க. பாலசுப்பிரமணியன்

“க் …க் .. ஆ ” அந்தக் காகம் “கா..கா.. ” என்று கத்த முயற்சித்துக் கொண்டிருந்தது. காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எனக்கோ ஒரே வியப்பாக இருந்தது.. ஏன் அதனால் சரியாகக் கத்த முடியவில்லை?

“க் … க் ….” அதன் தொண்டையிலிருந்து குரல் எழும்பவே இல்லை.

ஒருவேளை அதற்குத் தொண்டை கட்டிக்கொண்டிருக்குமோ ?

“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க… அது பக்கத்திலே எங்கையாவது எலும்புத் துண்டை பதம் பார்த்திருக்கும். அதிலுள்ள முள் ஏதாவது தொண்டையில் குத்தி குரல் போயிருக்கலாம்” இது அருகில் நின்ற என் மனைவி.

“எந்த எலும்புத்துண்டிலே முள் இருக்கு என்பதும் உனக்குத் தெரிந்திருக்குமே!”  என் பதிலை கேட்டு தன் முகத்தைச் சுளித்துக் கொண்டு சென்று விட்டாள்.

தன்னுடைய ஒன்றரைக்கண்ணால் அந்தக் காகம் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தது.

“க் ..க.. ” மீண்டும் தன் குரலை இழுத்தது. அதன் குரலில் ஏதோ ஒரு வேதனை தெரிந்தது.,

இரண்டு காகங்கள் அதன் அருகில் வந்து உட்கார்ந்தன ” என்ன ஆச்சு உனக்கு?.” என்று தன் கழுத்தை திருப்பிக் கேட்டுக்கொண்டிருந்தன.

“க.. க ..” குரல் எழும்பவில்லை… “எங்கேயாவது கண்ட சாப்பாட்டை பார்த்து ஆசை பட்டிருப்பான்..” என்று ஏளனமாகச் சொன்னது.முதல் காகம்.

“வேறே ஒன்னும் இருக்காது. யாரவது ஐஸ் கிரீம் சாப்பிட்டுவிட்டு அந்த டப்பாவைக் கீழே போட்டிருப்பாங்க.. இது ஐஸ் கிரீம் ஆசையில் அதை சாப்பிட்டிருக்கும். காலங்கெட்ட நேரத்திலே ஐஸ் கிரீம் சாப்பிட்டால் இப்படித்தான் வரும்..” இது இன்னொரு காகத்தின் எண்ணம்.

பதில் சொல்லமுடியாமல் அந்தக் காகம் தன் கழுத்தை சொரிந்து விட்டுக்கொண்டது.

“க்க்க்க் ..” ஏப்பம் விடுவது போல் இன்னொரு இழுப்பு… இரண்டு காகங்களும் கேலி செய்வதுபோல் சிரித்துக்கொண்டே அந்த இடத்தைக் காலி செய்தன.

தனக்கு நேர்ந்த இந்த விபரீதத்தை நினைத்து தாழ்வு மனப்பான்மையுடன் முகத்தை மறைத்துக்கொள்ள அந்த காகம் இலைகள் நிறைந்த இன்னொரு கிளையில் சென்று அமர்ந்தது.

“ஹாய்…” ஒரு பெண்காகம் இதனருகில் வந்து அமர்ந்தது.

“இவ ..எங்கே.. இந்த நேரங்கெட்ட நேரத்திலே…”

“என்ன.. ஒரு ஹாய் கூட சொல்லமாட்டியா. “

“க்க.. “

“என்ன ஆச்சு இந்த தொண்டைக்கு…யாரையாவது கிண்டலடித்துப் பாடி வாங்கி கட்டிக்கொண்டாயா.? தொண்டையைப் பார்த்து அடிச்சுட்டாங்களா?..”

தன்னுடைய கோபத்தை காட்டுவதற்குத் தன் சிறகை வேகமாகப் பல முறை அடித்துக்கொண்டது.

“உன்னை எங்க அப்பாவுக்கு அறிமுகம் பண்ணலாமென்று நினைத்து இங்கே வந்தேன்..  கேவலமான குரலோடு உன்னை அழைத்துக் கொண்டுபோனால்  .. அய்யய்யோ.. நினைத்தே பார்க்க முடியவில்லை…

சீக்கிரம் சரி செய்து கொண்டு என்னை வந்து பாரு…” பறந்து சென்றது.

தன் அழகான காதலியை நினைத்து ஏங்கி நின்ற காகத்தால் அவளைக் கூப்பிடத் திராணி இல்லை.

“க்க ..” வலித்தது..

வருத்தத்துடன் சிறிதே தன்  திருப்பியதும் அதற்குக் கண்ணில் பட்டதோ பக்கதது வீட்டு சன்னல். உள்ளே அந்த வீட்டு பெரிய மனிதர் ஒரு கரும்பலகையில் எழுதி வைத்திருந்தார்: “முயற்சி திருவினையாக்கும்.”

இது எங்கிருந்தோ வந்த நம்பிக்கை ஒளி…

“க் க ….க்  க ..” மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது.

“தம்பி…” இது ஒரு புதிய வருகை…

“என் பெயர் சின்ன கருப்பன்.. வைத்தியம் பார்க்கிறேன்.. கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு  பொண்ணு வந்து உனக்கு ஏதோ தொண்டையில் பிரச்சினை.. கொஞ்சம் உதவி செய்யுங்க..” என்று சொல்லிவிட்டுப் போனாள் .

பெரியவர் கிளையில் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

“கொஞ்சம் தொண்டையக்  காட்டு பார்க்கலாம்.”

பரிசோதனை தொடங்கியது.. :”என்ன பண்றே.. கொஞ்சம் வேப்ப மரத்துக்குப் போய் நாலு பழுத்த வேப்பம் பழத்தை சாப்பிடு..சீக்கிரம் சரியாகிவிடும்.. “

“என்ன பெரிய தலைவலி! ..தொண்டையில் வந்து சனி பகவான் உட்கார்ந்து விட்டானா.?..எல்லோரிடமும் இப்படி அவமானப் பட வேண்டியிருக்கே..

“இவனுக்கென்ன ஆண்பிள்ளைக் குரலா?.. இல்லை பெண்பிள்ளைக குரலா?  அருகில் பரந்த இரு காகங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து  கொண்டன.

“அங்கே பாருடா…. காக்காய்.. எப்படிக் கத்துதுன்னு.. நீயும் அது மாதிரி “கா.கா.” ன்னு சொல்லு…. தன் பேரனை இடுப்பில் ஏந்திக்கொண்டு வந்த பாட்டிக்கு இந்தக் குரலை கேட்டு ஒரே குஷி.

குழந்தையும் அந்த காகத்தைப் பார்த்து ..”க்…க் .. ” என்று கேலி செய்தது.

கோபத்தில் கண் சிவந்த காகம் பாட்டியையும் பேரனையும் சுற்றி வந்தது. பயந்துபோன பாட்டி அருகில் இருந்த கம்பினால் ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட.. அது இதன் சிறகில் பட..

அது பறந்து போய் பக்கத்து மைதானத்தில் உள்ள ஒரு மரக்கிளையில் அமர்ந்தது…

“மயில் அகவும் .. காகம் கரையும் ”  பக்கத்தில்  உள்ள பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் சொல்லிகொடுத்துக் கொண்டு இருந்தாள் …

“பசங்களா… சொல்லுங்க.. காகம் எப்படி கரையும்?”

உடனே எல்லா மாணவர்களும் “கா.. கா. ” என்று கத்த  ஆரம்பித்துவிட்டனர்.

“ஆண்டவா.. இது என்ன சோதனை. எனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறாங்களா..”

“க் … க் … என்று ஒருமுறை இழுத்தது..

“மிஸ்.. மிஸ்.. அந்தக் காகத்தைப் பாருங்கள் .. அது  “கா.. கா.. ” என்று கத்தவில்லை.. “க்… க் .. ” என்று கரைகிறது..

“டேய் .. அவங்க கூட்டத்துக்கு அது ஒரு மியூசிக் டைரக்டர்டா..  ட்யூன் போட்டுக்கொண்டு இருக்கின்றது.. “

“போதும்.. போதும்.. பாடத்தைக் கவனியுங்கள்.. இல்லைனா .. நீங்களும் அந்த காக்கா மாதிரி தெருத்தெருவா அலையவேண்டியது தான்.

“பாவம்டா  அந்த காக்கா. . “

“பரவாயில்லையே .. ”  மனித ஜாதியில் இன்னும் சில நல்ல உள்ளங்கள் இருக்கின்றனவே.. மற்றவர்களுடைய துன்பத்தைக் கண்டு சிரிக்காமல்..பரிதாபப்படும் உள்ளங்கள்…

திடீரென்று ஒரு கல்..  கீழேயிருந்து …ஒரு சிறுவன் அந்த மாமரத்தில் உள்ள மாங்காயை நோக்கி அடிக்க.. அது குறி தவறி இந்த காகத்தின் மேல் விழ…

“கா .. “வலி தாங்க முடியாமல் ஒரே அலறல் ,,  அடுத்த கல் விழுவதற்கு முன்னால்

“கா.. கா.. ” அது கரைந்து கொண்டே பறந்தது. சில நேரங்களில் ஆண்டவன் நமக்கு எதற்கு துன்பங்களைத் தருகிறான் என்பது நமக்கே தெரியாது.

“கா.. கா.. ” தன் சுய மரியாதை மீண்டும் கிடைத்ததை நினைத்து பெருமையுடன் பறந்து கொண்டிருந்தது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.