நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள்
இடுக்கண் அழியாமை
குறள் 621:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்
சங்கடம் வரும்போது கலங்காம சிரிக்கணும். சங்கடத்த எதித்து செயிக்கதுக்கு அதப்போல வேற இல்ல.
குறள் 622:
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்
வெள்ளம் வருதது கணக்கா சங்கடம் கரபுரண்டு வந்துச்சின்னாகூட அறிவாளிங்க அதப்பத்தி மனசுக்குள்ளார நெனச்ச நேரத்துலயே அது விலகி ஓடிப்போவும்.
குறள் 623:
இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்
சங்கடம் வருதப்போ வருத்தப்படாம இருக்கவங்க சங்கடத்துக்கே சங்கடத்த உண்டாக்கி அதத் தோக்கடிப்பாங்க.
குறள் 624:
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து
கரடுமுரடான பாதையில கூட வண்டிய இழுத்துக்கிட்டு போகுத காள மாடு கணக்கா அசராம முனையுதவனுக்கு வந்த சங்கடம் சங்கடப்பட்டு போவும்.
குறள் 625:
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்
தொடர்ச்சியா ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா சங்கடம் வந்தாலும் மனசு தளராதவனுக்கு அந்தச் சங்கடமே சங்கடப்பட்டுக்கிட்டு போயிடும்.
குறள் 626:
அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புதல் தேற்றா தவர்
சொத்துசொகம் சேரும்போது அதுக்காக சந்தோசப்பட்டு காப்பாத்திவச்சிக்கிடாதவங்க அது கைவிட்டுப்போவும் போது வெசனப்படுவாங்களோ?
குறள் 627:
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்
ஒடம்பு துன்பத்துக்கு இடமானது னு அறிஞ்சுக்கிட்ட பெரியவங்க துன்பம் வருதப்போ அத துன்பமாவே நெனைச்சுக்கிட மாட்டாங்க.
குறள் 628:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்
சந்தோசத்த தேடி அலையாம துன்பத்தையும் சாதாரணமா எடுத்துக்கிடுதவன் மனசு தளர்ந்து சங்கடப்பட மாட்டான்.
குறள் 629:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன்
சந்தோசம் வார நேரம் ஆட்டம் போடாதவன் சங்கடம் வரும்போது துக்கப்படமாட்டான்.
குறள் 630:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு
சங்கடத்த சந்தோசம் னு நெனைக்குத நெஞ்சுரம் உள்ளவங்களுக்கு பகையாளியும் பாராட்டுத பெரும வந்து சேரும்.
(அடுத்தாப்லையும் வரும்)