நான் அறிந்த சிலம்பு – 48 (03.12.12)
மலர் சபா
புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

வைகறையில் கடற்கரைக் காட்சி
இடிக்கப்பட்டுச் சலிக்காத
மாவினைப் போல
நுண்மையாக விளங்கியது
கடற்கரை மணற்பரப்பு.
அவ்விடத்தில் வெண்சிறு கடுகு
இட்டாலும் கூட
கண்ணுக்குப் புலப்படும்படி
பரவியிருந்தது வெளிச்சம்.
நீர் மிகுந்த பரப்பதனில்
தாமரையை வேலியாகக் கொண்ட
அழகிய மருதநிலம்போல்,
அழகுறத் தோன்றும்
தாழையை வேலியாக உடைய
நெய்தல் நிலத்தில்
கானலின் மருங்கில்
கோவலனுடன் வந்த மாதவி
தனது தோழியர் கூட்டத்துடன்
விளையாடி மகிழ்ந்தனள்.
நகரமக்கள் கடற்கரையில் களித்திருக்கும் காட்சி
நிரைநிரையாகக் குவித்த
குற்றமற்ற காட்சியையுடைய
மலைதரும் பல பொருட்களும்…
கடல்தரும் பல பொருட்களும்…
இவ்வளம் கொழிக்கும்
மரக்கலங்கள் அசைகின்ற கடற்கரை.
ஆங்கே,
சோலைகள் சூழ்ந்த இடத்தில்
அரசிளங்குமாரரும்
அவர்தம் உரிமை மகளிரும்
வணிக குமாரரும்
அவர்தம் பல்வேறு வகைப்பட்ட
காமக்கிழத்தியரும்,
ஆடல் மகளிரும்
பாடல் மகளிரும்
கூட்டம் கூட்டமாகத் தங்கியிருந்தனர்.
அவர்களைச் சூழ்ந்திருந்தன
திரைச்சீலைகள்.
அக்காட்சியானது,
விண்ணை எட்டும் புகழினையுடைய
கரிகால் வளவன் தானும்
புதுப்புனல் விழவு கொண்டாடும்
தலைநாள் அதனை ஒத்திருந்தது.
வேறு வேறு கோலங்களுடனூம்
வேறு வேறு ஆரவாரங்களுடனும்
விழாக்காணும் களம் போல
அப்பூம்புனல்துறை சிறப்புற்றுப் பொலிந்தது.
கடலின் கரையைக்
குத்தியெடுத்துப் பெயர்த்து வந்து
கடலதனுடன் கலக்கும்
காவிரியாற்றின் புகார் முகமெங்கும்
சிறிது கூட இடமின்றி
நால்வகை வருணத்தவரின்
அடங்காத ஆரவாரம்
ஒருங்கு கூடி
ஓர் ஒத்த ஓசையாய்
ஒலித்துக் கொண்டிருந்தது.
படத்துக்கு நன்றி:
http://www.colourlovers.com/group/Artist_Palette_Challenge/conversations/10646/APC_16_Raja_Ravi_Varma
