Tag: அண்ணாகண்ணன்

  • பறந்து போ – திரை விமர்சனம்

    பறந்து போ – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    பறந்து போ படத்தைப் பார்த்த போது, கவலையாக இருந்தது. இது குழந்தைகளுக்கான படம் என முன்வைக்கும்போது சற்றே அச்சமாகவும் இருந்தது. படத்தின் அதீதமான காட்சிகள் பலவும் இயல்பானவையாகக் காட்டப்படுகின்றன. இவை தவறானவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல், சரிதான் எனக் குழந்தைகளே நினைக்கும் அளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    படத்தின் நாயகனாக வரும் சிறுவன் அன்பு (மிதுல் ரயான்), அப்பாவிடம் கோபித்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது சென்று விடுகிறான். அப்பா மிர்ச்சி சிவா, அவனைப் பல இடங்களில் தேடுகிறார். இதற்காகவே ஒரு பாடல் வைத்திருக்கிறார், இயக்குநர் ராம். வேர் இஸ் அன்பு? அன்பைக் காணவில்லை. காணோம் காணோம் கா கா காணோம். காத்தோடு காத்தா கரைஞ்சு போனானா? கிட்னாப்பர் கிட்ட மாட்டிக்கிட்டானா? டைம் மிஷின் ஏறித் தொலைஞ்சு போனானா? ஹைட் அண்ட் சீக்கே ஆட்றானா? என மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். காத்தோடு காத்தா கரைஞ்சு போனானா? என ஒரு குழந்தையைச் சொல்வது, மிகவும் அதிகப்படி. மதன் கார்க்கி இப்படி எழுதுவார் என எதிர்பார்க்கவில்லை.

    சிறுவன் தொலைவதும் அப்பா தேடுவதும் கண்டுபிடிப்பதும் ஏதோ நகைச்சுவை போல் வருகிறது. இதைப் பார்க்கும் சிறுவர்களுள் யாரேனும் இப்படி வேண்டுமென்றே தொலைந்தால் என்னாவது? இப்படிப் பெற்றோரிடம் சொல்லாமல், எங்காவது செல்வதும் பெற்றோரைத் தேட வைப்பதும் சரி எனப் பிள்ளைகள் நினைத்தால், எத்தகைய ஆபத்துகள், சிக்கல்கள் எழும் என இயக்குநர் யோசிக்கவே இல்லையா?

    அடுத்து, கிரஷ். பள்ளித் தோழியை அப்பா பார்த்தால், இவர் தான் உன் கிரஷ்ஷா? எனச் சிறுவன் அன்பு கேட்கிறான். தன் பள்ளித் தோழியைப் பார்க்கப் போகும்போது, நான் என் கிரஷ் வீட்டுக்குப் போகிறேன் என்கிறான். ஸ்லீப் ஓவர் எனச் சிறுவனும் சிறுமியும் சேர்ந்து படுத்துத் தூங்குகிறார்கள். பிறகு, அப்பா வேண்டும் என்கிறான் எனச் சொல்லி, சிறுவனைச் சிறுமியின் அம்மா தூக்கிக்கொண்டு வந்து, சிவா அறையில் படுக்க வைக்கிறார்.

    சிறுவர்கள் இயல்பாக நண்பர்களாக இருக்கலாம். இதில் கிரஷ் என்ற வார்த்தை எதற்கு? பூ கொடுப்பதும் ஓரக் கண்ணால் பார்த்துச் சிரிப்பதும் ஒன்றாகப் படுப்பதும் அவர்களுக்குத் தேவையற்ற கற்பனைகளைக் கொடுக்கும் வாய்ப்பு உண்டு. பத்து வயதுச் சிறுவர்களுக்கு இவையெல்லாம் தேவையா? பல திரைப்படங்களும் திரைப்பாடல்களும் பள்ளிப் பருவக் காதலைக் காட்டுவதால் அது இயல்பு என்ற எண்ணம் எழக் கூடாது. பல நிலைகளில் சமூக அடுக்குகள் கொண்ட தமிழ்ச் சமூகம், இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டது. இந்தப் பின்னணியில் உன் கிரஷ், என் கிரஷ் எனச் சிறுவர்கள் பேசுவது நல்லதில்லை. நகரத்து மாணவர்களுக்கும் கிராமத்து மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தும் வாய்ப்பும் இந்தப் புதிய பண்பாட்டுக்கு உண்டு.

    பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், சிறுவனை வீட்டில் பூட்டிவிட்டுச் செல்கிறார்கள். சிறுவன் அன்பு, பீட்சா, பர்கர் எனக் கேட்டும் ஆர்டர் செய்தும் சாப்பிடுகிறான். வேவ்போர்டு விளையாடுகிறான். வீட்டில் நெட்பிளிக்ஸ் பார்க்கிறான். வீடியோ கேம் விளையாடுகிறான். கொரிய இசைக்குழுவான பிடிஎஸ் இசைக்கும் பாடல்களைப் பார்க்கிறான். இந்தப் பெருநகர வழக்கங்களைக் காட்டுவதால், சிறுநகரத்திலும் கிராமத்திலும் இருந்து இதைப் பார்க்கும் சிறுவர்கள், தாங்களும் இவ்வாறு பீட்சா, பர்கர் சாப்பிட வேண்டும் எனக் கேட்கக்கூடும். பெருநகரத்திலேயே எல்லோர் வீடுகளிலும் இப்படி எந்த நேரமும் ஆர்டர் செய்து சாப்பிடுவதில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு, புதிய இயல்பாகச் சிறுவர்கள் அடம் பிடித்துக் கேட்கலாம்.

    படம் முழுவதும் ஒரு பொறுப்பின்மை விரவி இருக்கிறது. சிறுவன் அன்பு எண்ணெய் டின்னை உடைத்து, தரை முழுவதும் எண்ணெய் பரவியுள்ள நிலையிலும் அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பது போல் கேம் விளையாடுகிறான். அப்பாவே கண்டுபிடித்துத் துடைக்கிறார். தான் எண்ணெய் கொட்டியதால் மற்றவர்கள் வழுக்கி விழுந்துவிடுவார்களே, அவர்களை எச்சரிக்க வேண்டுமே என்று கூட அன்புக்குத் தோன்றவில்லை. படம் நெடுகிலும் இருசக்கர வாகனம் ஓட்டும் சிவா, பெரும்பாலும் தலைக்கவசம் அணியவில்லை. கடன் கொடுத்தவருக்கு உரிய பதில் சொல்லவில்லை. கடன் கொடுத்தவர் துரத்தும்போது சாலையோரப் பாப்கார்ன் கடையில் இடித்துப் பாப்கார்ன் சிதறுகிறது. அவருக்கு இவர்கள் எந்த இழப்பீடும் தரவில்லை.

    சிறுவன் அன்பு அடம் பிடிப்பதுடன் திமிராகவும் நடந்துகொள்கிறான். அப்பாவை வீட்டுக்குள் பூட்டி வைக்கிறான். உடனே இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான். 25 கி.மீ. தள்ளிக் கடை இருந்தாலும் உடனே பர்கர் சாப்பிட வேண்டும் என்கிறான். சாலையில் வேவ்போர்டு விளையாடுகிறான். மலை சூழ்ந்த இடத்துக்கு வீட்டை மாற்று என்கிறான். பெற்றோர் எதற்கும் கோபப்படாமல், ஐயம் ப்ரவ்டு ஆப் யூ என்கிறார்கள். அதிகம் செல்லம் கொடுக்கும் இந்தக் காலத்துப் பெற்றோர்களை இதில் காண முடிகிறது. ஆயினும் பிள்ளைகள் நினைத்ததை எல்லாம் உடனே செய்ய வேண்டும் என நினைக்கக் கூடாது. பெற்றோர்களும் அவர்கள் கேட்டதை எல்லாம் உடனே நிறைவேற்ற வேண்டும் என நினைக்கக் கூடாது.
    படம், இந்த வகையில் சமநிலையில் இல்லை.

    கிறித்துவப் பெண், இந்துவைக் காதலித்துத் திருமணம் செய்வதும் இந்த இந்து அப்பாவும் மகனும் முஸ்லிம் வீட்டுக்குப் போய்த் தங்குவதும் இயல்பாக உள்ளன. இதிலும் கிறித்துவப் பெண், தம் கணவரைத் தம் வீட்டார் சொல்வது போல் சாத்தானே என அழைப்பது இயல்பாக இல்லை.

    படத்தில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன. நல்ல விஷயத்துக்கு அடம் பிடியுங்கள். நீங்கள் அடம் பிடித்தால், உங்கள் அப்பாவின் புகைப் பழக்கத்தை விடச் செய்யலாம் என வழிகாட்டியது நன்று. சிறுவன் அன்பு துணிச்சலாக நீச்சல் அடிப்பதும் டிராக்டரை நிறுத்தி லிப்ட் கேட்பதும் புதிய நண்பர்களைப் பெறுவதும் புதிய விளையாட்டுகளைக் கற்பதும் சிறப்பாகக் காட்டப்பட்டு உள்ளன.

    மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையில், 11 பாடல்கள், படத்தில் இடம் பெற்றுள்ளன. பாடலுக்குத் தேர்ந்தெடுத்த சூழ்நிலைகளும் அதற்கு எழுதிய வரிகளும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால், பின்னணி இசையிலும் சூழலுக்கு ஏற்ற மனநிலைக்குப் படம் பார்ப்பவர்களைக் கொண்டு வருவதிலும் இசையமப்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.

    மாணவர்களிடம் திரைப்படம் செலுத்தக்கூடிய தாக்கம் மிகப் பெரியது. மாணவர்கள் படம் பார்க்கும்போது என்னென்ன விஷயங்களை எடுத்துக்கொள்வார்கள் என்ற கண்ணோட்டம், இயக்குநருக்குத் தேவை.

    ஊர் சுற்றுங்கள், உலகம் சுற்றுங்கள், புதிய இடங்களுக்குச் செல்லுங்கள், புதியவர்களைச் சந்தியுங்கள் என்பதே இயக்குநர் ராம் சொல்ல வந்த செய்தி. அவரது அனுபவத்திற்கு அவர் இன்னமும் சிறப்பாகப் பாத்திரங்களைப் படைத்திருக்கலாம். படத்தை எடுத்திருக்கலாம்.

    பறந்து போ – இன்னும் பறக்க வேண்டும்.

    Share
  • நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது சரியா?

    நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது சரியா?

    அண்ணாகண்ணன்

    ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ பாடலை அண்மையில் கேட்டேன். 1991ஆம் ஆண்டு வெளியான சிகரம் திரைப்படத்தில், வைரமுத்து எழுதிய பாடலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையமைத்துப் பாடியுள்ளார். மிக இனிய இசையும் குரலும் நல்ல பல வரிகளும் கொண்ட பாடல். மென்மையாக வருடி, உள்ளத்தை லேசாக்கக் கூடியது.

    வாராயோ வெண்ணிலாவே, நிலாவே வா, நிலா நிலா ஓடி வா என நிலவை அழைத்த கவிஞர்களின் வரிசையில் வைரமுத்து இணைந்தார். வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா என்றும் இவரே கேட்டார். வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலில் நிலவுடன் காதலையும் கலந்து பாடி ஈர்த்துள்ளார். இதில் இடம்பெற்ற ‘நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை!’ என்ற வரியை முதலில் கேட்ட போது, ஏதோ அரிய தத்துவம் போல் மயக்கியது. பிறகு தான் இது அறிவியலுக்குப் புறம்பானது என்பது புலப்பட்டது.

    இருவர் படத்தில் ‘பூ கொடியின் புன்னகை’ என்ற பாடலிலும் ‘நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை’ என எழுதியுள்ளார். அடிப்படை இல்லாத இப்படி ஒரு பார்வையை வைரமுத்து எங்கிருந்து பெற்றார் என்று தெரியவில்லை.

    சூரிய ஒளி, பூமியின் மேற்பரப்பில், குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறத்தை அதிகமாகச் சிதறடிப்பதால் வானம் நம் கண்களுக்கு நீல நிறமாகத் தெரிகிறது. சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறமாக வானம் தெரிவதற்கு ஒளிச்சிதறலே காரணம். இந்த நிறங்கள் மாறக் கூடியவை. இந்த நிறங்களுக்கு அப்பால் எல்லையற்ற வெளியும் எண்ணற்ற கோள்களும் கற்பனைக்கு எட்டாத சக்திகளும் இருக்கின்றன. இந்த நிலையில், நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது அறியாமையின் வெளிப்பாடு.

    ஒன்றுமற்ற ஒரு வெற்றிடத்திலிருந்துதான் இவ்வளவு பெரிய பிரபஞ்சம் தோன்றியிருக்கிறது. எனவே வானம் என்பதே ஏதுமில்லாதது எனக் கூற இயலாது. மேலும், இந்த வெற்றிடத் தத்துவத்திற்கும் நீலத்தைப் பிரிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

    ‘வானம் எனக்கொரு போதிமரம்’ என எழுதிய வைரமுத்து, நீலத்தைத் தான் வானம் என்று கருதி எழுதினாரா? வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுசனை இன்னும் பார்க்கலையே என எழுதிய வைரமுத்து, வானத்தை இன்னும் சரியாகப் பார்க்கவில்லையா?

    Share
  • 3 BHK – திரை விமர்சனம்

    3 BHK – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்
    3 BHK திரைப்படத்தை இன்று பார்த்தேன். படத்தின் தொடக்கத்தில் காசா கிராண்டு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். இது வழக்கமானது தானே என்று நினைத்தால், இந்த ஒட்டுமொத்தப் படமும் காசா கிராண்டுக்கும் அது போன்ற இதர ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய விளம்பரப் படமாக அமைந்துள்ளது.
    வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கான எல்லாத் தூண்டில்களும் வலைகளும் சரியாக வீசப்பட்டுள்ளன. வாடகை வீட்டில் உள்ள சிக்கல்களை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் உள்ள கட்டுப்பாடுகள், போதாமைகள், சிக்கல்கள் அனைத்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. தண்ணீரை அளவாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தொடங்கி, மழைக் காலத்தில் வீட்டில் தண்ணீர் புகுந்துவிடுவது வரை. இதற்கு ஒரே தீர்வு, சொந்த வீடு வாங்க வேண்டும் (சொந்த வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது என்பது தனிக்கதை).
    சொந்த வீடு வாங்குவோருக்கான அடுத்த தூண்டில், இந்த இடம் பெரிய அளவில் வளரும். உங்கள் முதலீடு பல மடங்கு உயரும் என்பது. இதைப் படிப்படியாகப் படத்தில் காட்டுகிறார்கள். 2006க்கு முன்பு ஏழரை லட்ச வீடு, பிறகு பதினைந்து லட்சமாகி, அது பிறகு இருபத்தைந்து லட்சமாக உயருகிறது. இப்போது எவ்வளவு லட்சம் என்பதைச் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களை மனத்தளவில் இந்த விலைக்குத் தயார் செய்வதற்கு இந்த முந்தைய விலை விவரம் உதவுகிறது.
    கடன் வாங்காமல் வீடு வாங்க முடியாது என்பது படத்தின் அடுத்த மையக் கருத்து. இது வசனமாகவே வருகிறது. எனவே கடன் வாங்கத் தயங்குபவர்களை அதிலிருந்து வெளிவந்து கடன் வாங்கத் தூண்டுகிறார்கள்.
    வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது என்பதை ஏதோ பெரிய வெற்றி என்பதைப் போல், பல முறைகள், பல காட்சிகளில் காட்டுகிறார்கள். வீட்டுக் கடன் அளிப்பவர்கள், உரிய சான்றுகள் இருந்தால் மட்டுமே அளிப்பார்கள். இது முழுவதும் வணிகம். இதில் குடும்பக் கண்ணீருக்கு எல்லாம் இடமில்லை. வருவாய்ச் சான்று உள்பட வங்கி கேட்கும் சான்றுகள் உங்களிடம் இருந்தால் கடன் கிடைக்கும். இல்லை என்றால் இல்லை. இதற்கு எல்லாம் ரொம்ப உணர்ச்சிவசப்படக் கூடாது. இப்போது நிலையான வருவாய் இல்லாவிட்டாலும், அதிக வட்டிக்கு வீட்டுக் கடன் கொடுக்கப் பலர் இருக்கிறார்கள். அவர்களின் குறி, வட்டி வருவாய் தான். அப்படியே உங்களால் கடன் கொடுக்க முடியாவிட்டால், வீட்டை ஜப்தி செய்து ஏலம் விட்டுவிடுவார்கள். எனவே, வீட்டுக் கடனால் வங்கிகளுக்கோ நிதி நிறுவனங்களுக்கோ பெரிய இழப்பு எதுவும் கிடையாது; லாபமே அதிகம்.
    சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள், புறநகரில், சற்று தூரத்தில், சிறு நகரங்களில், கிராமங்களில் மனையாக வாங்கி வீடு கட்டலாம்; தனி வீடும் வாங்கலாம். இந்த வாய்ப்புகளைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் அடுக்குமாடி வீட்டை மட்டுமே தேர்ந்தெடுக்குமாறு காட்சிகள் அமைந்துள்ளன. இது அடுக்குமாடி நிறுவனங்களுக்கே சாதகமானது.
    படத்தின் நிறைவுக் காட்சியில், சித்தார்த் வாங்கும் சொந்த வீடும் காசா கிராண்டு வீடாக இருப்பது தற்செயலானது இல்லை.
    அந்த வீட்டைப் பார்க்க வரும் வீட்டுத் தரகர் யோகி பாபு அதன் சுவரைத் தடவிப் பார்த்து, தரமாகத்தான் கட்டியிருக்கிறார்கள், உங்கள் அப்பாவைப் போல என்று சொல்வதும் தற்செயலானது இல்லை.
    படம் பார்க்கும் ரசிகர்களை வாடிக்கையாளர்களாக மாற்றும் உள்நோக்கத்துடன் இந்தப் படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார்கள். இதற்குள் கச்சிதமான குடும்பக் கதையை, அதன் உணர்ச்சிகரமான தருணங்களோடு, ஆசைகளோடு கனவுகளோடு காட்சிப்படுத்தி இருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.
    படத்தில் நடித்துள்ள சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்பட அனைவரும் இது விளம்பரப் படம் இல்லை; உண்மையான கதை என்ற உணர்வை ஏற்படுத்தும் படியாகவே நடித்திருக்கிறார்கள்.
    அடுக்குமாடி வீட்டின் சிக்கல்களை, வீட்டுக் கடன் வாங்குவதன் சிக்கல்களை இன்னொருவர் இன்னொரு படமாகத் தயாரிக்கலாம்.
    Share
  • திருப்புவனம் அஜித்குமார் கொடூர மரணம்

    திருப்புவனம் அஜித்குமார் கொடூர மரணம்

    அண்ணாகண்ணன்

    திருப்புவனம் காவலர் அஜித்குமாரின் கொடூர மரணம், காவல் துறையின் கோர முகத்தைக் காட்டுகிறது.

    அஜித்குமாரை உடல் முழுவதும் ஈவு இரக்கமின்றி அடித்து, மிளகாய்ப் பொடி தடவி, சாகடித்த காவலர்களுக்கு எந்தக் குற்றவுணர்வும் இருக்காது. மேலதிகாரி சொன்னார், நான் செய்தேன் என்பார்கள். இது அவர்களுக்குச் சாதாரணம். ஆனால், பாதிக்கப்படும் மக்களுக்கோ அழியாத ரணம். சிரமறுத்தல் வேந்தருக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை, நமக்கோ பெரிய வாதை என்ற பாரதிதாசனின் பாடலே நினைவுக்கு வருகிறது.

    காவல் துறையினர், தங்கள் உயரதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் கண்டால், ஐயா / அம்மா எனப் பணிவாக அழைப்பார்கள். விறைப்பாக வணக்கம் வைப்பார்கள். அவர்கள் முன்னால் நின்றுகொண்டே கடமையாற்றுவார்கள். அதே நேரம், இதே காவலர்கள், சாமானிய எளிய மக்களை அதட்டி அழைப்பார்கள். வாடா போடா என ஒருமையில் பேசுவார்கள். அவர்களை உட்காரச் சொல்லாமல், நிற்க வைத்தே பேசுவார்கள். ஆதாரம் இல்லாவிட்டாலும் வெறும் சந்தேகம் இருந்தாலே அடித்து நொறுக்குவார்கள். அதிகாரம் மேலிருந்து கீழ்நோக்கிப் படிப்படியாகப் பரவும்.

    காவல் துறையினர் யாரையும் தடுத்து நிறுத்தி, அவர்களின் அடையாள அட்டையைக் கேட்க முடியும். தன்னை விசாரிக்கும் காவலரிடம் அடையாள அட்டையைக் காட்டுமாறு இங்கு யாரும் கேட்க முடியுமா?

    காவல் துறையினர் மீது மரியாதை எழ வேண்டுமே தவிர, பயம் வரக்கூடாது. காவல் துறை உங்கள் நண்பன் என ஒலிபெருக்கியில் பேசுவார்கள். ஆனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்த, லத்தியைச் சுழற்றுவார்கள். இவர்களின் லத்திக்குப் பயந்தே தள்ளுமுள்ளு ஏற்படும். யாருக்கு எந்தக் காயம், எந்த இழப்பு ஏற்பட்டாலும் இவர்களுக்குக் கவலை இல்லை. யாரும் இவர்களைக் கேள்வி கேட்க முடியாது.

    இந்தப் புண்ணிய பூமியில், ஜனநாயகத் திருநாட்டில், கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது எனத் தலைநிமிர்ந்து யாரும் நடக்க முடியாது. காவல் துறையினர் மன்னர்களைப் போல் நடப்பார்கள். அவர்களுக்கு மக்கள் கூழைக் கும்பிடு போட வேண்டும். மதிக்காதவர்களை முட்டிக்கு முட்டி தட்டுவார்கள். சட்டத்தைத் தங்கள் கையில் எடுப்பார்கள். சிறைக் கழிவறையில் வழுக்கி விழவைத்து, மாவுக் கட்டுப் போடுவார்கள். நீதியை நிலைநாட்டியதாக நினைப்பார்கள்.

    காவல் துறையில் வெளிப்படைத்தன்மை இல்லாததே அடிப்படைச் சிக்கல். எல்லாக் காவல் நிலையத்திலும் கண்காணிப்புப் படக்கருவிகள் வைக்காதது ஏன்? அவை எந்த நேரத்திலும் இயங்குவதை உறுதி செய்யாதது ஏன்? காவல் துறையினர் மீது குற்றம் சாட்டப்படும்போது, அவர்கள் மட்டும் எளிதாகத் தப்பிவிடுவர். அந்த அமைப்பே கூட்டாகச் சேர்ந்து அவர்களைக் காப்பாற்றும்.

    இடைநீக்கம், இடமாற்றம், அபராதம் போன்றவை தண்டனையே கிடையாது. இதைச் செய்தவன் மூலம் ஏதோ நடவடிக்கை எடுத்தது போல் காட்டுகின்றார்கள். மனமாற்றம் ஏற்படுத்தவே தண்டனை என்றால், உண்மையில், தண்டனை பெற்றவர்களுக்கு இதனால் எந்த மனமாற்றமும் ஏற்படாது.

    அஜித்குமாருக்கு நடந்தது, நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாரும் எதற்கும் பொறுப்பு ஏற்க மாட்டார்கள். அதிகாரம் மிக்கவர்களுக்குச் சேவைகள் செய்து, அவர்களைக் காத்து நிற்பார்கள். எளிய மக்களை அடித்துத் துரத்துவார்கள். எனில், இந்த மக்களுக்கு யார்தான் பாதுகாப்பு?

    Share
  • யாரிசைக்க வருகுவதோ? – சில கேள்விகள்

    யாரிசைக்க வருகுவதோ? – சில கேள்விகள்

    அண்ணாகண்ணன்

    யாரிசைக்க வருகுவதோ? – ஒலி யாழினின்று வருகுவதோ? என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். 2022ஆம் ஆண்டு வெளியான ஹே சினாமிகா படத்தில் கோவிந்த் வசந்தா இசையில், மதன் கார்க்கி வரிகளில், பாம்பே ஜெயஸ்ரீ குரலில் வெளிவந்துள்ளது. மிக இனிய இசை, நெகிழச் செய்யும் வரிகள்.

    பாரதியாரின் எங்கிருந்து வருகுவதோ – ஒலி யாவர் செய்குவதோ? என்ற பாடலின் தாக்கம், இந்தப் பாடல் முழுவதும் வெளிப்படுகிறது.

    குன்றினின்றும் வருகுவதோ எனப் பாரதி கேட்பதை, மாமலையின் மீதிருந்தோ? என மதன் கார்க்கி கேட்கிறார். காற்றைக் கொண்டு தருகுவதோ எனப் பாரதி கேட்பதை, காற்றிலேறி வருகுவதோ? என மதன் கார்க்கி கேட்கிறார். யமுனை அலை பற்றிப் பாரதி கேட்க, கடல் அலை பற்றி மதன் கார்க்கி கேட்கிறார். ஆயினும் நாணறுந்த இன்பமெலாம் நானருந்த வருகுவதோ? என்ற மதன் கார்க்கியின் வரியை நான் மிகவும் ரசித்தேன்.

    இதன் பல்லவியில் ஒலி எங்கிருந்து வருகிறது என்று கேட்ட பிறகு, மாமலையின் மீதிருந்தோ? – வெள்ளி மாகமதன் மீதிருந்தோ? எனக் கேட்கிறார். வெள்ளி மாகம் என்பது எதைக் குறிக்கிறது? மாகம் என்பதற்கு மேலிடம், ஆகாயம், சுவர்க்கம், திக்கு, மேகம் எனச் சில பொருள்கள் அகராதியில் உள்ளன. மேகம் எனக் குறிப்பிட விரும்பினால் நேரடியாக வெள்ளி மேகமதன் மீதிருந்தா என்றே கேட்டிருக்கலாம். மாகம் என முற்றிலும் புதிய சொல் தேவையில்லை. வெள்ளி என்பதுடன் இணைத்துப் பார்த்தால், வெள்ளி ஆகாயம் என்பதே பொருளமைதியுடன் உள்ளது. இதைத்தான் மதன் கார்க்கி சொல்ல விரும்புகிறாரா?

    Share
  • ஈரான் – இஸ்ரேல் போரின் பரிமாணங்கள்

    ஈரான் – இஸ்ரேல் போரின் பரிமாணங்கள்

    அண்ணாகண்ணன்

    இப்போது ஈரான் வசம் அணு ஆயுதங்கள் மட்டும் இருந்திருந்தால், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் அதைத் தாக்கும் துணிச்சல் வந்திருக்காது. அண்மையில் தாக்கப்பட்ட உக்ரேன், பாலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய அனைத்தும் அணு ஆயுதம் இல்லாத நாடுகள்.

    ஈரான் மீதான தாக்குதலின் இன்னொரு பரிமாணம், அணு ஆயுதங்களின் அவசியத் தேவை. இன்றைய சூழலில் அணு ஆயுதம் இல்லாத நாடுகள், முழுமையான சுதந்திர நாடுகள் எனக் கொள்ள முடியாது. அவை, அணு ஆயுத நாடுகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தாக வேண்டும். அவற்றின் வார்த்தையை மீறி ஏதும் செய்ய முடியாது. தங்கள் நாடுகளின் முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்க இயலாது. அவற்றின் வளங்களும் அவர்களுக்கே சொந்தம் எனக் கொள்ள இயலாது.

    நாளை ஈரான் வெற்றி கொள்ளப்பட்டால், அதன் எண்ணெய் வளம் முழுவதும் கொள்ளை போகும். அவர்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் தன்மானத்துடன் வாழ்வதற்கும் வாய்ப்பு மறுக்கப்படும். காரணம், அவர்களின் எதிரிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன.

    உலகில் அணு ஆயுதங்களை முற்றாக ஒழிக்க வேண்டும். அல்லது அவற்றை வைத்திருக்கும் உரிமையை அனைத்து நாடுகளுக்கும் வழங்க வேண்டும். அனைவருக்கும் ஒரே நீதி, ஒரே விதிகள் இருக்க வேண்டும். நாங்கள் வைத்திருப்போம். வேறு யாரும் வைத்திருக்கக் கூடாது என்பது ஒரு புதிய ஒடுக்குமுறை.

    இந்தச் சூழலில் சீனா, வட கொரியா போன்ற அணு ஆயுத நாடுகள் மனம் வைத்தால் மட்டுமே ஈரான் பிழைக்க முடியும். மேலும் அமெரிக்க ஆதரவு அணு ஆயுத நாடுகள், அமெரிக்க எதிர்ப்பு அணு ஆயுத நாடுகள் என்பவற்றை இரு அணிகளாகவே பார்க்க வேண்டும். அமெரிக்க எதிர்ப்பு அணு ஆயுத நாடுகள், தங்கள் சார்பு நாடுகளைப் பாதுகாக்க வேண்டும். அவற்றுக்குக் கூட்டாக அணு ஆயுத வல்லமை அளிக்க வேண்டும். இதன் மூலம், உலக வரைபடத்தில் புதிய எல்லைக் கோடுகள் வரையப்படும். உலக நாடுகளின் நிதியில் பெருமளவைத் தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டும். இது ஆயுத வியாபாரிகளுக்கே நன்மை தரும்.

    இதன் இன்னொரு பரிமாணம், நம் இன்றைய தலைமுறை மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்க்கையும் ஆபத்தில் இருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அச்சுறுத்தலின் நடுவே தான் வாழ வேண்டும். தங்கள் உழைப்பின், உற்பத்தியின் பெரும் பகுதியைத் தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்கே செலவிட வேண்டும். எந்த நாடாவது தங்கள் முயற்சியால் அதிகம் வளர்ந்தால், இன்னொரு நாட்டால் ஒரே கட்டளையில் அதை நிர்மூலம் ஆக்க முடியும். ஏதேனும் ஒரு முட்டாள் முதல் அணுகுண்டை வீசிவிட்டால், அதன் பிறகு ஒட்டுமொத்த பூமியும் அதற்கு விலை கொடுக்க வேண்டும். அதன் பிறகு மனிதன் மட்டுமின்றி, பூமியின் கடைசி உயிரும் துடித்து அடங்குவதற்கு அதிக காலம் பிடிக்காது.

    Share
  • பேஸ்புக் வழியே வருவாய் ஈட்டுவது எப்படி?

    பேஸ்புக் வழியே வருவாய் ஈட்டுவது எப்படி?

    அண்ணாகண்ணன்

    பேஸ்புக் பல வகைகளில் வருவாய் ஈட்ட வகை செய்கிறது. பேஸ்புக் ஸ்டார்ஸ் என்ற வகையில், நமது பதிவுகளைப் பிடித்திருந்தால், நம் நேயர்கள் பேஸ்புக்கிற்குப் பணம் கட்டி, இந்த ஸ்டார்களை வாங்கி நமக்கு இத்தனை ஸ்டார்ஸ் எனக் கொடுக்கலாம். அதாவது நேரடியாக நமக்கு அனுப்பாமல், சற்றே சுற்றி வளைத்து நமக்கு அனுப்புவது. இதில் பேஸ்புக்கிற்கும் ஒரு சிறு பங்கு இருக்கும். ஒரு குறிப்பிட்ட பதிவில் ஒருவர் எவ்வளவு ஸ்டார்ஸ் பெற்றிருக்கிறார் என்பது பதிவிற்குக் கீழே தெரியும். நம் ஊரில் சுரேஷ் கண்ணனுக்கு இவ்வாறு நேயர்கள் ஸ்டார்ஸ் அனுப்பியிருப்பதை அவர் பகிர்ந்திருந்தார்.

    இதன் அடுத்த நிலைதான், பேஸ்புக் சப்ஸ்கிருப்ஷன்ஸ். ஒவ்வொரு பதிவுக்கும் ஸ்டார்ஸ் அனுப்பாமல், ஒட்டுமொத்தமாகப் பதிவர் ஒருவருக்கு நேயர்கள் சப்ஸ்கிரைப் செய்யலாம். மாதம் ரூ.89 கட்டி அவருடைய பதிவுகளைப் படிக்கலாம். இப்படிப் பணம் கட்டியவர்கள் மட்டுமே படிக்கும் / பார்க்கும் வகையில் பதிவுகளை வெளியிடலாம்.

    பேஸ்புக்கில் நாம் வெளியிடும் வீடியோக்களில் விளம்பரங்கள் இடம்பெறச் செய்து, வருவாய் ஈட்டலாம். இதற்கு ஒருவருக்குப் பின்தொடர்பவர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இருக்க வேண்டும். நேரலை வீடியோக்களை வெளியிடும்போதும் இவ்வாறு விளம்பரங்கள் வழியே வருவாய் ஈட்டலாம்.

    பேஸ்புக்கில் நிறைய நிறுவனங்களுடன் விளம்பரக் கூட்டாளியாக இருந்து, அவர்களின் பொருள்களை விளம்பரப்படுத்தி மக்களை வாங்கச் செய்யலாம். நம் பதிவின் வழியாக அவர்கள் குறிப்பிட்ட பொருள்களைச் சென்றடைந்து, பொருள்களை / சேவைகளை வாங்கினால், அதில் நமக்கும் வருவாய் உண்டு.

    இவை அல்லாமல், நாம் பேஸ்புக்கில் எழுதும், வெளியிடும் ஆக்கங்களுக்கு அவற்றின் வரவேற்புக்கு ஏற்ப, பேஸ்புக் நமக்கு வருவாய் அளிக்கிறது. தோராயமாக ஒரு லட்சம் பார்வைகளுக்கு ஒரு டாலர் என்பது போல் இந்த வருவாய் இருக்கும். இதற்கு உங்கள் சுயவிவரத்தைத் தொழில்முறைப் பயன்முறைக்கு (புரபஷனல் மோடு) மாற்றிக்கொள்ள வேண்டும். இதை மாற்றுவதன் மூலம், நாம் படைப்பாளராக, படைப்புகளின் வெளியீட்டாளராக மனத்தளவில் மாறுகிறோம்.

    உங்கள் சுயவிவர முகப்புப் பக்கத்தில் வலது புறம், மேலும் என்பதைக் குறிக்க, மூன்று புள்ளிகள் (“…”) இருக்கும். அதைச் சொடுக்கி, அதில் தொழில்முறைப் பயன்முறையை இயக்கு (“Turn on Professional Mode”) என்பதை இயக்க வேண்டும். பேஸ்புக்கின் கொள்கைகளை, விதிமுறைகளை ஏற்று, வரி விவரம் (PAN Number), வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் ஒவ்வொரு பதிவும் எவ்வளவு பார்வைகளைப் பெறுகிறது, அதற்கு எவ்வளவு பேர் பின்னூட்டம் அளிக்கிறார்கள், பகிர்கிறார்கள் என்பதைப் பொறுத்து வருவாய் ஈட்டலாம்.

    இது சிறிய வருவாய் தான். ஆனால், சிறுதுளி பெருவெள்ளம் ஆகலாம். ஏராளமானோர் நாள்முழுவதும் பேஸ்புக்கில் இருக்கிறார்கள். எவ்வளவோ படிக்கிறார்கள், பார்க்கிறார்கள், பகிர்கிறார்கள். இவர்கள் சற்று முயன்றால் பார்வையாளர் இடத்திலிருந்து படைப்பாளர் நிலைக்கு உயரலாம். வருவாயும் ஈட்டலாம்.

    இதற்காகவே அந்தந்த நேரத்தில் எது பரபரப்பாக இருக்கிறதோ அதைப் பற்றி எழுதுவோர் இருக்கிறார்கள். அப்படி எந்த அலை மேலே செல்கிறதோ அதில் தொற்றிக்கொண்டால் நம் பதிவுகளின் பார்வைகளும் உயரும். ஆற்றல் உள்ளோர் புதிய அலைகளையும் உருவாக்கலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை. இருக்கும் அலைக்கு நாம் சற்று வேகம் கூட்டலாம்.

    மற்றவர் பார்வையைக் கவர வேண்டும் என்பதற்காக, ஆர்வத்தைத் தூண்டும் விதமாகத் தலைப்பு வைத்து, படம் வைத்து, வசைபாடி, அவதூறு செய்து, போலிச் செய்திகளைப் பரப்பி, சாதி / மத / அரசியல் காழ்ப்புகளைக் காட்டிப் பதிவுகளை இட வேண்டியதில்லை. மற்றவர் பதிவுகளைத் திருடி, நம் பதிவு போல் காட்ட வேண்டியதில்லை. நமக்குத் தெரிந்த செய்திகளை, உண்மையான விவரங்களை, அனுபவப் பகிர்வுகளை நம் மனத்திற்கு உண்மையாக எழுதலாம். நம் தனித் திறமைகளை வெளிப்படுத்தலாம். இதுதான் நீடித்த பயன் தரும்.

    எழுதும் செய்திகளைச் சுவையாக, சுருக்கமாக, புதுமையாக, விறுவிறுப்பாக, பயனுள்ளதாக எழுதுவது நம் கையில் தான் இருக்கிறது. இதை விரும்புவோர் நிச்சயம் இருப்பார்கள். நம் பதிவுகளில் தொடர்புடைய குறிச்சொற்களை இடுவதும் இவற்றை உரிய குழுக்களில், தளங்களில் பகிர்வதும் ஆர்வமுள்ள நண்பர்களுக்குத் தனிச் செய்தி அனுப்புவதும் இவற்றின் வீச்சை அதிகரிக்கும்.

    யூடியூபை விட பேஸ்புக்கில் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. பேஸ்புக்கில் நம் பதிவை விரும்பும் நேயர், நம்முடன் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம். இதில் படைப்பாளர் / பார்வையாளர் நெருக்கம் அதிகமாக இருக்கிறது. மேலும், பேஸ்புக்கின் நிரல், எந்த நேரத்தில் எந்தப் பதிவை அதிகப் பார்வைக்கு இட்டுச் செல்லும் எனக் கணிக்க இயலாது. திடீரென நமது பதிவு, பல லட்சம் பார்வைகளைப் பெறுவது சர்வ சாதாரணமாக நடைபெறுகிது.

    ஆனால், இது ஓரிரவில் நடைபெறுவதில்லை. இந்த எழுச்சிமிகு வீச்சுக்கு அடிப்படைப் பின்னணியாக, கடுமையான, தொடர்ச்சியான உழைப்பு இருக்கிறது. நாம் யாருக்காக எழுதுகிறோம் என்பதும் நம் நேயர்களைப் புரிந்துகொள்வதும் அவர்களை மதிப்பதும் அவர்களுக்குப் பதில் அளிப்பதும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வளர்ச்சியை ஒரு வரியில் சொல்வதானால், முயற்சி திருவினையாக்கும்.

    Share
  • வட இந்தியர்களிடம் கற்றுக்கொள்வோம்

    வட இந்தியர்களிடம் கற்றுக்கொள்வோம்

    அண்ணாகண்ணன்

    வட இந்தியாவிலிருந்து தமிழகம் வரும் அனைவரும் தொழிலாளிகளாகவே இருப்பதில்லை. அவர்களுள் சிலர் முதலாளிகளாகவும் இருக்கிறார்கள். தமிழகத்தின் முக்கியத் தொழில்களில் கணிசமான விழுக்காடு, வட இந்திய முதலாளிகள் வசம் உள்ளது. பெரு முதலாளிகளின் முதலீடும் முயற்சிகளும் பெரிது. இதே போன்று வட இந்தியச் சிறு முதலாளிகளும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

    வட இந்தியச் சிறு முதலாளிகள் சிலரை அண்மையில் கவனித்தேன். இவர்கள் அனைவரும் பாதுகாப்பான தொழில்களில் இருக்கிறார்கள். அதாவது காய்கறி, பழங்கள், பால் போன்று விரைவில் கெட்டுப் போகும் தொழில்களை இவர்கள் அதிகம் தொடுவதில்லை. விரைவில் கெடாத, நீண்ட காலம் ஆனாலும் அப்படியே இருக்கிற தொழில்களாகத் தேர்ந்தெடுத்து இவர்கள் கடை நடத்துகிறார்கள்.

    ஆயத்த ஆடை, ஜவுளித் துறை, மெத்தைகள், படுக்கை விரிப்புகள், பேன்சி கடைகள், காகிதக் கோப்பை, காகிதத் தட்டு, பிறந்த நாள் கொண்டாட்டப் பொருள்கள் (தொப்பி, ஜகினா, மெழுகுவர்த்தி.. போன்றவை), வாகன உதிரி பாகங்கள் (ஆட்டோமொபைல்ஸ்), மின்னியல், மின்னணுப் பொருள்கள் (எலக்ட்ரிக். எலக்ட்ரானிக்) டயர்கள், ஹார்டுவேர்ஸ், பொம்மைகள்… போன்றவற்றை விற்கும் தனிக் கடைகளைத் துணிவுடன் நடத்துகிறார்கள்.

    பலர் தங்கள் கடையில் முழுநேரம் வேலை செய்கிறார்கள். எனவே, ஆள்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. பொருள் விற்காவிட்டாலும் கெட்டுப் போகும் என்ற கவலையில்லை. இந்தப் பொருட்களுக்கு எப்போதும் தேவை இருக்கும் என்பது இன்னொரு வசதி. பெரும்பாலும் பில் கொடுக்க மாட்டார்கள். பில் கேட்டாலும் துண்டுச் சீட்டில், எஸ்டிமேட் தாளில் எழுதிக் கொடுப்பார்கள். கடை வாடகை, முன்பணம் மட்டும் இருந்தாலே தனிக் கடை போட்டுவிடலாம்.

    சிலர், ஒரு கடையில் நன்கு விற்பனை ஆகத் தொடங்கிய உடன், அதே போன்ற கடைகளை அக்கம் பக்கத்தில் நடத்துகிறார்கள். பெரிதாகப் பெயர்ப்பலகை வைத்து, வணிகப் பெயரை (பிராண்டு) வளர்க்காமல் அல்லது முன் நிறுத்தாமல், எளிமையாக நடத்துகிறார்கள். ஒரே ஊரில் ஒரே ஆள் ஐந்து பேன்சி கடைகள் நடத்துகிறார். ஐந்தையும் பார்த்தால் தனித் தனிக் கடைகளாகத் தெரியும். ஆனால், ஒரே ஆள் நடத்துவது. இதன் மூலம் இதில் ஏகபோகமாக முன்னேறுகிறார்கள்.

    முக்கியச் சாலைச் சந்திப்புகளில் நன்றாக இயங்கும் உணவகங்களை, காபி கடைகளை, இனிப்பகங்களை அப்படியே கையகப்படுத்தி நடத்துவதும் அதிகரித்து வருகிறது. இதைச் சென்னையிலும் கோவையிலும் கண்டேன். வெளியே பார்த்தால் தமிழ்ப் பெயராக இருக்கும். உள்ளே போனால் முழுக்க முழுக்க வட இந்திய உணவுகள்.

    உணவகங்களில் சப்பாத்தி, பரோட்டா, பூரி, சமோசா, கட்லட், பானி பூரி, சாட் உணவுகள் போன்ற சற்றே நீண்ட ஆயுள் உள்ள உணவுப் பொருள்களாக வைக்கிறார்கள். அதாவது, வாடிக்கையாளர் வந்து உட்கார்ந்து ஆர்டர் செய்த பிறகு சப்பாத்தி, பரோட்டா போட்டு எடுக்கலாம். முதலிலேயே மொத்தமாகச் சமைத்து வைப்பதில்லை. தங்களுக்கு எது நன்றாக வருகிறதோ அதை மட்டும் செய்கிறார்கள்.

    தமிழ்ப் பெயரைப் பார்த்து உள்ளே நுழைந்து, இத்தகைய உணவுகளைப் பார்த்துவிட்டு அந்தச் சுவை பிடிக்காமல் வெளியே வந்திருக்கிறேன். ஆனால், தொடர்ந்து மக்கள் உள்ளே போய்ச் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். லாபம் இல்லாமல் இப்படிக் கடை நடத்த மாட்டார்கள் என்பது உறுதி.

    தமிழர்கள், வட இந்தியர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

    Share
  • ஒருத்தி மகனாய்ப் பிறந்து – ஆண்டாள் எழுதியது சரிதானா?

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து – ஆண்டாள் எழுதியது சரிதானா?

    அண்ணாகண்ணன்

    நள்ளிரவு 2.40 மணி. தாகத்தால் விழித்தேன். தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் படுத்தேன். அப்போது திடீரென இந்த வரி, நினைவுக்கு வந்தது. ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர. இதில் முன்னிலை, படர்க்கை சார்ந்து ஒரு சிக்கல் இருப்பது போல் தோன்றியது.

    பாடல் முழுவதும் முன்னிலையில் இருக்க, ஒளித்து என்பது மட்டும் படர்க்கையில் இருக்கிறது. பிறந்து, வளர, பிழைப்பித்து, நெருப்பென்ன நின்று, உன்னை, பறைதருதி எனப் பெரும்பாலும் முன்னிலையாகவே இருக்கின்றன. ஒளித்து என்பது மட்டும் படர்க்கையாக இருக்கிறது. அதாவது, இந்த இடங்களில் எல்லாம் அவர் தாமாகவே செய்கிறார். ஒளித்து என்பதில் மட்டும் இன்னொருவர் வந்து ஒளித்து வைக்கிறார்.

    இங்கே, ஒளித்து வளர என்பது சரியாக ஒட்டவில்லை. ஒன்று, ஒளிந்து வளர என இருக்க வேண்டும். அல்லது, ஒளித்து வளர்க்க என இருக்க வேண்டும். ஒளித்து வளர என்கிற போது, வசுதேவர் வந்து ஒளித்து வைக்கிறார். ஆனால், கண்ணன் தானாகவே வளர்கிறான், யசோதை வளர்க்கவில்லை எனப் பொருள் தோன்றுகிறது.

    ஆண்டாள், ஒளித்து வளர என எழுதியது சரிதானா? உங்கள் கருத்து என்ன?

    Share
  • மலைசூழ் கோவைப் பதிவாழ்க

    மலைசூழ் கோவைப் பதிவாழ்க

    மலைசூழ் கோவைப் பதிவாழ்க – வண்ண
    மயில்சூழ் கோவைப் பதிவாழ்க
    முகில்சூழ் கோவைப் பதிவாழ்க – இன்
    மொழிசூழ் கோவைப் பதிவாழ்க
    கலைசூழ் கோவைப் பதிவாழ்க – மிளிர்
    கவின்சூழ் கோவைப் பதிவாழ்க
    மரம்சூழ் கோவைப் பதிவாழ்க – நல்ல
    மனம்சூழ் கோவைப் பதிவாழ்க

    நறுநீர்க் கோவைப் பதிவாழ்க – உயர்
    நலம்சேர் கோவைப் பதிவாழ்க
    முறுவல் பூக்கும் முகம்வாழ்க – வாழ்வில்
    முழுமை சேர்க்கும் அகம்வாழ்க
    பொருள்சேர் கோவைப் பதிவாழ்க – வளர்
    புதுமை சேர்க்கும் புலம்வாழ்க
    அருள்சேர் கோவைப் பதிவாழ்க – தினம்
    அணிசேர் கோவைப் பதிவாழ்க

    வயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பெரும்
    வளம்சேர் கோவைப் பதிவாழ்க
    செயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பசும்
    செழுமை சேர்க்கும் செகம்வாழ்க
    இதம்சேர் கோவைப் பதிவாழ்க – இயற்கை
    எழில்சேர் கோவைப் பதிவாழ்க
    குறையொன்று இல்லாக் குடிவாழ்க – தூய
    குளிர்சேர் கோவைப் பதிவாழ்க

    – அண்ணாகண்ணன்

    Share
  • பிராகுய் – தமிழ் உறவு | பலுசிஸ்தானிகள் நம் பங்காளிகள்

    பிராகுய் – தமிழ் உறவு | பலுசிஸ்தானிகள் நம் பங்காளிகள்

    அண்ணாகண்ணன்

    சென்னையிலிருந்து சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, பலுசிஸ்தான். அங்குப் பேசப்படும் பிராகுய் (பிராஹுய்) என்ற மொழியை, அழியும் நிலையில் உள்ள மொழியாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. பிராகுய், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழில் நாம் சொல்லும் அரிசி, பால் போன்ற சொற்கள், இதே பொருளில் பிராகுய் மொழியிலும் உள்ளன. இங்கு நாம் வா என்பதை, அவர்கள் பா என்கிறார்கள். இங்கு நாம் ஊர் என்பதை அவர்கள் உரு என்கிறார்கள். நாம் இரண்டு, மூன்று என்று சொல்வதை அவர்கள் ஈரத், மூசித் என்கிறார்கள். சிந்துச் சமவெளி நாகரிகம், தமிழ் நாகரிகம் என்ற கூற்றுக்கு இவை வலுச் சேர்க்கின்றன.

    பாகிஸ்தானின் மிகப் பெரிய மாநிலம், பலுசிஸ்தான். இங்கு சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வசிக்கின்றனர். பலூச் விடுதலைப் படை, கடந்த 25 ஆண்டுகளாகத் தனி நாடு கேட்டுப் போராடி வருகிறது. மனித உரிமை மீறல், அடக்குமுறை போன்ற காரணங்களைக் கூறி, பாகிஸ்தானுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வருகிறது. இப்போது, தங்களைப் புதிய நாடாக ஐ.நா. அமைப்பும் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ் வேர்களைக் கொண்ட பலுசிஸ்தான், தனி நாடு ஆவதை வரவேற்கிறேன். ஆபரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக, இந்தியாவின் நட்பு நாடாக, சுதந்திர பலுசிஸ்தான் மலரட்டும். சமூக, சமய நல்லிணக்கத்துடன், அமைதியும் வளமும் வளர்ச்சியும் செழிக்கும் நாடாக, தனித்த மொழி, மரபு, பண்பாட்டு அடையாளங்களைத் தக்க வைத்து, இந்துஸ்தானின் சகோதர நாடாக எழுக பலுசிஸ்தான்.

    #Balochistan #BLA #Pakistan #India #operationSindoor #Brahui #Brahvi #Brohi

    Share
  • மறவன்புலவு சச்சிதானந்தன் அரசியல் கள அனுபவங்கள்

    மறவன்புலவு சச்சிதானந்தன் அரசியல் கள அனுபவங்கள்

    அண்ணாகண்ணன்
    மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுடன் நேற்று காசி திரையரங்கில், விடாமுயற்சி திரைப்படம் பார்த்தோம். அடையாறு ஆனந்த பவனில் மதிய உணவு உண்டோம். அவருடைய அரசியல் கள அனுபவங்கள், எங்களுக்குப் புத்துணர்வு ஊட்டின. உற்சாகம் கொள்ள வைத்தன.
    83 வயது நிறைந்த ஐயா, இன்றும் துடிப்புடன் தாமே மகிழுந்து ஓட்டி வருகிறார். மக்கள் நலன் சார்ந்த ஏராளமான பணிகளை இடையறாது ஆற்றி வருகிறார். இவரது முயற்சியின் விளைவாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அடுத்து, சரக்குக் கப்பல் போக்குவரத்தும் தொடங்கும் நிலையில் உள்ளது. இந்திய அரசுத் தரப்பிலும் இலங்கை அரசுத் தரப்பிலும் வணிகர்கள் தரப்பிலும் பலரைச் சந்தித்து, இதை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
    இலங்கையில் சிவசேனையின் தலைவராக, எழுச்சிமிகு பணிகளை நடத்தி வருகிறார். மதமாற்ற முயற்சிகள் எந்த வகையில் வந்தாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.
    இலங்கைக்குப் பால் தினகரன் வந்து பேசும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரே ஒரு சட்டக் குறிப்பினை வைத்து அவரைத் திருப்பி அனுப்பச் செய்தார். சுற்றுலா விசாவில் வரும் பால் தினகரன், மதப் பிரசாரம் செய்ய அனுமதியில்லை என்ற குறிப்பினை முன்வைத்ததும் அரசே அவரைத் திருப்பி அனுப்பியது.
    யாழ்ப்பாணப் பகுதிகளில் மதப் பிரசாரம் செய்வோரை வெளியேற்ற, புதுமையான உத்தியைப் பின்பற்றினார். அவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரிடம், நீங்கள் குடியிருக்க வீடு கொடுத்தீர்களா? மதமாற்றம் செய்ய வீடு கொடுத்தீர்களா? என்ற கேள்வியை அங்குள்ள மக்களைக் கேட்க வைத்தார். விளைவு, அந்த வீடு மட்டுமின்றி, வேறு எங்கும் அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை.
    யாழ்ப்பாண நகருக்குள் மாடுகளை வெட்டக் கூடாது, மாட்டிறைச்சிக் கடை இருக்கக் கூடாது என்ற முழக்கத்தை மக்களே முன்வைக்க வைத்தார். இதில் அங்குள்ள ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வைத்து, அந்தக் கடைகளை அப்புறப்படுத்தினார்.
    பீட்சா ஹட் என்ற நிறுவனத்தில் இதே போல் இறைச்சிப் பண்டங்கள் விற்கக் கூடாது என வலியுறுத்தி வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து உலகின் ஒரே சைவக் கடையாக இது செயல்படுகிறது.
    யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராகக் கிறித்தவ மதமாற்றி ஒருவரை நியமிக்கும் செய்தி வந்ததும் அதைச் சிவசேனை எதிர்த்தது. அவர் மதமாற்றி என்பதற்கான ஆதாரங்களை அளித்ததும் அவர் பதவியேற்பதற்கு முன்பே அவரை அரசு இடமாற்றியது.
    யாழ்ப்பாண வலையக் கல்விப் பணிப்பாளர் பிறட்லீ, பொறுப்பேற்ற முதல் நாளில் கல்விப் பணிமனையில் இருந்த சைவக் கடவுள்களின் திருவுருவப் படங்களை அகற்றினார். சிவசேனை போராடியது. வடமாகாணக் கல்விச் செயலாளரின் கவனத்திற்கு இந்தச் செய்தியைக் கொண்டு சென்றது. சைவக் கடவுள்களில் படங்கள் உரிய இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டன.
    இதில் எங்கும் வன்முறை இல்லை. ஜனநாயக முறையில், அற வழியில் போராடி, சட்ட நுணுக்கங்களுடன் கோரிக்கைகளை முன்வைத்து, உத்திகள் மூலமாகவே மகத்தான வெற்றி கண்டுள்ளார். மக்களைச் சரியாக வழிநடத்தி, தங்கள் உரிமைகளைப் பெற வைத்துள்ளார். எவருக்கும் அஞ்சாமல் துணிச்சலுடன், நெஞ்சுரத்துடன் நந்திக் கொடியைப் பறக்கவிட்டுள்ளார். அனைத்துத் தரப்பினரின் மதிப்பை, மரியாதையைப் பெற்றுள்ளார். இவை, தொலைநோக்கு உள்ள, தனிப் பெரும் தலைவருக்கு உரிய அடையாளங்கள். தமிழ்ச் சமூகம், இவரை உரியவாறு பயன்படுத்தி உய்ய வேண்டும்.
    Share
  • காரன் / காரி வேர்ச்சொல்

    காரன் / காரி வேர்ச்சொல்

    அண்ணாகண்ணன்
    புல்வந்தி என்ற மராத்தித் திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன். இதில் கலைஞர் என்பதைக் கலாகார் என அழைக்கிறார்கள். இதில் கலை என்பதை நாம் நன்கறிவோம். இதன் இரண்டாம் பகுதியான கார் என்பதை ஆராய்ந்தேன்.
    வடமொழியிலும் இந்தியிலும் கார் என்பது, ஒன்றைச் செய்பவரைக் குறிக்கிறது. கலை செய்பவர், கலாகார். இப்படியே சித்திரக்கார், சங்கீத்கார், சில்ப்கார், நாடக்கார், கிரந்த்கார், இதிஹாஸ்கார் எனப் பெருவழக்காக உள்ளது. இந்தக் கார் என்பது பாலி, பெர்சியன், உருது, மராத்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் பயன்பாட்டில் இருக்கிறது.
    தமிழில் உள்ள வேலைக்காரன், வேலைக்காரி, கரகாட்டக்காரன், ஆட்டக்காரி, வண்டிக்காரன், பாட்டுக்காரன், கொள்ளைக்காரன், சூனியக்காரி, ஆட்டோக்காரன், மேளக்காரன்… என ஒரு வேலையைச் செய்பவர்களைக் காரன் / காரி என அழைக்கிறோம். இதே போல் வீட்டுக்காரன், வீட்டுக்காரி, மூளைக்காரன், பொய்க்காரி, பூக்காரி, சொந்தக்காரன், சொந்தக்காரி என ஒன்றை உடையவர்களையும் இவ்வாறு அழைக்கிறோம். மேலும், இந்திக்காரன், சிந்திக்காரி, மதுரைக்காரன் என ஒரு மொழியை, இடத்தை, நாட்டைச் சேர்ந்தவர்களையும் இவ்வாறு அழைக்கிறோம்.
    இவற்றைத் தூய தமிழ் என யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். இந்தக் கார், காரா (சம்ஸ்காரா), காரம் (உபகாரம்), காரன், காரமு போன்றவை பல மொழிகளிலும் நிறைந்துள்ளன. ஒரு மொழி தெரியாமலே அதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்பது இந்த வேர்ச்சொற்களின் முதல் ஆதாயம்.
    Share
  • கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

    கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

    அண்ணாகண்ணன்

    அண்ணாமலை படத்தில், வைரமுத்து எழுதிய ‘வந்தேன்டா பால்காரன், பசு மாட்டைப் பத்திப் பாடப் போறேன்’ என்ற பாடலை நேற்று வானொலியில் ஒலிபரப்பினார்கள்.

    புல்லு கொடுத்தா
    பாலு கொடுக்கும் உன்னால
    முடியாது தம்பி

    இது என்ன வகையான ஒப்பீடு? பசு என்பது பெண். எனவே பால் கொடுக்கிறது. ஆனால், உன்னால முடியாது தம்பி என ஆணிடம் எதற்குச் சொல்கிறார்? காளை மாடு கூடத்தான் புல்லு சாப்பிட்டுப் பால் கொடுக்காது. மனிதரிலும் பிள்ளை பெற்ற பெண், பால் கொடுக்கக் கூடியவர்தான். புல் போன்று சில கீரைகளை, ஏன் அருகல்புல் சாற்றைக் குடித்துக்கூட அவரால் பால் கொடுக்க முடியும். எதற்காக ஏடாகூடமாக ஒப்பிட்டிருக்கிறார்?

    சாணம் விழுந்தா உரம் பாரு
    எருவை எரிச்சா திருநீறு
    உனக்கு என்ன வரலாறு
    உண்மை சொன்னா தகராறு

    சாணம் மட்டுமில்லை, மனித மலமும் உரம் தான். அதைக் கொண்டு மின்சாரமே தயாரிக்கிறார்கள். மாட்டைப் புகழ்வதற்காக, மனிதனைத் தாழ்த்தலாமா? மனிதனின் எழுச்சிமிகு முன்னேற்றத்தை அவனது வரலாற்றைப் படித்தாலே புரியுமே.

    அட மீன் செத்தா கருவாடு
    நீ செத்தா வெறும்கூடு
    கண்ணதாசன் சொன்னதுங்க
    பசு இருந்தாலும் பாலாகும்
    செத்தாலும் தோலாகும்
    நான் கண்டு சொன்னதுங்க

    மீன் செத்தா கருவாடு. ஆனால், மனிதன் செத்தால் வெறும்கூடு இல்லை. மனித உடலின் ஒவ்வொரு பகுதியும் உரம் தான். மேலும் மனிதன் இறந்தால் அவனது உறுப்புகள் பலவற்றைத் தானமாக அளிக்க முடியும். மேலும் மருத்துவ ஆராய்ச்சிக்காக, அவன் உடலையே தானமாக வழங்க முடியும். கண்ணதாசன் இதைப் புரிந்துகொண்டாரா தெரியவில்லை.

    பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் என்பதில் என்ன பெருமை? மிகவும் பொருள்வயமான கண்ணோட்டம் இது. யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். ஆட்டுக்கும் இவ்வாறு பயன் இருக்கும். மனிதன் இறந்தாலும் வேறு வகையில் இத்தகைய பயன் உண்டு. அதனால் தான் அநாதைப் பிணங்களையும் திருடும் கூட்டம் இருக்கிறது.

    அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
    ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
    அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
    அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க

    ஆட்டுப்பால் ஆயுள் வளர்க்கிறது, மாட்டுப்பால் அன்பு வளர்க்கிறது என்கிறார். ஏன், ஆட்டுப்பால் அன்பு வளர்க்காதா? மாட்டுப்பால் ஆயுள் வளர்க்காதா? இதே பாடலில், அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி என்று வருகிறது. பச்சிளங்குழந்தைக்குத் தாய்ப்பாலே முதன்மை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். தாய்ப்பால் சுரக்காத நிலையிலேயே செறிவூட்டிய பால்மாவும் பசும்பாலும் கொடுக்கிறார்கள். மிகக் குறைந்த அளவிலேயே இது நிகழ்கிறது. குழந்தை பிறந்து 6 மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகே பசும்பால். முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலே ஆதாரம். எனவே பாதி குழந்தைகள், பசும்பாலை நம்பிப் பிறப்பதாகச் சொல்வதும் சரியில்லை. ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகே பசும்பாலை நாடுகிறார்கள்.

    பசுவைத் தெய்வமாக வணங்குவது, தமிழர் வழக்கம். கோமாதா என்றே அழைப்பார்கள். பசுவின் உடலில் தெய்வங்களும் தேவர்களும் வாழ்வதாகக் கருதுவோர் உண்டு. இவற்றை எல்லாம் தவிர்த்தாலும் பசு தன் கன்றுக்காகச் சுரக்கும் பாலையே மனிதனும் கறந்து குடிக்கிறான். எனவே, பசுவும் நம் தாய், நாமெல்லாம் அதன் கன்றுகளே என்றாவது சொல்லியிருக்கலாம்.

    பால்காரர் தான் வளர்க்கும் மாடுகளைப் பற்றிப் பெருமையாகச் சொல்ல, வேறு ஏதும் இல்லையா? அதன் பால், சாணம், திருநீறு, செத்த பிறகு தோல் – இந்தப் பயன்களைத் தான் வைரமுத்து மீண்டும் மீண்டும் சொல்கிறார். இது வியாபாரியின் கண்ணோட்டம். கன்றுக்காக இரங்கி, தன் இரத்தத்தைப் பாலாக்கி அருளும் பசு, வெறும் வியாபாரப் பொருளாகி நிற்கிறது. வியாபாரிகள் இப்படி எழுதலாம். கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

    Share
  • ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் – வலைத்தொடர் விமர்சனம்

    ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் – வலைத்தொடர் விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் என்ற வலைத்தொடரை, அமேசான் பிரைமில் பார்த்தேன். இது சிறுவர்களை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்ட வலைத்தொடர். சிறுவர்களுக்கான வலைத்தொடர் எனச் சொல்ல முடியாது.

    பள்ளிச் சிறுவர்கள், துப்பாக்கியால் சுடுவதும் பிணத்தை மறைத்து வைப்பதும் சாட்சியங்களை அழிப்பதும் பிணத்தைக் குழிதோண்டிப் புதைப்பதும் சொந்த அப்பாவையே தலையில் அடித்து அறையில் கட்டிப் போட்டு அடைத்து வைப்பதும் கார் ஓட்டுவதும் கண்டிப்புக்கும் தண்டனைக்கும் உரிய குற்றங்கள்.

    பள்ளி ஆய்வகத்திலிருந்து குளோரோபார்ம் எடுத்து வந்து, மயங்க வைப்பது ஓரளவு லாஜிக்குடன் இருக்கிறது. ஆனால், திருடனிடம் கைப்பற்றிய நகைகளைக் காவல் துறை மூலம் உரியவர்களிடம் கொண்டு சேர்க்காமல், வெள்ள நிவாரணத்துக்குச் சேர்ப்பது தவறு.

    ஒரு தவறு நடந்தால், உரிய வழியில் தீர்க்க வேண்டுமே தவிர, குறுக்கு வழிகளில் தீர்க்க முயலக் கூடாது. அப்படி முயன்றால் அதற்கு உரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றாவது காட்டியிருக்கலாம். இதில் இறுதியில் பிள்ளைகள் எந்தச் சிக்கலிலும் மாட்டாமல் அவரவர் இயல்பாகப் படிக்கிறார்கள்.

    இதைப் பார்க்கும் சிறுவர்கள் என்ன நினைப்பார்கள்? இவ்வளவு தவறுகள் செய்தாலும் இறுதியில் எதுவுமே நடவாதது போல் தப்பிவிடலாம் என நினைப்பார்களா? மாட்டார்களா?

    சிறுவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டும். சாகசங்கள் கூடச் செய்யலாம். ஆனால், அறத்தோடு கூடிய நெறிமுறைகளுடன் வளர வேண்டும். தவறுகளைக் காணும்போது முறையாகப் புகார் தெரிவிக்க வேண்டும். குற்றவாளிகளைச் சிக்க வைக்கலாம். அதே நேரம் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தாங்களே தவறு செய்யும் பட்சத்தில் அதை ஒப்புக்கொண்டு தண்டனைகளை ஏற்க வேண்டும். அந்தத் தவறு மீண்டும் நிகழாவண்ணம் திருந்த வேண்டும். இந்த அடிப்படையோடு எடுத்திருந்தால், படம் வலிமையாக இருந்திருக்கும்.

    காட்சி ஊடகங்கள் அதிகத் தாக்கம் உள்ளவை. அவ்வாறே செய்து பார்க்கும் ஆவலைத் தூண்டுபவை. அதிலும் சிறுவர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள், வலைத்தொடர்கள், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சிறுவர்கள் இவ்வாறு செய்வது தவறில்லை என நினைத்தால், இதே போல் எங்காவது செய்து பார்க்க நினைத்தால், செய்தாலும் தப்பிவிடலாம் என நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும். வலைத்தொடரை உருவாக்கிய கார்த்திக் சுப்புராஜ், இவற்றை யோசிக்கவில்லையா?

    சிறுவர்கள் ஐவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் இரட்டை முகத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார். காவல் துறை உதவி ஆய்வாளராக வரும் நந்தா துரைராஜ், சிறுவனுக்கு அப்பாவாக நடித்திருக்கும் மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் சிறப்பாகக் காட்டுகிறார். கதை நேர்த்தியாக அமைந்திருந்தால், வலைத்தொடர் இன்னும் வலிமையாக, வசீகரமாக இருந்திருக்கும்.

    Share