Tag: நாங்குநேரி வாசஸ்ரீ

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 71

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 71

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    71.குறிப்பறிதல்

    குறள் 701:

    கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
    மாறாநீர் வையக் கணி

    ஒருத்தங்க பேச வாயத் தொறக்காம இருக்கயிலேயே அவுக மனசுக்குள்ளார என்ன நெனைக்காங்கனு அறிஞ்சுக்கிடுதவன் ஒலகத்துக்கு பூட்டுத நகநட்டு ஆவான். 

    குறள் 702:

    ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
    தெய்வத்தோ டொப்பக் கொளல்

    அடுத்தவன் மனசுக்குள்ளார இருக்கத ஐயமில்லாம கண்டுக்கிடுதவன தெய்வத்துக்கு சமமா மதிக்கணும். 

    குறள் 703:

    குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
    யாது கொடுத்துங் கொளல்

    ஒருத்தரொட மொகத்தப் பாத்தே மனசுல இருக்கத தெரிஞ்சுக்கிடுத தெறம இருக்கவங்கள எதுனாச்சும் சோலியக் கொடுத்தாவது தொணையா வச்சிக்கிடணும். 

    குறள் 704:

    குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
    உறுப்போ ரனையரால் வேறு

    ஒருத்தன் மனசுல இருக்கத அவன் சொல்லாமலே தெரிஞ்சுக்கிடுத தெறம உள்ளவங்க மூஞ்சி,கை,கால்  (உறுப்புக்களால்) பாக்க ஒரேமாரி தோணினாலும் அறிவால வித்தியாசப்படுவாக. 

    குறள் 705:

    குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
    என்ன பயத்தவோ கண்

    அடுத்தவனோட மொகமும் கண்ணும் காட்டுத ஜாடைய (குறிப்ப) புரிஞ்சுக்க முடியாமப் போவுத சமயம் ஒசந்த உறுப்பான கண்ணு இருந்து என்ன பிரயோசனம்? 

    குறள் 706:

    அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
    கடுத்தது காட்டும் முகம்

    அடுத்தாப்ல இருக்குதத தனக்குள்ளார காட்டுத பளிங்கு கணக்கா ஒருத்தன் மனசுல உள்ளத அவன் மொகம் காட்டிப்போடும். 

    குறள் 707:

    முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
    காயினும் தான்முந் துறும்

    ஒருத்தன் எதுமேலயும் ஆசவச்சாலோ வெறுத்தாலோ முந்திக்கிட்டு அதக் காட்டிக்கொடுத்துப் போடுத மொகத்த விட அறிவாளி வேற ஏதும் உண்டா? 

    குறள் 708:

    முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
    உற்ற துணர்வார்ப் பெறின்

    தன் மனசுல இருக்கத மொகத்தப்பாத்து அறிஞ்சுக்கிடுதவர தொணையா வச்சிருக்கவன் அவர் மொகத்துக்கு நேரா நின்னாப் போதும். 

    குறள் 709:

    பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
    வகைமை உணர்வார்ப் பெறின்

    கண் பார்வைல இருக்க வித்தியாசத்த புரிஞ்சிக்கிடுதவங்க அடுத்தவங்களோட கண்ணப் பாத்தே அவுக மனசுல இருக்கது நட்பா பகையான்னு தெரிஞ்சுக்கிடுவாங்க.  

    குறள் 710:

    நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்
    கண்ணல்ல தில்லை பிற

    நாங்க நுண் அறிவுடையவர்கள் னு சொல்லிக்கிடுதவங்க மத்தவங்க மனசுல இருக்கத தெரிஞ்சுக்கிடுதக்கு ஒபயோகிக்க சாதனம் என்னன்னு பாத்தா அவுக கண்ணு தான். 

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 70

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 70

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

    குறள் 691:

    அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
    இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

    ராசா கூட இருக்கவங்க நெருப்புல குளிர் காயுதது போல கிட்டக்க போவாமலும் தூர வெலகாமலும் இடையுல நின்னு பழகணும். 

    குறள் 692:

    மன்னர் விழைப விழையாமை மன்னரான்
    மன்னிய ஆக்கந் தரும்

    ராசா ஆசப்படுதது தான் தனக்கும் வேணும்னு நெனையாம இருக்கவனுக்கு ராசாவால நெலையான செல்வம் கிடைச்சிக்கிடும்.

    குறள் 693:

    போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
    தேற்றுதல் யார்க்கும் அரிது

    ராசாகிட்டேந்து தன்னயக் காத்துக்கிட நெனைக்கவன் தப்பான காரியத்த செய்யக் கூடாது. ஒருக்கா ராசாவுக்கு சந்தேகம் தோணிப்போச்சுதுன்னா  அதத் தெளிய வைக்கது சங்கடந்தான். 

    குறள் 694:

    செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
    ஆன்ற பெரியா ரகத்து

    பெரிய மனுசங்க முன்ன மத்தவன் காதுல ரகசியம் சொல்லுததும், அவன் கூட சேந்து சிரிக்குததும் கூடாது. 

    குறள் 695:

    எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
    விட்டக்காற் கேட்க மறை

    பதவியில இருக்கவங்க ரகசியமா பேசுதப்போ நின்னு ஒட்டு கேக்கக் கூடாது. பொறவு அது என்னனு கேட்டு தொந்தரவும் செய்யக்கூடாது. அவுகளா சொல்லுத வரைக்கும் விட்டுப்போடணும். 

    குறள் 696:

    குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
    வேண்டுப வேட்பச் சொலல்

    ஒருத்தங்களோட மனசப் புரிஞ்சிக்கிட்டு ஏத்த காலத்துல மனசுஒப்பாதத நீக்கிப்போட்டு நல்லதா அவுக விரும்புதாமாரி சொல்லணும். .     

    குறள் 697:

    வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல்

    விருப்பப்பட்டு கேட்டாக ன்னாலும் உருப்படியான விசயத்த மட்டும் சொல்லிப்போட்டு உருப்படாதத விட்டுப்போடணும். 

    குறள் 698:

    இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
    ஒளியோ டொழுகப் படும்

    பதவியில இருக்கவங்கள எனக்கு இன்ன மொறையில சொந்தம், என்னைய விட இளையவன் தான்னு எளக்காரமா பேசாம அவுகளுக்கு இருக்க புகழ நெனச்சி பாத்து நடந்துக்கிடணும். 

    குறள் 699:

    கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
    துளக்கற்ற காட்சி யவர்

    தெளிஞ்ச புத்திக்காரங்க ராசாக்குதான் நம்மளப் புடிக்குமே ன்னு நெனச்சு துணிஞ்சு அவருக்கு பிடிக்காத காரியத்த செய்ய மாட்டாக.  

    குறள் 700:

    பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் 
    கெழுதகைமை கேடு தரும்

    ராசாகிட்ட நெருக்கமா பழகுதோம் ங்குத காரணத்த வச்சிக்கிட்டு தகுதியில்லாத செயலச் செஞ்சாம்னா அது கெடுதலாதான் முடியும்.  

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 68

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 68

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    68.வினைச்செயல் வகை

    குறள் 671:

    சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
    தாழ்ச்சியுள் தங்குதல் தீது

    ஒரு காரியத்த செய்யுதப்போ சாதகபாதகத்த யோசிச்சு முடிவெடுக்கணும். முடிவு எடுத்த பொறவு காரியத்த கெடப்புல போடுதது தப்பா போயிடும்

    குறள் 672:

    தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
    தூங்காது செய்யும் வினை

    நிதானமா செய்ய வேண்டியத தாமதமா செய்யலாம். வெரசலா செய்ய வேண்டியத தாமதமா செய்யக்கூடாது. 

    குறள் 673:

    ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
    செல்லும்வாய் நோக்கிச் செயல்

    ஏலுத (இயலுகின்ற) எடத்துல காரியத்த செஞ்சு முடிக்கது நல்லது. ஏலாத எடத்துல அதுக்கேத்த வழியத் தெரிஞ்சுக்கிட்டு செய்யுதது நல்லது. 

    குறள் 674:

    வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
    தீயெச்சம் போலத் தெறும்

    செய்ய ஏத்துக்கிட்ட காரியம், அழிச்சுப் போட நெனச்ச பகை ரெண்டுலயும் முடிக்காம வைக்குத மிச்சம் பாதில அணைக்காம விட்ட தீயப் போல வளந்து கெடுதல வெளைவிக்கும்.

    குறள் 675:

    பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
    இருள்தீர எண்ணிச் செயல்

    ஒரு காரியத்த செய்யுததுக்கு முன்ன அதுக்குத் தேவைப்படுத பணம், சாமான், காலம், இடம், எப்டி செய்யணும் ங்குத மொறை இந்த அஞ்சையும் சந்தேகமில்லாம யோசிச்சு பொறவு தொடங்கணும். 

    குறள் 676:

    முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
    படுபயனும் பார்த்துச் செயல்

    காரியத்த எப்டி முடிக்கணும் ங்கதையும், அதச் செய்யுதப்போ வரப்போகுத தடங்கலையும், காரியம் முடிஞ்ச பொறவு கெடைக்கப்போவுத பயனையும் நெனைச்சுப்பாத்து செய்யணும்.   

    குறள் 677:

    செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
    உள்ளறிவான் உள்ளங் கொளல்

    ஒரு காரியத்த தொடங்குதப்போ அத முன்னமே செஞ்சவங்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு செய்யுதது தான் மொறை. 

    குறள் 678:

    வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று

    ஒரு காரியத்த செய்யுதப்போ அத வச்சி இன்னொரு காரியத்தயும் நடத்திக்கிடதது  ஒரு யானைய வச்சி இன்னொரு யானைய பிடிக்குதது கணக்கா ஆவும்.   

    குறள் 679:

    நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
    ஒட்டாரை ஒட்டிக் கொளல்

    பகையாளியா இருக்கவங்கள சேத்துக்கிடதது சேக்காளிங்களுக்கு தேவைப்படுதத செஞ்சு கொடுக்கதக் காட்டிலும் வெரசலா செய்ய வேண்டிய விசயம். 

    குறள் 680:

    உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற் 
    கொள்வர் பெரியார்ப் பணிந்து

    தங்கள விட பலசாலிய  எதித்து நிக்கதுக்கு கூட இருக்கவங்களே நடுங்குதப்போ  எதிர்பாக்குத பலன் கெடைக்கும்னு தெரிஞ்சா அவுக பலசாலிய பணிஞ்சு ஏத்துக்கிடுவாக. 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 67

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 67

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    67.வினைத்திட்பம் 

    குறள் 661:

    வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
    மற்றைய எல்லாம் பிற

    செயல செஞ்சு முடிக்குணும்ங்குத உறுதி அவன் நெஞ்சுறுதி மட்டுந்தான். மத்ததெல்லாம் வேற தான். 

    குறள் 662:

    ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

    தடங்கல் வரமுன்ன தடுக்கணும். வந்துடுச்சின்னா அந்தால கெடந்து தொவண்டு போவாம இருக்கணும். இந்த ரெண்டும் அறிவுள்ளவங்களோட கொள்க. 

    குறள் 663:

    கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
    எற்றா விழுமந் தரும்

    ஒரு செயல எப்பமும் செஞ்சு முடிச்ச பொறவுதான் வெளிப்படுத்தணும். இடையில வெளிப்படுத்தினா முடிக்க முடியாம தடங்கலா வந்து நிக்கும்.  

    குறள் 664:

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்

    இந்தக் காரியத்த இப்டி செஞ்சு முடிக்கலாம்னு சொல்லுதது எல்லாருக்கும் சுளுவு. சொன்னமேனிக்கு செஞ்சு முடிக்கது தான் சிரமம்.  

    குறள் 665:

    வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்

    செய்யுத தெறமையில பெரும பெத்து ஒசந்தவங்களோட செயல்உறுதி நாட்ட ஆளுத ராசா வரைக்கும் பரவி மதிக்கப்படும்.

    குறள் 666:

    எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்

    ஒண்ணச் செய்யணும்னு நெனைக்கவங்க நெஞ்சுறுதி உள்ளவங்களா இருந்தாங்கன்னா அவங்க நெனச்சத நெனச்சபடி அடஞ்சிக்கிடுவாங்க.

    குறள் 667:

    உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
    கச்சாணி யன்னார் உடைத்து

    உருளுத தேருக்கு வடிவுல சிறுசா இருக்க அச்சாணி எம்புட்டு முக்கியமோ அது கணக்கா தான் ஒலகத்துல மன உறுதி உள்ளவங்களும்.  அவுக உருவத்த வச்சி எளக்காரம் செய்யக்கூடாது. 

    குறள் 668:

    கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கங் கடிந்து செயல்

    கொளம்பாம தெளிவா துணிஞ்சு ஏத்துக்கிட்ட தொழில அசராம, கெடப்புல போடம வெரசலா செஞ்சு முடிக்கணும். 

    குறள் 669:

    துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை

    முடிக்கையில மகிழ்ச்சி கெடைக்கும்னு தெரிஞ்சா ஒரு செயல சங்கடப்பட்டுக்கிட்டேன்னாலும் செஞ்சு முடிக்கணும். 

    குறள் 670:

    எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
    வேண்டாரை வேண்டா துலகு

    வேற எந்த வகையில உறுதி இருந்தாலும் காரியம் செய்யுததுல  உறுதியில்லாதவர ஒலகம் விரும்பாது. 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 64

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 64

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் 

    64.அமைச்சு

    குறள் 631:

    கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்ட தமைச்சு

    ஒரு செயலச் செய்யத்தேவைப்படுத பொருள், ஏத்த காலம், செய்யுத வகை, எல்லாத்தையும் சோதிச்சுப்பாத்து செயல்படுத்துதவன் தான் ஒசந்த அமைச்சர்.  

    குறள் 632:

    வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
    டைந்துடன் மாண்ட தமைச்சு

    செயலுக்கு ஏத்த நெஞ்சுறுதி, மக்களக் காக்குதது, தகுந்த நீதி நூல்களக் கத்துக்கிடுதது ,படிச்சவங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிடுதது, அசராத முயற்சி இந்த அஞ்சும் இருக்கவங்க தான் அமைச்சர்.

    குறள் 633:

    பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
    பொருத்தலும் வல்ல தமைச்சு

    பகையாளிக்கு தோணையா இருக்கவன பிரிக்கதும் , தன் நாட்டுக்கு தொணையா இருக்கவங்களக் காக்குததும், பொறவு பிரிஞ்சவன் திருந்திட்டாம்னா அவனச் சேத்துக்கிடததுலயும் தெறமசாலியா இருக்கவன் தான் அமைச்சர். 

    குறள் 634:

    தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
    சொல்லலும் வல்ல தமைச்சு

    செய்ய வேண்டியதத் தெரிஞ்சுக்கிட்டு அதச் செய்யுததுக்கு ஏத்த வழிமொறையக் கண்டுபிடிக்கதும் தான் நெனைக்குதத துணிச்சலா சொல்லதுதலயும் தெறமசாலிய இருக்கவன் தான் அமைச்சன்.

    குறள் 635:

    அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
    திறனறிந்தான் தேர்ச்சித் துணை

    அறத்தை அறிஞ்சுக்கிட்டு நெறையா படிச்சுபோட்டு அடக்கமா இருந்து செய்யுத முறை தெரிஞ்சு இருக்கவர்கிட்ட தான் கலந்துபேசி முடிவு எடுக்க முடியும்.

    குறள் 636:

    மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
    யாவுள முன்னிற் பவை

    படிச்ச படிப்புக்கு மேல சொந்த புத்திசாலித்தனமும் இருக்கவங்கள எந்த சூது எதித்து நிக்க முடியும்?  முடியாது. 

    குறள் 637:

    செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
    தியற்கை அறிந்து செயல்

    படிச்ச படிப்பால எல்லாந்தெரிஞ்சாலும் ஒலக நடப்ப உணந்துகிட்டு ஏத்தாமாரி செயலச் செய்யணும். 

    குறள் 638:

    அறிகொன் றறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன்

    சொன்னதையும் கேக்காம சொந்த புத்தியும் இல்லாம இருக்க ராசாக்கு அமைச்சன் துணிச்சலா நல்ல யோசனைகளச் சொல்லணும்.  

    குறள் 639:

    பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
    எழுபது கோடி உறும்

    தப்பான வழிமொறையச் சொல்லி வம்புல மாட்டி உடுத அமைச்சன் பக்கத்துல இருக்குதத விட எழுபது கோடி பகையாளிங்க பக்கத்துல இருக்கது எம்புட்டோ நன்மையக் கொடுக்கும். 

    குறள் 640:

    முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
    திறப்பா டிலாஅ தவர்

    எம்புட்டுத் திட்டம்போட்டு செயலத் தொடங்கினாலும் கூறுகெட்டவன் அத அரைகொறையாத் தான் செய்யுவான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    62. இடுக்கண் அழியாமை

    குறள் 621:

    இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
    அடுத்தூர்வ தஃதொப்ப தில்

    சங்கடம் வரும்போது கலங்காம சிரிக்கணும். சங்கடத்த எதித்து செயிக்கதுக்கு அதப்போல வேற இல்ல. 

    குறள் 622:

    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்

    வெள்ளம் வருதது கணக்கா சங்கடம் கரபுரண்டு வந்துச்சின்னாகூட அறிவாளிங்க அதப்பத்தி மனசுக்குள்ளார நெனச்ச நேரத்துலயே அது விலகி ஓடிப்போவும். 

    குறள் 623:

    இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
    கிடும்பை படாஅ தவர்

    சங்கடம் வருதப்போ வருத்தப்படாம இருக்கவங்க சங்கடத்துக்கே சங்கடத்த உண்டாக்கி அதத் தோக்கடிப்பாங்க.

    குறள் 624:

    மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

    கரடுமுரடான பாதையில கூட வண்டிய இழுத்துக்கிட்டு போகுத காள மாடு கணக்கா அசராம முனையுதவனுக்கு வந்த சங்கடம் சங்கடப்பட்டு போவும். 

    குறள் 625:

    அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்

    தொடர்ச்சியா ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா சங்கடம் வந்தாலும் மனசு தளராதவனுக்கு அந்தச் சங்கடமே சங்கடப்பட்டுக்கிட்டு போயிடும். 

    குறள் 626:

    அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
    றோம்புதல் தேற்றா தவர்

    சொத்துசொகம் சேரும்போது அதுக்காக சந்தோசப்பட்டு காப்பாத்திவச்சிக்கிடாதவங்க அது கைவிட்டுப்போவும் போது வெசனப்படுவாங்களோ?

    குறள் 627:

    இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
    கையாறாக் கொள்ளாதா மேல்

    ஒடம்பு துன்பத்துக்கு இடமானது னு அறிஞ்சுக்கிட்ட பெரியவங்க துன்பம் வருதப்போ அத துன்பமாவே நெனைச்சுக்கிட மாட்டாங்க.  

    குறள் 628:

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசத்த தேடி அலையாம துன்பத்தையும் சாதாரணமா எடுத்துக்கிடுதவன் மனசு தளர்ந்து சங்கடப்பட மாட்டான்.

    குறள் 629:

    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசம் வார நேரம் ஆட்டம் போடாதவன் சங்கடம் வரும்போது துக்கப்படமாட்டான். 

    குறள் 630:

    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
    ஒன்னார் விழையுஞ் சிறப்பு

    சங்கடத்த சந்தோசம் னு நெனைக்குத நெஞ்சுரம் உள்ளவங்களுக்கு பகையாளியும் பாராட்டுத பெரும வந்து சேரும். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள்

    இடுக்கண் அழியாமை

    குறள் 621:

    இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
    அடுத்தூர்வ தஃதொப்ப தில்

    சங்கடம் வரும்போது கலங்காம சிரிக்கணும். சங்கடத்த எதித்து செயிக்கதுக்கு அதப்போல வேற இல்ல. 

    குறள் 622:

    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்

    வெள்ளம் வருதது கணக்கா சங்கடம் கரபுரண்டு வந்துச்சின்னாகூட அறிவாளிங்க அதப்பத்தி மனசுக்குள்ளார நெனச்ச நேரத்துலயே அது விலகி ஓடிப்போவும். 

    குறள் 623:

    இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
    கிடும்பை படாஅ தவர்

    சங்கடம் வருதப்போ வருத்தப்படாம இருக்கவங்க சங்கடத்துக்கே சங்கடத்த உண்டாக்கி அதத் தோக்கடிப்பாங்க.

    குறள் 624:

    மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

    கரடுமுரடான பாதையில கூட வண்டிய இழுத்துக்கிட்டு போகுத காள மாடு கணக்கா அசராம முனையுதவனுக்கு வந்த சங்கடம் சங்கடப்பட்டு போவும். 

    குறள் 625:

    அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்

    தொடர்ச்சியா ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா சங்கடம் வந்தாலும் மனசு தளராதவனுக்கு அந்தச் சங்கடமே சங்கடப்பட்டுக்கிட்டு போயிடும். 

    குறள் 626:

    அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
    றோம்புதல் தேற்றா தவர்

    சொத்துசொகம் சேரும்போது அதுக்காக சந்தோசப்பட்டு காப்பாத்திவச்சிக்கிடாதவங்க அது கைவிட்டுப்போவும் போது வெசனப்படுவாங்களோ?

    குறள் 627:

    இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
    கையாறாக் கொள்ளாதா மேல்

    ஒடம்பு துன்பத்துக்கு இடமானது னு அறிஞ்சுக்கிட்ட பெரியவங்க துன்பம் வருதப்போ அத துன்பமாவே நெனைச்சுக்கிட மாட்டாங்க.  

    குறள் 628:

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசத்த தேடி அலையாம துன்பத்தையும் சாதாரணமா எடுத்துக்கிடுதவன் மனசு தளர்ந்து சங்கடப்பட மாட்டான்.

    குறள் 629:

    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசம் வார நேரம் ஆட்டம் போடாதவன் சங்கடம் வரும்போது துக்கப்படமாட்டான். 

    குறள் 630:

    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
    ஒன்னார் விழையுஞ் சிறப்பு

    சங்கடத்த சந்தோசம் னு நெனைக்குத நெஞ்சுரம் உள்ளவங்களுக்கு பகையாளியும் பாராட்டுத பெரும வந்து சேரும். 

    (அடுத்தாப்லையும் வரும்)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    62. ஆள்வினை உடைமை

    குறள் 611:

    அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்

    நம்மால முடியுமா னு மன உளச்சல் படுதது கூடாது. மனசு வச்சி முனஞ்சோம்னா அதுக்கு உண்டான தெம்பு தானா வந்துக்கிடும். 

    குறள் 612:

    வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு

    எதச் செஞ்சாலும் முழுக்க செஞ்சு முடிக்கணும். முடிக்கது செரமம் னு பாதில உட்டவங்கள ஒலகமும் விட்டுப்போடும். 

    குறள் 613:

    தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
    வேளாண்மை என்னுஞ் செருக்கு

    விடாம முனஞ்சி செய்யுத ஒசந்த கொணத்துல தான் மத்தவங்களுக்கு ஒதவுத பெருமயான செயல் அடங்கியிருக்கு. 

    குறள் 614:

    தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
    வாளாண்மை போலக் கெடும்

    முயற்சி இல்லாதவன் மத்தவங்களுக்கு ஒதவுதேன்னு சொல்லுதது பேடி தன் கையில வாளத் தூக்கி வீசுததுக்குச் சமானம். 

    குறள் 615:

    இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்

    சுயநலமா இல்லாம தான் ஏத்துக்கிட்ட செயல முடிக்க; விரும்புதவன் தன்னையச் சுத்தி இருக்க எல்லாரோட தொயரத்தையும் போக்கித் தாங்குத தூண் ஆவான்.

    குறள் 616:

    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்

    காரியத்த முனஞ்சி செய்யுதது செல்வத்தக் கொடுக்கும் அப்டி செய்யாதது வறுமையக் கொடுத்துப் போடும்

    குறள் 617:

    மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
    தாளுளாள் தாமரையி னாள்

    ஒருத்தன் மாச்சப்பட்டாம்னா அதுல மூதேவி வந்து வாழுவா.  காரியத்த முனைஞ்சி செய்யுதப்போ மகாலச்சுமி வந்து தங்கிக்கிடுவா.

    குறள் 618:

    பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
    தாள்வினை இன்மை பழி

    நன்மைய விளைவிக்குத விதி இல்லாம இருக்கது யாருக்கும் குறையா ஆவாது. தெறிஞ்சுக்கிட வேண்டியத தெரிஞ்சுக்கிட்டு முனஞ்சி செய்யாம இருக்கது தான் குறை. .

    குறள் 619:

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்

    விதி நமக்கு ஒதவ முடியாமப் போனாலும் ஒடம்ப வருத்திக்கிட்டு உழச்சோம்னா அதுக்கேத்த கூலி கெடைக்கும்.

    குறள் 620:

    ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
    தாழா துஞற்று பவர்

    மனசு தளராம தொடர்ச்சியா முனையுதவங்க விதியையும் தோக்கடிச்சிடுவாங்க. 

    -அடுத்தாப்லையும் வரும்-

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 61

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 61

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் 

    61)  மடி இன்மை

    குறள் 601:

    குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
    மாசூர மாய்ந்து கெடும்

    ஒருத்தன் பொறந்த குடி ங்குத மங்காத விளக்கு அவனோட மாச்சலால(சோம்பல்) ஒளி மங்கி கெட்டுப் போவும். 

    குறள் 602:

    மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்

    குடும்பத்த ஒசத்த விரும்புதவங்க மாச்சப்பட்டு இருக்காம உற்சாகமா முனஞ்சு செயல்படணும். 

    குறள் 603:

    மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
    குடிமடியுந் தன்னினு முந்து

    ஒழிச்சுக்கட்டவேண்டிய மாச்சல தங்கிட்ட வச்சிருக்கவனோட குடும்பம் அவனுக்கு முன்ன அழிஞ்சு போவும். 

    குறள் 604:

    குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
    மாண்ட உஞற்றி லவர்க்கு

    மாச்சப்பட்டு பாடுபாக்காம இருக்கவன் வாழ்க்கையில தப்புதண்டா செய்யுதது அதிகமாயி அவன் குடும்பப் பெரும அழிஞ்சு போவும். 

    குறள் 605:

    நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்

    கெடப்புல போட்டு காரியத்த செய்யுதது, அயத்துப் போகுத கொணம், மாச்சல், அளவுக்கு மீறி ஒறங்குதது இந்த நாலு கொணமும் கெட்டுப்போவணும் னு நெனைக்கவன் ஆசப்பட்டு ஏறுத தோணி ஆவும்.

    குறள் 606:

    படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது

    நாட்ட ஆளுத தலைவனோட ஒறவு தானே வந்து சேந்துக்கிட்டாலும் மாச்சப்பட்டு சும்மா இருக்கவனுக்கு அதனால ஒரு உபயோகமில்ல. 

    குறள் 607:

    இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
    மாண்ட உஞற்றி லவர்

    முனஞ்சி பாடுபாக்காம மாச்சப்பட்டு சும்மா இருக்கவன் வாழ்க்கைல மத்தவங்க இடிச்சுப்பேசி எளக்காரம் செய்யுத நெலமைக்கு வந்துருவான். 

    குறள் 608:

    மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
    கடிமை புகுத்தி விடும்

    மாச்சப்படுதவன் நல்ல குடில பொறந்திருந்தாலும் அந்த கொணம் அவன பகையாளிக்கு அடிம போல ஆக்கி உட்ரும். 

    குறள் 609:

    குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
    மடியாண்மை மாற்றக் கெடும்

    ஒருத்தன் மாச்சல விட்டுப்போட்டாம்னா அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் வந்த குத்தங்கொற வெலகிப் போயிடும்.

    குறள் 610:

    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு

    கடவுள் அடியால அளந்த ஒலகத்தையெல்லாம் மாச்சப்படாம இருக்க ராசா சேந்தாப்ல அடைஞ்சுக்கிடுவான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 60

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 60

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 60

      ஊக்கம் உடைமை

    குறள் 591:

    உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
    உடைய துடையரோ மற்று

    ஊக்கம் உடையவங்க எல்லாம் உடையவங்க.ஊக்கம் இல்லாதவங்க எத வச்சிருந்தாலும் எதுவுமே இல்லாதவங்க தான். 

    குறள் 592:

    உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்

    ஊக்கம் ங்குத ஒரு பொருளத் தவித்து வேற எதையும் நெலையான உடைமை னு  சொல்ல முடியாது. 

    குறள் 593:

    ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தங் கைத்துடை யார்

    ஊக்கத்த கைவசத்துல வச்சிருக்கவங்க செல்வம் கைவிட்டுப் போச்சுதுன்னா கூட வெசனப்பட மாட்டாங்க. 

    குறள் 594:

    ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை

    அசதி இல்லாத ஊக்கம் ஒடயவங்கிட்ட செல்வம் அவன் இருக்க எடத்துக்கு வழி கேட்டுக்கிட்டு போய்ச் சேந்துக்கிடும். 

    குறள் 595:

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனைய துயர்வு

    தண்ணில இருக்க பூவோட அடிக்காம்போட நீளம் தண்ணியோட அளவ பொருத்து மாறிக்கிடும். அது கணக்கா மனுசன் வாழ்க்கையில ஒசருததும் அவன் மனசுல இருக்க ஊக்கத்தப் பொருத்து தான். 

    குறள் 596:

    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

    நெனைப்பு பூரா ஒசந்ததாவே இருக்கணும். ஒருக்கா அது நடக்கலேனாலும் நெனைப்ப விட்டுப்போடக் கூடாது. 

    குறள் 597:

    சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு

    ஒடம்பு முழுக்க அம்பு தைச்சாலும் யானை தளராம நிக்கும். அது கணக்கா ஊக்கம் ஒடயவங்க அழிவே வந்துச்சின்னாலும் கலங்க மாட்டாக.

    குறள் 598:

    உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னுஞ் செருக்கு

    அள்ளிக் கொடுக்குத ஊக்கம் இல்லாதவுக தங்கள வள்ளல் னு பெரும பட்டுக்கிடதுதுக்கு வழியே இல்ல. 

    குறள் 599:

    பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்

    பருத்த ஒடம்பும் கூர்மையா கொம்பும் இருக்க யானை கூட ஊக்கம் இருக்க புலி தாக்கிச்சின்னா பயந்துக்கிடும். 

    குறள் 600:

    உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
    மரமக்க ளாதலே வேறு

    மனசுல உறுதியான ஊக்கம் இல்லாதவங்க பாக்கதுக்கு மனுசங்களா இருந்தாலும் மரங்களுக்கு சமானம் தான்.

    -அடுத்தாப்லையும் வரும்- 

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 59

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 59

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 59

    ஒற்றாடல்

    குறள் 581:

    ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
    தெற்றென்க மன்னவன் கண்

    நேர்மையான தெறமையான உளவாளியும் (ஒற்றரும்) நீதியச் சொல்லுத அற நூல்களும் ராசாவுக்கு ரெண்டு கண்ணு கணக்கா.

    குறள் 582:

    எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில்

    எல்லா இடத்திலயும், நடக்குதத எல்லாத்தையும் எப்பமும் உளவு பாக்க உளவாளி வச்சி வெரசலா தெரிஞ்சிக்கிடவேண்டியது ராசாவோட வேலை.

    குறள் 583:

    ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
    கொற்றங் கொளக்கிடந்த தில்

    நாட்டு நடப்ப உளவாளிய வச்சி தெரிஞ்சுக்கிட்டு நடத்தாத ஆட்சி நெலச்சி நிக்குததுக்கு வேற வழியே இல்ல.

    குறள் 584:

    வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
    கனைவரையும் ஆராய்வ தொற்று

    உளவு பாக்குத உளவாளி தனக்கு வேண்டப்பட்டவங்க, வேண்டாதவங்க, சொந்தக்காரங்க னு பாக்காம வேலை செஞ்சாத்தான் அவங்கள நேர்மையான உளவாளிகள் னு சொல்ல முடியும்.

    குறள் 585:

    கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
    உகாஅமை வல்லதே ஒற்று

    மத்தவங்களுக்கு சந்தேகம் வராத வேசத்தோட போயி, ஒருக்க சந்தேகப் பட்டு பாத்தாலும் பயப்படாம இருந்து, எந்த நேரத்திலயும் மனசுல இருக்கத வெளிய சொல்லாம இருக்க நெஞ்சுறுதி உள்ளவந்தான் உளவாளியா இருக்கதுக்கு லாயக்கு..

    குறள் 586:

    துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
    தென்செயினுஞ் சோர்வில தொற்று

    துறவி வேசத்துல போக முடியாத இடத்துக்கெல்லாம் போயி வேண்டியத தெரிஞ்சிக்கிட்ட பொறவு பிடிபட்டா என்ன சங்கடம் வந்தாலும் ரகசியத்த சொல்லாம மறைக்கவன் தான் உளவாளி..

    குறள் 587:

    மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
    ஐயப்பா டில்லதே ஒற்று

    ரகசியமா செய்யுத செயல்களையும் போட்டுவாங்கி தெறிஞ்சுக்கிடுத தெறம உள்ளவனாவும் கேட்ட பொறவு அது எம்புட்டு உண்ம னு தெளிவா புரிஞ்சுக்கிடுதவனும் தான் உண்மையான உளவாளி.

    குறள் 588:

    ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
    ஒற்றினால் ஒற்றிக் கொளல்

    ஒரு உளவாளி தன் தெறமையால தெரிஞ்சுக்கிட்டு வந்த விசயத்தப் பத்தி , இன்னொரு உளவாளியையும் தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்லி சரி பாத்துக்கிடணும்.

    குறள் 589:

    ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
    சொற்றொக்க தேறப் படும்

    ஒருத்தருகொருத்தர் அறிஞ்சுக்கிடாம மூணு உளவாளிங்கள அனுப்பி உளவு பாத்து மூணுபேரு சொல்லும் ஒண்ணுபோல இருந்தா அத உண்மனு ஒத்துக்கிடலாம்.

    குறள் 590:

    சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்
    புறப்படுத்தான் ஆகும் மறை

    ஒரு உளவாளிக்கு திறமசாலினு பரிசு கொடுக்க நெனச்சா ஊரறிய குடுக்கக்கூடாது அப்டி செஞ்சா ஒளிவுமறைவா இருக்க வேண்டியத தானே வெளியவிடுதது போல ஆவும்.

    (அடுத்தாப்லையும் வரும்)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 58

    -நாங்குநேரி வாசஸ்ரீ

     

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 58

    கண்ணோட்டம்

    குறள் 571:

    கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
    உண்மையான் உண்டிவ் வுலகு

    இந்த ஒலகம் நேசமும் இரக்கமும் இணஞ்ச கண்ணோட்டம் ங்குத பெரும் அழகக் கொண்டவங்களால தான் அழியாம நிக்குது. 

    குறள் 572:

    கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
    உண்மை நிலக்குப் பொறை

    நேசத்தோட அணைச்சு இரக்கம் காட்டும் கண்ணோட்டம் இல்லாதவங்க உசிரோட இருக்கது இந்த பூமிக்கு சும தான்.

    குறள் 573:

    பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
    கண்ணோட்டம் இல்லாத கண்

    இரக்க கொணம், நேசம் ங்குத கண்ணோட்டத்தோட பொருந்தி வாராத கண்ணும் பாட்டு கூட பொருந்தி வாராத இசையும் ஒரு உபயோகத்துக்கு ஒதவாது. 

    குறள் 574:

    உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
    கண்ணோட்டம் இல்லாத கண்

    உள்ளத்துல நேசத்தையும் இரக்கத்தையும் ஊற வைக்காத கண்ணுங்க மொகத்துல இருக்கது தவித்து அதால வேற என்ன ஒபயோகம்?

    குறள் 575:

    கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
    புண்ணென் றுணரப் படும்

    ஒருத்தனுக்கு கண்ணுல பூட்டுத நக நட்டு கணக்கா இருக்கது கண்ணோட்டங்குத கொணம். அது இல்லன்னா வெறும் புண் னு நெனைச்சிக்கிடணும். 

    குறள் 576:

    மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
    டியைடந்துகண் ணோடா தவர்

    ஒருத்தருக்கு கண் இருந்தும் கூட அதுக்குரிய நேசமும் இரக்கமும் இல்லன்னா அவர் மரத்துக்கு தான் சமானம். 

    குறள் 577:

    கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
    கண்ணோட்டம் இன்மையும் இல்

    கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரு தான். கண் இருக்கவங்க கண்ணோட்டம் இல்லாம இருக்க மாட்டாங்க. 

    குறள் 578:

    கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
    குரிமை உடைத்திவ் வுலகு

    செய்யுத கடமயிலேந்து தவறாம கருணையா இருக்கதிலும் முதலா இருக்கவங்களுக்கு இந்த ஒலகமே சொந்தமாவும்.    

    குறள் 579:

    ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
    பொறுத்தாற்றும் பண்பே தலை

    தன்னைய அழிக்க நெனக்கவங்க கிட்டயும் பொறும காட்டுதது ரொம்ப ஒசந்த கொணம். 

    குறள் 580:

    பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டு பவர்

    கருண உள்ளமும் பண்பாடும் உள்ளவங்க தான் கூட பழகுதவங்க விஷத்த குடுத்தாக் கூட குடிச்சிபோட்டு சந்தோசப்படுவாங்க.

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    -நாங்குநேரி வாசஸ்ரீ

     

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    57. வெருவந்த செய்யாமை

    குறள் 561:

    தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங் கொறுப்பது வேந்து

    செஞ்ச தப்ப நியாய வழில கவனிச்சு பாத்து திரும்ப அவன் அந்த தப்ப செய்யாம இருக்கதுக்கு ஏத்தா மாதிரி தண்டன கொடுக்கவனே ராசா.

    குறள் 562:

    கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்

    நெறைய நாள் செல்வாக்கோட இருக்கணும்னு நெனைக்கவங்க கண்டிக்கத் தொடங்குதப்போ கடுமையா தொடங்கிட்டு பொறவு வரம்பு மீறாம தண்டன கொடுக்கணும்.

    குறள் 563:

    வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

    மக்கள் பயப்படுதமாரி இருக்க  கொடுமக்கார ராசா நடத்துத ஆட்சி வெரசலா அழிஞ்சு போவும்.

    குறள் 564:

    இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
    உறைகடுகி ஒல்லைக் கெடும்

    நம்ம ராசா கொடுமக்காரன்னு மக்கள் சொல்லுததக் கேட்டு இருக்க ராசாவோட ஆட்சிக்காலம் கொறஞ்சு அவன் கெட்டழியுவான்.

    குறள் 565:

    அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
    பேஎய்கண் டன்ன துடைத்து

    கடுகடுனு மொகத்த வச்சிக்கிட்டு யாராலயும் சுளுவா பாக்கமுடியாதவனா இருக்கவன் கிட்ட குவிஞ்சு கெடக்க சொத்து பேய் கணக்கா பாக்குததுக்கு பயப்படுத்தும்.

    குறள் 566:

    கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
    நீடின்றி ஆங்கே கெடும்

    கடுமையா பேசி, தயவு தாட்சண்யமே இல்லாம இருக்கவன் கிட்ட உள்ள செல்வம் நிக்காம அழிஞ்சு போவும்.

    குறள் 567:

    கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
    அடுமுரண் தேய்க்கும் அரம்

    கடுஞ்சொல்லும் வரம்பு மீறின தண்டனையும் ஒரு ராசாவோட பகைய செயிக்க ஒதவுத ஆயுதத்த தேச்சி மொண்ணையாக்குத அரம் கணக்கா ஆவும்.

    குறள் 568:

    இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
    சீறிற் சிறுகுந் திரு

    மந்திரி , மத்த கூட்டாளிங்க எல்லார்கிட்டயும் கலந்து பேசாம கோவப்பட்டு சீறுதவனோட செல்வம் சுருங்கிப் போவும்.

    குறள் 569:

    செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
    வெருவந்து வெய்து கெடும்

    முன்னாலயே யோசிச்சு தேவைப்படுத பாதுகாப்பு செய்யாத ராசா போர் வந்திச்சுன்னா பயந்து வெரசலா அழிவான்

    குறள் 570:

    கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
    தில்லை நிலக்குப் பொறை

    கொடுமக்கார ராச்சியம் நல்லதப் படிக்காதவுகள தனக்கு பக்கத் தொணையா வச்சிக்கிடும். அது கணக்கா பூமிக்கு பாரம் வேற ஒண்ணுமில்ல.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-56

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-56

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-56

    56. கொடுங்கோன்மை

    குறள் 551:

    கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
    டல்லவை செய்தொழுகும் வேந்து

    நாட்டு மக்களத் துன்புறுத்துத ராசா கொல செய்யுதவனக் காட்டிலும் கொடுமக்காரன்

    குறள் 552:

    வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
    கோலொடு நின்றான் இரவு

    ஆட்சி நடத்துத ராசா அதிகாரத்த ஒபயோகிச்சு மக்கள்கிட்ட பொருள் கேக்குதது, வழிப்பறி கொள்ளக்காரன் கொள்ளையடிக்கதுக்காவ மிரட்டுததுக்கு சமானம்.

    குறள் 553:

    நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
    நாடொறும் நாடு கெடும்

    தெனைக்கும் நாட்டுல நடக்குதத அறிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிடாத ராசா பைய பைய தன் நாட்ட இழந்துகிட்டே வருவான்.

    குறள் 554:

    கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
    சூழாது செய்யும் அரசு

    நாட்டு நெலமயத் தெரிஞ்சுக்கிடாம கூறுகெட்டு நாட்ட ஆளுத ராசாவவிட்டு செல்வமும் , குடிமக்களும் சேந்தாப்ல வெலகிப் போயிடுவாக.

    குறள் 555:

    அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை

    தப்பான ஆட்சிமொறையால நொந்து போயி மக்கள் உடுத கண்ணீர் தான் ஒரு ராசாவோட செல்வத்த அழிக்குத ஆயுதம்.

    குறள் 556:

    மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
    மன்னாவாம் மன்னர்க் கொளி

    ராசாவோட புகழ் நெலச்சி நிக்கதுக்குக் காரணம் அவரோட நேர்மையான ஆட்சி.  அது இல்லன்னா புகழ் இல்லாமப் போவும்.

    குறள் 557:

    துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
    அளியின்மை வாழும் உயிர்க்கு

    மழை இல்லாமப் போவுச்சுன்னா எங்ஙன சங்கடத்த அனுபவிப்பாகளோ அங்ஙன நேர்மையில்லாத ஆட்சிலயும் அனுபவிப்பாக.

    குறள் 558:

    இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
    மன்னவன் கோற்கீழ்ப் படின்

    மொற தவறி தப்பா ஆட்சி நடத்துதவனுக்கு கீழ ஏழையா வாழுதத விட பணக்காரனா வாழுதது ரொம்ப சங்கடமான விசயம்.

    குறள் 559:

    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்

    ராசா மொற தப்பி ஆட்சி செஞ்சாம்னா அந்த நாட்டுல பருவம் தப்பி மழை பெய்யாமலே போவும்.

    குறள் 560:

    ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்

    நாட்டக் காக்க வேண்டியவன் மொறப்படி காக்கலேன்னா பசு மாடு பால் கொடுக்காது. ஞானிங்க அவுக படிச்ச அறநூல்கள அயத்து (மறந்து)  போவாக

    (அடுத்தாப்லயும் வரும்…..)

    Share
  • இந்த வார வல்லமையாளர் – ஆர்த்தி நிதி

    இந்த வார வல்லமையாளர் – ஆர்த்தி நிதி

    நாங்குநேரி வாசஸ்ரீ

    சுவீடன் நாட்டின் ஹெல்சின்பர் (Helsingborg) நகரில், 2019 ஜூன் 4 ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை நடைபெற்ற ஏழாவது உலக பவர்லிஃப்ட்டிங் போட்டியில் 63 கிலோ எடைப் பிரிவில் ஆர்த்தி நிதி, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங், மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Dead lift) ஆகிய மூன்று கட்டங்களைக் கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையைத் தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.

    ஐபிஎஃப் எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சுவீடனில் நடைபெற்ற தொடரில், 20-22 வயதுக்கு உட்பட்ட, 63 கிலோ எடையுள்ள பெண்களுக்கான பிரிவில் அமெரிக்கா சார்பில் போட்டியிட்ட ஆர்த்தி நிதி, வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி, இந்த பவர்லிஃப்ட்டிங் போட்டியின் ஸ்குவாட் பிரிவில் உலகச் சாதனையோடு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

    அமெரிக்காவிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொண்டு அரங்கேற்றம் செய்த ஆர்த்தி, எப்படி கல்லூரிக்குச் சென்ற பிறகு பவர்லிஃப்ட்டிங் துறைக்குள் நுழைந்தார் என்று பிபிசி செய்தியாளரிடம் அவர் பேசியுள்ளார். “மேல்நிலை பள்ளிக்கல்வி வரை பரதநாட்டியம் பயின்ற நான், இடையில் ஓராண்டிற்கு அதை நிறுத்தியதால் உடல் எடை அதிகமானது. அதைத் தொடர்ந்து, உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்றேன்; உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றியமைத்து உடற்கட்டில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து, கல்லூரியில் சேர்ந்த பிறகு, பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த அறிவுரையின்படி, பவர்லிஃப்ட்டிங்கில் ஈடுபடத் தொடங்கினேன்” என்று தனது பயணத்தின் தொடக்க காலத்தை விவரிக்கிறார்.

    தனது வெற்றியைக் குறித்து அவர் பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக பவர்லிஃப்ட்டிங் போட்டிகளுக்காக பயிற்சி செய்து வரும் நான், இவ்வளவு விரைவில், பவர்லிஃப்ட்டிங் விளையாட்டின் ஒலிம்பிக்காகக் கருதப்படும் இந்தத் தொடரில் அமெரிக்காவுக்காகப் பதக்கத்தை வெல்வேன் என்று நினைக்கவில்லை. எனது கடுமையான, விடாப்பிடியான பயிற்சி, எனது நான்காண்டுக் கால கனவை நிறைவேற்றியுள்ளது என்று கூறியுள்ளார்.

    தான் ஒரு தமிழ்ப் பெண் எனப் பெருமை கொள்ளும் ஆர்த்தியின் தந்தை முனைவர் கருணாநிதி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தாயார் சாந்தி அம்மையார், நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தத் தம்பதிகள், நம் தமிழ்ப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தங்கள் மகனுக்கும் மகளுக்கும் ஊட்டி வளர்த்துள்ளனர்.

    இந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெண்களை அவர்களது சொந்தக் குடும்பத்தினர், குறைவாக மதிப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தச் சமூகம் நினைப்பதைப் போன்று பெண்கள் வலுவற்றவர்கள் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் எந்தப் பெண்ணாலும் சாதிக்க முடியும். தனக்கு மிகவும் பிடித்த விடயத்தைச் செய்ய பெண்களுக்குக் குடும்பத்தினர் ஆதரவளிக்க
    வேண்டும், நினைத்ததைச் செய்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்று கூறும் ஆர்த்தி, பவர்லிஃப்ட்டிங் வீராங்கனையாக மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பொறியாளராகவும் பணிபுரிகிறார்.

    தற்போது வரை ஒலிம்பிக்கில் சேர்க்கப்படாத பவர்லிஃப்ட்டிங், வருங்காலத்தில் அங்கீகரிக்கப்பட்டால், ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் சார்பாக பங்கேற்று பதக்கம் வெல்வதே தனது நீண்டகால இலக்கு என்கிறார் ஆர்த்தி.

    வீரத் தமிழ்ப் பெண் ஆர்த்தியை இந்த வாரத்தின் வல்லமையாளராக அறிவித்து மகிழ்கிறோம். அவரது சாதனைப் பயணம் தொடர, வல்லமை மின்னிதழ் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்.

    நன்றி – பிபிசி

    Share