Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(153)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள். வினாடிகள் நிமிடங்களாக, நிமிடங்கள் மணிகளாக, மணிகள் நாட்களாக, நாட்கள் வாரங்களாக இதோ அடுத்ததொரு வாரம் அடுத்ததொரு மடல்.

    காலங்கள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. ஓடும் அக்காலங்கள் தம்முள் கடந்து செல்லும் நிகழ்வுகளைச் சரித்திரங்களாகப் பதிவு செய்கின்றன. அச்சரித்திரம் அந்நாட்டின் வரலாற்றினை அடுத்துவரும் காலங்களுக்கு காலத்தின் கண்ணாடியாக எடுத்துச் சென்று காட்டி நிற்கின்றன. அச்சரித்திரம் பேணப்பட வேண்டுமாயின் அவை அவற்றின் முக்கியத்துவம் கெடா வகையில் அத்தாட்சியுடன் பதிவு செய்யப்பட வேண்டும். எது எப்படியாயினும் அச்சரித்திர நிகழ்வுகளே அந்நாட்டின் மீது மக்கள் பெருமை கொள்ளவும், அப்பெருமையின் அடிப்படையில் அந்நாட்டின் மகத்துவத்தைப் பேணவும் வழி கிடைக்கிறது.

    இங்கிலாந்து நாட்டில் நான் காலடி வைத்த நாள் முதல், இங்குள்ள நாட்டினரிடம் கண்டு ஆச்சரியப்பட வைப்பது இவர்கள் தமது கடந்தகால சரித்திரத்திற்கும், தமது வாழ்முறை கலாச்சாரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவமே! எந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று அரசமைத்தாலும் அவர்கள் தமது கலாச்சார, சரித்திர அடையாளங்களைப் பேணுவதற்காக தமது வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான தொகையை ஒதுக்கிக் கொள்கிறார்கள். இது அவர்களது கொள்கை அடிப்படையோ இல்லையோ, அவர்கள் இவ்வாறு செய்வதன் காரணம் இந்நாட்டு மக்கள் அவற்றிற்குக் கொடுக்கும் மதிப்பும் அரசியல் கட்சிகள் மக்களின் கருத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவமேயாகும் .

    என்னடா இவன் கதையளப்பது போல் மடலில் அடுக்கிக் கொண்டே போகிறானே என்று அன்பான வாசகர்கள் எண்ணலாம். இதை நான் இப்போது குறிப்பிடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஆமாம் ஏறத்தாழ 200 வருடங்களின் முன்னால் நிகழ்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போர் ஒன்றினை இருநூறு வருடங்கள் கழித்து இவர்கள் நினைவு கூர்வதும், அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவமுமே ஆகும்.

    waterloo 200“Battle of Waterloo” அதாவது “வாட்டர்லூ யுத்தம்” எனும் யுத்தம் ஜூன் மாதம் 18ம் தேதி 1815ம் ஆண்டு “வாட்டர்லூ” எனும் இடத்தில் நிகழ்ந்தது. இந்த ” வாட்டர்லூ ” எனும் இடத்திற்கும் தற்போது இங்கிலாந்தில் உள்ள “வாட்டர்லூ” எனும் இடத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இந்த யுத்தம் நிகழ்ந்த “வாட்டர்லூ ” எனும் இடம் தற்போதைய “பெல்ஜியம்” ஆகும். அப்போது இந்த இடம் “நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் ( United Kingdom of Netherlands) எனும் அமைப்பாக இருந்தது.

    1815 ஆம் ஆண்டு, மாவீரன் நெப்போலியன் திரும்பவும் அதிகாரத்தைக் கைப்பற்றிய நேரம். நெப்போலியனின் அதிகாரத்திற்கு எதிரான பல நாடுகள் நெப்பொலியனின் அரசுக்கெதிராகக் கூட்டணி அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த நேரம். ஃபிரெஞ்சு தேசத்திற்கு அண்மித்த “வாட்டர்லூ” எனும் இடத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ” வெலிங்டன் பிரபு” (Duke of wellington) தலைமையில் அந்நாளைய இராணுவத் தளபதி “பிரஸ்சியன்கெப்கார்ட் வொன் பிளெச்சர்” (Prussian Gebhard von Blücher) என்பவர் அமைத்த “ஏழாவது கூட்டணி” (Seventh Coalition) எனும் இராணுவக் கூட்டமைப்பு நிலை கொண்டது.

    அக்கூட்டணியை எதிர்த்து மேலும் பல இராணுவங்கள் இணைந்து தாக்குதலை மேற்கொண்டால்தான் அவர்களை இலகுவாக வெற்றி அடையலாம் என்று திட்டம் தீட்டிய மாவீரன் நெப்போலியன் தனது முக்கியமான தாக்குதலை “வாட்டர்லூ” எனும் இடத்தில் நிகழ்த்தினார். இத்தாக்குதல் நிகழ்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் பிரஸ்ஸியன் இராணுவம் மற்றொரு இடத்தில் ஃபிரெஞ்சு இராணுவத்திடம் தோல்வியுற்றிருந்தது. இத்தோல்வியின் பின்னால் மீண்டும் பலமாக பிரஸ்ஸியன் ராணுவம் கட்டியெழுப்பப்பட்டதை அறிந்த வெலிங்டன் பிரபு, அவர்கள் தனது நெப்போலியனுக்கெதிரான போருக்கு ஆதரவளிப்பார்கள் எனும் நம்பிக்கையோடு தாக்குதலை எதிர்கொண்டார்.

    அன்று மாலைவரை நெப்போலியனின் தாக்குதலை தனது திட்டமிடுதலினால் சமாளித்துக் கொண்டிருந்த வெலிங்டன் பிரபுவின் படைகளோடு பிரஸ்ஸியன் இராணுவமும் ஒன்றிணைந்து ஃபிரெஞ்சு இராவணுத்தைச் சிதறடித்து ஃபிரெஞ்சு நாட்டின் அதிகாரத்தை 18ம் லூயி மன்னனிடம் கையளித்தார்கள். நெப்போலியன் கைது செய்யப்பட்டு செயிண்ட் ஹெலினாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு நெப்போலியன் 1821ம் ஆண்டு உயிர் நீத்தார்.

    யார் இந்த “வெலிங்டன் பிரபு “?

    Sir_Arthur_Wellesley,_1st_Duke_of_Wellington

    1769ம் ஆண்டு – மே மாதம் 1ம் நாள், அயர்லாந்து நாட்டில் பிறந்த “ஆர்த்தர் வெல்லஸ்லீ” (Arthur Wellesley) என்பவரே இவர். “ஃபீல்ட் மார்ஷல்” எனும் இராணுவ உயர் பதவியை வகித்தவர். அந்நாளைய பிரித்தானியாவின் இராணுவ வீரர்களில் இவர் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்டார்.

    1787ம் ஆண்டு – இராணுவத்தில் இணைந்த இவர் ஒரு கர்னலாக பதவி வகித்தார். இவர் அயர்லாந்து பாராளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

    1796ம் ஆண்டு – நெதர்லாந்து , இந்தியா ஆகிய நாடுகளில் பல போர்களில் பங்கு கொண்டார் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த, திப்பு சுல்தான் கொல்லப்பட்ட நான்காவது ஆங்கில மைசூர் போரில் இவர் இங்கிலாந்து படைக்குத் தலைமை தாங்கினார்.

    1799ம் ஆண்டு – ஸ்ரீரங்கப்பட்டினம், மைசூர் ஆகிய பகுதிகளின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

    1814ம் ஆண்டு – நெப்போலியன் தலைமறைவாக இருந்த காலத்தில் இவர் ஃபிரெஞ்சு நாட்டின் பிரித்தானிய தூதுவராக கடமையாற்றும் போது இவருக்கு ” டியூக்” (Duke) எனும் பட்டமளிக்கப்பட்டது. இவரது இராணுவ காலம் முடிவுற்றதும் பிரித்தானிய அரசியலில் குதித்த இவர் இரண்டுமுறை கன்சர்வ்வேடிவ் கட்சியின் சார்பில் பிரதமராக பதவி வகித்தார்.

    1852ம் ஆண்டு – இவரது இறுதி காலம் வரை இங்கிலாந்து இராணுவத்தின் தலைமைக் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றினார்.

    Lorddouroஇப்போது இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போரில் டியூக் ஆஃப் வெலிங்டன் அடைந்த வெற்றியின் போது உயிர் நீத்த 24,000 வீரர்களை 200 வருடங்களின் பின்னால் நினைவு கூரும் முகமாக லண்டன் “வாட்டர்லூ” இரயில் நிலையத்தில் ஒரு நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது. இந்நினைவுச் சின்னத்தை அப்போரின் வெற்றிக்கு காரணமான டியூக் ஆஃப் வெலிங்டனின் பரம்பரையில் வந்தவரான 9வது டியூக் ஆஃப் வெலிங்டன் சார்ல்ஸ் வெலரியன் வெலஸ்லீ என்பவர் திறந்து வைத்தார். மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நிகழ்வு இந்நாட்டு மக்கள் மக்கள் தமது சரித்திர நிகழ்வுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றி நிற்கிறது.

    இத்தகைய உணர்வுகளே தமது நாட்டின் மீது தாம் கொண்ட மதிப்பையும் அதன் அடிப்படையில் அந்நாட்டைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், வசதிக் குறைவின்றி வைத்துக் கொள்ளும் மனோபாவத்தின் அடிப்படையாகிறது. நம்மில் எத்தனைப்பேர் நமது நாடுகளின் சரித்திர நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் ?

    ஆச்சரியமாக இல்லையா ?

    மீண்டும் அடுத்த மடலில் …
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(152)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அரசியல் ஒரு சாணக்கிய சூத்திரம் என்பது ஒரு பொதுப்படையான கருத்து. இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். அரசியலில் இரண்டு வார காலமே மிக நீண்ட காலம் என்று முன்னைய இங்கிலாந்துப் பிரதமர் அமரர் ஹரால்ட் வில்சன் அவர்கள் கூறியதுண்டு. அன்றாடம் மாறிக் கொண்டேயிருக்கும் இந்த உலக அரங்கிலே அரசியலும் அதற்கேற்ற வகையில் மாறிக் கொண்டேயிருக்கிறது. எவ்வளவுதான் மாற்றமடைந்தாலும் அரசியலின் முக்கிய நோக்கம் அந்நாட்டு மக்களின் வாழ்வைச் சீரமைப்பதே என்பதே அடிப்படை உண்மையாகிறது. இவ்வுண்மையை மையப்படுத்தியே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டு அரசியல் கட்சிகள் தமது பிரச்சாரப் பீரங்கிகளை இயக்குக்கிறார்கள்.

    மக்களின் நன்மையைக் கருதி அரசியல்வாதிகள் கொள்கையளவில் எடுக்கும் பல தீர்மானங்கள் அவர்கள் பதவிக்கு வந்ததும் பல்வேறு அகப்புறச் சூழல்களினால் நிறைவேற்றப்பட முடியாமல் போவதும் உண்டு. அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றுவதையே தமது நோக்கமாகக் கொண்டு அரசியலில் இறங்குகிறார்கள் என்பது என்றுமே உண்மையாகாது. மக்களின் சேவையை மனதில் கொண்டே பெரும்பான்மையான அரசியல்வாதிகள் அரசியலில் இறங்குகிறார்கள். ஆனால், சிலரை சில சமயங்களில் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் தவறான பாதைக்கு இட்டுச் சென்றுவிடுகின்றன என்பதுவே உண்மை.

    எதற்காக எனது மடலின் ஆரம்பம் அரசியலையும், அரசியல்வாதிகளையும் சிறிது அலசியிருக்கிறது என்ற எண்ணம் ஏற்படலாம். காரணம் இருக்கிறது வருகிறேன்.

    ஒவ்வொரு மனிதனும் வாழும் போது அவனைச் சுற்றி இருப்போர் அவன் இருப்பைக் கண்டு கொள்வது போல் காட்டிக் கொள்வதில்லை. அம்மனிதன் தனது இறுதி முடிவைத் தழுவிக் கொள்ளும்போது அவனது இறுதிச் சடங்கில் அவனது புகழாரம் ஓதப்படுக்கிறது. அவர்களது இழப்பின் உண்மை அவனது சரித்திரத்தைப் புரட்டி பார்த்துப் பேசவைக்கிறது.

    என்ன இது என்று வியக்காதீர்கள். கடந்த திங்கட்கிழமை (ஜூன் 1, 2015) அன்று தனது மரணத்தைத் தழுவிக் கொண்ட ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த லிபரல் டெமகிரட்ஸ் கட்சியைச் சார்ந்த சார்ல்ஸ் கென்னடி (Charles Kennedy) அவர்களின் மறைவினைத் தழுவிய மடலே இது. இவரை அதிகம் தெரிந்தவர்கள் குறைவு என்றே கூற வேண்டும்.

    யார் இந்த சார்ல்ஸ் கென்னடி ?

    Charles_Kennedy_2009ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள இன்வேனர்ஸ் எனும் இடத்தில் இயன் கென்னடிக்கும் மேரிக்கும் மகனாக 1959ம் ஆண்டு பிறந்தார் சார்ல்ஸ் கென்னடி. கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அரசியல், தத்துவம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் வாங்கிய இவர். பட்டம் பெற்றதும் பி.பி.ஸி ஸ்கொட்லாந்து நிறுவனத்தில் ஊடகவியளாலராகப் பணியாற்றினார்.

    CK11982ம் ஆண்டு அமெரிக்க இன்டியானா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டார். அப்போது இங்கிலாந்தில் லேபர் கட்சியில் அதிருப்தி அடைந்தவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சோஸல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஸ்கொட்லாந்து நாட்டிலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிடத் தெரிவு செய்யப்பட்டார். 1983ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றியீட்டி 23 வயதில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் இளைய உறுப்பினர் எனும் பெயர் பெற்றார். 1983ம் ஆண்டு தொடக்கம் சமீபத்தில் நடந்து முடிந்த 2015 தேர்தல் வரை அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற இவரின் முதல் தோல்வி நடந்து முடிந்த இந்தப் பொதுத் தேர்தலிலேயாகும்.

    மிகவும் தீவிரமான இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்த இவர் மிகவும் திறமையான ஒரு இளம் அரசியல்வாதியாகக் கணிக்கப்பட்டார். சோஸல் ஜனநாயகக் கட்சி தன்னை லிபரல் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் முடிவை முன்மொழிந்த ஐந்து பேரில் இவரும் ஒருவராவார். அதைத் தொடர்ந்து உருவான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் மிக முக்கியமான ஒரு உறுப்பினராகத் திகழ்ந்தார். அக்கட்சியின் தலைவர் படி ஆஷ்டவுண் (Paddy Ashdown) தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்த போது இவரே அக்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1999 ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவராக இவர் பதவி வகித்த காலத்திலேதான் முதன் முறையாக லிபரல் கட்சியின் வெற்றிக்குப் பின்னால் லிபரல் கட்சி உள்ளடங்கிய லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி 52 இடங்களில் வெற்றியீட்டி சாதனை செய்தது எனலாம்.

    இவரது தலைமையின் கீழ் இவரது கட்சி ஈராக் யுத்தத்திற்கு தமது முழுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. இவரது மறைவு குறித்து அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தமது கட்சி பேதங்களை மறந்து இவரின் மீதான தமது மதிப்பை வெளிப்படுத்தினர்.

    நேற்று (ஜூன் 3, 2015) தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற முதலாவது பிரதமர் கேள்வி பதில் நிகழ்ச்சியில் இவருக்கான இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் பார்வையாளர்களுடன் இவரது இரண்டே வயது நிரம்பிய மகன் டொனால்ட் டும் அவரது மனைவியும் அமர்ந்திருந்தார்கள்.

    பொதுவாக இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும்போது அவர்கள் பாராளுமன்றத்தில் பார்வையாளர்கள் இருக்கும் இடத்தை நோக்கிப் பேச அனுமதிக்கப் பட மாட்டார்கள். இது அவர்கள் பாராளுமன்றத்தை ஒரு பிரச்சார மேடையாக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே. ஆனால் நேற்றோ சபாநாயகர் இதற்கு விதி விலக்களித்து உறுப்பினர்கள் தமது இரங்கற் செய்தியை அவரது மகன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கிச் செலுத்த அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    எதற்காக இவர் மீது இத்தனை அபிமானம்?

    CK3

    பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே கொஞ்சம் சந்தேகத்துடன் நோக்கும் மக்கள் இவர் மீது கொண்டிருந்த அபிமானமே இதற்குக் காரணமாகும். நாட்டின் பெரும்பான்மையினர் அன்றைய பிரதமர் டோனி பிளேயரின் விளக்கத்திற்கு ஆதரவளித்து ஈராக் மீதான யுத்தத்தை ஆதரித்தனர். எதிர்க் கட்சிகளும் அதனை ஆதரித்தன. ஆனால் தனியொரு மனிதனாக நட்டிலுள்ள பெரும்பான்மையினருக்கெதிராக தான் கருதப்பட்டாலும் பரவாயில்லை என்று ஈராக் மீது போர் தொடுக்கக்கூடாது எனவும், அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்றும், ஐநா சபை மூலம் நாடுகள் ஒன்றாக எடுக்கும் நடவடிக்கையே வெற்றியளிக்கும் என்று குரல் கொடுத்து இதற்கான வாக்களிப்பில் தனது கட்சியினரை வாக்களிக்காது வழி நடத்தியவர் இத்தலைவர்.

    அது தவிர 2010ம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியுடன் லிபரல் டெமகிரட்ஸ் கட்சி கூட்டணி அமைக்கும் போது தமது கட்சிக்கெதிராக குரல் கொடுத்து அதனால் தமது கட்சி அடையப்போகும் பாரதூரமான விளைவுகளை எடுத்துக்கூறியவர் இவர். இவர் தலைவராக இருந்த நேரத்தில் இவர் மதுவுக்கு அடிமையாக இருந்து அதற்கான சிகிச்சையில் ஈடுப்பட்டதை தொலைக்காட்சி ஒன்று வெளிப்படுத்த எண்ணியபோது, தானாகவே தனது பலவீனத்தை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி தனது தலைமைப் பதவியை இராஜினாமச் செய்த துணிச்சல் மிக்கவர் இவராவார்.

    CK4

    இத்தகைய இவரது தனிப்பட்ட குணங்களினாலேயே இவருக்கு மக்கள் மத்தியிலும் மற்றைய அரசியல்வாதிகள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு பண்பட்ட அரசியல்வாதி தனது 55வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தது இங்கிலாந்து ஜனநாயக அரசியலின் இழப்பு என்றே சொல்ல வேண்டும்.

    “மக்கள் குரலே மகேசன் குரல் ” இதை மதிப்பவர்களின் தொகை குறைந்து கொண்டே போகிறதோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(151)

    –சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள்…

    இவ்வார மடலுடன் உங்கள் முன்னே மீண்டும் ஒரு கருத்துப் பரிமாறல்.

    மனிதப்பிறவி என்பது அளப்பரியது. இறைவன் மனிதனுக்கு அளிக்கும் வரப்பிரசாதமே மனிதப்பிறவியாகும்.

    தாய், தந்தை, உடன்பிறந்தோர், மனைவி, மக்கள் என மனிதனுக்கு இறைவன் அளிக்கும் உறவுகள் ஆயிரம்.

    எங்கே, எப்படி, யாருக்கு குழந்தையாகப் பிறக்கப்போகிறோம் என்பது எமது கைகளில் தங்கியிருப்பதில்லை.

    யாரோ போட்ட விதையில் எங்கோ செடியாக முளைக்கும் எமக்கு விதைத்தவர் தந்தையென்றும் அதற்கு விளைநிலமானவரே அன்னை என்பதும் அறிவு தெரிந்தவுடன் புரிகிறது.

    யார் தமக்கு குழந்தையாகப் பிறக்கப் போகிறார்கள் என்பதை அறியாமலே அக்குழந்தை மீது அளவு கடந்த பாசம் கொள்கிறார்கள் பெற்றோர்கள்.

    பிறக்கும் அக்குழந்தையும் வளர்ந்து ஒரு விஞ்ஞானியாகவோ அன்றி ஒரு நாட்டின் தலைவராகவோ அன்றி ஒரு நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவராகவோ அன்றி ஒரு தீரா வியாதிக்குட்பட்டவராகவோ உருவெடுக்கலாம்.

    இத்தகைய அளப்பரிய, அதிசயமான மனிதப்பிறவியாக உருவெடுக்கும் எமக்கு, எமது பிறப்பில் எந்த விதமான கட்டுப்பாட்டையும் கொண்டிராத எமக்கு எமது உயிரைப் பறிக்கும் அதிகாரம் இருக்கிறதா?

    மிகவும் வியத்தக்க வினா இல்லையா?

    என்ன சக்தியின் இக்கேள்வி எந்த வழிக்கு எம்மை இழுத்துச் செல்கிறது எனும் கேள்வி உங்களுக்குள் எழுவது இயற்கை.

    நாம் அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனும் எண்ணத்துடன் தான் எமது வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

    நாம் வாழும் போதும் சரி, அன்றி மறையும் போதும் சரி எமது உறவுகளுக்குப் பாரமாக அமைந்து விடக்கூடாது என்பதுவே பெரும்பான்மையானவர் மனங்களில் குடி கொண்டிருக்கும் நினைவாகும்.

    ஆனால் நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்து விடுகிறதே!

    வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் எமது வாழ்வினில் நாம் விரும்பாத முடிவுகளுக்கு எம்மைத் தள்ளி விடுவதை நாம் பலமுறை கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

    எந்த வழியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று எண்ணுகிறோமோ அந்த வழிக்கு வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகள் எம்மைத் தள்ளி விடுகிறது.

    சில நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்வு இப்போது இங்கிலாந்தில் மிகவும் பலமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    54 வயது நிரம்பிய ஒரு வெற்றிகரமான வியாபாரத்தின் சொந்தக்காரர் ஜெஃப்ரி ஸ்பெக்டர் (Jeffrey Spector) என்பவர். அவர் சுவிட்சர்லாந்தில் தனது வாழ்வின் முடிவைத் தேடிக் கொண்ட நிகழ்வே இவ்விவாதம் மீண்டும் தலைதூக்கக் காரணமாகிறது.

    151                        151.2151.3

    அவர் அத்தகைய ஒரு முடிவுக்கு வருவதற்கு என்னதான் காரணம் ?

    அவருக்கு முதுகெலும்பில் ஒரு புற்றுநோய்க்குக் காரணமான “ட்யூமர்” ஒன்று வளர்ந்திருந்தது.

    மருத்துவர்களின் கணிப்புகளின் படி இது மிகவும் பாரதூரமான நோய். மிகவும் மோசமான விளைவுகளைக் கொடுக்கக்கூடியது. அறுவை சிகிச்சையின் மூலமே இவரது வாழ்வை நீடிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தன.

    அறுவை சிகிச்சையின் பின்னால் அவர் நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் எச்சரிக்கப்பட்டார்.

    தான் எடுக்கும் எந்த முடிவுகளும் தனது குடும்பத்தினரை நீண்டகால உபாதைகளுக்கு உள்ளாக்கக் கூடாது என்பதில் இவர் மிகவும் உறுதியாக இருந்தார்.

    எந்த வித அறுவை சிகிச்சைக்குள்ளாகாமல் இன்னும் எத்தனை காலத்திற்கு அவர் சாதாரணமாக நடமாட முடியும் என்பதை எந்த வைத்தியராலும் அறுதியாகக் கூறமுடியாத நிலைமை.

    இங்கிலாந்துச் சட்டத்திட்டங்களின் படி எந்த ஒரு நிலையிலும் யாரும் தனது உயிரைத்தானே எடுத்துக் கொள்வது அனுமதிக்கப்படுவதில்லை.

    மேலும் யாராவது அவர்களது தற்கொலைக்கு உதவினார்களேயானால் அவ்வுதவி செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

    ஆனால் சுவிட்சர்லாந்தில் இத்தகைய தற்கொலைகள் அதாவது விரைவில் மரணமடையக்கூடிய தீராநோய் கொண்டிருப்பவர்கள் தனது உயிரைத் தாமே மாய்த்துக் கொள்வதற்கு அந்நாட்டுச் சட்டத்தில் இடமுண்டு.

    இம்மனிதர் தனது குடும்பத்தினருக்கு தனது நிலையை விளக்கி விட்டு சுவிட்சர்லாந்துக்கு பயணித்து அங்கே இத்தகைய தற்கொலைக்கு உதவும் வைத்தியசாலையில் தானே தன்னை அனுமதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

    இவரது மரணத்தைத் தொடர்ந்து இவரது நண்பர்களும், குடும்பத்தினரும் அவரது முடிவைத் தாம் மதிப்பதாகக் கூறியுள்ளார்கள்.

    ஆனால் இங்கிலாந்தில் சட்டம் மாற்றப்பட்டு இத்தகைய முடிவு சட்டத்திற்கு புறம்பானதல்ல என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால் தமது அன்புக்குரிய அம்மனிதரின் கடைசி நேரத்தில் தாம் உடனிருந்திருந்திருக்கலாம் என்பதுவே தமக்கு வேதனையளிக்கிறது என்கிறார்கள்.

    சுவிட்சர்லாந்துக்கு செல்வதற்கு முன்னால் பேட்டியளித்த அம்மனிதர் இந்நாட்டில் தனது முடிவு சட்டப்பூர்வமானதாக இருந்திருந்தால் தான் இன்னமும் நடமாடும் நிலையில் இருக்கும் போது தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியிருந்திருக்காது என்று கூறியிருந்தார்.

    ஏன் என்கிறீர்களா ?

    அவர் தனது உயிரை இப்போது எடுத்துக் கொண்டிருக்காவிடில், ஒருவேளை நோய் தீவிரமடைந்து நடமாடமுடியாத நிலை வந்திருந்தால், அதன் பின்னால் அவர் சுவிட்சர்சலாந்து சென்று தனது உயிரைத் தானாகவே எடுத்திருந்திருக்க முடியாது.

    அந்நிலையில் தன்னை சுவிட்சர்லாந்துக்கு தனது குடும்பத்தினர் கொண்டு சென்றிருந்தால் அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்டு விடுவார்கள்.

    இதுவே அவரது இந்த அவசர முடிவுக்குக் காரணம் என்றிருந்தார்.

    இங்கிலாந்து சட்டம் அவரது எதிர்பார்ப்புக்கு அமைய மாற்றப்பட்டிருந்தால் அம்மனிதர் இன்னும் சிலகாலம் தன் அன்புக்குரியவர்களுடன் வாழ்ந்திருப்பார் என்று வாதிடுகிறார்கள் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கோருபவர்கள்.

    இல்லை, யாருக்கும் தமது உயிரை எடுக்கும் அதிகாரம் இல்லை. சட்டம் மாற்றப்பட்டால் அவசியமின்றி பலர் தமது வாழ்வை அனாவசியமாக முடித்துக் கொள்ளும் அபாயமிருக்கிறது என்கிறார்கள் அதை எதிர்ப்பவர்கள்.

    “லார்ட் யங்” (Lord Young ) எனும் அரசியல்வாதி மீண்டும் இச்சட்ட மாற்றத்தை இங்கிலாந்தின் பாரளுமன்றத்தின் முன்னால் விவாதத்திற்குக் கொண்டு வரும் முயற்சியிலீடுபட்டிருக்கிறார்.

    இம்மனிதப் பிறப்பு . . . ஆண்டவன் நிர்ணயிப்பு …

    இம்மனிதனின் முடிவு . . . . ?

    பொறுத்திருந்து பார்ப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(150)

    –சக்தி சக்திதாசன்.

     

    hands

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் …

    150 மடல்கள், 150 வாரங்கள் இனிய உறவுகளான உங்களோடு என் மனக்கருத்துகளை மடல் வாயிலாக நான் பகிரத் தொடங்கி இத்தனை காலங்கள் ஓடிப் போயினவா?

    ஏதோ நேற்றுதான் சகோதரி பவளாவுடன் ஆரம்பித்தது இம்மடலின் துவக்கம்; 150 வார காலங்களுக்குள் எத்தனை எத்தனை நிகழ்வுகள்? எப்படி எப்படி நடந்து முடிந்து போயின.

    நீர்க்குமிழி போன்ற இந்த வாழ்க்கையில் நாம் காணும் எத்தனையோ வண்ணக் கனவுகள் கறுப்பு வெள்ளையாய் முடிந்து போயிருக்கின்றன. அதே சமயம் எத்தனையோ கறுப்பு வெள்ளையாக ஆரம்பித்தவைகள் வண்ண நினைவுகளாகவும் மிளிர்ந்திருக்கின்றன.

    என் அண்ணனின் இளம் மைந்தனின் மறைவு, என் நல் நண்பனின் அகால மரணம், என் மனைவியின் சித்தப்பாவின் மறைவு, என் மனைவியின் தந்தை… என் அருமை மாமனாரின் மறைவு என உள்ளத்தை உருக்கும் துயரமான நிகழ்வுகள் ஒரு புறம் …

    என் அருமை மைந்தனின் திருமணம், அதன் மூலம் மருமகளாக எமக்கு வாய்த்த ஒரு அன்பு மகள் என உள்ளத்தை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்லக்கூடிய மகிழ்வான கணங்கள் மற்றொருபுறம் …

    அப்பப்பா! இவ்வாழ்க்கை எனும் பயணத்தில் எத்தனையோ உணர்வுகளின் கூட்டும் நிகழ்வுகள்.

    ஆம், இது ஒரு மகிழ்ச்சியான பயணம்தான். இது எங்கே எவ்விதம் தொடங்கும் என்றோ, எங்கே எப்படி முடியும் என்றோ கணித்துக் கூறக்கூடியவர் எவருமே இல்லை எனலாம்.

    இத்தகைய வாழ்க்கையிலே அடுத்தொரு துயரமிகு செய்தியாக எனக்கு நேற்று ஒரு செய்தி காதுக்கு எட்டியது.

    ஆமாம் 83 வயதான எனது ஒன்று விட்ட சகோதரரின் மறைவு !

    என் தாயாரின் மூத்த சகோதரியின் தலைப்பிள்ளை மூத்த மைந்தன். எனது தாய்வழி உறவில் குடும்பத்தில் மூத்தவர் எனும் அந்தஸ்து பெற்றவர். நானோ அதே வழியில் அனைவர்க்கும் இளையவன் எனும் அந்தஸ்தைப் பெற்றவன்.

    எனக்கும் அவருக்கும் ஏறத்தாழ 24 வயதுகள் வித்தியாசம்.

    நான் குழந்தையாக இருந்த போதே அவர் லண்டனுக்கு மேற்படிப்புக்காகச் சென்று விட்டார்.

    எனக்கு அறிவில் முதிர்ச்சி ஏற்படும் வரை அவரைப் பற்றி பெயரளவிலேயே கேள்வியுற்றிருந்தேன்.

    பின்பு அவர் இலங்கைக்கு விடுமுறையில் வரும்போது தனது சித்தியான என் அன்னையிடம் அடிக்கடி வந்து விடுவார். என் அன்னையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.

    இலங்கையிலே எனது வாலிப வயதுகளை வீணாக்கி விட்டு ஏதாவது ஒரு வகையில் வாழ்வில் முன்னேற வேன்டும் என்பதற்காக தாய்மண்ணில் கல்வியைத் தொலைத்தவன் மேல்நாட்டில் அதைத்தேடி லண்டன் செல்ல முற்பட்ட வேளையது…

    அப்போது லண்டனில் மாணவனாக நுழைவதற்கு வேண்டிய தகமைகளில் ஒன்றாக லண்டனில் எமக்க்குத் தேவையான வசதிகளை நல்கி எம்மை வழிநடத்துவதற்கு ஒருவர் கடித மூலம் உறுதிமொழி கொடுக்க வேண்டும். அதை ஆங்கிலத்தில் “ஸ்பான்சர் லெட்டர் ” என்பார்கள்.

    லண்டனுக்கு வந்த பின்பு நாம் ஏதாவது ஏடாகூடமாகச் செய்து மாட்டிக் கொண்டால் அதற்கு அக்கடிதம் கொடுத்தவரே பொறுப்பாவார்..

    அதனால் பலர் இதற்குத் தயங்குவார்கள்.

    ஆனால் என் ஒன்று விட்ட அண்ணனிடம் எனது தேவையை எனது அன்னை தெரியப்படுத்தியதும் எதுவித தயக்க்கமுமின்றி உடனடியாக எனது தேவையைப் பூர்த்தி செய்தவர் அவர்.

    ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிலையில் எடுக்கும் ஒரு தீர்மானம் அவனை கீழ்நிலைக்குத் தள்ளும் அல்லது மேல்நிலைக்குக் கொண்டு செல்லும்.

    அத்தகையதோர் முக்கியமான சந்தியில் யார் எமக்குக் கை கொடுக்கிறார்களோ, எமது வாழ்க்கையின் மாற்றத்திற்கு முக்கிய காரணமானவர்களோ அவர்களை நாம் மறக்கக் கூடாது என்று என் தந்தை எனக்கு அடிக்கடி சொல்லும் ஒரு அறிவுரை எப்படியோ என் மனதில் தங்கி விட்டது.

    அதனால் லண்டன் வந்ததும் அவருக்கு நான் ஒவ்வொரு முறை எனது மாணவ விசா அனுமதி புதுப்பிக்கப்பட்டதும் தொலைபேசியில் நன்றி சொல்வதுண்டு.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவப் பெண்மணியே எனது அண்ணியாவார். என் அண்ணனுக்கேற்ற அருமையான பண்புகள் அனைத்தையும் அண்ணியும் கொண்டிருந்தார்.

    இலண்டன் மாணவ வாழ்க்கை என்பது நான் வந்த காலகட்டங்களில் மிகவும் சிரமான ஒன்று. கல்லூரிக்குச் சென்று படிப்பது மட்டுமன்றி எமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஒய்வுள்ள நேரங்கள் அனைத்தும் ஏதாவது ஓரிடத்தில் பகுதி நேர ஊழியம் செய்ய வேண்டியது அக்காலத்தின் கட்டாயம்.

    இது எனக்கு மட்டுமல்ல அக்காலகட்டத்தில் இங்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான என் தாய்நாட்டுச் சகோதர, சகோதரிகளுக்கும் உள்ளான நிலையே.

    அதனால் எனது அண்ணனுடனான தொலைபேசித் தொடர்பு கூட எப்போதாவது ஒருமுறைதான் நிகழும்.

    இந்நிலை மாறியது என் திருமணத்தின் பின்னால். நான் திருமணம் புரிந்ததும் அவருடன் ஒருநாள் பேசும் போது நான் அவருடன் தொடர்பு கொள்வது எப்போதாவது என்பது பற்றி மிகவும் கடிந்து கொண்டார்.

    அப்போதுதான் எனது போக்கின் தவறு புரிந்தது. அது மட்டுமல்ல அப்போது என் தவறை அழகாகச் சுட்டிக்காட்ட என் மனைவி என் கூட இருந்தது எனது புரிந்துணர்வை கூட்டியது.

    அதன் பின்னால் அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தேன். வைத்தியரான அவருடன் ஏதாவது வைத்திய சம்பந்தமான பிரச்சனை இருந்தால் கலந்துரையாடுவேன் மிகவும் அன்பாக அறிவுரைகள் வழங்குவார்.

    எல்லோருடனும் மிகவும் அன்பாகப் பழகும் சுபாவம் படைத்த என் மனைவியின் மீது என் அண்ணனும், அண்ணியும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

    இலண்டனில் தங்கியிருந்த என் பெற்றோர் உடல்நிலை தளர்ந்திருக்கும் வேளையில் தன்னால் முடிந்த வேளைகளில் அவர்களை வந்து பார்ப்பார்.

    என் மகன் டாக்டராகப் பட்டம் பெற்றதும் நானும் என் மனைவியும் அவனை அழைத்துச் சென்று அண்ணனிடமும், அண்ணியிடமும் ஆசீர்வாதம் பெற்றோம்.

    அப்போது தனது வைத்தியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த அவர் தன்னிடமிருந்த வைத்திய சம்பந்தமான நூலை என் மகனுக்குக் கொடுத்து ஒரு நல்ல டாக்டாராக பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை தனது நாற்பது வருடகால சேவையின் அனுபவங்களைக் கூறி விளக்கியது இன்னும் என் மனதில் நிலை கொண்டுள்ளது.

    சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னனதாக தனது மனைவியை புற்றுநோய்க்கு பலி கொடுத்த அவரின் உடல்நிலை அதன் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைந்து வந்தது.

    எப்போதும் தானே தனது தேவைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் இங்கிலாந்தில் ரெடிங் எனும் இடத்திலுள்ள வைத்தியசாலையில் இறைபதமடைந்தார்.

    அவரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.

     

    அன்புச் சகோதரனே !
    சக உதிரத்தில் உதிக்கவில்லை
    சகோதரனாக மிளிர்ந்தாய்
    என் வாழ்க்கைத் தோட்டத்தில்
    மலர்ந்த செடிகளுக்கு நீயும்
    நீர் வார்த்திருக்கிறாய் என்பதுவே
    யதார்த்தமான உண்மை
    உண்மை, உழைப்பு, நேர்மை
    எனும் பொறுப்பான ஆயுதங்களுடன்
    வாழ்க்கை எனும் களத்தில்
    அகவைகள் எண்பத்து மூன்று
    ஆற்றியது ஒரு போராட்டமே
    மூத்தவனாய் நீ சென்ற
    அடிகளில் தொடர்ந்து
    இளையவன் நானும் செல்ல
    தொடர்ந்து ஆசிகள் அளிப்பாய்
    ஞானமாய் உதித்த உன் சொற்கள்
    ஞானேஸ்வரன் உனை எனக்கு என்றும்
    ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும்
    வைத்தியனாய் நீ ஆற்றிய தொண்டு
    வையத்தில் தமிழனாய் உனை என்றும்
    தலைநிமிர்த்தி வைக்கும்
    என் அன்பு ஞானேஸ் அண்ணா
    என்றும் எப்போது நல்லறிவு வேண்டுமெனில்
    உன்னுடன் ஒரு உரையாடல் போதுமே !
    உள்ளத்தில் அமைதி பொங்குமே !
    அன்னம்மா ! அன்னம்மா என்றெனது அன்னையை
    உன் சிற்றன்னையை அன்புடன் நீ விளிக்கும்
    சொற்களை இனி எப்போது
    என் செவி மடுக்கும்?
    வந்தவர் எல்லாம் செல்வது நியதி
    இருப்பினும் சிலரின் இழப்பு
    நெஞ்சினில் நீங்காத வடுவை
    நீக்கமற நிறுத்தி விடும்.
    அவர்களில் என் அண்ணா
    நீயும் ஒருவனென்பேன்.
    உன் ஆத்மசாந்திக்காய்
    கண்ணீர் அஞ்சலிகளோடு. . . .

    tear

    என் இனிய உறவுகள் உள்ளத்தை உருக்கும் துயரத்தை இம்மடல் வாயிலாக உங்கள் முன்றலில் இறக்கி வைத்து இளைப்பாற சந்தர்ப்பமளித்த உங்களுக்கும் என் இனிய வல்லமை ஆசிரியர் குழுவிற்கும் எனது பணிவன்புடன் கூடிய தாழ்மையான நன்றிகள்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(149)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள்.

    அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடி வந்து விட்ட அடுத்ததொரு வாரம், கைவிரல்களின் அசைவினால் உள்ளத்தின் உணர்வுகளை மடல் மூலம் கொட்டித் தீர்க்கும் அவா. ஆமாம் இவ்வார மடலுடன் மீண்டும் உங்களோடு உறவாடுகிறேன்.

    கடந்தவாரம் இங்கிலாந்திலே ஒரு முக்கியமான வாரம். ஆமாம், தேர்தலும் அதன் முடிவின் படி இனிவரும் ஐந்து வருட காலத்திற்கு யார் இந்த இங்கிலாந்தில் அரசாட்சி எனும் தேரை ஓட்டிச் செல்லப் போகிறார்கள் என்னும் கேள்விக்கு விடை பகிறப்பட்ட வாரம்.

    சுருக்கமாகச் சொன்னால் இங்கிலாந்து பாராளுமன்றத்திலே 650 பாரளுமன்ற உறுப்பினர்கள். இங்கிலாந்து சட்ட விதிகளின் படி ஒரு கட்சிக்கு அரசமைக்கும் உரிமை அது தேர்தலில் 326 ஆசனங்களைக் கைப்பற்றினால் தான் கிடைக்கிறது.

    கடந்த தேர்தலில் இங்கிலாந்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியோ அன்றி லேபர் கட்சியோ இந்த 326 ஆசங்கள் எனும் பலத்தை பெற்றிருக்கவில்லை. விளைவு கூட்டரசாங்கம் அமைப்பதன் மூலம் தான் இந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சி அமைக்கக்கூடிய நிலமை இருந்தது.

    இவற்றில் கன்சர்வேடிவ் கட்சிதான் அதிக இடங்களைப் பெற்றிருந்தது எனவே மூன்றாவதாக 50 க்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி இருந்த லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியுடன் இணைந்து கன்சர்வேடிவ் கட்சி கூட்டரசாங்கம் அமைத்தது. டேவிட் கேமரன் பிரதம மந்திரியானர். லிபரல் டெமாக்கிரட்ஸ் தலைவரான நிக் கிளேஹ் பிரதிப் பிரதமரானார்.

    அது பழையகதை சரி இனி இந்த 2015 புதுக்கதைக்கு வருவோம் …

    தேர்தல் தினமான மே 7ம் தேதி வரை எடுக்கப்பட்ட பொதுக் கருத்துக் கணிப்புகள், மற்றும் ஊடகங்கள், பிரபல அரசியல் அவதானிகள் அனைவருமே இத்தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் இம்முறையும் நிச்சயம் கூட்டரசாங்கம் தான் அமையும் என்று அடித்துக் கூறினர். சரி கூட்டரசாங்கம் எனில் யார் யாருடன் கூட்டரசாங்கம் அமைக்கப் போகிறார்கள் எனும் கேள்வி அனைவருடைய மனங்களிலும் தொக்கியிருந்தது.

    பிரதான கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தான் பெரும்பான்மை பலமிக்க கட்சிகளாகும் இவர்களுடன் யார் சேரப் போகிறார்கள்?

    அடுத்து அனைவருக்கும் தெரிந்த நிதர்சனமான உண்மை இதுநாள்வரை லேபர் கட்சியின் கோட்டையாக விளங்கிய ஸ்காட்லாந்து இம்முறை முற்று முழுவதுமாக ஸ்காட்லாந்துக்கு தனிநாடு கோரி நிற்கும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் வசமாகி விடும் என்பதே!

    அக்கட்சியின் தலைவரோ திரும்பத் திரும்ப இனியும் இங்கிலாந்தில் டேவிட் கேமரன் ஆட்சி அமைய விடக்கூடாது நாம் லேபர் கட்சியுடன் இணைந்து அரசமைப்போம் என்று பகிரங்கமாகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.

    அடித்தது அதிர்ஷ்டம் கன்சர்வேடிவ் கட்சிக்கு, பிடித்துக் கொண்டது தன் வாதத்தை. “மக்களே நீங்கள் லேபர் கட்சிக்கு வாக்களித்தால் பின் வாசல் வழியே ஸ்காட்லாந்து தேசிய கட்சியை அரச கதிரையில் அமர்த்திவிடுவீர்கள். லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் ஸ்காட்லாந்து தேசியவாதிகளின் கைப்பாவையாகி விடுவார் விளைவு ஐக்கிய இராச்சியம் துண்டாடப்பட்டு விடும்” என்பதைத் தாரக மந்திரமாக்கி அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தமக்குச் சாதகமான ஊடகங்களிலும் ஊதத் தொடங்கினார்கள்.

    ஏற்கனவே ஸ்காட்லாந்து பிரிந்து போவதற்கான பொதுஜன வாக்கெடுப்பு நடந்ததால் குழம்பிப் போயிருந்த மக்கள் மனதில் பீதி உருவாகத் தொடங்கியது. கன்சர்வேடிவ் கட்சியுடன் கூட்டரசாங்கம் அமைத்ததால் ஏற்கனவே தமது செல்வாக்கை முற்றாக இழந்திருந்தனர் லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியினர்.

    யூகிப் எனும் இங்கிலாந்து விடுதலைக் கட்சியினருக்கு வாக்களித்தால் மீண்டும் டேவிட் கேமரனின் ஆட்சி அமையும். பொதுநலத்துறைகளின் மீதான நிதிக்குறைப்பின் மூலம் அடிமட்டத் தொழிலாளர்களே பாதிக்கப் படுவார்கள். கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் முதலாளிகள் தமது பணப்பலத்தைப் பெருக்கிக் கொள்வார்கள்.

    இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் நிறுவனங்களுக்கு விலை போய்விடும் போன்ற வாதங்களை லேபர் கட்சியினர் முன் வைத்தனர். அதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை முற்று முழுதாகச் சிதைத்தவர்கள் பழைய லேபர் கட்சியினரே, நாட்டின் பொருளாதாரம் சீராகி வரும் வேளையில் மீண்டும் லேபர் கட்சியிடம் பொறுப்பைக் கொடுத்து நாட்டின் வளர்ச்சியைப் பின் தள்ளப் போகிறீர்களா ? என்றனர் கன்சர்வேடிவ் கட்சியினர்.

    யூகிப் எனும் கட்சியினரின் ஆதரவுப் பெருக்கத்துக்குக் காரணம் மக்களுக்கு ஐரோப்பிய யூனியனின் மீது இருந்த சந்தேகமே. இச்சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் குடியேறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. இவ்வதிகரிப்பு மக்கள் மனதில் நியாயமானதொரு பீதியைக் கிளப்பி விட்டிருந்தது. இப்படியான சூழல்களுக்கு மத்தியில் ஒருவாறு மே 7ம் திகதி தேர்தல் நடந்து முடிந்தது.

    முடிவு!!!

    யாருமே எதிர்பார்க்காத வகையில் டேவிட் கேமரனின் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 332 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கத்தையமைத்து விட்டது. பொதுக்கருத்துக் கணிப்பு நிறுவனங்கள், அரசியல் அவதானிகள், ஊடகங்கள் அனைவரின் முகங்களிலும் அளவற்ற அசடு வழிந்தது.

    லேபர் கட்சி எதிர்பார்ப்புகளுக்கு முற்றும் மாறாக மோசமான தோல்வியைத் தழுவியது.

    லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த பாராளுமன்றத்தில் 50 க்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில் இத்தேர்தலில் எட்டே எட்டு ஆசனங்களை மட்டுமே கைப்பற்றி படு தோல்வியடைந்தது. இக்கட்சியின் பல முன்னணித் தலைவர்கள் தோல்வியடைந்தனர்.

    ஸ்காட்லாந்து தேசிய கட்சியினர் அங்கு போட்டியிட்ட 59 ஆசனங்களில் 56 ஆசனங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டினர்.

    யூகிப் எனும் கட்சியினர் எதிர்பார்ப்புக்கு முரணாக ஒரேயொரு ஆசனத்தை மட்டும் கைப்பற்றினர்.

    விளைவு !!!

    2015ம் ஆண்டு இங்கிலாந்துத் தேர்தல் மூன்று கட்சித் தலைவர்களைக் காவு கொண்டு விட்டது. ஆமாம் லேபர் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் , லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சித் தலைவர் நிக் கிளெஹ் , யூகிப் தலைவர் நைஜல் ப்ராஜ் ஆகிய மூவரும் சடுதியாக தாம் தமது கட்சியின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்தார்கள்.

    சரி அரசியல் அறிவில் பூஜ்ஜியமான இந்தப் பாமரனின் கணிப்பில் இத்தேர்தல் முடிவுகளின் காரணம் ?

    2015-1கன்சர்சேடிவ் கட்சியின் வெற்றிக்கு …
    இவர்கள் தமது தேர்தல் பிரசாரத்தை மிகவும் புத்திசாலித்தனமாக முன்னெடுத்தார்கள்
    லேபர் கட்சியினர் அரசமைக்க ஒரேவழி ஸ்காட்லாந்து பிரிவினைவாதிகளுடன் சேர்ந்த கூட்டரசாங்கமே எனும் வாதத்தில் வெற்றி கண்டார்கள்
    அதிர்ஷ்டவசமாக இங்கிலாந்தின் பொருளாதாரச் சூழல் தேர்தல் சமயத்தில் இவர்களுக்கு ஆதரவாக இருந்தமை

    லேபர் கட்சியின் தோல்விக்கு …
    இக்கட்சியின் தலைவரான எட் மில்லிபாண்ட் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை
    இக்கட்சி தன்னை இடதுசாரிக் கொள்கைகளின் வழி இழுத்துச் சென்றமை
    இக்கட்சி சிறு தொழில் செய்வோரையும், நாட்டில் செல்வத்தை ஈட்டும் தொழிலதிபர்களையும் எதிர்ப்பது போன்றதோர் உணர்வை எழுப்பியமை.
    ஸ்காட்லாந்தில் கடந்த தேர்தலில் முப்பதுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றிய இவர்கள் இப்போது ஒரு ஆசனத்தைக் கைப்பற்றுவது கூட சந்தேகம் எனும் எண்ணம் மக்களிடையே வலுப்பெற்றது

    2015-2லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியின் தோல்விக்கு …
    கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாணவர்கள் சர்வகலாசாலை செல்கையில் செலுத்தும் கட்டணத்தை அறவே ஒழிப்பது என்று அறிவித்து விட்டு பின்பு கூட்டரசாங்கத்தில் இணைந்ததும் அதை அப்படியே கைவிட்டதும்
    அடிப்படையில் இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்த இவர்கள் 2010 தேர்தலின் பின்னால் முழு வலதுசாரிகளான கன்சர்வேடிவ் கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்தது இவர்களின் பல ஆதரவாளர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.
    இவர்களது பிரசாரத்தில் கடந்த கூட்டரசாங்கத்தின் வெற்றி பெற்ற நடவடிக்கைகளில் தங்களுக்குரிய பங்கைச் சரிவர மக்களுக்கு விளக்காமல் விட்டது.

    ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் வெற்றி அனைவரும் எதிர்பார்த்தது போலவே மைந்தது. கடந்த வருடம் நடைபெற்ற ஸ்காட்லாந்து பிரிந்து போவதற்கான பொதுஜன வாக்கெடுப்பு ஸ்காட்லாந்து மக்களிடையே தேசியவாத உணர்ச்சியை உசுப்பி விட்டதே இவர்களது அதீத வளர்ச்சிக்குக் காரணம் எனலாம்.

    யூகிப் எனும் கட்சியின் நிலை அவர்களுக்கு ஓரளவு வெற்றி என்றுதான் கூற வேண்டும். ஒரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்றி இருந்தாலும் நாடளாவிய ரீதியில் ஏறத்தாழ இவர்களுக்கு நான்கு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

    2015-3இது இப்போது ஒரு புது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.

    இரண்டு இலட்சத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற ஸ்காட்லாந்து தேசிய கட்சி 56 ஆசனங்களைப் பெற்றுள்ளன, ஆனால் அதேநேரம் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற யூகிப் ஒரேயொரு ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளது. இது பலரை விகிதாசார முறையில் ஆசனங்கள் பிரித்தளிக்கப்பட வேண்டும் எனும் கோஷத்தை முன்வைக்கப் பண்ணியுள்ளது.

    அடுத்து வரும் ஐந்து வருட காலங்கள் நம் பிரதமர் டேவிட் கேமரன் எமை எங்கே கொண்டு செல்லப்போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமோ ?

    “மக்கள் குரலே மகேசன் குரல் ” எனும் கோட்பாட்டை பல அரசியல்வாதிகள் மறந்து போய்விடுகிறார்களோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(148)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இங்கிலாந்தில் தேர்தல் நடக்கும் இவ்வாரத்திலே இம்மடல் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    ஒவ்வொருநாடும் அந்நாட்டிலுள்ள மக்களை உள்ளடக்கிய சமூகங்களினாலும், சமுதாயங்களினாலும் ஆக்கப்பட்டுள்ளன.

    அந்நாட்டின் கலாச்சார வழமைகள் அந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் பின்னனியில் காலமாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.

    இந்தச் சமூகங்களும், சமுதாயங்களும் எவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன? சமுதாய அங்கத்தினர்கள் ஏதோ தனியாக, விசேடமாக படைக்கப்பட்டவர்களா ?

    அன்றி நாட்டினை ஆளும் அரசியல்வாதிகளும் மற்றைய அரசியல் அங்கத்தினர்களும் ஏதோ அதற்கெனவே பயிற்றுவிக்கப்பட்டவர்களா?

    இல்லை. சமுதாயம் என்பது சாதரண மக்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பே ! அதேபோல அரசியல்வாதிகள் என்போரும் அச்சமுதாயத்திலிருந்து நாட்டினில் மாற்றங்களை ஏற்படுத்தி மக்களின் வாழ்வை முன்னேற்றும் பொதுநலநோக்கம் கொண்ட சாதாரண மக்களே !

    சமீபத்தில் நான் எதிர்கொண்ட ஒரு நிகழ்வு என் மனதில் பல சிந்தனைத்துளிகளுக்கு வித்திட்டது.

    சில நாட்களுக்கு முன்னால் எமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள அங்காடி ஒன்றில் சில பொருட்களை வாங்கச் சென்ற என் மனைவியை அவ்வங்காடியின் முன்னால் இறக்கி விட்டு விட்டு நான் காரினுள் உட்கார்ந்திருந்தேன்.

    அந்த அங்காடியின் முன்னே ஒரு நாலு அல்லது ஐந்து கார்களை நிறுத்துவதற்கான வசதியே இருந்தது. என்னுடைய காரை நிறுத்தியதும் வேறு கார்களை நிறுத்த இடமிருக்கவில்லை.

    அப்போது ஒரு புத்தம் புதிய பென்ஸ் காரொன்று அக்கார்கள் நிறுத்தியிருந்த இடத்தின் முன்னே வந்து நின்றது.

    அக்காரை நிறுத்த அங்கே இடமில்லாததினால் அக்கார் எமது கார்களுக்கு முன்னால் நின்றிருந்தது. அதன் முன் இருக்கைகளில் இரண்டு ஆங்கிலேயப் பெண்மணிகள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் கார்ச்சாரதி.

    அக்காரின் பின்கதவு திறந்து அதிலிருந்து ஒரு வயதான ஆங்கிலேய மனிதர் இறங்கி அந்த அங்காடியினுள் நுழைந்தார்.

    அவ்விரு பெண்களும் முப்பதுகளின் நடுப்பகுதியில் இருப்பார்கள் என்பது என் அனுமானம்.

    throwing rubbish 2கார்ச்சாரதியான பெண்மணியின் ஜன்னல் திறந்தது … அக்காரினுள் அப்பெண் வைத்திருந்த குப்பைகளைச் சேகரித்து அந்த ஜன்னல் வழியாக வெளியே எறிந்தார்.

    அவரின் செய்கையை ரசித்த அவர் அருகே இருந்த பெண்மணி பலமாகச் சிரித்தார்.

    அவர்கள் அக்குப்பைகளை எறிந்த இடம் ஒரு ஒதுக்குப்புறமான இடமோ அன்றி ஒரு குப்பை கொட்டும் இடமோ அல்ல.

    அது அந்த அங்காடிக்குச் சொந்தமான மிகவும் சுத்தமாக பொதுமக்கள் பாவனை செய்யும் ஒரு இடம்.

    அதைச் செய்தவர்களோ வாழ்க்கையின் நடுத்தர வர்க்கமல்ல சமுதாயத்தில் மேல்மட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் வந்திருந்த காரிலிருந்து அவர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்களில் இருந்தும் தெளிவாகத் தெரிந்தது.

    இச்செயலை எனது காரில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் பலவகையான எண்ணங்கள் ஓடின.

    நாம் நட்புடன் சம்பாஷிக்கும் பல ஆங்கிலேய நண்பர்களிடம் தற்போதைய இங்கிலாந்து மிகவும் மோசமடைந்து விட்டது எனும் ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது.

    இந்நிலைக்குக் காரணம் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குக் குடியேறும் வெளிநாட்டவரே காரணம் எனும் கருத்தும் அநேகரிடம் உண்டு.

    ஆனால் அன்று என் கண்முன்னே ஒரு அநாகரிகமான செயலைச் செய்தவர்கள் ஆங்கிலேயப் பெண்மணிகளே !

    அதுவும் சமுதாயத்தில் பெரிய இடத்தில் இருப்பவர்கள்.

    இதற்குக் காரணம் தான் என்ன ? நாம் அனைவரும் இச்சமுதாயத்தின் ஒரு அங்கம். இங்கு நடக்கும் அனைத்திலும் எமக்கும் பாரிய பங்குண்டு எனும் அடிப்படைக் கருத்து அவர்கள் மனதை விட்டு அகன்றததினாலா .

    throwing rubbish 1இல்லை, அட … எல்லோரும்தான் குப்பை போடுகிறார்களே நாம் போட்டு விட்டால் மட்டும் என்ன குறைந்து போய்விடும் எனும் எண்ணமா ?

    ஒரு நாட்டின் கலாச்சாரச் சீரழிவிற்கு அந்நாட்டின் அரசியல்வாதிகள் மட்டும் காரணமில்லை. சுயநலப் போக்குக் கொண்ட அனைத்து மக்களுமே காரணமாகிறார்கள்.

    நாம் மேற்கோள் காட்டிய நிகழ்வு ஒரு சிறிய நிகழ்வே ! அட இதைப்போய் பெரிதாய் சொல்ல வந்து விட்டாயே என்று கூட நீங்கள் எண்ணலாம்.

    ஒரு சோற்றுக்கு ஒரு பதம் என்பார்கள். இச்சிறிய நிகழ்வின் அடிப்படை இந்நாட்டில் நடக்கும் பல பெரிய நிகழ்வுகளை விளக்கும் வல்லமை கொண்டது.

    நான் 40 வருடங்களுக்கு முன்னால் கண்ட இங்கிலாந்திற்கும் இன்றைய இங்கிலாந்திற்கும் என்ன வேறுபாடு என்று எண்ணும் போது வாழ்க்கையில் அடிப்படிப் பண்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் தன்மையில் காணப்படும் வேறுபாடே காரணம் எனும் உண்மை புரிகிறது.

    எமது நடவடிக்கைகளுக்கு நாம் உத்தரவாதம் கொடுக்க முடியாத நிலையில் அரசியல்வாதிகளை குறைகூறுவதில் என்ன பலன் ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(147)

    சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே !

    பணிவான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் உங்கள் முன்னே மீண்டும் ஒரு வாரம் மனந்திறப்பதில் மகிழ்கிறேன்.

    “அரசியலை வெறுக்கிறேன் ” , “அரசியல்வாதிகளை கண்களில் காட்டவே கூடாது ” இப்படியான பல வாதங்களை நாம் பல இடங்களிலே கேட்டிருப்போம்.

    அரசியல் என்பது எமக்கு அப்பாற்பட்டதா ? நாம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறோம் எனும் எண்ணங்களோடு வாழ்ந்தாலும் அரசியல் எம்மை விட்டு ஒதுங்கி விடுமா?

    இல்லை அதுதான் சாத்தியமா ?

    நாம் அனைவரும் துறவிகளல்ல, நாம் வாழ்வின் அத்தனை ஆசாபாசங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வாழ்பவர்களல்ல. சாதாரண மனிதர்களின் ஆசாபாசங்களின் அடிப்படையிலேயே உலகின் பொருளாதாராம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    நாம் விரும்பியோ விரும்பாமலோ நாமனைவரும் ஏதோ ஒருவகையில் அரசியலில் சம்பந்தப்பட்டிருக்கிறோம். அதாவது ஜனநாயகத் தேர்தல் நடைமுறையிலிருக்கும் எந்தவொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதனும் தனது வாக்குரிமையால் அந்நாட்டின் அரசியலை மாற்றியமைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளான் என்பதுவே உண்மை.

    ஆனால் நாட்டின் நடப்புகளையும் அரசியல்வாதிகளின் செய்கைகளையும் கண்டு மனதில் தோன்றும் விரக்தியினால் நாம் வாக்களிக்கக் கூடாது எனும் முடிவுக்கோ அன்றி எமது ஒரு வாக்கினால் நாட்டில் அப்படி என்ன பெரிய மாறுதல் வந்துவிடப்போகிறது ? எனும் எண்ணத்தில் எம்மில் பலர் வாக்களிக்காமல் இருந்துவிடும் நிலைகளும் உண்டு.

    நாம் வாக்களித்தால் அப்படி என்ன நடந்து விடப் போகிறது ? என்று எண்ணுவது போல நாம் வாக்களிக்காமல் இருந்து விட்டால் மட்டும் ஏதோ பெரிய மாறுதல் வந்து விடப்போகிறதா ? என்றும் எண்ணலாம் அல்லவா ?

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஜாதி, மத, இன வேறுபாடுகளின்றி அந்நாட்டின் அரசியலமைப்பை மாற்றி அமைக்கக்கூடிய அதிகாரம் கொண்ட வாக்குரிமை வேண்டும் என்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தோர் அனேகம் பேர்.

    அவ்வதிகாரம் கையிலிருந்து அதை உபயோகிக்காமல் வீணடிப்போரும் பலர் உண்டு.

    election15.1எதற்காக இந்த அலசல் என்று நீங்கள் கேட்கலாம். இது இங்கிலாந்தில் தேர்தல் காலம். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்நாடு போகப்போகும் திசையைத் தீர்மானிக்கும் தேர்தல் இடம்பெறப் போகிறது.

    யார் அதிகார நாற்காலியில் உட்காரப் போகிறார்கள் என்பதில் பெரிதாக எவ்விதமான மாற்றமும் வந்து விடப் போவதில்லை.

    வழமை போல கன்சர்வ்வேடிவ் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான டேவிட் காமரனோ அன்றி எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவரான எட் மில்லிபாண்ட் அவர்களோ தான் பிரதமர் எனும் அந்தஸ்தைப் பெறப் போகிறார்கள்.

    election15.3கடந்த தேர்தலில் அரிதிப் பெரும்பான்மை பெற முடியாததினால் லிபரல் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்தார் டேவிட் காமரன்.

    இம்முறையும் தேர்தல் மிகவும் சுவாரஸ்யமாயிருக்கிறது. ஏனெனில் பொதுக் கருத்துக்கணிப்புகளின் படியும் , பிரபலமான அரசியல் அவதானிகளின் படியும் இந்த இரு பெரிய கட்சிகளில் இரண்டும் அரிதிப் பெரும்பான்மை பெறுவது கடினம் எனும் கருத்து முன் வைக்கப்படுகிறது.

    அப்படியாயின் அவ்விரு கட்சிகளும் கூட்டரசாங்கம் அமைக்கும் முயற்சிகளில் எவை அதிக ஆசனங்களைப் பெறும் முயற்சியில் வெற்றி பெறுகிறதோ அதுதான் அரசமைக்க முடியும்.

    இப்போது அரசிலிருக்கும் கன்சர்வ்வேடிவ் கட்சி யூகிப் , யூடிஎப் , லிபரல், டெமாகிரட்ஸ் எனும் கட்சிகளைத் தான் நாட முடியும்.

    election15.4அதே போல லேபர் கட்சி எஸ்என்பி , கிரீன் , லிபரல் டெமாகிரட்ஸ் எனும் கட்சிகளைத்தான் நாட முடியும்.

    லேபர் கட்சிக்கு இப்போது ஒரு புதுப் பிரச்சனை முளைத்துள்ளது. ஒவ்வொருமுறையும் தேர்தலில் ஸ்காட்லாந்தில் ஏறத்தாழ முப்பதிற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறு லேபர் கட்சி இம்முறை அங்கு ஒரு இடத்தில் வெற்றி பெறுவது கூடச் சந்தேகம் என்கிறார்கள்.

    காரணம் என்ன ?

    கடந்த வருடம் மிகவும் அமோகமாகப் பேசப்பட்ட ஸ்காட்லாந்து நாடு பிரிவதற்கான பொதுஜன வாக்கெடுப்பு நடந்தது அனைவரும் அறிந்ததே. இவ்வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்தில் மாநில அரசில் அதிகாரத்திலிருக்கும் எஸ்என்பிபி (SNP) எனும் கட்சி பிரிவினைவாதத்தில் மிகவும் குறைந்த வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

    விளைவு !

    election15.2அவர்களுக்கு ஸ்காட்லாந்து பகுதியில் இருந்த செல்வாக்கு பன்மடங்கு பெருகியது அதன் விளைவாக இதுவரை ஸ்காட்லாந்து நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த லேபர் கட்சி தனது செல்வாக்கை பலமாக இழந்துள்ளது.

    இந்நிலையில் கூட்டரசாங்கம் அமைப்பதுதான் லேபர் கட்சியின் முன்னால் உள்ள ஒரே ஒரு தீர்வு. ஆனால் அவர்கள் எஸ்என்பி எனும் கட்சியுடன் கூட்டு வைத்தால் அவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் பிரிவிற்கு அடிக்கல் நாட்டுகிறார்கள் என்று வாதிடுகிறார்கள் மற்றக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

    தாங்கள் ஒருபோதும் அக்கட்சியுடன் கூட்டுச் சேர மாட்டோம் என்கிறார் லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் . . . . .

    நம்பாதீர்கள் . . . . என்று ஒலிக்கிறது பல குரல்கள்.

    இந்நிலையில் எம் கைகளில் இருக்கும் வாக்குகளை நாம் வீணடிப்பது நாம் வாழும் நாட்டிற்கு நாம் செய்யும் துரோகமாகாதா ?

    நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரே வாக்காக நமது வாக்கு இல்லா விட்டாலும் பல வாக்குகளில் ஒன்றாக இருந்தோம் எனும் நிம்மதி கிடைக்குமல்லவா ?

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(146)

    –சக்தி சக்திதாசன்.   

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    மூன்று வாரங்களின் பின்னே இம்மடல் வழியாக உங்களைச் சந்திப்பதில் ஆறுதல் அடைகின்றேன்.

    எதற்கிந்த இடைவேளை? எனும் எண்ணம் உங்களுக்கு ஏற்படலாம் காரணம் இருக்கிறது .

    எனது மனைவியின் தந்தை, எனது மாமனார் தனது 87வது வயதில் சென்னையில் ஏப்ரல் மாதம் 2ம் திகதி காலமானார்.

    அவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்று கடந்த ஞாயிறு காலை லண்டன் திரும்பினோம்.

    ஏ. எஸ். ராமஸ்வாமி ஐயர் !

    ஆமாம் அவர் தான் எனது மாமனார்… இல்லை… எனது தந்தையின் மறைவின் பின்னால் எனது தந்தை எனும் ஸ்தானத்தில்இருந்தவர்.

    தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி எனும் ஊரில் 1927ம் ஆண்டு சுப்பிரமணியம் ஐயருக்கும், அம்மாளு அம்மாளுக்கும் மூத்த மைந்தனாகப் பிறந்தார்.

    அந்நாளில் தங்கப்பதக்கம் பெற்று சட்ட வல்லுநராகத் தேறி அரசாங்கப் பணிபுரிந்த சுப்பிரமணி ஐயரின் மறைவுக்குப்பின்னால் தனது தம்பியுடன் தாயாரின் ஊரான கடையநல்லூரில் அமைந்துள்ள கிருஸ்ணாபுரத்தில் வாழ்ந்து வந்தார்.

    வாழ்வில் பல சிரமங்களுக்கு ஊடாக, தனது விடாமுயற்சியாலும் தாயாரின் அன்பான வழிகாட்டுதலினாலும் கல்வியில்தேர்ச்சி பெற்று இந்திய வெளிநாட்டுச் சேவையான Indian Foreign Service இல் பணியாற்றினார்.

    பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த இவர் இந்திய வெளிநாட்டுத் தூதரகங்கள் பலவற்றில் உயர்அதிகாரியாகப் பணியாற்றினார்.

    1987ம் ஆண்டு தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1994ம் ஆண்டு தனது மனைவியைப் பறிகொடுத்தார்.

    தனது அந்திமக்காலம் வரை தனது கால்களிலேயே நிற்க வேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தை கொண்டிருந்தார்.

    எனது எழுத்துக்களை மிகவும் விரும்பிப் படிக்கும் அவரின் வேண்டுகோள் எனது படைப்பான தமிழ்ப்பூங்கா எப்போதும்வெளிவரவேண்டும் என்பதுவே.
    எனது நூல்களில் ஒன்றான “கண்ணதாசன் ஒரு காவியம் ” வெளியீட்டின் போது என்னால் பங்குபெற முடியாத போது எனதுசார்பாக அவ்விழாவில் கலந்து கொண்டு மறைந்த அமரர் கே . பி. பாலச்சந்தர் அவர்களிடமிருந்து அந்நூலைப் பெற்றுச்சிறப்பித்தார்.

    பொறுமைக்கு ஒரு முழு உதாரணமாகத் திகழ்ந்தவர் எனது மாமனார். நான் அவரது மகளைக் கைப்பிடித்த நாளிலிருந்துஅவர் மறைந்த காலம் வரை எமக்கிருவரிடையே இருந்த அன்பில் எப்போதுமே மாசு படிந்ததில்லை.

    இதனை அவர் மறைவதற்கு சிலநாட்களுக்கு முன்னால் தொலைபேசியில் அவர் என்னிடம் கூறியபோது என்னையறியாமல் என் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது.

    தன் தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவள் என் மனைவி மைதிலி. ஒவ்வொரு வருடமும் இங்கிலாந்திலிருந்து மூன்றுவார கால விடுமுறையில் ஓடோடிச் சென்று தன் தந்தைக்கு தன் கைகளினால் அவருக்குப்பிடித்தவற்றை ஆக்கிக் கொடுப்பதையே தனது முக்கிய பணியாகக் கொண்டிருந்தாள்.

    இம்முறையும் கடந்த ஜனவரி மாதம் எனது மாமனாருடன் ஒரு மூன்று வார காலம் மிகவும் மகிழ்வாகக் களித்திருந்தோம்.

    தெய்வத்துடன் இணைந்து விட்ட பொறுமைத் திலகமாம் என் மானாரின் ஆத்மசாந்திக்காய் பிரார்த்திப்பதோடு அவரின்அன்பான ஆசியுடன் வழிகாட்டுதலும் தொடர்ந்து எனக்குக் கிடைக்க வேண்டும் என அவர்தம் பாதம் பணிந்துவேண்டுகிறேன்.

    20150421_183546(0)

    பொறுமைக்கு உதாரணமாய் திகழ்ந்த
    புண்ணிய சீலனாம் அயோத்தியின்
    இராமபிரானின் வழியில்
    பொறுமையின் பெருமையைக் காத்த
    இராமஸ்வாமியின் மருமகனாய்
    கிடைத்திட்ட பாக்கியத்தை நானும்
    கிளர்ந்திட்ட உணர்வுகளின் வழி
    உணர்ந்திட்ட பொழுதென்று அறிந்தேன்
    புலர்ந்திட்ட நாட்கள் அனைத்தும்
    புகட்டிட்ட பாடங்கள் எல்லாம்
    புகுத்திட்ட அனுபவங்கள் எனக்கு
    கற்பித்த பாடங்கள் ஆயிரம்
    தெரிந்திட்ட நிகழ்வுகளில் நானும்
    தெளிந்திட்ட பொழுதில் எல்லாம்
    மறைந்திட்ட என் மாமனார் மூலம்
    மனதினில் உறைந்திட்ட அறிவு ஆயிரம்
    எதையும் தாங்கிடும் இதயம் என்பார்
    அதையும் வாழ்வில் நான் கண்டிட்டது
    இருவராம் என் தந்தையும் மாமனாரும்
    தந்தை எனும் ஒளி வாழ்வில் மறைந்து
    இருளான மனம் மீண்டும் ஒளி கொண்டது
    மாமனார் எனும் பெரு ஒளிவிளக்கினால்
    இன்றதுவும் அணைந்தது என்று நான்
    மயங்கிய பொழுது எங்கிருந்தோ அசரீரியாய்
    எப்போதும் என்றும் உன் மனதில் ஒளியாய்
    நாமிருப்போம் என்று இருகுரல் ஒலியாய்
    மாமனாரும் தந்தையும் கூறினரே
    அன்பினுமினிய மாமனாரின் பாதம் பணிந்து
    ஆசி வேண்டியே அவரின் ஆத்மசாந்திக்காய்
    பிரார்த்திக்கிறேன்.

     

     

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(145)

    சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே!
    இனிய வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    சில வருடங்களுக்கு முன்னால் நடந்து முடிந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளையே மறந்து ஓடிவிடும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    வாழ்க்கையின் சிக்கல்கள் பல கோணத்தில் நம்மைச் சூழ்ந்து கொண்டு இருக்கின்றன. அடுத்தவேளை உணவுக்காக அல்லல் படும் சமூகங்களை இப்போதும் அகிலத்தில் காண்கிறோம்.

    ஆனால் ஒருநாடு தன் சுயத்தை இழந்து விடாதிருப்பது எப்படி? அது தன் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வது எப்படி?

    இக்கேள்விகளுக்கான விடை இங்கிலாந்தில் நடைபெறும் பல நிகழ்வுகளில் கண்கூடு. தமது கலாச்சார அடையாளங்களைப் பேணுவதை இந்நாட்டு மக்கள் மிகவும் முக்கியமானதொன்றாகக் கருதுகிறார்கள்.

    மக்களின் பெரும்பான்மையான அபிலாஷைகளை உள்வாங்கிக் கொள்ளும் அரசாங்கங்களும் இத்தகைய கலாச்சார அடையாளங்களை, காலாச்சார விழுமியங்களைப் பேணுவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தொகையை ஒதுக்குகிறார்கள்.

    சரித்திரத்தை ஒதுக்கி விட்டு மனிதர்களால் வாழ்ந்து முடிந்து விட முடியாது அச்சரித்திரம் ஏதாவது ஒரு சந்தியில் அவர்களின் முன்னே வந்து அவர்களிடம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்.

    சரி எனது இந்த மடலின் பின்னனியைப் பார்ப்போமா?

    richardIII-v4வட இங்கிலாந்தில் உள்ள “லெஸ்டர் (Leicester)” எனும் இடத்தில் ஒரு கார் பார்க் அமைப்பதற்காக நிலத்தைத் தோண்டினர்கள்.

    அப்போது அங்கே ஒரு மனித எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்டது. என்னே ஆச்சரியம் அது இங்கிலாந்தை ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாண்ட மன்னன் ரிச்சார்ட் 3 இனுடைய எலும்புக்கூடு என்று அறியப்பட்டது.

    தொடர்ந்து அவ்வெலும்புக்கூட்டை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் எனும் கோஷம் எழுந்தது.

    எங்கே அடக்கம் பண்ணுவது என்பதை தீர்மானிக்கும் இழுபறி ஐகோர்ட் வரை சென்று லெஸ்டர் சர்ச்சில் அடக்கம் பண்ணுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    சரி யார் இந்த ரிச்சார்ட் 3 ?

    Richard the thirdரிச்சார்ட் இங்கிலாந்தின் வட பகுதியில் உள்ள ” போதரிங்கே கோட்டையில் ” 1452ம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் திகதி பிறந்தார். இந்த இடம் லெஸ்டரிலிருந்து சுமார் 30 மைல் தூரத்திலுள்ளது.

    ரிச்சார்ட்டும் அவரது அண்ணன் எட்வேர்டும் , எட்வேர்ட் 3 எனும் மாபெரும் மன்னனின் கொள்ளுப் பேரன்களாவார்கள்.

    இராஜ வரிசையின் பிரகாரம் ரிச்சார்ட்டின் அண்ணன் எட்வேர்ட் மன்னனாக 1461ம் ஆண்டிலிருந்து 1483 ம் ஆண்டு மரணமடையும் வரையில் அரசாண்டார்.

    அவரின் மரணத்தின் பின்னர் எட்வேர்ட்டின் 12 வயது மகன் தனது சித்தப்பா ரிச்சார்ட்டின் பாதுகாப்போடு முசடிசூட்டி அரசாண்டான்.

    அவனும், அவனது சகோதரனும் லண்டன் டவர் என்றழைக்கப்படும் கோட்டைக்கு இடம் பெயர்ந்தார்கள். தற்போது அது அந்நாளைய அரசர்கள் தமது அரசியல் கைதிகளை சிறைவைக்கும் இடமாகத்தான் அறியப்பட்டாலும் அப்போது அது ஒரு ராஜமாளிகையாகவே இருந்தது.

    அப்பன்னிரண்டு வயது மன்னனின் பெற்றோரின் திருமணம் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்கப்பட்டதும், இராஜ வரிசையின் படி மறைந்த எட்வேர்ட் மன்னனின் தம்பியாகிய ரிச்சார்ட் முடிசூடிக் கொண்டார்.

    அதைத் தொடர்ந்து அப்பன்னிரண்டு வயதுப் பையனினதும் அவனது சகோதரினதும் நடமாட்டமே அற்றுப் போனது. அப்போதைய கூற்றுக்களின்படி எங்கே தனது இராஜபதவிக்கு போட்டியாக வந்து விடுவார்களோ என்று மன்னன் ரிச்சார்ட் அவர்களைக் கொலை செய்து விட்டான் எனும் வதந்தியே நிலவுகிறது.

    1483ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு புரட்சியை அடக்கிய ரிச்சார்ட் இரண்டு வருடங்களின் பின்னர் “போஸ்வேர்த்” எனும் இடத்திற்கு வந்தான்.

    அங்கே அவனது கொள்ளுத் தாத்தாவழியில் இராஜ உரிமை கோரும் மற்றொரு “டியுடோர்” மன்னனுடன் போரிட்டு 1485ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் திகதி மரணமடைந்தான்.

    அப்போது அவ்விடத்திலிருந்து அவனது உடல் லெஸ்டருக்கு கொண்டுவரப்பட்டு அங்கே புதைக்கப்பட்டது.

    அந்த உடலின் எலும்புக்கூடு தான் சுமார் 500 வருடங்களின் பின்னர் இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தை ஆண்ட மன்னர்களில் ரிச்சார்ட் என்பவனுக்கு ஒரு கொடூரமான மன்னன் எனும் பெயர் உண்டு ஏனெனில் தனது அரசாட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பாரபட்சம் இன்றிப் பல கொலைகளைப் புரிந்துள்ளான்.

    இப்போது அம்மன்னனினது எலும்புக்கூட்டை எடுத்து ஒரு மன்னனுக்குரிய சகல மரியாதைகளுடனும் லெஸ்டர் சார்ச்சில் மார்ச் 26ம் திகதி அடக்கம் செய்துள்ளார்கள்.

    நான்கு நாட்கள் காட்சிக்காக வைக்கப்பட்ட இம்மன்னனினது எலும்புக்கூடு அடங்கிய பெட்டியைப் பார்த்து தமது மரியாதையைச் செலுத்துவதற்காக பல்லாயிரக் கணக்கான மக்கள் வரிசையில் மணிக்கணக்காக நின்றார்கள்.

    இவரை அடக்கம் பண்ணுவதற்கான பெட்டியை கனடாவைச் சேர்ந்த இம்மன்னனின் பரம்பரையில் வந்த ஒரு தச்சுத் தொழிலை மேற்கொள்பவர் உருவாக்கியது குறிப்பிடத் தக்கது.

    இம்மன்னனின் உடலுக்கு மரியாதை செலுத்தும் முகமாக தற்போதைய இங்கிலாந்து ராணியின் கடைசி மைந்தன் அங்கு சென்றிருந்தார்.

    கொடூரமான மன்னன் என்று பெயரெடுத்திருந்தவருக்கு ஏன் இத்தனை கெளரவம் எனும் வாதம் ஒருபக்கத்தில் இருந்து ஒலிக்க, அவனது கொடூரமான செயல்கள் அக்காலகட்டத்தில் மற்றைய மன்னர்களினாலும் கடைப்பிடிக்கப்பட்டதே ஆகவே அவருக்குரிய கெள்ரவத்தைக் கொடுப்பது தவறாகது எனும் வாதம் மறுபக்கத்தில் ஒலிக்கிறது.

    என்ன இருந்தாலும் தற்போதைய எலிசபெத் மகராணியாரின் குடும்பம் பங்கு பற்றியிருக்க வேண்டுமா? எனும் கேள்வியும் ஆங்காங்கே ஒலிக்கிறது.

    ஒன்று மட்டும் உண்மை, காலங்கள் எத்தனை கசந்தாலும் தமது நாட்டின் சரித்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்நாட்டு மக்களினது பண்பு பாராட்டப் படவேண்டிய ஒன்றே!

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    –சக்தி சக்திதாசன்.

    “மக்கள் திலகம்” என்றதுமே ஏதோ இனம்புரியாப் பரவசம் என் மனதில் ஊற்றெடுக்கிறது. அந்த ஊற்றின் மூலத்தைத் தேடிக் கொண்டே சென்றேன் அது என்னை எனது இளமைக்காலத்திற்கு அழைத்துச் சென்றது .

    ஆமாம், எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து, “சக்தி” எனும் இந்த மூன்றெழுத்துடன் பின்னிப்பிணைந்தது இன்று நேற்றல்ல.

    அப்படி என்னதான் இந்த மனிதனுடன் என்னைப் பிணைத்தது?

    மிக ஆழமான கேள்வி? ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் காலடி வைத்திருக்கும் இந்நிலையில் நான் என்னைக் கேட்கிறேன்.

    பதில் மிகவும் விசித்திரமானது.

    “மனிதனாக வாழந்திட வேண்டும் மனதில் வையடா, தம்பி மனதில் வையடா !” என்று மக்கள் திலகத்தின் படத்தில் வரும் பாடலொன்றில் வரிகள் உண்டு.

    உலகில் நன்னெறி கொண்ட மனிதனாக, மக்கள் மனங்களில் கோலோச்சும் மன்னனாக நடைபோட வேண்டுமென்றால் மக்கள் திலகத்தின் படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்களின் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் எனும் உன்னத கருத்தே இம்மாமனிதனுடன் என்னை இணைத்தது என்பதே உண்மையாகும்.

    யார் இவர் ? ஒரு சாதாரண நடிகர் தானே! இவருக்கென்ன இத்தனை விளம்பரம் என்று எண்ணுபவர்கள் இருக்கலாம்.

    இவரின் படத்தில் வரும் பாத்திரங்களில் மயங்கி விட்டாய் என்று சொல்பவர்கள் கூட இருக்கலாம் .

    சரி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆனால் இம்மானிதர் மக்களுடைய மனங்களில் பிடித்திருக்கும் இடம் காலத்தால் அழிக்கப்பட முடியாத ஒன்றாக இருப்பதற்குக் காரணம் என்ன என்றாவது நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா ?

    மக்கள் திலகம் எனும் இம்மாமனிதருடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இவருடன் பழகிய பலருடன் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

    அவர்களில் முக்கியமானவர் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமரர் கவிஞர் வாலி அவர்கள்.

    அவரைப் பலமுறை சந்தித்து அளவளாவும் பாக்கியம் பெற்றிருந்தேன் . எமது ஒவ்வொருமுறைச் சந்திப்பின் போதும் அவர் எனக்கு மக்கள் திலகத்தின் உயரிய பண்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி உன்னதமாக விளக்குவார்.

    திரையுலகைச் சேர்ந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைத் தனது குடும்பத்தில் ஒருவராக மதித்து அவர்களது தேவை என்னவோ அதைத் தனது தேவையாகக் கருதி நிறைவேற்றும் அவரது இளகிய மனம் ஒன்றே அவருக்கு “பொன்மனச் செம்மல்” எனும் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் வல்லமை பெற்றது.

    எனது மானசீகக் குரு கவியரசர் கணவிதாசன் அவர்களை தமிழக ஆஸ்தானக் கவிஞராக்கி மகிழ்ந்த அவரது உள்ளத்தை என்னவென்று போற்றுவது.

    கவியரசரது விழுதுகளில் ஒன்றான கண்மணி சுப்பு அவர்களின் சந்திப்பின் போது
    தனது தந்தையின் வேண்டுகோளை சிரமேல் ஏற்று கவியரசரின் மறைவிற்கு பின்னர் அதைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்த பண்பினை மிக அழகாக எடுத்தியம்பியபோது மக்கள் திலகம் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் மர்மம் புரிகிறது.

    நான் படித்த ஒரு சுவையான சம்பவம் எனக்கு இப்போது நினைவிற்கு வருகிறது .
    பணத்தோட்டம் எனும் படத்திற்காக டி.எம்.எஸ் உம் , பி.சுசீலா வும் பாடிய “பேசுவது கிளியா ?“ எனும் பாடலில் ஒரு பகுதி

    பாடுவது கவியா -இல்லை
    பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவா
    செந்தமிழர் நிலவா …
    என்று வரும் .

    இந்தப் பாடல் எழுதப்பட்ட சமயம் மக்கள் திலகத்தை அவரது தோட்டத்தில் சந்தித்த ஒரு தயாரிப்பாளரிடம் இப்பாடலைக் கேட்டு அவரது கருத்தைக் கூறும்படி மக்கள் திலகம் கேட்டாராம் .

    பாடலைக் கேட்ட அத்தயாரிப்பாளர் உங்களது சரித்திரத்தையே இருவரிகளில் கவியரசர் கண்ணதாசனை விட வேறுயாரால் கூற முடியும் என்று சொன்னராம்.

    அதற்கு மக்கள் திலகம் அது எப்படி ? என்று கேட்க,

    சேரனுக்கு உறவா
    செந்தமிழர் நிலவா

    எனும் இந்த இருவரிகள் உங்கள் சரித்திரத்தைத் தானே கூறுகிறது என்று கூற மக்கள் திலகம் வியப்பில் ஆழ்ந்து கவியரசரின் திறமையை ரசித்தாராம் .

    எனக்கு அப்போது 9 வயது என்று நினைக்கிறேன். எனது தாய்மண்ணாம் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன்.

    “எங்க வீட்டுப் பிள்ளை” யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அபிநய சரஸ்வதி சரோஜாதேவியும் யாழுக்கு விஜயம் செய்திருந்தார்கள்.

    திறந்தததொரு ஜீப் வண்டியில் பலாலி விமான நிலயத்திலிருந்து பலாலி வீதி வழியாக யாழ் நகருக்கு ஊர்கோலமாக அழைத்து வரப்பட்டார்கள்.

    மிகவும் பரபரப்பாக இருந்த என்னை அப்போது விடுமுறையில் வந்திருந்த என் தந்தை எதற்காக இந்தப் பரபரப்பு என்றதும் மக்கள் திலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கேட்டதும் சைக்கிளில் என்னை உட்கார்த்தி யாழ் கந்தர்மடத்தில் பலாலி வீதிச் சந்தியில் எம்.ஜி.ஆரையும் , கன்னடத்துப் பைங்கிளியையும் நேராகப் பார்க்கும் வாய்ப்பை என் அன்புத்தந்தை ஏற்படுத்திக் கொடுத்ததை எப்படி என்னால் மறக்க முடியும்?

    அப்பப்பா ! பொன் வண்ணம் என்பார்களே அப்படியான வதனம், அன்பான புன்னகை அவரைப் பற்றி அவ்வயதில் நான் கொண்டிருந்த கற்பனையை அக்காட்சி எவ்விதத்திலும் சிதறடிக்கவில்லை .

    பின்பு எனது பதினாறவது வயதில் எங்க வீட்டுப் பிள்ளை மீண்டும் யாழ் வெலிங்டன் தியேட்டரில் திரையிடப்பட்ட போது டிக்கெட் கிடைக்காமல் மதில் வழியாகப் பாய முற்பட்டு தியேட்டர் ஊழியர் என் சட்டையைப் பிடித்திழுக்க முதுகுப் பக்கச் சட்டை கிழிந்து சட்டை அவர் கையிலும் நான் உள்ளேயும் விழுந்த அனுபவம் இனிக்கிறது.

    முதுகுப் பக்கச் சட்டை இல்லாமலே அத்திரைப்படத்தை என் நண்பர்களுடன் பார்த்து மகிழ்ந்தது மக்கள் திலத்தின் ஞாபகத்திற்கு ஒரு மகுடமாய் நெஞ்சில் திகழ்கிறது .

    மக்கள் திலகத்தின் திரைப்படப் பாடல்கள் எப்போதும் மனதில் அளவிடமுடியாத உற்சாகத்தைக் கொடுக்கும்.

    இப்போது கூட லண்டனில் எப்போது எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் பார்ப்பதே என் மனதிற்கு ஆனந்தத்தை அளிக்கும்.

    நீ ஆண்டது
    அரியணைக் கதிரையல்ல
    மக்களின்
    அன்பு மனங்களென்பேன்

    காலன் உனைக்
    கவர்ந்து சென்று
    காலங்கள் பல
    கடந்தாலும்
    காலத்தால் அழியாத
    கலங்கரை விளக்காய்
    அரசியல் உலகிற்கு
    ஆணிவேராகினாய்

    மன்னாதி மன்னனாய்
    உலகம் சுறும் வாலிபனாய்
    உழைக்கும் கரங்களோடு
    பட்டிக்காட்டு பொன்னையா
    மாட்டுக்கார வேலனாக
    மக்கள் மனங்களை உழுதாயே !

    மதுரை வீரனாய் நீயோ
    நீதிக்குத் தலைவணங்கும்
    எங்கள் வீட்டுப் பிள்ளையென
    தர்மம் தலைகாக்கும் என
    கலங்கரை விளக்கானாய்

    பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
    தனிப்பிறவி நீ என்வாழ்வில்
    ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
    புதுமைப் பித்தன் நீ
    தாய்சொல்லைத் தட்டாமல்
    தாய்க்குப்பின் தாரம் என
    நல்லவன் வாழ்வான் என்றே
    ஆயிரத்தில் ஒருவனானாய்

    தமிழர்களின் காவல்காரன்
    காத்திருந்தாய் விவசாயிகளை
    ஒருதாய் மக்கள் நாமென்று
    சங்கே முழங்கென்றாய்
    ஊருக்கு உழைப்பவனே
    நம்நாடு என் இதயவீணை
    பாடிய உன் உள்ளமே
    உன் மக்கள் எப்போதும்
    குடியிருந்த கோயில்

     

    Share
  • என்னைக் கேட்டால்…

    -சக்தி சக்திதாசன்

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    என்னுள் விளையும்
    எண்ணங்கள் என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    விண்ணில் தோன்றும்
    விந்தைகள் என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    கற்றுக் கொண்ட
    பாடங்கள் என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    என்னுள் என்னைத்
    தொலைத்தேன் என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    என்னை எரித்த
    எண்ணெய் என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    காலில் தைத்த முட்கள்
    பயணத்தின் துணை என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    கவியரசரின் முன்னே
    கால் தூசு என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    அன்பு மனங்களின் பாசம்
    என் எழுத்தின் வாசம் என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    என்னை அறிந்திடும்
    தேடலின் பாதை என்பேன்!

    என்னைக் கேட்டால்
    என்ன சொல்வேன் ?
    எல்லாம் தமிழினுள்
    ஐக்கியம் என்பேன்!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(144)

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    இந்தவார மடலிலே உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

    மனித சமூகமானது காலம் காலமாகப் பல மாறுதல்களுக்கு ஏற்ப தமது வாழ்வு முறைகளை மாற்றியமைத்துத் தம்மை ஒரு நாகாரீகமான சமுதாயம் என்று குறிப்பிடுமளவிற்கு மாற்றமடைந்திருக்கிறது என்பதுவே ஒரு பொதுவான கருத்தாகிறது.

    மனிதராய் நாம் பிறந்து, மனிதராய் நாம் வாழ்வதென்பது நமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ள வேண்டும்.

    வாழ்க்கையில் எத்தனையோ விதமான நோய்களுடன், எத்தனையோ விதமான அங்கவீனங்களுடன் பலர் பல கடுமையான போராட்டங்களினூடு மிகவும் துணிச்சலாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டமிது.

    பையிலே நாலணா காசு கூட இல்லாமல் மற்றவர்களின் கருணை மனதை தமது மூலதனமாகக் கொண்டு தம் நாளை ஆரம்பிக்கும் எத்தனையோ ஆயிரம் மக்கள் இவ்வகிலத்தில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

    அவர்கள் யாரும் தமது இல்லாமையின் ஏக்கத்தினால் தமது வாழ்வை முடித்துக் கொள்ள எண்ண மாட்டார்கள். அப்படி எண்ணுவதும் தவறு. நமது உயிரை மாய்த்துக் கொள்ளும் அதிகாரம் நம் ஒருவருக்கும் கிடையாது.

    அதுகூட ஒரு வகையான கொலையாகவே கருதப்பட வேண்டும்.

    என்ன! எதை நோக்கி சக்தியின் இவ்வார மடல் பயணமாகிறது என்று எண்ணுகிறீர்களா ?

    இங்கிலாந்திலே கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவம் ஒன்று என் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணியதால் தான் இம்மடலின் கருவாக அது அமைகிறது.

    TF2இங்கிலாந்தின் வடபகுதியில் அமைந்துள்ள “டெல்ஃபோர்டு’ ( Telford) என் னும் இடத்திலே கடந்த சனிக்கிழமை ஒரு துயரகரமான சம்பவம் நிகழ்ந்தது.

    வயதில் நாற்பதுகளில் உள்ள ஒரு மனிதன் கார் பார்க் ஒன்றின் உச்சியில் இருந்து குதித்து தன் வாழ்வை மாய்த்துக் கொண்டான்.

    அம்மனிதன் அத்தகைய ஒரு முடிவையெடுக்க அவன் வாழ்வில் அவன் எத்தகையதோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்க வேண்டும் என்று எண்ணும் போது அது மிகவும் ஆழமான மனவருத்தத்தையே உருவாக்குகிறது.

    அது ஒருபுறமிருக்கட்டும் …

    நாககரீகமான உலகில் நாகரீகமடைந்த மனிதர் என்று கூறிக் கொள்வோர் இந்த 22ம் நூற்றண்டிலே மற்றொரு சக மனிதனை நோக்கி நடந்து கொண்ட முறையே என் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

    TF3அக்கட்டடத்தின் உச்சியில் ஏறத்தாழ 2 மணிநேரம் குதிப்பதற்குத் தயாரான நிலையில் நின்றிருந்த அம்மனிதனை பாதுகாப்பாகக் கீழே கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அந்நகர பாதுகாப்புப் படையினரும், தீயணைக்கும் படையினரும் முயன்று கொண்டிருந்தனர்.

    தன் உயிரைப் போக்கிக் கொள்ள முயற்சிக்கும் ஒரு மனிதனை வேடிக்கை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் கூடியது.

    இக்கூட்டத்தில் இருந்த பலர் தமது ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளில் அவனது துர்ப்பாக்கிய நிலையை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

    அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை.

    “எதற்காகத் தயங்குகிறாய் குதித்து விடு நேரமாகிறது ” என்றும் …

    TF1“மேலிருந்து குதித்தால் உன் உடல் எவ்வளவு தூரத்திற்கு துள்ளப்போகிறது பார்க்க வேண்டும் குதித்து விடு” என்றும் பலவகையான கோஷங்களில் அம்மனிதனைக் குதிப்பதற்குத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது ஒரு கும்பல்.

    பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோளையும் புறக்கணித்து இக்கோஷங்கள் தொடர்ந்தன.

    விளவு! அக்கட்டடத்தில் இருந்து பாய்ந்து தன் உயிரைப் போக்கிக் கொண்டான் அம்மனிதன்.

    இவ்வாறு கூச்சல் போட்டுக் குழப்பியவர்கள் காட்டுமிராண்டிகளே, அவர்களை அடையாளம் கண்டு போலிசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 50,000 பேர் இணையத்தளம் வாயிலாக கையொப்பமிட்டு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    அவ்வாறே கூச்சலிட்டவர்களில் ஒருவரை தாம் கிடைக்கப்பெற்ற புகைப்படங்களின் மூலம் அடையாளம் கண்டு விட்டதாகப் போலிசார் கூறுகின்றனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களோ, இல்லையோ? அது ஒருபுறமிருக்க மனிதர் என்று கூறிக்கொள்வோர்கள், அடுத்தவர்களின் அழிவில் ஆனந்தம் காணும் இவ்வகையான மனோபாவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

    இத்தகையோர் பெரும்பான்மையான எண்ணிக்கையில் இல்லை என்பது ஒருவகையில் ஆறுதலாக இருந்தாலும், இப்படியானவர்கள் இத்தனை பகிரங்கமாக தமது மிருக உணர்வினை வெளிக்காட்டுமளவிற்கு எமது சமுதாய உணர்வு மழுங்கி விட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது.

    உலகின் பல பாகங்களிலும் மதங்களின் பெயராலும், மொழிகளின் பெயராலும் அநியாமகப் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன.

    வேறு பலபாகங்களில் தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில் பலபுதுவிதமான நோய்கள் பலரைத் தமக்கு இரையாக்குகின்றன.

    இவைகளைத் தடுக்க உலகின் பல நாடுகளில் உள்ள பல அமைப்புகள் தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றன.

    இந்தச் சூழலில் ஒரு உயிர் அநியாயமாகப் போகப் போகிறதே எனும் உணர்வு இல்லாமல், அவ்வுயிரைக் காப்பாற்றத் தம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்காமல் அவ்வுயிரைப் பறிக்கக்கூடிய வகையில் நடந்து கொள்ளும் இம்மக்களும் நான் வாழும் இதே நாட்டில் வாழ்கிறார்கள் என்று எண்ணும்போது என் உடலே கூசுகிறது.

    ஆனாலும்,

    கடந்த வாரம் நடைபெற்ற “காமிக் ரிலீவ் (Comic Releif)” எனும் பீ.பீ.சி தொலைக்காட்சி நடத்திய வறியநாடுகளுக்கு உதவுதற்கான நிதிசேகரிப்பு நிகழ்வில் ஒரு பில்லியன் பவுண்ஸ் அளவிற்கு நிதியுதவி ஈந்த கருணை மிக்க மக்களைக் கொண்ட நாடு இது எனும் நினைப்பு என்னைப் பெருமை கொள்ள வைக்கிறது.

    “மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா – தம்பி மனதில் வையடா” என்று புரட்சித் தலைவரின் படத்தில் வரும் பாடலின் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது.

    நாம் வாழ்வது 21ம் நூற்றாண்டு, ஆனால், அதற்கேற்ற வகையில் நமது உள்ளங்கள் வளர்ச்சியடைந்திருக்கின்றனவா ?

    சிந்திக்க வேண்டிய கேள்வியுடன் விடைபெறுகிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில் …

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(143)

    — சக்தி சக்திதாசன்.

     

    val143
    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இனியதோர் இளமாலைப் பொழுதினிலே உங்களுடன் மடலூடாக உறவாட உட்கார்ந்து கொண்டே முன்னே இருக்கும் சாரளத்தினூடாகப் பார்க்கிறேன்.

    இங்கிலாந்தின் காலநிலையின்படி மார்ச் மாதக் குளிர் தனக்கேயுரித்தான சில்லென்ற குளிரை வீசினாலும் கதிரவனும் தன் ஒளிக்கதிர்களை அள்ளி வீசிக்கொண்டுதானிருக்கிறான்.

    வாயிற்கதவைத் திறந்து கொண்டு தெருவில் இறங்கினால் குளிருமோ எனும் அச்சத்தில் வீட்டினுள் கதகதப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் எனும் நினைப்பில் அழகான ஒரு நாளை அனுபவிக்காமல் விட்டு விடுபவர்களில் சிலசமயங்களில் நானும் அடங்குவேன்.

    இன்று என் சிந்தையில் இப்படி எத்தனை நாட்களை தவற விட்டு விட்டேன் ! ஐயைய்யோ ஜம்பதுகளின் அடிப்பகுதிக்கு வந்து விட்டோமே இந்த அழகான நாட்கள் வாழ்க்கையில் இனி குறைந்து கொண்டே போகுமே ! எனும் ஒருவகை அச்சம் குடி கொண்டிருப்பதை உணரக்கூடியதாக உள்ளது.

    பொதுவாக நம் அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம் காரியங்களைத் தள்ளிப் போடுவதேயாகும்.

    இப்பழக்கத்தினால் நாம் எத்தனையோ நாட்களின் அருமையை உணர்ந்து கொள்ளாமல் அது அப்படியே நம்மைக் கடந்து செல்ல விட்டிருக்கிறோம்.

    உண்மையில் வாழ்க்கையில் நாம் சுகமாக கண்விழிக்கும் ஒவ்வொருநாளுமே நமது வாழ்க்கையில் ஒரு உன்னதமான நாள் என்பதை உணரத் தவறி விடுகிறோம்.

    ஒரு சிறிய கதை ஒன்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ஒரு வாழ்க்கைத் தத்துவ வகுப்பு ஒன்றில் ஆசிரியர் சிறிய ஒரு நிகழ்வை உருவாக்கிக் காட்டுகிறார். அந்நிகழ்வு அவரின் ஒன்று விட்ட அக்காவின் வாழ்க்கையில் நிஜமாக நடந்தது என்று விவரிக்கிறார்.

    அவரை விட பத்து வயது மூத்தவரான அவரது ஒன்று விட்ட அக்கா மிகவும் கெட்டிக்காரியானவர். அவர் நன்றாகப் படித்து முன்னேறியவர். ஒரு பெரிய கம்பெனியின் பிரதான நிர்வாக இயக்குனராக பதவி வகித்தார்,

    திருமணம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது அல்ல எனும் நிலைப்பாட்டில் தனக்கு மனதுக்குப் பிடித்தவருடன் மேலைநாட்டு வழக்கப்படி ஒன்றாகக் குடித்தனம் நடத்தி வந்தார்.

    திடீரென ஒருநாள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டார். சரியாக அவர் இறந்து மூன்று நாட்களின் பின்னர் அவரது பிரிவால் வாடிய அவரது வாழ்க்கைத் துணைவர் (கணவரல்ல) அவரது அறையிலிருந்த பொருட்களை பார்த்து தன் துணையின் பிரிவை ஆற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவர் கையில் ஒரு அழகிய பரிசுப் பெட்டியினுள் பெண்கள் அணியும் அழகான பட்டு ஸ்கார்ப் ஒன்று அகப்பட்டது.

    ஆமாம் அது அவ்வாழ்க்கைத்துணைவரால் அவரது துணைவியாருக்கு 7 வருடங்களின் முன்னால் பரிசளிக்கப்பட்டது. அதை துணவர் பரிசளித்த போது அதைக் கண்டு மகிழ்ந்த அந்த மறைந்த பெண்மணி அதன்மீது அளவில்லாத பற்றுக் கொண்டு அதனை அணைத்தபடி தூங்கி விட்டு இதை ஒரு சிறப்பான நாளில் தான் அணிந்து கொள்வேன் என்று என்று சொன்னார்.

    ஏழுவருடங்களுக்குப் பின்னர் சொன்ன அந்தப் பெண்மணி மறைந்து போனார், ஆனால் அந்த ஸ்கார்ப் . . . . அணியப்படாமலே இருந்தது..

    அப்படியாயின் அந்தப் பெண்ணின் வாழ்வினில் கடந்த ஏழுவருடங்களில் எந்த ஒரு நாளுமே சிறப்பான நாளாக இல்லை என்றாகி விட்டது இல்லையா ?

    அன்பினிய வாசக உள்ளங்களே நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளுமே இறைவனால் நமக்குத் தரப்பட்ட சிறப்பான பரிசாகும். வாழ்க்கை நம் எல்லோருக்கும் எப்போதும் நியாயமானதாக இல்லாதிருந்தாலும் மனவருத்தம், தடைகள் , முட்டுக்கட்டைகள் என்பன எமது வாழ்க்கைத் திட்டங்களையும், ஒவ்வொருநாளையும் அதற்கேயுரிய கெளரவத்துடனும் அனுபவிப்பதை தடை செய்ய அனுமதிக்கக் கூடாது.

    நமது நிலை மீது நாமே பரிதாபம் கொள்ளும் மனப்பான்மை என்றுமே நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லாது. முக்கல்களும், முனகல்களும் எப்போதும் வெற்றியின் சந்தர்ப்பங்களை பயமுறுத்தித் துரத்தி விடும்.

    எப்போதும் நாம் மகிழ்ச்சிகரமான நாளைத் தேடிக்கொண்டு இன்றைய நாளைத் தொலைத்து விடுவதில் வல்லவர்கள்.

    வாழ்க்கை நம்மீது வீசும் சவால்களை திறந்த மனதுடன் எதிர்கொண்டு அவைகளை நமக்குச் சாதகமான வழியில் மாற்றிக் கொண்டு வாழ்வதே புத்திசாலித்தனமான செயலாகும். நமது ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அதனை நாம் செப்பனிடும் விதத்திலேயே தங்கியுள்ளது.

    நமது பொறுப்புகளை நாம் தட்டிக் கழித்துக்கொண்டு விதி, சந்தர்ப்பம், சூழ்நிலை எனும் பொய்க்காரணங்களின் மீது பழியைப் போட்டுவிட்டு எமது இயலாமையை மறைத்து விடுவதில் நாம் அனைவரும் திறமைசாலிகளே !

    வாழ்வில் நாம் உயிருடன் வாழும் ஒவ்வொருநாளும் சிறப்பான நாட்களே ! எனது உற்ற நண்பன் ஒருவன் அடிக்கடி எனக்குக் கூறுவது ” சீரற்ற காலநிலை என்று ஒன்று இல்லை அக்காலநிலைக்கு உகந்தவாறு நாமணியும் உடை சீரற்று இருப்பதால் தான் காலநிலை நம்மைப் பாதிக்கிறது “

    என் ஜன்னலின் வழியே நான் கண்ட பகல் பொழுது என் மனதில் விரித்த சிந்தனை எனும் தாமரையில் துளிர்த துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    அடுத்தவாரம் சந்திக்கும் வரை கிடைக்கும் ஒவ்வொருநாளையும் இறுகப்பற்றி மகிழ்வுடன் வாழுங்கள்.

    val143.1
    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மகளிர் தின வாழ்த்துக்கள்

    சக்தி சக்திதாசன்

    என் இனிய அன்பு உள்ளங்களே !

    மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம். இத்தினத்தில் எனை இவ்வுலகில் ஈன்ற என் அன்னைக்கு, என்னை ஒரு மனிதனாய் உருமாற்றம் செய்ய அவள் செய்த அளப்பரிய தியாகங்களுக்கு, என்னை பண்புடை மனிதனாக வளர உதவிய என் சகோதரிகளுக்காக, சிதைந்து போன என் வாழ்வை தூக்கி நிறுத்தி இன்று என் அனுபவங்களை என் இனிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வழி சமைத்த என் மனைவி, என் உயிர்த்தோழி, என் அன்பு மனைவிக்காக, இன்று என்னோடு உடன் பிறக்காவிட்டாலும் அண்ணா என்றும் தம்பி என்றும் என்னைத் தம் உடன்பிறப்புகளாக கெளரவிக்கும் என் தமிழன்னை தந்த சகோதரிகளுக்காகவும் இதோ இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்

    images

    சக்தியெனக்கு கொடுத்தவள் என் அன்னை
    சித்தியெனக்களித்தவள் என் அன்னை
    புத்தியெனக்களித்தவள் என் அன்னை
    முற்று முதலாய் அவளுக்கே என் வணக்கம்

    தன்னில் ஒரு பாகம் கொடுத்து உலகில்
    தந்தான் அந்த ஆதிமூலம் பெண்மையின் மகத்துவம்
    எத்தனை வடிவங்கள் எடுத்துப் பெண்கள்
    வித்தக விந்தைகள் புரிவர் இவ்வுலகில்

    அன்னையாராக அன்பு மழை பொழிவர்
    சகோதர சகோதரியராக பந்தம் வளர்த்திடுவர்
    காதலியராக கனவுகளுக்கு உயிர் கொடுப்பர்
    தொழியராக எம்முடன் துயர் பகிர்ந்திடுவர்

    அன்றொருநஃஅள் எம் முப்பாட்டன் பாரதி
    ஆணித்த்ரமாய் ஒலித்தான் பெண்ணின் பெருமை
    அந்நிய நாட்டார் எம்மை அடிமை கொள்வது போல
    அன்னை இனத்தை நாம் அடிமை கொள்ளலாகாது

    தெள்ளிய உண்மை நிலைகளைத் தமிழில்
    தெட்டத் தெளிவாய்ச் சொன்னவன் எம் பாரதி
    உள்ளத்தில் வாங்கினோமா நாம் உண்மைகளை ?
    உங்கள் இதயத்தைச் தொட்டுச் சொல்லுங்கள்

    வேதனை பல தாங்கி உலகில் மாதர்கள்
    சோதனை பல வென்று தன்னிரகற்ற
    சாதனை கண்ட மகவுகள் தந்தனர் தோழரே !
    போதனை அல்ல இது சத்தியம் என்பதே உண்மை

    மகளிர் தினம் இதுவென்று உலகில் ந்2ஆம்
    மார் தட்டிக் கொள்வதல்லை பெருமை
    மகளிர் மாந்தருள் மாணிக்கமெனும் உண்மை
    விளங்கிட எது செய்தோம் என்பதே கேள்வி ?

    சமுதாயம் , கலாச்சாரம் எனும் போர்வையில்
    மாதர்கள் கால்களில் பூட்டி விட்ட விலங்குகளை
    சமத்துவம் எனும் சத்திய உளி கொண்டு என்று நாம்
    உடைக்கின்றோமோ அன்றுதான் உன்மையான மகளிர் தினம்

    எமையீன்ற அன்னையர்க்கு, எமைப் போல பல
    உன்னத மகவுகளுக்காய் தம் வாழ்வை அர்ப்பணித்த
    தியாகச் செம்மல்களாம் மகளீர் அனைவருக்கும்
    வணக்கங்களோடு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(142)

    சக்தி சக்திதாசன்.

     

    அன்பினிய வாசக நெஞ்சங்களே !

    உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள். மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு இடம்பெறும் வாரத்தில் உங்களை இம்மடலின் மூலம் சந்திப்பதில் மிகவும் மகிழ்வடைகிறேன்.

    மார்ச் 8ஆமாம் மார்ச் மாதம் 8ம் திகதி மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எம் வாழ்விலே அனைத்து வடிவங்களிலும் மகளிர் எம்முடன் இணைந்தே நடக்கிறார்கள்.

    அன்னையாக, சகோதரிகளாக, இல்லத்துணைவியராக, இதயம் கவர்ந்த காதலிகளாக, அன்பார்ந்த தோழிகளாக மகளிரின் பாத்திரங்கள் எம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

    இன்றைய நூற்றாண்டிலே உலகின் பல பாகங்களிலும் மகளிரிருக்குரிய உன்னதமான இடம் அளிக்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறார்கள்.

    ஆனால் 17ம் நூற்றாண்டிலே வாக்குரிமை அற்றவர்களாக, இரண்டாந்தரப் பிரஜைகளாக அவர்களுக்குரிய … அவர்களுகுரித்தான மதிப்பு கெளரவம் என்பன கொடுக்கப்படாத காலம்.

    அடிமைவாழ்வு, மனிதனை மனிதன் அடிமை கொண்டு அடக்கி வாழப்பண்ணுவது எனும் முறை மிகவும் சாதாரணமாகக் கைக்கொள்ளப்பட்டு வந்த காலம்.

    மேலைத்தேசங்களில் குறிப்பாக … இங்கிலாந்து, அமெரிக்க போன்ற நாடுகள், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க மக்களை அடிமைப் படுத்தி வாழ்ந்த காலம்.

    அத்தகைய காலக்கட்டத்திலே தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த அமெரிக்க ஆப்பிரிக்க நாட்டவர்கள் மத்தியில் பெண்கள் பலரும் இருந்தது எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்றே.

    பெரும்பான்மை வெள்ளை இனத்தவர் மத்தியிலிருந்து இத்தகைய கொடுமைகளுக்கெதிராக குரல் கொடுக்கும் ஆண்களே அருகியிருந்த காலத்தில் அடிமை வாழ்விற்கெதிராக குரல் கொடுத்த ஒரு அமெரிக்க வெள்ளை இனப் பெண்மணியை ஏறெடுத்துப் பார்ப்பது இம்மடலின் நோக்கமாகிறது.

    harriet-Beecher-Stowe2“ஹாரியட் பீச்சர் ஸ்டோ” (Harriet Beecher Stowe), யார் இந்த ஹாரியட் ?

    அமெரிக்க வெள்ளையர்கள் அடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு அரிய எழுத்தாளர் தான் இந்த ஹரியட்.

    1811 ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திகதி அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் (Conneticut) எனும் இடத்திலுள்ள லிச்வீல்ட் (Lichfield) எனும் இடத்தில் ஒரு மதப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தார்.

    பெண்கள் பாடசாலையில் பயிற்றுவிக்கப்பட்ட இவர் பல பாடங்களில் தேர்ச்சி பெற்றார். தனது 21வது வயதில் ஒஹையோ எனும் இடத்திற்கு இடம்பெயர்ந்த இவர் அங்கு இலக்கிய வட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார். இலக்கிய வட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் சமூகப் பிரச்சனைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

    1836ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி “கல்வின் எலிஸ் ஸ்டோ” (Calvin Ellis Stowe) என்பவரை மணம் புரிந்தார். இவரது கணவர் ஸ்டோ அடிமைத்தளையை உடைத்தெறியும் பிரச்சாரப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார்.

    இவரது கணவருடன் இவரும் அப்போதைய அடிமை வாழ்வில் இருந்து ஒளிந்து வாழும் ஆப்பிரிக்கர்கள் வாழும் நிலக்கீழ் ரெயில்பாதையில் இணைந்து கொண்டனர்.

    இத்தைகைய அனுபவங்களின் மூலம் அடிமை வாழ்வின் கொடுமைகளைப் புரிந்து கொண்ட இவருக்கு, 1833ம் ஆண்டு கெண்டகி எனும் இடத்தில் நடந்த அடிமை ஏலத்திற்கு சென்று பெற்ற நேரடி அனுபவம் உள்ளத்தில் பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்தது.

    மனிதனை மனிதன் அடிமை கொண்டு ஏலம் போடும் நிகழ்வின் அனர்த்தம் அவருக்கு அடிமை வாழ்வினை உடைக்கும் பிரச்சாரத்திற்கு உத்வேகம் கொடுத்தது.

    1851ம் ஆண்டு இவர் தனது படைப்பான “அங்க்கிள் டாம்ஸ் கேபின்” (Uncle Tom`s Cabin) எனும் தொடர் கட்டுரையின் முதலாவது தொடரை “நேஷனல் எரா” (National Era) எனும் பத்திரிகையில் எழுதினார்.

    1852ம் ஆண்டு இத்தொடர் மிகவும் பிரபலமடைந்ததால் அது ஒரு நூலாக வெளிவந்தது. இந்நூலின் 300,000 பிரதிகள் வெளியான முதல் ஆண்டிலேயே விற்பனையாகியது.

    lincoln_meets_stoweஇவரது இந்நூல் அடிமை வாழ்வின் கொடூரத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தது. மனிதர்களை இயந்திரங்களாக உபயோகித்து தமது வாழ்வின் வசதிகளை பெருக்கிக்கொள்ளும் வெள்ளை முதலாளிகளினதும், நிறவேற்றுமை கொண்ட உள்ளங்களினதும் மனக்கருமையை வெள்ளைத்திரையில் படம் போட்டுக் காட்டியது.

    இவரது இந்நூல் அடிமைத்தளையை உடைக்கப் பாடுபடும் உன்னத மனிதர்களுக்கு ஒரு மாபெரும் உந்து சக்தியைக் கொடுத்தது. அடிமைகளை விடுவிக்க வேண்டும் எனும் கருத்து மேலோங்கியிருந்த அமெரிக்காவின் வடபகுதியில் இவரது நூலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதே சமயம் நிறவேற்றுமை மிகுந்திருந்த அமெரிக்காவின் தென்பகுதியில் இந்நூல் மிகுந்த எதிர்ப்புக்குள்ளாகியது.

    அடிமைத்தளையை உடைத்தெறிவதற்கான உள்நாட்டு யுத்தம் அமெரிக்காவில் முடிவுற்றதும் 1862ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி ஹாரியட் அவர்கள் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டு ஆபிரகாம் லிங்கனைச் சந்திக்க சந்தர்ப்பம் கொடுத்தார்கள்.

    20 நாவல்களுடன் பல சமூகப் பிரச்சனைகளை முன்னெடுக்கும் தொடர்களை எழுதிய இந்த சமுதாய வீராங்கனை தனது 85 வது வயதில் காலமானர்.

    இவருக்கு “பெரியதோர் சமுதாயப் புரட்சியை ஆரம்பித்த சிறியதோர் பெண்மணி” எனும் அடைமொழி கொடுக்கப்பட்டது.

    abraham-lincoln-

    இன்றைய இந்தக் காலகட்டத்திலே மகளிர் தினத்தைக் கொண்டாடும் எமக்கு கடந்த கால வரலாற்றில் மகளிர் செய்த அரும்பெரும் சாதனைகள் புரிந்தால் மட்டுமே இன்றைய சாதனை வீராங்கனைகளுக்கு தகுந்த ஆதரவு கொடுக்கலாம்.

    இந்த மகளிர் தினத்தில் இதை நமது மனதில் ஆழமாக நிறுத்திக் கொள்வது அவசியமானது.

     

     

     

     

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share