நான் அறிந்த சிலம்பு – 54
மலர் சபா
புகாரக் காண்டம் – 07. கானல் வரி
முகம் இல் வரி
குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகனது காதல் மிகுதியைக் குறிப்பினால் அறிந்து கூறுதல்
(8)
கடல்துறையில் மேய்ந்திருக்கும்
வலம்புரிச் சங்குகள்
தோய்ந்ததனால் மணலில் ஏற்படுகின்றன.
வடுக்களும் சிறு குழிகளும்.
அவ்வடுக்கள் மறையும்படி
பூந்தாதுகள் உதிர்த்து நிற்கின்றன
அழகிய புன்னைமரத்தில்
பூத்துநின்ற செழுமையான பூக்கள்.
அத்தகையதான கானலிடத்தே நிற்கின்ற
தலைவியின் முழுமதி போன்று
ஒளிரும் முகமதனில் இருக்கும்
கயல் போன்ற கண்கள் செய்த
வடுக்களைப் போக்க
காம நோயினைப் போக்க
எந்த மருந்தாலும் இயலாது.
மருந்தால் போக்க முடியாத நோய்தனை
தேமல் படர்ந்து நிற்கும்
அவள் மென்மையான மார்புகள் மட்டுமே
போக்கி நிற்கும் போலும்!
(9)
கானல் வரி
கழற்று எதிர்மறை
முள்பொருந்திய மீன்வற்றல்களைக்
காயப்போட்டிருக்கும் இடத்தில்
கவரவரும் பறவைகளை விரட்டவென்று
காவல் நிற்கிறாள் கன்னியொருத்தி.
வண்டுகள் சூழ்ந்திருக்கும்
புலிநகக் கொன்றைப்பூங்கொத்தைக்
கையில் ஏந்தியிருந்தாள்.
அந்த அணங்கு. (வருத்தும் தெய்வம்)
மணம்கமழ் பூக்ககளையுடைய அக்கானலிடத்தே
தன்னைப் பார்ப்பவரை வருத்தும் தெய்வம்
வாழ்ந்து கொண்டிருப்பதை நான் அறியேனே!
அறிந்திருந்தால் அங்கு போயிருக்க மாட்டேனே!
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram18.html
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram19.html