Tag: செண்பக ஜெகதீசன்

  • குறளின் கதிர்களாய்…(37)

    -செண்பக ஜெகதீசன்

     

    வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
    புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.  (திருக்குறள் -273: கூடாவொழுக்கம்)

    10296559_377157615770382_5685531986509906235_n

    புதுக் கவிதையில்…

    தன்மனம் அடக்காமல்,
    தவவேடம் பூண்டு
    தவறு செய்தல்,
    பசுவொன்று
    புலித்தோல் போர்த்தி
    பயிர்மேய்வதற்கு ஒப்பானதே…!

    குறும்பாவில்…

    புலித்தோல்போர்த்தி பசு பயிர்மேய்வதும்,
    மனவடக்கமின்றித் தவவேடத்தில்
    தவறுசெய்தலும் ஒன்றே…!

    மரபுக் கவிதையில்…

    புல்லைத் தின்னும் பசுவதுவும்
    புலியின் தோலைப் போர்த்தியேதான்
    நல்ல பயிரை மேய்ந்துவரும்
    நாசச் செயலைப் போன்றதுதான்,
    பொல்லா மனதை அடக்காமல்
    பொய்யாய்க் கொண்டே தவவேடம்,
    நல்லார் போல நடித்தாங்கே
    நாச வேலை செய்வதுமே…!

    லிமரைக்கூ…

    பயிர்மேயும்பசு போர்த்தியிருக்கும் புலியின் தோலை,
    பார்த்திடு கதையிதுதான்-
    மனமடங்காது தவவேடத்தில் தவறிடுவோர் லீலை…!

    கிராமிய பாணியில்…

    பசுமாடு பசுமாடு
    புல்லுமேயும் பசுமாடு,
    பொல்லாத பசுமாடு
    புலித்தோலப் போத்திக்கிட்டு
    பயிர்மேயும் பசுமாடு…

    இதுபோல,
    தம்மனச அடக்காம
    தவசிவேசம் போட்டுக்கிட்டு
    தப்புசெயிற மனுசனுந்தான்,
    பசுமாடு பசுமாடு
    பொல்லாத பசுமாடு,
    புலித்தோலப் போத்திக்கிட்டு
    பயிர்மேயும் பசுமாடு…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(36)

    -செண்பக ஜெகதீசன்

    நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
    னுயிர்க்கிறுதி யாகி விடும்.    (திருக்குறள் – 476: வலியறிதல்)

    புதுக் கவிதையில்…

    வலிமையறிந்து செயல்படு
    வாழ்க்கையிலே…
    கிளைநுனிவரை சென்றபின்னும்
    மேலும் முயற்சித்தால்
    ஏறிச்செல்ல,
    முடிவாகிவிடும் உயிருக்கே…!

    குறும்பாவில்…

    வலிமையறியாது கிளைநுனியிலிருந்து
    மேலும் ஏறினால்,
    முடிவுதான் உயிருக்கே…!

    மரபுக் கவிதையில்…

    உயர்ந்த மரத்தின் உச்சிவரை
        ஊக்கமாய் ஏறிச் சென்றபினும்,
    வியக்கும் திறமை காட்டிடவே
        வலிமை ஏதும் அறியாமல்
    உயரே மேலும் சென்றாலது
        உயிரின் முடிவாய் ஆகிவிடும்,
    துயரம் இவ்வகை தடுத்திடவே
       தெரிந்து செயல்படு பலமறிந்தே…!

    லிமரைக்கூ…

    உச்சிக்கு மேலேறினால் ஒடியும் கிளையின் நுனி
    உயிருக்குமது முடிவாகும்,
    உணர்ந்தே செயல்படு வலிமையை அறிந்து இனி…!

    கிராமிய பாணியில்…

    ஏறாத ஏறாத
    மரத்துமேல ஏறாத,
    ஏறுனா நெறத்திக்க
    அளவோட நெறத்திக்க…!

    உச்சிக்கொப்பு போனபின்னே
    போவாத போவாத
    அதுக்குமேல போவாத…!

    உறுதியில்லா நுனிக்கொப்பு
    ஒடஞ்சிபோவும் பாத்துக்க
    உயிரும்போவும் தெரிஞ்சிக்க,
    ஏறாத ஏறாத
    மரத்துமேல ஏறாத…!

    வாழ்க்கப்பாடம் இதுதானே,
    நடந்துக்க நடந்துக்க
    பெலந்தெரிஞ்சி நடந்துக்க…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(35)

    -செண்பக ஜெகதீசன்

    காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு. (திருக்குறள்:500 – இடனறிதல்)

    புதுக் கவிதையில்…

    இடமறிந்து செயல்படாதபோது
    இடர்தான் வாழ்விலே…
    களத்திலே வீரர்களை அழித்திடும்
    அஞ்சிடாப் போர்யானையும்
    அற்ப நரியால் அழியும்,
    களர்நிலத்தில் மாட்டிக்கொண்டால்…!

    குறும்பாவில்…

    இடமறிந்து செயல்படு,
    போரில் வென்றிடும் யானையும்
    பலியாகும் நரிக்கு, புதைநிலத்தில்…!

    மரபுக் கவிதையில்…

    வீரரைப் போரினில் வென்றழிக்கும்
         வெற்றி முகத்து யானையுமே
    நீருடன் சேறும் நிறைந்திருக்கும்
         நிலமாம் களரில் விழுந்திட்டால்,
    வீரமும் வலிமையு மில்லாத
         வனத்து நரிக்குப் பலியாகும்,
    பாரிதைப் பார்த்துத் தெரிந்திட்டே
         பணிகளைச் செய்திடு இடமறிந்தே…!

    லிமரைக்கூ…

    வீரமிகு போர்யானையையும் வென்றிடும் நரி
    புதைநிலத்திலது வீழ்ந்தால்,
    இடமறிந்து செயல்பட்டால் இடரில்லை தெரி…!

    கிராமிய பாணியில்…

    யான யான போர்யான
    யாருக்கு மஞ்சாப் போர்யான,
    எப்பவும் செயிக்கும் போர்யான…

    போர்க்களத்த வுட்டுவந்து
    பொதகுழில மாட்டிக்கிட்டா
    பெலமில்லா நரிகிட்டத்
    தோத்திடுமே போர்யான..

    கதயிதுதான் தெரிஞ்சிக்க
    எடமறிஞ்சி நடந்துக்க
    எடஞ்சலத்தான் தடுத்துக்க…! 

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(34)

    -செண்பக ஜெகதீசன்

    ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
    பேரறி வாளன் றிரு. (திருக்குறள் – 215: ஒப்புரவறிதல்)

    புதுக் கவிதையில்…

    குளம்நிறை நீரும்
    குறைவின்றி உதவும் பலர்க்கும்,                  Pond
    குடிப்பதற்கே.

    பிறர்க்குதவும் பேரறிவாளன்
    பெற்ற பெருஞ்செல்வமும்
    பேருதவியாயிருக்கும்
    பலருக்கும் – குளத்துநீர் போல…!

    குறும்பாவில்…

    உதவிடும் குணமுடையோன் செல்வம்,
    குடிநீர் நிறைந்த
    குளம் போன்றதே…!

    மரபுக் கவிதையில்…

    குடிநீர் குளத்தில் நிறைந்திருந்தால்
    குடித்துப் பலரும் பயன்பெறுவர்,
    அடுத்து வந்திடும் மாந்தரவர்
    அல்லல் அகற்றிட மனம்போலக்
    கொடுத்தே உதவிடும் உளமுடைய
    கொள்கை யாளர் கைப்பொருளும்,
    எடுத்துக் குடிக்கும் நீர்நிறைந்தே
    எல்லார்க் குதவும் குளமாமே…!

    லிமரைக்கூ…

    பலர்க்கும் உதவியாயிருக்கும் குடிநீருடன் குளம்,
    இதற்கு ஒப்பாரே
    பணமுடையோர், கொண்டிருந்தால் பிறர்க்குதவும் உளம்…!

    கிராமிய பாணியில்…

    கொளத்தப்பாரு கொளத்தப்பாரு
    நல்லதண்ணி கொளத்தப்பாரு,
    நமக்கு ஒதவும் கொளத்தப்பாரு…

    தண்ணி நெறஞ்ச கொளத்தப்பாரு
    தாகந் தீக்கும் கொளத்தப்பாரு
    தாயா ஒதவுங் கொளத்தப்பாரு…

    கொளம் நெறஞ்ச தண்ணிபோல
    கொணம் நெறஞ்ச மனுசன்பணம்
    கெடச்சிடுமே எல்லாருக்கும்
    ஒதவிடுமே ஊருக்கெல்லாம்!

    கொளத்தப்பாரு கொளத்தப்பாரு
    மனுசன்
    கொணத்தப்பாரு கொணத்தப்பாரு…!   

    Share
  • பயணத்தில்…

    -செண்பக ஜெகதீசன்

    பாலைவனமாக நனவு,
    பூங்காவாகப் பூத்துக்குலுங்கும்          Garden_Fountain
    கனவு…

    எதிர்மறைகள்
    எப்போதும் உள்ளவைதான்…

    நனவு
    பூங்கா ஆகிட
    நம்பிக்கை நீருற்று,
    துணிவை உரமாக்கு,
    துணைக்கரங்கள் தானேவரும்!

    கனவுத் தூக்கத்தைக்
    கலைத்துவிட்டு

    நனவுப் பயணத்தில்
    நம்பிக்கை வை!

    நம்பிக்கைகள்,
    அவை
    கைவிடுவதில்லை…!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 7, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  திரு. செண்பக ஜெகதீசன்  அவர்கள்

    Shenbaga Jagatheesan
    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  சுசீந்திரத்தில் உள்ள  காசித்திருமடம், ஆசிரமத்தின் மேலாளராகப் பணியாற்றி வரும் திரு. செண்பக ஜெகதீசன்.  சென்றவாரம் வல்லமை வாசகர்களுடன் இவர் பகிரிந்து கொண்ட  “தடை தகர்த்து…”  என்ற தன்னம்பிக்கையூட்டும் கவிதைக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    தற்பொழுது நிர்வகிக்கும் காசித்திருமடப் பணிக்கும் முன்னர் நெல்லையப்பர் திருக்கோவிலின் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றிய இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,  “இரைதேடுவதுடன் இறையும் தேடும் அரசுப்பணி”யாற்றுவதாகக் குறிப்பிடுகிறார்.  இதுவரை ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ள இவர் சற்றேறக்குறைய எட்டு ஆண்டுகளாகப் பற்பல மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.  அவற்றில் சில:  வல்லமை, வார்ப்பு, பதிவுகள், முத்துக்கமலம், திண்ணை, நந்தலாலா.

    இவர் கவிதைகளின் கருப்பொருளாகக் கொண்டவை; இயற்கை, தத்துவம், எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை போன்றவையாகும்.   கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக வல்லமை வாசகர்களுடன் தனது கவிதைகளை பகிர்ந்து வருகிறார் இக்கவிஞர்.  இவருடைய இவ்வாரக் கவிதை, வாழ்வில் ஏற்படும் சோதனைகளைக் கண்டு துவளுதல் கூடாது, அவற்றை எதிர் கொண்டாலே அவை வழங்கும் படிப்பினை மூலம் திறமை  மிக்கவராக மாறலாம் என்ற தன்னம்பிக்கையூட்டும் கருத்தினை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

    தடை தகர்த்து…

    சீறிப் பாயும் கடலலைதான் – மிகச்                                    
         சிறந்த மாலுமி உருவாக்கும்,
           மாறிடும் வானிலை  காட்டிடுமே – திறமை           
         மிகுந்ததோர் ஓட்டியை வானூர்தியில்,
    கீறிடும் கல்நிறை சாலையேதான்- சுட்டிக்
         காட்டிடும் சிறந்த ஓட்டுநரை,
    ஏறிடும் இடர்களை எதிர்கொள்வோர் – வாழ்வில்
         ஏற்றம் என்றும் பெறுவாரே…!

    இவர் எழுதி வல்லமையில் வெளிவந்த மேலும் சில கவிதைகள் கீழே…..

    கிடக்கட்டும் குப்பைகள்…

    குறைசொல்ல ஒரு
    கூட்டம் உள்ளவரை,
    நிறைய வருகின்றன
    நீ வெற்றிபெற சந்தர்ப்பங்கள்..

    உறங்கவிடமாட்டார்கள்
    உன்னை,
    உறங்கிடவும் மாட்டார்கள்-
    உன்மீது
    பொறாமை கொண்டவர்கள்..

    உரிய சமயமிது,
    உணர்ந்துகொள்
    உழைத்திடு
    உயர்ந்திடு..

    உதாசீனப்படுத்திடு
    குறைசொல்லும் அந்தக்
    குப்பைகளை…!

    __________________________________________

    கலங்காதே…

    கலங்குவதில்லை மலர்,
    காய்ந்து
    கீழே விழுவதற்கு…

    காரணம் இதுதான்-
    அதன்
    கனி உதிர்க்கும்
    விதை முளைத்து
    மீண்டும்
    மரமாகும் நம்பிக்கை…!

    கலங்கி நிற்கிறாயே
    மனிதா,
    மரணத்தைத் தினம்
    மனதில் எண்ணி…!

    __________________________________________

    ரேகை

    போடும் ஒரு நெல்லுக்காக
    கிளி எடுத்த
    பொய்யான சீட்டை வைத்துப்
    புளுகுவதை நம்பாமல்,
    கைரேகைக்
    கதைகளையும் நம்பாமல்,
    கைரேகை தேயக்
    கடும் உழைப்பு உழைத்தால்
    உன்ரேகை (அடையாளம்) தெரியும்
    உயர்வாக…!

    __________________________________________

    இக்கவிதைகளுக்கும் மேலாக செண்பக ஜெகதீசன் கையெடுக்கும் மற்றொரு கவிதை முயற்சியை இதுவரை பிறர் கையாண்டு பார்த்ததில்லை.  இவை கவிதைகள் வடிப்பதில் முற்றிலும் ஒரு புதிய முயற்சி.  வியக்க வைக்கும் கோணமென்றும் கூறலாம்.

    இன்றுவரை திருக்குறளுக்கு எண்ணிலடங்கா விளக்க உரைகள் தோன்றிய வண்ணம் உள்ளது.  செண்பக ஜெகதீசன் தனது “குறளின் கதிர்களாய்…” கவிதைத் தொடர் வரிசையில்  திருக்குறள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து,  அதன் விளக்கத்தை பல்வேறு கவிதை பாணிகளில் வடிப்பது  இவர் கவிபுனையும் திறமையைக் காட்டுகிறது.  எடுத்துக்காட்டாக, “பீலிபெய் சாகாடும் ” என்ற குறளை இவர் புதுக்கவிதை, குறும்பா, மரபுக் கவிதை, புதுப்பா, கிராமிய பாணி என பல்வேறு கவிதை பாணிகளில் வழங்குவதைக் கீழே காணலாம்….

    குறளின் கதிர்களாய்…

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
    சால மிகுத்துப் பெயின்…!
    -திருக்குறள்-475(வலியறிதல்)

    புதுக்கவிதையில்…

     மலரினும் மெல்லிதென்று
    மயிலிறகைச் சேர்த்து
    வண்டியில்
    மனம்போல ஏற்றிவைத்தால்,
    முறிந்துவிடும் அச்சாணி..
    மிஞ்சாது எதுவும்
    அளவை
    மீறினால் எதிலும்…!

    குறும்பாவாய்…

    குடைசாய்க்கும் வண்டியை, பாரம்
    கூடினால் மயிலிறகும்..
    கதையிதுதான் வாழ்க்கை…!

    மரபுக் கவிதையில்…

    வண்டியில் ஏற்றும் பாரமது
    வலிமை யில்லா மென்பொருளாம்
    கொண்டல் கண்டால் ஆடிநிற்கும்
    கோல மயிலின் இறகெனிலும்,
    உண்டே யதற்கும் அளவதுவும்,
    உயர்ந்தால் வண்டி உடைந்திடுமே,
    கண்டிடு வாழ்வில் கதையிதுவே
    கொண்டிடு அளவதைக் கருத்தினிலே…!

    புதுப்பாவில்…

    மெல்லிய பொருள்தான்
    மயிலிறகு,
    மிதமிஞ்சி ஏற்றினால் வண்டியில்,
    அதுவும் உடைந்து
    மிஞ்சுவதில்லை எதுவுமே..

    நல்லதுக்கு
    எதிர்மறைப் பலன்தான்
    எதுவும் அளவுக்கு மிஞ்சினாலே…!

    கிராமிய பாணியில்…

    ஏலேலோ ஐலசா
    ஏத்து பாரம் ஐலசா..
    அளவாப் பாரம் ஐலசா
    அளந்து ஏத்து ஐலசா..
    மயிலுப் பீலி ஆனாலும்
    மிஞ்சா வண்டி ஒடையுமே..
    மனுசங் கதயும் இதுதானே
    மனசில கொள்ளு இதத்தானே..
    ஏலேலோ ஐலசா
    ஏத்து பாரம் ஐலசா…!

    சிந்தனையைக் கவரும் கவிதைகளை வழங்கி, கவிதை இலக்கிய மரபில் புதுமை புரிந்து வல்லமை வாசகர்களை மகிழ்விக்கும்   செண்பக ஜெகதீசன்  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    முகநூலில் செண்பக ஜெகதீசன்: https://www.facebook.com/jagatheesa.perumal.3?ref=tn_tnmn

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • குறளின் கதிர்களாய்…(33)

    செண்பக ஜெகதீசன்…

     

    hair-care_24_07_2013

    தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்

    நிலையி னிழிந்தக் கடை.

          -திருக்குறள் -964(மானம்)

     

    புதுக் கவிதையில்…

     

    தலையில் இருக்கும்வரைதான்

    தலைமுடிக்கு மதிப்பு,

    தரையில் வீழ்ந்தால்

    தாழ்ந்திடும் குப்பையாய்..

     

    மண்ணில் மனிதரும் தாழ்ந்தால்

    உயர்நிலையிலிருந்து,

    உதிர்ந்த

    மயிர்போலாவர் மதிப்பில்…!

     

    குறும்பாவில்…

     

    மண்ணில் வீழ்ந்த மயிர்போலாவான்

    மனிதன்,

    தன்நிலை தாழ்ந்திடும் போதில்…!

     

     மரபுக் கவிதையில்…

     

    எண்ணெய் தேய்த்துத் தலைசீவி

         எத்தனை அழகாய் வைத்தாலும்,

    மண்ணில் வீழ்ந்தால் மயிரதற்கு

         மதிப்பு எதுவும் கிடையாதே,

    எண்ணிப் பார்த்திடு இதையேதான்-

         ஏற்றம் வாழ்வில் பெற்றோரும்

    கண்ணியம் தவறித் தாழ்ந்திட்டால்,

         கருதப் படுவரிம் மயிர்போலே…!

     

    லிமரைக்கூ…

     

    முடியின் மதிப்பது இருக்கும்வரை தலையில்,

    மதிப்பிதுதான் மனிதனுக்கும்

    மேலிருந்து கீழே தாழ்துவிட்டால் நிலையில்…!

     

    கிராமிய பாணியில்…

     

    தலமுடி நல்ல தலமுடி

    தலயில அலபோல் தலமுடி,

    எண்ண தேச்சிக் குளிச்சி

    எடுத்துச் சீவுன தலமுடி..

     

    அது

    கீழ உழுந்தா கேப்பாரில்ல

    குனிஞ்சி அதயே பாப்பாரில்ல,

    தலயில இருந்தா மதிப்புத்தான்

    தரையில உழுந்தா குப்பதான்..

     

    மனுசங் கதயும் இப்புடித்தான்,

    நல்ல நெலயில இருந்தவுனும்

    நெலம மாறித் தாந்திட்டா

    எல்லா மதிப்பும் போயிருமே

    உழுந்த முடிகத ஆவிடுமே…!

     

    Share
  • தடை தகர்த்து…

    -செண்பக ஜெகதீசன்

    சீறிப் பாயும் கடலலைதான் – மிகச்                                    Sea_storm
         சிறந்த மாலுமி உருவாக்கும்,
    மாறிடும் வானிலை  காட்டிடுமே – திறமை          
         மிகுந்ததோர் ஓட்டியை வானூர்தியில்,
    கீறிடும் கல்நிறை சாலையேதான்- சுட்டிக்
         காட்டிடும் சிறந்த ஓட்டுநரை,
    ஏறிடும் இடர்களை எதிர்கொள்வோர் – வாழ்வில்
         ஏற்றம் என்றும் பெறுவாரே…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(32)

    -செண்பக ஜெகதீசன்

    பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
    கலந்தீமை யாற்றிரிந் தற்று.
    (பண்புடைமை: திருக்குறள்-1000)

    புதுக் கவிதையில்…

    அசுத்தமான கலத்தில் வைத்த
    ஆவின் பாலும்
    திரிந்துபோய்,
    தகுதியற்றதாகிவிடும் பருகுதற்கே…!

    இதுபோல்தான்
    பண்பற்றவன் பெற்ற
    பெருஞ்செல்வமும்
    பயன்படாது நல்லதற்கே…!

    குறும்பாவில்…

    அழுக்குப் பாத்திரத்தில் நல்லபாலும் திரிந்திடும்…
    அதுபோல் பயனற்றதாகும்
    பண்பற்றவன் கொண்ட பெரும்பொருளும்…!

    மரபுக் கவிதையில்…

    ஆவின் பாலைக் கறந்தெடுத்து
         அடுப்பில் வைத்துச் சூடாக்கித்
    தேவைக் கேற்பக் குடித்திடவே
         தூய்மை யற்ற கலத்திலிட்டால்,
    நாவில் வைக்க முடியாமல்
         நலமே கெட்டுத் திரிவதுபோல்
    பாவி மனிதனின் பெரும்பணமும்
         பலனே யிலாமல் போய்விடுமே…!

    லிமரைக்கூ…

    பாத்திர அழுக்கில் பால்மாறும் குணம்,
    பயன்தராது அதுபோல்
    பண்பே இல்லாதான் கைநிறை பணம்…!

    கிராமிய பாணியில்…

    பாலுபாலு பசும்பாலு
    கொறயில்லாத நல்லபாலு…

    குடிக்கு முன்னே காச்சிடணும்
    கொவளைல வூத்தி ஆத்திடணும்,
    ஆத்துற பாத்திரம் அழுக்கானா
    அத்துன பாலும் தெரஞ்சிபோவும்…

    பாலு கததான் பணத்துக்கும்,
    பொல்லா மனுசன் பணமெல்லாம்
    நல்லது எதுக்கும் ஒதவாதே
    தெரஞ்ச பாலா வீண்தானே…!

    Share
  • நம்பிக்கை…

    -செண்பக ஜெகதீசன்

    உறவுகள் சங்கிலிகள்,
    உணர்ச்சிகள் வேதனைகள்,                                              holding-my-hand
    உணர்ந்துவிட்டால் ஞானம்தான்…

    திறவுகோல்-
    அறிவு,
    மாயை வெப்பத்தில்
    ஆவியாகிவிடுகிறதே அறிவு…

    அந்த வெப்பம்
    தணுப்பாகிடத் தேவை ஒரு
    கை-
    நம்பிக்கை…

    இருக்கட்டுமே அது
    இறையாக…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(31)

    -செண்பக ஜெகதீசன்

    இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
    யொழுக்க முடையார்வாய்ச் சொல்.
    (திருக்குறள்: கேள்வி – 415)

    புதுக் கவிதையில்…

    வழுக்கி விழாதிருக்க                                           old-man-with-walking-stick
    வகையாய் உதவிடும்
    ஊன்றுகோல்…

    வாழ்வில் அதுபோல்,
    தடுக்கி விழாமல்
    தாங்கிப் பிடித்திடும்,

    நீ
    கேட்டு நடக்கும்
    ஒழுக்கமுடையோர் சொல்!

    குறும்பாவில்…

    ஊன்றுகோல் விழவிடாது தாங்கிடும்
    உடலை,
    ஒழுக்கமுடையவர் சொல் – வாழ்வை!

    மரபுக் கவிதையில்…

    உடலது தளர்ந்த போதினிலே
         வழுக்கிக் கீழே விழுந்திடாமல்
    நடந்து திடமாய்ச் செல்லுதற்கே
         நல்ல துணைதான் ஊன்றுகோலே,
    உடலைத் தாங்கிடும் துணையதுபோல்
         வாழ்வில் வழுக்கி வீழ்ந்திடாமல்
    இடரது அகற்றிடும் இன்துணையாய்
         இயக்கிடும் ஒழுக்க முடையோர்சொலே!

    லிமரைக்கூ…

    வழுக்கி வீழ்ந்திடாதிருக்க ஊன்றுகோலுடன் செல்!
    அதுபோல் வாழ்வில்
    வழுக்கிடாதிருக்கக் கேட்டுநட ஒழுக்கமுடையோர் சொல்!

    கிராமிய பாணியில்…

    தடியிது தடியிது கைத்தடி
    தாங்கிப் புடிக்கும் கைத்தடி,
    தடுக்கி வுளாமக் காத்திடுமே
    தக்க தொணயா வந்துடுமே!

    மனுச வாழ்க்கக் கதயிதுதான்
    ஒழுங்கானவன் பேச்சக் கேட்டா
    ஒழுங்காப் போவும் வாழ்க்கயுமே,
    வழுக்கிவுளாமக் காப்பாத்தும்
    வாழ்க்கத்தொணயாக் கூடவரும்,
    நல்லசொல்லக் கேட்டுநட
    நன்மயெல்லாஞ் சேந்துவரும்…

    தடியிது தடியிது கைத்தடி
    தாங்கிப் புடிக்கும் கைத்தடி!

     

    Share
  • கணக்கில்…

    -செண்பக ஜெகதீசன்

    காலக் கரும்பலகையில்
    மனிதன் போடும்
    வாழ்க்கைக் கணக்கில்,
    தவறாகிப்போகும்
    தவறாத விடை – மரணம்…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(30)

    -செண்பக ஜெகதீசன்

    அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
    கோடின்றி நீர்நிறைந் தற்று. 
    (திருக்குறள் – 523: சுற்றந்தழால்)

    புதுக் கவிதையில்…                                      pond for kural

    வளமான வாழ்க்கைக்கு,
    வாழவேண்டும்
    சுற்றத்துடன் சேர்ந்து…

    சுற்றத்தாருடன் மனங்கலந்து
    சேராதவன் வாழ்க்கை,
    கரையில்லாத குளத்தில்
    நிறைந்திடும்
    நீருக்கு நிகராகும்…!

     குறும்பாவில்…

    கரையற்ற குளத்தில் நிறைந்திடும்
    நீர்போலாகும் வாழ்க்கை,
    மனமொன்றி சுற்றத்துடன் சேராதவர்க்கு…!

    மரபுக் கவிதையில்…

    கரையது யில்லாக் குளமும்தான்
         கடல்போல் பெரிதாய் இருந்தாலும்,
    விரைந்தே வந்திடும் நீரெல்லாம்
         வெளியே போய்விடும் நிற்காமல்,
    உரைத்திடும் கதையிது வாழ்வினிலே
         உறவுடன் ஒன்றிடா வாழ்க்கையது
    கரையிலா குளத்து நீர்போலக்
         கணத்திலே போய்விடும் வீணாவே…!

    லிமரைக்கூ…

    வளமாய் வாழ்ந்திடு சுற்றத்துடன் சேர்ந்து,
    அல்லாத வாழ்வது
    கரையில்லா குளமாகும் நீரெல்லாம் தீர்ந்து…!

    கிராமிய பாணியில்…

    கொளத்தப்பாரு கொளத்தப்பாரு
    காஞ்சிபோன கொளத்தப்பாரு,
    கொளத்துக்குத்தான் கரவேணும்
    கரயிருந்தா தண்ணிசேரும்,
    கரயில்லா கொளத்திலதான்
    வந்ததண்ணி வீணாப்போவும்
    எந்தத் தண்ணியும் தங்காதே…!

    கதயிதுதான் வாழ்க்கயில…
    ஒறவோட சேந்துவாழ்ந்தா
    நல்லதுதான் எல்லாத்துக்கும்,
    இல்லன்னா ஓம்பொளப்பு
    கரயில்லா கொளத்துத்தண்ணி கதயாவும் பாத்துக்க
    கருத்தோட நடந்துக்க…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(29)

    -செண்பக ஜெகதீசன்

    மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
    விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.
              (திருக்குறள் -624: இடுக்கண் அழியாமை)

     

    புதுக் கவிதையில்…                                                  bullock cart reached home

    கரடுமுரடான பாதையிலும் வண்டியைக்
    கலங்காது இழுத்துச் செல்லும்
    காளைமாடு…

    இத்தகு
    இயல்புடை மாந்தரிடம் வரும்
    துன்பமும்
    துவண்டிடும் துன்பப்பட்டே…!

    குறும்பாவில்…

    கடும்பாதையிலும் வண்டியை இழுத்துச்செல்லும்
    காளை போன்றோரிடம் வரும்
    துன்பமும் துன்பப்படும்…!

    மரபுக் கவிதையில்…

    கல்லும் முள்ளும் நிறைந்திருக்கும்
         கரடு முரடாம் பாதையிலும்,
    நில்லா திழுத்தே வண்டியுடன்
         நீண்ட தூரம் சென்றுவரும்
    வல்லமை மிக்க காளையொத்த
         வலியரைத் தேடி வந்துசேரும்
    தொல்லை தந்திடும் துன்பமதும்,
         துன்பப் பட்டுப் போய்விடுமே…!

    லிமரைக்கூ…

    பழுதான பாதையிலும் வண்டியிழுக்கும் காளை,
    அத்தகையோரின் துன்பமும்
    துன்பமுறும், அன்னவரைச் சேர்ந்திடும் வேளை…!

    கிராமிய பாணியில்…

    காளகாள வண்டிக்காள
    காடுமேடு போறக்காள,
    கரடுமொரடு பாதயிலும்
    கச்சிதமாப் போவுங்காள…

    இந்தக்
    காளபோல மனுசங்கிட்ட
    கஸ்டம்வந்தா கஸ்டப்படுமே
    கவலவந்தா கவலப்படுமே
    கண்ணுலபடாம ஓடிருமே…!

    காளகாள வண்டிக்காள
    காடுமேடு போறக்காள…!

     

    Share
  • எக்காலம்!…

    செண்பக ஜெகதீசன்

     

    எக்காலம்…

     

    தன்னிகரில்லாத் தலைவர்களைத்

    தமது இனமென்று

    தலையில் தூக்கிவைத்து ஆடி,

    சாதிச் சாயம் பூசி

    சந்தியில் சிலையாய் நிறுத்தி,

    காக்கை குருவிகளின்

    கழிப்பிடமாய் ஆக்குவதும்.. (more…)

    Share