நான் அறிந்த சிலம்பு – 46 (19.11.12)

 

 மலர் சபா

புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

 
 கடற்கரைப் பயணம்
 
 
பகைவரை அச்சப்படவைக்கும்
புகார் நகரதனில்
முழுமதி நாள் அன்று
வைகறையில் கடலாடிக் களிக்கவென
இடம்பிடிக்க வேண்டுமென்று
திரள்திரளாகச் சென்றது மக்கள்கூட்டம்.
 
 
அவர்களைப் போலவே,
தாழை புன்னை
மடல் அவிழ்க்கும் சோலைகளில்
தானும் கடல் விளையாட்டைக்
காண வேண்டுமென்று
கோவலனிடம் வேண்டினள் மாதவி.
 
 
தாமரைப் பொய்கைகளில்
துயிலாழ்ந்திருந்த பறவைகள் விழித்து
வாய் விட்டுக் கூவ,
பொழுது புலர்ந்தது என்று
கோழிச்சேவல்கள் கூவி அறிவிக்க,
சங்குகள் முழங்கிட
விழித்தெழுந்த விடிவெள்ளி
பூமி பரவிய இருளை நீக்கியது.
 
 
அவ்வைகறைப் பொழுதினில்
மாலையணிந்த மார்பன் கோவலனோடு
பேரணிகலன்கள் அணிந்தவளாய்ப்
புறப்பட்டனள் மாதவி கடலாடுதற்கென்று.
 
 
மேகம் போன்ற
வன்கையாளன் கோவலன்
அத்திரி வாகனம் அதனிலும்,
மான்விழி மாதவி
மூடுவண்டி அதனிலும்
ஏறிச் சென்றனர்
கடற்கரைப் பயணமாய்.
 
(அத்திரி – கோவேறுக்கழுதை)
 
 
கோடி மதிப்புப்பெறும்
விற்பனைக் குவியல்களாய்ப் பண்டங்கள்
காணப்பெற்ற வணிகர் வீதியையும்,
மாடங்கள் நிறைந்த
பெரிய கடை வீதிகளையும்,
 
மலர்கள் அணிசெய்த
மாணிக்க விளக்குகளை ஏற்றி,
மலர்களையும் அருகம்புல்லையும்
விளக்குகள் மீது தூவி வழிபட்டிருந்து,
வீதிகளின் இரு புறங்களிலும்
தமது அணிகலன்கள் ஒலித்திட,
திரிந்து சென்ற மங்கலத் தாசியர்
கூட்டத்தைக் கடந்தே சென்றனர்
கோவலனும் மாதவியும்.
 
 
திருமகள் குடிகொண்டிருக்கும்
பட்டினப்பாக்கம் கடந்து,
கடல் வளப் பெருமையால்
சிறந்து விளங்கும்
மருவூர்ப்பாக்கம் கடந்து சென்றனர்
தம் பயணத்தடங்களில்.
 
 
பொருள் ஈட்டவென
மரக்கலங்கள் செலுத்திக்
கடல்கடந்து புலம்பெயர்ந்து வந்த
வணிகர் கூட்டம் தங்கியிருக்கும்
கூல வீதிதனில்,
‘இது இன்ன பொருள்’ என்று
எழுதி அறிவிக்கப்பட்டிருந்த
மாலைச்சேரிப் பகுதிகளையும்
கடந்தே சென்று
நெய்தல் நிலக் கடற்கரைச் சோலையை
அடைந்திட்டனர்.
 
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 111 – 133
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram16.html
 
படத்துக்கு நன்றி:
http://rightplus.blogspot.com/2011/01/blog-post_463.html
Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *