திவாகர்
ஹெல்லோ..கொதிக்கற சாம்பார்லேர்ந்து சுடச் சுட ஒரு வெண்டைக்காய் தானை அப்படியே எடுத்து வாயிலே போட்டு டேஸ்ட் பார்த்தா எப்படி இருக்கும்?
அடக் கண்றாவியே.. அப்படில்லாம் டேஸ்ட் பண்ணித் தொலைக்காதீங்க.. அப்புறம் டாக்டருக்கு வேஸ்ட் அழுதாகணும்..
அட, நான் அப்படில்லாம் செய்வேனா.. இல்லே அப்படி செஞ்சா உன்னோட இப்படி அழகா பேசமுடியுமா.. பெப்பப்பே’ ந்னுதான் பேசணும்..
சரி, என்ன பண்றீங்க..
அதுதான் சொன்னேனே.. சாம்பார் அடுப்பிலே கொதியா கொதிக்குது.. வெண்டைக்காய் வெந்துபோய் துள்ளி விளையாடுது..
என்ன.. அடுக்கு மொழி விளையாடுது.. ரொம்ப ஜாலியா இருக்கீங்களோ..
ஜாலி’ன்னா ஜாலி மாதிரி வெச்சுக்கலாம்.. இல்லன்னா ஜாலி இல்லே’ன்னும் வெச்சுக்கலாம்.. ஜாலி இல்லாத ஜாலி’ன்னும் வெச்சுக்கலாம்..
என்ன குழப்பறீங்க.. கொழ கொழ வெண்டைக்காய் மாதிரி.. ஆமா கேக்க மறந்துட்டேன்..
எதை வேணும்னாலும் கேளு.. மறக்காம கேளு..
அது சரி, வெண்டைக்காயை அப்படியே போட்டிங்களா.. இல்லே.. எண்ணெய்’ல வதக்கிப் போட்டிங்களா.. வதக்கலேன்னா கொழ கொழ’ன்னு இருக்கும்..
அடி சக்கைன்னானாம்,, இத உனக்கு சொல்லிக் கொடுத்ததே நானாக்கும்.. கல்யாணம் ஆன புதுசுல நீ ஒரு வெண்டைக்காய் வெத்த குழம்பு வெச்சயே.. பச்சையா அப்படிப் போடாதே’ன்னு அந்தக் கொழ கொழ வெண்டைக்காயைக் கையில் பிடிச்சுண்டே, குழந்தைக்குச் சொல்றா மாதிரி செல்லமா சொன்னேனே.. உனக்கு ஞாபகம் வரலே..
அப்படில்லாம் நான் செஞ்சதா ஞாபகம் இல்லே.. நான் எப்பவுமே பெர்ஃபெக்ட்டாதான் பண்ணுவேன்.. நீங்க ஏதோ புதுசா கதை விடறீங்க.. விட்டால் எல்லா சமையலையும் நீங்களேதான் இதுவரை பண்ணினேன்’னு சொன்னாலும் சொல்லுவீங்க.. ஏதோ.. சமையல் உங்களுக்கு பழக்கம் இல்லையே’ன்னு இப்போ வதக்கச் சொல்லி ஞாபகமூட்டினேன்..
செந்தமிழும் நாப்பழக்கம்.. சமையலும் அப்படித்தான்.. இப்பல்லாம் நான் ரொம்ப டேஸ்ட்’டாவே பண்றேனாம்..
யார் சொன்னது அப்படி..
கோப்ப்படாதே.. நம்ம பில்டிங் வாட்ச்மேன் கோவிந்துதான் சொல்றான்.. நேத்து ராத்திரி என்கிட்ட தக்காளி பருப்பு வாங்கிண்டு போகறச்சே.. என் சமையலைப் பத்தியும் ருசியைப் பத்தியும் அவன் பேசறதெல்லாம் ஆஹா.. ஓஹோதான் போயேன்..
ஓஹோ.. அவனுக்கு ஓஸி பழகிடுச்சு.. ஏன் சொல்லமாட்டான்.. அதுக்காக நீங்க ஊர்ல இருக்கற எல்லாருக்கும் சேர்த்து சமையல்’லாம் பண்ணவேண்டாம்.. இருக்கற விலைவாசில இலவச சேவை தேவையில்லே..
அது அப்படியில்லே..
எது எப்படி இல்லே.. உங்களை யாராவது ரெண்டு வார்த்தை இல்லாததை இருக்கறாப் போலப் புகழ்ந்து சொன்னா போதும்.. உங்களுக்கு கிக்’ ஏறி கை கர்ணன் கையா மாறிடும்.. அதான் சொன்னேன்..
சரி சரி.. இப்போ நான் உனக்கு எதுக்கு போன் பண்ணினேன்னா..
சொல்லுங்க..
ஏன் அலுத்துக்கறே.. என்னைப் பார்.. கஷ்டமான வேளைல கூட ஜாலியா பேசலே?.. இடுக்கண் வருங்கால் நகுக..
அப்பறம் நகுக்கலாம்.. என்ன’ன்னு சீக்கிரம் சொல்லுங்க
அவசரப்படாதே.. சரி, நீயே சொல்லு, நீ சீரியஸா ஒரு வேலையை பார்த்துப் பார்த்து செய்யறபோது நடுவுல ஒருத்தர் குறுக்கிட்டு கெக்கபிக்கே’ன்னு ஏதாவது செஞ்சா என்ன பண்ணுவே..
ஐய்யோ.. எதுக்கு இத மாதிரி எரிச்சலூட்டறீங்க.. எது கையில கிடைக்குதோ அதால ரெண்டு போடுவேன்.. ஐ மீன்.. அப்படி நடுவுல வர்ரவரை..
நீ அப்படி பண்ணுவே.. ஆனா நான் கையில தேன் பாட்டில் கொடுத்து அனுப்புவேன்..
ஐயோ வெண்டக்காய் மாதிரி கொழப்பாம சொல்லக் கத்துக்குங்களேன்.. ஒண்ணுமே புரியலே..
சரி சரி.. நான் இப்போ வெண்டைக்காய் சாம்பார் நல்லா கொதிக்கறச்சே கறண்டியாலே கலக்கிண்டே இருந்தேன்னா..
நல்ல கொதிக்கறச்சே அது பாட்டுக்கு கொதிக்கட்டுமே.. எதுக்கு சும்மா சும்மா கலக்கணும்?
இல்லே.. அப்பதான் உப்பு போட்டேன். அதனால கலக்கினேன்..
சரி
நடுவுலே திடீர்னு உங்கப்பா வந்தார்..
ஆமா.. நான்தான் அவரை அங்கே அனுப்பிச்சு கொஞ்சம் ஹெல்ப் ஏதாவது வேணும்னா பண்ணச் சொன்னேன்..
வந்தவர் சும்மா ஹால்’லேயே உட்காரக்கூடாதா.. நேரே இங்கேயே வந்துட்டு, ’என்ன மாப்பிளே அடுப்புலே.. ரசமா’ன்னு சிரிச்சுண்டே கேட்டார்..
சாம்பாரை தண்ணி மாதிரி பண்ணியிருக்கீங்க போல.. நினைச்சுப் பார்த்தா எனக்கே சிரிப்பு வருது.. ஒண்ணு பண்ணுங்க.. உங்க சாம்பார் அடிப்பகுதியை சாம்பாரா ஊத்திக்குங்க.. மேல் பகுதியை ரசமா வெச்சுக்குங்க.. இந்த ஐடியா நல்லா இருக்குல்ல.. ஆனா என்ன.. ரசத்துல வெண்டைக்காய் வாசனை வரும்..
சிரிக்கறியா.. இனிமேதான் விஷயமே இருக்கு.. அவர்ட்ட ‘இல்லே மாமா.. இது வெண்டைக்காய் சாம்பார்’ன்னேன்.. அவரு உடனே என் கையிலே இருந்த கரண்டியைப் பிடுங்கி வாங்கிண்டு ‘மாப்ப்ளே.. வெண்டைக்காய் சாம்பார் பண்றதுல ஒரு டெக்னிக் இருக்கு.. ரெண்டு கொதி வரச்சேயே உப்பைப் போடணும், அப்பதான் உப்பு காயுலயும் ஊறும்.. ஆமா உப்பு போட்டீங்களா.. இல்லையா’ ந்னு கேட்டுட்டு, நான் பதில் சொல்லறதுக்குள்ளேயே சுடச் சுட ஒரு வெண்டைக்காய் தானே கரண்டியோட் எடுத்து அப்படியே சடக்கென வாயுல போட்டுட்டார்..
யார் வாய்’லே?
அவர் வாய்’லதான்.. என்ன மாமா’ன்னு கேட்டா ஙே ஙே.. பேப்பே.. ஏதேதோ சொல்றார்..
ஐய்ய்யோ.. இதத்தான் முதல்லயே போன் பண்ணிக் கேட்டீங்களா.. எங்கப்பா இப்ப எங்கே.. அடக் கடவுளே..
உடனே கையுல தேன் கொடுத்து நாக்குல தடவிக்குங்க..ன்னு சொல்லி அனுப்பிச்சுட்டேனே.. நீ இப்போ அவர்கிட்டே ஏதும் போன் போட்டு பேசாதே.. உனக்கும் பதில் பெப்பே’தான் வரும், ஹலோ.. ஹலோ.. ஹல்லோ…

Leave a Reply