Tag: புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்

  • (Peer Reviewed) தமிழ்த் திரையிசைப்பாடல்களில் அந்தாதி  – ஓர் ஆய்வுப் பார்வை

    (Peer Reviewed) தமிழ்த் திரையிசைப்பாடல்களில் அந்தாதி – ஓர் ஆய்வுப் பார்வை

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்                                                                                                                         
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
    மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

    முன்னுரை

    மரபு என்பது மாறாதது. மாற்றம் என்பதும் மாறாதது. அப்படியானால் மரபு மாறுமா? அல்லது மாறுவது மரபாகுமா? என்றால் உறுதியாக இல்லை. மரபு மாறாதது என்பது மட்டுமன்று; மாறுவது மரபாகாது. மாற்றமடைவது மரபின் பூக்களே! அடிமரமாகிய மரபு என்றைக்கும் மாறாது. அப்படி மாறினால் அது மரபாகாது. மாறினால் என்னாகும்? பிறிது பிறிதாகும். கட்டமைப்பு சிதறிவிடும். என்னதான் தமிழில் புதுக்கவிதை,  ஹைக்கூ, சென்ட்ரியூ, லிமரைக், பழமென்ரியு எனக் கவிதைப்பூக்கள் புதுமையாகப் பூத்தாலும் அவற்றைத் தாங்குவது மரபின் வேர்களே! அல்லது மரபாகிய வேரே! இந்தப் பின்புலத்தில் மரபார்ந்த யாப்புக் கூறுகளில் ஒன்றாகிய அந்தாதியில் அமைந்த திரையிசைப்பாடல்கள் சிலவற்றைப் பற்றிய ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

    கட்டுரைக் கட்டுமானம்

    ‘அந்தாதி’ என்னும் மரபியல் சார்ந்த யாப்பு நெறி, மெட்டுக்களுக்கு எழுதப்படும் திரையிசைப் பாடல்களில் அமைந்துள்ள பாங்கினை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களில் வந்த ஒருசில பாடல்களையே தனக்குத் தரவுகளாகக் கொள்கிறது. விதிவருமுறையில் அமைந்த இக்கட்டுரை, விளக்கவியல் திறனாய்வு நெறிப்படி கட்டமைக்கப்படுகிறது. மரபும் புதுமையும் இணைந்து இழையும் இத்தகைய பாடல்கள் ஆழமான மேலாய்வுக்குரியது என்னும் நோக்கத்தை முன்னிறுத்துகிறது. திரைப்படப் பாடல்கள் பற்றிய சுவையுணர்வின் அடர்த்தி இன்னும் கூடுதலாக அமைவதோடு, மரபின் நிழலை அடையாளம் காணும் முயற்சியும் கூடும் என்பனவற்றைப் பயனாகக் கொள்கிறது.

    அந்தாதியின் இலக்கிய நிலை

    அந்தாதித் தொடைத் துளிகளைக் கொண்ட பாடல்களிலிருந்து அந்தாதி என்பது தனியொரு இலக்கியமாக உருவெடுத்தது கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் என்பது ஆய்வறிஞர் கருத்தாகும். காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதியே அந்தாதி இலக்கியத்தின் தலையிலக்கியமாகும். காரைக்கால் அம்மையாருக்குப் பின் சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்தடிகள், பரணதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி முதலியோர் அந்தாதி இலக்கியத்தை வளர்த்த சான்றோர்கள் ஆவர். ஆனால் இதற்கு முன் தோன்றிய திருமந்திரத்தின் நான்காம் மந்திரம் முழுமையும் அந்தாதித் தொடையால் அமைக்கப்பட்டது. தேவாரப் பகுதிகளும் திருவாசகத்தின் திருச்சதகமும் அந்தாதித் தொடையால் அமைக்கப்பட்டவையே. அந்தாதி தனி இலக்கியமாக உருப்பெற்ற காலத்திற்குப் பின்னும் அதன் தொடையழகில் கவிஞர்கள் மயங்கியது உண்மை என்பது இதனால் புலனாகிறது.

    அந்தாதி இலக்கியக் கூறுகளுக்கும் அந்தாதி இலக்கியத்திற்குமான ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. அந்தாதிக் கூறுகள் பாட்டின் இடையில் வருவன. ஒரு பாட்டுக்கும் அடுத்த பாட்டுக்குமான இயைபு. ஆனால் அந்தாதி இலக்கியம் மாறுபட்டது. அந்தாதி இலக்கியத்தின் முதற்சீரும் ஈற்றுச்சீரும் ஒன்றாகவே அமைய வேண்டும். பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி என்னும் நூல் ‘உதிக்கின்ற’ எனத் தொடங்கி ‘உதிக்கின்றவே’ என நிறைவடைவது காணலாம். ‘மெய்தான்’’ எனத் தொடங்கி ‘மெய்யனே’ என்று முடிவது திருச்சதகம். ‘பூவான்’ எனத் தொடங்கிப் ‘பூவே என்று முடிவது சிவப்பிரகாசர் எழுதிய ‘நான்மணிமாலை’. கவிக்கோ துரை.வசந்தராசன் எழுதியுள்ள ‘வேல் வேல்! வேல்!’ என்னும் குறளந்தாதி வேலில் தொடங்கி வேலிலேயே நிறைவடைகிறது.

    அந்தாதித் தொடையில் பாரதி எழுதிய இலக்கியங்களான பாரதமாதா நவரத்தினமாலை, திருத்தசாங்கம், விநாயகர் நான்மணி மாலை முதலியன முதற்சீரும் ஈற்றுச்சீரும் பொருந்துமாறு அமையவில்லை.

    சிற்றிலக்கியங்களுக்கு வரையறை கிடையாது எனினும் அந்தாதி இலக்கியம் அவற்றுள் ஒன்றாகவே கருதப்படுகிறது. வெண்பா அந்தாதி, கலித்துறை அந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, ஒலியந்தாதி, கலியந்தாதி, சிலேடையந்தாதி, திரிபந்தாதி, யமக அந்தாதி, நீரோட்ட யமக அந்தாதி எனப் பலவாறு அமைவதுண்டு.

    ‘அந்தாதி’ என்னும் பெயர் தாங்கித்தான் அந்தாதி இலக்கியம் அமைய வேண்டுமென்பதில்லை. இரட்டை மணிமாலை, மும்மணி மாலை, ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது, அலங்காரப் பஞ்சகம் முதலான பல்வேறு சிற்றிலக்கியங்களும் அந்தாதித் தொடையிலேயே அமைந்தவை என்பது நோக்கத்தக்கது. அந்தாதி ரசிப்பதற்குரியது. இந்த ரசனை சங்கக் காலத்திலேயே தொடங்கிவிடுகிறது.

    மண்திணிந்த நிலனும்
    நிலனேந்திய விசும்பும்
    விசும்பு தைவரு வளியும்
    வளித் தலைஇய தீயும்
    தீ முரணிய நிலனும் என்றாங்கு
    ஐம்பெரும் பூதத்து இயற்கை போல

    என்னும் புறநானூற்று வரிகளில் அடியின் முடிவு தொடக்கமாகி அமைந்துள்ள பாங்கினை அறியலாம்.

    மால்வரை ஒழுகிய வாழை
    வாழை பூவெனப் பொலிந்த ஓதி

    என்னும் சிறுபாணாற்றுப்படையிலும், அந்தாதித் தொடை அழகுற அமைந்துள்ளது. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்து பாடியவரான காப்பியாற்றுக் காப்பியனார் அப்பத்து முழுமையும் அந்தாதித் தொடையில் அமைத்துப் பாடியுள்ளார். புறப்பாடல் மட்டுமன்றி அகப்பாடல்களிலும் அந்தாதி அமைந்த காலம் உண்டு.

    மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்ட கொல்
    வண்டின் மான்குணம் மகிழ்நன் கொண்டான் கொல்?”

    என்னும் ஐங்குறுநூற்றிலும்,

    குன்றகத்ததுவே கொழுமிளைச் சீறூர்
    சீறூரோளே நாறுமயிர்க் கொடிச்சி
    கொடிச்சி கையகத்ததுவே

    என்னும் நற்றிணையிலும் அந்தாதித் தொடைகள் ஆங்காங்கே அழகுகாட்டி அமைந்திருக்கின்றன.

    திங்கள் மாலை வெண்குடையான்
    சென்னி செங்கோல் அதுவோச்சி
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாய் வாழி காவேரி
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவா தொழிதல் கயற்கண்ணாய்
    மங்கை மாதர் பெருங்கற்பென்று
    அறிந்தேன் வாழி காவேரி

    என்னும் சிலப்பதிகார வரிகளில் இரண்டு அடிகளே அந்தாதியாக வந்திருக்கின்றன என்பதும் நோக்கத்தக்கது.

    படைப்பிலக்கியத்தை விஞ்சும் திரையிசைப்பாடல்கள்

    பெரும்பாலும் மெட்டுக்கு எழுதப்படுபவையே திரையிசைப்பாடல்கள். உண்மையில் கவித்துவத்திற்கான உரைகல்லும் திரையிசைப்பாடல்களுக்குமான உரைகல்லும் வெவ்வேறானவை. கவிதை நூல்களுக்கும் மேடைக்கவியரங்கத்திற்குமான வேறுபாடாகக் கொள்ள முடியும். கவிதை நூல்கள் காலங்கடந்து நிற்பன. நிற்பதற்கு உரியன. நிற்க வேண்டியன. எல்லா கவிதை நூல்களுக்கும் இது பொருந்தாது. பாரதிதாசன் எழுதிய எல்லாக் கவிதை நூல்களும் வெற்றியடையவில்லை என்பது இங்குக் கருதத்தக்கது. திரையிசைப்பாடல்களின் வெற்றி பெரும்பாலும் அமைக்கப்படும் இசையைச் சார்ந்துள்ளது என்பது உண்மையேயாயினும் அவற்றுள்ளும் எழுதப்படும் வரிகளுக்காகக் கொண்டாடப்படுவன பல உண்டு. அவை குறைந்த விழுக்காடாயினும் சிறந்த வரிகளாக நின்று சிந்தையைக் கொள்ளை கொள்ளுகின்றன என்பதில் ஐயமில்லை. ஒருசில நேர்வுகளில் பண்பட்ட இலக்கியக் கூறுகளையும் விஞ்சி நிற்கக் கூடிய கற்பனை வளம் வடிவ அழகு, உணர்ச்சியோட்டம் முதலானவற்றைத் திரையிசைப்பாடல்களில் காண முடியும். ‘மங்கையர் திலகம்’ என்ற ஒரு திரைப்படம். அதில் மருதகாசி எழுதிய ஒரு தாலாட்டுப் பாடலில் வரும் கற்பனை தமிழ்க்கவிதைகளின் அத்தனைக் கற்பனைகளையும் விஞ்சி நிற்பதாக உள்ளது. தாய் தாலாட்டுகிறாள். வாடைக்காற்று குழந்தைக்கு ஆகாது. வாடைக்காற்றை நோக்கித் தாய் பாடுகிறாள்.

    நடுங்கச் செய்யும் வாடைக்காற்றே!
    நியாயமல்ல உந்தன் செய்கை!
    தடைசெய்வேன் தாழைப் போட்டு!
    முடிந்தால் உன் திறமை காட்டு!’

    ‘சன்னலின் கதவை மூடிவிட்டால் உன்னால் என்ன செய்ய முடியும்? என் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்க முடியுமா உன்னால்? உன் வேகத்தால் சன்னலைத் துளைத்துக் கொண்டு வர முடியுமா? முடியாதே!’ என்று அந்தப் பாசத்தாய் வாடைக்குச் சவால் விடுகிறாளாம். நந்திக் கலம்பகம், கம்பராமாயணம் போன்ற செவ்விலக்கியங்களில் மட்டுமே காண்பதற்குரிய அரிய அழகிய கற்பனையை ஒரு திரையிசைப்பாடலில் காணமுடிகிறதல்லவா?

    திரையிசைப்பாடல்களில் அந்தாதித் தொடை

    பல்வேறு உத்திகளில் இசையைத் தழுவி அமைக்கப்படுவன திரையிசைப்பாடல்கள். அத்தகைய திரையிசைப்பாடல்களில் அந்தாதித் தொடை பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன் வெற்றியும் பெற்றிருக்கிறது.

    ஆத்மநாதனும் அந்தாதியும்

    எம்.கே.ஆத்மநாதன் ‘‘நாலுவேலி நிலம்’ என்ற படத்தில் அந்தாதித் தொடையில் நாட்டுப்புறச் சாயலில் ஒரு பாட்டை எழுதியிருக்கிறார்.

    ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
    நல்ல பாம்பு வேடங்கொண்டு நான் வருவேன் சாமத்திலே
    நல்ல பாம்பு வேடங்கொண்டு நடுசாமம் வந்தாயானால் 
    ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரத்தில் பறந்திடுவேன்
    ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரத்தில் பறந்தாயானால்
    செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்!
    செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்
    பூமியைக் கீறியல்லோ புல்லாய் நான் மொளைச்சிடுவேன்!
    பூமியைக் கீறியல்லோ புல்லாய் நீ முளைத்தாய் ஆனால்
    காராம்பசு வேடங்கொண்டு கடித்திடுவேன் அந்தப் புல்லை
    காராம்பசு நீயானால் கழுத்து மணி நானாவேன்
    ஆலா மரத்தடியில் அரளிச் செடி நானாவேன்!
    அத்தியிலே மரமுமாவேன் அத்தனையும் பிஞ்சாவேன்!
    நத்திவரும் அத்தானுக்கு முத்துச்சரம் நானாவேன்!’’

    அந்தாதி படிப்பதற்கும் பாடுவதற்கும் எளிது. ஆனால் படைப்பதற்கு அரிது. காரணம் அந்தம் ஆதியாக இணைக்கப்படும் அசை, சீர், அடி முதலியவை சொற்பொருள் இணைப்பாக இருக்க வேண்டும். கவிதை வல்லாளர்கள் அமைப்பார்கள். மற்றவர்கள் கதைப்பார்கள். யாப்பின் உறுப்புக்களுள் தொடை என்பதும் ஒன்று. கட்டுதற்குப் பயன்படும் உறுப்புக்கள் வேறு. கட்டிய பின் பார்த்து ரசிக்கின்ற பாங்கு வேறு. பின்னது நோக்குவாரின் பார்வையில் உள்ளது. அதனால்தான் அந்தாதி என்பது யாப்பின் கூறுகளுள் ஒன்றாகக் கொள்ளாமல் தொடைவிகற்பங்களுள் ஒன்றாகக் கொண்டார்கள். ஆத்மநாதனின் பாடலில் காதலர்கள் தங்களுக்குள் கண்ட கனவைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அந்தக் கனவுப் பரிமாற்றம் ஊடலின் பரிணாமமாக ஒளிர்கிறது. அதுவும் அந்தாதியில் அமைகிறதுபோது ‘காதலி முதலானால் காதலன் முடிவாகிறான் காதலன் முதலானால் காதலி முடிவாகிறாள்’ என்னும் அரிய தத்துவத்தை விளக்குவதாகவும் அமைந்திருக்கிறது.

    கண்ணதாசனும் அந்தாதியும்

    ‘கவலையில்லாத மனிதன்’ என்று கவிஞர் கண்ணதாசனே எழுதித் தயாரித்த படம். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்’ எனத் தொடங்கும் பாடலில் அந்தாதியைக் கையாண்டிருக்கிறார்.

    பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்! வந்தாரே
    பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்!
    கண்பட்டமோகமோ? கைபட்ட வேகமோ?
    புண்பட்ட நெஞ்சிலும் புதுமைகள் தோன்றுமோ?
    எண்ணங்கள் மாறியும் மாறாத சொந்தமோ?
    பெண்மையின் நீதியில் பண்பட்ட பந்தமோ?

    வெண்முல்லைச் சோலையில் பொன்வண்டு பாடுமோ?
    பொன்வண்டு பாடினால் பூந்தென்றல் வீசுமோ?
    பூந்தென்றல் வீசினால் பருவங்கள் பேசுமோ?
    பருவங்கள் பேசினால் பலனின்றிப் போகுமோ?
    மண்பெற்ற பிள்ளைகள் எண்ணற்ற கோடியே!
    எண்ணற்ற கோடியில் பெண்மக்கள் பாதியே!
    பெண்மக்கள் காதலை ஆண்மக்கள் நாடியே
    மணமாலை சூடிடும் மணமேடை தேடியே!
    பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார் வந்தாரே
    பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்!”

    ஒரு அடியின் ஈற்றுச் சீரையே அடுத்த அடியின் முதற்சீராக வைத்து  எழுதிய கண்ணதாசன் ஒரு கண்ணியின் ஈற்றுச்சீரை அடுத்த கண்ணியின் முதற்சீராக வைத்துப் புனைந்த பாடல் இப்படி அமைந்திருக்கிறது.

    ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்!
    கோடி இன்பம் நாடிவந்தேன் காவிரியின் ஓரம்!
    ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம்!
    ஓசையின்றிப் பேசுவது ஆசை என்னும் வேதம்!
    வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும்!
    மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்!
    நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்!
    ராகந்தன்னை மூடிவைத்த வீணை அவள் சின்னம்
    சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச் சிலைக் கோலம்;!
    என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம்!
    காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும்!
    கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில கூடும்!”

    என்ற பாடல் எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழக இளைஞர்களின் உதடுகளை நனைத்த பாடல். இன்னொரு பாடல் இதயத்தையே நனைத்தது. அந்தப் பாடலும் அந்தாதித் தொடையால் அமைந்ததுதான்.

    வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்!
    நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்!
    நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்!
    கனவலைகள் வளர்வதற்குக் காமனவன் மலர்க்கணைகள்!
    மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்!
    பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும் தலையணைகள்!
    தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்!
    புதுக்கலைகள் பெறுவதற்குள் பூமாலை மணவினைகள்!
    மணவினைகள் யாருடனோ? மாயவனின் விதிவழியோ!
    விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நீரலைகள்!”

    வசந்தத்தில் தொடங்கி வசந்தத்தில் முடித்திருக்கும் கண்ணதாசனின் அரிய திரையிசைப்பாடல் இது. இந்தப் பாடலும் ஒரு அடியின் ஈற்றுச்சீரைத் தொடரடியின் முதற்சீராக வைத்து எழுதிய அரிய பாடல். இவ்வாறு அமைத்து எழுதுவதில் இவர் முன்னோடியாக இருக்கக்கூடும்.

    வாலியும் அந்தாதியும்

    கண்ணதாசனும் வாலியும் திரையிசைப் பாடலாசிரியர்கள் என்றே அறியப்பட்டுள்ளனர். ஆனால் தமிழிலக்கியக் கவிதை வரலாற்றில் கண்ணதாசனின் இடத்தைத் திரைப்படப்பாடலாசிரியர் என்னும் வரையறைக்குள் அடக்கிவிட இயலாது. இதற்கு அவருடைய கவிதைத் தொகுதிகளே சான்று. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் பெருமக்களில் கண்ணதாசன் இரண்டு பொருண்மைகளுக்காக நினைக்கப்படலாம். ஒன்று, தனிமனித அனுபவத்தையே மிகச்சிறந்த கவிதைகளாக்கியது. இரண்டு, இழுத்த இழுப்புக்கு மொழியைக் கையாளும் இலாவகம். திரைப்பட உலகில் கலைஞர் மற்றும் கண்ணதாசன் ஆகியோரைப் போல மரபியல் வீச்சும் ஆழமும் கொண்ட பிறரைக் காண்பது அரிது. வாலி முழுமையான திரையிசைப் பாடலாசிரியர். கண்ணதாசனைவிட மெட்டுக்குப் பொருத்தமாக எழுதுவதில் வாலி விஞ்சி நிற்பார். ஆனால் கண்ணதாசனின் திரையிசைப்பாடல்களில் அடைந்த இலக்கிய வெற்றியை வாலி இறுதிவரை தொடவே முடியவில்லை. பலராலும் பாராட்டப்படும் பாண்டவர் பூமி, அவதார புருஷன் முதலிய படைப்புக்களின் இலக்கியத் தரமும் சிந்தனைக்குரியது. மேடைக் கவியரங்கத்தில் வாலியின் வெற்றி அளவிட முடியாதது. அது அவருடைய சொற்சேர்க்கைகளாலும் சிலேடைகளாலும் பெற்றவை. இவற்றை ஓர் அறிமுகமாகக் கொள்ளலாமே தவிர ஒப்பீடாகக் கொள்ளக் கூடாது. அது பெரியதொரு ஆய்வுக்குரியது. வாலி முதன் முதலாக எழுதிய ‘கற்பகம்’ என்னும் திரைப்படத்திலேயே அந்தாதித் தொடையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

    பக்கத்து வீட்டுப் பருவமச்சான் பார்வையிலே படம் புடிச்சான்!
    பார்வையிலே படம்புடிச்சு பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்!
    மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்!
    மருக்கொழுந்து வாசத்திலே மாந்தோப்பில் வழி மறிச்சான்!
    மாந்தோப்பில் வழிமறிச்சு மயக்கத்தையே வரவழைச்சான்!

    தைமாதம் தாலிகட்ட மார்கழியில் கைய புடிச்சான்!
    வைகையிலே வெள்ளமில்லை விடியும் வரை கதைபடிச்சான்!
    விடியும் வரை கதை படிச்சு முடியாமல் முடிச்சு வச்சான்!

    ஊரெல்லாம் உறங்காது உள்ளமட்டும் அடங்கிவிடும்
    ஓசையெல்லாம் அடங்கிவிடும் ஆசை மட்டும் அடங்காது!
    ஆசை மட்டும் அடங்காமல் அவனை மட்டும் நெனச்சிருப்பேன்

    இந்தப் பாடல் படத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவரின் மகள் பாடுவதாக வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் மகளுக்குக் காதல் வரக்கூடாத ஒன்று என்பதன்று. அந்த வெளிப்பாடு இப்படித்தான் அமைய வேண்டுமா என்பது பொருளுள்ள வினாவே! ஒரு அறிக்கை போல அமைந்த இந்தப் பாடலில் தொடையழகு என்று தனித்து இல்லை. ஆனால் அந்தாதி அங்கங்கே தலைகாட்டுகிறது. ஓர் அடியின் ஈற்று இரண்டு சீர்களை அடுத்த அடியின் தொடக்கமாக வைத்துப் புனையப்பட்ட பாடல் இது.

    வாலியின் புதிய முயற்சி

    அந்தாதிக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுக்க முயன்றவர் வாலி. ஓரடியின் அல்லது ஒரு பாட்டின் இறுதிச்சீர், அசை என்பவற்றுள் ஒன்று அடுத்த அடியின் தொடக்கமாக அமைவதுதான் அந்தாதி. ‘அந்தம் முதலாத் தொடுப்பது அந்தாதி’ என்பது காரிகை. வாலியோ பொருளோடு கூடிய தொடரையே அந்தாதியாக்கிப் பாடுகிறார். அந்தத் தொடர் முந்தைய வரியின் ஈற்றாகவன்றி, நடுவே அமைந்திருக்கிறது.

    என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்துப் போனவன் போனான்டி
    தன்னைக் கொடுத்து என்னையடைய வந்தாலும் வருவாண்டி

    என்ற ஒரு கண்ணியில் முதற்கண்ணியின் நடுவில் இருக்கிற ‘தன்னைக் கொடுத்து’ என்ற தொடரை அப்படியே எடுத்து அடுத்த வரியின் தொடக்கமாக அமைத்துக் காட்டுகிறார். இதே நெறியில் பின்வரும் கண்ணிகளையும் எழுதியிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.

    இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்துப் போனவன் போனான்டி
    ஏக்கத்தைத் தீர்க்க ஏனென்று கேட்க வந்தாலும் வருவான்டி

    நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்துப் போனவன் போனான்டி
    நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவான்டி

    ஆசை மனசுக்கு வாசலை வைத்துப் போனவன் போனான்டி
    வாசலைத் தேடி வாழ்த்துக்கள் பாடி வந்தாலும் வருவான்டி

    அந்நாள் வரை வந்த அந்தாதியில் இது ஒரு மாறுபட்ட நிலை!. போற்றத்தக்க நிலை!. வடிவத்தில் மாற்றம் என்பதும் இதுதான். மரபில் மாற்றம் என்பதும் இதுதான்.!

    நிறைவுரை

    கவிதையை எப்படி வேண்டுமானாலும் சுவைக்கலாம். பெண்ணைக் கனியென்பது இலக்கிய மரபு. எல்லாப் பக்கமும் கனி இனிக்கும் என்பது நடப்பியல் உண்மை. ‘செவி நுகர் கனிகள்’ என்பது கம்பன் வாக்கு. கற்பனை, உணர்ச்சி, கருத்து, வடிவம் என்னும் கவிதைக் கூறுகளுள் அந்தாதி என்பது வடிவத்தோடு தொடர்புடையது. எழுத்து, அசை, சீர், தளை என்பன கவிதையின் அகக்கட்டுமானக் கூறுகள் என்றால் புறத்துப் பொலிவைக் காட்டுவன தொடை விகற்பங்கள். கட்டிடத்தின் அகமும் புறமும் போல! அவ்விகற்பங்களுள் அந்தாதி கவிதையை ஈர்க்கும் காரணிகளில் தலையாயது. சிறந்தது. இந்தக் காரணி தமிழின் தங்ககாலமான சங்கக் காலம் முதல் கணினி காலமாகிய தற்காலம் வரைத் திரையிசைப்பாடல்கள் உட்பட எழுதப்படும் கவிதைகளில் மாறாமல் நின்று நிலவுகிறது என்பதை இக்கட்டுரை ஓரளவு விளக்கியிருக்கலாம்.

    உதவிய நூல்கள்

    1. சங்க இலக்கியங்கள் — மர்ரே பதிப்பு
    2. சிலப்பதிகாரம் – கழகப் பதிப்பு
    3. பல்வேறு திரையிசைப் பாடல்கள்
    4. யாப்பருங்கலக்காரிகை – கழகப்பதிப்பு
    5. தமிழிலக்கிய வரலாறு – கா.சு.பிள்ளை

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘திரையிசைப் பாடல்களில் அந்தாதி – ஒரு ஆய்வுப் பார்வை’ என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பார்கள். இந்தக் கட்டுரை ‘பழைய மொந்தையில் புதிய கள்’ளாக இனிக்கிறது.
    2. மரபு சார்ந்தே சிந்தித்துப் பழகிய பேராசிரியர்களின் இத்தகைய கட்டுரைகள் புதுமையின் அடர்த்தியைக் கூட்டும் என்பதில் ஐயமில்லை.
    3. அந்தாதியைத் தொடைவிகற்பத்துள் ஒன்றாக முன்னோர்கள் காட்டியிருப்பது அதன் அழகு நோக்கி என்னும் கட்டுரையாளர் கருத்து அருமை!
    4. அந்தாதி இலக்கியத்தின் இடைப்பகுதி மட்டுமன்று தொடக்கமும் முடிவும் கூட ஒரே சொல்லால் நிறைவு பெற வேண்டும் என்பதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டுக்களைத் தருவது பாராட்டுக்குரியது.
    5. ‘திரையிசைப்பாடல்களில் அந்தாதியின் வரலாறு’ என்ற தனித்த ஆய்வுக்கு இக்கட்டுரை வழிகோலக் கூடும்.
    6. கவிஞர் திரு ஆத்மநாதனில் தொடங்கி வாலிவரை தரவுகளைக் தேடிக் கொடுத்திருக்கும் ஆய்வாளரின் உழைப்பு குறிப்பிடத்தக்கது.
    7. விரிவும் ஆழமும் கொண்ட அந்தாதி பற்றிய முற்பகுதி விளக்கவுரை  கட்டுரையாளரின் சங்க இலக்கியப் புலமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
    8. என்னதான் புதுமை என்றாலும் மரபின் வேர்களிலிருந்துதான் பூக்க முடியும் என்பதை உறுதி செய்யும் தெளிவான கட்டுரையாக இது மதிக்கப்படலாம்.


    Share
  • (Peer Reviewed) தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு

    (Peer Reviewed) தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்    
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
    மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

    முன்னுரை

    இலக்கியம் வெற்றி பெறுவது உத்திகளால். உத்தி பலவகைப்படும். வெளிப்பாட்டு உத்தி என்பது அவற்றுள் ஒன்று. கவிஞன் தன் உள்ளத்துக் கருத்துக்களையும் கற்பனைகளையும் பலவகையாக வெளிப்படுத்த முடியும். தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைத் தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்பர். முன்னிலைப்பொருளை நோக்கி விளித்துச் சொல்கிற இலக்கியங்களும் உள. கவிதையைப் கேட்பதற்கான பொருள்களை அழைத்துப் பாடுவதும் தூது என்ற இலக்கிய வகையில் அடங்கும். ஒருவன் தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை, வழிப்போக்கர்களை நோக்கிச் சொல்வதும் அக்காலத்தில் ஒரு இலக்கிய வகையாகக் கருதப்பட்டிருக்கிறது. இங்கே வழிப்போக்கர்கள் என்பது வறுமை தீர்க்கும் இடம் நோக்கிச் செல்வாரைக் குறிக்கும். ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் பரந்த மனப்பான்மையின் பழந்தமிழ்ச் சான்றாகத் திகழ்கின்ற இந்தக் கவிதை உத்திக்கு ‘ஆற்றுப்படை’ என்று பெயரிட்டு வழங்கியமையை அறிய முடிகிறது. இது பற்றிய சில செய்திகளை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கட்டுரைக் கட்டமைப்பு

    இந்தக் கட்டுரை ஒரு இலக்கிய வகைமையின் உள்ளடக்கச் சுருக்கமாக  அமையாமல் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய வரலாற்றை ஆராய முயல்வதாக அமைகிறது. எனவே காலமுறைத் திறனாய்வு பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு கால இலக்கியத்திலும் இதன் தாக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பற்றியும் புதுக்கவிதை, ஹைக்கூ, லிமரைக், சென்ட்ரியூ முதலியன வளர்ச்சியடைந்திருக்கும் தற்காலத்தில் மரபார்ந்த இலக்கியங்களின் இரங்கத்தக்கநிலை பற்றியும் சுட்டிக் காட்டுகிறது.

    ஆற்றுப்படை – ஒரு விளக்கம்

    ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது பிற்காலத்திய வழக்கு. அன்றைய ஆற்றுப்படையின் அடிப்படையே அதுதான். வழி தெரியாதவனுக்கு வழி சொல்லவே மறுக்கும் அல்லது தவறான வழிகாட்டும் தற்கால அவசர உலகத்தில் ஆற்றுப்படையின் ஊடிழையான மனிதநேய மாண்பினைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிமையானதன்று. குழு வாழ்க்கை நடத்திய முன்னோர்களின் வாழ்க்கைத் தடத்தில் ஆற்றுப்படுத்தல் கோடையிலே வீசிய குளிர் தென்றல்!. ‘எங்கிருந்து வருகிறாய்? என்று வறுமையாளன் கேட்கிறான். இன்னாரிடம் சென்றேன்! இவையிவை பெற்றேன்! அங்கிருந்து வருகிறேன்! அன்பனே! நீயும் செல்! அன்பனே அங்கே உனக்கு அன்பும் கிட்டும் ஆதரவும் கிடைக்கும் உனது வறுமை ஒழியும் வாழ்வு சிறக்கும்’ என்று ஒருவனை மற்றொருவன் வழிநடத்துவதே, (வழிகாட்டலே) ஆற்றுப்படையின் உள்ளடக்கமாகும்.

    தொல்காப்பியமும் ஆற்றுப்படையும்

    தொல்காப்பியப் பொருளதிகாரம் ‘கவிதையியல் பற்றிய இலக்கணம்’ என்னும் கருதுகோள் ஒப்புக்கொள்ளப்படுமானால், ‘ஆற்றுப்படை’என்பது இலக்கியத்தின் வெளிப்பாட்டு உத்திமுறைகளில் ஒன்று என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். ‘ஆற்றுப்படை’ இலக்கியம் அன்றைய சமுதாயத்தின் தனிமனித வறுமை நிலையையும் பிறர்நலம் பேணும் பெற்றியையும் ஒருசேரப் படம்பிடித்துக்காட்டும் இலக்கியத் தொழில்நுட்பமாகும்.

    கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
    ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
    பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
    சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கம்

    என்பது தொல்காப்பியம் காட்டும் அக்கால ஆற்றுப்படை இலக்கணம். இதனுள் ‘பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு’என்னும் தொடர் ஆற்றுப்படுத்துவோர்  ஆற்றுப்படுத்தப்படுவோர் ஆகியோர்தம் பொருளாதார நிலையைக் குறிப்பாகச் சுட்டுகிறது.  தற்போது பெற்றவன் முன்பு பெறாதவனாகத்தான் இருந்தான் என்பது குறிப்பு. இத்துடன், பத்துப்பாட்டில் அமைந்துள்ள ‘திருமுருகாற்றுப்படை’ முருகப்பெருமானாகிய ஒருவனே ஆற்றுப்படுத்துவோனாகவும் ஆற்றுப்படுத்தப்படுவோனாகவும் என்னும் இருநிலைப் பாத்திரமாகத் தோன்றுவதையும் கருத்திற் கொள்ளலாம். இறைவன் ஆதலின் இது சாத்தியமாயிற்று என்பதும் ஒன்று. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துவது கூத்தராற்றுப் படை என்றால் பாணனை பாணன் ஆற்றுப்படுத்துவது பாணாற்றுப்படை என்றால், முருகனை முருகன் ஆற்றுப்படுத்துதல் அல்லவா முருகாற்றுப்படை என்றாகும்? இருப்பவன் ஒருவனே! இதற்கு எப்படிப் பொருளமைதி கூற வேண்டுமெனின் இறைவனுடைய கந்தழி பெற்றான் ஒருவன் முருகனாகவே மாறிவிடுகிறான். கந்தழி பெற்றவன் பெறாதவனை முருகனிடத்தில் ஆற்றுப்படுத்துகிறான். இதுபற்றிய விரிவான விளக்கத்தைப் பேராசிரியர் துரை.அரங்கசாமி தனது ‘அன்பு நெறியே தமிழர் நெறி’ என்னும் நூலில் ஆராய்ந்துள்ளார்.

    தொல்காப்பியர் காலச் செல்வாக்கு

    ஆற்றுப்படை இலக்கியம் தொல்காப்பியர் காலத்துக் கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை என நான்காக இருந்தது. இலக்கிய வகைமைகளை எடுத்துக் கூறும் தொல்காப்பியர் ஏனைய இலக்கிய வகைகளைக் காட்டிலும் இந்த ஆற்றுப்படை இலக்கியத்தை விதந்தோதுகிறார். எனவே அவர் காலத்துக்கு முன்பே இவ்வகை இலக்கியம் சிறந்திருந்திருக்கலாம் என்பதை ஓரளவு அனுமானிக்க முடியும்.

    இலக்கிய வரலாறு எழுத வேண்டிய முறை

    பொதுவாக இலக்கிய வரலாறு எழுதுகின்ற ‘பேராசிரியர்கள்’ இலக்கியம் ஒன்றின் நதிமூலத்தைக் கண்டறிவதில்லை. அதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை. இலக்கியத்தின் உள்ளடக்கத்தையே அவர்கள் வரலாறு என்று கருதிவிடுவதுதான் இதற்குக் காரணம். சான்றாகத் தூது இலக்கியத்தின் வளர்ச்சி என்றால் அதன் முளை  இராமாயணத்தில் அங்கதன் தூது, பாரதத்தில் கண்ணன் தூது என்றவிடத்திலிருந்து அல்லவா தொடங்க வேண்டும்? பிறகு வரலாற்றில் தூது என்பது தொண்டைமான் இளந்திரையனிடத்தில் அதியமானுக்காக ஔவையார் சென்ற தூதும்  பிரபந்தங்களில் காணப்படும் தூதுக் கூறுகளும் ஆராயப்படல் வேண்டும். இத்தகைய தொடராய்வுக்குப் பின்பே தூது எவ்வாறு தனித்த இலக்கியமாக உருப்பெற்றது என்பது ஆராயப்படல் வேண்டும். அதுவன்றித் தூது கலிவெண்பாவில் பாடப்பெற வேண்டும் என்பதும் அது அகப்பொருள் சார்ந்து அமைய வேண்டும் என்பதும் அதன் வகைகள் இன்னின்ன எனப் பட்டியலிடுவதும் இன்னின்ன பொருளைத் தூதாக விடுக்கலாம் என்பதும் சரியான வரலாறாகவோ வரலாற்றாய்வாகவோ அமையாது.

    ஆற்றுப்படை இலக்கியத்தின் தோற்றமும் கட்டமைப்பும்

    ஆற்றுப்படை இலக்கியத்தைக் கலைஞர்களின் இலக்கியமாகவும் கருதலாம். காரணம் இந்த நூல்களின் நாயகர்களாக அமைந்தவர்கள் கலைஞர்களே. மன்னன் பாட்டுடைத் தலைவனாக இருந்தாலும் அவனைப் பற்றிய அத்தனைச் செய்திகளையும் பரிசில் பெற்றுவரும் இரவலனே எடுத்துக் கூறுகிறான். அதாவது மன்னர்களின் திருவோலக்கத்தில் குழுவாக அமர்ந்து பாடப்பெற்ற மன்னன் பெருமை நாட்டின் சாதாரண வறுமை நீங்கப் பெற்ற இரவலனால் பாடப்பெற்றது. சுருங்கச் சொன்னால் புரவலன் பெருமையை இரவலன் பாடினான். இரவலர்கள் அனைவரும் இசை வல்லுநர்கள். ஆற்றுப்படை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு இவர்களே காரணம்.  மொழிக்கு முன்னே தோன்றியது இசை என்பதும் இசையிலிருந்தே மொழி தோன்றியிருக்க வேண்டும் என்பதும் மொழியியலார் கருத்து. எனவே மொழியும் மொழியில் தோன்றிய பாடல்களும் தொடக்கத்தில் இசையாகவே இருந்திருக்க வேண்டும். இசையாகவே பாடப்பெற்றவையாதலின் இவை நாட்டுப் பாடல்களைப்போலப் பெரும்பாலும் வாய்மொழி இலக்கியங்களாகத்தான் தோன்றியிருக்க வேண்டும்.

    பழுமரம் தேடும் பறவையினராய் எங்கோ ஒரு மன்னனிடம் சென்று அவனைப் புகழ்ந்து பாடிய இரவலர்கள் தாம் பரிசில் பெற்ற வரலாற்றின் வாய்மொழி வடிவமே ஆற்றுப்படை எனலாம்.

    அவ்வப்பொழுது மன்னன் முன்னிலையில் பாடப்பெற்ற பாடல்கள் தங்களைப் போன்றோரும் தம்மைப் போன்றே பரிசில் பெற வேண்டும் என்னும் வேட்கையின் வெளிப்பாடே இதன் அடுத்த நிலையாகக் கருதப்படலாம்.

    இதன் தொடர்ச்சியாகத் தான் பரிசில் பெற்ற மன்னனின் திருவோலக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறுவதாக வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

    பாணர்கள் கையிலிருந்துப் புலவர்களுக்கு மாறிய ஆற்றுப்படை

    ஒப்பாரிக்கு யாப்பிலக்கணம் கிடையாது. காரணம் அது மக்கள் வழக்கு. அவலத்தின் ஆற்றல் கூறுவது. அடர்த்தி வெளிப்படுவது. ஆனால் இந்த ஒப்பாரி திரைப்படத்தில் இடம்பெறுகிறபோது திரையிசைப் பாடலாசிரியர் கையில் வந்துவிடுகிறது. அந்த நிலையில் அது தனித்தன்மை பெறுகிறது. அந்தத் தனித்தன்மை முந்தைய பாமர வழக்கினின்றும் சிறந்துமிருக்கலாம். சிறவாமலும் அமையலாம். தூது இலக்கியமும் அவ்வாறே. கலிவெண்பாவில் பாடப்பெற வேண்டிய தூதிலக்கியம் தற்காலத்தில் எல்லா யாப்பு வகையிலும் பாடப்பெறுகிறது என்பதையும் திரையிசைப்பாடல்களில் இசையமைப்பாளரின் இசைக்கேற்ற வகையில் பாடப்பெறுகின்றன என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆற்றுப்படை இலக்கியமும் அதுபோன்றதுதான். தொழில்முறைப் பாணர்களிடமிருந்து அதாவது இசைக்கலைஞர்கள் கையில் தவழ்ந்த ஆற்றுப்படைப்பாட்டு தமிழ்ப் பாநெறி அறிந்த புலவர்கள் கையில் வந்தபோது பல மாற்றங்களை அடைந்தது. அவ்வாறு அடைந்த மாற்றங்களுள் ஆற்றுப்படைப் பாடப்படும் பாவகையும் முறையும் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.

    ஆசிரியப்பாவில் பாடப்பெறும் ஆற்றுப்படை

    இரவலர்கள் கையிலிருந்த ஆற்றுப்படை இலக்கியம் புலவர்கள் கையில் வந்தபோது அடைந்த மாற்றங்களில் பாவகை தலையாயது என்பது சென்ற பத்தியில் உணர்த்தப்பட்டது. பாணர்களுக்கு இசை தெரியும். புலவர்களுடைய பாடல்களில் பொருள் நயத்தை உணர முடியும். அந்தப் பாடல்களில் இசை பற்றிய குறிப்புக்கள் இருக்கலாமே தவிர இசையே பாடலாக அமையவில்லை. பெரும்பாலும் ஆசிரிய உரிச்சீர்கள் பயின்று வருவதால் ஆசிரியப்பா என்பாரும் உளர். உண்மையில் உரைநடைக்கு அடுத்த பாநிலையின் தொடக்கமாக அமைந்ததாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் பயன்படுத்தியதாலும் அதற்கு அப்பெயர் வந்திருக்கக் கூடும். ஆசிரியர் என்பதற்குப் புலவர் என்பதும் ஒரு வழக்கு. ‘ஆசிரியர் நக்கீரர்’ என்பது காண்க. இவ்வாறு இசைவாணர்களுக்கான ஆற்றுப்படை இலக்கியம் புலவர்கள் கைக்குத் தொல்காப்பியத்துக்கு முற்பட்ட நிலையிலேயே வந்திருக்க வேண்டும். பின்னாலே வந்த புலவர் பெருமக்கள் தாம் பாடிய ஆற்றுப்படைத் துறையில் தமக்கு முன்னோர்களாகிய பாணர்களை ஒரு பாத்திரமாக இடமளித்துப் பெருமைப்படுத்தினர் எனலாம். புலவர்களது கற்பனைத்திறன், வரலாற்றறிவு, இயற்கை ஈடுபாடு ஆகியனவற்றுக்கெல்லாம் ஆற்றுப்படை இலக்கியம் இலக்கியத் தளமானது,. களமானது என்றால் அது மிகையில்லை.

    சங்க இலக்கியங்களில் ஆற்றுப்படை

    ‘ஆற்றுப்படை’என்பது தமிழிலக்கியத்தின் புறத்துறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடக்கின்றன.  புறநானூற்றில் ‘பாணாற்றுப்படை’என்ற வகையில் (68, 69, 70, 138, 141, 155, 180) சில பாடல்களும், ‘விறலியாற்றுப்படை’என்னும் வகையில் (64, 103, 105, 133) சில பாடல்களும் ‘புலவராற்றுப்படை’என்னும் வகையில் (48) ஒருபாடலும் கிடைத்துள்ளன. பதிற்றுப்பத்திலும் ‘பாணாற்றுப்படை’, ‘விறலியாற்றுப்படை’ என்னும் வகையில் பல ஆற்றுப்படைப் பகுதிகள் உண்டு. ‘தொல்காப்பியர் காலத்தில் நான்காக இருந்த ஆற்றுப்படை வகைகள் சங்கக்காலத்தில் ஐந்தாக வளரச்சியடைந்தது. கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் என்பாருடன் புலவர்களும் ஆற்றுப்படுத்தியதாகப் புறநானூற்றில் குறிப்பு உண்டு. புலவர்களும் பரிசிலராதலால் பரிசு பெறத்தக்க புலவர்களைத் தாம் பரிசில் பெற்ற மன்னர்களிடத்தில் ஆற்றுப்படுத்தியிருக்கலாம். பத்துப்பாட்டில் முதுற்பாட்டாக அமைந்த திருமுருகாற்றுப்படை ஏனைய ஆற்றுப்படை அமைப்பிலிருந்து சற்று வேறுபட்டு அமைந்திருப்பது முன்னரே சுட்டப்பெற்றது.

    இறைவனிடம் புலவர்களை ஆற்றுப்படுத்தியதாக அமைக்கப்பட்ட புது வண்ண ஆற்றுப்படைகளை அடியொட்டிப் பிற்கால இலக்கண நூல்கள் அவற்றுக்கு இலக்கணத்தை வரையறை செய்த முறையையும் வரலாற்றில் காணமுடிகிறது.

    இருங்கண் வானத்து இமையோர் உழைப்
    பெரும்புலவன் ஆற்றுப்படுத்தன்று

    எனப் புறப்பொருள் வெண்பா மாலையும்,

    “புலவ ராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே”

    எனப் பன்னிரு பாட்டியலும் இலக்கணம் வகுத்திருப்பதை அறிய முடிகிறது. பாணாற்றுப்படை என்னும் ‘ஒருபெயர்’ வழக்கே, சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை என ‘இருபெயர்’ வழக்காக வகைப்பட்டது. சீறியாழை வைத்திருப்பவன் சிறுபாணன் எனவும் பேரியாழை வைத்திருப்பவன் பெரும்பாணன் எனவும் பிரித்துணரப்பட்டனர்.

    பாணாற்றுப்படை ஒரு விளக்கம்

    பாணாற்றுப்படைகளில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை என்னும் இலக்கியம் பத்துப்பாட்டுள் ஒன்றாகக் கோக்கப்பட்டுள்ளது. இது நல்லியக்கோடனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் சான்றோரால் பாடப்பெற்றது. தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சான்றோரால் பாடப்பெற்ற பெரும்பாணாற்றுப்படையும் பத்துப் பாட்டுள் அமைந்துள்ளது.

    பொதுவாகப் பெரும்பாணாற்றுப்படைத் துறையில் புறநானூற்றில் முன்பே குறிப்பிட்டுள்ளபடி ஏழு பாடல்களும் பதிற்றுப்பத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளது.

    விறலியாற்றுப்படை என்னும் பெயரால் ஏனைய ஆற்றுப்படை நூல்களைப் போல் தனிநெடும் பாட்டு கிட்டவில்லையெனினும் தொகை நூல்களில் மிகுதியாகக் காணப்படுவன இத்துறை சார்ந்த பாடல்களே. புறநானூற்றில் நான்கும் பதிற்றுப்பத்தில் ஐந்துமாகக் கூடுதல் ஒன்பது பாடல்கள் இத்துறையில் கிட்டியுள்ளன.

    ஏனைய தொகுதிகளில் காணப்படாத பொருநராற்றுப்படையும் கூத்தராற்றுப்படையும் பத்துப்பாட்டில் மட்டுமே கோக்கப்பட்டுள்ளன. கூத்தராற்றுப்படைக்கு ‘மலைபடு கடாஅம்’ என்னும் பெயர் வழக்குமுண்டு. நன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பெருங்குன்றூர் கௌசிகனார் கூத்தராற்றுப்படையைப் பாட, பெண்பாற்புலவர் எனக் கருதப்படும் முடத்தாமக் கண்ணியார் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பொருநராற்றுப்படையைப் பாடியிருக்கிறார்.

    இவ்வாறு தனிப்பெருந்துறையாக ஆற்றுப்படைத் துறை விளங்கியிருக்கிறது. தொல்காப்பியம் வாழ்வியல் நூல் என்னும் கருத்தியலிலிருந்து விலகி மாபெரும் இலக்கியவியல் அல்லது பாவியல் நூல் என்பதற்கு இதுவும் ஒரு வலுவான சான்றாகும். தனிநெடும் பாடல்களாகப் பத்துப்பாட்டுள் அமைந்த இவ்வாற்றுப்படைத்துறை சிறுகுறு பாடல்களுக்கான துறையாகத் தொகை நூல்களில் அமைந்திருக்கின்றது என்பது நோக்கத்தக்கது.

    ஆற்றுப்படையின் பிற்கால வளர்ச்சி

    சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆற்றுப்படைப் பாடல்களை மையமாகக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய ‘பன்னிரு பாட்டியல்’ என்னும் இலக்கண நூல் ஆற்றுப்படைக்கு இலக்கணம் கூறியிருக்கிறது. தமிழைப் பொருத்தவரையில் இலக்கிய வளர்ச்சி என்பது மொழியின் எளிமையாகவே கருதப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத் தொகுப்புக்களின் மொழிநடையும் அவற்றைத் தொடர்ந்து இலக்கியங்களின் மொழிநடையும் இலக்கியத்தின் ஏனைய கூறுகளில் சிறந்து விளங்கினாலும் மொழிநடையைப் பொருத்தவரையில் எளிமையே அரசாண்டது. இது நீர்த்துப் போகும் அளவுக்கு இன்றைக்கு நிலைமை இருக்கிறது.

    ஆற்றுப்படை இலக்கியங்களின் வளர்ச்சிநிலையைப் பொருத்தவரையில் திருஞான சம்பந்தப் பெருமான் பாடிய கோடிக்கரை ஆற்றுப்படை குறிப்பிடத்தக்கது. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்ட திருத்தணிகையாற்றுப்படையும் ஆசிரியர் பெயர் தெரியாத திருப்பாணாற்றுப்படையும் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில பத்திகளுக்கு முன்னர் கூறியவாறு சங்க இலக்கியங்களில் காணப்படும் புலவராற்றுப்படை பதினேழாம் நூற்றாண்டுவரை தொடர்ந்துள்ளது. திருமேனி இரத்தினக் கவிராயர் என்பார் எழுதிய புலவராற்றுப்படை இந்த நிரலில் வரும். இடைக்கால இலக்கியங்களில் ஏகம்பவாணன் ஆற்றுப்படையும் அருணகிரிநாதர் எழுதிய மற்றொரு திருமுருகாற்றுப்படையும் சிந்திக்கத்தக்கன.

    ஆற்றுப்படை இலக்கியப் படைப்பில் இஸ்லாமியர்

    குலாம் காதிர் நாவலர் என்பாரால் எழுதப்பட்ட ‘புலவராற்றுப்படை’ கவனத்தைக் கவர்கின்றதொரு ஆற்றுப்படையாகும். இது மதுரைத் தமிழ்ச் சங்கத்தலைவர் பாண்டித்துரைத் தேவரிடம் புலவர் ஒருவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. பெரும்பாலான ஆற்றுப்படை நூல்களில் இரவலர்களும் புலவர்களும் நடந்து சென்று பாட்டுடைத் தலைவனைக் காண்பதைத்தான் கண்டிருக்கிறோம். இந்த ஆற்றுப்படையில் ஆற்றுப்படுத்தப்படுகிறவன் புகைவண்டியில் செல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசில் பொருளாகக் கைக்கடியாரத்தைப் பெற்றதாகவும் பாடப்பெற்றுள்ளது. சொற்பொழிவாற்றுப்படை, காதலியாற்றுப்படை, மாணாக்கர் ஆற்றுப்படை, ஆசானாற்றுப்படை, செந்தமிழ்ச் செல்வியாற்றுப்படை எனப் பல்வகையாக ஆற்றுப்படைகள் தோன்றியிருக்கின்றன.

    ஆற்றுப்படை ஒரு பண்பாட்டுக் கருவூலம்

    “பசித்தவனுக்கு உணவை வழங்குவதை விட, அதை உருவாக்கிக் கொள்ளும் வழியை அவனுக்குச் சொல்லிக் கொடுப்பதே சிறந்த அறம்” என்பது மேல்நாட்டுப் பொன்மொழி. இன்றைய நடப்பியலின் எதிர்மறைப் போக்கினைச் சிந்தித்தால் அன்றைய ஆற்றுப்படை இலக்கியம் ஒரு பண்பாட்டு இலக்கியம் என்பதை அறிந்து கொள்ள முடியும். தான் தேடிய செல்வத்தைத் தானே துய்ப்பதும் துய்க்க இயலாக் காலத்து மாண்டு போவதும் தேடிய செல்வம் வீணாவதும் நிகழ்கால நடப்பியல். ஆனால் தனக்குப் பரிசளித்தவனின் முழு முகவரியைக் கூறி அந்த முகவரிக்குச் செல்லும் தடத்தினைச் சிறிதும் வழுவில்லாமல் எடுத்துரைத்து ‘இன்ன பரிசில் யான்பெற்றேன் எனப் ‘பெற்ற பெருவளத்தை’ மறைக்காமல் காட்டி மற்றொருவனையும் வாழச்செய்யும்’ மனநிலையின் மொழிவழி வெளிப்பாடே ஆற்றுப்படை இலக்கியத்தின் சாரமாகும். சங்க காலத்துக் கலைஞர்களின் பண்பாட்டையும் வாழ்வையும், அவர்களை ஆதரித்துக் கலை வளர்த்த புரவலர்களின் ஈர உள்ளத்தையும், வீர நெஞ்சத்தையும் ஆற்றுப்படைகள் இலக்கிய ஓவியங்களாகக் காட்டி நிற்கின்றன. ‘கொடுப்பதூஉம் அழுக்கறுப்பார்கள்’ நிறைந்த உலகில் கொடுப்பவன் இருக்கும் இடத்திற்கு வழிகாட்டும் இரவலர்கள் புரவலர்களினும் உயர்ந்தவர்களாகவே கருதப்படுவர்.

    இருபதாம் நூற்றாண்டில் ஆற்றுப்படை இலக்கியம்

    தமிழிலக்கிய வரலாற்றில் சங்ககாலத்திற்குப் பின் ஏனைய இலக்கிய மரபுகள்  உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் தொடர்ந்து வந்திருப்பினும், ஆற்றுப்படை இலக்கியம் மட்டும் அத்தகைய தொடர்ச்சியைப் பெற்று வந்ததற்கான அடையாளத்தைக் காண இயலவில்லை. சங்க இலக்கியங்களுக்குப் பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவை இருபதாம் நூற்றாண்டில்தான் தோன்றினவோ என எண்ணுமாறே வரலாறு அமைந்துள்ளது.

    1. திருச்சியைச் சார்ந்த அமிர்தம் சுந்தரநாதபிள்ளை எழுதிய ‘புலவராற்றுப்படை’
    2. மேலூர் பி.கே. சீனிவாச ஆச்சார்யா எழுதிய ‘மன்பதை ஆற்றுப்படை’
    3. தஞ்சை பழநிவேல் பிள்ளை எழுதிய ‘வரமுருகாற்றுப்படை’
    4. திம்மப்ப அந்தணர் எழுதிய ‘ஞானியார் ஆற்றுப்படை’
    5. இராமகோவிந்தசாமிப் பிள்ளை எழுதிய ‘ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா ஆற்றுப்படை’
    6. பி.எம் வேணுகோபால் எழுதிய ‘வடஅரங்க ஆற்றுப்படை’
    7. டி.எஸ்.சீனிவாசஆச்சார்யா எழுதிய ‘நமசிவாய மூர்த்தி ஆற்றுப்படை’
    8. வே.ரா. தெய்வசிகாமணி எழுதிய ‘சென்னிமலை முருகன் ஆற்றுப்படை’

    முதலிய ஆற்றுப்படை நூல்கள் இந்த நூற்றாண்டில் தோன்றியவற்றுள் சிலவாகலாம்.

    ஆற்றுப்படை இலக்கியங்களும் அ.கி.பரந்தாமனாரும்

    தமிழில் ஆற்றுப்படை இலக்கிய வடிவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் ஆவார். அவரெழுதிய ஆற்றுப்படை நூல்கள்,

    1. 1926 இல் எழுதிய ‘தமிழ் மகள் ஆற்றுப்படை’ (189 வரிகள்)
    2. 1943 இல் எழுதிய ‘திருத்தொண்டர் ஆற்றுப்படை’ (297 வரிகள்)
    3. 1958 இல் எழுதிய ‘அன்னை இயற்கை ஆற்றுப்படை’ (303 வரிகள்)

    மேற்கண்ட ஆற்றுப்படைகளுள் ‘திருத்தொண்டர் ஆற்றுப்படை’ புதியதொரு சிந்தனையை உள்ளடக்கியது. ‘திருத்தொண்டர்’’ என்னும் திருநாமம் சைவ அடியவர்களுக்கே உரியது. அதனைத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களுக்குரியதாக்கி, அவர்பால் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இது. திரு.வி.க.விடம் கல்வி பயின்றுப் பொதுவாழ்வு நெறியைக் கற்றுக் கொண்ட ஒருவர் மற்றொருவரை நோக்கி, அத்தகைய பண்புநலன்களைப் பெற்றுப் பொதுத்தொண்டு செய்யுமாறு ஆற்றுப்படுத்துவது  இதன் உள்ளடக்கமாகும்.

    இருபதாம் நூற்றாண்டு ஆற்றுப்படை இலக்கியங்களில் மரபும் புதுமையும் 

    இருபதாம் நூற்றாண்டு ஆற்றுப்படை நூல்கள் பெரும்பாலும் ‘யாப்புத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கைச் ‘செய்யுள் தளவாடங்களாகவே’ தோன்றுகின்றன. ‘கலம்பகம் பார்த்தொரு கலம்பகம்’, ‘அந்தாதி பார்த்தொரு அந்தாதி’என்னும் பாவேந்தரின் கூற்றை உறுதி செய்வனவாக அவை அமைந்துள்ளன. இருப்பினும், பத்துப்பாட்டுள் செம்பாதியாய் நின்று ‘உமாமகேசுவரராகத்’தோன்றும் இவ்வாற்றுப்படை இலக்கியங்களுள், உருவத்தால் மரபுசார்ந்தும் உணர்ச்சி — உள்ளடக்கம் ஆகியவற்றால் புதுமை சார்ந்தும் கற்பனை நயம் சார்ந்தும் கருத்துக்களின் பெட்டகமாகத் திகழ்கின்ற படைப்புக்களும் உண்டு.

    1. ‘மாணவர் ஆற்றுப்படை’என்பது பேராசிரியர் டாக்டர் சி. இலக்குவனார்அவர்களால் புதுக்கோட்டைக் கல்விச் செல்வரும் வள்ளலுமான பி.ஏ. சுப்பிரமணியபிள்ளை அவர்களைப் பற்றி, 1959ஆம் ஆண்டு 190 வரிகள்  கொண்டதொரு நூலாக எழுதப்பட்டது.
    1. கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை தன்னுடைய ஆசிரியரும் பீட்டர்ஸ் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியருமான ஆ.சுப்பிரமணிய அய்யர் அவர்களிடம் தம் நெஞ்சை ஆற்றுப்படுத்துவதாகப் பாடியது ‘ஆசான் ஆற்றுப்படை’ நூலாகும்.

    ஆற்றுப்படைகளின் பாடுபொருள்கள் பல்வகையாக அமைந்திருப்பினும், மேற்சுட்டியனபோலக் கல்வி தொடர்பான ஆற்றுப்படைகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் தனித்தும் சிறந்தும் விளங்குகின்றன. அறியாமையாகிய இருட்டை விலக்குவதிலும் குருவணக்கத்திலும் கவிஞர்களுக்குள்ள ஆர்வத்தையும் மனப்பான்மையையும் இவை வெளிப்படுத்துவதாகக் கொள்ள முடியும். ‘மாணவர் ஆற்றுப்படை’ என்றும் ‘மாணாக்கர் ஆற்றுப்படை’ என்றும் ‘ஆசான் ஆற்றுப்படை’ என்றும் அவை தாங்கியுள்ள பெயர்களே அவற்றின் பொருண்மையை விளக்கப் போதுமானவையாக உள்ளன.

    கடவூர் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படையின் தனித்தன்மை

    மரபுசார்ந்த வடிவங்களோ, சொல்லாட்சிகளோ புதியன தோன்றுவதற்குத் தடையாக இருப்பதில்லை. உத்தியால் மரபுசார்ந்தும் பாடுபொருளாலும் கற்பனையாலும் புதுமை கூட்டியும் அமைந்துவிடுமானால் எந்தவொரு படைப்பிலக்கியத்திற்கும் தனித்தன்மை தானாகவே அமைந்துவிடும். பாவேந்தர் பாரதிதாசனின் பெரும்பாலான படைப்புக்கள் இவ்வாறு அமைந்தனவே. கவிஞர் கடவூர் மணிமாறன் படைத்திருக்கும் மாணாக்கர் ஆற்றுப்படையும் இதற்கோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.  கல்வி சார்ந்த பொருண்மைகள் ஆற்றுப்படை நூல்களின் உள்ளடக்கமாக அமைந்ததற்குச் சமுதாய வரலாறு சார்ந்த மற்றொரு காரணமும் உள்ளது. பொதுவாக இந்தியாவில் சிறப்பாகத் தமிழகத்தில் கல்வியின் பெருமை உணரப்பட்டதும் அதற்கான உரிமை பெற்றதும் இருபதாம் நூற்றாண்டில்தான். அனைவருக்கும் கல்வி என்பதே இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் அமைந்த எந்த அரசுக்கும் கொள்கையாக அமைந்தது. படைப்பாளர்களும் கவிஞர்களும் சமுதாயத்தின் இந்தத் தேவையைத் தங்கள் படைப்பாற்றல் மூலம் வெளிப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மையாகும்.

    பரிசில் பெற்ற ஒருவர் பெறாத ஒருவரைக் குறிப்பிட்டதொரு வள்ளலை நோக்கி ஆற்றுப்படுத்துவதே ஆற்றுப்படையின் பொதுவிலக்கணம். அதாவது அவ்விருவரும் ‘வளத்தைப் பெற்றதையும் பெறாததையும் தவிர’வேறு எல்லா வகையினும் ஒரே தன்மையினராய் இருப்பர். இவ்வடிப்படையில் நோக்கினால், ‘மாணாக்கர் ஆற்றுப்படை’ மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறின்றி, ஆசிரியர் ஒருவர் மாணவர்களை ஆற்றுப்படுத்துமாறு அமைத்துக் காட்டியது ஆற்றுப்படை இலக்கணப் பொருண்மையை இன்னும் விரிவுபடுத்தியதாகக் கருதமுடியும்.

    ஆக்கம் நாடி அரும்பயன் தேடும்
    நோக்கம் மிகுந்தோர் ஒருங்கக் கூடுமின்!”

    என்னும் வரிகளால் மணிமாறனின் மாணாக்கார் ஆற்றுப்படையின் தனித்தன்மையைக் கீழ்க்கண்டவாறு வரையறுக்க முடிகிறது.

    1. ஆற்றுப்படுத்தும் ஆசிரியர் ஒருவராகவும் ஆற்றுப்படுத்தப்படும் மாணவர்கள் பலராகவும் இருப்பது
    2. ஆற்றுப்படுத்தப்படும் இடம், பாட்டுடைத்தலைவனின் திருவோலக்கத்திற்குப் பதிலாகக் கல்வி நல்கும் பள்ளியாக இருப்பது.
    3. கல்விக்காக வேற்றிடம் சென்று அல்லற்பட வேண்டாமென்று அறிவுறுத்துவது.

    மேற்கண்ட மூன்று கூறுகளால் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படை, ஏனைய ஆற்றுப்படைகளினின்றும் தனித்தும் சிறந்தும் விளங்குகிறது.

    பின்னத்தூராரின் ஒருவரும் மணிமாறனின் பலரும்

    இருபதாம் நூற்றாண்டின் முதல் ஆற்றுப்படை நூல் கும்பகோணம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் எழுதப்பட்டது. ‘மாணாக்கர் ஆற்றுப்படை’என்னும் பெயரால் 1900ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் 335 வரிகளைக் கொண்டுள்ளது. நகராட்சிப் பள்ளியில் படித்து நன்னிலையில் உள்ள ஒருவர் கற்பதற்கு வசதியற்ற ஒரு மாணவனை, அப்பள்ளிக்கு ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனுள் தனிமனிதரிடம் ஆற்றுப்படுத்தும் தொல்காப்பிய மரபு புதுவடிவம் பெற்று, ஒரு நிலையத்தை நோக்கி ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ள புதுமைப் போக்கு நோக்கத்தக்கது. பின்னத்தூராரின் ஆற்றுப்படை உட்பட, ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் ஒருவர் மற்றொருவரை ஆற்றுப்படுத்துவதாக அமைய, கடவூர் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படை, ஒருவர் பலரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கல்விப்பணியில் ஆசிரியர் ஒருவராகவும் மாணவர் பலராகவும் அமைந்துவிடுவது இயல்பாதலின், இத்தகைய அமைப்பு ஆற்றொழுக்கான உணர்ச்சி வெளிப்பாட்டுக்குத் துணையாகிவிடுவதைக் காணமுடிகிறது.

    திணைச்சிறப்பும் துறையமைதியும்

    புறத்திணைகளில் பாடாணும் காஞ்சியும் தனித்துவம் மிக்கன. நிலையாமையை எடுத்துக் கூறி அறத்தை முன்னிறுத்துவது காஞ்சியெனின், மனிதனின் விழுமியங்களை எடுத்துக்கூறி வீரத்தினும் அவை சிறந்தன என்னும் உண்மையை எடுத்துக் கூறுவது பாடாணாகும். அதாவது பாடாண் திணை என்பது மனிதனின் தலைமைப் பண்புகளாகிய அறிவு, ஆற்றல், தன்னலமறுப்பு, ஈகை, அன்பு, அருள் முதலிய பண்புகளைப் பாடுகின்ற திணை. மேற்கண்ட தனித்த இலக்கிய வரலாற்றை உள்ளடக்கிய ஆற்றுப்படை இலக்கியத்தின் கட்டமைப்பை ஓர் இலக்கியச் சான்று கொண்டு விளக்கி இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.

    பாடாண்திணை, புலவராற்றுப்படைத் துறையில் பொய்கையார் பாடியதாக ஒரு பாட்டு புறநானூற்றில் காணப்படுகிறது. இந்தப் பாட்டில் இன்னின்ன வளமுடையது எம்மூர். அவ்வூரை ஆள்கிறவன் இவன் எம் மன்னன். அவனிடம் சென்று பரிசு பெறுகிறபோது வழிகாட்டிய என்னை மறந்துவிடாதே’ எனச் சொல்வது போல் அமைத்திருக்கிறது. .

    நாட்டுவளத்தைக் குறிப்பாக வண்ணனைச் செய்கிறார் புலவர். வளமில்லாதவன் வள்ளலாகத் திகழ்வது இயலாது ஆதலின் அது முதலில் கூறப்படுகிறது. மலர்களை வைத்து வளத்தைக் கூறுகிறார் பொய்கையார். கோதையாகிய சேரனைக் கோதையாகிய பெண்கள் தழுவுகிறார்கள். அவ்வாறு தழுவுகிற பெண்களைக் கோதைகள் (மாலைகள்) தழுவுகின்றன.

    கோதை மார்பிற் கோதை யானும்
    கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்

    என்று கோதை என்ற சொல்லைச் சேரனுக்கும் மங்கையர்க்கும் மலர்களுக்கும் ஆக்கிப் பாடுகிறார். கரிய கழிகளில் பூத்த நெய்தல் மலர்களாலும் தேன் நாறுகின்ற தொண்டி என்பார்.

    மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
    கள் நாறும்மே கானலந் தொண்டி

    என்று பாடுகிறார். கோதை ஆள்கிற சிறப்பும், அவனைத் தழுவுகிற மாதர்ச் சிறப்பும், மாதரைத் தழுவுகிற மாலையின் சிறப்பும், கழியில் மலர்ந்த நெய்தல் சிறப்பும் வழிகாட்டுகிற பொய்கையாருக்குத் தற்போது சேய்மையாதலின் அந்த ஊர்தான் தன்னுடைய ஊர் என்று புலவரிடம் கூறுகிறாராம்.

    அஃது எம் ஊரே!’

    என்பது புலவர் மொழி!. ‘அந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆளுகிற கோதை மார்பன் தன்னுடைய அரசன்’ என்பதை,

    அவன் எம் இறைவன்!’

    எனப் பாடுகிறார். இந்த இடத்தில் மன்னன் என்னாது இறைவன் எனப் புலவர் சொல்லியதற்கு ஒரு காரணம் உண்டு. அரசநீதி செலுத்துகிற இடத்தில்தான் அவன் மன்னன் அல்லது அரசன். புரவலனாக மாறிப் புலவர்களுக்கு உதவுகிறபோது அவன் இறைவன் என்பது குறிப்பு. ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்பது நோக்குக.

    ‘அன்னோன் படர்தி’

    என்று முன்னிலையில் ஆற்றுப்படுத்துகிறான். ஒருவேளை இரவலனுக்கு விருப்பமில்லாவிடின், என்ன செய்வது? ‘படர்தியாயின்’ என்னும் ஐயக்கிளவியால் ‘சென்றால் பெறலாம்’ என்பதோடு நிறுத்திக் கொள்கிறான்.

    எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல!
     அமர் மேம்படூஉங் காலை நின்
    புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனவே!”

    என்னும் இறுதி வரிகளில் “புலவரே! அவனைக் கண்டால் காணுமிடத்து போர்க்களத்தில் நீ அடைந்த மேம்பாட்டைப் பாடி நின் புகழை மேம்படுத்தியவனைக் கண்டேன்” என்று என்னையும் நினைப்பாயாக” என்று பொய்கையார் பாடுகிறார்.

    கோதை மார்பிற் கோதை யானும்
    கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்
    மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
    கள் நாறும்மே கானலந் தொண்டி
    அஃது எம் ஊரே! அவன் எம் இறைவன்!
    அன்னோர் படர்தி யாயின் நீயும்
    எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல!
    அமர் மேம்படூஉங் காலை நின்
    புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனவே!” (புறம். 68)

    ஆற்றுப்படுத்தப்பட்ட மன்னனின் வரலாறு மருட்சியை ஏற்படுத்துகிறது.    கோதை மார்பன் என்பவன் சேர மன்னருள் ஒருவன். இவனுக்கும் மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்த பழையன்மாறன் என்பவனுக்கும் பகைமை இருந்தது. கிள்ளிவளவன் என்ற சோழ மன்னன் பழையன் மாறன் என்பவனைப் போரில் வென்றான். அதாவது சேரனுக்கும் பாண்டியனுக்கும் பகையாம். ஆனால் சோழன் பாண்டியனை வெல்கிறானாம். அதனால் சேரன் மகிழ்ந்தானாம்.

    நெடுந் தேர்,
    இழை அணி யானைப் பழையன் மாறன்,
    மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
    வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
    கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
    கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
    ஏதில் மன்னர் ஊர் கொள,
    கோதை மார்பன் உவகையின் பெரிதே. (அகநானூறு 345)

    தமிழன் ஒற்றுமை எவ்வளவு உயர்ந்ததாகப் பாடப்படுகிறது பார்த்தீர்களா????? ‘‘பாண்டியன் ஏதில் மன்னராம்’!. அவ்வாறு மகிழ்ந்த சேரனிடத்துப் புலவர் பொய்கையார் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது இந்தப் பாடல். “தலைவனது ஊரையும் இயல்பையும் கூறிமுதுவாய் இரவல எம்மும் உள்ளெனத் தம் தலைமை தோன்றக் கூறினமையின் இது புலவராற்றுப்படை ஆயிற்றுஎன்னும் பாடலின் பின் குறிப்பு புலவர்களின் செம்மாந்த மனநிலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

    ஆற்றுப்படையை அறிந்தால் அனைத்தும் அறியலாம்.

    படித்துக் கெட்டவர்கள் யாருமிலர். படிக்காமல் கெட்டவர்கள் இருக்கக் கூடும். எனவே இலக்கியச் சுவையுணர் திறனும், இலக்கிய ஆய்வுத் திறனும் கைவரப் பெற்றவர்கள் ஒரு நூலைப்பற்றிய தோற்றத்தையும் வளர்ச்சியையும் அறிந்து கொண்டால் அவ்விலக்கியத்தை முற்றும் அறிந்ததாகக் கருதப்படுவர். இசை, கூத்து என்னும் நுண்கலைகள் எவ்வாறு பழந்தமிழகத்தில் போற்றப்பட்டன என்பதையும் கலைஞர்கள் எவ்வாறு ஆட்சியாளர்களால் மதிக்கப் பெற்றனர் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அழுக்காறு அறியா அக்காலக் கலைஞர்களின் அகவழகையும் மக்கள் வாழ்வியல் நுட்பங்களைக் கவிதையாக்கும் பழந்தமிழ்ப் புலவர் பெருமக்களின் புலமைத்திறத்தையும் அறிந்து கொள்ள முடியும். வாரி வழங்கும் மன்னர்கள் ஆண்ட திறத்தையும் அவர்தம் வள்ளன்மையைப் பாடிப் புகழ்ந்த இரவலர்கள் மற்றும் புலவர்களின் நன்றியுணர்ச்சியையும் அறிந்து கொள்ளலாம். சுருங்கச் சொன்னால் சங்கக் காலம் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கான சான்றுகளில் ஆற்றுப்படை இலக்கியச் சான்றுகள் தனித்துவம் மிக்கன.   

    நிறைவுரை

    இலக்கியக் கூறுகளில் காலத்திற்கேற்பக் கருத்துக்களும் பாடுபொருளும் வடிவமும் மாறுபடும். ஆனால் கற்பனையும் உணர்ச்சியும் மாறுபடாது. அவை புதுமையாகவும் அடர்த்தி வேறுபாட்டோடும் வெளிப்படும். தமிழ்க்கவிதைகளைப் பொருத்தவரை ஹைக்கூ, லிமரைக், சென்ட்ரியூ என ஜப்பானிய இறக்குமதிக் கவிதை வடிவங்களைப் பயன்படுத்திப் படைப்புத் தொழிலைச் செய்ய எத்தனிக்கிறோம். இந்த மண்ணின் மரபுக்கேற்ற இலக்கியங்களை அத்தகைய வடிவங்கள் முழுமையாக்குமா என்பது ஐயமே!  ஆற்றுப்படை ஓர் இலக்கிய வடிவம். இலக்கிய வடிவங்களைப் பொருத்தவரையில் தொல்காப்பியம் நெகிழ்ச்சியுடையது. அந்த அடிப்படையில் தற்காலத்திற்கேற்பத் திருத்தலங்களை நோக்கியோ, புகழ்மிகு கல்வி நிலையங்களை நோக்கியோ, அறிஞர்களின் இல்லம் நோக்கியோ கவிஞர்களின் இருக்கை நோக்கியோ ஆற்றுப்படை இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். நிலைமை அவ்வாறில்லை. பழைமையில் புதுமை தேக்குகின்ற முயற்சி பாரதி, பாரதிதாசனோடு முடிவடைந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறின்றி ‘இன்று ‘புதிதாய்ப் பிறந்தோம்” என்று இலக்கியங்களும் மகிழ வேண்டும் என்றால் ஆற்றுப்படை முதலிய பழந்தமிழ் வடிவங்கள் தற்காலக் கவிஞர்களின் சிந்தனையிலும் கணிப்பொறியிலும் எழுதுகோலிலும் நர்த்தனம் புரிதல் வேண்டும்.

    துணை செய்த நூல்கள்

    1. கடவூர் மணிமாறன் மாணாக்கர் ஆற்றுப்படை, விடியல் வெளியீட்டகம்,109, மேலத்தெரு, கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.

    2. ஒளவை துரைசாமிப்பிள்ளை புறநானூறு மூலமும் உரையும், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,  சென்னை. மறுபதிப்பு – 1967.

    3. துரை. அரங்கனார் கருவிலே திருவுடையான், மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக்கோபுரத் தெரு, மதுரை – 1, இரண்டாம் பதிப்பு – 1964.

    4. தொல்காப்பியர்    தொல்காப்பியம் – பொருளதிகாரம், கு.சுந்தரமூர்த்தி (ப.ஆ.), 14, தெற்குத் தெரு, திருப்பனந்தாள் அஞ்சல், தஞ்சை மாவட்டம், இரண்டாம் பதிப்பு – 1970

    5.    நக்கீரர் நெடுநல்வாடை, தி.தெ.இ.சை.சி.நூ.ப.கழகம் லிமிடெட், சென்னை, மூன்றாம் பதிப்பு – 1955

    6.   மர்ரே பதிப்பகம் 1955இல் வெளியிட்ட பாட்டும் தொகையுமாகிய தொகுப்பு நூல்கள்.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு’  என்னுந்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு 

    1. ‘வாய்மொழி இலக்கியங்கள் படைப்பிலக்கியங்களாகப் பரிணாமம் பெறும்’ என்னும் இலக்கிய வரலாற்றின் நுண்ணியத்தைச் சிறப்பாக அணுகியிருக்கும் கட்டுரையாசிரியர். ஆற்றுப்படை இலக்கியத்தைச் சரியான தளத்தில் வைத்து ஆராய முயன்றிருக்கிறார். 
    1. பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் எழுதும் இலக்கிய வரலாறு என்பது குறிப்பிட்ட நூலின் உள்ளடக்க அமைதியைப் பந்திவைப்பதாகவே அமைந்துள்ளதை அனைவரும் அறிவர். இவர் ‘வரல் ஆறு’ என்பதற்கேற்ப நூல் வந்த மூலத்தையும் நடந்த தடத்தையும் கண்டறிவதையே இலக்கிய வரலாறாகக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது நோக்கத்தக்கது. 
    1. பாடாண் திணை  மற்றும் ஆற்றுப்படைத் துறை முதலியன பற்றிய விளக்கத்தையும், சங்கக் காலத்திற்குப் பிறகு தவளைப் பாய்ச்சலாக ஆற்றுப்படை இலக்கியம் அமைந்து போனது என்பதையும் தக்க சான்றுகளுடன் நிறுவுகிறார். 
    1. ஏனைய ஆற்றுப்படைகளிலிருந்து திருமுருகாற்றுப்படை வேறுபடும் நுண்ணியத்தைப் பதிவிடும் ஆசிரியர் அதுபோன்றதொரு விளக்கத்தை ‘மாணாக்கர் ஆற்றுப்படைக்கும்’ தந்து சமன்செய்து சீர் தூக்கும் கோல்போல் இலக்கியத் தரநிர்ணயத்தைச் செய்வது .ஆய்வுக்குத் தேவையான நடுநிலைப் பண்பைப் புலப்படுத்துவதாக அமைகிறது. 
    1. வரலாற்றை முன்னே சொல்லி, புலவராற்றுப்படையில் அமைந்த ஒரு பாட்டைப் பின்னே சொல்லி விளக்கியிருப்பது ‘இலக்கணம் கண்டதற்கு இலக்கியமாக’ மாறுபட்டதொரு சுவையினைத் தருகிறது. 
    1. பல ஆற்றுப்படை நூல்களைப் பற்றிய விளக்கமும் பட்டியலும் கட்டுரையாசிரியரின் உழைப்பையும் பொறுப்புணர்வையும் உணர்த்துவதாக உள்ளது.


    Share
  • (Peer Reviewed) தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு

    (Peer Reviewed) தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்                                                                                                                            
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
    மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

    ஆய்வு முன்னுரை

    ஒரு குறிப்பிட்ட பண்போ பண்புகளின் தொகுப்புக்களோ ஓர் இனத்தை அடையாளம் காட்டும். சப்பானியர் அரை உடம்பைக் குனிந்து குறுக்கி வணங்குவது அவர்க்கே உரிய உயரிய பண்பாகும். இருகை கூப்பிக் ‘கரமலர் மொட்டித்து’ வணங்குவது பொதுவாக இந்தியர்களின் பண்பாடாகாவும் சிறப்பாகத் தமிழர்களின் பண்பாடாகவும் கருதப்படுகிறது. இது ஏதோ தற்புகழ்ச்சி என எண்ணுதல் நெறியன்று. உலக இனக்குழுக்களை ஆராய்ந்த ஆய்வறிஞர்கள் பண்பாட்டுக் கூறுகளை ஆராய்ந்து உலகிற்குச் சொன்ன ஒப்பற்ற உண்மை இது. இந்தப் பின்புலத்தில் ‘விருந்தோம்பல்’ என்னும் தமிழர்களுக்கே உரிய தனித்த அடையாளத்தைப் பற்றிய இலக்கியக் குறிப்புக்களின் தொகுப்பாய்வே இந்தக் கட்டுரையாகும்.

    கட்டுரைக் கட்டுமானம்

    ‘தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல்’ – ஒரு தொகுப்பாய்வு’  என்னுந் தலைப்பில் இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. தமிழிலக்கியம் என்பது தமிழ்க்கவிதைகளேயாதலின் சங்க இலக்கியம் தொடங்கி இற்றை நாள் வரை உள்ள கவிதை இலக்கியங்களே ஆய்வுக்களமாகக் கொண்டு ஆய்வு நிகழ்த்தப்படுகிறது. தொகுப்பாய்வு முறையில் செய்யப்படும் இந்த ஆய்வு, ஆட்சி மாற்றங்கள், வரலாறுகள் மாறிச் சென்றாலும் விருந்தோம்பல் முதலிய உயர்பண்புகள் மக்கள் வாழ்வியல் நெறியிலிருந்து விலகிச் செல்வதில்லை என்னும் ஆழமான கருத்தியலை வலியுறுத்துவதாக அமைகிறது. முன்னோர்களின் பண்பாட்டு இருப்புக்களைத் தேடிக் கண்டறிவதும், கண்டு மகிழ்ச்சியடைவதும், ஒல்லும் வகையால் தொடர்ந்து பின்பற்றுவதுமே இந்த ஆய்வின் நோக்கமாகும். ஒரு நூலில் ஒரு கருத்து பற்றிய விளக்கமுறை ஆய்வைப் பகுப்பாய்வு என்பராதலின் ஒரு கருத்து பற்றிய பன்னூல்களின் கருத்துக்களின் தொகுப்புப் பற்றிய ஆய்வு தொகுப்பாய்வு எனக் கருதப்படலாம். முன்னுரை, உள்ளடக்கத் துணைத்தலைப்புக்கள், முடிவுரை என்னும் வடிவத்தில் அமைக்கப்படும் இந்தக் கட்டுரை, இப்பொருள் பற்றிய முந்தைய ஆய்வுகளின் தொடர்ச்சியாகவும் நினைவூட்டலாகவும் மீட்டுருவாக்கமாகவும் கருதப்படலாம்.

    விருந்து ஓர் இலக்கணப் பார்வை

    ‘விருந்து’ என்னும் சொல் விருந்தோம்பல், விருந்து புறந்தருதல், விருந்தயர்தல் என்னுமாறு பல்வகையான பின்னொட்டுக்களோடு இணைந்து பயன்படுத்தப்படுகிறது. ‘விருந்து’ என்ற சொல்லுக்குப் புதுமை என்று பொருள்.  பெண்களுக்குரிய சிறந்த பண்புகளில் ஒன்றாக விருந்தோம்பலைத் தொல்காப்பியம் குறிக்கிறது.

    விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
    பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்1

    விருந்து பற்றிக் கிட்டும் தலையாய சான்று இதுவே எனக் கொள்ளுதற்கு இடமுண்டு. இலக்கியங்களைப் பற்றிப் பேசும் தொல்காப்பியம் புதுமைப் போக்கோடு வெளிவரும் இலக்கியங்களையும் இந்தச் சொல்லால் அரவணைத்துக் கொள்வதையும் காண முடிகிறது.

    விருந்தே தானும்
    புதுவது கிளந்த யாப்பின் மேற்றே2

    தொல்காப்பியரை முக்காலமும் உணர்ந்த ஞானி என்பது பொருந்தாதாயினும் மொழி பற்றியும், அதன்கண் தோன்றி வளரும் இலக்கிய வளர்ச்சி மற்றும் நெறி பற்றியும் தெளிந்த ஞானம் பெற்றிருந்தார் என்பதற்குத் தொல்காப்பியமே சான்றாகும். தமிழின் இலக்கிய எதிர்காலத்தைச் சரியான தளத்தில் வைத்துக் கணிக்கின்ற நூற்பாவாக இது திகழ்கிறது எனலாம்.

    சங்க இலக்கியங்களில் விருந்தோம்பல்

    விருந்தயர்தல் இல்லறம். இல்லறம் கற்பியல். கற்பியல் அகம். ஆனால் இவ்வறத்தின் சிறப்பு நோக்கிய சங்கச் சான்றோர்கள் அகத்திலும் புறத்திலும் இவ்வறம் உள்ளிட்ட செய்திகள் கொண்ட பாக்களைக்  கோத்திருக்கிறார்கள். இது தனித்த விரிந்த ஆய்வுக்குரிய பொருளாகையால் ஒரு சில எடுத்துக்காட்டுக்களால் விளக்க முற்படலாம்.

    தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை
    மாஅரை புதைத்த மணல்மலி முன்றில்
    வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
    தண்குடி வாழ்நர் அம்குடிச் சீறூர்
    இனிது மன்ற அம்மதானே!” 3

    என்னும் நற்றிணைப் பாடலில் தலைவன் வராதபோது தன் சிற்றூரும் இன்னாதிருந்தது என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்தும் தோழி தலைவனைப் பற்றி அறியாத போது இருந்த ஊர்ச்சிறப்பில் வைத்து விருந்தோம்பலைக் கூறுவதை அறிய முடிகிறது. வருவிருந்து அயரும் தண்குடி வாழ்நர் அம்குடிச் சீறூர் இனிது’ என்பது தற்போது இன்னாமையைக் குறித்தது என்க.

    அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்             
    முல்லை சான்ற கற்பின்
    மெல்இயற் குறுமகள் உறைவின் ஊரே4

    வினைமுடித்து மீளும் தலைவன் தலைவியை விரைந்து  காணும் அவாவுக்கான காரணங்களை அடுக்குகிறபோது அவளுடைய ஊர்ப்பெருமையைப் புகழ்வதன் வழி அவளுடைய விருந்தோம்பும் மாண்பை விதந்தோதுகிறான். அகத்திணைப் பாடலொன்றில் தலைவியின் பண்புநலன்களை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் கருத்து ஒரு பண்பாட்டுக் கருவூலமாகும். இளையான்குடி மாறனார் மழைக்கால இரவில் வந்த சிவனடியாரை உபசரித்த வரலாற்றுக்கு மூலமான முந்தைய சிந்தனை இது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடவந்த இடைக்காடனார், அவனுடைய விருந்தோம்பும் பண்பைக் குறிப்பிடுகிறார்.

    பெருவிறல் யாணர்த் தாகி, அரிநர்
    கீழ்மடை கொண்ட வாளையும்
    உழவர் படைமிளிர்ந்திட்ட யாமையும், அறைநர்
    கரும்பிற் கொண்ட தேனும்,பெருந்துறை
    நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
    வன்புலக் கேளிர்க்கு விருந்து அயரும்
    மென்புல வைப்பின நன்னாட்டுப் பொருந! 5

    கிள்ளிவளவன் விருந்தில் வாளும் ஆமையும் தேனும் மலரும் கைகோத்துள்ளன என்பது நோக்கத்தக்கது. ‘விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று’ என்னும் சிந்தனைக்கு மூலமான ‘இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் தமியர் உண்டலுமிலரே’6 என்னும் சிந்தனையும் புறநானூற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இங்குக் கூடுதல் குறிப்பாகக் குறிக்கப்படுகிறது.

    கேளிர்போல கேள் கொளல் வேண்டி
    வேளாண் வாயில் வேட்பக் கூறி
    கண்ணில் காண நண்ணுவழி இரீஇ
    பருகு அன்ன அருகா நோக்கமொடு
    உருகு பாவைபோல் என்பு குளிர் கொளீஇ7

    பொருநர்களை உபசரித்தான் கரிகால்வளவன் என்னும் குறிப்பு அவன் உபசரித்த முறையினைப் பொருநராற்றுப்படை வழிக் காணமுடிகிறது.

    திருக்குறளில் விருந்தோம்பல்

    ‘நீதி’ என்பதற்கு வாழ்வியல் நெறி என்பது பொருத்தமாயின் திருக்குறளை ஒரு வாழ்வியல் நூல் எனல் பொருந்தும். தனிமனிதன் தொடங்கி அரசன் வரை உள்ள அனைவர்க்குமான வாழ்வியல் நெறியை அது நிரல்பட திறம்படக் கூறுகிறது. இந்தத் திருக்குறளில் விருந்தோம்பல் ஒரு தனித்த அதிகாரப் பொருண்மையாகக் கொள்ளப்பட்டுள்ளது என்பதே அதன் இன்றியமையாமையை ஓரளவு விளக்கக்கூடும். ‘தென்புலத்தார், தெய்வம், விருந்து ஒக்கல், தான்  என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”8 என்னும் குறட்பாவிற்குச் சிறப்புரை எழுதிய பரிமேலழகர் விருந்து பற்றிய தம் ஆய்வுக்கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.

    விருந்து என்பது புதுமை. அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய வந்தார் மேல் நின்றது. அவர் இருவகையர். பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும்அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல் சுற்றத்தார் எல்லா அறங்களும் தான் உளனாய் நின்றுசெய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று 9

    இந்தக் கருத்தினாலும் இதனைத் தொடர்நது வருகின்ற இரண்டு குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரையாலும் இல்லறம் கடைபோவதே விருந்தோம்புதலினால்தான் என்பது தெளிவாகும்.

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது 10

    என்னும் குறட்பா சிறப்புரையின் இறுதியில்  ‘இவை மூன்று பாட்டானும்  இல்நிலையின் நின்றான் அறம் செய்யும் ஆறு கூறப்பட்டது” என்று எழுதுகிறார் பரிமேலழகர். எனவே துறவறப்பயன் உயிர்களைப் பேணுதல் எனின் இல்லறப் பயன் விருந்தினரைப் பேணுதல் என்பது தெளிவாம்.

    காமத்துப்பாலில் ‘விருந்து’

    சங்க இலக்கியப் புறத்திணைப் பகுதியில் அமைந்துள்ள கொளுவும், அகத்திணைப் பாடல்களில் கொடுக்கப்பட்டுள்ள திணை, துறை விளக்கமும் திருக்குறளில் பரிமேலழகர் உரையில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப் பொருண்மை விளக்கமும் பொருள் தொகுப்பு விளக்கமும் அவற்றைத் தெளிவுபட புரிந்து கொள்வதற்கு உதவும் பெருங்கருவிகள் ஆகும். அவற்றைப் பற்றிய புரிதலின்றி அவ்விலக்கியப் பாடல்களின் பொருளுணர்தல் அரிதாம்.

    தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால
    அம்மா அரிவை முயக்கு11

    களவியல் சார்ந்த இந்தக் குறட்பாவிற்குத் துறைவகுத்த பரிமேலழகர்,”

    இவளை நீ வரைந்து கொண்டு உலகோர்தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தூடு படல் வேண்டும் என்ற தோழிக்கு (வரைவு மறுத்துத் தலைவன்  சொல்லியது)” 12

    என்றெழுதுகிறார். இல்லறத்துக்குட்படுத்த எண்ணும் தோழிக்கு அதன் பயனாகிய துறக்கச் செல்வம் தலைவியோடு கூடிய களவுப் புணர்ச்சியிலேயே கிட்டுமாதலின் தலைவன் மறுத்தான் என்பதாம். “இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும்” என்னும் தலைவன் கூற்றினால் இது புலப்படும். ‘தம்மில் இருந்து தமது பாத்து உண்டல்’ இல்லறப் பகுதியே என்பதை நினவூட்டப் பரிமேலழகர், ‘தென்புலத்தார்’ 13 எனத் தொடங்கும் குறட்பாவைத் தலைவன் உரையிலும் வைத்துக் கூறினார். இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு அடுத்தபடியாகத் திருக்குறள் காமத்துப்பாலில் இருவகை விருந்தின் சிறப்பும் போற்றப்பட்டுள்ளன என்பது இதனால் தெளிவாகும். தொல்காப்பியம் கற்பியலில் தலைமகள் பண்பாகக் கூறியதைத் திருவள்ளுவர் களவியலில் தோழி மற்றும் தலைவன் சிந்தனையில் வைத்துக் கூறும் நுண்ணியம் உணரத்தக்கது.

    வறுமைக்கிலக்கணம் வருவிருந்து ஓம்பாமை

    வறுமைக்கான பொருள் வரையறையை திருவள்ளுவர் இரண்டு பாக்களில் கூறியிருப்பதை அறிய முடிகிறது. அவற்றுள் ஒன்று விருந்தோம்பல் அதிகாரத்திலும் மற்றொன்று பொறையுடைமை அதிகாரத்திலும் காணப்படுகிறது.

    உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ம்பா
    மடமை மடவார்கண் உண்டு14

    (செல்வமிருந்தும் விருந்தோம்புதலைச் செய்யாதவர்கள்) பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மையாக்கலின்  மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையால் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம்.” 15

    என்னும் பரிமேலழகரின் உரை நுட்பத்தால் உடைமை எஞ்ஞான்றும் பயனோக்கியது என்பதும், செல்வத்துப் பயன் ஈதலாதலின் அது கடைபோகாவழி அது இன்மையாகுமேயன்றி உடைமையாகாது என்பதும் விருந்தோம்புதல் பண்பாட்டு விழுமியம் என்பதும் அதனைச்  செய்யாமை ‘பேதைமை’ என்பதும் பெறப்படும். இதே கருத்தினை வேறொரு வாய்பாட்டில் எதிர்மறையில் வைத்தும் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். இல்லறத்தில் விருந்தோம்பலின் இன்றியமையாமை அதன் சிறப்பு ஆகியவற்றை எதிர்மறைமுகத்தால் திருவள்ளுவர் கூறியிருப்பது இங்குச் சிந்தனைக்குரியது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை தேவையெனின் இவற்றின் இன்மையே வறுமை எனப்படல் வேண்டும். ஆனால் திருவள்ளுவர் இவை மூன்றும் இல்லாதிருந்தும் விருந்தினரைப் போற்ற வேண்டும் எனவும் போற்றாமையே வறுமை என்றும் வறுமைக்குப் புதுவெளிச்சம் பாய்ச்சுகிறார்.

    இன்மையுள் இன்மை விருந்தொரால்., வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை16

    என்பது குறட்பா. அறனல்லாத விருந்தொரால் பொருளுடைமை ஆகாதவாறு போல என்னும் உவமத்தால் விளக்குகிறார். பொறையுடைமை உயர்ந்த பண்பே. அவ்வுயர்ந்த பண்பினை விளக்கப் பயன்படுத்தும் விருந்தோம்பல் அதனினும் உயர்ந்தது என்பது ஆற்றலால் பெற்ற பொருளெனக் கொள்க. ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை’ என்பது இலக்கணமாதலின்!

    விருந்தோம்புதலின் மூவகைப் பயன்கள்

    நல்லறம் செய்பவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் விருந்தோம்புவார்க்குப் பல்வகை நன்மைகள் கிட்டும் என விளக்குகிறார். இதனை இம்மைப் பயன், மறுமைப் பயன், இருமைக்கான பயன் என வகுத்துக் கொண்டு ஐந்து குறட்பாக்களில் கூறுகிறார்.

    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று17

    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்18

    வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம் 19

    இம்மூன்று குறட்பாக்களும் பகுத்தறிவுக்கு முரணாக அமைந்திருப்பதாகச் சிலர் கருதக்கூடும். ‘பருவந்து பாழ்படுதலும்’, ‘அகனமர்ந்து செய்யாள் உறையும்’ என்பதும் ‘வித்தும் இடல் வேண்டும்’ என்பதும் அறிவுக்கு முரணாக அமைந்திருக்கின்றன என்பதைவிட உலகியல் நோக்கிக் கூறியனவாகக் கொள்ள வேண்டும். எதிர்பாராமல் உதவிசெய்தவனைத் ‘தெய்வமே நேரில் வந்து உதவிய”தாகக் கூறுவதில்லையா? அதுபோல என்க.

    செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத்தவர்க்கு20

    இனைத்துணைத்து என்பதொன்றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன் 21

    என்னுங் குறட்பாக்களில் முறையே  மறுமைப் பயனையும் இருமைப் பயனையும் எடுத்துக் கூறுகிறார் திருவள்ளுவர். வேதம் ஓதுதல், யாகம் வளர்த்தல், விருந்தோம்புதல், தருப்பணம் செய்தல், பலியிடுதல் என்னும் வேள்வி ஐந்தனுள் ஒன்றுதான் விருந்தோம்புதல். ஒவ்வொரு வேள்விக்குமான பயன் வரையறுக்கப்பட்டுள்ளதெனினும் விருந்தோம்பலாகிய வேள்விக்கு அது செய்யும் அளவே அளவாக்கப்பட்டுள்ளது. ‘விருந்தின் துணை’ என்பதற்கு விருந்து செய்யும் அளவு என்பது பொருள். ‘சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று’ எனவும் ‘விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’ எனவும் இல்லறத்தின் தலையாய கடமையாகிய விருந்தோம்பலை வலியுறுத்திய திருவள்ளுவர் அதன் அனைத்து வகைப் பயன்களையும் நிரல்படக் கூறுவதை நோக்குக.

    சிலப்பதிகாரத்தில் விருந்தோம்பல்

    குடிமக்கள் காப்பியம் எனச் சிறப்பிக்கப்படும் சிலம்பில் விருந்தோம்பலின் சிறப்பினைச் சித்திரிக்க ஏற்ற இடமில்லாது அடிகள் அல்லற்பட்டிருப்பது நன்கு புரிகிறது. இதே நிலை கம்பனுக்கும் வந்திருக்கிறது. கோவலனோடு  கண்ணகியாவது சில ஆண்டுகள் இல்லறம் நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் இராமனுக்கும்  சீதைக்கும் அந்த வாய்ப்பும் இருந்ததாகத் தெரியவில்லை.

    மருந்தான் விருந்து

    தலைவியின் ஊடல் நீக்கும் வாயில்களுள் விருந்தும் ஒன்று. இதனைத் தொல்காப்பியம் பலபடப் பேசுகிறது. சிலப்பதிகாரத்தில் இரவு நேர வண்ணனைப் பகுதியில் தொல்காப்பிய இலக்கணம் நினைவு கூரப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. பரத்தையர்பால் பல்வரிக்கோலம் புனைந்துப் புணர்ச்சியின்பம்  அனுபவித்து வீடு திரும்பும் கணவன்மார்கள் தங்கள் மனைவியர் தங்களிடம் ஊடல் கொள்வார்கள் என எதிர்நோக்கி விருந்தைத் துணைக்கழைத்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் இல்லத்தரசியர் ஊடல் நீங்காமையை அவர்தம்  முகக்குறிப்பினைக் கண்டு பேதுறும் கணவன்மார்கள் ‘ஊடல் தீர்க்கும் மருந்து விருந்தினும் சிறந்தது உண்டோ?’ என நெஞ்சு நடுங்கியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருந்தொடு புக்க பெருந்தோள கணவரோடு
    உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
    வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
    மாதர் வாள்முகத்து மணித்தோட்டுக் குவளைப்
    போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
    விருந்தின் தீர்ந்தில தாயின் யாவதும்
    மருந்தும் தருங்கொல் இம்மாநில வரைப்பெனக்
    கையற்று நடுங்கும் நல்விளை நடுநாள் 22

    இதனால் விருந்தின் பயன்பரப்பு நடப்பியல் சார்ந்தது என்பதும்  இல்லறச் சிக்கலை மிக நுட்பமான முறையில் தீர்த்து வைக்கும் பேராற்றல் விருந்துக்கு உண்டு என்பதும் பெறப்படும்.  எல்லாரும் அறிந்த சிலம்பின் மற்றொரு காட்சி கொலைக்களக்காதையில் சித்திரிக்கப்பட்டுள்ளமையாகும். கணவனைக் குற்றவாளி எனச் சுமத்திய பழிக்காக மாமதுரையைத் தீக்கிரையாக்கிய கண்ணகி புகாரில் மாதவியோடு வாழ்ந்த காலத்து வந்த அவன் பிரிவைத் தனக்கேற்பட்ட இழப்பாகக் கருதவில்லை. இல்லறம் செய்ய தன் கணவன் உதவவில்லையே என்றுதான் வேதனைப்பட்டிருந்திருக்கிறாள். காப்பிய நிகழ்வுகளின் இறுதிக்காட்சியில் வைத்து இதனைக் காட்டுகிறார் அடிகள்.

    “அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
    துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”23

    தன் கணவன் மீது பழிபோடாத கண்ணகியை இங்கு நாம் காணலாம். ‘உன்னோடு இல்லறம் நடத்த நான் கொடுத்துவைக்கவில்லை’ என்பதே அவள் ஆதங்கமாக இருந்திருக்கிறது. அதனால்தான் ‘இழந்த என்னை’ எனத் தன்மீது தானே பழிபோட்டுக் கொள்கிறாள். இல்லறத்தில் இழக்கக்கூடாத ஒன்று எனக் கருதும் அளவுக்கு விருந்தோம்புதல் அரியதொரு அறமாகக் கருதப்பட்டுள்ளது என்பதைச் சிலம்பின் வழி அறியலாம். இந்தப் பகுதியில் வரும் ‘தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்’ என்னும் தொடரில் மனம் பறிகொடுத்த பாவேந்தர் தாம் எழுதிய குடும்ப விளக்கில் இதற்கான விரிவுரையைத் தந்திருக்கிறார்.

    வீட்டுக்கு வந்த விருந்தோம்பு நாட்டிலுறு
    நற்றமிழர் சேர்த்தபுகழ் ஞாலத்தில் என்னவெனில்
    உற்ற விருந்தை உயிரென்று பெற்றுவத்தல்!
    மோந்தால் குழையும் அனிச்சம்பூ முகமாற்றம்
    வாய்ந்தால் குழையும் வருவிருந்தென்று ஆய்ந்ததிரு
    வள்ளுவனார் சொன்னார் அதனைநீ எப்போதும்
    உள்ளத்து வைப்பாய் ஒருபோதும் தள்ளாதே!
    ஆண்டு பலமுயன்றே ஆக்குசுவை ஊண்எனினும்
    ஈண்டு விருந்தினர்க்கும் இட்டுவத்தல் வேண்டுமன்றோ?
    வந்தாரின் தேவை வழக்கம் இவையறிய
    நந்தாவிளக்குன்றன் நல்லறிவே! செந்திருவே!
    இட்டுப்பார் உண்டவர்கள் இன்புற்று இருக்கையிலே
    தொட்டுப் பார் உன் நெஞ்சம் தோன்றுமின்பம்! – கட்டிக்
    கரும்பென்பார் பெண்ணை கவிஞரெலாம் வந்த
    விருந்தோம்பும் மேன்மையினால் அன்றோ?” 24

    திருக்குறளில் விருந்தோம்பல் என்னும் தனியதிகாரத்தைப் போலவே பாவேந்தரும் தமது குடும்பவிளக்கில் விருந்தோம்பலைத் தனியியலாகவே அமைத்திருப்பதன் மூலம் குடும்பத்தின் தலையாய அறம் விருந்தோம்புதலே என்பதில்  அவருடைய பார்வை தெளிவாக இருந்திருக்கிறது என்பது புலனாம்.

    பெரியபுராணத்தில் விருந்தோம்பல்

    நம்மை நாடி வரும் விருந்தினரை இன்சொல்லால் மகிழ்வித்தும் உள்ளம் கலந்து உறவாடியும், தங்குவதற்கேற்ற இடமளித்தும், ஆடை அணிகலன்கள் முதலியவற்றையும் அளித்தும் உபசரிக்க வேண்டும். இவ்வாறு விருந்தினரை உபசரிப்பவர்களைத் தேவர்கள் தம் விருந்தினராக ஏற்றுக் கொள்வார்கள் என, ஏலாதி பண்டையத் தமிழரின் விருந்தோம்பல் முறையைத் தெரிவித்து ‘நல்விருந்து வானத்தவர்க்கு’ என்னும் குறட்பாத் தொடரையும்  நினைவூட்டுகிறது.

    இன்சொல்அளாவல்இடம்இனிது ஊண் யாவர்க்கும்
    வன்சொல் களைந்து வகுப்பானேல் மென்சொல்
    முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய்! நாளும்
    விருந்து ஏற்போர் விண்ணோர் விரைந்து 25

    தமிழர்தம் இந்தப் பண்பாட்டு விழுமியத்தின் காப்பிய வடிவமே பெரியபுராணம். பெரிய புராணத்தின் சாரம் விருந்தோம்பலே. எந்தச் சூழ்நிலையிலும் எத்தகைய விருந்தோம்பலையும் மேற்கொள்ள வேண்டும் என்னும் அவ்வறத்தின் மேன்மையை முன்னெடுப்பதாக அமைந்திருப்பதுதான் இளையான்குடி மாறனார் புராணம்.

    ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்னுந் தன்மையால்
    நேர வந்தவர் யாவராயினும் நித்தமாகிய பத்திமுன்
    கூர் வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவிப்புலத்து
    ஈரம் மென்மதுரப் பதம் பரிவெய்த முன்னுரை செய்தபின் 26

     கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியே
    மண்டு காதலின் ஆசனத்திடை வைத்து அருச்சனை செய்தபின்
    உண்டி நாலு விதத்தினில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பிலா
    அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துள்ளார் 27

    செல்வம் மேவிய நாளில்  இச்செயல் செய்வதன்றியும் மெய்யினால்
    அல்லல் நல்குரவானபோதினும் வள்ளல் என்று அறிவிக்கவே
    மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாடோறும் மாறிவந்து
    ஒல்லையில் வறுமைப் பதம்புக உன்னினார் தில்லை மன்னினார். 28

    ஈரமேனியை நீக்கி இடம் கொடுத்து
    ஆர இன்னமுது ஊட்டுதுற்கு ஆசையால்
    தாரமாதரை நோக்கி, தபோதனர்
    தீரவே பசித்தார் செய்வதென்? என்று 29

    என்னும் பாடல்கள் விருந்து உபசரிப்பார்க்குப் பரிமேலழகர் சொன்ன ‘நன்று ஆற்றல்’ என்னும் சொல்லுக்கு இலக்கியமாக அமைந்துள்ளதைக் காணலாம். பெரியபுராணத்துள் வருகின்ற விருந்தோம்பும் நிகழ்வுகளுள் இன்றியமையாது குறிக்கப்படுபவை மூன்று.

    1. சிறுத்தொண்டர் புராணம்.
    2. அப்பூதிநாயானார் புராணம்.
    3. இளையான்குடி மாறனார் புராணம்

    இவற்றுள் முந்தைய இரண்டும் (பிள்ளைக்கறி உண்டமையும், மாண்ட இளைய திருநாவுக்கரசு மீண்டதும்) மீயுயர் கற்பனை கலந்து அமைய இறுதியாக உள்ள இளையான் குடிமாறனார் புராணம் நடப்பியல் சார்ந்து அமைந்துள்ளது நோக்குதற்குரியது.

    கம்பராமாயணத்தில் விருந்தோம்பல்

    கம்பராமாயணத்தில் நேரடியான உபசரிப்பைக் கங்கைப் படலத்தில் காணமுடிகிறது. ‘ஆறுகொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி வேறுள குழுவையெல்லாம் வென்று’ மானுட அவதாரம் பெற்றுவந்த இராமனுக்கு நாவாய் வேட்டுவன் குகன் செய்த விருந்து அது. இராமனை உபசரிக்க எண்ணிய எல்லை நீத்த அருத்தியன் ஆகிய குகன்.

    இருத்தி ஈண்டுஎன்னலோடும்.
    இருந்திலன்., எல்லை நீத்த
    அருத்தியன், தேனும் மீனும்
    அமுதினுக்கு அமைவது ஆகத்
    திருத்தினென் கொணர்ந்தேன்
    என்கொல் திருவுளம் என்ன. 30

    நெஞ்சினில் அன்பையும் கைகளில் தேன், மீன் முதலியவற்றையும் கொண்டு வந்தான் குகன். அவனுடைய ஆழமான அன்பை நோக்கிய இராமன், மூத்தவர்களாகிய முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டுக், “குகனே! நீ அன்போடும் பக்தியோடும் கொண்டு வந்த தேனும், மீனும் மிகவும் அருமையானவை. அமுதத்தைக் காட்டிலும் சிறந்தவை. இவையெல்லாம் எம்மைப் போன்றவர் ஏற்கத்தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான்.

    அரியதாம் உவப்ப உள்ளத்து
    அன்பினால் அமைந்த காதல்
    தெரிதரக் கொணர்ந்த என்றால்
    அமிழ்தினும் சீர்த்த அன்றே
    பரிவினின் தழீஇய என்னின்
    பவித்திரம் எம்ம னோர்க்கும்
    உரியன இனிதின் நாமும்
    உண்டனெம் அன்றோ என்றான்31

    உள்ளத்து அன்பின் மிகுதியால் கொண்டு வந்த பொருள்கள் உண்ணத்தகாதன ஆயினும் சுமந்து வந்த அன்பு மிகுதியால் அவையும் உண்ணத்தகும் பயனைத் தரவல்லனவே என்னும் உயரிய கருத்தினைக் கவிச்சக்கரவர்த்தி இந்த இடத்தில் பதிவு செய்திருக்கிறார். கள்ளம் கபடமற்ற உள்ளமும் எளியவரை மதிக்கும் பெருந்தன்மையும் விருந்தோம்பல் அறத்தினை உயர்த்தும் என்னும் மாண்பினை இதனால் அறிந்து கொள்ளலாம்.

    உண்டபின் தாம்பூலம் தரிக்கும் வழக்கமுள்ளவன் இராமன்.  அதனை அவனுக்கு அன்பைக் குழைத்து மடித்துத் தரும் சீதை தற்போது அசோகவனத்தில். தான் இல்லாதபோது அவற்றையெண்ணி மருகுகின்றாள்.

    அருந்து மெல்லடகு ஆரிட அருந்தும் என்று அழுங்கும்!
    விருந்து வந்தபோது என்னுறுமோ என விம்மும்!” 32

    கணவனுக்கு அடைகாய் மடித்துக் கொடுப்பதும் இல்லறத்தில் விருந்தோம்புதலும் இணைந்து செய்ய வேண்டிய கடமை. அறம். அவ்விரண்டனையும் செய்ய முடியாமல் தான் தனித்து இருப்பதாகச் சீதை வருந்தினாள் என்பதாம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன் கணவனிடம் நேராகவே கூறினாள். சீதை செய்ய வேண்டிய கடமையைச் செய்ய இயலவில்லையே என தனக்குத்தானே மருகினாள்.  ‘இழந்த என்னை’ என்பது கண்ணகி வாக்கு. ‘என விம்மும்’ என்பது சீதையின் மெய்ப்பாடு. இரண்டிடங்களிலும் புலவர் பெருமக்கள் தலைமகன்களின் குற்றத்தைக் கூறாமல் தலைமகள்களின் வருத்தத்தையே முன்னிலைப்படுத்தியிருக்கிறார்கள் என்பது சிந்திக்கத்தக்கது.  

    விருந்தோம்பும் கலைமரபு

    வீடு தேடி வந்தார்க்குச் சோறு போட்டு அனுப்புவதன்று விருந்தோம்பல்.  இல்லறத்தின் தலையாய கடமையாக விருந்தோம்புதல் குறிக்கப்படினும் அதனை முறையாகச் செய்ய வேண்டும், செய்தார்கள் தமிழர்கள் என்பதிலேதான் பண்பாட்டு விழுமியம் அடங்கியிருக்கிறது.

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து’” 33

    என்னும் குறட்பாவில் மோப்ப மற்றும் நோக்க என்னும் இரண்டு சொற்களுக்குத் தம் நுண்ணிய உரையினால் விளக்கம் சொல்வார் பரிமேலழகர். இந்தக் குறளில் அமைந்துள்ளது வேற்றுமை அணி. உவம அணி அன்று.

    சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அது பற்றி நண்ணிய வழி இன்சொல்லும் அதுபற்றி உடன்பட்ட வழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். 34

    என்பது பரிமேலழகர் விளக்கம். அனிச்சப்பூ தீண்டுதலாகிய மூன்றாம் நிலையில்தான் வாடும். விருந்தினரோ நோக்குதலாகிய முதனிலையிலேயே வாடுவர் ஆதலின் அனிச்சப்பூவினும் மெல்லியர் என்பதாம். பரிமேலழகரின் இந்த உரை நுண்ணியம் அறிவு சார்ந்தது என்பதோடன்றிப் பண்பாடு சார்ந்தது எனல் பொருந்தும். திருக்குறள் உரைக்குப் பலகாலம் பின்னால் தோன்றிய விவேக சிந்தாமணி என்னும் நூலில் அழகர் சொன்ன மூன்று பண்புகள் ஒன்பதாக விரிவடைந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.

    விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
    வியத்தல், நல் மொழி இனிது உரைத்தல்,
    திருந்துற நோக்கல், வருகென உரைத்தல்,
    எழுதல், முன் மகிழ்வன செப்பல்,
    பொருந்து மற்றவன்தன் அருகுற இருத்தல்,
    போம் எனின் பின் செல்வ தாதல்,
    பரிந்துநல் முகமன் வழங்கல், இவ் வொன்பான்
    ஒழுக்கமும் வழிபடும் பண்பே35

    என்னும் பாடலின் வழி, வரும் விருந்தினரை மெச்சுதலும், அவரிடத்து இன்மொழி பேசுதலும், முகமலர்ச்சி கொண்டு நோக்குதலும், வருக என வரவேற்றலும், மரியாதை நிமித்தம் எழுந்து நிற்பதும், அவன் மகிழும்படியான செய்திகளைக் கூறுதலும் வந்து சேர்ந்த அவனது அருகிலேயே அமர்வதும், விடை பெற்றுச்  செல்லும் போது நேசமுற்று பின் சென்று, மகிழ்வான முகத்துடன் அவனை வழியனுப்புதலுமாகிய  ஒன்பது வகையால் விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்று கூறுகிறது. விருந்தினர்கள் விடைபெற்றுச் செல்லும் போது, அவர்கள் பின்னே, ஏழடி நடந்து சென்று, தமிழரிடையே நிலவிய பண்டை மரபு ஆகும். இம்மரபைக், கரிகாலன், தன்னை நாடி வந்த பொருநர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் விடைபெறும் போது ஏழடி தூரம் நடந்து சென்று வழியனுப்பினான் என்பதைக்,

    “காவின் ஏழு அடிப் பின் சென்று” 36

    மேற்கண்ட பாடலடி விளக்குகிறது. மேற்கண்ட குறிப்புக்களிலிருந்து விருந்தோம்பல் என்பது தமிழ்மக்கள் வாழ்வியலின் ஒரு கூறாகவும் கலைமரபாகவும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது என்பதை அறியலாம். இதன் தொடர்ச்சியாக விருந்தயர்வாருக்கு இன்றியமையாத பண்பாக முகமலர்ச்சியே என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதையும் காணமுடிகிறது.

    ஒப்புடன் முகம லர்ந்தே
    உபசரித் துண்மைப் பேசி
    உப்பில்லாக் கூழிட்டாலும்
    உண்பதே அமுத மாகும்
    முப்பழ மொடுபா லன்னம்
    முகங்கடுத் திடுவா ராயின்
    கப்பிய பசியி னோடு
    கடும்பசி ஆகுந் தானே37

    என்னும் பாடலடி உணர்த்துகிறது. விருந்தின் புண்ணியம், பொருளில் இல்லை. அயர்வாரின் உள்ளத்தில் இருக்கிறது. இல்லறத்தானின் உள்ளத்து இனிப்பு அவன் உபசரிக்கும் பொருளில் வந்து அமைகிறது. திண்ணனார் எச்சில்படுத்தியதில் உண்டான பாசம் இறைவனுக்கு இனித்தது போல! புளித்துப் போன குழம்பு, தவிடு, கூழ், புழுக்கள் பற்றிய மாவு, அரைக்கீரையின் வேர், கெட்டியாய் இல்லாத தயிர், பக்குவம் தவறிய சருக்கரைப் பாகு, கிளறிய களி, நன்றாகத் தீட்டப்படாத அரிசியில் பொங்கி இடப்பட்ட சோறு, உப்பு போடப்படாத நீராகாரம் ஆகிய இவையே ஆயினும், இவ்வுணவானது அன்புடன் பரிமாறப்பட்டதாயின் உண்பவன் மகிழ்வான். அவன் மகிழ்ச்சி உபசரித்தவனின் உள்ளத்தோடு கரைவதால்.

    கெட்டசாறு தவிடு கஞ்சி
    கிருமி உண்ட மா அரைக்
    கீரை வேர்தெளித்த மோர்மு
    றிந்த பாகு கிண்டுமா
    இட்ட சோறு கொழியல் உப்பி
    டாத புற்கை ஆயினும்
    எங்கும் அன்ப தாக நுங்க
    இன்ப மாயி ருக்குமே38

    ஆனால் தேன்பாகு, பசுநெய், பருப்பு வகைகள், முப்பழ வர்க்கங்கள்,  பால் சாத வகைகள், தாளிக்கப்பட்ட கறி வகைகள், பல்வகை பலகாரங்கள்  சுண்டக் காய்ச்சப்பட்ட திரட்டுப் பால், சருக்கரைப் பொங்கல் முதலியவற்றுடன் உணவு படைத்தாலும், அன்போடு இடப்படாததாயின் அங்கே விருந்தறம் நிறைவு பெறுவதில்லை.

    பட்ட பாத பசுவின் நெய்ப
    ருப்பு முக்க னிக்குழாம்
    பானி தங்கள் தாளி தங்கள்
    பண்ணி கார வகையுடன்
    அட்ட பாலகு ழம்பு கன்னல்
    அமுத மோடும் உதவினும்
    அன்பனோ டளித்தி டாத
    அசனம் என்ன அசனமே 39

    என்னும் பாடலடி உணர்த்துகிறது. எனவே எத்தகைய உணவினை இட்டாலும் அதனை அன்பினோடு இடுதல் வேண்டும் என்பதே பழந்தமிழரின் விருந்தோம்பல் கொள்கையாகும். இன்முகம், இன்சொல், இனியவை ஆற்றல் என்பனவற்றின் தொகுப்பே விருந்தோம்பல் என்பதை மேற்காட்டிய சில எடுத்துக்காட்டுக்களால் அறிந்து கொள்ள இயலும்.

    நிறைவுரை

    தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்கள் பல. அவற்றுள் தலையாயது விருந்தோம்பல். இயற்கை வாழ்வினைப் புறந்தள்ளிச் செயற்கையில் சிந்தனைப் போக்கிய தற்காலத்தில் இது கனவாய்க் கற்பனையாய்ப் பொய்யாய்ப் புனைவாய் மெல்லப் புறப்பட்டு இல்லறத்தின் புறம் போயிருக்கலாம். அதன் சாரம் இன்னும் மணந்து கொண்டுதான் இருக்கிறது. தமழிலக்கியங்கள் முழுமையாகக் கிட்டாத காரணத்தால் இது பற்றிக் கிட்டும் செய்திகள் குறைவே. ஆனால் கிட்டியிருக்கிற அத்தனை இலக்கியங்களிலும் விருந்தோம்பல் பேசப்பட்டுள்ளது என்பதே உண்மை. விருந்தோம்பலைப் பெண் பின்பற்றியிருக்கிறாள். ஆண் நேசித்திருக்கிறான். ஆண்டவனுக்கு அடியவன் செய்திருக்கிறான். அடியவருக்கு சாமான்யன் செய்திருக்கிறான். அவதாரங்களுக்கும் விருந்தோம்பல் நிகழ்த்தப்பட்டுள்ளது.  மன்னர்கள் புலவர்களுக்குச் செய்திருக்கிறார்கள். புலவர்கள் தங்கள் மனைவியருக்கு இது பற்றிப் புகன்றிருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் தமிழிலக்கியப் பெரும்பரப்பில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஒளிவெள்ளமாய் ஊடுருவி நிற்பது விருந்தோம்பல் என்னும் பண்பே என்பதை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்புரிதலுக்கு இந்தக் கட்டுரை ஓர் அணிற்பங்காகக் கருதப்படலாம்.

    சான்றெண் விளக்கம்

    1. தொல்காப்பியர் தொல். கற்பியல்           நூ.எண். 11
    2. மேலது செய்யுளியல்                 நூ.எண். 231
    3. கதப்பிள்ளையார் நற்றிணை         பா.எண். 135 வரி.1-5
    4. இடைக்காடனார் நற்றிணை         பா.எண் 142 வரி 8-10
    5. இடைக்காடனார் புறநானூறு        பா.எண் 42 வரி. 12-18
    6. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி புறநானூறு பா.எண். 182
    7. முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப்படை.  வரி. 74-78
    8. திருவள்ளுவர் திருக்குறள்                      கு.எண். 43
    9. பரிமேலழகர் மேலது உரை
    10. திருவள்ளுவர் திருக்குறள்                        கு.எண். 45
    11. மேலது                                                                            கு.எண். 1007
    12. பரிமேலழகர் மேலது உரை
    13. திருவள்ளுவர் திருக்குறள்                         கு.எண். 43
    14. மேலது கு.எண். 89
    15. பரிமேலழகர் மேலது உரை
    16. திருவள்ளுவர் திருக்குறள்       கு.எண். 153
    17. மேலது                     கு.எண். 83.
    18. மேலது கு.எண். 84
    19. மேலது கு.எண்.  85
    20. மேலது கு.எண்.  86
    21. மேலது கு.எண்.  87
    22. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம்  இ.வி.எ.காதை          வரி. 227-234
    23. மேலது கொலைக்களக்காதை             வரி. 73-75
    24. பாரதிதாசன் குடும்பவிளக்கு    கண்ணிகள் – 34-40
    25. கணிமேதாவியார் ஏலாதி                  பா.எண். 7
    26. சேக்கிழார் பெரியபுராணம்     பா.எண். 442
    27. மேலது பா.எண். 443
    28. மேலது பா.எண். 445
    29. மேலது பா.எண். 449
    30. கம்பர் கம்பராமாயணம் கங்கைப்படலம்.          பா.எண்.41 வரி. 1-3
    31. மேலது பா.எண். 42
    32. மேலது காட்சிப்படலம்                                 பா.எண். 15
    33. திருவள்ளுவர் திருக்குறள்                    கு.எண். 90
    34. பரிமேலழகர் மேலது உரை
    35. விவேகசிந்தாமணி பா.எண். 33
    36. முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப்படை வ. 7
    37. விவேகசிந்தாமணி பா.எண். 4
    38. மேலது பா.எண். 57
    39. மேலது பா.எண். 58

    துணைநூற்பட்டியல்  

    1. ஆசிரியர்குழு (உரை) ஏலாதி, சாரதா பதிப்பகம், சென்னை. பதிப்பு – 2018.
    1. கேசிகன் புலியூர் (உ.ஆ.), நற்றிணை, பாரி நிலையம், சென்னை – 600108, நான்காம் பதிப்பு – 1967.
    1. சுப்பிரமணியன் ச.வே. (ப.ஆ.), தொல்காப்பியம், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, சென்ன – 600108. ஐந்தாம் பதிப்பு – 2003 .
    1. சேக்கிழார் பெரிய புராணம், திருப்பனந்தாள் மடம், திருத்திய பதிப்பு – 1967
    1. திருவள்ளுவர், திருக்குறள், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை -1975.
    1. துரைசாமிப்பிள்ளை ஒளவை புறநானூறு மூலமும் உரையும், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1967.
    1. துரை.அரங்கனார் கருவிலே திருவுடையான், மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக்கோபுரத் தெரு, மதுரை – 1, இரண்டாம் பதிப்பு – 1966.
    1. பரிமேலழகர் (உ.ஆ.) திருக்குறள் உரை, தெ.இ. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1975.
    1. பத்மநாயன்(உரை) விவேகசிந்தாமணி, கற்பகம் புத்தகாலயம், சென்னை. பதிப்பு – 2008.
    1. பாரதிதாசன் குடும்பவிளக்கு, பாரி நிலையம், சென்னை – 108. நான்காம் பதிப்பு – 1966.
    1. வேங்கடசாமி நாட்டார் ந.மு.(உ.ஆ.) சிலப்பதிகாரம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை. திருத்திய இரண்டாம் பதிப்பு – ஜுலை 1999

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழிலக்கியங்களில் விருந்தோம்பல் – ஒரு தொகுப்பாய்வு’ என்னுந்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. ஆய்வுப் பொருளின் பன்முகப் பயன்பாடு நோக்கிப், பழந்தமிழ்ப் பண்பாட்டுத் தேட்டங்களை நினைவூட்டுவதும் மீட்டுருவாக்கம் செய்வதும் அவற்றின் சிறப்புக்களை எடுத்து மொழிவதும் இன்றைய சூழலில் ஏற்றதே!
    1. ஒரே பொருண்மை பற்றித் தமிழிலக்கியப் பரப்பிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துருக்களின் ஆய்விற்குத் ‘தொகுப்பாய்வு’ எனப் பெயரிட்டிருப்பது பொருத்தமே!
    1. ‘தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்’ என்னுந் தொடர், ‘நற்றமிழர் ஞாலத்தில் சேர்த்த புகழ்’ என மரபு வழியாகப் பாவேந்தரிடம் அடைக்கலம் பெற்றிருப்பதைக் கட்டுரையாளர் சுட்டுவது அவர்தம் மரபுவழி ஆய்வுச் சிந்தனையை வெளிப்படுத்துவதாய் உள்ளது.
    1. கண்ணகிக்கும் சீதைக்கும் ஏற்பட்ட துன்பங்களுள் தலையாய துன்பமாக விருந்தோம்பாத் துயரமே என்பதை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கட்டுரையாளர் நிறுவுகிறார்.
    1. ‘அனிச்சப்பூவன்ன விருந்தினர்’ என்னும் உவமப் பொருளினும்  அனிச்சப்பூவினும் மென்மையானவர் விருந்தினர்’ என்னும் உறழ்ச்சிப் பொருளைப் பரிமேலழகர் உரைவழி எடுத்துக்காட்டி அது வேற்றுமையணி என நிறுவுவது கட்டுரையாளரின் இலக்கண வன்மையையும் ஆய்நெறிப் புலமையையும் ஒருசேரப் புலப்படுத்துகிறது.
    2. விருந்தோம்பும் நெறி மற்றும் உணவு வகைகள் முதலியவற்றை விவேகசிந்தாமணியிலிருந்து தொகுத்திருக்கும் கட்டுரையாளர், இளையான்குடி மாறனார் புராணத்தில் சித்தரிக்கப்படும் சிவனடியார் விருந்தோம்பலை அழகுற எடுத்தோதுகிறார்.
    3. பல இலக்கியங்களிலிருந்து தொகுத்த செய்தி மலர்களை  ‘விருந்தோம்பல்’ என்னும் மாலைக்குள் கண்ணியாக்கித் தரும் இந்த ஆய்வாளருக்குப் பாராட்டுக்கள்!

    Share
  • (Peer Reviewed) தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும்

    (Peer Reviewed) தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும்

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.                                                                                             
    மின்னஞ்சல் முகவரி egowrisss@gmail.com

    முன்னுரை

    தமிழின் தலையிலக்கணமாகிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களையும் அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களையும் கொண்டு விளங்குகிறது. மொழியின் எழுத்திலக்கணத்தை எழுத்ததிகாரத்திலும், சொல் அமையும் பாங்கினைச் சொல்லதிகாரத்திலும் விளக்கிக் காட்டிய தொல்காப்பியம், சொற்களால் அமையும் இலக்கியம் பற்றிய கருத்துக்களைப் பொருளதிகாரத்தில் ஆராய்கிறது. இப்பொருளதிகாரத்தைத் தமிழர்தம் வாழ்வியலோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கும் அறிஞர்களும் உளர். இலக்கணமாயினும் இலக்கியமாயினும் தாம் தோன்றுகின்ற சமுதாயத்தின் தாக்கம் இல்லாது அமைதல் அரிது என்பது உண்மையாயினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைக் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலின் ‘கவிதையியல்’(Poetics) என்னும் நூலோடு ஒப்புவைத்து ஆராய்வதே பொருத்தமானதாகும்.

    பொருளதிகார அமைப்பு

    தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் ஒன்பது இயல்களைத் தனது உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அகத்திணை மாந்தர்களின் கூற்றுப்பகுதியில் அமையும் உவமப்பாங்கை ஆராய்வதே உவமவியல் என்னும் கருதுகோள் ஏற்கப்படின், அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், உவமவியல் ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியும், புறத்திணையியல் புறம் பற்றியும் ஏனைய மூன்றும்  இருதிணைக்கண் செய்யுள் முறைமை பற்றியும் ஆராய்வதாகக் கொள்ள முடியும். அகத்திணைக்கண் சுட்டப்பட்டுள்ள முதற்பொருள், கருப்பொருள் ஆகியன பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    அகத்திணை உள்ளடக்கம்

    பொருளதிகாரத்தின் முதல் இயலான அகத்திணையியல் அகத்திணைகள் ஏழு என்னும் வரையறையோடு தொடங்குகிறது. அகவொழுக்க மரபும், தாயர், தோழி, கண்டோர், தலைவன் முதலியோர்தம் கூற்றுப்பகுதிகளும் நடுவண் ஐந்திணைகளின் உரிப்பொருள் அமைதியும் கூறப்படுகின்றன. உள்ளுறை உவமம், ஏனை உவமம், தமக்கென நிலம், பொழுது இல்லாத கைக்கிளை, பெருந்திணை முதலியவற்றின் இயல்புகளும் சுட்டப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அகப்பொருள் இலக்கியங்கள் கலிப்பா, பரிபாடல் ஆகிய இருவகைப்பாக்களில் மட்டும் பாடப்பெறும் என்பதும் கூறப்படுகிறது. அகத்துறைப் பாடல்களில் தலைமக்களின் இயற்பெயர் சுட்டுவது மரபன்று என்னும் உயரிய இலக்கியக் கொள்கை வற்புறுத்தப்படுகிறது. இத்தனைச் சிறப்புக்களும் கொண்ட இந்த அகத்திணையியல், தலைவியின் கூற்றுப்பகுதியைக் கூறாதது சிந்தனைக்குரியது.

    திணைக்குத் துணையாகும் முதலும், கருவும்

    ‘திணை’என்னும் சொல் முதற்கண் ஒழுக்கத்தைக் குறித்துப் பின் ஆகுபெயராய் அவ்வொழுக்கம் நிகழும் நிலத்தினைக் குறித்தது. ‘நெய்தற்கண் குறிஞ்சி மயங்கியது’என்பதில் ‘குறிஞ்சி’என்பது ஒழுக்கம். ‘காட்டுக்கோழி குறிஞ்சிக்குரியது’ என்பதில் ‘குறிஞ்சி’என்பது நிலம். திணையாகிய ஒழுக்கத்தைப் பாடுவதே புலனெறி வழக்கம். இப்புலனெறி வழக்கம் சிறக்க வேண்டுமாயின் முதற்பொருளின் பின்புல அமைதி மிகவும் வேண்டப்படுவதாகும். அப்பின்புலம் முதற்பொருளாலும் கருப்பொருளாலும் அமையும். சான்றாகப், பாலையாகிய பிரிவைப் பாடும் ஒருசூழலில், அப்பிரிவொழுக்கத்தின் பின்புலம் மனத்துன்பத்தை மிகுவிப்பதாக இருத்தல் வேண்டும். காலையிலோ, மாலையிலோ, இரவிலோ பாடுவதாக அமைந்தால் அப்பாடல் சிறக்காது., மேலும் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் வேதனையை அருவி, சாரல், மயில், குயில் என்னும் பின்புலத்திலும் விளக்க முடியாது., விளக்கினால் செய்யுள் சிறக்காது. பட்டமரம்,, சுடுமணல், பறக்கும் பருந்து என்னும் பின்புலத்தில் நண்பகல் பொழுதில் விளக்கினால் பாட்டின் சிறப்பும், தலைவிபடும் பிரிவுத்துன்பமும் கற்பார் உள்ளத்தில் ஆழப்பதியும். எனவே முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த ‘அமைப்பு’(Settings) என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும். இன்றைய திரைப்படம் வரை இந்த மரபு பின்பற்றப்படுகிறது என்பதும் ஈண்டுச் சுட்டத்தகுந்தது.

    முதற்பொருள் அமைப்பில் தொல்காப்பியத்தின் அறிவியல் பார்வை

    இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய உலகத்துப் பொருள்கள் தோன்றுவதற்குக் காரணமும் அவற்றிற்கு ஆதாரமுமாக விளங்குவது புவியும் அப்புவியின் சுழற்சியால் நிகழும் கூறுபாடுகளுமாகும். புவியின் இயற்கையமைப்பை ஒட்டி மலை சார்ந்த நிலம், காடு சார்ந்த நிலம், ஆறுகள் பரந்து செல்லும் சமநிலம், கடற்கரையைச் சார்ந்த மணற் பரப்புடைய நிலம் எனப் பிரித்து நிலத்தை நானிலம் என வழங்குவர். இதனைத் தொல்காப்பியம் ‘காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம்’ என வழங்கும். புவி ஞாயிற்றினின்றும் தோன்றியது. அப்புவி கதிரவனின் ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டு, அதன் ஒளியையும் ஏனைய நாள்மீன்களின் ஒளியையும் பெற்றுச் சுழன்று வருவதுடன், தனக்குத் தானே சுழன்று வரும் இயல்பினை உடையது. புவியின் இருவேறு சுழற்சிகளால் ஏற்படுவனவே பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஆகும். பெரும்பொழுதினை வழக்கில் ‘பருவம்’என்பர். இவ்வாறு ஞாயிற்றினால் அமைந்த புவியையும் அப்புவியின் சுழற்சியினால் தோன்றும் இருவகைப் பொழுதுகளையும்  ‘முதற்பொருள்’எனச் சுட்டுவது நேரியதே ஆகும்.

    “முதல் எனப்படுவ நிலம்பொழு திரண்டின்
    இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” 1

    என்பது தொல்காப்பியம்.

    ஐந்திணைகளும் முதற்பொருள்களும்

    கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுதியாகச் சொல்லப்பட்ட அகத்திணைகள் ஏழனுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளுக்கு நிலம் வகுக்க வேண்டிய தொல்காப்பியம் பாலை தவிர்த்த ஏனைய நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலத்தை வரையறை செய்திருக்கிறது.  முதற்பொருள்கள் இரண்டனுள் தலையாயதான நிலத்தினை,

    “மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை, குறிஞ்சி, மருதம்,நெய்தல்எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”2

    என்னும் நூற்பாவில் சுட்டிச்செல்கிறார் தொல்காப்பியர். ‘காடுறை உலகம்’ முல்லை எனவும், ‘மைவரை உலகம்’குறிஞ்சி எனவும், ‘தீம்புனல் உலகம்’மருதம் எனவும், ‘பெருமணல் உலகம்’நெய்தல் எனவும் பெயர்பெறும். இந்நூற்பாவில் அகன் ஐந்திணைகளில் ஒன்றாகிய பாலைக்குத் தனித்த நிலம் ஒதுக்கப்படவில்லை. தட்பவெப்பநிலை காரணமாக அமையும் நானிலங்களின் திரிபே பாலையாகும் என்பதே இதற்குக் காரணம்.

    ஐந்திணைப் பிரிவும் இருவகைப் பொழுதுகளும்

    ஏனைய கோள்களைப் புவி சுற்றுவதாலும், புவி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதாலும் உண்டாகும் பருவ மாறுதல்களும் பொழுது மாறுதல்களும் முறையே பெரும்பொழுது, சிறுபொழுது எனத் தொல்காப்பியத்தால் வகுத்துரைக்கப்படுகின்றன. இதில் ஆண்டின் உட்பகுதியைப் பெரும்பொழுது என்றும் நாளின் உட்பகுதியைச் சிறுபொழுது என்றும் கூறலாம்.முல்லையாகிய இருத்தல் ஒழுக்கத்திற்குக் கார்காலமாகிய பெரும்பொழுதையும் அக்கார்காலத்துள் மாலையைச் சிறுபொழுதாகவும் தொல்காப்பியம் உரித்தாக்குகிறது.  இதனைக்,

    “காரும் மாலையும் முல்லை”3

    என்னும் நூற்பாவில் கூறும் தொல்காப்பியம், குறிஞ்சியாகிய புணர்தல் ஒழுக்கத்திற்குப் பெரும்பொழுதில் கார்காலமும் முன்பனிக்காலமும், சிறுபொழுதில் மாலைக்காலமும் உரித்தாகக் கூறுகிறது. இதனைக்,

    “குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்”4

    “பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப”5

    என்னும் நூற்பாவில் சுட்டுகிறார்.

    “வைகறை விடியல் மருதம்”6

    என்னும் நூற்பாவினால், மருதமாகிய ஊடல் ஒழுக்கத்திற்கு ஆறு பெரும்பொழுதுகளையும் குறிப்பாக உரிமையாக்கி,, அப்பெரும்பொழுதுகளில் அமையும் வைகறை, விடியல் ஆகிய இருவகைச் சிறுபொழுதுகளையும் உரிமையாக்கினார். நெய்தல் திணைக்கு,

    “எற்பாடு நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்”7

    என விதி செய்த தொல்காப்பியர், மருதத்தைப் போலவே அறுவகைப் பெரும்பொழுதுகளையும் நெய்தலுக்கு உரிமையாக்கிச்,  சிறுபொழுதுகளில்  ‘எற்பாடு’என்பதையும் உரிமையாக்கினார்.

    நடுவுநிலைத் திணையும் முதற்பொருள் அமைதியும்

    பாலையை ‘நடுவுநிலைத் திணை’ என்பார் தொல்காப்பியர். நடுவுநிலைத் திணை என்றால் ‘ஏனைய திணைகளுக்கு நடுவே இருக்கும் திணை’என்பது பொருளன்று. ஏனைய திணைகளின் நிலங்கள் திரிந்த நிலையையே தனக்கு நிலமாகப் பயன்படுத்திக் கொள்வதாலும், ஏனைய நால்வகை ஒழுக்கங்களுக்கிடையே தனக்குரிய பிரிவை நிகழ்த்திக் கொள்வதுமாகிய சிறப்பு நிலையே ‘நடுவுநிலை’எனப்படும். எதனையும் சாராது இருப்பது பற்றற்ற நிலை. எல்லாவற்றோடும் சார்ந்திருப்பதே நடுவு நிலை. எனவே தான் தொல்காப்பியம் ‘நடுத்திணை’என்னாது ‘நடுவுநிலைத் திணை’எனச் சுட்டுகிறது. நான்கு திணைகளோடும் பிரிவால் உறவு பாராட்டுவது பாலைத் திணையாதலின் அது நடுவுநிலைத் திணையே. நிலமாகிய முதற்பொருள் இல்லையாயினும் பாலைக்கென பிரிவாகிய உரிப்பொருள் உண்டு. அப்பிரிவொழுக்கம் நிகழ வேண்டுமாயின் பொழுது கூறியே ஆதல் வேண்டும். எனவேதான் தொல்காப்பியம்,

    “நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலோடு
    முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே”8

    “பின்பனி தானும் உரித்தென மொழிப”9

    என்னும் நூற்பாக்களினால் பெரும்பொழுதுகளில் இளவேனில், முதுவேனில் ஆகிய இருவகை வேனிற்காலத்தையும், பின்பனிக் காலத்தையும், சிறுபொழுதுகளில் நண்பகலையும் அதற்கு உரிமையாக்குகிறது. பாலையொழுக்கம் ஏனைய நான்கு திணைகளுள் நிகழ்ந்தாலும், அவ்வொழுக்கம் பாடுபொருளாகிற பொழுது, பாலையின் பின்புலத்தையே கொண்டிருக்க வேண்டும் என்பதே இந்நூற்பாவின் சாரமாகும். குறிஞ்சியில் நிகழும் பாலையொழுக்கத்தைக் குறிஞ்சிப் பின்புலம் கொண்டு அமைத்தல் கூடாது என்பது கருத்து.

    இருபொழுதும் மயங்கினால் தான் திணையா?

    திணைகளுக்குரிய பொழுதுகளை வரையறுக்கும் பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய இரண்டனையும் இணைத்தே தொல்காப்பியம் கூறுவதைக் காணலாம். ‘காரும் மாலையும் முல்லைக்குரிய’என்பது போலத் திணை பற்றிய புலனெறி வழக்கத்தில் இவ்விருபொழுதுகளும் இவ்வாறு இணைந்துதான் கூறப்பட வேண்டுமா? என்னும் ஐயம் நிகழ்கிறது. ஏதேனும் ஒருபொழுது மட்டும் இருந்தால் வழுவாய் விடுமோ? என்னும் ஐயத்தைத் தொல்காப்பியம் பின்வரும் நூற்பாவினால் அகற்றுகிறது.

    “இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்
    உரிய தாகும் என்மனார் புலவர்”10

    என்பது தொல்காப்பியம். இதில், ‘இருவகைப் பொழுதும் தோன்றலும் உரியதாகும்’என்பதனால் ‘தோன்றாமையும் உண்டு’என்பது பெறப்படும். ‘தோன்றலும்’என்பதில் உம்மை எதிர்மறைப் பொருளதாகும்.

    அகத்திணை மயக்கம்

    குறிப்பிட்ட நிலத்தில் குறிப்பிட்ட ஒழுக்கந்தான் நிகழும் என்பது நடைமுறையாகாது. குறிஞ்சியில் புணர்தல் மட்டுமே நிகழும் என்பது பொருத்தமாகாது., நெய்தலில் இரங்கலைத் தவிர ஏனைய ஒழுக்கங்கங்கள் நிகழாது என்பது கற்பனை. எல்லா ஒழுக்கங்களும் எல்லா நிலத்திலும் நிகழும். அதாவது ஒருநிலத்துக்கென்று ஓதப்பட்ட ஒழுக்கம் மற்றொரு நிலத்திலும் நிகழ வாய்ப்புண்டு. இதனைத் தான் ‘மயக்கம்’என்னும் சொல்லால் பொருளதிகாரம் குறிக்கிறது. சொல்லதிகாரத்தில் சுட்டப்படும் வேற்றுமை மயக்கம் போன்றது இது. தொல்காப்பியம்,

    “திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே
    நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப
    புலன்நன்கு உணர்ந்த புலமை யோரே”11

    என்னும் நூற்பாவில் இது பற்றி ஆராய்கிறது. ஒருநிலத்துக்குரிய ஒழுக்கம் மற்றொரு நிலத்தில் மயங்குவது உண்டு., அவ்வாறு மயங்குதல் கூடாது என்னும் வரையறை இல்லை., ஆனால் ஒருநிலம் இன்னொரு நிலத்தில் மயங்குதல் கூடாது. ‘ஒருநிலத்திற்குரிய மாந்தர் மற்றொரு நிலத்துக்குச் செல்லுங்கால், தத்தமக்குரிய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் ஒழுக்கமாகிய திணை மயங்கலாம் எனவும், ஒருநிலம் அசைந்து மற்றொரு நிலத்துக்குள் செல்லாதாதலால் நிலம் மயக்கம் ஏற்படையது அன்று’எனவும் தொல்காப்பியம் கூறியிருப்பது நுண்ணிய சிந்தனையாகும். நிலம், பொழுது, அவற்றின் மயக்கம் என்னும் முதற்பொருள் பற்றிய கருத்துக்களை அகத்திணையியலில் பதினெட்டு நூற்பாக்களில் விரித்துரைத்த தொல்காப்பியம்,’ முதலெனப் படுவது ஆயிரு வகைத்தே’என மீண்டும் எடுத்துரைத்து முதற்பொருள் ‘நிலம், பொழுது என இரண்டே’என வரையறுப்பதையும் ஈண்டுச் சுட்டலாம்.

    ஐந்திணைகளும் கருப்பொருள்களும்

    முதல், கரு, உரி என்பதே முறையாயினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இந்த நெறி பின்பற்றப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதல், உரி, கரு என்றே அது இலக்கணம் கூறிச் செல்கிறது. அந்த வகையில் கருப்பொருள் என்பது ஒருதிணைக்குரிய தெய்வம், திணைமக்களுக்குரிய உணவு, அந்நிலத்தில் திரியும் விலங்கு, அந்நிலத்தில் விளையும் மரம், பறக்கின்ற பறவை, மக்களுடைய தொழில், அந்நில மக்கள் அடிக்கின்ற பறை, இசைக்கின்ற யாழ் இவற்றின் விரிவு ஆகியவற்றைக் குறிக்கும் என விளக்குகிறது.

    “தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
    செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
    அவ்வகை பிறவும் கருவென மொழிப”12

    என்பது கருப்பொருள் பற்றிய தொல்காப்பிய நூற்பாவாகும். இந்த நூற்பாவில் ‘பிற’என்னும் பயன்பாட்டால், ஒருநிலத்துக்குரிய பூவும், ஊரும், நீரும் கருப்பொருளாகத் தழுவிக் கொள்ளப்படும். கருப்பொருள்களில் ஒன்றாகிய தெய்வத்தோடு சேர்த்தே தொல்காப்பியம் முதற்பொருளாகிய நிலத்தை அறிமுகம் செய்கிறது என்பதும் பொதுவாக இன்னின்னவை கருப்பொருள் என்றுதான் இந்நூற்பா உரைக்கிறதேயன்றி, இந்த நிலத்துக்கு இன்னவை கருப்பொருள் என விதந்தோதவில்லை என்பதும் அவை சான்றோர் நெறியும் மரபும் பற்றிக் கொள்ளப்படும் என்பதும் ஈண்டுச் சுட்டப்படுகின்றன.

    திணைகளும் கருப்பொருள்களும்

    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுக்கப்பட்ட நிலங்களும் அவற்றிற்குரிய கருப்பொருள்களும் சான்றோர் நெறி பற்றிப் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.

    குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              சேயோன் (முருகன்)
    உயர்ந்தோர்                       –              சிலம்பன்
    தாழ்ந்தோர்                   –              குறவன்
    பூ                                            –              குறிஞ்சிப்பூ
    மரம்                                     –              வேங்கை
    பறவை                                               –              மயில்
    விலங்கு                             –              புலி, யானை
    உணவு                                –              மூங்கில் அரிசி
    பறை                                    –              தொண்டகப் பறை
    யாழ்                                     –              குறிஞ்சி யாழ்
    பண்                                      –              குறிஞ்சிப் பண்
    ஊர்                                  –              சிறுகுடி
    நீர்                                   –              அருவிநீர், சுனைநீர்
    தொழில்                             –              வேட்டையாடுதல்

    முல்லைத் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                     –              மாயோன் (திருமால்)
    உயர்ந்தோர்                       –              நாடன்
    தாழ்ந்தோர்                   –              இடையர்
    பூ                                            –              முல்லைப்பூ
    மரம்                                     –              பிடவம்
    பறவை                                               –              காட்டுக்கோழி
    விலங்கு                             –              முயல்
    உணவு                                 –              சாமை
    பறை                                    –              ஏறுகோட்பறை
    யாழ்                                     –              முல்லை யாழ்
    பண்                                      –              முல்லைப் பண்
    ஊர்                                        –              பாடி
    நீர்                                   –              காட்டாறு
    தொழில்                             –              ஆனிரை மேய்த்தல்

    மருதத் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              வேந்தன்
    உயர்ந்தோர்                       –              ஊரன்
    தாழ்ந்தோர்                   –              உழவன்
    பூ                                    –              தாமரைப்பூ
    மரம்                                     –              மருதமரம்
    பறவை                                               –              அன்னம்
    விலங்கு                             –              எருமை
    உணவு                                –              செந்நெல்
    பறை                                    –              மணமுழவு
    யாழ்                                     –              மருத யாழ்
    பண்                                      –              மருதப் பண்
    ஊர்                                        –              ஊர்
    நீர்                                          –              ஆற்றுநீர்
    தொழில்                             –              விதைத்தல்

    நெய்தல் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              வருணன்
    உயர்ந்தோர்                       –              புலம்பன்
    தாழ்ந்தோர்                        –              பரதவர்
    பூ                                    –              தாழம்பூ
    மரம்                                     –              விளரியாழ்
    பறவை                                               –              அன்றில்
    விலங்கு                             –              பகடு, சுறா
    உணவு                                –              மீன்
    பறை                                    –              மீன்கோட்பறை
    யாழ்                                     –              நெய்தல் யாழ்
    பண்                                      –              நெய்தற் பண்
    ஊர்                                        –              பாக்கம்
    நீர்                                   –              கடல்நீர்
    தொழில்                             –              உப்பு விளைத்தல்

    பாலைத் திணையின் கருப்பொருள்கள்

    தெய்வம்                            –              கொற்றவை
    உயர்ந்தோர்                       –              விடலை
    தாழ்ந்தோர்                        –              எயினர்
    பூ                                            –              குராஅம்பூ
    மரம்                                     –              ஓமை
    பறவை                                               –              கழுகு, பருந்து
    விலங்கு                             –              வலியிழந்த யானை
    உணவு                                –              கொள்ளையடிப்பன
    பறை                                    –              சூறைகோட்பறை
    யாழ்                                     –              பாலை யாழ்
    பண்                                      –              பாலைப் பண்
    ஊர்                                        –              பறந்தலை
    நீர்                                   –              அறுநீர்க் கூவல்
    தொழில்                             –              கொள்ளையடிப்பன

    முடிவுரை

    மேற்கண்ட கட்டுரைப் பகுதியில் இதுகாறும் சுட்டப்பட்டிருக்கும் கருத்துக்களின் அடிப்படையில், தொல்காப்பியத்தின் முதற்பொருள் பாகுபாடு அறிவியலுக்கு இசைந்ததே என்பதும், ஒருதிணைக்குரிய நிலமும் அந்நிலத்திற்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் முதற்பொருள் என்பதும், பாலைக்கெனத் தனித்த நிலத்தைத் தொல்காப்பியம் சுட்டவில்லை என்பதும் ஆனால் பாலைத்திணையாகிய ஒழுக்கத்திற்குரிய இருவகைப் பொழுதுகளையும் தொல்காப்பியம் சுட்டத் தவறவில்லை என்பதும் புலனெறி வழக்கத்தில் இருவகைப் பொழுதுகளுள் ஒன்றிருந்தாலும் இழுக்கில்லை என்பதும், திணையாகிய ஒழுக்கம் மயங்கலாம் என்பதும், எந்நிலையிலும் நிலங்கள் இரண்டு தம்முள் மயங்கல் கூடா என்பதும், கருப்பொருளாகிய தெய்வத்தை முன்னிறுத்தியே முதற்பொருளாகிய நிலத்தைத் தொல்காப்பியம் அறிமுகம் செய்கிறது என்பதும் பொதுவாகக் கருப்பொருள்களைச் சுட்டிச்செல்கிறதேயன்றிக் குறிப்பிட்டு இன்ன திணைக்கு இன்னின்னவை கருப்பொருள் எனக் கூறவில்லை என்பதும் கருப்பொருள்கள் மரபுவழியாகவே கூறப்பட்டு வருகின்றன என்பதும் ஓரளவு விளக்கப்பட்டன.

    சான்றெண் விளக்கம்

    1. தொல்காப்பியர் தொல்காப்பியம் (பொருள்)   நூற்பா எண். 4
    2. மேலது                                                நூற்பா எண். 5
    3. மேலது நூற்பா எண். 6
    4. மேலது நூற்பா எண். 7
    5. மேலது நூற்பா எண். 8
    6. மேலது நூற்பா எண். 9
    7. மேலது நூற்பா எண். 10
    8. மேலது நூற்பா எண். 11
    9. மேலது நூற்பா எண். 12
    10. மேலது நூற்பா எண். 13
    11. மேலது நூற்பா எண். 14
    12. மேலது நூற்பா எண். 20

    துணை நூற்பட்டியல்

    தொல்காப்பியர், தொல்காப்பியம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தொல்காப்பிய அகனைந்திணையில் முதற்பொருளும் கருப்பொருளும் என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. பொருளுணர் அச்சம் பொறுமையின்மை முதலியன காரணமாக  இன்றைக்கும் பெறவேண்டிய கவனத்தைப் பெறாமல் இருக்கும் நமது தமிழின் தலைச்செல்வம் தொல்காப்பியத்தை மீளாய்வு செய்து அறிமுகக் கட்டுரை செய்திருக்கும் கட்டுரையாளருக்குப் பாராட்டு!
    1. கட்டுரையின் உள்ளடக்கத்தை முன்னுரையில் அளவாகவும் செறிவாகவும் கூறியிருப்பது ஆய்வாளரின் கட்டுரை வன்மையைக் காட்டுகிறது. .
    1. அகத்திணை உள்ளடக்கத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்திருக்கும் ஆய்வாளர். இத்தனைச் சிறப்புக்களும் கொண்ட இந்த அகத்திணையியல், தலைவியின் கூற்றுப்பகுதியைக் கூறாதது சிந்தனைக்குரியது.’ என துணிந்து கூறுவது அவர்தம் ஆய்வில் அவர் கொண்டிருக்கும் உறுதியையும் நம்பிக்கையையும்  பறைசாற்றுகிறது.
    1. “முதற்பொருள் என்பதும் கருப்பொருள் என்பதும் ஒழுக்கமாகிய திணை பற்றிய பாடல் சிறக்க தொல்காப்பியம் அமைத்துத் தந்த‘அமைப்பு’(Settings) என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும்.” என்னும் கருத்தியல் தொல்காப்பியத்தை இலக்கியத்திற்கான இலக்கண நூல் என்பதை உரக்கச் சொல்கிறது.
    1. நிலம் பொழுதாகிய இரண்டின் பகுப்பிலும் அறிவியல் உணர்வு மேலோங்கி நிற்கிறது என்பதை ஆய்வாளர் தகுந்த சான்றுகளுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் தந்திருப்பது போற்றுதற்குரிய்து.
    1. பாலையை நடுவுநிலைத் திணை என்பதற்கான காரணத்தை விளக்க வந்த கட்டுரையாளர் எதனையும் சாராது இருப்பது பற்றற்ற நிலை. எல்லாவற்றோடும் சார்ந்திருப்பதே நடுவு நிலை. என வரையறை செய்து எல்லாத் திணைகளிலும் தனது பிரிவொழுக்கத்தை நிகழ்த்திக் ;கொள்ளும் பேராற்றல் வாய்ந்த திணை பாலைத்திணை என்பதை அழகுற விளக்கியிருக்கிறார்.
    1. ‘குறிஞ்சியில் நிகழும் பாலையொழுக்கத்தைக் குறிஞ்சிப் பின்புலம் கொண்டு அமைத்தல் கூடாது’ என்றும் பாலைநிலப் பின்புலத்தைக் கொண்டே அமைக்க வேண்டும் என்றும் கட்டுரையாளர் எச்சரிப்பது தொல்காப்பியத்தைச் சரியான தளத்தில் வைத்துப் புரிந்து கொண்டிருக்கும் அவர்தம் புலமைச் சதுரப்பாட்டை உணர்த்துகிறது.
    1. இருபொழுதும் அமைந்தால்தான் திணையா? ஒரு பொழுது மட்டும் சுட்டினால் திணையாகாதா? என்னும் சிந்தனையை முன்னெடுக்கும் ஆய்வாளர்  “இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும் உரிய தாகும் என்மனார் புலவர்”10 என்னும் நூற்பாவில் அமைந்த உம்மையை எதிர்மறை உம்மையாக் கொள்ளும் நச்சினார்க்கினியர் கருத்தினை வழிமொழிந்து தனது கருத்துக்கு வலிமையூட்டுவது பொருத்தமான ஆய்வு நெறியே!
    1. முதற்பொருள் கருப்பொருள் பட்டியலைத் தந்திருக்கும் கட்டுரையாளர், முன்னுரை மற்றும் முடிவுரை ஆகியவற்றை மாட்டேற்றாக அமைத்து ஒரு சிறிய அரிய ஆய்வுக் கட்டுரையையும் செம்மையாக வடிவமைக்க இயலும் என்பதை உறுதி செய்திருக்கிறார்.


     

    Share
  • (Peer Reviewed) தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

    (Peer Reviewed) தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (திருக்குறள்)

    முன்னுரை

    கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என இலக்கிய வடிவங்கள் பல. இவற்றுள் கவிதைக்குரிய வடிவங்கள் பா, இனம் எனப் பல்கிப் பெருகும். பாக்களுள் வெண்பா தலையாயது.  எழுவகை வெண்பாக்களில் குறள் வெண்பா என்பதும் ஒன்று.  தமிழ்க்கவிதை வடிவங்களில் மிகக் குறுகிய வடிவம் இதுதான். ‘குறுகத்தரித்த குறள்’ என்பது ஆன்றோர் வாக்கு. குறள் என்பது யாப்புக்கான குறியீடு. அது திருக்குறளைக் குறிக்கிறபோது அடையடுத்த ஆகுபெயராய் நிற்கும். நுட்பமாக நோக்கினால் ‘குறள்’ என்னும் யாப்பே அடைபெற்று அழைக்கப்படுவது தெரியவரும். அதாவது ‘குறள்’ என்பது கருவியாகுபெயராய் நூலை உணர்த்திப் பின் அடைபுணர்த்து அழைக்கப்படுகிறது என்பதாம். திருக்குறளில் திருவள்ளுவர் தமது கருத்துக்களைக் குறள் வெண்பாவில் பதிவு செய்திருந்தாலும் அத்தனைக் குறட்பாக்களையும் ஒரே நெறியில் பதிவு செய்யவில்லை. தமது மெய்யறிவால் உணர்ந்த சிந்தனைகளைப் பல உத்திகளைக் கையாண்டு பதிவு செய்திருப்பதை  அறிய முடிகிறது. ‘தமிழ்க்கவிதைகளின் வெளிப்பாட்டு உத்திகள்’ என்னும் பேராய்வுக் களத்தில் ஒரு துளியாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    கட்டுரையின் கருதுகோள்

    ‘திருக்குறளில் வெளிப்பாட்டு உத்திகள்” என்பதையே இக்கட்டுரை தனக்குரிய கருதுகோளாகக் கொண்டு அமைகிறது.

    ஆய்வுக்களம் – எல்லை – நோக்கம் – பயன்

    முப்பால்களாக இயங்கும் திருக்குறளில் மூன்றாவது பகுப்பாகிய காமத்துப்பால் புலனெறிவழக்கப் புனைவாகத் தலைமக்கள் கூற்றுப் பகுதியென அமைந்துவிடுகிறது. ஆதலின் காமத்துப்பாலில் திருவள்ளுவர் நேரடிக் கூற்றாக எதனையும் பெற முடியாத நிலையில் ஏனைய அறம், பொருள் என்னும் இருபாலில் அமைந்துள்ள ஆயிரத்து எண்பது குறட்பாக்களே (1080) ஆய்வுக்களமாகவும் எல்லையாகவும் கொள்ளப்படுகிறது.

    வாழ்வியல் நெறிகளைப் பதிவு செய்ய திருவள்ளுவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட குறுகிய வடிவமான குறள் வெண்பாவில் அவர் கையாண்ட உத்திகளை ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.

    திருக்குறளில் அமைந்துள்ள வெளிப்பாட்டு உத்திகளை ஆராய்ந்து வடிவமைக்கப்படும் இக்கட்டுரையால் தமிழியல் ஆய்வுக்களப் பொருண்மை   விரிவும் ஆழமும் உடையதாகும் என்பதையும் இலக்கியச் சுவைஞர்கள் உத்திகளின் நோக்கத்தையும் திருவள்ளுவரின் படைப்பாளுமையையும் அவர்தம் பண்பாட்டுக் கூறுகளையும் ஒருசேர உணர்ந்து கொள்ள இயலும் என்பதையும் பயனாகக் கருதுகிறது.

    ஆய்வு அணுகுமுறையும் நெறிமுறையும்

    திருக்குறளில் விரவிக்கிடக்கும் பல்வகை வெளிப்பாட்டு உத்திகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்துவதற்கேற்ற வகையில் ‘அமைப்பியல்’ அணுகுமுறையும், திருக்குறளுக்குப் பிந்தைய பல்வகை இலக்கிய உத்திகளின் பயன்பாடு ஒப்பிட்டுக் காட்டப்படுதலின் ‘ஒப்பீட்டு முறைத் திறனாய்வு’ நெறியும் இக்கட்டுரையில் பின்பற்றப்பட்டுள்ளன.

    இலக்கியத்தில் உத்திகள்

    ஒரே பொருளை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் வெளிப்படுத்தும் நெறிக்கு ‘உத்தி’ என்று பெயர். “இதனை வேற மாதிரிச் செய்யலாமா?” என்று கணித ஆசிரியர் கேட்பதைப் போன்றது இது. கணிதம் எல்லாருக்கும் இனிக்காது. இலக்கியம் பெரும்பாலும் இனிக்கும். இதனை எளிமையாக விளக்கலாம். தலைமக்கள் இருவருக்குமிடையில் காதல் வளர்கிறது. வளர்கின்ற காதல் ஊராருக்குத் தெரியவரும். இது உலகியல். இது இலைமறை காயாகத் தெரியும் போது அதனை ‘அம்பல்’ என்று இலக்கியங்கள் கூறும். ‘இன்னாருக்கு இன்னாரோடு தொடர்பு’ எனத் தெளிவாகத் தெரிகிறபோது அது அலர் என அடையாளப்படுத்தப்படும். இதனை ‘அலர் அறிவுறுத்தல்’ என அகத்துறையிலக்கணம் கூறும். தற்காலத் திரையிசைப்பாடலில் அலருக்கு ஆளான நான்கு உள்ளங்களை வெளிப்படுத்தும் பாடலுக்கான காட்சியைச் சித்திரிக்கும் இரண்டு பதிவுகளை இங்கே காணலாம்.

    “கண்ணா! ஜோடிக்குயில் மாலையிடுமா? இல்லை ஓடிவிடுமா? 1

    என்று தலைமகள் ஐயப்படுகிறாள்.

    ‘கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா? கங்கை வற்றி விடுமா?” 2

    என்று தலைமகன் ஆறுதல் கூறுகிறான். தன் அவசரத்திற்கான காரணத்தைத் தலைமகள் அங்கே பதற்றத்துடன் பதிவிடுகிறாள் இப்படி!

    “உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில்
    என்னென்னமோ பேச்சிருக்குது” 3

    இந்தப் பதற்றம் ஊராரின் அலர் தன்னைத் துரத்த தன்னை விரைந்து மணமுடித்துக் கொள்ள வேண்டும் எனத் தலைமகனை வற்புறுத்துவதாக அமைகிறது. “உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது!” 4 என்னும் தொடரே அலரைக் குறிப்பது. இதே அலர்தூற்றலை மற்றொரு பாடல் வேறு மாதிரியாகப் பதிவு செய்திருக்கிறது.

    “பழச  மறக்கலையே,
    பாவி மவ நெஞ்சு துடிக்குது!
    ஒன்னையும் என்னையும் வச்சு
    ஊரு சனம் கும்மியடிக்குது” 5

    “உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது’ என்னும் வெளிப்பாடு ஓர் உத்தி. ‘ஊரு சனம் கும்மியடிக்குது’ என்பது மற்றோர் உத்தி. பொருள் ஒன்றுதான். தொல்காப்பியம் தொடங்கி இன்றைய திரையிலக்கியம் வரை அலருக்கு அஞ்சுபவள் பெண்ணாகவே சித்திரிக்கப்படுகிறாள் என்பதும் நோக்கத்தக்கது. எளிய புரிதலுக்காகவே இந்தத் திரையிசைப்பாடல் எடுத்துக்காட்டாகக் கொள்ளப்பட்டது. (இத்தகைய திரைப்பதிவுகள் முழுமையான இலக்கியத் தகுதியினைப் பெறுவதற்கு உரியனவே என்பது கட்டுரையாளர் கருத்து)

    பழந்தமிழ் இலக்கியப் பொருண்மைகளும் உத்திகளும்

    குறட்பாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உத்திகள் பற்றிய ஆய்வே இதுவாயினும் கட்டுரைப்பொருள் விளக்கம் கருதி ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் இந்தப் பத்தியில் தரப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கியத்தின் பாடுபொருள் பற்றிய கொள்கை ‘அகம் புறம்’ என வரையறுக்கப்பட்டது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுவகைத் திணைகளாகவும் பகுக்கப்பட்டன. அதாவது அகம் என்பது பொருட்பாகுபாடு. முல்லை, குறிஞ்சி முதலியன திணைப்பாகுபாடு. புறம் என்பது பொருட்பாகுபாடு. ‘வெட்சி கரந்தை’ முதலியன திணைப்பாகுபாடு. ஒவ்வொரு பொருட்பகுதியின் உட்பிரிவுகளான திணையும் துறைகளுமே ‘பாடுதுறை’களாயின. இவற்றை மீறி எந்தப் பாடலையும் யாரும் பாடிவிட இயலாது. முடியாது. கூடாது. அகத்திணை முழுமையும் தலைமக்கள் கூற்றுப்பகுதிகளே! அதாவது தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய், கண்டோர் முதலியோரின் கூற்றுப் பகுதிகளே கவிதைக் களங்களாகும். எந்தப் புலவனும் காதலைப் பற்றிய தனது கருத்தினை நேரடியாகப் பதிவு செய்ததாகக் குறிப்பில்லை. காதலைப் பற்றிய எந்தக் கருத்தும் அதனை வெளிப்படுத்திய பாத்திரங்களின் கருத்தாகவே நோக்கப்படும். இந்தப் புலனெறி வழக்கம் திருக்குறள் காமத்துப்பாலிலும் தொடர்ந்தது. வரையறைக்குட்பட்ட இந்தக் குறுகிய பொருட் பகுதிகளுக்குள்ளேயே இத்தனை இலக்கியங்கள் என்றால் அவற்றைக் ‘கூறியது கூறல்’ என ஒதுக்க இயலுமா? இயலாது. காரணம் ஒரு துறையைப் பற்றிப் புலவர் பலர் பாடியிருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை உத்தியினால் சிறந்து நிற்கிறது. ‘ஐங்குறுநூறு’ முதலிய இலக்கியங்களில் ஒரு துறைக்குப் பத்துப்பாடல்கள் எனப் பாடப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு பாடலும் தனித்தன்மையுடையன. புறத்திணைத்துறைகளும் அத்தகையனவே மருதன் இளநாகனார் பாடிய கையறுநிலையும் மாங்குடி  மருதனார் பாடிய கையறுநிலையும் ஒன்றாகாது. உத்திகளால் சிறந்திருந்தாலேயொழிய இத்தகைய இலக்கியங்கள் இவ்வளவு காலம் நிலைபெற்றிருக்க இயலாது. ‘அரைத்த மாவையே அரைத்திருந்தாலும்’ பலகாரச் செய்முறை மாறுபட்டிருப்பதால் சுவை வேறுபடுவதைப் போல இந்தக் கவிதைகளின் உத்திகள் மாறுபட்டிருப்பதால் காலத்தை வென்று நிற்கின்றன எனலாம்.

    மறையோன் புகழும் கோவலன்

    காப்பியத்தின் பாத்திரங்கள் படைப்பாளனால் உருவாக்கப்படுகின்றன. கவிதைச் சுவையும் கதைப்போக்கும் பின்னிப் பிணைந்த நிலையில் தேவையற்ற பதிவுகளைத் தவிர்த்துவிடுவது படைப்பாளனுடைய உரிமை. அந்த வகையில் குற்றமற்ற கோவலன் பாண்டியனால் கொலைக்கு ஆளாகத் தன் கணவன் குற்றமற்றவன் என்பதை உறுதி செய்யும் பொறுப்பில் கண்ணகி. இந்தக் கதையில் கோவலன் துன்பத்திற்கு என்ன காரணம் என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாது. காப்பியத்தைப் பொருத்தவரையில் அவன் காரணமின்றிக் கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் சென்றுவிட்டான் என்பதைத் தவிர கொலைபடும் அளவுக்கு அவன் செய்த குற்றம் ஏதுமில்லை. தன்னைவிட்டுப் பிரிந்து இல்லறத்தில் சிக்கல் ஏற்படுத்திய கோவலனுக்காகப் பரிந்து மதுரையைக் கண்ணகி தீக்கிரையாக்குகிறாள் என்றால் அவனுடைய பிற செயல்கள் அவளைக் கவர்ந்திருக்க வேண்டும். சமுதாயத்தில் அங்கீகரிக்கப்படாத ஒருவனுக்காக ஒரு பத்தினிப்பெண் வேற்று நாட்டு அரசவையில் நீதி கேட்டு நிற்கிறாள் என்றால் அன்றைய சமுதாயம் கோவலனை நன்கு அறிந்திருக்க வேண்டும். குறைந்த அளவு புகாரில் அவனுடைய பெருமைகள் உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டும். கோவலன், கண்ணகி மறைவு புகாரின் பேரவலத்திற்குக் காரணமானது என்பதை அறியமுடிகிறது. ஆனால் இந்தப் பெருமைக்கான செயல்களைக் காப்பியத்தில் எந்த இடத்திலும் பதிவு செய்ய இயலாது. செய்திருந்தால் காப்பியச் சுவை குன்றிவிடக் கூடும் என அடிகள் கருதியிருக்கலாம். அவன் மாதவியோடு வாழ்ந்த பதினாறு ஆண்டு காலத்தில் புகாரில் அவன் செய்த புகழுக்குரிய செயல்களை இளங்கோவடிகள் பதிவு செய்ய விரும்புகிறார். அடுத்த காதைகளில் கொலைபடும் கோவலன் மீது கற்பாருக்கு அனுதாபம் ஏற்பட வேண்டும் என அவர் உள்ளம் விரும்புகிறது. தக்கதொரு இடத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவருக்கு மாடலமறையோன்  கிடைத்துவிடுகிறான். மதுரை நோக்கிச் செல்லும் கோவலனையும் கண்ணகியையும் நோக்கி அவன் கோவலன் செய்த அறச்செயல்களையெல்லாம் பட்டியலிடுகிறான். மணிமேகலை பிறந்தநாள் விழாவில் அந்தணனைப் புடைத்தழிக்க முயன்ற மதங்கொண்ட யானையின் மீதேறி அடக்கிய செய்தியைப்

    “பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
    கடக்களிறு அடக்கிய கருணை மறவ!” 6

    என்று கூறிப் பாராட்டுகிறான் மாடலமறையோன். கீரிப்பிள்ளையைக் கொன்று மனைவி செய்த பாவத்துக்காக அவளைப் பிரிந்த கணவனைக் கண்டு அவன் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைத்த வரலாற்றைத்,

    “தானம் செய்தவள் தன் துயர் நீக்கிக்
    கானம் போன கணவனைக் கூட்டி
    ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து
    நல்வழிப்படுத்த செல்லாச் செல்வ!”7

    என்னும் வரிகள் காட்டுகின்றன. வெளியூர் சென்று திரும்பி வந்த கணவனுக்கு அவன் மனைவி பற்றிய தவறான தகவலைத் தந்தவனைச் சதுக்கப்பூதம் அடித்துக் கொல்ல எத்தனிக்க, அவன் தாய் பதற, பொய்க்கரி புகன்ற அவனைக் காப்பாற்ற முயல்கிறான் கோவலன். மறுத்த பூதம் பொய்க்கரி கூறியவனைக் கொல்ல அவனுடைய தாயோடு சுற்றத்தாரையும் கோவலன் காப்பாற்றினான்.

    “பத்தினி ஒருத்தி படிற்றுரை எய்த
    மற்றவள் கணவற்கு அறியோன் ஒருவன்
    அறியாக் கரிபொய்த்து அறைந்துணும் பூதத்து
    கறைகெழு பாசத்துக் கையகப்படலும்
    பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு
    கட்டிய பாசத்துக் கடிது சென்றெய்தி
    என்னுயிர் கொண்டு ஈங்கு இவனுயிர் தாவென
    நன்னெடும் பூதம் நல்கா தாகி
    நரகனுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
    பரகதி இழக்கும் பண்பு ஈங்கில்லை
    ஒழிக நின் கருத்தென உயிர்முன் புடைப்ப
    அழிதரும் உள்ளத்து அவளொடும் போந்து அவள்
    சுற்றத்தோர்க்கும் தொடர்புறும் கிளைஞர்க்கும்
    பற்றிய கிளைஞரின் பசிப்பிணியறுத்துப்
    பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” 8

    மறையோனின் இந்தப் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாளே தவிர மறுமொழி சொன்னாள் அல்லள். மகிழ்ந்தாளும் அல்லள். வருந்தினாளும் அல்லள். ‘இத்தகைய நல்லவனா கோவலன்?” என்னும் நல்லெண்ணத்தைக் கற்பார் மனத்தில் வரவழைப்பதற்காக அடிகள் செய்திருக்கும் காப்பிய உத்தி இது.

    இராமனைக் காப்பாற்றும் கம்பன் உத்தி

    பரம்பொருளாகிய பெருமாளை மனிதனாக்கிக் காப்பியம் படைத்த கம்பன் சில நேர்வுகளில் பிழைசெய் இராமனைக் காப்பாற்றும் நிலைக்கும் வரவேண்டியிருப்பதையும் காண முடிகிறது. வேறு வகையாகச் சொன்னால் தான் படைத்த பாத்திரத்தின்வழித் தானே செல்ல வேண்டிய நிலை வருகிறபோது சற்று நிதானிக்க வேண்டியிருக்கிறது என்பதாம். சுக்ரீவன் வாலியிடையே நடந்த போருக்கும் இராமனுக்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை. வாலிக்கும் இராமனுக்கும் நேரடிப் பகையென்பதே இல்லை. தன்னைக் கொல்ல இராமன் வந்திருக்கிறான் என்று தன் மனைவி தாரை கூறியபோது அந்த நொடிவரை,

    “உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது
    அழைத்து அயல் உலகினுக்கு அறத்தின் ஆறெலாம்
    இழைத்தவர்க்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய்?
    பிழைத்தனை பாவி! நின் பெண்மையால் என்றான்” 9

    என்று நம்பி, மனைவியைக் கண்டித்தவன் வாலி. இராமன் மீது அவன் கொண்டிருந்த அளவற்ற பக்தியும் நம்பிக்கையும் இந்தப் பாடலில் வெளிப்படுவதைக் காணலாம். இராமன் வாலியை மறைந்திருந்து கொன்ற செயல் அந்த நம்பிக்கைக்குக் கேடாக முடிந்துவிடுகிறது. இராமனுடைய அம்பினால் வீழ்த்தப்பட்டுக் கிடந்த வாலி இராமனை ஏசுகிறான். இருவருக்குமிடையே நடந்த உரையாடல் முடிவில் வாலி “தன்னை மறைந்திருந்து கொல்ல வேண்டிய அவசியம் என்ன?” என விடையிறுக்க இயலாத வினாவைக் கேட்கிறான். கம்பன் இங்கே தடுமாறுகிறான். இராமனைப் பேசவைப்பதா? பேசவைத்தால் என்ன விடை கூற வைப்பது? தன் கவியுரிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் கவியரசர், இராமனைப் பேச வைக்காது இலக்குவனைப் பேச வைக்கிறார். ஒரு பாட்டால் ஒரு பாத்திரத்தைக் காப்பாற்றி விட்டதாகக் கம்பன் எண்ணுகிறான்.

    “………. மாண்ட
    செவ்வியோய்! அனையது ஆக! செருக்களத்து உருத்து எய்யாதே
    வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால்
    எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்பலுற்றான்”10

    ஒருவன் எழுத வேண்டிய தேர்வை வேறொருவன் எழுதினால் இன்றைய நிலையில் அது தண்டனைக்குரிய குற்றம். வகுப்பில் வினவப்பட்ட மாணவனைத் தவிர்த்து வேறொரு மாணவன் விடையிறுத்தால் இறுக்கப்படும் விடை சரியாகவே இருந்தாலும் ஆசிரியர் சினங்கொள்வாரேயன்றிச் சிரித்து ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆனால் இராமன் என்னும் தலைமகனின் பிம்பம் அல்லது பரிமாணம் சேதாரமடைந்து விடக்கூடாது என்பதற்காகக் கவிஞன் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி இராமனைக் காப்பாற்றுகிறான்.

    “முன்பு நின்தம்பி வந்து சரண்புக, “முறையிலோயைத்
    தென்புலத்து உய்ப்பென் என்று செப்பினன். செருவில் நீயும்
    அன்பினை உயரிருக்கு ஆகி “அடைக்கலம் யானும் என்றி
    என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்ததென்றான்”.11

    “கவிக்குலத்தரசும் அன்ன கட்டுரை கருத்திற்கொண்டான்” என்றெழுதும் கம்பன் இலக்குவன் சொன்னது இதயத்துச் சொற்களல்ல அவை ‘இட்டுக்கட்டியன’ என்பதைப் புரிந்து கொள்கிறான். இங்கே அறிந்து கொள்ள வேண்டியது காப்பியத் தலைமைப் பாத்திரத்தின் பெருமையைக் காப்பாற்றவே தம்பியை விடையிறுக்கும் உத்தியைக் கம்பன் கடைப்பிடித்திருக்கிறான் என்பதேயாகும்.

    மேற்கண்ட சான்றுகள் படைப்பாளன் தன் உள்ளக்கருத்தினைப் பதிவிடுவதற்குரிய வெளிப்பாட்டு முறையே உத்தி என்பதைக் காட்டுகின்றன. ‘கம்பன் கண்ட இலக்கிய உத்திகள்’ என்னும் தமது ஆய்வு நூலில் ஆராய்ச்சிப் பேரறிஞர் ச.வே.சுப்பிரமணியனார் இது பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார் என்பது தகவலுக்காக இங்கே பதிவு செய்யப்படுகிறது.

    ஆடூஉ முன்னிலை – மகடூஉ முன்னிலை

    கீழ்க்கணக்கில் அமைந்துள்ள நீதிநூல்கள் சிலவற்றில் சில பாடல்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் முறையில் ஒரு தனித்த நெறி பின்பற்றப்பட்டு வந்துள்ளது. புலவர் தனது கருத்தினை ஆசிரியர் கூற்றாக அமைக்காமல் ஆண்மகன் ஒருவனைப் பார்த்துக் கூறுவது போலவோ பெண்மகள் ஒருத்தியைப் பார்த்துக் கூறுவது போலவோ அமைக்கப்பட்டுள்ளது. முன்னதற்கு ‘ஆடூஉ முன்னிலை’ என்றும் பின்னதற்கு ‘மகடூஉ முன்னிலை’ என்றும் பெயர். இந்த நெறி திருக்குறளில் அறவே இல்லை. அங்கே அனைத்தும் ஆசிரியர் கூற்றே. வெளிப்பாட்டு உத்தியில் நிலவும் இந்த மாற்றம் சிந்திப்பதற்குரியது. இன்னொரு நுட்பமும் இந்நூல்களில் பதிவாகியிருக்கிறது. தலைமக்கள் கூற்றுப் பகுதியாகவே பதிவு செய்யப்பட்டு வந்த அகப்பொருள் செய்திகளையும் மகடூஉ முன்னிலையில் பதிவு செய்திருக்கும் புதுமை கீழ்க்கணக்கு நூல்களில் காணக்கிடக்கின்றது.

    அகப்பொருள் பதிவு

    திருக்குறள் கீழ்க்கணக்கு நூல்களில் வைத்து எண்ணப்படினும் ஏனைய பதினேழு நூல்களுக்கும் அதற்கும் நிலவும் வேறுபாடுகள் பல. பொருண்மையிலும் வெளிப்பாட்டு உத்தியிலும் கட்டமைப்பு உட்பட ஏனைய கூறுகளிலும் திருக்குறளின் தனித்தன்மையை மற்ற நூல்களால் பெற இயலவில்லை. இதனால் ஏனைய நூல்களைக் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணுதல் ஆகாது. அந்தந்த நூல்களின் தரமதிப்பீடு மற்றொரு நூலின் தர மதிப்பீட்டைப் பாதித்துவிடக் கூடாது என்பதே கருத்து. இந்த நூல்களில்தாம் அவ்விரு முன்னிலை உத்திகளும் கையளாப்பட்டுள்ளன.

    “முயங்காக்கால் பாயும் பசலை மற்று ஊடி
    உயங்காக்கால் உப்பின்றாம் காமம்! – வயங்கோதம்
    நில்லாத் திரையலைக்கும் நீள் கழித் தண்சேர்ப்ப!
    புல்லாப் புலப்பதோர் ஆறு” 12

    என்பது “தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகள் புலவி நீங்கச் சொல்லியது” என்னும் துறையின் கீழ் அமைந்துள்ள நாலடியார் பாடல். துறைப்பொருளை அல்லது பொருளாகிய கூற்றினைப் பாத்திரத்தை நோக்கித்தான் கூறவேண்டுமே தவிர பாத்திரத்தோடு தொடர்பில்லாத முன்னிலை போலக் கருதி விளித்துக் கூறுதல் கீழ்க்கணக்கு நூல்களில் காணும் புதுமையாகும். இதுமாதிரியான துறைகளுக்கு அமைந்த பாடல்கள் அகத்திணை மாந்தர்களை நோக்கியே அமைந்திருக்குமேயன்றி இவ்வாறு உருவாக்கிய முன்னிலையை நோக்கி அல்லது முன்னிலைக்குரிய நபரை நோக்கி அமைந்ததற்குச் சான்றுகள் இல்லை!. “தலைமகள் பிரிவாற்றாமையைத் தோழிக்குச் சொல்லியது” என்னும் துறையில்,

    “கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
    என் ஈன்ற தாயும் பிழைத்ததென்? – பொன்னீன்ற
    கோங்கரும்பு அன்ன முலையாய்!  பொருள்வயின்
    பாங்கனார் சென்ற நெறி” 13

    என்று அமைந்திருக்கிறது. இந்தப் பாடலில் தலைமகள் தோழியை நோக்கிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் தோழியை மகடூஉ முன்னிலையாக்கி உரைப்பது காண்க!

    “பிறங்கருவி நல் நாட!” 14

    “இலங்கருவி நல் நாட!” 15

    “விறல் மலை நல் நாட!” 16

    என வருதல் காண்க. “இருநோக்கு இவள் உண்கண் உள்ளது” 17 என்று தலைவியை நோக்கிப் படர்க்கையில் தனக்குத்தானே பேசிக்கொள்வானேயன்றித் தலைவியை முன்னிலைப்படுத்திக் கூறமாட்டான்.

    “யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
    தானோக்கி மெல்ல நகும்” 18

    எனத் தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். “நன்னீரை வாழி அனிச்சமே!”19 என்றும் “மலர்காணின் மையாத்தி நெஞ்சே!”20 “கருமணியிற் பாவாய் நீ!”21 எனப் பாத்திரமல்லாதவற்றை முன்னிலையாக்குவாரேயன்றிக் கீழ்க்கணக்கின் ஏனைய நூல்களைப் போல முன்னிலையை உருவாக்கிக் கூறுதல் குறளில் காண இயலாத நெறியாம். இதுகாறும் எடுத்துக்காட்டிய சான்றுகள் சிலவற்றால் படைப்பாளன் தான் கருதியது முடித்தற்குத் தானே உருவாக்கிக் கொள்ளும் இலக்கிய வெளிப்பாட்டு நெறிக்கே உத்தி என்பதும் இது இலக்கணத்திற்காகக் கூறப்படும் முப்பத்திரண்டு உத்திகளின் வேறானது என்பதும் பெறப்படும். அவை இலக்கண நூற்பாக்களைப் பற்றியன. இவை இலக்கியத்தின் கருத்து வெளிப்பாடு பற்றியன.

    திருக்குறளும் உத்தியும்

    தமது கருத்துக்களை மிகக் குறுகிய கவிதைக் கட்டுமானமான குறள் வெண்பா யாப்பில் எழுதுவது என்பது திருவள்ளுவர் எடுத்த முடிவு. அந்தக் குறள் வெண்பாவில் கருத்துக்களை ஒரே மாதிரியாக அவர் வெளிப்படுத்தவில்லை என்பதுதான் இக்கட்டுரை உணர்த்த விரும்பும் கருத்து. 1330 குறட்பாக்களும் செய்திகளே! ஒவ்வொரு தத்துவங்களே! ஒவ்வெரு அனுபவங்களே! ஆனால் இவற்றைப் பல முறைகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பல உத்திகளைக் கையாண்டிருக்கிறார். ஒரு கருத்தினை நிரல்படச் சொல்லுவார். ஒன்றினை வினா வடிவில் பதிவு செய்வார் வேறொன்றினை வியங்கோளால் அமைத்துக் காட்டுவார். சிலவற்றைத் தொழிற்பெயர்களால் கூட்டியுரைப்பார். வேறு சிலவற்றை முன்னிலை ஏவலால் ஆணையிடுவார். சிலவற்றைத் தன்மைப் பன்மையால் விளக்கிக் காட்டுவார். இன்னும் பல உத்திகளையும் கையாண்டு விளக்கியிருப்பார்.

    வெளிப்பாட்டில் வெளிப்படும் வினா

    கருத்துக்களை வெளிப்படுத்தும் உத்திகளில் திருவள்ளுவரைப் பெரிதும் கவர்ந்திருப்பது வினா உத்தியே!. அவ்வுத்தியில் அமைந்த குறட்பாக்களை நோக்கினால் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம். சமுதாயத்தின் மீதும் தனிமனிதன் மீதும் சலிப்பு வந்த நிலையில் அவருடைய இந்த வெளிப்பாடு அமைந்திருக்கக் கூடும். ‘என்னத்த படிச்சு என்னத்த செய்யறது?” என்னும் வழக்கு நோக்குக. “பணம் இருந்து என்னங்க செய்யறது?” என்னும் வழக்கையும் நோக்குக. இந்த வழக்கைத்தான் வள்ளுவர் உத்தியாகக் கடைப்பிடித்திருக்கிறார் எனக் கருதலாம்.

    • ஞானத்தின் வடிவமான இறைவனை வழிபடுவதே நூல்களைக் கற்பதன் பயன் என்னும் ஒரு கருத்தினைக் ‘கற்றதனால் ஆய பயன் என்?’ என வினவுவார்.22
    • அறிவின் மற்றொரு பயன் உயிர்கள் மீது அன்பு காட்டுவது. இதனை ‘அறிவினான் ஆகுவது உண்டோ’ என வினவி அதற்கான விடையினைத் தொடர்ந்து பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை’ என்று சுட்டுவார்.23
    • அந்த அன்பைக் கட்டுப்படுத்த இயலாது என்பதை ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? என வினவுவார்.24
    • எதிர்மறை விளைவு ஏற்படுகின்ற இடத்தில்தான் சினத்தை அடக்குதல் வேண்டும். இதனை ‘அல்லிடத்துக் காக்கின் என்? காவாக்கால் என்?’ எனச் சாடுவார்.25
    • கருவியால் ஆராய்ந்து காலத்தால் செய்தால் அருவினை இல்லை என்பதை ‘அருவினை என்ப உளவோ?’ என்பார். 26
    • பிறவி யொழித்தவனுக்கு உடம்பும் மிகை என்பதை ‘மற்றும் தொடர்ப்பாடு எவன் கொல்?’ என்பார். 27

    என்றெல்லாம் அறம் மற்றும் பொருள் பற்றிய கருத்துக்களை வினா உத்தியினால் வெளிப்படுத்திக் காட்டிய வள்ளுவ நாயனார் தலைமக்களின் கூற்றுப் பகுதியாகப் படைத்துக்காட்டிய காமத்துப்பாலிலும் அப்பாத்திரங்களுக்குள் நுழைந்து வினவுவதும் வியப்பாக இருக்கிறது.

    • “ஒன்று கலந்த நெஞ்சத்தாரோடு ஊடுதலே உண்மையான இன்பம்” என்னும் கருத்தினைத் தலைமகன் வாயிலாக “புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ?’ 28 என்று பதிவு செய்திருக்கிறார்.
    • ‘தன்னைப் பிரிந்து துன்புறும் தலைவியாகிய என்னை எண்ணுகிற தலைவனை நான் பெறாத போது நான் மட்டும் வருந்தி என்ன பயன்’ என்னும் தலைவியின் துயரத்தை “நோதல் எவன் மற்று?” 29 எனப் பதிவிடுகிறார்.
    • தலைவியின் துன்பம் அதுவானால் தனிமைத் துயரத்தில் தவிக்கும் தலைவன் கூற்றாகத் தலைவியை அன்றித் “துன்பத்திற்கு யாரே துணையாவார்?” 30 எனப் பதிவிடுகிறார்.
    • தன் தலைவன் வந்துவிடின் “புலப்பேன் கொல்? புல்லுவேன் கொல்லோ? கலப்பேன் கொல்?” 31 என்று தன் எதிர்கால விதும்பல்களை முன்கூட்டியே தனக்குத்தானே வினவும் தலைவியைக் காட்சிப்படுத்துகிறார்.

    இவ்வாறு தன் கருத்துக்களை வினா வடிவத்தில் பதிவு செய்திருக்கும் குறட்பாவின் தாக்கம் பின்வந்த கவிஞர் பெருமக்களை எவ்வாறு ஆட்கொண்டிருக்கிறது என்பதையும் சுருக்கமாகக் காணலாம்.

    வாழையடி வாழையென வந்த வினா உத்தி

    கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்குத் திருவள்ளுவரால் கையாளப்பட்ட இந்த வினாவுத்தி தொடர்ந்து தமிழ்க்கவிதைப் பரப்பில் பேரளவாக இடம் பெற்று வந்துள்ளமையை அறியலாம்.

    “கங்கை ஆடிலென்? காவிரி ஆடிலென்?
    கொங்கு தண் குமரித்துறை ஆடிலென்?
    ஓங்கு மாகடல் ஓதம் நீராடிலென்
    எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே” 32

    “புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டால் பொல்லாதோ?
    எத்தோ நின்அன்புடைமை எல்லோம் அறியோமோ?
    சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?”33

    என்றெல்லாம் வழிவழியாக இந்த வினாமரபு, “செருப்புக்குத் தோல்வேண்டியே இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை?” 34 என்று பரதியார் வினவுகின்ற அளவும் தொடர்ந்தது. ‘சுதந்திரப் பெருமை’35 சுதந்திரப் பயிர்’36 என்னும் இரண்டு பாடல்களயும் முற்றவும் வினாவுத்தியினாலேயே பாரதியார் வடிவமைத்திருப்பது இங்குச் சுட்டத்தகுந்தது. “காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?” 37 என்பார் பாரதிதாசன். “இன்பந்  தருந் தமிழில் அன்பு பிறந்ததுண்டு துன்பம் இனியுமுண்டோ?” 38 என்ற வினாவும் அவருக்குரியது. “சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?”39 என்பார் கண்ணதாசன். “எரிமலை எப்படிப் பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?” 40 எனக் கொதிப்பார் வைரமுத்து.

    “இற்றைக் குமுகம் எழுந்திருக்க வேண்டாமோ?
    முற்றும் முடங்கியே மூழ்குவதோ? – வெற்றுரையால்
    பீடும் மறைவதோ? பேரெழுச்சி வாராதோ?
    நாடுமொழி காப்பீர் நயந்து” 41

    “ஒப்பனை வெல்லுமோ? உண்மை உறங்குமோ?
    முப்பாலுக் கீடோ பிறநூல்கள் – செப்பரிய
    தொண்டால் உழைப்பால் துணிவால் பெருவெற்றி
    உண்டாகும் என்றே உணர்! 42

    என்பன கடவூர் மணிமாறனின் வினாக்கள். இவரின் இந்த வினாக்களைத் தொடர்ந்து வேறு சிலரின் வினாக்களையும் கேட்கமுடிகிறது. உழைத்து ஓடாகிப் போன ஏழைகளின் புலம்பல்கள் வினாக்களாக வெடிக்கின்றன.

    “ஓய்வின்றி உழைப்பவர்க்கா பஞ்சம்? – நாங்கள்
    ஒன்றுபட்டால் இங்கென்ன மிஞ்சும்?
    நாய்படாத பாடெல்லாம் எமக்கா? நாட்டில்
    நல்லின்ப வாழ்வெல்லாம் உமக்கா?
    வேலையின்றி உண்பதுமோர் பிழைப்பா? – இந்த
    வேதனையை மாய்க்க வந்தால் மலைப்பா?
    சாலைகள்தான் எங்களுக்கு வீடா – இது
    சமவுடைமை உண்டாக்கும் நாடா?” 43

    என்னும் கருவூர் கன்னல் எழுப்பும் வினாக்கள் கற்பாரையும் கொதிக்க வைக்கின்றன. இயல்பான தொடரால் அமைக்கப்படுவதைவிட மேற்காட்டியவாறு  வினாக்களால் அமைக்கப்படும்போது கற்பார் உள்ளத்தில் எளிதாக பதியும் வாய்ப்பு அதிகம் என்பதே இவ்வுத்தியின் பயன் எனலாம். திருவள்ளுவர் பின்பற்றிய இந்த வினாவுத்தி தமிழ்க்கவிதையுலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்வதற்கே மேலே சில சான்றுகள் தரப்பட்டன.

    முன்னிலை ஏவல் ஒருமையும் வியங்கோளும்

    ‘யான்’ என்னும் அகப்பற்றையும் ‘எனது’ என்னும் புறப்பற்றையும் விட்டாலேயொழிய உயிர் வீடு பெறாது என்னும் கொள்கையுடையவர் திருவள்ளுவர். அதனால்தானோ என்னவோ அவருடைய குறட்பாவில் முன்னிலை ஏவல் ஒருமையில் அமைந்த ஒரு குறட்பாவைக்கூட காண இயலவில்லை. அந்தக் குறையைப் பாரதி இப்படி ஈடு செய்கிறார்.

    “ஓடி விளையாடு பாப்பா” 44

    “கூடி விளையாடு பாப்பா” 45

    “மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா” 46

    “திடங்கொண்டு போராடு பாப்பா” 47

    என்றெல்லாம் முன்னிலையில் பாடுகிறார் பாரதியார். தொடர்ச்சியாக வந்த பாவேந்தர்,

    “இன்பம் தருந்தமிழில் அன்பு பிறந்ததுண்டு
    துன்பம் இனியுமுண்டோ?
    சொல்! சொல்! சொல்! பகையே!” 48

    எனப் பகையை நேரடியாக விளித்தே பேசுவதைக் காணமுடிகிறது. இந்த நிலை இற்றைநாள் வரை தொடர்கிறது.

    “தாழ்வை அகற்றித் தலைநிமிர்வாய்! போற்றுமுயர்
    வாழ்வில் சிறப்பாய் வளம்காண்பாய் – ஏழ்மையை
    ஓடவே செய்வாய்! ஒரு பயனும் நல்காத
    மூடப் பழக்கம் விலக்கு!” 49

    “மூலையில் நீயும் முடங்கிக் கிடக்காமல்
    வேலையில் நாளும் விழிபதிப்பாய் – காளை நீ!
    வேழமாய் வீறுசால் வெம்புலியாய் சிங்கமாய்
    வாழ வழிவகுக்க வா” 50

    வள்ளுவர் காலத்து இல்லாத அல்லது தேவைப்படாத மொழி, இன, நாட்டுணர்வு இன்றைக்குப் பெரிதும் தேவைப்படுதலின் இந்த வாய்பாட்டிலும் மணிமாறன் கவிதை செய்தார் எனக் கருதலாம். திருக்குறளின் உத்தி பற்றிய ஆய்வில் அவர் கையாளாது பிறர் கையாண்ட முன்னிலை பற்றிய இந்தப் பகுதி எதிர்கால ஆய்வு நோக்கியதாகக் கொள்ளலாம்.

    வியங்கோள்

    ஏவலின் முதிர்ச்சியே வியங்கோள். ‘வாழ்’ என்றால் ஏவல். ‘வாழ்க’ என்றால் வியங்கோள். கட்டளைப் பொருளில் வரும் ஏவல் வினைகளைக் காட்டிலும் வியங்கோளில் வரும் வினைகள் பண்பாட்டினை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையவை. நீதியுரைத்தலிலும் பண்பாடு காக்கும் திருவள்ளுவரின் பேராளுமை அவர் பயன்படுத்தியிருக்கும் வியங்கோள்களில் விளங்கக் காண்கிறது.

    “செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃகுஅதனிற் கூரியது இல்” 51

    “மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும்
    ஒருவுக ஒப்பிலார் நட்பு” 52

    “உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
    அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு” 53

    பொருளைச் ‘செய்’ என்னாது ‘செய்க’ என்று கூறியவர், ‘மருவு’, ‘கொள்’ என்றெல்லாம் ஏவலிருந்தும் வியங்கோளைப் பயன்படுத்துவார்.   எதிர்மறையிலும் ‘கொள்ளற்க’, ‘உள்ளற்க’ என்பார். இத்தகைய வெளிப்பாடுகளுக்குக் காரணம் ஞானம். அந்த வெளிப்பாடுதான் இன்றைக்கும் வள்ளுவத்தைத் தூக்கி நிறுத்துகிறது. பின்னாலே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் இந்த நெறி பரவலாகப் பயன்பட்டு வந்துள்ளதை அறியலாம்.

    “பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க!” 54

    “முடியும் திறத்தால் முயல்க!” 55

    “பழியின்மை மக்களால் காண்க! ஒருவன்
    கெழி யின்மை கேட்டால் அறிக – பொருளின்
    நிகழ்ச்சியான் ஆக்கம் அறிக!” 56

    என்னுமாறு அமைந்த கீழக்கணக்குப் பதிவுகள் வியங்கோள் ஆளுமையை விளக்கக் கூடும். இந்த வியங்கோள் நெறியை வள்ளற் பெருமான்,

    “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!
    அருள் நிறைந்த சன்மார்க்கர் ஆள்க – தெருள் நயந்த
    நல்லோர் நினைத்த நலம்பெறுக! நன்றுநினைந்து
    எல்லோரும் வாழ்க இசைந்து” 57

    என்னும் வெண்பாவில் தனது வேதனையைப் பதிவு செய்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக பாரதியாரும்,

    “ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்!
    ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ!” 58

    என்று பாடுகிறார். அவருடைய நண்பராகிய பாவேந்தர்,

    “தமிழ்மொழியைத் தாய் என்னும்
    தமிழர் வாழ்கவே!
    தமிழ்மொழிக்குத் தாழ்வுரைக்கும்
    தக்கை வீழ்கவே!
    தமிழ்வாழத் தாம் வாழும்
    தமிழர் வாழ்கவே!
    தமிழ்வீழத் தாம் தாழும்
    சழக்கர் வீழ்கவே!”59

    மொழியினம் நாடு பாடும் நம் மணிமாறன் வெண்பாக்களில் இத்தகைய வியங்கோள் வினை உத்திகள் வேண்டிய மட்டும் பரவிக் கிடப்பதைக் காண முடிகிறது.

    “நல்லனவே எண்ணுக! நன்மை விளைத்திடுக!
    இல்லார்க் கிரங்கி உதவிடுக! – சொல்லினில்
    இன்பம் பெருக்கி இடரகற்றி எப்போதும்
    அன்பில் திளைக்க அறிந்து” 60

    “கண்ணும் கருத்துமாய் கடமையை ஆற்றுக!
    புண் மொழி பேசிப் புலம்பற்க! – மண்ணிலே
    நல்லவன் என்னும் நறும்புகழ் எய்துக!
    எல்லாம் அறிக! இசைந்து” 61

    உடன்பாடும் எதிர்மறையுமாக அமைந்த முன்னிலை வியங்கோள் வினைமுற்றுக்களால் சமுதாயத்தோடு தனக்குள்ள தொடர்பினை வெண்பா மூலம் புதுப்பித்துக் கொள்கிறார் மணிமாறன். ஒரு கருத்தினை வியங்கோளாக வெளிப்படுத்துவது என்பது மரபுசார்ந்த கவிதை வெளிப்பாடு என்பதை அறியவும்! சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதை காண்க.

    திருக்குறளில் தொழிற்பெயர்த் தொடரி

    திருவள்ளுவர் அறுவகைப் பெயர்ச் சொற்களையும் கையாண்டு கவிதை செய்த பெருந்தகை. அவற்றுள் தொழிற்பெயர்களைத் தொகுத்துத் தொடரியாக்கிறார். அந்தத் தொழிற்பெயர்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்டு இணைந்து காணப்படுவது கூடுதல் சிறப்பு.

    “உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற்கு உரு” 62

    “ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
    எண்ணின் தவத்தான் வரும்” 63

    “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்லது அரசு” 64

    மேற்கண்ட குறட்பாக்களில் உள்ள தொழிற்பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையில் தொடர்ந்து அமைந்திருப்பதைக் காணலாம். இந்த நெறியும் பின்னாளில் தொடர்ந்து வந்திருப்பதை அறியமுடிகிறது.

    “இன்னறுங்கனி சோலைகள் செய்தல்,
    இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
    ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
    பின்னருள்ள தருமங்கள் யாவினும்
    பெயர்விளங்கி ஒளிற நிறுத்தல்,
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” 65

    இவ்வாறு அனைத்தும் தொழிற்பெயர்களாக அடுக்கியுரைப்பதனை, வெற்று வாய்மொழிகளாக இருப்பதனால் பயனில்லை செயல்வடிவம் பெற வேண்டும் என்பதைக் குறிப்பால் பெற வைக்கும் உத்தியாகவும் கருதலாம்.

    “கொள்ளை யடித்தல் குறுக்குவழி நாடுதல்
    கொள்கை மறந்தே குழப்புதல் – விள்ளரிய
    கேட்டை விளைத்திடுமிக் கீழோர் செயலெல்லாம்
    நாட்டைக் கெடுத்திடும் நஞ்சு” 66

    “மானம் இழத்தல் மதுவருந்தல் மற்றவர்க்கே
    ஆனவரை தீங்கிழைத்தல் அன்றாடம் – ஊனம்செய்
    கேட்டை விளைத்தல் கெடுமதியோர் நட்பெல்லாம்
    நாட்டைக் கெடுத்திடும் நஞ்சு” 67

    என்னும் கடவூர் மணிமாறன் பாடல்களில் தொழிற்பெயர்கள் தொடர்ந்து வருவதைக் காணலாம்.

    திருக்குறளில் படர்க்கைப் பதிவுகள்

    தனிமனித நெறியுரைத்த திருவள்ளுவர் பெரும்பாலும் படர்க்கை நிலையையே தமது வெளிப்பாட்டு உத்தியாகக் கொண்டிருக்கிறார் என்பதைக் குறட்பாக்களின் கட்டமைப்பால் அறியலாம்.

    “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு” 68

    “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்” 69

    “ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றும் துணையும் புகழ்” 70

    “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத்தூறும் அறிவு” 71

    “மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
    எல்லாப் புகழும் தரும்” 72

    என்றெல்லாம் அறம் மற்றும் பொருட்பாலில் எண்பது விழுக்காடு வெண்பாக்களைப் படர்க்கையில் அமைத்துக் காட்டியவர் திருவள்ளுவர்.  படர்க்கை என்பது இலக்கணத்தில் மூன்றாவது நிலையாக இருக்கலாம். வாழ்க்கைப் பட்டறிவில் முதனிலை. அதனால்தான் தமிழின் அத்தனை நீதி நூல்களும் பெரும்பாலும் படர்க்கையைத் தேர்ந்தெடுத்தன. படர்க்கையில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் இலக்கியச் சுவையோடு வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே ஆடூஉ முன்னலை மற்றும் மகடூஉ முன்னிலைகள் இடம்பெற்றன. இப்பொருண்மை தனி ஆய்வுக்கு உரியது. விரிந்த மனத்தால் எதனையும் எவரையும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் வாழ்த்தவும் வையவும் படர்க்கை பயன்படும். ஆசிரியர் கூற்று என்பதும் அது.

    தமிழ் மறையில் தன்மைப் பன்மை

    தம் கருத்துக்களை முன்னிலையிலும் வியங்கோளிலும் குறள் வெண்பாவில் பதிவு செய்திருக்கும் திருவள்ளுவர் மூன்று குறட்பாக்களில் மட்டும்  தன்மைப் பன்மையில் பதிவு செய்திருப்பதை அறிய முடிகிறது.

    “பெருமவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற” 73

    “யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற” 74

    “மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பார் யாம்கண்ட தில்” 75

    என்பன காண்க. “யாம் அறிவதில்லை”, “யாம் கண்டவற்றுள்”, “யாம் கண்டதில்” என்பனவெல்லாம் இலக்கண அடிப்படையில் தன்மைப் பன்மைத் தொடர்கள். முதிர்ச்சியோடு கூடிய பதிவுகள். தன்மைப் பன்மையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்குறட்பாக்களில் இரண்டு (61,1071) அதிகாரத் தொடக்கமாகவும் ஒன்று (300) அதிகார இறுதியாகவும் அமைக்கப்பட்டிருப்பதும் சிந்தனைக்குரியது. இத்தகைய உத்திகளின் பயன்பாட்டிற்குரிய நோக்கம் தனி ஆய்வுக்கு உரியது. இந்த நெறியால் ஈர்க்கப்பட்ட அப்பர் பெருமான்,

    “நாமார்க்கும் குடியல்லோம் நமனைஅஞ்சோம்
    நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்!
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
    இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” 76

    என்று பாடியிருக்கிறார். ‘மன்னும் இமயமலை எங்கள் மலையே’77 என்பதும் “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு”78 என்பதும் பாரதி முழக்கங்கள்.

    “நாமறிவோம் உலகத்தில் நம் பண்பாடு — தமிழா
    நாம் தமிழர்! நம் திறத்துக்கெவர் ஈடு?
    தீமை இனிப் பொறுக்காது நம் தமிழ்நாடு! – நாம்
    தீர்த்துக் கொண்டோம் அவர் கணக்கை இன்றோடு!” 79

    இது பாவேந்தர் பாரதிதாசனின் தன்மைப் பன்மை உத்தி. அவருடைய பரம்பரைக் கவிஞர் நிரலில் வரும் நாடறிந்த நற்றமிழ்ப் பாவலர் கடவூர் மணிமாறன்,

    “கன்னல் தமிழ் காப்போம்! காழ்ப்பால் துயரிழைக்கும்
    புன்மையர் வீழப் பொருதிடுவோம் – நன்னெறியால்
    சூழும் பகைவெல்வோம்! சுற்றம் தழுவியே
    வாழும் வகையறிவோம் வா!” 80

    “நன்மை விளைத்திடுவோம்! நாடுமொழி நம்மினத்தை
    என்றுமே காப்போம்! இனியன – நன்றாற்றி
    மாற்றம் விளைப்போம்! மனத்தைப் புதுக்கிடுவோம்!
    ஏற்றமே காண்போம் இனிது” 81

    உளப்பாட்டுத் தன்மைப் பன்மையால் நேரிசை வெண்பா யாப்பில் தனது உயிர்மூச்சான கொள்கைகளைப் பதிவு செய்திருக்கும் இந்தப் பேராற்றல் பெரிதும் பாராட்டுக்குரியது. “பாதகம் செய்பவரைக் கண்டால் ‘நீ’ பயங்கொள்ளலாகாது” என்னாது ‘நாம் பயங்கொள்ளலாகாது’ எனப் பாரதி குழந்தையை அரவணைத்துப் பாடியது போலச் சமுதாய முன்னேற்றத்திற்குச் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து பாடுபடும் மணிமாறனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவதாம்.

    தன்னை அடையாளம் காட்டிய திருவள்ளுவர்

    ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் திருவள்ளுவர் தான் சொல்லுவதாக அதாவது தன்மை ஒருமையில் வரித்துக் கொண்டு சொன்ன கருத்துப் பதிவு ஒன்றே ஒன்றுதான். அது,

    “இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
    ‘கரப்பார் இரவன்மின்’ என்று” 82

    பெரும்பாலும் அறியப்படாத இந்தப் பாட்டின் கண்ணழிப்பு (நானாகிய திருவள்ளுவன் “இரப்பாரையெல்லாம் இரப்பின் கரப்பார் (ஐ) இரவன்மின் என்று இரப்பன்). இந்தப் பாட்டுக்கு என்ன பொருள் என்றால் பொருளிருந்தும் கரந்தொழிக்கும் கயவரிடத்தில் இரக்கின்றவர்களைப் பார்த்து,

    “ஐயா! வைத்துக் கொண்டே இல்லை என்று மறுதலிக்கும் கயவர்களிடத்தில் இரக்காதீர்கள்” என்று நான் இரந்தேன்”

    என்பதாம். இந்த ஒரு திருக்குறளில்தான் திருவள்ளுவர் தன்மை ஒருமையில் பதிவிடுகிறார். இதற்குக் காரணம் இருத்தல் வேண்டும் என்பது கட்டுரையாளரின் அனுமானம். தன்மை ஒருமை பெரும்பாலும் முனைப்பின் அடையாளம். யான், எனது என்பனவற்றுள் அது ‘யான்’ என்னும் அகப்பற்று. அது எனது என்னும் புறப்பற்றினைக் காட்டிலும் கேடுதருவது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் அவர். எனவே அத்தகைய உத்தியினை அவர் தவிர்த்திருக்கக் கூடும். பின்னாலே வந்த கவிதை படைப்பாளர் பலரும் திருவள்ளுவர் அரிதாகப் பயன்படுத்திய உத்தியினை மிக எளிதாகவும் பேரளவிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். உருக்கும் திருவாசகத்தில்,

    “யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனக்கு என் கடவேன்?
    வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்!
    தேனேயும் மலர்க்கொன்றை சிவனே எம் பெருமான் எம்
    மானே உன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே!” 83

    என்று தன்மை ஒருமையில் வைத்துப் பாடியிருக்கிறார். திருவாசகம் முற்றிலும் சன்மார்க்கத்தையொட்டி எழுந்த நூலாதலின் குருவை வழிபடுதலுக்குச் சீடனாகிய தன்னை முன்னிலைப்படுத்துவது பொருத்தம் என்று அவர் கருதியிருக்கலாம். வள்ளற்பெருமான் தனது சமரச சன்மார்க்கக் கொள்கைகளை வலியுறுத்திப் பாடும் பொழுது,

    “புனைந்துரையேன்! பொய்புகலேன்! சத்தியம் சொல்கின்றேன்!
    பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே!” 84

    என்று பன்னியுரைக்கின்றார். மகாகவி பாரதி,

    “விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
    வேண்டியபடிசெலும் உடல் கேட்டேன்!
    நசையறு மனம்கேட்டேன்! நித்தம்
    நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்!
    தசையினைத் தீச்சுடினும் – சிவ
    சக்தியைப் பாடும் நல் அகம்கேட்டேன்!” 85

    எனத் தன் வேண்டுதலைப் பதிவு செய்திருக்கிறார். அவர் காட்டிய புதுத்தடத்தில் கவிப்பயணம் தொடங்கிய பாவேந்தர்,

    “ஆன என் தமிழ் ஆட்சியை நிறுவ
    அல்லல்கள் வரின் ஏற்பேன்!
    ஊனுடன் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
    உவப்புடன் நான் சேர்ப்பேன்!” 86

    என்று முழக்கமிடுகிறார். ஒவ்வொரு தமிழனும் மொழிக்கும் இனத்திற்கும் ஆற்ற வேண்டிய பணியினை ஆற்ற வேண்டும் என்னும் குறிப்பு இந்தத் தன்மைப் பதிவில் இருப்பதாகக் கருதலாம்.

    நிறைவுரை

    மூலப்பொருள் ஒன்றேயெனினும் கைத்திறப் பக்குவத்தால் படைப்புக்களின் தன்மைகள் மாறுபடுகின்றன. இந்த மாற்றம் ஒருவரே எழுதும் பல படைப்புக்களிலும் அமையும். பலர் எழுதும் பல படைப்புக்களிலும் அமையும். அந்தக் கையாளும் திறமைகளில் ஒன்றுதான் உத்தி என்பது. கவிதை உத்தியால் சிறக்கிறது. திருவள்ளுவர் தாம் படைத்த திருக்குறளில் தமது சிந்தனைகளைப் படர்க்கையில் கூறுகிறார். வியங்கோளில் கூறுகிறார். தன்மைப் பன்மையில் கூறுகிறார்.  தொழிற்பெயர்களை அடுக்கிக் கூறுகிறார். இவ்வளவு பொருளையும் இத்தனை உத்திகளில் கூறிய தெய்வப்புலவர் ஒரே ஒரு குறட்பாவில் மட்டும் தன்மை ஒருமையில் கூறியிருக்கிறார். வாழையடி வாழையென வந்த இத்த வெளிப்பாட்டு உத்தி ஓர் தொடர் மரபாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ளது எனத் தெரிகிறது. கவிதைகளின் புறக்கட்டுமானங்களை நோக்குவார்க்கு இத்தகைய உத்தி மாறுபாடுகள் கண்ணிற்படாமல் போகாது. அவ்வாறு கண்ணிற்பட்டதன் விளைவே இக்கட்டுரை. கவிதைப் பதிவுகளை உத்திகளின் அடிப்படையில் சுவைப்பதற்கும் ஆராய்வதற்குமான ஆய்வுத் தொடரியில் இக்கட்டுரையும் ஒரு கண்ணியாக அமையக்கூடும் என்னும் நம்பிக்கையோடு நிறைவுறுகிறது.

    சான்றெண் விளக்கம்

    1. கங்கை அமரன் ‘இங்கேயும் ஒரு கங்கை’       திரையிசைப்பாடல்
    2. மேலது
    3. மேலது
    4. மேலது
    5. வைரமுத்து ‘முதல்மரியாதை’              திரையிசைப்பாடல்
    6. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் அடைக்கலக்காதை      வரி. 2382-2383
    7. மேலது       வரி. 2403-2406
    8. மேலது       வரி. 2407-2430
    9. கம்பர்                 கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் பா.எண்.3965
    10. மேலது பா.எண் 4059
    11. மேலது பா எண்.4060.
    12. சமண முனிவர்கள் நாலடியார் காமம் நுதலியல்    பா.எண். 40-1
    13. மேலது                         பா.எண். 40.10
    14. மேலது                      கீழ்மை                 பா.எண். 35–3
    15. மேலது கீழ்மை                 பா.எண். 35– 4
    16. மேலது கீழ்மை                 பா.எண். 35 –8
    17. திருவள்ளுவர்       திருக்குறள்              கு.எண். 1091
    18. மேலது கு.எண். 1094
    19. மேலது கு.எண். 1111
    20. மேலது                              கு.எண். 1112
    21. மேலது கு.எண். 1123
    22. மேலது கு.எண். 02
    23. மேலது கு.எண். 315
    24. மேலது கு.எண். 71
    25. மேலது கு.எண். 301
    26. மேலது கு.எண். 483
    27. மேலது கு.எண். 345
    28. மேலது கு.எண். 1323
    29. மேலது கு.எண். 1308
    30. மேலது கு.எண். 1299
    31. மேலது கு.எண். 1267
    1. அப்பர் தேவாரம் 5ஆம் திருமுறை           பா.எண். 99
    2. மணிவாசகர் திருவெம்பாவை                     பா.எண். 3
    3. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்          ப 404
    4. மேலது ப 66
    5. மேலது ப 67
    6. பாரதிதாசன் பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 1    ப 22
    7. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1               ப 42
    8. கண்ணதாசன்       பாகப்பிரிவினை         திரையிசைப்பாடல்
    9. வைரமுத்து       சிவப்புமல்லி            திரையிசைப்பாடல்
    10. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 52
    11. மேலது                                                    ப 129
    12. கன்னல் கருவூர்        புயலைத் தாக்கும பூக்கள்             ப 81
    13. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்                ப 221
    14. மேலது
    15. மேலது
    16. மேலது
    17. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1               ப 42
    18. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 27
    19. மேலது                                          ப 76
    20. திருவள்ளுவர்       திருக்குறள்                          கு.எண். 759
    21. மேலது             கு.எண். 800
    22. மேலது             கு.எண். 798
    23. சமணமுனிவர் நாலடியார்                           பா.எண். 2
    24. முன்றுரையரையனார் பழமொழி                           பா.எண். 49
    25. விளம்பி நாகனார் நான்மணிக்கடிகை                    பா.எண். 61
    26. வள்ளலார்       திருவருட்பா – சமரசநிலை            பா.எண். 74-5
    27. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்                ப 36
    28. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி (தொகுப்பு நூல்) ப 6
    29. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை                  ப 33
    30. மேலது       ப 50
    1. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 261
    2. மேலது கு.எண். 264
    3. மேலது கு.எண். 385
    4. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்    ப 173
    5. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை      ப 28
    6. மேலது
    7. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 72
    8. மேலது கு.எண். 50
    9. மேலது கு.எண். 156
    10. மேலது கு.எண். 396
    11. மேலது கு.எண். 457
    12. மேலது கு.எண். 61
    13. மேலது கு.எண். 300
    14. மேலது கு.எண். 1071
    15. அப்பர் தேவாரம் மறுமாற்றம் திருத்தாண்டகம் பா.எண். 1
    16. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள் ப 26
    17. மேலது ப 23
    18. பாரதிதாசன் பாரதிதாசன் கவிதைகள் ப 521
    19. மணிமாறன் கடவூர் வெண்பாச் சோலை      ப 27
    20. மேலது ப 32
    21. திருவள்ளுவர் திருக்குறள்              கு.எண். 1067
    22. மணிவாசகர் திருவாசகம் திருச்சதகம் பா.எண். 12
    23. வள்ளலார் திருவருட்பா – ஞானசரியை     பா.எண். 110 -1
    24. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள்    ப 122
    25. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி ப 5

    துணைநூற்பட்டியல்

    1. அப்பர் தேவாரம் (தலமுறை), திருப்பனந்தாள் ஆதீனம் (காசிமடம்) ஜனவரி -1966
    1. கம்பர் கம்பராமாயணம் கங்கை புத்தக நிலையம், 13, தீன தயாளன் தெரு, தி.நகர், சென்னை – 600017
    1. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள், பூம்புகார் பிரசுரம், பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை – 600 108, நான்காம் பதிப்பு – 1991
    1. திருவள்ளுவர் திருக்குறள், வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பு, உமா பதிப்பகம், சென்னை – 600 001, முதற்பதிப்பு – 2009
    1. மணிவாசகர் திருவாசகம், அப்பர் புத்தக நிலையம், 1621, தெற்கு ராச வீதி, தஞ்சாவூர். முதற்பதிப்பு – 1963
    1. பாரதிதாசன் தமிழ் உணர்ச்சி தொகுப்பு நூல், மணிவாசகர் நூலகம், 12 – பி, மேல சன்னதி, சிதம்பரம் – 608101, முதற்பதிப்பு – ஜுலை 1993
    1. பாரதிதாசன் இசையமுது தொகுதி 1, பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை – 600 001
    1. கடவூர் மணிமாறன் வெண்பாச் சோலை, விடியல் வெளியீட்டகம், 1—53, பெரியார் நகர், குளித்தலை, கரூர் மாவட்டம், முதற்பதிப்பு – சூலை 2020
    1. கருவூர் கன்னல் புயலைத் தாக்கும் பூக்கள், தமிழ்ப்பாசறை, 79, தெற்கு நரசிம்மபுரம், கருவூர் – 639001, முதற்பதிப்பு – டிசம்பர் 1998
    1. பதினெண்கீழ்க்கணக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், (மர்ரே பதிப்பு) அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை – 600 098, இரண்டாம் பதிப்பு – 1981
    1. வள்ளலார் திருவருட்பா, சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு, 7—99, அம்மன் கோவில் தெரு, கிருஷ்ணாகுளம் அருகில் சென்னை, முதற்பதிப்பு – அக்டோபர் 1942

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    ‘தமிழ்க் கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள்  (திருக்குறள்)  என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. திருக்குறளில் உத்தி பற்றிய இந்த ஆய்வு, ஆய்வு நெறிப்ப்டி கருதுகோள், வலிமையான தரவுகள், அகச்சான்றுகள், புறச்சான்றுகள், தரவுகள் மற்றும் சான்றுகள் பற்றிய விளக்கம், மேற்கோள்கள், சான்றெண் விளக்கம், துணை நூற்பட்டியல் ஆகிய உறுப்புகளைக் கொண்டு செவ்வையாகவும் பொறுப்புணர்வுடனும் நிகழத்தப்பட்டிருக்கிறது.
    1. தமிழ்க்கவிதைகளில் உத்தி என்னும் பொதுத்தலைப்பில் திருக்குறளில் உத்தி என்னும் பொருண்மை சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருப்பினும் ஒரு பரந்து பட்ட தமிழ்க்கவிதை களத்தையே   ஆய்வாளர் தம் ஆய்வுப்பார்வையால் காட்சிப்படுத்தியிருக்கிறார். .
    1. திருக்குறளை முன்னிறுத்திய இந்த ஆய்வுக் கட்டுரையில் கம்பன் முதல் கரூர் கன்னல் வரை இடம் பெறுகிறார்கள். வள்ளலார் முதல் வைரமுத்து வரை வந்து போகிறார்கள். காப்பியம் தந்த இளங்கோ முதல் கடவூர் மணிமாறன் வரை காட்சி தருகிறார்கள்.
    1. “ஒரே பொருளை  ஒன்றுக்கும் மேற்பட்ட  முறைகளில் வெளிப்படுத்தும் நெறிக்கு உத்தி என்று பெயர்” என வரையறைத்துச் செய்திருக்கிற  தொடக்கம்  ஆய்வு நெறியில் ஆய்வாளரின் தோய்நத புலமையைக் காடடுகிறது.
    1. “திருவள்ளுவர் பல உத்திகளைக் கையாண்டிருக்கிறார். ஒரு கருத்தினை நிரல்படச் சொல்லுவார். ஒன்றினை வினா வடிவில் பதிவு செய்வார் வேறொன்றினை வியங்கோளால் அமைத்துக் காட்டுவார். சிலவற்றைத் தொழிற்பெயர்களால் கூட்டியுரைப்பார். வேறு சிலவற்றை முன்னிலை ஏவலால் ஆணையிடுவார். சிலவற்றைத் தன்மைப் பன்மையால் விளக்கிக் காட்டுவார். இன்னும் பல உத்திகளையும் கையாண்டு விளக்கியிருப்பார்”. என்னும் திருக்குறளில் விரவியுள்ள உத்தி பற்றிய பன்முக விளக்கம் ஆய்வாளரின் திருக்குறள் புலமையைக் காட்டுவதுடன் எதனையும் ஆய்வு நோக்கில் காணும் அன்னாருடைய இயல்பினையும் புலப்படுத்துவதாக உள்ளது.
    1. “யாம் அறிவதில்லை” “யாம் கண்டவற்றுள்” “யாம் கண்டதில் என்பனவெல்லாம்” என்னும் இலக்கண அடிப்படையில் தன்மைப் பன்மைத் தொடர்கள். முதிர்ச்சியோடு கூடிய பதிவுகள். தன்மைப் பன்மையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்குறட்பாக்களில் இரண்டு (61,1071) அதிகாரத் தொடக்கமாகவும் ஒன்று (300) அதிகார இறுதியாகவும் அமைக்கப்பட்டிருப்பதும் சிந்தனைக்குரியது.   என்னும் தன்மைப் பன்மை பற்றிய பயன்பாட்டு வரையறையும் அதனையொட்டிப் பின்வந்த சான்றோர்களின் படைப்புகளைக் காட்டி அவ்வுத்தியின் தாக்கத்தைக் காட்சிப்படுத்தும் ஆய்வாளர், திருக்குறளில் கையாளப்பட்டிருக்கும் ஒவ்வொரு உத்தியும் பின்வந்த சான்றோர்களாலும் நோக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆய்வுநெறிப்படி விளக்கியிருக்கிறார்.
    1. திருவள்ளுவர் “இரப்பன் இரப்பாரை எலலாம் இரப்பின் ‘கரப்பார் இரவன்மின்’ (1067) என்று ”ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தன்மை ஒருமையில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது ஆய்வாளரின் உழைப்பையும் ஆய்வின துல்லியத்தையும்  காட்டுகின்றன.

    ஆய்வு நெறிப்ப்டி கடும் உழைப்புடனும் ஒரு தேடல் பார்வையுடனும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆய்வுக் கட்டுரை பகுப்பாய்வாக இருப்பினும் ஒவ்வொரு பத்தியிலும் ஆய்வு மணம் கமழ்வதை உணர முடிகிறது. ஆய்வாளருக்கு அறிவு இயற்பொருளாகவும் ஆற்றல் துணைப்பொருளாகவும் அமைந்திருப்பதைக் கட்டுரை வெளிப்படுத்துவதாக உள்ளது.


     

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 49

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 49

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான்செக்கர்ஸ்மகளிர்கல்லூரி, 
    விளார்புறவழிச்சாலை, 
    தஞ்சைமாவட்டம் – 613006.
    மின்னஞ்சல்முகவரி-  egowrisss@gmail.com

    வைரமுத்து உவமங்களில் மரபு மாற்றம்

    முன்னுரை

    நாணத்திற்கு நாணலை உவமிப்பது மரபு. ‘பிழிந்த புடவை’யை உவமிப்பது புதுமை. ‘நிலவென்னும் அரசியைச் சுற்றித் தோழிமார்கள்’ என வெண்ணிலவையும் விண்மீன்களையும் உவமிப்பது மரபு. உவாநாள் அன்று ‘விண்மீனைக் காவல் வைத்து வெண்ணிலவு தூங்குவது’ என்பது புதுமை. தொன்று தொட்டு வழங்கி வரும் அதே உவமத்தை அதே பொருண்மை விளக்கத்திற்காகப் பயன்படுத்துவதும் வேறொரு பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதும் உவமத்தில் மரபு சார்ந்த நிலை. புதிய பொருண்மைக்குப் புதிய உவமங்களைப் பயன்படுத்துவதும் பழைய உவமச் சாரத்தைப் புதிய பொருண்மை விளக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதும் புதுமை. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மரபுப்பாவலர்களான மகாகவி பாரதியாரும் அவருடைய நண்பர் பாவேந்தர் பாரதிதாசனாரும் முன்னோர்களை மதித்துப் போற்றினர். முன்னோர் இலக்கியங்களை ஆராதித்தனர். முன்னோர் படைப்பு நெறியைப் பின்பற்றினர். மரபு காப்பதில் தங்களையே ஒப்படைத்துக் கொண்ட அப்பெருமக்கள் தாங்கள் வாழ்ந்த சமுதாயச் சூழலுக்கு ஏற்ப அவர்கள் படைத்துக் காட்டிய புத்திலக்கியங்கள் மரபின் வேர்களிலிருந்து புறப்பட்டன. பாரதிதாசனுக்குப் பின்வந்த கவிஞர்களில் எண்ணிக்கையிலும் தரத்திலும் வியக்கத்தக்க உவமங்களைப் பயன்படுத்திக் காட்டியவர் வைரமுத்து ஆவார். அவருடைய ஒட்டுமொத்த படைப்புக்களிலிருந்து எடுக்கப்பட்ட மாற்றத்திற்காளாகிப் புதுமை தேக்கிய மரபுவமங்களில் சிலவற்றின் சிறப்புக்களை இந்தக் கட்டுரை முன்னெடுக்க முனைகிறது.

    உவமம் — உருவகம் ஒரு சுருக்க விளக்கம்

    உவமத்திலிருந்து உருவகம் என்பதே சிந்தனைப் பிழை இவையிரண்டும் தனித்தன்மை வாய்ந்த இருவேறு பார்வைகள். இருவேறு வெளிப்பாட்டு உத்திகள். உவமம் படைப்பாளனின் அறிவுத்திறத்தையும் ஒப்பீடு மற்றும் நினைவாற்றலையும் காட்டும். உருவகமோ அவனுடைய கவியுணர்ச்சியையும் அவன் கலையுணர்வையும் காட்டும். ‘தாமரை முகம்’ என்னும் உவமத்தொகை ‘முகத்தாமரை’ என்று மாறுவது இயற்பியல் மாற்றமன்று, வேதியல் மாற்றம். ‘தாமரை முகம்’ என்பதில் தாமரை முதலில் பார்க்கப்படும். முகம் அதற்குப் பின்னர் பார்க்கப்படும். பின்னர் நோக்கப்படும் முகத்துக்கு முன்னர் பார்த்த தாமரை பொருத்திக் காட்டப்படும். இதுதான் உவமக் கோட்பாடு. இந்தக்  கோட்பாட்டில் கால இடைவெளி உண்டு. ஆனால் முகத்தாமரை என்பதில் முகத்திலேயே தாமரையைக் காண்கிறான். அதாவது முகத்தைப் பார்க்கின்ற அந்த நேரத்திலேயே அதனைத் தாமரையாகவே காண்கிறான். கால இடைவெளி கிடையாது. நம்முடைய தமிழாசிரியர்களும் தமிழ்ப்பேராசிரியர்களும் இத்தகைய படைப்பாளுமையையும் படைப்பாளனின் கவியுள்ளத்தையும் உணராது “உவமத்தின் பண்புகளைப் பொருளின் மேல் ஏற்றிக் கூறுவதற்கு’ உருவகம் என்று பெயர் என்று கோனார் குறிப்பேட்டின் குறிப்புக்களைப் பிழையில்லாமல் படித்து முடிக்கிறார்கள். தாமரை முகம் என்பது படைப்பாளனின் ஒப்பீட்டு உணர்வு. கால இடைவெளி கொண்டது. முகத்தாமரை என்பது அவனுடைய கலையுணர்வு. முன்னது ஓரளவு அறிவு சார்ந்தது. பின்னது முழுமையும் கலைமனத்தைச் சார்ந்தது. ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிடுவது அறிவு. ஒன்றை மற்றொன்றாக நோக்குவது மனம். அறிவுக்கு அங்கே வேலையே இல்லை.

    உவமத்தொகை என்றால் என்ன?

    தொகைகள் எல்லாம் தொடர்மொழிகள். ஐவகைத் தொகைகளுள் உவமத்தொகை என்பதும் ஒன்று. இதனை ‘உவமைத்தொகை’ என்று உச்சரிப்பதில் நம்மவர்க்கு ஒரு கோடி இன்பம். ஆனால் ‘பாட்டன் தொல்காப்பியன்’ என்று பட்டிமன்றத்தில் முழங்குவார்கள். தொல்காப்பியத்தில் ‘உவமை’ என்ற சொல்லே கிடையாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ‘மை’ என்னும் பண்பு விகுதி பெற்ற அந்தச் சொல் ‘உவமத்தின் தன்மை’ என்ற பொருளில் கையாளப் பெற்றிருக்கும் ஒரே நூற்பா ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ (1229) என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

    இந்த உவமத்தொகைக்கு இலக்கண வரைறையை இப்படிச் சொல்வார்கள். ‘உவமத்தைத் தனியாகக் கூறிப், பொருளைத் தனியாகக் கூறி இரண்டையும் இணைக்கின்ற உவம உருபு மறைந்து வருமானால்  அது உவமத்தொகை’. அவர்கள் கருத்துப்படித் ‘தாமரை முகம்’ என்பது உவமத்தொகை. இடையில் உருபாகிய ஒருசொல் மட்டுமே மறைந்திருப்பதாகக் கருதுகிறார்கள். தாமரை போன்ற சிவந்த முகம் என்பதுதான் விரி என்பதும் அவர்களுக்குத் தெரியும். பொருள், உவமம், பொதுத்தன்மை, உவம உருபு என உவம விரியின் கூறுகள் நான்கானால் ஒன்று மட்டும் குறைவது எப்படி உவமத்தொகையாகும்? இதனைக் கேட்டால் கடைசி பெஞ்சுக்கு அனுப்பிவிடுவார்கள். தாமரை போன்ற முகம் என்பதில் பொதுத்தன்மை மறைகிறதா இல்லையா? ‘தாமரை முகம்’ என்பதில் ‘போன்ற’ என்னும் உருபும் ‘சிவந்த’ என்னும் பொதுத்தன்மையும் மறைகின்றனவா  இல்லையா?  இரண்டு கூறுகள் மறைந்து வருவதே தொகையாயிருக்க உவம உருபு மட்டும் மறைந்து வருவது உவமத்தொகையாவது யாங்ஙனம்?

    இந்தக் குழப்பம் எதனாலே என்றால் ‘உவமத் தொகை’ என்னும் தொடரில் ‘உவமம் என்பது உவம உருபை மட்டுமே குறிக்கிறது’ என்னும் இலக்கண மயக்கம். அது உண்மையே. ஏனைய நான்கு தொகைகளில் வேற்றுமை உருபும், பண்புருபும், உம்மையும், காலம் காட்டும் இடைநிலைகளும் மறைந்து வருவதாகக் கருதியது போலவே உவமத் தொகையிலும் ‘உவம உருபு மறையும்’ என்பது இவர்களது அனுமானம். இன்னொன்றும் மறைகிறதே என்பதைக் கவனிக்கத் தவறியது மறதி. இந்த அனுமானம் முற்றிலும் தவறென்று கூற முடியாது. ஆனால் படைப்பாளனின் கலைமனத்தைக் காண முடியாது தடுக்கும் இரும்புத் திரை இது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஒப்புக்கொள்வதில்லை. அப்படி ஒப்புக் கொண்டால்தான் கலைமனத்தின் அழகு புலப்படும். கவிதையை ரசிக்க முடியும். இல்லாவிட்டால் ‘குற்றுகரப்பிழையை’ எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

    அப்படியானல் இதற்கு என்னதான் முடிவு? மிக எளிது!. இலக்கணப் பார்வையில் உவம உருபோ, பொதுத்தன்மையோ இரண்டுமோ மறைந்து வருவது உவமத் தொகை. இலக்கிய நோக்கில் உருவகம் என்பது பொருளில் உவமத்தைக் காண்பது. ‘அவள் முகத்தாமரையில் என் விழிவண்டுகள் மொய்த்தன!’ முடிந்தது கதை! மறைந்ததைப் பற்றி மறந்து இருப்பதை எண்ணுவதே இன்பம்! உணர்வு சார்ந்த கவிதைகளை அறிவு சார்ந்த இலக்கணத்தால் அளக்க அல்லது தரமதிப்பீடு செய்ய முற்படுகிறபோது எச்சரிக்கையும் கவனமும் மிக மிகத் தேவை!.

    கண்ணகியும் நடுவண் அரசும்

    பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு கோவலனுக்கு உணவு சமைத்துக் குமரி வாழையைின் குருத்தகம் விரித்து உணவு பரிமாறும் கண்ணகி, அவன் இலைக்கு நீர் தெளித்ததை இளங்கோவடிகள்,

    “மண்ணக மடந்தையை மயக்கொளிப்பனள் போல்
    தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி”

    எனக் குறிக்கின்றார். இருந்த நிலையையும் எதிர்வரும் துன்பத்தையும் அறிந்து கொண்டு மண் மடந்தை மயங்கியதாகவும் இனம் பற்றிய இரக்கத்தால் மண்ணக மடந்தையின் மயக்கத்தைக் கண்ணகி நீர் தெளித்துத் தெளிவித்தாள் எனவும் உரையாசிரியர்கள் நயம் காண்பர். ‘நிலமடந்தைக்கு நீர் தெளித்ததைப் போல்’ என்னும் உவமம் முறையான தமிழ்க்கல்வியைப் பெற்றுள்ள கவிஞரையும் அறியாமல் அவரை ஆட்கொண்டதைத்,

    “தாமரைப் பூவில் உறங்கிக் கொண்டிருக்கும் சரஸ்வதியின்
    முகத்தில் தண்ணீர் தெளிப்பதாக இருக்கின்றன”

    என்னும் உவமத்தால் அறியமுடிகிறது. பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்குத் தேர்வு கிடையாது என்னும் நடுவண் அரசின் சேதி, உறங்கிய கலைமகளின் முகத்தில் தண்ணீர் தெளிப்பதைப் போல் இருந்தது என்னும் உவமம் இளங்கோவடிகளின் உவமத்தின் தாக்கமாக இருந்தாலும் இலக்கியம் வளம் பெறுமேயன்றித் தரம் குறையாது என்பது உண்மை. கண்ணகி மண்மகளின் மயக்கம் தீர்த்தது அன்று. மத்திய அரசு கலைமகளின் மயக்கம் தீர்த்தது இன்று!

    ஆலையிட்ட கரும்பான தலைவி

    ‘ஆலையிட்ட கரும்பு’ என்பது வதைபடும் எப்பொருளுக்கும் காட்டப்படும் மரபுவழி உவமையாகும். வறுமையில் வாடும் மக்கள், பிரிவால் வாடும் காதலர்கள், வர்க்கப் போராட்டத்தால் வாடும் தொழிலாளர்கள் என எல்லாருடைய துன்பத்திற்கும் காட்டப்படும் மரபுவழிப்பட்ட இந்த உவமையைத் தலைவனைப் பிரிந்த தலைவியின் கூற்றில் வைத்து,

    “ஆலையிலே சிக்குண்ட கரும்பாய் என்னை ஆக்கிவிட்டான்”

    எனக் கூறுவதைக் காணமுடிகிறது. தலைவனுடைய எண்ணங்களால் துன்பப்படும் தலைவியின் நிலையை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் இதே உவமையை விதவையான பழைய காதலியைச் சந்திக்கும் தலைவன் கூற்றிலும் வைத்துக்காட்டுகிறார்.

    “நெஞ்சமும் துடிதுடிக்க நிம்மதி எனை மறக்க
    அஞ்சன விழியாள் நெஞ்சம் ஆலையின் கரும்பாய் ஆக”

    எனத் தலைவன் கூறினாலும் அவனும் தலைவியின் நெஞ்சத்துத் துன்ப நிலைக்கே இந்த உவமையைப் பயன்படுத்துகிறான்.

    வைரமுத்து உவமைகளில் மரபு மாற்றம்

    மரபை உவம வகையால் அதன் ஆற்றலுணர்ந்து எத்தகைய மாற்றமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளும் கவிஞர் தற்காலச் சிந்தனைப் போக்குகளுக்கேற்பத் தேவையான மாற்றங்களைச் செய்து கொண்டு பயன்படுத்திக் கொள்வதையும் காணமுடிகிறது. எத்தகைய புதுமையானாலும் அது மரபென்னும் ஆணிவேரில் கிளைத்தெழும் என்பதே உண்மை. புதுமையான உவமைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன் ஏற்கனவே இருக்கின்ற உவமைகளில் செய்யக்கூடிய சிறிதளவு மாற்றமே பொருள் புலப்பாட்டுக்குப் போதுமானது என்னும் எண்ணமே இதற்குக் காரணம்.

    மரபு மாற்றம் ஏன்?

    நேற்றைய புதுமை இன்றைய மரபாகிவிடுகிறது. இன்றைய புதுமை நாளைய மரபாகிவிடும். புதுமை என்பது மரபை அழித்து விட்டுத் தோன்றுவதன்று. மரபினின்றும் கிளைத்து எழுவது. இலையுதிர் காலங்களில் உதிர்வதும் வசந்த காலங்களில் அவை தளிர்ப்பதுமான நிகழ்வுகள் தொடர்ந்து வந்தாலும் அடிமரத்தில் வேறுபாடு காணமுடியாததைப் போல மரபு ஓர் அடிமரமாக நின்றுகொண்டிருக்கிறது. மற்ற களங்களில் எவ்வாறிருப்பினும் இலக்கியத்தில் மரபும் புதுமையும் பிணைந்து வருவது தவிர்க்க முடியாது. மரபுவழியாகச் சொல்லப்பட்டு வரும் உவமைகளில் காலப் பொருத்தமின்மையும் சலிப்பும் தோன்றுகிற பொழுதும், கவிஞனின் உள்ளத்தெழுச்சி புதிய வேகத்தோடு செயல்படும் பொழுதும் உவமைகளில் மாற்றம் தேவைப்படுகிறது. இதனால் பழைய மரபு புறக்கணிப்புக்கு ஆளாகிறது என்பதைவிட, விரைந்து செல்லும் காலவோட்டத்தில் தனக்குரிய இடத்தைத் தக்கவைக்க புதுமையோடு அது போராட வேண்டியிருக்கிறது என்பதே பொருந்தும்.

    குந்தியிருக்கும் கொக்கும் நதிக்கரை மக்களும்

    வாய்ப்புக்களைத் தேடிக் களைப்பது ஒருவகை. வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வது மற்றொரு வகை. கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிடாமல் எச்சரிக்கையுடன் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவது வேறொரு வகை. இவற்றுள் எந்த வகையாயினும் அவற்றில் வெற்றி பெற வேண்டுமானால் எச்சரிக்கை உணர்வு தேவை. இது தமிழ்க் கவிதைகளின் உள்ளடக்கங்களில் ஒன்று.

    “எய்தற் கரிய இயைந்தக்கால் அந்நிலையே
    செய்தற் கரிய செயல்”

    “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து”

    என்பன போன்ற குறட்பாக்களில் இத்தகைய சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர், கொக்கின் ‘கூம்புதல்’, ‘குத்துதல்’ என்னும் மாறுபட்ட இருவகை செயல்பாடுகளை உவமமாகக் கூறியிருக்கும் நுட்பத்தை அறிந்து,

    “கொக்கொக்க’ என்றாராயினும் அது கூம்புமாறு போலக் கூம்புக என்றும், ‘குத்தொக்க’ என்றாராயினும் அது குத்துமாறு போலக் குத்துக என்றும் உரைக்கப்படும்” (இரண்டிடங்களிலும் பொருள் உவமத்தை வினையுவமமாகக் கருத வேண்டும் என்கிறார்)

    என விளக்கம் எழுதும் ஆசிரியர் பரிமேலழகரின் உரை, ‘உவமநுட்பம்’ நிறைந்தது. வினையை விளக்க வேறொரு வினையையே உவமமாக்கியிருக்கும் திருவள்ளுரின் நுட்பத்தை உணர்ந்து கொண்ட வைரமுத்து, உவமச் சூழலில் சிறிது மாற்றம் செய்து கருத்து விளக்கம் செய்கிறார். காலமறிதல், இடமறிதல், வலியறிதல் என்பனவெல்லாம் திருவள்ளுவர் காலத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். வருமுன்னர் காத்துக் கொள்ளாத வாழ்க்கை, நெருப்புக்கு முன்னால் வைக்கப்பட்ட பஞ்சுப் பொதியாகும் என்பதும் ஓர் எச்சரிக்கையே. ஆள்வோருக்குச் சொல்லப்பட்ட அறிவுரையில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்பதற்கே கொக்கின் இருவகைச் செயல்பாடுகளைத் திருவள்ளுவர் உவமமாக்கினார். காலமாற்றம் சிந்தனை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. மகனுக்குத் தாய் பாட வேண்டிய தாலாட்டைத் தந்தை பாடுகிறார். அத்தாலாட்டில் தன் மகன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதைப் புதுமையான உவமத்தின் வாயிலாகப் புரியவைப்பதைக் காணமுடிகிறது.

    “நதிக்கரை ஓரத்து
    நகரம்
    வெள்ளப் பெருக்கை
    எதிர்பார்த்து
    விழிப்போடு இருப்பது போல்’
    எப்போதும் விழிப்பாய் இரு.”

    ‘நதிக்கரை ஓரத்து நகரம்’ என்பதால் நதிக்கரை ஓரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களையே குறிக்கும். எச்சரிக்கையாக இருந்து செயல்படுவதற்குக் கொக்கின் செயல்பாடுகளை உவமிக்கும் மரபுவழிச் சிந்தனையில் சிறிது மாற்றம் செய்து, காலத்திற்கேற்ப நதிக்கரை ஓரத்து மக்களின் விழிப்புணர்வை உவமமாகக் காட்டுகிறார்.

    வள்ளுவர் கண்ட முதலையும் வைரமுத்து கண்ட முதலையும்

    பொருள் ஒன்று. அதனை நோக்கும் பார்வைகள் பல. நோக்கத்திற்கு ஏற்பப் பார்வைகள் மாறுபடலாம். இடமறிந்து செயல்பட வேண்டும் எனக் கருதிய வள்ளுவர் முதலையின் நீராற்றலை விதந்து சொல்லி, நிலத்தாற்றலை நினைவுபடுத்துகிறார்.

    “நெடும்புனலுள் வெல்லும் முதலை., அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற”

    செயல்படும் இடத்தின் தன்மைக்கேற்பப் பொருளின் வலிமை மாறுபடும் என்னும் கருத்து விளக்கத்திற்காகத் திருவள்ளுவர் பயன்படுத்திக் கொண்ட உவமையைக் கவிஞர் வைரமுத்து,

    “முதலைகள் போல் நாம் கண்கள் திறந்தே உறங்குவோம்”

    எனத் தற்காலத்தில் தேவைப்படும் சமுதாய விழிப்புணர்வை விளக்குதற்கு உவமமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். தூங்குங்கால் தூங்கி, விழிக்குங்கால் விழித்தெழ வேண்டும் என்பது மரபுவழிச் சிந்தனை. விழித்துக் கொண்டே உறங்க வேண்டும் என்பது புதிய சிந்தனை. கொக்கு மரபுவழிச் சிந்தனைக்கு உவமமாகியிருப்பது போலப் புதிய சிந்தனைக்கு முதலையின் உறக்கம் உவமமாகியிருக்கிறது. ‘இடத்திற்கேற்ப வலிமை மாறும்’ என்னும் கருத்தாக்கம் முதலையால் வெளிப்பட, ‘உறங்காத விழிப்புணர்வே இன்றைய தேவை’ என்னும் கருத்தாக்கம் முதலையின் விழிமூடா உறக்கத்தால் வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம். முயல், ஆமை, காக்கை, நரி முதலிய கதைகளையே கேட்டு வந்த காதுகளுக்கு இந்த முதலைக்கதை புதுமையாகவும் புதியதோர் உண்மை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

    ஆமையின் இடத்தில் சுருக்குப்பை

    பொறியடக்கத்துள் சிறந்தது நாவடக்கம். “யாகாவா ராயினும் நாகாக்க” என்பதே அவ்வடக்கத்தின் இன்றியமையாமை உணர்த்தும் இந்த நாவடக்கத்திற்குத் திருவள்ளுவர் ஒரே அதிகாரத்தில் மூன்று பாடல்களை ஒதுக்கியதிலிருந்தே அதன் எதிர்மறை விளைவுகளை உணரக்கூடும். பொதுவான அடக்கத்திற்கு ஆமையை உவமித்தது மரபாயினும், அம்மரபைச் சற்றே மாற்றிப் புதிய கண்ணோட்டத்துடன் வைரமுத்து படைத்துக் காட்டுகிறார்.

    “ஒரு கலைப்படைப்பு எப்படி மரபினுக்கு ஒத்திருக்க வேண்டும் என்றால் அது மரபினால் வழிகாட்டப்படுதல் போன்று மரபினை மாற்றுவதாகவும் அமைய வேண்டும்’. முந்தைய மொத்த ஒழுங்கு முறையோடு புதிய கலையாக்கம் ஒவ்வொன்றின் உறவுகள் – விகிதங்கள் – மதிப்புகள் என்பன மறு இசைப்பு (RE-ADJUSTMENT) பெறுகின்றன. இதுதான் பழமைக்கும் புதுமைக்கும் இடையில் இருக்க வேண்டிய இயைபு (Conformity) ஆகும்”.

    என்னும் கருத்தின் அடிப்படையில் மரபோடு பின்னிப் பிணைந்தும் அதனை மாற்றியும்,

    “நாவே
    இன்னும் கொஞ்சம் மௌனம் கா
    வாயில்லாச் சில்லறைகள் சத்தமிட்டாலும்
    வாய்திறந்தும் பேசாத சுருக்குப்பைபோல”

    எனத் தலையாய அடக்கமான நாவடக்கத்திற்குச் சுருக்குப்பையை வைரமுத்து உவமையாக்கியிருக்கிறார்.

    செக்கில் சிக்கிய எள்ளும் எள்ளில்லாமல் ஆடும் செக்கும்

    ‘ஆலையில் சிக்கிய கரும்பு’ என்பதைச் சற்றே மாற்றி ஆலைக்குப் பதிலாகச் செக்கையும் கரும்புக்குப் பதிலாக எள்ளையும் இட்டு,

    “இடைவெளி கழிந்த மார்பக இடுக்கில்
    செக்குண்ட எள்ளாய்ச் சிக்குண்டேன்”

    என்னும் காதலன் வாக்கில் செக்கில் ஆடும் எள்ளை உவமமாகப் பயன்படுத்தும் கவிஞரே, எள்ளில்லாமல் ஆடும் வெறும் செக்கையும் தம் கற்பனையால் கண்டு அதனைப் பொருத்தமான பொருள் விளக்கத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

    “எள்ளில்லாமல் சுற்றும் செக்கைப் போல்
    கண்ணீரில்லாமல் பெண்கள் அழ”

    என்னும் வரிகளில் ஊராருக்காக வைக்கும் ஒப்பாரியில் நீரில்லாமலே கண்கள் அழும் என்னும் பொருள் விளக்கத்திற்காக எள்ளில்லாமலேயே சுற்றும் செக்கை உவமமாக்கியிருக்கும் உவமம் நேர்த்திக்குரியது.

    “ஒன்றை அறிவிப்பதன்று கவிஞனின் நோக்கம்,
    ஒன்றை உணர்த்தி வைப்பதே கவிஞனின் தொழிலாகும்”

    ஊராருக்காக வைத்து அழும் ஒப்பாரியில் உயிர்த்துடிப்பு இருக்காது என்னும் கருத்து நிலையை,

    “அழுகிற மாதிரி அழுது வராத கண்ணீரத்
    தொடச்சுக்கிட்டா பட்டுச் சீலையெடுத்து”

    என வண்டி நாயக்கர் வைப்பாட்டியின் நிலைப்பாட்டைக் ‘கள்ளிக்காட்டு இதிகாசத்திலும்’ கவிஞர் குறிப்பிடுவது பொருத்தம் கருதிச் சுட்டப்படுகிறது.

    நிலையாமை கூறும் மட்பாண்டம்

    நிலையாமை உணர்த்துவது குறள்நெறி. அனைத்து நிலையாமையுள்ளும் உடலது நிலையாமை சித்தர்களால் வெகுவாகக் குறிக்கப்பட்டது.

    “ஊத்தைக் குழியிலே மண்ணை யெடுத்தே
    உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
    வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
    வரவோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே”

    குயவன் படைத்த மட்பாண்டத்திற்கு அதனை ஒப்பிடுகிறார். சிறிது கை நழுவினாலும் விழுந்து நொறுங்கும் அதன் நிலைப்பாட்டையும் உடைந்த பிறகு ஒன்றிணைக்க முடியாத இயலாமையையும் ஒருங்கே புலப்படுத்தும் அந்த உவமையின் உள்ளடக்கத்தைப் புரிந்த கொண்ட மற்றொரு சித்தரும்,

                                   “நந்தவனத்தில் ஓர்ஆண்டி – அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
    கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக்
    கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி”

    சிதைந்த உடலுக்கு உடைந்த மட்பாண்டத்தை உவமமாக்கியிருக்கிறார்கள். எனவே உடைந்து போவதற்கு மரபுவழியாகப் பின்பற்றப்பட்டு வந்த உவமமாகிய மட்பாண்டத்தைப்,

    “போட்டுடைத்த மண்பாண்டம் போலே நாட்டில்
    பூந்தமிழர் சிதறி”

    என்னும் வரிகளில் சிதைந்து போன தமிழின ஒற்றுமைக்கு எழுத்து மாறாமல் உவமமாக்கிக் கொள்வதைக் காணமுடிகிறது. உவமையில் ‘மண்பாண்டம்’ என்று கூறப்பட்டிருப்பினும் அதற்கிணையாகத் தமிழர்களைச் சொல்லவரும் கவிஞர் மிகவும் கவனமாகப் ‘பூந்தமிழர்’ என்ற சொல்லைக் கையாள்கிறார். உடைந்து போனதில் மட்டுந்தான் தமிழர்களும் மட்பாண்டமும் ஒன்றே தவிர தன்மையினால் தமிழர்கள் மண்பாண்டங்கள் அல்லர் என்பது அவர் கருத்து. ‘மண்பாண்டம்’ என்னும் சொல்லைக் கொண்டு அதனை மண் ஓடாகக் கற்பனை செய்து கொள்ளும் கவிஞர்,

    “எப்படியோ பிரிவானோம், இடிவிழுந்த ஓடானோம்”

    எனத் தோழிகளின் உடைந்த உறவுக்கு அதனை உவமமாக்குவதையும் இலட்சிய உணர்வின்றி, ஒற்றுமை உணர்வின்றி இன்றைய இளைஞர்கள் சிதறிக் கிடப்பதற்கு,

    “லட்சத்தீவுகளாய்ச் சிதறிக் கிடக்கிறாய்.”

    என இலட்சத்தீவுகளை உவமையாக்குவதையும் அறியமுடிகிறது. ‘சிகரங்களில் கூடு கட்ட வேண்டிய இளைஞர்கள் பள்ளத்தாக்குகளில் பதுங்குவது’ கண்டு பதறும் கவிஞர் இன்றைய இளைஞர்கள் கொள்கைப் பிடிப்பில்லாமல் மனம்போன போக்கில் திரிந்தலைகிறார்கள் என்ற காட்சியைத்தான் ‘லட்சத்தீவுகளாய்’ என்ற தொடரால் சுட்டுகிறார்.

    வனிதையர் கூந்தலும் வாழைக்குருத்தும்      

    பெண்களின் கூந்தலுக்கு மணற்படிவுகளையும் மயில்தோகையையும் கார்மேகத்தையும் கடல் அலைகளையும் கருநாகத்தையும் உவமைகள் சொல்லிச் சலித்துப் போன கவிதையுலகில்,

    “ஓரணா நாணயத்தின் விளிம்பு போன்ற கூந்தல்”

    என 1957இல் கூந்தற்சுருளுக்கு அன்றைக்கிருந்த மஞ்சள் மற்றும் வெள்ளை ஓரணாக்களின் விளிம்புகளை உவமம் காட்டி, மரபிலே மாபெரும் புரட்சி செய்தவர் கலைஞர். கலைஞருக்குப் பின்னால் வந்த கவிஞர் நா.காமராசன்,

    “நீண்ட கருங்கூந்தல்
    ஆலமர விழுதுகள்போல்
    அவள் முதுகில்
    விழுவதும் ஒரு அழகு”

    எனக் கூந்தலின் நெடுமைக்கு ஆலமரத்து விழுதுகளை உவமித்திருப்பது ஒரு புதிய முயற்சி. மரபு சார்ந்தும் புதுமை தழுவியும் கவிதை யாப்பதைத் தமது படைப்புக் கொள்கையாகக் கொண்டிருக்கும் கவிஞர் வைரமுத்து,  கூந்தலுக்கு முற்றிலும் மாறுபட்ட உவமையைக் கூறியிருப்பதன் மூலம் புதியதொரு மரபுக்கு அடித்தளம் அமைப்பதில் தனது பங்கைச் செய்திருக்கிறார் எனலாம்.

    “வாழைக் குருத்துப்போல் சுருண்டிருக்கும் குழல்”

    என்பது கூந்தலுக்கு வைரமுத்து கண்ட உவமை. உவமைகள் கவிஞனின் கற்பனைத்திறனை மட்டுமன்றி அவனுடைய வாழ்க்கை அனுபவங்களையும் வெளிப்படுத்தி நிற்கும். வைரமுத்து வேளாண் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆதலாலும் விருந்தோம்பும் பண்புடையவராதலாலும் விருந்தினருக்கு உண்ணும் இலை பெரும்பாலும் நுனிக்குருத்தாகவே அமைய வேண்டுமென்பதாலும் இவ்வுவமை கவிஞரின் பட்டறிவு உவமை என்பதோடு கூந்தலை நேருக்குநேர் காட்சிப்படுத்தும் திறனும் கொண்டதாகும்.

    வைரமுத்து உவமைகளில் பண்புகளும் அருவங்களும்

    பண்புகளுக்கு இயக்கம் கற்பிப்பது தமிழுக்குப் புதியதன்று. ஆனால் தற்காலத்தில் புதியது. ‘உண்மை வெல்லும்’ என்பது உலக வழக்கு. ‘அழுக்காறென ஒரு பாவி’ எனப் பண்பைப் பண்பியாகச் சொல்லுவது அக்கால இலக்கிய மரபு. இராமன் காட்டுக்குச் செல்கிற காட்சியில்,

    “விதிமுன் செல்லத் தருமம் பின்னிரங்கி ஏக”

    என விதிக்கும் தருமத்திற்கும் முறையே செல்லுதலும், ஏகுதலுமாகிய வினைகளை இணைத்துப் பண்பிற்கு இயக்கம் கூறியவன் கம்பன். மகாகவி பாரதி,

    “தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்”

    எனக் கூறியிருப்பதும் அத்தகையதே. இவ்வாறு பண்புகளைச் செயல்திறன் உடைய பொருள்களாக்கிக் கூறுகின்ற மரபிலிருந்து, அவற்றை உவமமாகவும் அமைத்துக் கூறும் போக்கை வைரமுத்து கவிதைகளில் காணமுடிகிறது.

    மரம் – நட்டுவைத்த மௌனம்

    இயற்கையைப் பாடுவதிலும் அவற்றை உவமமாக அமைப்பதிலும் கவிஞருக்குள்ள திறன் முன்பே ஆராயப்பட்டுள்ளது. மரத்தின் அசைவையும் பாடி, அமைதியையும் பாடியிருக்கும் அவர் வானுயர்ந்து நிற்கும் மரத்தை,

    “நட்டு வைத்த மௌனங்களாய் மரங்கள்”

    என்கிறார். ‘மௌனத்தின் சப்தங்கள்’ என்னும் தனது நூலொன்றின் தலைப்பில் மௌனத்தைப் பேசவைத்த கவிஞர் இங்கே மௌனத்தை நட்டு வைத்திருப்பதை அறியலாம். ‘மௌனத்தை நட்டு வைத்ததுபோல’ என்னும் உவமை அருவப்பொருளை உவமையாக்கும் அவருடைய படைப்புத்திறனையும் சுட்டுவதாகலாம்.

    மனைவியின் உறக்கமும் தியாகத்தின் தூக்கமும்

    மானுட உறவுகளில் கலப்படமில்லாத உறவு தாயுறவு. அவ்வுறவுக்கு அடிப்படையாக இருப்பது மனைவி பந்தம். போலி மதிப்பீடுகளாலும் சில அவசரத் தீர்ப்புக்களாலும் ‘மனைவி’ என்னும் பந்தம் இன்று தன்னுடைய முழுப்பரிமாணத்தையும் தூய்மையையும் காக்க இயலாவிடினும், வைரமுத்தின் பார்வையில் மனைவி தியாகத்தின் உருவாகவே தெரிகிறாள்.

    “தியாகம் உறங்குவது போல் கண்தூங்கும் மனைவி”

    எனப் புத்தரின் மனைவி சுஜாதாவின் உறக்கத்திற்குத் தியாகத்தின் உறக்கத்தை உவமமாக்கியிருப்பதன் மூலம், குடும்பக் கட்டமைப்பில் மனைவியின் பெருமையைச் சரியான முறையில் பதிவு செய்திருப்பதாகக் கருதலாம்.

    தாசுமகாலில் உறங்கும் கம்பீரசோகம்

    தாசுமகாலைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகளுக்குள்ளும் சொல்லப்பட்ட கருத்துக்களுக்குள்ளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘உருவமில்லா மரணத்துக்கு மரணமில்லா உருவம் தாசுமகால்’ (Deathless form to the formless Death) என்பது தாகூரின் கருத்து. மும்தாஜ் உட்பட எவருடைய மரணத்திற்கும் உருவமில்லை., ஆனால் எல்லாருடைய மரணத்திற்கும் என்றும் அழியாத நினைவுச் சின்னங்கள் இல்லை. அந்தப் பெருமை மும்தாஜின் மரணத்திற்கு மட்டுமே கிட்டியது. அதனையே தாகூர் மேற்கண்டவாறு குறித்திருக்கிறார். தாகூரின் பார்வையிலிருந்து கவிஞர் வைரமுத்தின் பார்வை முற்றிலும் வேறுபடாவிட்டாலும், சற்று விலகியிருந்து நோக்குவதை அவருடைய கவிதை வரிகள் காட்டுகின்றன.

    “தாஜ்மகாலில் ஒரு கம்பீரசோகம் உறங்குவது மாதிரி”

    என்னும் கவிதை வரிகளில் தாசுமகாலின் தோற்றத்தை உவமமாக்கியுரைப்பதைக் காணமுடிகிறது. அழகியல் சார்ந்த தாசுமகாலின் தோற்றம், கவிஞருக்குத் தமிழ்ச்சிறுவர்களின் துடைக்க முடியாத சோகத்தை நினைவுபடுத்தியிருக்கிறது. தீபாவளிப் பண்டிகை ஒளி வெள்ளத்திற்கு நடுவே கொண்டாடப்படும். ஆனால் அவ்வொளியைக் கொடுக்கும் பட்டாசுகளையும் வெடிகளையும் சிவகாசியில் தயாரிக்கும் சிறுவர்களின் வேதனை மறக்கப்படுகிறது. அச்சிறுவர்களின் சோகத்தைத் தீபாவளியின் ஒளிவெள்ளம் மறைத்துவிடுகிறது. தாசுமகால் உருவாவதற்காகப் பாடுபட்ட தொழிலாளர்களின் ஓலத்தைத் தாசுமகாலின் பளிங்கொளி மறைத்துவிடுகிறது. உருவாக்கிய தொழிலாளர்களின் ‘சோகம் உறங்குகிறது’ என்னும் உவமம் அருவப்பொருள்களை உவமமாகக் கையாளும் வைரமுத்தின் கவித்திறனுக்கு மேலும் ஒரு சான்றாகலாம்.

    வெறுங்கலத்தில் ஊற்றி வைத்த நிசப்தம்

    மக்கள் அமைதியாகத் தூங்கினார்கள் என்பதைக் கவிஞர்கள் தங்கள் கற்பனை வளத்திற்கேற்பப் புனைந்துரைப்பதுண்டு. பாவேந்தர் பாரதிதாசன்,

    “சோலை உதிர் பூ அன்ன மக்கள் துயில் கிடக்கும் போதில்.”

    எனச் சோலையில் கிடக்கும் அமைதியான பூக்களைத் தூங்கிக் கிடக்கும் மக்களுக்கு உவமையாக்குவார். தூக்கத்தின் அமைதி இவ்வாறு இருந்ததெனின், யாருமில்லா முதியவரின் வீட்டில் நிலவும் அமைதியைக் குறிக்கவரும் கவிஞர்,

    “வெறுமையின் கலத்தில்
    நிசப்தம் ஊற்றி வைத்தது போல் வீடு”

    எனக் குறித்திருப்பதைக் காணமுடிகிறது. ‘வெறுமையான கலத்தில் நிசப்தத்தை ஊற்றி வைத்தாற்போலும்’ என அருவப் பொருள்களாகிய நிசப்தத்தைத் திரவப் பொருளாகக் கண்டு உவமிக்கும் கவிஞரின் திறனையும் காணமுடிகிறது.

    உண்மைக்கு எதற்கு ஒப்பனை?

    உவமத்தைக் கையாளுகிறபோது அதன் வெளிப்பாட்டு உத்திகள் ஒரேவகையாக இருப்பதில்லை. இருத்தல் வேண்டும் என்னும் விதிமுறையும் இல்லை. கருத்து விளக்கத்திற்காகவும் பொருள் புலப்பாட்டுக்காகவும் பயன்படுத்தப்படுகிற உவமங்கள் பல நிலைகளில் வெளிப்படும். அவற்றுள் வினா வடிவமும் ஒன்று. சான்றாகப்,

    “பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல்?”

    என்பது திருக்குறளில் வினா வடிவில் அமைந்த உவமம். கவிச்சக்கரவர்த்தி கம்பன்,

    “கனிவரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ?”

    என உரைப்பதும் அத்ததையதே. மகாகவி பாரதி,

                                                   “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
    கைகொட்டிச் சிரியாரோ?”

    என வினவுவதும் உவமையின் ஒருவகை வெளிப்பாடே. இவர்களின் மரபில் வந்து,

    “காரிருளால் சூரியன் தான் மறைவதுண்டோ?
    கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?”

    என வினவும் பாவேந்தரின் உவமங்கள் வினாக்கள் வடிவில் அமைந்தவையே. உத்தியில் மரபினைப் பின்பற்றும் வைரமுத்து,

    “உண்மைக்கு எதற்கு ஒப்பனை?”

    எனப் பண்பாகிய அருவத்தை உருவமாகக் கொண்டு உவமமாக்கியிருக்கிறார். காசியில் தன் புற ஆசாரத்தை உதறித் தள்ளிய பாரதியை அவருடைய மாமன் பாராட்டுகிறார். ‘அக உணர்வைப் புறப்பூச்சுக்களால் அளக்க இயலாதது போலப்’ பூணூலையும் குடுமியையும் மட்டும் வைத்துக்கொண்டு உண்மையான பிராமணனை அடையாளம் காணமுடியாது’ என்னும் கருத்து விளக்கத்திற்காக இந்த உவமையைக் கவிஞர் பயன்படுத்தியிருக்கிறார்.

    தர்மம்போல் காத்திருந்த தமிழ்ச்சீதை

    அதர்மத்தைத் தர்மம் வெல்லும் என்பது வழக்கு. ‘தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்’ என்பது பாரதி வாக்கு. ஆனால் அறமகளான சீதை அசோகவனத்தில் தவமிருந்த காட்சி தருமமே சிறையிருந்ததாக வைரமுத்து கண்களுக்குப் புலப்பட்டுள்ளது. சீதையை இராமனுடைய மனைவியாகக் காணாமல் அறமாக உவமித்துத்,

    “தர்மம்போல் அன்றோ எங்கள் தமிழ்ச்சீதை காத்திருந்தாள்”

    எனக் கூறியிருப்பதைக் காணமுடிகிறது. தர்மம் தனக்குரிய காலத்தை எண்ணிக் காத்திருப்பது போல் சீதை காத்திருந்தாள் என்பதே உவம விளக்கம் ஆயினும் தர்மம் எப்பொழுதும் சோதனைக்கு ஆளாகும் என்பதும் இரட்டுற மொழியப்பட்டிருப்பது உவமத்தின் வன்மையைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.  மரபை அப்படியே பின்பற்றுவதோடு காலச் சூழலுக்கேற்பவும் கருத்து நிலைக்கேற்பவும் சற்று மாற்றியும் உவமங்களைப் பயன்படுத்தும் கவித்திறன் வைரமுத்துக்குக் கைவரப்பெற்றதே! இதனை இந்தக் கட்டுரையில் மேலே காட்டப்பட்ட சில சான்றுகள் கொண்டு அறியலாம்.!

    நிறைவுரை

    பாரதிதாசனுக்குப் பிறகு எண்ணிக்கையாலும் தரத்தாலும் அழகியல் குறையாமலும் கவிதையில் உவமங்களைப் பயன்படுத்தியவர் சிலரே!. சுரதா, அப்துல் ரகுமான் என்னும் இவர்களைத் தொடர்ந்து இந்தப் பயணத்தைத் தொடர்ந்தவர் வைரமுத்து என்பது கட்டுரையாளர் கருத்து. நுண்ணியத்தோடு கூடிய உவமங்களைச் சொன்னதில் இவர்கள் முன்னிற்கிறார்கள்!. பொரியலுக்குப் ‘பூனைக்கண்ணை’ உவமமாக்கியவர் பாவேந்தர். கவிதையின் தடையில்லா இயல்பு நடைக்கு வாழைத்தண்டை உவமமாக்கியவர் சுரதா! வாழ்க்கையில் பின்னோக்கிச் செல்பவனுக்குக் ‘கயிறு திரிப்பவனை’ உவமமாக்கியவர் அப்துல் ரகுமான்! அவர்களைப்  போல அரிய, அழகியலும் ஆழமும் குறையாத உவமங்களை, மரபைப் பின்பற்றுதல், மரபினைச் சற்றே மாற்றுதல், புதிய மரபிற்கு அடிக்கல் நாட்டுதல் என்னும் பல்லாற்றானும் பயன்படுத்தியிருப்பதன்வழி, வைரமுத்தின் படைப்புக்கள் ஓர் உவமக்காட்சிச் சாலையாகவே காட்சியளிக்கிறது!.

    (இந்தத் தொடர் அடுத்த கட்டுரையோடு நிறைவுறும்)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 48

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 48

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    வைரமுத்து கவிதை உவமங்களில் மரபு

    முன்னுரை

    தற்காலத் தமிழ்க்கவிதை உலகில் சில கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களை எழுதி வைத்துக்கொண்டு தன்னையொரு ‘மரபுப்பாவலர்’ என்று சொல்லும் போக்கு பெருகிவருகிறது. இத்தகைய போக்கு  உண்மையில் இரண்டு வகையில் நெடிய தமிழ்க்கவிதை மரபினைப் பாதிக்கிறது. ஒன்று மரபு என்பது யாப்பு மட்டுமல்ல என்னும் புரிதலுக்கு எதிராக அமைகிறது. இரண்டு உண்மையான தமிழ்க்கவிதை மரபுகளை மீட்டுருவாக்கம் செய்யும் பணி முற்றிலும் தடைபடுகிறது. மரபு பற்றிய நிலைப்பாடு இதுவெனின் புதுமை பற்றிய நிலைப்பாடு இன்னும் மோசமாக இருக்கிறது. ‘சொல்புதிது பொருள்புதிது சோதிமிக்க நவகவிதை’ என்னும் மகாகவியின் தொடர் எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதைத் தற்காலத்தில் வெளியாகும் கவிதை நூல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. மரபின் வேர்களிலிருந்து பிறக்க வேண்டிய புதுமைப்பூக்களைத் தவிர்த்து இறக்குமதிச் சரக்குகளைப் புதுமை என எண்ணும் போக்கும் நிலவுகிறது. புதிய பேனாவில் புதிய தாளில் எழுதுவதெல்லாம் புதுக்கவிதை ஆகிவிடாது. இந்தப் பின்புலத்தில் வைரமுத்து கவிதைகளில் இயல்பாகவே ஊடுருவி நிற்கும் மரபிழைகளை இந்தக் கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகிறது.

    பொருளதிகாரத்தின் உள்ளடக்கம்

    எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் அச்சொற்களால் அமையும் இலக்கியத்தைப் பற்றிப் பேசியதே பொருளதிகாரம். தமிழ்மீது அதீதப் பற்றும் உணர்ச்சி வசப்படும் இயல்பும் கொண்ட அறிஞர் சிலர் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தமிழர்தம் வாழ்வியல் கூறும் நூல் என்று மயங்கினர். மயங்கி அக்கருத்தை வலியுறுத்தினர். வலியுறுத்தவே வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பவாகலின் உலகிலேயே வாழ்வுக்கு இலக்கணம் வகுத்தவன் தொல்காப்பியன் என்னும் பெருமைக்குள் அவரைத் திணிக்க முற்பட்டனர். காலம் செல்லச் செல்ல உலகம் தழுவிய இலக்கியம் மற்றும் திறனாய்வுக் கொள்கைகள் வெளிச்சத்திற்கு வந்த காரணத்தால் அவ்வாறு சொன்ன அறிஞர்களே தமது கருத்துக்களிலிருந்து பின்வாங்கினர். தொல்காப்பியம் அரிஸ்டாட்டிலின் ‘கவிதையியல்’ (POETICS) போலக் கவிதையிலக்கணம் கூறும் நூல் என்பதைப் புரிந்து கொள்ள நெடுங்காலத்தை நாம் இழந்திருக்கிறோம். எழுத்தினைத் தொடர்ந்து சொல், சொல்லினைத் தொடர்ந்து இலக்கியந்தானே இருக்க வேண்டும்? என்ற சாதாரண புரிதல் கூட இல்லாமல் போனது பேரிழப்பாக முடிந்தது. இந்த இழப்புத்தான் செய்யுள் மரபு அல்லது கவிதை மரபு என்பதைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் நம்மவர்க்கு இல்லாது போனதற்குக் காரணமாக அமைந்தது. அறிஞர் தமிழண்ணல், அ.சா.ஞானசம்பந்தனார் முதலிய அறிஞர்கள் காலம் கடந்து உணர்ந்த இந்த உண்மையை உணர்ந்து வெளிப்படுத்தினர். வளைந்து கோணிக் கொண்டு சென்ற தமிழ்க்கவிதைகள் பற்றிய கொள்கை விளக்கம் பெறுவதற்கு அவர்கள் உதவினர்.

    தமிழ்க்கவிதை மரபு

    வாழ்வியலைப் பேசுகிறவன் செய்யுளுக்கு இலக்கணம் செய்வானா? தொல்காப்பியச் செய்யுளியல் எந்த வகையில் வாழ்வியலாக முடியும்? தொல்காப்பியப் பொருளதிகாரத்தைக் கவிதை பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு என்று தொடக்கத்திலேயே கண்டிருந்தால் தமிழ்த் திறனாய்வு இந்நேரம் உலக உச்சத்திற்குச் சென்றிருக்கும். இலக்கிய உருவாக்கத்தில் தொல்காப்பியத்தின் சட்ட திட்டங்கள் ஒரு பண்பட்ட சமுதாயத்தின் இலக்கியப் படைப்பாற்றலை எதிரொளிக்கிறது என்பதே உண்மை. இன்னார்தான் உவமம் சொல்ல வேண்டும்! இப்படித்தான் உவமிக்க வேண்டும்! இப்படித்தான் உவமம் அமைதல் வேண்டும்! தெரியாத பொருளை உவமம் சொல்லக் கூடாது. பெற்ற தாய் பேசவே கூடாது! என்றெல்லாம் ஓர் இலக்கியக் கட்டமைப்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தூக்கி நிறுத்திய இலக்கியப் பேராசிரியர் தொல்காப்பியர். தமிழில் ‘மரபு’ என்னும் சொல்லின் பொருளடர்த்தி மிகவும் ஆழமானது. தொல்காப்பியர் ‘நூன்மரபு’, ‘மொழிமரபு’, ‘தொகைமரபு’, ‘விளிமரபு’, ‘மரபியல்’ என்றெல்லாம் அதனை ஆராய்ந்திருக்கிறார். இவற்றைத் தவிர திணை மரபு, சொல் மரபு, பொருள் மரபு, கூற்று மரபு, யாப்பு மரபு எனப் பல்வகை மரபு சார்ந்த பொருண்மைகள் அவரால் ஆராயப்பட்டுள்ளன. ‘மரபுவழாநிலை’, ‘மரபுவழுவமைதி’ முதலியனவும் அவரால் ஆராயப்பட்டனவே. தொல்காப்பியத்தின் ‘அகப்பொருள் மரபு’ தமிழுக்கே சிறப்பானதும் நுட்பமானதுமாகும். மரபுக்கவிதைகள் என்றால் பொருண்மை, வடிவம், உத்தி ஆகியவற்றில் மரபு சார்ந்திருக்கும் கவிதைகளைக் குறிப்பதாகும். புதுக்கவிதைகள் என்பவை இவற்றின் மாறாக அமைந்திருப்பவை. வடிவத்தை இழப்பதானலேயே புதுக்கவிதை ஆகிவிடாது. இழப்பதனாலேயே ஒன்று புதுமையாகிவிடவும் முடியாது.

    ‘மரபு’ என்னும் சொற்பொருள் விளக்கம்

    ‘மரபு’ என்னும் சொல்லுக்குரிய வரைவிலக்கணம் தொல்காப்பியத்துள் காணுமாறில்லை. ஆனால் அச்சொல்லுக்கு விளக்கம் கூறப்புகும் உரையாசிரியர்கள் உள்ளிட்ட அறிஞர் பலரும் பல்வேறு சூழலுக்கேற்ப அதன் பொருளை விரித்துக் காட்டியுள்ளனர். தொல்காப்பியர் தனிமொழியாகவும் தொகைமொழியாகவும் சற்றொப்ப முப்பது இடங்களில் ‘மரபு’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இத்தகைய இடங்களில் எல்லாம் அச்சொல் பல்வேறு பொருளைக் குறித்து நின்றாலும் ‘உயர்திணை அஃறிணை ஆகிய இருவகைப் பொருட்களை, உலகியல் வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்குகளிலும் சான்றோர் தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைமை’ என்னும் அளவிலேயே அதன் பொருள் புலப்பாடு நிறைவு பெற்றுவிடுவதாகத் தெரிகிறது.

    “மரபென்ற பொருண்மை என்னையெனில் கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவும், செய்யுளியலுள் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுமன்றி இருதிணைப் பொருட்குணனாகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும் உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும் அஃறிணை புல்லும் மரனும் பற்றிய மரபும் அவைபற்றி வரும் உலகியல் மரபும் நூன்மரபும் என இவையெல்லாம் மரபெனப்படும்”

    என்னும் பேராசிரியர் விளக்கத்தால் காணமுடிகிறது. இதனால் தொல்காப்பியத் தளத்துள் மரபு பற்றிய களங்கள் விரிந்து பரந்துள்ளன என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது. திருக்குறள், அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியுமாப் போலத், தொல்காப்பியத்துள் ஓதப்பட்ட அனைத்துக் கருத்துக்களும் தமிழ்நெறியே என்பதற்குச் சான்றாக, ‘நூன்மரபு’ எனத் தோற்றுவாய் செய்து ‘மரபியல்’ என முடித்துக் காட்டும் ஆசிரியரது சதுரப்பாட்டினை ஓர்ந்துணர்ந்து கொள்க.

    மரபு பற்றிய தற்கால மதிப்பீடு

    மரபியல் சார்ந்த கருத்துக்களும் சிந்தனைகளும் தொல்காப்பியத்துள்ளும் அதன் உரைகளுள்ளும் பல்வேறாகக் காணக்கிடக்கின்றன. கிடப்பினும் மரபியலை நன்குணர்ந்த ஆய்வறிஞர்கள் தற்காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய பொருண்மைகளை உள்ளடக்கிக் கூறும் விளக்கம் இங்குச் சுட்டப்படுவது பொருத்தமாகலாம்.

    “மரபு என்பது இலக்கணம் மட்டுமல்ல., மரபு என்பது இலக்கியத்திற்கு மட்டுமல்ல., மரபு என்பது முந்தையத் தலைமுறைகள் சேர்த்து வைத்திருக்கும் அனுபவம், அறிவு, முடிவு ஆகிய அனைத்தும் சேர்ந்தது. கால நீட்சியில் மானுடவாக்கம் தன் அறிவுத் தோட்டத்தில், அனுபவத் திளைப்பில் உணர்ந்துத் தெளிந்து உருவாக்கிய முடிவுகள் அவை. வருங்காலத்திற்கென்று இலக்கியமாக, சமயமாக, அறநெறியாக, பிற அறிவுத்துறைகளாக முந்தையத் தலைமுறை விட்டுச் சென்ற அனுபவத் திரட்டுதான் மரபு. மத, சமூக அமைப்புக்களுக்குச் சடங்குகள் சம்பிரதாயங்கள் இருப்பது போல, இலக்கியத்திற்கும் மரபு இருக்கிறது. இலக்கிய மரபு என்பது வெறும் யாப்பு மரபு அல்லது இலக்கண மரபு மட்டுமல்ல. இலக்கிய ஆசிரியர்கள் காலம் தோறும் முன்வைத்து வந்திருக்கும் சிந்தனைகள், எண்ணங்களின் மரபும் இலக்கிய மரபுகள்”

    எனப் பேராசிரியர் பாலா தரும் விளக்கம், மரபின் விரிந்து பரந்த ஆதிக்கத்தையும் அவ்வாதிக்க எல்லைக்குள் அதனுடைய பொருள் புலப்பாட்டுத் திறனையும் தெளிவாக்குவதாக உள்ளன.

    வைரமுத்து உவமைகளில் மரபு போற்றுதல்

    பாரதிதாசனுக்குப் பின் வந்த கவிஞர்கள், ‘புதுக்கவிதை’ என்னும் பெயரால் வடிவமாகிய உருவத்திலும் சிந்தனையாகிய உள்ளடக்கத்திலும் பெரும் மாற்றத்தைச் செய்தனர். கவிதைக்குக் ‘கருத்துக்களுக்கே முதன்மை’ என்னும் புதிய கருதுகோள் உருவாக்கப்பட்டது. உள்ளடக்கத்துக்கு அடுத்த நிலையிலேயே உருவம் மதிப்பிடப்பட்டது. இவ்வாறு காலத்திற்குக் காலம், வாழ்க்கையை இன்னதென்று அடையாளம் காட்டும் முயற்சியில், தமிழ்க்கவிஞர்களின் சிந்தனையும் மாறி வந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. உள்ளடக்கத்திற்குப் பொருந்தும் மேற்கண்ட நிலைப்பாடு, அதனை வெளிப்படுத்தும் உத்திகளில் ஒன்றான உவமைக்கும் பொருந்தும். ‘மரபின் தாக்கம் அல்லது மரபின் ஆளுமை’ என்ற அளவில், மரபை ‘அப்படியே பின்பற்றுதல்’ என்னும் முறையில் வைரமுத்து கவிதைகளில் அமைந்துள்ள உவமைகளை இப்பகுதி ஆராய்கிறது. மரபு வழியாகப் பயன்படுத்தப்படும் உவமைகளின் பொருளாளுமை மிகவும் பொருத்தமாக இருந்ததாலும், அதற்கிணையான வேறொரு உவமம் கிட்டாத நிலையிலும் மரபு அப்படியே பின்பற்றப்படும். உண்மையில் இது முதன்முதலாக அவ்வுவமையைப் பயன்படுத்தியவரின் இலக்கிய ஆளுமைக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படலாம். அவ்வெற்றியைப் ‘பாட்டன் தேட்டம் பேரனுக்கு’ என்பது போலப் பின்னாள் தோன்றுகிற படைப்பாளர் அனைவரும் அனுபவிக்கின்ற உவம இன்பமாகும்.

    இருவகை அழலிலும் எரியாத  உவமம்

    முறையான தமிழ்க்கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பு கிட்டிய தமிழ்க்கவிஞர் சிலருள் வைரமுத்தும் ஒருவர். பழந்தமிழ் இலக்கியச் சிந்தனைகளும் அச்சிந்தனைகளை வெளிப்படுத்தி நிற்கும் சொற்களும் அவரையும் அறியாமல் அவருள்ளத்தில் பதிந்திருக்கின்றன. இதனால் மரபு என்பது அவர் மனத்துள் எல்லா நிலைகளிலும் எளிதாகப் பதிந்து போனதை உறுதி செய்யலாம். சான்றாகத்,

    “திரியழல் காணின் தொழுப, விறகின்
    எரியழல் காணின் இகழ்ப, ஒரு குடியில்
    கல்லாது மூத்தானைக் கைவிட்டுக், கற்றான்
    இளமை பாராட்டும் உலகு.”

    என்னும் கீழ்க்கணக்கு வெண்பா ஒன்று, ‘அழலாகச் சுடுவதனாலேயே சுடரையும் நெருப்பையும் ஒன்றாகக் கருதமுடியாது. அதுபோல, அகவை மூத்திருப்பதாலேயே கல்லாதவனை மதித்துவிட முடியாது., கற்றவனுடைய இளமையே பாராட்டுக்குரியதாகும்’ என்னும் கருத்தைச் சுட்டுகிறது. விளக்குச் சுடரும் எரிநெருப்பும் ஒன்றாயினும் வேறுபடும் மதிப்பீட்டிற்குள்ளாவன. மூப்பு எல்லாருக்கும் பொதுவாயினும் கல்வியே மதிப்பிடும் கருவியாகும். இக்கருத்தையும் உவமத்தையும் உள்வாங்கிக் கொண்ட கவிஞர், தம்முடைய கன்னித் தொகுப்பான ‘வைகறை மேகங்களில்’ கோவலனின் ஒழுக்கச் சிதைவு அளவுக்கு மீறியது என்னும் கருத்து விளக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

    “அளவாகத் தீயெரிந்தால் அதனை விளக்கென்போம்
    அளவுக்கு மீறிவிட்டால் அதனை நெருப்பென்போம்’
    அளவுக்கு மேல்பொறுமை அன்னமே நீ காட்டியதால்
    களவுக்குப் போனதம்மா காத்து வைத்த உன்சொத்து”

    இவ்வரிகளில் நான்மணிக்கடிகையின் சாரம் அப்படியே படிந்திருப்பதைக் காணலாம். கோவலனின் புறவொழுக்கத்திற்கு ‘அளவு’ காணும் கவிஞரின் கருத்துப் பற்றி இங்கு ஆராய்வது நோக்கமில்லையாயினும், தொடக்கத்திலேயே கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் கவிஞரின்  கருத்து நிலைக்காக, மரபு சார்ந்த உவமத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது ஈண்டுச் சுட்டப்படுகிறது.

    கவரிமாவை(னை)ப் பின்பற்றும் கவிஞர்

    ‘கவரிமா’ என்பது விலங்கினங்களில் ஒன்று. ‘மா’ என்பது பொதுப்பெயர். ‘கவரி’ என்பது சிறப்புப் பெயர். எனவே ‘கவரிமா’ என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இதனைக் ‘கவரிமான்’ என்றே தமிழிலக்கிய உலகம் வழங்கிவருகிறது. ‘கவரிமான்’ என்னும் வழக்கு திருக்குறளில் இல்லை. இந்தக் கவரிமாவின் சிறந்த இயல்பைத் திருவள்ளுவர் தம் திருக்குறளில் குடிப்பிறந்தார்க்கு உவமையாகப்  பயன்படுத்துகிறார்.

    “மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர் நீப்பர் மானம் வரின்”

    என்னும் குறட்பாவில், தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவின் இயல்பை, மானத்தைக் காப்பதற்காக உயிரையே விடும் சான்றோர்களுக்கு உவமமாக்கியிருப்பதைக் காணலாம். மானத்தைக் காப்பதற்குப் பெரும்பாலும் உவமமாகப் பயன்படும் கவரிமாவைக் கவிஞரும் அதே பொருள் விளக்க நோக்கத்திற்காக,

    “மயிருதிர்ந்தால் வாழாத மானமுள்ள மான்போல”

    எனப் பயன்படுத்துவதை அறியமுடிகிறது. பிணத்தைப் பற்றிப் பாடவரும் கவிஞர் மயிரிழந்த மானை உயிரிழந்த பிணத்திற்கு உவமமாக்குகிறார். ‘உயிர்த்துடிப்பு போனதனால் உதவாத உடல் ஓடமாகிவிட்ட பிணத்தின் மான உணர்வை கவரிமானாகிய உவமம் கொண்டு விளக்குவதைக் காணமுடிகிறது.

    பசித்தவன் முன் பசும்பால்

    பசியால் வாடுபவனின் துடிப்பைப் பாவேந்தர் பாரதிதாசன் அழகியல் உணர்வை வெளிப்படுத்துதற்கு உவமையாக்கியிருக்கிறார்.

    “பசித்த மக்கள்
    சிறிது கூழ் தேடுங்கால் பானை ஆரக்
    கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்”

    முழு நிலவைக் காணும் இன்பத்திற்கு உவமையாக்கப்பட்டிருப்பது போலவே கவிஞரும்,

    “உலகம் தண்ணீர்ப்
    ‘பஞ்சத்தில் தவிக்கின்ற போதில் நானும்
    பசுப் பாலைப் பார்ப்பதுபோல்”

    தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கிறவன் பசும்பாலைக் கண்டதுபோல் தன் காதலியைக் கண்டு மகிழ்ந்தான் என உவமிப்பதைக் காணமுடிகிறது. இது போன்ற நேர்வுகளில் கவிஞர் அப்படியே மரபினை எவ்வித மாற்றமும் இல்லாமல் பின்பற்றிவிடுவதை அறியமுடிகிறது.

    அடக்கமும் ஆமையும்

    திருக்குறளில் ஒருமுறை ஒரு கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்திய உவமை, வேறொரு இடத்தில் வேறொரு கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணமுடியவில்லை. மனம், மொழி, செயல் ஆகியவற்றில் அடக்கத்தைக் கடைப்பிடிக்க வற்புறுத்தும் நூல் திருக்குறள். அதனுள் மெய்யடக்கத்தை வற்புறுத்துதற்கு ஆமையை உவமமாகப் பயன்படுத்திக் கொள்வதை அறியமுடிகிறது.

    “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து”

    என்னும் குறட்பாவில் இடர்புகாமல் தனது ஐந்துறுப்புக்களையும் ஆமை அடக்கிக் கொள்வது போலப், பாவம் புகாமல் ஒருவன் தனது ஐம்பொறிகளையும் அடக்கிக் கொள்ள வேண்டும் என்னும் கருத்து விளக்கம் புலப்படுவதைக் காணலாம்.

    பாவேந்தர் கண்ட ஆமை

    உண்மையான பெண்ணுரிமைக்கு உரத்த குரல் எழுப்பியவர் பாவேந்தர். பிறப்பாலும் புலன்களாலும் ஆணுக்கிணையானவள் பெண் என்பது பாவேந்தர் கருத்து. தனிக்கவிதையாயினும் காப்பியமாயினும் பெண்ணைப் பற்றிப் பாடும் பொழுதெல்லாம் பண்பாட்டுக்குப் பங்கம் வராத உண்மையான பெண்ணுரிமையை அவர் வலியுறுத்த தவறியதே இல்லை. சஞ்சீவிப் பர்வதத்தின் சாரல் என்னும் காப்பியத்தின் பாத்திரமொன்றின் வாயிலாக,

    “ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
    ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு.”

    என ஆடவரின் பின்னடைவுக்கு ஆமையை உவமம் காட்டுகிறார். திருக்குறள் உவமையில் ஆமையின் ஒடுக்கம் நேர்முகமானது., பாவேந்தர் உவமையில் அது எதிர்முகமானது., கூடாதது. பெண்ணை மதிக்காவிடின் ஆடவரின் முன்னேற்றம் ஆமையின் உறுப்புக்கள் போல் உள்ளொடுங்கிவிடும் என்பது கருத்து.

    வைரமுத்து கண்ட ஆமை

    பாவேந்தரைப் பின்பற்றி மரபுக்கவிதை செய்யும் வைரமுத்து, உவமையால் மரபு காத்து, உறுப்பினரை மாற்றிவிடுகிறார். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நாற்குணங்களைக் கணவனோடு தனியாக இருக்கும் போது காட்டக்கூடாது என்பதைக் கூறவரும் கவிஞர், கணவன் வாய்மொழியில்,

    “ஓட்டுக்குள் ஆமைபோல் உன்னை யொளித்தாய்”

    எனப் பதிவு செய்கிறார். அடங்குதற்கு உவமமான ஆமை, ‘குறிப்பிட்ட சூழலில் அடக்கம் அதன் பயனைத் தராது’ என்பதற்கும் உவமமானது தமிழ்க்கவிஞர்களின் கவிதைத் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்துவதாகலாம்.

    உள்ளும் புறமும்

    ஓர் உண்மையை வலியுறுத்துவதற்குப் பல உத்திகளைப் படைப்பாளர் கையாளுவர். காணமுடியாத கடவுளின் உண்மையை நிலைநாட்ட திருவள்ளுவர் ஒலிவடிவான அகரத்தின் எழுத்துத் தலைமையை உவமையாக்கி உரைக்கிறார். கண்ணால் காண இயலவில்லை என்பதற்காக அகர ஒலியே இல்லையென்றாகிவிடாது., மாறாக எல்லா மொழிகளுக்குள்ளும் எல்லா ஒலிகளுக்குள்ளும் அவ்வகரம் மறைந்தே நிற்கிறது. அதுபோலக் கண்ணால் காணமுடியவில்லை என்பது கொண்டே இறைவனை இல்பொருளாக்கிவிட முடியாது., உணர்ந்து அனுபவித்து அறியவேண்டிய உண்மை அது. இது திருவள்ளுவர் கையாண்ட உவம நுட்பமாகும். இத்தகைய உவம உத்தியை திருக்குறளில் வேறுசில இடங்களிலும் அவர் கையாண்டிருக்கிறார் என்பதும் அதுவே உவம மரபாக மாறிவிடுகிறது என்பதும் ஈண்டுச் சுட்டப்பட வேண்டிய செய்தியாகும்.

    மணிக்குள் நூலும் மொட்டுக்குள் மணமும்

    கண்டதைக் கொண்டு காண இயலாததை உறுதி செய்து கொள்ளும் அளவையியலைச் சார்ந்த இவ்வுத்தியைத் காமத்துப்பால் தலைவனும் பின்பற்றுவதைக் காணமுடிகிறது. தலைவி தானுற்ற காதலை வெளிப்பட உரைத்தல் இயல்பன்றாதலின், தலைவன் இரண்டு உவமைகளைப் பயன்படுத்தித் தலைவியின் காதல் குறிப்பை உணர்ந்து கொள்கிறான்.

    “மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
    அணியில் திகழ்வதொன் றுண்டு”

    என்னும் தலைவன் கூற்றில், ‘மணியில் மறைந்திருக்கும் நூல்போல் இத்தலைவியின் அழகுக்குள் மறைந்திருப்பது ஒன்றுண்டு’ என்னும் கருத்து புலப்படுவதைக் காணலாம். ‘திகழ்தரு நூல்’ என்பதற்கு ஆசிரியர்  பரிமேலழகர், “அகத்துக் கிடந்து புறத்துப் புலனாகா நூல்போல” என்னும் பதவுரையை ஈண்டுச் சுட்டுவது பொருத்தமாகலாம். மேலும்,

    “முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
    நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு”

    என்னும் தலைமகன் கூற்றிலும், ‘மொட்டுக்குள் மறைந்திருக்கும் மணம்போல் இத்தலைவியின் புன்னகையில் மறைந்திருப்பது ஒன்றுண்டு’ என்னும் கருத்து புலப்படுவதைக் காணலாம். ‘மொக்குள் உள்ளது நாற்றம் போல்’ என்னுந் தொடருக்கு ஆசிரியர் பரிமேலழகர் ‘முகிழ்ப்பின் உளதாய்ப் புறத்துப் புலனாகாத நாற்றம் போல’ எனக் கூறும் பதவுரையை நினைவு கூறலாம்.

    அப்பர் கண்ட  ஆண்டவன்

    நாயன்மார்களில் ஒருவரான அப்பரடிகள், இறைவனின் உண்மையைக் கூறுதற்குத் திருவள்ளுவர் பயன்படுத்திய உவம உத்தியையே பயன்படுத்திப் பதிகம் பாடியிருக்கிறார். ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ முயன்றாலன்றி இறைவனைக் காண்பது அரிது என்னும் உண்மையை எடுத்துக்காட்டும் அப்பர்  பெருமான்,

    “விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
    மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்”

    என இரண்டு உவமைகளால் உறுதி செய்வதைக் காணமுடிகிறது. விறகின்றி நெருப்பில்லை., விறகே நெருப்பில்லை., விறகுக்கு உள்ளேதான் நெருப்பு. பற்ற வைத்தால் விறகு நெருப்பாகும்., இல்லையெனின் விறகு விறகாகவே இருந்துவிடும்., பாலின்றி நெய்யில்லை., பாலே நெய்யில்லை., பாலுக்கு உள்ளேதான் நெய். பிறை ஊற்றித் தயிர், மோர், வெண்ணெய் என்னும் படிநிலைகளைத் தாண்டினால் கிடைப்பது நெய். படிநிலை இல்லையெனின் பால் பாலாகவே இருந்து விடும். மானுடத்தின் முயற்சியினால் கிட்டுவது இறைநிலை. இந்த உண்மையை விளக்குதற்கு அப்பர் கையாளும் உவம உத்தி தொடர்ந்து மரபாகி வைரமுத்து கவிதைகளிலும் இழைவதைக் காணமுடிகிறது.

    வெடிக்குள் தீயான காதலன்

    திருக்குறளிலும் தேவாரப் பதிகத்திலும் கையாளப்பட்டுள்ள இவ்வுவம உத்தியை வைரமுத்து கவிதைகளிலும் காணமுடிகிறது. கவிஞர் வைரமுத்து தமது கவிதைகளின் கன்னித் தொகுப்பான ‘வைகறை மேகங்களிலேயே’ இந்த உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். காதலனைப் பிரிந்த காதலியின் புலம்பலாக அமைந்திருக்கும் கவிதையொன்றில்,

    “தீ நின்ற வெடியாகச் சிதறிப் போகும்
    தேன்நின்ற என்னுயிரைப் பார்”

    என்னும் வரிகளில் தலைவியின் உயிர் வெடி. வெடிக்குள் தீயிருக்கிறது. வெடியே தீயில்லை. பற்ற வைத்தால் வெடித்துத் தீ சிதறும். தலைவனைப் பற்றிய எண்ணங்கள் தீ. தீயை உள்ளடக்கியது அவள் உயிர். ‘வருவான்’ என்றெண்ணிய தலைவன் வரவில்லையாதலின் அவள் உயிர் சிதறுகிறது. இத்தகைய பொருண்மைகளையெல்லாம் உள்ளடக்கிய மரபு சார்ந்த உவமமாக இது அமைந்திருக்கிறது.

    கவிதைக்கு அழகூட்டும் காரணிகளில் முரணுக்கு முக்கியமான பங்குண்டு. அது சொல்லாலும் அமையலாம். பொருளாலும் அமையலாம். மேற்கண்ட எடுத்துக்காட்டில் தலைவன் அருகிருக்கும் போது தேனாக இருப்பது அவன் பிரிந்த போது தீயாக மாறுகிறது என்னும் முரண் கவிதைக்கு அழகு சேர்ப்பதைக் காணலாம்.

    தீப்பெட்டிக்குள் சிறைகிடக்கும் தீ

    ‘கவிராஜன் கதை’ என்னும் பாரதி காவியம் முழுமையும் பாரதி கதிரவனாகவும் நெருப்பாகவும் உருவகம் செய்யப்பட்டிருக்கிறார். கவிஞர் பாரதியை ‘நெருப்பு’, ‘தீ’ என்னும் இரு சொற்களால் உருவகம் செய்வார். ‘தீயை’ யாரும் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தி வைத்தால் என்றாவது ஒரு நாள் பற்றிக் கொள்வது உறுதி. காசியில் தன் அத்தை வீட்டிலிருந்து திரும்பிய பாரதிக்கு எட்டையபுர அரண்மனையில் ஒரு பதவி கிடைத்தது. அந்தப் பதவி புயல் ஓய்வெடுக்கப் போதுமானதாக இல்லை. அந்த நிலையை விளக்க வரும் கவிஞர்,

    “தீப்பெட்டிக்குள் சிறைகிடக்கும்
    தீ மாதிரி
    அரண்மனை வேலை
    அவனை அடக்கியது”

    எனப் பதிவு செய்கிறார். இவ்வுவமையில் தீ தீக்குச்சிக்குள் சிறையிருக்கிறது. தீக்குச்சிகள் தீப்பெட்டிக்குள் சிறையிருக்கின்றன. எனவே தீ தீப்பெட்டிக்குள் சிறையிருக்கிறது. தீப்பெட்டியே தீயில்லை. ஆனால் தீப்பெட்டிக்குள்தான் தீயிருக்கிறது. மகாகவி பாரதியை உரசினால் பற்றிக் கொள்ளும் தீக்குச்சிக்குள் தீயாகக் காணும் கவிஞரின் பார்வை பெரிதும்  சிந்தனைக்குரியது.

    நிறைவுரை

    பண்பாடு குறையாத மரபுவழிக் கருத்துக்களையும் அழகியல் நிறைந்த கற்பனையையும் பாடும் நோக்கத்திற்கேற்ப உணர்ச்சியையும் கவிதைக் கட்டுக்கோப்பு சிதையாத வடிவத்தையும் கொண்டிலங்கும் வைரமுத்தின் கவிதைகளில் உவமங்களும் மரபியல் தழுவியனவாகவே அமைந்துள்ளன. பொருளாதாரம் காரணமாக நகர்ப்புற வாழ்க்கையில் தன்னை ஒப்படைத்துக் கொண்டாலும் வடுகப்பட்டியில் பிறந்து வாழ்ந்த நாள்களை மறக்காத படைப்பாளராகவே அவர் இருக்கிறார். இதற்கு அவருடைய ‘கள்ளிக்காட்டு இதிகாசமும் கருவாச்சி காவியமும்’ சான்றாகத் திகழ்கின்றன. மரபு சார்ந்த உவமங்களில் கூடச் சமுதாயப் பார்வையும் வாழ்வியல் நுண்ணியமும் ஆழமாகப் பதிவாகியிருக்கின்றன.  அவற்றை இன்னும் ஆழமாக நோக்கிப் படித்துச் சுவைத்துப் பயன்பெறுவதற்கு இந்தக் கட்டுரை ஒரு கைகாட்டியாகலாம்!

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 47

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 47

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமச் சிகரம் சுரதா! 

    முன்னுரை

    உலகவழக்கில் பாக்கியலட்சுமியைப் ‘பாக்கி’ என்றும்  வெங்கடேசனை ‘வெங்கு’ என்றும் அழைப்பதுண்டு. ‘சுப்புரத்தினதாசன்’ என்னும் நீண்ட பெயரை எழுதுவதற்கு அஞ்சலட்டையில் இடமில்லாத காரணத்தால் ‘சுப்பு – ரத்தின – தாசன்’ என்னும் தனது புனைபெயரையே சுருக்கெழுத்துப்போல் ‘சுரதா’ எனச் சுருக்கிக் கொண்டார். ‘வேண்டாத ஆணிகள்’ என்ற தொடரை நமது நகைச்சுவைக் கலைஞர் திரு. வடிவேல் அவர்கள் சொல்லித்தான் பலருக்கும் தெரியும். உண்மையில் அந்தத் தொடரை முதன் முதலில் பயன்படுத்தியவர் மேற்கண்ட நேர்வில் உவமைக் கவிஞர் சுரதாவே. கவிதை பற்றியும் கவிஞராவது பற்றியும் பெரும்பாலும் நடைமுறையில் இருக்கும் நம்பிக்கைகளோடு முரண்படுவார் அவர். கவிதையைக் கணிதமாகவே கருத வேண்டும் என்பர். கவிஞராவது பயிற்சியினால் உருவாவது என்னும் கருத்தியல் நிலைப்பாட்டாளர் அத்தகைய சிந்தனையாளர்தம் கவிதைகளில் பயின்றுள்ள சில அசாதாரணமான உவமங்களை ஆராய்வதாக  இக்கட்டுரை அமைகிறது.

    சுரதா உவமங்கள் ஒரு பருந்துப் பார்வை

    “உழைகுலாம் நயனத்தார் மாட்டு ஒன்றொன்று விரும்பற் கொத்த  அழகெலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்ற வல்லார்?” என்று கம்பராமாயணத்தில் ஒரு தொடர் உண்டு. சுரதாவின் கவிதை உவமங்களுக்கு இது அப்படியே பொருந்தும். பாடுபொருளைப் பற்றிய சிந்தனைகளைப் புதுமையாகவே அமைத்துக் கொள்வதும் பொருட்களைக் கவிதையாகவே நோக்குவதுமே இதற்குக் காரணம். பொருத்தமான ஆழமான அழகியல் சார்ந்த உவமங்கள் அவர்தம் கவிதைப் படைப்புக்களில் அமர்வதற்கு இதுதான் காரணம். அல்லி நிலவு கண்டும் தாமரை கதிரவன் கண்டும் மலர்கிறபோது வானத்து மின்னலுக்கு ஏதாவது மலராமலா இருக்கும்? என்ற சிந்தனையின் விளைவாகத்தான் ‘சுடர் மின்னற் கண்டுதாழை மலர்வதுபோலே உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே’ எனவும் ‘அகிலம் யாவும் அழகின் வேலை! நீல ஆகாயம் செங்கதிர் செல்லும் சாலை!’ எனவும் அவரால் எழுத முடிந்ததற்கு விரிந்த வான் நிகழ்வுகள் மேல் அவர் செலுத்திய நுண்ணோக்கே காரணம். பழந்தமிழ் இலக்கியப் பதிவுகள், இலக்கண நுட்பங்கள், இயற்கைக் காட்சிகள், வரலாற்று நிகழ்வுகள், சான்றோர் மொழிகள் என அனைத்திலும் அவருடைய இந்த நுண்ணோக்கு தனித்த ஆதிக்கம் செலுத்தியது. செலுத்தவே பொருண்மை விளக்கத்திற்கான உவமங்களும் புதிதாய் அவருக்குத் தோன்றியன. ‘அந்தக் காலத்து அரசன் பற்பலப் பெண்களைத் தழுவி மகிழ்ந்தாற்போல் வளைந்தும் நெளிந்தும் வருகின்ற பற்பல நதிகளைப் புணரும் தண்ணீர் நாயகன்’ என்று கடலை அக்கால மன்னர்களோடு ஒப்பிட்டுப் பாடுவதற்கு இந்த நுண்ணோக்கே காரணம்.

    நால்வரும் இவரும்

    இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்களில் மக்களைப் பாதித்தவர் நால்வர். மகாகவி, பாவேந்தர், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவர்களுடைய பாடல்கள் நிரல்நிரையாக விடுதலைப் போராட்டம் தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை தமிழ்ச் சமுதாயத்தைப் பாதித்தே வந்திருக்கின்றன. அப்பாதிப்பு இன்றும் தொடர்கிறது. சமுதாயச் சிக்கல்கள் பெரிதும் பாதிக்காத கவிஞராகவே சுரதா இருந்திருக்கிறார் என்பது அவர்தம் கவிதைகளால் அறியப்படும்  ஆய்வுண்மையாகும். ஒட்டுமொத்த இந்தியாவின் சிக்கலைப் பாரதி பாடுபொருளாக்கியதுபோலவோ தமிழ் மொழி, இன, நாடு என்னும் இவற்றை இவற்றின் சுணக்கத்தைப் போக்கி எழுச்சியடையச் செய்ய வேண்டும் என்பனவற்றைப் பாரதிதாசன் பாடுபொருளாக்கியது போலவோ சுரதாவின் பாடல்களில் காண்பது அரிதாக இருக்கிறது. தனிமனித உளவியல் சிக்கல்கள் கண்ணதாசனின் பாடுபொருளாயின. உழைக்கும் வர்க்கத்தினரின் சிக்கல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடுபொருட்களாயின. இந்த நான்கு கவிஞர்களிடமிருந்தும் சுரதா வேறுபடுவதாகவே தெரிகிறது. சுருங்கச் சொன்னால் கவிதை கவிஞனுக்கானது என்பதுதான் சுரதாவின் ஒருவரிப் படைப்புக் கொள்கையாக அமைந்திருக்கிறது. அவருடைய கவிதைகளில் ஆண்மையின் வீரியத்தைவிடப் பெண்மையின் நளினமே தூக்கலாக இருக்கிறது. அதேபோல், உரைநடையைப் பற்றிக் கூறும்போது, ‘‘உரைநடை – பசிக்குச் சோறு’’ என்று பதிலளித்தாராம். இதனால் கவிதையை அவர் விருந்தாகத்தான் கருதியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.    சமுதாயச் சிக்கல்கள் பெரிதும் பாதிக்காத கவிஞராகவே சுரதா இருந்திருக்கிறார். இது அவர்தம் ஒட்டுமொத்த கவிதைகளை ஆராய்ந்தவழி அறியப்படும் ஆய்வுண்மையாகும்.

    உவமமாகும் இலக்கணக் குறியீடுகள்

    வேறுபட்ட புதுமையான உவமங்களைக் கூறுவதில் சுரதா வல்லாளர் என்பது உண்மையே. இருப்பினும் இலக்கணக் குறியீடுகளை உவமமாகப் பயன்படுத்திய நுண்ணியமே அந்தப் பெருமைக்குச் சான்றாகத் திகழ்கிறது. இலக்கணக் குறியீடுகளின் உயிர்ப்புத் தன்மையை உள்ளத்தில் வாங்கி உட்கொண்டு, அதனை மாறுபட்ட கோணத்தில் உவமமாகக் கையாள்கிற கவிதைத் தொழில்நுட்பம் பெரும்பாலும் சுரதாவிடம் தொடங்கிச் சுரதாவிடமே நிறைவடைந்து விடுகிறது. அதற்குப் பின்னாலே வந்தவர்கள் ஏதோ பயன்படுத்தினார்கள். அவை வெற்றிபெறவில்லை. காரணம் இலக்கண உறவின்மை. இலக்கணப் புலமை என்பது வேறு. இலக்கணத்தைக் கவியுள்ளத்தோடு நோக்குவது என்பது வேறு. அந்த உள்ளத்தைச் சுரதா பயிற்சியினால் பெற்றிருந்தார்.

    மணமக்களை இரட்டைக் கிளவியாக்கியவர்

    பொதுவாகத் திருமண வாழ்த்துரை என்பது சடங்காக முடியும் ஒரு நிகழ்வு. மலரும் மணமும் போல, வீணையும் நாதமும் போல, அன்றில் பறவை போல’ என்றவாறே வாழ்த்துக்கள் அமைந்த காலம் அது. ஒரு திருமண விழாவில் மணமக்களை ‘இரட்டைக் கிளவிபோல்’ வாழுங்கள் என்று வாழத்தினார் சுரதா. இரண்டாகவே அமையும் என்பதும் பிரித்தால் பொருள் தராது என்பதும் இலக்கண உண்மை. கணவன்-மனைவி இருவராகவே வாழ்தல் வேண்டும் என்பதும் பிரிந்தால் இல்லறம் கடைபோகாது என்பதும் வாழ்வியல் நுண்ணியம். இந்த வாழ்வியல் நுண்ணியத்தை ஒரு இலக்கணக் குறியீட்டில் கண்டறிகிற திறன் அவருக்கு மட்டுமே இருந்தது. மணமக்களுக்கு இரட்டைக் கிளவியை உவமமாக்கியதில் சுரதாவின் தமிழ்ப்பண்பாடு பற்றிய கருத்தும் பார்வையும் மற்றொரு நுண்ணியமாக அமைந்திருக்கிறது. அது என்ன? தமிழ்ப் பண்பாட்டியலில் களவு மணம் என்பது விதிவசமானது. விதிக்கப்படுவது விதி. அதாவது இயற்கை. இதனை ‘ஊழ்’ என்பார் திருவள்ளுவர். ‘ஊழ்’ என்பதற்குச் சொற்பொருள் விரித்த பரிமேலழகர்,  ஊழ், பால், முறை, உண்மை, வைப்பு, தெய்வம், நியதி, விதி என்பன ஒருபொருட்கிளவி என்கிறார். ‘பாலது ஆணையின்’ என்பது தொல்காப்பியம்! இறையனார் அகப்பொருள் களவியலின் சாரமும் இதுவே. இன்றைக்கும் தமிழகச் சிற்றூர்களில் பெண்பிள்ளைகள் பூப்பெய்தியவுடன் சொல்கிற சொலவடை ‘இனிமேலா உனக்கு ஒருவன் பிறக்கப் போகிறான்?’ என்பதுதான். ‘ஏற்கனவே பிறந்திருக்கிறான்’ என்பது பொருள். எனவே தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது இயற்கை நெறிக்குட்பட்டது. அதனை விதியென்றும் சொல்லலாம். அதாவது இயற்கையாகவே நிகழ்கின்ற நிகழ்வு. ‘இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா’ என்பதனால் அது பிறக்கிறபோது இரட்டையாகத்தான் பிறக்கும் என்பது பெறப்படும், படவே மணமக்களின் பிறப்பும் மணமும் ஒன்றை மற்றொன்று நோக்கியது என்பதும் புலப்படும். ‘இறைவன் உறுதி செய்ததை மனிதர்கள் பிரிக்காதிருக்கட்டும்’ என்னும் விவிலியத்தின் சாரமும் இதுவே. மணமக்கள் இரட்டைக் கிளவிபோல் வாழ்க என்றால் தோற்றம், வாழ்வு, நிறைவு என எல்லாத் திறங்களிலும் ஒற்றுமையாக வாழ்க என்பது பொருள்.

    உயிர்ப்புணர்ச்சியும் உடம்படு மெய்யும்

    தமிழ்ப் புணர்ச்சியிலக்கணத்தில் அமைந்துள்ள நுண்ணியங்களில் ‘உடம்படுமெய்’ என்பது தனித்துவம் மிக்கது. மெய்யோடு உயிர் சேர்தல் என்பது இயல்பு. மெய்யோடு மெய் சேராது, இணையாது. அப்படிச் சேர்ந்தால் அதற்கு மெய்ம்மயக்கம் என்று பெயர். அதனைப் போன்றே உயிரோடு உயிர் இணையாது. சில நேர்வுகளில் அவ்வாறு இணையும். இரண்டு உயிர்கள் இணையும் போது அவற்றை இணைக்கும் பற்றாசிட்டாகப் பயன்படுவது மெய். அதற்குத்தான் ‘உடம்படு மெய்’ என்று பெயர். உலகத்தில் உயிரால்தான் மெய்க்குப் பெருமை. தமிழிலக்கணத்தில் மெய்யால்தான் உயிருக்கு வாழ்வு! மெய்தான் இரண்டு உயிர்களையே இணைக்கிறது! இந்த இலக்கணப் பின்புலத்தில் சில செய்திகளைக் காணலாம்.

    சிலப்பதிகாரம் காட்டும் புணர்ச்சி

    சிலப்பதிகாரத்தில் ஆர்வம் காட்டப்படாத பகுதிகள் எனச் சில உண்டு. அவற்றுள் கண்ணகி கோவலன் இல்லறம் பற்றியது. கண்ணகியின் இல்லறம் பற்றி அடிகள் முழுமையாகக் கூறவில்லை என்பாரும் கண்ணகியைவிட மாதவி கோவலனுக்குப் பொருத்தமானவள் எனப் புகார்நகரத்தில் மாதவி வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் அப்போது வாழ்ந்தவர் போலவும் இங்கே கதை விடுவார் பலர். அடிகள் எழுதுகிறார்,

    “வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
    கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்,
    தாரும் மாலையும் மயங்கிக், கையற்று”

    என்று. இது கதைப்போக்கில் கண்ணகியும் கோவலனும் முதல் நாள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வு. மனையறம்படுத்த காதையின் இறுதியில் ஆசிரியர் இளங்கோவடிகள் தன் கூற்றாகக் கூறுகிறார்.

    “தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என, ஒருவார்
    காமர் மனைவி எனக் கைகலந்து, நாமம்
    தொலையாத இன்பம் எலாம் துன்னினார் – மண்மேல்
    நிலையாமை கண்டவர் போல் நின்று!”

    சிற்றூர்களில் பல நேர்வுகளில் பாம்புப் புணர்ச்சியைக் காணலாம்.  நாகமும் சாரையும் என்பார்கள். உண்மையில் நாகமும் நாகமுமே புணரும். அவ்வாறு புணருங்கால் இரண்டு பாம்புகளின் வால்களின் நுனி மட்டுமே தரையில் நிற்கும். மற்ற பகுதிகள் உச்சித் தலைவரை இரண்டும் பின்னிப் பிணைந்து நிற்கும். ஆடாது, அசையாது. பிறகு ஒன்றினை ஒன்று தழுவிக்கொண்டு தரையில் புரண்டு விளையாடும். அப்போதும் உடல் பிரியாது. கண்ணகியையும் கோவலனையும் மன்மதனோடும் ரதியோடும்   உயர்திணையில் இணைத்துக் கூறிப் புணர்ச்சியைப் பாம்புகள் மேல்வைத்துக் கூறிப் பண்பாடு காத்தவர் அடிகள்.

    சுரதாவின் கவிதையில் இலக்கணப் புணர்ச்சி

    பாவேந்தர் இந்த இல்லறப் புணர்ச்சியைத் தமிழ்நாட்டுப் பெண்களின் நாட்கடமையில் வைத்துக் கூறியிருக்கிறார். பாவேந்தர் எழுதிய குடும்ப விளக்கு ஒரு நாள் நிகழ்ச்சி படுக்கையறையில் நிறைவு பெறுகிறது.

    “சொல்லரிதாய் மிகஇனிதாய் நாழி கைபோம்!
    சுடர்விழிகள் ஈரிரண்டு நான்கு பூக்கள்
    புல்லிதழில் போயொடுங்கும் தமை மறந்து
    பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்!”

    என்று அந்த இரவைத் தமிழ்ப் பண்பாட்டுக் குறிப்போடு நிறைவு செய்திருப்பார் பாவேந்தர்.

    “கச்சிதமாய் உறங்கிக் கொண்டிருப்பேன் வீட்டில்;
    கண்கலந்த என் கணவர் அருகில் வந்தே
    நச்சரிப்பார்; நயமாகப் பேசி, சற்றே
    நகரென்பார்; நான்மறுப்பேன்; ஊடல் தீர்ப்பார்!

    “இச்சமயம் ஒளியிலையே அத்தான்” என்பேன்;

    “இருள்தானே பூனைக்கு வேண்டும்!” என்பார்;
    உச்சரிப்பு நின்றுவிடும்; தொடுவார்; ஈர
    உடைபோல்நான் அவருடலில் ஒட்டிக் கொள்வேன்.”

    நீர்நிலைகளில் குளித்து வரும் பெண்கள் ஈர உடையை அணிந்து இல்லம் திரும்புவது தமிழகத்துப் பெண்டிரின் நாட்கடமை. படுக்கையறையில் உவமம் சொல்கிற பெண், தனக்கு நாளும் பழக்கமான ஒன்றினையே உவமமாக்குகிறாள் என்பதுதான் உவமச் சிறப்பு. அவள் அறிந்தது குற்றாலம்! அதனால் உவமமாக்குகிறாள். அவள் நயாகராவைச் சொல்லியிருந்தால் உவமப்பூ ஊமத்தம்பூ ஆகியிருக்கும்! பாவேந்தர், சுரதா ஆகியோர் பாடல்களுக்குத்,

    “தனியாகக் காணவருவார் – இவள்
    தளிர்போலத் தாவி அணைவாள்
    கண்போலச் சேர்ந்து மகிழ்வாள் – இரு
    கண்மூடிமார்பில் துயில்வாள்

    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ
    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ

    மலராத பெண்மை மலரும் முன்பு
    தெரியாத உண்மை தெரியும்
    மயங்காத கண்கள் மயங்கும் – முன்பு

    விளங்காத கேள்வி விளங்கும்
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ”

    என ஒரு திரையிசைப் பாடலில் பதவுரை, விளக்கவுரை, சிறப்புரை ஆகிய அனைத்தையும் எழுதியிருப்பார் கண்ணதாசன். பாவேந்தர் பாடியது அப்படி! சுரதா பாடியது அப்படி! கண்ணதாசன் உரையெழுதியது இப்படி! இவை எல்லாவற்றையும் ஒரே ஒரு இலக்கணக் குறியீட்டில் அடக்கிவிடுகிறார் சுரதா!

    “பூவெல்லாம் பொன்னே உன் உடலின் மீது
    பூத்திருக்க நீயவற்றைப் பார்த்திருந்தும்
    காவெல்லாம் சென்று சென்று நின்று நின்று
    கால்நோவப் பூப்பறித்துச்சூடும் பெண்ணே!
    நாவில் நீ! நெஞ்சில்நீ! அஞ்சன் ஆட்சி
    நல்லதமிழ்ப் பாடல் நீ! அன்றோ என்றான்!
    ஓவம்மாள் ஈன்ற மகள் சிரிப்பை ஈன்றாள்!
    உடம்படுமெய் இலக்கணத்தை இரவில் கண்டார்!”

    பூ+அழகு என்பது ‘பூவழகு’ என்று இணையும். இச்சொல்லில் நிலைமொழி ஈற்று ஊகாரமும் வருமொழி முதல் அகரமும் உயிர். உடம்பொடு உயிர் வந்து ஒன்றுவதுதான் இயல்பு. இங்கே உயிரல்லாத வேறொரு மெய் (வ்) தோன்றி இணையாத உயிர்களை இணைப்பதைக் காணலாம். உடல் பிணைப்பை உடம்படுமெய்யாக்கி உவமித்ததன்மூலம் உயிர்ப்பிணிப்பின்  துடிப்பைக் கேட்க வைத்திருக்கிறார் சுரதா!

    எதுகையும் மோனையும்

    நாற்பத்து மூன்றுவகை தொடை விகற்பங்களில் பாட்டுக்கு அழகூட்டி அதனைச் நிலைக்கச் செய்வன எதுகையும் மோனையும். இதற்கு அடுத்த படியாக முரண் அமையலாம். தொடைவிகற்பங்களை அளவடிக்கு மட்டுமே கணக்கிட இயலும். பொதுவாக ஆண் முன்னாலே செல்வதும் பெண் அவனைத் தொடர்ந்து பின்னாலே செல்வதும் உலக வழக்கு. ‘எங்கெங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட’ என்பது புலமைப்பித்தன் கண்ட பெண்மை. ‘நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்’ என்பதும் வழக்கு. ஆதிமந்தி – ஆட்டனத்தி இருவரும் வருகிறார்கள்.

    “மதிமதுரப் புலவரெல்லாம் மகிழ்ந்து பாட
    வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
    எதுகைவரல் போல் அடுத்து வந்தாள் அத்தி
    என்பானோ மோனையைப்போல் முன்னே வந்தான்!”

    தமது கவிதைப் படைப்புக்களில் ஒவ்வொரு அசையிலும் மரபையன்றி வேறு எதனையும் பதியம் போடாத சுரதா, இங்கே ‘முன்னாலே’ வந்த அத்தியை மோனையாக்கினார். ‘அடுத்து’ வந்த ஆதிமந்தியை எதுகையாக்கினார். ‘எழுவாய் எழுத்தொன்றின் மோனை…………இரண்டாம் வழுவா எழுத்தொன்றின் எதுகை’ என்னும் தொடையிலக்கணத்தை உயர்திணை வரவுக்கு உவமமாக்கியிருக்கிறார்.

    பரிசும் விருதும் பகுதி போன்றது

    பதமாகிய சொல் பகுபதம், பகாப்பதம் என இருவகைப்படும். பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களைப் பெற்று வருவது பகுபதம். இவற்றுள் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடைநிற்பது சந்தி. விகுதிக்கும் இடைநிலைக்கும் இடைநிற்பது சாரியை. பகுதி தவிர ஏனைய மாற்றத்திற்குரியன. தொட்டான், தொட்டாள், தொட்டனர், தொட்டது, தொட்டன என்னும் ஐம்பால் வினைச்சொற்களில் பால்காட்டும் விகுதிகள் மாறி நிற்பதும் ‘தொடு’ என்னும் பகுதியாகிய ஏவல் நிலைத்து நிற்பதும் காண்க. இதிலிருந்து ஒரு பகுபதம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டாலும் அதன் உயிராகிய பகுதி மாறவே மாறாது. நிலைத்து நிற்கும். பாரதிதாசனுக்குப் புரட்சிக்கவிஞர் என்பதைத் தவிர வேறு எந்தப் பட்டமும் பொருந்தாமற்போனது. நம் சுரதாவிற்குப் பொருந்திய ‘உவமைக் கவிஞர்’ என்னும் பட்டம் வேறு எவருக்குமே பொருந்தாமற் போனது.  தற்காலக்கவிஞர் சிலர் போட்டுக் கொள்கிற பட்டம் மொட்டைத் தலையில் பூ தைப்பது போலப் பொருந்தாமற் போய்விடுகிறது. அவர்கள் ஒரு நாளைக்கு நாலைந்து முறை பட்டங்களை மாற்றிப் போட்டாலும் அவை நிலைப்பதில்லை. காரணம் பெற்றவருக்கும் தகுதியில்லை. கொடுத்தவர்க்கும் தகுதியில்லை. விளம்பர உலகில் இது வெகு சாதாரணம். இதனைச் சொல்கிறார் சுரதா.

    “தகுதி மிக்கோர் தருகின்ற பட்டம்
    பகுதி போன்று நிலைத்து நிற்கும்”

    வினைச்சொல்லுக்கும் வினையாலணையும் பெயருக்கும் மட்டுமே பகுதி உண்டு. தகுதி உடையவர் தருகின்ற பட்டங்கள்தாம் நிலைத்து நிற்கும். வி.சி.கணேசனுக்குச் ‘சிவாஜி’ என்னும் பட்டத்தைக் கொடுத்தவர் தந்தை பெரியார். மோகன்தாஸ் காந்திக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் தாகூர். தகுதியுடையவர் தந்த பட்டங்கள் அவை. நிலைத்து நிற்கும் என்ற உண்மையை வினைச்சொல்லில் பகுதி நிலைத்து நிற்கும் என்னும் உறுப்பிலக்கண உண்மையோடு உவமமாக்கி விளக்கியவர் சுரதா.

    உவமப் பந்தி

    திருக்குறள் உவமங்களின் தனித்தன்மை பற்றிய கட்டுரை இந்தத் தொடரின் ஐம்பதாவது இறுதிக் கட்டுரையாக அமையும். திருக்குறளில் ஒரு கருத்தினை விளக்கத் திருவள்ளுவர் மற்றொரு கருத்தினையே உவமமாக்குவார். உவமமாகும் அந்தக் கருத்து வேறொரு அதிகாரத்திற்கு உரியதாகவும் இருக்கும். வேறொரு உண்மையை உணர்த்துவதாகவும் இருக்கும். விரிப்பின் பெருகும். அந்த நெறியில் வந்த சுரதா தற்காலத் தமிழர்களின் நிலையைப் பாடவருகிறார். பாரதியைப் போல் இவருக்கும் நெஞ்சு பொறுக்கவில்லை. என்ன சொல்கிறார்? தமிழர்கள் மேல்நாட்டாரைப் போல் இருக்க வேண்டும் என்றெல்லாம் கதைவிடவில்லை.

    “இன்றுள்ள தமிழரெல்லாம் அந்த நாளில்
    இருந்தவர்போல் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்!
    என்றென்றும் செந்தமிழைக்காத்தல் வேண்டும்!
    ஏமாற்றும் மனப்பான்மை மறைதல் வேண்டும்!”

    என நறுக்குத் தெறித்தாற் போல் பதிவிடுகிறார். தமிழினத்திற்கு இணையானதொரு இனம் அன்றைக்கும் இல்லை. என்றைக்கும் இல்லை. இவனை விளக்க உவமம் ஏதுமில்லை. இவனுக்கு இவனே உவமம் என்று கருதிய சுரதா அக்காலத் தமிழனைத் தற்காலத் தமிழனுக்கு உவமமாக்கினார். இதுவரையில் தமிழ்க்கவிதைகளில் கண்டிராத உவமக் கோட்பாடு!

    “மணமாலை தனைசூடி உறவாடுவார்! மனம்
    மாறாமல் பலகாலம் உறவாடுவார்!
    ஒருகாலத் தமிழ்நாடு இதுதானடா! இதை
    உன்காலத் தமிழ்நாடு அறியாதடா”

    என்னும் கண்ணதாசன் பாடல் இங்கே நினைக்கத்தகும்.

    கணிதமும் உவமமாகும்

    உயிரெழுத்து பன்னிரண்டு. மெய் பதினெட்டு. குற்றியலுகரம் ஆறு, தளை ஏழு, தொடைவிகற்பங்கள் நாற்பத்து மூன்று, கலிப்பா மூன்று,  கலிப்பாவின் உறுப்புக்கள் ஆறு எனக் கணிதத்தோடு தொடர்புடையது தமிழ். ‘ஏரம்பம்’ என்பது அந்நாளில் மக்கள் வழக்கில் இருந்த கணித நூல். சுரதா எதனையும் கவிதையாக நோக்கும் பேராற்றலுடையவர்.

    “உயரத்தைப் படுக்க வைத்தால் நீட்டமாகும்
    உள்ளத்தைப் பழுக்கவைத்தால் புதுமை தோன்றும்”

    உயரத்தை ஆணவத்தின் குறியீடாகவும் நீட்டத்தைப் பணிவின் குறியீடாகவும் பயன்படுத்தியிருக்கிறார். பக்குவம் பணிவைத் தரும்.  முதிர்ச்சியைப் பழம் என்பது மரபு. ‘ஞானப்பழம்’ என்பது முருகனுக்கான திருநாமங்களில் ஒன்று. அனுபவத்தில் முதிர்ந்த சான்றோர்களைப் ‘பழுத்த பழம்’ என்பது உலகியல்.  ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்பது பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் உருவகம். ‘தேனாய்த் தீம்பழமாய்’ என்பது திருவருட்பா. ‘பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்’ என்பது பூவை செங்குட்டுவன் வரி!

    பூவை செங்குட்டுவனும் சுரதாவும்

    “கெடலெங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க” என்பார் பாவேந்தர். பிறரை ஊக்குவிக்கும் பேருள்ளம் படைத்தவர் சுரதா. வறுமையின் உச்சத்தில் வாடியவர் செங்குட்டுவன். வாடகை சைக்கிள் கடைவைத்துப் பிழைப்பு நடத்தியவர். ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பூவையின் பாடலைப் பிலிம்சேம்பர் விழாவில் இயக்குநர் ஏ.பி. நாகராசன் அவர்களோடு அமர்ந்து கேட்ட கண்ணதாசன் வியந்து போயிருக்கிறார். ‘தான் எழுதியிருந்தாலும் அவ்வளவு சிறப்பாக எழுதியிருக்க முடியாது’ என்று மனந்திறந்து பாராட்டி, அந்தப் பாடலைக் ‘கந்தன் கருணை’ என்ற படத்தில் இணைக்கச் சொன்னார். கவிஞர்களுக்கு இந்தப் பேருள்ளம் மிகவும் இன்றியமையாது இருக்க வேண்டிய பண்பு. பலரிடம் இல்லை என்பது உண்மை. இந்தப் பாடலைப் பற்றி அன்றைக்குச் சென்னை நூலகத்தில் நடைபெற்ற விழாவொன்றில் ‘வில்லிப்புத்தன்’ என்னும் நபர் ‘திருப்பரங்குன்றத்தில் சிரித்துத் திருத்தணியில் எதிரொலித்தால் முருகன் என்ன வில்லன் சிரிப்பா சிரித்தான்?’ என்று ஏளனமாகக் கேட்டிருக்கிறார். கூட்டத்தில் அமர்ந்திருந்த சுரதா வெகுண்டெழுந்தார். “ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைவெளி குறைவாக இருந்தால் இடையில் பேசுவதால், பாடுவதால் ஏற்படும் ஒலி மிகுந்து ஒலிக்கும். பள்ளத்தாக்கு உட்பட்ட இடைவெளியில் மிகுந்து ஒலிப்பதற்குக் காரணமாக இருப்பதால் மலைக்குச் ‘சிலம்பு’ என்பது காரணப்பெயர். ‘சிலம்பு என்பதற்கு ‘ஒலித்தல்’ என்பதும் ‘மலை’ என்பதும் பொருள். காலில் அணிகிற சிலம்பின் பரல்கள் ஒலிப்பதால்தான் அதற்குச் சிலம்பு என்பது பெயர். செங்குட்டுவன் சிறப்பாக எழுதியிருக்கிறார். எதனையும் தெரிந்து பேச வேண்டும். தெரியாமல் உளறக் கூடாது’ என்று கண்டித்திருக்கிறார். நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வு. ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் உதவுகின்ற பேருள்ளத்தையும் ஒருங்கே பெற்றவர் சுரதா. கட்டுரைப் பொருளுக்குத் தொடர்பில்லாவிடினும் ஒரு மாபெரும் கவிஞனைப் பற்றிய வரலாற்று நிகழ்விலிருந்து அவனுடைய பண்பாட்டை அறிந்து கொள்வதற்காகச் செய்யப்பட்ட பதிவு இது.

    உவமத்திற்கும் உவமம் சொன்ன சுரதா

    எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் உவமம் சொன்ன சுரதா உவமம் எதனைப் போல் இருக்க வேண்டும் என்று உவமத்திற்கே உவமம் சொல்லியிருக்கிறார்.

    “கவிதையில் கருத்து வேண்டும்!
    கட்டாயம் உவமை வேண்டும்!
    உவமைதான் கவிதைகட்கு
    உயிர்நாடி பெருமை சேர்க்கும்!
    உவமை யிலாத பாடல்
    உப்பு சேராத பண்டம்!
    அவிழ்ந்திடா தாமரைப்பூ!
    அழகில் லாத மங்கை!”

    உயிர்நாடி, உப்பு, அவிழ்ந்த தாமரைப்பூ, அழகுடைய மங்கை என்னும் உவமங்களை ஒரு முழுக்கவிதையோடு ஒப்பிட்டு நோக்கினால் உவமத்தின் அருமை புரியக் கூடும்.

    சுழிக்குள் சிக்கிய சுரதா

    தனது வழிகாட்டி பாவேந்தரைப் பாடுகிறார் சுரதா. அது ஒரு கையறு நிலைப்பாடல். கையறுநிலைப் பாடலில் பாடப்படும் இரக்கத்திற்குரிய தலைமகனின் பெருமைகள் மட்டுமே சுட்டப்படல் வேண்டும் என்பது இலக்கிய மரபு. ஒரு பாட்டில் ஒரு உவமம்தான் சொல்லப்பட வேண்டும் என்பதும் உவமத்திற்கு உவமம் புணர்த்தல் ஆகாது என்பதும் பழந்தமிழ் உவமமரபு. சுரதா பாடுகிறார்,

    “திருத்தத்தில் வெற்றிபெற்றான் ஒட்டக் கூத்தன்
    தீர்ப்பளித்து வெற்றி பெற்றான் கரிகாற்சோழன்
    நிருத்தத்தில் வெற்றிபெற்றான் ஆட்டனத்தி
    நிதியளித்து வெற்றி பெற்றான் பாரிவள்ளல்
    வருத்தத்தில் வெற்றிபெற்றான் வடலூர் வள்ளல்
    வாளேந்தி வெற்றிபெற்றான் சேரலாதன்
    விருத்தத்தில் வெற்றி பெற்றான் கம்பன் அந்த
    வெற்றியினை இவர்பெற்றால் என்னைப் போல”

    என்று. இந்தப் பாட்டைப் படிக்கின்ற அன்பர்கள் பலரும் இதனை உவம அணியாகக் கொண்டு பாராட்டி மகிழ்கின்றனர். அது சரியே. ஆனால் உவம இலக்கண வரையறைக்குள் இது அடங்குமா என்பது சிந்தனைக்குரியது.

    உவம அணியும் எடுத்துக்காட்டு உவமமும்

    எடுத்துக்காட்டு (EXAMPLE) என்பது வேறு. ஒப்பீடு (SIMILE) என்பது வேறு. எடுத்துக்காட்டே ஒப்பீடானால் அது எடுத்துக்காட்டு உவமம். இந்த நுட்பத்தை அறியாமல் எடுத்துக்காட்டு உவமையின் வெளித்தோற்றத்தை மட்டும் கண்டவர்கள் பொருளையும் உவமத்தையும் தனித்தனியே கூறி உவம உருபைக் கூறாது விடுதல் எடுத்துக்காட்டு உவமம் என்றே சொல்லிவருகிறார்கள். இது பாடத்திட்டக் குழுவின் பாடநூலில் சொல்லப்பட்ட வரையறைக்குட்பட்ட மதிப்பெண் மயக்கம். இலக்கிய ஆராய்ச்சியில் உவமத்திற்கான ஆய்வுப் பார்வையைக் கல்வி நிலையங்கள் எதிரொளிப்பதில்லை. ஆனால் உவம அணி அத்தகையதன்று, உவமமும் பொருளும் ஒவ்வொரு துகளும் ஒத்திருத்தல் வேண்டும். ஒருபுடை என்ற பேச்சுக்கே இடமில்லை.

    உயர்ந்ததன் மேற்றே உள்ளுதல் வேண்டும்

    வினை, பயன், மெய், உரு என்னும் நான்கும் தனித்தனியாகப் பாடுபொருளாகும்போது உவமங்களும் தனித்தே இயங்க வேண்டுமேயன்றி மயங்குதல் கூடா. இந்தப் பாட்டில் மூன்று செய்திகளை நிரல்படுத்துகிறார் சுரதா!

    1. வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்.
    2. பாவேந்தர் பெற்ற வெற்றி
    3. சுரதா தன்னை உவமமாக்கிப் பாவேந்தரைப் பொருளாக்கியது

    இந்த வகைபாடுகளில் முதலில் வெற்றிபெற்றவர்கள் பல்வினை நாயகர்கள். அவர்கள் அடைந்த வெற்றிதான் ஒப்புமையே தவிர, அது எவற்றால் எல்லாம் பெற்றார்கள் என்பது ஒப்புமை ஆகாது. வெற்றி ஒரு காட்டலாகாப் பொருள். அது தொழிற்பெயர் என்றால் அதற்கான காரணங்கள் ஒன்றாக இல்லை.

    1. திருத்துவதில் ஒட்டக் கூத்தர்
    2. தீர்ப்பளிப்பதில் கரிகாற்சோழன்
    3. நாட்டியத்தில் ஆட்டனத்தி
    4. நிதியளிப்பதில் பாரி
    5. வருத்தத்தில் வள்ளலார்
    6. வாளேந்துவதில் சேரலாதன்

    தனித்தனி தன்மை கொண்ட ஆறு வினைகளை நிரல்படுத்தி எடுத்துக் காட்டுகிறார். இவற்றுள் எங்கே இருக்கிறது உவமம்? இவர்கள் பெற்ற வெற்றியைத்தான் மற்றொரு வெற்றியோடு ஒப்பிடுகிறார். அது கம்பன் விருத்தத்தில் அதாவது விருத்த யாப்பில் பெற்ற வெற்றி. கம்பன் பெற்ற வெற்றியைச் சுரதா பெற்றிருக்கிறார். சுரதாவைப்போல் பாவேந்தரும் பெற்றிருக்கிறார். யாரை உயர்த்திப் பாட வந்தாரோ அவரைப் பொருளாக்கினால் அவருக்கான உவமம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். இது ஆய்வு. ஆனால் வெளிப்பாட்டு உத்தியில் பொருளான பாவேந்தர் உவமமாகிய சுரதாவினும் குறைந்திருக்கிறார். சுரதா தன்னையே உவமமாக்கியதால் இதனை உணரலாம். ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை’ என்னும் விதியின் அடிப்படையில் நோக்கினால் பாவேந்தரினும் சுரதா உயர்ந்துவிடுகிறார். இதனால் பாடுபொருள் மயக்கத்திற்கும் தடுமாற்றத்திற்கும் ஆளாகிறது என்பதோடு கவிச்செருக்கின் காரணமாகப் பாட்டு மாசடைகிறது. விடுதலைப் போராட்டத்திற்குப் போர்ப்பரணி பாடிய பாரதி, வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்புக் கவிதை அளித்ததைக் கல்வியாளர் கா.திரவியம் ஒரு சுருதிபேதமாகவே தமது ‘தேசியம் வளர்த்த தமிழ்’ என்ற நூலில் கூறுகிறார். பாரதிதாசனைப் பற்றிய சுரதாவின் இந்தப் பார்வையும் அவரது படைப்புக்களில் ஒரு கரும்புள்ளியாகவே தெரியும்.

    நிறைவுரை

    சுரதா அவர்களுக்கு அன்றைய சங்க இலக்கியம் முதல் இன்றைய புதுக்கவிதை வரை இயல்பான நீச்சல் குளம். பாரதிக்கு ஒரே ஒரு தாசன்தான் அவர் பாரதிதாசன் மட்டுமே. ஆனால் பாரதிதாசனுக்கு பல தாசன் கிடைத்தார்கள் அவர்களில் நானும் ஒருவன் என்கிறார் சுரதா அடக்கமாக. ஆனால் தாசன்களில் முதலிடம் பெற்றவர் சுரதாதான்.

    “தண்ணீரின் ஏப்பந்தான் அலைகள்,

    “பறக்கும் நாவற்பழம் வண்டு”

    “கரும்புக்குப் பூத்த வெறும்பூ”

    “உன்னைப்பார்த்தால் மதுவுக்கும் கூட மயக்கம் வரும்”

    “கனவில் கூடச் சோரம் போகாத நானா விலைமகள்?”

    “இழுத்துவிட்ட மூங்கில் போல நிமிர்ந்தான்”

    “நீ தொட்டால் விஷம் கூடச் செத்துவிடும்”

    என்றெல்லாம் உரைநடையைக் கவிதையாக்கிக் கவிதையை உரைநடையாக்கி இரண்டிற்கும் கலப்புமணம் செய்து வைத்தவர் சுரதா! ‘‘அவன் உரைக்காத உவமையில்லை. அவனுக்குத்தான் உவமையில்லை’’ என்பார் திரைப்படப் பாடலாசிரியர் வாலி. சுரதாவைக் கொஞ்சம் படித்த பிறகு “சுரதாவைப் போல யாராவது எழுத மாட்டார்களா? என்று ஒரு நாள் என் தந்தையைக் கேட்டேன்! தந்தை திருப்பிக் கேட்டார்! “உன் ஆசைக்கு அளவேயில்லையா?” தந்தை சொன்னால் தமிழ் சொன்னது மாதிரி!

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 46

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 46

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ஒரே நாளில் ஓராயிரம் உவமங்கள்

    முன்னுரை

    ‘நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள்’ என்னும் உலகியல் வழக்கில் உள்ள ‘நாலுவிதம்’ என்பது நான்கை வரையறுக்காது ‘பலரும் பலவகையாகப் பேசுவார்கள்’ என்பதைக் குறிக்குமல்லவா? அதுபோல ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தைச் சித்திரிக்கும் ஓர் இலக்கியப் பதிவில் காணப்படும் எண்ணற்ற பொருத்தமான உவமங்களைக் குறிக்கவே ‘ஒரே நாளில் ஓராயிரம் உவமங்கள்’ எனத் தலைப்பிடப்பட்டது. ‘ஆயிரம் நிலவே வா!’, ‘ஆயிரம் பெண்மை மலரட்டுமே’, ‘ஆயிரம் வாசல் இதயம்’ என்பன போல. பாவேந்தர் பாரதிதாசனுக்கு நிலைத்த புகழைக் கொடுத்தவை இரண்டு. ஒன்று, அவர் தன் புனைபெயரைத் தன் வழிகாட்டியான பாரதியுடன் இணைத்து அமைத்துக் கொண்டது. இரண்டு அவருடைய புதுமையான சிந்தனைகளும் கற்பனைகளும் அடங்கிய கவிதை இலக்கியங்கள். பின்னவற்றுள் குறிப்பிடத்தக்கதும் தமிழ்க்கவிதை இலக்கிய நெறியில் புதுமையாகவும் அமைந்தது ‘குடும்ப’ விளக்கு. குடும்ப விளக்கின் முதற்பகுதியாகிய ஒருநாள் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமச்சிறப்பையே இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகிறது.

    குடும்ப விளக்கின் கட்டமைப்பு

    ‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ என்பது பொருளாழமுடைய ஒரு தொடர். நாட்டில் பல்கலைக்கழகங்கள் பெருகிய அளவுக்கு நல்ல குடும்பங்கள் தழைத்திருக்கின்றனவா என்பது எளிதில் விடை காணமுடியாத வினா. ‘குடும்ப விளக்கு’ என்பது நடப்பியல் சார்ந்த கற்பனை கலவாத ஒரு காவியம். ஒருநாள் நிகழ்ச்சி, விருந்தோம்பல், திருமணம், மக்கட்பேறு, முதியோர் காதல் என்னும் அவ்வைந்து  பிரிவுகளில் ‘ஒருநாள் நிகழ்ச்சி’ என்பது ‘ஓர் இரவு’ என்பதுபோல ஒரு நாள் ஒரு குடும்பத்து இயல்பான நிகழ்வுகளைச் சித்திரிக்கும் பகுதியாகும்.

    ஒருநாள் நிகழ்ச்சி

    குடும்பத்தலைவி விடியற்காலையில் படுக்கையை விட்டு எழுந்திருப்பது, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, கணவனைப் பணிக்கு அனுப்புவது, மாமனார் மாமியாருக்குரிய பணிவிடைகளை மகிழ்ச்சியுடன் செய்வது, குடும்ப உறுப்பினர்களுக்குப் பிடித்தமான உணவுகளைத் தயாரிப்பது, பள்ளி சென்று திரும்பிய குழந்தைகளை வரவேற்பது, அவர்களுக்குப் பாடம் கற்பிப்பது, அவர்களை உறங்க வைப்பது, கணவனோடு பொதுநலம் குறித்துப் பேசுவது, உறங்கச் செல்வது என நிரல்படக் கோத்த அருமணி ஆரமாகத் திகழ்வது ஒருநாள் நிகழ்ச்சியாகும். நாட்டுப்படலம், நகரப்படலம் எனத் தொடங்கிய  தமிழ்க்காப்பிய உலகில் வாசலில் கோலமிடும் வைகறைத்  தலைவியிலிருந்து தொடங்கிச் சித்திரித்துக் காட்டலாம் என்ற எண்ணமே காப்பியப் புரட்சியாகும். கவிதைப் புரட்சியாகும்.

    மடமையிருள் கலைந்தது

    கவிதையில் உவமத்தின் ஆற்றலை நன்குணர்ந்திருந்த பாவேந்தர் தன் காப்பியத்தை உவமங்களிலேயே தொடங்குகிறார். இது ஒருவகையில் தமிழ்க்கவிதை மரபினைச் சார்ந்தது எனலாம். ‘அகர முதல’ எனத் தொடங்கிய திருவள்ளுவரும், ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு’ என்னும் நக்கீரரும் இவர்க்கு முன்னோடியாகலாம். குடும்பப் பெண்கள் விடியற்காலத்திலேயே படுக்கையிலிருந்து எழுந்து வாசல் தெளித்துக் கோலமிடுதல் ஒரு பண்பாட்டு மரபு. பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பலபடப் பேசியிருந்தாலும் குடும்ப விளக்குக் காப்பியம் முழுமையும் பண்பாட்டுக் கூறுகளே நிறைந்துள்ளன. கதிரவன் கீழ்த்திசையில் உதிக்காத போதும், அதனால் விலகவேண்டிய இருளாகிய போர்வை நீங்காதபோதும் நள்ளிரவு மென்மையாய் நடந்து கொண்டிருந்ததாம்.

    “இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை
    இரவு போர்த்த இருள் நீங்கவில்லை!
    ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்
    நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்தது”

    என்று வண்ணனை செய்து அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்னும் திருக்குறள் உவமக் கருத்தினை உள்ளீடாக்குகிறார். தொடர்ந்து மலர்கின்ற காலைப் பொழுதினைத்,

    “தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
    கலப்பென இருள் தன் கட்டுக்குலைந்தது”

    என்று எழுதுகிற பாவேந்தர், நூலின் முதல் உவமத்தில் அறிவை முன்னிறுத்தியிருப்பது நோக்கத்தக்கது. நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பதே நூலின் நோக்கமாதலின் அதனைக் குறிப்பாய் உணர்த்தினார் என்பதாகவும் கொள்ளலாம். கற்றலும் கேட்டலும் இணைந்ததே அறிவெனினும் இந்த உவமத்தில் கேள்விக்கு முதன்மை கொடுத்திருப்பது  நூலறிவு பெற இயலாதவரையும் மனத்துட் கொண்டே நூலின் முன்னுரையில்,

    “குடும்ப விளக்கைப் பெறும் தோழர்கள் தாமேயன்றி மறந்து போகாமல் தம் துணைவியர்க்கும் படிக்கக் கொடுக்க. துணைவியர் எழுத்தறிவு இல்லாராயின் படித்துக்காட்டுக! துணைவர்க்கு எழுத்தறிவு இழுப்பாய் இருந்தால் துணைவியார் சொல்லிக் காட்ட மறவாதிருக்க வேண்டுகிறேன்”

    என்னும் பகுதி ‘கேள்வியால் அகலும் மடமைபோல்’ என்னும் உவமத்தின் ஆழத்தை ஓரளவு தெளிவாக்கக் கூடும். படிக்க இயலாத காலையில் கேட்டலுக்கு முதன்மை தந்தவர் மாலை நிகழ்வில் கற்றலுக்கு முதன்மை தருவதைக் காணலாம்.

    குளத்து நீரில் குதிக்கும் கெண்டை மீன்

    தமிழிலக்கியத்தில் பெண்களின் கண்களுக்கு வேல், கெண்டைமீன் முதலியவை உவமமாக்கப்படினும் அதன் வினைபடுபொருள்களாகக் கண்ணீரைத்தான் காட்டினார்கள் தமிழ்க்கவிஞர்கள். சீதையின் கண்களும்  கண்ணகி மற்றும் மாதவியின் கண்களும் மீன்களாக உருவகம் செய்யப்பட்டிருப்பினும் காப்பியங்கள் அவர்களுடைய கண்ணீரைத்தான் காட்டின. ஆனால் பாவேந்தர் விழித்த தலைவியின் கண்களைத்,

    “தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
    குளத்து நீரில் குதிக்கும் கெண்டை மீன்”

    எனக் களிப்பு மேலிடத் தாவிக் குதிக்கும் கெண்டைமீன்களாகச் சித்திரித்தார். ‘கருக்கலில் ஒளிபடும் அவள் விழி’ என்னும் பொருளை விளக்கக் ‘குளத்துநீரில் குதிக்கும் கெண்டைமீன்’ என்னும் உவமத்தால் விளக்கினார். ‘தெளிவிலாக் கருக்கல்’ என்னும் பொருளுக்குத்  ‘தெளிவிலாக் குளத்து நீரையும்’ கருக்கலில் அலைபாயும் அவள் ‘விழிக்குக்’, குதிக்கும் கெண்டைமீனையும் உவமித்ததில் கவிஞரின் உவம ஆற்றல் புலப்படுவதைக் காணலாம்.

    பொடிமுத்துச் சுடர்

    சொல்லப்படுகிற உவமம் எந்த வகைமையில் பொருளுக்கு உவமமாக்கப்படுகிறதோ அந்த வகையில் முழுமையான விளக்கத்தைத் தரவேண்டும். அதுதான் உவமத்தின் பணி. ஆனால் அந்த விளக்கத்திற்காகத் தெரிவுசெய்யப்படும் துல்லியமான பொருத்தமான உவமம் படைப்பாளனின் துல்லிய நோக்கையும் பரந்த பார்வையையும் வெளிப்படுத்தும். அவ்வாறு பொருள் விளக்கத்திற்கான துல்லியமான ஆழமான உவமங்கள் கிட்டாதபோது படைப்பாளனே சில உவமங்களைப் படைத்தும் பொருள் விளக்கத்தைச் செய்துவிடுவான். சான்றாகப் ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்பதுதான் உலக வழக்கு. திருவள்ளுவர் புலித்தோல் போர்த்திய பசுவைக் காட்டுகிறார். புலித்தோல் போர்த்திய பசு என்பது யாரும் காணாதது. துறவறத்திற்குச் சென்றவர்கள் அந்தத் துறவற வேடத்தைப் பயன்படுத்திக் கொண்டு கூடாவொழுக்கத்தில் ஈடுபடுவதை விளக்குதற்காகத் திருவள்ளுவர் இந்த உவமத்தை இட்டுக்கட்டியிருக்கிறார்.

    பாவேந்தர் பாரதிதாசன் நுண்மாண் நுழைபுலமும் உற்று நோக்கும் இயல்பும் கொண்டவர். கருத்துக்களில் புதுமை தேக்கினும் பண்பாட்டில் பழந்தமிழ்ப் பண்பாட்டையே முன்னெடுப்பவர். அதனால் மூக்குத்தி அணிந்த பெண்களையே பாடுபொருளாக்கியிருக்கிறார். அவர்களுடைய மூக்குத்தியையும் பாடுபொருளாக்கியிருக்கிறார். அதில் தொங்கும் முத்தையும் உவமமாக்கியிருக்கிறார். காதில் தோட்டோடு தொங்குவதுபோல மூக்குத்தியிலிருந்தும் முத்து தொங்கும். அது அளவால் மிகச் சிறியது. இதனை எங்கோ கண்ணால் நோக்கி மனத்துள் பதிய வைத்திருந்த பாரதிதாசன் குடும்ப விளக்கில் அகல்விளக்கின் சோர்ந்து போன சுடருக்கு உவமமாக்கியிருக்கிறார்.

    “சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
    பொன்னாற் செய்த பொடிமுத்தைப் போல்
    துளி ஒளி விளக்கின் தூண்டுகோலைச்
    செங்காந்தள் நிரல் மங்கை விரலால்
    பெரிது செய்து விரிமலர்க் கையில்
    ஏந்திச்”

    செல்கிறாளாம். சுடரின் சோர்வைத் தூண்டுகோலால் அடிப்பகுதி நூலைத் தூக்கிவிடுவதன் மூலம் ஒளிவிடச் செய்கிறாளாம். விளக்கைத் துடைப்பதும், விளக்கேற்றுவதும், எண்ணெய் குறைந்தால் ஊற்றுவதும், குறைந்த சுடரைப் பெருக்கிக்காட்டுவதும் பெண்களின் இல்லறக் கடமைகளில் ஒன்று. ஆனால் பாரதிதாசன் இதனை உற்று நோக்கியிருக்கிறார். பண்பாடு சார்ந்த விளக்குச் சுடரேற்றும் நிகழ்வை மற்றொரு பண்பாடு சார்ந்த மூக்குத்தியின் பொடிமுத்தை உவமமாக்கி உரைத்ததன் மூலம் தான் ஒரு மரபுக்கவிஞர் என்பதை மீண்டும் உறுதி செய்கிறார்.

    உணவுக் கூடமா? உவம மண்டபமா?

    காலை உணவு, நண்பகல் உணவு என்றெல்லாம் அடுக்களையில் சமையல் செய்யச் செல்கிறாள் தலைவி. அடுக்களையில் ஒருநாள் சமையற்கான பொருளைத் தேர்ந்தெடுப்பதிலும் குடும்பத்தில் உள்ள யார் யார் என்னென்ன விரும்புவார்கள் என்பதிலும் மிக நுண்ணிய பார்வையைப் பாரதிதாசன் செலுத்தியிருக்கிறார்.

    “பொரியலோ பூனைக் கண் போல்
    பொலிந்திடும்!”

    பொரியலை உண்ணாதார் இலர். பூனையைக் காணாதார் இலர். ஆனால் பாரதிதாசனால் மட்டுமே பூனைக் கண்ணையும் பொரியலையும் ஒப்பிட்டுக் காண முடிந்திருக்கிறது. தேங்காய்த் துருவல், கடுகு முதலியன இட்டு வதக்கி வறுத்துச் செய்யப்படும் பொரியல் பூனைக் கண் போலவே இருப்பதைப் பாரதிதாசன் கவிதையைப் படித்த பிறகுதான் தெரிகிறது. பள்ளி செல்லும் பிள்ளைகளுக்குக் காலில் செருப்பணிவிக்கிறாள். அந்தச் செருப்புக்கும் உவமம் சொல்கிறார்.

    “புன்னைஇலைபோல் புதையடிச் செருப்புகள்
    சின்னவ காலிற் செருகி”

    என்று. குழந்தைகளின் அதாவது பெண் குழந்தைகளின் காலடிகளுக்குப் புன்னையிலையை உவமம் கூறுவது எவ்வளவு பொருத்தம் என்பதை புன்னையிலையைப் பார்த்தவர்களுக்குப் புரியும். பாரதிதாசன்,

    “காலுக்குப் புன்னையிலை போலும் செருப்பணிந்து
    கையில் விரித்த குடை தூக்கி”

    என்று பிறிதொரு இடத்திலும் பாடுவார். செயல்களின் மாற்றமே ஓய்வு. இந்த நுண்ணியத்தைப் பாவேந்தர் எப்படிக் காட்சிப்படுத்துகிறார் தெரியுமா? பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் கையில் விரித்த குடையைக் கொடுத்துத் தெருவரை அவருடன் நடந்து மற்ற பிள்ளைகளோடு அவர்களையும் அனுப்பிவிட்டு வீட்டுக்கு வருகிறாளாம். எப்படி?

    ‘கிளைமாறும் பசுங்கிளிபோல ஓடி
    ஆளனோடு அளவளாவினாள்”

    வேன்களில் குழந்தைகளை அனுப்பும் வழக்கத்தையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தற்காலத் தாய்மார்களுக்கு இந்த அனுபவமும் கிட்டாது. பாவேந்தரின் இந்தப் பாட்டும் கிட்டாது.

    பாண்டியனும் பாவேந்தரும்

    சேர, சோழ, பாண்டியர்களில் பாவேந்தரின் படைப்புக்களில் பெரிதும் நிறைந்திருப்பவர் பாண்டியரே. காரணம் பாவேந்தரின் அளப்பரிய தமிழ்ப்பற்று. பாண்டியர்கள் தமிழை வளர்த்தார்கள். சோழ நாட்டிலும் சேரநாட்டிலும் பயனை அனுபவித்தார்கள். என்ன பயன் பாண்டியர் காத்த தமிழில் கவிதைகளையும் காப்பியங்களையும் யாத்தனர். முத்தொழில்களிலும் காத்தல்தானே தலைசிறந்தது? அதனால் பாண்டியரை அவர் முன்னெடுப்பதில் வியப்பேதும் இல்லை!. குடும்பத்தலைவன் மணவழகர் உடுத்த வேண்டிய ஆடை கிழிந்திருக்கிறது. அதனைத் தைத்து அவனை அணியச் செய்து அவன் அழகைப் பருகுகிறாளாம் அவள். எப்படித் தெரியுமா?

    “பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்!
    தைத்தாள் தையல் சடுகுடு பொறியால்!
    ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப்
    பாண்டிய மன்னன் மீண்டது போல”

    என்று எழுதுகிறார். காப்பியம் புதுமை தேக்கியது. உவமம் மரபு சான்றது. ‘செந்தமிழ்ப்பாண்டியன்’ என்றதாலே அவர் பாண்டியனை முன்னெடுத்ததற்குத் தமிழே காரணம் என்பதும் பெறப்படும்.

    “கூண்டுவண்டி கட்டி நாம்
    கூடலூர் அடைந்தால்
    பாண்டியன் குடும்பம் என்று
    பார்த்து மகிழ்வார்கள்”

    என்று பிறிதொரு இடத்திலும் பாண்டியனை உவமமாக்கியிருப்பார் பாவேந்தர். எண்சீர் விருத்தங்களால் ஆன தமது காப்பியத்திற்குப் ‘பாண்டியன் பரிசு’ என்றுதான் அவர் பெயர் வைத்திருக்கிறார். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய அந்தத்தாய், அடுத்துத் தன் கணவனைக் கடைப்பணிக்கு அனுப்புகிறாள். அவன் உணவருந்தியபின் தமிழ் மரபுப்படி வெற்றிலைப் பாக்கு உண்ண விரும்புகிறான். வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொள்வதில் பலவகை உண்டு. தானே எடுத்துத் தானே கிள்ளித், தானே தடவித் தன்னுடைய வாயில் தானே போட்டுத் தானே மென்று தானே துப்புவது. வெற்றிலை முதலானவற்றை மனைவி எடுத்துச் சுண்ணாம்பு தடவி மடித்துக் கணவனிடம் கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொல்வது. அப்படி மடித்த சுருளைக் கணவன் கையில் கொடுக்காமல் கணவன் வாயிலேயே கொடுப்பது. இன்னொன்றும் உண்டு. தாம்பூலத்தை முதலில் தலைவி தரித்து மென்று உமிழ்நீரோடு கணவனோடு பரிமாறிக் கொள்வது. பெரும்பாலும் இலக்கியங்களில் பேசப்படாத நிகழ்வு இது. ஆனால் துணிச்சல் மிக்க திருவள்ளுவர் இதனைக் குறிப்பாகக் காட்டியிருக்கிறார்.

    “பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர்”

    என்ற தலைவனின் பட்டறிவு பகர்வில் நீர் பாலும் தேனும் கலந்த சுவையினைப் பெற்றது காண்க.

    “எயிறூறிய என்றவிடத்து இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. வேறுவேறு அறியப்பட்ட சவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னதென்று அறியலாகா இன்சுவைத்தாம் ஆதலின் அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க”

    என்னும் அழகர் உரைகொண்டு இக்காட்சியை நோக்கலாம்.  தலைவனின் அந்த நிகழ்ச்சி களவியல் வெளிப்பாடு. பாவேந்தரின் இந்த வெளிப்பாடு வேறுமாதிரியாக அமைந்திருக்கிறது. காரணம் இது கற்பியல்.

    “வெற்றிலைச் சுருளைப் பற்றி ஏந்தினாள்
    கணவன் கைமுன் காட்டி அவன் மலர்
    வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள்!
    தூயவன் அப்போது சொன்னது என்னெனில்
    சுருளுக்கு விலை என்ன சொல்லுவாய் என்றான்
    பொருளுக்குத் தக்கது போதும் என்றாள்.
    கையில் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை
    வாயிற் கொடுத்திடு மங்கையே! என்றான்.
    சேயிழை அன்பால் செங்கை நீட்டினாள்!
    குடித்தனப் பாங்கைக் கூட்டி எடுத்து
    வடித்த சுவையினை வஞ்சிக்கு அளித்தல்போல்
    தளிர்க்கைக்கு முத்தம் தந்து
    குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே!”

    பாங்கோடு குடும்பம் நடத்தியவள் தலைவி. அனுபவித்தது குடும்பம். குடும்பத் தலைவன் அனுபவித்த அந்தச் சுவையை உவமமாக்குகிறார் பாவேந்தர். விரைவுச் சாப்பாட்டில் வாழ்க்கையை முடித்துக்  கொள்வாருக்கு இந்தக் கவிதையும் புரியாது. உவமமும் புரியாது.

    “உணவுண்ணச் சென்றாள் அப்பம்
    உண்டனள் சீனி யோடு
    தணல் நிற மாம்பழத்தில்
    தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்
    மணவாளன் அருமை பற்றி
    மனம் ஒரு கேள்வி கேட்க
    இணையில்லா அவன் அன்புக்கு
    ஈடாமோ இவைகள் என்றாள்”

    என்று குடும்பத்தலைவி உணவுண்ணச் சென்ற காட்சியைச் சித்திரிக்கிறார் பாவேந்தர். அப்பம் உண்பது ஒரு சிறிய வினை. அந்த வினையை உவமத் தோரணத்தால் அணிசெய்துவிடுகிறார். மாம்பழத்தைக் கண்ணால் கண்டு நிறத்தை அறிகிறாள். உண்டு சுவையை உணர்கிறாள். தணல் நிற மாம்பழம் என்றதால் உரு உவமை. தமிழ் நிகர் சுவை என்றதால் பண்புவமை. இத்துடன் இன்னொரு உவமத்தையும் வெகுநுட்பமாகக் கையாள்கிறார். கணவன் கண்ணுக்கு அழகானவன். மனத்திற்கு இனிமையானவன். அந்த அழகும் அவ்வினிமையும் இந்த மாம்பழத்திற்குக் கிடையாதாம். அணி வேற்றுமையாக இருந்தாலும் மாம்பழத்தின் உருவும் பண்பும் கணவனுக்கும் பொருந்துமாறு உவமம் புணர்த்தியிருக்கும் நுண்ணியம் உணரத்தக்கது.

    “குழந்தைகள் பள்ளி விட்டு
    வந்தார்கள் குருவிக் கூட்டம்
    இழந்தநல் உரிமை தன்னை
    எய்தியே மகிழ்வதைப் போல்”

    என்பது ‘சிட்டுக்குருவி போலே விட்டு விடுதலையாகி’ என்னும் பாரதியின் தொடரோடு ஒப்பு நோக்கத்தக்கது.

    பழைமையைப் பழுதுபார்க்கும் பண்டிதர்கள்

    உவமங்கள் அழகியல் சார்ந்தவை என்பது அவற்றின் இலக்கிய  நோக்கம். பொருள் விளக்கம் என்பது அவற்றின் உயிர் நோக்கம். அரசுக்குக் கொள்கைமுடிவு என்பதுபோலப் படைப்பாளனின் கொள்கை அடையாளங்களின் குறிப்பு என்பது கூடுதல் சிறப்பு. இந்தக் கொள்கை அடையாளத்தைப் பெரும்பாலான கவிஞர்கள் வெளிப்படச் சொல்ல மாட்டார்கள். இலைமறை காய்மறையாகத்தான் சொல்வார்கள். சுவைப்பார் அல்லது திறனாய்வார் கண்டறிந்து பந்தி வைக்க வேண்டும். பாரதி பழைமைக்கு எதிரி. அதாவது பயனற்ற பழைமைக்கு எதிரி. இந்தப் பழைமை எதிர்ப்பை அவன் தனது எல்லாப் படைப்புக்களிலும் பதிவு செய்திருக்கிறான். இந்த மூடநம்பிக்கை, பொருளற்ற பழைமை இவற்றில் பாரதிக்கு இருந்த உறுதியும் தெளிவும் கனகசுப்புரத்தினம் பாரதிதாசன் ஆவதற்கான காரணங்களுள் தலையாயது.

    “பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப்
    பழமை இருந்தநிலை கிளியே
    பாமரர் ஏதறிவார்?”

    என்னும் பாரதியத்தை உள்வாங்கிய பாரதிதாசன் அந்தக் கருத்தினோடு தமக்கிருக்கும் ஒத்திசைவைக் குடும்பத்தின் ஒருநாள் நிகழ்ச்சியில் வைத்துக் காட்டுகிறார். காலைமுதல் அனைத்துக் கடமைகளையும் முடித்த தலைவி இறுதியாகப் பசுவுக்கும் கன்றுக்கும் வைக்கோல் வைப்பதற்கு முன்னால் இந்த உவமத்தைப் பயன்படுத்துகிறார். எப்படி?

    “கண்டு, படுக்கை திருத்தி, உடை திருத்திக்
    காற்றில்லாப் போதினிலே விசிறி வீசி,
    வண்டுவிழி திறக்குமொரு குழந்தை தண்ணீர்
    வையென்னும் ஒன்றுதலை தூக்கிப் பார்க்கும்!
    பண்டிதரின் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்
    பணிக்கையிடல் போல்அனைத்தும் தணிக்கை செய்தே!”

    படுக்கை திருத்துவது முதலாகத் தொடங்கிக் குடி தண்ணீரைத் தலைமாட்டில் வைப்பதுவரை தலைவி செய்யும் செயல்களுக்கெல்லாம் பழைமையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் பண்டிதர்களின் செயல்களை உவமமாக்கியுரைக்கிறார் பாரதிதாசன்.

    பாகற்காய் கசக்கும்! பாடல் இனிக்கும்

    ‘குடும்ப விளக்கு’ பலவகைகளில் தமிழ்க்கவிதைகளிலும் காப்பியங்களிலும் புதுமை தேக்கி நிற்கும் சிறப்புடையது. கணவன், மனைவி இரவில் படுக்கையில் சந்திக்கின்ற காட்சியைப் பண்பாட்டுடன் முதன்முதலில் சித்திரித்துக் காட்டிய பெருமை பாவேந்தருக்கு உண்டு. தனிமனிதன் குடும்பமாகிறான். குடும்பம் தெருவாகிறது. தெரு ஊராகிறது. ஊர் நாடாகிறது. நாடு உலகம் ஆகிறது என்பதுதான் மகாகவி பாரதி, பாரதிதாசன் ஆகியோர்தம் சமுதாயக் கட்டுமானக் கொள்கையாகும். இந்தக் கருத்தியலைப் பாவேந்தர் படுக்கையறையில் வைத்துக் காட்டுகிறார். பகலெல்லாம் தலைவி வீட்டிலும் தலைவன் கடையிலும் உழைத்து வந்து படுக்கையில் விழுகின்ற நேரத்திலும் சுயநலம் நோக்காத அவர்தம் மனநிலையைப் பதிவு செய்கிறார்.

    “கண்டான் கண்டாள் உவப்பின் நடுவிலே ஓர்
    கசப்பான சேதியுண்டு கேட்பிர் என்றாள்”

    மனைவி இதனைச் சொன்னவுடன் கணவன் சொல்லுகிற சொல்தான் காப்பியத்தை நினைக்க வைக்கிறது. கணவன் சொல்லுகிறான்,

    “மிதிபாகற்காய் கசக்கும் எனினும் அந்த
    மேற்கசப்பின் உள்ளேயும் சுவையிருக்கும்”
    அதுபோலத் தானேடி? அதனால் என்ன
    அறிவிப்பாய் இளமானே! என்றான் அன்பன்”

    மிதிபாகற்காயை அறிந்தாலேயொழிய இந்த உவமத்தை உள்வாங்க முடியாது. பாகற்காயில் பலவகை உண்டு. இவற்றுள் மிதிபாகற்காய் என்பது படியில் அளந்து கொடுப்பார்கள். மேற்புறம் இருக்கும் கசப்பு குறைவாகவும் உள்ளிருக்கும் இனிப்பு அதிகமாகவும் இருக்கும். பாகற்காய் கசக்கும் என்பது இதற்கு அவ்வளவாகப் பொருந்தாது. பக்குவப் பெண்கள் சமைத்தால் இனிப்பு இருமடங்காகும். இந்தப் பாகற்காயை மனைவியின் பேச்சுக்கு உவமித்ததன் மூலம் தலைவி சொல்லவரும் கருத்து இனிப்பானதே என்ற சிந்தனையோடு அணுகுகிறான் தலைவன். தலைவி அப்படி என்ன பேசுகிறாள் படுக்கையறையில்?

    “அதிகாலை தொடங்கி நாம்இரவு மட்டும்
    அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்பதல்லால்
    இதுவரைக்கும் பொதுநலத்துக்கென்ன செய்தோம்
    என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவும் இல்லை”

    இவைதான் அவள் பேசிய கசப்பான சேதி!. உள்ளே இருக்கும் சுவை என்ன? மனைவி இரவில் சொல்ல வந்ததைக் கணவன் பகலிலேயே செய்து முடித்துத் தமிழினத்தின் உயர்வுக்கான சிந்தனையோடு வீடு வருகிறான். அவனுடைய பேச்சைக் கேட்டு மனைவி முடிக்கிறாள் இப்படி!

    “பழம் இடுவேன்! சர்க்கரைப்பால் வார்ப்பேன்! உங்கள்
    பண்பாடும் வாய்திறப்பீர், அத்தான்! என்றாள்!”

    உள்ளத்தால் இணைந்த கணவன் மனைவியர்தம் இல்லறத்தின் நோக்கம் பொதுநலம். விடுகதை போடலாம் என்று மனைவி எண்ணியிருந்தாள். கணவன் விடையோடுதான் வந்திருக்கிறான் என்பதை அவள் அறியாள். மனைவி சொல்லிக் கணவன் செய்வதைவிடக் கணவன் சிந்திப்பதையே மனைவி எண்ணுவது சிறந்தது. சொல் கசப்பாயிருக்கலாம். பொருளும் பயனும் இனிப்பானவை என்பது கருத்து.

    நிறைவுரை

    வைகறையில் தொடங்கி முன்னிரவில் நிறைவு செய்து காட்டியிருக்கும் ஒருநாள் நிகழ்ச்சியில் பாவேந்தர், குடும்பப் பாங்கான உவமங்களையே கையாண்டிருக்கிறார். ‘வண்டுவிழி’, ‘அன்றிலடி நாமிருவர்’, ‘குன்றத்தில் படர்ந்த மலர்க்கொடி’, ‘செங்காந்தள் நிகர் விரல்’, ‘பூவிதழ் மேல் பனிதூவிய துளிபோல்’ என்றெல்லாம் ‘தொட்ட இடமெல்லாம் தட்டுப்படும்’ உவமங்களால் நிறைந்தது ஒருநாள் நிகழ்ச்சி!  ஒருநாள் சித்திரிப்பில் ஓராயிரம் உவமங்கள். ஆனால் அவை அழகு பெற்றதும் அழியா வாழ்வு பெற்றதும் தமிழிலக்கியத்தில் புதுத் தடம் கண்டதும் காட்டியதும் பயன்படுத்தப்பட்ட உவமங்களால் என்பது அவ்வுவமங்களில் மனங் கரைந்தார்க்கே புலனாம்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 45

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 45

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமம் என்பது ஒருபுடையன்று

    முன்னுரை

    ‘ஒருபுடை’ என்றால் ஒரு பக்கம் என்பது பொருள். ‘ஒரு பகுதி’ என்பது பொருள். ‘ஒருபுடை’ என்ற சொல் தமிழாசிரியர் மற்றும் பேராசிரியர்களிடம் புழங்கி வருகிறது. எங்கே புழங்கி வருகிறது என்றால் அவர்கள் சொல்லும் உவம விளக்கத்தில் புழங்கி வருகிறது. சான்றாகப் ‘பசுபோல் சாதுவானவன்’ என்றால் பசுவின் இயல்பை மட்டுமே குறிக்குமேயன்றி அதன் தோற்றம், வினை, அதன் பயன்பாடு ஆகியவற்றைக் குறிக்காது என்பதாக அவர்கள் கருதுகின்றனர். அவர்கள் கருதாவிட்டாலும் அதுதான் உண்மை. காரணம் ஒரு பொருளை எதற்கெல்லாம் எப்படியெல்லாம் உவமிக்கலாம் என்பதை முன்னாலேயே வடிகட்டி வைத்திருக்கிறார்கள் நம்முடைய இலக்கண முன்னோர்கள்.  அவர்கள் அனைத்தும் அறிந்து அமைதியாக இருந்தவர்கள். உவம அமைப்பை வினை, பயன், மெய், உரு என வகுத்துவிட்டதனால் அந்தந்த வகையில் அவை முழுமையாகவே செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். இவர்கள் சொல்லுகிற ஒருபுடை என்பது நான்கு வகையுள் ஏதேனும் ஒன்றில் அடங்கிவிடும். ‘புலிபோலப் பாய்ந்தான்’ என்பது வினையுவமம். இதில் ‘ஒருபுடை’ என்ற பேச்சுக்கே இடமில்லை. அதாவது வினைக்கான உவமம் என்றாகிவிட்டதால் அதில் அது முழுமையானது. ‘ஓரளவு பாய்ந்தது’ என்று பொருள் தராது. ‘பால்போலும் இனிமையாகப் பேசினாள்’ என்பது பண்புவமம். ஓரளவு இனித்தாள் என்பது பொருளன்று. முழுமையாக இனித்தாள் என்பதே பொருள். இவள் கற்பில் கண்ணகி என்றால் அது கண்ணகியின் கற்பினை முழுமையாக உவமித்தது. ஓரளவு கற்பு என்றாகாது. அது அறியாமையினால் வந்த மயக்கம். ஒரு பொருளின் எந்தப் பகுதி உவமிக்கப்படுகிறது என்பதை வினை, பயன், மெய், உரு என்னும் பகுப்பே காட்டிவிடுதலின் ‘ஒருபுடை’ என்பது பொருளற்றது என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். பொருளின் அதாவது உவமேயத்தின் ஒரு கூற்றினை விளக்கவே உவமத்தின் ஒரு கூறு கொள்ளப்படுகிறது என்பது கருத்து. இந்த அடிப்படையில் மணிவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை ஆகிய இலக்கியங்களில் காணப்படும் சில உவமப்பயன்பாடுகளின் தனித்தன்மை இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராயப்படுகின்றது.

    உவமத்தின் முழுப் பரிமாணம்

    பொருள் விளக்கத்திற்காக உவமத்தைப் பொருளோடு நோக்குகையில் எத்தகைய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் தமது புலமைநலம் வெளிப்படக் கூறியிருக்கிறார். இரண்டு குறட்பாக்களின் உவம அமைதி கொண்டும் அவற்றுக்குப் பரிமேலழகர் தரும் விளக்கவுரை கொண்டும் இதனைத் தெளியலாம். எல்லாருக்கும் தெரிந்த குறட்பா,

    “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர் நீப்பர் மானம் வரின்” (969)

    என்பதாகும். இக்குறட்பாவிற்குத்,

    “தன் மயிர்த்திரளில் இருந்து ஒரு மயிர் நீங்கினும் உயர்வாழாத கவரிமானை ஒப்பார் உயிர் நீக்கத் தான் மானம் எய்தும் எல்லை வரின் அதனைத் தாங்காது இறப்பார்”

    எனப் பதசாரம் எழுதிய பரிமேலழகர்,

    “இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம்.

    உவமை அவர்க்கு அது இயல்பென்பதை விளக்கி நின்றது”

    என்று விளக்கவுரை தருகிறார். இந்த விளக்கவுரையில்தான் அவர் உவமத்தைப் பொருளோடு நோக்கும் நெறிபற்றித் தொல்காப்பியம் சொல்லாததைச் சொல்லுகிறார். என்ன சொல்லுகிறார்? ‘வாழாது’ என்பது உவவமத்தின் வினை. ‘நீப்பர்’ என்பது பொருளின் வினை. அவ்வளவுதான் உவமத்தினால் பெறக்கூடியது. தொல்காப்பிய விதிப்படி பெற வேண்டியது. பரிமேலழகர், சொல்லியது கொண்டு சொல்லாததைப் பெறுவதும் உவமக் கோட்பாடு அல்லது உவமப்பயன் என்று உவமத்தின் முழுக் கொள்ளளவையும் கொண்டுவருகிறார். அது என்ன முழுக் கொள்ளளவு? மயிர் இழந்த கவரிமா உயிரிழப்பது அந்த ஒரு மானுக்கன்று. அந்த மான் வர்க்கத்திற்கே இயல்பு. இந்தக் கருத்து பாட்டில் இல்லை. உவமத்தில் இல்லை. உவமம் இதற்காகவும் சொல்லப்படவில்லை. ஆனால் அழகர் உவமச்சுரங்கத்தில் இறங்கிப் பொருள் மணிகளைக் கொண்டுவருகிறார். யாராவது சான்றோர் என்பது இல்லை. சான்றோர் அனைவருக்கும் பொதுவான இயல்பு மானம் காப்பது. இது பாட்டில் சொல்லப்படாவிட்டாலும் உவமத்திலிருந்து பெறக் கூடிய கருத்து.

    1. மயிர்நீப்பின் கவரிமா உயிர்வாழாது என்பது அவ்வினத்திற்கு இயல்பு.
    2. மானமா? உயிரா? என்றவழி உயிர்கொடுத்து மானம் காப்பது சான்றோர்க்கு இயல்பு.

    வள்ளுவரின் குறட்பாவில் இல்லாத அல்லது சொல்லப்படாத இந்தக் கருத்துக்களை உவமத்தின் முழுப்பரிமாணத்தையும் கொண்டு வந்து உரைசொல்லும் அழகர் எழுதுகிற உரையில் அறிய முடிகிறது.

    “தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
    நிலையின் இழிந்தக் கடை” (964)

    என்னும் குறட்பாவிலும் உவமத்தின் முழுமையான பொருட்பரிமாணத்தையும் வெளிக்கொணர முயல்கிறார் பரிமேலழகர். ‘மயிரனையர்’ என்பதால் இது பொருளுவமம். நிலையின் இழிந்த மாந்தர் என்பது பொருள். தலையின் இழிந்த மயிர் உவமம்.

    “குடிப்பிறந்த மாந்தர் தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்று தாழ்ந்த வழி, தலையைவிட்டு அதனின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர்”

    என்பதுதான் இந்தப் பாட்டில் சொல்லப்பட்ட கருத்து. பரிமேலழகர் என்ன செய்கிறார்? ‘இழிந்தக்கடை’ என்னும் சொற்பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு ‘உயர்ந்த கடை’ (உயர்ந்து நின்ற பொழுது) என்பதை வரவழைத்துக் கொள்கிறார். இந்தக் கருத்து குறட்பாவில் இல்லை. கொண்டு, (தலையினின்றும்) வீழ்ந்தபோது அதன் நிலை இவ்வாறென்றால் (தலையில்) இருந்தபோது அதன் நிலை என்ன என்பதைச் சிந்திக்கிறார். சிந்திக்கவே சொல்லப்பட்ட பொருளுவமத்தின் பொருட்பரிமாணத்தை இன்னும் ஆழமாக்கி,

    “அந்நிலையை விடாது நின்றவழிப் பேணப்படுதலும் விட்டுத் தாழ்ந்தவழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்”

    என்றும் எழுதுகிறார். அழகரின் இந்த நுண்ணியம் அழகருக்கே உரியது. மேலும் உவமத்தைப் பொருளோடு பொருத்துகிறபோது இலக்கண வரையறையைத் தாண்டியும் படைப்பாளனின் உள்ளத்தை ஊடுருவிச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தையும் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. உண்மையில் ஒருபுடை ஒப்புமை என்றால் அழகரின் ஆய்வு ‘உரிமை மீறலுக்கு’ உரியதாம் என்க.

    திருப்பாவையில் பெய்த மழை

    பொருளை உவமிக்கிறபோது அணுஅணுவாக அனுபவித்து உவமித்திருக்கிறார்கள் சான்றோர்கள். முந்தைய பத்திகளில் எடுத்துக்காட்டப்பட்டனவெல்லாம் உரையாசிரியர் அதனைக் கையாள்கிற முறை பற்றியது. ஆனால் ஆண்டாள் நாச்சியாரும் மணிவாசகப்பெருமானும் பாடிய பெருமக்கள். படைப்பாளர்கள். இவர்களுள் நாச்சியார் பாடிய திருப்பாவையுள் ஒரு பாடலில்  உவமத்தைப் பொருளாக்கி உரைக்கிறார். மற்றொரு பாடலில் உவமத்தின் ஒவ்வொரு அசைவையும் பொருளுக்கேற்றியுரைக்கிறார். அதாவது ‘பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்’ (1239) என்னும் தொல்காப்பியத்தையும் கடைப்பிடிக்கிறார். உவமத்தின் வண்ணனைகளையும் செயல்பாடுகளையும் அப்படியே முழுமையாகப் பொருளுக்குப் பொருத்திக் காணவேண்டும் என்ற உவமக் கோட்பாட்டினை முன்னெடுத்து ‘ஒருபுடை ஒப்புமை’ என்னும் கருத்தியலை முற்றிலுமாக நிராகரிக்கிறார்.

    “ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
    ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!”

    இந்தப் பாட்டில் பெண்கள் மழைக்கண்ணனாகிய வருணனை விளித்து ‘பெய்திடாய்’ என்று வினைமுடிபு செய்கிறார்கள். செயப்படுபொருள் மழை. இந்த மழை எப்படிப் பெய்ய வேண்டும் என்று அவர்கள் விவரிக்கிறபோது பெருமாளின் தரிசனம் முழுமையாகக் கிட்டி விடுகிறது என்பதை உணரலாம். மழை எப்படிப் பெய்ய வேண்டுமாம்? நாச்சியார் சொல்கிறார்.

    1. ஆழியுள் புக்கு, நீரை முகந்து, ஆர்த்து, வான்வெளியில் ஏறி வருதல் வேண்டும்.
    2. ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுக்க வேண்டும்.
    3. பத்மநாபன் வலக்கையில் உள்ள சக்கரத்தைப் போல மின்னுதல் வேண்டும்.
    4. அவன் இடக்கையில் உள்ள சங்கின் நாதத்தைப் போல முழக்கம் வேண்டும்.
    5. சார்ங்கம் என்னும் வில்லினின்றும் பாயும் அம்புபோலப் பெய்தல் வேண்டும்.

    சங்கு, சக்கரம், சார்ங்கம் என்னும் மூவகை ஆயுதங்களையும் உவமையாகச் சொல்லிப் பொருளாகிய மழையின் வினையை வரன்முறை செய்கிறார் நாச்சியார். உவமமயக்கமோ பொருள் மயக்கமோ ஏதுமின்றிப் பொருளின் ஒவ்வொரு வினைக்கும் பொருத்தமான உவமவினைகளை நிரல்படுத்திவிடுகிறார். திருப்பாவை இலக்கியத்தின் தனிப்பயன் நல்ல கணவன். பொதுப்பயன் நாட்டிற்கு நல்ல மழை. ஆதலின் உவமத்தைப் பொருளாக்கியுரைத்தார் என்க. ‘ஊழிமுதல்வன் உருவம்போல்’ மெய்கறுத்து என்றவழி மெய் உவமமும், உரு உவமமும் ‘ஆழிபோல் மின்னி ‘வலம்புரிபோல்’ நின்றதிர்ந்து என்றவழி வினையுவமமும் ‘சரமழைபோல்’ என்றவிடத்துப் பயன் உவமையும் அமைந்து மரபுவழி உவமக்கோட்பாட்டை வலியுறுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன.

    திருவெம்பாவையில் பெய்த மழை

    திருப்பாவையில் நாச்சியார் உவமத்தைப் பொருளாக்கிப் பொருளை உவமமாக்கியதைப் போலவே மணிவாசகப் பெருமானும் பாடியிருக்கிறார். மழையைப் பற்றிப் பாடுகிற இவ்விரண்டு பாடல்களிலும் இவ்வாறு பொருளே உவமமாகியிருப்பது நோக்குதற்குரியது.

    “முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
    என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
    மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
    பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
    என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
    தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
    முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
    என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்”

    “மேகமே! முதலில், இந்தக் கடல்நீரை உட்கொண்டு, மேல் எழுந்து, – எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நிறத்தோடு விளங்கி, எம்மை அடிமையாகவுடையவளது,  சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த, – பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து,  அவளது திருப்புருவம் போல,- வானவில்லிட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய, அவ்வன்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கோமான் -எங்கள் தலைவனாகிய இறைவனது,  அடியார்களுக்கும், நமக்கும் – பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளங்கொண்டு,  முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று, பொழிவாயாக!”. என்பதே இப்பதிகத்தின் பொருளாம். திருப்பாவையில் கண்டது போலத் திரும்வெம்பாவையில் காணும் உவமங்களைப் பொருளொடு பொருத்தினால்,

    1. உமாதேவியின் மேனி போல் மேகம் கறுக்க வேண்டும்.
    2. அம்மையின் இடைபோல மின்னல் தோன்ற வேண்டும்.
    3. அவள் காற்சிலம்புபோல இடி ஒலிக்க வேண்டும்.
    4. அப்போது தோன்றுகிற வானவில் அவள் திருப்புருவம் போல் திகழவேண்டும்.
    5. சிவபெருமானுடைய அருள் பொழிவதுபோல மேகம் மழையாகப் பொழிய வேண்டும்.

    உமாதேவியின்  திருமேனி  நீல நிறமாகும். பெண்களது  இடைக்கு  மின்னலை உவமமாக்குவது இலக்கிய மரபு.  இறைவன் அம்மையின் மூலமாகத்தான் உயிர்களுக்கு அருளுவானாதலின், ‘அவள் அன்பர்க்கும் நமக்கும் முன் சுரக்கும் இன்னருளே!’ என்ன’ என்றனர். இது, நீராடச் சென்ற பெண்டிர் பொதுப்பயனாகிய மழையை வேண்டிப் பாடியதாம்.  இதனால், இறைவன் சத்தி மூலமாக மெய்யடியார்களுக்கு அருளை வழங்குவான் என்பது கூறப்பட்டது.

    உவமத்தின் செயலணுக்கள்

    ‘உவமையால் பெற்றாம்’ என்னும் பரிமேலழகரின் தொடர் உவமத்தை எப்படி நோக்க வேண்டும்? நோக்கிப் பொருளோடு அதனை எப்படிப் பொருத்திப் பார்க்க வேண்டும்? என்ற புதிய நெறியைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறது. ‘பெற்றாம்’ உற்றுநோக்கிப் பெறவேண்டியது கற்பார் கடன்! உவமத்தின் பரிபூரணத்தை உணர்ந்தாலேயொழிய பொருளின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள இயலாது. அத்தகையதொரு உவமச் சித்திரிப்பை நாச்சியார் காட்டுகிறார்.

    “மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
    போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
    கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
    சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
    காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!”

    பள்ளிகொண்டிருக்கிற திருமாலை ஆயர்குலத்துப் பெண்கள் துயில் எழுப்புகிறார்கள்.  மேலே கண்ட பாடல்களில் பொருளை உவமமாக்கியும் உவமத்தைப் பொருளாக்கியும் ‘இது போல இது’ என்னும் விளக்கத்தோடும் (உவம விரியாக) பாடிய பெண்கள் இந்தப் பாட்டிலே உறங்கும் பெருமாளுக்குச் சிங்கத்தை உவமமாக்கி அதன் வினையை மட்டும் பாடுகிறார்கள். ‘படுத்திருக்கும் சிங்கம் எழுந்து வந்தாற்போலப் பள்ளிகொண்ட பெருமாள் எழுந்து வந்தான்’ என்று ஒரே தொடரில் உவமத்தைப் பொருளோடு பொருத்திக்காட்டிவிடலாம். ஆனால் நாச்சியார் உறங்கும் சிங்கத்தின் ஒவ்வொரு அசைவையும் நுணுகிக் கண்டு அனுபவித்துப் பாடுகிறார். உவமத்தையும் பொருளையும் முற்றுமாகப் பொருத்திக்காட்டும் உவமக்கோட்பாட்டை வலியுறுத்துவது இந்தக் கட்டுரையின் முதல் நோக்கமெனின் இந்தக் கட்டுரையின் இரண்டாவது நோக்கம் இப்படி அமைகிறது. அதாவது உவமத்தின் ஒவ்வொரு அசைவையும் நுண்பகுதிகளையும் உற்று நோக்கியுரைத்துக் கற்பாரை அவற்றைப் பொருளோடு பொருத்திப் பார்க்கத் தூண்டுவது. ‘ஒருபுடை உவமம்’ என்னும் தொடர் வெற்றசையாக வெளிறி நிற்பது இங்கேதான்.

    பாட்டு முழுமையும் உவமமாகிய சிங்கத்தின் செயல்பாடுகளே நிரல்படுத்தப்படுகின்றன. ஆராயப்படுகின்றன. ‘மாரி மழை’ என்றால் மழைபோலப் பனிவிழும் மார்கழி என்பது பொருள். முன்னொரு பாசுரத்தில் ‘பனித்தலை வீழ’ என்றதும் அது. ‘முழைஞ்சில்’ என்றால் குகை. குகையில் படுத்திருக்கும் சிங்கம் எப்படிப் படுத்திருக்கிறது. ‘மன்னிக் கிடந்து உறங்குகிறது’. கடுங்குளிரில் தன் பெடையொடு செயலின்றி உறங்கும் சிங்கம் என்பது பொருள். மன்னி என்பதற்குச் சோம்பலை அள்ளிப் பூசிக்கொண்டு உறங்குகிறது என்று எழுதுவார் வியாக்கியாணக்கார். மழைக்காலம் முடிந்த நிமித்தங்கள் கண்டு, அதுவரை அசையாமல் இருந்தது – திடீரென்று உயிர் வந்ததுபோல் அசைந்து, உறங்கிய பின் பார்க்கிற முதல் பார்வையாகையால் சிறிது சிவந்து விழித்த விழிகள் – வேரி மயிர் பொங்க –என்றால் பரிமளம் என்கிற விலங்கினத்திற்குரிய மணம் கமழ – பிடரி மயிர்களை உதறி, வெப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து – உடம்பில் இன்னமும் ஒட்டியிருக்கும் சோம்பலை உதறுகிறதாம். முன்னங்கால்களை நீட்டி உடம்பை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்து, பின் பின்னங்கால்களை நீட்டி மறுபடியும் உடம்பை இழுத்து சோம்பலை உதறுகிறதாம். பிறகு முழங்கி வேட்டையாடக் கிளம்பும் சிங்கத்தைப்போலே என்று சொல்கிறார்கள் பெண்கள். ‘நான் என்ன சிங்கம் மாதிரி கருணை இல்லாமலா இருக்கிறேன்? பெருமாள் பார்க்க, (பார்ப்பதாக இவர்கள் எண்ணம்)  சிங்கத்தை உன் பெருமிதத் தோற்றத்திற்காகவே உவமித்தோம் என்பார், ‘பூவைப்பூவண்ணா!’ என்று தலைகீழாக மாறிப் பேசுகிறார்கள். காளையின் வீறுகொண்ட நடையும் வேழத்தின் பெருமிதமும் புலியின் சினமும் சிங்கத்தின் சாமர்த்தியமும் கொண்ட அரங்கனின் நடையழகை அனுபவித்துப் பாடுகிறார்கள் பெண்கள். வந்த காரிய நோக்கத்தைச் சொல்வதற்கு முன் இங்கே எழுந்து வந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய வேண்டும் என்று வேண்டுகிறார்கள். என்ன காரியம் என்பதனைச் “சிற்றஞ் சிறுகாலே’ என்னும் அடுத்த பாட்டில் வைத்தார்கள்.

    பாட்டில் சிங்கம் உவமம். அரங்கன் பொருள். அரங்கன் செய்ய வேண்டும் வினைக்கு சிங்கத்தின் வினைகள் உவமம். எனவே வினையுவமம். இந்த வினையுவமத்தில் ஒருபுடை என்ற பேச்சுக்கே இடமில்லை. அரங்கனைப் பற்றி ஓர் அசை கூடச் சொல்லாமல் அத்தனைச் செயல்பாடுகளையும உவமமாகிய சிங்கத்திற்கே நுண்துகளாக நோக்கி உரைத்தார். கவிதையாய் ஆக்கியுரைத்தார் நாச்சியார்.

    “சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமாப் போலே”

    என்பன உவம வண்ணனை. ‘அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து, உதறி, மூரி நிமிர்ந்து, முழங்கிப், புறப்பட்டுப் போதருமாப் போலே” என்னும் அத்தனை எச்சங்களும் உவமத்தின் தொடர் நிகழ்வுகள். எனவே அத்தனையும் பொருளான அரங்கனுக்கானவை. ‘போந்து, அருளி, காரியம் ஆராய்ந்து அருளேல்’ என்பது பொருளாகிய  அரங்கனுக்கானவை. ‘போந்து அருளி ஆராய்ந்து என்னும் எச்சங்கள் ‘அருள்க!’ என்னும் வினைமுடிபு கொண்டன. இந்தச் செயலைச் செய்வதற்கு முன்னாலே அரங்கன் எப்படி எழுந்து வந்தான் என்பதை உவமத்தைக் கொண்டு அனுமானிக்க வேண்டியது அறிவார் கடன்! அரங்கன் அருளையும் ஆண்டாள் அருளையும் வேண்டுவார் கடன்!

    நிறைவுரை

    வினை, பயன், மெய், உரு என உவமப் பயன்பாட்டின் நோக்கத்தை நான்காகப் பிரித்திருக்கிறார்கள். காரணம் அத்தகைய பிரிவு பிரிவின் அடர்த்தியைத் துல்லியமாக நோக்கி உவமத்தைச் சிறக்கச் செய்வது. அதனால் பொருளின் பரிமாணத்தை மேலும் புலப்படச் செய்வது. காட்டலாகாப் பொருளாகிய இறைவனுக்குத் திருவள்ளுவர் அகர ஒலியை உவமமாக்கிய நுண்ணியமும் ‘காணப்பட்ட உலகத்தினின்றும் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் ‘ஆதிபகவன் முதற்றே’ என உலகின் மேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க’ என்னும் அழகரின் உரையாழமும் ஈண்டு நினையத்தகுவன. மேற்கண்ட பத்திகளில் உவமத்தையும் பொருளையும் ஒவ்வொரு கூறாகப் பொருத்திக் காட்டிய ஒன்றும் உவமத்தை மட்டும் கூறு கூறாக விளக்கி அதன்வழிப் பொருளைப் புலப்படச் செய்த மற்றொன்றும் காட்டப்பட்டன. இவ்விரண்டு நெறிகளிலும் ‘ஒருபுடை’ என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். உவமம் அழகியல் சார்ந்தது மட்டுமன்று. பொருண்மையின் நுண்ணியம் துலக்கும் கருவியுமாகும்!.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 44

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 44

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘கூம்பேறும் பறவை’ குலசேகர ஆழ்வார்

    முன்னுரை

    தமிழில் இலக்கண விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும் இலக்கியப் பொருண்மை புலப்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும்  தனித்தனி இயல்புகள் உண்டு. இது தனி ஆய்வுக்கு உரியது. உயிரோடு மெய் கலப்பதற்கு ‘அப்போடு கலக்கும் உப்பு’ என்பது இலக்கண உவமம். நல்லவரோடு நல்லவர் கலந்துரையாடுவதற்கு ‘நற்றாமரைக் குளத்தில் நல்லன்னம் சேர்வது’ என்பது இலக்கிய உவமம். முன்னது அறிவு சார்ந்தும் பின்னது உணர்வும் அழகியலும் சார்ந்ததுமாகும். ஆனால் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமங்கள் இவற்றினும் வேறாகி அமைகின்றன. காரணம் பக்தியுணர்வு அகப்புற உணர்வுகளினின்றும் மாறுபட்டு நெகிழ்ச்சியை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதே. இது பற்றிய சில கருத்துக்கள் முந்தையக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. வைணவப் பாசுரங்களில் தனித்து விளங்கும் குலசேகர ஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழியில் உருக்கும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்வதாக அமைகிறது.

    குலசேகர் ஆழ்வாரின் உள்ளமும் உவமமும்

    ‘அரற்றுதல்’ என்பது ஒன்று. அனுபவித்தல் என்பது மற்றொன்று. சைவத் திருவடியார் நால்வரும் அரற்றியவர்கள். அவ்வரற்றுதலில் இறைவன் மேனியழகைக் கண்டு அனுபவிப்பது என்பது அளவால் குறைவு. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்’ என்பது போன்ற பாடல்கள் சைவத்தில் குறைவு. ‘ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்’ என்பது போன்ற அரற்றலே மிகுதி. வைணவத்தில் இறைவனின் திருமேனி அழகைப் “பச்சை மா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்” என்று ஒவ்வொரு துளியாகச் சுவைத்து அனுபவித்துப் பாடித் தாமும் மயங்கிக் கற்பாரையும் மயக்குவர்.

    ‘தன்னைக் கைவிடலாகாது காத்தல் வேண்டும்’ என்பதே பொதுவான அடியவர்தம் வேண்டுகோளாயினும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் வேண்டுகிற முறையில் வேறுபாடு உண்டு. குலசேகரர் வித்துவக் கோட்டு அம்மானிடம் வைக்கின்ற வேண்டுகோள் கைவிடலாகாது என்பதேயாயினும் அதற்காக அவர் காட்டுகின்ற உவமங்கள் பல திறத்தன. பாசம் நிறைந்த உறவுகளைக், கடமை தவறாத பணியாளர்களை, முறைதவறா மன்னர்களைச், சிறகடித்துப் பறக்கும் பறவைகளைக், கடலை மறக்காத ஆறுகளை எல்லாம் மையமாக வைத்து உவமம்  சொல்கிறார். இறுதியாகப் பற்றற்ற நிலையில் தான் விரும்பாச்  செல்வம் நிழலைப்போல் தன்னைத் தொடரும் என்று செல்வத்தையும் பெருமாளுக்கு உவமமாக்கியுரைக்கிறார்.

    பெருமாளைத் தாயாக்கிய ஆழ்வார்

    அரசியல் தலைவர்களில் தொடங்கி ஆண்டவன் வரை அனைவராலும் பயன்படுத்தப்படுகிற உவமம் தாயும் சேயும். தாய் அன்பின் வடிவம். தந்தை அறிவின் வடிவம். தாயன்புக்கு வரம்பில்லை. தந்தையின் அன்பின் வரம்பு வெளிப்படத் தெரிவதில்லை. தாய் குழந்தையை மறப்பதில்லை, இயலாது. வள்ளற்பெருமான் தன்னை  மகவாகவும் இறைவனைத் தாயாகவும் வைத்துப் பாடுகிறார்.

    “பெற்றதம் பிள்ளைக் குணங்களையெல்லாம்
    பெற்றவர் அறிவரே அல்லால்
    மற்றவர் அறியார் என்று எனை ஈன்ற வள்ளலே!”

    “பெற்றதாயை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
    …………………………………………………………………
    நற்றவத்தவர் உள் இருந்து ஓங்கும்
    நமசிவாயத்தை நான் மறவேனே!”

    என்றெல்லாம் வள்ளற் பெருமான் தன்னைச் சேயாகவும் இறைவனைத் தாயாகவும் உருவகித்தும் உவமித்தும் பாடுவதைப் போலவே குலசேகரரும் பாடுகிறார்.

    “அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள்தன்
    அருள் நினைந்தே அழுங்குழவி அதுவே போன்றிருந்தேனே” (688)

    ‘அரிசினம்’ என்பது அரிதாக வருகின்ற சினம் என்பது பொருள். ‘அளவுகடந்த சினம்’ என்பது பொருள். ‘பெற்ற தம் பிள்ளை’, ‘ஈன்ற தாய்’ என்னும் பெயரெச்ச அடைகள் எல்லாம்  அவர்தம் அருமை உணர்த்தி நின்றன. அவர் அவ்வாறு செய்யமாட்டார் என்பதாம்! எனவே இறைவனும் தம்மை வெறுக்காது அணைப்பன் என்பது கருத்து. ‘அம்மை நீ! அப்பன் நீ’ எனத் தாய்க்கு முதன்மை தந்து பாடிய அப்பர் நினைவுக்கு வருவார். இந்தப் பாட்டில் ஒரு நுண்ணியம் உணரப்படுகிறது. குழந்தை இரண்டு வகையாக அழுகிறது. அடி தாங்காமல் அழுவது ஒன்று. அடிக்கின்ற தாயின் அருள் வேண்டி மற்றொன்று. ‘அழுகை’ மாறாதது. ஆனால் உனக்கு வேண்டியது என் அழுகைதான் என்றால் நான் உன் அருளுக்காக அழுகிறேன் என்பது கருத்து. ‘மறந்தாலும்’, ‘அகற்றிடினும்’ என்னும் உம்மைகள் எதிர்மறை.

    கொண்டானை அன்றிப் பிறரை அறியாக் குலமகள்

    தமிழிலக்கிய உலகில் சேதாரமில்லாது சிந்தையில் நிற்கும் பாத்திரங்கள் இரண்டு. அவையிரண்டும் ஆண் பாத்திரங்கள். சிந்தையில் நிற்பதற்கு அவர்களின் ஒழுக்கச் சிதைவே காரணம். ஒருவன் இராவணன். இவன் இராமாயணத்தின் எதிர்நிலைப் பாத்திரம். மற்றொருவன் கோவலன். இவன் சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தலைவன். காப்பியத்தில் தலைவிக்கே முதலிடம் ஆதலின் இவனுக்குக் காப்பியத் தலைமையில்லை என்பதும் அறிஞர் சிலருடைய வாதம். இவ்விரண்டு பாத்திரங்களாலும் இவர்தம் மனைவியராகிய மண்டோதரியும் கண்ணகியும் வானுயர்ந்து நிற்கிறார்கள்.

    மண்டோதரியும் கண்ணகியும்

    கம்பன் படைத்த பாத்திரங்களுள் கம்பனையே படைத்த பாத்திரமாகி நிற்பவள் மண்டோதரி. சீதையைத் தேடி இலங்கை செல்லும் அனுமன் இராவணன் அருகில் உறங்கும் மண்டோதரியைச் சீதையென்று கருதி மயங்கினான் என்கிற அளவுக்கு மண்டோதரியின் பாத்திரம் உயர்ந்தது.

    “இன்ன தன்மையின் எரிமணி விளக்கங்கள்
    எழில்கெடப் பொலிகின்ற
    தன்னது இன்னொளி தழைப்புற துயில் உறு
    தையலைத் தகைவு இல்லாள்
    அன்னள் ஆகிய  சானகி இவள் எனஅயிர்த்து,
    அகத்தெழுதீ வெந்தீ துன்னும் ஆருயிர் உடலொடு சுடுவது
    ஓர் துயர் உழந்து”

    என்பது கம்பன் வாக்கு. மண்டோதரி இராவணனை எதிர்த்துத் தன் கருத்துக்களைக் கூறியதாக இராமாயணத்தில் பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இராவணனுக்கு வரவிருக்கும் பேரழிவை முன் உணர்ந்தே அவள் நிகழ்வுகள் அமைகின்றன. இந்திரசித்தன் மறைந்தபோது,

    “அஞ்சினேன் அஞ்சினேன் சீதையென்ற  அமிழ்தால் செய்த
    நஞ்சினால் இலங்கைவேந்தன் நாளைஇத் தகையன் அன்றோ?”

    என்று புலம்பிய மண்டோதரியைக் காணமுடிகிறது. மேற்கண்ட தரவுகளால் இராவணனைக் கண்டார்கள்  இகழ்ந்தாரன்றி மண்டோதரி இகழவில்லை. ஆனால் கோவலனைக் கண்டார்  இகழ்ந்தார்கள். கண்ணகியும் இகழ்ந்திருக்கலாம். ஆனால் இல்லற நெறி இழந்ததைத்தான் அவள் பெரிதாகக் கண்டாள் என்பதை அறிந்து கொள்ள முடியும். “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’  என்னும் தொடரில் அமைந்துள்ள ‘ஒழுக்கம்’ என்னும் சொல் அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஓம்புதல், துறவோர்க்கு எதிர்தல், விருந்தெதிர் கோடல் என்னும் இல்லற நெறிகளே.

    காப்பிய மகளிரும் குலசேகர ஆழ்வாரும்

    இராவணனும் கோவலனும் மிக உயர்ந்த பண்புகளைப் பெற்றிருந்தும் ஒழுக்கச் சிதைவு காரணமாக அவர்தம் பெருமையினை இழந்தனர். கண்டவர் இகழ்வது இருக்கட்டும் அவ்விரு காப்பியங்களைப் படிக்கின்றவர் இன்றைக்கும் வேதனைப்படுகிறார்கள் அவர்களை நினைத்து. இருப்பினும் அக்காப்பிய மாதர் இருவரும் தம் கணவன்மாரை வெறுத்தார் இலர். இராவணன் இறந்தவுடனேயே மண்டோதரியும் களத்திலேயே உயிர்விடுகிறாள். கண்ணகியோ கணவன் பழி துடைக்கிறாள். ‘போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ எனத் தன் மனைவியினாலேயே நோக்கப்பட்டவன் கோவலன். ஆழ்வாரின் ‘கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்’ என்ற தொடருக்குப் பொருத்தமானவர்களாகவே அவ்விரு பெண்களும் திகழ்கிறார்கள் என்பது கட்டுரையாளர் கருத்து.

    “கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
    கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்” (689)

    என்னும் உவமத்தில் வரும் ‘குலமகள்’ என்பது நுண்ணியமிக்க சொல்லாட்சி. இந்த இடத்தில் நல்லகுடிப் பிறப்பை மட்டும் அது குறிப்பதாகக் கொள்ளாமல் கணவனையன்றிப் பிற ஆடவர் மனத்திலும் புகாத உயரொழுக்கத்தைக் குறித்ததாகக் கொள்ளலாம். கண்டறிதல், கேட்டறிதல் என்னும் இருவகை அறிவில் எந்த  அறிவாலும் கணவனைத் தவிர பிற ஆடவரை அறியாதார் என்பது கருத்து. இகழ்வன என்னும் பன்மை வினையாலணையும் பெயர் கணவன் செய்த தொடர் நிகழ்வுகளைக் குறித்தது. ‘அத்தனையும் தாங்கி அவனையே கொண்டொழுகும் பத்தினியர் போலத் தானும் திருமாலையன்றி வேறொருவனை எண்ணேன்’ என்பதாம். ‘நீ கொண்டு ஆளாகியிலும்’ என்னுந் தொடர் மனைவியைக் கொண்டு செலுத்த வேண்டிய கணவன் அவ்வாறு செலுத்தாவிடினும் அவனை நம்பி வழிபடும் மனைவியைப்போல் தான் என்பதை உணர்த்தி நின்றது. ‘குலமகள்’ தன் கணவனை மட்டுமே அறிவாள் என்றதால் ஆழ்வார் பெருமாளையன்றிப் பிற தெய்வம் அறியார் என்பது குறிப்பு. இனி, இகழ்வன செய்யும் கணவனுக்குப் பெருமாள் உவமம் ஆனதால் ஆழ்வார் மனைவியாகிறார். எனவே இந்தப் பாட்டில் ‘கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்’ என்னும் துறைக்கருத்து இழைய, நாயக நாயகி பாவம் முன்னெடுக்கப்பட்டது என்க. இது வள்ளற் பெருமான் பாடிய ‘இங்கித  மாலையோடும் மகாகவி பாடிய கண்ணன் பாட்டோடும் ஒக்கும்.

    மன்னனை நோக்கும் மக்கள்  மருத்துவனை நோக்கும் நோயாளி!

    திருக்குறள் பொருட்பாலின் தலையதிகாரமே இறைமாட்சி என்பதாகும். நாட்டை ஆளுவது என்பது அதிகாரப் பீடம் என்பதை விட்டு மக்களுக்குத் தொண்டு செய்வதற்கான வாய்ப்பு என்பதைக் கருத வேண்டும். இது மன்னராட்சிக்கும் பொருந்தும் மக்களாட்சிக்கும் பொருந்தும். ஓச்சுதல் கடிது போலத் தோன்றினாலும் எறிவது மென்மையாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் காட்டும் மாட்சி. இறைமாட்சியுள் அமைந்த பத்து குறட்பாக்களில் முன்னவை ஐந்தும் மன்னனின் தகுதி பற்றியன. பின்னவை ஐந்தும் மன்னனின் பண்பு பற்றியன.

    1. காட்சிக்கு எளியன் கடுஞ்சொல் அல்லன்
    2. இன்சொலால் ஈத்து அளிக்க வல்லான்
    3. முறைசெய்து காப்பாற்றும் மன்னன்
    4. செவிகைப்பச் சொல் பொறுக்கும் வேந்தன்
    5. கொடை, அளி, செங்கோல், குடியோம்புபவன்

    முந்தைய தகுதிகளை அதிகாரத்தை மையமாக்கி ஒரு மன்னன் செயல்படின் மக்கள் துன்புறுவர்.. பிந்தைய பண்புகளை, மக்களை மையமாக்கி ஒரு மன்னன் செயல்படின் மக்கள் இன்புறுவர். முன்னது நடக்கும் காலத்திலும் அம்மக்கள் பிந்தைய காலம் வராதா என ஏங்கி நிற்பர். அதனைத்தான் குலசேகர ஆழ்வார் உவமமாகப் பயன்படுத்துகிறார்.

    “தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
    கோல்நோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே” (690)

    மன்னன் மக்களுக்குச் செய்கிற துயர் அதிகாரத்தினால் வருவது. இறைவன் அடியவருக்குத் தரும் துன்பம் அவனைப் பக்குவப்படுத்துவது. அல்லது வினைவழி வருவது. கொடுங்கோல் ஆட்சி செய்யும் மன்னனின் அன்பையே மக்கள் எதிர்நோக்குவர். அதுபோலத் திருவடிப் பேறு வேண்டி நிற்பார் இத்தகைய துன்பங்களையும் இன்னல்களையும் பொருட்படுத்தாது அவற்றின் நோக்கமறிந்து செயல்படுவராதலின் இடர் தரும் இறைவனையே எதிர் நோக்குவர் என்பதாம். துன்பம் தருபவனையே எதிர்நோக்கும் இரண்டு சூழல்களில் ஒன்று நாட்டை ஆளும் மன்னனிடம் அன்பை எதிர்நோக்குவது. இரண்டு சிகிச்சையில் துன்பம் தரும் மருத்துவனையே நம்பி அவனையே எதிர்நோக்குவது.

    “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
    மாளாத காதல் நோயாளன் போல்” (691)

    எதிர்வினையைக் கருத்திற் கொள்ளாது மக்களை வாட்டும் மன்னனை ஒதுக்காமல் அவனை அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து வாழும் மக்களை உவமமாகச் சொன்ன ஆழ்வார் இந்தப்பாட்டிலும் ‘கொடுமை’ செய்யும் மருத்துவனையே நேசிக்கும் நோயாளியை உவமமாக்குகிறார். இந்தப் பாட்டில் ‘அறுப்பது’ ஒரு வினை. ‘சுடுதல்’ மற்றொரு வினை. அறுவைச் சிகிச்சை என்பது இவ்விரண்டும் இணைந்ததே. நோயாளி தன் உடல் அறுக்கப்படும்போதும் அல்லல் உறுகிறான். அறுத்த இடத்தில் சுடப்படுகிறபோதும் அல்லல் படுகிறான். எனவே ‘அறுத்து’ என்பது எச்சமாகாது தனித்த வினையைக் குறித்தது.

    நோய் தீர்ந்தவுடன் மருத்துவனை மறந்துவிடுதல் இயல்பு. ஆனால் இந்தப் பாட்டில் நோய் தீராமலேயே அவன்பால் தீராத காதல் உடைய நோயாளன் என்கிறார். அறுவைச் சிகிச்சை உடலுக்கானது. அதற்குத் தீர்வு காணும்வரை அவன்பால் வைத்திருக்கும் அன்பு குறையாது. எனவே அது நீளும். அதனால் மாளாத அன்பு என்றார். பிறவி நோய் தீர்ந்து திருவடிப்பேற்றுக்காக இறைவன் தரும் சோதனைகள் தாங்கொணாவாக இருப்பினும் அவன் மேல் கொண்டிருக்கும் அன்பு ‘மாளாது’ என்பது பெறப்படும். அடித்து மேய்ப்பவனே அணைத்து மீட்பான் என்பது கருத்து.

    தொடர்ந்து சுட்டெரிக்கும் வேறொரு பொருளையும் சுட்டெரிக்கும் அதனையே விரும்பும் மற்றொரு பொருளையும் இணைத்து உவமம் கூறுகிறார் ஆழ்வார். கதிரவனுக்குத் தாமரை மலரும் என்பது இயற்கையும் கவிமரபும் ஆகும். இந்த மரபுகள் கவியின்பத்திற்காக மாற்றப்படுவது உண்டு. ‘சுடர் மின்னற் கண்டு தாழை மலர்வது போலே உனைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே’ என்பதும் ‘தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க’ என்பதும் மரபு காத்த திரையிசைப்பாடல் வரிகள்.

    “செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
    அந்தரஞ்சேர் வெங்கதிரோற்கல்லால் அலராவால்” (693)

    கதிரவன் கனன்றாலும் தாமரை அதற்கே மலர்வது போலத் தானும் பெருமாளுக்கே மகிழ்கிறார் என்பது கருத்து. கொடுங்கோல் மன்னனால் வரும் துன்பத்திற்குக் காரணம் ஏவுதற் கருத்தா. மருத்துவனால் வரும் துன்பத்திற்குக் காரணம் இயற்றுதற் கருத்தா. இவையிரண்டிலிருந்தும் மாறுபட்டுத் துன்பம் தருவது கதிரவன். அது அந்தரத்தில் நிற்கிறதேயன்றிச் சுற்றாது சுழலாது. ஆனால் அதன் ஒளிக்கதிர்கள் சுட்டெரிக்கும். சினைவினை முதல்வினையாகக் கருதப்படும். காணாதார் தரும் துயரமும் கண்டார் தரும் துயரமும் காண இயலாதன தரும் துயரமும் என எதுவாயினும் தாங்கிக் கொள்வது போல இறைவன் எத்தகைய துன்பத்தைக் கொடுத்தாலும் அவனுடைய அருளையே வேண்டுவன் என்பதாம்.

    மழைநோக்கும் பயிர்கள்

    கடவுள் வாழ்த்து என்னும் தலையதிகாரத்தைத் தொடர்ந்து திருவள்ளுவர் எழுதிய அதிகாரத்திற்குப் பெயர் ‘வான் சிறப்பு’. மழையினது சிறப்பு என்பது பொருள். மழை இல்லாவிடின் உலகியல் இல்லை. உலகியல் என்பது மக்களையும் ஞானிகளையும் உள்ளடக்கியது. இவர்களைப் பசியடக்கும். எனவே உலகியல் நடக்க வேண்டுமெனின் பசியடங்க வேண்டும்.  பசியென்னும் நோயைப் பற்றியும் அது தணிக்கும் வாயில் பற்றியும் தணித்தவர் அடையும் பெருமை பற்றியும் பேசாத இலக்கியங்கள் எண்ணிக்கையில் குறைவு. நோய் என்பது உடலுக்கு வருவது. பிணி என்பது உயிருக்கு வருவது. உடலுக்கு வரும் நோயை உயிருக்கு ஆக்கியது அதன் கொடுமை பற்றி. இறுதியாக வள்ளற்பெருமானைத் தொடர்ந்து உணர்ந்து பாடியவர் மகாகவி. ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்’ என்பது அவர் வாக்கு. அந்தச் சோற்றுக்குக் காரணமானது பயிர். பயிர் தழைக்க நீர் வேண்டும். அந்த நீர் வானின்று வருவது. பயிர் இருவகைப்படும். வான்நீரின் பல்வகைப் பரிமாணங்களாகிய ஏரி, ஆறு, குளம் என்பவற்றால் உயிர்தழைப்பன ஒன்று. வான் மழையை மட்டுமே நம்பியிருப்பன மற்றொன்று. முன்னது நன்செய் என்றும் பின்னது புன் செய் எனவும் வழங்கப்படும். நன்செய்க்கும் மழைதான் மூலமெனினும் ‘வானம் பார்த்த பூமி’ என்னும் சொல்வழக்கு புன்செய்ப் பயிரையே குறிக்கும். வானத்தை நோக்கியே வளரும் புன்செய்ப் பயிரை இறைவனின் அருள் வேண்டி நிற்கும் ஆழ்வார் தனக்கு உவமமாக்கியுரைக்கிறார்.

    “எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
    மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்று அவைபோல” (694)

    இந்தப் பாட்டில் வானம் பயிர்களைக் காக்க வேண்டியது கடமை என்பதுபோலப் பாடுவதைக் காணலாம். வானம் மழைபெய்ய மறந்துவிட்டதாகக் கூறும் நுண்ணியம் உணரத்தக்கது. மழைபெய்யாவிடினும் அம்மழையையே எதிர்நோக்கும் புன்செய்ப் பயிராகத் தன்னை உருவகித்துக் கொள்கிறார். மாமுகில் என்னும் உரிச்சொற்றொடரில் உள்ள மா என்பது முகிலுக்கு அடையாகி நின்று இறைவனின் அளப்பரிய பேரருளைக் குறிப்பாகச் சுட்டியது.  உவமத்திற்கான அடைமொழிகள் பொருளுக்கும் ஆகிவரும் என்னும் உவமக் கொள்கைக்கு அரண் சேர்ப்பது.

    போக்கிடமின்றிப் புலம்பும் குலசேகரர்

    ‘திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி இளைத்தேனே’ என்பார் பாரதி. உய்யும் வழி ஏதுமின்றி மானுட உயிர்கள் வழி காணாது தவித்து இறுதியாகத்தான் இறைச்சிந்தனை வரப்பெற்று (அதற்கும் ஊழ் இருக்க வேண்டும். அவனருளாலே அவன்தாள் வணங்கி என்பது திருவாசகம்) இறைவனை நோக்கித், தம் வழியில் நடக்கத் தொடங்குகின்றன.

    “தொக்கு இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
    புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவை போல” (695)

    உயிர்கள் ஆறெனின் இறைவனே கடல். ஆறுகள் கடலை நோக்கிச் செல்வது இயல்பு. இந்த இயல்பு மாறினாலோ மாற்றப்பட்டாலோ உட்படுத்தினாலோ உலகியல் வாழ்க்கை தடம் புரளும். நீர்வழித்தடங்களைத் தடுக்கக் கூடாது என்பது நீதிமன்ற ஆணை. உயிர்கள் பிறப்பது இறப்பதற்காக. பிறப்புக்குப் பயணம் கிடையாது. ஆனால் இறப்புக்குப் பயணம் உண்டு. அந்தப் பயணம்தான் மானுட வாழ்வு. இந்த வாழ்வின் குறிக்கோள் பிறந்த இடத்தையே சேர்வது. பிறந்த இடம் என்பது இறைவன் திருவடி. உலகியல் என்னும் மாயை உயிர்களின் வழித்தடத்தை மறைக்கும் திரைகள். உயிர்கள் தோன்றுகிற இடத்தையும் இறைவன் கோயில் கொண்டிருக்கும் இடத்தையும் ‘கருவறை’ என்ற சொல்லாலேயே குறிக்கும் நுண்ணியம் இதுதான். தன்னை ஆறாக உருவகித்துக் கொள்ளும் குலசேகரர்  இறைவனாகிய கடலன்றி வேறு போக்கிடம் காணாது அதனையே தன் உயிர்க்கான புகலிடமாகக் கொள்கிறார் என்பது கருத்து.

    உவமத்தை இன்னும் விரிவுபடுத்துகிறார் ஆழ்வார். ஆறு கடல்வழி தெரிந்து அதனுள் கலக்கும். ஆனால் கடலுக்குள் சென்றுவிடின் கரை தெரியாது. தன்னை ஆறாக உருவகப்படுத்திக் கொண்டவர் தொடர்ந்து கடற்பரப்பில் சென்ற திசைமாறிய பறவையாக உருவகித்துக் கொள்கிறார். பிறவியைப் பெருங்கடல் என்றார் திருவள்ளுவர். ஒரு பிறவி முந்தைய பிறவியின் காரியமாகவும் வர இருக்கும் பிறவிக்குக் காரணமாகவும் கரையின்றி வருதலின் பிறவியைப் பெருங்கடல் என்றார். இதற்குக் கரையில்லை. இதனை உள்வாங்கிய ஆழ்வார் பாடுகிறார்.

    “எங்கும்போய் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேகும்
    வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே” (682)

    வங்கம் என்னும் பலபொருள் ஒரு சொல் ஈண்டு நாவாயைக் குறித்தது. நாவாயின் உச்சியில் இருக்கும் ஒரு பகுதிக்குக் கூம்பு என்று பெயர். முக்கோண வடிவில் கொடிமரத்தின் உச்சியில் இருக்கும் அந்தக் கூம்பினைப் பிடித்துக் கொண்டாலேயே கப்பல் பயணம் கைகூடுவதைப் போல இறைவனாகிய கூம்பைப் பிடித்துக் கொள்ளும் புத்திசாலிப் பறவையைத் தனக்கு உவமமாகக் கூறிக் கொள்கிறார் ஆழ்வார்.

    உவமத்தின் உச்சம்

    அருவப்பொருளை அருவப்பொருளுக்கே உவமமாக்கிக் கூறுவது தமிழ்க் கவிதைகளில் காணப்படும் நுண்ணிய உவமக் கொள்கையும் கோட்பாடும் ஆகும். இது முந்தைய கட்டுரைகள் பலவற்றில் சொல்லப்பட்டது. ஒருவனுடைய நிழல் அவனையே தொடர்ந்து சென்று அவன் காலடியிலேயே தங்குவதுபோல அவன் செய்த தீவினைக்கான பயன் அவனையே சென்று அடும் (208) என்பது வள்ளுவம்! இதனை வேறுமாதிரியாகவும் கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள். நிழலை நீ புறந்தள்ளினால் அது உன்னைத் தொடரும் அதுபோலச் செல்வத்தை நீ மனத்தால் புறந்தள்ளினால் அது உன்னைத் தொடரும் என்றும் பாடியிருக்கிறார்கள். கணவனே எல்லாம் என்றிருக்கும் மனைவி தன்னை நிழலாகப் பாவித்து ‘எங்கெங்கே போனாலும் நிழல்போகும் தன்னோட எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட’ என்னும் திரையிசைப்பாடல் நிழலை உறவுக்கோணத்தில் பார்க்கிறது. இந்தப் பின்புலத்தில் குலசேகர ஆழ்வார் பாடல் நோக்கப்படுகிறது.

    “நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
    தன்னையே தான் வேண்டும் செல்வம்போல்” (696)

    உலகிலேயே அழியாத பொருள் இறைவன். தோற்றம் இல்லாததால் அழிவும் இல்லையாயிற்று. அதனால் அது நிலைபேறுடையதாயிற்று. நில்லாதவற்றை நிலையென்று நம்பும் புல்லறிவுக்கும், பொருள் அல்லவற்றைப் பொருள் என்று நம்பும் அறியாமைக்கும் இது புலப்படுவதில்லை. அப்படியானால் நிலையானது எது? பொருள் எது? நிலைப்பவை மட்டும் நிலைக்கும் என்பதை உணர்வது ஞானம். நிலைப்பது எது? இறைவன் மட்டுமே! எனவே நிலைத்த செல்வமாகிய இறைவனை நினைத்துத் தொடர்ந்தால் நிலையாத செல்வம் இவனைத் தொடருமாம். அந்தச் செல்வத்தைப்போல ஆழ்வார் இறைவனைத் தொடர்கிறாராம். எவ்வளவு ஆழமான சிந்தனை? ஆழமான உவமம்?

    நிறைவுரை

    சைவ நாயன்மார்களின் அரற்றலைப் பாசுரங்களைப் பொருத்தவரையில் பெருமாள் திருமொழியிலேயே செவிமடுக்க முடிகிறது. வித்துவக்கோட்டம்மா என்னும் பகுதியில் அவர் நிரல்படுத்தியிருக்கும் உவமங்கள் குடிமக்கள், நோயாளி, குழந்தை, குலமகள், பயிர், ஆறு, பறவை எனப் பல திறத்தன. இவற்றின் கொடுமுடியாகத் திகழ்வது வேண்டாத  செல்வமாகும். ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’ என்பது நம்மாழ்வாரின் கொள்கையாதலின் அதனை வழிமொழிவதைப் போல அமைந்த உவமம் இது. நம்மால் துறக்கப்பட்ட பொருள் நம்மைத் தேடிவரும் என்பது உலகியல் நம்பிக்கை. எல்லாருக்குமாக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை. இதன் ஆழமான நுண்ணியத்தையும் விரிவான அழகியல் சித்திரிப்பையும் பெரியவாச்சான் பிள்ளையின் பிரபந்த உரை கண்டு தெளியலாம்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 43

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 43

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமத் திருவாசகம் – 2

    முன்னுரை

    காதல் பேசும் அகத்திணை இலக்கியங்கள், அதுவல்லாத புறத்திணை இலக்கியங்கள் ஆக இவற்றில் எல்லாம் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும் இயல்பாகவே வேற்றுமை நிலவுவதை அறிய முடியும்.  ‘மாறிபுக்கு இதயம் எய்தும் காதல் வெளிப்பாட்டுக்கும்’, ‘பகை முடித்து நகை முழக்கும்’ புறவெளிப்பாட்டுக்குமான உவமங்கள் பெரும்பாலும் அழகியல் நோக்குடையவை. எடுத்துக்காட்டாக இராமன் கான் செல்கிறபோது இருந்த அவனுடைய முகத்தினைக் கம்பர் ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையோடு’ ஒப்பிடுகிறார். இறைவனை வழிபடுகிற காலத்துப் புற உறுப்புக்களின் நிலையைக் கூறும் மணிவாசகப் பெருமான் ‘கரமலர் மொட்டித்து இருதயம் மலர’ என நிரல்படுத்துகிறார். முரண்படுத்துவார். இரண்டிடத்திலும் உவமமாக வந்தது மலரேயெனினும் இரண்டின் தாக்கமும் வெவ்வேறாக இருப்பதைக் கற்பார் உணரலாம்.

    உவமங்களோடு உறவாடும் உள்ளம்

    முன்னுரையில் பக்தியுணர்வுக்கான வெளிப்பாட்டில் அமையும் உவமப்பாங்கு அகப்புறப்பொருள்களை விளக்கும் உவமங்களின் வேறாகி நிற்கும் எனச் சொன்னோம். அதனை உறுதி செய்வதுபோல மணிவாசகப் பெருமான் பாடுகிறார்.

    “தழலது கண்ட மெழுகதுபோலத் (1)
    தொழுது உளமுருகி அழுது உடல் கம்பித்து
    ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
    கொடிறும் பேதையும் கொண்டது விடாது எனும்
    படியே (2) ஆகி நல் இடையறா அன்பிற்
    பசுமரத்தாணி அறைந்தாற் போலக் (3)
    கசிவது பெருகிக் கடலென (4) மறுகி”

    எழுவரிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நான்கு உவமங்களும் தொழுதும் உள்ளம் உருகியும் அழுதும் நடுங்கியும் ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் என்னும் மெய்ப்பாடுகளுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன என்பதை அறிதல் வேண்டும்.

    “சிறுமையென்று இகழாது திருவடி இணையைப்
    பிறிவினை அறியா நிழலது போல (1)
    முன்பின்னாகி முனியாது அத்திசை
    என்பு நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி
    அன்பெனும் ஆறு கரையது புரள (2)
    நன்புலன் ஒற்றி நாத என்று அரற்றி
    உரைதடுமாறி உரோமம் சிலிர்ப்பக்
    கரமலர் (3) மொட்டித்து இருதயம் மலரக்
    கண்களி கூர நுன் துளி அரும்பச்
    சாயா அன்பினை நாடொறும் தழைப்பவர்
    தாயே யாகி (4) வளர்த்தனை போற்றி”

    என்னும் வரிகளிலும் உணர்ச்சிப் பெருக்கிற்கு ஏற்ப உவமங்கள் அமைந்துள்ள பாங்கினை அறியலாம். முகத்தை ‘மலர்’ என்பதற்கும் கரத்தை ‘மலர்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. முன்னது மலர்ச்சியைக் குறித்தது. பின்னது மென்மையைக் குறித்தது. இது சாயா அன்பின் விளைந்த பக்தியாதலின் நிகழாத ஒன்றினை உவமமாக்குகிறார் மணிவாசகப் பெருமான். அதாவது மொட்டு மலருமேயன்றி மலர் மொட்டாகாது, மலர் மொட்டாகி என்பதனால் மெய்வணக்கமும் மொட்டாகிய இதயம் மலர்வதால் உள்நெகிழ்ச்சியும் பெறப்பட்டன. ‘அகம் நக’ என்னும் வள்ளுவத்திற்கு மணிவாசகர் எழுதிய விரிவுரையாகவும் இதனைக் கருத முடியும். ஒன்று மலர வேண்டும். மற்றொன்று குவிதல் வேண்டும். இரண்டும் இணையானது அன்று. ஆனாலும் இதய மலர்ச்சியின் குறியீடாகக் கரமலர் குவிவதைக் கொள்ளலாம்.

    புளியம் பழமான மணிவாசகப் பெருமான்

    சொற்களுக்கான நேரடிப்பொருள் வேறு. இலக்கிய நயம் பக்தியுணர்வு தோன்றுமாறு உள்ளீடாக நிலவும் பொருள் வேறு. நெருஞ்சிச் செடியில் பழமும் இருக்கும் முள்ளும் இருக்கும். தலைவியின் பாதத்தின் மென்மையைக் கூறவரும் தலைவன் அனிச்சப்பூவும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் என்கிறான். இங்கே நெருஞ்சிப் பழம் என்றது பழத்தைக் குறிக்காது முள்ளைக் குறித்தது காண்க. இந்த நுட்பத்தை மணிவாசகப் பெருமான் கையாள்கிறார்.

    “அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை
    புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி
    எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ
    அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.”

    என்று ஒரு பாட்டு ‘ஆசைப்பத்து’ என்னும் பகுதியில் வருகிறது. “ஆன்மாவும் உடம்பும் வேறு வேறு என்று எண்ணாது இரண்டும் ஒன்றுதான் என்று எண்ணியிருந்தவன் நான். அத்தகைய அறியாமையில் நான் உழன்ற நேரத்திலும் எளிவந்து என்னை ஆண்ட பிரான் நீ! அவ்வருமை கூறி உன்னையழைக்க நான் விரும்பினேன்’ என்கிறார் மணிவாசகர்.  புண்ணிறைந்த உடம்பின் இழிவை முதலடியில் பேசி, இழிவான உடம்பினிடத்துப் பற்றுக் கொண்டு இருந்ததாகக் கூறுகிறார். அந்தப் பற்றுக்கூட, ஆன்மா என்றும் உடம்பு என்றும் தனித்தனியே பிரித்துக்காண முடியாதபடி ஒன்றியிருந்து விட்டது. அதனையே ‘புளியம்பழம் ஒத்திருந்தேன்’ என்கிறார். ஆனால் உண்மையில் அவர் கூறவந்தது புளியங்காய் ஒத்திருந்தேன் என்பதுதான். பழம் என்ற சொல் இங்குக் காய் என்ற பொருளில் அமைந்துள்ளது. ‘பழம்’ என்ற சொல்லையே வைத்துக்கொண்டு பொருள் செய்தால், இந்த உடம்போடு எவ்விதத் தொடர்பும் பற்றுமில்லாமல், ஓட்டில் ஒட்டாத புளியம்பழத்தைப் போல் இருந்தேன் என்று அழகாக பொருள் கூறலாம். ஆனால், இவ்வாறு பொருள் கூற முடியாமல் தடுப்பது அடுத்துவரும் இருந்தும் என்ற சொல்லாகும். புளியம் காயைப்போல, உடம்பு, ஆன்மா என்ற வேறுபாடின்றி நான் ஒட்டிக்கொண்டிருந்தும்கூட அதுபற்றிக் கவலைப்படாமல் எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என்ஆர் அமுதே’ என்கிறார். ‘நீ ஆட்கொண்ட பின்பும், இந்த உடம்பை விடாமல் பற்றிக்கொண்டு நிற்கின்ற நான், பெரிதும் இரக்கத்திற் குரியவன் என்று நீ சொல்ல வேண்டும். அச்சொல்லை நான் கேட்க ஆசைப்பட்டேன்’ என்கிறார்.

    அழல்சேர் மெழுகு

    அன்பு உள்ளத்தின் இயல்பு. அறிவு மூளையின் தேடல். முன்னது உருக்கத்திற்கு உரியது. பின்னது சிந்தனைக்கு உரியது. மானுடம் உள்ளத்தின் வழி இயங்குவது. பாசம், துடிப்பு, ஆதங்கம், அன்பு, அருள், நேயம் என்பனவெல்லாம் அறிவு சார்ந்தன அல்ல. அவை மனம் சார்ந்தவை. ஆதலின் மணிவாசகர் உள்ளிட்ட அருளாளர்கள் பாடும் பாடல்களில் இத்தகைய உணர்வுகளை ஒப்பிட்டும் உறழ்ந்தும் நோக்கக் கூடிய உவமங்களே பெரும்பாலும் காணப்படுகின்றன.

    “அழலுறு மெழுகாம் என்பராய் நினைவார்”

    “அழல்சேர் மெழுகொப்ப ஐயா வென்றன் வாயாலரற்றி”

    “அன்பா மனமா யழல்சேர்ந்த மெழுகே யன்னார்” 92

    அழல் கண்டு உருகும் மெழுகாய் ஆண்டவனை எண்ணி உருகும் அடியார்கள் என்பதாம்.  இத்தகைய உருக்கத்திற்கு வெப்பத்திற்கு உருகும் பாறை வெண்ணெய் பொருந்தாமல் போய்விடும். மெழுகின் உருக்கம் நெருப்போடு கலந்துவிடும். செருக்கழிந்த உருக்கத்தின் அத்வைத நிலை இது. அவன் அன்பை வேண்டி நிற்பார் அடையும் நிலையும் இதுவே.

    திருவாசகத்தில் கடல்

    ‘நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று! நீரினும் ஆரளவின்று’ எனக் காதலின் ஆழத்திற்குக் கடலைச் சொன்னவர் உண்டு. திருவள்ளுவர் ‘அடங்கியான் தோற்றத்தினை மலைக்கும், பயன்தூக்காது உதவி  செய்தவரை கடலுக்கும் காலத்தினால் உதவியவருக்கு நிலத்தையும்’ ஒப்பிடுகிறார். இவைகளெல்லாம் அறிவுசார்ந்த அளவைகள் என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும். இவற்றுள் கடலை அளப்பரிய உருவகமாகக் கொள்கிறார் மணிவாசகர்.

    “கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம் விட லரியேன்”

    “கடலின் திரையது போல்வரு கலக்கம்”

    “கடலே யனைய ஆனந்தம்”
    இங்கே சுட்டப்பட்ட உவமங்களுள் ‘கடலை நாய் நக்க முயன்றதுபோல’ என்பது மரபு சார்ந்த உவமம். கம்பன் சொன்ன அது அவையடக்கத்திற்குச் சொல்லப்பட்டது. இங்கே பெருமானின் அருளை முழுமையாக ஏற்க இயலாமைக்குச் சொல்லப்பட்டது. இனித், துன்பத்திற்கும் இன்பத்திற்கும் கடலையே உருவகப்படுத்துவது தமிழ்க்கவிதைக் கொள்கை.  ‘துன்பக்கடல்’ என்பதும் ‘இன்பக்கடல்’ என்பதும் இலக்கிய வழக்கு. ‘பிறவிப் பெருங்கடல்’ என்பது  திருவள்ளுவர் செய்த உருவகம்.

    திருவாசகத்தில் தாயும் பசுவும்

    இறைவன் தாயும் ஆனவனாக இருப்பதாலே அடியார் அனைவர்தம் பாட்டிலும் தாய் மகவு என்னும் உறவை முன்னிலைப்படுத்தி அதற்கு இணையாகத் தாய்ப்பசுவையும் கன்றினையும் உவமவாக்கம் செய்வது பெருவழக்கு. ‘கற்றா’ என்னும் சொல் ‘கன்றையுடைய ஆ’ என்றே பொருள்படும். ஏனைய விலங்குகளை இவ்வாறு அதன் கன்றோடு சேர்த்து வழங்குவது உண்டா என்பது சிந்திக்கத்தக்கது.

    “ஆவாகி ஆவினில் ஐந்துமாகி
    அறிவாகிஅழலாகி அவியுமாகி
    நாவாகி நாவுக்கோர் உரையுமாகி
    நாதனாய்வேதத்தினுள்ளோனாகி
    பூவாகிப் பூவுக்கோர் நாற்றமாகிப்
    புக்குளால்வாசமாய் நின்றானாகித்
    தேவாதி தேவர் முதலுமாகிச்
    செழுஞ்சுடராய் சென்றடிகள் நின்றவாறே”

    பசுவும், பசுவினிடத்தில் தோன்றும் ஐந்து பொருட்களாகவும் (பால், தயிர், நெய், கோசலம், கோமியம்), வேள்வித் தீயாகவும், வேள்விகளைச் செய்வதற்குரிய அறிவாகவும், அந்த வேள்வியினில் இடப்படும் பொருட்களாகவும், வேள்விக்கான மந்திரங்களைச் சொல்லும் நாவாகவும், சொல்லப்படும் மந்திரங்களாகவும், மந்திரங்களின் பொருளாகவும், பயன்படுத்தப்படும் பூக்களாகவும், பூக்களின் மணமாகவும் மணமாக மலர்களுடன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையாகவும், வேள்விகளால் தொழப்படும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் செழுஞ்சுடராய் எம்பெருமான் எங்கும் பரவி நிற்கிறார் என்ற பொருளமைந்த இந்தப் பாட்டில் தலைமையாகப் பாடப்பட்டிருக்கும் பொருள் பசு என்பதைக் காணலாம். அடியவர்களின் உள்ளம் இறையருள் வேண்டும் ஏக்கம் நிறைந்தது. உயிர்கள் பரபிரம்மம் ஆதலின் அவனிடமிருந்து பிரிந்து வந்த இவை மீண்டும் அவனிடமே சேர்வதற்கான முயற்சியே மானுட வாழ்வு. கன்றின் பிரிவு எல்லாத் தாய்மையையும் கலங்கிக் கதறச் செய்யும்  எனினும் பசு பெரிதும் கலங்கி நிற்கும்.

    “கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
    கன்றை நினைந்தெழு தாயென வந்தகணக்கது வாகாதே”

    “கற்றா மனம் போல் கதறியும் பதறியும்”

    பதி, பசு, பாசம் என்பது சைவசித்தாந்தத்தின் அடிப்படை. பசுவாகிய உயிர், தன்னை மூடியிருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மாசு நீங்கிப் பதியாகிய பரம்பொருளை அடைவதே மானுடப் படைப்பின் நோக்கம் என்பதைச் சுருங்க உரைக்கும் சிவஞான போதம் அது. பாசத்தின் நீங்குவதற்கும் இறைவன் அருள் தேவைப்படுமாதலின் அதனை வேண்டுவதும் வேண்டிப் பெறுவதுமே பன்னிரு திருமுறைகளின் உள்ளடக்கம். வேண்டுவதைக் கொடுப்பவர்களில் தாயே முன்னிற்பாள் என்பது உலகியலாதலின் மணிவாசகப்பெருமான் தமது திருவாசகத்தில்,

    “நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!”

    என்று இறைவனைத் தாயாக்கிப் பாடுகிறார். ‘பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து’ என்று பிறிதொரு இடத்திலும் கூறுவார். தாயின் சிந்தை செயல் அனைத்தும் தன் குழந்தையைப் பற்றியே இருத்தலின், அக்குழந்தைக்குப் பால் ஊட்டும் காலமும் அவள் கருத்திலிருக்க, அக்காலமறிந்து ஊட்டுவாள் என்பதனால் ‘பால் நினைந்தூட்டும்’ என்றார். ஈண்டு இறைவனை அத்தாயினும் என உறழ்ந்து கூறுவதால் இறைவனின் மேன்மை புலப்படும். ‘வேண்டத்தக்கது அறிவோய’’ என இறைவனைப் பரவியதும்  அவன் தாயினும் மேம்பட்டுத் திகழ்வது நோக்கியே!. இவ்வாறு இறைவனைத் தாயாகவும் தன்னைக் குழந்தையாகவும் உவமித்துப் பாடும் இடங்கள் திருவாசகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.

    “உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
    கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
    குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே
    கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே”

    என்னும் பாடலில் கற்றாவை உவமமாக்கியிருக்கிறார் மணிவாசகர். ஆவிற்கு மனம் உண்டு என்பதும் அதுவும் கசிந்து உருகும் இயல்பினை உடையது என்பதும் மணிவாசகர் கண்ட நுண்ணியம். மூளையை வளர்க்கும் வெறுங்கல்வியைவிட மூலத்தை உணரும் அனுபவக் கல்வியையே மணிவாசகர் முன்னெடுக்கிறார். கற்றாரை யான் வேண்டேன் என்பதன் பொருள் அதுதான். அனுபவக்கல்வி கிட்டிவிடுமாயின் கற்பன தானே  அமையும் என்பதாம். அந்த அனுபவம் அறிவினால் வராது. அழுதால் வரும். ‘வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ என்பதும் அது.

    “கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் அன்பரெலாம்
    காணக் காட்டும்
    என்றுடைய நாயகனே! எல்லாம் செய்வல்லவனே!
    இலங்கும் சோதி
    மன்றுடைய மணவாளா!மன்னவனே! என்னிருகண்
    மணியே! நின்னை
    அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணை உன் மேல் ஆணை உன்மேல்
    ஆணை ஐயா!

    என்று அருட்பிரகாச வள்ளலாரும் பசுவை  உவமித்திருப்பது காண்க.

    மணிவாசகர் கண்ட மாற்றுத் திறனாளி

    நாய்க்கு அடுத்தபடியாக, வாதவூரடிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் உவமை -விலங்கு பசுவாகும். தமிழ் மக்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப் பிணைந்து இருப்பதல்லவா பசு! அமைச்சராக இருந்தபோதும், அக்காலச் சூழலுக்கு ஏற்ப, அவரது வீட்டில் நிறைய பசுக்கள் இருந்திருக்க வேண்டும் என்பதும் அவற்றை அவர் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும் என்பதும் அவரது உவமைகளிலிருந்து தெரிகிறது.

    ஒரு பசு மந்தை மேய்ந்துவிட்டு வீடு திரும்புகின்றது. அவற்றில் ஒன்று குருடு. மற்ற பசுக்களோடு அதுவும் நடந்து வருகிறது. வீட்டை நெருங்கியதும் பகல் முழுவதும் கன்றைப் பிரிந்திருந்த பசுக்கள் தத்தம் கன்றைக் கண்டவுடன் பெருங் குரலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இந்தக் குருட்டுப் பசு தன் கன்றைக் காணமுடியாவிட்டாலும் மற்ற பசுக்கள் மிலைப்பதால் (கத்துவதால்) தானும் அவற்றுடன் சேர்ந்து மிலைக்கிறதாம்.

    மெய்யடியார்கள் சிவபெருமானின் பக்தியில் தோய்ந்து ஆனந்தமடைந்து அவன் புகழைப் பாடுகின்றனர். மணிவாசகரோ தனக்கு உண்மையான பக்தி இல்லை என்று கூறிக்கொள்கிறார். (யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்) ஆனால் மற்ற மெய்யடியார்கள் சிவன் புகழ் பாடும்போது, குருட்டுப் பசு மிலைப்பது போலத், தானும் பாடுவதாகக் கூறிக்கொள்கிறார்.

    “ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்தாங்கு
    உன் தாளிணை அன்புக்கு
    ஆரா அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே.”

    பக்தி மலையின் உச்சியில் நின்றுகொண்டு அவர் இவ்வாறு தன் அன்பு பொய் என்று கூறிக்கொள்வது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இலக்கியங்களுள் பக்தி இலக்கியத்தைப் பற்றிய மதிப்பீடு எவ்வாறிருப்பினும் இந்த உவமத்திற்கு எந்த இலக்கிய உவமமும் ஈடாகுமா என்பதைக் கற்பார் சிந்திக்க வேண்டும்.

    “சீரேறடியார் நின்பாதம் சேரக்கண்டும் கண்கெட்ட
    ஊரேறாய் இங்கு உழல்வேனோ?”

    என்று பின்னும் கூறுவார் மணிவாசகர்.

    ஆள்வார் இலா மாடும் நுந்து மாடும்

    திருவாசகம் முழுவதும் ஊடுருவி நிற்பது பக்தியுணர்ச்சி ஒன்றே. இறைவனின் பெருமையையும் தன் சிறுமையையும் ஒருங்கே காட்டி, அத்தகைய பெரியோன் இவ்வளவு அற்பனான தன்னையாண்டுகொண்ட கருணைத் திறத்தினை வியந்து, அச்சிவானந்தத் தேனை மீண்டும் பருகத் துடிக்கும் ஆவலே  திருவாசகமாகப் பரிணமித்தது. நெகிழ்ச்சியும் பாசமும் துடிப்பும் கண்ணீரும் ஆகிய அகப்புற மெய்ப்பாடுகளுக்கேற்பவே உவமங்களும் அமைந்திருக்கின்றன.

    நோயுற்ற பசுங்கன்று நடக்கமுடியாமல் தடுமாறினால் மாட்டுக்காரர் அதை ஆதரவுடன் தாங்கி, மெதுவாகத் தள்ளிக் கொண்டோ தூக்கிக் கொண்டோ போவார். இத்தகைய கன்றுக்கு ‘நுந்து கன்று’ என்று பெயர். சொந்த முயற்சியால் இறைவனை அடைய முடியாத தான் நுந்து கன்றைப் போல் இருப்பதாகவும் இறைவன் தன்னைத் தேடிவந்து தாங்கிச் சென்றதாகவும் கூறி அந்தக் கருணையை வியக்கிறார் மாணிக்கவாசகர்.

    “நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கிருந்து
    நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்
    தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்
    தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

    மாடு சில நேர்வுகளில் தன் மந்தையிலிருந்து பிரிந்துவிடும். கால் போனவாக்கில் அது வேற்றூர் போய்ச்சேரும். அங்கு அதனைக் கவனிப்பார் இருக்கமாட்டார்கள். அதுவாக, கிடைத்ததை உண்டு, கண்ட இடத்தில் படுத்துறங்கி, தானும் மகிழ்ச்சியாக இல்லாமல், மற்றவர்க்கும் பயன்படாமல் வறிதே பொழுது போக்கும். இது ‘ஆள்வாரிலி மாடு’ என்றும் ஊரேறு என்றும் கூறப்படும். மெய்யடியார் கூட்டத்தில் சேர்ந்திராமல் பிரிந்து நின்று தன் மனம் போன போக்கில் ஆள்வார் இல்லாத மாடு போலத் தான் வாழ்வதாக மணிவாசகர் கூறுகிறார். இப்படிப்பட்ட தன்னையும் எதிர்பாராத விதத்தில் இறைவன் ஆட்கொண்டதை நினைத்து மகிழ்கிறார்.

    “……………………….ஆள்வார் இலி மாடாவேனோ?
    நெருங்குமடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடு
    மருங்கே சார்ந்து வரவெங்கள் வாழ்வே வாவென்றருளாயே”

    மாடுகளில் மாற்றுத் திறனாளிகளைப் பாடியவர் மாணிக்கவாசகர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தாலும் சமுதாயத்தின் எல்லா நிலைகளையும் அவர் ஊடுருவி நோக்கியிருக்கிறார் என்பது மாடுகளின் வகைப்பாட்டை அவர் உவமமாக்கிய திறத்தால் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

    திருவாசகத்தில் தொடர்ந்து மேயும் எறும்பு

    சென்ற கிழமை கட்டுரையில் ‘இருதலைக் கொள்ளி உள்ளெறும்பை’ உவமமாகச் சொன்ன சதுரப்பாட்டைக் கண்டோம். இந்தக் கட்டுரையில் நெய்க்குடத்து எறும்பை உவமமாக்கும் திறனைக் காணலாம். ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்களை’ உடையார், நெய்சேர்த்து வைக்கும் குடங்கள் இல்லம் நிறைந்து காணப்படும். நெய்வாசம் கண்ட எறும்புகள் அக்குடங்களின் உள்ளே இறங்கி உறைந்துபோன நெய்யின் பரப்பில் கால்கள் சிக்கிக் கொள்ள மீளத் தெரியாமல் மாளும்.

    “உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
    வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்
    பொள்ளனல் வேழத்துரியாய் புலனின் கட் போதவொட்டா
    மெள்ளெனவே மொய்க்கு நெய்க்குடம் தனை எறும்பெனவே”

    என்று பாடிய வாதவூரார் தொடர்ந்து செய்யும் விண்ணப்பம் அந்தாதியாதலின் எறும்பிலேயே  தொடங்கிப் பாடுகிறார். எறும்பு என்ற சொல் தொடக்கமாக இருந்தாலும் இது நெய்க்குடத்து எறும்பன்று. புழுவரிக்கும் எறும்பு.

    “எறும்பிடை நாங்கூழ் வெனப்புல னால்அரிப் புண்டு அலந்த
    வெறுந்தமியேனை விடுதி கண்டாய்!”

    என்று பாடுகிறார். முந்தைய பாட்டில் நெய்க்குடத்து எறும்புகள் ஐம்புலன்களும் உயிரைச் சூழ்வதற்கு உவமம் இந்தப் பாட்டில் உயிர் புலன்களால் அரிக்கப்படுவதற்கு அதாவது ஈர்த்து அலைக்கழிக்கப்படுவதற்கு உவமம்.

    நிறைவுரை

    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது அதன் பெருமை. பாடுபொருளாகிய பக்தியுணர்வுக்கும் அதனை வெளிப்படுத்திய பாங்கிற்கும் உத்திகளுக்கும் உரியதே. ஆனால் அதில் காணப்படும் உவமங்களுக்கும் அந்தப் பெருமையில் செம்பாதி பங்குண்டு என்பது இவ்விரண்டு கட்டுரைகளால் ஓரளவு புலப்படலாம். பன்னூறு பாடல்களில் காணப்படும் உவமங்களைத் தொகுத்து ஆராய்ந்தால் மணிவாசகரின் உவமங்களே பக்தியுணர்ச்சி என்னும் பொருண்மை கற்பார் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்துக் கண்ணீர் வரவழைக்கின்றன என்பதை அறிந்து கொள்ள இயலும். உருக்கம் உள்ளடக்கத்தில் மட்டுமன்று. உவமங்களிலும் உண்டு.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 42

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 42

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமத் திருவாசகம் – 1

    முன்னுரை

    ‘படைப்பு’ என்ற அளவில் திருவாசகம் ஒரு பக்தி இலக்கியம் எனக் கருதப்படலாம். ஆனால் தமிழில் இலக்கியத்தின் பாடுபொருளாக அகம், புறம் என்னும் மரபு பின்பற்றப்பட்டு வந்த காலத்தில் அவற்றினும் மாறுபட்டு அதன் பாடுபொருள் இறைவனாக அமைந்திருப்பதை உணர்தல் வேண்டும். பாடுபொருள் பரம்பொருளாக அமைந்துவிட்ட காரணத்தால் பொதுவான இலக்கிய உத்திகளோ, உவமப் பகுதிகளோ, யாப்பியல் மரபுகளோ இலக்கிய மரபுசார்ந்து அமையும் என்று எதிர்பார்க்க இயலாது. உணர்ச்சியும் அகவுணர்ச்சியாகிய காதல், புறவுணர்ச்சியாகிய வீரம் என்பனவற்றினின்றும் சற்று விலகி உரிமையும் ஆதங்கமும் ஏக்கமும் இரத்தலும் கலந்த ஓர் புதுவகை உணர்ச்சியை இவ்வகை இலக்கியங்கள் கொண்டிலங்கும். விழைதலும் வேண்டுதலும் ஆகிய நிகழ்வில் பயன்படுத்தப்படும் உவமங்களும் பொதுவான இலக்கிய உவமங்களாக அமையாமல் அமைதி, பாசம், இழிவு, நம்பிக்கை முதலிய உணர்வுகளை எதிரொளிப்பதாக அமையும். மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்த அத்தகைய உவமங்கள் சிலவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

    திருவாசகத்தில் இருகை யானை

    புறநானூற்றில் வரும் ஓரேர் உழவன் என்னுந் தொடர் அக்கால வேளாண் பெருங்குடி மக்களின் வறுமை நிலையை உணர்த்தியது. ‘ஒரு கை யானை’ என்பது யானைக்குச் சிறப்பு கையுடைய விலங்கு அதுவேயாதலின். ஆனால் மணிவாசகப் பெருமான் தன்னை ‘இருகையானை’ என்று உருவகப்படுத்திக் கொள்கிறார். யானை, தனக்குத்தானே சங்கிலியைத் தானே எடுத்துப் பாகன் கையில் தந்து தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்ளும். தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும். யானைக்குத் தனக்கு மேல் பாகன் என்று ஒருவன் அமர்ந்து இருக்கிறான் என்றும் தெரியாது. மணிவாசகரின் இருகை யானை உவமத்தில் நுண்ணியங்கள் பல உள்ளன என்பதை அறியலாம். தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்வதும் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதும் தனக்கு மேலே இருப்பவன் பாகன் என்பதை அறியாததும் அதன் பலவீனங்கள். காமம், வெகுளி, மயக்கம் இவற்றுள் கிடந்து உழல்வதும், தனக்கான துன்பத்தைத்தானே வரவழைத்துக் கொள்வதும் தன்னை வினைப்படுத்தும் இறைவனை மறப்பதும் மானுடர்க்கு இயல்பு.

    “இரு கை யானையை ஒத்து இருந்து என் உளக்
    கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே” (திருச்சதகம்)

    இங்கு அடிகளார் தம்மை யானையோடு உவமித்தது ஒரு நுண்மையான உட்கருத்தைக் கொண்டதாகும். ஒரு கை யானைக்கே இரண்டு கெட்ட குணங்கள் உண்டு. ஒன்று – நன்றி மறப்பது; இரண்டு – குளித்துவிட்டுத் தூய்மையாக வரும்பொழுதே மண்ணை வாரித் தன் தலையில் போட்டுக் கொள்வது. மாபெரும் உபகாரம் செய்த குருவிற்குத் தாம் நன்றி பாராட்டவில்லை ஆதலால் நன்றி கொல்லும் யானையோடு உவமம் செய்தார். வழியோடு சென்ற தம்மை வலிய அழைத்து இறையனுபவத்தைக் குருநாதர் நெஞ்சில் நிறைவித்தார். பழைய, பசுகரணங்களைப் போக்கிப் பதிகரணங்களாக மாற்றி அருளினார். ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்பதும் அது. இதற்குக் குளித்துவிட்டு வரும் யானை உவமம். இத்தகைய பெரிய நலங்களை விட்டுவிட்டுப் பொறிகளின் இன்ப நுகர்ச்சியில் மறுபடியும் தம் மனம் செல்வது குளித்துவரும் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போலாகும். அதனாலேயே ‘இருகை யானையை ஒத்திருந்து’ என்று பாடுகின்றார்.

    “என்னால் அறியாப் பதம் தந்தாய்
    யானறி யாதே கெட்டேன்
    உன்னால் ஒன்றும் குறைவில்லை”

    என யானையின் செயல்களை ஒத்திருக்கும் தனது செயல்களை விளக்கியிருப்பது காண்க.

    இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு

    ‘இருதலை’ என்பது மூங்கிலின் இரண்டு பக்கத்தின் நுனிப்பகுதியைக் குறிக்கும். ‘கொள்ளி’ என்பது அவ்விரு பக்கமும் வைக்கப்பட்ட தீயைக் குறிக்கும். ஒரு நுனியில் பற்றவைத்து அதனைப் பந்தமாகப் பயன்படுத்துவதும் உண்டு. இருபக்கமும் நெருப்பு என்பது பெரும்பாலும் வித்தை காட்டுவோர் செயலாகக் கருதப்படலாம். சிலம்பு விளையாட்டில் இதனைக் காணலாம். அச்செயல் இங்கு முக்கியமன்று. மூங்கில் குழாயின் உள்ளே எறும்பு சென்றதை அறியாது பற்றவைத்த இருமுனைக் கொள்ளிக்கு நடுவே அவ்வெறும்புபடும் வேதனையே உவமமாகக் கொள்ளப்படுகிறது. இந்த உவமத்தைச் சங்கச்சான்றோர்கள் அகத்திணைப் பொருண்மை விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை,

    “ஆள்வினைக் கெழுந்த அசைவில் உள்ளத்து
    ஆண்மை வாங்கக் காமந் தட்பக்
    கவைபடு நெஞ்சங் கட்கண் அகைய
    இருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி
    ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்
    நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு
    உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர்
    வாழ்தல் அன்ன காதல்
    சாதல் அன்ன பிரிவரி யோளே!”

    முதலிய பாடல்களினால் அறியமுடிகிறது.

    “தாளாண்மை அறிந்தவென்தன் தளர்வில்லா நெஞ்சத்தைப்
    பேராண்மை முன்னிழுக்க, பெருங்காமம் பின்னிழுக்க
    இருகணுக்கள் தழல்தாங்கும் எரிகொள்ளி உள்சிக்கி
    இருபக்கம் ஓடுமொரு எறும்பென்றே நானானேன்”

    என அந்த அகநானூற்றுப் பாடலுக்குக் கொச்சகக் கலியால் உரையெழுதியவரும் இருந்திருக்கிறார்கள். இந்த இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பைத்தான் மணிவாசகப் பெருமான் தன் நிலையை விளக்க உவமமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

    “இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து
    நினைப் பிரிந்த
    விரிதலையேனை விடுதி கண்டாய்
    வியன் மூஉலகுக்கு
    ஒரு தலைவா மன்னும் உத்தரகோச
    மங்கைக்கு அரசே
    பொருது அலை மூஇலை வேல் வலன்
    ஏந்திப் பொலிபவனே!”

    ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ என்பதே முதுமொழி ஆகும். ஆனாலும் இதில் ஒரு குறை இருப்பதாக மணிவாசகர் உணர்கிறார். ஒரு குச்சியின் இரண்டு பக்கங்களிலும் நெருப்புப் பற்றியிருப்பதால் (குச்சியின் மேலே உள்ள) எறும்பு இரண்டு பக்கங்களாலும் வெளியேற முடியாது. ஆனால், இரு பக்கங்களிலும் நெருப்பு நெருங்கி வரவர வெப்பம் தாங்காத எறும்பு துடிப்பதால் கீழே விழுந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பழமொழியில் உள்ள இக்குறையைப் போக்க, அடிகளார் ‘இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்து’ என்கிறார். இருதலைக் கொள்ளி எறும்பு என்பது மூங்கிலின் மேல்பக்கம் திரிவது. இருதலைக் கொள்ளி உள்ளெறும்பு என்பது இருபக்க அழலுக்கு நடுவே அகப்பட்டுக் கொண்டது. இருதலைக் கொள்ளி எறும்பு என்பதே இருதலைக்கொள்ளிக்கு நடுவே அகப்பட்ட எறும்புதான் என்று கூறுவார் ‘உள்’ என்னும் சொல்லாட்சிக்கான அமைதியைக் கூறுதல் வேண்டும் கடப்பாடு  உள்ளது.

    இலக்கியங்களில் நாய்

    பொதுவாக நன்றியுணர்ச்சியின் குறியீடாகவே நாய் பயன்படுத்தப்படுகிறது. ‘தன்னைப் பலகாலம் பேணிக்காத்தவன் என்றறிந்தும் கொல்லும் யானைபோல, நண்பரையே அழிக்கும் தீயவர் உறவு கூடாது. வேல் உடலிலே தைத்திருக்கவும் வால் குழைத்து நிற்கும் நாய்போலத் துன்பம் தாமே இழைத்த காலத்தும் நட்பினை மறவாது அன்புகாட்டும் ஒருவரது நட்பே கொள்ளத்தக்கதாகும் என்னும் கருத்தினை,

    “யானை அனையவர் நண்பொரீஇ, நாயனையார்
    கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்; – யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
    மெய்யதா, வால்குழைக்கும் நாய்”. (நாலடியார் – 213)

    என்னும் நாலடியார் பாடல் கூறுகிறது. இனி அங்கதப் புலவர் காளமேகம் தமது தனித்தன்மையான சிலேடை வெளிப்பாட்டிற்கு நாயைப் பயன்படுத்தியிருக்கிறார்.

    “ஓடு மிருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
    நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
    தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
    தேங்காயும் நாயுமெனச் செப்பு”

    நாய்க்கும் தேங்காய் மூடிக்கும் பாடிய சிலேடை இப்படி அமைந்திருக்கிறது என்றால் பத்துப்பாட்டு இலக்கியங்களில் பாடிணியின் பாதத்து அழகிற்கு நாயின் நாக்கு உவமமாகக் கூறப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.

    “வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி”   (பொரு. 42)

    “உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
    வயங்கு இழை உலறிய அடியின்”  (சிறு. 17)

    “மதம் தபு ஞமலி நாவின் அன்ன
    துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி”  (மலை.42)

    என்றெல்லாம் சங்க கால இலக்கியங்களில் நாயின் நாக்கு உவமமாக்கப்பட்டுள்ளதை அறியலாம்.

    திருவாசகத்தில் நாய்

    மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தில் நாய் என்னும் விலங்கு உவம வகையானும் உருவகத்தாலும் பாடப்பெற்றிருக்கிறது. மணிவாசகர் தன்னை நாயாக உருவகம் செய்து கொள்ளுகிறார். வேறு சில இடங்களில் ‘நாயைப்போல’ என நாயின் வினைகளைத் தனக்கான வினையுவமமாக்கிக் கொள்கிறார். இந்தவகையில் திருவாசகத்தில் அறுபத்தேழு இடங்களில் நாய் பற்றிய குறிப்பு காணப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மணிவாசகப் பெருமான் தன்னை நாயோடு ஒப்பிடுவதற்கான காரணம் என்ன? ஜீவ ராசிகளை விட நாயை மட்டும் சொல்வதனால்  நாயின் அத்தகைய பண்புகள்தாம் என்ன? தன்னைப் ‘பொல்லாவினையேன், புழுத்தலைப் புலையனேன்’, ‘ஊற்றையேன்’ என்று கீழ்நிலைப்படுத்திக் கொண்டும் அமைதியடையாத நிலையில் ‘நாயேன், நாயடியேன், அடிநாயினேன், ஊர்நாயின் கடையேன்’ என்று  திரும்பத்  திரும்பத் தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்கிறார். நாய்  தன்  தலைவனை  அறியும்  தன்மை  உடையது. மேலும் தன் தலைவன் மேல் விசுவாசம் மிக்கது. சேக்கிழார் பெருமான் கண்ணப்ப நாயனார் புராணத்தில் வேட்டை நாய்களைப் பற்றி சொல்லும் போது ஒன்றுக்கு ஒன்று நேர் படாமல் செல்லும் என்கிறார். அதாவது வரிசையாக செல்லாமல் மாறி மாறி செல்லும் தன்மையது. தனக்குப் பிடிக்காது  ஒதுக்கும் ஒன்றை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்வது நாயின் இயல்பு. தன் வாயினால் கக்கியதைத் தானே திரும்பத் தின்னும் இயல்புடையது. இதன் பொருள் வெறுத்த ஒன்றையே திரும்ப விரும்பும் என்பதாம். ஐந்தறிவு நாய்க்கு அது இயல்பு. ஆனால் ஆறறிவு உடைய  மனிதனுக்கும் தான் வெறுத்ததையே மீண்டும் மீண்டும் விரும்புகின்ற குணமுண்டு  ஆக ஐந்தறிவு  உள்ள  நாயின் குணத்தை உயர்த்தித் தான் அதனைவிடக் கீழானவன் என எண்ணும் எண்ணமாகவும் இருக்கலாம்.  அல்லது  கீழ்த்தரமான நாயை விட நான் கீழானவன் என்னும் பொருளிலும் கூறியிருக்கலாம். ஆன்மாவானது  பிறவி, பந்தம்,  பற்று, பாசம் போன்ற இயல்புகள் மனிதனைத் திரும்பத் திரும்ப வந்து ஆட்டி வைப்பதையும்  பிறவித்தளையில் இருந்து  விடுபட முயல்வதையும் இறைவனின் திருவடியைச் சேர தடையாய் இருப்பதையும்  கருத்தில் கொண்டே அவர் நாயேன் என்று நாயின்  பண்பை வைத்துக் கூறியிருக்க வேண்டும்.

    “நாயிற் கடையாய்க்  கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே” (சிவபுராணம்)

    “நாயினேனை நலம் மலி தில்லையுள்
    கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென”  (கீர்த்தித் திருஅகவல் )

    “சொல்லுவது அறியேன் வாழிமுறையோ
    தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது”

    “குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
    குரம்பை கொண்டு இன்தேன் பாய்த்து நிரம்பிய”

                                                                          (திருவண்டப் பகுதி)

    “கனவிலும் தேவர்க்கு அறியாய் போற்றி
    நனவிலும் நாயேற்(கு) அருளினை போற்றி “

    “பஞ்சுஏர்  அடியாள் பங்கா போற்றி
    அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி”

                                        (போற்றித் திருஅகவல்)

    சிந்தனைநின் தனக்காக்கி நாயினேன்தன்
    கண்ணினை நின் திருப்பாதப் போதுக் காக்கி”

    “நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை”

    “நாசனே நான் யாதுமொன்று அல்லாப் பொல்லா நாயான”“

    “நகுவேன் பண்டு தோள் நோக்கி  நாணம் இல்லா நாயினேன்”

     “ ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து
    “ஆடும் நின் கலழ் போது நாயினேன்”

                                                        (திருச்சதகம்)

    “பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள்தம் பொய்யினையே”

    (நீத்தல் விண்ணப்பம்)

    “கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை”

    “நாயான நம் தம்மை  ஆட்கொண்ட நாயகனை”

    (திரு அம்மானை)

    “கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட”
    (திருப்பொற்சுண்ணம் )

    “நாயுற்றசெல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்”

    “நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை”

    (திருக்கோத்தும்பி)

    “நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த

    (திருச்சாழல்)

    “தான் அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை”

    (திருப்பூவல்லி)

    “நாயிற் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து”

    “நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு”
    (திருப்பொன்னூசல்)

    “கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவி
    (திருத்தசாங்கம்)

    “நாளுமணு காவண்ணம் நாயெனை ஆளுடையான்”
    (கோயில் மூத்த திருப்பதிகம்)

    “தரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே”

    (செத்திலாப் பத்து)

    “நாயி னேன் உனை நினையவும் மாட்டேன்”

    “எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்க

    கில்லேன் இல்வாழ்க்கை”
    (ஆசைப் பத்து)

    “நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே நானோர் துணைகாணேன்”
    (புணர்ச்சிப் பத்து)

    “தாதாய் மூவேழு லகுக்கும் தாயே நாயேன் தனை ஆண்ட”
    (வாழாப் பத்து)

    “கல்லாத புல்ல றிவிற் கடைப்பட்ட நாயேனை”

    “ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு”
    (கண்டப் பத்து)
    “பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை”
    “புறமே கிடந்து புலைநாயேன் புலம்புகின்றேன் உடையானே”
    ( பிரார்த்தனைப் பத்து)

    “இடரே பெருக்கி ஏசற்றிங்கு  இருத்தல் அழகோ அடி நாயேன்”

    “ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை”

    “நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்”
    (குழைத்த பத்து)

    “அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்றுகின்றேன் உடையானே”
    (உயிருண்ணிப் பத்து)

    “நானாரடி யணைவானொரு நாய்க்குத் தவிசி ட்டிங்கு”
    (திருவேசறவு)

    “பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே”
    (அற்புதப் பத்து)
    “பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான்

    புழுத்தலை நாய் போல”                       (எண்ணப் பதிகம்)

    “தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா

    கருணையினால்” (யாத்திரைப் பத்து)

    “ நகவே ஞாலத் துள்புகுந்து  நாயே அனைய நமையாண்ட”

    “நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனித்தான் நல்குதியே”
    (ஆனந்த மாலை)

    “நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ”
    “நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த”

    (அச்சோப்பதிகம்)

    என்றெல்லாம் தம்மை நாயாக உருவகப்படுத்தியும் நாயின் இழிந்த செயல்களைத் தன் செயல்களுக்கு உவமமாக்கியும் கூறுவதைக் காணமுடிகிறது. பொதுவாகத் தமிழ்க் கவிதைகளில் அல்லது நீதி நூல்களில் நாய் நன்றியுணர்ச்சியாகிய நேர்முகப் பார்வைக்கு உவமமாக்கப்பட்டிருந்தாலும் பக்தி இலக்கியங்களில் நாயின் இழிவான பழக்க வழக்கங்களாகிய எதிர்மறைப் பண்புகளே கருத்தில் கொள்ளப்படுகின்றன  என்பது  சிந்திக்கத்தக்கது.

    கண்ணப்பனே அன்பான கதை

    திருக்குறளில் ‘அழுக்காறு’ என்னும் பண்பைப் பண்பியாகச் செயல்படுத்திக் காட்டுவார் திருவள்ளுவர். அதாவது பண்பு செயல்படாது. பண்பை உடைய மனிதன்தான் செயல்படுவான். அந்தப் பண்புக்குப் பெருமையையோ இழிவையோ செய்வான். அன்பு என்னும் பண்பு இயேசு வழியாகச் செயல்படும். துரோகம் என்னும் பண்பு யூதாசு வழியாகச் செயல்படும். ஆனால் திருவள்ளுவர் பண்பே செயல்படுவதாகக் கூறி அந்தப் பண்பின் கொடுமையைச் சித்திரித்துள்ளார்.

    “அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

    தீயுழி உய்த்துவிடும்”

    என்பது அந்தக் குறட்பா. பாவத்தைச் செய்பவன்தான் பாவி. பாவமே பாவியாகிவிடாது. ‘அழுக்காறு’ என்பது பண்பு. அழுக்கர்ற்றினைப் பாவி என்றது பண்பினைப் பண்பியாக்கிய நுட்பம். இந்த நுண்ணியம் எதனைக் குறித்தது எனின் ‘அழுக்காறு’ என்னும் பண்பே செயல்படும். செயல்பட்டு அதனை ஆக்கினானை இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் அவனுக்குப் பேரழிவைத் தரும்.

    “பண்புக்குப் பண்பி இல்லையேனும் தன்னை ஆக்கினானை இருமையும் கெடுத்தல் கொடுமைப்பற்றி அழுக்காற்றினைப் பாவி என்றார்”

    என்னும் அழகர் உரை இதனை இன்னும் தெளிவாக்கும். திருவள்ளுவர் இப்படிக் கூறுகிறார் என்றால் மணிவாசகர் இதனை மாற்றுகிறார். இவர் பண்பியைப் பண்பாக்குகிறார்.

    “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

    என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி

    வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்

    சுண்ணப் பொன்நீற்றற்கே சென்றூதாய்க் கோத்தும்பீ!”

    என்று பாடுகிறார் மணிவாசகர். இறைவனிடத்துப் பேரன்பு காட்டியவருள் கண்ணப்பன் முன்களத் தளபதியாகவே திகழ்கிறார். அவருடைய வேடர்குலப் பின்புலமும் அதற்கு முரணான அளப்பறிய பேரன்பும் தன்னல மறுப்பும் உண்மையான இறையுணர்வும் சிலையையும் தெய்வம் என்று, தந்தையென்று எண்ணும் பக்குவமும் அவருக்கு இந்தப் பெருமையினைப் பெற்றுத்தந்தது எனலாம். அதுபோன்ற அன்பு தனக்கு இல்லையென்பதையும் அத்தகைய தூய அன்பைத் தான் பெருமானிடத்துக் காட்டாதபோதே, காட்ட இயலாதபோதே தனக்குப் பேரருள் புரிந்த திருப்பெருந்துறை சிவபெருமானை வழிபடுகிறார் மணிவாசகப்பெருமான். இங்கே அவர் ஒப்பிடுவது கண்ணப்பன் காளத்தியப்பரிடம் காட்டிய அன்பை. ஆனால் பாட்டில் கண்ணப்பன் அன்பு ஒப்பதோர் என்னாமல் கண்ணப்பன் ஒப்பதோர் என்றே எழுதியிருக்கிறார். அதாவது ‘கண்ணப்பன் வேறு, அன்பு வேறு’ என நோக்காது கண்ணப்பனையே அன்பு வடிவமாக நோக்கியிருக்கிறார். பண்பைப் பண்பியாகச் சொன்னார் வள்ளுவர். பண்பியைப் பண்பாகக் காண்கிறார் மணிவாசகர்!.  கண்டு உவமமாக்கியிருக்கிறார்.

    நிறைவுரை

    அக இலக்கியங்களிலும் புற இலக்கியங்களிலும் பயின்றுவரும் உவமங்களைச் சுவைப்பதற்கும், பக்தி இலக்கியங்களில் வரும் உவமங்களை உணர்வதற்கும் தனித்தனி புலமையும் மனநிலையும் தேவைப்படுகின்றன. புலவனுடைய அறிவையும் நோக்குத் திறனையும் அழகியலையும் முன்னிறுத்தி முன்னவற்றிற்கு உவமங்கள் அமைக்கப்படுகின்றன. பக்தி இலக்கியங்கள் நிலையாமை நோக்கிய வாழ்வியல் அனுபவங்களில் வெளிப்படுவதால் அழகியலைவிட உணர்வுகளும் உணர்ச்சிகளுமே தூக்கலாகத் தெரிகின்றன. இதனை இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் உவமங்களால் ஓரளவு உணரலாம். சைவமானாலும் வைணவமானாலும் ஆண்டவன் அடியார் என்னும் நிலையில் பாடப்படுகின்ற பாடல்களில் பயன்படுத்தப்படும் உவமங்கள் பரம்பொருளை நோக்கிய மனத்தைப் பக்குவப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன. சிவபதத்தை அடையும் முழுத்தகுதி பெற்ற மணிவாசகர் முதலிய அடியவர்களும் தங்களைத் தாழ்த்திக் கொண்டு பாடும் முறையும் பயன்படுத்தும் உவமங்களும் தனிமனிதனையும் சமுதாயத்தையும் நன்னெறிப்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை. இலக்கியத்தை அழகுபடுத்தும் உவமங்களே வாழ்வியலை நெறிப்படுத்துகின்றன. இதனையே திருவாசகம் முதலிய பக்தி இலககியங்கள் தமது உவமக் கோட்பாடாகவும் கொண்டிருக்கின்றன  எனவும் கருதலாம்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 41

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 41

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமங்களான இயற்கை

    முன்னுரை

    பொதுவாகத் தமிழ்க்கவிதைகளில் இயற்கை ஒரு பாடுபொருள் என்பது தெளிவான உண்மை. இயற்கையைப் பாடாத புலவர் இலர். அந்த இயற்கை பொருள் புலப்பாட்டுக் கருவியாக அதாவது உவமமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வுக்கு உட்பட்டது. இயற்கைக் காட்சிகளும் இயற்கை நிகழ்வுகளும் தமிழ்க்கவிதைகளின் பாடுபொருளை எவ்வாறு உவமவழியில் பாதிக்கின்றன என்பதை ஆய்வது காலத்தேவையாகக் கருதப்படுகிறது. இயற்கையைப் பாடுபொருளாக்கிக் கொள்வதற்கும் அவற்றையே உவமங்களாக அமைத்துக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. சங்க இலக்கியங்களின் நிலைப்பேற்றுக்குப் பெரிதும் காரணமாக அமைந்த இயற்கையைப் பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் பலரும் பாடியிருக்கிறார்கள். இயற்கைச் சித்திரிப்பை ‘அழகின் சிரிப்பு’ எனக் குறிப்பார் பாவேந்தர். பாவேந்தரைத் தொடர்ந்து வந்த கவிஞர்களில்  இயற்கையை ஓரளவு பாடியவராக வாணிதாசன் திகழ்கிறார். அவருக்குப் பின்னால் வைரமுத்தின் இயற்கை ஈடுபாடு பெரிதும் குறிக்கத்தக்கதாக உள்ளது. சங்ககால மக்களின் வாழ்வியல் களமாகவும், இலக்கியப் பாடுபொருளாகவும் விளங்கிய இயற்கை மறுமலர்ச்சிக் காலத்துக் கவிஞர்களின் வாழ்க்கையைக் கூட அவர்தம் ஒவ்வொரு கவியசைவிலும் பாதித்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் இயற்கைக் கூறுகள் கவிதையில் உவமங்களாக அமைந்த பாங்கு பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    தமிழும் இயற்கையும்

    ‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்பதால் ‘தமிழ்’ என்னும் சொல்லுக்கு இவ்விரு பண்புகளும் உண்டு என்பது பெறப்படும். தாய்மொழியாகிய தமிழுக்கு இவ்விரண்டு பண்புகள் பொருந்தும்படியாகவே அதன் இயல்பு அமைந்துள்ளது. உலக மொழிகள் அனைத்திலும் தலைமை ஒலிவடிவமாக அகரம் அமைந்திருப்பதும், எத்தகைய முயற்சியுமின்றி வாயைத் திறந்தவுடன் அகரவொலி வெளிப்படுவதும் ‘தமிழ் ஒரு மொழி’ என்னும் நிலையில் இயற்கையைத் தழுவியமைந்திருக்கும் உண்மையை உணரப் போதுமானதாகும். மொழியின் தோற்றம் இவ்வாறு இயற்கையை ஒட்டி அமைந்திருப்பது போலவே அம்மொழியில் அமைந்த இலக்கணப் பாகுபாடுகளும் இலக்கியக் குறியீடுகளும் இயற்கையையொட்டி அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.

    தமிழ் இலக்கண இலக்கியங்களில் இயற்கை

    தமிழ் அகவிலக்கண மரபில் காணப்படும் திணைப்பாகுபாடுகளுக்கு முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம் எனப் பூக்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும், வெட்சி, வஞ்சி, உழிஞை, காஞ்சி, வாகை எனப் புறத்திணைகளுக்கும் பூக்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும் இயற்கை, தமிழருடைய வாழ்வியலோடு கொண்டிருந்த பிணைப்பைப் பறைசாற்றுவனவாம். பொருளிலக்கணப் பகுதிகளில் இயற்கையின் தாக்கம் இங்ஙனம் இருப்பதைப் போலவே மொழியிலக்கணத்திலும் அதன் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. சான்றாக,

    “ஆற்றொழுக்கு அரிமா நோக்கு தவளைப்
    பாய்த்துப் பருந்தின் வீழ்வுஅன்ன சூத்திர நிலையே”

    என்னும் நூற்பாவில், சூத்திரங்களின் நிலைக்கு இயற்கைப் பொருள்களின் வினைகளே உவமமாக்கப்பட்டுள்ளன. ஆற்றின் ஓட்டமும், அரிமாவின் பார்வையும், தவளையின் பாய்ச்சலும், பருந்தின் வீழ்ச்சியும் மொழியின் கட்டமைப்பு பற்றிய இலக்கணச் சிந்தனைகளைப் பாதித்திருக்கிறது எனக் கருதுவதற்கு இடமுண்டு. பட்டினப்பாலை, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, மலைபடுகடாஅம் என்னும் பத்துப்பாட்டுக்களின் பெரும்பான்மைப் பெயர்களும் மலர்களின் பெயர் தாங்கி நிற்பதும் மேற்கண்ட கூற்றை உறுதி செய்யலாம். தென்றல், மேகம், கிளி, மயில், குயில் எனத் தூது இலக்கியத்தின் தூதுவர்களும் இயற்கையைச் சார்ந்தவர்களாகவே  குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    தமிழ்க்கவிதை மரபில் இயற்கை

    தமிழிலக்கியக் கவிதை மரபில் இயற்கையின் இடம் குறிப்பிடத்தக்கது என்பது மேலே சுட்டப்பட்டது. ‘தனித்ததொரு பாடுபொருள்’ என்னும் நிலையில் இயற்கை தமிழ்க்கவிதைகளில் பாடப்பெறவில்லை என்பதை அறிஞர் மு.வ. தமது ‘பண்டைத்தமிழ் இலக்கியங்களில் இயற்கை’ என்னும் ஆய்வு நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். பெயரடைகளாக நின்று திணை விளக்கத்திற்குத் துணையாக விளங்கியதே சங்க இலக்கியங்களில் இயற்கை பாடப்பெற்றிருக்கும் நெறியாகும். ஐம்பெருங் காப்பியங்களிலும், கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய இதிகாசக் காப்பியங்களிலும் ஆறு, காடு, சோலை இவற்றின் வண்ணனைகள் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. பரிதிமாற் கலைஞரின் கடற்கரைக் காட்சி, தாமரைத்தடாகம் முதலிய நூற்பகுதிகளும், மகாகவி பாரதியின் குயில்பாட்டின் சில பகுதிகளும், பாஞ்சாலி சபதத்தின் சில பகுதிகளும் இயற்கையில் உள்ள ஈடுபாட்டைக் காட்டக் கூடும். பாரதிக்குப் பின் வந்த கவிஞர்களின் படைப்புக்களில் இயற்கை தனக்குரிய இடத்தைத் தவறாமல் பெற்று வந்தது என்பதும் குறிக்கத்தக்கதே. ஆனால் இயற்கையைத் தனியொரு பாடுபொருளாகக் கொண்டு பாடப்பட்ட தமிழின் முதல் தொகுப்பு பாவேந்தரின் அழகின் சிரிப்பாகலாம்.

    தமிழ்க்கவிதைகளில் இயற்கைப் பயன்பாடு

    தமிழ் இலக்கணமும் இலக்கியமும் இயற்கையோடு பிரிக்க இயலாத உறவு கொண்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்க்கவிஞர்கள் தங்கள் படைப்புக்களில் இயற்கையை ஐந்து வகையாகப் பயன்படுத்தியுள்ளதாகப் பகுத்துரைப்பார் அறிஞர் அ.கி.பரந்தாமனார். அவரது பகுப்பு வருமாறு:

    1. இயற்கையளிக்கும் காட்சியழகில் ஈடுபட்டுச் சித்திரிப்பது.
    2. இயற்கையை உவமையில் பயன்படுத்துவது.
    3. இயற்கையைப் பயன்படுத்திக் குறிப்பாகக் கருத்தைத் தெரிவிப்பது.
    4. இயற்கையை மானிட வாழ்வுடன் இணைத்துக் காட்டுவது.
    5. இயற்கை வாயிலாக அரிய நீதிகளையும் பெரிய உண்மைகளையும் தெரிவிப்பது.

    பேராசிரியர் பரந்தாமனாரின் பகுப்புக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி ஆய்வுப் பொருளாகும் வன்மையுடையது என்றாலும், அவரது இரண்டாவது பகுப்பான ‘இயற்கையை உவமையில் பயன்படுத்துவது’ பற்றிய விளக்கமுறை ஆய்வாக இந்தக் கட்டுரையைக் கருதலாம்.

    தமிழ்க்கவிதை உவமங்களில் இயற்கை

    சங்க இலக்கியத்தில் தொடங்கிய தமிழ்க்கவிதை நெடும்பயணத்துள்  உவமங்களின் ஆளுமை தனித்துச் சுட்டுதற்குரியது. தமிழ்க்கவிதைகளில் எடுத்தாளப்பட்டுள்ள உவமைகளில் சமுதாயச் சிந்தனைகள் தமக்கென தனித்ததொரு இடத்தைப் பெற்றுள்ளதைப் போலவே இயற்கையும் உவமங்களாகத் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. இயற்கை உவமமாகும் பொழுது,

    1. இயற்கைக்கு இயற்கை உவமமாதல்
    2. இயற்கைக்குச் செயற்கை உவமமாதல்
    3. செயற்கைக்கு இயற்கை உவமமாதல்

    என மூன்று தனித்தனிக் களங்களில் செயல்படுவதை அறியமுடிகிறது. இயற்கையோடு இரண்டறக் கலந்தமைந்த வாழ்க்கை முறையும், நடைமுறை வாழ்வியல் உண்மைகளை இயற்கைக்கு ஏற்றியுரைக்கும் அழகியல் உணர்வும், இயற்கை நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி நடைமுறை வாழ்க்கையைச் செப்பனிடல் வேண்டும் என்னும் பொதுநல உணர்வும் ஆகிய மூன்றுமே மேற்சுட்டிய மூன்றுவகை நிலைப்பாடுகளுக்குக் காரணம் எனலாம்.

    இயற்கைக்கு உவமமான இயற்கை

    மானுட வாழ்வியல், இயற்கையிலிருந்து தொடங்கி நிகழ்வதாகலின், உவமம் பெரும்பாலும் இயற்கைப் பொருள்களிலிருந்தும் அவற்றின் அசைவுகளிலிருந்துமே தோன்றியன ஆதல் வேண்டும். ‘மாடாட்டம் உழைக்கிறான், ‘மயில் மாதிரி பெண்’, ‘குயில் மாதிரிப் பேசினாள்’, ‘எருமை  மாதிரி நிற்கிறான்’, ‘தென்றலாய் வந்தாள்’, ‘புயலாய்ச் சீறினாள்’, ‘பனை மாதிரி வளர்ந்தவன்’ என்றெல்லாம் நிலைபெற்றிருக்கும் வழக்குகள், உவமத்தின் நிலைக்களம் இயற்கையே என்பதைப் புலப்படுத்தும். இயற்கைப் பொருளைச் சித்திரிக்கின்ற நேர்வுகளில் கூட மற்றொரு இயற்கைப் பொருளையே உவமமாகக் கூறும் போக்கைக் காணமுடிகிறது. இயற்கையில் வளர்ந்த உகாய் மரத்துக்குப் புறாவின் முதுகையும் அதில் விளைந்த கனிகளுக்கு நீலமணியையும் உவமித்திருப்பதன் மூலம் இயற்கைக்கு இயற்கையை உவமமாக்கும் தமிழ்க்கவிதைக் கொள்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    “புறவுப் புறத்தன்ன புன்கால் உகாஅய்க்
    காசினை அன்ன நளிகனி யுதிர” (குறுந்தொகை – 274)

    குறுந்தொகையில் இதே பொருளுக்குக் கூறப்பட்டிருக்கும் இதே உவமையை,

    “மணிக்கா சன்ன மானிற இருங்கனி
    உகாய் மென்சினை உதிர்வன கழியும்” (அகநானூறு – 293)

    என அகநானூற்றிலும் காணமுடிகிறது.

    இயற்கைக்கு உவமமான இயற்கை

    போர்க்களத்தில் போர்செய்து புண்பட்ட யானையினது முகத்தைச், செங்காந்தள் மலர் விழுந்த பாறைக்கு உவமித்திருப்பதையும் சங்க இலக்கியம் காட்டுகிறது.

    “பொருத யானை புகர்முகம் கடுப்ப
    மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன்
    ஒண்செங் காந்தள் அவிழும்” (குறுந்தொகை – 284)

    பாறையில் காந்தள் விழுவது இயற்கை. போர்க்களத்து யானைமுகம் புண்படுவது களத்தொழிலின் காரியம். காந்தள் விழுந்த பாறை புண்விழுந்த யானை முகமானது, இயற்கைக்குச் செயற்கையை உவமமாக்கும் புலவர் திறம்.

    இயற்கைக்கு உவமமான செயற்கை

    இயற்கைக்கு இயற்கையே உவமம் என்னும் நிலையிலிருந்து இயற்கைக்குச் செயற்கையை உவமமாக்கும் திறனையும் தமிழ்க்கவிதைகளில் காணமுடிகிறது. பெண்பல்லியைத் துணைக்கழைக்கும் ஆண்பல்லியின் இயற்கை ஒலிக்கு, அம்புநுனியைத் தீட்டுவதனால் உண்டாகும் ஒலியை உவமை கூறும் திறன் சங்கச் சான்றோர்களுக்கு இருந்திருக்கிறது.

    “கள்வர்தம்
    பொன்புணை பகழி செப்பம் கொண்மார்
    உகிர் நுதி புரட்டும் ஓசைபோல
    செங்காற்பல்லி தன் துணை பயிரும்” (குறுந்தொகை – 16)

    என்னும் இவ்வடிகளில் ஆண்பல்லியின் அழைப்பொலிக்கு ஆறலைக் கள்வர்கள் தம் அம்புகளைச் செப்பம் செய்வதற்காகத் தங்கள் நகத்தினால் கீறிப்பார்க்குங்கால் எழும் நுட்பமான ஒலியை உவமையாக்கியிருப்பது நோக்கத்தக்கது.

    பாவேந்தர் பாரதிதாசன் தமது கவிதைகளில் இயற்கைக் காட்சிகளை விளக்குதற்குச் செயற்கைக் காட்சிகளை உவமிக்கும் போக்கைக் காணமுடிகிறது. தாமரைச் செவ்வரும்பு தடாகத்தில் தோன்றும் இயற்கைக் காட்சிக்கு, மாலையில் மங்கையர் ஏற்றிய விளக்குச் சுடரை உவமையாகக் கூறியிருக்கிறார்.

    “மணியிருள் அடர்ந்த வீட்டில்
    மங்கைமார், செங்கை ஏந்தி,
    அணிசெய்த நல்வி ளக்கின்
    அழகிய பிழம்புபோல
    தணிஇலை பரப்பி னிற்செந்
    தாமரை செவ்வரும்பு
    பிணிபோக்கி என்விழிக்குப்
    படைத்தது பெருவிருந்தே” (அழகின் சிரிப்பு)

    என்னும் கவிதையில் இயற்கையில் தோன்றும் ஓர் அழகிய காட்சிக்கு நடைமுறை வாழ்வியல் நிகழ்ச்சி ஒன்றினை உவமிக்கும் போக்கைக் காணமுடிகிறது.

    செயற்கைக்கு  உவமமான இயற்கை

    பிறவிப் பெரும் பிணி தொலைக்க வேண்டுமானால் இறைவனுடைய திருவடியைப் பற்ற வேண்டும் என்பது நியதி. இறைவனை அடைகின்ற வழிகள் இரண்டு. ஒன்று விரதங்கள். இரண்டு ஞானம். விரதங்களினால் ஞானம் கைகூடும். ‘வினை மாசு தீர்ந்து அந்தக் கரணங்கள தூயவாதற் பொருட்டு ஒருவரால் காக்கப்படும் விரதங்களும் அவற்றால் அவை தூயவாய வழி உதிப்பதாய ஞானமும் என இருவகைப்படும்’ என விளக்குவார் பரிமேலழகர். ஆனால் உலகியலில் இது அவ்வளவு எளிதாகக் கைகூடுமாறில்லை. எனவே சரணாகதி ஒன்றுதான் ஒரே வழி. அதுபற்றிப் பாடுகிற குலசேகர ஆழ்வார் ‘நினது அருளன்றி நான் மீள்வதற்கில்லை’ என்னும் தம் கருத்தினை விளக்குதற்குச் சில உவமங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

    “செங்கதிரே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
    அந்தரம் சேர் வெங்கதிரோர்க் கல்லால் அலராவால்!
    வெந்துயர் வீட்டாவிடினும் வித்துவக் கோட்டம்மா! உன்
    அந்தமில் சீர்க்கல்லால் அகங்குழைய மாட்டானே!

    எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
    மைத்தெழுந்த மாமுகிலே பார்க்கும் அதுவே போல்
    மெய்த்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டம்மா!
    சித்தம் மிக உன்பாலே வைப்பன் உன் அடியேனே!

    தொக்கு இலங்கி ஆறு எல்லாம் பரந்தோடி தொடுகடலை
    புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவைபோல்
    மிக்கிலங்கு முகில் நிறத்தாய் வித்துவக் கோட்டம்மா! உன்
    புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே!”

                                       (பெருமாள் திருமொழி)

    விரதமும் ஞானமும் மானுட முயற்சியால் கைகூடுவது. எனவே செயற்கை. வெப்பமாக இருந்தாலும் தாமரை செங்கதிரோனுக்கு மட்டும் மலர்வதும், பயிர்கள் வான்மழையை எதிர்நோக்குவதும், ஆறுகள் கடல் நோக்கிப் பயணிப்பதும் இயற்கை. ஆழ்வார் பாசுரங்களில் இத்தகைய உவமக் கோட்பாடு இழைவதைக் காணமுடிகிறது.

    ஆடவரின் மீசையின் பொலிவு, மயிரின் கன அளவையும் கத்தரிக்கோலைக் கையாள்பவனின் திறனையும் பொருத்தது. மயிர் வளர்வது இயற்கை. அதனை மீசையாகக் காட்டிக் கொள்வது மனித முயற்சியான செயற்கை. இந்த மீசைக்கு அணிலின் வாலை உவமை கூறுகிறார் கவிஞர் பனப்பாக்கம் சீதா.

    “அணில்வாலைப் போன்ற மீசை
    அமைந்தநற் புலவர்” (பனப்பாக்கம் சீதா பாட்டுப் பயணம்)

    அக்காலப் புலவர்களுக்கு அணில்வாலைப் போல மீசை இருந்ததாகக் கூறுவதைப் போலவே பாவேந்தர் பாரதிதாசன் பாண்டியன் பரிசு காவியத்தில்,

    “கிளிக்கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும் மீசை” (பாண்டியன் பரிசு)

    என அரும்புகிற மீசைக்குக் கிளிக்கழுத்தில் இருக்கின்ற பொன்வரிகளை உவமமாக்கிக் காட்டுகிறார்.

    இயற்கைக்கு உவமமான இலக்கணம்

    மேற்கண்ட முந்நிலைகளேயன்றி இயற்கைக்கு இலக்கணத்தையே உவமமாக்கும் போக்கையும் காணமுடிகிறது. வயலோடு நீர் சேர்வது இயல்பானது., மெய்யோடு உயிர் சேர்வது இயல்பானது. இரண்டிடத்திலும் சேர்க்கை செயற்கையானது அல்ல, இயற்கையானது.

    “வெடித்திருந்த வயலெல்லாம் தண்ணீ ராலே
    மெய்யெழுத்தின் முன்னுயிர்போல் பொருந்திக் கொள்ள” (தேன்மழை)

    என்னும் உவமையில், இலக்கணத்துள் புணர்ச்சி இயற்கையானதைப் போலவே, வயலுக்குள் நீர்பாய்வதும் இயற்கையாயிற்று என்னும் உவமைக்கவிஞர் சுரதாவின் உவமத்திறன் காண்க.

    “உடம்பொடு உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  (நன்னூல்)

    என்னும் இலக்கண நூற்பாவின் கருத்தை உள்வாங்கிக் கொண்ட கவிஞர் சுரதா வெகு இயல்பாகவும், இயற்கைக் காட்சியொன்றைச் சித்திரிக்கும் நோக்குடனும் கையாண்டிருக்கும் உவமத்திறன் பாராட்டத்தகுந்தது.

     மறைந்த மடந்தையும் மறைந்த பொருள்களும்

    மீசையாகிய செயற்கைப் பொருளுக்கு இயற்கைப் பொருளை உவமிக்கும் பொழுது உவமமாக ஒரு பொருளே வந்துள்ளது. மாறாக செயற்கைக்கு இயற்கைப் பொருளை உவமிக்குங்கால், ஒரு பொருளுக்குப் பல உவமைகளைத் தொகுத்துச் சுட்டும் வழக்கும் தமிழில் உண்டு. சான்றாக,

    “இலைகளுக்குப் பின்புறத்தில் காய்கள் போன்றும்
    இருள்முகிலின் பின்புறத்தில் நிலவு போன்றும்
    மலைகளுக்குப் பின்புறத்தில் சிற்றூர் போன்றும்
    மறைவாக அரண்மனையில் வாழ்ந்து வந்த
    கலைமடந்தை”  (தேன்மழை)

    என்னும் கவிதை வரிகளில், அரண்மனையில் ஒதுக்குப்புறமாகப் பிறரால் அறிந்து கொள்ள இயலா வண்ணம் வாழ்ந்து வரும் இளவரசி ஒருத்திக்கு, இலைமறைக்கும் காயும், முகில் மறைக்கும் நிலவும், மலை மறைக்கும் சிற்றூரும் உவமைகளாய்க் கையாளப்பட்டிருக்கும் பாங்கினைக் காணலாம்.  இதனால் செயற்கையின் ஒரு பொருளுக்கு இயற்கையின் பலபொருள்கள் உவமமாக்கப்படுவதும் தமிழ்க்கவிதைகளின் உவமக்கோட்பாடுகளில் ஒன்றாகக் கொள்ள முடியும்.

    நிறைவுரை

    மேற்கண்ட சான்றுகளால் இயற்கைக்கு இயற்கை, இயற்கைக்குச் செயற்கை, செயற்கைக்கு இயற்கை என்னும் மூவகைத் தளங்களில் இயற்கைப் பொருள் உவமமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாங்கு ஓரளவு ஆராயப்பட்டது. இயற்கைச் சித்திரிப்பிற்குத் தமிழிலக்கணக் கூறுகளும் உவமங்களாய் வந்துள்ளன என்பதும் சுட்டப்பட்டது. இவ்வாறெல்லாம் வகுத்துக் கொண்டு உவமங்களைப் பயன்படுத்துவது பற்றிய எந்தத் திறனாய்வுக் கொள்கையும் தற்காலத்தில் இல்லை. காட்டப்பட்ட உவமங்கள் எல்லாம் படைப்புக்களில் அனிச்சையாக வந்தவை. வந்து அமைந்தவை. ஒரு காலத்திய இலக்கியத்தினை, ஒரு மொழிக்குரிய இலக்கியத்தைத் திறனாய்வு செய்ய காலத்தால் பிற்பட்ட, முற்றிலும் தொடர்பில்லாத மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கைகளைப் பயன்படுத்துவது அவ்வளவாகப் பொருந்தாது, பயன்தராது என்பதை இந்தக் கட்டுரை ஓரளவு விளக்கியிருக்கக்கூடும்.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 40

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 40

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சமுதாயச் சிந்தனைகள் உவமங்களான கதை

    முன்னுரை

    அகப்பொருள் புலப்பாட்டுக் கருவியாகத் தன் பணியைத் தொடங்கிய உவமம், காலந்தோறும் தன் பணிக்களப் பரப்பை விரித்துக் கொண்டே வந்திருக்கிறது. புறப்பொருண்மைகளுக்கும்  அழகியல் உணர்வை மிகுவித்துக் காட்டுதற்கும் பயன்பட்டிருக்கின்றன. தத்துவக் கோட்பாடுகளை விளக்குதற்கும் இறையுணர்ச்சியைத் துல்லியமாகச் சொல்லுவதற்கும் கூட அவை  பயன்பட்டுள்ளன. அடியார் மனத்து இறைவன் நிலைபெற்றிருக்கும் நிலையைக் ‘கறந்த பால் கன்னலோடு நெய்கலந்தாற்போல’ என்னும் உவமத்தால் விளக்குகிறார் மணிவாசகப்பெருமான்.  இத்தகைய பக்திப் பரப்பிலிருந்து தனது சிறகை விரித்தெழுந்த   உவமம் சமுதாயக் களத்திற்குத் தாவி வந்து தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ‘மானுடம் பாடுவது’ என்னும் கம்பனின் கோட்பாடு அவனுக்குப் பின்னாலே வந்த கவிஞர்கள் அனைவரையும் பாதித்து இன்றளவும் தொடர்கிறது. சமுதாயச் சிக்கல்களைப் பாடாத யாரையும் எவரும் கவிஞராக ஏற்றுக் கொள்வதில்லை. அல்லது ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். சமுதாயச் சிந்தனைகளைப் பாடுபொருளாக்குவதற்கும் அச்சிந்தனைகளையே உவமங்களாக அமைத்துக் கொள்வதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. சமுதாயக் கருத்துக்களைப் பிற உவமைகளைக் கொண்டு விளக்குவது எல்லாக் கவிதைகளிலும் காணக்கூடியதே. அச்சிந்தனைகளே பிற பொருள்களுக்கு உவமைகளாக அமைவது கவிஞனின் பட்டறிவைப் பொருத்ததாகும். பட்டினிக் கிடந்த பட்டறிவால் பசியைப் பற்றி எழுதுவதற்கும் பட்டினியால் துடிப்பவனைப் பார்த்து அப்பசியைப்பற்றி எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. இந்தப் பின்புலத்தில் சமுதாயத்தைப் பற்றிய கவிஞர்களின் அக்கறையும் கரிசனமும் அவர்கள் கவிதைகளில் உவமங்களாக அமைந்துள்ள பாங்கினைச் சுருக்கமாக ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.

    கவிஞனும் சமுதாயச் சிந்தனைகளும்

    சமுதாயத்தின் உள்கட்டமைப்புக்களான பொருளாதாரம், சமூக நிலை ஆகியவை எல்லாக் காலத்திலும் ஒரே தன்மையுடையனவாக இருப்பதில்லை. அவற்றின் சிக்கலுக்கேற்ப அவற்றின் தன்மைகளும் நிலைப்பாடுகளும் மாறுபடுகின்றன. இலக்கியம் சமுதாயத்திலிருந்து, அவற்றிலிருந்து கிடைக்கும் பட்டறிவிலிருந்து பிறப்பதாதலின், மேற்சுட்டிய பொருளாதாரச், சமூக மாறுபாடுகளும் அவற்றால் உண்டாகும் விளைவுகளும் படைப்பிலக்கியத்தில் எதிரொளிக்கவே செய்யும். ஒரு சமூகப் பிரச்சினை குறித்து ஊடகங்கள் பலவும் கருத்துத் தெரிவிக்கின்றன. அரசு, பொருளியல்  அறிஞர்கள் அரசியல் கட்சிகள் கருத்துத் தெரிவிக்கின்றன. கவிஞனும் அச்சிக்கல் குறித்த தன் பார்வையைப் பதிவு செய்கிறான். பிற யாவற்றிலும் இருந்து கவிஞனின் பார்வை வேறுபட்டதாக இருக்குமென எதிர்பார்ப்பது  தவறன்று. ஏனெனில் கவிஞன் வாழ்க்கைச் சிக்கல்களை அறிவுப்பூர்வமாக மட்டுமல்லாது உணர்வுப்பூர்வமாகவும் அணுகுகிறான்.

    சமுதாயப் பார்வை கவிஞனுக்கு மேற்சட்டையன்று

    இலக்கியத்தின் தலையாய நோக்கம் இன்புறுத்துவதே.  அழகியல் குறையாமல், அது வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளை உணர்ந்து கொள்வது அதன் பயனாகும்.  இன்புறுத்துவது நோக்கம். ஏற்றம் பெறச் செய்வது பயன். “அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயன்” என்னும் தொடரின் சாரம் இதுவே. வாழ்க்கைச் சிக்கல்களையும் நெறிகளையும் கற்பனை கொண்டு வடிவமைக்க முடியாது. சமகாலச் சமுதாய நிகழ்வுகளிலிருந்தும் உண்மை நிலவரங்களிலிருந்துமே அவற்றை வடிவமைக்க வேண்டியதிருக்கிறது. முன்னரே சுட்டியது போல் சமுதாய நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதும், கண்டிப்பதும், திருத்த முயல்வதும், தீர்வு காண்பதும் ஒரு கவிஞனுடைய வேலைதான். எனவே கவிஞனுக்குச் சமுதாயச் சிந்தனைகள் புறமன்று., அகம். அவன் சிந்தை, அணு ஒவ்வொன்றிலும் சமுதாயமே நிறைந்திருத்தல் வேண்டும். இலக்கியத்தில் சமுதாயத்தைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்வதும் சமுதாயச் சிந்தனைகளையே இலக்கியமாகப் படைத்துக்காட்டுவதும் தமிழுக்குப் புதியதல்ல.

    “சமுதாயப் பார்வையினைச்
    சட்டையைப் போல் மாட்டாதீர்!
    அதை உங்கள்
    உடம்பின் சதையாகவே
    உருவாக்கிக் கொள்ளுங்கள்”

    என்பர். சமுதாயத்திலிருந்து சமுதாயத்திற்காகச் சமுதாயத்தோடு கலந்த ஒருவனால் படைக்கப்படுவதே இலக்கியம் என்னும் ‘கவிதை மக்களாட்சித் தத்துவத்தைத்தான்’ சுருக்கமாக ‘இலக்கியம் என்பது ஒரு காலக்கண்ணாடி’ என்று அறிஞர்கள் வரையறை செய்திருக்கிறார்கள்.

    சமுதாயக் கட்டமைப்பும் கவிஞனின் சிந்தனைகளும்

    சமுதாயக் கட்டமைப்பு மாறுகிறபோது சமுதாயச் சிந்தனைகளும் மாறுவது  இயல்பே. முடியாட்சிக் காலத்தில் கவிஞன் ஒருவனுக்கு இருந்த சமுதாயச் சிந்தனைகள் வேறு. குடியாட்சிக் காலத்தில் கவிஞன் ஒருவனுக்கு இருக்கின்ற சமுதாயச் சிந்தனைகள் வேறு. அரசமைப்பு மாற்றம் மட்டுமே இதற்குக் காரணம் எனக் கருதுவதைவிடச், சமுதாயக் கட்டமைப்புக்களுக்கேற்பச் சமுதாயச் சிக்கல்களின் தன்மைகள் மாறுபடுவதே காரணம் என்பது பொருத்தமாகலாம். ஆனால் தமிழ்க்கவிதைப் போக்கில் முற்றிலும் வியப்பான மாற்றத்தைக் காணமுடிகிறது. அதாவது சமுதாயக் கட்டமைப்பு மாறாதபோதே சிந்தனை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தெளிவாகச் சுட்டுவதானால், முடியாட்சிக் காலத்திலேயே குடியாட்சிச் சிந்தனைகளைத் தமிழ்க்கவிதை உலகம் பதிவு செய்திருக்கிறது.  இது பற்றி விரிப்பின் பெருகும்.

    தமிழ்க்கவிதை உவமங்களில் சமுதாயச் சிந்தனைகள்

    இதிகாசக் கதைப்பொருளாயினும், மன்னராட்சி ஓங்கியிருந்த சங்க காலப் பாடுபொருள்களாகிய அகம், புறமாயினும் அழகியலும் கற்பனை வளமும் தூக்கலாகத் துலங்கும் இடைக்கால இலக்கியப் படைப்புக்களாயினும் சமய இலக்கியங்களாயினும் தற்காலத் தமிழ்க்கவிதைகளாயினும் சமுதாயச் சிந்தனைகளை அடியொட்டிய உவமங்கள் ஆங்காங்கே பயிலப்பட்டு வந்துள்ளமையை அறியலாம். சமுதாயச் சிந்தனைகளைப் பாடுபொருளாக்குவதன்றி, அச்சிந்தனைகளையே உவமமாக அமைத்துக் காட்டுவது  சங்க கால இலக்கியங்களிலிருந்தே தொடங்கிவிடுகிறது.

    வறியவன் இளமையும் வாடிய சுரமும்

    சங்க இலக்கியம் ‘ஓர் உவமத் தோரணம்’. சமுதாயச் சிந்தனைகள் என்பன பெரும்பாலும் வறுமை பற்றியனவே என்பது ஓர் எழுதாச் சட்டமாகத் தமிழ்க்கவிதைப் படைப்புலகத்திலும் திறனாய்வுலகத்திலும் நிலவிவருகிறது. ‘சமுதாயம்’ என்பது தனிமனிதர்களின் தொகுப்பு. தனிமனிதன் வறுமையுறுகிறபோது சமுதாயம் தன்னிலையில் தாழ்கிறது. கயமை மேலோங்குகிறபோது கடமையுணர்வு தவறுகிறது. பிறருக்குக் கேடு சூழ்வான் முடிவும் கேடாகவே அமைகிறது. சமுதாயம் தடுமாறுகிறபோது அரசும் தடுமாறுகிறது. தடுமாறும் அரசின்கீழ் உள்ள மக்களும் வாடி உலர்கிறார்கள். உதிர்கிறார்கள்.

    “வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்
    சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி
    யார்கண்ணும் இகந்து செய்து இசைகெட்டான் இறுதிபோல்
    வேரொடு மரம்வெம்ப விரிகதிர்  தெறுதலின்
    அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள் வெஃகிக்
    கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடி அவன் நிழல்
    உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம்”

    மேற்கண்ட பாடலின் பாடுபொருள் சமுதாயமன்று. பாலைத்திணையே. பாலையின் கருப்பொருள்களை வண்ணனைச் செய்யப் புகும் கவிஞருக்குச் சமுதாயம் பற்றி ஓடிய சிந்தனைகள் உவமைகளாக அமைந்துவிடுகின்றன. பாலையின் வாடலுக்கு, வறியவனின் இளமை உவமமாக அமைத்திருப்பதைப் போலவே தலைவியின் வாடலுக்கும் பொருளற்றவனின் இளமை உவமமாக்கப்பட்டுள்ளது.

    “இருளிடை என்னாய் நீ இரவஞ்சாய் வந்தக்கால்
    பொருளில்லான் இளமைபோல் புல்லென்றாள் வைகறை
    அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்”

    மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களிலிருந்து மறைபொருளாகிய அகத்திணையைப் பாடுகிற நேர்வுகளிலும் புறப்பொருளாகிய சமுதாயச் சிந்தனைகள் தமிழ்க் கவிதைகளில் உவமமாக அமைந்துவிடும் பாங்கை அறியலாம். பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் வறியவன் ஒருவனுடைய இளமையையும் அருளாளன் ஒருவனுடைய ஆக்கத்தையும் உவமமாக அமைத்திருக்கிறார்கள்.

    உவமங்களில் உலா வரும் ஊமன் 

    வறியவன் இளமை உவமமானது போலவே, வாயில்லா ஊமையும் உவமமாகியிருக்கிறான். வாயில்லாதவன் ஊமன். கவிஞர் ஒருவர் வாயில்லா அவனைக் கண்ணில்லா ஊமனாக்கி அவன்மேல் கழிவிரக்கத்தைப் பெருக்குகிறார்.

    “மாரி இரவின் மரங்கவிழ் பொழுதில்
    ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
    கண்ணில் ஊமன் கடல்பட்டாங்கு”

    தன்னைப் புரக்கும் வெளிமானின் மறைவைத் தாங்கிக் கொள்ள இயலாத பெருஞ்சித்திரனார் தன்னுடைய இரங்கத்தக்க நிலையை உவமத்தால் வெளிப்படுத்துங்கால் இந்த உவமத்தைப் பயன்படுத்துகிறார். ‘மாரி இரவு’ என்பதால் ஊமனைக் ‘கண்ணில்லா ஊமன்’ என, ‘இருபொறி இழந்தவன் இருட்டில் படும் வேதனையை’ உவமமாக்கிக் கூறுகிறார். இருட்டிலே தவிக்கும் கண்ணில்லா ஊமன் நிலை இதுவாயிருக்கக், கண்ணுடைய ஒருவனைக் கையில்லா ஊமனாக அகத்திணைப் பாடலொன்று உவமமாக்கிக் காட்டியிருக்கிறது.

    “ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
    கையில் ஊமன் கண்ணில் காக்கும்
    வெண்ணெய் உணங்கல் போலப்
    பரந்தன்று இந்நோய்”

    தலைவியைப் பிரிந்த தலைவனைப் பாங்கன் தேற்றுகிறான். தேற்றுகிற பாங்கனுக்குத் தானுற்ற காமநோயை வெளிப்படுத்தும் தலைவன், மேற்கண்ட உவமத்தைப் பயன்படுத்துகிறான். ‘வெண்ணெய் உணங்கல்’ தலைவனின் மேனிக்கு உவமை. அதனை ‘ஞாயிறு காய்தல்’ நோய் பரவுதற்கு உவமை. கையில் ஊமன் தலைவனுக்கு உவமை. ‘கையில்லாமையால் உருகும் வெண்ணெயை எடுத்து நிழலிட்டு உருகாமற் காக்கவும், ஊமனாதலின் பிறர்க்கு அதனை உரைக்க இயலாமை பற்றிப் பிறராலே ஓம்பவும் இயலாதவன் ஆனாற்போலத், தானும் தன் அகத்தைத்  தானேயாதல் பிறர் உதவியாலாதல் ஓம்ப முடியாதவன் ஆயினான்’ என்னும் தலைவன் நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு இவ்வுவமை அமைந்துள்ளது. கண்ணில்லா ஊமன் புலவர். கையில்லா ஊமன் தலைவன். இவர் இருவருமன்றி இன்னொருவருக்கும் ஊமன் உவமமாகப் பயன்பட்டிருப்பதையும் அறியமுடிகிறது.

    தலைவனைப் பிரிந்து வாடுகிறாள் தலைவி. அவள் வாட்டம் கண்டு மனம் வருந்துகிறாள் தோழி. அத்தோழியின் வருத்தம் தனக்கு எத்தகைய துன்பத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கூற வந்த தலைவி,

    “……..கூவல்
    குரால்ஆன் படுதுயர் இராவில் கண்ட
    உயர்திணை ஊமன் போலத்
    துயர்பொறுக் கல்லேன் தோழி!”

    பாங்கனுக்குப் பதிலுரைத்த தலைவனைப் போலப் பாங்கியின் பாசம் கண்டு வருந்திய தலைவியும் இவ்வாறு ஓர் ஊமனை உவமையாக்கிக் காட்டுகிறாள். கிணற்றினுள் வீழ்ந்துவிட்ட குரால் நிற பசு படுகின்ற துன்பத்தை இரவிலே கண்ட மக்களினத்து ஊமன் போல் தோழிக்காகத் தலைவி வருந்துகிறாள் என்பது கருத்து. மேலே சுட்டிய எடுத்துக்காட்டுக்களில் ‘கண்ணில் ஊமன்’, ‘கையில் ஊமன், ‘உயர்திணை ஊமன்’ என்றவாறு பல நிலைகளில் ‘வாயில்லா ஊமை’ உவமிக்கப்பட்டிருப்பது கொண்டு, தமிழ்க்கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் உவமமாக்கப்படும் முயற்சி  தொடக்கக் காலத்திலேயே கால் கொண்டுள்ளது என அனுமானிக்கலாம்.

    ஊமையைத் தொடர்ந்த ஓர் ஏர் உழவன்

    ஊமனைத் தொடர்ந்து உழவன் ஒருவனையும் உவமமாகத் தமிழ்க்கவிதை உலகம் கண்டிருக்கிறது. பிரிந்து சென்ற தலைமகன், மீண்டும் திரும்பி வருங்கால் தலைவியின் நிலையை எண்ணுகிறான். அவளைக் காண விரைந்து செல்ல வேண்டிய தன் நிலையையும் கருதுகிறான்.

    “ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
    ஓரேர்  உழவன் போலப்
    பெருவிதுப் புற்ற”

    அவன் நிலை உவமத்தின் வழிச் சுட்டப்படுகிறது. ஓர் ஏரை மட்டுமே உடைமையாகக் கொண்ட ஏழை உழவன், மழையினால் ஈரம் பட்ட காலம், அந்த ஈரம் உலர்வதற்குள் நிலத்தை உழுதுவிட வேண்டும் என்னும் நிலை, அதனால் அவனுக்கு ஏற்படும் மன உளைச்சல்’ என்னும் உவமப் பாங்கு ஒருபுறம். ‘தலைவன் செல்ல வேண்டிய இடைவழியோ தொலைவு., பருவம் கண்ட தலைவியின் ஆற்றாமை, ஆற்றாமை நீளின் அவள் இறந்துபடும் ஏதம், விரைந்து சென்று அவள் துயர் துடைக்க வேண்டும் என்னும் எண்ணத்தால் ஏற்படும் மன உளைச்சல்’ எனப் பொருண்மை நிலை மற்றொரு புறம். பொருள் புலப்பாடே உவமத்தின் தலையாய பணி என்பதை நன்குணர்ந்திருந்த  இப்புலவர் தலைவனின் மனநிலைக்கு உழவனின் மனநிலையை உவமையாக்கித் தமது சமுதாயச் சிந்தனைக் கொள்கையை நிலைநிறுத்துகிறார். தலைவியின் பிரிவுத் துயரைப் போக்கவரும் தலைவனின் உள்ளத்தில் உழவனைப் பற்றிய சிந்தனையைப் பதியவைக்கும் சங்கச் சான்றோருடன் சமுதாயப் பார்வை பற்றிய கவிதைத் தொழில்நுட்பம் பெரிதும் வியக்கத்தக்கதாம்.

    சமர்க்களத்திலும் சமுதாயச் சிந்தனைகள்

    கற்பனை வளத்திலும் மொழி ஆளுமையிலும் தமக்கென தனித்த இடத்தைப் பெற்றுத் திகழ்வன இடைக்கால இலக்கியங்கள். அவற்றுள் ‘கலிங்கத்துப் பரணி’ என்பது தமிழின் கவிச்சக்கரவர்த்திகள் மூவருள் ஒருவரால் பாடப்பட்ட பெருமையினையுடையது. எள்ளின் முனையளவும் சமுதாய நோக்கு தேவைப்படாத பாடுகளத்தைத் தனக்கிடமாகக் கொண்டது. முடியாட்சியின் மாண்புகளை முழுமையாகக் காட்சிப்படுத்தும் இலக்கியம் அது. அத்தகைய இலக்கியத்தில்கூடச் சமுதாயச் சிந்தனைகள் உவமங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் அறியக் கிடக்கின்றது. போர்க்களத்தைப் பாடுகிற செயங்கொண்டார் சமுதாயம் பற்றிய தம்முடைய சிந்தனைகளை உவமங்களால் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

    “சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச்
    சாருநர்போல் வீரர்உடல் தரிக்கும் ஆவி
    போமளவும் அவரருகே இருந்து விட்டுப்
    போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின்”

    வறுமையைப் போக்குதற்கான மக்களாட்சி நெறிமுறைகளில் ஒப்புரவும் ஒன்று. அதுபற்றித் திருவள்ளுவர் தனி அதிகாரமே செயதிருக்கிறார். அவர் காலத்தில் அத்தகைய கருத்தாக்கமே பெரும் புரட்சிக் கருவாகும். ‘போராட்டத்தின் மூலமே வறுமையை ஒழிக்க முடியும்’ என்னும் கருத்தாக்கம் நிலைகொண்ட இருபதாம் நூற்றாண்டுப் பாரதிதாசனே இந்த ஒப்புரவைக், ‘கடுகுள்ளம், துவரையுள்ளம், தென்னையுள்ளம், மாம்பிஞ்சு உள்ளம்’ எனப் படிநிலை வளர்ச்சி காட்டிப் பாடியிருப்பதொன்றே இதன் சிறப்பைக் காட்டப் போதுமானதாகும். அலந்தார்க்கு உதவுதலாகிய இச்சிந்தனையைக் கவிஞர் ‘நரியின் ஏமாற்றத்திற்கு’ உவமமாக அமைத்துக் காட்டியிருக்கிறார். ‘உதவுவார்’ என எதிர்பார்த்து ‘உதவவே மாட்டார்’ என்னும் முடிவையும் அறியாமல் ஏங்கி நிற்கும் நரிக்குலத்திற்குக் கவிஞர் காட்டும் உவமம், சமுதாயச் சிந்தனைகளில் அவருடைய உள்ளம் தோய்ந்த பாங்கை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

    பாரதிதாசன் உவமங்களில் சமுதாயச் சிந்தனைகள்

    பாரதிதாசன் கவிதைகளில் இடம்பிடிக்காத உவமங்களே இல்லை எனலாம். அவருடைய கவிதைகளில் ‘தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படும்’ உவமங்களில் சமுதாயச் சிந்தனைகளைத் தாங்கிய உவமங்கள் தனிச்சிறப்புக்குரியன. தான் பெற்ற மழலையைத் தாயைப் போலத் தந்தை தூக்க முடியாது. வளர்ந்த நிலையில் குழந்தைகளை எவரும் தூக்கலாம். இந்தப் பட்டறிவைத் தம்முடைய நுனித்த நோக்கினால் கண்ட பாரதிதாசன் உவமங்களால் வெளிப்படுத்துவதை அறியமுடிகிறது.

    “ஆழியில் உள்ள அழகு மட்கலத்தை
    இயற்றி யோர்க்கே எடுப்பதுமுடியும்
    சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்”

    “உலைஅமிழ்தை வறியவள் ஒருத்தி தூக்கல் போல்
    தவறாது தூக்குவது தலையாகிய கடன்”

    தான் வனையும் மட்பாண்டங்களைச் சக்கரத்தில் இருந்து எடுக்க குயவனால் மட்டுமே இயலும். அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் அழகு மட்கலத்தை யார் வேண்டுமானாலும் தூக்கித் தட்டிப் பார்க்கலாம். பச்சைப் பானையைத் தூக்குவது குயவனால்தான் இயலும். பச்சைக் குழந்தையைத் தூக்குவது தாய்க்கு மட்டுமே கூடும். குழந்தையைப் ‘பச்சைமண்’ என்னும் வழக்கு ஒப்பு நோக்கத்தக்கது. குழந்தையைத் தூக்குதற்குரிய புறச்செயலுக்குக் குயவனை ஒப்புமை கூறியிருக்கும் பாங்கு இதுவாக, அப்பொழுதில் இருக்க வேண்டிய எச்சரிக்கையுணர்வை வறுமையில் உழன்ற ஒருத்தி, தான் வடித்த உலைச்சோற்றுப் பானையை நழுவ விடாது பொறுப்புடன் தூக்கி இறக்கிவைப்பதுடன் ஒப்பிட்டுக் காட்டியிருக்கும் பொருத்தப்பாடு  நேர்த்தி  நிறைந்தது.  அதனால் நெஞ்சு கவர்ந்தது.

    “உலக நிகழ்ச்சிகளை எத்துணைக் கூர்ந்து நோக்கியுள்ளான் என்பதைப் புலப்படுத்தும் முகத்தால் உவமை அவனது புலமையையும் காட்டுகிறது”

    ஒப்புமை அடிப்படையில் பொருள் புலப்பாட்டை நோக்கமாகக் கொண்டிருப்பதோடு கவிஞனின் நுண்ணோக்கினை வெளிப்படுத்தும் கருவியாகவும் செயல்படுகிறது என்னும் அறிஞர் கைலாசபதியின் மேற்கண்ட கருத்து ஈண்டு ஒப்பு நோக்கிற்காகச் சுட்டப்படுகிறது.

    புதுக்கவிதை உவமங்களில் சமுதாயச் சிந்தனைகள்

    காலமாறுதல், சமுதாயச் சிக்கல்கள், அறிவியல் வளர்ச்சி,  நாகரிகம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் கலப்புக்கள், உலகச் சிந்தனைப் போக்கின் மாறுதல்கள் எனப் பெருகி வளரும் காரணிகளின் அடிப்படையில் புதிதாகத் தோன்றிய ஓர் இலக்கிய வடிவமே ‘புதுக்கவிதை’ ஆகும். பெரும்பாலும் பொருண்மை நிலையினாலும் வெளிப்பாட்டு உத்தியாலும் அவைகள் அப்பெயர் பெற்றன என்பது பொருந்தும். மரபுக் கவிதைகளைவிடப் பன்மடங்கு சமுதாயச் சிந்தனைகளைத் தமக்கு உள்ளடக்கமாகக் கொண்டு விளங்குவன புதுக்கவிதைகள் ஆகும். அவற்றுள் பொருள் புலப்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் உவமைகளில் பல சமுதாயச் சிந்தனைகளைத் தாங்கி நிற்பதை அறியமுடிகிறது.

    முடி திருத்திய முத்தும் மீராவின் உவமமும்

    கவிஞர் மீரா குறிப்பிட்ட ஒருவரிடமே முடி திருத்திக் கொள்வார். ஒரு நாள் அவர் கடைக்குச் செல்லும் போது முடி திருத்தும் முத்து என்பார் மறைந்த சேதியைக் கேட்டு அவருக்குக் கையறுநிலை பாடுகிறார். அக்கையறுநிலைக் கவிதையில் முத்து கடையில் எப்பொழுதும் குழுமியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் உவமை சொல்கிறார்.

    “ஒரு கிராமத்துத்
    திருமணப் பத்திரிகையில் வரும்
    தாய் மாமன்களின்
    பெயர்களைப் போல”

    அக்கடையில் குழுமியிருப்பார்களாம். பாடுபொருளாக்கப் பட்டிருப்பவர் முடி திருத்தும் தொழிலாளி என்பது புதுக்கவிதையின் சமுதாயப் பாடுபொருள். அக்கடையில் குழுமியுள்ளவர்களுக்குத் திருமண அழைப்பிதழில் அச்சடித்து அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் தாய்மாமன்கள் குழு உவமம். அழைப்பிதழில் செலுத்திய மீராவின் ஆழ்ந்த நோக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது  இந்த உவமம்.

    காதலை அளக்கும் கண்ணீரும் வியர்வையும்

    ‘உள்ளங்களின் இடப்பெயர்ச்சியே காதல்’ என்பது தமிழ்க்கவிதைகளின் காதல் பற்றிய ஒருவரிக் கருதுகோளாகலாம். ‘இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்’ என்பது கம்பன் பார்வை. அந்தக் கருதுகோளின் பன்முகப் பரிமாணங்களே தமிழ்க்கவிதைகளின் பெரும் பரப்பை ஆதிக்கம் செய்து கொண்டிருக்கின்றன. மரபிலக்கியங்களில் காணப்படாத ‘தலைவன் புலம்பல்’  என்பது தற்காலக் கவிதைகளில் பெருவழக்கு. காதலியை நோக்கி அவள் காதலைப் பெருமைப்படுத்தும் காதலன்,

    “நீ எனக்குக் காதலைத் தந்தாய்
    அது
    உழைப்பாளிகளின் வியர்வையைப் போல்
    உயர்வானது”

    என உழைப்பாளியின் வியர்வையைத் தலைவியின் காதலுக்கு உவமையாக்குவதைக் காணமுடிகிறது. தலைவியின் காதலுக்கு மாற்றாகத் தான் தரும் காதல் காவியத்தை ஏழையின் கண்ணீரோடு ஒப்பிட்டு உரைப்பதையும் காணமுடிகிறது.

    “நான் உனக்கு இந்த
    வசன காவியத்தைத் தருகிறேன்.
    இது
    ஏழையின் கண்ணீரைப் போல்
    உண்மையானதா என்று பார்!”

    காதலியின் காதல் உயர்வுக்கு உழைப்பாளியின் வியர்வைத் துளிகளை உவமிக்கும் மீரா, தன்னுடைய காவியத்தின் உண்மைக்கு ஏழையின் கண்ணீரை உவமித்துக் காட்டியிருக்கும் திறன் சுட்டத்தகுந்தது.

    ஊசியில் காதும் உள்ளத்துக்கு வழியும்   

    தமிழ்க்கவிதைகளின் தலைமைப் பாடுபொருள் காதல். இருப்பினும் தற்காலக் கவிதைப் படைப்புக்களில் சமுதாயச் சிந்தனைகளே மேலோங்கியிருக்கின்றன என்பது அக்கவிதைகளை ஆராய்ந்தோர் கண்ட முடிபு. காதலியின் உள்ளத்தில் காதலன் இடம் பிடிப்பதைப் பாரதிதாசன்,

    “கண்படைத்த குற்றத்தால் அழகி யோன்என்
    கருத்தேறி உயிரேறிக் கலந்து கொண்டான்”

    எனத் தலைவி கூற்றாக அமைத்துக் காட்டுவார். இந்தச் சிந்தனையை உள்வாங்கிக் கொண்ட வைரமுத்து,

    “விழியில் விழுந்து இதயம் நுழைந்து
    உயிரில் கலந்த உறவே”

    என வழிமொழிவார். உயிரேறிக் கலந்து கொண்டதற்கும், உயிரில் கலப்பதற்கும் உவமம் ஏதும் மேற்கண்ட கவிதைகளில் சுட்டப்படவில்லை. ஆனால் கவிஞர் அப்துல் ரகுமான், தலைவி கூற்றாக இருக்கும் மேற்கண்ட உள்ளடக்கத்தைத் தலைவனுக்கு மாற்றுவதோடு அதற்குச் சமுதாயம் சார்ந்த உவமையையும் கூறுகிறார். காதலியின் உள்ளத்துக்குள் செல்லும் வழியறியாமல் தடுமாறும் காதலனின் தடுமாற்றத்தைக், கண் தெரியாத முதுமையடைந்த தையல்காரன் ஒருவன், ஊசியில் காது தேடும் தடுமாற்றத்துடன் ஒப்பிடுவதைக் காணமுடிகிறது.

    “உன் இதயத்திற்குள் நுழைய
    வழி பார்க்கிறேன்,
    ஊசியின் காதைத் தேடும்
    பார்வை மங்கிய
    கிழட்டுத் தையல்காரனைப் போல”

    பாவேந்தர் கண்ட காதலியும் வைரமுத்து கண்ட காதலியும் தத்தம் காதலர்களுக்குத் தம் உள்ளத்துள் நுழைய அனுமதித்த நிலையில் அப்துல் ரகுமான் கண்ட காதலன் தன் காதலியின் உள்ளம் நுழைய வழிதேடும் அழகியலும் அவ்வழகியலைச் சிந்திக்க வைக்கும் உவமமும் கவிதையின் அகப்புற அழகை மேம்படுத்துவதைக் காணலாம்.

    காதலன் துடிப்புக்குக் கவிஞனின் உவமைகள்

    சங்க இலக்கியத் தலைவன் தலைவியைக் காண இடர்ப்படுவான். ‘அல்லகுறிபட்டு அலமறுதல்’ அவனுக்கு இயல்பு. தற்காலக் காதலன் காதலியைக் காணப் பதற்றமடைவான். இந்தப் பதற்றத்திற்குக் கவிஞர் மீரா காட்டும் உவமைகள் சுய பட்டறிவையும் கண்ணெதிரில் நிகழும் சமுதாய நிகழ்வுகளையும் ஒருசேரப் படம்பிடித்துக் காட்டுவதாய் அமைந்துள்ளன.

    “முதல் தடவையாய்
    நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்
    ஒரு வேலையில்லாப்
    பட்டதாரியைப்  போல்”

    “எதிர்பாரா விதமாய்
    மணமேடையில் அமரும்
    ஒரு ஏழைப் பெண்ணைப் போல்”

    நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் பட்டதாரியின் படபடப்பும், எதிர்பாரா வகையில் மணமகளான ஏழைப் பெண்ணின் பதற்றமும் முறையே ஐயத்திற்கிடையே தோன்றும் அச்சத்திற்கும், எதிர்பாராதது கிட்டியதனால் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும் உவமைகளாய் அமைந்து அவ்விருவர்தம் சமுதாய நிலைப்பாடுகளில் கவிஞருடைய பார்வையை உணர்த்துவதாக உள்ளன. மேற்கண்ட சில சான்றுகளால் பொருள் புலப்பாட்டுக்காக அமைகின்ற உவமங்களில் படைப்பாளனின் சமுதாயப் பார்வையும் பொருத்தமான உவமங்களாய் அமைகின்ற பாங்கு ஓரளவு புலப்படுத்தப்பட்டுள்ளது.

    நிறைவுரை

    ‘உவமம் என்பது செய்யுளுக்குப் புறத்தே நிற்பதன்று, அகத்தோடு கலந்து நிற்பது’ என்பதையும், அதனை வெறுமனே ‘அழகியல் வெளிப்பாட்டு உத்தி’ எனக் கருதுவதினும் பொருள் புலப்பாட்டுக் கருவி எனக் கருதியதே பழந்தமிழ்க் கவிதைகளின் உவமக் கோட்பாடு என்பதையும் எப்பொருளைப் பற்றிப் பாடும் கவிஞன் எவராயினும் அவன் மானுடத்தைச் சேர்ந்தவன் ஆகையால் அவனால் சமுதாயத்தைவிட்டு விலகி நிற்க முடியாது என்பதையும் இந்தக் கட்டுரைத்தொடர் தொடர்ந்து வலிமையான தரவுகளால் நிறுவி வருகிறது. அவற்றோடு கவிதைக்கு அழகு, அடர்த்தி கூட்டும் உவமம் கவிஞனின் சமுதாயச் சிந்தனைகளாக அமைகிறபோது படைப்பாளனின் அகப்புற முகவரியாகவே மாறிவிடுகிறது என்பதை இந்தக் கட்டுரை ஓரளவு சொல்ல முயன்றிருக்கிறது.

    (தொடரும்…)

    Share