Tag: நாங்குநேரி வாசஸ்ரீ

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-55

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-55

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-55

    55. செங்கோன்மை

    குறள் 541:

    ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை

    தப்புதண்டா இன்னதுன்னு தெரிஞ்சிக்கிட்டு எந்தப்பக்கமும் சாயாம நடுவுநிலைமை தவறாம வழங்கப்படுதது தான் நீதி.

    குறள் 542:

    வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
    கோனோக்கி வாழுங் குடி

    ஒலகத்துலஇருக்க உசிருங்கல்லாம் மழைய நம்பி வாழுதுங்க. அதுகணக்கா மக்களெல்லாம் ராசாவோட நல்லாட்சிய எதிர்பாத்தே வாழுதாங்க.

    குறள் 543:

    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்

    நேர்மையான ஆட்சி தான் அறிவ வளத்துக்க ஒதவுத ஞான நூல்களுக்கும், அறத்துக்கும் அடிப்படையா இருக்கு.

    குறள் 544:

    குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
    அடிதழீஇ நிற்கும் உலகு

    நாட்டு மக்கள அரவணைச்சு ஆட்சி நடத்துத நல்ல ராசாவோட அடிகளைச் சுத்தியே மக்கள் வாழுவாங்க.

    குறள் 545:

    இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
    பெயலும் விளையுளுந் தொக்கு

    நீதி வழுவாம ஆட்சி செய்யுத ராசாவோட நாட்டுல பருவத்துக்கு பெய்யுத மழையும் நல்ல வெளச்சலும் எப்பமும் சேந்தே இருக்கும்.

    குறள் 546:

    வேலன்று வென்றி தருவது மன்னவன்
    கோலதூஉங் கோடா தெனின்

    ஒரு ராசா செயிக்கதுக்கு தேவ பகையாளிய அழிக்கஒதவுத வேல் இல்ல. அவனோட நேர்மையான ஆட்சி அதுவும் தப்பான மொறைல நடத்துத ஆட்சியா இல்லாம இருக்கணும்.

    குறள் 547:

    இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
    முறைகாக்கும் முட்டாச் செயின்

    ஒலகத்தையெல்லாம் ராசா காப்பாத்துவார். அந்த ராசாவ அவர் செய்யுத நேர்மையான ஆட்சி காப்பாத்தும்.

    குறள் 548:

    எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
    தண்பதத்தான் தானே கெடும்

    நியாயம் கேட்டு வருதவங்க எளிமையா வந்து பாக்குத மாதிரி இல்லாமயும், நல்ல மொறைல சோதிச்சுப் பாத்து நியாயமா தீர்ப்பு சொல்லாதவனாவும் இருக்க  ராசா தாழ்ந்து போயி தானே கெட்டழிஞ்சு போவான்.

    குறள் 549:

    குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
    வடுவன்று வேந்தன் தொழில்

    மத்தவங்க தொந்தரவுலேந்து மக்களக் காப்பாத்தி, தன்னையும் காத்துக்கிட்டு அவங்களோட குத்தங்கொறைகள தீத்து வச்சு ஆட்சி நடத்துதது ராசாக்கு குறை ஆவாது. அது அவரோட தொழில்.

    குறள் 550:

    கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்

    கொடியவங்களுக்கு மரணதண்டன கொடுக்குதது, வெவசாயி பயிர் நல்லா வெளையணும்னு அதக் காப்பாத்த கள புடுங்குதது கணக்கா தான்

    (அடுத்தாப்லயும் வரும்…).

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-54

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-54

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-54

    54. பொச்சாவாமை

    குறள் 531:

    இறந்த வெகுளியின் தீதே சிறந்த
    உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

    ரொம்ப சந்தோசமா இருக்குதப்போ அயத்துப் (மறதி) போவுதது கடுங்கோவத்தக்காட்டிலும் கொடும.

    குறள் 532:

    பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
    நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

    தெனைக்கும் வாட்டுத ஏழ்ம,  புத்திய மழுங்கடிக்கது கணக்கா அயத்துப் போவுத கொணம் புகழ அழிச்சுப்போடும்.

    குறள் 533:

    பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
    தெப்பானூ லோர்க்குந் துணிவு

    அயத்துப் போவுத கொணம் உள்ளவுகளுக்கு புகழ் இல்ல. இது எல்லாந்தெரிஞ்ச அறிவாளிங்களோட முடிவான கருத்து.

    குறள் 534:

    அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
    பொச்சாப் புடையார்க்கு நன்கு

    மனசுல பயம் இருக்கவங்களுக்கு சுத்திவர பாதுகாப்பா மதில்சுவர் இருந்தாலும் ஒபயோகமில்ல. அதுகணக்கா ஒசந்த நெலையில இருந்தாலும் அயத்துப் போவுத கொணமிருந்தா அந்த நெலையால ஒரு பிரயோசனமுமில்ல.

    குறள் 535:

    முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
    பின்னூ றிரங்கி விடும்

    வருத சங்கடங்கள முன்னமே தடுக்க அயத்துப் போனவன் சங்கடம் வந்த   பொறவு தன் தப்ப நெனச்சி வெசனப்படுவான்.

    குறள் 536:

    இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
    வாயின் அதுவொப்ப தில்

    யார்கிட்டயும் எந்தக்காலத்திலயும் ஓர்ம கெட்டு அலையுத கொணம் (ஞாபக மறதி) இல்லாமப் போச்சுதுன்னா அதப்போல நன்ம வேற இல்ல.

    குறள் 537:

    அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
    கருவியாற் போற்றிச் செயின்

    அயத்துப் போவாம ஓர்மையோட(ஞாபகமா) செய்யுதவனுக்கு செய்யமுடியாததுனு எதுவும் இல்லாமப் போவும்.

    குறள் 538:

    புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
    திகழ்ந்தார்க் கெழுமையும் இல்

    படிச்ச பெரிய மனுசங்க சொல்லுதத விரும்பிச் செய்யணும். அப்டி செய்ய அயத்து அலுத்து இருக்கவங்களுக்கு ஏழு பொறப்புலயும் நன்ம கெடைக்காது.

    குறள் 539:

    இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
    மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

    இறுமாப்போட பூரிச்சுப்போயி கடமையச் செய்ய அயத்து அலையுதவங்க,  முன்ன இது கணக்கா அலஞ்சி அழிஞ்சவங்கள நெனச்சிப் பாத்துக்கிடணும்.

    குறள் 540:

    உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
    உள்ளிய துள்ளப் பெறின்

    ஒருத்தன் தான் அடைய நெனக்குதத நாட்டத்தோட அசராம தொடர்ச்சியா நெனச்சிக்கிட்டே இருந்தாம்னா அவன் நெனச்சத சுளுவா அடஞ்சுக்கிடலாம்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53

    53. சுற்றந் தழால்

    குறள் 521:

    பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
    சுற்றத்தார் கண்ணே உள

    ஒருத்தன் ஏழையான பொறவு கூட அவனுக்கும் தங்களுக்கும் முன்னால இருந்த ஒட்டுஒறவ நெனப்புல வச்சி பேசுத கொணம் சொந்தக்காரங்களுக்கு  உண்டு.

    குறள் 522:

    விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவுந் தரும்

    ஒருத்தனுக்கு எப்பமும் கொறையாத நேசத்தோட சொந்தபந்தம் அமைஞ்சிடுச்சின்னா அது அவனுக்கு வளர்ச்சி கொறையாத செல்வங்கள் பலதையும் கொடுக்கும்.

    குறள் 523:

    அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
    கோடின்றி நீர்நிறைந் தற்று

    சொந்தக்காரங்களோட மனசு விட்டு பேசிப் பழகாதவனோட வாழ்க்க, கரையில்லாத குளத்துல தண்ணி நெறஞ்சது கணக்கா ஒபயோகமில்லாமப் போயிடும்.

    குறள் 524:

    சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
    பெற்றத்தாற் பெற்ற பயன்

    சுத்திச்சூழ இருக்குத பாசமான சொந்தக்காரங்களோட வாழுத வாழ்க்க தான் ஒருத்தன்கிட்ட இருக்க காசுபணத்தோட ஒபயோகம்.

    குறள் 525:

    கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
    சுற்றத்தாற் சுற்றப் படும்

    வேண்டியதக் கொடுக்குத குணமும், நயமா பேசுத கொணமும் இருக்கவனச் சுத்தி சொந்தக்காரங்க இருந்துக்கிட்டே இருப்பாங்க.

    குறள் 526:

    பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
    மருங்குடையார் மாநிலத் தில்

    தேவைப்படுதவங்களுக்கு அள்ளிக் கொடுத்து கோவப்படாம ஒருத்தன் இருந்தாம்னா அவனப்போல சுத்திவர சொந்தபந்தம் இருக்கவன் ஒலகத்துல இல்லன்னு சொல்லிப்புடலாம்.

    குறள் 527:

    காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள

    தனக்கு சாப்பிடக் கெடச்சத ஒளிச்சு வையாம தன் இனத்தக் கூப்பிட்டு சாப்பிடுத காக்கா கணக்கா கொணம் உள்ளவுகளுக்கு மட்டுமே ஒலகத்துல செல்வம் உண்டு. .

    குறள் 528:

    பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
    அதுநோக்கி வாழ்வார் பலர்

    ராசா எல்லாரையும் ஒண்ணுபோலப் பாக்காம அவனவன் சிறப்புக்கு ஏத்தபடி பாத்தா அத விரும்பி அவரப் பிரியாம வாழுத சுற்றத்தார் பலர் இருப்பாங்க.

    குறள் 529:

    தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
    காரண மின்றி வரும்

    ஏதோ ஒரு காரணத்துக்காக பிரிஞ்சு போன சொந்தக்காரவுக அந்தக்காரணம் பொருந்தாது னு தெரிஞ்ச பொறவு திரும்ப சொந்தம் கொண்டாட வருவாக.

    குறள் 530:

    உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
    இழைத்திருந் தெண்ணிக் கொளல்

    தன்னவுட்டு பிரிஞ்சு போயிட்ட  ஒருத்தன் ஏதோ ஒரு காரணம் சொல்லிக்கிட்டு திரும்பி வந்தாம்னா அவன சோதிச்சு பாத்த பொறவுதான் சேத்துக்கிடணும்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-52

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-52

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-52

    52. தெரிந்து வினையாடல்

    குறள் 511:

    நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
    தன்மையான் ஆளப் படும்

    நன்ம எது தீம எது னு தெரிஞ்சுக்கிட்டு நல்லதுல மட்டுமே நாட்டம் செலுத்துதவன் எந்த வேலைய செய்யுததுக்கும் ஏத்தவன்.

    குறள் 512:

    வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
    ஆராய்வான் செய்க வினை

    வருமானம் வருத வழிய விரிவாக்கி வளத்த பெருக்கி வார தொந்தரவெல்லாத்தையும் கண்டுக்கிட்டு நீக்கி இருக்கவன் தான் காரியத்த செய்யணும்.

    குறள் 513:

    அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு

    நேசம், புத்திசாலித்தனம், திறம, பேராச இல்லாத கொணம் இந்த நாலையும் இருக்கவங்கள தேர்ந்தெடுக்கது தான் நல்லது.

    குறள் 514:

    எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்

    எம்புட்டுத்தான் ஆராஞ்சு தேர்ந்தெடுத்தாலும் எதிர்பாக்குத அளவு சிறப்பா நடந்துக்கிடாதவங்க பல பேர் இருக்காங்க.

    குறள் 515:

    அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
    சிறந்தானென் றேவற்பாற் றன்று

    செய்யுத வழிய தெரிஞ்சு எத்தன தடங்கல் வந்தாலும் செஞ்சு முடிக்கவன தவித்து மத்தவன ஒசந்தவன்னு நெனச்சி ஒருவேலையும் ஏவக்கூடாது.

    குறள் 516:

    செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
    டெய்த உணர்ந்து செயல்

    காரியத்த செய்ய வேண்டியவனோட தகுதிய அறிஞ்சுக்கிட்டு, காரியத்தோட தன்மயையும் புரிஞ்சுக்கிட்டு அத செய்யுத காலத்தையும் உணந்து காரியத்த செய்ய வைக்கணும்.

    குறள் 517:

    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
    ததனை அவன்கண் விடல்

    இந்தக் காரியத்த இவன் இன்னின்ன ஆள் பலத்தாலையும், பொருள் பலத்தாலையும் செஞ்சு முடிப்பான் னு தெரிஞ்சுக்கிட்ட பொறவு காரியத்த ஒப்படைக்கணும்.

    குறள் 518:

    வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
    அதற்குரிய னாகச் செயல்

    ஒருத்தன ஒரு காரியத்துல ஈடுபடுத்துதக்கு முன்ன அவன் அதுக்கு ஏத்தவனானு அறிஞ்சுக்கிட்டு செய்யணும்.

    குறள் 519:

    வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
    நினைப்பானை நீங்குந் திரு

    எடுத்த காரியத்த கண்ணும் கருத்துமா செய்யுத ஒருத்தன சந்தேகப்பட்டு தப்பா நினைக்குத தலைவனோட செல்வம் அவன் கையவிட்டு போவும்.

    குறள் 520:

    நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
    கோடாமை கோடா துலகு

    உழைப்பாளிங்க மனசு நோவாம இருந்தாங்கன்னா தான் ஒலகம் செழிப்பா இருக்கும். அதனால ராசா தெனைக்கும் அவங்க நெலம பத்தி தெரிஞ்சுக்கிட்டு வேண்டியத செய்யணும்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-51

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-51

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-51

    51. தெரிந்து தெளிதல்

    குறள் 501:

    அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
    திறந்தெரிந்து தேறப் படும்

    நியாயமாவும், நாணயமாவும், மொற இல்லாத சந்தோசத்த தேடாதவனாவும், தன் உசிரக் கூட கொடுக்க பயந்துக் கிடாதவனாவும் ஒருத்தன் இருக்கானானு அறிஞ்ச பொறவு தான் அவன வேலைக்கு வைக்கணும்.

    குறள் 502:

    குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
    நாணுடையான் கட்டே தெளிவு

    குத்தமில்லாதவனாவும் , பழி பாவத்துக்கு அஞ்சுதவனாவும் இருக்கவனத் தான் ஒசந்த குடில பொறந்தவனா நம்பித் தெளியணும்.

    குறள் 503:

    அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு

    அரிதான நூல்கள படிச்சவரு குத்தமேதும்இல்லாதவரு னு புகழப்படுதவங்க கிட்ட கூட கவனிச்சி பாத்தோம்னா அறியாம இல்லாம இருக்காது.

    குறள் 504:

    குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்

    ஒருத்தரோட கொணத்தயும் , குத்தங்களையும் ஆராஞ்சு ரெண்டுல எது அதிகம்னு தெரிஞ்சிக்கிட்ட பொறவு அவரப் பத்தின தெளிவான முடிவுக்கு வரணும்.

    குறள் 505:

    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
    கருமமே கட்டளைக் கல்

    ஒருத்தர் செய்யுத காரியங்கள வச்சி அவரோட கொணம் ஒசந்ததா அல்லது தாழ்த்தியா னு தெரிஞ்சிக்கிடலாம்.

    குறள் 506:

    அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
    பற்றிலர் நாணார் பழி

    சொந்தபந்தத்துல ஒட்டுதல் இல்லாதவங்கள எந்த வேலைக்கும் நம்பக்கூடாது ஏம்னா அவுகளுக்கு  ஒலகத்தப் பத்தி எந்தக் கவலயும் இல்லாததால பொல்லாப்புக்கு அஞ்சமாட்டானுவ. .

    குறள் 507:

    காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
    பேதைமை எல்லாந் தரும்

    அறிஞ்சிக்கிட வேண்டியத அறிஞ்சிக்கிடாம இருக்கவங்கள அவுக மேல இருக்க பாசத்தால தேர்ந்தெடுக்கது அறியாம மட்டுமில்ல. அதனால ஒண்ணுக்கும் பிரயோசனமில்லாம போவும்..

    குறள் 508:

    தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
    தீரா இடும்பை தரும்

    ஒருத்தன் ஆராஞ்சு பாக்காம தனக்கு தொணையா ஒருத்தர தேர்ந்தெடுத்து வச்சிக்கிட்டாம்னா அவனுக்கு மட்டுமில்லாம அவன் வாரிசுகளுக்கும் அது செரையா முடியும்.

    குறள் 509:

    தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
    தேறுக தேறும் பொருள்

    நல்லா ஆராஞ்சு அறிஞ்சுக்கிட்ட பொறவு ஒருத்தர் மேல நம்பிக்க வைக்கணும். ஆராஞ்சு பாராம யாரயும் நம்புதது கூடாது.

    குறள் 510:

    தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
    தீரா இடும்பை தரும்

    ஆராயாம ஒருத்தர தேர்ந்தெடுக்குததும் , சோதிச்சு தேர்ந்தெடுத்த ஒருத்தர சந்தேகப்படுததும் நீங்காத தொயரத்த கொடுக்கும்

    (அடுத்தாப்லயும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-50

    நாங்குநேரி வாசஸ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-50

    50. இடனறிதல்

    குறள் 491:                                                       

    தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
    இடங்கண்ட பின்னல் லது

    பகையாளிய வளைச்சு பிடிக்கதுக்கு எடத்த பாக்குத வர ஒரு காரியத்தயும் தொடங்கக்கூடாது. பகையாளிய எளச்சவன்னும் நெனையக்கக் கூடாது.

    குறள் 492:

    முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
    ஆக்கம் பலவுந் தரும்

    வரக்கூடிய பகையாளிய எதுத்து நிக்குத பலம் இருக்கவனுக்குக் கூட பாதுகாப்பான எடத்துல நின்னு சண்ட போடுத வாய்ப்பு கெடச்சிதுன்னா அது பெரும் பயனக் கொடுக்கும்..

    குறள் 493:

    ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
    போற்றார்கண் போற்றிச் செயின்

    பகையாளிய தாக்குததுக்கு ஏத்த எடத்த அறிஞ்சிக்கிட்டு, தன்னையும் காத்துக்கிட்டு சண்டபோட்டாம்னா தெம்பு (வலிமை) இல்லாதவனும் தெம்பு வந்து செயிச்சுடுவான்.

    குறள் 494:

    எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
    துன்னியார் துன்னிச் செயின்

    ஏத்த எடத்த அறிஞ்சுக்கிட்டு தொடர்ச்சியா தாக்கினாம்னா பகையாளிங்க  செயிக்கணும்னு நெனச்சிக் கூட பாக்க மாட்டாக.

    குறள் 495:

    நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற

    தண்ணிக்குள்ளார இருக்க வரைக்கும்தான் மொதலைக்கு பலம். வெளிய வந்திச்சுன்னா மத்த உசிருங்க அத சுளுவா செயிச்சிடும்.

    குறள் 496:

    கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயும் ஓடா நிலத்து

    பலமான சக்கரங்களக் கொண்டிருக்குத தேரால கடல்ல ஓட முடியாது. கடல் ல ஓடுத கப்பல்களால நெலத்துல ஓட முடியாது.

    குறள் 497:

    அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
    எண்ணி யிடத்தாற் செயின்

    ஒரு காரியத்த செய்யுத வழிமொறைய நல்லா யோசிச்சு , எடத்த அறிஞ்சுக்கிட்டு செய்தாம்னா பகையாளிக்கு பயந்துக்கிடாத நெஞ்சுறுதி போதும். வேற தொண தேவையில்ல.

    குறள் 498:

    சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
    ஊக்கம் அழிந்து விடும்

    சிறுசா இருக்க படையா இருந்தாலும் தன் எடத்துல நின்னு சண்டபோட்டாம்னா பெரிசா இருக்க படையக் கூட சுளுவா செயிச்சிடலாம்.

    குறள் 499:

    சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்
    உறைநிலத்தோ டொட்ட லரிது

    பாதுகாப்பான கோட்டயும், மத்த படைகளும் பகையாளிக்கு இல்லாமப் போவுச்சுதுன்னாலும் அவன் இருக்க எடத்துல போயி சண்டபோடுதது சிரமம் தான். .

    குறள் 500:

    காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு

    வேல் புடிச்சு நிக்குத வீரர்களக் கொன்ன கொம்பு கொண்ட யானையக் கூட சேத்து நெலத்துல அதோட கால் பொதஞ்ச நேரம் நரிகள் சுளுவா கொன்னு போடும்.

    (அடுத்தாப்லயும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-49

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-49

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-49

    49. காலமறிதல்

    குறள் 481:

    பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
    வேந்தர்க்கு வேண்டும் பொழுது

    பகல் நேரத்துல கோட்டானக் கூட காக்கா செயிச்சிடும். அது கணக்கா பகையாளிய தோக்கடிக்க நெனக்கவங்களுக்கும் அதுக்கேத்த சரியான காலம் அவசியம்.

    குறள் 482:

    பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
    தீராமை ஆர்க்குங் கயிறு

    காலத்த வெரயமாக்காம காரியம் செய்யுதது நழுவி ஓடுத சொத்து நீங்காம இருக்கதுக்காக கட்டிப்போடுத கயிறு கணக்கா ஆவும்.

    குறள் 483:

    அருவினை யென்ப உளவோ கருவியாற்
    கால மறிந்து செயின்

    காரியத்த முடிக்கத் தேவையான சாதனங்களோட ஏத்த காலத்தையும் அறிஞ்சுக்கிட்டு செஞ்சா முடியாத காரியம் னு ஏதும் உண்டா?

    குறள் 484:

    ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
    கருதி இடத்தாற் செயின்

    ஏத்த காலத்தையும் எடத்தையும் அறிஞ்சு ஒரு காரியத்த செய்தாம்னா இந்த பூமி முழுக்க வேணும்னு நெனச்சாலும் கைக்குள்ளார வந்துக் கிடும்..

    குறள் 485:

    காலங் கருதி இருப்பர் கலங்காது
    ஞாலங் கருது பவர்

    ஒலகம் முழுக்க வேணும்னு நெனக்கவங்க அதுக்காவ கலங்காம ஏத்த காலம் வருத வரைக்கும் பொறுமையா காத்துக் கெடப்பாக.

    குறள் 486:

    ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
    தாக்கற்குப் பேருந் தகைத்து

    மன உறுதி இருக்கவங்க பொறுமையா அமைதியா இருக்கது பயந்துகிட்டு இல்ல. ஆட்டுக் கிடா பகையாளிய தாக்குததுக்கு முன்ன கால பின்னுக்கு வாங்கிட்டு பொறவு பாயும் அது கணக்கா தான்.

    குறள் 487:

    பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
    துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

    பகையாளிய தோக்கடிக்க மனசுக்குள்ளார கோவம் இருந்தாலும் வெளிக்காட்டாம எடம், காலம் பாத்துக் காத்துக் கிடப்பாக புத்திசாலிங்க.

    குறள் 488:

    செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
    காணிற் கிழக்காந் தலை

    பகையாளிக்கு தகுந்த நேரம் வருதப்போ தானே அழிஞ்சு போயிடுவான். அதுவரைக்கும் பொறுத்துப் போய்க்கிடணும்.

    குறள் 489:

    எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
    செய்தற் கரிய செயல்

    காலம் நல்லதா வாய்க்குதப்போ அத ஒபயோகிச்சுக்கிட்டு ஒசந்த காரியங்கள செஞ்சு முடிக்கணும்.

    குறள் 490:

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து

    காலம் வருத வரைக்கும் கொக்கு போல அமைதியா காத்துக் கெடந்து பொறவு அது எங்ஙன குறி தவறாம இரைய புடிக்குதோ அது கணக்கா காரியத்த செஞ்சு முடிக்கணும்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-48

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-48

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-48

    48. வலியறிதல்

    குறள் 471:

    வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியுந் தூக்கிச் செயல்

    காரியத்தோட வலிமையும், அத செய்ய நெனக்குத தன்னோட வலிமையும், அத கெடுக்கணும்னு நெனக்கவன் வலிமையும்,  ரெண்டு பேருக்கும் தொணையா நிப்பாம்னு தோணுதவனோட வலிமையும் ஆராஞ்ச பொறவுதான்அந்த காரியத்த செய்யணும்.

    குறள் 472:

    ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
    செல்வார்க்குச் செல்லாத தில்

    தன்னால முடியுத காரியத்த செய்யுமுன்ன அத செய்யுததுக்கு தேவையானத அறிஞ்சிக்கிட்டு பொறவு செய்ய முனஞ்சாம்னா அவனால முடியாததுனு எதுவும் இல்ல.

    குறள் 473:

    உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
    இடைக்கண் முரிந்தார் பலர்

    தன்னோட பலம் இவ்ளோதான்னு அறிஞ்சிக்கிடாம உணச்சி வசத்தால காரியத்த தொடங்கிப்போட்டு பொறவு பாதியில கெடப்புல போட்டு அழிஞ்சவங்க பலபேரு இருக்காக.

    குறள் 474:

    அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
    வியந்தான் விரைந்து கெடும்

    தன்னோட பலத்த உணந்துக்கிடாம, பிறத்தியாரோடயும்  ஒத்துப் போவாம தன்னையப் பத்தி பெரிசா நெனச்சி மண்டக்கனம் புடிச்சு அலையுதவன் வெரசலா அழிஞ்சு போவான்.

    குறள் 475:

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
    சால மிகுத்துப் பெயின்

    மயில் தோகதானே ன்னாலும் அளவுக்கு அதிகமா வண்டியில ஏத்தினா வண்டியோட அச்சு முறிஞ்சு போவும்.

    குறள் 476:

    நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
    உயிர்க்கிறுதி ஆகி விடும்

    மரத்தோட நுனிக் கொம்புல ஏறிக்கிட்டவன் அதுக்கும் மேல ஒசரத்துல ஏற மொனஞ்சாம்னா அது அவனோட உசிருக்கு முடிவா வந்து சேரும்.

    குறள் 477:

    ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
    போற்றி வழங்கு நெறி

    எதப் பொறத்தியாருக்கு குடுக்கும்போதும்  தன்னோட சம்பாத்யத்த அறிஞ்சிக்கிட்டு அளவா குடுக்கணும்.  அப்டி கொடுக்குததுதான் பொருளச் சேத்து காப்பாத்தி வச்சிக்கிட்டு குடுக்குத வழிமுறை.

    குறள் 478:

    ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
    போகா றகலாக் கடை

    சம்பாத்யம் கொறச்சலா இருந்தாலும் வரம்பு மீறின செலவு இல்லாம இருக்குதது நல்லது.

    குறள் 479:

    அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
    இல்லாகித் தோன்றாக் கெடும்

    தன் சொத்தோட மதிப்ப அறிஞ்சுக்கிட்டு ஏத்தாப்போல வாழாதவனோட வாழ்க்க வளம் இருக்குதது போல தோணினாலும் இல்லாம அழிஞ்சு போவும்.

    குறள் 480:

    உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
    வளவரை வல்லைக் கெடும்

    தங்கிட்ட எம்புட்டு இருக்குனு பாராம மத்தவுகளுக்கு ஒதவி செஞ்சிக்கிட்டே இருக்கவனோட செல்வம் சுருக்க அழிஞ்சு போவும்.

    (அடுத்தாப்லயும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-47

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-47

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-47

    47. தெரிந்து செயல்வகை

    குறள் 461:

    அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
    ஊதியமுஞ் சூழ்ந்து செயல்

    ஒரு செயலச் செய்யுததுக்கு முந்தி நட்டத்தையும் , நொடிச்சுப் போனா என்ன ஆவும்ங்குத விளைவையும், அதுக்குப் பொறவு கெடைக்கப் போவுத லாபத்தையும் கணக்குப் போட்டுப் பாத்து செய்யணும்.

    குறள் 462:

    தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
    கரும்பொருள் யாதொன்று மில்

    தெளிவா, இனம் கண்டுகிட்ட சேக்காளிங்களோட சேந்து செய்ய வேண்டிய செயல யோசிச்சு ஒருத்தன் செய்தாம்னா அவனால செய்ய முடியாதது னு ஒண்ணும் கெடையாது.

    குறள் 463:

    ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
    ஊக்கா ரறிவுடை யார்

    பொறவு வரப்போகுத லாபத்துக்காக கையில இருக்க முதல தொலைச்சுப்போடுத காரியத்த புத்தியுள்ளவங்க செய்ய மாட்டாக.

    குறள் 464:

    தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
    ஏதப்பா டஞ்சு பவர்

    தனக்கு அவமானம் வரும் னு பயப்படுதவங்க ஆக்கங்கெட்ட செயலச் செய்யத் தொடங்கமாட்டாக.

    குறள் 465:

    வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
    பாத்திப் படுப்பதோ ராறு

    முன்னேற்பாடு இல்லாம பகையாளிய ஒடுக்க முனையுதது அந்த பகையாளியோட வலிமைய நெலச்சு வளக்குத வழியா மாறிக்கிடும்.

    குறள் 466:

    செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
    செய்யாமை யானுங் கெடும்

    ஒருத்தன் செய்யக்கூடாதத செஞ்சாலும் கேடு வரும். செய்ய வேண்டியத செய்யாம விட்டாலும் கேடு வரும்.

    குறள் 467:

    எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
    எண்ணுவ மென்ப திழுக்கு

    ஒரு செயல முடிக்குத வழிய அறிஞ்சிக்கிட்டு தொடங்கணும். தொடங்கின பொறவு ரோசனை பண்ணிக்கிடலாம் னு நெனக்கிதது தப்பு.

    குறள் 468:

    ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
    போற்றினும் பொத்துப் படும்

    எத்தன பேர் தொணையா நின்னாலும் மொறையா முனஞ்சி எறங்கி செய்யலேனா கடைசில அந்த செயல் முடங்கி போவும்.

    குறள் 469:

    நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை

    அவுகவுக கொணத்துக்கு ஏத்தாப்போல தான் நன்ம செய்யணும். அப்டி செய்யலேன்னா நன்ம செய்யுததிலும் தப்பு உண்டாவும்.

    குறள் 470:

    எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
    கொள்ளாத கொள்ளா துலகு

    தன்னோட நெலமைக்கு பொருத்தமில்லாத செயலச் செஞ்சா ஒலகம் எளக்காரமா பேசும். ஒலகம் எளக்காரமா பேசாதத தேடிப் பாத்து செய்யணும்.

    (அடுத்தாப்லயும் வரும்..)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-46

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-46

     46. சிற்றினம் சேராமை

    குறள் 451:

    சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
    சுற்றமாச் சூழ்ந்து விடும்

    கெட்டவங்க கூட சேருததுக்கு நல்ல மனசுக்காரங்க பயப்படுவாங்க. ஈன புத்தி உள்ளவங்க அவுகள தங்க சொந்தக்காரங்க கணக்கா நெனச்சி பழகுவாக.

    குறள் 452:

    நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
    கினத்தியல்ப தாகும் அறிவு

    தான் இருக்க நெலத்துக்கு ஏத்தாமாரி தண்ணியோட தன்ம மாறிக்கிடுது. அது கணக்கா தான் மனுசனோட புத்தியும் அவன் சேருத கூட்டத்துக்கு ஏத்தாப்போல மாறிக்கிடும்.

    குறள் 453:

    மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
    இன்னா னெனப்படுஞ் சொல்

    ஒருத்தனுக்கு உணர்ச்சி அவன் மனசப் பொறுத்து அமைஞ்சிகிடும். அவன் இப்டி பட்டவன்னு அளந்து சொல்லுதது அவன் சேருத கூட்டாளியப் பொறுத்து அமையும்.

    குறள் 454:

    மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
    கினத்துள தாகும் அறிவு

    ஒருத்தனோட நல்ல புத்தி அவன் மனசுக்குள்ளார இருக்கமாரி தோணிச்சின்னாலும் அது அவன் சேருத சேக்கையிலேந்து வெளிப்படுதது தான்.

    குறள் 455:

    மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
    இனந்தூய்மை தூவா வரும்

    சுத்தமான மனசும், செய்யுத காரியத்துல சுத்தமும் ஒருத்தன் சேருத கூட்டத்தோட தூய்மைய ஆதாரமா கொண்டுதான் பொறக்குது.

    குறள் 456:

    மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
    கில்லைநன் றாகா வினை

    சுத்த மனசுக்காரவுகளுக்கு அவுகளுக்குப் பொறவு அவுகளோட புகழ் சொச்சமா மிஞ்சி நிக்கும். சுத்திவர உள்ள கூட்டத்தார்(இனம்)  நல்லா அமைஞ்சவுகளுக்கு  நல்லா அமையாத செயல் னு எதுவுமே கெடையாது.

    குறள் 457:

    மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
    எல்லாப் புகழுந் தரும்

    நெலச்சு நிக்குத உசிருங்களுக்கு நல்ல மனசு செல்வத்தக் கொடுக்கும். அதோடு நிக்காம நல்ல கூட்டத்தார்(இனம்)  எல்லாப் புகழையும் கொடுக்கும்.

    குறள் 458:

    மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
    கினநலம் ஏமாப் புடைத்து

    மனசு நல்லதா இருக்க பெரிய மனுசங்களுக்கு கூட அவுக சேருத கூட்டத்தப் பொறுத்து தான் வலிம வந்து வாய்க்கும்.

    குறள் 459:

    மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
    இனநலத்தி னேமாப் புடைத்து

    மனசு நல்லதா இருந்தா மறுமையில கூட சந்தோசம் உண்டாவும். அதுவுங்கூட கூட்டத்தாரால வலிம பெறும்.

    குறள் 460:

    நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
    அல்லற் படுப்பதூஉம் இல்

    ஒருத்தனுக்கு நல்ல கூட்டத்தாரப்போல பெரிய தொணை ஒண்ணுமில்ல. கெட்ட கூட்டத்தாரப் போல தீம தருததும் வேற இல்ல.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45

    45. பெரியாரைத் துணைக்கோடல்

    குறள் 441:

    அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்

    அறம் உணர்ந்த, தன்னைய விட மூத்த அறிவாளியோட நட்பப் பெறுத மொறைய ஆஞ்சு அறிஞ்சு தெரிஞ்சுக்கிடணும்.

    குறள் 442:

    உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
    பெற்றியார்ப் பேணிக் கொளல்

    வந்த துன்பத்தப் போக்கி இனி துன்பம் வாராம பாத்துக்கிடுத பெரியவங்கள தொணையா வச்சிக்கிடணும்.

    குறள் 443:

    அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்

    பெரிய மனுசங்களுக்கு வேணுங்கது எல்லாம் செஞ்சு அவங்க கிட்ட ஒறவு வச்சுக்கிட்டு அவர் காட்டுல வழில நடக்குதது ரொம்ப ஒசந்த பலம்.

    குறள் 444:

    தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
    வன்மையு ளெல்லாந் தலை

    தன்னைய விட அதிக புத்தியுள்ள பெரியவுகளோட ஒட்டுதலா இருந்து அவுக சொல்லுத வழியில நடக்கது எல்லாத்தையும் விடச் சிறந்தது.

    குறள் 445:

    சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
    சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

    கண்ணு கணக்கா எல்லாத்தையும் கண்டறிஞ்சு கூறுத அறிவாளிங்கள சுத்திவர வச்சிக்கிடுதது தான் ராசாவுக்கு நல்லது.

    குறள் 446:

    தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில்

    ஒருத்தனச் சுத்தி தகுதியுள்ள பெரியவங்க இருந்து  அவுக சொல்படி அவன் நடந்தாம்னா பகையாளியாலையும் அவன ஒண்ணுஞ்செய்ய முடியாது.

    குறள் 447:

    இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
    கெடுக்குந் தகைமை யவர்

    குத்தங் கொறைய இடிச்சுக்காட்டி புத்தி சொல்லுத பெரியவங்கள தொணையா வச்சிருக்கவன கெடுக்கதுக்கும் ஆள் இருக்குமா என்ன?

    குறள் 448:

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்

    குத்தங்கொறைய சொல்லிக்காட்டி காவலா இருக்க பெரியவங்க இல்லாத ராசா, பகையாளி இல்லன்னாலும் தானா அழிஞ்சு போவான்.

    குறள் 449:

    முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
    சார்பிலார்க் கில்லை நிலை

    முதல் போடாம வியாபாரம் செய்யுதவனுக்கு அதுலேந்து வார லாபம் கெடைக்காது. அது கணக்கா தான் பெரியவங்க தொணையில்லாத ராசாவுக்கும் அவகளால வருத பயனப் பெற ஏலாது.

    குறள் 450:

    பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
    நல்லார் தொடர்கை விடல்

    நல்லவங்க கிட்ட ஒட்டுதலில்லாம இருக்கது, பல பேரோட பகையினால வெளையுத தீமய விட பத்து மடங்கு தீமய கொடுக்கும்.

    (அடுத்தாப்லயும் வரும்…..)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-44

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-44

     

    குற்றங்கடிதல்

    குறள் 431:

    செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
    பெருக்கம் பெருமித நீர்த்து

    இறுமாப்பு , கோவம், காமம் இவையெல்லாம் இல்லாதவங்களோட செல்வாக்குதான் ஒசந்தது.

    குறள் 432:

    இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
    உவகையும் ஏதம் இறைக்கு

    தேவப்படுதவங்களுக்கு கொடுக்காம பேராச வைக்கிதது, தான் பெரிய ஆள் னு நெனைப்புல பெரியவங்களுக்கு மரியாத கொடுக்காம இருக்கது, கெட்ட செயல்ல மகிழ்ச்சியடையதது இதெல்லாம் தலைவனா இருக்கவனுக்கு குற்றங்களாவும்.

    குறள் 433:

    தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
    கொள்வர் பழிநாணு வார்

    பழி பாவத்துக்கு பயப்படுத பெரிய மனுசங்க தினையளவு குத்தத்தையும் பனையளவா நெனச்சு அத செய்யாம தங்கள காத்திக்கிடுவாங்க.  .

    குறள் 434:

    குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
    அற்றந் தரூஉம் பகை

    குற்றமே அழிவ உண்டாக்குத பகையாளி. அதனால அக்குற்றத்த செய்யாம இருக்குததயே நோக்கமா வச்சி வாழணும்.

    குறள் 435:

    வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும்

    குற்றம் வருததுக்கு முன்னமே காத்துக்கிடாதவனோட வாழ்க்க நெருப்பு முன்ன இருக்க வைக்கப்போர் கணக்கா அழிஞ்சு போயிடும்.

    குறள் 436:

    தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
    என்குற்ற மாகும் இறைக்கு

    மொதல்ல தங்கிட்ட இருக்க கொறைய நீக்கிட்டு பொறவு அடுத்தவங்கொறைய சொல்லுத தலைவனுக்கு என்ன கொற வரப்போவுது?

    குறள் 437:

    செயற்பால செய்யா திவறியான் செல்வம்
    உயற்பால தன்றிக் கெடும்

    செய்ய வேண்டிய நல்ல காரியத்த செய்யாம சேமிச்சு வைக்குத கருமியோட சொத்து வீணா அழிஞ்சு போயிடும்.

    குறள் 438:

    பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
    எண்ணப் படுவதொன் றன்று

    மத்தவனுக்கு குடுக்காம சேத்து வைக்கித கஞ்சத்தனம் குற்றங்கள் எல்லாத்திலயும் கொடுங்குற்றம்.

    குறள் 439:

    வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை

    எந்தவொரு காலத்திலயும் தற்பெரும பேசி மார்தட்டிட்டு அலயுதது கூடாது. நல்லது தராத செயல செய்யவும் கூடாது.

    குறள் 440:

    காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
    ஏதில ஏதிலார் நூல்

    பொறத்தியாருக்குத் தெரியாம தன்னோட விருப்பத்த நிறைவேத்தத் தெரிஞ்சவனுக்கு பகையாளி செய்யுத சூழ்ச்சி பலிக்காம போவும்.

    (அடுத்தாப்லையும் வரும்….

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-43

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-43

    43. அறிவுடைமை

    குறள் 421:

    அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
    உள்ளழிக்க லாகா அரண்

    அறிவு நமக்கு அழிவு வராம காக்கும். அது மட்டுமல்லாம பகையாளியாலயும் அழிக்க முடியாத அரண் கணக்காவும் நிக்கும்.

    குறள் 422:

    சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பா லுய்ப்ப தறிவு

    மனச அது போக்குல விடாம கெட்டத வெலக்கி நல்ல வழில நம்மள நடத்துததே அறிவு.

    குறள் 423:

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு

    யார் என்ன சொன்னாலும் நம்பாம உண்ம எது னு கண்டுபிடிக்கது தான் அறிவு.

    குறள் 424:

    எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு

    பொறத்தியார் மனசுல பதியுதது கணக்கா எளிமையா பேசுததும்,  அவுக சொல்லுத விசயத்த கூறுபோட்டு பாத்து  எளிதா விளங்கிக்கிடுததும் தான் அறிவு.

    குறள் 425:

    உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
    கூம்பலு மில்ல தறிவு

    ஒலகத்து ஒசந்தவங்க கூட நட்பா இருக்கது சிறந்த அறிவு. நட்போட தொடக்கத்துல மகிழ்ச்சியாவும் பொறவு வருத்தப்படுததும் இல்லாம ஒண்ணுபோல சீரா இருக்கது அறிவு.

    குறள் 426:

    எவ்வ துறைவ துலக முலகத்தோ
    டவ்வ துறைவ தறிவு

    ஒலகத்து பெரிய மனுசங்க எப்டி வாழுதாங்களோ அவங்களோட சேந்து தானும் அப்படியே வாழுதது அறிவு.

    குறள் 427:

    அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்

    அறிவுள்ளவுக நாளமுன்னயும் நடக்கப் போகுதத முன்னமே அறிஞ்சு வச்சிருப்பாக. அறிவில்லாதவுகளால அது ஏலாது.

    குறள் 428:

    அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
    தஞ்சல் அறிவார் தொழில்

    பயப்பட வேண்டியதுக்கு பயப்படாம தெனாவட்டா இருக்கது முட்டாள்தனம். பயப்பட வேண்டியதுக்கு பயப்படுதவங்க புத்திசாலிங்க.

    குறள் 429:

    எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
    அதிர வருவதோர் நோய்

    அடுத்தாப்ல வரப்போகுதத முன்னமே உணந்து காத்துக்கிடுதவனக்கு நடுங்குத அளவுக்கு அதிர்ச்சியான துன்பம் னு ஒண்ணு வாராது.

    குறள் 430:

    அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனு மிலர்

    ஒண்ணும் இல்லையினாலும் அறிவுள்ளவங்க எல்லாத்தையும் உடையவுக.  வேற எத வச்சிருந்தாலும் அறிவில்லாதவுக ஒண்ணுமில்லாதவங்களுக்கு சமானம் தான்.

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-42

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-42

    42. கேள்வி

    குறள் 411:

    செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
    செல்வத்து ளெல்லாந் தலை

    காதால கேட்டுப்பெறுத நல்ல விசயங்களே சிறப்பான சொத்து. அது மத்த எல்லாச் சொத்தையும் விட ஒசந்தது.

    குறள் 412:

    செவிக்குண வில்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்

    காதுக்கு மகிழ்ச்சி தருத விசயங்கள் ங்குத உணவு கெடைக்காம போவுதப்போ தான் வயித்துக்கும் கொஞ்சூண்டு சாப்பாடு கொடுக்கப்படும்.

    குறள் 413:

    செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
    ஆன்றாரோ டொப்பர் நிலத்து

    கேள்வி ஞானம் ங்குத செவி உணவு கெடச்சவங்க பூமி ல வாழ்ந்தாலும் யாகத் தீ லேந்து பெறுத நெய்யயும் மத்ததயும் சாப்பிடுத தேவ மக்களுக்கு சமம் தான்.

    குறள் 414:

    கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
    கொற்கத்தின் ஊற்றாந் துணை

    நூல்களப் படிக்கலேன்னாலும் படிச்சவங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கிடணும். அது நெருக்கடி வருதப்போ அவனுக்கு ஊணிக்கிட்டு நடக்க ஒதவுத கொம்பு கணக்கா தொணயா நிக்கும்.

    குறள் 415:

    இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
    ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

    வழுக்குத நெலத்துல நடக்க ஒதவுத ஊணிக்கம்பு கணக்கா ஒழுக்கம் ஒடையவுகளோட புத்திமதி சமயத்துல வாழ்க்கையில ஒதவும்.

    குறள் 416:

    எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்

    நல்லத எந்த அளவு கேட்டுக்கிடுதோமோ அந்த அளவு அது பெருமயக் கொடுக்கும்

    குறள் 417:

    பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
    தீண்டிய கேள்வி யவர்

    எதையும் நுணுக்கமா சோதிச்சு அறிஞ்ச அறிவாளிங்க சிலதப் பத்தி தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டிருந்தாலும் அப்பமும் கூறுகெட்டவன் கணக்கா பேச மாட்டாக.

    குறள் 418:

    கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
    தோட்கப் படாத செவி

    கேக்குத தன்ம இருந்தாலும் நல்லவங்க பேச்ச கேக்காதவனோட காது செவிட்டுக் காது தான்.

    குறள் 419:

    நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
    வாயின ராத லரிது

    கேள்வி ஞானம் இல்லாதவுக அடக்க ஒடுக்கமா பேசுதவங்களா இருக்கது சிரமந்தான்.

    குறள் 420:

    செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
    அவியினும் வாழினு மென்

    கேட்டுப் பெறுத சுவைய ஒணந்துக்கிடாம வாயால சாப்பிடுதப்போ கெடைக்க சுவைய மட்டும் ஒணருதவங்க இருந்தா என்ன. செத்தா என்ன.

    (அடுத்தாப்லயும் வரும்……

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-41

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-41

    41. கல்லாமை

    குறள் 401:

    அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றிக் கோட்டி கொளல்

    நெறய புத்தியக் கொடுக்க நூல்களப் படிக்காதவன்  படிச்சவங்க சபையில பேசுதது கட்டம் வரையாம தாயக்கட்டம் ஆடுததுக்கு சமானம்.

    குறள் 402:

    கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
    இல்லாதாள் பெண்காமுற் றற்று

    படிக்காதவன் ஒண்ணச் சொல்ல விரும்புதது முலை ரெண்டும் இல்லாதவ பெண் தன்மய விரும்புதது கணக்கா ஆவும் .

    குறள் 403:

    கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
    சொல்லா திருக்கப் பெறின்

    படிச்சவங்க முன்ன ஒண்ணும் பேசாம அமைதியா இருந்தாம்னா  படிக்காதவங்களும் ரொம்ப நல்லவங்களாத்தான் நெனைக்கப்படுவாக.

    குறள் 404:

    கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
    கொள்ளார் அறிவுடை யார்

    படிக்காதவனுக்கு பொறப்பிலயே புத்தி இருந்தாலும் படிச்சவுக அவன ஒசந்தவன் னு  ஒப்புக்கிடமாட்டாங்க.

    குறள் 405:

    கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும்

    படிக்காதவன் தன்னைய அறிவாளி னு காட்டிக்கிட படிச்சவங்க முன்ன நடிச்சாம்னா அவன் பேசும்போது அவனோட பொய்வேசம் கலஞ்சிபோயிரும்.

    குறள் 406:

    உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
    களரனையர் கல்லா தவர்

    படிக்காதவங்க உசிரோடஇருக்காங்க னு சொல்லிக்கிடலாம் அம்புட்டுதான். அவங்க வெளச்சலுக்கு ஒதவாத களர்நிலம் கணக்காதான்.

    குறள் 407:

    நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
    மண்மாண் புனைபாவை யற்று

    பாக்குததுக்கு அழகா மட்டுமே இருந்து படிச்சு தெளிவான புத்தியப்  பெறாதவங்க கண்ணக் கவருத மண் பொம்ம கணக்காதான் மதிக்கப்படுவாங்க.

    குறள் 408:

    நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
    கல்லார்கண் பட்ட திரு

    படிக்காத முட்டாள் கிட்ட இருக்க சொத்து நல்லவங்க கிட்ட இருக்க வறுமய விட கூடுதலா கொடும செய்யும்.

    குறள் 409:

    மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
    கற்றா ரனைத்திலர் பாடு

    படிக்காதவர் மேல் சாதில பொறந்திருந்தாலும் கீழ் சாதில பொறந்திருந்தாலும் படிச்சவர் அளவுக்கு பெரும இல்லாதவரு தான்.

    குறள் 410:

    விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
    கற்றாரோ டேனை யவர்

    மனுசங்களுக்கும் மிருகங்களுக்கும் என்ன வேத்துமையோ அதே தான் ஒசந்த நூல்கள படிச்சவங்களுக்கும் படிக்காதவங்களுக்கும் இருக்கு.

    (அடுத்தாப்லயும் வரும்…

    Share