Tag: தனுசு

  • ஒரு வீடும் அதைத்தேடும் கூடும்

     

    -தனுசு
    எனக்கொரு ஆசை
    இந்த நாட்டுக்கு ராஜாவாவது அல்ல!
    ஒரு வீட்டுக்கு
    சொந்தமாவது!
    அது
    சொந்த வீட்டின் ஆசையில் அல்ல
    வாடகை வீட்டின் இம்சையில்!

    இங்கு
    மின்சாரத்துக்கு ஒரு கட்டுப்பாடு
    நீருக்கும் அதே கூப்பாடு
    வாடகையில் மட்டும் குறி
    தாமதிக்கும் பொழுதெல்லாம்
    வீட்டுக்காரர் கண்ணில் தீப்பொறி!

    கூடி கும்மிபேச முடியாது
    பாடி பிள்ளையாட முடியாது
    சொந்தம் வந்தால்
    சொல்ல முடியாது
    பந்தமென்று தங்க முடியாது
    சத்தம் போட்டு சிரிக்க முடியாது
    சாவு விழுந்தால் அழவும் முடியாது.
    இத்தனை
    பற்றுதலை தவிர்க்க வேண்டும்
    அந்த
    பத்து தலை மனிதரால்!

    இந்த வீட்டுக்காரருக்கு சமம்
    பல சிங்கம் புலி கரடி!
    அவரின் கல்மனம்
    வள்ளுவனும் எழுத மறந்த ஈரடி!

    வீடு மாறி குடிபோனால்
    அடுத்த வீடும்
    அதே மாதிரி
    ஆண்டுக்கொரு வீடு பிடித்தும்
    அந்த மனிதரும் எதிரி!

    வீடு மாறும் வைபவம்
    நான் வாங்கி வந்த வரமோ?
    காடு மாறும் காலம் வரை
    எனக்கு நடக்கும் சாபமோ?

    ஓலை குடிசை ஒன்று
    சொந்தமாக்க
    கால் ஒத்ததடம் பதிக்க
    முடியாமல் போச்சு!
    அந்த
    வேதனைக்கு
    ஒத்தடம் கேட்டு தவிக்குது
    என் மூச்சு!

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9

    தேமொழி

    திமிர் கொண்ட அழகு

    உன் கண்ணில் தெரிவதென்ன
    நெருப்பா?
    என்னை சுட்டு வீழ்த்தச் செய்யும்
    குறும்பா?

    உன்
    உதட்டில் இருப்பதென்ன
    சிரிப்பா?
    என்னை அதட்டி அழைக்கும்
    அழைப்பா?

    உன் பேச்சில் சொல்வதென்ன
    இனிப்பா?
    என்னை உனதாக்கச் செய்யும்
    துடிப்பா?

    திமிர் கொண்ட தென்றல் காற்றே….
    உன்னைத் தேடி வந்தால்
    உன்
    புருவத்தில் ஏளனம் ஏற்றி
    என்
    பருவத்தில் தீ வைப்பதேனடி?

    பள்ளி அறை பாடம் நடத்த
    வெள்ளி நிலா தூண்டுதடி!
    ஊதக்காற்றும் ஒத்துழைத்து
    ஒதுங்கசொல்லி கூவுதடி!

    உன் சுட்டு விரல் அசைவு
    என்
    கட்டுப்பாட்டை நொறுக்கும்!
    உன் பட்டுப் பளிங்கு மேனி
    என்னை உள் மூச்சில் வதைக்கும்!

    பஞ்சமின்றி செழித்திருக்கும்
    அஞ்சுகமே!
    பட்டு நிலா வியப்புறும்
    பெட்டகமே!

    பொன்வண்டு அறியாது
    அதனுடைய அழகை…
    உன் கண் கொண்டு
    உற்றுப்பாரடி
    உன்னுடைய பேரழகை!

    வஞ்சனையின்றி வளர்ந்த
    உன் வதனம்!
    அதை
    இந்த மாமனிடம் தாரைவார்க்க
    ஏனடி மெத்தனம்!

    பொத்தி வைத்து ஆவதென்ன
    அந்த
    கன்னிமலை அதிசயம்!
    இனி
    ஒத்தி வைத்தால் தாங்காது என் உடம்பு
    இது சத்தியம்!

    காமன் கோயில் சாமிக்கு
    நான் யாசிப்பது கேட்கலியா
    தீர்த்து வைக்க தேவிக்கு
    மாமன் மையல் புரியலியா!

    -தனுசு-

     
    ஓவியம்: தேமொழி
    கவிதை: கவிஞர் தனுசு

     

     
    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10                                                      வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8>>

    Share
  • நட்சத்திர பரிதாபம்

     

     

    -தனுசு

     

    நாயும் அனாதையும்
    இங்கு
    ஒன்றானதடா!
    நாதியற்ற ஜீவன்களுக்கு
    வீதியே வீடடா!

    பேயும்
    பிசாசும்
    ஊருக்குள்ள வாழுதடா!
    மனித நேயமிங்கு
    மண்ணாகி நாறுதடா!

    நண்டு
    சிண்டு
    தடி
    கைத்தடி
    ஊருக்குள்
    அடங்காமல் ஆடுதடா!

    வியர்த்து
    களைத்து
    ஓடி
    உழைக்கும்
    உயிரெல்லாம்
    அடங்கிக் கிடக்குதடா!

    ஐந்தாண்டு திட்டங்கள்
    ஆரம்பமாச்சு
    அது
    ஐந்தாண்டுக்கொரு முறை
    புதுப்பிக்கலாச்சு
    ஐம்பதாண்டாய் இதே பேச்சு
    இன்று
    வேலைக்கு கூலியென்றாச்சு.

    நரிக்கூட்டம் நாட்டையாளும்
    நாடகத்தில்
    தொலை நோக்கு
    வறுமை போக்கு
    என்பெதெலாம் நடிப்படா!
    நம்பியிருக்கும்
    நாமெல்லாம்
    கண்டு களிக்க
    நடத்தும் கூத்துடா!

    அணு உலைக்கும்
    அரிசி விலைக்கும்
    பாதுகாப்பு இல்லையடா!
    இதில்
    ஏழைக் கிழவிக்கும்
    வாயில்லா ஜீவனுக்கும்
    எதிர்பார்த்தால்
    நீ ஒரு ஏமாளியடா!

    கருவறையும் இருட்டுடா
    கல்லறையும் இருட்டுடா
    இடைப்பட்ட பயணத்தில்
    வெளிச்சம் தருபவன் மனிதனடா!

    பணம்
    பதவி
    பட்டம் கொடுக்குமடா
    உயிர் விட்டால்
    பிணம்
    எனும் பட்டம்
    அனைவருக்கும் பொதுவடா!

     

    Share
  • குட்டி தேவதை

     

    -தனுசு

     

    என்
    தோள் மீது சாய்ந்தால்
    அவளுக்கு இன்பம்
    என்
    மார் மீது படுத்தால்
    அவளுக்குப் பேரின்பம்.

    என் அணைப்பு
    அவளுக்கு ஆனந்தம்
    என் முத்தம்
    அவளுக்குப் பேரானந்தம்.

    என் மடியில் கிடப்பது
    அவளுக்குப் பிடிக்கும்
    நான் இல்லையென்றால்
    அவள் இதயம் துடிக்கும்.

    என் பெயர்
    அவளுக்கு வேதம்
    என் நெருக்கம்
    அவள் உயிரின் நாதம்

    அவள்
    எனக்குப் பிடித்த கவிதை
    அவள்
    எனக்குப் பிடித்த ஓவியம்.

    பாலூறும் முகம்
    தேனூறும் பேச்சு
    கள்ளூறும் பார்வை
    கொட்டி வைத்திருக்கும்
    இந்தப் பாவைக்கு…..

    ஒரு சின்னப் பா
    எழுத வேண்டும்
    அவளின்
    முதலாம் பிறந்த நாளுக்கு

    ஒரு வரி சொல்லுங்களேன்…..
    அவளின்
    இந்த
    அன்புள்ள அப்பாவுக்கு.

     

    படத்துக்கு நன்றி: http://kranantistraphotography.blogspot.com/

     

    Share
  • சுண்டு விரலின் ஏக்கம்

     

    -தனுசு

     

    ப்ரியமான மகளே…
    வளர்ச்சி அடைந்தால்
    இடைவெளி உண்டாகிவிடுமா?
    நீ வளர்ந்ததால்
    நமக்குள்ளும் அதுதான் உண்டானதா?

    என் சுண்டு விரலின் ஏக்கம்
    நீண்டு கொண்டே போகிறது.
    அது
    உன்னோடு கட்டுண்டு இருந்த காலம் நினைத்து
    இன்னும் ஒரு
    தாகம் தருகிறது.

    படரத் துடிக்கும் கொடிபோல்
    முளைக்கத் துடிக்கும் விதை போல்
    நீரை விட்ட மீன்போல்
    உன் விரல்களின் ஸ்பரிசம் இல்லாததால்
    என் சுண்டு விரல் படும் அவஸ்தை
    எதை என்று சொல்ல…

    என் கட்டை விரலாலேயே
    அந்தக் குட்டை விரலுக்கு
    ஆறுதல் அளிக்கிறேன்.
    அன்பின் உச்சத்தில்
    அன்று நீ பெற்ற முத்தங்கள்
    இன்று
    ஆதங்கத்தில்
    அந்த விரலே பெறுகிறது.

    அன்றைய
    நம் அன்பின் சுவாசத்தை முகர
    இன்று
    அந்த விரலையே முகர்ந்து பார்க்கிறேன்.
    இன்னும்
    அன்றைய ஆசையில்
    அதனிடம் பேசவும் செய்கிறேன்.

    உன்
    பஞ்சு போன்ற
    அஞ்சு விரலின் நினைவு
    என்
    நெஞ்சுக் கூட்டை அரிக்குது!
    உன்
    பிள்ளைப்பருவ
    பிஞ்சு விரல்கள்
    பிரிஞ்சு போனதால்
    எனக்கு
    நஞ்சுகூட இனிக்குது!

    எனை தாங்க ஒரு கைத்தடி
    எனக்காக காத்திருக்கும் மண்ணின் ஆறடி
    இவைகளை நான் தொடும் முன்…
    மீண்டும் ஒரு வசந்தமோ
    அவைகளை தொட்ட பின்…
    மீண்டும் ஒரு பிறவியோ
    எனக்கு வேண்டாம்

    ஒரு நிம்மதி பெருமூச்சு வேண்டும்!
    அது
    என் சுண்டு விரல் நீ பிடிக்க
    நாம் நடக்க
    என் இதயம் அடைய வேண்டும்.

     

    படத்துக்கு நன்றி: http://pmbl.deviantart.com/art/Pinky-promise-212631494

     

    Share
  • ஜகதலப்பிரதாபன்!

    -தனுசு

     


    கரைவேட்டித் தலைவா!
    உன்
    புகழ்பாட வரவா!
    கல்கண்டு மொழியா!
    உனைப் போற்றி
    சொல்கொண்டு வரவா!

    அருவியெனக் கொட்டும்
    தேன்
    உரை வீச்சு நீயே!
    உச்சி வெய்யிலில்
    ஊரைக் கூட்டும் கவர்ச்சியும் நீயே!

    உன் சதா சிரிப்பும்
    வெள்ளை வனப்பும்
    என் உள்ளம் கவர்ந்ததென்றால்…
    உன்
    மாதர் பக்தியும்
    முதியோர் அணைப்பும்
    என்னை மெய்சிலிர்க்க வைக்கும்!

    ஊருக்கொரு சாலை தருவாய்
    பொது நலம் கொண்டு!
    அதில் ஊருக்குள் பரந்துகிடக்கும்
    உன் நிலத்திற்கு
    விலையேற்றும் சுயநலம் உண்டு!

    உன் மித மிஞ்சிய பணம்
    தேடுமிடம் பங்குச்சந்தை!
    நேர் கணக்குக்கு
    அஞ்சிய பணம்
    நாடுவதோ உலக வங்கிச்சந்தை!

    மாலை மணி மரியாதை
    தேடிடும் உனக்கு
    சமயத்தில்
    முதலில் கிடைப்பது
    காலணி மரியாதை!

    வேட்டியை மடித்துக் கட்டினால்
    தமிழனுக்கு வீரன் என அர்த்தம்!
    உன் வேட்டி உயர்ந்தால்
    அது
    கிழியப்போவதாய் அர்த்தம்!

    ஏழைப்பங்காளன் நீ…
    வெள்ள நிவாரணத்தில் ஒதுக்கியதால்!
    புரட்சியாளன் நீ…
    வறட்சி நிவாரணத்திலும் ஒதுக்கியதால்!

    ஆனால்
    எந்த தேர்தல் உன்னை ஒதுக்கினாலும்
    எந்த மாறுதலும் இல்லாமல்
    இந்த ஜகத்தை அதகலப்படுத்தும் பிரதாபா
    உன்
    மக்களாட்சி தத்துவம் எனக்குப் பிடித்திருகிறது!

     

    படத்துக்கு நன்றி: http://www.padaipali.net/2011/08/blog-post_12.html

     

    Share
  • எனக்குள் வந்த இன்னுமொரு உயிர்!

     

    -தனுசு

     

    எனக்குள்
    நீ
    எப்படி வந்தாய்?
    என்னை
    நீ
    எப்படிச் சேர்ந்தாய்?
    அது
    எனக்கே தெரியவில்லை!

    நீ வந்ததால்
    என் வாழ்க்கை மாறியது
    நீ சேர்ந்ததால்
    என் செய்கையும் சிந்தனையும்
    உன்னுள் அடங்கியது.

    துள்ளிக்குதித்த இந்த ஜல்லிக்கட்டு காளை
    கடிவாளம் பெற்று
    இன்று
    உன் கைப்பிடியில்.
    சொல்லி அடித்த இந்த வரிப்புலி
    வீரம் மறந்து
    இன்று
    உன் காலடியில்.

    பால்மடி தேடும்
    கன்றுக்குட்டியாகி
    நாளும் பொழுதும்
    உன்னைத் தேடுகிறேன்!
    அந்தத் தேடல்
    ஒவ்வொன்றிலும்
    உன்னைப் பார்க்கிறேன்!
    உன்னிலும்
    ஒவ்வொன்றையும் பார்க்கிறேன்!

    கருவண்டைப் பார்த்தால்
    கண்களின் ஞாபகம்!
    மழைமேகம் பார்த்தால்
    கருங்கூந்தல் ஞாபகம்!

    இன்னும்
    பூவை
    பூங்காற்றை
    நிலவை
    இவைகளைக் காணும் போதெல்லாம்
    உன் ஞாபகம்.

    அந்த ஞாபகம்
    அடி மனதில் அம்மி மிதித்து
    போர்க்களம் வென்ற மன்னன்
    அந்தப்புரம் சென்றால்
    கிடைக்கும் இன்பம் போல் இனிக்கும்!

    என்
    நெஞ்சில் வசிக்க நீ வந்ததால்
    வேறு வஞ்சிக்கு இனி இடமில்லை!
    நான்
    புசிக்க நீ இருப்பதால்
    வேறு பசி எனக்கு தெரிவதில்லை!

    எத்தனை எத்தனை செய்கிறது
    உன் மந்திரம்!
    அதன் முன்
    மற்றதெல்லாம் எம்மாத்திரம்!

    நீ
    என் மனம் விரும்பும்
    மாலை நேரத்து மதுக்கிண்ணம்!
    உன்
    நடை பார்த்து
    நடை பழகும் அன்னம்!

    நீ
    என் சிந்தையில்
    அமர்ந்த சிற்பி
    என் எழுத்தால் உன்னைச் செதுக்க
    இன்னும் எனக்கு கற்பி!

    நீ
    என் மூளைச் செல்கள் அனைத்திலும்
    முளை விடும்
    ஒரே விதை!
    அதுதான்
    இந்த பாமரனை
    பா மகனாக்கிய
    நீ எனும் நான் விரும்பும் தமிழ்கவிதை!

     

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2012/04/8307785-valentine-s-day-concept-lovebirds-flying-around-love-hearts.jpg

     

    Share
  • அன்றைய நினைவில்…….

     

    தனுசு
    என் ஊரில்
    ஆறு இருந்தது
    யார் ஆண்டாலும் கவலையின்றி
    நிரம்பி வழிந்தது.

    என் ஊரில்
    குளம் இருந்தது
    மழை பெய்தாலும் பொய்த்தாலும்
    பாழாகாமல் பெருமை காத்தது.

    என் ஊரில்
    வாய்க்கால் இருந்தது
    எக்காலத்திலும் தப்பாமல்
    தெளிந்த நீரில் சலசத்தது.

    இந்த இருந்தது எல்லாம்
    இன்று
    இல்லை.

    அதனால்
    ஊர் ஜனம் கஷ்டப்படவுமில்லை.

    அவை
    கல் குவாரியும்
    மணல் குவாரியுமாக மாறி
    பணம்
    மும்மாரி பொழிவதால்

    அந்த
    நீர் ஆதாரம் தேடி
    அன்று வந்த ஆடும் மாடும்
    இன்று
    விலை பேசி
    வேறிடம் போனது பாதுகாப்பாய்.

    அந்த நீரில் குத்தாட்டம் போட்ட
    விளையாட்டுப் பிள்ளைகள்
    புது திடல் பெற்றதால்
    நீர் தடம் மறந்து போனார்கள்.

    ஆனால்
    அன்று அதில்
    மீன் கொத்தி வாழ்ந்த
    கொக்கும் நாரையும் மட்டும்
    அந்த நீரை தேடித் தேடி சுற்றி வருகிறது
    அன்றைய நினைவில்!

     

    படத்துக்கு நன்றி: http://www.birding.in/birds/Gruiformes/Gruidae/siberian_crane.htm
    Share
  • 2013

    -தனுசு-

     

    எங்களோடு சேரும்
    இன்னுமொரு என் நண்பனே
    உனக்கு
    வரவேற்பு முதலில்
    வருக! வருக!!

    ஒவ்வொரு ஆண்டும் சேரும்
    ஒவ்வொரு நண்பனும்
    ஒவ்வொரு வகையில்
    எங்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறான்!

    அந்த வகையில்
    இன்று எங்களோடு கை கோர்க்கும் நீ
    எங்கள் கரம் பற்றி
    கொண்டு செல்….

    குற்றம் தவிர்த்து
    சுற்றம் சேர்த்து
    பற்றை வளர்த்து
    பஞ்சம் போக்கி
    வன்மம் நீக்கி
    நெஞ்சை நிமிர்த்தி
    வீரம் வளர்த்து
    வெற்றி படைத்து வாழ!

    இதுவரை நாங்கள்
    சேர்த்த நண்பர்களில்
    நீயே
    முதல்வனாய் இரு!
    மூலவனாய் இரு!
    முன்னவனாய் இரு!
    மூத்தவனாய் இரு!

    எங்கள் இல்லங்களில்
    உன் பாதம் படத்துவங்கும்
    இந்த நேரத்தில் இருக்கும்
    உற்சாகமும் ஆணந்தமும்
    என்றென்றும் நீடித்திருக்க வேண்டுமென
    கூறிக்கொண்டு வா
    அனைவருக்கும்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

     

     


     

     

    Share
  • குறும்பா!

    -தனுசு-

     
    பக்கம் பக்கமாய்
    படித்த
    பாக்களெல்லாம்
    இன்றைய
    பறக்கும் உலகில் சுருக்கப்பட்டு
    ஆனது குறும் பா!

    அது
    கடுகு முதல் கடவுள் வரை
    அணு முதல் ஆழி வரை
    அத்தனையும் நயமாய்
    சொல்லவைக்கும் ரொம்ப குறும்பா!

    அதில்
    காரம் முதல் கனல் வரை
    காதல் முதல் காமம் வரை
    அத்தனையும் கண்டு
    சுவைக்கலாமடா என் செல்லக் குறும்பா!

    அதன் சுவைப்பற்றி
    சொல்ல
    நான் எதைக்கொண்டு வர…
    அட அட டா
    அது
    இனிக்கும் கரும்பின் அடிக் குறும்பா!

    Share
  • ரத்ததானம்

    தனுசு

    நண்பா
    உனக்கொரு வாய்ப்பு
    நீ
    தர்மத்தின் தலைவனாக.”தானத்தில் சிறந்த தானம்’
    இன்னதென்று
    ஆளுக்கொன்று சொல்கிறார்கள்.
    இன்றைய அதி வேக உலகம்
    சொல்வது
    ரத்ததானமடா!உன்னுள் ஊறும்
    அந்த ரத்தம்
    நீ
    உரமிட்டு வளர்க்கவில்லை
    விலை கொடுத்து வாங்கவில்லை
    அதை இறைக்க இறைக்க
    அது ஊற்றெடுத்து பெருகுமடா!

    இயற்கை கொடுத்த சீர் அது
    அதைக் கொஞ்சம்
    நீ
    பகிர்ந்து கொண்டால்
    உன்
    உடல் ஒன்றும் கோபத்தில் சீறாது!

    காயம் இது பொய்யடா
    அதற்குள் ஓடும்
    இந்த ரத்தம் அது மெய்யடா!
    அது தானாய் சேரும் திரவமடா
    அதை
    கொடையாக்க
    உனக்கொரு வாய்ப்படா!

    தெருவெங்கும் திரியும்
    இந்த விளம்பரம் பாரடா
    இவருக்கு நாம் என்ன குறைச்சலாடா?
    நாமும் கொடுப்போம்
    குருதியடா
    வள்ளல் எனும் பெயர் வாங்க

    இது
    சந்தர்ப்பமடா!
    படத்துக்கு நன்றி தினமலர் செய்தித் தாள்
    Share
  • என்னோடு ஒரு பொய்

    -தனுசு-

     

    “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்”
    இந்த பழமொழி
    எனக்கு
    உண்மையாகிவிடுமோ?

    பொய்
    இந்த ஈரெழுத்து வார்த்தை
    சில நேரங்களில் பலமாகவும்
    பல நேரங்களில் பக்க பலமாவும்
    என்னோடு….

    பள்ளிக்காலத்தில்
    விடுமுறைக் கேட்டு
    எழுதிய கடிதத்தில்
    செத்தவர்களையே சாகடித்தது
    எத்தனை முறை!

    வாலிபத்தில்
    காதலை கைக்கொள்ள
    காதலியிடம் அளந்துவிட்டது
    எத்தனை முறை!

    ஊர் சுற்ற தாயிடம்
    சொன்னது எத்தனை முறை!
    காசு பறிக்க தந்தையிடம்
    எத்தனை முறை!

    எல்லாம் முடிந்து
    ஒரு வாழ்க்கை
    அமைந்த பின்னும்
    இந்த பொய்
    இன்னும் சில நேரங்களில்
    என்னோடு….

    கடிதத்தில்
    காதலில்
    தாயிடம்
    தந்தையிடம் கட்டுருண்ட பொய்
    இன்று
    கைப்பேசியில்!

    தவிர்க்க வேண்டிய நேரத்தில் வரும்
    தவிர்க்க முடியா ஒரு அழைப்பு!
    அதனை துண்டிப்பதற்கு
    தவிர்க்க முடியாமல்
    ஒரு
    பொய்யையும் கொண்டுவந்து சேர்க்கிறது
    என்னோடு…

    முக்கிய சந்திப்பில் இருக்கிறேன்
    வாகனத்தை ஓட்டுகிறேன்
    தொடர்பு இல்லை
    பேட்டரி இல்லை
    இப்படியாக…..

    இங்கு
    பொய்யின் உருவம் மாறவில்லை
    ஆனால்
    உருவகம் மாறி
    என்னோடு…..

    “பொய்மையும் வாய்மை இடத்தே”
    எனும் வாக்கு
    குற்றமின்றி கரை சேர்க்க
    கை கோர்க்கிறதோ
    என்னோடு….

    பொய்
    புலவனுக்கும்
    கவிஞனுக்கும்
    தொழில் முறையில் உறவு!
    இந்த யுவனுக்கு
    இது எந்த முறையில் உறவு?

    அசர வைக்கும் உலகில்
    அதன்
    அசுர வேக ஓட்டத்தில்
    ஒரு
    அவசர பொய் எனும் புனை
    இல்லாமல் இருக்காதா கைபேசி உலகம்!

     

    Share
  • பனித்துளி சுமக்கும் புற்கள்

    தனுசு

    அதிகாலை நேரம்
    பசும் புல்வெளி மீது
    படுத்துறங்கும் பனியே
    உன்னையும் புல்வெளியையும்
    இணைத்துத் தான்
    எத்தனை எத்தனை கவிதை
    நானும் பாடுவது….

    அன்றொரு நாள்
    “இதோ இந்த அருகம் புல்
    இரவு முகூர்த்தம் முடித்து
    அதிகாலையில்
    தலை குளித்துவிட்டு
    வருகிறது” என்று எழுதினேன்

    அடுத்தொரு நாள்
    “என் நிலாக் காதலியின்
    அழகைப் பார்த்ததால்
    அவமானப்பட்டு பச்சைப்புற்களின்
    நுனி மூக்கு வேர்க்கிறது” என்று எழுதினேன்

    நேற்றைக்கு
    “நிலவோடு
    நேசக்கலவையின்
    இச்சை முடியாத போது
    இரவுப்பொழுது முடிந்து விட்டதை எண்ணி
    பச்சைப் புற்கள்
    கண்ணீர் சிந்துகிறது” என்று எழுதினேன்

    இன்று
    “என் குலப் பெண்கள் திருவிழாவில்
    கரகமும் கலசமும் சுமப்பது போல்
    அதிகாலையின் இயற்கைத் திருவிழாவில்
    அருகம் புற்கள்
    பனிக்குடம் சுமக்கிறது” என்று எழுதினேன்

    நாளை
    “பருவ அடையாளங்களை
    தாங்கி நிற்கும் குமரியைப் போல்
    நீர்த் திவலையைத் தாங்கி நிற்கும்
    பச்சைப் புற்கள்” என்று எழுதுவேன்

    இன்னும் எழுதுவேன்
    அதற்கும் முன்
    ஒரு
    உண்மையை யாராவது சொல்லுங்களேன்…

    பருவப்பெண்ணின்
    ஈர அதரங்களைத் தொட்டால் கூசி சுருங்குவது போல்
    அதிகாலையில்
    பனிப் பச்சையின் ஸ்வாசம் முகர்ந்து
    இவைகளை ருசிக்கும்போது
    குளிரும் சிலிர்ப்பால்
    கூச்சமடையும் என்னை…..

    அவைகளை
    தினந்தோறும் கவி எழுதும் என்னை…..

    அந்த புற்கள்
    நிமிர்ந்து பார்க்காமல்
    குனிந்த தலையோடு இருக்க….

    பகலின் வெளிச்சம் படும் போது
    பனி விலக்கி
    அந்த சூரியனுக்கு மட்டும்
    அழகிய புற்கள்
    நிர்வாண தரிசனம்
    தருகிறதே அது ஏன்?

     

    Share