Tag: மலர் சபா

  • நான் அறிந்த சிலம்பு – 57 (04.02.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    முரி வரி
    பாங்கன் கேட்பத் தலைமகன் உற்றது உரைத்தல்
                            
                        (14)
    என் தோழனே!
    பூம்பொழில் தருகின்ற நறுமண மலர்
    அம்மலர்களின் புதுமணம் பரந்து விரியும் மணல்
    அங்கே நின்றிருந்த தலைவியின்
    குற்றமற்ற இனியமொழி
    பருத்த இளமையான அழகிய மார்புகள்
    முழுமையான மதிபோன்ற முகம்
    வளைந்து நின்ற புருவமாம் இருவில்
    அழகை எழுதுவதற்கரிய மின்னல் இடை
    இவை யாவும் என்னைத் துன்புறச் செய்தன.
                         (15)
    என் தோழனே!
    அலைகள் பரந்த நீர்த்துறை
    அழகிய மணற்பரப்பு
    மணம் அவிழ்க்கும் நறுமண மலர்
    மலர்கள் நெருங்கிய சோலை
    அங்கே நின்றிருந்த தலைவியின்
    மணம் விரவிய சுருள் கூந்தல்
    மதி போலும் அழகிய முகம்
    இரண்டு கயல்கள் போன்ற இருவிழிகள்
    இவை யாவும் எனைத் துன்புறச் செய்தன.
                          (16)
    என் தோழனே!
    சங்குகள் வளரும் துறை
    மணம் பரந்து விரிகின்ற சோலை
    கட்டவிழ்ந்த மண மலர்கள்
    ஆங்கு அவள் தனித்து உலாவுகின்ற இடம்
    முளை போல வளரும் பல்வரிசை
    நிறைமதி போன்ற முகம்
    இளமைப் பருவத்தினளது
    இணைந்த மார்புகள்
    இவை யாவும் எனைத் துன்புறச் செய்தன.
    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    படத்துக்கு நன்றி:
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 56 (28.01.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (12)

    கரையினில் அலைகள்
    எறிந்திடும் சங்குகளின்
    முழக்கத்துக்கு அஞ்சி,
    குருதிக்கறை இருபுறமும் படிந்த
    செவ்வரி படர்ந்த
    வேல் போலும்
    கண்களையுடைய இவள்தான்
    கொடிய கூற்றமோ?!

    கடல்வளம் பொருந்திநிற்கும்
    சிறிய இவ்வூர்தன்னில்
    அழகு பொருந்திய
    மென்சாயல் பெண்ணுருவில்
    அக்கூற்றந்தான் வந்துள்ளதோ!

    (13)

    புலால் நாறும் மீன்களின்
    வெள்ளிய வற்றலைக்
    கவரவரும் பறவைகளை விரட்டி,
    தன்னைக் காண்போரை எல்லாம்
    மனம் தடுமாறச் செய்து,
    காமநோய் வசப்படுத்தி
    வருத்திநிற்கும் அணங்கு இவள்தானோ?!

    அடும்ப மலர்கள்
    நிறைந்து நிற்கும்
    குளிர்ந்த கானலிலே
    செறிந்த மெல்லிய கூந்தலையுடைய
    பெண்வடிவம் கொண்டுதான்
    ஓர் அணங்கு வந்துள்ளதோ?!

    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram19.html

    படத்துக்கு நன்றி:
    http://my.opera.com/heisenberg16/albums/showpic.dml?album=8923052&picture=125081982

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 55

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (10)

    வலைகொண்டு வாழ்வு நடத்துபவர்
    வாழ்கின்ற சேரிதனிலே
    வலை உலர்த்தியிருக்கும் முற்றத்திலே
    பூங்கொத்து ஒன்றினைக் கைதனில் ஏந்தி
    விற்பதற்குரிய வற்றல் மீன்களைக்
    காத்து நின்றாள் கன்னியொருத்தி.

    அவள்தானும்
    தான் வேண்டிய உருவம் எடுத்துக் கொண்டு,
    கொலைத்தொழில் புரியும்
    நீண்ட வேல்போன்ற விழிகளுடன்,
    அலைகின்ற நீரையுடைய குளிர்ந்த கானகத்தில்
    இங்ஙனம் வாழ்ந்து வருவதை
    முன்னரே நான் அறியேனே!
    அறிந்திருந்தால் அங்குதான்
    சென்றிருக்க மாட்டேனே!

    (11)

    நிலை வரி
    தமியளாக இடத்து எதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறுதல்

    கண் எனக் கயலையும்
    புருவம் என வில்லையும்
    கூந்தல் எனக் கார் மேகத்தையும்
    இவற்றுடன் சேர்த்து
    எதிர்வரும் என்னையும்
    வருத்துகின்ற கொடுந்தொழிலையும்
    எழுதி வைத்துள்ள
    இவளது முகம்தான் திங்களோ?!

    அழகிய பரப்புடைய
    வானத்தில் இருந்தால்
    பாம்புகள் விழுங்கிவிடுமோ
    என்று அஞ்சியே
    மீன்பிடிக்கும் படகுகள் கொண்டு
    வாழ்க்கை நடத்திவரும்
    பரதவர் வாழும் சிற்றூரில்
    தான் வந்து வாழ்கின்றதோ?!

    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram19.html

    படத்துக்கு நன்றி:
    http://www.shutterstock.com/pic-41345068/stock-vector-fishing-boat-with-seagulls-in-the-night.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 54

    மலர் சபா

    புகாரக் காண்டம் – 07. கானல் வரி

    முகம் இல் வரி
    குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகனது காதல் மிகுதியைக் குறிப்பினால் அறிந்து கூறுதல்

    (8)

    கடல்துறையில் மேய்ந்திருக்கும்
    வலம்புரிச் சங்குகள்
    தோய்ந்ததனால் மணலில் ஏற்படுகின்றன.
    வடுக்களும் சிறு குழிகளும்.

    அவ்வடுக்கள் மறையும்படி
    பூந்தாதுகள் உதிர்த்து நிற்கின்றன
    அழகிய புன்னைமரத்தில்
    பூத்துநின்ற செழுமையான பூக்கள்.

    அத்தகையதான கானலிடத்தே நிற்கின்ற
    தலைவியின் முழுமதி போன்று
    ஒளிரும் முகமதனில் இருக்கும்
    கயல் போன்ற கண்கள் செய்த
    வடுக்களைப் போக்க
    காம நோயினைப் போக்க
    எந்த மருந்தாலும் இயலாது.
    மருந்தால் போக்க முடியாத நோய்தனை
    தேமல் படர்ந்து நிற்கும்
    அவள் மென்மையான மார்புகள் மட்டுமே
    போக்கி நிற்கும் போலும்!

    (9)

    கானல் வரி
    கழற்று எதிர்மறை

    முள்பொருந்திய மீன்வற்றல்களைக்
    காயப்போட்டிருக்கும் இடத்தில்
    கவரவரும் பறவைகளை விரட்டவென்று
    காவல் நிற்கிறாள் கன்னியொருத்தி.
    வண்டுகள் சூழ்ந்திருக்கும்
    புலிநகக் கொன்றைப்பூங்கொத்தைக்
    கையில் ஏந்தியிருந்தாள்.
    அந்த அணங்கு. (வருத்தும் தெய்வம்)

    மணம்கமழ் பூக்ககளையுடைய அக்கானலிடத்தே
    தன்னைப் பார்ப்பவரை வருத்தும் தெய்வம்
    வாழ்ந்து கொண்டிருப்பதை நான் அறியேனே!
    அறிந்திருந்தால் அங்கு போயிருக்க மாட்டேனே!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram18.html
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram19.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 53 (07.01.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

     
               (6)
    எம் தலைவி மீது
    பெருங்காதல் கொண்டவராய்
    அன்று சோலையில்
    கையுறை ஏந்தி வந்து
    அவளை அடைய உதவிகேட்டு
    என் பின்னே வந்தார் தலைவர்.
    அன்று அவருக்கு அயலாராய்
    நின்றிருந்தோம் நாங்கள்..
    அவர் விருப்பத்துக்கு உடன்பட்டோம்.
    ஆனால் இன்று
    அயலார்போல் அவர் நின்றிருக்க
    இரந்து கேட்கும் நிலையில் நாங்கள்..
    அவரின் அருள் மறந்த குணம்
    ஏழையாகிய யாம் எங்ஙனம் அறிவோம்?!
    மாந்தர் முகத்திலுள்ள கண்களையும்
    நீரில் தோன்றும் நிலவின் நிழலைக் கண்டு
    மலர்ந்த கருங்குவளை மலர்களையும் கண்டு
    எது கண் எது மலர் என்றறியாத வண்டுகள்
    ஊசலாடும் வளமுடைய
    புகார் அன்றோ எம் நகரம்!
                (7)
    மோதுகின்ற பெரிய அலைகளால் தாக்கப்பட்டு
    அசைந்து ஒலிக்கின்ற வாயுடைய சங்குகள்,
    ஆற்று மணலில் சிறுமியர்
    எழுதிவைத்த இழைத்து வைத்த வண்டலை
    உழுது அழிக்கும்.
    அது கண்டு கோபமுற்ற சிறுமிகள்
    தாம் அணிந்திருந்த மலர்மாலைகளை
    மென்விரல்களால் அறுத்தெறிந்து
    அச்சங்குகள் மீது வீசுவர்.
    அப்போது ஆங்கே சிதறிய நீலமலர்கள்
    யாரோ ஒருவர்
    இமை சுருக்கிப் பார்ப்பது போல்
    தோற்றமளித்திட,
    அம்மாலைப்பொழுதினில் கடற்கரை வந்தவர்
    அவற்றைக் கண்டு
    மகளிரின் கண்களோ என்று எண்ணித்
    தொடர்ந்து செல்லாமல் மயங்கி நிற்பர்.
    அத்தகு இயல்புடைய
    புகார் அன்றோ எம் நகரம்!
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/c012/c0123/html/c01236l4.htm
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 51 (31.12.12)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 07. கானல் வரி

    (4)

    ஆற்றினில் புதுப்புனல் கண்ட
    உழவர் மகிழ்ந்து ஆர்க்கும் ஓசை,
    நீர் மதகுதனில்
    நிறைந்து வடிகின்ற ஓசை,
    கரைகளை வரப்புகளை
    உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசை,
    புதுப்புனல் விழாவில்
    களித்து மகிழும் மாந்தர்
    எழுப்பி நிற்கும் பல்வித ஓசை,

    இவை அனைத்தும்  கரையின்
    இருபக்கமும் ஆர்ப்பரிக்க
    நின் கடமையாகிய
    நல்லொழுக்கம் தவறாது
    நடந்து செல்லும் காவிரியே,
    நீ வாழ்க!

    சோழனின் வளத்தை
    அதிகரிக்க எண்ணியே
    நீ அங்ஙனம் நடந்து செல்கிறாய்!
    உன் வளத்தில் கொழித்திருக்கும்
    போர் மறவர் வாயை மூடாமல்
    ஆரவாரித்துக்கொண்டே இருக்கின்றர்.
    அத்தகு வளத்துக்குக் காரணமான
    காவிரியே நீ வாழ்க!

    (காப்பியத்தின் திருப்புமுனை – மாதவி தவறாகப் புரிந்து கொள்ளுதல்

    தான் உடன் இருப்பதால், பரத்தையருடன் கூடி மகிழ முடியாத கோவலன் வருந்துகிறான்;
    மாதவி தன்னிடம் இருக்கும் வளமெல்லாம் தான் அருளிய வளம்தான் என்று பாடுகிறான்;
    இவ்வாறாக மாதவியின் சந்தேகம் அதிகரித்தது.
    இந்த இப்பகுதிதான் காப்பியத்தின் திருப்புமுனையாக அமைகிறது.)

    (5)

    சார்த்து வரி- முகச் சார்த்து
    புகார் நகரைச் சிறப்பித்துப் பாடுதல்
    தோழி தலைமகன் முன் நின்று வரைவு கடாதல்

    கருங்குவளை மலர்போலும்
    நீண்ட கண்களை உடையவள்
    எம் தலைவி;
    அவளிடம்
    கடலின் பெருந்தெய்வமான
    வருணனைச் சுட்டிக் காட்டிச்
    சாட்சியாக வைத்திருந்து
    நின்னைப் பிரிய மாட்டேன்;
    விரைவில் மணம்புரிந்து கொள்வேன்
    என அன்று கூறிய எம் தலைவர்
    அச்ச்சுளுரைகள்
    நிறைவேற்றாமல் பொய்த்துவிட்டார்.

    ஐயனே!
    அறனில்லாதவர் அவர் என்று
    எங்ஙனம் நாங்கள் அறிவோம்!

    நிலத்தில் கிடக்கின்ற வெண்சங்குகளையும்
    வெண்முத்துகளையும் கண்டு
    அவைதாம் தம்மை மலர்விக்க வந்த
    வெண்மதியும் விண்மீன்களும் என்றெண்ணி
    மொட்டவிழும் ஆம்பல்கள்
    பகலை இரவென்று
    தவறாக நினைக்கும்
    தன்மை வாய்ந்த
    புகார் அன்றோ எம் நகரம்!

    (ஆம்பல் பொழுது கண்டு ஏமாந்தது போல, தலைவனின் இயல்பு குறித்துத் தவறாக
    நாங்கள் புரிந்து கொண்டோம்…என்பது கருத்து)

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram18.html

    படத்துக்கு நன்றி:
    http://www.eegarai.net/t77585-topic

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 51 (24.12.12)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 07. கானல் வரி

    முகம் உடைவரி – ஆற்று வரி
    காவிரியை நோக்கிப் பாடியன
                        (2)
    காவிரியே!
    மாலை அணிந்தவன்;
    நிறைமதி போலும்
    வெண்கொற்றக்குடை உடையவன்
    உன் கணவன் சோழமன்னன்.
    அவன் தானும்
    செங்கோல் அதனைச் செலுத்திக்
    கங்கையைக் கூடியிருந்தாலும்,
    நீ அவனை வெறுப்பதில்லை.
    ஆதலினால் நீ வாழ்க!
    கங்கை என்னும் வேறொரு
    வேறொரு பெண்ணைச் சேர்ந்து
    உன் கணவன் வாழ்ந்தபோதும்
    நீ அவனை வெறுக்காமல்
    வாழக் காரணம்
    உன் போன்ற காதல் மாந்தரின்
    உயர் கற்புநெறி என்பதை
    நான் அறிந்து கொண்டேன்.
    நீ வாழ்க!
                      (3)
    காவிரியே!
    பெருமை பொருந்திய
    நின் கணவன் சோழமன்னன்
    வளையாத செங்கோலினைச்
    செலுத்துபவன்.
    அவன் தானும்
    வேறொரு குமரியுடன் கூடியிருந்தாலும்
    நீ அவனை வெறுப்பதில்லை.
    ஆதலினால் நீ வாழ்க!
    கயற்கண்ணாளே!
    உன் கணவன் சோழமன்னன்
    உன்னைத்தானும் பிரிந்து
    வேறொரு கன்னியுடன் கூடினான்
    என்பதை அறிந்தாலும்,
    நீ அவனை வெறுக்காமல் இருப்பது
    மாந்தரின் பெருமைமிக்க
    கற்புநெறியால்தான் என்பதை
    நான் அறிந்து கொண்டேன்.
    நீ வாழ்க!
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1- 20
    படத்துக்கு நன்றி
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 50 (17.12.12)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 07. கானல் வரி

    வசந்தமாலை கையிலிருந்த யாழை மாதவி தொழுது வாங்கி, திருத்தி, கோவலனிடம் நீட்ட, அவன் அதை வாங்கி, கானல் வரி பாடத் தொடங்குதல்
    கட்டுரை
                           (1)
    வசந்தமாலை கொணர்ந்த யாழது
    ஒவிய வேலைப்பாடமைந்த
    வண்ணத்துணியாலான உறையினுள்
    வைக்கப்பட்டிருந்தது.
    அதன் அழகிய கோடுகளில்
    மலர்கள் சூட்டப்பட்டிருந்தன.
    மைதீட்டிய பெரிய கண்களையுடைய
    மணமகள்  ஒருத்தியின்
    ஒப்பனைக் கோலத்துக்கு ஒப்பாய்
    மிக்க அழகுடன் இருந்தது.
    அந்த யாழானது
    பத்தர், கோடு, ஆணி, நரம்பு முதலான
    பதினெட்டு வகை உறுப்புகளிலும்
    எந்தக் குற்றமும் குறையும் இன்றிச்
    சிறந்து விளங்கியது.
    நல்யாழ் அதனை
    மாதவிதானும் தொழுது
    தன் கையிலே வாங்கிக் கொண்டனள்.
    பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
    செலவு விளையாட்டு கையூழ் குறும்போக்கு என
    இசை நூல்கள் கூறும்
    எண்வகைக் கலைத்தொழிலாலும்
    யாழதன் நரம்புகளை ஆராய்ந்து
    இசை எழுப்பினள் மாதவி.
    பண்வகையிலும் குற்றம் இன்றி
    யாழ்மீட்டிச் சுருதி சேர்த்தனள்.
    மரகதமணி மோதிரங்கள் அணிந்த
    அவளின் மென்காந்தள் விரல்கள்
    பாடுகின்ற வண்டினம்போல்
    யாழ்நரம்பின் மீது தவழ்ந்தன.
    வார்த்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
    உருட்டல் தெருட்டல் அள்ளல் பட்டடை
    இங்ஙனம்
    இசைநூலோர் வகுத்துவைத்த
    எண்கரணங்களை
    அவற்றின் இசைக்கூறுகளைத்
    தன் செவித்திறத்தால் நன்கு ஆராய்ந்து
    சீர்தூக்கி அறிந்தனள்.
    பின் கோவலனை நோக்கி,
    “தங்கள் ஏவலுக்குக் காத்திருக்கிறேன்;
    கட்டளையிடுங்கள்” என்றே கூறிச்
    சுருதி கூட்டிய யாழதனை நீட்டினள்.
    அவனும் அவள் மனம் மகிழ வேண்டி,
    காவிரி குறித்தும், கடற்கானல் குறித்தும்
    வரிப்பாட்டுகளைப் பாடத் தொடங்கினன்.
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1- 20
    படத்துக்கு நன்றி:
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 49 (10.12.12)

     

    மலர்சபா

     

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

    மாதவி கோவலனுடன் வீற்றிருத்தல்
    ஆங்கே,
    கடலின் புலால் நாற்றம்…
    அதை மாற்றி
    நறுமணமாக்கிய
    மடல்கள் அவிழும்
    பூக்களை உடைய
    தாழை மரங்கள்
    வேலியெனச் சூழ்ந்திருந்து
    காவல் புரிந்த
    ஓர் இடத்தினில்……….
    ஓர் ஒப்பற்ற புன்னை மர நிழலில்
    அழுக்கேதும் அற்ற புதுமணற்பரப்பில்
    சித்திர வேலைப்பாடுக்ள் அமைந்த
    திரையதனைச் சுற்றிலும்
    வளைத்துக் கட்டப்பட்ட
    கூடாரம் ஒன்று அமைந்திருந்தது..
    அதனுள்
    மேற்கட்டு விதானத்துடன் கூடிய
    வெண்மையான தந்தத்தால் செய்த
    கட்டில் ஒன்று இடப்பட்டிருந்தது.
    பயணக்களைப்பால்
    வருந்தியிருந்த வாடியிருந்த
    வசந்தமாலையின் கையில் இருந்த
    திருந்திய நரம்பினையுடைய
    நல்யாழ் அதனை,
    மலர்நெடுங்கண் மாதவி
    செவ்வனே வாங்கிக்கொண்டு,
    அக்கட்டிலில் முன்கூட்டியே அமர்ந்திருந்த
    கோவலன் அவனொடு சேர்ந்து அமர்ந்தனள்.
    வெண்பா
    கடற்கரையிலுள்ள
    மடலவிழ் தாழையின் உள்ளே செறிந்த
    வெண்மையான இதழ்களில்,
    மாலைப்பொழுதில் தேனுண்டு உறங்கிய
    நீலநிற வண்டுகள்,
    காலைப் பொழுதில்
    களிப்பு தரும்
    தேனையும் பூந்தாதினையும்
    ஊதும்படியாக
    அழகிய தெளிந்த நிறத்தையுடைய
    காலைக்கதிரவனின் தேர் அதுவும்
    இளங்கதிர்களை வீசியே
    கீழ்திசையில் மெல்ல எழுந்தது.
    (கடல் ஆடு காதை முற்றிற்று.)
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 166 – 178
    படத்துக்கு நன்றி:
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 48 (03.12.12)

     

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை


     
     
    வைகறையில் கடற்கரைக் காட்சி
     
     
    இடிக்கப்பட்டுச் சலிக்காத
    மாவினைப் போல
    நுண்மையாக விளங்கியது
    கடற்கரை மணற்பரப்பு.
     
    அவ்விடத்தில் வெண்சிறு கடுகு
    இட்டாலும் கூட
    கண்ணுக்குப் புலப்படும்படி
    பரவியிருந்தது வெளிச்சம்.
     
     
    நீர் மிகுந்த பரப்பதனில்
    தாமரையை வேலியாகக் கொண்ட
    அழகிய மருதநிலம்போல்,
    அழகுறத் தோன்றும்
    தாழையை வேலியாக உடைய
    நெய்தல் நிலத்தில்
    கானலின் மருங்கில்
    கோவலனுடன் வந்த மாதவி
    தனது தோழியர் கூட்டத்துடன்
    விளையாடி மகிழ்ந்தனள்.
     
     
     
    நகரமக்கள் கடற்கரையில் களித்திருக்கும் காட்சி
     
     
    நிரைநிரையாகக் குவித்த
    குற்றமற்ற காட்சியையுடைய
    மலைதரும் பல பொருட்களும்…
    கடல்தரும் பல பொருட்களும்…
    இவ்வளம் கொழிக்கும்
    மரக்கலங்கள் அசைகின்ற கடற்கரை.
     
     
    ஆங்கே,
    சோலைகள் சூழ்ந்த இடத்தில்
    அரசிளங்குமாரரும்
    அவர்தம் உரிமை மகளிரும்
    வணிக குமாரரும்
    அவர்தம் பல்வேறு வகைப்பட்ட
    காமக்கிழத்தியரும்,
    ஆடல் மகளிரும்
    பாடல் மகளிரும்
    கூட்டம் கூட்டமாகத் தங்கியிருந்தனர்.
    அவர்களைச் சூழ்ந்திருந்தன
    திரைச்சீலைகள்.
     
     
    அக்காட்சியானது,
    விண்ணை எட்டும் புகழினையுடைய
    கரிகால் வளவன் தானும்
    புதுப்புனல் விழவு கொண்டாடும்
    தலைநாள் அதனை ஒத்திருந்தது.
     
     
    வேறு வேறு கோலங்களுடனூம்
    வேறு வேறு ஆரவாரங்களுடனும்
    விழாக்காணும் களம் போல
    அப்பூம்புனல்துறை சிறப்புற்றுப் பொலிந்தது.
     
     
    கடலின் கரையைக்
    குத்தியெடுத்துப் பெயர்த்து வந்து
    கடலதனுடன் கலக்கும்
    காவிரியாற்றின் புகார் முகமெங்கும்
    சிறிது கூட இடமின்றி
    நால்வகை வருணத்தவரின்
    அடங்காத ஆரவாரம்
    ஒருங்கு கூடி
    ஓர் ஒத்த ஓசையாய்
    ஒலித்துக் கொண்டிருந்தது.
     

    அடிப்படையாய் அமைந்த சில்ப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 146 – 150
     
     
    அடிப்படையாய் அமைந்த சில்ப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 151 – 165
     

    படத்துக்கு நன்றி:
    http://www.colourlovers.com/group/Artist_Palette_Challenge/conversations/10646/APC_16_Raja_Ravi_Varma

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 47 (26.11.12)

     

    மலர் சபா

     

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

     
    வைகறையில் கடற்கரைக் காட்சி
     
     

    வண்ணக் கலவைகள், சாந்து வகைகள்,
    மலர்கள் சுண்ணப் பொடிகள்
    பணியாரம் முதலான தீனிவகைகள்
    இவை விற்போர் வைத்திருந்த விளக்குகள்;
     
     
    செய்யும் தொழிலில் வல்லவரான
    கம்மியர்(தட்டார்)
    அணிகலன் செய்யுமிடங்களில்
    வைத்திருந்த விளக்குகள்;
     
     
    பிட்டு வாணிகர்கள்
    வரிசை வரிசையாய்
    ஏற்றி வைத்திருந்த விளக்குகள்;
     
     
    அப்பம் விற்கும் வாணிகர்
    குடத்தண்டில் ஏற்றி வைத்திருந்த
    கரிய அகல்விளக்குகள்;
     

    பண்டங்கள் பலவும் விற்கும் பெண்கள்தம்
    கடையில் வைத்த விளக்குகள்
     

    ஆங்காங்கு இடையிடையே
    மீன் விற்பவர்கள் வைத்த விளக்குகள்
     

    கடலின் இடத்து துறை எதுவென்று அறியாது
    ஓடுகின்ற மரக்கலங்களை
    அடையாளம் காட்டி அழைக்கவென்று
    வைத்த்திட்ட விளக்குகள்
     

    மீன்களைக் குறுக்கிட்டுத் தடுத்து
    வலையில் அகப்படுத்தும்
    பரதவர் வைத்திட்ட
    மீன் திமில் விளக்குகள்
     
    வேற்றுமொழி பேசும் தேசத்தவர்
    வைத்திட்ட விடிவிளக்குகள்
     
     
    பெரிய பெரிய பண்டங்களையுடைய
    பண்டகசாலைக் காப்பாளர்கள்
    வைத்திட்ட விளக்குகள்
     
     
    எண்ணுவதற்கு அரிய அளைவினதாய் விளக்குகள்
    எங்கு காணினும் பொருந்தி இருந்தன.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 134 – 145

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram16.html

    படத்துக்கு நன்றி:

    http://aammaappa.mywebdunia.com/2008/11/20/1227199500000.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 46 (19.11.12)

     

     மலர் சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

     
     கடற்கரைப் பயணம்
     
     
    பகைவரை அச்சப்படவைக்கும்
    புகார் நகரதனில்
    முழுமதி நாள் அன்று
    வைகறையில் கடலாடிக் களிக்கவென
    இடம்பிடிக்க வேண்டுமென்று
    திரள்திரளாகச் சென்றது மக்கள்கூட்டம்.
     
     
    அவர்களைப் போலவே,
    தாழை புன்னை
    மடல் அவிழ்க்கும் சோலைகளில்
    தானும் கடல் விளையாட்டைக்
    காண வேண்டுமென்று
    கோவலனிடம் வேண்டினள் மாதவி.
     
     
    தாமரைப் பொய்கைகளில்
    துயிலாழ்ந்திருந்த பறவைகள் விழித்து
    வாய் விட்டுக் கூவ,
    பொழுது புலர்ந்தது என்று
    கோழிச்சேவல்கள் கூவி அறிவிக்க,
    சங்குகள் முழங்கிட
    விழித்தெழுந்த விடிவெள்ளி
    பூமி பரவிய இருளை நீக்கியது.
     
     
    அவ்வைகறைப் பொழுதினில்
    மாலையணிந்த மார்பன் கோவலனோடு
    பேரணிகலன்கள் அணிந்தவளாய்ப்
    புறப்பட்டனள் மாதவி கடலாடுதற்கென்று.
     
     
    மேகம் போன்ற
    வன்கையாளன் கோவலன்
    அத்திரி வாகனம் அதனிலும்,
    மான்விழி மாதவி
    மூடுவண்டி அதனிலும்
    ஏறிச் சென்றனர்
    கடற்கரைப் பயணமாய்.
     
    (அத்திரி – கோவேறுக்கழுதை)
     
     
    கோடி மதிப்புப்பெறும்
    விற்பனைக் குவியல்களாய்ப் பண்டங்கள்
    காணப்பெற்ற வணிகர் வீதியையும்,
    மாடங்கள் நிறைந்த
    பெரிய கடை வீதிகளையும்,
     
    மலர்கள் அணிசெய்த
    மாணிக்க விளக்குகளை ஏற்றி,
    மலர்களையும் அருகம்புல்லையும்
    விளக்குகள் மீது தூவி வழிபட்டிருந்து,
    வீதிகளின் இரு புறங்களிலும்
    தமது அணிகலன்கள் ஒலித்திட,
    திரிந்து சென்ற மங்கலத் தாசியர்
    கூட்டத்தைக் கடந்தே சென்றனர்
    கோவலனும் மாதவியும்.
     
     
    திருமகள் குடிகொண்டிருக்கும்
    பட்டினப்பாக்கம் கடந்து,
    கடல் வளப் பெருமையால்
    சிறந்து விளங்கும்
    மருவூர்ப்பாக்கம் கடந்து சென்றனர்
    தம் பயணத்தடங்களில்.
     
     
    பொருள் ஈட்டவென
    மரக்கலங்கள் செலுத்திக்
    கடல்கடந்து புலம்பெயர்ந்து வந்த
    வணிகர் கூட்டம் தங்கியிருக்கும்
    கூல வீதிதனில்,
    ‘இது இன்ன பொருள்’ என்று
    எழுதி அறிவிக்கப்பட்டிருந்த
    மாலைச்சேரிப் பகுதிகளையும்
    கடந்தே சென்று
    நெய்தல் நிலக் கடற்கரைச் சோலையை
    அடைந்திட்டனர்.
     
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 111 – 133
     
    படத்துக்கு நன்றி:
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 45 (12.11.12)

     

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

     
     
    மாதவியின் அணிகலன்கள்
     
     
    முன்கை அணிகள்
     
     

    வயிரங்களும் பதித்துவைத்த
    சித்திர வேலைப்பாடமைந்த சூடகம்,
    செம்பொன்வளை,
    நவமணி வளையாம் பரியகம்
    சங்கு வளையாம் வால்வளை
    பலவகைப் பவழவளை
    ஆகிய அணிகலன்களை
    மெல்லிய மயிர்கள் காணப்பெறும்

    முகப்பில் கட்டிய மாணிக்கக்கற்களுடன்

    தன் முன்கைகளில்
    பொருத்தமுறவே
    மாதவி அணிந்திட்டாள்.
     
     
    கைவிரல் அணிகள்
     
     
    வாளைமீனின் பிளந்த வாயை ஒத்த
    வாயகன்ற முடக்கு வணக்குறு மோதிரம்
    செந்நிற ஒளிவீசும் மாணிக்கம் பதித்த
    கிளர்மணி மோதிரம்,
    சுற்றிலும் ஒளி உமிழும்
    வயிரம் சூழ்ந்த மரகதத் தாள்செறி மோதிரம்,
    இவ்வகை மோதிரங்களைக்
    காந்தள் மலர் போன்ற
    தன் விரல்கள் முழுதும் மறையும்படி
    மாதவி அணிந்திருந்தாள்.
     
     
    கழுத்து அணிகள்
     
     
    வீரச்சங்கிலி
    நுண்ணியத் தொடர் சங்கிலி
    பூணப்படும் சரடு பூண்ஞாண்
    புனைவேலைகள் அமைந்த
    சவடி, சரப்பளி இவற்றினோடு
    முத்தாரம் அதுவும்
    அழகிய கழுத்தினில் அணிந்திருந்தாள்.
     
     
    பிடரி அணி
     
     
    முற்கூறிய சங்கிலிகள் முழுவதையும்
    ஒன்றாய் இணைத்துப் பூட்டிய
    கொக்கி ஒன்றில் இருந்து
    பின்புறமாகச் சரிந்து தொங்கிய,
    அழகிய தூயமணிகளால் செய்யப்பட்ட
    கோவை அவள் பிடரி மறைத்துக் கிடந்தது.
     
     
    காது அணிகள்
     
     
    இந்திர நீலக்கற்களுடன்
    இடையே பெரிய வயிரங்கள் பதித்த
    குதம்பை எனும் அணியை அழகுறத்
    தன் இரு காதுகளிலும் அணிந்திருந்தாள்.
     
     
    கூந்தல் அணிகள்
     
     
    சிறந்த வேலைப்பாடு அமைந்த
    செழுநீர், வலம்புரிச்சங்கு,
    தொய்யகம், புல்லகம் இவற்றைத்
     
    தன் கருத்து நீண்ட கூந்தலில்
    அழகுற அணிந்திருந்தாள்.
     
     
    அணிகள் பலவும் கொண்டு
    அழகுக்கு அணிசேர்த்த மாதவி,
    கோவலனுடன் ஊடியும் கூடியும்
    மகிழ்வதற்கென்றே அமைக்கப்பட்டிருந்த
    பள்ளியறையில் இன்புற வீற்றிருந்தாள்.
     
     
    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
     
    படத்துக்கு நன்றி:
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 44 (05.11.12)

    மலர் சபா
     
    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை
     
     
    விழா முடிந்தபின் மாதவி அலங்காரக்கோலம் பூண்டு கோவலனுடன் கூடியும் ஊடியும் இருத்தல்
     
     
    விண்ணவரும் வந்திருந்து
    கண்டு களித்திருந்த
    இந்திரவிழாவும்
    மாதவியின் ஆடலும் கோலமும்
    இனிதே நிறைவேறின.
     
     
    பலரும் கண்டு மகிழ்ந்திருந்த
    தன் ஆடல் அழகை, கோலத்தை
    தொடர்ந்தே இராமல்
    சடுதியில் முடித்தனள் மாதவி.
     
    இதன் காரணமாய்
    ஊடல் கொண்டவன் போல்
    கோவலன் அவளுடன் பேசுவது தவிர்த்தனன்.
     
     
    அவனை மகிழ்வித்து
    ஊடல் நீங்க வேண்டி
    அலங்காரக் கோலங்கள் பலவும்
    புனையலானாள் மாதவி.
     
     
    மாதவி நீராடிய முறை
     
     
    பத்துவகை மருந்து மணப்பொருட்கள்
    ஐந்து வகை நறுமணப் பொருட்கள்
    முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப்பொருட்கள்
    இவையனைத்தும் ஊறிய
    நறுமண நன்னீரிலே
    வாசநெய் பூசிய
    மணம் கமழும் கரிய கூந்தல்
    நலமே பெற்றிட மஞ்சள் நீராடினாள்.
     
     
    கூந்தலுக்குக் கத்தூரி
     
    நீராடிய பின்
    மண அகிற்புகையால் கூந்தல் உலர்த்தி
    ஐந்து பகுதியாய் அதைப் பிரித்துக்
    கொழுவிய கத்தூரிக் குழம்பது ஊட்டினாள்.
     
     
    கால்விரல் அணிகள்
     
     
    செம்பஞ்சுக் குழம்பு பூசிய
    அழகிய சிவந்த சிறிய அடிகளில்
    நன்மை பொருந்திய மென் விரல்களில்
    காலாழி, மகரவாய் மோதிரம், பீலி
    அணிந்திட்டாள்.
     
     
    பாதத்துக்கான அணிகள்
     
     
    காலுக்குப் பொருத்தமான
    பரியகம், நூபுரம், பாடகம்,
    சதங்கை, அரியகம்
    முதலான
    அணிகலன்களை அணிந்திட்டாள்.
     
     
    தொடை அணி
     
    திரள்தொடைப் பகுதியில்
    குறங்குசெறி எனும்
    அணிகலன் அணிந்திட்டாள்.
     
     
    இடை அணி
     
     
    அளவில் பெரிய
    முத்துகள் முப்பத்தியிரண்டால்
    கோவையாகத் தொடுக்கப்பட்ட
    விரிசிகை எனும் அணியைத்
    தன் இடையை அலங்கரித்த
    பூவேலைப்பாடு செய்த
    நீலப்பட்டாடையின் மீது
    மேகலையென அணிந்திட்டாள்.
     
     
    தோள் அணி
     
     
    கண்டவர் காமமுற வைக்கும்
    அழகிய கண்டிகை எனும்
    தூய மணிகள் சேர்த்துக் கோர்த்த
    முத்துவளையைத்
    தம் தோளுக்கு அணியாய்
    அணிந்திட்டாள்.
     
     
    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 74 – 90
     
    படத்துக்கு நன்றி:

    http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=section&layout=blog&id=13&Itemid=59

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 41

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

    காமக் கடவுளுக்கு விஞ்சை வீரன் விழா எடுத்தல்

    பெரிய வெள்ளிமலையில் அமைந்திட்ட
    அகன்ற பெரிய வித்தியாதரர் நகரினிலே
    தேன் ஒழுகும் மலர்கள் செறிந்த
    பூம்பொழில் ஒன்று.

    ஆங்கே
    நீண்ட கரிய கயல்களை ஒத்த
    கயல்விழிக் காதலியோடு இணைந்து
    விஞ்சை வீரன் ஒருவன்
    காம தேவன் அவனுக்கு
    விருந்திட்டே விழாக் கொண்டாடினன்.

    இந்திர விழா பற்றியும், புகார்க் காட்சிகள் பற்றியும் விஞ்சை வீரன் தன் காதலிக்கு உரைத்தல்

    காமவிருந்து முடியும் தருணம்
    தன் காதலியிடன்
    உரைத்தனன் இங்ஙனம்.

    வடபுலத்தில் உறையும் நாம்
    காமவேள் விழாவது கொண்டாடி
    முடிக்கும் நாள் இன்று.

    இதே நாள்
    தென்திசையதனில் வளம்கொழிக்கும்
    புகார் நகர் தன்னில்
    இந்திர விழாவினுக்கென்று
    கால் கோள் கொடியேற்றித் தொடங்கும்
    முதல் நாள்.

    விழாக்கோலம் பூண்டிருக்கும்
    புகார் தன்னில்
    காணும் காட்சிகள்தான்
    என்னென்னே!!.

    நாளங்காடிக் காட்சிகள்

    மிக்க வேகமுடன்
    நெருங்கி வந்து எதிர்த்து நின்ற
    அசுரர் பெருங்கூட்டம்
    தோற்றோடிப் போனது..
    இந்திரன் நகரைக் காவல்புரிந்த
    புலியின் வலிமையுடைய
    வீரக்கழல் அணிந்த
    முசுகுந்தன் அவனிடம்.

    எனினும்
    வஞ்சனை மிகுதியால்
    அசுரர் கூட்டம்.
    போகிற போக்கில்
    ஏவியே சென்றது
    முசுகுந்தன் மீது
    இருள்கணை ஒன்றினை.

    முசுகுந்தன் ஏவலுக்காய்
    இந்திரன்விட்டுச்சென்ற
    காவல் பூதம்
    வஞ்சக இருளை நீக்கியது.

    என்றென்றும் முசுகுந்தன்
    மெய்க்காவலாகி நிற்கவென்று
    இந்திரன் இட்ட கட்டளைப்படி
    முசுகுந்தன் அவனுடன்
    புகார் நகர் நாளங்காடி தங்கியே
    பலிபெற்று வருகிறது.
    காவல் பூதமது.

    இத்தகைய சிறப்புப் பொருந்திய
    நாளங்காடிக் காட்சிகளை
    நாம் காண்போம்.

    ஐவகை மன்றக் காட்சிகள்

    முன்பு அசுரரால் வந்த
    இடரது போக்கியே
    அமராவதி நகரைக் காத்தமையால்
    மகிச்சியுற்ற இந்திரனால்
    கைம்மாறாய் அளிக்கப்பட்டு
    சோழ மரபினரால் கொண்டுவரப்பட்டு

    என்றும் பொய்க்காமல் நிலைபெற்ற
    தனித்தன்மையுடன் அழகுடன்
    புகார்நகரில் இலங்குகின்றது
    ஐவகை மன்றம்.

    அம்மன்றத்தின் சிறப்பினைக்கண்டு
    நாம் மகிழ்வோம்.

    உருப்பசி /ஊர்வசி வழித்தோன்றலாகிய மாதவியின் ஆடல் காட்சிகள்

    அன்றொரு நாள்
    இந்திரன் அவையில்
    அகத்தியரை வரவேற்க
    நாரத முனிவன்
    இசையின்பம் சிறக்கப்
    பாடும் பாடலும்,
    தோரிய மடந்தையர் பாடிய
    வாரப் பாடலும்
    ஆயிரம் கண்ணுடைய இந்திரன்
    செவியை நிறைத்து நின்றிருக்க…

    சயந்தன் நினைவில் மயங்கியபடி
    நடனமாடிய உருப்பசியின்
    குறை பொருந்திய நடன நாடகம்
    இந்திரன் செவியை நிறைக்கவில்லை…

    இதே காரணத்தால்
    பிற வாத்திய இசைகளும்
    தளர்ந்தேதான் போய் நிற்க..

    அகத்தியர் தாமும்
    சாபமிட்டார் இங்ஙனம்
    வீணை மங்கலமிழப்பதாக.
    இவள் மண்ணுலகில் பிறப்பாளாக

    சாபமதன்படி உருப்பசி
    மாதவியென்று பிறந்தனள்
    கணிகையர் குலத்தில்.

    உருப்பசி மாதவியாக….
    அவ்வழித்தோன்றலில் வந்த
    பாம்பு போன்ற அல்குல் உடையவள்
    இன்னுமொரு மாதவி.

    அவள் தம் சிறப்பு நடனக்காட்சிகளும்
    நாம் காண்போம்.

    சிவந்த இதழ்களும்
    உடுக்கை போன்ற இடையும்
    உடையவளே!

    புகார்நகரில் பூசைகொள்ளும்
    அமரர் தலைவன்
    இந்திரனை நாமும் வணங்குவோம்..
    என்றனன் தன் காதலியிடம்
    அவ்விஞ்சை வீரன்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 27
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram14.html

    படத்துக்கு நன்றி:
    http://www.rubylane.com/shop/rubylane-sold/ilist/,c=Vintage_Pins%2FBrooches_Jewelry,cs=Antique+%26+Vintage+Jewelry:Vintage:Pins%2FBrooches.html

    Share