண்டும் என்று நாம் நினைக்கும் போது மனத்தினில் இருக்கின்ற மாசினை முழுமையாக நீக்க முயற்சிக்க வேண்டும். இதை ஒரு மந்திரக்கோல் மூலம் கொண்டு வர முடியாது. விடா   முயற்சி வேண்டும். இதனை வலியுறுத்தும் வள்ளுவரும்

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

    ஆகுல நீர பிற.

    என்று சுருக்கமாகச் சொல்கின்றார்.

    இந்த நிலையை அடைய ஒரு மனிதனுக்கு இளம் பிராயத்திலேயே நல்ல கல்வி கிடைக்கவேண்டும்.  நல்ல கல்வி மூலம் பக்குவப்படாத மனது, அரசனே ஆயினும் அவனை நல்வழி நடத்தாது. ஆகவே ஒரு நல்ல அரசனுக்குக்  கூட சிறப்பான கல்வி தேவை.

    (தொடரும்)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -82

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலும் கற்பவர்களும்

    education-1-1-1-1

    காட்சிகள் மூலமாக கற்றுக்கொள்ளக்கூடியவர்கள், செவிப்புலன் சார்ந்து கற்றுக்கொள்ளக்கூடியவர்கள் போல செயல்கள் மூலமாகவும், தசை இயக்கங்கள் மூலமாகவும் கற்றுக்கொள்ளக்கக்கூடியவர்கள் சிலர் உண்டு.

    பொதுவாக இந்த வகையைச் சார்ந்தவர்கள்

    1. மற்றவர்கள் பேசும் பொழுது ஏதாவது வேறு இடத்தில் கவனம் செலுத்தியோ அல்லது வேறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டோ இருப்பார்கள்
    1. ஒரு இடத்தில் உட்கார்ந்து படிப்பது இவர்களுக்கு பிடிக்காத பழக்கம்.
    1. பொதுவாக நடந்து கொண்டோ அல்லது சுவர் மற்றும் மரங்கள் அருகிலோ மேலோ உட்கார்ந்து கொண்டு படிப்பார்கள்.
    1. இவர்களுக்கு குறைவான பரப்புள்ள அறைகளுக்குள் உட்கார்ந்து படிப்பது இசைப்படாத செயல். ஆகவே திறந்த வெளிகள் மற்றும் வீட்டு மாடிகள் ஆகியவற்றில் சென்று படிக்கும் பழக்கம் உண்டு.
    1. படிக்கும் நேரத்தில் பென்சில், கம்பு அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளைக் கைகளில் வைத்துக்கொண்டு சிறிது கவனத்தை அவற்றின் மீது செலுத்திக் கொண்டு இருப்பார்கள்.
    1. படிக்கும் புத்தகங்களை மடித்தல், புத்தகங்களில் நோட்டுக்களில் இருக்கும் பேப்பர்களைக் கிழித்தல் இவர்களுக்கு கை வந்த கலை
    1. படிப்பதற்குக் குறிப்பெடுத்தல், படித்ததை திரும்பிச் சொல்லுதல். படித்ததை நடித்துக் காட்டுதல் போன்ற சில ஈடுபாடுகள் இவர்களின் கற்றலில் வெளிப்படையாகத் தெரியும்.
    1. படிப்பதைக் காட்டிலும் சோதனைச்சாலைகளில் செய்து கற்கும் கலைகள், நுணுக்கங்கள் இவர்களுக்குப் பிடித்தமானவை.
    1. பொதுவாகத் திறன்களை வளர்த்துக்கொள்வதிலும் திறனாய்வுகள் செய்வதிலும் திறன் சார்ந்த கற்றலில் ஈடுபடுவதிலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம்.
    1. நாடகம், விளையாட்டுக்கள் போன்றவற்றின் மூலமாக தங்கள் அறிவினை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் மிக்கவர்கள்.

    மேற்கூறிய உதாரணங்கள் மூலமாக நமக்குத் புலப்படுவது கற்றல் என்பது ஒருதலைச் செயலல்ல. அது ஆசிரியர்களிடமிருந்து மட்டும் மாணவர்களுக்கு வருவதில்லை. அது ஒவ்வொரு மாணவனுக்கும் தனி மனிதருக்கும் மாறுபட்டிருக்கும் தனிப்பட்ட செயல். ஆகவே பள்ளிகளிலும் மற்றும் கற்றல் நடக்கும் எல்லா இடங்களிலும் ‘ஒருதலைப் பட்சமாக ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மட்டும் சொல்லிக்கொண்டு போகும் பொழுது கற்றல் சிறப்பாக நடைபெறுவதில்லை.

    கற்றலைப் பற்றிய ஆராய்ச்சிகள் மற்றும் மூளை-நரம்பியல் மூலமாக கற்றல் ஏற்படும் விதங்கள், அதன் நிகழ்வுகள் ஆகிவயவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள ஒரு சிறந்த அறிவியல் நிபுணர் ஜான் மதீனா (John Medina) என்பவர் கூறுகின்றார்: “கற்பித்தல் என்ற ஒரு நிகழ்வுக்கு அதிக பட்ச சான்றுகள் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு மூளையும் கற்றலிலிலேயே ஈடுபடுகின்றது.”

    ஆகவே ஒரு சிறந்த வகுப்பறையின் நோக்கம் கற்றலுக்கான சிறப்பான சூழ்நிலைகளை உருவாக்குவதே ஆகும். ஒரு கருத்தை எத்தனை விதங்கள், முறைகள், பரிமாணங்கள் மூலமாக ஆசிரியர்கள் முன் வைக்கின்றார்களோ அத்தனையும் தனிப்பட்ட மாணவரின் கற்றலுக்கு உறுதுணையாக இருக்கும். (Learning cannot be caused; Learning can only be facilitated)

    கற்றலைப் பற்றிய ஆராய்ச்சிகள் பல விந்தையான சிந்தனையைத்  தூண்டக்கூடிய பல்லாண்டுகளாக நாம் ஏற்றுக்கொண்ட கருத்துக்களின் வேர்களை அசைக்கும் வகையில் அமைந்துள்ளன.  எவ்வாறு ஒரு யானையை அறிந்து விளக்குவதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்ட பத்து விழியற்றவர்கள், தங்கள் அனுபவங்களை வைத்து ‘இதுவே யானை’ என்று சொல்கின்றார்களோ அதே போன்று கற்றலின் பல பரிமாணங்களை பல பேர்கள் பல விதமாக விளக்குகின்றார்கள் என்ற கருத்து வலுவாகப் பரவி வருகின்றது. ஓரளவில் அதுவும் உண்மையே.

    கற்றலைப் பற்றிய தன் கருத்துக்களை ஆணித்தரமாக விளக்கிய அரவிந்தர் தன்னுடைய மூன்று கருத்துக்களை இவ்வாறு முன்வைக்கின்றார்:

    1. கற்பித்தலின் முதல் முக்கிய கொள்கை என்னவென்றால் ” நாம் எதையும் கற்பிக்கமுடியாது என்பதே ” (The first True principle of Teaching is nothing can be taught)
    1. கற்பித்தலின் இரண்டாவது கொள்கை என்னவென்றால் “மூளையின் வளர்ச்சிக்கு அது தன்னைத் தானே சந்திக்கவேண்டும் (ஆலோசிக்கவேண்டும்z) ” (The second principle is that the mind has to be consulted for its own growth)
    1. கற்றலின் மூன்றாவது கொள்கை “கற்றல் எப்பொழுதும் அருகிலிருந்து தொலைவை நோக்கிச் செல்கின்றது.”. (The third principle of teaching is that learning always happens from near to far) 

    ஆகவே மாணவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், திறன்கள், ஆர்வங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் முன்னிறுத்தியும் அவர்களுக்கான கற்றலின் தேவைகளுக்கு உறுதுணையையாக இருத்தலே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்காக ஆற்றும் சிறந்த பணியாக இருக்க வேண்டும்.

     (தொடரும் )

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் ( 13)

     க. பாலசுப்பிரமணியன்

    ஆசைகளுக்கு அடிமையான மனம்

    திருமூலர்-1

    ஆசைகளை அடக்குதல் என்பது ஒரு கடினமான செயல். பல துறவிகள் கூட ஆசைக்கு அடிபணிந்து இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். ஆசைகளை அடக்குதல் என்பது ஒருவிதமான யோகநிலை. யோகத்திற்கே இலக்கணம் வகுத்த குரு பதஞ்சலி முனிவர்  “யோகம் என்பது சித்தத்தின் அசைவுகளை நிலைப்படுத்துவதாகும்” என்று கூறுகின்றார்..முற்காலத்தில் கல்வியின் நோக்கமே ஒரு மனிதனை நிலையான சமநிலை உணர்வுகளுக்குத் தகுதியுள்ளவனாக (ஸ்தித ப்ரஞனாக) உருவாக்குவதாகவே இருந்தது.

    தற்போதைய நிலையில் மனம் ஒரு குரங்கினைப்போல் ஒரு ஆசையிலிருந்து இன்னொரு ஆசைக்குத் தாவி  எங்கும் நிலையாக இல்லாமல் அலைச்சலுக்கு  உட்படுகின்றது. மனத்தை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பல ஞானிகள் அழகாக  எடுத்துரைத்திருக்கின்றனர்:

    “மனத்தகத் தழுக்கறாத மவுன ஞான யோகியர்

    வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கறார் “

    என்கிறார் சிவவாக்கியர்.

    ஆசைகளை அடக்குவதற்கு  ஒரு மனிதன் தன்னை வெல்ல வேண்டும். மற்றவர்களை வெல்வது என்பது எளிது, ஆனால் தன்னைத் தானே வெல்வது என்பது ஒரு கடினமான செயல். உலகின் மிகச் சிறந்த தத்துவ மேதையாக இருந்த அரிஸ்டோடில் கூறுகின்றார்  ” தன்னுடைய வலிமை வாய்ந்த எதிரிகளை வெல்பவனை விட தன்னைத்தானே வெல்பவன் மிகச் சிறந்தவன்.” (I count him braver who overcomes his desires than him who conquers his enemies; for the hardest victory is over self)

    இதே கருத்தை வலியுறுத்தும் சீன அறிஞர்  லா டீஸு (Lao Tzu)  “மற்றவர்களை வெல்ல வலிமை தேவை  ஆனால் தன்னைத்தானே வெல்ல வல்லமை தேவை” (Conquering other requires Force; Conquering oneself requires strength)

    எபிகுர்ஸ் (Epicurus) என்ற ஒரு மேதை மிக அழகாகக் கூறுகின்றார் “ஒரு மனிதனின் சந்தோஷத்தை அதிகரிக்க வேண்டுமென்றால் அவனையும் அதிக செல்வத்தைக் கொடுக்க வேண்டியதில்லை , அவனுடைய ஆசைகளைக் குறைத்தால் போதும்.” (If thou wilt make a man happy, add not unto his riches but take away from his desires)

    ஆனால் மனிதனுடைய மனமோ ஆசைகளுக்கோ விலைபோய் தன்னை அடகு வைத்து விடுகின்றது, ஏதாவது ஒரு ஆசைக்கு அடிமையாகி தன் உண்மை நிலையை மறந்து துன்பக்கடலில் தன்னை மூழ்க வைத்துக் கொள்கின்றது .

    குறிப்பாக காமத்தில்  விழுந்த மனம் பெண்ணாசையில் மதி குலைந்து கள்ளுண்ட போதையில் நிலை மறத்தல் போல் தன்னை மறக்கின்றது.

    இந்த அவல நிலையை விளக்கும் திருமூலர், “எவ்வாறு ஒரு மனிதன் நல்ல பழுத்த மாங்கனி வீட்டில் இருக்கையில் அதை பதுக்கிவிட்டு புளிய மரம் ஏறி புளியம் பழத்தை நாடுவானோ அதுபோல் மனம் ஒரு மனை விட்டு இன்னொரு பெண்ணை நோக்கி ஓடுகின்றது.” என்று விளக்குகின்றார்.

    திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை

    அருத்தமென் றெண்ணி அறையிர்ப்  புதைத்து

    பொருத்தமில்லாத புளிமாங்  கொம்பேறிக்

    கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

    இப்படி வாழுகின்ற மனிதனின் மனம் எப்படியிருக்கும்? எப்போதும் எதிலும் அவனுக்கு ஓர் பயம் இருக்கும். எங்கே தன்னை யாரவது பார்த்து விடுவார்களோ, மற்றவர்கட்கு தன் இழிவான செயல் தெரிந்தால் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயத்திலே  ஒரு நடைப்பிணமாக வாழ்வான். இந்த நிலையை நாலடியார் பாடல் வெகு அழகாக விளக்குகின்றது.

    புக்க இடத்தச்சம் போதரும் போதச்சம்

    துய்க்கும் இடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்

    எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ

    உட்கான்  பிறனில் புகல்.

    “விரும்பும் போதும் பயம், திரும்பி வரும்போதும் பயம், போகத்திலும் பயம், வெளியே தெரியாமல் காக்கும் பயம் என்று எப்போதுமே பயத்தில் வாழ்ந்தாவது பிறன் மனை ஏன் செல்லவேண்டும்? “

    மனிதனின் மனநிலையை படம் பிடித்துக் காட்டி புத்தி புகட்டும் இந்த அருமையான கருத்து நமக்கு மந்திரமா இல்லை அரு மருந்தா?

    (தொடரும் )

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (12)

    க. பாலசுப்பிரமணியன்

    பொன்னான நெஞ்சம் வேண்டுமே !

    திருமூலர்-1

    சிறிய வயதில் பள்ளியில் படித்த ஒரு கதை. மிடாஸ் என்ற ஒரு அரசன். அவனுக்கு உலகமே வியக்கும் வண்ணம் சொத்து இருந்தது. அவன் வீட்டு அறைகளெல்லாம் பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவன் கருவூலத்தில் அளவிட முடியாத பொன் நகைகளும் முத்துக்களும் வைரங்களும் நவரத்தினங்களும்  தங்க நாணயங்களும் இருந்தன. ஆனாலும் அவனுக்கு திருப்தி இல்லை. இன்னும் கொஞ்சம் பொன் நம்மிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற பேராசைக்கடலில் மூழ்கிவிட்டான்.

    அந்த நேரத்தில் ஒரு தேவதை அங்கே வந்தது. “மிடாஸ், உலகிலேயே நீதான் அதிகமான பொன்னுக்குச் சொந்தக்காரனாக இருக்கிறாய். சந்தோஷம்தானே?” என்றது.  அவன் முகத்தில் இருந்த அதிருப்தியைக் கண்ட தேவதை “மிடாஸ் உனக்கு ஒரு வரம் தரலாம் என்று எண்ணுகிறேன். என்ன வேண்டும் என்று கேள்” என்றது.

    உடனே மிடாஸ் “நான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும்.” எனக் கேட்டான். “அப்படியா? உன் விருப்பபடி நாளைக் காலை முதல் நீ தொட்டதெல்லாம் பொன்னாகும்: என்று வரமளித்து அந்த தேவதை மறைந்தது.

    மறுநாள் காலை எழுந்த மிடாஸ் தன் கட்டிலைத் தொட்டான். அது தங்கமானது. ஒவ்வொரு பொருளாக தொட்டுக்கொண்டே வந்தான். அனைத்தும் தங்கமாக மாறின. அளவில்லாத ஆனந்தத்தில்  குடிப்பதற்காக நீரை எடுத்தான் . அந்தத் தண்ணீரும் தங்கமாக மாறியது. அவனால் குடிக்க முடியவில்லை. சிற்றுண்டிக்காக அமர்ந்த மிடாஸ் ஒவ்வொரு உணவையும் தொட அது தங்கமாக மாறியது.

    பயந்து போன மிடாஸ் ஓடி வந்த தன் மகளைக் கட்டி அணைத்தான். மகளும் பொற்சிலையாக மாறினாள். துயரத்தில் மிதந்த  மிடாஸ் தேவதையிடம் தன்  தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டான். “எனக்குப் பொன்னே வேண்டாம். நல்ல   வாழ்க்கை மட்டும் போதும்”  என்று வேண்டினான்.

    இந்தக் கதை ஒரு மனிதனின் பொன்னாசைக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்று உணர்த்துகின்றது.  புன்னகையைத்  தொலைத்து விட்டு  பொன்னகையைத் தேடும் உலகம் இதைப் புரிந்து கொள்ளவேண்டும் !!

    திருமூலர் கூறுகின்றார்

    கற்குழி தூரக் கனகுமுன்னத் தேடுவர்

    அக்குழி தூர்க்கை யாவருக்கும் அரியது

    அக்குழித் தூர்க்கும் அறிவை அறிந்தபின்

    அக்குழி தூறும் அழுக்கற்றவாறே.  

    “பிறப்பு என்ற குழியை பொன்னால் நிரப்ப முடியாது. உண்மை அறிவை நாடுங்கள். அதனால் தான் பிறப்பு என்னும் குழியை நிரப்ப முடியும்.”

    நல்ல சிந்தனைக்கு ஈடு இணை ஏதுமில்லை என்று வலியுறுத்திய கலீல் கிப்ரான் என்ற ஒரு தத்துவ அறிஞர் கூறிகின்றார் :” ஓர் டன் தங்கத்திற்கு ஈடாக ஒரு நல்ல சிந்தனையை யார் எனக்கு கொடுப்பார்?: என்று. “Who would sell me one beautiful thought for a ton of gold?”

    ஆகவே பொன்னில் நாம் வைத்திருக்கின்ற மாயையை நீக்கி பொன்னார்  மேனியனான இறைவனிடம் உள்ளத்தைச் செலுத்துதலே நமக்கு முக்திக்கு வழி காட்டும்  என்பதை நாம் உணர வேண்டும்.

    இப்படிப்பட்ட பேராசை நமக்கும் பிற்காலத்தில் சிறிதும் உதவாது என்ற கருத்தை முன்னிறுத்தி பட்டினத்தாரோ கீழ்கண்டவாறு அங்கலாய்க்கிறார்.

    மாணிக்க முத்து வயிரப் பணிபூண்டு

    ஆணிப்பொன் சிங்கா தனத்தி லிருந்தாலும்

    காணித்  திடலைநமன் கட்டியே  கைப்பிடித்தால்

    காணிப்பொன் கூடவராக காண்கிலமே நெஞ்சமே

    இதே கருத்தை வலியுறுத்தும் பத்ரகிரியாரும் இவ்வாறு உரைக்கின்றார்.

    மனதை ஒரு  வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி

    எனதறிவை அம்பாக்கி எய்வதினியெக்காலம்?

    ஆகவே ஆசைகளை அடக்கி நெஞ்சத்தில் இறைவனை நிறுத்தி அவனோடு ஒன்றிட முயன்றால் அவன் அருள் நிச்சயம் கிட்டிடும். ஆசைகள் உந்திவிடும் துயரங்களிலிருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்ளலாம் .

    ஆனால் நமக்கு அடிக்கடி ஏற்படும் சந்தேகம் “இப்படியெல்லாம் நடக்குமா? இறைவன் அருள் நமக்கு கிட்டுமா?” என்பதே. இந்த சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்  வகையில் மாணிக்க வாசகர் திருவாசகத்தில் அந்த விந்தையைச் சுட்டிக்காட்டுகின்றார்

    மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்

    மங்கையும் தம்மோடுங்

    கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு

    குலாவியே திரிவேனை

    வீடுதந் தென்றன் வெந்தொழில் வீட்டிட

    பொன்மலர் கழல் காட்டி

    ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர்

    அற்புதம் அறியேனே.

    அந்த அருள் நமக்கு கிடைத்துவிட்டால் இந்தத் துயரமும் துன்பமும்தான் தொடருமோ? உறுதியாக அது தொடராது என்ற உண்மையை நமக்கு வள்ளுவர் பெருமான் எடுத்துரைக்கின்றார் :

    அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

    இன்னா உலகம் புகல்.

    தொடரும் ..

    Share