Tag: புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்

  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 39

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 39

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பேசாத வாய் பேசிய உவமங்கள்!

    முன்னுரை

    பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் உவமம் பற்றிய ஆய்வு உவம இயல், அகத்திணை இயல், பொருளியல் முதலியவற்றில் நிகழ்ந்திருப்பதால் உவமம் பொருட்பகுதியாகவே கருதப்படும் என்பது அறிஞர் கருத்து. அகத்திணைக் கூறுகளான உள்ளுறை, இறைச்சி ஆகியன உவமத்தின் நுண்ணியச் செறிவுகள் ஆதலின் உவமம் பெரும்பாலும் அகத்திணைப் பாடல்களிலேயே பயன்பட்டு வந்திருக்கக்கூடும் என்பது ஒரு வலுவான அனுமானம். தொடர்ந்து உவமங்கள் புறச்செய்திகளைக் கூறவும் பயன்படத் தொடங்கின என்பது இலக்கிய வரலாறு காட்டும் உண்மை. இதனையும் தொடர்ந்து பக்தியுணர்ச்சியை வெளிப்படுத்தவும் அது பயன்பட்டு வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து நீதிநெறிகளை விளக்கவும் பயன்பட்டு வந்திருக்கிறது என்பது திருக்குறள் தொடங்கிய நீதி நூல்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும். அந்த வகையில் சைவப்பெருந்தகை குமரகுருபரர் அவர்கள் பாடிய நீதிநெறி விளக்கம் என்னும் நூலில் பயின்றுள்ள சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    விறகுக்கும் ஆகாத நெடுமரம்

    ஒரு நூலை மங்கலத்தில் தொடங்கி மங்கலத்தில் நிறைவு செய்வது என்பது தமிழிலக்கிய நெடிய மரபின் ஒரு பகுதி. ‘உலகம்’ என்ற சொல் எந்தெந்த இலக்கியங்களில் தொடக்கமாக அமைந்திருக்கிறது என்பதையெல்லாம் அறிஞர்கள ஆய்ந்திருக்கிறார்கள். அதுபோலவே உவமத்திலேயே தொடங்கிய இலக்கியங்களையும் அடையாளம் காணமுடியும். ‘அகர முதல’ என உவமத்திலேயே இறைவனுக்கு உண்மை கூறினார் திருவள்ளுவர். ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு” என்பது திருமுருகாற்றுப்படையின் தொடக்கம்.  இன்னும் பல., உரைப்பின் பெருகும். இந்த மரபைக் குமரகுருபரரும்  இறைவணக்கத்திலேயே பின்பற்றுகிறார்.

    “நீரில் குமிழி இளமை., நிறைசெல்வம்
    நீரில் சுருட்டும் நெடுந்திரை – நீரில்
    எழுத்தாகும் யாக்கை நமரங்காள்! என்னே
    வழுத்தாத எம்பிரான் மன்று? “ (நீ.நெ.வி.4)

    நில்லாத இளமை நீர்க்குமிழிக்கு ஒப்பாகும். முக்காலத்தும் நிறைந்தாலும் செல்வம் காற்றால் மொத்துப்பட்டலையும் அலைகளுக்கு ஒப்பாகும். ஒப்பனையால் பொலிவு பெறும் உடம்பு நீர் மேல் எழுதப்படும் எழுத்துக்கு ஒப்பாகும். இவ்வளவு உண்மைகளை அறிந்திருந்தும் நிலையான இறைவனை அவன் நிற்கும் திருக்கோயில் சென்று வணங்காதது ஏன்? என்பதுதான் குமரகுருபரரின் வினா. இளமைக்கு நீர்க்குமிழியையும் செல்வத்திற்குத் திரைகளையும் அழியும் உடம்பிற்கு நீர் மேல் எழுத்தையும் கடவுள் வாழ்த்திலேயே கூறும் குமரகுருபரர், நூல் தொடக்கத்தில் உவமப் பயன்பாட்டிலும் உவமங்களிலும் மரபினையே பின்பற்றுகிறார் என்பது கூடுதல் தகவல்.

    மலர் பொன்னானால் மணம் என்னாகும்?

    சில நூல்களில் பயின்றுள்ள சொற்களும் தொடர்களும்  உவமங்களும் உத்திகளும் நம்மையுமறியாமல் நம் ஆழ் மனத்துள் சென்று தங்கிவிடும். அவ்வாறு தங்கிவிடுவதுதான் அதன் சாயல், பின்னாலே வரும் படைப்புக்களில் வெளிப்படுத்தித் தலைக்காட்டுவதற்குக் காரணமாகும். இது நகலெடுப்பதன்று. தாயின் சாயல் பிள்ளைக்கு வருவது போன்றது. திருவள்ளுவர் சொல்லாற்றலைப் பற்றிச் சுருக்கமாகத் தெளிவாகச் சிந்தித்திருக்கிறார்.

    “இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
    உணர விரித்துரை யாதார்” (கு.எண்.650)

    இந்தக் குறள் சொல்வன்மையின் சிறப்பினை எதிர்மறையால் கூறுகிறது. ‘பூங்கொத்தின் பயன் அதன் மணம்’ என வரையறுக்கிறது. மணம் இல்லாவிடின் பூங்கொத்துக்களினால் பயனில்லை என்பதைக் குறிப்பாகச் சொல்கிறது. இந்தச் சிந்தனையின் நீட்சியாக நீதிநெறி விளக்கத்தில் பின்வரும் பாடல் அமைந்திருப்பதாகக் கருதலாம்.

    “எத்தணைய ஆயினும் கல்வி இடனறிந்து
    உய்த்துணர்வு இல்லெனின் இல்லாகும் – உய்த்துண்ர்ந்தும்
    சொல்வன்மை இன்றெனின் என்னாம்? அஃதுண்டேல்
    பொன்மலர் நாற்றமுடைத்து” (நீ.நெ.வி. 5)

    திருவள்ளுவர் உவமத்தை எதிர்மறையாகக் கூறிப் பொருட்சிறப்பையும் அவ்வாறே பெறவைத்தார். குமரகுருபரர் பொருட்சிறப்பை எதிர்மறையாகக் கூறி உவமத்தின் சிறப்பை உடன்பாட்டில் பெற வைக்கும் நுண்ணியம் உணர்க. ‘மணக்காத பூவால் பயனில்லை’ என்பது வள்ளுவர் விளக்கம். உயர்த்துணர்வதும் உய்த்துணர வைப்பதும் இல்லாயின் கல்வியினால் பெருமையில்லை என்பது நீதிநெறி விளக்கம். ஆயினும் திருவள்ளுவர் உணர வைப்பதையே பொருளாகக் கொள்ள, குமரகுருபரர் உணர்வதையும் உணர வைப்பதையும் பொருளாகக் கொள்கிறார். கொண்டு உணரும் திறனை அதாவது ‘எண்பொருளவாகப்’ பிறர் சொல்லும் நுண்ணியங்களை உணரும் கற்றவனைப் பொன்மலரோடு ஒப்பிடுகிறார். இந்த ஒப்பீடு திருக்குறளில் இல்லை. நாறா மலரைத்தான் திருக்குறள் காட்டுகிறது. பொன்மலரை நீதிநெறி விளக்கம் காட்டுகிறது. பூ மணம் பூமணமாகவே இருக்கும். ஆனால் பூ பொன்னாலானால் மணம் எவ்வாறு இருக்கும் என்பதை யாரும் உணர முடியாது. காரணம் உவமம் இல்பொருள். இவ்வாறு இல்பொருளைக் குமரகுருபரர் உவமமாகக் சொன்னதற்குக் காரணம் அரியது நோக்கி. அதாவது உணர்வதும் அவ்வாறு உணர்ந்ததைப் பிறர்க்கு உணர்த்துவதும் அரிய செயல். எனவே அத்தகையோர் அரியர். எனவே இல்பொருள் உவமமாக்கப்பட்டுள்ளது.  மேலும் திருக்குறள் ஒரு பொருள் பற்றி ஆராய, நீதிநெறி விளக்கம் இருபொருள் பற்றி ஆராய்வது சிந்திக்கத்தக்கது.

    பிணம் விட்ட பெருமூச்சு!

    பிணம் பெருமூச்சு விடுமா? விடாது. கருத்து என்னவென்றால் பெருமூச்சு விடுவதனாலேயே அது உயிர்பெற்ற மனிதனாகிவிட முடியாது என்பதுதான். பெருமூச்சுவிடுவது அதன் இருப்புக்கு அடையாளம். அவ்வளவுதான். ஆற்றல் மிகு உரையாசிரியர் பரிமேலழகர் ஒரு சில குறட்பாக்களுக்குச் சொல்லுக்குச் சொல் விளக்கவுரை எழுதியிருப்பார். அவற்றுள் ஒன்று,

    “ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவும்ஓர் நோய்” (கு.எண். 848)

    என்னும் குறட்பாவாகும். இதற்குப் “புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்;  அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம்” எனப் பதசாரம் எழுதி,

    “உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருடல் தன்மைத்தாய் வேறுபடுதலின், ‘அவ்வுயிர்’ என்றும், அதனின் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் ‘போமளவும்’ என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் ‘ஓர் நோய்’ என்றும் கூறினார்”

    என்று விளக்கவுரை தருகிறார் பரிமேலழகர். ‘அவ்வுயிர்’ என்னும் சேய்மைச்சுட்டால் சுட்டியதும் ‘அவன் இருக்கும் வரை’ என்னாது ‘அது போகிறவரை’ என உயிரை அஃறிணையாக்கி உரைத்ததும் ‘போஒம்’ எனச் செய்யுளிசை அளபெடையை ஒரு நோக்கத்துடன் பயன்படுத்திக் கொண்டதுமான திருவள்ளுவரின் சதுரப்பாடு மிகவும் உயர்ந்ததாம். இந்தக் கருத்தினை உள்வாங்கிய அல்லது இதனால் ஈர்க்கப்பட்ட குமரகுருபர சுவாமிகள்,

    “முடிப்ப முடித்துப் பின் பூசுவ பூசி
    உடுப்ப உடுத்து உண்ப உண்ணா – இடித்திடித்துக்
    கட்டுரை கூறின் செவிகொளா! கண்விழியா!
    நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம்” (நீ.நெ.வி.31)

    என்னும் ஒரு வெண்பாவை எழுதியிருக்கிறார். ‘நினைத்தவாறே ஒழுகித், தான் நினைக்கின்ற செயல்களையே செய்து முடித்துப், பூசுவன பூசி, உடுப்பன உடுத்து, உண்பனவற்றை உண்டு என்று தன்னிச்சையாகவே செயல்படும் ஒருவனுக்கு அவனிழைக்கும் தவறைப் பிறனொருவன் சுட்டிக்காட்டினால் செவி கேளாது. கண்ணும் குருடாகும். ஆதலின் அவன் பெருமூச்சுவிடும் பிணத்திற்கு ஒப்பாவான்” மேலே சுட்டிய திருக்குறள் மற்றும் நீதி நெறி வெண்பாக்களின் கருத்தொற்றுமையைக் கற்பார் எளிதில் புரிந்து கொள்ளலாம் எனினும் நடைப்பிணம் கிடைப்பிணமாகும் நாளை திருவள்ளுவர் எதிர்நோக்க, ‘பெருமூச்சும் நிற்காதா?’ என்று குமரகுருபரர் பெருமூச்சு இடுவதை உணரமுடிகிறது. தானாகவும் தெரியாது பிறர் சொல்வதைக் கேட்கவும் மறுதலித்துத் தனக்கும் உலகத்துக்கும் துன்பமாகித் திரிபவர்களுக்கான உவமம் இருபெரும் சான்றோர்களுக்குப் பெரும்பாலும் ஒத்திருப்பது வியப்பானதன்று!

    உடையார் முன் இல்லார்

    தமிழகத்தில் கல்வி பெறுவதில் இருவகை முறைகள் இருந்திருக்கலாம். குருவிற்குக் கொடுத்துப் பெறுவது. பிச்சையெடுத்தாகினும் கல்வி பெறுவது. இரண்டினையும் உறழ்ந்து நோக்கினால் குருவிற்குக் கொடுப்பதற்காகப் பிச்சையெடுப்பது நிகழ்ந்திருக்கக்கூடும். இரந்தும் உயிர் வாழ்தற்கு இது மாறானது. உயிர்வாழ்தற்குப் பிச்சையெடுப்பது இழுக்கு. கல்வி பெறுவதற்குப் பிச்சையெடுப்பது ஏற்புடையது என்பது பழந்தமிழ்ச் சான்றோர் கொள்கை.

    “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே”

    என்னும் புறநானூறும்,

    “கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே”

    எனக் கற்றலை அடுக்கில் கூறிப் பின்னரும் அனுவதித்த வெற்றி வேற்கையும் இத்தகைய எண்ணங்களையே ஏற்படுத்துகின்றன. ‘சிற்றுயிர்க்கு உற்ற துணையாதலின்’ கல்வியின் பெருமை இம்மை மட்டும் சார்ந்தது அன்று உயிரோடு சார்ந்தது’ என்பது பெறப்படும். படவே அது ‘எழுமையும் ஏமாப்புடைத்து’ என்பதும் புலப்படும். படுதலின் கல்லாமையின் இழிவையும் கல்வியின் பெருமையையும் பன்முக உத்திகளில் பாடும் நிலை சான்றோர்க்கு வந்திருக்கிறது என்றே எண்ண வேண்டியதிருக்கிறது. ‘கல்வியழகே அழியா அழகாதலின்’ அதன் சிறப்பு நோக்கி வலியுறுத்தும் போக்கினையே காண முடிகிறது. ‘உடைமை செல்வம்’ என்றால் ‘இன்மை வறுமை தானே! கல்வியைப் பெற்றவர்கள் கல்விச் செல்வத்தில் உயர்ந்தோர். கல்வியைப் பெறாதார் அது இல்லாமையின் வறியர். வறியர் செல்வரிடத்தில் இரப்பது இயல்பு. இதனைத்தான் திருவள்ளுவர்,

    “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
    கடையரே கல்லா தவர்.” (கு.எண்.395)

    என உவமமாக்கியுரைக்கிறார். இந்த உவமத்தால் கவரப்பட்ட குமரகுருபரர் திருவள்ளுவரின் பொருள் செயல்வகை என்னும் அதிகாரக்கருத்தினையும் ஒருசேரத் தழுவி எழுதுகிறார் இப்படி!

    “கல்வி யுடைமை பொருளுடைமை என்றிரண்டு
    செல்வமும் செல்வம் எனப்படும் – இல்லார்
    குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமும்
    தலைவணங்கித் தாழப் பெறின்” (நீ.நெ.வி. 16)

    இந்த வெண்பாவில் கல்வியையும் செல்வத்தையும் செல்வம் என அடையாளப்படுத்தியதில் அவ்வளவாகச் சிறப்பில்லையெனினும் இரண்டு குறட்பாக்களை நினைவுபடுத்துகிறார் குமரகுருபர். திருவள்ளுவர் கல்வியைப் பெறுதற்குக்  காட்டிய உவமத்தைப் பொருளுக்கும் காட்டுவது புதிய உத்தி எனலாம். ‘குறையிரந்து தம் முன்னர் நிற்பபோல்’ என்பது திருவள்ளுவர் கல்வியிலார் அதனைப் பெறுதற்குச் செல்வர்க்கு முன்னால் நிற்கும் நிலையைக் காட்டிய உவமம். திருவள்ளுவர் மிக நுட்பமாக அந்தக் குறட்பாவில் செய்திருக்கும் பதிவு நேர்த்தியை ஒரு துறைக்குச் சொல்லப்பட்டது போல் காட்டப்பட்ட அந்த உவமத்தை இரு துறைக்கும் தெளிவாகக் காட்டிய குமரகுருபரர்,

    “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வந் தகைத்து” (கு.எண். 125)

    என்னும் குறட்பாவின் கருத்தையும் உள்வாங்கியிருப்பதோடு பொருத்தமாக இருக்குமானால் ஒரு பொருளை விளக்குதற்கான  உவமத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்னும் உவமக் கோட்பாட்டையும் அறிமுகம் செய்திருக்கிறார் என்பதற்கும் சான்றாகத் திகழ்கிறது.

    சிந்திய பருக்கையால் செழித்திடும் உயிரினம்

    குருடர்கள் தடவிய யானையைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால்  முழுயானையைப் பாடிய கவிஞர்கள் கூட ஒரே மாதிரி நோக்கவில்லை என்பதையும் ஒரே புலவர் கூட யானையைப் பலவகையாக நோக்கியிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது, திருக்குறளில் யானை பற்றிய குறட்பாக்கள் யானை, களிறு என்ற பெயர்களில் எட்டு இடங்களில் (24, 597, 678, 599, 758, 772, 774, 1087) கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த எட்டு இடங்களிலும் திருவள்ளுவரின் பார்வை மிக நுண்ணிய வேறுபாடுகளை உடையதாக அமைந்திருக்கிறது. விரிப்பின் பெருகும். எனினும் 597, 678, 599 ஆகிய மூன்று குறட்பாக்களிலும் அது உவமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்விடங்களிலெல்லாம் யானையின் பெருமிதத்தையும் வீரத்தையும் சுட்டுகின்றனவாகவே உள்ளன. ஆனால் புறநானூற்றுப் பாடல் ஒன்று யானைக்கு முறையாக இடப்படும் உணவுக் கவளத்தைக் காட்டி அதன் உண்ணும் முறையை உவமமாக்கியிருக்கிறது.

    “காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
    மாநிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்;
    நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
    வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
    அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
    கோடி யாத்து நாடுபெரிதும் நந்தும்;
    மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
    வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
    பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
    யானை புக்க புலம்போலத்
    தானும் உண்ணான் உலகமும் கெடுமே!” (புறம். 184)

    இந்தப் பாட்டில் யானை நேரடியாக உவமமாகக் கூறப்படவில்லை.   யானையை எப்படிக் கையாள வேண்டும் என்பதையே உவமமாக்கி அதனால் அரசன் செய்ய வேண்டிய ஆட்சிமுறைமையை விளக்குகிறார் புலவர் பிசிராந்தையார். முறையாக அளிக்கப்படுமாயின் யானை ஒழுங்காக உண்ணும். கட்டவிழ்த்துவிட்டால் கழனியும் பாழாகும். ஒட்டுமொத்த உலகமும் அழியும் என்பது கருத்து. இந்தப் பாட்டில் முறையாகக் கொடுக்கப்படும் கவளத்தை அது உண்கையில் சிதறும் பருக்கைகளைப் பற்றிய சிந்தனை குமரகுருபரருக்கு வந்திருக்கிறது. அவர் எழுதுகிறார்,

    “வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய்தப்பின்
    தூங்கும் களிறோ துயர் உறா – ஆங்கதுகொண்டு
    ஊரும் எறும்பிங்கு ஒரு கோடி உய்யுமால்
    ஆரும் கிளையோடு அயின்று” (நீ.நெ.வி. 38)

    யானையின் ஒரு சிறு செயலைச் சித்திரிக்கும் இப்பாடல் முழுவதையும் ‘பிறிது மொழிதல்’ என்னும் அணி உத்தியால் அலங்கரித்த குமரகுருபரர், ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதைக் குறிப்பாகப் பெறவைக்கிறார். விலங்குகளின் உறவுகளுக்குக் ‘கிளை’ என்பது தொல்காப்பியச் சுட்டெனினும் இலக்கியங்களில் அவ்வளவாகப் பயின்று வருவதில்லை. ‘கல்லென் சுற்றம்’ என்பதுதான் புறநானூற்றின் பொருண்மைத் தொடர்.  ஆனால் ‘யானையின் கிளையும் அயிறும்’ என்ற தொடராட்சியால்  செல்வர்களின் சிறு செல்வம் அதனைப் பெறுவாருக்கும் பெறுவார்தம் சுற்றத்தார்க்கும் (கிளைக்கும்) பயனாகும் (சுற்றத்தோர்க்கும் தொடர்புறு கிளைஞர்க்கும்’ — சிலப்பதிகாரம்) என்பதைக் குறிப்பாகப் பெற வைக்கும் சுவாமிகளின் சதுரப்பாடு பெரிதும் போற்றத்தக்கதாக அமைந்துள்ளது. உவமம் ஒன்றானாலும் அதன் பன்முகப் பரிமாணத்தை உற்று நோக்கிப் பல பொருண்மைகளை விளக்கலாம் என்பதும் தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடாக அமைந்துள்ளது என்பதை இதனால் புரிந்து கொள்ள இயலும்.

    நிறைவுரை

    மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தரவுகளால் சில ஆழமான உவமக் கோட்பாடுகளை வரையறுக்க முடியும். முன்னோர்கள் சொன்னதெல்லாம் பழைமை என்பதற்காகத் தள்ளிவிட வேண்டியதில்லை. குறிப்பிட்ட பொருண்மைக்குச் சொல்லப்பட்ட உவமமே  மிகப் பொருத்தமானது என்று கருதினால் பின்வருவோர் அதனையே உவமமாகக் கொள்வதில் தயக்கம்  காட்டுவதில்லை. அதே நேரத்தில் ஒரு வழியாக நோக்கப்பட்ட அந்த உவமத்தைத் தம் நுழைபுலம் காரணமாகப் பன்முகமாக நோக்கிப் புதிய பொருண்மைகளை விளக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘பரியது கூர்ங்கோட்டது’ என யானையைச் சிறப்பித்தாலும் புலிக்கு அஞ்சும் அதனை எதிர்மறையாகத் திருவள்ளுவர் நோக்கியிருப்பதும் பல இடங்களில் அதன் பெருமிதத்தைப் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருப்பதும் ஒரே உவமத்தின் பன்முகப் பரிமாணமும் உவமமாகலாம் என்பதைக் காட்டுகிறது. செய்யுளுக்குப் புறம்பாக நிற்கும் அணியிலக்கணத்தைச் செய்யுளுக்கு அகமாகவும் ஆக்க முடியும் என்பதற்குக் குமரகுருபரின் உவமங்கள் சான்றாகி நிற்கின்றன.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 38

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 38

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    அகத்திணை விளக்கும் புறத்திணை உவமங்கள் – 2

    உவமம் செய்யுளணியாகக் கருதப்பட்டது தமிழக வரலாற்றில்  வடமொழித் தாக்கம் மிகுந்திருந்த பிற்பட்ட காலத்தில் என்பது நினைவுகூரத்தக்கது. வேதனை என்னவென்றால் பழந்தமிழ்ப் பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் தமிழ்க்கவிதை மரபறிந்த அறிஞர் பலரும்கூடச் சங்க இலக்கிய உவமப் பதிவுகளை ‘உவமையணி’ எனக் கருதி மயங்கியதும் வெளிப்படுத்தியதுமாகும். சொல்ல வந்த பொருளைப் புலப்படுத்துவதற்குக் கருவியாக இருந்தது உவமம். வெறும் அழகியலுக்காகப் பயன்படுவது உவமையணி. முன்னது பொருளோடு கலந்திருப்பது. பின்னது செய்யுளுக்குப் புறம்பாக நிற்பது. முன்னது உடம்பிற்குத் தோலாகி அரணாகும். பின்னது மேனிக்கு அணியாகி மினுக்கும். நுட்பமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மை இது. படைப்பாளனால் படைக்கப்படும் பாத்திரங்களுக்கும் அப்பாத்திரங்கள் பேசும் சொற்களுக்கும் பொருத்தம் இருத்தல் வேண்டும் என்பது படைப்புக் கொள்கை. திறனாய்வுக் கண்காணிப்பில் இது வெளிப்படும். சான்றாகக் கலாய் பூசுகிறவன் கலித்தொகையின் உள்ளுறை உவமம் பற்றிப் பேசினால் அது பொருந்தாமல் போய்விடும். தான் சென்று அறியாத இடத்துப் பொருளை ஒருத்தி உவமமாகச் சொன்னால் அதில் நம்பகத்தன்மையிருக்காது. இந்தக் கொள்கையைப் பரணர் கடைப்பிடிக்கிறார். அதுதான் அவரது தனிச்சிறப்பு. வரலாற்று நிகழ்வுகளாகிய புறத்திணைச் செய்திகளை அகத்திணை விளக்கங்களுக்கு அவர் பயன்படுத்துகிறபோது தோழி முதலிய அகத்திணை மாந்தர்களின் பொது அறிவைத் தனது கவனத்திற் கொள்கிறார். திணை, தலைவி, செவிலி என்னும் வட்டத்திற்குள் சுழலும் தோழி கண்காணாப் போர்க்களத்து ஆர்ப்பினை உவமம் சொல்கிறாள் என்றால் தோழியாகிய அப்பாத்திரத்தின் பொது அறிவைப் பரணர் வெளிப்படுத்திக் காட்டுகிறார் என்றே கொள்ள வேண்டியதிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் சென்ற கட்டுரையை இந்தக் கட்டுரை வழிமொழிந்து தொடர்கிறது.

    உவட்டாத உவமப் பந்தி

    இரவுக்குறி காண, தான் வந்திருப்பதைத் தலைவியிடம் தெரிவிக்கும் ஊடகம் இன்றித் தவிக்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்வதாக அமைந்த பாட்டு, தன் வருகையை அறிந்தால் ‘இரும்பல் ஒலி கூந்தலையுடைய அவள் மகிழ்ச்சியடைவாள் என்பது’ மட்டுமே துறைவிளக்கம். இந்தத் துறைவிளக்கத்தை உவமப்பந்தியில் வைத்துப் பரிமாறுகிறார் பரணர். ‘கூந்தலையுடைய தலைவி’ எனச் சொன்ன பரணர் அந்தக் கூந்தலின் நறுமணத்திற்கு வல்வில் ஓரியின் கானகத்து மணத்தை ஒப்பிடுகிறார். ‘அத்தம்’ என்பது காட்டுவழி. “கல்லதர் அத்தம் கடக்க யாவதும்” என்பது சிலப்பதிகாரம். அந்தப் பகுதியில் விளைந்திருக்கும் குமிழ மரத்தின் வளைந்த மூக்கினை உடைய கனிகள் அவ்விடத்தே விளையாடும் மான்களுக்கு உணவாகி  மணம் கமழும் காடு.

    “அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
    எறிமட மாற்கு வல்சி ஆகும்
    வல்வில் ஓரி கானம் நாறி
    இரும்பல் ஒலி வரும் கூந்தல்
    பெரும்பே துறுவள் வந்தனம் எனவே”  (நற். 6)

    ஆயிரம் காடுகளை அறிந்தவர் பரணர். இந்தப் பாட்டில் வல்வில் ஓரி என்னும் வள்ளலின் காட்டையே முன்னிறுத்துகிறார் என்பதுதான் உவமச்சிறப்பு. இனித், தலைவியின் ஒட்டுமொத்த நலனுக்கு ஓரியின் கானகத்தை உவமமாக்கிய பரணர்,

    “நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
    நார் உரித்தன்ன மதனில் மாமைக்
    குவளை அன்ன ஏந்தெழில் மழைக்கண்
    திதலை அல்குல் பெருந்தோள் குறுமகட்கு
    எய்தச் சென்று செப்புநற் பெறினே
    ‘இவர் யார்  என்குவள் அல்லள்! முனாஅது”

    என்னும் வரிகளில் அவள் மேனியில் படர்ந்திருக்கும் மாமை நிறத்திற்கு ஆம்பலின் உரித்த தண்டின் நிறத்தையும், அவளுடைய குளிர்ச்சியான கண்ணிற்குக் குவளை மலரையும் உவமித்துக் காட்டியிருப்பது மரபு பற்றியது என்க. மாமை, பசலை என்னும் தலைவி மேனியின் நிறவேறுபாடுகள் இரண்டாயினும் மாமை குறிஞ்சிக்குரியது. பசலை பாலைக்குரியது. இதன் நுண்ணியத்தைத்,

    “திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க
    புதல் இவர் பீரின் எதிர்மலர் கடுப்ப
    பசலை பாய்ந்த நுதலேன் ஆகி” (அகம். 135)

    என்னும் அகத்தானும்,

    “இனி பசந்தன்று என் மாமைக் கவினே”  (ஐங்.35)

    என்னும் ஐங்குறுநூற்றானும்,

    “பசலை உணீஇயர் வேண்டும்
    திதலை அல்குல் என் மாமை கவினே (குறுந். 27)

    என்னும் குறுந்தொகையானும் அறிந்து கொள்ளலாம். மாமை உடலுறுப்புக்களின் வண்ணம். பசலை தலைவனின் பிரிவாற்றாமையால் தலைவி உறும் நோய்!

    தலைவன் அடைந்த தண்ணுமை அதிர்ச்சி

    தலைவியை விட்டுப் புறத்தொழுக்கமாகிய பரத்தைமாட்டுச் சென்ற தலைவன், தலைவி பற்றிய எண்ணம் மீதூர மீண்டும் தலைவிபால் திரும்புகிறான். இந்நாள் வரை தன்னுடன் இருந்த தலைவனின் பிரிவைத் தாங்காத பரத்தை அவனுக்குப் பாங்காயினார் செவியில் விழுமாறு தன்னைச் சார்ந்த விறலியர்க்குக் கூறுதல்போல் தலைவனுடைய இயல்பைப் பழிக்கிறாள்.

    “முனை ஊர்ப்
    பல் ஆ நெடுநிரை வில்லின் ஒய்யும்
    தேர்வண் மலையன் முந்தை பேர் இசைப்
    புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின்
    மண்ணார் கண்ணின் அதிரும்” (நற். 100)

    தன்னுடைய ஐம்பாலாகிய கூந்தலினைப் பற்றித் தன்னுடைய வளையல்களைப் பற்றிய அவன் செயலைத் தலைவிபால் சொன்னால் அவன் அதிர்ச்சி அடைவான். அந்த அதிர்ச்சி எதனைப் போன்றிருந்தது என்பதற்குத்தான் மேலே உள்ள மலையமான் திருமுடிக்காரியின் முரசின் மார்ச்சனை வைத்த கண்ணிடம் அதிர்வதை உவமமாக்குகிறார் பரணர். மன்னனிடம் பரிசுபெறும் நோக்கத்துடன் வரும் கூத்தர்கள் முழவினை முழங்குகிறபோது உண்டாகும் அதிர்ச்சி என்று உவமித்திருந்தாலும் பாட்டின் சிறப்பு குன்றப்போவதில்லை. ஆனால் பரணர் மலையமானின் வள்ளன்மையைப் பாராட்டும் புறத்திணை நிகழ்வை ஒரு நோக்கத்திற்காகவே உவமமாக்கியிருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது.

    அழகுக்கு ஆயிரம் உவமங்கள்

    ஒரு பொருளை விளக்க ஒன்றுக்கு மேற்பட்ட உவமங்களைச் சொல்லுகிற நெறி சங்க இலக்கியங்களிலேயே தொடங்கிவிடுகிறது. அவ்வாறு அடுக்கிவரும் உவமங்கள் வெளிப்படுத்தப்படும் சூழல்கள் மிகவும் கவனத்திற்குரியது. தலைவியைச் சந்திக்க இயலாத ஆற்றாமை காரணமாகப் புலம்பும் தலைவன் தலைவியின் அழகைப் பல உவமங்களால் சித்திரிக்கிறான். இது இயல்பு. குழந்தையைக் ‘கண்ணே மணியே! முத்தே!’ என்பது போல.

    “இறுகுழல் மேய்ந்த அறுகோட்டு முற்றல்
    அள்ளல் ஆடிய புள்ளி வரிக்கலை
    வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
    பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
    பாரத் தன்ன”

    (இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)

    இவற்றுள் முந்தைய இரண்டு வரிகளில் மிஞிலியின் குறிஞ்சியைப் பாடிய பரணர் அடுத்த மூன்று வரிகளில் அவனுடைய புறப்பொலிவை வண்ணனை செய்து அவன் நாட்டைத் தலைவியின் கூந்தல் பொலிவுக்கு உவமமாக்குகிறார். இனித் தொடர்ந்து,

    “வார மார்பின்
    சிறுகோல் சென்னி ஆரேற்று அன்ன”

    (இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)

    எனச் சோழனை உவமப்பொருள் ஆக்குகின்றார். ‘ஆரேற்று’ என்பது தேரோட்டம் என்பது போன்றதொரு திருவிழா. சென்னியாகிய சோழன் தனக்கடங்கிய தலைவர்களை வரவேற்றுப் பாராட்டி ஆத்திமாலைப் போற்றும் ஒரு திருவிழா. அந்தத் திருவிழாவின் பொலிவை உவமிக்கும் பரணர் தொடர்ந்து,

    “மாரி வண்மகிழ் ஓலிகொல்லிக்
    கலிமயிற் கலாவத்து அன்ன”

    (இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)

    என நிமிர்ந்து நிற்கும் செருக்கினால் பொலிவு பெற்ற மயிலை உவமிக்கிறார் பரணர். இந்த மயில் ‘மாரி போல வரையாது வழங்கியதால் புகழ் பெற்ற ஓரி என்பானின் கொல்லிமலையில் வாழும் மயில்’ என்கிறார். ஒரு பொருளின் பொலிவுக்குத் தனித்தன்மையுடைய மூன்று பொருள்களை உவமமாகக் கொள்வது கவனிக்கத்தக்கது.  நாடு, திருவிழா, மயில் என்னும் மூன்று பொருள்களும் தலைவியின் அழகுக்கு உவமமாக வந்துள்ளன என்பதை அறியலாம்.

    நன்னன் கொடுமையினும் நின்னது பெரிதே!

    பரத்தையர் மாட்டுச் சென்று மீண்ட தலைவன் வாயில் நேர்கிறான். தலைவி வாயில் மறுத்த நிலையில் இருவருக்கும் நட்பான தோழி, இணக்கமான சூழலை உருவாக்க எத்தனிக்கிறாள். தலைவன் மாட்டுத் தலைவிக்குள்ள இரக்கம் அவள் அறிந்ததாதலின் பெருந்தோள் செல்வமாகிய தலைவியை உயர்த்தியும் தலைவனின் பரத்தையர் பிரிவைக் கொடுமையாகச் சித்திரித்தும் வாயில் நேர்கிறாள். இந்தச்சூழலில் தலைவனின் செயல் கொடுமைக்கு நன்னன் என்பானின் கொடுமையை உவமமாக்குகிறார் பரணர்.

    “……………………………………………..பொற்புடை
    விரியுளை பொலிந்த பரியுடை நன்மான்
    வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன்
    கூந்தல் முரற்சியின் கொடிதே!

    மறப்பல் மாதோ நின் விறல்தகை மையே!” (நற்.270)

    பகையரசருடைய உரிமை மகளிரை அவர்தம் கூந்தல் பற்றி இழுத்து வருதல் அக்காலப் போரறங்களுள் ஒன்றாகாதாயினும் நன்னன் முதலியோர் அத்தகைய மறச்செயலைச் செய்திருப்பதை இதனால் அறியலாம். அதனால்தான் அந்தச் செயலை எதிர்மறையால் பரணர் பதிவு செய்திருக்கிறார். ‘கூந்தல் முரற்சியின்’ என்றவிடத்து முன்பு சொன்னது போல ‘இன்’ என்னும் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருளில் வந்து, உவம உருபுக்கான பணியினைச் செய்தது என்பதாம்.

    இருப்பை அன்ன தொல்கவின்

    ‘இருப்பை’ என்பது தற்காலத்துப் புதுக்கோட்டை மாவட்டத்துள் இருக்கும் இலுப்பூர் என்பது அறிஞர் கருத்து. அவ்வூர்ச் சிறப்பையும் அதனையாண்ட விரான் என்பானின் வள்ளன்மையும் கூறி அதனைத் தலைவியின் எழிலுக்கு உவமமாக்கியிருக்கிறார் பரணர்.

    “வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்
    பழனப் பல்புள் இரீஇயக் கழனி
    வாங்குசினை மருதத்துத் தூங்குதுணர் உதிரும்
    தேர்வண் விராஅன் இருப்பை அன்ன என்

    தொல்கவின் தொலையினும் தொலைக!“ (நற். 350)

    தொல்கவின் என்பதற்கு ஆசிரியர் பரிமேலழகர், ‘பழைய இயற்கை அழகு’ (1234 -1235) என உரை கண்டிருப்பதால் அவ்வுரை நயத்தைப் பரணர் பாட்டின் பொருளுக்கு ஏற்றி உவமத்தை நோக்கினால் தேர்வண் விராஅன் இருப்பையின் அழகு இயற்கை என்பது பெறப்படும்.

    “தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்
    மலிபுனல் வாயல் இருப்பை அன்ன என்
    ஓலியல் கூந்தல் நலம்” (260)

    என்னும் மற்றொரு பாட்டிலும் இருப்பையை உவமமாக்கிக் கூறுகிறார் பரணர். இந்தப் பாட்டில் தலைவியின் அழகு பெரிதும் பொலிவு பெறுவது  கூந்தலால் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்த எண்ணிய பரணர், “இருப்பை அன்ன என் ஒலியல் கூந்தல் நலம்” என்றது காண்க.  முன்னதில் தேர்வண் விராஅன் என்றவர் இப்பாட்டில் தெவ்வர் தேய்த்த செவ்வேல் வயவன் என்கிறார். தலைவியின் அழகுக்கு விராஅன் என்பானின் இயற்கை வளம் நிரம்பிய இருப்பை நகரத்தை உவமிப்பதில் அவருடைய உவமக் கோட்பாட்டை அறிந்து கொள்ள முடிகிறது. ‘விராஅன் மலை’ என்பது ‘விராலிமலை’ எனத் திரிதற்குக் காரணம் என்பதும்  ஈண்டுச் சுட்டுதற்குரியது.

    பிச்சையெடுக்கும் யானைபோல

    களவு நீட்டித்த தலைவன் தனது பாங்காயினார் வழி, மேலும் நீட்டிக்க விழைய, அது கண்ட தோழி “அயலான் ஒருவனும் தலைவியை மணந்து கொள்ளும் விருப்பத்துடன் வந்து போனான்” என்று அச்சுறுத்துவதுபோல வரைவு கடாவுகிறாள். இந்தப் பாட்டில் மூன்று வகையான உவமங்களைப் பரணர் அடுக்கிக்காட்டுகிறார். இந்த அடுக்கினை முன்னிருந்து பின்னாகவும் ரசிக்கலாம். பின்னிருந்து முன்னாகவும் ரசிக்கலாம். இது அவரவர் சுவையுணர் திறத்தினைப் பொருத்தது. தலைவனுக்காக வந்தவன் நீட்டித்து நிற்கிறானாம். எது போல?

    “நெய் வார்ந்தன்ன துய்யடங்கு நரம்பின்
    இரும்பான ஒக்கல் தலைவன் பெரும்புண்
    ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்
    பிச்சை சூழ் பெருங்களிறு போல எம்
    அட்டில் ஓலை தொட்டனை நின்மே!” (நற். 300)

    வாயிலாக வந்த பாணனை நோக்கித் தோழி கூறும் பகுதி இது. “பெருந்தேரோடு வந்த அவனோடு நீயும் செல்லாமல் “போர்க்களத்திலே பெரும்புண்பட்டவனாகிய அழகினைக்கொண்ட தழும்பன என்பானின் ஊணூரிடத்தில் உள்ள பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றலைப் போல நிற்கிறாய்” என்று உடன் வந்த பாணனை ஏசுகிறாள் தோழி. போர்க்களத்துக் களிறு வேறு. பிச்சைக்கு வந்த பெருங்களிறு வேறு.  யானை எங்கே நிற்கிறதாம்? அட்டில் சாலை ஓலைக்குடிசையின் விளிம்பினைத் தொட்டுக் கொண்டு நிற்கிறதாம்!, பாணனுக்கு உவமமாக வந்தது யானை என்பது சரி!. ஆனால் அந்த யானைக்கு வரலாறொன்று இருக்கிறது. தழும்பனின் அந்த வரலாற்றைப் பரணர் யானைக்கு அடையாக்குகிறார். இது முதல் நிலை. இனி இரண்டாவது நிலை. பாணன் யாருக்கு வாயிலாக வருகிறான் என்றால் மருத நிலத் தலைவனுக்குப் பாங்காக வருகிறான். பணிவோடு வருகிறான். அந்த மருத நிலம் எத்தகையது? இங்கே இன்னொரு உவமத்தை நேரடியாகச் சொல்லாமல் பரணர் உள்ளுறையாக அமைக்கிறார்.

    “உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
    தாமரைக்கு இறைஞ்சும் தண்டுறை ஊரன்!”

    என்று கூறுகிறார். மருத நிலத் தடாகத்தைத் தன் வண்ணனைக்கு உட்படுத்தும் பரணர் தாமரைக்கு இறைஞ்சும் ஆம்பலுக்குச்,

    ““சுடர்த்தொடி கோமகள் சினந்தென அதன் எதிர்
    மடத்தகை ஆயம் கைதொழுது ஆங்கு” (நற். 006)

    கோமகளைத் தொழும் பணிமகள் ஆயத்தை உவமமாக்குகிறார். ஆம்பல் வணங்கும் தடாகத்துத் தாமரையை வணங்கும் ஆம்பல் கூட்டத்திற்குத் தேவியை வணங்கும் மகளிர் ஆயத்தை உவமமாக்கியது இயற்கைக்குச் செயற்கை உவமமாகியது என்க. இனிப் பெருங்களிறே பாங்கனுக்கு உவமமாக நிற்க, அந்தக் களிற்றைத் தழும்பன் ஊரோடு சார்த்திச் சொன்னது வரலாற்று உவமமாம்.

    நிறைவுரை

    பெண்ணின் பொலிவோ அவள் கூந்தலின் பொலிவோ நுண்பொருள். நகரம் பருப்பொருள். நகரத்திற்கும் நங்கையின் கோலத்திற்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை. ஆனால் பரணர் நங்கையின் பொலிவுக்கும் சிதைவுக்கும் நகரத்தை உவமமாக்குகிறார் என்றால் அவற்றில் உள்ள நுண்ணியத்தைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். நகரம் மாற்றாரின் படையெடுப்புக்கு முன் என்றும் மாற்றாரின் படையெடுப்புக்குப் பின் எனவும் இருவகைப்படும். பரணர் முன்னதைத் தலைவனோடு இருந்த நிலைக்கும் பின்னதைத் தலைவனைப் பிரிந்த நிலைக்கும் உவமிக்கிறார் என்பதை உய்த்துணர்தல் வேண்டும். ‘தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது” எனத் துள்ளிக் குதிக்கும் தலைவனின் பின்புலக் காட்சியைப் போலவும் “தேரேது? சிலையேது? திருநாள் ஏது?” என்று பாடும் ஒரு தலைவியின் பின்புலக் காட்சியைப் போலவுமே பரணரின் உவமச் சித்திரிப்பின் உள்நோக்கம் என்பதைப் புரிந்து கொண்டால் அவரின் உவமக் கோட்பாடுகளையும் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானவையல்ல! புறத்திணை வரலாற்றுக் குறிப்புக்களை அகத்திணை இலக்கியத்தில் உவமமாகக் கையாளும் பரணரின் உவமக்கோட்டை எந்த மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கையாலும் மதிப்பிடுதல் அரிது!

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 37

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 37

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    அகத்திணை விளக்கும் புறத்திணை உவமங்கள் – 1

    முன்னுரை

    சிந்தனையில் கடமையுணர்வு மிக்கிருப்பவன் செய்யும் காதலுக்கும் காதலுணர்வு மட்டுமே மிக்கிருப்பவன் செய்கின்ற காதலுக்கும் வேறுபாடு உண்டு. காதலைப் பற்றி, இல்லாத கற்பனையைச் சொல்லாத கவிஞரில்லை. ஆனால் பரணர் சொல்வதற்கும் மற்றவர் சொல்வதற்குமான வேறுபாடே இங்கு ஆய்வுப் பொருளாகிறது. அகத்திணை மாந்தர்களின் உணர்வு வெளிப்பாடுகள் எல்லாரிடமும் ஒரே தன்மையாயும் பரணரிடம் மட்டும் அது வேறுபட்டும் அமையக் காரணம் என்ன என்பதை ஆராய்கிறபோதுதான் முன்னுரையின் முதல் வரி நினைவுக்கு வந்தது. மன்னர்களோடும் சமுதாய மக்களோடும் களங்காணும் வீரர்களோடும் பழகி அவர்களைப் பற்றிய சிந்தனை அதிகம் நிறைந்த புலவர்களில் பரணர் முன்னிற்கிறார். பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தைப் பத்திய மருந்தாகச் சேரனுக்குப் பாடி மகிழ்ந்தவர் அவர். அகத்திணைப் பாடல்களைப் பாடுகிறபோது முதற்பொருள்களை உவமமாகக் கொண்டிருப்பதைக் காட்டிலும் சமுதாய நிகழ்வுகளையும் போர்க்களங்களின் ஆரவாரிப்பையும் குறுநில மன்னர்களின் இயல்பையும் இவை போன்ற செய்திகளையுமே உவமமாக்குகிறார். எங்கே உவமம் சொல்ல வேண்டும்? எவற்றை நிலைக்களனாகக் கொண்டு அவை தோன்றும்? யார் யார் உவமம் சொல்லலாம்? அவர்களும் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதற்கெல்லாம் விதிவகுத்த தொல்காப்பியம் இதனைத்தான் உவமமாகச் சொல்லவேண்டும் என்பதற்கான விதியினை வகுத்திருப்பதாகத் தெரியவில்லை. ‘பொருளைவிட உவமம் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும்’ என்ற ஒரே நிபந்தனையைத்தான் அது விதிக்கிறது. அந்த உயர்ந்த பொருளை புலவர் பெருமக்கள் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கிலிருந்தும் எடுத்துக் கொண்டார்கள். அவை பெரும்பாலும் முதற்பொருளைச் சார்ந்தே அமைந்தன. ஆனால் பரணர் மட்டுமே அக்காலச் சான்றோர்களில் யாரும் எண்ணிப் பார்க்காத சமுதாய நிகழ்வுகளை உவமமாக வைத்துப் பாடியிருக்கிறார். அவர் பாடிய அகத்திணைப் பொருண்மையைப் புறத்திணை உவமங்களால் விளக்கியதுதான் புதுமை. அத்தகைய புதுமைகள் சிலவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

    பரணரின் பதிவுகள்

    தனித்தன்மை மிக்க சங்கச் சான்றோருள் பரணரும் ஒருவர். குறிஞ்சிக் கபிலரின் நெருங்கிய நண்பர் இவரென்பதற்கு உம்மைத்தொகைக்கு வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் ‘கபிலபரணர்’ என்னும் தொடரே போதுமான சான்றாகலாம். பதிற்றுப்பத்துள் ஐந்தாம் பத்து பாடிய இப்பெருமகனார் நற்றிணை, புறநானூற்றில் நூலுக்குப் பன்னிரண்டும் குறுந்தொகையில் பதினைந்தும் அகநானூற்றில் முப்பத்திரண்டுமாகப் பாடியுள்ளார். குறுந்தொகையில் இவர் பாடியதாகப் பதிவிடப்பட்டிருக்கும் பதினைந்து பாடல்களில் வரலற்றுச் செய்திகள் உவமமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் பாடல்கள் சிலவற்றிலிருந்து பெறப்படும் உவமக் கோட்பாடுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது,

    தோழி செய்த சூழ்ச்சி

    தமிழ் அகத்திணை மாந்தருள் நுண்ணியத்தோடு வடிவமைக்கப்பட்ட பாத்திரம் தோழியாகும். அகத்திணை நிகழ்வுகளை ஆழ்ந்த சிந்தனையோடும் பொறுப்புணர்வோடும் நிரல்படக் கொண்டு செலுத்தும் அரிய திறமையுள்ள பாத்திரம் அது. பகற்குறி வேண்டி வரும் தலைவனுக்கு இரவுக்குறி காட்டும் தோழி அதனையும் மறுக்கிறாள். இது கண்டு மருகும் தலைவி இனித் தலைவனைக் காண இயலாதோ என எண்ணிப் புலம்ப அவளைத் தேற்றுகிறாள் தோழி!. “நின் மனம் அறிவேன் நான்! அவன் மார்பு விழையும் உனக்கு என் செயல் புதிராகத் தோன்றலாம். நின்னை அவன் குறித்த காலத்தில் வரைந்து கொள்ள வேண்டுமானால் கோசர் செய்த சூழ்ச்சி போலச் சிறிதளவு சூழ்ச்சியும் தேவைப்படுகிறது! நீ கவலற்க!” எனத் தேற்றுகிறாள். ஆண்களின் உள்ளம் அறிந்த அரிய பாத்திரமாகப் படைக்கப்பட்ட தோழி இந்தப் பாட்டில் தான் செய்த சூழ்ச்சிக்குக் கோசர் செய்த சூழ்ச்சியை உவமமாகக் கூறுகிறாள்.

    மகிழ்நன் மார்பே வெய்யை! யான் நீ
    அழியல் வாழி தோழி! நன்னன்
    நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
    ஒன்றுமொழிக் கோசர் போல
    வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே!” (குறுந். 73)

    ஔவையுண்ட  நெல்லிக்கனிபோல் நன்னன் என்பான் நாட்டில், மாமரம் நெடுநாள் சென்று கனியொன்று ஈந்தது. ஆற்றங்கரை மரமாதலின் அக்கனி ஆற்றில் வீழ, அது போழ்து அங்கு நீராடிய கோசர் குலப்பெண் அதனை எடுத்து உண்டாள். அது கேட்ட நன்னன் அவளைக் கொன்றான். மரத்தால் வந்த சிக்கல் என்பதனால் நன்னன் நாட்டில் இல்லாத காலத்தில் மரத்தை அழிக்க மார்க்கம் கண்ட கோசர், அகுதை என்பானிடம் யானைகளைப் பரிசிலாகப் பெற்றுவந்த பாடிணிகளைக் கரையோர மாமரத்தில் அந்த யானைகளைப் பிணிக்கச் சொல்ல, மரத்தோடு பிணிக்கப்பட்ட யானைகள் இழுக்க வேரோடு மரம் சாய்ந்தது என்பது வரலாறு. இது அக்காலத்தில் சூழ்ச்சி எனக் கருதப்பட்டது. நேரடியாக ஒன்றினைச் செய்வதை விட மறைவாகச் செய்வதே சூழ்ச்சியாகும். இந்தச் சூழ்ச்சியைத்தான் தலைவனுக்கு  இருவகை குறிமறுத்த தோழி தன்னுடைய செயலுக்கு உவமமாக்குகிறாள்.

    தலைவனுக்குப் பரிந்துரை நல்கும் தோழி

    ஒரு பாத்திரம் மற்றொரு பாத்திரத்தை எவ்வாறு அறிமுகம் செய்ய வேண்டும் என்னும் படைப்பு நுட்பத்தை இந்தப்பாட்டில் காணலாம். தலைவியைக் காணத் தலைவன் வருகிறான். அவள் மறுக்கிறாள். பரிந்துரைக்காகத் தோழியை நாடுகிறான் தலைவன். அவள் அவன் நிலையைச் சில குறுகிய சொற்களில் எடுத்துரைத்துத் தலைவியை இசையச் செய்வதாக அமைந்துள்ள பாட்டு இது.

    சேரி சேர மெல்ல வந்து வந்து
    அரிது வாய்விட்டு இனிய கூறி
    வைகல் தோறும் நிறம்பெயர்ந்து உறையும் அவன்
    பைதல் நோக்கம் நினையாய் தோழி!” (குறுந். 298)

    தலைவன் செவ்வி நோக்கிச் சேரி வருகிறான். மெல்ல மெல்ல வருகிறான். அரிதாகப் பேசுகிறான். அப்பேச்சு இனிமையாகவும் இருக்கிறது! ஒவ்வொரு நாளும் வருகிறான் அவன் பார்வையில் வெளிப்படும் பைதல் நோக்கம் மடலேறுதலைக் குறிக்கும் என அஞ்சுகிறேன். எனவே இசைக” என்பதாம்!

    இன்கடுங் கள்ளின் அகுதை தந்தை
    வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்
    மடப்பிடிப் பரிசில் மானப்
    பிறிதொன்று குறித்தது அவன் நெடும்புற நிலையே!” (குறுந். 298)

    என்ற வரிகளிலும் நன்னன் வரலாற்றையே குறிப்பாகக் காட்டுகிறார் பரணர். அகுதை தந்தையிடம் அகவன் மகளிர் பிடிக்கூட்டங்களைப் பரிசிலாகப் பெற்று அவற்றை அப்படியே மாங்கனி உண்ட பெண்ணின் செயலுக்காகத் தண்டம் கட்டியவிடத்தும் அதனைக் கொள்ளானாய். நன்னனின் மனம் வேறொன்றை எண்ணியதைப் போல (‘பிறிதொன்று குறித்தது’ என்பது அந்தப் பெண்ணைக் கொல்வதை எண்ணியது போல) நம் தலைவனின் மனமும் வேறொன்றை எண்ணுகிறது என்று உவம வாயிலாகக் கூறுகிறார் பரணர்.

    தாய்க்கு மகள் இட்ட சாபம்!

    “தாயாகிய உறவினையும் தள்ளுபடி உறவாக்கும் தன்மை தமிழுக்கு உண்டு’ என்று பாடுவார் பாவேந்தர். ‘தயை மிகை உடையாள் அன்னை…….அயலவர் ஆகும் வண்ணம்” என்பது அவர் வாக்கு. பகற்குறி பிழைத்த தலைவன் இரவுக்குறி நாடி வருகிறான். அவ்வாறு அவன் வருகை தந்ததை அறிந்த செவிலி அன்றிலிருந்து உறக்கத்தை மறந்துத்  தலைவியைப் பாதுகாக்கிறாள். அவளுடைய செயல் பாதுகாப்பாக இருந்தாலும் தலைவிக்கு மனத்துன்பத்தைத் தருகிறது. அவள் துன்பம் கண்டு பொறாத தோழி தன் தாயைப் பழிக்கிறாள். (தோழியின் தாயே செவிலி),

    மண்ணிய சென்ற  ஒள் நுதல் அரிவை
    புனல்தகு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
    ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவணிறை
    பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
    பெண்கொலை புரிந்த நன்னன் போல
    வரையா நிரையத்துச் செலீஇயரோ? அன்னை
    ஒருநாள் நகைமுகம் விருந்தினன் வந்தெனப்
    பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே” (குறுந். 292)

    பகைவரால் முற்றுகையிடப்பட்ட ஊரில் உள்ளவர் உறக்கம் மறப்பதைப் போலத் தாய் உறக்கம் துறந்து அவளைக் காக்கிறாளாம். அதனால் “பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் செலீஇயரோ?” என்று தாய்க்கே சாபம் இடுகிறாள் தோழி.  பெண்கொலை புரிந்த நன்னன் செயலைப் பலபட விரித்துரைக்கும் பரணர் இந்தப் பாட்டில் பெண்ணுண்ட மாங்கனிக்குப் பதிலாக எண்பத்தோரு களிறுகளையும் பொன்னால் செய்யப்பட்ட பாவையையும் கொடுத்தும் அமைதியடையாத அவனுடைய கொடூரப் பண்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    வம்பு பேசவா வள்ளைப் பாட்டு?

    கற்பியல் ஒழுக்கத்தில் தலைவன் பரத்தையரிடம் சென்று வர, வாயில் மறுத்த தலைவி பரத்தையர் செவியுறும்படி அவர்களைத் தூற்றுகிறாள். தன் கணவனைப் பிரிந்த வேதனை அவளுக்கு. அதனால் பாடுகிறாள். அவள் பாட்டின் பொருள் அவர்களை உறுத்த, அவர்கள் அத்தனைப்பேரும் தமது வள்ளைப்பாட்டில் வைத்துத் தலைவியை ஏசுகிறார்கள். (வள்ளைப்பாட்டு – உரலில் இட்ட பொருளைத் தூய்மை செய்ய உலக்கையை ஏந்தி மகளிர் குற்றும் போது பாடுகிற பாட்டு) அவர்கள் ஏசுவதைக் கேட்ட தோழி “தலைவி ஏசப்படுவதற்குக் காரணமான தலைவனுக்கு வாயில் மறுக்கிறாள்.

    பாவடி உரல பகுவாய் வள்ளை
    ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப!
    அழிவது எவன் கொல்? இப்பேதை ஊர்க்கே
    பெரும்பூண் பொறையன் பேஎம்முதிர் கொல்லிக்
    கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய
    நல்லியற் பாவை அன்ன இம்
    மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே!” (குறுந். 89)

    இந்தப் பாட்டில் வரலாற்றுப் பதிவு என்பது அக்கால மன்னர்களின் ஆளுகைப்பரப்பையும் சமய நம்பிக்கைகளையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது. தலைவியை ‘மெல்லியற் குறுமகள்’ எனப் பண்பை முன்னிறுத்தி அடையாளப்படுத்திய தலைவிக்குக் கொல்லிப் பாவையை உவமமாகச் சொல்கிறாள் தோழி. ஆரவாரத்துடன் வள்ளைப்பாட்டில் தலைவியைப் பரத்தையர்கள் ஏசுவதை ‘நுவறல்’ என்றும், தன் தலைவனின் பெருமைகளை மட்டும் அமைதியாகப் பாடுவதைப் ‘பாடினள்’ என்றும் கூறும் நுண்ணியம் உணர்க.  அவ்வாறு பாடும் தலைவிக்குச் சேரனின் ஆளுகைக்கு உட்பட்ட கொல்லிமலையின் மேற்குப் பக்கத்தில் தெய்வத்தால் வரையப்பட்ட பாவையை உவமமாகக் கூறுகிறாள் தோழி!. “பொறையன் உரைசால் உயர்வரைக் கொல்லிக் குடவயின்………தெய்வம் எழுதிய வினைமாண் பாவை அன்னோள்” (185) என்னும் நற்றிணையிலும் இவ்வாறே தலைவி உவமிக்கப்பட்டுள்ளாள் என்பதையும் அறியலாம்.

    கீழ் கடல் நாரையும் மேல் கடல் மீனும்

    தலைவியைக் கண்டுவிடலாம் என்னும் நம்பிக்கையோடு செல்கிற தலைவன்  அல்ல குறிப்பட்டு மீள, ஏமாற்றமடைந்த தனது நெஞ்சிற்குத் தானே சொல்லிக் கொண்ட ஆறுதல் பாட்டு இது. இந்தப் பாட்டில் ‘கிட்டாதாயின வெட்டென மற’ என்னும் உலகியலுக்கு மாறுபட்டு அடைய முடியாத தொலைவில் இருக்கும் அரியளாகிய தலைவியை அடைய எண்ணுவது பேதைமையன்றோ எனத் தன் செயலுக்குத் தன் நெஞ்சையே இடமாக்கி உரைத்தான் என்பதாம். ‘அடைய முடியாத தொலைவு’க்கும் ‘அரியள்’ என்பதற்கும் பரணர் கூறுகிற உவமம்  கீழ் கடல் நாரை மேல் கடல் மீனுக்கு அணவந்தது போல என்பதாம். அணவந்தது — இயலாத ஒன்றிற்கு ஏங்கி நிற்பது.

    குணகடல்  திரையது பறைதபு நாரை
    திண்தேர் பொறையன் தொண்டி முன்துறை
    அயிரை ஆர் இரைக்கு அணந்தாங்குச்
    சேயள் அரியோள் படர்தி!
    நோயை நெஞ்சே நோய்பா லோயே!(குறுந். 128)

    இருதிசைக் கடலும் நாரையும் மீனும் பாட்டில் இடம்பெற்றாலும் அயிரை மீனாகிய இரை வாழ்கிற கடல் ”திண்தேர் பொறையன் தொண்டி முன்துறை” என இடம் சுட்டுவதில் அவருடைய வரலாற்றுப் புலமையை அறிந்து கொள்ள முடிகிறது. சேரனைப் பற்றிய இந்தக் குறிப்பு அவன் திண்தேர் உடையவன் என்பதும் ‘தொண்டி முன்துறை அவன் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது’ என்பதும் உணர்த்தி நின்றது.

    அழிந்தது ஆர்க்காட்டு அழகு!

    இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டதொரு கட்டுரையில் தலைவியின் அழகுக்கு நகரங்கள் ஒன்றாகவோ பலவாகத் தொகுத்தோ உவமிக்கப்படுவது ஆராயப்பட்டுள்ளது. அந்த வகையில் பரத்தையர் மாட்டுச் சென்று பழக்கமான தலைவன், தலைவி வழக்கம் போல் தன்னை ஏற்றுக் கொள்வாள் என்னும் நம்பிக்கையில் வர, அவனுக்கு வாயில் மறுத்த தோழி அவனை நோக்கிக் கூறுகிறாள் அலர் தூற்றுவது உலகியல் வைத்துச் செய்யப்படும் புலனெறி வழக்கு. ‘உன்னையும் என்னையும் வைத்து ஊரு சனம் கும்மியடிக்குது’ என்பார் வைரமுத்து. “உன்னை எண்ணி மூச்சிருக்குது! உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது!’ என்பார் வாலி. இது புலனெறி வழக்கு. பிறர்பழித் தூற்றுவது உலகியல்.! தூற்றுவதைக் கும்மியடிப்பது என்பது இலக்கணை.

    வாரல் எம்சேரி தாரல் நின் தாரே!
    அலரா கின்றால் பெரும!

    ‘எம் சேரிக்கு வராதே! நின் மாலை தராதே! ஊர்மக்கள் அவள் நிலைகண்டு தூற்றும் அலரே காரணம்’ என்பதுதான் தோழிக் கூற்று. எதனால் என்பதற்கான காரணத்தைக்,

    காவிரிப்
    பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
    ஏந்துகோட்டு யானைச் சேந்தன் தந்தை
    அரியல் அம் புகவின் அந்தோட்டு வேட்டை
    நிரைய ஒள்வாள் இளைஞர் பெருமகன்
    அழிசி ஆர்க்காட்டு அன்ன  இவள்
    பழிதீர் மாணலம் தொலைதல் கண்டே!” (குறுந். 258)

    என்னும் வரிகளில் பரணர் சுட்டுகிறார். சேந்தனின் தந்தையும் ஒள்வாள் இளைஞர் பெருமகனுமாகிய அழிசியின் ஆர்க்காடு போல் இருந்த அவளின் பழிதீர் அழகு இன்று பாழாய்ப் போனது பற்றிக் குறிப்பிடுகிறார்.

    ஆர்ப்பினை வென்ற அலர்!

    கற்புமணம் உள்ளாது களவொழுக்கத்தை நீட்டிக்கிறான் தலைவன். அலர் பெரிதாகியதால் அல்லலுறும் தலைவியின் நிலையை அவனுக்கு உணர்த்த வேண்டிய நிலை தோழிக்கு! அப்படி உணர்த்துகிற போது இரண்டு செய்திகளைப் பதிவு செய்கிறாள். ஒன்று. தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் முயங்கிய நாள் சில! ஊரார் அலர் தூற்றுகிற காலம் பல! இரண்டு, யாருக்கும் தெரியாமல் குறுகிய காலமே முயக்கம்!  உலகமே அறிந்து கொள்ளும் அளவுக்கு அலர்!

    மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன்
    முயங்கிய நாள் தவச் சிலவே! அலரே
    கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
    பசும்பூண் பாண்டியன்  வினைவல் அதிகன்
    களிறொடு பட்ட ஞான்றை
    ளிறுவாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே (குறுந். 393)

    தலைவனுக்கும் தலைவிக்குமான உறவு பற்றிய பொதுவெளிப் பேச்சுக்கள் அலர் எனப்படும். சிலர் பேசினால் அம்பல்! பலர் பேசினால் அலர். தெரு முணுமுணுப்பு அம்பல்! ஊரின் பேரிரைச்சல் அலர்!. அம்பலின் பரப்பளவு குறைவு. அலரின் பரப்பளவு அதிகம். இந்தப் பரப்பளவை அவ்விருவரும் கூடிய கூட்டத்தின் கால அளவோடு பொருத்திப் பார்க்கிறாள் தோழி!  இரண்டுக்குமான முரணை எண்ணி மருகி நிற்கிறாள். தீராப்பகை கொண்ட பாண்டியருக்கும் கொங்கருக்கும் இடையே நடைபெற்ற போர் ஒன்றில் வினைவலி அதிகன் களிறொடும் கொல்லப்படுகிறான். அவன் வீழ்ச்சி கண்டு கொங்கர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். அந்த ஆரவாரத்தைவிடக் களவொழுக்கம் பற்றிய அலர் மிக்குப் பரந்தது எனத் தோழி கூறுகிறாள். ஆர்ப்பினும் என்றால் ஆரவாரத்தினை விட என்பது பொருள். உவம உருபு செய்ய வேண்டிய பணியை இங்கே ஐந்தாம் வேற்றுமை உருபுகளில் ஒன்றான ‘இன்’ செய்கிறது. ‘ஆரவாரத்தைப்போல’ என்னும் ஒப்புப் பொருளினும் ‘ஆரவாரத்தினைவிட’ என்றும் கொள்ளலாம். இலக்கணம் கவிதைக்காக! பாட்டின் உயிர் ‘முயங்கிய நாள் தவச்சில! அலர் கொங்கர் ஆர்ப்பினும் பெரிது’ என்னும் ஒரு தொடரில் துடிப்பதைக் காணலாம்! களநிகழ்வு தும்பை என்னும் புறத்திணையின் பாற்பட்டது. களிறொடு பட்டான் என்பதால் அது ‘யானைமறம்’ என்னும் துறையினைச் சாரும். அப்புறத்துறை நிகழ்வை அகத்திணையின் துறையொன்றிற்கு உவமமாக்கினார் பரணர்.

    மேற்சொன்ன பாட்டில் தலைவன் தலைவியோடு முயங்கிய நாள் சிலவாகவும் அவ்வாறு இருந்தது பற்றிய ஊரார் அலர் பெரிதாகவும் இருந்தமைக்குப் போர்க்களத்துக் கொங்கர் செய்த ஆர்ப்பினை உவமமாகச் சொன்ன பரணர் பின்வரும் பாட்டில் தலைவன் வருவதாகச் சொன்ன நாளின் எண்ணிக்கை சிறிதாகவும் அலரின் பரிமாணம் மிக்கிருப்பதாகவும் கூறுகிறார்.

    சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளி
    அலவன் சிறுமனை சிதையப் புணரி
    குணில்வாய் முரசின் இயங்குந் துறைவன்
    நல்கிய நாள் தவச்சிலவே! அலரே
    வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
    வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்
    புலிநோக்கு உறழ் நிலை கண்ட
    கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே! (குறுந். 328)

    என்ற பாட்டில் ‘துறைவன் நல்கிய நாள் தவச்சிலவே’ என்னும் அகத்திணைத் தொடரும் ‘அலரே கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே!’ என்னுந் தொடரும் நோக்கத்தக்கது.  விச்சியர் பெருமகன் வேந்தரோடு பொருதமை கண்ட குறும்பர்கள் அவ்வேந்தர்க்கு அழிவு வந்தமையான் அகமகிழ்ந்து ஆரவாரம் செய்தனர் என்ற வரலாற்றுச் செய்தியை அதாவது புறத்திணை வாகைச் செய்தியை அகத்திணை அலருக்கு உவமமாக்கியிருக்கிறார் பரணர் என்பதாம்.

    நிறைவுரை

    தொல்காப்பியத்தின் உவம மரபு தனித்தன்மை மிக்கது. பொருள் புலப்பாட்டுக் கருவியாகவே உவமம் செயல்படும். செயல்பட வேண்டும். வினை, பயன், மெய், உரு என்னும் நான்கினுள் பரணர் கூறும் உவமம் எதனுள் அடங்கும் என்பது சிந்திக்க வேண்டிய பொருளாகியிருக்கிறது. ‘அலர்’ என்பதும் ‘ஆர்ப்பு’ என்பதும் தொழிற்பெயர்கள். அவ்விரண்டும் தாமாகச் செயல்படாது. பரணர் அவற்றைத் தான் பொருளாகவும் உவமமாகவும் கூறியிருப்பதோடு போர்க்கள ஆரவாரத்தையே உவமமாக்கியிருக்கிறார். மேலும் அகத்திணை மரபுப்படி முதற்பொருளை ஒட்டியே (உள்ளுறை, இறைச்சி என்னும் நுண்ணியங்களுக்காக) உவமம் அமைதல் வேண்டும் என்பதே விதியாயிருக்க இதற்கு மாறுபட்டுப் புறத்திணைச் செய்திகளை உவமமாக்குவதும் சிந்தித்தற்குரியது. இவை பற்றியெல்லாம் எதிர்வரும் கட்டுரைகளிலும் ஆராயப்படும்!.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 36

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 36

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உண்மை பாதி! உவமை பாதி!

    முன்னுரை

    ‘ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட்டு ஒன்றாகும்’ என்பார் ஔவை. இது விதியின் வினை. ஒன்றைக் கற்கின் மற்றொன்று நினைவுக்கு வரவேண்டும். இது நூலின் தரமதிப்பீடு. ஒன்றின் தொடர்ச்சியே மரபாயினும் ஒன்றின் அழிவின் தொடக்கமும் அதுவாக இருந்தால்தான் அது மரபு. புளியங்கொட்டை முளைத்தால் புளியமரமாகத்தான் வருமேயன்றிப் புங்கமரமாகாது. இதுதான் மரபு. எனவே ஒன்றின் வழிவழித் தொடர்ச்சியே மரபாகும். ஔவையின் மூதுரையைக் கற்குங்கால் நம்மையுமறியாமல் தோன்றுகிற சிந்தனைகள் கற்பாரை முன்னோக்கி நகர்த்துகின்றன. அங்கிருந்து வந்தவர் அல்லர் ஔவை. ஆனால் அவர் சிந்தனைகளுக்கான மூலம் அங்கிருந்துதான் தொடங்குகிறது.  கருத்தியல் சிந்தனைகளை அழகியல் உவமங்களோடு பொருத்திக் காட்டும் அன்னாரின் சதுரப்பாடு மூதுரை முழுவதிலும் வானத்து நிலவொளியைப்போல் பரந்து கிடக்கிறது. ஔவையின் உவமங்களைச் சான்றோர் சிலரின் உவமச் சிந்தனைகளோடு பொருத்திக் காட்டுவதையே இக்கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொள்கிறது.

    பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார்

    ‘குறியெதிர்ப்பை நீரது உடைத்து’ என்ற ஒரு தொடர் திருக்குறளில் வரும். தான் செய்த உதவிக்கு மாற்றாகக் கைம்மாறு செய்யப்படும் காலத்தை எதிர்பார்த்துச் செய்யும் உதவியை அப்படி அழைக்கிறார் திருவள்ளுவர். மிக உயர்ந்த பண்பாளருக்கு மட்டுமே உரிய இயல்பு அது. அது புகழை நோக்கியது. நடப்பியலுக்கு அவ்வளவாகப் பொருந்தாது. ‘பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார்’ என்ற தொடரும் திருக்குறளில் உண்டு. செய்யப்படுகின்ற நன்மை அளவால் சிறிதாயினும் உதவி செய்வாரின் கருத்தின் பயன் அறிந்தவர்க்கு அது பனையளவாகத் தோன்றுமாம். இந்த செய்ந்நன்றி அறிதலை உவம அளவையால் விளக்கிக் ‘காலம் வரும் வரை காத்திரு’ என்னும் நடப்பியல் உண்மையையும் பதிவு செய்திருக்கிறார் ஔவையார்.

    “நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
    என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
    தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை தலையாலே
    தான் தருத லால்” ( மூதுரை -1)

    சொல்ல நினைக்கும் பொருண்மையை முழுமையாகச் சொல்ல முடியாது பகுதி மட்டுமே வெளிப்பட்டு நிற்கும் நேர்வுகளும் நீதி இலக்கியங்களில் உண்டு. திருக்குறள் அதிகாரத்தில் அமைந்துள்ள குறட்பாக்களைப் பொருண்மைக்கேற்பப் பரிமேலழகர் பாகுபாடு செய்ததற்கு இதுதான் காரணம். செய்ந்நன்றி அறிதல் என்பதும் இத்தகையதே. உதவி ஒன்றுதான். அது செய்யாமற் செய்த உதவியாக, காலத்தினால் செய்த உதவியாக, பயன் நோக்காது செய்த உதவியாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஒன்றன் பகுதியாகவே கொள்ளுதலே ஏற்புடைத்து. அதாவது உதவி இத்தனை வகைப்படும் என்றென்னாது இந்தப் பண்புகளின் தொகுப்பே உதவி என்று கோடலே பொருந்தும் என்க.

    காலம் கனிந்தால்தான் காயும் கனியும்

    விதி என்பது மூட நம்பிக்கை அன்று. அது இயற்கைச் சட்டம். ஒவ்வொரு வினைக்குமோர் எதிர் வினை உண்டென்பது அறிவியல் என்றால் ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்’ என்பது அறிவியல் ஆகாதா? ‘ஊழ்’ என்ற சொல்லுக்கு  “இருவினைப் பயன் செய்தவனையே சென்று அடைவதற்கு ஏதுவாகிய நியதி” என்று வரைவிலக்கணம் தந்த பரிமேலழகர் ‘ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒருபொருட்கிளவி’ என்று விளக்கமளிக்கிறார். அழகரின் இந்த விளக்கம் ஊழ் பற்றிய எந்த அறிவியல் கருத்தினையும் களத்தில் சந்திக்கப் போதுமானது. ஊழ் காலத்தோடு தொடர்புடையது. முயற்சி நம்முடையது முடிவு காலத்தினுடையது. இதனைத்தான் வள்ளுவர் வேறுவாய்பாட்டில் சொல்லுகிறார்.

    “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” (கு.377)

    இவன் வகுத்ததை இவனாலேயே துய்க்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணமாக இன்னொரு சக்தி இருக்க வேண்டுமல்லவா? எதற்கும் காலம் வரவேண்டும் என்பது உலகியல். அதனைத்தான் ஔவை,

    “அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
    எடுத்த கருமங்கள் ஆகா  தொடுத்த
    உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
    பருவத்தால் அன்றிப் பழா.” (மூதுரை – 5)

    என்ற பாட்டில் விளக்கிக்காட்டுகிறார். தொடர் முயற்சி நம்முடையதாகலாம். ஆகின்ற நாள் நம் கையில் இல்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுதான் பலன் கொடுக்கும் என்று விதிக்கப்பட்ட மரங்கள் உருவத்தால் வளர்ந்து விடுவதனாலேயே பலன் கொடுக்கும் பருவத்துக்கு முன்பாகவே பயன் தந்துவிடாது. ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!’ என்னும் கீதையின் சாரமும் இதுவே. பலனை எதிர்பாராதே என்றால் அது எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது என்பது கருத்து.

    “எழுதிய ஆறேகாண்! இரங்கு மடநெஞ்சே!
    கருதியவாறோ கருமம் – கருதிப் போய்க்
    கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
    முற்பவத்தில் செய்த வினை” (மூதுரை – 22)

    என்னும் மற்றொரு பாட்டில் இதே கருத்தினைப் பிறவிக் காலத்தையே அளவு கோலாக வைத்துப் பாடுகிறார். கற்பக மரத்தில் ஏறிப் பறித்தவன் கையில் காஞ்சிரங்காய் கிடைக்கிறது என்றால் அதற்குக் காரணம் முன்வினை. அந்த வினை தன் விளைவைக் காட்டுதற்கு இந்தப் பிறவி வரை காலத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பது கருத்து. வினை நம்முடையது. வினைப்பயன் நாம் கருதிய ஆறு அன்று. இறைவன் எழுதிய ஆறு! அது காலத்தின் கையில்!

    உரை முன்னால்! உவமம் பின்னால்!

    பொதுவாக முன்னாலே எழுதப்படும் கவிதை அல்லது செய்யுளுக்குத்தான் பின்னாலே உரையெழுதுவார்கள். ஆனால் சில நேர்வுகளில் இது மாறி அமைந்துவிடுவதும் உண்டு. அதுபோன்றதொரு நிகழ்வு தமிழில் நிகழ்ந்திருப்பதாகக் கருதலாம். ‘இந்த உலகம் ஏன் இன்னும் நிலைபெற்றிருக்கிறது? என்னும் வினாவை எழுப்பிக் கொண்ட சங்கச் சான்றோர் ஒருவர் அதற்கான காரணத்தை நிரல்படக் கூறுகிறார்.

    “உண்டால் அம்ம இவ்வுலகம்! இந்திரர்
    அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
    தமியர் உண்டலும் இலரே! முனிவிலர்!
    துஞ்சலும் இலர்! பிறர் அஞ்சுவது அஞ்சிப்
    புகழெனின் உயிரும் கொடுக்குவர்! பழியெனின்
    உலகுடன் பெறினும் கொள்ளலர்! அயர்விலர்!
    அன்ன மாட்சி அனை யராகித்
    தமக்கென முயலா நோன்தாள்
    பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!” (புறம். 182)

    இந்தப் பாட்டில் தலையாய தகுதியைப் பாட்டின் இறுதியிலே பதிவு செய்தவர் ஏனைய தகுதிக் கூறுகளைப் பாட்டின் உள்ளடக்கமாகப் பதிவு செய்திருப்பதைக் காணலாம். ‘தனித்து உண்ணமாட்டார், சினங்கொள்ளமாட்டார், புகழுக்காக உயிரும் கொடுப்பார், பழியொடு வருவது உலகமே எனினும் அதனை விரும்பார், தளர்ச்சியறியாதவர்’ என்னும் இவையெல்லாம் தகுதிக்கூறுகள். இந்தத் தகுதிக் கூறுகள் இருக்க வேண்டுமாயின் அவர் எத்தகைய இயல்பினராக இருக்க வேண்டும் என்று எண்ணிய புலவர் ‘அவர் தன்னலமற்றவராக’ இருக்க வேண்டும் என்னும் தரமுத்திரையைப் பாட்டின் இறுதியிலே வைத்துவிடுகிறார். தன்னலமற்றவர் இருப்பதால்தான் இவ்வுலகமும் இருக்கிறது என்பது வழுதியின் கருத்து. இதே தன்னல மறுப்புணர்வைத் திருவள்ளுவர் ‘பண்பு’ என்னும் ஒற்றைச் சொல்லால் அடக்கிப்,

    “பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் ;
    மண்புக்கு மாய்வது மன்” (கு.996)

    என்னும் குறட்பாவில் பண்புடையவர் இருப்பதால் உலகம் இருக்கிறது என்று புறநானூற்றை வழிமொழிந்து, கூடுதல் தகவலாக அப்படி யாராவது இல்லாது போயிருந்தால் இவ்வுலகம் என்றைக்கோ மண்ணுக்குள் மறைந்து போயிருக்கும் என்பதையும் கூறுகிறார். இவ்விரண்டு பாடல்களில் உவமங்கள் இல்லை. கருத்தியல் பதிவாக மட்டும் இருக்கின்ற இதற்கு உவமத்தால் அடர்த்தி கூட்டுகிறார் ஔவையார்.

    நெல்லுக்கிரைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை” (மூதுரை – 10)

    ஔவையாரின் இந்தப் பாட்டில் ‘தன்னலமறுப்பாளர்’ என்று புறநானூற்றிலும் ‘பண்புடையார்’ என்று திருக்குறளிலும் சொல்லப்பட்டவர்க்கு மூதுரையில் ‘நல்லார்’ என்னும் பட்டம் சூட்டப்படுகிறது. அந்த நல்லவரால் அல்லாதவர்ககும் வாழ்வாம் என்பது ஔவையின் கருத்து. கருத்துப் பரிணாமம் இப்படி விரிகிறது!. இவர்களால் இந்த உலகம் இருக்கிறது என்பது புறநானூறு. இவர்களால் இந்த உலகம் இருக்கிறது. அத்துடன் இவர்கள் இல்லாவிட்டால் என்றைக்கோ அழிந்து போயிருக்கும் என்பது திருக்குறள். இவர்கள் இருப்பதால்தான் உலகம் இருக்கிறது இவர்களால் மற்றவர்களுக்கும் நன்மை என்பது மூதுரை. மற்றவர்களுக்கும் நன்மை என்பதற்குத்தான் ‘நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் பாயும்’ என்ற உவமப்பயன்பாடு.

    “சாந்துணையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
    ஆந்துணையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
    குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து
    மறைக்குமாம் கண்டீர் மரம்!” (மூதுரை – 30)

    கோடரி கொண்டு தன்னை வெட்டுபவனுக்கும் நிழல் தரும் மரத்தினை உவமமாக்கி மேலே சொல்லப்பட்ட பண்புடையார், தன்னல மறுப்பாளர், நல்லவர் என்பாருக்குப் புதிய பரிமாணத்தை உவமவழிக் காட்டுகிறார் ஔவை. கருத்தியல் பரிணாமத்திற்கு ஏற்ப எந்தக் கருத்துக்கு எந்த இடத்தில் எத்தகைய உவமத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவர்கள் நம் முன்னோர்!,

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

    பேரறிஞர் அண்ணா அவர்களின் எளிய தோற்றம் நாடாளுமன்ற வளாகத்திலேயே அவருக்குப் பல சங்கடங்களைக் கொடுத்திருக்கிறது. பேரறிஞர் பெர்னார்ட்ஷாவிற்கும் இந்த அனுபவம் உண்டு. உருவத்தின் எளிமையாலும் சிறுமையாலும் மானக்கேட்டிற்கு உள்ளானவர்களின் வரலாறு உலக அரங்கில் உண்டு.  பராசக்தி படத்திற்கு அவரது உருவத் தோற்றத்தால் முதலில் நிராகரிக்கப்பட்டவர்தான் நடிகர் திலகம். ‘உருவத்தைக் கொண்டு மனிதர்களை எடைபோடக்கூடாது’ என்பது அறிவுரையானால் ‘அப்படி எடைபோடுவது இந்த மண்ணின் எதிர்மறைப் பண்பாகத்தான்’ கொள்ள வேண்டியதிருக்கிறது. திருவள்ளுவர் சொல்கிறார்,

    “உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
    அச்சாணி அன்னார் உடைத்து” (கு. 667)

    ‘உருள் சுழலாது அதன் கடைக்கண் செருகுமது வடிவால் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து” என்று விளக்கம் தருவார் பரிமேலழகர். ஒருவன் திட்பம் நோக்கிக் கொள்ளவேண்டுமேயன்றி உருவம் கண்டு கொள்ளக் கூடாது என்பது கருத்து. வள்ளுவன் சொல்லிய இந்தக் கருத்தினை,

    “மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
    உடல் சிறியர் என்றிருக்க வேண்டாம் – கடல் பெரிது
    மண்ணீரும் ஆகா அதனருகே சிற்றூறல்
    உண்ணீரும் ஆகி விடும்” (மூதுரை 12)

    என்னும் பாடலில் நெய்தற் பொருளை உவமமாக்கிப் பாடுகிறார் ஔவை. தாழையின் மடல் பெரிதென்றாலும் மயக்கும் மணத்தைத் தரும் இதழ் வடிவால் சிறியது. தாழையின் மடல் வேறு இதழ் வேறு. அது மட்டுமன்று நெய்தற்கடல் பெரிது. ஆனால் அந்நீர் நன்னீராகாது. கடற்கரையில் இருக்கும் ஊற்றுநீர் அளவால் சிறிதே யானாலும் அருந்துவதற்குப் பயன்படும். இரண்டு உவமங்களைச் சொல்லிய ஔவை, ‘உடல் சிறியர் என்று இருக்க வேண்டாம்’ என்று ஒரு வரியில் உண்மையைச் சொல்லுகிறார்.

    அற்ற குளத்து அறு நீர்ப்பறவை

    நட்பைப் பற்றித் திருவள்ளுவர் பலபட ஆராய்ந்திருக்கிறார். அவ்வாறு ஆராய்ந்து அன்னார் எழுதிய குறட்பாக்களில் ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “கெடுங்காலை கைவிடுவார் கேண்மை அடுங்காலை
    உள்ளினும் உள்ளம் சுடும்” (கு. 799)

    ஒருவனுக்குக் கேடுவரும் போது அவனைவிட்டு நீங்குவாருடைய நட்பை உயிர்போகின்ற அந்த நேரத்தில் எண்ணினால் அந்த நட்பை நினைத்த உள்ளத்தை அது (அந்த நட்பு) சுடும் என்பது கருத்து. எந்த நிலையிலும் பண்பாடு தவறாதவர் திருவள்ளுவராதலின் தன்னைக் கைவிட்டவரைச் சுட்டாது தன்னைக் கழித்து மறந்த கேண்மையை எழுவாயாக்கி உரைத்த மாண்பு காண்க. கேண்மைதான் சுடும். ‘அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு கொள்ளற்க’ (798) என்பதும் அது. திருவள்ளுவரின் இந்தக் கருத்தியல் நூற்பாவிற்கு அழகியல் மேம்பட கவிதை உரையெழுதியிருக்கிறார் ஔவையார்.

    “அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
    உற்றுழி தீர்வார் உறவல்லர் –  அக்குளத்தில்
    கொட்டியும ஆம்பலும் நெய்தலும் போலவே
    ஒட்டி யுறவார் உறவு” (மூதுரை – 17)

    நீர் இருக்கும் வரை இருந்து, குடித்து, குளித்து, வாழ்ந்து, உறவாடிய பறவை நீர் குறைந்தவுடன் குளத்தோடு இருந்துவந்த உறவை அறுத்துப் பறந்துவிட, நீர் இல்லாது வறட்சி வந்த காலத்தும் கொட்டி, ஆம்பல், நெய்தல் ஆகிய மலர்கள் காய்ந்து மடியும். முன்னதைக் கூடா நட்பிற்கும் பின்னதைக் கொள்ள வேண்டிய கேண்மைக்கும் உவமமாக்குகிறார் ஔவையார். பறவை குளத்தில் பிறக்காதது. வந்து போவது. குளம் அதற்கு வேடந்தாங்கல். வேர்த்தாங்கல் அல்ல. துன்பம் வந்த போது குழுமுவது நட்பு. விலகுவது நட்பன்று. நட்பு உறவாவது அதன் பரிணாமம். ‘உயிரோடு உடம்பிடை நட்பு’ என்பார் திருள்ளுவர். அறிமுகம் நட்பாகாது. நீர்ப்பிடிப்பெல்லாம் நட்பாகாது. வேர்ப்பிடிப்பே நட்பு. ஔவையாரின் பாடலில் அழகியல் புனைவு பாதி. ஆழமான அறிவுரை பாதி!.

    பொற்கொல்லன் இல்லமும் தாமரைத் தடாகமும்

    புறநானூற்றில் புலவர்கள் பலர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். புலவர்கள் சிலர் ஒரே பாட்டை மட்டும் பாடியிருக்கிறார்கள். அப்படிப் பாடியவர்களில் கண்ணகனார்  என்னும் சான்றோரும் ஒருவர். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்நீத்த போது அவர் உயிர் நண்பர் பிசிராந்தையர் அங்குவந்து அவரும் வடக்கிருந்து உயிர்நீத்த நிகழ்வு கண்டு நெகிழ்ந்து பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. அந்த ஒருபாடல்தான் புறநானூற்றில் அவர் பாடியதாக இருக்கிறது.

    “பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
    மாமலை பயந்த காமரு மணியும்
    இடைப்படச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
    அருவிலை நன்கலம் அமைக்குங்காலை
    ஒருவழித் தோன்றியாங்கு – என்றும் சான்றோர்
    சான்றோர் பாலர் ஆப!
    சாலார் சாலார் பாலர் ஆகுபவே” (புறம். 218)

    இப்படி அமைந்த இந்தப் பாடலில் வேறுபட்ட இடத்தில் விளையும் வேறுபட்ட பொருள்கள் நல்வினை நிகழும் சூழலில் ஒன்றுபடும் என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது. பொழுதுநோக்கிப் பாடப்பட்டிருப்பினும் இணையும் பொருள்கள் தம்முள் இணையாகி இயைந்தவை என்பது நோக்கத்தக்கது. இந்தச் சிந்தனையை ஔவையார்,

    “நற்றாமரைக் குளத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
    கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பில்லா
    மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
    காக்கை உகக்கும் பிணம்!” (மூதுரை – 24)

    என்னும் வெண்பாவில் ‘நல்லவரே நல்லவரை நாடிச் செல்வர்’ என்னும் கருத்தமையப் பாடியிருக்கிறார். சங்க இலக்கியத்தில் நேர்முகப் பதிவு மட்டும் அமைந்திருக்க  ஔவை எதிர்மறைப் பதிவினையும் உடன் சொல்லுகிறார். நல்ல தாமரைக் குளத்தை அன்னம் நாடும். கற்றாரைக் கற்றார் நாடுவர். கல்வியில்லாத மூடரை மூர்க்கர் விரும்புவர் என்பதாம். காமுறுவர் மற்றும் முகப்பர் என்பன உயர்திணை முரண்கள் எனின் உகக்கும் என்பது அஃறிணை உடன்பாடு என்பது அறிக. இனிப் பாட்டின் நுண்ணியத்தை நற்றாமரைக் குளத்தைத் தேடி நல்லன்னம் செல்வதற்கும், முதுகாட்டில் கொண்டு வந்து போட்ட பிணத்தைக் காக்கை உகப்பதற்குமான இடைவெளியில் காணலாம்.

    சந்தனக்கோல் குறுகினாலும் சந்தனமே

    ‘குடகு’ என்ற சொல்லில் வரும் இரண்டு உகரங்களில் முதலில் நிற்பது முற்றியலுகரம். இறுதியில் நிற்பது குற்றியலுகரம். முன்னது ஒரு மாத்திரையாய் ஒலிக்க இறுதியது அதனின் குறைந்து ஒலிக்கும். குறைந்தொலிக்கும் அதனை உகரம் எனல் பொருந்துமோ என்னும் ஆய்வில் உரையாசிரியர் இளம்பூரணர் ஈடுபடுகிறார்.

    “அவைதாம்,
    குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற
    முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன”  (தொல். எழு.2)

    என்னும் தொல்காப்பிய நூற்பா, சார்பெழுத்துக்களைப் பற்றியதாகும். இந்த நூற்பாவின் அடிப்படையில் குற்றியலுகரம், குற்றியலுகரங்களின் இயல்பு பற்றி ஆராயும் இளம்பூரணர் அவற்றைத் தனியெழுத்துக்களாகக் கொள்ளாது உயிரது குறுக்கமாகவே கொள்கிறார். கொண்டு,

    “சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது அதுபோல இகர உகரங்கள் குறுகின இடத்தும் அவை உயிர் ஆகற்பாலன”

    என்று எழுதுகிறார். நூற்றுக்கணக்கான உவமைகளைப் படைத்துக் காட்டும் ஆற்றல் மிக்க நச்சினார்க்கினியரும் இதே நூற்பாவிற்கான தம் விளக்கத்தில் இளம்பூரணர் பயன்படுத்திய உவமத்தையே வழிமொழிந்திருக்கிறார். உகரம் உயிரெழுத்தாதலின் ‘உகரக்குறுக்கமும்’ உயிரெழுத்தே என்பது அவர்தம் கருத்து. இக்கருத்தைச், “சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது” என்னும் உவமத்தால் உயிரின் குறுக்கம் உயிராகுமேயன்றிப் பிறிதாகாது என்னும் இவ்விருவர்தம் அளவையியல் முடிவுக்கு இந்த உவமம் பயன்பட்டுள்ளது. உரையாசிரியர்களின் உவமக் கோட்பாடுகளில், ஒருவர் கண்டு மொழிந்த உவமத்தை மற்றொரு உரையாசிரியர் வழிமொழிந்திருப்பது புலமையோடு பண்புசார்ந்த வெளிப்பாடாகக் கருதப்படலாம். ஏனைய கோட்பாடுகள் அறிவும் புலமையும் சார்ந்திருக்க உண்மையோடு உறழ்ச்சி கொள்ளாது ஒத்துப்போகும் உயரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் வண்ணமாக வழிமொழிதலாகிய இக்கோட்பாடு விளங்குவது காண்க. உரையாசிரியர்கள் இலக்கண விளக்கத்திற்காக பயன்படுத்திய இந்த உவமத்தை ஔவை இலக்கியத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

    “சந்தனம் மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
    கந்தம் குறைபடாது ஆதலால் – நந்தம்
    தனம் சிறிய தாயினும் தார்வேந்தர் கேட்டால்
    மனஞ்சிறியர் ஆவாரோ மற்று?” (மூதுரை – 28)

    கொடுத்தே பழகிய குமணனும் அதியனும் ஊழ்வினை காரணமாகச் செல்வத்தில் குறைந்த காலத்தும் கொடுக்கும் இயல்பினின்றும் மாறுபடார் என்னும் கருத்தை ஔவை சந்தனக் கட்டை, சந்தனக் குச்சியாக மாறினாலும் கந்தம் மாறாது, கடமை தவறாது என்று உண்மையுரைக்கிறார். இளம்பூரணர் கையாண்ட உவமத்தை நச்சினார்க்கினியர் பயன்படுத்திக் கொள்கிறார். அவர்கள் இருவரும் இலக்கண விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதை ஔவை இலக்கியத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார். ஒரே உவமத்தில் மனம் பறிகொடுத்த புலவர்களின் மனநிலையைப் புகழ்வதா? மூவரையும் ஈர்த்த அந்த உவமத்தின் சிறப்பைக் கருத்தில் கொள்வதா?

    தோகை மயிலும் சிறகுக் கோழியும்

    பலத்தை முன்னிறுத்தி இறுமாப்புக் கொள்வதைவிடப் பலவீனத்தை உணர்ந்து அடக்கமாக இருப்பதே சிறந்தது. ஆனால் உலகியல் இதற்கு மாறுபட அமைந்திருக்கிறது. அண்டங் காக்கைகள் எல்லாம் தங்களைக் குயில்களாக எண்ணிக்கொள்வதும் கரிக்கட்டைகள் தங்களை ஊதுவத்திகளாக எண்ணிக் கொள்வதும் இங்கே நியதியாக இருக்கிறது. ’பாரதி’ என்னும் பெயரை அபிமானத்தால் வைத்துக் கொள்வது வேறு. ‘பாரதி’ என்று பெயர் வைத்திருப்பதாலேயே தங்களையும் ‘மகாகவி’ என எண்ணிப் பிறரை நடுங்க வைப்பது என்பது வேறு. பின்னவர் இங்கு அதிகம்.  திருவள்ளுவர் காலத்திலிருந்தே இந்தப் போலிகள் பற்றிய சிந்தனை இங்கே இருந்து வந்திருக்கிறது.

    “கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
    கொள்ளார் அறிவுடை யார் “ (கு. 404)

    அறிவு இரண்டு கூறுகளை உடையது. ஒன்று கல்வி. இரண்டு கேள்வி. கேள்வி மட்டும் உடையவனின் கேள்வியும் நிறைவு பெறாது. அவன் அறிவும்  முழுமைபெறாது. அந்தப் போலி அறிவுடைமையைத்தான் திருவள்ளுவர் ‘ஒண்மை’ என்னும் சொல்லால் குறிக்கிறார். மணற்பரப்பில் நத்தையால் கிழிக்கப்படும் கோடு கோடானாலும் அடுத்த அலையில் அது அழிந்துவிடுமாதலின் அது நிலைபெறாது. இந்தக் குறட்பாவிற்குக் காட்சியளவையால் விளக்கவுரை எழுதுகிறார். ஔவை,

    “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
    தானும் அதுவாகப் பாவித்து – தானும் தன்
    பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
    கல்லாதான் கற்ற கவி” (மூதுரை – 14)

    மயில் ஆடுகிறபோது தோகை தானாக விரியும். சிறகைத் தோகையாக எண்ணித் தன்னை மயிலாகக் கருதிக் கொள்ளும் வான்கோழி ஆடுகிறபோது அது தன் முயற்சியால் விரித்துக் கொள்கிறதாம். ‘விரித்து ஆடினால்’ என்னும் இருசொல் தொடர் தரும் நுண்ணியம் இது. அறிவுடையவன் கவிபாடினால் தானாக இனிக்கும். கல்லாதவன் முயன்று பாடினாலும் இனிக்காது. மாறாகக் கேட்பவனுக்குக் காது மடல் கசக்கும். பாவனையினால் வரும் கேட்டினைப் பறவைகளை வைத்து விளக்கியிருக்கும் ஔவையின் பாடல் இது.

    நிறைவுரை

    கருத்தியல் அளவைக்கு உவம அளவையைக் கூட்டுதல். உவமத்தோடு இருந்த கருத்தியல் பதிவுகளுக்குக் கூடுதல் உவமங்களைக் காட்டி விளக்குதல். ஒரு கருத்தியலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உவமங்களைப் பயன்படுத்துதல் என்பனவெல்லாம் ஔவையின் உவமக் கோட்பாடுகளாக அறியக் கிடக்கின்றன. கருத்தோடு இயைந்த நீதிகளைக் கண்ணோடு இணைந்த காட்சிகளைக் கொண்டு விளக்கும் ஔவையின் உவமக் கோட்பாடு தனித்தன்மை மிக்கது. தமிழ் வரலாற்றில் ஔவைகளுக்குப் பஞ்சமில்லை. சிவபெருமான் குடும்பச் சிக்கலைத் தீர்த்த நீதிபதி ஔவை,, அதியமானுக்காகத் தூது சென்ற அமைச்சர் ஔவை, கம்பனையும் ஒட்டக்கூத்தனையும் வம்புக்கிழுத்த வழக்கறிஞர் ஔவை, சோழனையே எதிர்த்த போட்டியாளர் ஔவை, நீதிநூல்கள் பாடிய பாவலர் ஔவை என்று பலராகவே இருந்துவிட்டுப் போகட்டும். அது பற்றிய கவலை நமக்குத் தேவையில்லை. அது ஆய்வாளர் பணி. மரங்கள் பலவாகட்டும் நிழல் ஒன்றுதானே! உண்ணுதற்கே விருந்து! விரித்த இலை யாருடைய தோட்டத்தில் விளைந்தது என்ற ஆராய்ச்சி தேவையற்றது!  எந்த ஔவையாக இருந்தால் என்ன? எண்ண வேண்டிய நீதிகளை இனிக்கும் உவமங்களால் பந்தி வைத்த எல்லா ஔவைகளையும் போற்றுவோம்! அவர் பாடல்கள் நமக்குப் பாடமாகட்டும்!

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 35

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 35

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    கவிதை அழகு பார்க்கும் கண்ணாடிகள் உவமங்கள்! 

    முன்னுரை

    படைப்பதோடு முடிந்து விடுகிறது படைப்பாளன் பணி. சுவைப்பதோடு நிறைவடைகிறது ரசிகனின் மனம்! படித்தலும் சுவைத்தலும் ஆய்தலும் நீட்டித்துக் கொண்டே போவதால் திறனாய்வாளனின் பணிக்கு ஆதி உண்டு. அந்தம் இல்லை. உவமம் பொருட்பகுதி என்பதால் ஒரு கவிதைக்கான பொலிவும் தெளிவும் அதில் பயன்படுத்தப்படும் உவமத்தைப் பொருத்தே அமையும். சுருக்கியுரைப்பின் கவிதை தன் உள்ளடக்க வெளிப்பாட்டு நேர்த்தியைச் சரிபார்த்துக் கொள்ளும் கண்ணாடியாகவே உவமம் அமைந்திருக்கிறது. அது போன்ற சில கண்ணாடிகளை இக்கட்டுரை அடையாளப்படுத்துகிறது.

    ஓரூர் உண்மை! உள்ளூர் அருமை!

    சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் நல்லியக்கோடன். இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரால் பாடப்பெற்றவன்.  நத்தத்தனார் பாடிய நல்லியக்கோடனைப் புறத்திணை நன்னாகனாரும் பாடியிருக்கிறார். நன்னாகனார் ஒருமுறை நல்லியக்கோடனைக் காணச் சென்ற பொழுதுதான் அவனுடைய தன்மையும் வள்ளன்மையும் தெரிந்திருக்கிறது.  அதுவரை நல்லியக்கோடனின் வள்ளன்மை அறியாது அவனால் புரக்கப்படாது வீணே கழிந்த தன் வாழ்நாள்களுக்காக வருந்தியது அவர் நெஞ்சம். அப்போது பாடிய பாடலில்,

    “பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
    ஓரூர் உண்மையின் இகந்தோர் போலக்
    காணாது கழிந்த வைகல் காணா
    வழிநாட்கு இரங்கும் என் நெஞ்சம்! அவன்
    கழிமென் சாயல் காண்டொறு நினைந்தே!” (புறம்.176)

    என்ற வரிகளில்தான் வெண்ணெயிருக்க நெய்க்கு அலைந்த தன் அறியாமைக்கு ஒர் உவமம் சொல்கிறார். பாரியின் பறம்புச் சுனை நீர்  “‘கைவண் பாரி தீம்பெரும் பைஞ்சுனை” (அகம். 78) “பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்” (குறுந். 166) எனப் பிறராலும் பாடப்பெற்ற பெருமையுடையது. உள்ளூரில் அகப்படும் அரியபொருள் அரிதாகாது எளிதாகக் கருதப்படுவதைப் போலப் பாரியின் சுனைநீரின் அருமையும் உணரப்படாது போயிற்று. எல்லாராலும் அறியப்பட்டுப் பயன்பட்ட பாரியின் சுனை நீர் அருமையை அறியாது, அதனைப் பருகாது வீணானவரைப் போல, நல்லயக்கோடனின் பெருமையை உணராது தானும் துன்பப்பட்டதாக நன்னாகனார் பாடுகிறார்.

    எல்லாப் பூவும் இறைவனுக்கு மணக்கும்! 

    வேள்பாரியைக் கபிலர் கடவுளோடு ஒப்பிட்டுப் பாடுகிறார்!. இந்த ஒப்பீட்டில் அவர் சுட்டும் உவமம், நுண்ணியமுடையது. எருக்கம் பூவை ஏற்கின்ற இறைவனைப் பாரியோடு ஒப்பிடுகிறார். மக்கள் விரும்பாத பூவை இறைவன் ஏற்கிறார். எருக்கம் பூவிற்குக் கொடுக்கும் அடைகள் அதன் புறஅழகைப் பெருக்குமாயினும் மக்கள் அதனை ஏற்பதில்லை. ‘குவியிணர்ப் புல் இலை எருக்கம்’ என்கிறார். ‘குவிமுகிழ் எருக்கு’ என்பது இன்னொரு பார்வை.  ‘குவியிணர் எருக்கின் அதர் பூங்கண்ணி’ என்பதும் பிறிதொரு பார்வை. கம்பர் கூட ‘வெள்ளெருக்கம் சடைமுடியான்’ என அடைகொடுத்தே சிவனைச் சுட்டுவார். கொத்தாகப் பூத்தாலும் புல்லிலைகள் இருப்பினும் இறைவன் அதனை வெறுப்பதில்லை.

    “நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப்
    புல் இலை எருக்கம் ஆயினும்; உடையவை
    கடவுள் பேணேம்” என்னா ஆங்கு
    மடவர் மெல்லியர் செல்லினும்
    கடவன் பாரி கைவண்மையே!” (புறம். 106)

    நறுமணம் இன்மையின் நற்பூ வகையிலும் இறைவன் விரும்பிச் சூடுதலின் தீயபூ வகையிலும் சேராதது எருக்கம்பூ. ஆனால் இறைவன் சூடிக்கொள்கிறான். அதுபோலப் பாரியை நாடிச் செல்வோர் அறியாமை உடையவராயினும் வறுமையால் மெல்லியராயினும் வேள்பாரி தன் வள்ளன்மையிலிருந்துப் பிறழமாட்டான். மலரில் பேதம் பார்க்காத இறைவனைப், புரக்கப்பட வேண்டியவரின் தரம் பார்க்காத பாரியோடு ஒப்பிடுகிறார் கபிலர். ஆழமான சமுதாயக் கருத்தினை உலகியலோடு தொடர்புடைய ஒரு பொருளை உவமமாக வைத்துக் கூறுவது காண்க.

    செருப்பிடைப் பட்ட  சிறுபரல்

    இன்னா செய்தார்க்கு மீளச் செய்வது நன்னயமேயானாலும் அதனை ‘ஒறுத்தல்’ என்ற சொல்லால் திருக்குறள் குறிப்பது சிந்திக்கத்தக்கது.  தூக்குத்தண்டனைக் கைதிக்கு ஆயுள் தண்டனை விதிப்பது குற்றத்தின் தன்மை பொருத்தது என்பதோடு உளவியல் நுட்பம் வாய்ந்தது. தூக்கு உயிர்போக்கும். ஆயுள் உயிர்காக்கும். இந்த முரண் உணரத்தக்கது. ஆனால் முன்னது ஒரு நொடியில் முடிந்து விடும். பின்னது அத்தகையதன்று. உயிர் தவணைமுறையில் கழியும். குற்றம் செய்தவன் தன் குற்றத்திற்காக ஒவ்வொரு நொடியும் எண்ணி மருகுவான். ஆழ்ந்த சிந்தனையாளர் பின்னதையே முன்னெடுப்பர். அந்தக் காலத்தில் அப்படி முன்னெடுத்த மன்னன் ஒருவன் இருந்திருக்கிறான். பெயர் தெரியாது. “கணைக்கால், அம் வயிறு, அகன்ற மார்பு, பைங்கண், குச்சின் இரைத்த குரை மயிர் மேவாய்ச், செவியிறந்து தாழ்தரும் கவுளன் வில்லோடு யார் கொலோ எளியன்?” (புறம். 257) என்று வண்ணனை செய்யப்படும் இவனை, உண்டாட்டில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் அவன் நாட்டார்!

    “செருப்பிடைச் சிறுபரல் அன்னன்”

    பகைவர்தம் ஆநிரையைக் கவர்ந்து கொண்டு வந்து தம் நாட்டார்க்கு வழங்கிய அவன் பகைவர்க்குத் துன்பம் தருவதில் எத்தகையவன் என்றால் செருப்புக்கு இடையே நுழைந்து அணிந்தவனுக்கு இடையறாது தொல்லை கொடுக்கும் பரலைப் போன்றவனாம்.

    “தருக்கி யொழுகித் தகவல்ல செய்தும்
    பெருக்க மதித்தபின் பேணாமை செய்தும்
    கரப்பிடை உள்ளம் கனற்று பவரே
    செருப்பிடைப் பட்ட பரல்” (பழ. 202)

    என்னும் பதினெண் கீழ்க்கணக்கில் ‘செருப்பிடைப் பட்ட பரல்’ என்னுந் தொடர் வேறொரு பொருண்மையை விளக்கி நிற்கிறது. உவமம் சொல்லும் பெருமக்கள் உலகியலை உற்று நோக்குந்  திறத்தை அவர்கள் கையாளும் உவமங்களாலேயே புரிந்து கொள்ள இயலும்.

    அச்சுடை சாகாட்டு ஆரமும் பல்லியும்

    இழப்பு கண்டு உற்றார் உறவினர் புலம்புவதும் இறந்தவரால் புரக்கப்பட்டவர் புலம்பினாலும் இரண்டுமே கையறுநிலைதான். மனைவி மாண்டு கணவன் அரற்றுவதும் கணவன் மாண்டு மனைவி புலம்புவதும் இத்துறையே!, இறப்பும் இழப்பும் சூழல்களுக்கு அப்பாற்பட்டவையாதலின்  பாலைவனத்தில் எதிர்பாராக் காரணங்களால் தன் கணவனைப் பறிகொடுக்கிறாள் ஒருத்தி. இதுகாறும் இணைந்தே வாழ்ந்தவள் அந்நொடி தனிமை உணர்கிறாள். அதனால் தன்னையும் அவனோடு சேர்த்தே புதைத்துவிட ஒரு முதுமக்கள் தாழி தேவைப்படுகிறது அவளுக்கு. தாழி செய்பவனிடம் இருவரையும் சேர்த்துப் புதைக்குமாறு அகன்ற தாழி செய்து உதவ இப்படி வேண்டுகிறாள்.

    “கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
    அச்சுடை சாகாட்டு ஆரம் பற்றிய
    சிறு வெண்பல்லி போலத் தன்னொடு
    சுரம்பல வந்த எமக்கும் அருள்
    வியன் மலர் அகல்பொழில் ஈமத்தாழி
    அகலி தாக வனைமோ!
    நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!” (புறம். 256)

    இக்கால இணையர்கள் தங்களை ஒப்பிட்டுக் கொள்வதே ஒரு தனி ரகம்! மலரும் மணமும் என்றிருந்தது இன்றைக்கும் ‘மந்தையும் மாடும்’ என்ற அளவுக்கு வந்துவிட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஆரக்காலில் ஒட்டிக் கொண்ட பல்லியாய்’ வாழ்ந்திருக்கிறாள் மனைவி!. அன்றைக்குக் கணவனுக்கு மனைவியாக வாழ்ந்தவள் இன்றைக்குக் கவிதையில் பொருளாக வாழ்கிறாள். வாழ்வில் மட்டுமன்று சாவிலும் ஒன்றாக வேண்டும் என்பதற்காக அகன்ற தாழியை வேண்டுகிறாள். ஒரே மாலையில் இருவர் கழுத்தும் இருப்பதை விரும்பும் தற்காலத்திற்கும் ஒரே தாழியில் இருவர் அடங்க வேண்டும் என்னும் அக்காலத்திற்கும் காலம் மட்டுமா இடைவெளி? என்ன தெரிகிறது இதனால்? ஒட்டி உறவாடியவர்கள் விட்டுப் பிரிய எண்ணுவதில்லை.

    விதவைபோல் ஆன வீடு

    ‘மனைக்கு விளக்கம் மடவார்’ என்பது முதுமொழி. நவீன காலத்தில் மங்கல நாட்களில் ஆண்கள் வீட்டில் விளக்கேற்றுவது புரட்சியாகத் தெரியலாமே தவிர  மனைக்கு மங்கலமாகாது. ‘வீடு வெறிச்சோடி விட்டது’ என்பது உலக வழக்கு! மகிழ்ச்சியோடு சில நாளே தங்கிய விருந்தினர் சென்றால் கூட வீடு வெறிச்சோடிவிடும் என்றால் விளக்கேற்றிய மனைவி இழந்த மனை எப்படி இருக்கும்? அணிகலன் இழந்த கைம்பெண்ணைப போல் இருக்குமாம்!.

    “அந்தோ எந்தை அடையாப் போரில்
    வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
    வரையாப் பெருஞ்சோற்று முரிவார் முற்றம்
    வெற்று ஆற்று அம்பியின் எற்று? அற்று ஆக!
    …………………………………………………………………………………………
    நிரை  இவண் வந்து நடுகலாகிய
    வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
    கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிக்
    கழிகலன் மகடூஉப் போலப்
    புல் என்றனைப் பல் அணி இழந்தே! “(புறம். 261)

    ‘காரியாதி’ என்னும் மன்னனுக்குப் பாடிய கையறு நிலையை ஆவூர் மூலங்கிழார் ஆதியின் முரிவார் முற்றத்தின் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டுப் பாடுகிறார். காரியாதி இருந்தபோது வரையாப் பெருஞ்சோற்று முரிவார் முற்றம் அவன் இறந்தபிறகு கழிகலன் மகடூஉப்போலப் பொலிவிழந்ததாகக் கூறுகிறார். ‘கழிகலன் மகடூஉ’ என்னும் கிழாரின் தொடருக்குக் கம்பன் உரையெழுதியிருக்கிறான். வாலியை இழந்து விதவையான தாரையை இப்படி நோக்குகிறான் இலக்குவன்.

    “மங்கல அணியை நீக்கி  மணி அணி துறந்து வாச
    கொங்கலர் கோதை மாற்றிக் குங்குமம் சாந்தம் கொட்டாப்
    பொங்கு வெம் முலைகள் பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
    நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நின்றான்” (கம்ப. 4320)

    இந்த விதவைக் கோலத்தில் இருப்பது ஒரு குரங்கு என்பதை எவரும் நினைவுக்குக் கொண்டு வர இயலாது. தாரையின் இந்தக் கோலத்தைக் கண்ட இலக்குவனுக்குத்தன் தாயரின் கைம்மைக் கோலம் நினைவுக்கு வந்ததாம். அங்கேதான் கவிஞன் கம்பன் ஒரு கவிச்சக்கரவர்த்தியாகிறான்.

    “இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த
    நினைவினால் அயர்ப்பு சென்ற நெஞ்சினன் நெடிது நின்றான்” (கம்ப. 4321)

    குரங்கைத் தாயாக எண்ணும் பாத்திர செய்நேர்த்தி, உலக உயிர்களை ஒன்றாக எண்ண வைக்கும் இறையுள்ளம், தாயின் நிலை மறக்காத தனையர்களின் இயல்பு எதிரியின் மனைவியானாலும் பெண்மைக்குத் தரப்படும் மதிப்பு என்று கம்பனின் கவியாற்றல் எல்லை மீறிச் செல்வதைக் காணலாம். இந்த உவமங்களைத் தொகுத்து நோக்கினாலோயொழிய உவமச் சிறப்பு அவ்வளவாகப் புலப்படாது. “தாயரைப் போல் தாரையிருக்கிறாள், அந்தத் தாரையைப்போலப் புறநானூற்றுக் கைம்பெண் இருக்கிறாள். கலன்கழிந்த அந்தக் கைம்பெண்ணைப் போலக் காரியாதியை இழந்த இல்லம் இருக்கிறது என்ற நிரலில் வைத்துப் பார்த்தால் இலக்கியச் சுவை என்ன என்பது புரியக் கூடும். ‘கலன் கழிந்த மகடூஉ’ என்பதை விளக்கத்தான் தாரையும் அயோத்தித் தாயரும் இங்கே துணைக்கழைக்கப்பட்டார்கள் என்பது கருதத்தக்கது. “இந்த மன்னன் படையெடுத்தபோது அழிந்த நகரத்தைப் போல் இவள் நலன் அழிந்தது” என்று தலைவன் பிரிவால் இழந்த  நலனுக்கு அழிந்த நகரத்தை அகத்திணையில் உவமமாக்கிய புலவர்கள் உண்டு. மூலங்கிழார் ஒளியிழந்த வீட்டிற்குக் களையிழந்த கைம்பெண்ணை உவமமாக்கியிருப்பது அவலத்தை மிகுவிப்பதாக உள்ளது, மேலே சொல்லப்பட்ட கைம்பெண்களின் கோலத்தை மனத்தில் கொண்டு வந்து ‘கழிகலன் மகடூஉ’வைக் காட்சிப்படுத்திக் கொண்டு காரியாதியின் இல்லத்தை நோக்கினால் தெரியும் உவமத்தின் நுண்ணியம்!

    இல்லது படைக்கவும் இவனால் இயலும்!

    சங்க இலக்கியம் ஓர் உவமத் தோரணம். ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை அனுபவப் பதிவுகள். அழகியல் துளிகள் அல்ல. கற்பனைப் புள்ளிகள் குறைவு. இதனை வேறுவகையாகச் சொன்னால் மக்கள் வழக்கில் உவமத்தைப் பயன்படுத்துவதற்கும் செய்யுள் வழக்கில் உவமத்தைப் பயன்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு. முன்னது இயற்கை. பின்னது செயற்கை. ஆனால் சங்க இலக்கியம் இதற்கு மாறுபட்டது. புலவனின் புலமையாற்றல் பின்னதில் வெளிப்படுவதென்றால் புலவனின் சமுதாய நோக்கும் வாழ்வியல் பட்டறிவும் முன்னதில் வெளிப்படும்.

    “கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
    வில்லேர் வாழ்க்கை சீறூர் மதவலி
    நனி நல் கூர்ந்தனன் ஆயினும் பனிமிகப்
    புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
    கல்லா இடையன் போலக் குறிப்பின்
    இல்லது படைக்கவும் வல்லன்., உள்ளது
    தவச்சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள்
    நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
    இல் பொலி மகடூஉப் போலச் சிற்சில
    வரிசையும் அளிக்கவும் வல்லன் உரிதினின்
    காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
    போகுபலி வெண்சோறு போலத்
    தூவவும் வல்லன் அவன் தூவுங்காலே!” (புறம். 331)

    பாட்டில் உள்ள உவமத்தைச் சுவைக்கிறபோது உவமத்தை மட்டுமே தனியெடுத்துச் சுவைக்கலாம். பாயாசத்தில் கிடக்கும் முந்திரியையும் திராட்சையையும் போல. பாட்டோடு கலந்தும் சுவைக்கலாம் சோற்றில் உப்பைப் போல. சங்க இலக்கிய உவமங்கள் பெரும்பாலும் பின்னதைச் சார்ந்தது. இதில் மூன்று வல்லமைகள் காட்டப்படுகின்றன.

    1. இல்லது படைக்கவும் வல்லன்
    2. வரிசையில் அளிக்கவும் வல்லன்
    3. தூவவும் வல்லன்.

    இம்மூவகை வல்லாண்மையை அவற்றை விளக்கும் உவமங்களோடு சுவைக்கிறபோதுதான் பாட்டு இனிக்கிறது.

    கல்லா இடையன் போல வல்லன்

    இல்லாமையைக் காரணமாக்கி ‘இயலாமையை’ முன்னிறுத்தி மறுதலிப்பதைவிட முயற்சியினால் இல்லாமையைப் போக்கிக் கொள்வது சிறந்தது. மிக்க வறுமையுற்ற காலத்திலும்  வறுமையை முன்னிறுத்தாது, ‘குளிரைத் தவிர்ப்பதற்கு வேண்டிய நெருப்பைத் தீக்கடைக்கோலைக் கொண்டு கடைந்துத் தீயுண்டாக்கும் கல்லாத இடையன் போலத்’ தித்தன் உதவுவான் என்னும் இந்த உவம விளக்கம் தித்தன் வறுமையுற்ற காலத்தும் இல்லையென்னாது வந்தார்க்கும் வழங்கும் நெறியைத்தானே கண்டறிந்து ஈட்டி வழங்குவான் என்னும் உண்மை உணர்த்தி நின்றது.

    இல்பொலி மகடூஉப் போல வல்லன்

    இல்லாமையைப் போக்கிக் கொள்ளும் நெறி அவ்வாறெனின் உள்ளது சிறிதாகிப் புரக்கப்பட வேண்டியவர் பலராயின் தித்தன் எப்படிச் செயல்படுவான்? இல்பொலி மகடூஉப் போலச் செயல்படுவானாம்!. அவள் எப்படிச் செயல்படுவாள்? தன்பால் உள்ளது சிறிதாயினும் அதனை இவறுதல் இன்றி யாவர்க்கும் அவரவர் வரிசைக்குத் தக்க முறைப்படுத்தி வழங்குவதனால், கொள்வதனால் கொள்வார்க்கு வருத்தம் பயவாதாம். ‘நெடிய பந்தர்க் கீழ் இருத்தி உணவை முறைமுறையாகத் தந்து உண்பிக்கும் இல்வாழ்க்கையின் சிறந்த மகளைப்போல’ என்னும் அகன்ற விளக்கத்தை இல்பொலி மகடூஉ என்னும் இருசொற்களால் புலப்பட வைத்த நுட்பம் உணர்க.

    வெண்சோறு போலத் தூவவும் வல்லன்

    இல்லாதபோது உருவாக்கிக் கொள்ளுவான். அளவு குறைந்த போது நிரந்து வழங்குவான். செல்வக் காலத்தில் எப்படி வழங்குவான்? “வரையாக் கொடைக்குரிய செல்வக் காலத்தில் (உரிதினின்) நாடு காத்தலைச் செய்யும் வேந்தரது பெருமனையில் எறியப்படும் வெண்சோறு போல யாவர்க்கும் அள்ளி வரையாது வழங்கவும் வல்லனாவானாம். இப்போது நிரல்படுத்திக் கொள்ள வேண்டும். இருக்கிற காலத்தில் வெண்சோறுபோல வாரி இறைப்பான். அளவான காலத்தில் குடும்பத்தலைவிபோல அளவறிந்து தருவான். இல்லாத காலத்து தேவைப்படும் தீயைத் தானே உருவாக்கிக் கொள்ளும் கல்லாத இடையன் போல  உருவாக்கித் தருவான்.

    நிறைவுரை

    உவமம் கவிதை ஆடைக்குள் இழையும் நூல். போலிச் சரிகை பட்டையன்று. அது மலருக்கும் காம்புக்குமான உறவு. கொடிக்கும் குண்டூசிக்குமான உறவன்று. அகத்திணைப் பரப்பிலிருந்துத் தன் ஆளுகையை விரித்துக் கொண்ட பெருமை அதற்கு உண்டு.  கவிதைப்  பேரழகு அதனால் கட்டமைக்கப்பட்டது. சொல்லப்படுகிற கருத்துக்களுக்கேற்றவாறு பொருத்தமான உவமங்களை மிக எளிதாகக் கையாண்டவர்கள் நம் முன்னோர்கள்.! கருத்து விளக்கத்திற்கே உவமங்கள்! கவிதை தன் அழகைப் பார்த்துக் கொள்ளும் கண்ணாடிகள் அவை!

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 34

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 34

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தமிழ்க்கவிதை உவமங்களில் பானையும் யானையும்

    முன்னுரை

    தமிழ்க்கவிதை வல்லார் தமது கவிதைகளில் அமைக்கும் உவமங்களில் அல்லது தாமாகவே அமையும் உவமங்களில் அவர்தம் பன்முக நோக்கு புலப்படுகிறது.  இயற்கையின் ஒவ்வொரு நுண்ணிய அசைவுகளையும் அவர்கள் நோக்கி வந்திருக்கிறார்கள். பல்லியின் ஒலியை அடையாக்கிக் ‘கனைகுரல் பல்லி’ என்று சொல்லுவதிலும் ‘ஆடுநடை புரவி’, ‘அசைநடை களிறு’ என்பதிலும் அவர்களுடைய நோக்கு புலப்படுகிறது. ‘குவிமுகிழ் எருக்கு’ என்பதில் அவர்களுடைய இயற்கை நாட்டம் தென்படுகிறது. தூமயிர் குறுந்தாள் நெடுஞ்செவி குறுமுயல்’ என்பதில் ஒரு சாதாரண உயிரின் உறுப்புக்களை எவ்வளவு நுட்பமாகக் கவனித்து வந்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.  அந்த வகையில் மக்களுக்கு அப்பாற்பட்ட கவிதை உவமங்களில் தாவரங்கள், ஊர்வன, பறப்பன, விலங்கினம், நீர்வாழ்வன முதலியன இடம்பெற்றிருப்பதை அறியமுடிகிறது. இந்த வகையில் மண்பானையையும் மறவேழத்தையும் உவமப் பொருளாகக் கொண்டு அவர்கள் விளக்கிய கருத்துக்கள் சில இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராயப்படுகின்றன.

    தொல்காப்பியர் கண்ட பானை

    தமிழின் தலையிலக்கணமாகிய தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பானை உவமமாகக் காட்டப்பட்டுள்ளது. இதுவெறும் பானை அல்ல. நீர்ப்பானை. காய்ந்த பானை அன்று. பச்சைப் பானை. குழந்தையைப் ‘பச்சை மண்’ என்னும் வழக்கு நோக்குக. இந்தப் பச்சைப் பானையை இலக்கிய வழக்கில் ‘பசிய மட் கலம்’ அல்லது ‘பசுமட்கலம்’ என்பர்.

    “தன்னுறு வேட்கையைக் கிழவற் முற்கிளத்தல்
    எண்ணுங்காலை கிழத்திக்கில்லை
    பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
    பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப” (28)

    பெண்விடுதலையாளர் பலரும் எதிர்க்கின்ற நூற்பா இது. தொல்காப்பியம் ஒரு மொழியிலக்கண நூல் என்பதையும் இலக்கியத்திற்கான உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் கூறுகின்ற நூல் என்பதையும் முற்றிலும் மறந்து அதனை ஒரு வரலாற்றுப் பனுவலாகக் கருதியதன் விளைவே அந்த எதிர்ப்பு. எழுவகை அகத்திணையுள் பெருந்திணை மாக்களை ஒப்பிட்டுக் கூறிய நூற்பா இது. பிற நீர் மாக்களின் என்னும் தொடருக்கு,

    “வேறு வேறாகத் தம்மின் தாம் காதல் செய்து ஒழுகும் அறிவில்லாதவரைப்போலத் தலைவன் அறியும் படியாகத் தனக்குற்ற வேட்கையை அவன் முன்னர்க் கூறுதல் தலைவிக்கு இல்லை”

    என்னும் நச்சினார்க்கினியர் உரைவிளக்கம் மிக ஆழமான சிந்தனையை உள்ளடக்கியது. அகன் ஐந்திணை தலைமக்களையும் பெருந்திணை மற்றும் கைக்கிளை மாந்தரையும் ஒப்பிட்டுக் கூறிய நூற்பா இது. இனிக், காதல் மலரினும் மெல்லிது என்னும் உணர்வுடையாருக்கு இந்த நூற்பாவின் மென்மை புரியும். ‘பேதையின் நகை மொக்கில்’ காதலை உணரும் மென்மையான தலைமக்களுக்கு அது மலரினும் மெல்லிது என்பது புரியக் கூடும். அரும்பிப் போதாகி மலரும் நோயாகக் காதலைக் கண்டவர்கள் அதனை ஒரு வெடிகுண்டாகக் கருதமாட்டார்கள். ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்ற பெண்மையின் தன்னிச்சையான வெளிப்பாடு, உரிமையின்பாற்பட்டதன்று. பண்பாட்டின்பாற்பட்டது. அதனால்தான் பசிய மட்கலத்துள் பெய்து வைத்த நீர் எப்படிப் புறத்தே கொஞ்சம் கொஞ்சமாகப் பொசியுமோ அது போலப் பொசியும் என்று உவமம் கூறினார் தொல்காப்பியர். காதலுக்குக் காப்பியர் சொன்ன இந்த உவமத்தைத்  திருவள்ளுவர்,

    “சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமட்கலத்துள்
    நீர் பெய்திரீஇ யற்று” (660)

    என்னும் குறட்பாவில் அற வழியிலின்றி அல்வழியில் வந்த பொருளால் அரசனைக் காக்க முயல்வது நீரைச் சேமிப்பதற்காகப் பசிய மட்கலத்துள் அதனைப் பெய்தலோடு ஒக்கும் எனச் சித்திரிக்கிறார்.

    பச்சைக் குழந்தையும் பசுமட் கலமும்

    பாவேந்தர் எழுதிய இறவா இலக்கியமான குடும்ப விளக்கிலே ஒரு காட்சி. வேடப்பனுக்கும் நகைமுத்துக்கும் மகள் பிறக்கிறாள். மகவைக் கண்ட பேராவல் காரணமாகத் தூக்கிக் கொஞ்சுதற்காக விரைந்து செல்கிறான் வேடப்பன். அவன் விரைவைக் கண்ட நகைமுத்து அவனைத் தடுத்துக் குழந்தை எத்தகையது? அதனை எப்படித் தூக்க வேண்டும்? என்று இப்படி அறிவுறுத்துகிறாள்.

    “வேடப்பன்
    அடங்கொணா மகிழ்ச்சியால் அருமை மகளை
    எடுக்க விரைந்தான் “அதுதான் இயலாது
    கொள் அன்று., கொத்து மல்லி அன்று.,
    பிள்ளை அத்தான்”  என்றாள் பெற்றவள்
    பிள்ளையைத் தூக்கும் பெருந்திறம் தானும்
    வேடப்பனுக்கு விளக்குவாள் துணைவி!
    ஆழியுள் உருவான அழகு மட்கலத்தை
    இயற்றி யோர்க்கே எடுப்பது முடியும்!
    சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்!
    …………………………………………………………………………………………
    தலை உடல் இரண்டையும் ஒருங்கு தூக்கி
    உலை அமிழ்தை வறியவள் ஒருத்தி தூக்கல்போல்
    தவறாது தூக்குதல் தலையாகிய கடன்”

    நகைமுத்தின் இந்த அறிவுறுத்தலில் பச்சைக்குழந்தைக்குப் பசிய மட்கலம் உவமமாக்கப்பட்டுள்ளது.

    சித்தர் பாட்டில்  சிதறிய  பானை

    புகழ் பெற்ற சித்தர் பாடல் இப்படி அமைந்திருக்கிறது. அந்தப் பாடடில் ‘பானை’ என வெளிப்படக் கூறாவிடினும் வனைந்தவன் குயவன் என்பதால் வனையப்பட்டது பானை என்பது பெறப்படும்.

    “நந்த வனத்தில் ஓர்ஆண்டி அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
    கொண்டு வந்தான் ஒரு தோண்டி
    அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

    என்ற பாடல் கடுவெளி சித்தரால் பாடப்பட்டது. வாழ்க்கை நிலையாமையைக் கூறுகிற பாடல் இது. அதாவது இந்த உடல் அழியக் கூடியது என்னும் வாழ்வியல் உண்மையை உணர்த்துவது. மனிதரின் இறுதிச் சடங்கில் முச்சந்தியில் மூன்று துளைகளையிட்டுப் பானை உடைத்து நறைவுறும் சடங்கு  இன்றைக்கும் உள்ள நடப்பியல் உண்மை. ‘மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று வேண்டிப் பெற்ற மனிதப்பிறவியின் நோக்கம் நிறைவேறுவதற்கு உடல் தலையாய ஊடகம். இந்த ஊடகத்தின் சிதைவே உயிர்ச்சிதைவாகும்.

    கடைச்சங்க இலக்கியத்தில் களிறு

    ‘யானைமறம்’, ‘களிற்றுடன் நிலை’ என்றெல்லாம் புறத்திணை இலக்கணத்தின் மையப்பொருளாகத் திகழும் யானை புலவர்கள் நாவில் உவமமாகவும் நடைபயின்றுள்ளது. அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடுகிறார்.

    “கையது வேலே! காலன புனை கழல்!
    மெய்யது வியரே! மிடற்றது பசும்புண்
    ……………………………………………………………………………………………………
    சுரி இரும் பித்தை பொலயச் சூடி
    வரிவயம் பொருத வயக்களிறு போல
    இன்னும் மாறாது சினனே! அன்னோ!
    உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றியோரே!
    செறுநர் நோக்கிய கண் தன்
    சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே!” (புறம். 100)

    என்ற பாட்டில் ‘வரிவயம் பொருத வயக்களிறு’ போல என்ற உவமிக்கிறார். அதியமான் தனக்கு மகன் பிறந்திருக்கும் சேதியறிந்து களத்திலிருந்து அரண்மனை செல்கிறான். அந்தத் திருவோலக்கத்தில் ஔவையார் அவனைக் காண்கிறார். மழலைகளின் பிஞ்சு நெஞ்சிலும் போர்க்கோலமே நிலைபெற வேண்டும் என்னும் கருத்தான போர்க்கோலத்தில் கண்சிவக்கக் காணப்படும் அதியமானைக் கண்ட ஔவையார் “செல்லப் புதல்வனைக் காணுகிற நேரத்திலும் புலியைக் கொன்ற களிறுபோல் சிவக்கின்ற கண்களை உடையவனைப் பகைவர் கண்டால் என்ன ஆவாரோ?” என்ற கருத்தினைச் ‘சிறுவனை நோக்கியும்’ என்ற தொடரால் குறிக்கிறார். ‘மறப்போரில் சிவந்த கண் மழலை கண்டும் மாறவில்லை’ என்பது கருத்து.

    சிறுவர்களுக்குக் குளிர்கிறாய்! சீறியோர்க்கு எரிகிறாய்!

    ‘காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன்’ என்றால் தன் நாட்டு மக்களுக்கு என்று பொருள். பகைவர்க்கு எந்த மன்னனும் எளியனாக மாட்டான். கூடாது. தன் நாட்டு மக்களுக்கு ‘மயங்கும் யானையாக’ இருக்கும் அதியமான் மாற்றாருக்கு மதம் பிடித்த யானையாகத் திகழ்கிறான் என்பதை விளக்க யானை பற்றிய இரண்டு  உவமங்களைக் கூறி மகிழ்கிறார் ஔவையார்.

    “ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
    நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
    இனியை பெரும எமக்கே! மற்று அதன்
    துன்னரும் கடாஅம் போல
    இன்னாய் பெரும! நின் ஒன்னா தோர்க்கே!” (புறம். 94)

    மாற்றார் அரணைக் கிழிக்கும் தந்தத்தைச் சிறுவர் கையில் பிடித்து விளையாடும் அளவுக்கு எளியன், மதம் (கடாஅம்) பிடித்த களிறாகப் பகைக்குத் தோன்றுகிறான் அதியமான் என்பது கருத்து.

    தந்தை காணட்டும் தனையன் வீரத்தை!

    காட்சியளவையின் அழகியலைக் கருத்தாவாகிய படைப்பாளன் தன் மொழி கொண்டு எழுத்தில் கொண்டு வருகிற முயற்சியே கவிதை. இலக்கியச் சுவைத்திறன் என்பது கற்பார் உணர்ச்சியையும் உள்ளத்தையும் பொருத்தது. அறிவை அளவுகோலாகக் கொள்ளாது, படைப்பாளனின் உணர்வையும் அனுபவத்தையும் மொழிவழிப் பரிமாறிக் கொள்வது. தித்தன் என்பானின் மகன் போர்வை கோப்பெரு நற்கிள்ளி. தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு. அதனால் தந்தையைப் பிரிகிறான். பிரிந்தவனுக்கு ஆமூர் மல்லன் என்னும் வீரனை எதிர்க்க வேண்டிய நிலை வருகிறது. எதிர்த்துப் போரிடுகிறான். மல்லனின் அத்தனை போர்த் தந்திரங்களையும் முரியடித்து ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்’ போர்செய்து வீழத்துகிறான் நற்கிள்ளி. இந்த வீரத்தை அவன் தந்தை  காணட்டும்! என்று முழங்குகிறார் புலவர் சாத்தந்தையார்.

    “பொரல் அரும் தித்தன் காண்கதில் அம்ம!
    பசித்துப் பணை முயலும் யானை போல
    ஒரு தலை ஒசிய எற்றிக்
    களம்புகும் மல்லன் கடந்து அடு நிலையே!” (புறம். 80)

    மல்லனின் போர்த்தந்திரங்களை முரியடிக்கும் நற்கிள்ளி செயலை உயர்ந்து வளர்ந்து காற்றில் ஆடும் மூங்கிலை வளைத்து முரிக்கும் யானையின் முயற்சிக்கு ஒப்பிடுகிறார் புலவர். இன்னும் வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானை யாத்தற்று’, ‘கழை தின் யானைக் காலகப்பட்ட வன்திணி நீள்முளை போல’ என்றெல்லாம் அதன் தன்வினைகளும் பிறவினைகளும் கூட உவமமாக வந்துள்ளதை அறியலாம்.

    வள்ளுவர் கண்ட யானை

    பழந்தமிழ் இலக்கியங்களில் யானை பற்றிய பதிவுகளுக்கும் திருக்குறளில் அது பற்றிய பதிவுகளுக்கும் அதாவது பிற சான்றோர்களின் நோக்கிற்கும் திருவள்ளுவர் நோக்கிற்கும் ஒத்திசைவு அவ்வளவாக இல்லை. சங்க இலக்கியத்தில் போர்க்கள நாயகனாகப் பார்க்கப்பட்ட யானை, திருவள்ளுவர் நோக்கில் அதன் உருவப் பெருமையே முன்னிறுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அரச நீதி சொல்ல வந்த வள்ளுவர் வேழத்திற்கு வேந்தனை ஒப்பிடினும் அதன்கண் உள்ள பலவீனத்தையும் கூறுதல் ஒரு நடுநிலை நோக்காகவும் இருந்திருக்கலாம். இனிப், புலிக்கணமும் சீயமும் போர்க்களிறும் போல்வார் வலிச்சினமும் மானமும் தேசும்’ (பு.வெ.மா.கர. 4) என்னும் நிரலில் யானையின் உருவத் தோற்றத்தால் அது போர்மலைதலின் இறுதியில் அமைந்திருப்பது காண்க.

    “பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்” (குறள். 599)

    என்னும் கருத்தும்,

    “சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப் பாடூன்றும் களிறு” (குறள்.597)

    என்னும் இருவேறு பண்புகளுக்கு யானை உவமமாகியிருப்பதை அறியலாம்.

    “காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
    வேலாழ் முகத்த களிறு” (குறள். 500)

    என்னும் குறட்பாவிலும் எல்லாச் சூழலிலும் யானை வெல்ல முடியாது என்பதுதான் குறிப்பிடப்படுகிறது என்பதை நோக்குக.

    உவமம் பொருளான கதை

    யானை பற்றிய மேற்கண்ட பதிவுகளில் அது உவமமாகக் கொள்ளப்பட்டுப் பொருள் விளக்கத்திற்கு உதவியதைக் கண்டோம். காளமேகப் புலவர் யானைக்கும் வைக்கோலுக்கும், யானைக்கும் ஆமணக்குக்கும் யானைக்கும் சிலேடை பாடியிருக்கிறார்.  பிற பொருளுக்கு உவமமான யானையைக் கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் பொருளாக்கி அதற்கு மற்ற பொருட்களை உவமமாக்கிக் காட்டியிருப்பதையும் கட்டுரைப் பொருள் நிறைவு கருதிச் சுட்டப்படுகிறது.

    “உடலின் மேல் பலகாயம் சொரிந்து, பின்கால்
    உடன்பல தப்ப உதிரத்தே ஒழுகும் யானை
    கடலின்மேல் கலம் செல்ல பின்னே செல்லும்
    கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்!” (கலி.பரணி. 476)

    என்னும் தாழிசையில் கலிங்கத்துக் களத்தில் குருதி, கடலாகப் பெருக அதில் நீந்தி வரும் யானைகள் கடலில் நீந்தும் கப்பல் வரிசையைப் போல் இருந்ததாக யானைகளைப் பொருளாக்கி நாவாய்களை உவமமாக்கியிருக்கிறார்.

    ஆனை பாடிய வாயால் பானை பாடிய ஜீவா

    பொதுநலம் நாடி வாழ்க்கையையே பொதுவாக்கிக் கொண்ட பொதுவுடைமைச் சிந்தனைவாதியும் மிகச் சிறந்த இலக்கியச் சுவைஞரும் கவிஞருமாகிய மறைந்த வணக்கத்திற்குரிய தோழர் ப.ஜீவானந்தம் என்னும் ‘ஜீவா’ அவர்கள் எழுதிய பாடல்களில் ஒரு சிறப்பான பதிவைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. ‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை’ பாடிய மணிவாசகரைப் போல யானை பாடிய வாயால் பானையையும் பாடியிருக்கிறார் ஜீவா. இவற்றைத் தனித்தனியே கண்ட நமக்கு இரண்டையும் ஒரே பாட்டில் வைத்துப் பார்ப்பதும் மகிழ்ச்சிதானே?

    “யானைபோல் கொழுத்த மேனி!
    இடர் செய்யும் நச்சு நெஞ்சு!
    பூனைபோல் திருட்டு எண்ணம்!
    பொய் புலை நிறைந்த வாழ்வு!
    ஏனையோர் குடிகெடுக்கும்
    எத்தனம் பொழுது போக்கு!
    பானைபோல் வயிறு கொண்ட
    பணத்திமிர் வீழ்க வீழ்க”

    முதலாளித்துவத்திற்கு எதிராகப் போர் முரசு கொட்டிய அந்நாள் தலைவர், எழுதிய பாடல் இது. ஏகாதிபத்தியத்திற்கு யானைபோலக் கொழுத்த மேனி என்றும், ‘பானைபோல் வயிறு’ என்றும் அவர் செய்து காட்டியிருக்கும் சதுரப்பாட்டில் உவமம், உருவகம் இரண்டும் கலந்து களிநடம் புரிவதைக் காணலாம்.

    நிறைவுரை

    தமிழ்க் கவிதைகளில் குன்று உவமமாக்கப்பட்டுள்ளது. குன்றிமணியும் உவமமாக்கப்பட்டுள்ளது. மானையும் மயிரையும் உவமமாக்குவார்கள். இல்வளர் முல்லையைப் பாடியவரே எருக்கம்பூவையும் பாடுவார். அவர்கள் கைவண்ணத்தால் அஃறிணைக்கும் வீடுபேறு உண்டு. அதனால்தான் அவர்கள் பானையையும் பாடி ஆனையையும் உவமமாகப் பாடியிருக்கிறார்கள். எதனை உவமமாகக் கொண்டாலும் அவற்றால் அவர்கள் செய்திருக்கும் கருத்து விளக்கம் காலத்துக்கும் நிலைக்கும்!.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 33

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 33

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தமிழ்க்கவிதை உவமங்களில் தாயும் மகவும்

    முன்னுரை

    தமிழைப் பாடாத கவிஞர் உளர். ஆனால் தாயைப் பாடாத கவிஞர் இலர்.  தாய்மையைக் கருணையின் படிமமாக்கிப் பார்த்தது மட்டுமன்று அதனை வீரத்தின் விளைநிலமாகவும் கண்டு பாடியிருக்கின்றனர். ‘தாயுமிலி தந்தையிலியாகிய’ சிவபெருமானால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் உரிமையும் பெருமையும் பெற்றவள் தாயே’ என வள்ளுவப் பெருந்தகையால் காப்புரிமை அளிக்கப்பட்டவர் தாய். எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தடிகள் துறக்க முடியாத தூய உறவு தாயுறவு.  தமிழ்த்தென்றல் திரு.வி.க. பெண்மை நிறைவடைவது தாய்மையில் என்று கூறியிருப்பதும் ‘குடும்ப விளக்கு’ என்று பாவேந்தர் புகழ்ந்தேத்துவதும் தாய்மையின் சிறப்பினை இன்னும் விளக்கும். மகவின்றித் தாய்மை அமையாதாதலின் அச்சொல்லுக்குள்ளேயே மகவு என்பது அடங்கும். இந்தத் தாயும் மகவும் தமிழ்க்கவிதைகளில் உவமங்களாக அமைந்த பாங்கினை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    இலக்கியங்களில் தாய்மையின் மறுபக்கம்

    புறநானூற்றில் உள்ள பாடல்களில் தாயின் பெருமை பேசும் பாடல்கள் பல. அவற்றுள் ஒரு பாடலின் வரி இப்படி அமைந்திருக்கிறது.

    “ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே”

    திருக்குறளில் தாயின் கடமை குறிக்கப்படவில்லை. ‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்பதால் அவள் கடமை கணவனோடும் இல்லறத்தோடும் நிறைவடைந்துவிடுவதாகத்தான் அனுமானிக்கத் தோன்றுகிறது. புறநானூற்றில் ஒரு ஆண்மகனை உருவாக்கும் சமுதாயக் கடமைகளில் தன்னுடைய கடமையைத் தலைக் கடமையாக்குகிற தாயைக் காணலாம். சாலப் பரிவது மட்டுமன்று தாய்க் குணம். ஒரு மகனாயினும் செருக்களம் நோக்கிச் செல்பவனை வழியனுப்பி வைக்கும் மாண்பும் அவளுக்கானது.

    “ என்மகன் யாண்டுளன் ஆயினும் அறியேன் ஓரும்
    புலிசோர்ந்து போகிய கல்லளை போல
    ஈன்ற வயிறோ இதுவே” (புறம். 86)

    என்று சுமந்த வயிற்றுக்குச் சோபனம் பாடுகிறாள் தாய். அந்தத் தாயைக் ‘கெடுக சிந்தை கடிது இவள் துணிவே’ என்று ஒக்கூர் மாசாத்தியார் பாடுகிறார். தருகின்ற மன்னனைப் பாடியே பழக்கப்பட்ட புலவர்கள் தாயைப் பாடிய காலம் அது. 

    “மீன் உண் கொக்கின் தூவியன்ன
    வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
    களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை
    ஈன்ற ஞான்றினும் பெரிதே! கண்ணீர்
    நோன்கழை துயல் வரும் வெதிரத்து
    வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே!” (புறம். 277)

    என்று ஒரு பாடல். பேரிளம்பெண் பருவத்தில் ஒரு மகனுக்குத் தாயான ஒருத்தி அவனைக் களத்துக்கு அனுப்புகிறாள். அங்கே அவன் களிறெறிந்து பெயர்தலாகிய காளைக் கடனைச் செய்கிறான். களிற்றினால் கொல்லப்படுகிறான். சேதி பெற்றவளின் காதுக்கு வருகிறது. வந்த  சேதியால் காது மட்டுமன்று மனமும் குளிர்கிறதாம். உத்திரையார் காட்டும் காட்சி இது. இந்த விழுமியம் எதுவரைத் தொடர்கிறது என்றால் அந்தச் சாவு மானச்சாவா? ஈனச்சாவா என்று அறியும் வரையில் தொடர்கிறது.  மார்பில் விழுப்புண் பட்டே மகன் மாண்டிருக்கிறான் என்றவுடன் சோகத்திற்கு இப்படிச் சுகம் கொண்டாடுகிறாள்.

    “……………. முதியோள் சிறுவன்
    படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற
    மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின்
    உண்ட என் முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇக்
    கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
    செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
    படுமகன் கிடக்கைஅ காணூஉ
    ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே!” (புறம். 278)

    மாபெரும் சபையினில் தன் மகன் நடந்தால்தான் ஒரு தாய் பெருமைப்படுவாள் என்பதில்லை.  சாவுக்குச் சங்கடத்தைத் தராமல் ஏற்றுக் கொள்ளும் மானச் சாவுக்கும் அவள் மகிழ்வாள் என்பதுதான் தமிழ்த் தாய்மார்களின் பண்பாட்டு விழுமியம். இத்தகைய தாயையும் மகவையும் உவமங்களாகவும் பயன்படுத்தி இலக்கியம் செய்திருக்கிறார்கள்  நம் புலவர்கள்.

    தோழி தாயான கதை

    ‘தாய்மை’ என்பது பண்பு. அது பெரும்பாலும் தாயிடத்தில் அமைந்திருப்பதால் அவளுக்கான குறியீடானது. ‘தங்கைமை’, ‘தமக்கைமை’, ‘தந்தைமை என்பதெல்லாம் இல்லை. ‘இறைவனைத் தாயுமானவன்’ என்று அழைப்பது காண்க. அன்னை தெரசா உலகிற்குத் தாய். சங்க இலக்கியங்களின் தலைமைப் பாத்திரம் தோழியே. மானுடத்தின் அத்தனை நேர்முகப் பண்புகளின் தொகுப்பாக அவள் படைக்கப்பட்டிருக்கிறாள்.   தலைவியைக் காணத் தலைவன் இடர்பல கடந்து வருகிறான். “கொல்லுந் தொழில் வல்லமையுடைய ஆண்முதலையானது வழியெல்லாம் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்குமாறு குறுக்கே கிடக்கும் அழகிய கடல் துறையின்கண் இனமீன்கள் நிறைந்துள்ள உப்பங்கழியை நீந்தி” அவன் வருகிறானாம்.

    “கொடுங்கால் கொல்வல் ஏற்றை
    வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெருந்துறை
    இனமீன் இருங்கழி நீந்தி”

    வருகிறானாம். இவன் படும் இத்துன்பத்தால் தன் தலைவனுக்கு ஏதம் வருமோ என்று தலைவி நடுங்கித் துன்புறுகிறாளாம்.

                ‘இவள் மடன் உடைமையின் உயங்கும்’

    இது தலைவனுக்காகத் தலைவி படுகிற துன்பம். தோழி இருவருடைய துன்பத்தையும் நோக்கி வேதனைப்படுகிறாளாம். யாரைப்போல? தனக்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளும் நஞ்சருந்திய காலத்து அப்பிள்ளைகளின் தாய் உணரும் அச்சத்தை இந்தத் தோழி உணர்ந்தாளாம்!. “நயன் உடைமையின் நீ வருகிறாய். மடன் உடைமையின் இவள் உயங்குகிறாள். நானோ நஞ்சருந்திய இரட்டைப் பிள்ளையின் தாயைப் போல அலமறுகிறேன்’ என்கிறாள் தோழி!

    “நீ நின் நயனுடைமையின் வருதி! இவள் தன்
    மடன் உடைமையின் உயங்கும், யான் அது
    கவை மகவு நஞ்சுண்டாங்கு
    அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே!” (குறுந். 324)

    செவிலி வேறு. நற்றாய் வேறு. தோழி வேறு. ஆனால் மகவு அதுவும் இரட்டை மகவு நஞ்சுண்ண அது கண்ட தாயின் பதைப்பைத் தோழியின் பதைப்புக்கு உவமமாக்கிய திறன் இது. இலக்கிய நோக்கில் தலைவிக்குத் தோழியாகப் பார்க்கப்பட்டுவரும் ஒருத்தி தலைமக்களுக்குத் தாயாகச் சித்திரிக்கப்பட்டுத் தலைமக்கள் அவளுக்குக் குழந்தைகளாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். ‘நஞ்சுண்டாங்கு’ என்பது உண்பதைக் குறிக்காது, நஞ்சு உண்பதால் தாய்க்கு உண்டாகும் பதற்றத்தைக் குறித்தது. இதில் நுண்ணியம் என்னவென்றால் தலைமக்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகளாக அன்பு பாராட்ட வேண்டும் என்பதே!. உவம ஆற்றல் என்பது இதுதான்.

    மழலை கூவலும் மாற்றார் அலறலும்

    இளஞ்சேட் சென்னி என்னும் மன்னனை வரலாற்றுப் பாவலர் பரணர் பாடுகிறார்.  சென்னியின் படைகளை வானளாவப் புகழ்கிறார். இளஞ்சேட் சென்னியின் களத்தில் “வாள் குருதிக்கறை பட்டன. களத்தில் முன்னும் பின்னும் தேய்ந்ததால் அரும்பு வேலைப்பாடு அமைந்த கழல்கள் கொல்லேற்றின் மருப்புப் போல மொக்கையாகின. மாற்றாரின் அம்பு தைத்த கேடயங்கள் அம்புகளினால் துளைக்கப்பட்ட அடையாளங்கள் ஆயின. இடவல அடையாளங்களைக் காட்டியதால் குதிரைகளின் முகம் குருதி படிந்து உதிரம் குடித்த புலி வாயை ஒத்தது. எதிரியின் வாயிற்கதவுகளை மருப்பினால் முட்டி மோதி பிளிறி வருவதால் யானையோ உயிருண்ணும் கூற்றுவனை ஒத்தது. மன்னன் தேரில் வருவது கீழ்க்கடலில் செங்கதிரோன் எழுவதுபோல் உள்ளது” என்றெல்லாம் பாராட்டிய புலவர், இதனால் எதிரியின் நிலை என்னவாயிற்று என்பதை இரண்டே வரிகளில் கூறுகின்றார்.

    “தாயில் தூவாக் குழவி போல
    ஓவாது கூஉம் நின்உடற்றியோர் நாடே!” (புறம். 4)

    ‘உடற்றியோர் நாடு அதாவது பகைத்துக் களங்கண்டு பாழாயப் போன பகைவர் நாடு இனித் தாயில்லாத குழந்தை பசிக்குப் பாலில்லாமல் எப்படி அலறுமோ அப்படி அலறுமாம்!” பகைநாட்டுக்குத் தாயான மன்னன் இல்லாததால் தாயற்றும், வளங்கள் சிதைந்ததால் உணவற்றும் அவர்கள் அழிவார்கள் என்பதும் கருத்து. இந்த உவமத்தின்  சிறப்பு நோக்கிய நன்னாகனார் என்னும் புலவர் ஓய்மான் வில்லியாதனைத் “தாயில் தூவாக் குழவிபோல்” காண வந்ததாகப் பாடுகிறார் (புறம் 379). ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலையில் தாய் மகவு பற்றிய சிந்தனை உவம அளவையால் பதிவாகியுள்ளது. மணிபல்லவத் தீவில் அமுதசுரபியின் வரலாற்றைக் கூறிய தீவதிலகையிடமிருந்து அதனைப் பெற்றுக் கொள்கிறாள் மணிமேகலை. கொண்டு, தான் அப்பாத்திரத்தைக்   கொண்டு பசிப்பிணி என்னும் நோயைப் போக்கும் எண்ணமுடையேன் என்று கூறும்போது,

    “ஈன்ற குழவி முகங் கண்டு இரங்கித்
    தீம்பால் சுரப்போள் தன் முலை போன்று”

    அமுதசுரபியினுள் பிச்சை நிறைவதைத் தான் காணும் பேரவா உடையேன் என்றும் கூறுகிறாள். குழவியின் பசிமுகம் கண்டு தாய்முலை திரண்டு சுரப்பது இயல்பாதலின்  அமுதசுரபிக்குள் அன்னமிடுவாருக்கும் அவ்வியல்பு உண்டு என்பது கருத்து. இனி  ஆபுத்திரனின் பெயர்க்காரணத்தையும் வரலாற்றையும் சொல்லுகிற சாத்தனார் அவன்  நிலையைச் சித்திரிக்கிறபோது,

    “தாயில் தூவாக் குழவித் துயர் கேட்டோர்
    ஆ வந்து அணைந்தாங்கு அதன் துயர் தீர
    நாவால் நக்கி நன்பால் ஊட்டி” (மணி. 1437-39)

    என்னும் உவமத்தோடு பசுவின் அருட்செயலைக் காட்சிப்படுத்துவதையும்,

    “தடித்தவோர் மகனை தந்தையீண் டடித்தாற்
    தாய்உடன் அணைப்பள்., தாயடித்தால்
    பிடித்ததொரு தந்தை அணைப்பன் இங்குஎனக்குப்
    பேசிய தந்தையும் தாயும்
    பொடித்திரு மேனி அம்பலத்தாடும்
    புனித நீ ஆதலால் என்னை
    அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
    அம்மையப் பா!இனி ஆற்றேன்” (திருவருட்பா)

    என்னும் வள்ளலாரின் பிள்ளைச் சிறு விண்ணப்பத்தில் தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவு ஆண்டவனுக்கும் அடியவனுக்கும் உள்ள உறவோடு ஒப்பிடப்பட்டிருப்பதையும்,

    தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை,
    விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே,!
    அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும், மற்றவள்தன்
    அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே.!”

    என்னும் பெருமாமள் திருமொழியையும் இங்கே பொருத்தம் நோக்கிச் சிந்திக்கலாம்.

    குழவி பேணும் தாய் போல

    குழந்தையைத் தாய் பேணுதல் என்பது மிகச் சாதாரணமான ஒன்றுதான். குடிமக்களைக் காக்கும் அரசனை இறைவனுக்கும் தாய்க்கும் ஒப்பாக்கிக் கூறுவதும் சாதாரணமான ஒன்றுதான். ஆனால் புலவர் அதனை எடுத்து மொழிகிற பாங்கில் பாட்டு சிறக்கிறது. அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உவமம் சிறக்கிறது. பொருளும் சிறக்கிறது. பெருஞ்சேரல் இரும்பொறையை நரிவெரூஉத் தலையார் பாடியது,

    “எருமை அன்ன கருங்கல் இடைதோறு
    ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
    கானக நாடனை! நீயோ, பெரும!
    நீயோ ஆகலின் நின் ஒன்று மொழிவல்
    அருளும் அன்பும் நீக்கி நீங்கா
    நிரயம் கொள்பவரோடு ஒன்றாது காவல்,
    குழவி கொள்பவரின் ஓம்புமதி!
    அளிதோ தானே! அது பெறல் அருங் குரைத்தே! “(புறம். 5)

    மன்னனுடைய நாட்டைச் சிறப்பிக்கும் புலவர் உவமத்திலேயே தொடங்குகிறார். “நின்  ஆளுகைக்கு உட்பட்ட மண்பரப்பு முழுமையும் எருமைகள் போலப் பாறைகள் கிடக்கின்றன. அவற்றின் இடையில் மேய்கின்ற யானைகள் பசுக்களைப் போல மிகுந்திருக்கின்றன. இத்தகைய வளப்பமுடைய நாட்டை ஆளுகிற உரிமை எவருக்கும் அவ்வளவு எளிதில் கிட்டிவிடாது. செருக்கால் அருளையும் அன்பையும் கைவிட்டு நரகத்திற்குச் செல்பவரைப் போல ஆளாமல் ஒரு குழந்தையைப் பெறுபவர் அதனைப் போற்றிப் பாதுகாப்பதைப் போன்ற மனநிலையுடன் நாட்டை  ஆளக்கடவாய்” என்று வாழ்த்துகிறார். அருளும் அன்பும் நீங்கிய நிலை நிரயத்திற்கு வழிகாட்டுமெனின் அவை உள்ள நிலை சொர்க்கத்திற்கு வழிகாட்டும் என்பதைக் குறிப்பால் புலப்படுத்துவது ஆதலின் நிரயத்திற்கு அடைகொடுத்த புலவர் குழவிக்குக் கூறாராயினார். ‘நிரயம் கொள்பவர் – குழவி கொள்பவர்’ என்னும் முரணால் பாட்டு சிறந்து நிற்பதைக் காணலாம்.

    ஈன்றோர் நீத்த குழவி போல

    அதியமான் களத்தில் படுகிறான். களத்தில் பட்ட அதியமானை அரிசில் கிழார் பாடுகிறார். அதாவது அவன் இல்லாத இரண்டு சூழலைத் தன் பாட்டில் சித்திரிக்கிறார். இந்தச் சித்திரிப்பைக் கையறுநிலைத் துறையில் வைத்துப் பாடுகிறார். அதியமான் மாண்டு போனதால் அவனால் புரக்கப்பட்டோர் நிலை, அதியமானைக் கொன்ற கூற்றுவனின் நிலை. இதனைப் புரக்கப்பட்டோர் வருத்தமும் அவன் உயிரை வாங்கிய கூற்றுவனின் வருத்தமும் என்றும் கூறலாம்.  அவனால் ஆதரிக்கப்பட்டவர் வருத்தப்படுகிறார்களாம் எப்படி?

    “பொய்யா எழினி பொருது களம் சேர
    ஈன்றோர் நீத்த குழவி போலத்
    தன் அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
    கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
    நோய் உழந்து வைகிய உலகம்” (புறம். 230)

    இந்த வரிகளில் தாயை இழந்த குழந்தை எந்த உறவினர் வீட்டு வாசலுக்குச் சென்றாலும் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை என்னும் உள்ளமுருக்கும் சூழலைச் சித்திரிக்கிறார் புலவர். அந்தக் குழந்தையை யாரும் கண்டு கொள்வதில்லை என்னும் நிலையைக் குழந்தைக்கு ஏற்றிச் சொல்லாமல் அதியமானால் புரக்கப்பட்டாரை அவனுக்குப் பின் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதிலிருந்து பெற வைக்கும் நுண்ணியம் உணர்க. ஆயிரம் மடிகள் இருந்தாலும் ஒரு குழந்தைக்குத் தாய் மடி ஆகாது. அதியமானை இழந்த அவனது ஆதரவாளர்கள் தாய்மடி காணாத குழவியானார்கள் என்பது கருத்து.

    நிறைவுரை

    மானுடத்தைப் பாடியவர்கள் சங்கச் சான்றோர்கள். தமிழிலக்கியத்தின் சில பக்கங்களைத் தவிர மற்றெல்லாமும் மானுடத்தைப் பாடியவையே. மானுட உறவுகளில் ‘அம்மா’ என்னும் உறவு தலையுறவு. உறவுகளுக்கு மூலம். உணர்வுகளுக்குத் தலைவாயில். தமிழில் உறவுச் சொற்கள் அதன் பரிமாணத்தை உணர்த்தி நிற்கும். பெண் என்பவள் பாலால் பிரிக்கப்படுபவள். ஆனால் மனவி என்பவள் கணவனை உள்ளடக்கியவள். ஆண் என்பதும் இது போன்றதே. இவற்றில் தலைசிறந்த சொல் தாய்மை. தாய் என்றாலே குழந்தையை உள்ளடக்கியதுதான். தாயையும் மகவையும் தமிழ்க்கவிதைகள் தக்க இடத்தில் உவமமாக அமைத்துக் காட்டுவதும்  ஓர் உவமக் கோட்பாடே!.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 32

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 32

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உலகியல் வாழ்க்கைக் கூறே உவமம்

    முன்னுரை

    ‘முகத்தைப் பாரு! இஞ்சித் தின்ன கொரங்காட்டும்!’, ‘முழிக்கிறத பாரு! திருடன தேள் கொட்டுன மாதிரி!’, ‘அசைஞ்சு வர்றதப் பாரு எருமை மாடு மாதிரி’, ‘எப்படிப் பேசறா பாரு? தேன் ஒழுகிற மாதிரி’ என்னுமாறு அமைந்த பேச்சுக்களைக் கேட்காதவர்கள் இதுவரைப் பிறக்காதவர்களே!. ‘முகம் குரங்கு மாதிரி இருக்கிறது’ என்றால் முகம் என்ன கவிதையா? ‘திருடன தேள்கொட்டுன மாதிரி’ என்றால் தவறு செய்தவன் கீர்த்தனையா? ‘எருமை மாதிரி அசைந்து வருகிறான்’ என்றால் வருகிறவன் செய்யுளா? ‘தேன் மாதிரி பேசுகிறாள்’ என்றால் அவள் என்ன பாடலா? அவர்களெல்லாம் மனிதர்கள். இந்தப் பேச்செல்லாம், இந்த உவமங்கள் எல்லாம் வாழ்வியலில் நாளும் காண்பன. நாளும் கேட்பன. ‘வாழ்க்கையின் எதிரொளியே இலக்கியம்’ என்பது உண்மையாயின் உவமங்கள் வாழ்வியல் விளக்கங்களாகவே இருக்க முடியுமேயன்றிக் கவிதைக்கு அழகு சேர்க்கிற ஒன்றாகவோ செய்யுளுக்கு அணியாகவோ ஆகவே முடியாது. இது தமிழ் மரபு. தமிழ்க்கவிதை மரபு. தமிழ்க்கவிதைகளின் உவமக்கோட்பாட்டின் தலையாய கொள்கை.

    மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்

    தமிழ்க்கவிதைகளில் உவமக்கோட்பாடுகள் என்பது தொல்காப்பியம் சார்ந்ததும் அதனையொட்டிய காலமுறை வளர்ச்சியுமாகும். இதிலிருந்து ஓர் ஆய்வுண்மையை நம்மால் பெற முடியும். அதாவது ‘தொல்காப்பியத்தில் இவ்வாறு இருந்து வந்த இவ்வுவமநெறி பிற்காலத்தில் இன்னின்னவாறு மாறியிருக்கின்றன’ என்று கண்டறிவதுதான் அந்த உண்மை. அதாவது ஆய்வு என்பது மேலிருந்து கீழாக வரவேண்டுமேயன்றிக் கீழிருந்து மேலாகச் செல்லுதல் அல்நெறி.  அதுதான் ஆய்வு நெறி.

    அண்மையில் ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் பெயருடைய ஒரு நூலினைக் கற்கும் வாய்ப்பு கிட்டியது, அந்த ஆய்வு நூல் உவமம் பற்றியது. அந்த ஆய்வறிஞர் என்ன சொல்லுகிறார்? சங்க இலக்கியத்தில் நிரல் நிரை அணி இருந்தது என்கிறார். தொல்காப்பிய உவமக் கோட்பாடுகள் அனைத்தும் அகத்திணை மரபினைச் சார்ந்தவை என்பது இக்கட்டுரைத் தொடரின் தொடக்கப் பதிவுகளில் வலிமையான சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளன. அந்த அறிஞர் சொல்லுவதில் உள்ள முரண்களைப் பின்வரும் பகுதியில் காணலாம்.

    தொல்காப்பிய உவமக் கொள்கையும் அணிகளும்

    மெத்த படித்த மேதைகள் எல்லா அணிகளையும் உள்ளடக்கித்தான் தொல்காப்பியம் உவம அணியைச் சொல்கிறது என்கின்றனர். எனவே “உவமை ஏனைய அணிகளுக்குத் தாய்” எவ்வளவு பொருத்தமில்லாத கருத்தியல் இது? திருமணம் ஆகிய பெண்ணொருத்திக்குத் தனக்கு நாற்பத்து மூன்று பிள்ளைகள் பிறக்கும் என்று அவ்வளவு துல்லியமாகத் தெரியுமா என்ன? தொல்காப்பியர் அணியிலக்கண கருத்துடையார் அல்லர். உரையாசிரியர்கள் சிலர் அந்தக் கருத்தினை உடையவர் என்பது அவர்தம் உரைகளால் பெறப்படும். காரணம் மூலத்திற்கும் உரைகளுக்குமான காலம் 1500 ஆண்டுகள் இடைவெளி என்பதை மறக்கக் கூடாது. இந்த இடைவெளியில் அணியிலக்கணக் கொள்கை தோன்றி வளர்ந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் அதனைத் தனியாகச் சொல்லி விளக்கும் தனித்தமிழ் இலக்கண நூல் தமிழில் இல்லை. பிறமொழிக் கலப்பின் காரணமாக அமைந்தது தண்டியலங்காரம். அது வடமொழியின் ‘காவ்ய தரிசனம்’ என்பதன் தழுவல். இலக்கியத் திறனாய்வில் மேல்நாட்டுத் திறனாய்வுக் கொள்கையை வைத்துக் கொண்டு பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்ததும் மதிப்பீடு செய்ததும் எவ்வாறு அல்நெறியோ அதுபோன்றதுதான் இதுவும்.

    தமிழில் துறை பகுப்பு

    தொல்காப்பியத்திற்குப் பின்னால் வந்தவை சங்கத் தமிழ் இலக்கியங்கள் என்றால் தொல்காப்பிய நெறிப்படித்தான் துறை வகுத்திருக்க வேண்டும். அகநூல்களுக்குத் தொல்காப்பியத்தையும் புறப்பாடல்களுக்குப் புறப்பொருள் வெண்பாமாலையும் கொண்டு துறைவகுத்தது அடிமுரண். பிந்தைய இலக்கியப் பாடல்களுக்குத் துறை பொருத்தமில்லை என்றால் ‘துறை கண்டிலது’ என்று விட்டுவிடுவதுதான் செந்நெறி. எதனையும் எதிலும் திணிக்க எத்தனிப்பதும் தடுமாறுவதும் தமிழ் இலக்கிய உலகம் கண்டுவரும் அவலநிலையே. பல இலக்கண நூற்பாக்களுக்கு உரையாசிரியப் பெருமக்கள் எடுத்துக்காட்டுக்கள் கிட்டாது ‘வந்துழி கண்டு கொள்க’ என்று கூறியிருப்பதுதான் சரியான நெறி.

    “நிரல் நிறை உவமை “உவமைகள் ஒன்றன்பின் ஒன்று அடுக்கிக் கூறப்படுகின்றன. அவற்றை அடுத்து அதே முறைவைப்பில் பொருள்களும் அடுக்கிக் கூறப்படுகின்றன. இதனை நிரல் நிறை உவமை என்று தொல்காப்பியம் கூறும்.

    நிரல் நிறுத்தமைத்தல் நிரல் நிறை –(தொல். சூ.309) ஒழுங்காக முறை பிறழாமல் அமையும் உவமை அடுக்கினை நிரல் நிறை எனவும், மாறி மயங்கி வருவனவற்றை மயக்க நிரல் நிறை எனவும் கூறுவர்.’ சங்க இலக்கியத்தில் முன்னதே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.’

    இந்தப் பகுதியில் நிரல் நிறை அணி என்று தொல்காப்பியம் கூறும் என்பது தொல்காப்பியத்தில் எங்கும் காணாதது. ஒரு கருத்தினை நிரல் நிறையாகக் கூறுவது வேறு. அதனை அணியாக்கி அழகு பார்ப்பது வேறு. முன்னது தானாக அமைவது. பின்னது திட்டமிட்டுக் கட்டமைப்பது. அது மட்டுமன்று ‘மயக்க நிரல் நிறை என்றும் கூறுவர்’ என்று யாரோ ஒருவர் மேல் பழிபோடுவதையும் காணமுடிகிறது. ‘நிரல் நிறுத்து அமைத்தல்’ என்பது தனி நூற்பாவன்று. ஒரு நூற்பாவின் பகுதி. உவமங்களை அடுக்கிக் கூறுவது ஏற்புடையது அன்று எனக் கூறும் தொல்காப்பியர் மூன்றனுக்கு விதிவிலக்கு தருகிறார். அடுக்கிக் கூறுவது என்றால் ஒரு பொருளை மற்றொரு பொருளோடு உவமித்து உவமித்த அதனையே மீளவும் இன்னொன்றோடு உவமிப்பது ‘காக்கை குயில் போல இருக்கும்., குயில் கரிபோல் இருக்கும்., கரி கரடிபோல் இருக்கும் என்று அடுக்கிக் கொண்டே போவது உவமத்தின் பொருளுணர்த்தும் ஆற்றலை சிதைத்துவிடுமாதலின் இவ்வாறு கூறுவது ஏற்புடைத்தன்று என்பதுதான் தொல்காப்பியம் கூறவரும் கருத்து.

    “வெண்திங்கள் போன்றுளது வெண்சங்கம், வெண்சங்கின் வண்டிலங்கு தாழை வளர்கோடு”

    என்னும் பேராசிரியர் தரும் எடுத்துக்காட்டும் இதனை விளக்கும். எனினும் இதற்கான விதிவிலக்கைத் தொல்காப்பியம் அனுமதிக்கிறது. நிரல்நிறுத்து அமைத்தல், நிரல்நிறை, சுண்ணம் ஆகிய மூன்றும் அல்லாதவிடத்து அடுக்கிவருதல் ஏற்புடைத்தன்று (இம்மூன்றில் மட்டும் அடுக்கி வரலாம்) என்பது தான் நூற்பாவின் கருத்து. இனி இந்த நூற்பாவை இரண்டு நூற்பாக்களாகக் கொண்டும் உரை வகுத்திருக்கின்றனர். இந்த நூற்பாவிற்குச் சிறப்புரை எழுதிய பேராசிரியர்,

    “இனி அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது, அணியென்ப வாயிற் சாத்தனையும் சாத்தனால் அணியப்பட்ட முடியும் தொடியும் வேறுகண்டாற்போல அவ்வணியும் செய்யுளின் வேறாகல் வேண்டும் என்பது”.

    என்னும் விளக்கம் உவமத்தைச் செய்யுளுறுப்பாகக் கொள்ளுதல் ஆகாது என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது. மேலே சில பத்திகளில் செய்யப்பட்ட ஆய்வு, பொதுவாக உவமங்களைச் சுவைக்கும் நெறியையும் குறிப்பாகச் சங்க இலக்கிய உவமங்களைச் சுவைக்கும் நெறியையும் வரன்முறை செய்வதற்கே. உவமம் என்பது செய்யுளுக்கானது அன்று. அது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் போலச் செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று அன்று. கவிதை படர்க்கையில் அமைந்தால் கவிஞனுக்கானது. கவிதை பாத்திரங்களினால் அமைந்தால் தொடர்புடைய பாத்திரத்திற்கானது. அதனால்தான்,

    “கிழவி சொல்லின் அவளறி கிளவி
    தோழிக்காயின் நிலம் பெயர்ந்து உறையாது” (தொல். உவம. 26)

    “கிழவோட் காயின் ஈரிடத்து உரித்தே” (தொல். உவம. 29)

    எனத் தொல்காப்பியம், உவமத்திற்கான மாந்தர்களை அடையாளப்படுகிறது. இனி ஆய்வு என்பது மேலிருந்து கீழாக வருதலன்றிக் கீழிருந்து மேலாகச் செல்வதன்று. பல நூற்றாண்டுகளுக்குப் பின் பல காரணங்களால் தோன்றியதொரு  பிறமொழி சார்ந்த அணியிலக்கண நூலில் பன்னெடுங்காலத்திற்கு முற்பட்ட இலக்கியத்தைச் சுவைப்பதற்கான வழிமுறைகளைத் தேடுவது ஆய்வு நெறியன்று.

    வேறுபாடு தெரியாத வேழம்

    வரலாறுக்கு முந்தையது தொன்மம். ஆனால் வரலாற்றுக் காலத்தில் கண்டறியப்பட்டது. வாழ்வோடும் வாழ்வின் நம்பிக்கையோடும் கலந்தது. இரவுக்குறிக்கு அல்லற்படும் தலைவனை வரைவு கடாவி, அவன் ஒப்புதலைத் தலைவிக்குத் தோழி சொல்லுகிறாள். தலைவனுடைய நாட்டைப் பற்றிய வண்ணனையை உவமத்தால் கூறும் தோழி, கையிலாய மலை எடுக்கலாற்றாது உழன்ற இராவணனைப்போல  மரவேங்கையை மறவேங்கையெனக் கருதிக் குத்திய தன்னிரு தந்தங்களை எடுக்கலாற்றாது மலையதிரும் வண்ணம் உழற்றிய யானைகள் நிரம்பிய நாட்டுக்குத் தலைவன் என்கிறாள்.

    “இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
    உமை அமர்ந்து உயர் மலை இருந்தன்ன ஆக
    ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
    தொடிப் புலி தடக்கையின் கீழ்புகுந்து அம்மலை
    உழக்கல் செல்லாது உழப்பவன் போல
    உறுபுலி ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
    கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மதயானை
    நீடு இரு விடர் அகல் சிலம்பக் கூய் தன்
    கோடு புக்கல்லது உழக்கும் நாட!” (குறி. கலி. 2)

    இராமகாதை கம்பனால் பாடப்பெற்றிருந்தாலும் அவருக்கு முன்பே உலகம் தழுவிய அளவில் இராமகாதை புழக்கத்தில் இருந்ததும் சங்க இலக்கியங்கள் உட்பட்ட தமிழிலக்கியங்கள் பலவற்றிலும் அது பற்றிய குறிப்புக்கள் பரவலாகக் காணக்கிடக்கிறது என்பதும் இலக்கிய வரலாறு எடுத்துக்காட்டும் உண்மை. இந்த உண்மையைத்தான் கபிலர் படைத்த தோழி தலைவிக்குக் கூறுகிறாள். அதாவது தானறிந்த உலக வழக்கை உவமமாக்குகிறாள்.

    “ஆர் இடை என்னாய் நீ அரவஞ்சாய் வந்தக்கால்
    நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை
    கார் பெற்ற புலமே போல் கவின் பெறும்
    இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்
    பொருளில்லான் இளமைபோல் புல்லென்றாள் வைகறை
    அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்
    மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்
    அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள் வைகறை
    திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்” (குறி.கலி. 2)

    என்னும் தாழிசைகளில் தலா இரண்டு வீதம் ஆறு உவமங்களைக் கூறுகிறாள். எதிர்மறையில் மூன்று உடன்பாட்டில் மூன்று என்று. பல்வகையான இடர்ப்பாடுகளுக்கிடையே தலைவன் வந்து தலைவியைக் காண்பதை நிரல்படுத்திய தோழி, அவன் வருகையால் தலைவியிடம் ஏற்படும் மாற்றங்களை உவம அளவையால் விளக்கிக்காட்டுகிறாள். தலைவன் வராவிடின் அவள் படும் வேதனைக்கும், வந்தால் அவள் அடையும் மகிழ்ச்சிக்கும் தனித்தனியாக மூன்று உவமங்களைக் கூறுகிறாள். தலைவன் வராவிடின்,

    1. நீரற்ற புலமாகிறாள் தலைவி
    2. பொருளில்லான் இளமைபோல் கழிகிறது அவள் பருவம்
    3. அறம் செய்யாது அகவையால் மூத்தவனின் மூப்பாகிறது அவள் வாழ்வு.

    இதற்கு மறுதலையாக அவன் வருகையினால்,

    1. கார் பெற்ற புலமாகிறாள் தலைவி
    2. அருள் வல்லான் ஆக்கம் போல் மேனி செழிக்கிறாள்
    3. திறம் சேர்ந்தான் செல்வம்போல் பொலிகிறது அவள் அழகு.

    தலைவி தலைவனால் புரக்கப்பட வேண்டியவள். அன்றி இல்லறம் கடைபோகாது. தலைவன் இல்வழி நீரற்ற புலமானவள் அவன் உள்வழிக் கார் பெற்ற புலமாகிறாள். ‘கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை’. இளமைப் பருவத்தை விதந்தோதியதற்குக் காரணம், அதன் காலம் மிகக் குறைவு என்பதே. தலைவனால் ஆளப்படவேண்டிய தலைவியின் இளமை நலம் அவன் இல்வழி வறுமையில் சிக்கிய இளமையாக வீணாகக் கழிய, அவன் உள்வழி ஒப்புரவு அறிந்தவன் செல்வம் போல் வளர்கிறது என்பதாம். ‘செல்வத்துப் பயனே ஈதலாதலின்’ தலைவன் இல்வழி மனம் மொழிய காயங்களால் அறம் செய்யாதவன் அடையும் மூப்பைப் போலப் பயனற்று வீணாகிய அவள் வாழ்வு தலைவன் உள்வழி, அறம் செய்தான் செல்வம் போல் பொலிவு பெற்று வளர்ந்ததாம். இந்த வரிகளில் வாழ்வியலில் செய்யக் கூடாத நெறிகளும் செய்ய வேண்டிய அறங்களும் உவமங்களாக அமைந்துத் தலைவனின் காதல் சார்ந்த கடமையுணர்வினைக் குறிப்பாக உணர்த்தினமை காண்க.

    வண்ணனையில் காட்டும் வாழ்வியல் உவமங்கள்

    தலைவன் தலைவியோடு உடன்போக்கு மேற்கொள்கிறான்.   அவர் சென்றதை அறியாத செவிலி நடுக்குற்று நடந்த உண்மைகளை நற்றாயிடம் கூறுகிறாள். சுரம்போகிய செவிலி வழிச்செல்வாரிடம் தலைவன் தலைவி பற்றி வினவ, அவர்கள் தலைமக்களைக் கண்டதாகக் கூறும் பகுதி. தலைமக்கள் சென்ற பாலை நிலம் இப்படி இருக்கிறதாம்,

    “வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்
    சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி
    யார்கண்ணும் இகந்து செய்து இசைகெட்டான் இறுதிபோல்
    வேரோடு மரம் வெம்ப, விரிகதிர் தெறுதலின்
    அலவுற்றுக் குடி கூவ ஆறு இன்றிப் பொருள் வெஃகி
    கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல்
    உலகுபோல் உலறிய உரம் வெஞ்சுரம்”  ( பாலை. கலி. 9)

    முந்தைய பாட்டில் கபிலர் குறிஞ்சியிலிருந்து பாலையைச் சிந்தித்தார். இந்தப் பாட்டில் கடுங்கோ பாலையிலிருந்தே பாலையைச் சிந்திக்கிறார். அவர்கள் இருவர் மனத்திலும் பாலையின் கொடுமையைவிட வறுமையில் இளமைதான் முன்னிற்கிறது. இளமையிலேயே வறுமையுற்றவன் போலத் தளிர்கள் வாடிய கொம்புகளை உடையனவாக மரங்கள் நின்றன. கொடுத்தற்கு மனம் இல்லாதவனுடைய (சிறுமனம் கொண்ட கருமி) செல்வம், தன்னைச் சேர்ந்தார்க்குப் பயன்படாதவாறு போலத் தன்னைச் சேர்ந்தவர்களுக்கு நிழலின்றி இருந்தன. யாவரிடத்தும் ஒழுக்கத்தைக் கடந்துத் தீங்கு செய்பவனின் புகழ்கெட்டு, இறுதிக் காலத்தே அவன் சுற்றத்தார் மட்டுமன்றி அவனும் கெடுவான். அதுபோல் கதிரவனின் கதிர்கள் சுடுதலினால் கிளைகள் மட்டுமன்றி, மரங்கள் வேரொடு வெம்பி நின்றன. இவையெல்லாம் புறக்காட்சிகள். நெறிமுறை இன்றி வரி தண்ட, அது கொடுக்க வழியில்லாத அரற்றிய மக்களைக் கொலையால் தண்டிக்கும் கொடியவர்களைக் கொண்டு ஆட்சி நடத்தும் கொடுங்கோலன் காலத்தில் அருள் நிழல் அறியா நாடு போல உலர்ந்து போன பாலையாம்.

    வைரமுத்து பாடலும் வழிவழி மரபும்

    இத்தகைய பாலைவழிச் சென்று விட்ட மகளை எண்ணி மருகும் செவிலிக்குக் கண்டோர் ஆறுதல் கூறுகின்றனர். அந்த ஆறுதலில் ஆறுதல் இருக்கிறது. தேறுதலும் இருக்கிறது. நடப்பியல் உண்மையும் இருக்கிறது. அவை உவமங்களாகவும் இருக்கின்றன. பொதுமக்கள் கவனத்திற்கு ஆளான வைரமுத்தின் திரையிசைப் பாடல்களில் ஒன்றின் சரணம் இப்படி அமைந்திருப்பதைக் கண்டிருக்கலாம்.

    ‘சிப்பிக்குள் முத்து வந்தாலும் சிப்பிக்குச் சொந்தம் ஆகாது!’

    வைரமுத்து நகலெடுத்தார் என்பதல்ல கருத்து. இந்தச் சிந்தனையின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உண்மை. வைரமுத்து கையாண்டிருக்கும் இந்த உவமத்திற்கும் திரைக்கதையில் பாடல் இடம்பெறும் சூழலுக்கும் என்ன பொருத்தம் என்பது தனி விவாதத்திற்கு உரியது. ஆனால் தோன்றிய இடம் என்பதாலேயே தோன்றிய பொருள் அவ்விடத்திற்கு உரிமையானதன்று என்பது ஒரு நடப்பியல் உண்மை. இந்தக் கருத்தியல் மரபுவழிச் சார்ந்தது.

    ‘பலவுறு நறுங்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
    மலையுளே பிறப்பினும் மலைக்கவைதான் என் செய்யும்?

    சீர் கெழு வெண்முத்தம் அணிபவர்க்கல்லதை
    நீருளே பிறப்பினும் நீர்க்கவைதான் என் செய்யும்?

    ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
    யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதான் என்செய்யும்” (பாலை.கலி. 8)

    மகளைப் பறிகொடுத்துத் தவிக்கும் செவிலிக்குக் கண்டோர் கூறும் ஆறுதல் மொழியில் மலையில் தோன்றியும் மலைக்குப் பயன்படாத சந்தனம், நீருள் தோன்றி நீருக்குப் பயன்படாத முத்து, யாழுள் தோன்றி யாழுக்குப் பயன்படாத யாழிசை என்னும் நடப்பியல் சார்ந்த வாழ்வியல் உண்மைகளை உவமங்களாகக் கூறுகின்றனர். பெண்ணுக்குப் பிறந்த வீடு நிலையானதன்று. அது அவள் வந்து போகும் நந்தவனம். புகுந்த வீடே நிலையானது. ஒரு மரபினின்றும் மற்றொரு மரபிற்கு வேராகும் விந்தையை வித்தையாகச் செய்து காட்டுபவள் பெண். அந்த உண்மையை விளக்க, கண்டோர் கூறும் மூன்று உவமங்களும் தலைவியின் உடன்போக்கை நியாயப்படுத்துவது மட்டுமன்று, செவிலியின் மனச் சங்கடத்தையும் போக்கும் மருந்தாக அமைந்துவிடுவதைக் காணலாம்.

    நிறைவுரை

    இதுகாறும் செய்யப்பட்ட இவ்வாய்வுச் சுருக்கம் உவமம் பற்றிய சில  உண்மைகளை முன்னெடுக்கிறது. முன்பே கூறிய வண்ணம் இலக்கியம் என்பது வாழ்வின் எதிரொளியாக இருந்தால் வாழ்வியலின் அத்தனைக் கூறுகளும் அதனுள் இடம்பெற்றிருக்க வேண்டும். உவமம் செய்யுளுறுப்பு அல்ல. தமிழ் மக்களின் இந்த மண்ணின் வாழ்வியல் கூறு. எனவே தமிழ்க்கவிதைகளின் பெரும்பாலான உவமங்கள் இந்த அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. இனி, எல்லாப் படைப்புக்களுக்கும் படைப்பாளர்களுக்கும் இக்கோட்பாடு பொருந்துமா எனின் நிச்சயம் பொருந்தாது. சுரதா உள்ளிட்ட மரபுக்கவிஞர்களும் அப்துல் ரகுமான் உள்ளிட்ட புதுக்கவிதை எழுதுவோரும் அழகியலுக்காகவே சில இடங்களில் உவமங்களைப்  பயன்படுத்தியுள்ளனர். இது தனி ஆய்வுக்கு உரியது.

    (தொடரும்)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 31

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 31

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமங்களான ஓவியங்கள்

    முன்னுரை

    ‘சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி’ என்பார் பவணந்தி. ‘பாவையின்’ என்பதிலுள்ள இன் என்னும் வேற்றுமை உருபு ஒப்புப் பொருளில் வந்து ஓவியத்தின் அமைதியை நல்ல மாணவனுக்கு உவமமாக்கியது. ஓவம், ஓவியம் சித்திரம், பட்டம், படாம், வட்டிகைச் செய்தி என்று ஓவியத்திற்குப் பல பெயர்கள் உண்டு. ஓவியத்தை எழுதுகிறவர்கள் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர்,  வித்தகர் கிளவி, வல்லோன் என்னும் பல பெயர்களால் அழைக்கப்பட்டனர். சித்தன்ன வாசல் ஓவியங்கள் நமக்குத் தெரியும். தஞ்சை பெருவுடையார் கோயில் ஓவியங்கள் சிறப்பானவை. அஜந்தா ஓவியங்களையும் அறிவோம். இத்தகைய ஓவியங்கள் தமிழ்க்கவிதைகளில் உவமங்களாக இடம்பெற்றிருக்கின்றன. ஓவியத்தைப் பற்றிய ஆய்வு பண்பாடு மற்றும் கலையோடு தொடர்புடையதாகக் கருதப்படுவதால் இலக்கியம் பற்றிய ஆய்வில் இது அவ்வளவாக இடம்பெறாது போயிருக்கக்கூடும். இயற்கையோடு இயைந்து கலைவாழ்வு வாழ்ந்த அக்காலச் சான்றோர் எழுதிய இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சில உவம ஓவியங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. அறிமுகம் செய்கிறது

    உவமங்களான ஓவியப் பதிவுகள்

    ‘ஓவச்செய்தி’ என்பது சங்க இலக்கியச் சிறப்பான தொடர்களில் ஒன்று. ‘ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்கொடி’ மடந்தையான மாதவியைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. ‘புனையா ஓவியம்போல’ நின்று மணிமேகலை இரந்தாள்’ என்று மணிமேகலை பேசுகிறது. ‘உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுளத்தில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே!’ என்று பரவசப்படுகிறார் குமரகுருபரர். ’உன்னுடைய பொருள்தான் பெரிதும் ஓவியமோ?” என்பது உலகியலில் பெருவழக்கு. இவ்வழக்கில் ஓவியம் என்பது உயர்ந்தது (ஒசத்தி) என்னும் பொருளது என்பது அறிக.

    ஓவியமான பொய்கை

    ‘புண்ணிய நறுமலர் ஆடைபோர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் புனல்யாறு அன்று இது பூம்புனல் ஆறென” சென்றதாக வைகையைப் பற்றி இளங்கோவடிகள் எழுதுகிறார். அவர் ஆற்றுக்குச் சொன்னதைப் ‘பொய்கையெனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்’ என்று பொய்கைக்குப் புனைந்துரைப்பார் புலவர் புலமைப்பித்தன். இவர்களுக்கு எல்லாம் முன்பாக,

    “நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
    துறுநீர்க் கடம்பின் துணை ஆர்கோதை,
    ஓவத்து அன்ன உண்துறை மருங்கில்” (சிறுபாண்.68-70)

    என்று சிறுபாணாற்றுப்படையில் ஒரு ஓவியக்காட்சி இயற்கையையொத்த நீர்நிலை போல் இருந்தது என்று உவமிக்கப்பட்டுள்ளது. ‘செறிவுடைய கடம்ப மரங்கள் சூழ நிற்கும் நறுநீர்ப் பொய்கை. கடம்பினுடைய மாலை போன்ற மலர்கள் இந்திரகோபம் போன்ற தாதினை உதிர்த்ததால் ஓவியத்தை ஒத்து விளங்குகிறது’ என்று சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

    ஓவியத்தைப் போன்ற போர்க்களம்

    பொய்கை ஒவியத்தைப்போலப் பொலிந்தது எனப் பாடியவர்களே  போர்க்களமும் ஓவியம் போல் இருந்தது என்றும் பாடியிருக்கிறார்கள்.

    “நீலத்து அன்ன பைம்பயிர் மிசை தொறும்
    வெள்ளி அன்ன ஒள்வீ உதிர்ந்து,
    சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை, தாஅய்,
    மணிமருள் நெய்தல், உறழ, காமர்
    துணிநீர் மெல் அவல், தொய்யிலொடு மலர
    வல்லான் தைஇய வெறிக்களம் கடுப்ப” (மதுரை.279-284)

    என்ற அடிகள் பல வண்ணக் கலவைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட துணியில் எழுதிய ஓவியம் போல வெறிக்களம் தோற்றமளித்ததாகக் கூறுகிறது. புலவர் தான் கண்ட துணி ஓவியத்தைப் போல வெறிக்களம் இருந்தது என்று தான் கண்ட காட்சிகளை ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளதன் மூலம் அன்றைய கால துணி ஓவியத்தின் இயல்பினைப் பற்றி அறியமுடிகிறது.

    வீடுகளுக்கு உவமமான ஓவியம்

    ‘அரண்மனை மாதிரி வீடு’ ‘பங்களா மாதிரி வீடு’, ‘கோட்டை மாதிரி வீடு’ ‘கோயில் மாதிரி வீடு’ என்றெல்லாம் பிறர் சொல்லக் கேட்டதுண்டு. ஆனால் ‘ஓவியம் போல் வீடு’ எனக் கேட்டதுண்டா? அந்தப் பேறு நமக்கில்லை. நம் முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது. அவர்கள் வீட்டைச் சொல்கிறபோது அதன் அகப்புற அமைதியை ஓவியத்தோடு ஒப்புமைப்படுத்தியிருக்கிறார்கள்.

    “ஓவத்தன்ன இடனுடை வரைப்பில்
    பாவையன்ன நப்புறம் காக்கும்” (நற்.182)

    “ஓவுக் கண்டன்ன இல்வரை” (நற். 268)

    “ஓவத்தன்ன வினைபுனை நல்லில்
    பாவை அன்ன நல்லோள் கணவன்” (பதி. 61)

    “ஓவத்தன்ன வினைபுனை நல்லில்
    பாவை அன்ன பலரல் மாண்கவின்” (அகம். 98)

    “ஓவத்தன்ன உருகெழு நெடுநகர்” (பதி. 88 – 28)

    என்ற பகுதிகளில் வீடுகளுக்கு ஓவியம் உவமமாக்கப்பட்டுள்ளது, ஓவியத்தோடு சிற்பமும் உவமமாக்கப்பட்டுள்ளது, நகரத்திற்கும் உவமமாக்கப்பட்டுள்ளது. ஓவியத்தைப் போன்ற இல்லத்தில் பாவை சிற்பம் போன்ற மனைவி என்னும் சித்திரிப்பு சிந்திக்கத்தக்கதாய் உள்ளது.

    இயற்கையும் ஓவியமும்

    பழந்தமிழ் மக்கள் நாளும் துய்த்து மகிழ்ந்த கலைகளில் முன்னிற்பது ஓவியம் என்பது இலக்கியங்களால் அறியப்படும் சேதியாகும். அழகிய காட்சிகளை ஓவியமாகவும் சிற்பமாகவும் கண்டு மகிழ்ந்த மக்களை அக்காலம் பெற்றிருந்தது.  இயற்கையின் அழகை ஓவியத்தின் அழகோடு ஒப்பிடும் போக்கு இருந்திருக்கிறது. அதாவது இயற்கையைச் செயற்கையோடு ஒப்பிடும் அளவுக்குச் செயற்கை சிறப்புற்றிருந்திருக்கிறது.

    “…………………………………………………………வல்லோன்
    எழுதியன்ன காண்தகு வனப்பின்
    ஐயள் மாயோள் அணங்கிய
    மையல் நெஞ்சம் என்மொழிக் கொளினே” (நற். 146)

    நெஞ்சம் மயங்கியதாம். எதனால்? தலைவியின் அழகால். அந்த அழகுக் கூறுகள் என்னென்ன? அவளுடைய தலைமைப் பண்பு மற்றும் மாமை நிறம். இவற்றுக்கு மயங்கியதாம் இவன் நெஞ்சு. தான் மயங்கியதைத் தன் நெஞ்சு மயங்கியதாக இவன் மயங்குகிறான். இவளுடைய இந்தப் பேரழகு எதனைப் போன்று இருந்தது என்பதில்  தான் ஓவியம் உவமமாகிறது. ‘வல்லோன் எழுதியன்ன காண்தகு வனப்பு’ என்னுந் தொடரில் தலைமகளின் அழகுக்கு ஓவியம் உவமமாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இனிப்,

    “புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
    வனைபுனை எழில் முலை வாங்கமை திரள் தோள்
    மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்” (மலைபடு. 56-58)

    என்னும் மலைபடுகடாஅத்துள் நன்னனின் சிறப்புக்களாகக் கூறும் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் இயற்கையாக வளர்ந்தோங்கும் மகளிர் மார்பிற்கு வல்லோன் புனைந்த செயற்கை ஓவியத்தை உவமமாக்குவதை அறியலாம்.

    பரத்தையர் மறக்காத பரங்குன்றக்  காட்சி

    பரங்குன்றத்தில் பரத்தை தன்னை மறந்து இறைவனை வாழ்த்தி நடனமாடுகிறாள். அவள் அழகு கண்டு தலைவி தன்னழகு தாழ்ந்துவிடுமோ என அஞ்சுகிறாள். மற்றொரு தலைவி ஆடியின் முன்னின்று இருக்கின்ற தன்னழகை இன்னும் திருத்திப் பெருக்க முனைகிறாள். மற்றொருத்தியோ தன் கணவன் அவள்மாட்டுச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத் தன் மார்பின் மீது மணமிக்க சந்தனத்தைத் தடவிக் கொள்கிறாள். இந்தக் காட்சி எப்படி இருந்தது என்பதுதான்,

    “பல்லூழ்  இவையிவை நினைப்பின் வல்லோன்
    ஓவியத்து எழுது எழில் போலும்” (பரி. 21)

    என்னும் இவ்வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு அந்த ஆடரங்கில் நடந்த மகளிர் செயலை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருங்கால் அவையெல்லாம் கைவல்லான் தீட்டிய ஓவியக் காட்சிபோல அகக்கண்முன்னே தோன்றுகின்றனவாம். “நெனச்சுப்பாத்தா நெஞ்சில் படம் மாதிரி ஓடுது” என்பது வழக்கியல். “உள்ளுங்காலை உயர்ந்ததன் மேற்றே யாதலின்” உவமமாகிய ஓவியம் உயர்ந்து நிற்றல் காண்க.

    கம்பனைக் கவர்ந்த ஓவியம்

    இலக்கியத்தை ஓவியமாக்கியவன் கம்பன். அவன் உண்மையில் ஓவியத்தில் மனம் பறிகொடுத்தவன் என்பதற்கு அவனுடைய பாடல்களே அகச்சான்றுகளாக நிற்கின்றன. ஓவியப் புலமையும் ஓவிய ரசனையும் உடைய அக்காலப் புலவர்கள் ஓவியத்தின் உட்பொருளையும் நுண்ணியத்தையும் உணர்ந்த வல்லாளர்களாகவே இருந்திருக்கிறார்கள். இராமன் பிறந்த  மகிழ்ச்சியைச் சித்திரிக்கும் சூழல். அவனுடைய தோற்றம் பற்றிய பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

    “காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே,
    ஓவிய எழிலுடை ஒருவனை அலது, ஓர்
    ஆவியும் உடலமும் இலது’ என, அருளின்
    மேவினன் – உலகுடை வேந்தர்தம் வேந்தன்.” (கம்ப. பால. 120)

    ஒளிவீசுகிற கமலத்தைப் போல் தோன்றிய ஓவிய அழகன் இராமனே தனக்கு உயிரும் உடலுமாகக் கொண்டான் தசரதன்.   இராமன் சிவதனுசை முரிக்கிறான். அதிசயித்த தேவர்கள் எல்லாம் அசைவற்ற ஓவியம் போல நின்றனர் என்கிறார் கம்பர்.

    “வயிரியர் மதுர கீதம்
    மங்கையர் அமுத கீதம்
    செயிரியர் மகர யாழின்
    தேம்பிழி தெய்வ கீதம்
    பயிர் கிளை வேயின் கீதம்
    என்றிவை பருகி விண்ணோர்
    உயிருடை உடம்பும் எல்லாம்
    ஓவியம் ஒப்ப நின்றார்” (கம்ப.705)

    பாலகாண்டத்தில் இவ்வாறு இராமனுக்கு ஓவியத்தை உவமமாக்கிய கம்பன் சுந்தர காண்டத்திலும் மறக்காமல் அசோகவனத்துச் சீதை தன் கணவன் இராமனைப் பற்றிய சிந்தனையில் இருந்தாள். அவள் சிந்தனையில் வந்ததாகக் கம்பன் எழுதுகிறான். ‘இளவரசுப் பட்டம் சூட்டிக் கொள்க’ என்று தந்தை தசரதன் ஆசி வழங்கியபோதும் ‘பரதன் நாடாளவும் பதினான்கு ஆண்டுகள் நீ காடாளவும் வேண்டும்’ எனக் கைகேயி அதிர்ச்சியளித்தபோதும் ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்திருந்த இராமனுடைய முகத்தினை’ எண்ணி மறுகினாளாம்.

    “மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும்
    இத்திரு துறந்து ஏகு என்ற போதிலும்
    சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
    ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்” (கம்ப. சுந்தர. 5088)

    கம்பராமாயண நிகழ்வுகளில் சொற்பொழிவாளர்கள் பெரும்பாலும் மறக்காமல் கூறும் உவமம் இது. சீதை அசோகவனத்தில் இருந்த காட்சி ‘ஓவியம் புகையுண்டதை’ ஒத்திருந்ததையும் இராமனால் வதம் செய்யப்பட்ட வாலி ‘ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தோய்’ என்று இராமனுடைய முகத்தை ஓவியத்துள் அடக்க முடியாது வியந்து நின்ற விந்தையையும் அவர்கள் சொல்வார்கள். இப்படியெல்லாம் அயோத்தியர் இறையை ஓவியமாகப் போற்றிய கம்பன் இதே உவமத்தை அவனால் அழியப் போகும் அதாவது அனுமனால் தீக்கிரையான இலங்கைக்கும் ஒப்பிடுகிறான்.

    ‘ஓவியம் அமைந்த நகர் தீ உண, உளைந்தாய்,
    “கோ-இயல் அழிந்தது” என; வேறு ஒரு குலத்தோன்
    தேவியை நயந்து, சிறை வைத்த செயல் நன்றோ?
    பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ?” (கம்ப. யு.கா. 6119)

    என்னும் பாட்டில் இலங்கை மாநகரத்தை ஓவியத்தோடு ஒப்பிட்டு அத்தகைய  நகரம் தீக்கு இரையாவதற்கு இராவணன் காரணமானான். அதனால் ‘உயிர்கொடுத்தும் பழிகொண்ட பித்தனானான்’ என்று பாடுகிறார். கட்டுரையின் அளவு கருதிக் கம்பராமாயணம் உட்பட்ட தமிழ்க்கவிதைகளிலிருந்து ஒருசில எடுத்துக்காட்டுக்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. உவமம் என்பது இலக்கியப் பகுதி. ஓவியக்கலை என்பது வரலாறு மற்றும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. ஓவியம் இலக்கியச் சிந்தனைகளுக்கும் வண்ணனைகளுக்கும் உவமமாகப் பயன்பட்டுள்ளது என்பதே இந்தக் கட்டுரையின் சாரமாகும்.

    நிறைவுரை

    சிற்பம் என்பது கழித்தலின் எச்சம். ஓவியம் என்பது கூட்டலின் தொகுப்பு.  முன்னது செதுக்கப்படுவது. பின்னது வரையப்படுவது. நிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல் ஆகிய மனித இயல்புகளையும் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் மெய்ப்பாடுகளையும் வண்ணம் கொண்டும் தூரிகைகொண்டும் வட்டிகை கொண்டும் செயற்கையாக வரைந்தவர்களே யாரும் வரையாத இயற்கையோடு ஒப்பிட்டு இலக்கியம் செய்கிறார்கள் என்பதை எந்தக்  கவிதைக் கோட்பாட்டு ஆய்வாளரும் சிந்தித்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். கற்றளியில் இறைவன் நடனமிடும் இடத்தினைச் சித்திரசபை என்றுதான் சொன்னார்கள். சிற்பச் சாலை என்றாரில்லை. படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டு வருகிற மூவேந்தர்களால் கவனிக்கப்படாத இந்தக் கலையைப் பல்லவர்கள் கவனித்தார்கள். அதனால் அவர்கள் சித்திரகாரப் புலி எனவும் போற்றப்பட்டார்கள். இவ்வாறு நோக்கி, இன்னும் நோக்கி முழுமையாக ஆராயாது, உவமத்தில் வெறும் ஒப்புமை ஒன்றினையே நோக்கி ஆராய்வதால் தமிழ்க்கவிதைகளின் உவமம் பற்றிய நுண்ணிய மிக்க இலக்கியக் கோட்பாட்டைக் காண மறுத்துவர்களாவோம்!.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 29

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 29

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!

    முன்னுரை

    ஒன்றினை மற்றொன்றோடு ஒப்புமைப்படுத்திக் கூறுவது உவமம் என்பது உண்மையாயினும் அப்படிக் கூறுவதில் பல நெறிகள் உண்டு. இயற்கையை இயற்கையோடும் இயற்கையைச் செயற்கையோடும்  செயற்கையைச் செயற்கையோடும் செயற்கையை இயற்கையோடும் உயர்திணையை உயர்திணையோடும் உயர்திணையை  அஃறிணையோடும், அஃறிணையை அஃறிணையோடும் அஃறிணையை உயர்திணையோடும்  இருப்பதை இருப்பதோடும் இருப்பதை இல்லாததோடும் இல்லாததை இல்லாததோடும் இல்லாததை இருப்பதோடும் என ஒப்புமைப் படைப்பாளனின் சிந்தனைக்கேற்ப அமையும். வானம் இருள்கிறது. இது இயற்கை. இருட்டுக்குப் பாவேந்தர் உவமம் சொல்கிறார். ‘கேள்வி இல்லான் நெஞ்சம் போல் இருண்டு’ என்று. கல்வி, கேள்வி என்னும் இருகூறுகளால் நிரம்புவது அறிவு. செவிச்செல்வமாகிய கேள்வியறிவு இல்லாதவன் அறிவு வெறும் ஏட்டுப்படிப்பினால் நிரம்பிவிடாது. கேள்வியறிவு இன்மை என்பது முயற்சியில் தளர்ச்சி. வானத்தின் இருள் இயற்கை. அந்த இயற்கையைப் பாவேந்தர் செயற்கையோடு ஒப்பிடுவதைக் காணலாம். இதுபோன்று அமைந்திருக்கும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    ஊரும் உவமமாகலாம்.

    “மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே! புதுமைகள் நிறைந்த சேரன் வில்லை உன் புருவத்தில் கண்டேனே! தஞ்சையில் பறந்த புலிக்கொடியில் வீரத்தைக் கண்டேனே! காஞ்சித் தலைவன் கோயில் சிலைதான் கண்மணியே உன் பொன்னுடலோ? குடந்தையில் பாயும் காவிரி அலைதான் காதலியே உன் பூங்குழலோ? சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையோ உன் செவ்விதழோ? தூத்துக்குடியின் முத்துக்குவியல் திருமகளே உன் புன்னகையோ? பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ? புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய்மொழியோ? கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ? குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ? இவையாவும் ஒன்றாய் தோன்றும் உன்னைத் தமிழகம் என்பேனே!” என்னும் கருத்துடைய திரையிசைப் பாடலைப் பலரும் கேட்டிருக்கக் கூடும்.  இந்தப் பாட்டில் கவிஞர் வாலி உவமமாகச் சொல்லியிருக்க வேண்டிய பொருள்களை மட்டும் சொல்லாமல் அவை தொடர்பான அரசுகள், நகரங்கள் முதலியவற்றையும் நிரலாகக் கூறி இறுதியில் ஒட்டுமொத்தமாக இவையெல்லாம் இருப்பன தமிழகத்திற்குள் ஆதலின் தன் காதலியைத் தமிழகம் என்று ஒற்றைச் சொல்லால் கூறும் காதலனைக் காட்டுகிறார். ஓர் இளம்பெண்ணுக்கு நகரத்தை உவமமாகக் காட்டலாமா? மேம்போக்காக இதனைக் கேட்பவர்க்குப் புதுமை போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில்  தலைவனைப் பிரிந்த தலைவியின் அழகிற்குச் சிதைந்து போன நகரத்தையும், அம்பல் மற்றும் அலருக்குப் குறிப்பிட்ட போர்க்களத்து ஆரவாரவொலியையும் உவமமாக்குவது தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடு, உவம மரபு. ஐங்குறுநூற்றில் ஒரு பாடல்.

    “நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
    நெடுநீர்ப் பொய்கைத் துடும் என விழூஉம்
    கைவண் மத்தி கழாஅர் அன்ன
    நல்லோர் நல்லோர் நாடி
    வதுவை அயர விரும்புதி நீயே!”

    “நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம் நெடுநீர்ப் பொய்கைத் துடும் என விழூஉம் கைவண் மத்தி கழாஅர்” என்னும்  உள்ளுறையால்  நகர்வளத்தைச் சுட்டுகிற இந்த நெறி, “கொக்கின் உக்கு ஒழிந்த தீம்பழம் கொக்கின் கூம்பு நிலையன்ன ஆம்பல் தூங்கு நீர் குட்டத்துத் துடும் என விழும் தண்டுறை ஊரன்” என்னும் நற்றிணையாலும் அறியலாம். பரத்தை ஒருத்தியுடன் சின்னாள் வாழ்ந்து அவளைப் பிரிந்து மற்றுமொரு பரத்தையை வதுவை அயர்ந்த தலைவன் தலைவியிடம் வந்தானாக, அவள் புலந்தாள். புலந்த அன்னாளுக்கு ‘இனி இவ்வாறு நிகழாது’ எனப் பொய்யாக வாக்களித்தான் தலைவன். அந்தப் ‘பொய்யனை’  நோக்கித் தலைவி சொன்ன பதில் இது.

    “நீ சொல்வதை நான் நம்பவேண்டும்! அதுதானே நின் விருப்பம்! உனக்குத்தான் வள்ளன்மையில் சிறந்த மத்தியின் கழாஅர் நகரைப் போன்ற நல்ல நல்ல பெண்கள் எல்லாம் கிடைப்பார்கள். நீயும் அவர்களை மணம் செய்து கொள்ள விரும்புவாயே!” (உன்னைத் தெரியாதா எனக்கு?) என்று நகையாடுகிறாள். பரத்தையர் மேனி நலமல்லது கற்பு நலம் இலராதலின்  ‘நல்லோர் நல்லோர் என்னும் அடுக்கு இழித்தற்கண் வந்தது, இந்தப் பாட்டில் கழாஅர் நகரம் தலைவன் விழையும் பரத்தையர்க்கு உவமமாக வந்தது. காவிரிக்கரையில் அமைந்திருக்கும் இவ்வூர்த்துறை கரிகால் பெருவளத்தானின் மகள் ஆதிமந்தியும் அவள் கணவன் அத்தியும்  விளையாடி வரலாற்றுப் பெருமை பெற்றது. இவ்வாறு பெண்களின் எழிலுக்கும் அலருக்கும் நகரத்தையும் போர்க்களத்தையும்  உவமமாக்குவதும்  பழந்தமிழ்க் கவிதை மரபு என்பதைப் புரிந்து கொள்ளலாம்!

    தாமரைபோல மலர்ந்த அல்லி

    மிளகும் பப்பாளி விதையும் ஒன்றுபோல் தோன்றும். நொய்யும் ரவாவும் ஒன்றுபோல் தோன்றும். கலப்பட வணிகர்கள் எதனை எதனோடு கலக்க வேண்டும் என்னும் தெளிஞானம் பெற்றிருப்பர். இலக்கியத்தில் இத்தகையதோர் ஒப்புமையைப் புலவர் ஒருவர் திணைவிளக்கத்திற்காகப் பாடியிருக்கிறார். தாமரையும் ஆம்பலும் ஒன்றுபோல் தோன்றும். சில அடிப்படை இயல்புகளும் அவற்றுக்கிடையே உண்டு. அவையிரண்டுமே நீர்த்தாவரம். தாளினாலும் நீண்டு, கிழங்கில் வேர் கொள்ளுவன. வேர், கிழங்கில் பிடிமானம் கொள்வதால் நீர்நிலைகளில் அதாவது குளங்களில் நீர் வற்றிய காலத்தும் அப்பூக்களின் மலர்ச்சி விரைவில் குறையாது.

    “கன்னி விடியற் கணைக்கால் ஆம்பல்
    தாமரை போல் மலரும் ஊர!
    பேணா ளோநின் பெண்டே?
    யான் தன் அடக்கவும் தான் அடங்கலனே! ” (ஐங். 68)

    என்று அமைகிறது அப்பாடல். மருதம் பாடுவதில் சிறந்த புலவரான ஓரம்போகியார் பாடியது. பாடலின் உரிப்பொருளைப் புரிந்து கொள்ளாத நிலையில் உவம நுட்பம் புரிவதற்கு வாய்ப்பில்லை. இங்கே உரிப்பொருள் மருதத்திணையின் ஊடல். அத்திணையுள் அடங்கிய துறைகளுள் ஒன்று ‘அவனறியும் ஆற்றல் அறிதல்’ (தொல். பொ.147). தலைவன் தன்மாட்டு மயங்கி நிற்க, பரத்தை தலைமகளை ஏசுகிறாள். ஆனால் தலைமகள், தன்னை ஏசுவதாகப் பொய் மொழிகிறாள். இதனைச் செவிமடுத்த தலைவி “தான் ஏசாது அடங்கி நிற்கவும் தான் அடங்காது நிற்கிறாள்” எனத்  தலைவனுக்குக் கூறியது.

    இது தலைவி கூற்று. தலைவி தாமரை. ஆம்பல் கன்னிவிடியலில் மலரும். கன்னிவிடியல் என்றால் இருள் களையும் அதிகாலை. ‘குமரியிருட்டு’ என்பதும் அது. தாமரை மலர வேண்டிய அந்தப் பொழுதில் ஆம்பலும் மலர்கிறதாம். தான் மலர்வதற்குரிய பொழுதில் தானும் மலர்வதாலேயே ஆம்பல் தாமரையாகிவிடாது என்பது கருத்து. கற்புச் சிறப்பு இன்மையால் அடங்கிக் கிடத்தற்குரிய பரத்தை, குலமகளிர் போலத் தருக்கித் திரிவது பொருத்தமில்லை” என்பதுமாம். குமுதம் என்னும் நீர்க்கொடி. குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே வந்தன்று வாழிய மாலை” என்றும் ஓரம்போகியார் பாடிய பாடல் குறுந்தொகையிலும் காணக்கிடக்கின்றது.

    வேகத்தை விரைவுபடுத்திய உவமங்கள்

    வினைமுற்றிய தலைவன் மீள்கிறான். அவனுக்காகக் காத்திருக்கிறாள் தலைவி. பேயனார் பாடிய முல்லைத் திணைப் பாடல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உவமங்களை எத்தகைய உரிப்பொருள் விளக்கத்திற்கு எந்த முறையில் அதாவது உத்தியில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை எண்ணுகிறபோது வியப்பு மேலிடுகிறது. சாதாரணமாக முன்னிலையில் உவமம் சொல்லிப் பாராட்டுவது, படர்க்கையில் உவமம் சொல்வது என்பதெல்லாம் உண்டு,  இந்தப் பாட்டில்  தலைவன் பிரிந்திருந்த தலைவியைக் காண விரைந்ததற்கு உவமங்களைக் காரணிகளாக்குகிறான்.

    “நின்னே போலும் மஞ்ஞை ஆல நின்
    நன்னுதல் நாரும் முல்லை மலர
    நின்னே போல மா மருண்டு நோக்க
    நின்னே உள்ளி வந்தனென்
    நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே” (ஐங்குறு. 492)

    தலைவியைப் போலச் சாயல் உடைய மயிலும், அவள் நன்னுதல் போல மணம் வீசும் மலர்ந்த முல்லையும் அவள் கண்ணைப் போல மருண்டு நோக்கும் மானும் அவன் உள்ளத்தில் தலைவியைக் காணும் வேட்கையைத் தூண்டினவாம். எவ்வளவு விரைவாக வருகிறான் என்றால் கார்காலம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டானாம். கார்காலம் அவன் திரும்பி வருவதற்கான கால எல்லையாயினும் மேற்கண்ட மயிலையும் முல்லையையும் மானையும் கண்டு உள்ளத்தில் காதல்பெருக கார்காலத்தின் முழு எல்லையைக் கருத்திற் கொள்ளாது அதன் தொடக்கத்திலேயே திரும்பிவிட்டானாம். கார்காலம் வருவதற்கு முன்னேயே வந்துவிட்டான் என்பது கருத்து. ‘பெய்த புலத்துப் பூத்த முல்லை பசு முகைத்தாது நாறும் நறுநுதல் அரிவை’ என்று குறுந்தொகையிலும் வருதல் காண்க. திணைக்கான முதற்பொருளும் கருப்பொருளும் செறிந்து நிற்றல் காண்க.

    மனைவிளக்கும் குடும்ப விளக்கும்

    ‘வீட்டில் வந்து விளக்கேற்றுவாள்’ என்பது பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு நோக்கிவரும் மகளிர்க்கான வாழ்த்துரைகளில் ஒன்று. அதனால் அவள் மனைக்கு விளக்கம் ஆனாள். பாரதிதாசன் இந்தச் சிந்தனையை இன்னும் விரிவுபடுத்தி, ஆழமாக்கி ஒரு குடும்பத்தின் கட்டுமான உறுதிக்கே மனைவிதான் காரணம் எனக் கருதி மனைவிளக்கு என்பதைக் குடும்ப விளக்காக்கினார்.

    “ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
    மனைக்கு விளக்கம் ஆயினள் மன்ற கனைப் பெயல்
    பூப்பல அணிந்த வைப்பின்
    புறவணி நாடன் புதல்வன தாயே!” (ஐங் 409)

    எந்தப் பாட்டானாலும் உவமத்தைச் சுவைத்து அனுபவிப்பதில் சொல்லின்பம் அதாவது உவமத்திற்கான அடைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இந்தப் பாட்டில் ‘சுடர்போலத் தலைவி’ என்றாலே போதும். ‘செஞ்சுடர்,’ அது தீப்பந்தத்துச் சுடர் அல்ல. பாண்டில் செஞ்சுடராம். பாண்டில் என்னும் பலபொருள் ஒருசொல்லுக்கு விளக்குத் தகழி என்பது இங்கே பொருள். அது ஒண்சுடர் பாண்டில் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. ஒள்ளிய சுடர்களை ஏந்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பாண்டில் என்பது பொருள். பதினைந்து சீர்கள் சொற்கள் கொண்ட பாடலொன்றில் ‘ஒண்சுடர் பாண்டில் செஞ்சுடர்’ என்னும் ஒரு தொடர் நான்கு சீர்களைத் தமதாக்கிக் கொள்ளும் அளவிற்கு உவம அடைகள் இருக்கின்றன என்பது ஆய்வுக் கருத்து. “பாண்டில் விளக்கின் பரூஉச் சுடர் அழல” என்பது நெடுநல்வாடை.

    இன்று கூடுமோ இந்தக் காட்சி?

    சங்க இலக்கியத்தின் படைப்புக் கோட்பாடுகளில் நுண்ணியமானவை அகப்பொருள் மாந்தர்களில் பெண்பால் பாத்திரப்படைப்புக்கள். நற்றாய், செவிலி, தலைவி, தோழி என்னும் கற்பனைப் பாத்திரங்களில் இழையும் பண்பாட்டுக் கூறுகள் அக்காலத்தைய தமிழ்ச்சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளாகவே கருதமுடியும். இயற்பெயர் சுட்டாத அப்பாத்திரங்களில் நற்றாய் தலைவியெனின் செவிலி தோழியாவாள்.  நற்றாயின் மகள் தலைவியெனின் செவிலியின் மகள் அவளுக்குத் தோழியாவாள். இருந்திருப்பாள்.  தோழி தலைவியானால் தலைவி தோழியாவாள். படைப்புக்கு உரிமையாளரான புலவரே இத்தனைப் பாத்திரங்களாகவும் உலவுகிறார் என்பது கூடுதல் வியப்புக்குக் காரணமான சேதி.

    இந்தப் பின்புலத்தில் இலக்கியச் சித்திரிப்பு பலவகைப்படும். இயற்கைக் காட்சிகளைச் சித்திரிப்பது. போர்க்களத்தைச் சித்திரிப்பது. குடும்பக் காட்சிகளைச் சித்திரிப்பது. பாவேந்தரின் குடும்பவிளக்கில் சித்திரிக்கப்பட்டுள்ள காட்சிகள் தமிழ்க் கவிதை உலகத்திற்கு முற்றிலும் புதியவை. ‘ஒரு நாள் நிகழ்ச்சி’ என்ற பெயரில் அவர் செய்திருக்கும் கவிதையோவியம் அவரை ஒரு கவிஞனாக மட்டுமன்று. ஒரு இலட்சியக் குடும்பத் தலைவராகவும் காட்டுகிறது. அதுபோன்ற ஒரு நிகழ்வினை ஐங்குறுநூறு சித்திரிக்கிறது. அந்தச் சித்திரிப்பில் தாய்மையும் இல்லறமும் உவமங்களும் சங்கமிக்கின்றன.

    தலைவி களவொழுக்கம் மேற்கொண்டு ஒழுக, அதனைத் தோழி வாயிலாக அறிந்து, தலைவியின் நாணத்தால் நேரடியாக மொழிதலின் இயலாமை கருதி நற்றாயிடம் எடுத்துச் சொல்லிக் கற்பறம் காப்பவள் செவிலியே. அதனாலேயே ‘தாயெனப்படுவோள் செவிலியாகும்’ என்பார் தொல்காப்பியர். அத்தகைய செவிலி தலைவி நடத்தும் இல்லறப் பாங்கினைக் கண்டு வந்து நற்றாய்க்கும் எடுத்து மொழியும் வகையில் பல பாடல்கள் உள்ளன. அப்பாடல்களில் இல்லறக் காட்சியின் எழில், கட்டுமானச் செப்பம் குறையாது உவமச் சிறப்போடு அமைந்திருப்பதைக் காணமுடியும்.

    “மறியிடை படுத்த மான்பிணை போலப்
    புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
    இனிது மன்ற அவர் கிடக்கை முனிவின்று
    நீனிற வியலகம் கவைஇய
    ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே” (ஐங். 401)

    என்ற பாடலில் தலைவனுக்கும் தலைவிக்கும் நடுவில் அவர்கள் மகன் மான் பிணைபோலப் படுத்திருக்கும் இனிமையான காட்சியை நற்றாய்க்கு எடுத்துரைக்கும் செவிலி, நீல நிறமுடைய வானத்தால் சூழப்பட்ட இந்த உலகத்து இன்பமும், உம்பருலகத்து இன்பமும் அந்தக் காட்சிக்கு ஈடாகாது என்று எடுத்துரைக்கிறாள். இங்கே உவமச் சிறப்பு எங்கே இருக்கிறது? மகன் குட்டியாம். தலைவனும் தலைவியும் மானும் பிணையுமாம். புலிக்குப் பிறந்தது பூனையாகாதது போல மான்களுக்குப் பிறந்த மான் குட்டி எனக் கொள்க.

    “புதல்வன் கவைஇய தாய் புற முயங்கி
    நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
    நரம்புளர் முரற்கை போல
    இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே!”  (ஐங். 402)

    என்ற பாடலில் கட்புலத்தின் இனிமையைச் செவிப்புல இனிமையாகக் காட்டுகிறார் புலவர். தன் புதல்வனைத் தழுவிக்கொண்டு தலைவி படுத்துறங்குகிறாள்.  அவளுடைய புறத்தைத் தழுவிக் கொண்டு தலைவன்  உறங்குகிறான். பாணருடைய நரம்புளர் முரற்கையினால் தோன்றிய இசை, கேட்டார் செவிக்கு இன்பம் பயப்பதுபோலப், பிள்ளையைத் தாய் தழுவ அவளைத் தலைவன் தழுவக் கிடக்கின்ற காட்சி கண்ணுக்கு இன்பம் பயந்ததாகக் கூறுகிறார். செவிலியின் கட்புலக் காட்சி மறைந்தொழியவும் அக்காட்சியைக் கண்ட மனம் அதனை மறவாது, பாணர் இசைத்த பண்ணை எண்ணுந்தோறும் இன்பம் பயப்பது போல இன்பம் பயந்தது என்பது கருத்து. ‘பாணர் நரம்புளர் முரற்கை போல’ என்னும் இந்த உவமத்தைப் “பாணர் நயம்படு முரற்கை யாத்த பயன்தெரிந்து இன்புறு புணர்ச்சி நுகரும்’ (407) எனத் தலைமக்களின் புணர்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது அறிக.

    “புதல்வற் கவையினள் தந்தை மென்மொழிப்
    புதல்வன் தாயோ இருவரும் கவையினள்
    இனிது மன்ற அவர் கிடக்கை
    நளியிரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே” (409)

    என்னும் பாடலில் செவிலி கண்ட காட்சி மாற்றப்படுகிறது. முந்தைய பாடலில் மகனைத் தாய்தழுவ அவளைத் தலைவன் தழுவிக்கிடக்கிறான். இந்தக் காடசியில் “தந்தை புதல்வனைத் தழுவிக் கிடக்கின்றான். அந்தத் தலைவனையும் புதல்வனையும் தாய் தழுவிக் கிடக்கிறாள். “புதல்வன் தாயோ இருவரும் கவையினள்” இந்தப் பாடலில் உவமம் ஏதும் சுட்டப்படாவிடினும்  மனைவி, கணவன், புதல்வன் என்பதே உலகமாதலின் இதனின் வேறு உலகம் இல்லையென்பார் ‘நளியிரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே’ என்னும் அருமை புலப்படுதல் காண்க.

    நிறைவுரை

    கருத்து, உணர்ச்சி, கட்டுமானம், கற்பனை என்னும் கூறுகளுள் உவமத்தைக்  கற்பனையுள் அடக்கும் சிலர் அதனைக் கவிதையின் புற அழகாகக் கொண்டு அணியிலக்கண அமைதி காண்பர். கவிதை அழகுணர்ச்சியின் வெளிப்பாடு. அது இலக்கணப் பதிவு அல்ல. உவமத்தைக் கருத்து விளக்கத்திற்கான அகக்கருவி என்று கொண்டால் அதன் பயன்பாடு இன்னும் சிறக்கும். இரு மாறுபட்ட புலன்கள் வழி அடையக் கூடிய இன்பக் கூறுகளையும் ஒப்புமை செய்து காட்டுகிற படைப்பாளுமை  இருந்திருக்கிறது.  ‘கன்னி விடியற் கணைக்கால் ஆம்பல்’ என்றும்  ‘ஒண்சுடர் பாண்டில் செஞ்சுடர்’ என்றும் ‘நரம்புளர் முரற்கை’ என்றும் ‘கைவண் மாத்தி கழாஅர்’ என்றும் புணர்த்துக் காட்டியிருக்கும் உவம அடைகள் இலக்கண வகையால் உள்ளுறைக்குப் பயன்பட்டாலும் கவிதைப் பொருளைச் சிறக்கச் செய்யும் சிந்தனை மூலங்களாகவே தோன்றுகின்றன.

    (தொடரும்…)

    Share
  • (Peer Reviewed) தன் சீர் தனது ஒன்றின் தன் தளையாம்

    (Peer Reviewed) தன் சீர் தனது ஒன்றின் தன் தளையாம்

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    (தமிழ் யாப்பியல் மரபில் சீர் மற்றும் தளை பற்றிய ஓர் ஆய்வு)

    ஆய்வு அறிமுகம்

    மரபுக்கவிதை, புதுக்கவிதை எனத் தமிழ்க் கவிதைகள் இரு வகைபாட்டுக்குள் அடங்கலாம். பொதுவாக யாப்பிலக்கண அடிப்படையில் எழுதப்படும் கவிதைகளை மரபுக்கவிதைகள் என்பது பெருவழக்கு. உண்மையில் ‘மரபுக்கவிதை’ என்னும் சொல்லுக்கான பொருளடர்த்தி இன்னும் ஆழமாயினும் ‘யாப்பில்லாதவையெல்லாம்’ புதுக்கவிதையாகக் கொள்ளப்படுதலின் ‘யாப்பு உள்ளவையெல்லாம்’ மரபுக்கவிதை எனக் கருதப்பட்டிருக்கலாம். இரண்டிலும் ‘கவிதை’ என்பது தனி., எழுத்து மரபு, சொல் மரபு, பொருள் மரபு, கூற்று மரபு, வழக்கு மரபு என மரபு என்பது பல பரிமாணங்களையும் உடையது. இந்த அடிப்படையில் அமைந்த கவிதைகள் மிகச் சிலவே. யாப்பமை கவிதைகளுக்கான வடிவக் கோட்பாடு ‘யாப்பிலக்கணம்’ என்ற பொருண்மையில் அமைந்துள்ளது. இந்த யாப்பு, செய்யுள் உறுப்புக்களைத் தமது உள்ளடக்கமாகக் கொண்டது. அவ்வுள்ளடக்கம் தொல்காப்பியச் செய்யுளியலில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தாலும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் என்னும் எட்டு உறுப்புக்களைக் கொண்டது என்பது யாப்பருங்கலக்காரிகை என்னும் யாப்பிலக்கண நூலின் கருத்து. ‘எழுத்து, அசை, சீர், பந்தம், அடி, தொடை, பா, இனம் கூறுவன்’ என்பது காரிகை.  இவ்வெட்டு உறுப்புக்களுள் ‘தளை’ என்னும் உறுப்புப் பற்றிய ஓர் ஆய்வாக இந்தக் கட்டுரை அமைகிறது. ‘யாப்பருங்கலக் காரிகை’ என்னும் நூல், அதற்குக் குணசாகரர் என்னும் சான்றோர் எழுதிய உரை ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது.

    கட்டுரைத் தலைப்பு

    ‘தண்சீர் தனதொன்றின் தன் தளையாம்’ என்னுந் தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது

    ஆய்வுக் கருதுகோள்

    தமிழ் யாப்பியல் மரபில் அமைந்த எழுவகைத் தளைகளுக்கான பெயர் மற்றும் பொருளமைதியில் (‘நின்ற சீருக்கே தளை’ என்னும் கருத்தமைவில்) ஒத்திசைவு இருக்கிறதா? என்பதையே இக்கட்டுரை தனக்கான கருதுகோளாகக் கொள்கிறது. சீர் பற்றிய ஆய்வினையும் இணைத்து முன்னெடுக்கிறது.

    ஆய்வு நெறி

    இவ்வாய்வு இலக்கண வரலாற்றியல் அணுகுமுறையில் விளக்கவியல் திறனாய்வு முறையை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.

    முதன்மை மற்றும் துணைமைச் சான்றாதாரம்

    யாப்பியல் மரபு மற்றும் இலக்கணம் பற்றிய நூல்கள் பலவாயினும் அமிதசாகரர் எழுதிய ‘யாப்பருங்கலக்காரிகை’ என்னும் நூலையே தனக்கு அடிப்படையாகக் கொள்கிறது.

    முதனிலைச் சான்று

    அந்நூலில் அமைந்துள்ள,

    “ஈரசை நாற்சீர் அகவற்குரிய! வெண்பாவினமாம்
    நேரசையால் இற்ற மூவசைச்சீர்! நிரையால் இறுப
    வாரசை மென் முலை மாதே! வகுத்த வஞ்சிக்குரிச்சீர்!
    ஓரசையே நின்றும் சீராம்! பொதுவொரு நாலசையே!”

    “தேமா புளிமா கருவிளம் கூவிளம் சீர் அகவற்கு
    ஆம்! ஆங்கு கடை காய் அடையின் வெண்பாவிற்கு! அந்தம் கனியா
    வாமாண் கலையல்குல் மாதே! வகுத்த வஞ்சிக்குரிச்சீர்!
    நாமாண்பு உரைத்த அசைச்சீர்க்கு உதாரணம் நாள்மலரே!”

    “‘தண்சீர் தனதொன்றின் தன் தளையாம்’ தணவாத வஞ்சி
    வண்சீர் விகற்பமும் வஞ்சிக்குரித்து வல்லோர் வகுத்த
    வெண்சீர் விகற்பம் கலித்தளையாய்விடும்! வெண்டளையாம்
    ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும் ஒண்ணுதலே!”

    என்னும் மூன்று காரிகைகளை மட்டும் தனக்கான முதனிலைச் சான்றுகளாகக் கொண்டு அமைகிறது.

    ஆய்வுத் தேவை

    தமிழ் யாப்பியல் மரபில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய இலக்கணக் கூறுகள் பல.  அவற்றுள் தற்கால மரபுக்கவிதைகளில் அமைந்திருப்பதாகச் சொல்லப்படும் தளைமயக்கமும் ஒன்று. அதனைக் களைய முயல்வதையே இவ்வாய்வு தனது நோக்கமாகக் கொள்கிறது.

    ஆய்வுப் பயன்

    தளையைப் பொருத்தவரையில் விதிவிலக்குகளை அடிப்படையாகக் கொண்டே தற்கால யாப்பியல் கவிதைகள் எழுதப்படுகின்றன என்னும் உண்மையைப் படைப்பாளரும் படிப்பாளரும் உணரச் செய்வதையே இக்கட்டுரை தனது பயனாகக் கொள்கிறது.

    தளை வந்த வழி

    ‘நின்ற சீருக்குத்தான் தளை’ என்பது பலருடைய கருத்தாக நிலவுகிறது. அதாவது தளைக்குப் பெயரிடுகிறபோது நின்ற சீரின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்பதாம். நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் (அது எதுவாயினும்) முதலசையும் ஒன்றுவதும் ஒன்றாததுமே தளையின் தோற்றக் காரணம். இது பொதுவான கருத்து. இந்த அடிப்படையில்,

    1. ஈரசைச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, ஒன்றாதது.
    2. நேரீற்று மூவசைச்சீர்கள் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, ஒன்றாதது.
    3. நிரையீற்று மூவசைச்சீர்கள் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, ஒன்றாதது.

    எனத் தளை எழுவகைப்படும். நேர் ஒன்று ஆசிரியத்தளை, நிரை ஒன்று ஆசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்னும் அதன் விரிவை அடுத்த பத்தியில் காணலாம்.

    தளைப் பெயர்கள் ஒரு குறிப்பு

    தளைகளுக்கான பெயர்களையும் அவை உருவாகும் முறையினையும் அவற்றின் பெயர்களில் நிலவும் மாறுபாடு அல்லது முரண்பாடுகளையும் ஆராய்வதாக இந்தப் பத்தி அமைகிறது.

    1. நேரொன்று ஆசிரியத்தளை: ஈரசைச்சீர்கள் நான்கனுள் தேமா, புளிமா என்னும் வாய்பாட்டில் அமையும் (நேர் ஈற்று ஈரசைச்சீர்கள்) சீர்கள் நிற்க, வரும் சீர் முதலசை நேரசையாக இருந்தால் (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) அது நேர் ஒன்று ஆசிரியத்தளை எனப்படும்.
    1. நிரையொன்று ஆசிரியத்தளை: ஈரசைச்சீர்கள் நான்கனுள் கூவிளம், கருவிளம் என்னும் வாய்பாட்டில் அமையும் (நிரையீற்று ஈரசைச் சீர்கள்) சீர்கள் நிற்க வரும் சீர் முதலசை நிரையசையாக இருந்தால் (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) அது நிரை  ஒன்று ஆசிரியத்தளை எனப்படும்.
    1. இயற்சீர் வெண்டளை: ஈரசைச்சீர்கள் நான்கனுள் தேமா, புளிமா நின்று வரும் சீர் முதலசையோடு (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) ஒன்றாததும் ஈரசைச் சீர்கள் நான்கனுள் கூவிளம், கருவிளம் நின்று வரும் சீர் முதலசையோடு (வரும் சீர் எதுவாகவும் அமையலாம்) ஒன்றாததும் இயற்சீர் வெண்டளை எனப்படும்.
    1. வெண்சீர் வெண்டளை: நேரீற்று மூவசைச்சீர்கள் பெரும்பாலும் வெண்பாவிற்குள் பயின்று வருவதால் அவை வெண்சீர்கள் என அழைக்கப்படும். அச்சீர்கள் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாகக் கருதப்படும்.
    1. கலித்தளை: மேற்சொன்ன நேரீற்று மூவசைச்சீர்கள் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றாதது கலித்தளையாகக் கருதப்படும்.
    1. ஒன்றிய வஞ்சித்தளை: நிரையீற்று மூவசைச்சீர்களாகிய (தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி) பெரும்பாலும் வஞ்சிப்பாக்களில் வருவதால் இவை வஞ்சியுரிச்சீர் எனப்படும். அச்சீர்கள் நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றினால் அது ஒன்றிய வஞ்சித்தளை என வழங்கப்படும்.
    1. ஒன்றாத வஞ்சித்தளை: மேற்சொன்ன நிரையீற்று மூவசைச்சீர்களாகிய (தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி) நின்று வரும் சீர் (அது எந்தச் சீராகவும் அமையலாம்) முதலசையோடு ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளை எனப்படும்.

    பெயர்ச்சிக்கல் – ஒரு பார்வை

    எழுவகைத் தளைகளையும் (தற்காலத்தில் பயன்படுத்துகிற முறைமையை ஏற்றுக் கொண்ட அடிப்படையில்) அவற்றிற்கான பெயர்களை ஆராய்ந்தால் தளைப்பெயர்களில் ஒரு ஒருங்கிணைப்பு அல்லது ஒத்திசைவு  காணப்படுவதாகத் தெரியவில்லை. இதனைப் பின்வரும் பதிவுகளால் உணரமுடியும்.

    1. நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றுவதற்குப் பெயரிட வேண்டுமானால் அதில் ஒரு ஒழுங்கமைவு (UNIFORMITY) இருத்தல் வேண்டும். ஆனால் அவ்வாறு இருக்கிறதா என்றால் உறுதியாக இல்லை. சான்றாக இயற்சீரின் ஈற்றசை நேரசையாக இருந்து வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ‘நேர் ஒன்று ஆசிரியத்தளை.’ இதுபோல இயற்சீரின் ஈற்றசை நிரையசையாக இருந்து வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது நிரையொன்று ஆசிரியத்தளை. இதே நெறிதான் வஞ்சித்தளைக்கும் பின்பற்றப்படுகிறது. அங்கே நிரையீற்று மூவசைச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளை. ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளை. அதாவது ஈரசைச்சீர்கள் நின்று ஒன்றுவதும் கனிச்சீர்கள் நின்று ஒன்றுவதும் ஒன்றாததும் நின்றசீரின் பெயர்களையே பெறுகின்றன. (நேர் ஒன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை)
    1. இந்த நெறி இயற்சீருக்கும் நேரீற்று மூவசைச்சீருக்கும் பின்பற்றப்படவில்லை. இயற்சீர் நின்று, வரும் சீர் முதலசையோடு ஒன்றாவிட்டால் இயற்சீர் வெண்டளை என்று அழைக்கப்படுகிறது. நேரீற்று மூவசைச்சீர் அதாவது காய்ச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றினால் ‘வெண்சீர் வெண்டளை’ எனப் புதுநாமம் கொடுப்பது ஏன் என்று புரியவில்லை. சீர் வெண்சீராக இருப்பதால் ‘நேர் ஒன்று வெண்டளை’ என்றுதானே பெயர் பெற்றிருக்க வேண்டும்? ‘நேர் ஒன்று ஆசிரியத்தளை’ என்றால் ‘நேர் ஒன்று வெண்டளை’ என்பதுதானே பொருந்தும்?
    1. ‘வெண்பாவிற்கான சிறப்புச்சீர் வெண்சீராகிய காய்ச்சீர்கள். எனவேதான் அது வெண்சீர் வெண்டளை ஆயிற்று’ எனச் சிலர் கூறலாம். வாதத்திற்காக அதனை ஏற்றுக் கொண்டால் காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாத தளைகளை ஒன்றாத வெண்டளை என்னாது ‘கலித்தளை’ என்பானேன்? கலித்தளை என்னும் சொல் வருகின்ற காலம் வரை ‘கலி’ என்ற சொல்லையே யாப்பு அறியவில்லையே? இலக்கிய நயத்தோடு கூறவேண்டுமானால் வெண்சீருக்குப் பிறந்த மாற்றுத் திறனாளியா கலித்தளை?
    1. இனி ஒன்றாததை எடுத்துக்கொண்டால் ஈரசைச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது நேர் ஒன்றாத ஆசிரியத்தளை என்றுதான் பெயர் பெற்றிருக்க வேண்டும். மாமுன் நிரையும் விளம் முன் நேரும் இத்தகைய பெயர் பெறாது ‘இயற்சீர் வெண்டளை’ என்று பெயர் பெறுவது ஏன்? வெண்சீருக்கு உரியதுதான் வெண்டளை என்றால் இயற்சீர் முரணுக்கும் வெண்டளை என்பது எப்படிப் பெயராக அமைய முடியும்?
    1. இதனால் தளைப்பெயர்களில் ஆசிரியத்தளையிலும் வஞ்சித்தளையிலும் ஒரு நெறியும் வெண்டளையில் வேறொரு நெறியும் பின்பற்றப்பட்டுள்ளதை அறியலாம்.

    வெண்டளை விடைகாண முடியாத சிக்கல் 

    1. ஒன்றுவதும் வெண்டளை –ஒன்றாததும் வெண்டளையா? இது ஒரு நுட்பமான வினா. அதாவது வெண்டளை என்பது வெண்பாவிற்கு உரியது. இயற்சீர்களின் ஈற்றசை முரணும் வெண்பாவிற்குள் வர அனுமதி உண்டென்பதால் அவையும் வெண்டளை என்றே அழைக்கப்படுகின்றன என்பர். ஆனால் சிக்கல் என்னவென்றால் காய்ச்சீரின் ஈற்றசையோடு வருஞ்சீர் முதலசை ஒன்றுவதற்கும் ‘வெண்டளை’ என்று பெயர் வைத்து, இயற்சீரின் ஈற்றசையோடு வருஞ்சீர் முதலசை ஒன்றாததற்கும் ‘வெண்டளை’ என்று பெயர் வைத்திருப்பது சிந்திக்க வைக்கிறது. ஒன்றுவதும் வெண்டளை? ஒன்றாததும் வெண்டளையா?
    2. எழு தளைகளில் மற்றவைகளின் முன்னொட்டுக்கள் சீர்களின் பெயர்ப்பகுதியைத் தாங்கி நிற்க (ஆசிரியத்தளை, வெண்டளை, வஞ்சித்தளை) ‘கலித்தளை’ என்பது அவ்வாறு அமையவில்லை என்பதை அறியலாம். அதாவது ‘கலிச்சீர்’ என்று ஒன்று இல்லாமலேயே  தளை மட்டும் அப்பெயரால் வழங்கப்படுகிறது. அதாவது கலிச்சீர் இல்லை ஆனால் கலித்தளை இருக்கிறது! எப்படி?

    சீர்கள் மற்றும் தளைகளின் திருநாமங்கள்

    எழுவகைத் தளைகளைப் பற்றிய மேற்படி காரிகையையும் அதற்கு முன்பாக அமைந்துள்ள சீர் பற்றிய ‘தண்ணிழல் தண்பூ தந்து உறழ்ந்தால் எண்ணிரு நாலசைச்சீர் வந்து அருகும்’ என்னும் காரிகை உட்பட பிற காரிகைகளையும் அவற்றிற்குக் குணசாகரர் எழுதிய உரைப்பகுதியையும் உற்றுநோக்கினால் பின்வரும் சில உண்மைகள் புலப்படுகின்றன.

    1. நேரீற்று ஈரசைச்சீர் என்றும் நேரீற்று மூவசைச்சீர் என்றும் நிரையீற்று ஈரசைச்சீர் என்றும் நிரையீற்று மூவசைச்சீர் என்றும் சீர்கள், அவற்றின் ஈற்றசை கொண்டு பெயர் பெற்றிருக்கின்றன.
    2. அகவற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வெண்பா உரிச்சீர், வஞ்சி உரிச்சீர் எனப் பெரும்பான்மை இடம்பெறும் பாக்களின் அடிப்படையிலும் பெயர் பெற்றிருக்கின்றன.
    3. மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர், பூச்சீர், நிழற்சீர் என வாய்பாடுகளின் அடிப்படையிலும் பெயர்பெற்றிருக்கின்றன.
    4. தளைகளைப் பொருத்தவரையில் நேர் ஒன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, ஒன்றிய வஞ்சித்தளை என்னும் நேர்முக இணைப்பில் பெயர் பெற்றிருக்கின்றன.
    5. ஒன்றிய ஆசிரியத்தளை, ஒன்றிய வஞ்சித்தளை என்னும் பெயர்கள் வழங்கியிருந்த வேளையிலேயே அவ்வாறு ஒன்றும் மற்றொரு தளைக்கு வெண்சீர் வெண்டளை என்னும் திருநாமமும் வைக்கப்பெற்றிருக்கிறது. முன்னவற்றோடு ஒப்புமையாக்கம் என்ற வகையில் அமைத்திருந்தால் இவை ‘ஒன்றிய காய்த்தளை’ அல்லது ‘ஒன்றிய வெண்பாத் தளை’ என்றல்லவா பெயர் பெற்றிருக்க வேண்டும்?
    6. ஒன்றாத வஞ்சித்தளை என்கிறார்கள். ஆனால் காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசை ஒன்றாததை ஒன்றாத காய்த்தளை அல்லது ஒன்றாத வெண்டளை என்னாது ‘கலித்தளை’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். (இதற்குச் சில யாப்பியல் மேதைகள் ‘கலித்து’ வருவதால் கலித்தளை எனத் தம் புலமை மீதூர பொருளுரைத்து மகிழ்வர். வெண்பா உரிச்சீரின் முரண்கள் கலிப்பாவிற்குள் பெரும்பான்மையும் வருவதால் அது கலித்தளை அதாவது கலிப்பாவிற்குரிய தளை என்பது அடிப்படை அறிவு)
    7. அதுபோலவே ஒன்றாத ஆசிரியத் தளைகளை ஒன்றாத ஆசிரியத்தளைகள் என்னாது ‘இயற்சீர் வெண்டளை’ என்கிறார்கள்.

    எனவே சீர், தளை இவற்றின் பெயர்களைப் பற்றிய மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் சில ஆய்வு உண்மைகளை நிரல்படுத்த  முடியும்.

    1. சீர்களுக்குப் பெயர் சூட்டுவதில் அசைகளின் எண்ணிக்கை, வாய்பாடுகள், அவை இடம்பெறும் பாடல்களின் பெயர்கள் ஆகியவை கருத்திற் கொள்ளப்பட்டுள்ளன.
    2. தளைகளுக்குப் பெயர் வைப்பதில் ஒவ்வொரு தொகுப்புச் சீர்களுக்கும் ஒவ்வொரு நெறிமுறை பின்பற்றப்பட்டுள்ளது. ஓர் தெளிவான ஒழுங்கமைதி இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றுவதற்கும் ஒன்றாததற்குமான நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட குறியீட்டால் குறிக்க இயலவில்லை.

    எந்தச் சீரும் வரலாமா? இந்தச் சீர்தான் வரவேண்டுமா?

    பொதுவாகப் பாக்களில் தளைவரம்பு பின்பற்றப்படுவதில்லை. அங்கே சீர்களும் அடி வரையறையுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. காரிகைக்குப் பின்னாலே மட்டுமன்று திருக்குறள் மற்றும் பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலியவற்றில் காணப்படும் வெண்பாக்களில் கூட இயற்சீர் வெண்டளை அல்லது வெண்சீர் வெண்டளை என்பது நின்ற சீருக்கு மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது. அதாவது நின்ற சீர் ஆசிரிய உரிச்சீராக இருந்து வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது இயற்சீர் வெண்டளை எனப்பட்டது. இந்தச் சூழலில் வரும் சீர் ஆசிரிய உரிச்சீராக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆய்வின் உயிர்நாடியே இதுதான். நின்ற சீரும் வருஞ்சீரும் ஒரே வகைச் சீராக இருந்து அவற்றின் ஈற்றசையும் முதலசையும் ஒன்ற வேண்டும் அல்லது முரண்பட வேண்டும். இதனைத்தான் காரிகை உரையாசிரியர் குணசாகரர் தமது உரையில் விளக்குகிறார்.

    நேரொன்று ஆசிரியத்தளை

    ‘வந்தான் போனான்’ என்பன தேமா வாய்பாட்டில் அமைந்த ஈரசைச்சீர்கள்.  நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றுகிறது. ஒரே சீர் ஒன்றுகிறது. எனவே இதுதான் நேர் ஒன்று ஆசிரியத்தளை. இவ்வாறின்றி ‘வந்தான் போவானா?’ என்றெழுதி இதுவும் நேர் ஒன்று ஆசிரியத்தளை என்றால், நின்ற சீர் ஒன்றாகவும் வரும் சீர் பிறிதொன்றாக அதாவது காய்ச்சீராக அமைந்திருப்பதும் காண்க.  இவ்வாறு அமைவது பற்றிக் குணசாகரர் எழுதுகிறார்.

    “ஆசிரிய உரிச்சீர் நின்று, தன் வரும் சீர் முதலசையோடு நேராய் ஒன்றுவது நேரொன்று ஆசிரியத்தளை”. “தணவாத என்று மிகுத்துச் சொல்லியவதனால் தன்சீர் நின்று பிறிதாகி வரும் சீர் முதலசையோடு ஒன்றுவதும் தன்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    (இந்த விளக்கத்தை நேரொன்று ஆசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை ஆகிய அனைத்திற்குமாகப் பொருத்திக் கொள்ளவேண்டும்)

    நிரையொன்று ஆசிரியத்தளை

    ‘கனிதரு மரமென’ என்பன கருவிளம் வாய்பாட்டில் அமைந்த ஈரசைச்சீர்கள்.  நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றுகிறது. ஒரே தன்மையான சீர் ஒன்றுகிறது. எனவே இதுதான் நிரையொன்று ஆசிரியத்தளை. இவ்வாறின்றிக் ‘கனிதரு புளியமரம்’  என்றெழுதி இதுவும் நிரையொன்று ஆசிரியத்தளை என்றால் நின்ற சீர் ஒன்றாக இருக்க வரும் சீர் பிறிதொன்றாக அதாவது காய்ச்சீராக அமைந்திருப்பது காண்க.  இவ்வாறு அமைவது பற்றிக் குணசாகரர் எழுதுகிறார்.

    “ஆசிரிய உரிச்சீர் நின்று, தன் வரும் சீர் முதலசையோடு நிரையாய் ஒன்றுவது நிரையொன்று ஆசிரியத்தளை” “தணவாத என்று மிகுத்துச் சொல்லியவதனால் தன்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றுவதும் தன்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    இயற்சீர் வெண்டளை

    ‘அகர முதல’ என்பதில் இரண்டு சீர்களும் இயற்சீர்கள். நின்ற சீரும் இயற்சீர். வரும் சீரும் இயற்சீர். நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றாததால் இது இயற்சீர் வெண்டளை. இதுதான் இயற்சீர் வெண்டளை என்பது காரிகை கருத்து. ஆனால் ‘முதல எழுத்தெல்லாம்’ என்பதும் இயற்சீர் வெண்டளை எனக் கொள்ளப்படுகிறது. இதில் என்ன சிக்கல் என்றால் நின்ற சீர் இயற்சீர். வரும் சீரோ புளிமாங்காய் என்னும் காய்ச்சீர்! இவ்வாறு அமைவது பற்றி, ‘ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும் வெண்டளையாம்’ என்னும் தொடருக்குத் தாம் எழுதும் உரைப்பகுதியில் ,

    “ஒண்சீர்’ என்று சிறப்பித்தவதனால் ஆசிரிய உரிச்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றாததும்  இயற்சீர் வெண்டளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    என்று அது சிறப்பற்றது என்று குறித்திருப்பதைக் காணலாம்.

    வெண்சீர் வெண்டளை

    ‘யாதானும் நாடாமால்’ என்பது தேமாங்காய், தேமாங்காய் என்னும் வாய்பாட்டில் அமைவது. நின்ற சீரும் வரும் சீரும் வெண்பா உரிச்சீர்கள். ஒரே வகை. இவ்வாறு அமைவதுதான் வெண்சீர் வெண்டளை. ஆனால் ‘வையைக்கோன் கண்டான்’ எனத் தேமாங்காய் நின்று தேமாவின் முதலசையோடு ஒன்றுவதையும் வெண்சீர் வெண்டளை என்பது நடப்பியல். இது தவறு என்பது கருத்தன்று. இவ்வாறு அமைவது சிறப்பன்று என்றுதான் குணசாகரர் கூறுகிறார்.  தன்சீர் தனது ஒன்றின் தன் தளையாம் என்பது இதுதான். இது அமிதசாகரர் கருத்தாகக் குணசாகரர் கருதுவது. தன்னுடைய சீர் நின்று தன்னுடைய சீரோடு இணைவதே தனது தளையாகும் என்பது உரை.

    “வெண்பா உரிச்சீர் நின்று தன் வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது  வெண்டளையாம்”

    என்று உரையெழுதுகிறார் குணசாகரர். தொடர்ந்துத்,

    “தணவாத’ என்று மிகுத்துச் சொல்லியவதனால் தன்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றுவதும் தன்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    என எழுதுகிறார். மிகத் தெளிவாக அவர் எழுதுகிறார் அது சிறப்பற்றது என்று.

    கலித்தளை

    தளைகளிலேயே மிகவும் சிக்கலான ஆய்வுக்குரியது. மற்ற தளைகளுக்குச் சீர்கள் உண்டு. இந்தக் கலித்தளைக்குச் சீர்கள் இல்லை. அதாவது ஆசிரிய உரிச்சீர், வெண்பா உரிச்சீர், வஞ்சியுரிச்சீர் என்றெல்லாம் பாடலுக்கான சீர்கள் உண்டு. ஆனால் கலிப்பாவுக்காகத் தனித்த சீர்கள் இல்லாதபோதும் ‘கலித்தளை’ என்பது ஒன்று உண்டு. இது வியப்பிற்கும் ஆய்விற்கும் உரியது, வெண்பா உரிச்சீராகிய காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளை எனப்படும். வெண்பா உரிச்சீர் கலித்தளைக்குக் காரணமாகுமா என்பது பற்றியே ஓர் ஆய்வு தேவைப்படும் சூழலில் மற்ற தளைகளைப் போலவே வரும் சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளை என்பது பொருந்தாது. நின்ற சீர் வெண்பா உரிச்சீராக இருக்க வரும் சீரும் வெண்பா உரிச்சீராகவே இருக்க வேண்டும். சான்றாக  ‘எல்லாரும் வருவாரோ? தேமாங்காய் நின்று புளிமாங்காய் வர, முதலசை ஒன்றாததுவே கலித்தளை.  இருப்பினும்,

    “வல்லோர் வகுத்த என்று மிகுத்துச் சொல்லியவதனால் வெண்பா உரிச்சீர் நின்று பிறிதாகி வரும் வரும் சீர் முதலோடு ஒன்றாததும் கலித்தளையே சிறப்பின்று ஆயினும் எனக் கொள்க”

    என்று குணசாகரர் தரும் விளக்கத்தால் தற்போது பயன்பட்டுவரும் கலித்தளை என்பது உண்மையான கலித்தளைக்கான விதிவிலக்கே என்பது பெறப்படும்.

    ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும்

    தளைகளிலேயே மிகத் தெளிவாக அமைந்திருக்கும் இரண்டு தளைகள் இவை. நின்ற சீர் வஞ்சியுரிச்சீராக இருந்து வரும் சீரும் வஞ்சியுரிச்சீராக அமைய அவற்றுள் ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளை என்ற அளவில் குழப்பமில்லாத ஒரு நிலை இத்தளைகளுக்கு உண்டு. அதாவது ‘கனிச்சீர்’ நின்று வரும் சீர் ‘புளிமாங்கனி, கருவிளங்கனி’ என ஒன்றினால் அது ஒன்றிய வஞ்சித்தளை. கனிச்சீர் நின்று வரும் சீர் தேமாங்கனி, புளிமாங்கனி என ஒன்றாவிடின் அது ஒன்றாத வஞ்சித்தளை. இந்த உண்மையைத் தெளிவுபடுத்துவதற்காகவே, ஒன்றிய வஞ்சித்தளைக்கு, ‘வெண்சாமரை புடைபெயர்தர’ எனத் ‘தேமாங்கனி மற்றும் கருவிளங்கனி’ என்னும் வாய்பாடுகள் அடங்கிய எடுத்துக்காட்டுக்களை அமிதசாகரர் தந்திருக்கிறார்.

    ‘ஒன்றாத வஞ்சித்தளைக்குச் ‘செந்தாமரை நாண்மலர்மிசை’ எனக் கூவிளங்கனி மற்றும் கூவிளங்கனி என்னும் வாய்பாடு அடங்கிய எடுத்துக்காட்டுக்களை அமிதசாகரர் தந்திருக்கிறார்.

    இந்த உதாரண முதல் நினைப்புக்காரிகை ஆசிரியர் அமிதசாகரருடையது. அதனால்தான் அவருடைய கருத்தினை நன்கு உள்வாங்கிக் கொண்டு காரிகைக்கு உரை காண்கிறார் குணசாகரர்.

    இத்தளைகளை இவ்வாறின்றி நின்ற சீர் மட்டும் வஞ்சியுரிச்சீராக இருந்து வரும் சீர் எதுவாயினும் அவற்றின் முதலசையோடு ஒன்றுவதும் ஒன்றாததும் அவற்றிற்கான பெயர்களால் அழைக்கப்பெறலாம் என்னும் விதிவிலக்கை,

    “வண்சீர் என்று சிறப்பித்தவதனால் வஞ்சி உரிச்சீர் நின்று பிறிதாகி வரும் சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் வஞ்சித்தளையே சிறப்பின்றாயினும் எனக் கொள்க”

    என்று உரைழுதி விளக்குகிறார்.

    ஆய்வில் கண்டறியப்பட்ட மெய்ம்மைகள்

    மேலே பல பத்திகளில் வலிமையான தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ஆய்விலிருந்து பெறப்படும் உண்மைகள் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.

    1. ஈரசைச்சீர் நான்கு, நேரீற்று மூவசைச்சீர் நான்கு, நிரையீற்று மூவசைச்சீர் நான்கு என்னும் பன்னிரண்டு சீர்களுக்குப பெயர் சூட்டுவதில் அவ்வளவாக இசைவு இல்லை.
    1. அசைகளின் எண்ணிக்கை, ஈற்றசைகளின் இயல்பு, வாய்பாடுகள், சீர்கள் இடம் பெறும் பாடல்கள் என்னும் இவற்றின் அடிப்படையில் பலவாறு அமைந்திருப்பது சிந்தனைக்குரியது. மேலும் இவ்வெல்லாச் சீர்களும் எல்லாப் பாக்களுள்ளும் மயங்கி வருவதால் பெயரிடுவதன் நோக்கம் முழுமையான வெற்றியடைந்தது எனக் கருதுவதற்கில்லை.
    1. தளைகளைப் பொருத்தவரையில் நின்ற சீரும் வரும் சீரும் ஒரே தன்மையனவாக இருந்தாலேயொழிய தளைகளின்  பெயர்கள் பொருத்தமற்றவையாகிவிடும். இதனால் தற்காலத்தில் கவிஞர்களால் கருத்திற் கொள்ளப்படும் தளைகள் ‘சிறப்பில’ என்னும் ஒரு தொடருக்குள் அடங்கிவிடுகின்றன.
    1. யாப்பறி புலவர்கள் தாங்கள் பயன்படுத்திவரும் தளை விகற்பங்கள் எல்லாம் விதிவிலக்கே என்பதைப் புரிந்து கொள்வது இக்கட்டுரையின் பயனாகக் கருதப்படலாம்.

    நிறைவுரை

    தரவுகளிலிருந்து கருதுகோளை உருவாக்குவதும், அதனை உறுதியாக்கும் மேற்கோள்களின் அடிப்படையில் நிகழ்த்தப்படுவதும் ஒரு தற்காலிகத் தீர்வினை எட்டுவதுமே ஆய்வு என்பதாகக் கருதப்படும். தரவுகளையே சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருதுகோளை உருவாக்கிக் கொள்வது பெரிதும் குழப்பத்திற்கும் சிக்கலுக்கும் வழிவகுக்கும். இந்தக் கட்டுரை தரவுகளைச் சரியான நெறியில் புரிய வைக்க முயலுகிறது. சிக்கலை அடையாளம் காண்பதே ஆய்வின் முதற்படி. தொடர்ந்து அச்சிக்கலின் தன்மையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்விரண்டையும் இவ்வாய்வுக்கட்டுரை தன்னால் இயன்ற அளவுக்கு முன்னெடுத்திருக்கிறது.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘தன்சீர் தனதொன்றின் தன் தளையாம்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் பரிந்துரை!

    இடையீடற்ற கற்றல் இயல்பாகவும் எடுத்தியம்பும் ஆற்றல் முயற்சியினாலும் அமைந்த ஆய்வாளர்களுக்கு  ஆய்வுக்கான கருதுகோள் எளிதாகக் கிட்டிவிடும். அத்தகைய சிறப்புக்குரியது இக்கட்டுரை.

    காரிகையாசிரியர் அமிதசாகரர் கூறும் தளை பற்றிய இலக்கணம் குணசாகரர் உரையால் விரிவு பெற்று நிறைவடைகிறது. நூலாசிரியர் விதிகளைக் கூறுகிறார். உரையாசிரியர் விதப்புக்கிளவிகளையும் அடைசொற்களையும் கொண்டு சிறப்பற்ற ஆனால் நடைமுறையில் உள்ள விதிவிலக்குகளைக் கூறுகிறார். இதனையே இந்தக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

    ‘சிறப்பில’ என்னும் ஒற்றைச் சொல்லால் அத்தனைப் படைப்புகளையும் மதிப்பீடு செய்துவிடுகிறார் குணசாகரர். அந்த மதிப்பீட்டினை மிக வலிமையான, தெளிவான தரவுகள் மூலம் ஆய்வாளர் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

    எழுவகைத் தளை பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரையில் சீர்களின் திருநாமம் பற்றியும் ஆராய்ந்திருப்பது துணைவலி சேர்க்கும் ஆய்வு நுண்ணியமாகும்.

    தளை வரையறை என்பது நின்ற சீருக்கும் வரும் சீரின் முதலசைக்குமான ஒட்டுறவன்று, ஒரே  தன்மையனவாக அமைந்த இரண்டு முழுமையான சீர்களுக்கிடையே நிலவும் நல்லுறவு மற்றும் வல்லுறவு என்பதைக் காரிகை மற்றும் உரையாசிரியரின் விளக்கம் ஆகிய அகச்சான்றுகளைக் கொண்டு நிறுவியிருக்கும் இந்தக் கட்டுரையில் ஆய்வு நெறியை முழுமையாகப் பின்பற்றியிருப்பது போற்றுதற்குரிது.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 28

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 28

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    அன்பலையில் மிதக்கும் அழகிய  உவமங்கள்

    ஓர் இலக்கியம் அல்லது அவ்விலக்கியத்துள் அமைந்துள்ள கவிதை படைக்கப்படுவதற்குப்  பல காரணங்கள் அமைந்திருப்பதுபோலவே அவை சுவைக்கப்படுவதற்கும் காரணங்ககள் பல. அருணாகிரியாரின் திருப்புகழை யாரும் இலக்கிய நயத்திற்காகப் படிப்பது என்பது இயலாது. ஆனால் வண்ண அமைப்பில் அமைந்திருக்கும் அதன் சந்தக் குழிப்புக்கள் அந்நூலை நோக்கி நம் ஆன்மாவை இழுக்கிறது என்பதில் ஐயமில்லை. அதன் ஈர்ப்பு விசை அதன் வண்ணத்தில் இருக்கிறது. கவிதைச் சுவையுணர்வுக்குக் கற்பனை, உணர்ச்சி, வெளிப்பாட்டு  உத்தி, யாப்பியல் நுட்பம் முதலியன தனியாகவும் கூட்டாகவும் கூடக் காரணிகள் ஆகலாம். பழந்தமிழ் இலக்கியங்கள், அவற்றின் சொற்செறிவு, இயற்கை மற்றும் உலகியல் சார்ந்த உவமங்கள், எளிய ஆசிரியப்பா கட்டுமானம், பெயரடைகள் மற்றும் வினையடைகள் முதலியவற்றால் காலத்தை வென்று நிற்கின்றன. அந்த வகையில் சங்க இலக்கியத்தில் ஒன்றாகிய குறுந்தொகையில் காணப்படும் சில உவமங்கள் ‘அடங்காது நிற்கும் அவற்றின் உவமச் சிறப்பு’ நோக்கி இந்தக் கடடுரையிலும் ஆராயப்படுகின்றன.

    மலரும் முள்ளும்

    ‘முள்ளும் மலரும்’ என்னும் ஒரு திரைப்படத் தலைப்பினைப் பொதுவாக அனைவரும் எண்ணும்மையாகக் கொண்டு அவற்றை இருவேறு பாத்திரங்களின் குறியீடாகக் கொண்டு அமைதியடைந்தனர். கற்பனை வளமுடைய சிலர் ‘கால நேரம் வந்தால் முள் கூட மலரும்’ அதாவது மலர்வதற்கு வாய்ப்பில்லாத முள்ளும் ஒரு காலத்தில் மலரும் என்று (THORN ALSO BLOSSOMS) அத்தலைப்பினைத் சுவைத்து மகிழ்ந்தனர்.  இதனையொத்ததொரு  ஒரு பாடல்.

    “நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே!
    புன்புலத்து மன்ற சிறியிலை நெருஞ்சி
    கட்கின் புதுமலர் முள் பயந்தாங்கு
    இனிய செய்த காதலர்
    இன்னா செய்தல் நோமென் நெஞ்சே” (குறு. 202)

    இப்படி அமைந்திருக்கிறது. அந்தப் பாட்டுப் பன்முக அழகுப் பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டது. மலர் பயந்த செடியில் முள் முளைத்த காட்சியைச் சித்திரிக்கும் பாடல். அருகிருந்து இனிய செய்தவன் தலைவன். கறைபடிந்த புறவொழுக்கம் காரணமாகப் பரத்தையரிடம் சென்று திரும்பித் தோழியிடம் குறைநயந்து நிற்கிறான். தலைவனுக்காகப் பரிந்து பேசுகிறாள் தோழி. தோழியின் வாயிலைத் தலைவி மறுக்கிறாள். பாட்டை இப்படிக் கண்ணழித்தால் தலைவியின் உள்ளம் புரியும். உவமத்தின் சிறப்பு புலப்படும்.

    “இனிய செய்த காதலர், இன்னா செய்தல்
    நோமென் நெஞ்சே! நோமென் நெஞ்சே! நோமென் நெஞ்சே!”

    ‘நெஞ்சு சுடும்’ என்பது இதுதான். மூன்று முறைக்குமேல் சொல் அடுக்கி வராது எனினும் தலைவனின் புறவொழுக்கக் குறைபாட்டின்  விளைவை அவ்வடுக்கு நன்குணர்த்துகிறது. தலைவன் செயலுக்குத்தான் ஓர் உவமத்தைச் சொல்கிறாள் தலைவி.

    “தீயவன் நல்லவன் ஆவது இயல்பு. நல்லவன் தீயவனாவது எப்படி? என் தலைவன் அத்தகையவனாக அல்லவா மாறியிருக்கிறான்?. மிகச்சிறு இலைகொண்ட நெருஞ்சியில் கண் இனிக்க பூப்பூத்தது  முன்னாள். கைவலிக்க முள் விளைந்தது இந்நாள்! அதனை எண்ணுகிற பொழுதெல்லாம் என் நெஞ்சம் வேதனைப்படுகிறதே?”

    என்கிறாள் தலைவி. தன்னால் ஆளப்படுபவனாகவே தலைவன் இருக்க வேண்டும் என்னும் தலைவியின் ஆதங்கம் கண்ணுக்கு இனிய நெருஞ்சிப்பூவின் உவமத்தால் வெளிப்படுவதை அறியலாம்.

    ஏழூர் பொதுவினையும் ஓரூர் உலையும்

    ‘கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு’ என்னும் அழுகணிச் சித்தர் பாடல் வரிகளில் வரும் ‘அடிவயிறு’ என்பதற்குச் சித்தாந்தத்தின் அடிப்படையில்  பலரும் பலவாறு பொருள் சொல்வர். ஆனால் ‘கொல்லன் உலைக்கு’ உரை மாற்றம் இல்லை. இங்கே ‘கொல்லன் உலை’ என்பது நெருப்புக்குவியல். இதனோடு தொடர்புடையதுதான் ‘ஊதுலைக்குருகு’. ‘ஊதுலை’ என்பது உலை. ‘குருகு’ என்பது அதன் மூக்குப் பகுதி. தற்காலத்திலும் கொல்லன் பட்டறையில் ஒருவன் வயிறுபோன்ற பகுதிக்குப் பின்னால் இருந்து இயக்க, அப்பகுதி வழியாக வெப்பத்தோடு கூடிய காற்று, கட்டி நெருப்பைக் கனலாக்கும். மூக்குப் பகுதி வழியாக வரும் காற்றின் தன்மையையும் வேகத்தையும் வெப்பத்தையும் ஏமாற்றத்திற்கும், பிரிவாற்றாமைக்கும் உவமமாக்கியிருக்கிறார்கள் புலவர் பெருமக்கள்.

    “காதலர்ப் பிரிந்த  மாதர் நோதக
    ஊதுலைக்குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி” (சிலம்பு)

    “காதலர்க் கெடுத்த நோயொடு உளங் கனன்று
    ஊதுலைக் குருகின் உயிர்த்தனள்”  (சிலம்பு)

    “காதலர் இறப்பின் கனையெரி பொத்தி
    ஊதுலைக் குருகின் உயிர்தகவு அடங்காது
    இன்னுயிர் ஈவர்” (மணி. 2-43-45)

    என்றெல்லாம் ஆற்றாமைக்கு உவமமாக ஊதுலைக்குருகு பயன்பட்டு வந்துள்ளது. உள்ளுடல் கொதித்து வெப்பத்தோடு வெளியேறும் பெருமூச்சுக்கு ஊதுலைக் குருகின் காற்று உவமம் பொதுவாகத் தலைவனையோ கணவனையோ மகளிர்க்கு உவமமாக்கப்படும் இந்த ஊதுலைக் குருகு என்பது மரபு சார்ந்தது.

    “ஏழ் ஊர்ப்பொதுவினைக்கு ஓரூர் யாத்த
    உலைவாங்கு மிதிதோல் போலத்
    தலைவரம்பறியாது  வருந்தும் என் நெஞ்சே!” (குறு. 172)

    என்பது ஒரு தலைவியின் ஆற்றாமையைச் சித்திரிக்கும் சங்க இலக்கியப் பாடல் பகுதி. இவள் என்ன சொல்கிறாள்? ஒருபடி மேலே செல்கிறாள். உவமத்தின் அடர்த்தியைக் கூடுதலாக்குகிறாள். சாதாரண உலையில் உள்ளூரைச் சார்ந்த அல்லது அதற்குத் தேவையான ஒருசில தளவாடங்கள் உருவாக்கப்படும். எனவே நெருப்பும் அதற்கான ஊதுலையின் அளவும்  வரம்புக்கு உட்பட்டு இருக்கும். ஏழு ஊர்களுக்குத் தேவையான தளவாடங்களை ஒரே ஊரில் உள்ள ஒரே ஊதுலையில் தயாரித்தால் அந்த ஊதுலையின் பரிமாணம் எப்படி இருக்கும்? அந்த ஊதுலையின் குருகிலிருந்த வெப்பக் காற்று எப்படி இருக்கும்? தலைவனைப் பிரிந்த எல்லலையற்ற ஆற்றாமையை இவ்வாறு வெளிப்படுத்துகிறாள் தலைவி. ஊதுலையின் பரிமாணத்தைத் ‘தலைவரம்பற்ற தனது வருத்தத்தின்’ மேல் வைத்துக் காட்டும் நுட்பம் ஓர்க. பின்னாளில் தனிமனிதன் காணும் வாழ்க்கைச் சிக்கலைப் இராமச்சந்திரக் கவிராயர்,

    “ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ,
    அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாக,
    மாவீரம் போகுதென்று விதைகொண்டோட,
    வழியிலே கடன் காரர் மறித்துக் கொள்ள,
    சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற,
    தள்ளவொண்ணா விருந்துவர, சர்ப்பந் தீண்ட,
    கோவேந்தன் உழுதுண்ட கடனைக் கேட்க
    குருக்களோ தட்சணையைக் கொடுஎன் றாரே!”

    எனத் ‘துன்பக் கலம்பகம்’ பாடுதற்குச் சங்க இலக்கியத் தலைவியும் ஒரு வழிகாட்டியாக இருக்கலாமோ?

    விலகினால் சுடும்! நெருங்கினால் குளிரும் நெருப்பு!

    கவிதையில் சொல்லப்படும் கருத்தே கவிதையாகாது. அக்கருத்து சொல்லப்படும் முறையே கவிதையைத் தீர்மானிக்கிறது. இந்த முறைக்கு இலக்கிய உத்தி என்னும் பெயரும் பொருத்தமானதே. தலைவன் அருகிருந்தால் தலைவிக்கு மகிழ்ச்சி. அவன் அவளை விட்டுப் பிரியும் நேர்வுகளில் அவள் வருந்துவாள். இப்பிரிவு களவியலில் ஒரு வகையாகவும் கற்பியலில் ஒருவகையாகவும் அமையும். இருப்பினும் பிரிவுத்துன்பத்தால் வரும் ஆற்றாமையும் அதன் காரணமாக உடலில் தோன்றும் நிறவேறுபாடும் தவிர்க்க முடியாதவையே. கல்லூரி விடுமுறையால் பிரிந்தால் களவியல் பிரிவு. ஆடி மாதத்திற்குத் தாய்வீட்டுக்கு மனைவி சென்றால் கற்பியல் (இல்லறம்) பிரிவு.  அவ்வளவுதான்.

    “நீங்கின் தெரூஉம் குறுகினால் தண் என்னும்
    தீ யாண்டு பெற்றாள் இவள்”

    என்பது வள்ளுவர் கண்ட தலைவன் மயக்கநிலை கூற்று! எதனாலே இதனைத் தலைவனின் மயக்கம் என்கிறோம் எனின் தலைவனின் காமத்தீயால் அவன் தன்னையே சுட்டுக் கொள்கிறான். ஆனால் அத்தீ தலைவியால் வெளிப்படுதலின்  எங்கே பெற்றாள் என்று அவள் மீது வைத்துக் கூறுகிறான். நீங்குவதும் குறுகுவதும் இவன்தானே! இந்த நோய் தலைவனுக்குப் பசப்பு என்றால் தலைவிக்கு இது பசப்பாக மாறும்.

    “விளக்கற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு” (குறள்.1186)

    என்னும் தலைவி கூற்றில் இதனை உணரலாம். விளக்கு முற்றும் அணைந்தால்தான் இருட்டு வரும் என்பதன்று. ‘விளக்கொளி’ குறையத் தொடங்கினாலே இருள் பரவத் தொடங்கும். இருள் ‘விளக்கொளி’ எப்போது குறையும் என்று காத்திருக்கும். அதுபோல முயங்கிய தலைவன் எப்போது விலகத் தொடங்குவான் என்று பசலை நோய் காத்திருக்குமாம். ‘அற்றம்’ என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் ‘மெலிவு’ என்று உரை காண்பதற்கு இதுதான் காரணம்.  இந்தப் பசலை தன்மேனியில் படர்வதற்கு அக்காலத் தலைவி ஓர் உவமம் கூறியிருக்கிறாள். அது எல்லாரும் அறிந்த உவமம். இன்றைக்கும் காணப்படுகிற காட்சி!

    “ஊருண் கேணி உண்டுறை தொக்க
    பாசி யற்றே பசலை? காதலர்
    தொடுவுழித் தொடுவுழி நீங்கி
    விடுவழி விடுவழிப் பரத்த லானே!” (குறு. 399 பரணர்)

    ஊர் மக்கள் நீரெடுத்துப் பயன்படுத்தும் கேணி மக்கள் பயன்படுத்துகிற காலத்தில் தூய்மையாகவும் பயன்படுத்தாது விடுபட்ட காலத்தில் பாசி படர்ந்தும் காணப்படுவது இன்றைக்கும் காணக்கூடியது.  தலைவனோடு கூடியிருக்கும் காலத்துத் தன் மேனியில் படரத் தயங்கிய பசப்பு அவன் பிரிந்த நொடியிலிருந்து பரவுகிறதாம். பசப்பு பாசியான கதை இதுதான். இந்தக் கதையைக் கலித்தொகை தலைவி இன்னும் ஆழமாகச் சொல்கிறாள்.

    “குடிபுறம் காத்தோம்பும் செங்கோலான் வியன்தானை
    விடுவழி விழுவழிச் சென்றாங்கு அவர்
    தொடுவழித் தொடுவழி நீங்கின்றல் பசப்பே”  (கலி. 130)

    மக்களை அன்பால் காத்து ஓம்பும் செங்கோல் மன்னனுடைய பெரிய படைகள் நாலாப் பக்கத்துப் பகைவர் மீதும் ஏவ, அப்பகைவர்கள் ஓடி மறைந்து செத்து ஒழிவதைப்போலப் பிரிந்த என் தலைவன் என்னைத் தொடத் தொட நீங்கியது என்கிறாள். மன்னன் படைகண்டு பகைவர் ஒழிந்தனர். தலைவன் தீண்டுதல் கண்டு பசலை ஒழிந்தது. அணைந்தால் குளிர்ச்சி! பிரிந்தால் கொதிப்பு! விளக்கொளி குறையும் காலம் பார்க்கும் இருட்டு!  நீரெடுத்தால் படராத பாசி எடுக்காவிட்டால் படரும்! படைகண்டு பகை நடுங்கும்! தலைவன் தொடல் அறிந்துப் பசலை நீங்கும்! பிரிவுத்துன்பத்தைத்தான் எப்படியெல்லாம் எத்தனை உவமங்கொண்டு விளக்கியிருக்கிறார்கள் பாருங்கள்?

    திண்கரை பெருமரம் போல

    பயன்படுத்தாத ஊருணியில் படர்ந்த பாசிக்கு ஒப்பானது தலைவனைப் பிரிந்த காலத்துத் தன் மேனியில் படர்ந்த பசலை என்பது ஒரு தலைவியின் இரங்கத்தக்க நிலை. தலைவன் வந்த நிலையில் அவனோடு முயங்கும் முயக்கம் எத்தகையது என்பதற்கும் அதே ஊருணிக் கரை உவமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்துவதால் விலகும் பாசி அங்கே உவமம். தலைவன் அருகிலேயே இருப்பதால் நீர்ப்பிடிப்புக் கரையில் வளர்ந்த திண்மரம் இங்கே உவமம். அந்தப் பாடல் இப்படி அமைந்திருக்கிறது.

    “மெல்லிய லோயே! மெல்லிய லோயே!
    நன்னாள் நீத்த பழிதீர் மாமை
    வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்
    சொல்ல கிற்றா மெல்லிய லோயே!
    சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
    நாள் இடைப்படா நளிநீர் நீத்தத்து
    திண்கரை பெருமரம் போலத்
    தீதில்நிலைமை முயங்குகம் பலவே” (குறு. 168)

    கரை நொய்தாயின் மரத்திற்கு அழிவுண்டாமாகலின் ‘திண்கரை’ என்கிறாள் தலைவி. நீத்தம் என்றால் வெள்ளம். ‘நீர்ப்பிடிப்பான் கரையில் வளர்ந்த உறுதியான மரம்’ என்ற தொடர் தலைவனின் தண்ணளியை உணர்த்தியது. அவன் அன்பென்னும் நீர் சுரக்கும் என்பது கருத்து. இனி ‘நாள் இடைப்படா நளிநீர்’ என்றதனால் இடையிடாது மக்கள் நீரைப் பயன்படுத்துவதுபோலத் தலைவனின் அன்பும் அரவணைப்பும் தொடர்ந்து தனக்குக் கிட்டும் என்பதாம். தலைவன் பிரிந்து சென்ற வருத்தத்திற்கு இரங்காது பழிதூற்றியவரும் இவ்வூரினரேயாதலின் தலைவன் அருகிருக்கும் அதாவது வரைவுமலிந்திருக்கும் காலத்தில் அவர்கள் தலைவிக்குச் ‘சிறியர்’ ஆயினர். தான் தலைவனோடு கொண்ட பேரன்பின் காரணமாக நிலம்பக வேர்பிடித்து நிற்கும் மரத்தைத் தனக்குத் தானே உவமித்துக் கொண்டாள் தலைவி.

    தலைவன் தன்னோடிருக்கும் போது தான் ஒரு திண்மரம் எனச் சொல்லுகிற தலைவியின் கூற்றில் அமைந்துள்ள உவம அடைச்சொற்கள் தலைவியின் உள்ளக் கூறுகளைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளதைக் காணலாம்.

    வேழத்தை மிரட்டிய வெள்ளரவுக் குருளை

    எளிய சிறிய செய்தி. அது மொழியாளுமை கொண்ட படைப்பாளன் ஒருவன் சிந்தனையில் கவிதையாக மலர்கிறபோது சொற்களின் எண்ணிக்கை புறந்தள்ளப்படுகிறது. குறள் வெண்பாவாகிய ஏழு சீர்கள் திருவள்ளுவருக்குப் போதுமானவையாக இருந்தன. சத்திநாதனார் என்னும் சங்கப்புலவருக்குத் தலைமகன் ஒருவனின் காதல் துயரத்தைக் கவிதையாக்கப் பதினைந்து சொற்கள் போதுமானவையாக இருந்திருக்கிறது. இந்தப் பதினைந்து சொற்களில் தலைவியின் புன்னகையால் சிதறடிக்கப்பட்ட ஆண்மை சித்திரிப்புக்கு ஆளாகிறது. காதல் விளையாட்டில் தலைமகன் எவ்வாறு எளியனாகிறான் என்பனவற்றையெல்லாம் இரத்தினச் சுருக்கமாகப் பதிவு செய்திருப்பதை அறியமுடிகிறது.

    “சிறு வெள் அரவின் அவ்வரிக் குருளை
    கான யானை அணங்கி யாங்கு
    இளையள் முளைவாள் எயிற்றள்
    வளையுடைக் கையள் எம அணங்கி யோளே!” (குறு. 119)

    இந்தப் பாடடில் பொருளின்கண் வந்துள்ள அடைகளும் உவமத்தின்கண் வந்துள்ள அடைகளும் பெரிதும் சுவைத்தற்குரியன. முதலில் பாம்புக்குட்டிக்குக் ‘குருளை’ என்னும் பெயர் வழக்கு உண்டு என்பதை அறிதல் வேண்டும். ‘கருநாகம்’ என்பதினின்று பிரித்தற்கு ‘வெள்ளரவு’ என்கிறார். அவ்வரவின் மேல் அழகான வரிகள் இருக்கும். அவள் புன்முறுவலே தன்னைத் தாக்கியது என்பதை ‘முளைவாள் எயிற்றள்’ என்னும் சொல்லால் குறிக்கிறான் தலைவன். முகைமொக்கும் நகை  மொக்கும் ஒன்றல்லவா? போர்க்களத்தில் நண்ணாரும் உட்கும் தலைவனின் பீடு இச்சிறுமுது குறைவியின் புன்னகைக்குச் சீரழிந்தது என்பது கருத்து.

    ‘சிறு வெள்ளரவு’ என்பதற்கேற்ப ‘இளையள் வாள் முளை எயிற்றள்’ என்னும் ஒப்புமை காண்க. தலைவியைத் தழுவிய போது அவன் கண்ணுக்குக் கிட்டியது அவள் கையேயாதலின் கையள் என்றான்.

    பாம்புக் குட்டி யானையை அச்சுறுத்துமா எனின் அது வழக்கியல் சார்ந்த இலக்கியப் பதிவு என்க. “அளைதாழ் அரவும் அரியும் செந்தீயும் அரசும் இளைதாயினும் கொல்லும்” என்னும் அம்பிகாபதிக்கோவை வரி பாம்புக்குட்டியும் அணங்குதற்குரியது என்பதைச் சுட்டுகிறது. இனிக் “குஞ்சரம் கோள் இழைக்கும் பாம்பு” என்னும் திருச்சிற்றம்பலக் கோவை வரி பாம்பு யானையை அணங்கும் என்பதைக் காட்டுகிறது.

    ஒரு நான்கு வரிப் பாடலில் ;காணப்படும் இந்த உவமச் செறிவு என்பது தற்கால மரபுக்கவிதை எழுதுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களின கவனத்தை ஈர்க்குமா?

    நிறைவுரை

    அகவுணர்வுகளை வெளிப்படுத்துகிறபோது குறிப்பாகவே வெளிப்படுத்த வேண்டும் என்பது தமிழ் அகத்திணை மரபு. இந்த மரபை நூறு விழுக்காடு பின்பற்றி அமைந்திருப்பது சங்க இலக்கியம். ஆழமும் நுட்பமும் உடைய அகமனத்து அதிர்வுகளை இயற்கை சார்ந்த உவமங்களாலும் உலகியல் சார்ந்த உவமங்களாலும்  உள்ளங்கவர் முறையில் விளக்கிக் காட்டுவது அதன் தனிச்சிறப்பு. மக்கள் நாளும் பயன்படுத்தும் ஊருணிக்கரையும் அதன் கரைவளர் மரமும் கூட உவமமாகியிருக்கிறது.  திருவள்ளுவர் பேரறிவாளன் திருவிற்கு ஊருணியை உவமமாக்கினார். சத்திநாதனார் அதன் பயன்பாட்டைத் தலைவியின் பசலை நோய்க்கு உவமமாக்கினார். குறைந்த சொற்கள்! எளிய கட்டுமானம்! அழகிய உவமம்! ஆழமான பொருள்! இவற்றின் வேதியல் கலவைதான் சங்க இலக்கியம்!

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 27

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 27

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உலகத்தை ஒளிப்பதிவு செய்தவர்கள்!

    முன்னுரை

    புலவர், கவிஞர் என்னும் சொற்கள் கவிதைப் படைப்பாளருக்குப் பொதுவாகப் புழங்கி வந்தாலும் ‘புலவர்’ என்பதில் உள்ள ‘புலமை’ என்பதன் பொருள் சற்று ஆழமானது, பார்வையில் நுட்பமும் சிந்தனையில் ஆழமும் அறிவில் தெளிவும் வெளிப்பாட்டில் நுட்பமும் எளிமையும் புலவர் தரும் படைப்புக்களை அணிசெய்யும். சங்கச் சான்றோர் அத்தகையவர்கள். அவர்கள் இயற்கையை நேசித்தவர்கள். நடப்பியல் வாழ்க்கைச் சிக்கல்களின் பரிமாணங்கள் பலவற்றையும் பட்டறிந்தவர்கள். முன்னோர் நூல்களைக் கற்றறிந்தவர்கள். உயர்திணை மற்றும் அஃறிணைகளின் அத்தனை அசைவுகளையும் மனத்திலே படம்பிடித்துக் கொண்ட வியத்தகு ஒளிப்பதிவாளர்கள். பகட்டு வாழ்க்கையை அறியாத அந்தப் பண்பாளர்கள் பருத்தி வாழ்க்கை வாழ்ந்தவர்கள். பண்பாட்டின் புரவலர்கள். தேடிய திறன்களையெல்லாம் அவர்கள் தாங்கள் படைத்த கவிதைகளில்  உவமங்களாய்க் காட்டி இன்றைக்கும் பேசாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பானைச் சோற்றுக்குப் பதச்சோறுகளாய்ச் சில.

    ‘ஆடிப்பாவை’ ஆன தலைவன்

    உலகியலில் மனைவிதான் தன் கணவனோடு தொடர்புடைய மற்றொருத்தியைப் பகையாக எண்ணி ஏசுவாள். பேசுவாள். ‘கச்சிருக்கும் நாளையில் கரும்பானேன் கைக்குழந்தை வச்சிருக்கும் நாளையில் நான் வேம்பானேன்’ என்று மனைவிதான் புலம்புவாள். சங்க இலக்கியத்தில் இதற்கு வேறுபட்ட காட்சி ஒன்று சித்திரிக்கப்பட்டுள்ளது. பரத்தையை நாடி வந்தான் மருதநிலத் தலைவன் ஒருவன். அவன் மீது மாறா அன்பு கொண்டவள் அந்தப் பரத்தை.  தன்னிடம் வந்து போனவன் மீளவும் வாராமல் காலந்தாழ்த்திய பொழுதில் தலைவனை ஏசுவதாக ஒரு பாடல். ஆலங்குடி வங்கனார் எழுதிய இந்தப் பாடலுக்கு மரபுபற்றி உரையெழுதிய ஆசிரியர்கள் தலைவி பரத்தையை ஏசியதாகச் சொல்லி, அதனை அறிந்த பரத்தை தனக்கெதிரான தலைவியையும் அவள் கணவனையும் ஏசியதாகத் துறை வகுத்திருக்கிறார்கள். அப்படி ஏசுகிறபோது பரத்தை இரண்டு கருத்துக்களைப் பதிவிடுகிறாள். அவ்விரண்டும் தலைவனின் இயல்பு பற்றியனவே. ஒன்று தன்னிடம் இருக்கும் போது ‘பெருமொழி’ (புகழ்ச்சிமொழி – சிறுசொல் இகழ்ச்சியாதலின் பெருமொழி புகழ்ச்சியாயிற்று) கூறித் தன்னை மயக்கினான் என்பது. பிறிதொன்று. தலைவியிடம் சென்றபின்  அவள் காலால் இட்ட பணிகளைத் தலையாலே தாங்குகிறான் என்பது.  இதற்குத்தான் அவள் ஓர் உவமம் கூறுகிறாள்.

    “ஊரன்
    எம்மில் பெருமொழி கூறித், தம் இல்
    கையும் காலும் தூக்கத் தூக்கும்
    ஆடிப்பாவை போல
    மேவன செய்யும் தம் புதல்வன் தாய்க்கே! ” (குறுந் 8)

    திருவள்ளுவர், ‘அடுத்தது காட்டும் பளிங்கு’ என்னும் உவமத்தால் எதிரொளியை மட்டும் உவமமாக்கினார். ஆலங்குடி வங்கனாரோ உறுப்புக்களின் செயல்பாட்டின் விரைவு நோக்கி உவமமாக்கினார். உவமத்தின் நுட்பம் என்னவென்றால் தலைவி ‘இன்னதைச் செய்’ என்று சொல்லிய பிறகு தலைவன் செய்யவில்லையாம். அவள் சொல்லுகிறபோதே செய்துவிடுகிறானாம். எதனைப் போல? ஆடிப்பாவை போல! ஆடியின் முன்னிற்கும் மனிதர்களின் செயல்களுக்கும் ஆடியில் தோன்றுகிற பிம்பத்தின் செயல்களுக்கும் கால இடைவெளி என்பதே இல்லை. தலைவியின்  ஆணையும் தலைவனின் செயலும் ஒரு நேரத்தில்! எப்போது சொல்லுவாள் என்று தலைவன் காத்திருக்கிறானாம்! இந்த நுண்ணியத்தைத்தான் புலவர், தலைவன் செயலுக்கு உவமிக்கிறார். தூக்கிய பிறகு அல்ல தூக்கும் போதே!

    தேய்கின்ற மஞ்சள் நிலா!

    தலைவனால் விரும்பப்படாத தலைவியின் உடல் உணர்வுகளும் இளம் விதவைகளின் உணர்வுகளும் ஒன்றே என்பதை அறிந்தார் அறிவர். இங்கே இளம் விதவை என்பது திருமணமாகிச் சில காலம் வாழ்ந்து இல்லற இன்பத்தை இழந்தவர்களைக் குறிப்பதோடு திருமணம் ஆன அன்றே விதவையான பெண்களையும் குறிப்பதாகும். இது சடங்கு பற்றியதன்று சஞ்சலம் பற்றியது. இத்தகையதொரு பாத்திரத்தைத் ‘தெய்வத்தின் தெய்வம்’ என்னும் திரைப்படத்தில் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் அவர்களும் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்னும் திரைப்படத்தில் இயக்குநர் திரு. சுந்தரராசனும் உருவாக்கிக் காட்டியிருந்தார்கள். மணமுடித்த அன்றே தேனிலவு பயணம் புறப்பட்ட தம்பதியின் கார் விபத்தில் சிக்க மணமகன் உயிரிழக்கிறான். மணமகள் விதவையாகிறாள். அந்த விதவை தன் விரகதாபத்தைப் பாடுவதாகக் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். இது தெய்வத்தின் தெய்வத்தில்!

    “பள்ளியறை  காணலியே
    பாலெடுத்துக் கொடுக்கலியே
    துள்ளி வந்து பார்க்கலையே!
    தொட்டு விளையாடலையே!”

    என்பது கண்ணதாசன் பாடல். மணமுடித்தபின் மறுமனைச் சடங்கிற்குப் பரிசலில் செல்லும்  மணமகன் பரிசல் விபத்தில் உயிரிழக்க அவள் தன் உடல் வேதனையைப் பாடுவதாக வாலி எழுதியிருக்கிறார்.

    “விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை!
    குளிர்வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை!
    ………………………………………………………………………………………
    ஊதாத புல்லாங்குழல்! எனதழகு சூடாத பூவின்மடல்
    தேய்கின்ற மஞ்சள் நிலா! ஒரு துணையைத்
    தேடாத வெள்ளைப் புறா!”

    என்பன கவிஞர் வாலியின் வரிகள். வாசகர்கள் இந்த உணர்வுகளைப் புதுமையான வெளிப்பாடு என்று மயங்க வேண்டியதில்லை. ஆனால் உண்மையான வெளிப்பாடு. உணரவேண்டிய வெளிப்பாடு. இவ்விரு வெளிப்பாடுகளுக்கும் மூலமாக அமைந்ததுதான் வெள்ளிவீதியாரின் வெளிப்பாடு. அதனாலேயே கவிஞர்கள் இருவரும் வெள்ளிவீதியாரை நகலெடுத்தார்கள் என்று கருதிவிடக்கூடாது. வெள்ளிவீதியாரின் வேதனை வெளிப்பாடு இப்படி அமைகிறது.

    “கன்றும் உண்ணாது கலத்தினும் படாஅது
    நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு”  (குறு 27)

    நுகர்வாரின்றித் தன்னழகு மாய்வதாகவே தவித்துப் புலம்புகிறார் வெள்ளிவீதியார். அதற்கு அவர் கண்டிருக்கும் உவமம் ‘நல்ல ஆன் தீம்பால் நிலத்தில் கொட்டிச் சீரிழிதல்’ என்பது. ஆனுக்கு வந்த அடை வெள்ளியாருக்கும் பாலுக்கு வந்த அடை அவருடைய அழகிற்கும் பொருந்தும். வெள்ளி  வீதியாரை நோக்க கண்ணதாசனுக்கும் வாலிக்கும் இது மரபு. தொல்காப்பியத்தை நோக்க இந்த மூன்று பாடல்களுமே மரபு மாற்றம். ‘தன்னுறு வேட்கை கிழவற் முற்கிளத்தல் எண்ணுங்காலை கிழத்திக்கில்லை’ யெனவே, பிறர் முன் என்பது சொல்ல வேண்டாவாயிற்று. இங்கே இந்த மூன்று பாடல்களிலும் ஒரு பெண் தன் உணர்ச்சிக்கு வடிகாலைத் தேடிப்புலம்புவதை வெளிப்படுத்துதற்கு அரிய அவரவர் பக்குவதிற்கு ஏற்ற உவமங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறியலாம்.

    ஓர் ஏர் உழவன்

    தமிழ்க்கவிதை உவமக் கோட்பாடுகளில் ஒன்றைக் கவனிக்கலாம். அதாவது புறத்திணைப் பாடுகிறபோது அகத்திணைப் பொருண்மையையோ அது தொடர்பான நிகழ்வுகளையோ உவமமாக்குவதில்லை. ஆனால் அகத்திணைப் பதிவுகளில் புறத்திணைச் சிந்தனைகள் பதிவாகியிருக்கின்றன. அகத்திணை மாந்தர்களின் கூற்றுப் பகுதிகளில் புறத்திணைச் சிந்தனைகள் உவமமாக வந்துள்ளன. பாலையை வண்ணனை செய்கிறபோது ‘வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்’ என்னும் சிந்தனை மேலோங்கியிருந்திருக்கிறது.  வினைமீளும் தலைவன் தலைவியை நாடி விரையும் அகத்திணை நிகழ்வில் ஏழை உழவனை உவமமாகப் பாடியிருக்கிறார்கள்.

    ஆடமை புரையும் பனப்பிற் பணைத்தோள்
    பேரமர்க்கண்ணி இருந்த ஊரே
    நெடுஞ்சேண் ஆயிடை அதுவே! நெஞ்சே

    ““ஈரம்பட்ட செவ்வி பைம்புனத்து
    ஓரேர் உழவன் போல
    பெரு விதுப்பு உற்று அற்றால் நோகோ யானே” (குறுந் 131)

    என்கிறான் தலைவன். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பதுபோல, ஈரம் இருக்கிறபோதே உழுது விதைக்க வேண்டும். ஆனால் அகன்ற பழனம் மழைபெய்து ஈரமாயிருக்கிறது. கையில் இருப்பதோ ஒரே ஓர் ஏர். அதனைக் கொண்டு அத்தனைப் பெரிய பழனத்தை உழுவதற்குள் ஈரம் போய்விடுமே எனக் கவலை கொள்ளும் உழவனாகத் தன்னைக் கருதிக் கொள்கிறான். தலைவனுக்கும் தலைவிக்கும் ஊருக்குமாக இடைநின்ற தொலைவிற்கும் ‘ஆடமை புரையும் பனப்பிற் பணைத்தோள் பேரமர்க்கண்ணி”யின் நலத்தை நுகர்வதற்குமான இடைவெளியின் விளைவுகளுக்கு இந்த உவமம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  தலைவியின் பேரழகு தான் செல்வதற்குள் மாறிவிடுமோ என்னும் தலைவனின் ஏக்கமாகிய உரிப்பொருளை ஒற்றை ஏர் உழவனின் இரங்கத்தக்க நிலை விளக்குகிறது.

    ‘உகிர் நுனி புரட்டும் ஓசை போல’

    மாந்தர்களின் அசைவுகளை மட்டுமல்ல. அனைத்துயிர்களின் அசைவுகளையும் செயல்களையும் நுட்பமாக நோக்கி அவற்றை உவமமாக்கியிருக்கும் திறன் சங்கச் சான்றோருடையது. தன் பருவ உணர்வுக்கு ஏற்பத் தலைவன் வருகையை எதிர்நோக்கும் தலைவியின் உணர்வறிந்துப் பேசும் தோழியின் திறத்தை இந்தப் பாட்டில் காணலாம்.

    “உள்ளார் கொல்லோ தோழி! கள்வர்தம்
    பொன்புனைப் பகழி செப்பம் கொள்மார்
    உகிர் நுனி புரட்டும் ஓசை போலச்
    செங்காற் பல்லி  தன் துணை பயிரும்
    அம் கால் கள்ளி காடி றந்தோரே!” குறு 16

    என்பது தலைவிக்கான தோழியின் ஆறுதல். தன்னை எண்ணவே மாட்டானா தலைவன்?” என ஏங்கும் தலைவியை நோக்கி “எண்ணாமல் இருப்பாரா? அவன் சென்ற கள்ளி பரந்த பாலையில் சிவந்த கால்களையுடைய ஆண்பல்லி தன் துணையை அழைக்கும் ஒலி அவன் காதில் விழும். அவ்வோசை அவனை நெகிழச் செய்யுமாதலின் அவன் வருவது ஒருதலை” என்கிறாள் தோழி! தோழியின் கூற்றில் வரும் ஆண்பல்லியின் அழைப்பொலிக்குப் புலவர் காட்டும் உவமம்தான் புல்லரிக்க வைக்கிறது. ‘அடுகணை’ என்பது பொன்பகழி. பொன்னால் மகுடம் சூட்டப் பட்ட பகழி.  ‘பொன்’ என்பது இரும்பு. எனவே அம்பின் நுனியில் தாக்குதற்கான இரும்புக்குழாயினைச் செருகி அதனைக் கூராக்குதற் பொருட்டு நெருப்பில் நன்கு காய்ச்சுவார்கள். காய்ச்சிய பிறகு பின்னும் கூர் செய்வதற்கு விரல் வலிமை உடைய வீரர்கள் தங்கள் நகத்தால் தடவிப் (சுரண்டி) பார்த்துச் செப்பம் செய்வார்கள். இன்றைக்கும் அரிவாள் முதலிய கருவிகளை விரலாலும் நகத்தாலும் தடவிப் பார்க்கும் வழக்கம் உண்டு. கூர்மையான நகம் அம்பின் நுனியில் உரசிப் பதம் பார்க்கும் அந்த ஒலியைத்தான் ஆண்பல்லி தன் துணையை அழைக்கும் ஒலிக்கு உவமமாக்கியிருக்கிறார் பெருங்கடுங்கோ! சேவல் கூவுதற்கும் கெக்கரிப்பதற்கும் வேறுபாடு உண்டு. கனைகுரற் பல்லியினும் இந்தப் பல்லி வேறானது. பாலை சுடுகிறது., கடுங்கோ பாடிய பாடல் குளிர்கிறது உவமத்தால்!

    “உலைக்கல் அன்ன பாறையேறிக்
    கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்”

    என ஓதலாந்தையார் (குறு12) கூறுவதும் காண்க.

    உவமங்களான  மாற்றுத் திறனாளிகள்

    உடல் ஊனமுற்றவர் மாற்றுத் திறனாளிகள் ஆன காலம் இது. இன்றைய மாற்றுத் திறனாளிகளின் மனத்துன்பத்தைச் சங்கத்துச் சான்றோர்கள் உணர்ந்திருந்தனர். உணர்ந்ததோடு அல்லாமல் தாம் எழுதிய பாடல்களில் உவமங்களாய்ப் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். கையும் இல்லாத வாயும் இல்லாத ஒருவன். இத்தகைய ஒருவனைத் தலைமகன் தனது கூற்றில் உவமமாக்கியிருக்கிறான். தலைவியைக் காணாது தவிக்கிற தலைவனைப் பாங்கன் தேற்றுகிறான். தேற்றுகிற பாங்கனை நோக்கி, அவனுடைய தேறுதல் மொழி பயனற்றது’ என்பதாகக் கூறுகிறான் தலைவன்.

    “ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
    கையில் ஊமன் கண்ணில் காக்கும்
    வெண்ணெய் உணங்கல் போலப்
    பரந்தன்று இந்நோய்! நோன்று கொளற் கரிதே!” குறு. 5

    ‘‘உன்னுடைய ஆறுதல் நலிந்து போகும் என் உடல்நிலையைத் தேற்றினால் பயன் உண்டாம். ஆனால் என் தலைவியைக் காணாது என் மேனியெங்கும் பரந்து நிற்கும் இந்தக் காதல்நோய் என்னால் தாங்குதற்கு அரியதாக இருக்கிறது. கொதிக்கும் வெயிலில் பாறையின் ஓரிடத்தில் வைக்கப்பட்ட வெண்ணெய் உணங்கலை உருகாதவாறு, கையில்லாத மூங்கையும் வாயில்லாத ஊமையுமாகிய ஒருவன் தன் கண்ணாலேயே காக்க வேண்டும் என்றால் அது இயலுமா? சென்று எடுப்பதற்குக் கையும் இல்லை. யாரையும் உதவிக்கு அழைத்துச் சொல்வதற்கு வாயுமில்லை. கண்ணால் உருகாதே  என்றால் வெண்ணெய் உருகாமலா இருக்கும்? அவ்வாறு உருகி நிற்கும் என் மேனிக்கு நின் ஆறுதல் பயனற்றது என்கிறான் தலைவன். பாட்டில் உருகும் மேனிக்குப் பாறையில் உருகும் வெண்ணெய் உணங்கலே உவமமாயினும் நோயைக் கட்டுப்படுத்த இயலாத தலைவனுக்குக் ‘கண்ணில்லாத கையில் ஊமன்’ உவமமாக அமைந்திருக்கும் நுட்பம் அறிக.

    அகத்திணைத் தலைவன் தன் காதல் நோயின் ஆற்றாமைக்கு மாற்றுத் திறனாளியின் இயலாமையையும் துன்பத்தையும் உவமமாக்கிக் கூறியிருப்பதைப்போல அகத்திணைத் தலைவியும் தனது துன்பத்து வெளிப்பாட்டுக்காக மற்றொரு மாற்றுத் திறனாளியை உவமமாக்கியிருக்கிறார். அவன் ‘கையில் ஊமன்’. இவன் இருக்கை முடவன். ‘இருக்கை’ தொழிற்பெயர். அதாவது இருத்தலாகிய தொழிலைத் தவிர வேறு எதனையும் செய்ய இயலாதவன்.  உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருப்பவன். அப்படியே அமர்ந்திருக்கும் அவன் பார்வையில் ஒரு காட்சி. கூதளிக் கொடி மண்டிய உயரமான மலைப்பகுதி. அங்கே கட்டப்பட்டிருந்த கூட்டில் தேன் வழிகிறது. இவனால் அதனை அருந்த முடியவில்லை. ஆனால் என்ன செய்கிறான் தெரியுமா? தனது கையைக் குடையைப் போல் குழிசெய்து வைத்துக் கொண்டு அந்தத்தேன் அதில் விழுவதாகக் கற்பனை செய்து அதனை நக்குவதாக எண்ணி மகிழ்கிறான். உண்மையில் அவன் காட்சியில்தான் தேன் விழுகிறது. காட்சியின்பத்தைப் புலன்வழி நுகர்ந்த இன்பமாகக் கற்பனை செய்து கொள்கிறான். இதனைத்தான் தலைவி உவமமாக்குகிறாள்.

    “குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரைப்
    பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
    உட்கைச் சிறுகுடை கோலி கீழிருந்து
    சுட்டுபு நக்கியாங்குக்காதலர்
    நல்கார் நயவார் ஆயினும்
    பல்கால் காண்டல் உள்ளத்துக்கு இனிதே!” (குறு 60)

    என்பது தலைவியின் வேதனை வெளிப்பாடு. ‘காட்சி, வேட்கை, ஒருதலை உள்ளுதல்’ என்பார் தொல்காப்பியர். அவன் அமர்ந்திருக்கிறான். நான் இற்செறிப்புக்கு ஆளாகியிருக்கிறேன். அவன் எழுந்து நின்று தேனைச் சுவைக்க முடியாது. கண்டுதான் சுவைப்பதாக எண்ணிக் கொள்ளலாம்.  அது போல என் தலைவன் என் கண்ணில் பட்டாலே என் உள்ளத்துக்கு இனிமை தருமே!’ என்று தலைவி ஏங்குகிறாள்.

    கவை மகவு நஞ்சுண்டது போல

    சங்க இலக்கியத்தில் தலைவி தோழியானால், தோழி தலைவியாவாள். தோழி தலைவியானால் தலைவி தோழியாவாள். அதனால்தான் ஒருவர் இயற்பெயர் சுட்டுவதில்லை. தலைவியும் தோழியும் இணையானவர்களே என்பது இதனால் பெறப்படும். கற்பனை மாந்தர்களான அவர்களைப் பண்பாட்டுப் பெருமக்களாகச் சித்தரித்துக் காட்டுவதில் சங்கச் சொன்றோர் தனிச்சிறப்புக்குரியவர் ஆவர்.   தலைவியைக் காணத் தலைவன் வருகிறான். எத்தகைய இடர் கடந்து வருகிறான் தெரியுமா? “கொல்லுந் தொழில் வல்லமையுடைய ஆண்முதலையானது வழியெல்லாம் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்குமாறு குறுக்கே கிடக்கும் அழகிய கடல் துறையின்கண் இனமீன்கள் நிறைந்துள்ள உப்பங்கழியை நீந்தி” வருகிறானாம்.

    “கொடுங்கால் கொல்வல் ஏற்றை
    வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெருந்துறை
    இனமீன் இருங்கழி நீந்தி”

    என்கிறார் புலவர்.  இவன் படும் இத்துன்பத்தால் தன் தலைவனுக்கு ஏதம் வருமோ என்று தலைவி நடுங்கித் துன்புறுகிறாளாம்.

    ‘இவள் மடன் உடைமையின் உயங்கும்’

    என்கிற தோழி இருவருடைய துன்பத்தையும் நோக்கி வேதனைப்படுகிறாளாம். யாரைப்போல?  தனக்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளும் நஞ்சருந்திய காலத்து அப்பிள்ளைகளின் தாய் உணரும் அச்சத்தை இந்தத் தோழி உணர்ந்தாளாம்!. “நயன் உடைமையின் நீ  வருகிறாய். மடன் உடைமையின் இவள் உயங்குகிறாள். நானோ நஞ்சருந்திய இரட்டைப் பிள்ளையின் தாயைப் போல அலமறுகிறேன்’ என்கிறாள் தோழி!

    “நீ நின் நயனுடைமையின் வருதி! இவள் தன்
    மடன் உடைமையின் மயங்கும், யான் அது
    கவை மகவு நஞ்சுண்டாங்கு
    அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே!” (குறு 324)

    உலகியலை நோக்கிய உவமங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்குச் சங்க இலக்கியங்களே சான்றாகின்றன. இலக்கிய நோக்கில் தலைவிக்குத் தோழியாகப் பார்க்கப்பட்டுவரும் ஒருத்தி தலைமக்களுக்குத் தாயாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதற்கு இவ்வுவமத்தின் பயன்பாடு பெரிதாம்.

    நிறைவுரை

    ஆடியின் அசைவை உவமமாக்கியிருக்கிறார்கள். அம்பு தீட்டும் ஒலியை உவமமாக்கியிருக்கிறார்கள். உழுவதற்கு ஒற்றை ஏர் மட்டும் உடையவனை உவமமாக்கியிருக்கிறார்கள். மாற்றுத் திளனாளிகளை உவமமாக்கியிருக்கிறார்கள். நல் ஆவின் பாலை உவமமாக்கியிருக்கிறார்கள். நஞ்சுண்ட இரட்டைப் பிள்ளைகளை உவமமாக்கியிருக்கிறார்கள். உவமம் ஒரு கவிதையைச் சிறப்பிக்கும் தொழில்நுட்பக் கருவியாகப் பயன்படாமல் புலவர் பெருமக்களின் சமுதாயப் பார்வையைப் படம்பிடிப்பதாக அமைந்திருக்கிறது. இயற்கையோடு இயைந்த அவர்தம் வாழ்வு முறைகளைக் காட்டுகிறது.  அஃறிணை, உயர்திணை என்னும் அனைத்தின் அசைவுகளையும் நிழல்களையும் கூடப் பதிவு செய்யும் அவர்தம் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஒரு கவிதையின் பெருஞ்சிறப்புக்கு உவமம் ஒரு தலையாய காரணம் என்பதை இவை உறுதி செய்கின்றன!.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 26

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 26

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமத்திலும் புதுமை தேக்கும் உத்தி

    முன்னுரை

    கவிதையில் கருத்து ஒன்றினைத் தவிர மற்ற எல்லாமே அதனை வெளிப்படுத்தும் உத்திகளே! கவிதையின் வெற்றி அதன் உத்தியில்! பொருளுக்கேற்ற யாப்பு என்பதும் யாப்புக்கேற்ற சந்தம் அல்லது சீர் என்பதும் அவற்றோடு கூடிய கற்பனை என்பதும் உத்திகளே. இவற்றுக்கெல்லாம் மேலாக நிற்பது உவமம். கருத்துப் புலப்பாட்டுக் கருவியாக விளங்கும் இந்த உவமமே கவிதையின் நிலைத்த வெற்றிக்குத் தலையாய காரணமாக அமைகிறது.  அதனால்தான் சங்கக்காலத்தில் தொடங்கித் தற்காலம் வரை கவிதைகள் உவமங்களால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. சில பொழுதுகளில் படைப்பாளனின் தனித்திறனை எடைபோடுவதற்கும் இந்த உவமங்கள் எடைக்கற்களாக இருக்கின்றன. மரபு சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்பட்ட காலத்தில் கூட உவமங்களில் புதுமை தேக்கும் முயற்சி நடந்திருக்கிறது. இது பற்றிய விளக்கத்தைச் சில எடுத்துக்காட்டுக்கள் வழி இக்கட்டுரை ஆராய்கிறது.

    உவமப் பயன்பாட்டில் உற்றுநோக்கலின் பங்கு

    பொருளை ஒப்பிட்டுக் காட்சிப்படுத்துவதும் கருத்துக்கு விளக்கமளிப்பதுமே உவமத்தின் தலையாய பணி என்பது உண்மையே. ஆனால் அத்தகைய ஒப்பீடுகளை மேலேழுந்தவாரியாகச் செய்துவிட இயலாது. செய்தால் உவமம் அழகு பெறாது ஆழங்கால் பட்டு நிற்காது காலங்காலாமாகப் பெண்ணின் முகத்துக்குத் தாமரையை ஒப்பிட்டு வந்ததால் தாமரைக்கும் பெருமையில்லை. பெண்ணின் முகத்துக்கும் பெருமையில்லை. இதனை உணர்ந்த கம்பன் தாமரையை ஆணாகிய இராமனுக்கு ஒப்பிட்டுக் காட்டியதை இங்கு நினைவுகூரலாம். ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை’ என்பது கம்பன் தமிழ். சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை என்பது இல்பொருள். சித்திரத்துத் தாமரை மலர்வது உண்டா? நீர்த்தாமரையை உவமிக்க மனமில்லாத கம்பன் இப்படி எழுதிக்காட்டுகிறான். முல்லை போன்ற பற்கள் என்னும் மரபுவழி உவமக் கோட்பாட்டைத் தற்காலக் கவிஞர் ஒருவர் தமது கவிதையில் ‘நடுகற் பற்கள்’ என்று வண்ணனை செய்திருக்கிறார். நாட்டுப்புறப்பாடல்களில் ‘புளியங்கொட்டை’ பல்லுக்கு உவமமாக்கப்பட்டிருப்பதும் மண்வெட்டியை உவமமாக்கியிருப்பதும் உண்மையே. என்றாலும் நடுகற்களை உவமமாக்கியிருப்பது  படைப்பாளனுடைய வரலாற்றுணர்வையும் புதுமை தேக்கும் உணர்ச்சியையும் ஒருசேரக் காட்டுவதாக உள்ளது. பொன்விலங்கு என்னும் நாவலில் பெண்ணின் கூந்தலுக்குக் ‘குலை குலையாய்த் தொங்கும் திராட்சைக் கொத்துக்களின் தொகுதியை’ நா.பார்த்தசாரதி உவமமாக்கியிருப்பார். இதனால் பரவலான உற்று நோக்கலும் ஆழமான சிந்தனையிலும் ஈடுபட்டாலேயொழிய உவமச் சித்திரிப்பில் நிலையான வெற்றியினைப் பெறமுடியாது என்பது புலனாகும்.

    பழைமைக்குள் புதுமை

    தவளை மேட்டுக்கு இழுக்கிறது. மீன் தண்ணீருக்குள் இழுக்கிறது என்பது அனைவரும் அறிந்ததொரு சொலவடை. ஒரு சிக்கலில் அல்லது சூழலில் ஒரு முடிவுக்கு வராமல் தவிக்கின்ற ஒருவனை அல்லது அவனுடைய மனநிலையை இப்படிச் சித்திரித்திருக்கிறார்கள். மக்கள் வாழ்வியலே இலக்கியத்திற்கும் அவர்களின் மொழிவழக்கே இலக்கணத்திற்கும் அடிப்படையாதலின் இந்தக் கருத்தியல் இலக்கியங்களில் பலவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலா வந்த மன்னனைக் காணத் துடிக்கிறாள் தலைவி. ஆண்மகனைத் தானாகக் காணச் செல்ல அவள் நாணம் தடையாகிறது. பருவத்தின் தூண்டுதலால் மனம் மீளவும் வாசல் நோக்கி அவளைச் செலுத்துகிறது. ஆசை முன்னுக்குத் தள்ள நாணம் பின்னுக்குத் தள்ள அவள் துடிப்பதை,

    “நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
    காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற —- யாமத்[து
    இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு போலத்
    திரிதரும் பேரும்என் நெஞ்சு”

    என்னும் பாடல் (முத்தொள்ளாயிரம்) இருதலைக்கொள்ளி எறும்பின் துடிப்புக்கு ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறது. இந்த உவமத்தை மணிவாசகப் பெருமான்,

    “இருதலைக் கொள்ளியின் உள்எறும்[பு] ஒத்து நினைப்பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்”

    என்னும் திருவாசகம் “உன்னை நாடி உய்வதா? உலகியல் தோய்ந்து மாள்வதா எனத் தன் மனம் ஒரு நிலையில் நில்லாததை மணிவாசகப் பெருமான் இந்த உவமத்தால் விளக்குகிறது.

    “இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பேபோல்
    உருகா நிற்கும் என்னுள்ளம் ஊழி முதல்வா!”

    என்று திவ்யப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வாரும் இதே உவமத்தைப் பயன்படுத்தப் பாடியிருப்பதைக் காணலாம். மேலே காட்டியவையெல்லாம் பிற்கால இலக்கியங்கள். ஆனால் சங்க இலக்கியமான அகநானூற்றிலும் இதே உவமம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் வியப்பான செய்தி. மக்கள் வழக்கின் தீவிரத் தாக்குதலுக்கு இலக்கியம் உள்ளான காலக்கட்டம் அது.

    பொருள் தேடும் முயற்சியால் எழுந்த தலைவனின் ஆண்மை “பொருள் தேடப் போவோம் வா” என்று முனைகின்றது. தலைவியின் மீது கொண்டுள்ள காதலோ தடுக்கின்றது. ஆண்மை முந்துற ஆசை பிந்துறும் நிலைமை. அவன் மனமோ இப்போது இடைப்பட்ட நிலையில் போவதும் வருவதுமாக ஊசலாடுகிறது. நரைமுடி நெட்டையார் எனும் புலவர் இதைப் பாடியுள்ளார்.

    “ஆண்மை வாங்கக் காமம் தட்பக்
    கவைபடும் நெஞ்சம் கட்க ணகைய
    இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி”

    என்பன அப்பாடல் அடிகளாகும். சங்கக் காலத்திலிருந்து “இருதலைக்கொள்ளி எறும்பென்னும்” உவமை எல்லாப் புலவர்களையும் கவர்ந்து எடுத்தாளச் செய்திருக்கிறது.

    சங்கச் சான்றோர்கள் இந்த உற்று நோக்கலில் தனித்து விளங்குகிறார்கள். அவர்கள் சமுதாயத்தின் அகப்புறத்தை நன்கு உற்றுநோக்கியே வாழ்ந்தவர்கள் ஆதலின் ஒரு நிகழ்வைக் கவிதையாகக் காட்சிப்படுத்துகிறபோது உவமம் என்பது தானாக அமைந்துவிடுகிறது. பொருளையோ கருத்துக்களையோ கைவசம் வைத்துக் கொண்டு அதற்குப் பொருத்தமான உவமத்தைத் தேடும் பழக்கம் அவர்களிடம் இருந்ததற்கான அடையாளமே இல்லை. இந்தப் பின்புலத்தில்  எறும்புக்குப் பதிலாக இற்றுப்போன கயிற்றை உவமமாக்கிய ஒரு தலைவியைக் காணலாம்.

    திண்டாடும் உயிரும் தேய்புரி பழங்கயிறும்

    பொருள்வயிற் பிரிய எண்ணம் கொண்ட தலைமகன் அதாவது குடும்பத்தலைவன் அவனது பிரிவை ஆற்றாது அரற்றிய தலைவியைத் தேற்றிப் பிரிகிறான். பிரிந்து வினைசெய்பவன் மனைவியைப் பற்றிய நினைவு மேலோங்கி அறிவழிந்த நிலையில் அலைக்கழிக்கப்படுகிறான் மற்றொருபக்கம். வினையைக் குறைவுபடச் செய்து தலைமகள் பற்றிய காதல் மீதுறத் திரும்புவானாயின் அது ஆண்மகற்கு அறமாகாததோடு இளிவரல் பயக்கும் என்பதையும் உணர்கிறான்.  நெஞ்சமும் அறிவும் நிகழ்த்தும் இந்தப் போரில் தலைமகனுடைய உயிர் தள்ளாடும் நிலைக்குத்தான் சங்கச் சான்றோர் ஒருவர் புதுமையானதோர் உவமத்தைப் பயன்படுத்திக் காட்டியிருக்கிறார். இந்த உவமத்தை அனுபவிக்க வேண்டுமானால் பாட்டின் பல பொருட்பகுப்புக்களையும் தனித்தனியாகக் கற்றுணரவேண்டும்.

    நெஞ்சு சொல்கிறது இப்படி!

    “புறத்தாழ்பு இருண்ட கூந்தல் போதில்
    நிறங்கிளர் ஈரிதழ் பொலிந்த உண்கண்
    உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்
    செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும் (தலைவனின்) நெஞ்சம்!”

    அறிவு என்ன சொல்கிறது?

    “செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
    எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
    உறுதி தூக்கத் தூங்கி அறிவே
    சிறு நனி விரையல் என்னும்!”

    ஆயிடை (இவற்றுக்கிடையே)

    “ஒளிறேந்து மருப்பின் களிறுமாறு பற்றிய
    தேய்புரி பழங்கயிறு போல
    வீவது கொல் என் வருந்திய உயிரே!”

    பாட்டின் பொருள்முறைக் கட்டுமானம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது பாருங்கள்! நெஞ்சு செய்யும் கொடுமை இது!. அறிவு காட்டும் தடம் இது! இரண்டுக்கும் நடுவே வதைபடும் என் உயரின் நிலை இது! முதலில் தலைவியிடம் தலைவனுடைய மனம் செல்வதற்கேதுவான அவளுடைய எழில் வண்ணனை செய்யப்படுகிறது. வினையே ஆடவர்க்கு உயிராதலின் அறிவு தலைவி பால் கொண்ட காதல் பற்றிய சிந்தனையை வரையறை செய்து அவனைத் தடுப்பது அடுத்த நான்கு வரிகளில். ‘ஆயிடை’ என்னும் சொல் வழி இரண்டையும் இணைக்கும் புலவர், நைந்து போன தலைவன் உயிரைத் தேய்ந்து போன பழங்கயிற்றுக்கும், அறிவையும் நெஞ்சையும் வலிமையான இரண்டு களிறுகளுக்கும் உவமமாக்கிய திறன் இறுதியில்!

    இருதலைக் கொள்ளி எறும்பு என்னும் மரபு சார் உவமத்திலிருந்து விலகிப் புதுமை தேக்கும் உவமமாகப் பொலிகிறது. கயிற்றைக் கருவி கொண்டு அறுக்காது ஈர்த்த வழி அது புரிபுரியாய் நெக்குற்று அறுபடுவது பற்றித் ‘தேய்புரி பழங்கயிறு’ என்றும், அதன் வலிமையும் உறுதியும் குறைந்த நிலையை உணர்த்துவதற்குப் பழங்கயிறு என்றும் கூறிய நுட்பம் உணர்க. பிரிதலும் இருத்தலும் இரங்கலுமாகிய உரிப்பொருள் பெரும்பாலும் தலைவி பற்றிய புலனெறிவழக்கிற்கே உரியதாயினும் மிக மிக நுட்பமாகத் தலைவனது மனத்து வேதனையை உவம வாயிலாகப் பதிவிட்டிருக்கும் சங்க இலக்கியத்தின் நுட்பம் தற்கால எந்தத் திறனாய்வுக் கொள்கைக்கும் அடங்காதது!

    வினைமுடித்தன்ன இனியோள்

    புறஅழகினால் ஒரு பெண் ஆணைக் கவர்வதற்கும் பண்புகளால் அவன் நெஞ்சில் இடம்பெறுவதற்கும் வேறுபாடு உண்டு. இது பெண்ணுக்கும் பொருந்தும். தொல்காப்பியர் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பண்புகளின் தொகுதியாகவே பெண்ணைப் பார்த்திருக்கிறார். ஆணுக்கும் பெருமையையும் உரனையும் இலக்கணமாக வரையறை செய்திருக்கிறார். அத்தகைய ‘பண்புத்தொகையான ஒருத்தியை மணமுடித்து வாழும் தலைவன், பொருள்வயிற் பிரிகிறான். பிரிந்தவன் திரும்புகிறான். திரும்பியவன் மனைவியோடு மகிழ்கிறான். மகிழ்ச்சியினால் வினையை மறக்கிறான். அப்போது அவன் நெஞ்சு அவனுக்கு நினைவூட்டுகிறது.

    “இப்படியே இருந்துவிட்டால் இல்லறம் சிறப்பது எப்படி? என்று. நெஞ்சு கூற, அந்த நெஞ்சிற்குத் தலைவன் இயலாமையை அதாவது முன்னர்ச் சென்றபோது அவன் உள்ளம் எண்ணியதை அந்த உள்ளத்திடமே வெளிப்படுத்துகின்றான்.

    “”நெஞ்சே! நீ எனக்கு நினைவூட்டுவது சரியே! ஆனால் சென்றமுறை சென்ற பொது நான் என்ன எண்ணினேன் என்பதை நீ மறந்துவிட்டாயா? வினைமுடிக்க சென்ற நான் அவ்வினை முடிந்ததால் உண்டான இன்பத்தைப் போன்றவளான என் மனைவி, மாலைநேரமாகிய இந்நேரத்தில் விளக்கேற்றிக் காத்திருப்பாளே” என நான் நினைத்தேனே? இந்த முறையும் சென்றால் அப்படித்தானே நினைப்பேன்?”

    என வருந்துவதாக இளங்கீரனார் என்ற புலவர் தலைவனாக மாறி எழுதிக்காட்டுகிறார்.

    “உள்ளினென் அல்லனோ யானே உள்ளிய
    வினை முடித்தன்ன இனியோள்
    மனைமாண் சுடரொடு படர்பொழுதெனவே”

    இந்தப் பாட்டில் தலைவியின் இனிமைக்கு ‘வினை முடித்த இனிமை’யை உவமமாக்கியிருக்கிறார் புலவர். அகம் என்பது காட்டாலாகாப் பொருளாகலானும் உணர்ந்து அனுபவித்தவரே மீளவும் உணரமுடியாதலானும் இவ்வாறு உவமிப்பது பொருத்தமே!.

    இங்கே தலைமகன் தலைமகளை இவ்வாறு எண்ணினான். மற்றொரு பாட்டில் தலைவியின் துன்பத்தை உணர்ந்த தோழி சொல்கிறாள்,

    “கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு”

    தலைவனோடு மகிழலாமாம். இது தோழியின் கூற்று. நல்ல கலன். அதாவது பொற்பாத்திரம். அது தொலைந்து போனது. திடீரென ஒரு நாள் எதிர்பாராச் சூழலில் அது கிட்டியது. கிட்டிய அந்த நேரத்தில் என்ன மகிழ்ச்சி உண்டாகுமோ அதனைப் போல இனியவன் தலைவன் அவனைச் சேர்ந்து மகிழலாம் என்பது கருத்து. இதே கருத்தமைந்த பாடலை உரையாசிரியர் இளம்பூரணர் மெய்ப்பாட்டியல் நூற்பா ஒன்றில் ‘இன்புறல்’ என்னும் சொல்லுக்கான பொருள் விளக்கத்தில் எடுத்துக்காட்டுகிறார்.

    “விட்டகன்று உறைந்த நட்டோர்க் கண்ட
    நாளினும் இனிய நல்லாள்”

    நெருங்கிப் பழகியவர் பிரிந்து “வேறிடத்திற்குச் சென்று திரும்ப மாட்டார் இனி சென்ற இடத்திலேயே கழிப்பார் என நினைக்கப்பட்ட அந்தப் பழைய நண்பரை எதிர்பாராச் சூழலில் கண்ட பொழுது எப்படி இனிக்குமோ அப்படி இனிப்பாளாம் தலைவி! என்ன அருமையான உவமம்? ‘இன்புறல்’ என்பதற்கு நட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதொரு மனநிகழ்ச்சி போல்வது என்று இளம்பூரணர் தரும் உரைவிளக்கம் கோடி பெறும்.

    நெருப்புத்தான் சுடும் என்பதில்லை. ஆற்றல் மிக்க கவிஞர்களுக்கு  எல்லாம் சுடும். எல்லாம் குளிரும். காரணம் வழக்கு. உலகியல் வழக்கில் மக்கள் பயன்படுத்தும் மொழிகளும் கற்பனைகளும் படைப்பாளனைப் பாதிக்கின்றன. அப்படிப் பாதித்தால்தான் அவன் படைப்பாளன். ‘நாவினால் சுட்டவடு நெஞ்சில் ஆறாது கிடக்கும்’ என்று திருவள்ளுவர் பாடுகிறார். ‘செயலுக்கும் சொல்லுக்கும் வேறுபட்டார் நட்பை எண்ணிப் பார்த்தால் எண்ணுகிற உள்ளமும் சுடும்’ என்றும் அவர் கூறுகிறார். மனுநீதிச் சோழனின் ‘நெஞ்சு சுட்டதாக’ இளங்கோவடிகள் பாடுகிறார். இத்தகைய உணர்வுகளின் அடர்த்தியான வெளிப்பாடே உவமங்களாக அமைந்திருக்க வேண்டும். இவ்வாறு அருவப் பொருளை வினைமுதலாக்கி உவமிக்கும் உவமக் கோட்பாடு தமிழுக்கே உரியது என்க.

    எய்கணை நீழல்

    ‘இளமை நில்லாது யாக்கை நிலையாது வளமையோ செல்வமோ நலம் ஒன்றும் தாராது’ என்ற பாடல் வரிகளைச் சீர்காழி குரலில் கெவிமடுக்காதவர் குறைவு. அவற்றின் நிலையாமையைப் பாடிய கவிஞர்கள் பல்வேறு உவமங்களால் தமது கருத்தினை விளக்கியிருக்கிறார்கள்.

    ‘“செல்வம் சகடக்கால் போல வரும்’

    என்று சக்கரத்தை உவமம் சொன்னார்கள். ‘உய்த்து ஈட்டும் தேனீக் கரி’ தான் சேர்த்து வைத்த தேனை இழக்கும் தேனீக்களை உவமமாக்கினார்கள்.

    ‘பனிபடு சோலை பயன்மரமெல்லாம்
    கனியுதிர்ந்து வீழ்ந்தற்று இளமை”

    என உதிர்கின்ற கனிகொண்டு விளக்கினார்கள்.

    “‘முற்றியிருந்த கனியொழிய தீ வளியால்
    நற்காய் உதிர்தலும் உண்டு’’

    என நாளை செய்து கொள்ளலாம் என்னும் சோம்பல் நினைப்புக்கு, அடிக்கின்ற காற்றில் கனி நிலைக்க, காய் உதிர்ந்துவிடும் என உவமத்தால் எச்சரித்திருக்கிறார்கள்.

    ‘சேக்கை மரன் ஒழிய சேண் நீங்கும் புள்போல’

    செல்வம் அழியும். என்றார்கள்.

    ‘மலையாடு மஞ்சுபோல்’

    தேடுகிற செல்வம் தேய்ந்து போகும் என இயற்கையோடு இயைந்து விளக்கினார்கள். இப்படி இளமை, யாக்கை, செல்வம் என்பனவற்றின் நிலையாமையை விளக்கியதன் நோக்கம் அவற்றின் படைப்பு நோக்கத்தைக் குறித்த காலத்தில் குறித்தநேரத்தில் அறிந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே. இந்த நிலையாமையை விளக்குதற்காகச் சான்றோர் ஒருவர் பயன்படுத்தியிருக்கும் உவமம்,

    ‘வைகல் தோறும் இன்பமும் இளமையும்
    எய்கணை நீழலின் கழியும்’

    என்பது தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தற்காலை கூறிய உவமம். பொருளின் நோக்கம் இளமைக்காலத்தில் இன்பம் அனுபவிப்பது.  இவ்வின்பத்திற்கு அடிப்படையான இளமை ஒவ்வொரு நாளும் கழிவதற்குத்தான் எய்யப்பட்ட அம்பின் நிழலை உவமமாக்கியிருக்கிறார் புலவர். கணைக்கு நிழல் உண்டென்றாலும் அது செல்லும் விரைவின் காரணமாகக் கட்புலனாகாது என்பது அறிக. இல்வாழ்க்கைக்கண் பெறற்குரியன அதற்குரிய செவ்வியான இளமை. ஆயினும் அவை கணந்தோறும் காலத்தால் குறைக்கப்படுவது உலகியல். பொருள் வேட்கையால் பிணிப்புண்டு நாளும் அதனை ஈட்டலும் காத்தலுமாகிய செயல்வகையே நினைந்து ஒழுகுவாருடைய வாழ்வின்கண் பொருட்பயனாகிய இன்ப நுகர்ச்சி தக்க இடம் பெறாது என்பது கருத்து. செல்வத்திற்கும் இளமைக்கும் உள்ள வேறுபாடு யாதெனின் செல்வம் இருந்து அழியும். இளமை இருக்கும்போதே அழியும். இதற்கு எய்கணை என வினைத்தொகையால் சுட்டியது அதுபற்றி என்க.

    நிறைவுரை

    ஒரு நாட்டுச் சட்டங்கள் இன்னொரு நாட்டுக்குப் பொருந்தாது. அதுபோலவே ஒரு காலத்துச் சட்டங்கள் இன்னொரு காலத்துக்குப் பொருந்தாது. இந்த வரையறை இலக்கியத் திறனாய்வுக்கும் பொருந்தும். ஒரு நாட்டு இலக்கியங்களுக்கான திறனாய்வுக் கொள்கை வேறுபட்ட மரபு சார்ந்த மற்றொரு மொழி இலக்கியங்களைத் திறனாய்வு செய்யப் பயன்படுத்துவது நெறியன்று. தமிழ்நாட்டு இரண்டாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரத்தை இங்கிலாந்து நாட்டு இருபதாம் நூற்றாண்டு ஏ.சி.பிராட்லேயின் திறனாய்வுக் கொள்கையைக் கொண்டு அளவிடுவது அல்லது மதிப்பிடுவது நேரியதன்று. பயனும் விளையாது. தமிழ் இலக்கியங்களில் உவமப் பயன்பாட்டின் கோட்பாடுகளும் கொள்கைகளும் தனித்துவம் மிக்கவை. வாழ்வியல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை. நுட்பமான இயற்கை உற்றுநோக்கலைக் களமாகக் கொண்டவை. கவிதை வெற்றிக்குத் தலையாய உத்தியாகக் கருதப்படுபவை. மேற்கண்ட பகுதிகள் இதனை ஓரளவு புலப்படுத்தியிருக்கக் கூடும்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 25

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 25

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமக் கோட்பாடுகளில் மரபின் தாக்கம்

    முன்னுரை

    ஒரு பொருளுக்குப் பல பொருட்களையும் ஒரு வினைக்குப் பலவினைகளையும் ஒரு பண்புக்குப் பல பண்புகளையும் ஒரு பயனுக்குப் பல பயன்களையும் உவமிப்பது உவமத்தின் தொடக்க நிலை. ‘நிலை’ என்றால் படைப்பாளனின் சிந்தனைப் பெருக்கும் அழகியல் உணர்ச்சியின் விரிவும் எனக் கருத வேண்டும். ‘தாமரைபோன்ற முகம்’ என்பது வளர்ந்து ‘தாமரையோ? செவ்வந்தியோ? நிலவோ?’ என்றெல்லாம் எழுதினார்கள். இவ்வாறு எழுதுவது ஏனைய உவமங்களுக்கும் பொருந்தும். இது பற்றிச் சென்ற கட்டுரைகளில் ஆராயப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக வேறு இரண்டு நிலைகளும் காணப்படுகின்றன. ஒன்று ஒரே நிகழ்வுக்குப் பல காரணங்களைக் கற்பித்து உவமமாக்குவது. இரண்டு கருத்து, கற்பனை, நிகழ்வு இவற்றின் மாறுபடுகளுக்கேற்ப ஒரு பொருளின் நிகழ்வை அதாவது எழுவாயின் வினையை இடம் மாற்றி உவமித்துக் காட்டுவது. இவை பற்றிய சில கருத்துக்கள் இந்தக் கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

    அசலும் நகலும்

    சில நேர்வுகளில் ஆர்வக் கோளாறு காரணமாக ஏடு கற்கும் சிலர் தாமே சில பாடல்களை எழுதி அதாவது மூலநூல் ஆசிரியர் நடையிலேயே எழுதி அவற்றையும் சுவடிகளில் இணைத்துவிடுவர். இது காலங்காலமாக நடந்துவரும் தமிழ்த்திருத்தொண்டு. இராவணன் முதல்நாள் போரில் தோல்வியுற்று வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்க’ நிலையைக் கம்பன் மிகச்சிறப்பாகப் பல பாடல்களில் பாடியிருக்கிறான். ஒரு பாடலில் சீதை சிரிப்பாளே என்று ‘நாணத்தால் சாம்புகின்றான்’ என்றும் கம்பர் எழுதுகிறார். இதுபோன்ற சூழல்களில் மனம் பறிகொடுத்த ஒருவர்,

    “விடங்கொண்ட  மீனைப் போலும்
    வெந்தழல் மெழுகு போலும்
    படங்கொண்ட பாந்தள் வாயில்
    பற்றிய தேரை போலும்
    திடங்கொண்ட இராம பாணம்
    செருக்களத் துற்ற போது
    கடன் கொண்டான் நெஞ்சம் போலும்
    கலங்கினான் இலங்கை வேந்தன்”

    என்று இவராகவே ஒரு பாடலை எழுதி அதனையும் கம்பராமாயணத்தில் சேர்க்க, நம்முடைய சான்றோர்களும் அதனைக் கம்பன் பாட்டே என எண்ணியும் சொல்லியும் வந்திருக்கிறார்கள். இப்பொழுது இங்கே சொல்ல வருவது படித்தவர் எழுதிய அந்தப் பாட்டில் கூட இராவணனின் துன்பத்திற்கு ஒரே உவமம் சொல்லப்படாமல் ஒன்றுக்கு மேற்பட்ட உவமங்களைப் பந்தி வைப்பதைக் காணலாம். படைப்பாளனுக்கு மட்டுமன்று படைப்பைப் படிப்பவனுக்கும் இத்தகைய உணர்வு வந்திருக்கிறது என்பதை நோக்க வேண்டும். இதற்கு அடுத்த நிலையில்தான் ஒரே நிகழ்வுக்குப் பல காரணங்களைக் கண்டறியும் உவமச் சிறப்பைக் காணமுடிகிறது.

    கதிரவன் தோற்றமும் கவிஞன் உள்ளமும்

    பொருளையே உவமமாகச் சொல்லும் கவிதை மரபு தமிழில் இன்றும் தொடர்கிறது.  அத்தகைய உவமைகளில் மனிதநேய உணர்வுகளும் மானிட மதிப்புக்களும் அழகியல் வெளிப்பாடுகளும் கலந்தமைந்திருப்பது சுட்டுதற்குரியது. நிகழ்வு ஒன்று. அதற்கான காரணங்களைப் படைப்பாளன் நிரல்படுத்துகிறபோது கவிஞனின் அழகியல் உணர்வு, பன்முக நோக்கு, சமுதாயச் சிந்தனை, மனித நேயம் முதலிய அனைத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. காலைக்கதிரவன் தோற்றத்தை முடியரசன் பாடுகிறார்.

    “இன்னலுறும் பிணியாளன் துயரம் தீர்க்க
    இனியமொழி வழங்கவரும் நண்பன் போலத்
    பன்னரிய பெருங்காதல் பிணிப்புண் டாங்கண்
    பைதலுறும் மாவேழன் நிலைமை காணத்
    துன்னுமிருள் செகுத்தெழுந்து கீழை வானில்
    சுடர்க்கதிரோன் முகங்காட்டி விரைந்து வந்தான்”.

    காப்பியத்தின் நாயகன் மாவேழன். அவனுக்கு உற்ற தோழர் பலரிருப்பினும் உயிர்த்தோழர் சிலர் களத்தில் தம் நண்பனுக்கு உற்ற துன்பத்தை அறிந்து கொள்ளத் துடித்து வருவார் போலக் கதிரவன் கீழ்த்திசையில் விரைந்து வந்ததாக உவமிக்கிறார். இதே கதிரவன் உதயத்திற்குத்,

    “தினவெடுத்த திண்டோளர்  தருக்கி நின்று
    செயும்போரை எதிர்நின்று காண்பான் போல
    முனமடுத்த இருளென்னும் திரையை நீக்கி
    முகங்காட்டிச் செங்கதிரோன் எழுந்து வந்தான்”

    களக்காட்சியை நேரில் மற்றும் அருகில் காண்பதற்காகச் செங்கதிரோன் எழுந்து வந்தான் என்று பாடுகிறார்.

    “ஆயிழையின் மனத்தகத்தே அடக்கி வைத்த
    ஆர்வமெலாம் திரண்டுருண்டு வடிவு கொண்டு
    மாயிருநீர்க் கடற்பரப்பில் உருவுகாட்டி
    வருவதுபோல் செங்கதிரோன் கீழை வானில்
    ஞாயிறென முகங்காட்டித் தோன்றி வந்தான்”

    என்னும் வரிகளில் மனத்துள் அடக்கிவைத்த ஆர்வத்தையே உருண்டை வடிவத்தில் தேக்கிவைத்த கதிரவன் காலைப்பொழுதில் கீழ்த்திசையில் எழுந்து வந்ததாக எழுதுகிறார்.

    காலைக் கதிரவன் கீழ்க்கடலில் எழுகின்ற ஒரே காட்சியை நண்பன் போல வந்தான் என்றும், போர்க்களத்தை விருப்பத்துடன் காண்பவன் போல வந்தான் என்றும், ஆர்வமே உருக்கொண்டு வந்ததைப் போல் வந்தான் எனவும் பலபட உவமத்தால் விளக்குவதையும் அவ்வுவமங்களெல்லாம் நட்பு, வீரம், உணர்ச்சி  ஆகியவற்றைச் சார்ந்து அமைந்திருப்பதையும் காணமுடிகிறது.

    மழையும் வைரமுத்தும்

    இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில்  இயற்கையைப் பாடுவதில் பாவேந்தருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் வைரமுத்து என்பது தரவுகளால் உறுதி செய்யப்பட்ட உண்மையாகும். மழைத்துளியை வைரமுத்து அனுபவித்துப் பாடும் கவிநேர்த்தியை அவருடைய கவிதைகளில் பரக்கக் காணலாம். இங்கே மழையையும், அதன் துணைவினைகளையும் கவிதைகளில் உவமமாக்கும் அவருடைய தனித்திறன் ஆராயப்படுகிறது. போலிக்காதலுக்கு மயங்கிச் சீரழிந்த ஒரு பெண்ணின் புலம்பலில்,

    “மழையூறிய காகிதமானேன்”

    என்னும் உவமத்தை வைத்துக் காட்டுகிறார். மழை விழுந்து காகிதம் ஊறிவிடுமானால் சேதாரம் காகிதத்திற்கேயன்றி மழைக்கன்று. ஆணின் பசப்பலுக்குப் பெண்மை ஏமாறும் பொழுது அழிவு பெண்மைக்கன்றி ஆணுக்கன்று என்னும் உண்மையை விளக்குதற்குக் காகிதத்தை ஊறச் செய்யும் மழையின் துணைவினை ஈண்டு உவமமாக்கப்பட்டுள்ளதை அறியலாம். இதனை ‘நீரூரிய காகிதம்’ என்னாது, மழையூறிய  காகிதம் எனக் கூறியது காகிதம் நீருக்குள் விழுந்தால் அது நீரூரிய காகிதம்! கிடந்த காகிதத்தின் மேல் மழைபெய்து நனைந்தழியுமானால் அது மழையூறிய காகிதம். கிடந்த காகிதம் என்பது பெண் என்பதைக் கற்பித்துக் கொண்டால் நுட்பம் புரியும்.

    மழைபெய்த களிமண் நிலமும் மனித மனமும்

    மழையூறிய காகிதத்தைத் தடமாறிய பெண்ணுக்கு உவமமாக்கிய வைரமுத்து அதே மழைபெய்த களிமண் நிலத்தை மனிதனின் மனத்துக்கு உவமமாக்கியிருக்கிறார்.

    “மழைக்கு வெளியே நின்று
    மழையை ரசியுங்கள்
    மழை பெய்த களிமண் நிலமாய்
    மனம் எப்போதும் நெகிழ்ந்திருக்கட்டும்”

    மழை பெய்து நனைத்த இடங்களாக காகிதத்தையும், களிமண்ணையும் கொண்டு, சீரழிந்த பெண்ணுக்கும் சிந்தையின் நெகிழ்ச்சிக்கும் உவமமாக்கிக் கொள்கிறார். மழைபெய்த ‘செம்புலத்தைச்’ சங்க இலக்கியம் காட்டுகிறது. மழைபெய்த களிமண் நிலத்தைப் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ காட்டுகிறது. முன்னது காதல் கலப்பிற்கு உவமை. பின்னது மாந்தர் மனம் இருக்க வேண்டிய நிலைக்கு உவமை. மழைபெய்து கலக்கும் மணலை விடச், செம்மண்ணை விட, வேறு மண்வகையை விட இளகி நெகிழ்ந்து கிடக்கும் நிலம் களிமண் என்பது உண்மை. இரக்கம், அன்பு, பாசம், நேசம் ஆகிய மாந்த உணர்வுகளின் குறியீடாகவும் இதைக் கொள்ளலாம். சிற்றூர் வாழ்க்கையில் திளைத்தவராதலின் மழைபெய்த களிமண் நிலம் கவிஞர்தம் உள்ளத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது என்பது,

    “மழைபெய்த களிமண் நிலமாய்
    புலவர்  மனம் பொசுக்கென்று நெகிழ்ந்தது”

    என இதே உவமையைத் தமது புதினமொன்றிலும் நெகிழ்ச்சிப் பொருண்மையை விளக்கக் கையாண்டிருப்பதால் உணர்ந்து கொள்ள முடியும். மேலும்,

    “கள்ளமனம் நமைவெற்றிக் கொள்வ தில்லை!
    கடல் நீரை மழைபெய்து நனைத்த தில்லை”

    என்னும் கவிதை வரிகளில் மழை பெய்தும் நனையாத இடமாகக் கடலைச் சுட்டிக்காட்டுகிறார்.  மழைநீரால் கடலை நனைக்க முடியாதது போலவே கள்ள மனத்தால் நல்ல மனத்தை வெற்றி கொள்ள இயலாது என்னும் வாழ்வுண்மையையும் விளக்கிக் காட்டுகிறார்.

    இடம் மாறி விழுந்த மழை!

    இதே மழைத்துளி நனவு கனவானதற்கும் உவமமாகப் பயன்பட்டிருப்பதை வைரமுத்து கவிதைகளில் காணமுடிகிறது. தன் எழுத்துக்களையெல்லாம் அச்சில் ஏற்றி நூலாக்கி அதன் மூலம் வருவாய் ஈட்டலாம் என்னும் மகாகவி பாரதியின் கனவு,

    “கடலில் விழுந்த மழைத்துளியாய்க் காணாமல் போயின”

    என உவமத்தால் விளக்குவார் வைரமுத்து. கடலென்னும் பரந்துபட்ட நீர்நிலையையும், அதில் விழும் ஒரு சொட்டு மழைத்துளியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உவமையின் ஆளுமை புரியக்கூடும். பாரதியின் ஆசை உருவம் இழந்து ஒன்றுமில்லாமல் போனதற்குத்தான் இந்த உவமை பயன்படுத்தப்படுகிறது. உருவமில்லாமல் போவதைச் சுட்டுதற்குப் பயன்பட்ட இந்த உவமத்தில் சிறிது மாற்றம் செய்து,

    “சுடுமணலில் கொட்டிய மழைத்துளி போல”

    எனப் பயன்படுத்தியிருப்பதையும் காணமுடிகிறது. சுடுமணலில் கொட்டிய மழைத்துளி, விரைந்து மண்ணுக்குள் வடிந்துவிடும். பாரதியின் வாழ்க்கையில் சுவை குறைந்து போய்விட்டதைக் குறிப்பதற்குச் சுடுமணலில் விழுந்த மழைத்துளியைப் பொருத்தமாகப் பயன்படுத்துகிறார் வைரமுத்து. புலப்படுத்தும் பொருண்மைகளுக்கேற்பக் ‘கடல்’, ‘சுடுமணல்’ என மழைத்துளி விழும் இடத்தையும் மாற்றிக் கொள்ளும் படைப்புத் திறன் குறிப்பிடத்தக்கது.

    சிதறும் மழைத்துளியால் சிதறும் சிந்தனைகள்

    தான் கண்ணீர் விட்ட சூழ்நிலைகளை நினைவுக்குக் கொண்டு வரும் வைரமுத்து உறவுகளால் தான் கைவிடப்பட்டதைச் சுட்டுகிறார்.

    “சிகரத்தில் விழுந்த மழையாய்ச்
    சிதறிய உறவுகளின்
    சேராத பாசத்தில்”

    தான் விட்ட கண்ணீரில் வங்கக்கடல் மூழ்கியதாகக் கற்பனை செய்கிறார். கடல், சுடுமணல் ஆகிய இரண்டோடு, சிகரமும் மழைத்துளி விழுந்த இடமாகக் கவிஞரால் கண்டறியப்படுகிறது. அழிதல், இறங்குதல், சிதறுதல் ஆகிய வினைகளோடு வழிதல் ஆகிய வினைக்கேற்பவும் மழைத்துளி உவமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் அரவிந்தருடைய வரலாறும் வ.வே.சு. அய்யரின் வரலாறும் கொஞ்சம் வேறுபட்டது. அவர்கள் விடுதலை வீரர்களாய்த் தோன்றி ஆன்மீகச் செல்வர்களாய் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். அப்பெருமக்களைப் பாரதி சந்தித்ததன் விளைவு அவர் உள்ளத்தில் உணர்ச்சித் தீ கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

    “கொதித்துக் கொதித்துக்
    கொப்புளித்த உணர்ச்சி
    வாழைமரத்தில் விழுந்த
    மழைத்துளியாய்
    வழியத் தொடங்கியது”

    கதிரவனின் வெப்பத்தைத் தனது கவிதைகளில் தேக்கிய பாரதியின் பிற்காலச் செயல்பாடுகள் வேகம் குறைந்ததற்கு அரவிந்தர், அய்யர் ஆகியோரைச் சந்தித்ததுதான் காரணம் என்னும் கருத்தை முன்மொழியும் வைரமுத்து, வாழைமரத்தில் விழுந்த மழைத்துளியை உவமமாக்குகிறார். மழைத்துளி மற்ற மரங்களில் விழுவதற்கும் வாழை மரத்தில் விழுவதற்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. வாழை மரத்தில் எந்தப் பக்கம் நீர் விழுந்தாலும் தேங்கி நிற்பதற்கான வழியே கிடையாது. வழிந்து விடும். பாரதியின் உணர்ச்சி மளமளவென்று குறைந்து போனதற்கு மழைத்துளி விழுந்த இடமாக வாழை மரத்தைக் கண்டது நுட்பமான சிந்தனையாகும்.

    இயற்கையைப் பாடும்பொழுது சமுதாயச் சிந்தனைகளையும் சமுதாயச் சிந்தனைகளைப் பதிவு செய்கிறபோது இயற்கைக் கூறுகளையும் உவமமாக்குவது கவிஞர்களுக்கு இயல்பு. இயற்கையோடு கவிஞர்கள் கொண்டிருந்த உறவும், சமுதாயத்தோடு அவர்கள் கொண்டிருந்த நேசமும் இத்தகைய ஆற்றலை அவர்களுக்குத் தந்திருக்கக் கூடும். தமிழிலக்கிய வரலாற்றில் முதிர்கன்னிகளைப் பற்றிய சிந்தனை திருவள்ளுவர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. கவிதைகள் தொடர்கின்றன. அவர்கள் கண்ணீர்தான் காயவில்லை. வைரமுத்து தமது கவிதையொன்றில் காலம் கடந்த முதிர்கன்னிகளின் திருமணத்தைக் கூறும் பொழுது,

    “கழிந்து போனது காலம்.
    இனி மறந்து மழை பெய்தாலும்
    அது
    வேரில் விழும் மழையா?
    விறகில் விழும் மழையா?”

    என உவமத்தால் வினவுகிறார். ‘வேர்’ என்பது பருவத்தில் மணம் செய்ய வேண்டிய கன்னி. ‘விறகு’ என்பது பருவந்தவறி மணம் செய்து கொள்ளும் கன்னி. மழை திருமணம். மழை வேரிலே விழுந்தால் பயிர் தழைக்கும். அதே மழை விறகிலே விழுந்தால் விறகும் தழைக்காது. மழையாலும் பயனில்லை. பருவம் கழிந்து நடைபெறும் திருமணத்தால் கன்னிக்கும் பயனில்லை., கணவனுக்கும் பயனில்லை. மழை பெய்கிற இடத்தைப் பசுமையான வேராகவும், காய்ந்த மரமாகவும் மாற்றித் தான் சொல்ல வந்த கருத்தைத் தெளிவுபடப் பதிவு செய்யும் திறன் நோக்கத்தக்கது.

    பாலைவனப் புல்லில் விழுந்த மழைத்துளி

    மழைத்துளி ஒன்றானாலும் அது விழுகின்ற இடங்களின் மாற்றங்களுக்கேற்பக் கவிதையின் பொருண்மைகளில் ஏற்படும் மாற்றம் தொடர்ந்து ஆராயப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மழைத்துளி பாலைவனத்துப் புல்லில் விழுவது அவரது உரைநடைப்பகுதியிலும் உவமமாக்கப்பட்டுள்ள திறன் ஒப்பீட்டுக்காகச் சுட்டப்படுகிறது.

    “ஒரு பாலைவனப் புல்லின் மீது எப்போதாவது ஒரு மழைத்துளி விழுந்தால் அந்தப் புல் எப்படிப் புளகிக்குமோ அந்தச் சிலிர்ப்பை என் ஜீவன் உணர்கிறது.”

    கவிதை எழுதுங்கால் ஏற்படுகிற உணர்ச்சி  மெய்யுணர்ச்சி எனவும் திரைப்படப் பாடல் எழுதுங்கால் ஏற்படுகிற உணர்ச்சி பொய்யுணர்ச்சி என்றும் முன்வைக்கும் கருத்தை நளினமாக மறுத்துரைக்கிறார் வைரமுத்து. திரைப்படப் பாடல்களிலும் கவிதைக் கூறுகள் அரிதாக அமைந்துவிடும். அந்த அருமையையே பாலைவனப் ‘புல்லின் மீது பெய்த மழைத்துளி’ என்று உவமிக்கிறார். இந்த உவமையால் திரைப்படங்கள் இலக்கியச் சோலைகள் அல்ல என்பதும்  திரைப்படப் பாடல்கள் அனைத்துமே இலக்கியத்தரம் வாய்ந்ததல்ல என்னும் உண்மையும், அவற்றுள்ளும் இலக்கியத் தரமுடைய உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் அரிதாக  அமைவதுண்டு என்பதும் விளக்கமாகின்றன.

    பாலைவனத்தில் விழுந்த மழைத்துளியைப் போலவே பாறையில் விழுந்த மழைத்துளியையும் கருத்து விளக்கத்திற்காகத் தனது வரலாற்றுப் புதினமொன்றில் உவமமாகப் பயன்படுத்தியிருப்பதையும் அறியமுடிகிறது. ‘வில்லோடு வா நிலவே’ என்னும் தமது வரலாற்றுப் புதினத்தில் ‘மாமூலர்’ என்னும் புலவர் பாத்திரம், மாறுவேடத்தில் வந்த சேரலாதனை அடையாளம் கண்டு வணங்கியபோது சேரனுடைய பதற்றத்தைப் பதிவு செய்யும் வைரமுத்து,

    “பாறையில் விழுந்து சிதறும் மழைத்துளியாய்ப்”

    பதறி எழுந்ததாகக் கூறுகிறார். பாலைவனத்து மழைத்துளி மணலின் உள்ளிறங்கப், பாறையில் விழும் மழைத்துளி சிதறும் என்னும் உண்மையை முன்னிறுத்தி, அதனைச் சேரலாதனின் பதற்றத்திற்கு உவமமாக்கியிருப்பது (கட்டுரை கவிதை உவமங்களைப் பற்றியதாக இருப்பினும்) ஒப்பீட்டுக்காக ஈண்டுச் சுட்டப்படுகிறது.

    இவ்வாறு சுடுமணல், சிகரம், வாழைமரம், வேர், விறகு, கடல், பாலைவனம், பாறை என மழைத்துளி விழும் இடங்களின் அடிப்படையில் அதன் விளைவுகளையும் பயன்களையும் கருத்திற் கொண்டு கையாளப்படும் உவமைகள் பொருண்மைகளை ஆளும் திறத்தை அளவிடமுடிகிறது.

    நிறைவுரை

    ஒரே நிகழ்வுக்குப் பல உவமங்களை நிரல்படுத்தும் நிலையிலிருந்து ஒரே நிகழ்வுக்குப் பல காரணங்களைக் கற்பித்து அவற்றை உவமமாக்குவதும், மழை முதலிய எழுவாய்களின் வினைபடு களத்தை மாற்றி அமைப்பதன் மூலம் சொல்லவரும் கருத்துக்களுக்குக் கூடுதல் தெளிவு தர முயல்வதும் தமிழ்க்கவிதை உவமக்கோட்பாடுகளின் நுண்ணியமாகும். திருவள்ளுவர் பிறர்க்குப் பயன்படும் செல்வம் உள்ளவனைப் ‘பழுமரம்’ என்றும் மக்கட் பண்பில்லாதவனை ‘மரம் போல்வர்’ என்றும் பாடியிருக்கிறார். இதனால் மேலே சுட்டிய உவமத்தின் பிற்காலப் பரிணாமம் மரபு சார்ந்ததே என்பது பெறப்படும்.

    (தொடரும்…)

    Share