-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் 

64.அமைச்சு

குறள் 631:

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு

ஒரு செயலச் செய்யத்தேவைப்படுத பொருள், ஏத்த காலம், செய்யுத வகை, எல்லாத்தையும் சோதிச்சுப்பாத்து செயல்படுத்துதவன் தான் ஒசந்த அமைச்சர்.  

குறள் 632:

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு

செயலுக்கு ஏத்த நெஞ்சுறுதி, மக்களக் காக்குதது, தகுந்த நீதி நூல்களக் கத்துக்கிடுதது ,படிச்சவங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிடுதது, அசராத முயற்சி இந்த அஞ்சும் இருக்கவங்க தான் அமைச்சர்.

குறள் 633:

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு

பகையாளிக்கு தோணையா இருக்கவன பிரிக்கதும் , தன் நாட்டுக்கு தொணையா இருக்கவங்களக் காக்குததும், பொறவு பிரிஞ்சவன் திருந்திட்டாம்னா அவனச் சேத்துக்கிடததுலயும் தெறமசாலியா இருக்கவன் தான் அமைச்சர். 

குறள் 634:

தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு

செய்ய வேண்டியதத் தெரிஞ்சுக்கிட்டு அதச் செய்யுததுக்கு ஏத்த வழிமொறையக் கண்டுபிடிக்கதும் தான் நெனைக்குதத துணிச்சலா சொல்லதுதலயும் தெறமசாலிய இருக்கவன் தான் அமைச்சன்.

குறள் 635:

அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை

அறத்தை அறிஞ்சுக்கிட்டு நெறையா படிச்சுபோட்டு அடக்கமா இருந்து செய்யுத முறை தெரிஞ்சு இருக்கவர்கிட்ட தான் கலந்துபேசி முடிவு எடுக்க முடியும்.

குறள் 636:

மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை

படிச்ச படிப்புக்கு மேல சொந்த புத்திசாலித்தனமும் இருக்கவங்கள எந்த சூது எதித்து நிக்க முடியும்?  முடியாது. 

குறள் 637:

செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை அறிந்து செயல்

படிச்ச படிப்பால எல்லாந்தெரிஞ்சாலும் ஒலக நடப்ப உணந்துகிட்டு ஏத்தாமாரி செயலச் செய்யணும். 

குறள் 638:

அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்

சொன்னதையும் கேக்காம சொந்த புத்தியும் இல்லாம இருக்க ராசாக்கு அமைச்சன் துணிச்சலா நல்ல யோசனைகளச் சொல்லணும்.  

குறள் 639:

பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்

தப்பான வழிமொறையச் சொல்லி வம்புல மாட்டி உடுத அமைச்சன் பக்கத்துல இருக்குதத விட எழுபது கோடி பகையாளிங்க பக்கத்துல இருக்கது எம்புட்டோ நன்மையக் கொடுக்கும். 

குறள் 640:

முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்

எம்புட்டுத் திட்டம்போட்டு செயலத் தொடங்கினாலும் கூறுகெட்டவன் அத அரைகொறையாத் தான் செய்யுவான். 

(அடுத்தாப்லையும் வரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *