Tag: இசைக்கவி ரமணன்

  • சித்தத்தில் சில சித்திரக் குமிழிகள் – 1

    இசைக்கவி ரமணன்

    எங்கோ மழை வீசும்
    இதயத்தில் மண்வாசம்…

     

    7504

    எப்போதும் போல் இல்லை காற்று. எல்லாவற்றையும் தடவிவிட்டு நழுவிச் செல்வது காற்றுக்கு வாடிக்கை. அப்படித்தான் இன்றும். ஆனால் நழுவ முடியாமல், ஒரு பனிக்கட்டிச் சிலையின் ஸ்தம்பிதத்தில் நிற்கிறது காற்று.

    ஒரு மோகினியின் முத்தத் தறுவாயில் குவிந்த இதழ்கள் போல, ஊரைப் போர்த்திக் கவிழ்ந்திருக்கும் கார்முகிலை அது கவனிக்கவில்லை. மலர்களின் நிர்வாணத்தை, அந்தரங்கத் தேன்வரையில் வருடிய எக்களிப்பில், அது எதனைத் தொட்டோம் என்பது புரியாமல் இதனைத் தொட்டுவிட்டது.

    மனிதன் தெய்வமாவதுபோல், மண்ணின் தண்ணீரே மழைமுகிலாய் மாறிவருகிறது. தெய்வமாய் உயர்வதே மனிதனின் சாதனை. மனிதனாய்த் தீர்வதே தெய்வத்திற்கு கெளரவம்.

    மண்ணின் தண்ணீர், முகிலாக மாறிவிட்ட போது, அதனுடைய மண்ணைத் தொட்ட தன்மை ரத்தாகிவிடுகிறது. ஞானம் விடியும்போது, அறியாமையின் நினைப்பும் அகன்று, எப்போதுமே இப்படி இருந்ததைப் போலத் தோன்றுவதைப் போல.

    அமிழ்தம் ததும்பி நிற்கிறது. அது விண்ணின் பிரசாதமாக அல்ல. தெய்வத்தின் உத்தேசமாக.

    அதைப்போய், இன்னதென்று தெரியாமல் தொட்ட காற்று ஸ்தம்பித்துவிட்டது. காற்றை ரொம்ப நேரம் கட்டிப்போட முடியாது. கடவுளின் ராஜாங்கத்தில் காற்றின் தயவு தேவை. எனவேதான், ’காற்றே! நேரடி அனுபவமாக உணரப்படும் கடவுள் நீயே!’ என்று வேதம் கோஷிக்கிறது. தொட்டவுடன் கட்டு கழன்றுவிடுகிறது; நாம் தொட்டது நம்மையும் தொட்டதே என்ற உணர்வில் காற்று, தாளம் விட்டுப் பாடுவதுபோல் ஒரு கள்ளுக் காவடி ஆடத் தொடங்குகிறது.

    அதீதமான ஒரு குளுமை, முதலில் உயிரை வருடி, பிறகே உடலைத் தொடுவதால், உலகே சிலிர்க்கிறது. சிட்டுக் குருவியிலிருந்து, சீட்டாடும் சூதாடிவரை, எல்லோரும் ஒருகணம் தெய்வப் பிரசன்னம் கொள்கிறார்கள். சாலையோரம் கிடக்கும் சரளைக் கற்களெல்லாமும், ஒரு கணம், சந்நிதியற்ற கடவுள்களாகப் பளபளக்கின்றன.

    ஒருதுளி கூடக் கீழே விழாமல், ஊரெல்லாம், உள்ளமெல்லாம் ஈரமாகிவிட்டது. மனமாற்றம் போல; அது கணப்பொழுதில் நிகழ்ந்துவிடும் ரசவாதம்.

    முகில், இன்னும் மழையாகவில்லை.

    எதற்கோ காத்திருக்கிறது மேகப்பொதி.

    ஒரு சின்னஞ் சிறுமி. அவள் துள்ளலைப் பார்த்தால், அது பரவசத்தின் விள்ளல் போல இருக்கிறது. மேலே பார்க்கிறாள், மேகம் சிலிர்க்கிறது. ஒரு வெள்ளைக் கொக்கு குறுக்கே பறக்கிறது. இவள், ஒரு குவளையில் நீரெடுத்துச் செடிக்கு ஊற்றுகிறாள். சிறகு சீண்டுகிறது. ஒரு துளி அவளுடைய கன்னக் கதுப்பின் மின்னல் முனையில் கைநழுவி விழுந்துவிடுகிறது.

    குடையை வீசி எறிந்துவிட்டுக் கூத்தாடுகிறாள் குழந்தை. அவளைப் பார்த்துப் பார்த்துப் பாதம் நனைக்கப் பரபரவென்று வருகிறது மழை.

    தொடருவோம்

    Share
  • உன்னிலே நான் துளி என்னில்நீ உயிரொளி (பாடல்)

    இசைக்கவி ரமணன்

    1286636471_127469105_1-numerology-astrology-and-namalogy-choolaimedu-1286636471

    நீ என்பதா? இல்லை
    நானென்பதா?
    தனிமையில் உன்னை நான்
    நானென்பதா? தன்னந்
    தனிமையில் என்னை நான்
    நீயென்பதா?

    உன்விழி அசைவில் என்னுயிர் ஆடும்
    புன்னகை மலர்ந்தால் புதுக்கவி பாடும்
    உன்னிலே நான் துளி என்னில்நீ உயிரொளி
    இன்னமும் ஏனம்மா துன்பத்தின் இடைவெளி (நீ)

    விரைந்து வரும் அலையில் வீற்றிருக்கும் மலையில்
    இதயத்திலே இரண்டும் சமன்பெறும் ஒரு நிலையில்
    கரைந்து கரைந்து கண்ணீராய் வீழ்கிறேன்
    கடைசி ஒருதுளியில் உன்முகம் காண்கிறேன் (நீ)

    Share
  • என்னழகியே!

    இசைக்கவி ரமணன்

     

    7

    மதுவெழுந்து மலராகி மலர்விரிந்து மனமாகி
    மனமுழுதும் உனதானதே
    மகரந்தம் கனவாகி இதழ்யாவும் நினைவாகி
    மணமெங்கும் பெயர்வீசுதே
    இதுவரையில் கதையொன்றை இங்கங்குமாகவே
    எழுதியகை இளைப்பாறவே
    இமையடியில் மைதொட்டுன் விரலெழுதத் துவங்கியதும்
    இதயத்தில் குயில்கூவுதே
    இதுகேட்டு முகில்சூழ இணைகூடும் தருணமென
    இளையமயில் நடமாடுதே
    இமைக்காத தேவர்க்கும் விண்மின்னும் மீனுக்கும்
    இதுவிந்தை யானதம்மே
    எதுசெய்தும் தீராத துன்பங்கள் எதுவொன்றும்
    செய்யாமல் தீர்ந்ததின்றே!
    என்மயிலை தென்மதுரை எனதுஜா கேஷ்வரில்
    எழுந்தருளும் என்னழகியே!

    படியேறி வந்தென்றன் மடிதட்டிப் பதறவும்
    பாட்டியாய் நின்ற போதும்
    பாவாடைச் சிறுமியாய்ப் பாதச் சதங்கையுடன்
    பளிங்காய்ச் சிரித்த பொழுதும்
    முடிவற்ற இருளொன்றில் மூவாத இருளாக
    மூண்டெனை வெருட்டும் போதும்
    முத்தத்தில் என்றனுயிர் மொத்தமாய் மிஞ்சாமல்
    கொள்ளையாய் அள்ளும் பொழுதும்
    விடிவெள்ளி போல்நெஞ்சின் நடுவிலொரு புள்ளியாய்
    விலகவொட் டாத போதும்
    வேறுபல நிலைகளும் ஊரறிந் தாலென்னை
    வேறுபெயர் வைத்தழைக்கும்!
    எடையற்ற வெளியொன்றில் இதமாய் மிதக்கின்ற
    ஏகாந்தம் தொடர்க தாயே!
    என்மயிலை தென்மதுரை எனதுஜா கேஷ்வரில்
    எழுந்தருளும் என்னழகியே!

    எப்படித் தானிந்தக் குப்பிக்குள் இன்பமெனும்
    ஏழுகடல் கூத்தாடுமோ!
    ஏதுமறி யாதவன்முன் பாதமிரண் டும்காட்டி
    ஏதுக்குத் திரைபோடுமோ!
    தப்பேதும் நேராத தாளத்தி லேயென்னைத்
    தாலாட்டித் தூங்கவிடுமோ!
    தள்ளாடும் தூக்கத்தில் முள்ளாடும் முனையொன்றில்
    தனைக்காட்டி ஏங்கவிடுமோ!
    தப்பென்னும் சரியென்னும் தர்மங்கள் யாவும்நீ
    தழுவியதும் தீர்ந்ததம்மா
    தானாக வந்தனை நானாகப் பெறவில்லை
    தாயே மறக்கவில்லை
    எப்போதும் பிரியாமல் முப்போதும் அன்போடு
    என்னோ டிருக்கவேண்டும்
    என்மயிலை தென்மதுரை எனதுஜா கேஷ்வரில்
    எழுந்தருளும் என்னழகியே!

    Share
  • அன்பில் ஒன்றான சங்கம்

    இசைக்கவி ரமணன்

    14449023_10210455897336670_2420999709128751288_n

    கனவிலே மேவும் விடியலில் வந்து
    காதில் கவிதைகள் சொல்கிறாய், அதை
    நினைவிலே பாடி வைக்கிறேன், உனை
    நாளெலாம் தேட வைக்கிறாய்
    மனதிலே தைத்த முள்ளினை, உன்
    மலர்விரல் என்று கிள்ளுமோ? துளி
    மனமிலாத பெரும் மர்மமே! அது
    மறந்து பிள்ளையைத் தள்ளுமோ?

    துருவமாய் அன்னை பிள்ளையா? இந்தத்
    துயரை மிஞ்சும்துயர் உள்ளதா?
    கருவமா? இது கருணையா? இந்தக்
    கதையில் திருப்பமே இல்லையா?
    அருவமே! ஆழ நெஞ்சிலே அழகின்
    உருவமாய்த் தோன்றும் உண்மையே! உன்
    புருவம் உயரும் கணத்திலே, வினைப்
    பொற்பு பொடியாகிப் போகுமே!

    ஒன்றுநீ என்று சொல்லுவார் அதை
    நன்றுதான் என்று கொள்ளுவோம், ஒவ்
    வொன்றிலும் நீ ஒன்றுதான் என்றும்
    சொல்லுவார் அதையும் கொள்ளுவோம்
    ஒன்று மாறி ஒன்றாகத் தெரிவதும், நீ
    ஒன்றுதான் என்னில் ஏற்பரோ? அந்த
    ஒன்றி லொன்றாமல் ஒன்றி நிற்பதே
    வென்றி என்கிறேன் வேர்ப்பரோ!

    கற்றை விரியுமுன் ஒற்றை அழகினைக்
    காட்டினாய் யாம் கண்டனம்
    பெற்ற தாயெனப் பிச்சிப் பேயெனப்
    பேசினாய் யாம் கேட்டனம்
    உற்ற தோழியாய் உதடு முத்தங்கள்
    ஊட்டினாய் யாம் உண்டனம்
    மற்றும் வாழ்விலே வாட வைக்கிறாய்
    மன்றில் வைக்கிறோம் கண்டனம்!!

    உன்னில் நானாகி என்னில் நீயாகி
    நம்மில் நாமான இன்பம்
    அன்பி லொன்றாகி அழகில் இரண்டாகி
    அன்பில் ஒன்றான சங்கம்
    நன்மை தீமைகள் இன்ப துன்பங்கள்
    அன்னையாடும்சது ரங்கம்
    என்றும் உன்சொந்தம் என்று வாழும்நான்
    கன்னித் தமிழ்பேசும் சிங்கம்!

    Share
  • சக்தி முற்றம்

    இசைக்கவி ரமணன்

     

    images-5

    இருள்
    இருளே அஞ்சிப் பதறும் பேரிருள்
    இழைபிரியாமல் எழுந்து பரவி
    இனியொரு திசையே இலாதபடி
    இருந்தும் அசைந்தும் பராவி அவாவி
    ஏதுமே இலாத இலாத எதிரை
    இருக்க வைத்துக் கரைத்துக் குடிக்கும்
    இருள்

    ஒருநாள்
    ஆயிர மாயிரம் கோடிக் கதிர்கள்
    வாயினைத் திறந்து வற்றாச் செம்மைப்
    பாயினை விரித்த பயங்கரி, எனது
    தாயினைக் காணத் தளபதியாய் ஊழித்
    தீயினை அழைத்துச் சேனை வகுத்தன
    தங்கள் ஒளியெனத் தலைகனத்தன
    திங்கள் பகலெனத் திகிரி சுழற்றின
    நுரைக்குமிழிகளை நொறுக்கும் சூறையாய்
    தரைப்புதர்களைத் தழுவும் நெருப்பாய்
    அரைவிழி கூடத் திறக்கவில்லை
    அனைத்தும் அவளது கறுத்த இருட்டில்
    நனைந்த கணத்தில் அமிழ்ந்து மறைந்தன

    மொத்த வானும் ஒற்றை நிலவின்
    முத்தமொன்றால் முழுதும் நெகிழ்ந்து
    அறியாத அழிவொன்றின் தறுவாயில்
    தெரியாமல் சிரித்தபடித் ததும்புவதாய்
    ஆகாசம் காணாமல் போகலாம் எனுமோர்
    அபாயமாக
    ஆரிருளிலிருந்து ரெண்டு
    காரிழைகள் பிரித்தாள்
    அமிழ்தம் நஞ்சாய் அனைத்திலும் ஏறவும்
    அகத்தில் நிலவு மொட்டு முளைக்கவும்
    புறத்தைத் தொட்டுப் புளகம் எய்தவும்
    அகமும் புறமும் அமிழ்தத்தாலே
    தகர்ந்து போகுமோர் தருணத்தில் விழி

    சற்றே திறந்தாள்
    முற்றத்தினிலே முத்துதிர்ந்தன
    பற்றில்லாமல் மோட்டுவளையை
    உற்றுப் பார்த்து றைந்த சிறுவன்
    ஒவ்வொன்றாகப் பொறுக்கிக் கொண்டான்…

    Share
  • ஏழையினை மறந்துவிடாதே!

    இசைக்கவி ரமணன்

     

    images-4
    உன்களிப்பு தர்மம்
    உன்விருப்பம் சிருஷ்டி
    உன்னிமைப்பு மாயம்
    உன்னிமைப்பே முக்தி!

    என்னசொல்லி என்னசெய்து உன்னை அறிவது?
    எங்கு மெதுவு மானவுன்னை என்று காண்பது?
    என்றோநீ வைத்தபுள்ளி எட்டும்வரையிலே, நீ
    எழுதும்கதை சொந்தக்கதை யாகத் தொடருது
    உன்னை மீறி எண்ணமொன் றிருக்க முடியுமா?
    உனதல்ல எனதென்று தடுக்க முடியுமா?
    உள்ளமென்னும் பள்ளமெங்கும் பாயும் வெள்ளமே!
    உயிரில் நின்றும் கண்ணில்படா உச்சக் கள்ளமே!

    என்வினைகள் பிறவி
    உன்மறைப்பு வாழ்க்கை
    என்மறப்பு மரணம்
    என்னநியாயம் தர்மம்?

    கட்டுவதும் கழற்றுவதும் உன்றன் கைகளே, இதில்
    கர்மம் தர்மம் என்பதெலாம் கல்விப் பொய்களே!
    மட்டிலாத உன்றன்கருணை மட்டும் உண்மையே! உன்
    மனதுபோல என்னைமாற்றி மகிழும் பெண்மையே!
    தொட்டிலுக்கு முன்பிருந்தும் தொடர்ந்து வருகிறாய், நாலு
    தோள்களிலோர் தோளுமாகித் தூக்கிச் செல்லுவாய்
    முட்டுமந்த இடைவெளியில் என்ன செய்கிறாய்? ஏதோ
    முழுமையென்கிறார்கள் நீ என்ன சொல்கிறாய்?

    கண்ணில் நீ மாயம்
    கனவெல்லாம் நேயம், உயிர்
    எண்ணியெண்ணித் தேயும்
    என்று வீழும் தாயம்?

    உன்னிருப்பே ஒருகோடி எண்ணமானது, அந்த
    ஒருநினைப்பே இன்பதுன்ப வண்ணமானது
    என்னிருப்போ பொய்மிகுந்த மெய்யுமானது
    ஏற்றும்வரை வாழும்கற் பூரமானது
    ஒன்றுமட்டும் சொல்லிச் சற்று ஓய்வு கொள்கிறேன், நீ
    ஒருத்தி தவிர ஒருவருமே இல்லை சொல்கிறேன்
    என்றுமிந்த ஏழையினை மறந்துவிடாதே! எனக்கு
    எல்லாமும் நீயம்மா துறந்துவிடாதே!

    Share
  • என்மஹா ராணி!

    இசைக்கவி ரமணன்

     

    amman1
    ஆயிரம் பேர்களால் என்ன? அவை
    யாவுமுன் கால்மூடும் மலரே!
    வாயி லிருப்பதா வாக்கு? அது
    வயிரவீ உன்மனப் போக்கு!
    பாயில் கிடக்கவா வாழ்வு? உன்
    பாலிப்புக் கதுதானே தாழ்வு?
    தேயா இருளெலாம் போக்கு! என்
    சித்தத்தில் முத்தத்தைத் தேக்கு!

    நின்னையே கதியெனக் கொள்வார், அவர்
    நிம்மதி இலாமலே திரிவார்
    நின்னையே பொய்யெனச் சொல்வார், அவர்
    நிலமெலாம் செல்வத்தி லாள்வார்
    நின்மனம் ஏதடி பிச்சி? இன்னும்
    நிற்கி றோமேயுனை மெச்சி!
    நின்னிலே ஏதோ இருக்கும்! அது
    நில்லாது நெஞ்சை இழுக்கும்!

    வக்கணை மிக்கதோர் ராணி! துளி
    வற்றாத பேரின்பக் கேணி!
    துக்கம் பிடிக்காத ராணி! நித்தம்
    தூக்கம் கலைக்கின்ற தேனி!
    பக்கத் திலேதேரியும் ராணி! முகம்
    பாராத என்மஹா ராணி!
    வெக்கத்தை விட்டவன் கவிஞன்! என்ன
    வேதனை தந்தாலும் பாதமே கதியே!

    அவளுக்கு மென்னைப் பிடிக்கும்! என்னை
    அல்லாட வைப்பதோ அதைவிடப் பிடிக்கும்!
    சுவர்முழுதும் எழுதினாள் சிறுமி, ஒரு
    சொல்மட்டும் இன்னும் பலிக்காமல் சொக்கும்!
    சுவடிலாச் சித்தத்தின் வெளியில், சற்றும்
    சுட்டமுடி யாதவொரு துகளின் துக ளொளியில்
    இவளைநான் சத்தியம் காண்பேன்! அந்த
    இன்பத்திற் காகவே இவையாவும் ஏற்பேன்!

    மலையிரண் டின்நடுவிலே, நின்று
    மறைகின்ற கதிரோனின் தங்கநிழ லொளியில்
    அலையிறைஞ் சிக்கேட்கவே, நெஞ்சின்
    அப்போதைக் கவிதைபோல் அரும்புநில வமிழ்தில்
    தலைகிறங் கிச்சுழலுமே! அந்தத்
    தள்ளாட்டத் தில்தேவி வெள்ளோட்டம் வருமே!
    விலையற்ற சக்திபித்தம்! மிக
    விரும்பியதை உயிர்தந்து பெற்றதென் சித்தம்!

    Share
  • என் காளிக்கு..

    இசைக்கவி ரமணன்

     

    kali

    பச்சைரத்தம் சொட்டச்சொட்டப்
    பட்டைநாக்கு பளபளக்கப்
    பரபரப்பாய் எதைவிழுங்கப் பார்த்திருக்கிறாய்? நீ
    படைக்குமுன்னே யாவும்விழுங்கித் தீர்த்திருக்கிறாய்!

    அச்சமஞ்சும் உன்வடிவை
    அகம்குலைக்கும் உன்னுருவை
    அள்ளிப்பருகத் துள்ளிவந்த பிள்ளையைப் பாராய்! அவன்
    அழகுத்தமிழின் மழலைகேட்க அம்மா வாராய்!

    இச்சைபோன்ற இடரையெலாம்
    மிச்சமின்றி விழுங்கிவிடு
    என்னையுன்றன் பிள்ளையாக வளையவரவிடு,
    என்றுமெதிரில் நின்றுனன்பில் அளையும்சுகம்கொடு!

    கச்சைக்கட்டிக் கொண்டுவரும்
    கவலையைப் பொசுக்கியந்தக்
    கனலையென்றன் கவிதையிலே சுருதியாக்கிடு! என்னைக்
    கன்னித்தமிழ் மின்னலுக்குக் கருவியாக்கிடு! (1)

    இந்த உலகம் நொந்த உலகம்
    இவர்மனத்தில் தினம்கலகம்
    இங்கெதற்கோ இறக்கிவைத்தாய் தெரியவுமில்லை
    இங்கெனக்கு வேலையென்ன புரியவுமில்லை

    கந்தனோடு பொய்கையிலே
    கவிதைபேசி ஆடியவன்
    சந்தையிலே காசும்பையு மின்றி நிற்கிறேன்
    சட்டையின்றிச் சவுக்கடிக்காய் என்னை விற்கிறேன்!

    எந்தவினை? ஏதுவிதி?
    எவரிடத்தில் இந்தச்சதி?
    உன்றன்பிள்ளை என்பதையே மறந்துவிட்டாயா? நானே
    ஊற்றித்தந்த கள்குடித்துக் கிறங்கிவிட்டாயா?

    அந்தமிலா ஓரிருளில்
    அந்தகார மாயெழுந்து
    வந்துநின்ற காட்சியினை எண்ணிப் பார்க்கிறேன், அந்த
    வாய்ப்புதவறிப் போனதென்று வருந்தி யழுகிறேன் (2)

    நிலவுநெகிழும் நிசியில் மனதில்
    உலவும் மின்ன லமிழ்த மாகக்
    குலவியென்றன் உயிரையெல்லாம் கொள்ளை யடிப்பாய்! இந்தக்
    குழந்தையிடம் குழந்தையாகச் சள்ளை படிப்பாய்

    கலகநடுவில் கண்விழிக்கும்
    கவிதையென்றன் காளியென்று
    உலகமறிய ஊர்நடுவே உடைத்துக் காட்டிடு! நம்
    உண்மையினைச் சந்தியிலே உடைத்துப் போட்டிடு!

    திலகமிட்ட சிறுமியாக
    சிரித்துக்கொன்ற குமரியாக
    திரைநரைத்த கிழவியாக வந்து நின்றனை
    திட்டமிட்டுத் திரும்பத்திரும்ப நின்று கொன்றனை

    உலகுபோதும் வாழ்வுபோதும்
    உறவுபிரிவுத் துயரம்போதும்
    உற்றபிள்ளை! பெற்றவளே ஓடி வந்திடு! காளீ
    உச்சிமுகர்ந் துன்மகவை உன்னில் சேர்த்திடு! (3)

    Share
  • பாதமலர் போதும்

    இசைக்கவி ரமணன்

     

    paduka_1

    மலருக்குத் தேனழகோ
    மணமழகோ நிறமழகோ? என்
    மனதுக்கு நீயன்றி
    மற்றழகொன் றேது?
    மறையெல்லாம் சொன்னாலும்
    மற்றொருசொல் லேது?

    சிலருக்கே திருவுண்டு
    சிலருக்கே அறிவுண்டு
    சிலருக்கோ நீசிரித்துச்
    சேர்ந்த அருளுண்டு
    சிறுபிள்ளை என்னெஞ்சில்
    நீதானே உண்டு!

    நாடகமாய் இவ்வையம்
    பூடகமாய் மனிதமனம்
    கூடெங்கும் நுழைந்துமலர்
    சூடுமுன் கரத்தால், உன்னைத்
    தேடுவதே இவரிங்கே
    ஆடுவதும் பாடுவதும்!

    தேடுவோர்கள் தேட, பதம்
    சூடுவோர்கள் சூட, நிதம்
    வாடுவோர்கள் வரிசையிலென்
    வாழ்க்கை ஆடுதே! இதில்
    ஏடும் இசையும் உன் திறவா
    வாசலானதே!

    போதுமடி அம்மா உன்
    பொல்லாப்பு! இக்கணமே
    மீதமின்றி மிச்சமின்றி
    என்னைத் தீர்த்திடு! உன்
    பாதமலர் போதுமதில்
    பரிந்து சேர்த்திடு!

    Share
  • சிக்காத அமரியல்லவா!

    இசைக்கவி ரமணன்

    amman

    ஏறெழுந்து வந்துநெஞ்சைக் கூறுபோடும் தங்கமே!
    என்றன் கனவில் கவியில்வந்து இடிசிரிக்கும் சிங்கமே! என்னை
    ஏறெடுத்துப் பார்த்துவிட்டால் ஏதுனக்கு பங்கமோ?
    எனக்கும் உனக்கும் இடையினிலே எவர்வகுத்த சுங்கமோ!

    தேரெழுந்த தாயிதயம் ஊர்திரண்ட தாகமனம்
    யாரெந்தக் கொடியசைக்கக் காத்திருக்கிறாய்? அடி
    யாமளையே யார்வரவைப் பார்த்திருக்கிறாய்?
    தேரழுந்தித் தெருநொறுங்கி ஊர்சிரிக்கவா? என்றோ
    தீர்ந்தகதை தொடர்தல்கண்டு பார்விழிக்கவா?

    கார்குழலை மின்னெடுத்துக் கட்டமுயலும் அழகியே!
    கட்டளைக்குக் கவிதைகேட்கும் கர்வமிக்க அரசியே!
    ஊர்விழுந்து நானெடுத்த பிச்சையெலாம் போதுமே! உன்
    உதடுபட்டென் உச்சிகுளிரும் ஒற்றைமுத்தம் வேண்டுமே!

    சாத்திரங்கள் தோற்ற இடம் சதுர்மறைகள் ஏங்கும்பதம்
    சாயங்காலக் கனவுகளில் காட்டியவள் நீ! நீ
    சாம்பலையும் நின்றெரிக்கும் சாம்பவியாம் தீ!
    தோத்திரங்கள் இன்னுமுனக் கலுக்கவில்லையா? கால்
    தொட்டுச்சுட்ட கண்ணீரும் உலுக்கவில்லையா?

    நீயெனக்கு நானுனக்கு நேர்ந்துகொள்ளுவோமே, ஒரு
    நிமிடம்கூடப் பிரிந்திடாமல் சேர்ந்து வாழுவோமே
    தாயெனக்கு நீயுனக்குத் தக்கபிள்ளை கவிஞனே, நீ
    தள்ளிவைக்கத் தள்ளிவைக்கத் தழுவவருவ தொருவனே!

    கூடெடுத்த தூழிக் கனல் குடிசையிலே சூறைப் புயல்
    கூர்த்தகைகள் கொட்டிச் சிரிக்கும் குமரியல்லவா! எந்தக்
    கோட்டுக்குள்ளும் சிக்காத அமரியல்லவா! இது
    மூடநல்ல நேரம்திரை போட நல்லநேரம், என்னை
    முன்பிலாமல் பின்பிலாமல் தீர்த்தருள்கவே! தாயே!
    முத்தமொன்றில் தீர்த்துன்னுள் வார்த்தருள்கவே!

    Share
  • உன்றன் பிள்ளை நான் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    14445941_904534546319371_2553612008051880227_n

    உந்தன் பிள்ளை நான், என்றும்
    எந்தன் அன்னை நீ
    ஏங்கியேங்கி அழுவதுதான் என்றன் வாழ்க்கையோ?
    என்னைப் பார்த்துச் சிரிப்பதுதான் உன்றன் பாசமோ?
    என்ன சொந்தமோ? என்று
    வந்த பந்தமோ?

    மந்திரங்க ளாலுனக்கு மாலை சூட்டுவார், கனல்
    மணமணக்கும் சொல்லெடுத்துக் காலில் தூவுவார்
    சந்திரனை சூரியனைச் சடையில் பூட்டுவார், அந்தி
    சாயும்பொழுதில் தேன்குழைத்துச் சாந்து சாற்றுவார்

    ஏதுமின்றி அம்மாநான் ஏங்கி நிற்கிறேன்
    எல்லோரும் சென்றபின்பும் எதிரில் நிற்கிறேன்

    உன்னையன்றிக் காரணங்கள் இருக்க முடியுமா? உன்முன்
    கன்மஜென்மத் தோரணங்கள் கலகலக்குமா?
    இன்றுநாளை என்றுநாளைத் தள்ளலாகுமா? உயிர்
    சென்றபின்பு தெரியாமல் அள்ளலாகுமா?

    இந்தக்கணம் அம்மாநீ என்னைத் தழுவிடு! இந்த
    விந்தை வாழ்க்கை போதுமென்னை விரைந்து தழுவிடு

    கண்பனிக்கக் கவியிசைக்கும் வரம்கொடுக்கிறாய், நெஞ்சில்
    காதலற்ற இவ்வுலகில் கதறவைக்கிறாய்
    எண்ணமிலாப் பெருவெளியை எட்டவைக்கிறாய், என்னை
    ஏழையாக்கி எவரெவரோ குட்டவைக்கிறாய்

    தாங்கவில்லை அம்மாஉன் தாளில் வீழ்கிறேன், உயிர்
    நீங்குகின்ற தருணம்வேண்டி நீண்டுவாழ்கிறேன்

    Share
  • என்னெதிரே வா உடனே!

    இசைக்கவி ரமணன்

     

    கண்ணிருந் தென்னபயன்? நீ
    காட்டவில்லை உன்வடிவை, நீ
    பெண்பிறந் தென்னபயன்? என்
    பேதைமையைத் தீர்க்கவில்லை
    மண்ணிருந் தென்னபயன்? இன்னும்
    மண்டியிட வில்லைவிண்
    எண்ணரிய பேரழகே!
    என்னெதிரே வா உடனே!

    உன்னருகே நானிருந்தால், அடி
    உனக்குமொரு துணையிருக்கும்
    என்னருகே நீயிருந்தால், அடி
    என்றென்றும் தமிழிருக்கும்
    வன்னங்கள் களைந்தாலோ, அடி
    வானுண்மை புரிந்துவிடும்
    இன்னுமென்ன தயங்குகிறாய்
    என்னெதிரே வா உடனே!

    வில்லாலே உயிர்கொல்வார்
    வீரத்தால் நிலம்கொள்வார்
    பல்கலையால் புகழ்கொள்வார்
    பணக்காரர் பொருள்கொள்வார்
    சொல்லாலே உயிர்தரவே
    சுடராக வடிவெடுத்தேன்
    எல்லோரும் பார்த்திடவே
    என்னெதிரே வா உடனே!

    இசையோடு தமிழ்க்கவிதை
    இதனோடே என்வாழ்க்கை
    வசையோடு பலமனிதர்
    வாழாமற் சாகின்றார்
    நசையின்றி எல்லோரும்
    நலம்வாழப் பாடுகிறேன்
    எசைப் பாட்டு நீ பாட
    என்னெதிரே வா உடனே!

    உள்ளத்தே மிகத்தெளிவாய்
    உலகத்தே மின்னல்களாய்
    வெள்ளத்தே மிகத்துள்ளி
    வெள்ளிவெட்டும் கெண்டைகளாய்
    கள்ளமு கம்காட்டிக்
    கண்சிமிட்டும் மாகாளி!
    எள்ளியது போதுமடி
    என்னெதிரே வா உடனே!

     

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (13)

    இசைக்கவி ரமணன்

    முடிவுரை

    kural-4-1-1

    ப்படி, மனதால் நினைத்தல், வாயாற் புகழ்தல், உடம்பால் வணங்குதல் மூன்றையும் சேர்த்துக் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் வைத்தார். இறைவன், இறை, தெய்வம் என்னும் சொற்களைப் பயன்படுத்தும் வள்ளுவரின் குறளில் கடவுள் என்னும் சொல் இல்லை. மன்னனும் இறை, இறைவன் போன்ற சொற்களால் குறிக்கப்படுகிறான். (உ-ம் இறைமாட்சி) `விஷ்ணுவின் அம்சம் உடையவனே மன்னன், ரிஷியின் அம்சம் உடையவனே கவிஞன்,` என்பது நமது பண்டைய கூற்று. அரசன் என்பவன், இறைவனின் பிரதிநிதியாகவே பிற நாடுகளிலும் கருதப்பட்டான். ஆனால், இங்கே, முதல் அதிகாரத்தில் அவர் மன்னனைக் குறிக்கவில்லை, கடவுளைத்தான் சொல்கிறார். எனவேதானோ, இது, கடவுள் வாழ்த்து என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம் போன்ற நூல்களிலும் நூலுக்கு முகமனாகக் கடவுள் வாழ்த்து உண்டு. இங்கே. நூலின் ஓர் அங்கமாகக் கடவுள் வாழ்த்து அமைந்திருக்கிறது. இதைப் பனுவலாகக் கொள்ளலாம். ஏனெனில், நூல் முழுதும் அவர் அறிவுறுத்த விழைவது கடவுளைப் பணிவதே.

    `கடவுள்` என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்பதால் அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர், அல்லது, கடவுளைப் பற்றிச் சொல்லவில்லை எனலாகாது. `தமிழ்` என்ற சொல் குறளில் ஓரிடத்திலும் இல்லை. `தாய்` என்றார், `அம்மா` என்றார், `தந்தை` என்றவர் `அப்பா` என்று சொல்லவில்லை. இவற்றை வைத்து ஏதேனும் முடிவுக்கு வரவேண்டுமா என்ன?

    மேலும், நூலின் வேறுபல இடங்களிலும் அவர் கடவுளைக் குறிப்பிடுகிறார்:

    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

    இறையென்று வைக்கப் படும் (39:இறைமாட்சி:388) என்னும்போது இறை என்ற சொல்லால் கடவுளைக் குறிக்கிறார்.

    தென்புலத்தார் தெய்வம்..(43) தெய்வம் தொழாஅள் (55) தெய்வத்தான் ஆகாதெனினும் (619) தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் (1023) என்ற குறள்களில் கடவுளை தெய்வம் என்கிறார். பல இடங்களில், தெய்வம் என்பது விதி என்னும் பொருளிலும் வருகிறது. தென்புலத்தார் (43) என்று தொடங்கும் குறள், தீயினாற் சுட்டபுண்.. குறளைப் போல மஹாபாரத வாசகத்தின் மொழிபெயர்ப்பு போலவே தெரிகிறது. யக்‌ஷ ப்ரச்னத்தில், யக்‌ஷன், `எவன் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும், உலகத்தால் துதிக்கப்பட்டாலும், வெறுமே சுவாசிக்கும் ஜீவனாகக் கருதப்படுகிறான்?` என்று கேட்கிறான். அதற்கு தருமர், `தேவ, அதிதி, ப்ருத்யானாம், பித்ருனாம், ஆத்மன: ச ய: ந நிர்வபதி,` என்கிறார். அதாவது, `எவன் தேவர்கள், விருந்தினர்கள், தன்னைச் சார்ந்தவர்கள், பித்ருக்கள், ஆன்மா இவற்றுக்குச் சேவை செய்யவில்லையோ, அவன் வெறுமே சுவாசிக்கும் ஜீவி,` என்று பதில் கூறுகிறார்.  மேலும்,

    தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

    எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்

    என்று புறநானூற்றுப் பாடல் (9) பேசுகிறது.  தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுத்தல் என்பது தொன்மையான தமிழ் மரபே என்பது இதனாலும் உறுதியாகிறது.

    எனவே, தென்புலத்தார் என்பது பித்ருக்களைக் குறிக்கவில்லை என்ற வாதம் சரியில்லை.

    செம்பொருள் காண்ப தறிவு (358) மெய்ப்பொருள் காண்பதறிவு (356) தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் (249), கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டவர்தான் பிறவாத பெருநிலையை எய்துவர் என்று, பொருள், செம்பொருள், மெய்ப்பொருள் போன்ற சொற்களின் மூலமும் அவர் கடவுளையே சுட்டுகிறார்.

    உள்ளது (357) என்றும் கடவுளையே என்றும் உள்ளவன் என்கிறார். உள்ளது நாற்பது என்று ரமண மகரிஷி அருளியதை நினைவில் கொள்க. வேண்டுதல் வேண்டாமை இலானுக்கு விளக்கம்போல் அமைந்திருக்கும் பற்றற்றான் (350) என்னும் சொல்லாலும் கடவுளையே சுட்டுகின்றார். சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் (359) என்னும் குறளில் எவ்வுயிர்க்கும் நிலையான சால்பு என்று கடவுளைத்தான் சொல்கிறார். வகுத்தான் (377) என்னுங்கால் இன்ப துன்பங்களை வகுத்த கடவுளைத்தான் பேசுகிறார். ஒருபடி மேலே சென்று, மற்றவர் வறுமையைத் தாங்க மாட்டாது பரந்து கெடுக உலகியற்றியான் (1062) என்றும் கடவுளைச் சாடுகிறார். பாரதியின், `தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்,` என்னும் கர்ஜனை இந்தக் குறளின் எதிரொலியே.

    மேலும், அப்படிப்பட்ட கடவுளைப் பணிவதால் நமக்கு என்ன கிடைக்கும் என்று பொருள்சார்ந்த பட்டியலிடாமல், நாம் என்ன ஆவோம் என்பதையே சொல்லத் தலைப்படுகிறார். இறைவனைப் பணிவது, பிறவித் துன்பத்திலிருந்து நீங்குவதற்காகவே என்பதை வலியுறுத்துகிறார்:

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் (10) மற்றீண்டு வாரா நெறி (356) பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (357) பிறப்பென்னும் பேதைமை நீங்க (358) என்கிறார். பிறப்பு, அதனால் இறப்பு இவற்றுக்குக் காரணமான பற்று அறுபடுவது அவனைப் பற்றினால் மட்டுமே (350) என்பார்.

    இவ்விதம், பல்வேறு இடங்களில் அவர், கடவுளையும், அவனைப் பணிய வேண்டிய அவசியத்தையும், அந்தப் பணிதலால் நேரும் அறுதி விளைவையும் எடுத்துச் சொல்கிறார் – தாயனைய கருணையுடன், தந்தையின் கண்டிப்புடன், தோழனின் வாஞ்சையுடன்.

    இது மட்டுமல்லாமல் இந்திரன் போன்ற தேவர்களைக் குறிப்பிடுகிறார் : இந்திரனே சாலும் கரி (25) வேந்தனும் வேந்து கெடும் (899) என்பார். `வேந்தன் மேய தீம்புனல் உலகமும்..` என்னும் தொல்காப்பியம் (அகத்திணை, 5) வேந்தன் என்னும் சொல்லால் இந்திரனைக் குறிக்கும். (சாலும் கரி என்றால், போதுமான பிரத்யக்ஷமான சாட்சி)

    பெண்ணின் மெல்லிய தோள்களில் தூங்கும் இனிமைக்கு, திருமால் வாழும் வைகுண்டமும் நிகரோ என்று தாமரைக் கண்ணான் உலகு (1103) என்கிறார்.

    அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறனறிந்து ஆங்கே திரு (179) வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும் திரு (519) இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு (920) என்னும் இடங்களில் இலக்குமியைத்தான் சொல்கிறார். அவளையேதான், அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்தோம்புவான் இல் (84) அவ்வித்து அழுக்காறு உடையவனைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும் (169) என்னும் இடங்களில் பேசுகிறார். அவளையேதான் மடியிலான் தாளுளாள் தாமரையினாள் (617) என்பார். அவளுக்கு நேர்மாறான மூத்தவளான மூதேவியைத்தான் தவ்வையைக் காட்டிவிடும் (169) மடியுளாள் மாமுகடி (617) அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும் முகடியால் மூடப்பட்டார் (936) என்று காட்டுகிறார். அதுபோல, நிலமென்னும் நல்லாள் (1040) என்று பூமி தேவியைச் சொல்கிறார்.

    காமத்துப் பாலைப் பாடியவர் மன்மதனைச் சொல்லாமல் விடுவாரா? பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகுவான் (1197) என்று அங்கே மன்மதனைச் சொல்கிறார்.

    குறளின் குறிக்கோளே அறத்தை வலியுறுத்துதல்தான். அறம்தான் இந்த நூலின் கதாநாயகன். அறம் என்பது நல்வினை, புண்ணியம். மறம் என்பது, அறமல்லாதது, தீவினை, பாவம், பொருளல்லாதது. எனவே, எல்லோரையும் ஒரேவிதமாக நோக்கி, விருப்பு வெறுப்பின்றி, செயல்களுக்கான விளைவுகளை இம்மியும் பிசகாமல் வழங்கும் அறத்தைக் கடவுளாகக் காட்டுகிறார். வடமொழியில், இந்த அறம் என்னும் சக்தி, மூன்று விதமாகச் செயல்படுவதைக் குறிப்பார்கள்:

    1. ம்ருத்யு : உயிரை உடலிலிருந்து எடுத்துச் செல்லும் சக்தி. இதைக் கூற்றுவன் எனலாம். ஏனெனில், உடலிலிருந்து உயிரைக் கூறு செய்பவன் கூற்றுவன் என்பது விளக்கம். கூறு என்றால் பங்கு, பிரிவு, பாதி, அம்சம், வகை, கூறிட்ட பொருள் என்றெல்லாம் பொருள்படும்
    2. காலன் : உடம்பில் உயிர் நிலவும் காலத்தை, அதாவது ஆயுளை நிர்வகிக்கும் சக்தி
    3. எமன் : இவனே தர்மராஜன் எனப்படுகிறான். இவனே இருவினைப் பயனை, உயிர்களுக்கு, உரிய விதத்தில், உரிய காலத்தில் சேர்ப்பிப்பவன்

    இந்த விளக்கத்தை மனத்தில் கொண்டு, திருவள்ளுவர் அறக்கடவுளைப் பற்றியும், கூற்றுவனைப் பற்றிச் சொல்வதையும் கூர்ந்து நோக்குவது சுவாரசியமானது.

    ன்பிலதனை வெயில்போலக் காயுமே

    அன்பிலதனை அறம் (77)

    கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (130)

    மனத்தில் சினம் உண்டாகாமல் தடுத்துக் கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கம் உடையவனாக இருப்பவனிடம், அறக்கடவுள் சென்றடையும் சமயத்தை எதிர் பார்த்திருக்கும்.

    மறந்தும் பிறன்கேடு சூழற்க, சூழின்

    அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (204)

    இவற்றில், அறக்கடவுளின் கடுமையை, சமாதானமற்ற கூர்ந்த பார்வையை, பிழைசெய்வோரை தண்டிக்கும் கண்டிப்பைச் சொல்கிறார்.

    கூற்றம் குதித்தலும் கைகூடும் (269) கொல்லாமை மேற்கொண்டொழுகுவான் வாழ்நாள் மீது செல்லாது உயிருண்ணுங் கூற்று (326) கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை (765) கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் (894) உப்பிற்கும் காடிக்கும் கூற்று (1050) என்கிறார். சுருங்கச் சொன்னால்,

    1. தவவலிமையால் கூற்றுவனை வெல்லக் கூடும்
    2. கொல்லாமை விரதம் பூண்டவன் அற்ப ஆயுளில் இறப்பதில்லை, துர்மரணம் அவனுக்கில்லை
    3. படைவீரம் என்பது கூற்றுவனே எதிர்நின்றாலும் தீரத்துடன் போரிடுவது
    4. ஆற்றலுள்ள நல்லோருக்குத் தீங்கிழைத்தல், கூற்றுவனைக் கைதட்டிக் கூப்பிடுவதற்கு நிகர்
    5. பொருளே இல்லாத போதும் மனதில் துறவு மனப்பான்மை வரவில்லையென்றால், அவன் அண்டை வீடுகளிலுள்ள பொருட்களுக்குக் கூற்றுவனாவான்

    என்று பலவிதமாகக் கூற்றுவனைக் குறிப்பிடுகிறார்.

    கூற்றுவனின் கொடுமையை அவர் காமத்துப் பாலிலும் காட்டுவது அற்புதமான உத்தி:

    பண்டறியேன் கூற்றென்பதனை; இனியறிந்தேன்

    பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083)

    கூற்றமோ? கண்ணோ? பிணையோ? மடவரல்

    நோக்கமிம் மூன்றும் உடைத்து (1085)

    என்று பெண்ணின் கண்ணுக்குக் கூற்றுவனை இணையாகப் பேசுகிறார். கூறு என்றால் பிரிவு, பங்கு, அம்சம், பாதி, வகை என்றெல்லாம் பொருள்படும்.

    சரி. பிறப்பு, இருவினை, அறம், கூற்றுவன், இறப்பு என்றெல்லாம் பேசுபவர், இறந்து போன முன்னோர்களாகிய பித்ருக்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரா என்றால், அவர்களைத் தென்புலத்தார் (43) என்கிறார். ஞானியர், யோகியர், பேரடியார் இவர்களெல்லாம் வடபுலம் ஏகியவர்கள். மற்றை மானிடர்கள், தென்புலத்தார். அவர்கள், பூமியில் வாழும் மனிதர்களின் சடங்குகளின் மீது ஆதாரப்பட்டிருக்கிறார்கள்.

    மனிதர்களில் கயவர்கள், பதடிகளைப் பற்றிச் சொன்னவர், மனிதரல்லாத அமானுஷ்ய ஜீவிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்:

    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ? கனங்குழை

    மாதர்கொல்? மாலும் என் நெஞ்சு (1081)

    நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

    தானைக்கொண் டன்ன துடைத்து (1081)

    அணங்கைப் பெண் எனலாம்; பேயெனலாம்; பெண் தெய்வம் எனலாம். தாக்கணங்கை மோகினி எனலாம்! இவை போதாதென்றோ,

    அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

    பேஎய்கண் டன்ன துடைத்து (565)

    உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்து

    அலகையா வைக்கப் படும் (850)

    என்று, பேயைக் கொண்டு வருகிறார்.

    உடனே, வள்ளுவருக்குப் பேய்களில் நம்பிக்கை உண்டா என்று வினாவெழுப்ப வேண்டா! `என்னடா பேயறைந்தாற்போல் இருக்கிறாய்?` என்றால் கேட்டவர் அதற்கு முன்பு தன்னையோ பிறரையோ பேயறைந்து பார்த்திருக்கிறார் என்று பொருளல்ல! அது ஒரு manner of expression.

    ஆனால், அவர் தேவர்களைப் பற்றிச் சொல்வது, பேய்களைப் பற்றிச் சொன்னதுபோல் ஒரு பேச்சுக்காக இல்லை.

    சிறப்பொடு பூசனை செல்லாது, வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (18)

    அகல்விசும்புளோர் கோமான் இந்திரன் (25)

    வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (50)

    நல்விருந்து வானத்தவர்க்கு (86)

    புத்தேளுலகத்தும் (213)

    புலவரைப் போற்றாது புத்தேளுலகு (234)

    கள்ளார்க்குத் தள்ளாது புத்தேளுலகு (290)

    அவியுணவின் ஆன்றார் (413)

    தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

    தேவர் அனையர் (1073)

    புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ (1323)

    இவைபோன்ற குறள்களைப் பார்க்கும்போது, தேவர்கள், வானுலகம் இவை, வள்ளுவரின் வெறும் நம்பிக்கையாக இல்லாமல் அவர் அறிந்த நிதர்சனமாக இருந்தனவோ என்று தோன்றுகிறது.

    தேவர்களைக் குறிப்பிட்டால் அமிழ்தத்தைக் குறிப்பிடாமல் இருப்பாரோ?

    தான் அமிழ்தம் (11)

    சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று (82)

    அமிழ்தினும் ஆற்ற இனிதே (64)

    அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் (720)

    மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை (968)

    அமிழ்தின் இயன்றன தோள் (1106)

    தேவர்கள், அவர்கள் உறையும் சுவர்க்கம், அமிழ்தம் இவற்றைச் சொன்னவர், நரகத்தையும் குறிப்பிடத் தவறவில்லை:

    அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் (121)

    ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு (255)

    ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

    தான்புக் கழுத்தும் அளறு (835)

    புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு (919) என்றெல்லாம் சொல்லி, அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்:சேர்ந்த இன்னா உலகம் புகல் (243) என்பார்.

    இம்மையை மாயையென்று கொண்டவரில்லை வள்ளுவர். அங்ஙனம் கொண்டிருந்தால், வாழ்வின் எல்லாத் தளங்களுக்கும் பொருத்தமான அறங்களை ஏன் சொல்வார்? தேவர்கள், அவர்கள் வதியும் இடம் என்பவற்றைப் பற்றியும் பேசுவாராதலின், அவர் மறுமையை நம்பியவர் என்றே உறுதியாய்ச் சொல்லலாம். இங்கு வாழ்ந்து உயிர் நீத்தபின் எய்தும் நிலையும் அதன்பிறகு நேரும் பிறப்புமே மறுமை.

    மனநலத்தின் ஆகும் மறுமை (459)

    மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் (904)

    மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222)

    என்ற குறள்களில் மறுமையைச் சுட்டுபவர், இம்மை, மறுமை இரண்டையும் சேர்த்தே இரண்டு இடங்களில் கையாள்கிறார்:

    சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

    இம்மையும் இன்பந் தரும் (98)

    இன்மை எனவொரு பாவி மறுமையும்

    இன்மையும் இன்றி வரும் (1042)

    இம்மையும் மறுமையும் சொன்னவர், மனித வாழ்வின் நோக்கமான வீடு பேற்றையும் அவருக்கே உரிய முறையில் கச்சிதமாகச் சொல்கிறார்.

    அதை,

    வானென்னும் வைப்பு (24)

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை (247)

    புக்கில் (340)

    வானோர்க்கு உயர்ந்த உலகம் (346)

    வையத்தின் வானம் நணிய துடைத்து (353)

    என்றெல்லாம் வீட்டை விவரித்து மற்றீண்டு வாரா நெறியே (356) மனிதன் கடைபிடிக்க வேண்டியது என்று அறிவுறுத்துவார்.

    ஆக, உறங்குவதும் விழிப்பதும் போலத்தான் இறப்பும் பிறப்பும் (339) என்றும், பிறவி என்பது பெருங்கடல் (10) என்றும், அதில் நாம் உழல்வதற்குக் காரணம் பிறப்பென்னும் பேதைமை (358) (அறியாமை) அதற்குக் காரணம் அவா என்னும் வித்து (361) என்றும், அதற்குக் காரணம் பற்று (347) என்றும், பற்றுக்குக் காரணம் யான் எனது என்னும் செருக்கு என்றும், (346) காமம், வெகுளி, மயக்கம் (360) உள்ளமட்டும் பிறவி என்பது தொடரும் என்றும், ஒரு பிறவியில் செய்த வினையின் விளைவு ஏழு பிறவிகளில் தொடரும் என்றும், (107, 126, 398, 538) வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை (360) என்றும் சொல்லி, பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் (349) என்றும் படிப்படியாக விவரித்துச் சொல்கிறார்.

    பற்று நீங்கினால், இந்த உலகத்தில் இந்த உடலில் இருக்கும்போதே விடுதலை எய்தி வீடு பேற்றை அடையலாம் என்பதை,

    இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்

    துன்பத்துள் துன்பம் கெடின் (369)

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நினைவே

    பேரா இயற்கை தரும் (370)

    என்னும் குறள்களில் உறுதிமொழி தருவதுபோல் விளக்குகிறார்.

    திருவள்ளுவர் காட்டும் நெறியில் நின்றால், யாண்டும் இடும்பை இல என்பதே உறுதி.

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (12)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (11)

    kural-4-1-1

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

    இறைவ னடிசேரா தார் (10)

     

    கடவுளின் திருவடியை அடைந்தவரால் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவரால் கடக்க முடியாது.

    யார் இறைவனடியைச் சேர்கிறார்களோ அவர்களே பிறவியாகிய பெருங்கடலைத் தாண்டுகிறார்கள். அறம், பொருள், இன்பம் என்னும் கடல்களைக் காட்டிலும் விரிந்ததும் மருட்சி தருவதுமானது பிறவி என்னும் பெருங்கடல். அதனால்தான் அதனை சம்சார சாகரம் என்கிறோம்; பவக்கடல் என்கிறோம்; ஏன், கவலைக் கடல் என்றுகூடச் சொல்கிறோம்.

    இந்தக் கொடுங்கடலை எப்படிக் கடப்பது? முயற்சியின்றி மூழ்கிப் போவதா? மணலைத் தூவித் தூர்க்க முனைவதா? கரை எங்கோ அதுவரை பாலம் கட்டப் புறப்படுவதா?

    கடலைத் தாண்டப் பாலம் எதற்கு, படகே போதாதா?

     

    ஆம், அந்தப் படகுதான் இறைவனின் தாள்கள்; இறைவனின் திருநாமம்.

    கடவுளின் தாளைப் பணிவதால் மட்டுமே அதைக் கடக்கமுடியும், மீண்டும் பிறவாமல் காத்துக்கொள்ள முடியும் என்கிறார் வள்ளுவர். இல்லையெனில், மறுபடி மறுபடிப் பிறவிக் கடலில் அழுந்தும் துயரே தொடரும் என்பது முடிவு. ஆயின், வினை, அதன் விளைவாகிய பிறப்பு, முற்பிறவி இவை உண்டு என்றுதான் திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

    `என்பால் சித்தத்தை வைத்தோரை, விரைவில் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்கிறேன்,` என்கிறான் கண்ணன். (கீதை:12:07)

    இறைவனைப் பணிதலே துவக்கமும், முடிவும், ஒவ்வொரு மனிதனின் பணியும் என்பதை மிக உறுதியாகவும் அன்போடும் கருணையோடும் எடுத்துச் சொல்கிறார்.

    இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார் என்றார். நீந்துவர் என்னும் சொல் தனியே நிற்பதுபோல் தோன்றுகிறதல்லவா? இங்கே உவமை சொல்லப்படவில்லை. ஒன்றைச் சொல்லி, இன்னொன்று சொல்லாமல் சொல்லப் படுகிறது. இதை இசையெச்சம் எனலாம். இது ஏகதேச உருவகம் அல்லது ஏகாங்க உருவகம் எனப்படும்.

    இன்னொரு சிறப்பையும் காண்போம்:

    ந்தப் பத்துக் குறள்களில், அனைத்துக்கும் ஆண்டவனே முதல் என்பதை முதலிலேயே முடிவாகச் சொல்லிவிடுகிறார். அவனுடைய புகழைப் பாடுவதே இருவினைகளில் இருந்து மீளும் வழி என்பதை ஓரிடத்தில் சொல்கிறார். ஒழுக்க நெறியில் நின்றார் நீடு வாழ்வார் என்று ஓரிடத்தில் கூறுகிறார். ஆக, எவன் அனைத்துக்கும் துவக்கமோ அவன் புகழைப் பாடுவதும், அவனை அடைய விதிக்கப்பட்ட ஒழுக்க நெறியில் நிற்பதுமே வேலை என்கிறார்.

    இஃதல்லாமல், பத்து குறள்களில் ஏழு குறள்கள் இறைவனுடைய தாள்களைப் பணியச் சொல்கின்றன:

    1. வாலறிவன் நற்றாள்
    2. மலர்மிசை ஏகினான் மாண் அடி
    3. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
    4. தன்க்குவமை இல்லாதான் தாள்
    5. அறவாழி அந்தணன் தாள்
    6. எண்குணத்தான் தாள்
    7. இறைவன் அடி

    தாளைப் பணியவே தலை. தாளில் ஆளில்லை. அதில் தலைவைத்துத்தான் நமது அடையாளங்கள் யாவும் தீர்ந்து நாம் ஆளாவோம்! அவனுக்கே ஆளாவோம்! தாளில், புகலிடம் என்பதைத் தவிர வேறு அடையாளம் இல்லை. முக பாவனை இல்லை. கைகளும் ஆயுதங்களும் இல்லை. வாழ்வில் தள்ளாடி வரும் நம்மை ஒருபோதும் தள்ளாது தாள்!

    இறையருளே இணையடி!

    அவனே அனைத்தும் என்பதால், அவனைப் பணிதலே அனைத்துக்கும் வழி என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

     தொடருவோம்

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (11)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை  – 10

    kural-4-1-1

    கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

    தாளை வணங்காத் தலை (09)

     

    எட்டுக் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள், தத்தமக்குரிய செயல்களைச் செய்யாத ஐம்பொறிகளைப் போலப் பயனற்றவையாகும்.

    கோள் இல் = கொள்ளுவது கோள். கிரகங்களுக்கும் பொருந்தும். கிரஹணம் = பற்றுதல். பாணிக் கிரஹணம் = கைத்தலம் பற்றுதல்

    பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் கர்மேந்திரியங்கள். Sensory organ. புலன்கள் ஞானேந்திரியங்கள். பொறிவைத்துப் பிடித்தல்! Senses

     

    இலக்கணம்

    குணத்தான்-குணங்களை உடையவன்.  ஆண்பால் படர்க்கை (third person) பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் இவற்றின் அடியால் வருபெயர்.  இங்கே குணத்தின் அடிப்படையால் வரும் பெயர்.

     

    ண் இருக்கிறது. ஆனால், கண்ணா பார்க்கிறது? இல்லை, கண்வழியே பார்ப்பது நாம்.

    நாமா பார்க்கிறோம்? நம்மைப் பார்க்க வைக்கின்ற மஹாசக்தி ஒன்று உள்ளது அல்லவா?

    ய: சக்‌ஷுஷா ந பச்யதி யேன சக்ஷுகும்ஸதி பச்யதி

    ததேவ ப்ரம்ம த்வம் வித்தி நேதம் யதிதம் உபாஸதே (கேனோபநிடதம்)

     

    எதைக் கண்ணால் பார்க்க முடியாதோ, எது கண்ணைப் பார்க்கச் செய்கிறதோ அதுவே ப்ரம்மம் என்றறி, என்கிறது கேனோபநிடதம். இது, மற்ற எல்லாப் புலன்களுக்கும் பொறிகளுக்கும் அவயவங்களுக்கும் பொருந்தும் என்பதை விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. அந்த மஹாசக்திதான், கண்ணன் சொல்கின்ற `க்ஷேத்ரக்ஞன்.` என் குருநாதர் சொல்கின்ற ‘Truth of the inner fellow.’ ஆக, அவன் இல்லையென்றால், அவன் அருளில்லையென்றால், நாம் எதையும் பார்க்கவோ, கேட்கவோ, முகரவோ, சுவைக்கவோ, தொட்டறியவோ முடியாது. இது இந்தக் குறளின் அடிப்படைப் பொருள்.

    இனி, வள்ளுவர் அடுத்த அடிக்கு இட்டுச் செல்வதைப் பார்ப்போம்.

    சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவை புலன்கள் எனப்படும். இவை senses எனப்படும். மெய், வாய், கண், மூக்கு, செவி இவை பொறிகள் எனப்படும். இவைதான் ஞானேந்திரியங்கள் எனக் குறிக்கப்படுகின்றன. (உபத்ரம், பாணி, பாதம், பாயுரு, வாக்கு என்பவை கன்மேந்திரியங்கள்)

    பொறிகள் கருவிகளே. அவை தன்னிச்சையாக இயங்க முடியாது. புலன்களோடு பொருந்தியிருப்பதால் மட்டுமே அவை தத்தம் அமைப்புக்கேற்பத் தொழிற்படுகின்றன. காது என்கின்ற கருவி, கர்மேந்திரியம், கேட்டல் என்னும் சக்தியோடு பொருந்தியிருக்கும்போதுதான் நம்மால் ஒலியைக் கேட்க முடிகிறது. இல்லையேல் காது கேட்காது. எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது எதிரே நடப்பவர் கண்ணில் படுவதில்லை. ஒருவர் கூப்பிடுவது காதுகளில் விழுவதில்லை. உறக்கத்திலிருந்து நம்மை எழுப்ப, சும்மா தொட்டால் போதுமானதாக இருக்கிறதோ? உலுக்க வேண்டியிருக்கிறதே! கவலையில், நாவுக்குச் சுவை தெரிவதில்லை. உறக்கத்தில் ஏது வாசனை?

    பில் கேட்ஸ், தன் கைப்படத் தயாரித்துப் பரிசளித்த கணினியே என்றாலும், `ப்ளக்`கை மின்சார இணைப்போடு செருகாமல் அது இயங்குமா? கணினிதான் பொறி. (கணிப்பொறி என்று சரியாய்த்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்!) மின்சாரம், புலன். பில் கேட்ஸ் நாம். இறைவன் பில்லுக்குப் பாட்டனுக்கும் பாட்டன். எனவே, புலன்களும் பொறிகளும் இணைந்திருக்கும்போதுதான் இயக்கம் சரிவர நடக்கின்றது. இல்லையெனில், உயிரும் உணர்வும் இருந்தும் அவை இல்லாதது போலவே நாம் ஜடமாக இருக்கும் அவலத்திற்கு வாய்ப்பு இருக்கிறது.

    பொறி என்பது கருவி; அதற்கு அறிவுடைமை, விவேகம், பிரத்யட்சம் என்றெல்லாம் கூடப் பொருள்கள் உண்டு. புலன் என்பது அறிவு. குழம்ப வேண்டாம்! பல இடங்களில் பொறி, புலன் இவை ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. நாம் இங்கே புரிந்துகொள்ள வேண்டியது இதுதான். புலன் – பொறி, இவை இணைப்போடிருந்தால்தான் அந்தந்தப் பொறிக்கான தொழில் நடைபெறுகிறது. அதாவது, பொறி, புலனோடு பொருந்தியிருக்க வேண்டும்.

    கண், பார்த்தல் என்னும் அறிவுச் சக்தியோடு இணைந்திருக்க வேண்டும். இல்லையெனில், அது குணமற்றதே.

    இந்த இயக்கத்திற்குக் காரணம் பொறிவாயில் ஐந்தவித்தான், மலர்மிசை ஏகினான், வாலறிவன். அவனை வணங்கித்தான் நம்மில் எதுவும், நம் மூலம் எதுவும், நம்மாலும் சீராக இயங்க முடியும். புலன்களோடு பொருந்திக் கொள்ளாத பொறிகள் எப்படிப் பயனற்றவையோ, அதுபோலவே எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளை வணங்காத தலை, அதாவது மனித வாழ்க்கை பயனில்லை என்கிறார்.

    நம் பிஞ்சுவிரல், வள்ளுவரின் உள்ளங்கையின் வெதுவெதுப்பை நிலையாக அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமோர் அடியெடுத்து வைக்கலாமே!

    ல்லாப் பொறிகளுமே புறம்நோக்கித்தான் பொருத்தப்பட்டிருக்கின்றன. புலன்களும் பொறிகளும் சேர்ந்து புறப்பொருட்களோடு ஓயாமல் தொடர்புகொண்டபடிதான் இருக்கின்றன. இந்தத் தொடர்புகளே, நம் சித்தத்தில் பாளம் பாளமாகப் பதிந்திருக்கும் பழைய வாசனைகளைக் கிளறி, அவை ஆசைகளாய் எழுந்து, அதன்பின்னே நாம் சென்று விழுகிறோம். காற்று வந்த ஜன்னல் வழியே நாம் கீழே விழுவதுபோல், நமக்கு வந்த தபால்களின் குவியலில் நாமே மூழ்கிப் போவதுபோல், புலன்கள், பொறிகள் இவற்றின் இயற்கையான இயக்கத்தில், நாம் தொலைந்துபோகிறோம். வாழ்க்கை என்பது பிரகிருதி நம்மோடு ஆடும் ஆட்டமே. நாம் இன்பம், துன்பம் என்று சொல்வதெல்லாம், நாம் பிரகிருதியில் காணும் அனுபவங்களே. இதை உணர்ந்தவன் இன்பத்தில் ஆடுவதுமில்லை; துன்பத்தில் வீழ்வதுமில்லை. இவையிரண்டுமே இந்திரியங்களின் விளையாட்டு; அவற்றின் பின்னே இருக்கும் மனத்தின் ஓயாத சஞ்சலம்; இவையெதுவும் மேலானவை அல்ல, உண்மையல்ல, நிரந்தரமல்ல; எனவே இவை நானல்ல என்றும் உணர்ந்து, தனது இதயக் கமலத்தில் இடைவிடாது பேரொளியாய் வீற்றிருக்கும் இறைவனைச் சரணெய்துகிறான். அங்கே, ஆசாமி, சாமியாகிறான்!

    வள்ளுவர் நம்மை அழைத்துச் செல்லும் தொலைவு, அளக்க முடியாதது!

    சொல்லுக்குச் சொல் பொருள்கண்டு சுவைப்போம்.

     

    (1) கோள்

    ஒப்புரவினால் வரும் கேடெனெனின் அஃதொருவன்

    விற்றுக்கோள் தக்க துடைத்து (22 ஒப்புரவு 220)

    பரோபகாரத்தால் நமக்குக் கேடு வருமாயின், அந்தக் கேடு, நம்மையே விற்றுப் பெறத்தக்கது.

    புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

    இரந்துகோள் தக்க துடைத்து (78 படைச்செருக்கு 78)

    தன்னை ஆதரித்த மன்னனின் கண்முன்னே, அவன் விழிநீர் சொரிய, போர்க்களத்தில் மாய்வது என்பது, கெஞ்சியேனும் பெறத்தக்கது.

    ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

    மேவார் இலாஅக் கடை (106 இரவு 1059)

    பிச்சை கேட்டுப் பொருள்கொள்வோர் இல்லாத போது கொடுப்பவருக்குப் புகழ் ஏது?

    இந்த மூன்று குறள்களிலும், கோள் என்றால் கொள்ளுதல் என்று பொருள் வருகிறது.

     

    சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

    செய்யாமை மாசற்றார் கோள் (32 இன்னா செய்யாமை 311)

    சிற்ப்பைத்தரும் செல்வம் பெறுவதாயிருந்தாலும் இன்னொருவருக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதே குற்றமற்ற நெஞ்சினரின் கொள்கை.

    கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

    செய்யாமை மாசற்றார் கோள் (32. இன்னா செய்யாமை 312)

    ஒருவன் தம் மீது பகைகொண்டு துன்பம் புரிந்தாலும், திரும்ப அவனுக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதே குற்றமற்ற நெஞ்சினரின் கொள்கை.

    வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

    மாட்சியின் மாசற்றார் கோள் (65 சொல்வன்மை 646)

    தான், பிறர் விரும்பும்படி சொல்லி, பிறர் சொல்லும்போது அதன் பயனை ஆராய்தல் குற்றமற்ற நெஞ்சினரின் கொள்கை.

    ஊறொரால், உற்றபின் ஒல்காமை, இவ்விரண்டின்

    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் (67 வினைத்திட்பம் 662)

    இந்த மூன்று குறள்களிலும் கோள் என்பது கொள்கை என்னும் பொருளில் வந்தது. கொள்கை என்பது துணிபு (முடிவு) என்றும் சொல்லப்படும்.

     

    (2) பொறி

     

    பொறிவாயில் என்றபோதும் பொறியில் என்னும்போதும் பொறி என்பது ஐம்பொறி என்னும் பொருளில் வருகிறது.

    பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து

    ஆள்வினை இன்மை பழி (62 ஆள்வினை உடைமை 618)

    அனுபவிக்கும் ஊழ் இல்லாது போதல் பழியாகாது. ஆனால், அறிவோடு முயற்சி எடுக்காதிருப்பதே பழி.

    இந்தக் குறளில் பொறி என்பது விதி அல்லது ஊழ் என்னும் பொருளில் வருகிறது.

     

    கோளில் பொறியில். பொறியில் = பொறியின் = பொறிபோல என்று பொருள் புரிந்துகொள்ள வேண்டும்.

    (3) தாள்

     

    கடவுள் வாழ்த்தில் காணப்படும் தாள் என்னும் சொல் அடி என்னும் பொருளில்தான் வருகிறது. அஃதல்லாமல்,

    தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

    வேளாண்மை செய்தற் பொருட்டு (22 ஒப்புரவறிதல் 212)

    உழைத்துச் சம்பாதிப்பது உரியவர்க்கு உதவுதற்கே.

    மடியுளாள் மாமுகடி என்ப, மடியிலான்

    தாளுளாள் தாமரையினாள் (62 ஆள்வினையுடைமை 617)

    மூதேவி சோம்பலிலும், திருமகள் முயற்சியிலும் வாழ்கிறாள்.

    தெண்ணீர் அடுபுற்கை யாயினும், தாள்தந்தது

    உண்ணலி னூங்கியது இல் (107 இரவச்சம் 1065)

    நீர்த்த கஞ்சியானாலும், அது தான் உழைத்துச் சமைத்ததானால், அதைவிட உயர்ந்தது இல்லை.

    இந்த மூன்று குறள்களில் தாள் என்பது முயற்சி என்னும் பொருளில் வருகிறது. மேலும்,

    தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

    வேளாண்மை என்னும் செருக்கு (62 ஆள்வினையுடைமை 613)

    பிறருக்கு உதவும் மேலான நிலைமை, முயற்சி என்னும் பண்பில்தான் உள்ளது

    தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடிகை

    வாளாண்மை போலக் கெடும் (ஆள்வினையுடைமை 614)

    முயற்சி இல்லாதவன் செய்யும் உதவி, பேடியின் கையில் வாளைப் போல.

    இவ்விரண்டு குறள்களிலும் தாள், தாளாண்மையாகி, முயற்சி என்னும் பண்பு என்று பொருள் படுகிறது.

     

    (4) தலை

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

    பசும்புல் தலைகாண் பரிது. (02 வான்சிறப்பு 16)

    மழையில்லை என்றால் புல்கூடத் தலைகாட்ட முடியாது.

    செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

    காணின் கிழக்காம் தலை (49 காலம் அறிதல் 488)

    பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும். அவர் காலம் முடியும்போது அவர் தலை கீழே விழும்

    இங்கே தலை என்பது முடி என்னும் பொருளில்தான் வருகிறது.

     

    ஐம்புலத்தார் ஓம்பல் தலை (5:இல்வாழ்க்கை:43) முயல்வாருள் எல்லாம் தலை (5:இல்வாழ்க்கை:47)  மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை (6:வாழ்க்கைத் துணைநலம்:57) இகழ்வார்ப் பொறுத்தல் தலை (16:பொறையுடைமை:151) என்பன போன்ற (இன்னும் நிறைய உண்டு) குறள்களில் தலை என்பது முதன்மை, சிறப்பு என்னும் பொருளில் வருகிறது.

     

    சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

    உட்கோட்டம் இன்மை பெறின் (12:நடுவுநிலைமை:119)

    இங்கே, தலை என்பது உறுதி என்று பொருள்படும்.

     

    `தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்,` என்னும் பாரதியின் அமர வாசகம் இங்கே ஓரத் தக்கது.

     

    ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (36:மெய்யுணர்தல்:357)

    இங்கே தலை என்பது தெளிவு என்று பொருள்படும்.

    தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்ளாத பொறிகளால் பயனில்லை. அதுபோலத்தான் எட்டு குணங்களை உடைய இறைவனின் தாளை வணங்காத தலை. தலை என்பது இங்கே உடம்பையல்ல, மனிதனின் வாழ்வையே சுட்டுகிறது.

    ஆக,

    கொள்ள வேண்டியது அவன் தாள்களை

    கொள்கை என்பது அவன் தாள்களைப் பற்றிக்கொள்வதே

    பொறிகள் நமக்கு வாய்த்திருப்பது அவன் தாள்களில் பொருத்திக்கொள்ளவே

    ழ் என்பது உயிரான அவன் தாள்களைச் சரணெய்தியே தீரும். `ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்` என்று இளங்கோ அடிகள் பேசும்போது அங்கே தீவினை குறிக்கப்படுகிறது. திருவள்ளுவரின் ஊழ் என்பது நல்வினை, தீவினை இரண்டும் சேர்ந்தது. பிறப்பும் இறப்பும் இல்லாத பெருநிலை எய்துதற்கு நல்வினையும் ஒரு தடையே ஆதலின் `இருள்சேர் இருவினை` என்றார். எனவே, இறைவனின் தாள்களைச் சரணெய்தினால், விளைவுகளுக்குக் காரணமான ஊழ் தீரும், ஒருமை நேரும் என்று புரிந்துகொள்கிறோம். வினை என்றால் செயல். செயல் நேர்ந்தால் விளைவு என்னும் பயன் எழுந்தே தீரும். அது வினையாற்றியவனைப் பற்றத்தான் செய்யும். நமது வினைகளின் ஒட்டுமொத்தமான விளைவுகளின் தொகுதி, அவை விளையும் ரீதி, விதம், இவற்றுக்கே விதி என்று பெயர். அது, விதிக்கு உட்படாத, எந்த விதிக்கும் மூலமான இறைவனின் திருவடிகளைப் பற்றித்தான் தீரும் என்பதே வள்ளுவர் நமக்குக் கற்பிக்கும் பாடம்.

    தாள் பணிவதே நம் முயற்சி என்னும் கடன்

    தாளைப் பணிவதே முயற்சி என்னும் பண்புக்கு முத்திரை

    தாள்களே தலைக்கான இடம்.

    தாள் பணிவதே முதன்மைக் கடன்

    தாள் பணிந்து வாழ்வதே தலையாய சிறப்பு

    தாள்களில் உறுதியாக நிற்கவே தலை

    தாள்பணிந்து வருவதே தெளிவு.

    (5) எண்

     

    எண் என்றால் கணக்கு, தருக்கம்

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

    கண்ணென்ப வாழும் உயிர்க்கு (40:கல்வி:392)

    எண் என்று சொல்லப்படும் அறிவியலும் (Science) எழுத்து என்று சொல்லப்படும் கலை இயலும் (Arts) உண்மையாக வாழ்கின்றவர்கட்குக் கண்கள் என்று சொல்லுவார்கள்.

    எண் என்றால் எண்ணம்

    எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு, எஞ்ஞான்றும்

    பெண்சேர்ந்தாம் பேதைமை இல் (91: பெண்வழிச் சேறல்:910)

    சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.

    எண் என்றால் எளிமை

    எண்பொரு ளாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

    நுண்பொருள் காண்ப தறிவு (43:அறிவுடைமை:424)

    எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

    தண்பதத்தான் தானே கெடும் (55:செங்கோன்மை:548)

    ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

    ஏனை இரண்டும் ஒருங்கு (76:பொருள்செயல்வகை:760)

    எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

    பண்புடைமை என்னும் வழக்கு (100:பண்புடைமை:991)

    ஆக,

    கணக்கு, தருக்கம் எல்லாம் கடவுளின் பாதத்தில் முடிகின்றன. நெஞ்சுறுதி என்பது இறைவனின் தாள்களில் நிலைத்து நிற்பதே.

    இறைவனே நெருங்குதற்கு எளியன். அவன்தாள் பணிந்தால் எதுவுமே எளிமையாகிவிடும்.

    இனி

    எண்குணத்தான் தாள் என்னும்போது குணம், வடிவம் உடைய கடவுளை மக்கள் வழிபடுவது வள்ளுவருக்கு ஏற்புடையதுதான் என்று தோன்றுகிறது.

    இப்போது எண்குணத்தான் என்றாரே, அந்த எட்டுக் குணங்கள் என்னவென்று பார்ப்போம்:

    சுயேச்சையானவன், தூய்மையே உடம்பானவன், இயற்கை உணர்வினன், அனைத்தும் அறிந்தவன், இயல்பாகவே பற்று நீங்கியவன், பேரருள் கொண்டவன், எல்லையில்லா ஆற்றல் உடையவன், அளவற்ற இன்பமுடையவன் என்று சைவாகமம் கூறும்.

    அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் அட்டமா சித்திகளே இறைவனின் எண்குணம் என்றொரு கூற்றுண்டு.

    அநந்த ஞானம், அநந்த வீரியம், அநந்த குணம், அநந்த தரிசனம், பெயரில்லான், கோத்திரமில்லான், அவாவில்லான், அழியா இயல்புடையான் என்று இன்னொரு வரிசை கூறும்.

    இன்னும் சிறப்பான பொருளும் இதற்குண்டு….

    இது ஒன்பதாவது குறள். இதற்கு முன் சென்ற எட்டுக் குறள்களிலும் இறைவனது எட்டுக் குணங்கள் கூறப்பட்டுள்ளன:

    1. ஆதிபகவன் = இறை இறைவன். ஐஸ்வரியம், வீரியம், புகழ், ஞானம், திரு, வைராக்கியம் இவை பகம் என்னும் சொல்லுக்குப் பொருளாகும். உலகத்துக்கு அவனே முதல்
    2. வாலறிவன் = தூய அறிவே வடிவானவன் pure, effulgent intelligence
    3. மலர்மிசை ஏகினான் = இதய மலரில் உறைவோன். நினைத்தால் உள்ளே தெரிபவன்
    4. வேண்டுதல் வேண்டாமை இலான் = அனைத்திலும் சமமாயிருப்பவன். விருப்பு வெறுப்பற்றவன்
    5. இருள்சேர் இருவினையும் சேரான் = நன்மை, தீமை பயக்கும் வினைகளுக்கு அப்பாற்பட்டவன். வினையிலான், வினையின் மூலம் எய்த முடியாதவன்
    6. பொறிவாயில் ஐந்தவித்தான் = புலன்கள், பொறிகள் என்னும் வரம்பில்லான். பொறிகளுக்கு மூலமாய் ஆனால் பொறிகளின் தொடர்பின்றியே இருப்பவன்
    7. தனக்குவமை இல்லாதான் = ஒப்பு, உயர்வு, நிகரில்லான். தனக்கு இணையில்லாத பெருமை உடையான்
    8. அறவாழி அந்தணன் = தருமக் கடல், அதில் தெப்பம். அறத்தின் இருப்பிடம், அருளாளன்
    9. எண்குணத்தான் – மேலே குறிப்பிட்ட எட்டு குணங்களுடையான்

     தொடருவோம்

     

    Share