-தனுசு
எனக்கொரு ஆசை
இந்த நாட்டுக்கு ராஜாவாவது அல்ல!
ஒரு வீட்டுக்கு
சொந்தமாவது!
அது
சொந்த வீட்டின் ஆசையில் அல்ல
வாடகை வீட்டின் இம்சையில்!
இங்கு
மின்சாரத்துக்கு ஒரு கட்டுப்பாடு
நீருக்கும் அதே கூப்பாடு
வாடகையில் மட்டும் குறி
தாமதிக்கும் பொழுதெல்லாம்
வீட்டுக்காரர் கண்ணில் தீப்பொறி!
கூடி கும்மிபேச முடியாது
பாடி பிள்ளையாட முடியாது
சொந்தம் வந்தால்
சொல்ல முடியாது
பந்தமென்று தங்க முடியாது
சத்தம் போட்டு சிரிக்க முடியாது
சாவு விழுந்தால் அழவும் முடியாது.
இத்தனை
பற்றுதலை தவிர்க்க வேண்டும்
அந்த
பத்து தலை மனிதரால்!
இந்த வீட்டுக்காரருக்கு சமம்
பல சிங்கம் புலி கரடி!
அவரின் கல்மனம்
வள்ளுவனும் எழுத மறந்த ஈரடி!
வீடு மாறி குடிபோனால்
அடுத்த வீடும்
அதே மாதிரி
ஆண்டுக்கொரு வீடு பிடித்தும்
அந்த மனிதரும் எதிரி!
வீடு மாறும் வைபவம்
நான் வாங்கி வந்த வரமோ?
காடு மாறும் காலம் வரை
எனக்கு நடக்கும் சாபமோ?
ஓலை குடிசை ஒன்று
சொந்தமாக்க
கால் ஒத்ததடம் பதிக்க
முடியாமல் போச்சு!
அந்த
வேதனைக்கு
ஒத்தடம் கேட்டு தவிக்குது
என் மூச்சு!










