Tag: கே. ரவி

  • காற்று வாங்கப் போனேன் (29)

    கே.ரவி

    “என்னப்பு! ஆசுகவி எல்லாம் எழுதித் தள்ளிப்புட்டீர்.” சிகாமணி திடீரென்று என்முன் கேலி கலந்த கேள்வியோடு தோன்றுகிறான். “அது கெடக்கட்டும். ஏதோ புதுக்கவிதை என்று காதில் விழுந்தது. அதெல்லாம் வேறு எழுதுவதுண்டோ?”

    “ஓ! மாணவரிஸம் பத்திரிகையில் …” என்று நான் முடிக்குமுன், சிகாமணி இடைமறித்து, “அதென்ன ஓய் பேரு? மாணவரிஸம்?” என்று கேட்கிறான்.

    அது ஒரு கதை அப்பா. சிந்தனைக் கோட்டத்தில் சேர்ந்த பெண்கள் கூட்டம் சில மாதங்களுக்குப் பிறகு காணாமல் போய்விட்டார்கள் என்று சொன்னேன் இல்லையா? ஷோபனாவும் அப்படித்தான். கிட்டத்தட்ட ஒரு வருடம் பார்க்கவில்லை. திடீரென்று ஷோபனாவும், மங்களசுந்தரியும் நான் வசித்த பலாத்தோப்பு வீட்டுக்கு என்னைத் தேடி வந்தார்கள். அப்போது, அவர்கள் ‘நாம் மாணவர்களுக்காக ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?’ என்று கேட்கப் போய் நான் உடனே அந்த யோசனையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். பத்திரிகைக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த எந்தத் தலைப்பையும் பத்திரிகைப் பதிவாளர் அங்கீகரிக்கவில்லை. ஏற்கனவே பதிவாகி விட்ட பெயர்கள் என்று தள்ளி விட்டார். மாணவர் குரல், மாணவர் முரசு எல்லாம் தள்ளுபடியாகி விட்டன. எனக்குப் பொறுமை போயிற்று. யாரும் வைத்திருக்க முடியாத ஒரு பெயர் வேண்டும் என யோசித்துத் தேர்ந்தெடுத்த பெயர்தான் ‘மாணவரிஸம்’.

    அந்தப் பத்திரிகை சுமார் நாலாண்டுக் காலம் நடந்தது. அவ்வளவு காலம் நான் படித்துக் கொண்டிருந்தேன். ஒரே வகுப்பில் இல்லை சாமி! பி.ஏ. முடித்துவிட்டு, பி.எல்.! அது முடித்த பிறகு, எம்.ஏ. அதற்கும் பிறகு எம்.ஃபில். மாணவனாகவே என் வாழ்நாள் முழுதும் போய்விடுமோ என்ற அச்சமே வந்து விட்டது. திருமணத்துக்குப் பிறகும் நானும், ஷோபனாவும் சில ஆண்டுகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தோம், கவிஞர் சொன்னதுபோல் பாடித் திரிந்த பறவைகளாக!

    சரி, சரி மாணவரிஸத்துக்கு வருகிறேன். அதில் எத்தனை மாணவர்கள் கதை, கவிதை, கட்டுரை எழுதினார்கள்! எத்தனை மாணவர்கள் ஓவியம் வரைந்தார்கள், நிருபர்களாகச் செய்தி திரட்டித் தந்தார்கள்! வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான், பின்னாளில் ஐ.பி.எஸ். அலுவலராக வரவிருந்த ரவி ஆறுமுகம், சுகி சிவம், சு.ரவி, க்ரேஸி மோகன்! ஏன், பின்னாளில் பெரிய திரைப்பட இயக்குநராக வரவிருந்த மனோபாலா மாணவரிஸத்தின் நிரந்தர ஓவியராகப் பணியாற்றினார். சென்னை, திருச்சி, கடலூர், பாண்டிச்சேரி, மதுரை, திருநெல்வேலி, பம்பாய், டில்லி என்று எல்லா இடங்களிலும் மாணவ நிருபர்கள் இருந்தும் நிறைய பிரதிகள் அவர்கள் மூலம் மாதம்தோறும் பட்டுவாடா ஆகியும் வசூல் மட்டும் சரிவர இல்லாததால், என் கைப்பணத்தைச் செலவழித்துத்தான் பத்திரிகையை ஒவ்வொரு மாதமும் அச்சகத்திலிருந்து கொண்டு வருவேன்.

    சிகாமணிக்குப் பொறுக்க முடியவில்லை. ‘ஏம்பா, புதுக்கவிதை எழுதியுள்ளாயா என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறாய். உன் பதிலைப் புரிந்து கொள்வதை விடப் புதுக்கவிதையைப் புரிந்து கொள்வதே சுலபம் போல இருக்கிறதே!’ என்று ஒரு போடு போட்டான்.

    நான் எழுதும் கவிதை புதுசா, பழசா என்று நானே சொல்வதை விட அதைப் படிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். இலக்கணக் குடத்துக்குள் கவிதையை அடக்கவும் நான் முயலவில்லை, இலக்கணத்தை மீறி எழுதியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததும் இல்லை. நான் எழுதத் தொடங்கும் போது, இப்பொழுது ஒரு வெண்பா எழுத வேண்டும் அல்லது விருத்தம் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு ஆரம்பிப்பதில்லை. ஏதோ தோன்றுவதை மனத்துக்குள் சொல்லி அல்லது பாடிப் பார்த்து, ஓ! இது வெண்பாவோ? ஓ! இது கட்டளைக் கலித்துறையோ? என்று அடையாளம் காண்பதே என் வழக்கம். பல சமயங்களில், இலக்கண வடிவுகளில் கட்டுப் படாமல் கவிதை திமிறிக் கொண்டும் வரும். ஆனால், அதற்கும் புது இலக்கணம் வடிவமைத்துச் சொல்ல இருக்கவே இருக்கிறான் நம்ம புத்தி சிகாமணி! எடுத்துக்காட்டாக ஒன்று சொல்கிறேன். 1978-ஆம் ஆண்டில் எழுதிய ஒரு கவிதை:

    எதற்காக வோமனம் படபடக் கின்றது

    யாழெடுத் தேனதில் ஸ்ருதிகலை கின்றது

    கருமே கங்கள் உருமா றிப்போய்

    நெஞ்சுக் குள்ளே நுழைந்து கொண்டன

    ஒருதுளிக்கும் மறுதுளிக்கும்

    இடைவெளி இன்றி மழைபொழி கின்றன

    எதற்காக வோமனம் படபடக் கின்றது

    .. .. ..

    இந்தக் கவிதையில், “ஒருது ளிக்கும் மறுது ளிக்கும்” என்று யாப்பிலக்கணப்படி எழுதிப் படித்துப் பாருங்கள். சப்பென்று இருக்கும். அப்படி இல்லாமல், மேலே உள்ளது போல், இடைவெளி இல்லாமல் ‘ஒருதுளிக்கும் மறுதுளிக்கும்’ என்று சேர்த்துப் படித்துப் பாருங்கள். அப்போது, இடைவெளியின்றி மழைபொழியும் சந்தம் புரிபடும். இலக்கணம், கவிதைக்குப் பணிசெய்ய வேண்டுமே அல்லாமல், இலக்கணத்தால் கவிதை முடங்கிவிடக் கூடாது. எப்படி என் பிரசங்கம்!

    இப்பொழுது நிஜமாகவே புதுக்கவிதை சமாச்சாரத்துக்கு வருவோம். புதுக்கவிதை இயக்கத்துக்கும் மரபுக் கவிதைப் புலவர்களுக்கும் நடந்துவந்த போர்பற்றி முன்பொருமுறை நான் எழுதியிருந்ததை நினைத்துக் கொள்கிறேன்:

    “பொய்க்கால் குதிரைகளும் வைக்கோல் கன்றுகளும் போர்க்குரல் எழுப்புகின்றன.”

    மாணவரிஸத்தில் ‘பகலவன்‘ என்ற பெயரில் கவிதைகளும், ‘கதிரவன்‘ என்ற பெயரில் கட்டுரைகளும் எழுதிய காலத்தில், மரபு மீறாத ஒரு புதுக்கவிதை மாணவரிஸத்தில் எழுதினேன். அது என்னய்யா, மரபு மீறாத புதுக்கவிதை? கவிதையின் தலைப்பு “இவள் ஒரு புதுக்கவிதை”:

    இவளொரு புதுக்கவிதை

    சுரதாவின் கவிதையைப்போல் சுகமான நளினங்கள்

    சுழலும் பார்வை

    எலியெட்டின் கவிதையைப்போல் என்றைக்கும் புதிராக

    இருக்கும் உள்ளம்

    தத்துவங்கள் கனக்கின்ற தாகூரின் கவிதையைப்போல்

    தழைந்த கூந்தல்

    இத்தனையும் இவளிடமே இயைந்திருக்கும் காரணத்தால்

    மட்டும் இல்லை

    செவிவரைக் கும்தான் செல்ல வேண்டுமெனக்

    கவிஞர் வகுத்த கண்ணிலக் கணத்தை

    மீறிய தாலும்

    தன்சிலிர்ப் புக்குத் தக்க காரணத்தைத்

    தானே அறியாமல் தயங்குவ தாலும்

    உரைநடை ஒன்றை ஒடித்து வளைத்துப்

    பாட்டெனச் சொல்லும் பாசாங் கைப்போல்

    தென்றலைக் குழைத்துத் தேக்கில் இழைத்து

    மின்னலின் வடிவில் மெல்ல வளைத்து

    (அதை)

    இடையெனச் சொல்லும் இரகசியத் தாலும்

    இவளொரு புதுக்கவிதை

    சிகாமணி ஒரு கேள்வி கேட்கிறான். “சரி ஓய், இன்ன வடிவில் எழுதுவது என்று முடிவு செய்து கொள்ளாமல் எழுதுகிறாய் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறாய். எதைப் பற்றி எழுதுவது என்றாவது முடிவு செய்து கொண்டு எழுதுவாயா, இல்லை…? என்று சிகாமணி இழுக்கிறான்.

    எல்லாம் தெரிந்தே, தெரியாதது போல் கேட்கிறான் சிகாமணி. என்னை வம்புக்கு இழுப்பதில் அவனுக்கு அவ்வளவு ஆனந்தம்!

    எதைப் பற்றி எழுதுகிறேன் என்ற முன்முடிவோடு நான் கவிதை எழுதுவது கிடையாது. அதுவாக உள்ளிருந்து பொங்கி வரும். வந்து, வார்த்தைகளாகிச் சிந்திச் சிதறி, வெடித்துச் சில சமயங்களில் கோவென்று கதறிய பிறகே அதன் பொருள் என்ன என்று புரிந்து கொள்ள முயல்வேன். சில சமயம் புரிந்து கொள்ளும் முயற்சியில் தோற்றும் போயிருக்கிறேன்.

    நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். இந்தத் தொடரின் சென்ற பகுதியை வல்லமை ஆசிரியருக்கு அனுப்பிய பிறகு அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ” சார், நீங்கள் அனுப்பிய கட்டுரையின் நிறைவில் ஒரு கவிதை எழுதியிருந்தீர்கள். அதில், “கூத்தன் அவனன்றிக் கூட்டில் எதுபறவை” என்று ஒரு வரி இருக்கிறது. ஒருவேளை, ‘ஏதுபறவை’ என்பது தட்டச்சுப் பிழையால் ‘எதுபறவை’ என்று ஆகி விட்டதோ?” என்று கேட்டார். அவர் கேட்டது பற்றிச் சிந்தித்தால் அவர் சொன்னது சரியென்றே பட்டது. ஆனாலும், அது எப்படி இருக்கிறதோ அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி உரையாடலை முடித்து விட்டேன். உடனே பொறிதட்டியது. ஆம், ‘கூத்தன் அவனின்றி’ என்றிருந்தால் ‘ஏதுபறவை’ என்பதே சரியாக இருந்திருக்கும். அவன் இல்லாமல் உயிர்ப்பறவை எப்படியிருக்க முடியும் என்று அர்த்தமாகும். ஆனால் அவன் அன்றி எதுபறவை என்றால், அவனே பறவை என்று பொருளாகிறது. கூத்து நடத்துபவனும் அவனே. கூடு கட்டுபவனும் அவனே. கூட்டுக்குள் உயிர்ப்பறவையாய்ச் சிறைப்பட்டிருப்பவனும் அவனே. இந்தப் பொறி தட்டியதும் உடனே நான் வல்லமை ஆசிரியரைத் தொலைபேசியில் அழைத்து இதைச் சொன்னேன். அவரும் ஒப்புக் கொண்டார். நான் பல வருடங்களுக்கு முன் எழுதிய நாடோடிக் குறள் என்ற குறட்பாக்களில் வரும் ஒரு குறளுக்கு அர்த்தம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் தெளிவாகிறது:

    கூடோ தான் கட்டுறது கூண்டோ போய்ச் சிக்குறது

    கூடே கூண் டானதென்ன கூத்து

    கூத்தன் சிரிக்கிறான். வானத்தில் இடியிடிக்கிறது. மழைபொழியப் போகிறதோ?

    images (1)என்னடா கதையளக்கிறாய். வானத்தின் இடியோசைக்குத் தாளம்போட உன்னால் முடியுமா? இல்லை கடலின் ஓங்காரத்துக்கு ஸ்ருதி சேர்க்கவாவது முடியுமா? என் தலைப்பாகை மைந்தனைப் போல் மழைபொழிந்திடும் வண்ணத்தைத்தான் காண முடியுமா? கவிதைக்கு என்ன வடிவம், என்ன அர்த்தம் என்றா ஆராய்ச்சி செய்கிறாய்! அங்கே பார், ஓர் ஓரத்தில் ஒயிலாகச் சாய்ந்து கொண்டு உன்னைப் பார்த்து அந்த நந்தியாவட்டைப் பூ நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறது. அதன் மேல் ஒரு பனித்துளி எவ்வளவு கனமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது பார்த்தாயா? இன்னும் ஒரு நொடியில், ஒரே நொடியில் அது உடையப் போகிறது. தன் கனம் தாங்காமல் தானே உடையப் போகிறது. அதைத் தன் கதிர்க் கையால் அபகரித்து விழுங்கிவிடப் போகிறான் சூரியன். அது காணாமல் போய்விடுமோ? அதற்குள் விரிந்த வானமும் காணாமல் போய் விடுமோ? உடையும் துளியில் இருந்து ஒரு புதிய வானம் தெறித்து விழுந்து விரிந்து இன்னுமோர் புதிய உலகம் பிறக்கும் கணநேர அதிசயத்தை உன்னால் தரிசிக்க முடிந்தால், அதற்குப் பிறகு வா, கவிதை, வடிவம், அர்த்தம் என்று வம்பளப்போம். நான் காலபைரவன்! காத்திருப்பேன்.

    கூத்தன் சிரிக்கிறான். வானத்தில் இடியிடிக்கிறது. மழைபொழியப் போகிறதோ?

    கேட்டு மகிழ  சொடுக்கிப் பாருங்கள்

    எதற்காக வோமனம் படபடக் கின்றது

    யாழெடுத் தேனதில் ஸ்ருதிகலை கின்றது

    கருமே கங்கள் உருமா றிப்போய்

    நெஞ்சுக் குள்ளே நுழைந்து கொண்டன

    ஒருதுளிக்கும் மறுதுளிக்கும்

    இடைவெளி இன்றி மழைபொழி கின்றன

    எதற்காக வோமனம் படபடக் கின்றது

    செவியறி யாத ஓசைகள் எல்லாம்

    சிந்தனைக் குள்ளெ ஜெபிக்கப் படவும்

    புவியறி யாத உருவங்கள் எல்லாம்

    புலன்க ளுக்குள் நடன மாடவும்

    கவிதை என்ற பெயரி லேஒரு

    கனத்தை நெஞ்சில் தாங்கிக் கொண்டும்

    தவிக்கி றேன்நான் தளர்ந்து போயிதில்

    தர்க்கம் வேறு தனிமை வேறு

    மாம்பழத் துக்குள் வண்டிருப் பதைப்போல்

    மனத்துக் குள்ளே ஏதோ ஒன்று

    நடுங்கிக் கொண்டே நாதம் இழந்து

    முனகுவ தைநான் உணருகிறேன்

    வாரணம் ஆயிரம் மார்புக் குள்ளே

    வந்து நுழைந்து மிதிப்ப தைப்போல்

    காரணம் இன்றிக் கதறுகி றேனிதில்

    கற்பனை வேறு கனவுகள் வேறு

    இருட்டுக் குள்ளே மூழ்கிப் போயென்

    இதயம் புழுங்கித் தவிக்கிறது

    அறிவோ ஞானக் குளிரெடுத் துப்போய்

    அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறது

    ஒருமை பன்மை பேதங்கள் இன்றி

    உள்ளம் குழம்பித் திகைக்கிறது

    ஒருநிமி டம்தான் அதற்குள் இந்த

    உலகே மாறி விடுகிறது

    எங்கோ தொலைவில் ஒருகுயில் கூவ

    மின்னல் வெளிச்சம் பிறக்கிறது

    இருட்டை விரட்டி இதயம் மட்டும்

    இடியிடி என்று சிரிக்கிறது

    தர்க்கம் தனிமை கற்பனை கனவு

    தத்துவம் எல்லாம் புரிகிறது

    தாளத் தோடு மிதந்து கொண்டே

    பாடல் ஒன்று வருகிறது

    எதற்காக வோமனம் களிப்படை கின்றது

    யாழெடுத் தேனதில் இசைபிறக் கின்றது

    (தொடரும்)

    Share
  • கண்ணபிரான்

    கே. ரவி 

    பாடியவர் : ராஜகோபால்

    கண்ணபிரான் பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

    images (3) 

    என்
    நாவிலே பொன்வீணை நீ – என்
    ஆவியே உந்தன் ஸ்ருதி – என்
    நாவிலே பொன்வீணை நீ

    கண்ணாவுன் மேனி கார்முகில்
    மின்னல்களே உன் பூந்துகில்
    ககனமே உந்தன் நிழல் – என்
    கண்களே உன் பாற்கடல் – என்
    கவிதைகள் உந்தன் குரல்
    என்
    நாவிலே பொன்வீணை நீ

    பார்வையில் கலாபம் நீ – என்
    பாடலில் சுநாதம் நீ
    மாயையில் மெய் தோன்றும் இந்த
    வாழ்விலே வினோதம் நீ
    கருணை மார்கழிப் பனி
    கலந்த ஞான பானு நீ
    என்
    நாவிலே பொன்வீணை நீ

     

    Share
  • பெருமாள் பெருமாள்

     

    கே. ரவி

    பா டல் : உன்னி மேனன்

     

    பெருமாள் பெருமாள் பாடலைக் கேட்க சொடுக்குங்கள்

    images (1)

    கலிதீர்க்க வந்தவன் தான் கலிய பெருமாள்
    வினைதீர்ப்பவன் வெங்கடேசப் பெருமாள்
    திருமண் ஒளிவீசும் கரிய பெருமாள்
    தினம்தோறும் நாம்வணங்கும் பெரிய பெருமாள்
    — கலிதீர்க்க

    நின்றதிருக் கோலத்திலே உள்ள பெருமாள்
    நித்தம்நம்மை வாழவைக்கும் நல்ல பெருமாள்
    சொர்ணகவ சத்துக்குள்ளே சோதிப் பெருமாள் – நம்மைச்
    சோதித்துப் பார்க்குமிந்த ஆதிப் பெருமாள்
    — கலிதீர்க்க
    வரம்தருவ தோடுசரி மத்த பெருமாள்
    வட்டிபோட்டு வாங்குபவன் பெத்த பெருமாள்
    மார்பில்மஹா லட்சுமியை வைத்த பெருமாள்
    மந்திரங்களில் ஜொலிக்கும் முத்துப் பெருமாள்
    — கலிதீர்க்க

    சரணங்களைக் காட்டிநிற்கும் கோலப் பெருமாள்
    சங்குச்சக்ரம் ஏந்திநிற்கும் மூலப் பெருமாள்
    மரணத்தை வெல்லும்வழி சொன்ன பெருமாள்
    மங்களங்கள் தங்கவைக்கும் நம் பெருமாள்
    — கலிதீர்க்க

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் (28)

    கே.ரவி

    ரயிலில் என்னைத் தாக்கிய மின்னற் கவிதை என்று போன அதிகாரத்தில் குறிப்பிட்டேன் இல்லையா? அதுதான் ‘ஸ்பரிசம்’ படத்தின் அடுத்த பாடலாகியது. அதுவும் இரண்டே வரிகள். அதையே வேறு வேறு ஸ்தாயியில், ஆனால் ஒரே ராகத்தில் கதாநாயகன் பாடுவதாக அமைந்த பாடல். எனக்குத் தெரிந்த வரையில் அதைவிட அளவில் சிறிய பாடல் எதுவும் எந்தத் திரைப்படத்திலும் வந்ததில்லை.

    baluஅந்தப் பாடலைப் பாட எஸ்.பி.பாலசுப்ரமண்யம் ஒப்புக் கொண்டிருந்தார். அதற்கு முன் நான் அவருக்கு அறிமுகம் இல்லை. பாடல் பதிவுக்கு நாள் குறித்தாகி விட்டது. அன்று பகல் 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் ஆர்.ஆர்.ஒலிப்பதிவுக் கூடத்தை வாடகைக்கு எடுத்து விட்டோம். வாத்தியக்காரர்களை எல்லாம் வரவழைத்து, ஹார்மோனியம் ராமமூர்த்தி உதவியுடன் ஸ்வரங்கள் எழுதித் தந்து, ஒத்திகை எல்லாம் பார்த்து முடித்து, இரவு 6 மணிக்குத் தயாரக, எஸ்.பி.பி. அவர்களின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தோம். 7 மணியாயிற்று வரவில்லை. தொலைபேசியிலும் அவர் அகப்படவில்லை. 8 மணிக்குத் தொலைபேசியில் கிடைத்தார். “சாரி ரவி, நான் திருப்பதியில் இருந்து வந்து கொண்டிருக்கிறேன். வரப் பத்து மணிக்கு மேலாகிவிடும். ரொம்பக் களைப்பாகவும் இருக்கிறது. நீங்கள் ம்யூஸிக் டிராக்கைப் பதிவு செய்து கொள்ளுங்கள். நான் இன்னொரு நாள் பாடிக் கொடுக்கிறேனே” என்று மிகப்பணிவாக அவர் வேண்டுகோள் விடுத்தார். டிராக் பதிவு செய்த அனுபவம் எனக்கு அப்போது இல்லாததாலும், எஸ்.பி.பி. பாட வேண்டிய என் முதல் பாட்டிலேயே இப்படித் தடை வருகிறதே என்ற ஆதங்கத்தாலும் அவர் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காமல் அன்றிரவே அவர் வந்து பாடிக் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடித்தேன். என் நிலையைப் புரிந்து கொண்டு அவர் வீட்டுக்குக் கூடப் போகாமல் இரவு பத்து மணிக்கு நேராக ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வந்தார். பாடல் சொல்லுங்கள் என்றார். நான் இரண்டு வரிகளைச் சொன்னேன். ஓகே, சரணம்? என்றார். அவ்வளவுதான் என்றேன். நிமிர்ந்து பார்த்தார். பாடலே அவ்வளவுதானா? ஆம். அரை மணி நேரத்துக்குள் மலஹரி ராகத்தின் சாயையில் அமைந்திருந்த அந்தப் பாடலை அமர்க்களமாகப் பாடிக் கொடுத்தார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாடல் மிகவும் நன்றாக அமைந்தது. அந்தப் பாடல் இதுதான்:

    ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா

    காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா

    அவ்வளவுதான் பாடல். இதே வரிகளை வெவ்வேறு விதமாக மூன்று முறை கதாநாயகன் நாயகியிடம் பாடுவதாகக் காட்சி அமைந்தது. நீங்களும் பாடலைக் கேட்கலாம், பின்வரும் சுட்டியைச் சொடுக்கினால்.

    http://www.inbaminge.com/t/s/Sparisam/Oodal%20Siru%20Minnal.eng.html

    ராக்கெட் ராமனாதன், சுப்புணி (என்னுடன் விவேகானந்தா கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த நண்பன் டி.எம்.சுப்பிரமணி) இவர்களுடைய நகைச்சுவையும், இந்தப் படத்தின் பாடல்களுமே, வினியோகஸ்தர்கள் இந்தப் படத்தை வாங்க, முக்கியமான காரணங்களாக அமைந்தன.

    மேலே உள்ள பாடல், பல்லவியோடு நின்றுவிட்ட பாடல் இல்லை. பல்லவியே ஒரு முழுப்பாடலாக உருக்கொண்டு விஸ்வரூபம் எடுத்த பாடல். அதற்குமேல் வளர அதில் இடமில்லை. ஆனால், பல்லவியோடு நின்றுவிட்ட பாடல்களும் உண்டு.

    ஒருநாள் இளங்காலைப் பொழுது, சின்ன சின்ன இழைகளாக வானம் மெல்ல மழைதூவிக் கொண்டிருந்தது. அந்த ரம்மியமான சூழ்நிலையில் ஒரு பல்லவி, தர்பாரி கானடா ராகத்தில், மனத்தில் மெல்லப் படர்ந்தது. அதையே மனம் முணுமுணுத்துக் கொண்டிருக்க, அதுவே அப்படியே மெல்லத் தேய்ந்து போனது, ஆங்கிலத்தில் ஃபேட் அவுட் ‘fade out’ என்பார்களே, அது போல்.

    மழைத்

    தூறலிடும் ஒரு காலைப் பொழுது – உனைத்

    தூண்டிவிடும் ஒரு பாடல் எழுது

    பிறகு நேர்ந்த எந்தத் தூண்டுதலும் அனுபல்லவி, சரணங்களைத் தரவில்லை. அந்தப் பல்லவியைத் தொடர்ந்து எழுதப் பலமுறை நான் முயன்றும் முடியவில்லை. வார்த்தைகள் வந்தன. ஆனால் அந்தப் பல்லவியோடு அவை இணைய முடியவில்லை. முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.

    ஷோபனாவும் பாடல்கள் எழுதியுள்ளாள். அதுவும் அவள் இஷ்ட தெய்வமாகிய கண்ணன் மேல் அவள் வடித்த பாடல்களில் மீராவின் தாபமும், ஆதங்கமும் எதிரொலிக்கக் கேட்கலாம். அப்படி அவள் 1980-களில் எழுதிய ஒரு பாடலில் வரும் இரண்டு வரிகளை இந்தச் சூழ்நிலையில் எண்ணிப் பார்க்கலாம்:

    குழலில் இருந்து பிறந்த இசை நான் – அவன்

    குழலில் இருந்து பிறந்த இசை நான்

    கண்ணனின் கற்பனை நான்

    இந்தப் பல்லவியோடு தொடங்கும் அந்தப் பாடலின் சரணத்தில் வரும் அந்த இரண்டு வரிகள்:

    தென்ற லின்வழி சென்றத னாலே கண்ணனை மறந்திருந்தேன்

    பல்லவி யோடு நின்றத னாலே கண்ணனைச் சரணடைந்தேன்

    செதுக்கச் சிற்பி வந்தால்தான் கல் சிலையாகும். அவிழ்க்கக் கவிஞன் வந்தால்தான் சொல் கவியாகும். நம் உயிரே ஒரு கல்; ஒரு சொல்; அதைச் செதுக்க வரும் சிற்பிக்காக, அல்லது அதை விரித்துப் பாடவரும் கவிஞனுக்காக அது எத்தனை யுகமானாலும் காத்திருக்கும், ராமனுக்காகக் காத்திருந்த அகலிகை போல!

    பல ஆண்டுகள் கழித்து நான் எழுதிய ஒரு பாடலின் தொகையறா (இந்த வார்த்தைக்கு என்ன பொருளோ!):

    உளிதாக்கி உடைகின்ற கல் – நான்

    உமிவிலகக் காத்திருக்கும் நெல்

    ஒருதேவ முனிவன்வந் துச்சரிக் கும்வரை

    ஓசையின்றி ஒளிந்திருக்கும் மந்திரச்சொல்

    என் வாழ்க்கையில் எப்படியெல்லாம் மின்னல் அடித்திருக்கிறது! 5 வயதில் ‘மின்னல் வீரன்’ என்ற பெயரில் என் வளர்ப்புத் தந்தை தயாரித்த படத்தில் குட்டிக் கதாநாயகனாக நடித்தேன். 11 வயதில் என் ஆசிரியர் என் தமிழ் விடைத்தாளைச் சுருட்டி என் முகத்தில் வீசியெறிந்த ஒரு மின்னல் அதிர்ச்சியில் உந்தப் பட்டு மூன்று மாதங்களில் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை நானே நூலகம் சென்று பயின்று கவிதை எழுதத் தொடங்கிப், “மின்னற் சுவையே கன்னற் கனியே” என்று தொடங்கும் ஒரு நீண்ட கவிதை எழுதி ஆசியரின் அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற்றேன். 28 வயதில் எஸ்.பி.பி பாட “ஊடல் சிறு மின்னல்” என்ற என் பாடலை நானே இசையமைத்துப் பதிவு செய்தேன். பிறகு, 1998-ஆம் ஆண்டில் பாரதியியல் பற்றி “மின்னற் சுவை” என்றொரு நூல் எழுதி அதற்குக் கவியரசி செளந்தரா கைலாசத்திடம் அருமையான முன்னுரை வாங்கி வெளியிட்டேன்.

    balu1என் இசையமைப்பில் எஸ்.பி.பி. பாடிய இரண்டாவது பாடலும் மின்னல்தான். ஆனால் அது ‘ஸ்பரிசம்’ படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு என் வளர்ப்புத் தந்தை எடுத்த ‘ராஜா நீ வாழ்க’ படத்துக்காகப் பதிவானது. பிரபு, சத்யராஜ், அம்பிகா நடித்து, சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் தயாரான அந்தப் படத்துக்காக எஸ்.பி.பி. பாடிய பாடலைப் பதிவு செய்ய என் உதவியாளராகப் பணியாற்றிய எல்.வைத்தியநாதனை இப்போது நினைத்துக் கொள்கிறேன். ஏற்கனவே, ‘ஏழாவது மனிதன்’ என்ற படத்துக்கு இசையமைத்து வெற்றியும் பெற்ற இசையமைப்பாளர் அமரர் எல்.வைத்தியநாதன் தம்மை விட வயதிலும், அனுபவத்திலும் குறைந்த எனக்கு உதவிசெய்ய முன்வந்த பெருந்தன்மையை நன்றியுடன் நினத்துக் கொள்கிறேன். அந்தப் பாடலை எஸ்.பி.பி எப்படித் தம் இனிய குரலால் வளம் செய்திருக்கிறார் என்பதை நினைத்தால் இப்பொழுதும் என் கண்கள் குளமாகின்றன:

    தென்றலே மலர் சூடவா
    கொடி மின்னலே வளை போடவா
    மேகமே மழைத் துளிகளில்
    மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா

     

    நிலவே ஒரு மலரென மலர்வதும்
    நிழலே மணி ஒளியென விரிவதும்
    கனவா இல்லை நினைவா உன் முகமா
    காவியம் ஆயிரம் பாடுவதென் மனம்

    பார்வையே மலர் சூடுமே – ஒளிப்

    புன்னகை வளை போடுமே – என்

    கண்களின் மழைத்துளிகளே – உன்

    கால்களில் ஜதி போடுமே

     

    தென்றலே மலர் சூடவா

     

    வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
    வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா
    கனவு மலரக் கண் இமைகள் நெகிழப் – புதுக்

    கனவு மலரக் கண் இமைகள் நெகிழ – ஒரு

    மழலை வடிவமுன் மடியில் தவழவரும்
    வெண்புறா விளையாட வா – குயில்

    பேடையே குழ லூதி வா – அலைக்

    கரங்களில் நுரைக் குடங்களில் – நதி

    அன்னை யேசீர் கொண்டு வா

     

    தென்றலே மலர் சூடவா
    கொடி மின்னலே வளை போடவா

     

    லாலலா லல லாலலா
    லல லாலலா லல லால லா

    [பாடலை நீங்களும் கேட்கச் சொடுக்கவும்]

    https://www.youtube.com/watch?v=d0HckTVpYFw

    இந்தப் பாட்டுக்கும் ஒரு பின்னணி உண்டு. அதுவும் இலக்கியப் பின்னணி. என் கல்லூரி நாட்களில் என் நண்பன் ஓவியக்balu2 கவிஞர் சு.ரவி எனக்கு அவ்வப்போது சம்ஸ்க்ருத இலக்கியத்திலிருந்து நல்ல கவிதைகளைச் சொல்லி விளக்கியிருந்தான். அதிலும் மஹாகவி காளிதாசனின் ‘ரகுவம்சம்’ என்ற காவியத்தில் இருந்து அவன் சொன்ன ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ரகுவம்சத்தில் ஒரு பகுதிதான் ராமனின் கதை. அதில், ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போகும் வழியில், சீதை தன் ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கழற்றிக் கீழே வீசி எறிந்ததாகவும், அவள் கைவளையல்களை அப்படிக் கழற்றி எறிந்ததும், அவளுடைய வெறுங்கையைப் பார்க்கப் பொறுக்காமல் வானமே இடியிடித்து, மின்னலால் அவள் கைக்கு வளையிட்டது என்ற அருமையான பாடல் என் மனத்தில் உறைந்து, தக்க நேரத்தில் தமிழில் வெளிப்பட்டதை எண்ணி மகிழ்கிறேன்.

    இன்னும் என் வாழ்வில் என்னென்ன மின்னல்கள் காத்திருக்கின்றனவோ!

    அட, இந்த வரி எழுதும் போதே உள்ளத்தில் பளிச்சென்று மின்னலிடுகிறதே ஒரு புதுக்கவிதை; அதாவது, இப்பொழுதுதான் உதித்த புதிய கவிதை. சுடச்சுட, அப்படியே பரிமாறுகிறேன். இந்தக் கவிதைக்கு இதுவே சூழல்; நீங்களே இதன் செவிலித் தாய்மார்கள்:

    காற்றும் மின்னலுமாய்க் கதைசொல்ல வந்தேனே

    நேற்று நினைவுகளை நெஞ்சுருகத் தந்தேனே

    போற்றிப் புகழ்வதற்கா புலனழிந்து போவதற்கா

    ஏற்றம் எனக்கில்லை எல்லாம் திருவருளே

     

    சாட்டை சொடுக்கியவன் சங்கல்பத் தால்நானும்

    ஆட்டம் போடுகிறேன் ஆலோலம் பாடுகிறேன்

    வேட்டைக் காரனுக்கு வேறென்ன குறிக்கோளோ

    வேடிக்கை காட்டுகிறான் வேஷங்கள் போடுகிறேன்

     

    கூத்து நடக்கையிலே கூட நடிப்பார்கள்

    கூத்து முடிந்ததுமே கூட்டம் கலைந்துவிடும்

    கூத்தன் அவனன்றிக் கூட்டில் எதுபறவை

    கூத்து நடக்கட்டும் கொண்டுவா கவிதைகளை

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 27

    கே.ரவி

    1981-ஆம் ஆண்டில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. அதாவது, நிஜமாக ஒரு மின்னலே கவிதையான நிகழ்ச்சி. ‘என்னய்யா, இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா?’ என்ற எகத்தாளக் குரல் எனக்குள்ளேயே எதிரொலிக்கிறது. தினமும் ஆங்கில நாளேடுகளைக் கரைத்துக் குடிக்கும் ஒருவன், தமிழ் நாளேடு மட்டும் படிப்பவனைப் பார்த்துக் கிண்டலாக உனக்கு என்ன உலக நிகழ்ச்சி தெரியும்? வண்ணாரப்பேட்டை ரவுடி இன்னொருவனைச் சதக், சதக் என்று கத்தியால் குத்திக் கொன்றான் போன்ற அன்றாட விஷயங்கள் மட்டுந்தான் உனக்குச் செய்தி, நிகழ்ச்சி. காஜா தெரியுமா? சட்டைப் பொத்தானைக் கஷ்டப்பட்டு நுழைப்போமே, அந்தக் காஜா இல்லேப்பா. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடைப்பட்ட ஒரு சிறிய பகுதி. அதன் கடைசி எழுத்து ஆங்கிலத்தின் கடைசி எழுத்து. ஆனால் அதைச் சுட்டிக்காட்டத் தமிழில் ‘ஜ’வை விட்டால் வேறு எழுத்து வடிவம் இல்லையே, என்ன பண்ணுவேன்? சரி, சரி, அந்த இடத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறதே, அந்தச் செய்தி தெரியுமா உனக்கு?

    இப்படி நக்கல் செய்யும் அந்த மேதாவியிடம், ‘ஐயா, உங்களுக்கு இந்தப் புவிக்கோளமாகிய பூமியில் நடக்கும் சமாச்சாரங்கள்தான் தெரியும்; அவைதாம் உங்களுக்குச் செய்திகள். ஆனால், பூமி மட்டுந்தானா உலகம்? பூமியைத் தாண்டிச் சூரியன் எனப்படும் நட்சத்திரத்தில் நடக்கும் அதிசயங்களை நீர் அறிவீரா? அதையும் தாண்டி அடுத்த அண்டத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா உமக்கு?’ என்றெல்லாம் நான் கேட்கப் போவதில்லை. பாரதி ஒரு கட்டுரையில் எழுதியதை மட்டும் அந்த அதிமேதாவிக்குப் படித்துக் காட்டினால் போதும். பாரதி எழுதுகிறான்:

    உலகத்தில் எங்குப் பார்த்தாலும் நிறைந்து கிடைக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதற்கென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். சூரியாஸ்தமய காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணமிருந்த தோற்றம் அடுத்த க்ஷணமிருப்பதில்லை…. நமது நாட்டில் வேதகாலத்து ரிஷிகள் பிரகிருதியின் செளந்தர்யங்களைக் கண்டு மோஹித்துப் பரமாநந்த மெய்தியவர்களாய்ப் பல அதிசயமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவசமெய்திக் காளிதாசன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலேதான் இந்த துரதிஷ்ட நிலைகொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்களெல்லாரும் கவிகளென்று சொல்லி வெளிவருகிறார்கள்.

    மின்னல் கவிதை என்று சொன்னேனே, அந்தச் செய்திக்கு வருவோம்.

    36

    என் வளர்ப்புத் தந்தை பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1980-ஆம் ஆண்டு கமல்ஹாஸனை வைத்து ஒரு படம் தொடங்கப் பூஜை போட்டார். இயக்குநர் சக்திதான் அதன் இயக்குநர். சக்தியும், கமலும் மிக நெருங்கிய நண்பர்கள், இருவரும் ஓரூர்க்காரர்கள், ஆம், பரமக்குடி. சக்தியும், நானும் அமர்ந்து பலநாட்கள் விவாதம் செய்து ஒரு கதையைப் பின்னினோம். அந்தக் கதையை நாங்கள் கமலிடம் சொல்ல, அவரும் ஒப்புக் கொண்டு படத்துக்கு “வாய்ப்பூட்டு” என்று பெயர்சூட்டவும் செய்தார். ‘வாய்ப்பூட்டு’ பட பூஜை மிக விமரிசையாக நடந்தது. அதற்கு இளையராஜாவை இசையமைக்கக் கோரி அணுகினோம். அவர் மூன்று மாதங்களுக்கு தமக்கு நேரமில்லை என்று சொல்லி விட்டதால், பாடல் பதிவு எதுவும் இல்லாமல் பூஜை மட்டும் போட்டோம். ஏதோ காரணங்களால், பூஜை போட்ட சில நாட்களிலேயே அந்தப் படம் எடுக்கும் எண்ணத்தை என் தந்தை கைவிட வேண்டியதாயிற்று. எனக்கு அதற்குள் இயக்குநர் சக்தியுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு விட்டதாலும், திரைப்பட பூஜை என்று என் நண்பர்களையெல்லாம் நான் அழைத்துக் காட்டிவிட்டு உடனே மூட்டை கட்டிவிட என் ஈகோ, அதுதான், அகங்காரம், இடம்கொடுக்காததாலும், எப்படியும் சக்தியின் இயக்கத்தில் வேறொரு படம் எடுத்தே ஆக வேண்டுமென்று என் வளர்ப்புத் தந்தை கல்யாணராமனிடம் கேட்டேன். நான் கேட்டு அவர் எதையும் மறுத்ததே இல்லை. குறைந்த பட்ஜெட்டில் எடுப்பது என்று தீர்மானம் ஆகியது. கதாநாயகனாக என் நெருங்கிய நண்பர் எஸ்.வி.சேகரையும், கதாநாயகியாக புதுமுகம் ஶ்ரீலட்சுமி என்பவரையும் வைத்து, சக்தியும் நானும் கலந்து ஒரு கதை உருவாக்கிப் படத்துக்கு பூஜை போட நாள் குறித்தோம். குறைந்த பட்ஜெட் ஆயிற்றே! இளையராஜா அளவுக்கு இசையமைப்பாளருக்குச் சம்பளம் கொடுக்க முடியாதே என்ற நிலை வர, ஏதோ ஒரு துணிச்சலில் ‘நானே இசையமைக்கிறேன்’ என்று ஒரு பேச்சுக்குச் சொன்னதும் என் தந்தையும், சக்தியும் அதை அப்படியே ஒப்புக் கொண்டு இசையமைக்குமாறு என்னைத் தூண்டினார்கள். சரியென்று கோதாவில் இறங்கினேன். பூஜை அன்றே முதற்பாடல் பதிவு செய்வது என்று முடிவானது. அப்படி முடிவாகி நாலு நாட்களுக்குள் பூஜையும், பாடல் பதிவும் நடைபெற நாள் குறித்தாகி விட்டது. நாங்கள் முடிவு செய்திருந்த கதையோ கல்லூரியில், அதுவும், ஆண்களும், பெண்களும் இணைந்து படிக்கும் ஒரு கல்லூரியிலேயே பெரும்பாலும் நடப்பதாக இருந்தது. படத்தின் பெயர் ‘ஸ்பரிசம்’ என முடிவானது.

    1

    நான் விவேகானந்தா கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்கள் புடைசூழ நிறைய பைலா (இன்றைய கானா) பாடல்கள் எழுதிப் பாடியிருக்கிறேன். இயல்பிலேயே எனக்கு டப்பாங்குத்துப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இலக்கண சுத்தமாக இனிய ராகத்தில் ஒரு பாடல் எழுதுவதைவிட, ஜனரஞ்சகமாக, டப்பாங்குத்துப் பாடல் எழுதுவது ரொம்பக் கடினம். “என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு”, “தென்ன மரத்துல குந்தியிருப்பதச் சின்ன பாப்பா”, போன்ற பாடல்கள் எழுதுவது அவ்வளவு சுலபம் இல்லை. “ஜவ்வாது பொட்டாகத்தான் இட்டுக்கவா ஒன்னத் தாயத்துக் குள்ளே வச்சுக் கட்டிக்கவா” என்ற பல்லவியை எப்போது கேட்டாலும் ரசிப்பேன். ஆகவே, துணிந்து ஒப்புக் கொண்டேன்.

    பூஜை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், என் வீட்டில் ‘சீத்தாத்தை’ என்ற அத்தை ஒருத்தி, என் வளர்ப்பு அன்னை அலங்காரத்தின் தாயார், அவள் அடிக்கடிப் பாடும் ஒரு நையாண்டிப் பாடலைப் பாடினாள். அதைக் கேட்டதும் அதுவே பல்லவியாக என் முதல் திரைப்படப் பாடல் உருவானது.

    2

    முறையாக இசை பயிலாத, எந்த வாத்தியமும் வாசிக்கத் தெரியாத, ஸ்ருதியோடு பாடுவதே இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நான் இசையமைப்பாளனாக, முதன்முதலில், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இருந்த ஆர்.ஆர். ஒலிப்பதிவுக் கூடத்தில், ஸவுண்ட் எஞ்சினியர்கள் மாணிக்கம், சம்பத் ஆகியோருக்கு அருகில் எப்படி சப்த நாடியும் ஒடுங்க அமர்ந்திருந்தேன் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். அது போதாதென்று, நான் இசையமைக்கும் அழகை பார்க்கச் சாரு அண்ணா, அதாவது, சாருஹாசன் வேறு வந்து என் அருகில் உட்கார்ந்து கொண்டு விட்டார். என் நடுக்கம் இரட்டிப்பாகியது. பாடலை யார் பாடப் போகிறார்கள் என்று கூட முடிவு செய்யவில்லை. கோவையிலிருந்து நண்பர் சுந்தரேசன் என்பவரையும், அப்போது சில படங்களில் பாடியிருந்த டி.கே.எஸ். கலா அவர்களையும் மட்டும் பாடத் தயாராக வரச் சொல்லியிருந்தேன். பாடலோ பல மாணவ, மாணவியர் பாடிக்கொண்டு ஆடுவதாக அமைந்திருந்தது. என் பாடல் வரிகளை நான் முணுமுணுக்க, அதை எப்படியோ ஒரு மாதிரியாகச் சரியாகப் புரிந்து கொண்டு ராமமூர்த்தி அவர்கள் ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்ட, ராக்கெட் ராமனாதன், முத்துராஜா, என் மனைவியின் தம்பி ரதீஷ் உட்பட அங்கு வந்திருந்த நண்பர்கள் பலரையும் பாட வைத்துப் பதிவானது அந்தப் பாடல்.

    நான் ஏதோ ஆபாசப் பாடல் எழுதியிருக்கிறேன் என்று மேடையில் ‘சொல்லி விடட்டுமா’ என்று வாலி மிரட்டினார் என்று முன்னொரு பகுதியில் எழுதியிருந்தேனே, அந்தப் பாடல்தான் அது.

    ராஜ கோபாலா ஒங்கம்மா தோசை வாத்தாளா

    வேணு கோபாலா ஒங்கம்மா வெண்ணை தந்தாளா

    ‘ஸ்பரிசம்’ படம் முக்கால்வாசி எடுத்தாகி விட்டது. இன்னும் வியாபாரம் ஆகவில்லை. நான் வக்கீல் தொழிலில் சம்பாதித்த கொஞ்சநஞ்ச பணமும் நேராக படச் செலவுக்கே போய்க்கொண்டிருந்தது. ஷோபனா ரொம்பப் பொறுமைசாலி.

    படம் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு நாளும், அந்த நாள் படப்பிடிப்புக்கு அல்லது பாடல் பதிவுக்குத் தேவைப்படும் பணம் அந்த நாள் காலையில்தான் யார் மூலமாவது எதிர்பாராமல் கிடைக்கும். அப்படி ஒரு ராசி அந்தப் படத்துக்கு. படம் பூஜையன்று விடியற் காலையில், செலவுக்குப் போதிய பணம் இல்லாமல் நானும், என் வளர்ப்புத் தந்தையும் புறப்பட்டு விட்டோம்; ‘பார்க்கலாம், மாலைக்குள் பணம் வரும்’ என்ற துணிவோடு, டிரைவ்-இன் ஓட்டலில் போய் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு நண்பரிடம் நான் விளையாட்டாக இதைச் சொன்னதும் அன்றைய செலவுக்குத் தேவைப்படும் பணத்தை அப்படியே தம் கைப்பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்தார். மெய்சிலிர்த்துப் போனேன். அவர்தான், நான் வக்கீல் தொழில் தொடங்கியதும் தம் அலுவலக வளாகத்திலேயே என் அலுவலகம் அமைக்க உதவிய டி.எஸ்.சத்யம். ‘சத்யம் அட்வர்டைஸிங்’ என்ற விளம்பர நிறுவனம் வைத்து நடத்திய அவர் எங்கள் குடும்ப நண்பர். சமீபத்தில் அமரராகிவிட்ட அவர் போன்ற நல்ல உள்ளம் படைத்த நண்பர்களே எனக்கு எப்பொழுதும் உதவிசெய்து வந்திருக்கிறார்கள்.

    5

    “சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால்” என்று அசோக வனத்தில் சீதை காத்திருந்ததைக் கம்பன் வர்ணித்தது போல், ஒவ்வொரு நாளும் யாராவது வந்து உதவக் காத்திருந்த என் துணிவை எண்ணிப் பார்த்து வியக்கிறேன். இப்படித்தான் வளர்ந்தது ‘ஸ்பரிசம்’ படம்.

    ‘என்னய்யா, மின்னல், கவிதை என்றெல்லாம் அளந்து விட்டு ஏதோ தோசை மாவை அரைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்ற கேள்வி தொலைவிலிருந்து என் செவியை எட்டுகிறது. கதை என்று வந்தால் அப்படித்தான் சுற்றி வளைந்து போகும். பொறுமை தேவை.

    சரி, மின்னலுக்கு வருகிறேன்.

    அந்தப் படத்துக்கு இன்னொரு பாடலை அடுத்துப் பதிவு செய்து படம் பிடிக்க வேண்டும். கல்லூரியிலே கதாநாயகனுக்கும், நாயகிக்கும் எப்பொழுதும் சின்ன சின்ன சண்டைகள். இப்படியே பாதிப் படம் போகிறது. நாயகன் செய்த ஒரு விஷமம் நாயகியை மிகவும் பாதித்துவிட அவள் அவனிடம் நிரந்தரமாகக் கோபித்துக் கொண்டுவிட, நாயகன் அவள் மனத்தை மாற்றுவதற்குப் பாட வேண்டும். மறுநாள் அதுபற்றி விவாதிக்க இயக்குநர் சக்தி அழைத்திருந்தார். ஆனால் அதற்குள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சத்யதேவ், ஒரு வழக்கில் என்னைக் கமிஷனராக நியமித்து விட்டார். அன்றிரவே நான் தேவகோட்டைக்குச் சென்று அங்கிருந்த வயது முதிர்ந்த ஒருவரைச் சாட்சியாக விசாரித்து வரக் கட்டளையிட்டு விட்டார்.

    இரவு, புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். மனமெல்லாம் ‘ஸ்பரிசம்’ படத்திலேயே இருந்தது. இரவாகியும் தூக்கம் வரவில்லை. ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே இருந்தேன். திடீரென்று ஒரு வெட்டு மின்னல் கண்ணைப் பறித்தது. ஜன்னலை சாத்திவிட்டுப் படுத்துக் கொண்டேன். மின்னல் மட்டும் என் மனத்துக்குள் ஆழமாகத் தைத்து, ஊடுருவிச் சென்று, அங்கிருந்து ஒரு பாடலை வரவழைத்து விட்டது. இல்லை, மன்னிக்கவும், அந்தப் பாடலே மின்னலாக உருமாறி என் நெஞ்சில் குடியேறிவிட்டது. அது பல்லவியோடு நின்றுவிட்ட பாடல் போல் இரண்டே வரிகளில் முடிந்து விட்டது. நானும் தூங்கி விட்டேன். தூக்கம் கலைந்த பிறகு, நாளை மேலும் சொல்கிறேனே!

    (தொடரும்)

    புகைப்படங்கள் குறித்த விவரம்:

    1. வாய்ப்பூட்டு பட பூஜையின் போது கமலுக்கு நான் மாலை அணிவிக்கும் புகைப்படங்கள் 2.

    2. நானும் இயக்குநர் ஆர்.சி.சக்தியும்

    3. நான் ஸ்பரிசம் படப்பாடல் பதிவு செய்யும் காட்சிகள்.

    4. டி.எஸ்.சத்யம் பாரதி விழாவில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்துக்குப் பரிசு வழங்கும் காட்சி.

    Share
  • காற்று வாங்கப் போனேன் (26)

    கே.ரவி

    “புரியுது தம்பி. நளவெண்பா, முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி, பாரதிதாசன் என்று தொடங்கி, ஷெல்லி, கீட்ஸ், பைரன், வொர்ட்ஸ்வொர்த், கோல்ரிட்ஜ் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் படைப்புகளில் தோய்ந்து, நா.பா., ஒளவை நடராஜன் போன்ற சமகாலத்து இலக்கிய ரசிகர்களால் செப்பனிடப்பட்டு, சுரதா, முருகுசுந்தரம் போன்ற தற்காலக் கவிஞர்களாலும் பாதிக்கப்பட்டு உன் கவிதை உருப்பெற்று, வளர்ந்தது என்று…..” சிகாமணி முடிக்குமுன் நான் குறுக்கிட்டேன்: “மிக முக்கியமானதை விட்டு விட்டாயே சிகா, தண்டமிழ்க் கொண்டலால் தட்டி எழுப்பப்பட்டு, பாரதியால் தடுத்தாட்கொள்ளப்பட்டு!”

    “மறக்கலே தம்பி. நான் அதுக்கு வரதுக்குள்ள ஒனக்குப் பொறுக்கலே, அவசரம்” என்றான் சிகா.

    “அது சரி, முன்னே அண்ணே என்றாய், இப்பொழுது தம்பி என்கிறாயே?” கேட்டேன்.

    சிகா சொன்னான்: “நீதான் பாடிட்டியே, எதைநான் முதுமை என்பேன், இதைப்போய் இளமை என்றேன், என்று.”

    என் துட்டையே எனக்குத் திருப்பித் தருகிறான், சிகாமணி.

    எப்படியோ, பலமுனைத் தாக்குதல்களுக்கு இடையில், வளைந்து, நெளிந்து, வளர்ந்து என் கவிதைச் சுடர் அணையாமல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

    திருமணம் ஆனவுடன், நான் சட்டம் படித்துக் கொண்டே ஒரு பணியிலும் இருந்தேன். வேலைப் பளு அதிகம். நேரமும் கிடைக்கவில்லை. இருந்தாலும் நேரம் கிடைத்த போதெல்லாம் ஷோபனாவுடன் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டது மட்டுமின்றி, அவளுடன் சேர்ந்து அமர்ந்து கவிதை யோகத்தில் ஈடுபட்டேன். ஆம், அவள் வீணை வாசிப்பாள். அதற்கு ஏற்ப நான் பாடுவேன். அப்படி வந்த சில பாடல்களில் சில இன்னும் நினைவில் உள்ளன. 1974-75 ஆண்டுகளில் வந்தவொரு பாடல்:

    shoba2

    யாழில் மிதக்கும் விரல்களோ

    தண்ணீரில் தளும்பும் நிலவின் துகள்களோ

    யாழில் மிதக்கும் விரல்களோ

    உனது பார்வை எனது நெஞ்சில்

    ஒலியும் ஒளியும் சேர்க்குமோ

    அனிச்ச மலரின் அருகில் வந்த தென்றலோ

    பனிசுமந்த நதிவிழுந்த சாரலோ

    உன்கரங்கள் தீண்டும் போது என்வதனம்

    குழையும் சிலிர்க்கும் காதலோ

    யாழில் மிதக்கும் விரல்களோ

    விண்மீன்கள் தூளாகி விழுமொலியோ

    கடலிசையில் மனமயங்கிக் கருமேகக் கூட்டங்கள் முறியும் ஒலியோ

    உன்

    சதங்கையோடென் இதயமும்

    துடிக்கும் துவளும் பாவமோ

    யாழில் மிதக்கும் விரல்களோ

    அந்தப் பாடல் வந்த நேரம், தொலைக்காட்சியில் ‘ஒலியும் ஒளியும்’ என்ற நிகழ்ச்சி வரத்தொடங்காத காலம்!

    இன்னொரு பாடல், சற்று வினோதமான சூழ்நிலையில் பிறந்தது. திரைப்படக் காட்சிபோல் ஒரு சூழ்நிலையைக் கற்பித்துக் கொண்டு அந்தச் சூழ்நிலையில் பாடுவதற்கு ஏற்ற பாடலாக ஏதேனும் எழுதிப் பாடுவது என்று ஷோபனாவும் நானும் முடிவு செய்தோம். காதலன், காதலி அல்லது கணவன், மனைவி இடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வந்தாலும் அவை காதலுக்குக் குறுக்கே வரத் தேவையில்லை என்பதுபோல் பாடல் அமைய வேண்டும் என்று திட்டமிட்டோம். ஷோபனாவிடம், “ஏதாவது ஒரு ராகத்தை வீணையில் மீட்டு” என்று சொன்னேன். திடீரென்று ஒரு பல்லவி தோன்றியது.

    ஆரோகணம் அவரோகணம்

    வேறாக இருந்தாலும் விளைவாகும் ஒரு ராகம் சுகமே தரும்

    ஆரோகணத்தில் வரும் எந்த ஸ்வரமும், அவரோகணத்தில் வராத வண்ணம், ஆரோகணமும், அவரோகணமும் முற்றிலும் வேறாக இருப்பதாக அமைந்த ஒரு ராகத்தில் ஷோபனா அந்தப் பல்லவியை வீணையில் வாசித்ததும் நான் நெகிழ்ந்து போனேன்.

    பாடல் தொடர்ந்தது:

    மாறாத இருட்டுக்கு மடியைக் கொடுத்தாலும்

    நீராகி விடும் போது நிலம் வாழ்த்தும் கருமேகம்

    போல் வந்திடும் ஊடற்களம்

    போதென்ற மயல்சாய்ந்து நிலவென்ற பூவந்து கூடல்தரும்

    ஆரோகணம் அவரோகணம்

    வேறாக இருந்தாலும் விளைவாகும் ஒரு ராகம் சுகமே தரும்

    ravi

    ஷோபனாவுக்கும் எனக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடு வந்தாலும், நிறைய வரும், இந்தப் பாடலைத்தான் நினைத்துக் கொள்வேன். “காதலர் இருவர் கருத்தொருமித்து” என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், கருத்துக்கும் காதலுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. எப்படிக் கருத்துக்கும், கவிதைக்கும் சம்பந்தம் கிடையாதோ அப்படித்தான் கருத்தும் காதலும்.

    இப்படி இசையும் கவிதையுமாய்க் கலந்து என் வாழ்க்கை சென்று கொண்டிருந்த காலக் கட்டத்தில், சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்துப் பிரிந்துவிட்ட நண்பன் வ.வே.சு. மீண்டும் சென்னைக்கே வந்து சேர்ந்ததால் எங்கள் தொடர்பு நெருங்கிய நட்பாக வளர்ந்து என் இசையார்வத்தை மேலும் தூண்டிய செய்தியை முன்பே சொல்லிவிட்டேன்.

    அதற்கு ஆறேழு ஆண்டுகளுக்கு முன், அதாவது, 1966-67 ஆண்டுகளில் வானொலியில், மன்சாஹே கீத், மனோரஞ்சன் நிகழ்சிகளில் தினம் தவறாமல் நான் கேட்ட பழைய ஹிந்திப் பாடல்களே என் கொஞ்ச நஞ்ச இசை ஞானத்துக்கும் முழுப்பொறுப்பு. ஓ.பி.நய்யர், நெளஷத், மதன்மோஹன், சலீல் செளத்ரி, சங்கர் ஜெய்கிஷன் போன்ற இசை மேதைகளே என் குருநாதர்கள்.

    ஏற்கனவே சொன்னதுபோல் பள்ளியில் அரங்கேறிய நாட்டிய நாடகப் பாடல்களால் நான் பெற்ற இசையனுபவங்கள், ஹிந்தித் திரைப் பாடல்களைத் தினமும் கேட்டு லயித்த ரசனை, வ.வே.சு.வின் நட்பு, எல்லாவற்றுக்கும் மேல் பாரதியின் இசைப் பாடல்களின் தாக்கம், இவற்றோடு ஷோபனாவின் இசைத் தேர்ச்சியால் கிடைத்த ராகப் பயிற்சி, எல்லாம் கலந்து, இசையையும், கவிதையையும் என் நெஞ்சின் இருகண்களாகத் திறந்து விட்டன.

    “இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா” என்று கவிஞர் கேட்டதுபோல், இசை, கவிதை ஆகிய என்னிரண்டு அகக்கண்களும் இணைவாகவே இயங்கின. என் கவிதைகளில் பெரும்பாலானவை மெட்டோடும், தாளக் கட்டோடும் பிறந்தன. பின்னணி இசையும் கூடவே ஒலிக்கும். எப்பொழுதும் என் மனத்தின் ஓரிழையில், அதாவது, ஒரு சேனலில், ஏதாவது ஓர் இசைப்பாடல் உதித்து, ஒலித்துக் கொண்டே இருக்கும். ‘எப்பொழுதும்’ என்றால் தூங்கும் போதும் என்று கூட அர்த்தம் கொள்ளலாம். நிறைய பாடல்கள் உறக்கத்தில் உதித்துள்ளன. சில பாடல்கள் துயில் கலைந்ததும் மறந்து போகும். பிறகு, பல நாட்கள், அல்லது ஆண்டுகள் கழித்து நினைவுக்கு வரும். என் கவிதைகளில் பல கவிதைகளைப் பாடிப் பாடிப் பல மாதங்களுக்குப் பிறகே ஏதாவது துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்ததும் உண்டு; தொலைத்ததும் உண்டு.

    “போதுமய்யா உன் சுய புராணம்” என்று அலுத்துக் கொண்ட சிகாவை அடக்குகிறேன்: ஏம்பா, இந்தத் தொடரே என் சுய புராணம் தானேப்பா!

    கவிதை எப்போது உதிக்கும், எப்போது சொற்களாக உருவெடுத்து வெளிப்படும் என்று என்னால் முன்கூட்டிச் சொல்லவே முடியாது.

    சில நிகழ்சிகளை மட்டும் சொல்கிறேன்.

    1988-ஆம் ஆண்டில் ஒருநாள், சென்னை உயர்நீதி மன்றத்தில் அன்றைய நீதியரசர் சாமிக்கண்ணு அவர்களுடைய மன்றில் அமர்ந்திருக்கிறேன். என் வழக்குக்கு முந்தைய வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. மணி சுமார் பகல் பன்னிரண்டரை இருக்கக் கூடும். பேசிக் கொண்டிருந்த வழக்குரைஞரின் இளவர், அதாவது, ஜூனியர் வழக்கறிஞரிடம் அவருடைய சீனியரின் வாதம் இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் என்று மெல்ல வினவுகிறேன். பகல் இடைவேளை வரைக்கும் போகும் என்று அவர் சொன்னதும், ஓ அப்படியானால், நான் பிற்பகல் வந்தால் போதுமோ என்று கேட்கிறேன். “பிற்பகல் நீதிமன்ற அமர்வு கிடையாது, ஏனென்றால் அன்று சிவன் ராத்திரி என்று அவர் பதில் சொன்னதுதான் தெரியும், உடனே, ‘சிவன்’ என்ற சொல்லில் இருந்து ஒரு மின்னல் வெடித்துச் சிதறி என் அகத்திரையைத் தாக்குகிறது. கடகடவென்று பாடல்கள் நெஞ்சில் பெருக்கெடுக்க, எதிரே இருந்த காஸ் லிஸ்ட், அதாவது, வழக்குப் பட்டியல் அச்சாகித் தினசரி வருகின்ற தாளின் பின்புறத்தில் கிறுக்குகிறேன்.

    ஆசையில் அலைந்து கெட்டேன் அனுபவம் பழுது பட்டேன்

    ஓசையில் உழன்று நொந்தேன் ஒருகணம் உனைநினைந்தேன்

    நீசனென் றெள்ளிடாமல் நீயெனைத் தேடி வந்தாய்

    ஈசனே எம்பிரானே என்னை ஆளுடைய கோவே

    மொத்தம் பன்னிரண்டு பாடல்கள். எழுதி முடித்து, நிமிர்ந்து பார்க்கிறேன், வழக்கு மன்றம் காலியாக இருக்கிறது. நீதியரசர், நீதிமன்ற அலுவலர், நான் ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறோம். நீதியரசர் சாமிக்கண்ணு சொல்கிறார், “உங்களுக்கு முந்தைய கேஸ் முடிந்து உங்கள் கேஸ் அழைக்கப் பட்ட போது, நீங்கள் ஏதோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தீர்கள். தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் காத்திருக்கிறேன்”.

    இப்படிப் பல அனுபவங்கள்!

    ஒருநாள், வானத்து மின்னலே வந்து என்னகத்தை ஊடுருவிச் சென்று, அங்கே கவிதை நிலவை மலரச் செய்த அனுபவத்தைப் பிறகு சொல்கிறேன்.

    (தொடரும்)

    Share
  • யார்மனத்தில்

    கே.ரவி

     

     யார்மனத்தில்

    (பாடல் – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்)

    151_002

    யார்மனத்தில் நீயிருந்து தேர்செலுத்துகின்றாய்

    யாருயிர்க்குள் நீநுழைந்து குழலிசைக்கின்றாய்

     

    யார்விழிக்குள் நீநிறைந்து வண்ணம் சேர்க்கின்றாய்

    யார்மொழிக்குள் கையளைந்து வெண்ணை கேட்கின்றாய்

     

    யார்புனைந்த மாலைக்காகத் தோள் அசைக்கின்றாய்

    யார்விரித்த குழல்முடிக்கப் போர் நடத்துகின்றாய்

    எங்கிருந்தோ பாஞ்ஜசன்யம் நீ முழக்குகின்றாய்

    இங்கெனக்குள் உன்நினைப்பை ஏன் விதைக்கின்றாய் – எனை

    ஏன் வதைக்கின்றாய்

     

    நீநடத்தும் நாடகத்தில் நான் நடிக்கின்றேன்

    நீயியக்கும் கருவியாக வரத்துடிக்கின்றேன்

    நீயும் நானும் வேறுவேறா கூறுவாய் கண்ணா

    நீபிரிந்தென் உள்ளும்வந்து சேருவாய் கண்ணா – பதில்

    கூறுவாய் கண்ணா

     

     

     

     

    Share
  • கைகள் குவிக்கும்

    கே. ரவி

     

    கைகள் குவிக்கும்

    பாடல் – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

    DSC02611 sRI lANKAN ....SHORT SWORD ON GOD
    கைகள் குவிக்கும் போதெல்லாம் வடிவேல் – விழிக்
    கமலம் திறக்கும் போதெல்லாம் கதிர்வேல்
    நினைவுத் திரை விலகிப் புலனடங்கி
    ஒரு முனைப்பில் மனம் திளைக்கும் தவம் கூர்வேல்

    முளைத்த நிலவுப் புன்முறுவல் – ஆறு
    முகங்கள் ஞானத் தீப்பொறிகள்
    பனித்த சடையன் பக்கம் அமர்ந்து
    பாடம் சொன்ன செவ்விதழ்கள் – கரை
    மோதித் திரும்பும் கடலலைகள் – தினம்
    ஓதித் துவளும் ப்ரணவத்தில் –
    ஆடிக் களிக்கும் பாதங்கள் – நுரை
    யாகித் தெறிக்கும் சதங்கைகள்

    கந்தா கடம்பா கதிர்வேலா – எனக்
    கதறி அழுதால் வழிபிறக்கும்
    கருணை மனமே மயில்வாகனமாய்க்
    கண்டால் ஞான விழிதிறக்கும்
    குருவாய் நினைவில் வருவாய் முருகா
    எனவே இதயம் குரல்கொடுக்கும்
    குழந்தை வடிவம் குலுங்கிச் சிரிக்கும்
    வேலாயுதமே நிழல்கொடுக்கும் – சக்தி
    வேலாயுதமே நிழல்கொடுக்கும்.

    கே.ரவி

    Share
  • காற்று வாங்கப் போனேன் (25)

    கே. ரவி

    awilliஎன் கல்லூரி நாட்களில் ஆங்கிலக் கவிதைகள் நிறையவே படித்து, ரசித்து, அந்தச் சுவையில் தோய்ந்திருந்தேன். கீட்ஸும், ஷெல்லியும், பைரனும் பள்ளி நாட்களிலேயே என்னைக் கவர்ந்ததோடு, மிகவும் பாதிக்கவும் செய்திருந்தார்கள். சற்று நிதானமாக, ஆனால் மிகவும் அழுத்தமாகப் பிறகு சுவடு பதித்தவர்கள், வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தும், அவருடைய நெருங்கிய நண்பர் எஸ்.டி.கோல்ரிட்ஜ்ஜும்.

    கோல்ரிட்ஜ் என்றதும் நினைவுக்கு வருவது அம்பத்தூர்தான். அம்பத்தூருக்கும் கோல்ரிட்ஜ்ஜுக்கும் என்னய்யா சம்பந்தம்? அது ஒரு சுவாரசியமான கதை.

    ar1

    1970-ஆம் ஆண்டு, நாங்கள், அதாவது, சிந்தனைக் கோட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள், அம்பத்தூரில் இருந்த ஒரு பள்ளியில் இரண்டு நாட்கள் முகாம் இட்டோம். அது உண்மையிலேயே ஓர் இலக்கிய முகாமாக, அல்லது, எங்கள் இலக்கிய வளர்ச்சியின் இன்னொரு முகமாக அமைந்தது. அந்தப் பள்ளியும் என் தந்தை விஸ்வம் நடத்திக் கொண்டிருந்த பள்ளிதான். நான், சுகி சிவம், சு.ரவி, ஆ.பாபு, கண்ணன் மேலும் சில நண்பர்கள் கும்பலாகச் சென்று அம்பத்தூரையே ஒரு கலக்குக் கலக்கி விட்டோம். அங்கே நாங்கள் அடித்த லூட்டிகளையும், அருகில் இருந்த வைஷ்ணவி கோயில், திருமுல்லை வாயில் கோயில் ஆகியவற்றுக்கு நடைப்பயணம் சென்றதையும், அதுவும், சிவத்தின் “தேவியின் கருணை மிகமிகப் பெரிது தேர்ந்து கொள்ளடா மானுடா” என்ற பாடலைப் பல ஸ்ருதிகளில் சத்தமாகப் பாடிக்கொண்டே சென்றதையும், அம்பத்தூர் பள்ளியின் புழக்கடையில் எங்களில் ஒருவனைத் தொட்டியில் போட்டு பாபு நீர் மொண்டு ஊற்றிக் குளிப்பாட்டிய கண்கொள்ளாக் காட்சியையும் இன்னும் நினைத்துப் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்தது, என் தந்தை விஸ்வம், ஒரு மரத்தடியில், எங்களுக்கு ஆங்கிலக் கவிதைகளைப் படித்துப் பாடம் நடத்தியதுதான். அங்கேதான் கோல்ரிட்ஜ்ஜின் ‘ரைம் ஆஃப் தி ஏன்ஷியன்ட் மெரினர்’ (ஒரு கிழ மாலுமியின் கவிதை) என்ற அருமையான ஆங்கிலக் கவிதையை அவர் எங்களுக்கு முழுதாகப் படித்து, விளக்கி, நடித்துக் காட்டி அந்தக் கவிதை வெள்ளத்தில் அவர் எங்களை மூழ்கடித்தார்.

    ஒரு திருமண வைபவத்துக்குச் செல்லும் விருந்தினர்களில் ஒருவனை, ஒரு கிழ மாலுமி வழிமறிக்கிறான். ஏன் வழிமறிக்கிறாய் என்று விருந்தினன் கேட்டதும், கிழவன் அவன் கையைத் தன் மெலிந்த கரத்தால் பற்றுகிறான். “கப்பலொன்று இருந்தது” என்று கதையைத் தொடங்குகிறான். “கையை விடு” என்று விருந்தினன் சொன்னதும் கையை எடுத்துவிட்டு, ஒளிமின்னும் தன் கண்களால் அவனைப் பற்றி நிறுத்துகிறான் அந்தக் கிழவன். விருந்தினன் அசையாமல் நிற்கிறான். மூன்று வயதுக் குழந்தையைப் போலக் கதை கேட்கிறான். மாலுமி அவனை இப்படித் தன் வழிக்குக் கொண்டு வருகிறான். இப்படித்தான் ஒரு நாடகமாக ஆரம்பிக்கிறது அந்த நீண்ட கவிதை:

    He holds him with his skinny hand,boat

    ‘There was a ship,’ quoth he.

    ‘Hold off! unhand me, grey-beard loon!’

    Eftsoons his hand dropt he.

     

    He holds him with his glittering eye—

    The Wedding-Guest stood still,

    And listens like a three years’ child:

    The Mariner hath his will.

    இந்த வரிகள் என் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கின்றன. அந்த மாலுமிக் கிழவனைப் போலவே, சற்றே சிவந்த கண்களாலும், தம் கனத்த குரலாலும் என் தந்தை விஸ்வம் எங்களைக் கட்டிப் போட்டுவிட, நாங்கள் எல்லாரும் அசையாமல் அந்தக் குறுங்காவியம் முழுதும் அமர்ந்து கேட்டோமே, அந்தக் காட்சியும் அப்படியே பசுமையாக நினைவில் தங்கிவிட்டது!

    வேர்ட்ஸ்வொர்த்தின் “மைக்கெல்” என்ற அருமையான கவிதைச் சிறுகதையையும், தாமஸ் க்ரேயின் “எலிஜி வ்ரிட்டன் இன் அ கன்ட்ரி சர்ச்யார்ட்” (ஒரு புறநகர் இடுகாட்டில் எழுதப்பட்ட இரங்கற்பா) என்ற கவிதையையும் என் தந்தை அங்கேதான் படித்தும், நடித்தும் பாடம் நடத்தினார்.

    வொர்ட்ஸ்வொர்த்தின் இரண்டாம் நூற்றாண்டு விழாவைச் சிந்தனைக் கோட்டம் 1970-ஆம் ஆண்டு கொண்டாடியது. அதில் வொர்ட்ஸ்வொர்த் பற்றி நான் ஒரு கவிதை படித்தேன். ஆனால் ஏனோ அந்த நிகழ்ச்சி என் நினைவில் பின்தங்கிவிட்டது. சில நாட்களுக்கு முன்னால் நண்பன் சு.ரவி அதை ஞாபகப் படுத்தியதோடு, தான் பத்திரப் படுத்தி வைத்திருந்த என் கையெழுத்துப் படிவத்தை நகலெடுத்து மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியதும் நான் நெகிழ்ந்து போனேன். அனுமன் கொண்டுவந்த சூடாமணியைக் கண்ட ராகவன் நிலையைக் கவிச்சகரவர்த்தி பாடுகிறானே, அதுபோல் நானும் ஆனேன்:

    பொடித்தன உரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித்ravi

    துடித்தன, மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி;

    மடித்தது, மணி வாய்; ஆவி வருவது போவது ஆகித்

    தடித்தது, மேனி; என்னே, யார் உளர் தன்மை தேர்வார்?

    வொர்ட்ஸ்வொர்த் பற்றி நான் எழுதிய அந்தக் கவிதை இதோ:

    புலமைக் குன்றேறிப் பூரிக்கும் இயற்கையதன்

    வளமைச் செழிப்பினிலே வைத்திழந்த நெஞ்சினனே

    இயற்கை எழிலில் இறைவன் திருவுருவின்

    நயம்தோன்றக் கண்டவனே நற்சிந்தைப் பாவலனே

    ஆங்கிலத்தில் தன்னேரும் அற்றதொரு மாகவியே

    பூங்குமுதப் பொற்றமிழிற் பொங்கும் புலமைக்கோ

    பாரதியை ஒத்தவனே பார்போற்றும் வித்தகனே

    ஓரத்தில் நின்றே மைய ஒளிப்பொருளாய்

    உன்னை உணர்ந்தவனே ஒப்பில்லா உத்தமனே

    சொன்ன கவிதையெலாம் சொட்டும் சுவையமுதே

    இன்னுமுன் ஏற்றத்தை என்னென்று சாற்றிடுவேன்

    சொன்னவையும் சொற்பமடா சொர்க்கக் கவித்திருவே

    நாலைம்ப தாண்டுகளுன் நாவை அழிக்கவிலை

    காலைக் கதிரவன்போல் என்றும் கவியுலகில்

    மாறாப் புதுமையுடன் மாண்பொளியே வீசிடுவாய்

    சீரார் தமிழ்மொழியின் சின்னஞ் சிறுகவிஞன்

    உன்னை வணங்குகிறேன் உண்மைத் திருவிளக்கே

    என்னை அருள்செய்வாய் இன்று

    17 வயதினிலே எழுதியது இந்தக் கவிதை. நினைத்துப் பார்த்து நெகிழாமல் இருக்க முடியுமா? மனோன்மணியின் மெல்லிய விசும்பல் ஒலி. ஆற்றின் சலசலப்பொலி போல, இதமாகச் செவியில் மோதுகிறது!

    “சரிண்ணே! 17 வயது, 20 வயதுண்ணு பேசிக்கிட்டே இருந்தா எப்படி? போன பகுதியிலே நான் கேட்டேனே கேள்வி அதற்கு இன்னும் பதில் வரலியே!” நம்ம புத்தி சிகாமணிதான் கேட்கிறான். அவனுக்கு பதில்சொல்வது போலவே அமைந்த ஒரு கவிதை, 1993-ஆம் ஆண்டில் நானெழுதிய ஒரு கவிதை, இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

    முதுமையின் கனிவை நேசிக்கிறேன் – இருந்தாலும்

    இளமையைத் தான்நான் யாசிக்கிறேன்

    இளமையில் இருந்து முதுமையில் நுழைய

    இருமுறை நானும் யோசிக்கிறேன்

     

    அருவியின் வேகம் அலைகளின் ஆற்றல்

    தென்றலைப் போலெங்கும் செல்லும் சுபாவம்

    உதயத்தின் செம்மை உள்ளத்தில் உண்மை

    இவையனைத் தும்,என் இளமையின் தன்மை

     

    முதுமையின் கனிவை நேசிக்கிறேன்

    இளமையின் கனவை யாசிக்கிறேன்

    இளமையில் இருந்து முதுமையில் நுழைய

    இருமுறை நானும் யோசிக்கிறேன்

     

    மதுச்சுமை யால்மலர் தளர்வதில்லை

    வாடி யுதிர்ந்துபின் வளர்வதில்லை

    புதுச்சுமை யால்நான் தளரவில்லை – என்னை

    நானே சுமப்பதை உணருகிறேன்

     

    எதுவரைக் கும்நான் எனத்தெரி யாமல்

    எதைநான் முதுமை யென்பேன்

    இதுவரை எத்தனை என்றுண ராமல்

    இதைப்போய் இளமை யென்றேன்

     

    முதுமையின் கனிவை நேசிக்கிறேன்

    இளமையின் கனவை யாசிக்கிறேன்

    இளமையில் முதுமை முதுமையில் இளமை

    இரண்டையும் ஒன்றாய் வாசிக்கிறேன்

    aravஅம்பத்தூர் பள்ளியிலே, நள்ளிரவு நேரம் வரை, மொட்டை மாடியில், அங்கே தரையில் பதித்திருந்த சதுரமான கண்ணாடி வழியாக வந்த வெளிச்சத்தில் கவிஞர் முருகுசுந்தரத்தின் கவிதைகளை நான் படிக்க, சிவமும், சு.ரவியும் மற்ற நண்பர்களும் சுற்றிப் படுத்துக் கொண்டு கேட்டு ரசிக்க, ஓ, சொர்க்கமே அதுதானோ என்பதுபோல் சொக்கிக் கிடந்தோம்!

    ஆங்கிலக் கவிஞன் பைரன், இத்தாலியப் பெண், அதுவும் வேறொருவனுக்கு மனைவியாகி விட்ட மங்கை, தெரெஸாவுக்கு எழுதிய கவிதைக் கடிதத்தைத் தமிழ் விருத்த நடையில் முருகுசுந்தரம் அழகாகத் வடித்திருந்த பாடல் இன்னும் நினைவில் இருக்கிறது:

    புதுமொட்டுப் பருவத்தைப் பொன்னிழைத்த தொட்டிலிலே கழித்து விட்டு

    மதுமொட்டுப் பருவத்தை மதக்கன்னி மாடத்தில் கழித்து விட்டு

    பதினெட்டுப் பருவத்தைப் பஞ்சணையில் கழிக்கின்ற படுக்கைப் பூவே

    மதிநட்டுக் கொலுவிருக்கும் கழுத்தழகி நானுன்னை மறப்ப தெங்கே!

    நட்சத்திரக் குவியலுடன் பரந்து, விரிந்து கிடக்கும் வானத்தைப்போல், சொற்குவியல்களால் அலங்கரிக்கப்பட்ட இளநெஞ்சங்களை இணைத்துக் கொண்டு எங்களுக்குள்ளேயே, எங்கள் எல்லாரையும் உள்ளடக்கி, ஒரு கவிதை வானம் விரியக் கண்டோம். எங்களை நாங்களே வியந்து கொண்டோம்.

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 24

    கே.ரவி

    இந்த அளவு எனக்குக் கவிதைவெறி வரக் காரணம் என்ன? அது என்ன விட்ட குறை, தொட்ட குறையோ!

    முன்னொரு பிறவியில் நான் தேரழுந்தூரில் ஒரு புலவன் வீட்டில் கட்டுத்தறியாக முக்கி முனகிக் கொண்டிருந்தேனோ? இல்லை, அதற்கும் முன்பு ஒரு புலவன் தன் முழவுத் தொழிலை விட்டுவிட்டு, உழவுத் தொழிலை மேற்கொண்டதால், புறக்கணிக்கப் பட்ட பறையாக எனக்குள்ளேயே படபடவென்று ஒரு மூலையில் கிடந்து நெஞ்சு துடித்துக் கொண்டிருந்தேனோ? இல்லை, மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலுமாய் ஒருத்தி விட்டெறிந்த ஒற்றைச் சிலம்பிலிருந்து தெறித்துப் பாண்டியன் அரண்மனைத் தரையில் உருண்டோடிய நினைவைச் சுமந்து கொண்டு அவளைச் சொல்லில் வடித்த துறவியின் நெஞ்சில் மாணிக்கப் பரலாய் பதிந்திருந்தேனோ? ஏன், ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்பு, குடக்கூலி கூடக் கொடுக்க முடியாமல் ஒண்டுக் குடித்தனத்தில் ஒண்டிக் கிடந்தும், அண்டங்களையெல்லாம் ஒரே நொடியில் சுற்றிவர ஆவேசக் கவிஞன் செய்துகொண்ட ரதத்தின் ஒரு சக்கரமாகச் சுழன்று கொண்டிருந்தேனோ? யாருக்குத் தெரியும்!

    அவளுக்குத் தெரியும். என்னை ஆக்கி, எனக்குள் ஊழிக் கனல் எழுப்பி, ஊதி ஊதி வளர்த்து அதில் தாண்டவம் ஆடுகிற பிச்சிக்குத் தெரியும். சொல்லுவாளா அவள்? சண்டித்தனம் செய்யும் சாகசக்காரி சொல்லுவாளா? பாட்டுப் பாடிக் கேட்டேனே. சந்தச் சதங்கை ஒலிக்கச் சதா ஆடிக்கொண்டே இருக்கும் அந்த பைரவியைச் சிந்து பைரவி ராகத்தில் பாடிக் கேட்டேனே:

    நீல வானமாய் விரிகிறாய் – என்

    நெஞ்சிலே இசை பொழிகிறாய்

    கால காலமாய் நீயும் நானுமாய்

    ஆடினோம் பல நாடகம் – நாம்

    அணிந்த வேடங்கள் ஆயிரம்

    காளி தாசனின் நாவில் எழுதிய அட்சரம் உனது மந்திரம்

    கம்ப நாடனின் கவியெ லாமுன் காற்ச தங்கையின் நர்த்தனம்

    மேள மாயிடி மின்ன லாயொளி மேடை தந்தனன் பாரதி – அண்டக்

    கோல மாகியே பாடல் யாவையும் கொள்ளை கொண்டனை பைரவி

    நீல வானமாய் விரிகிறாய்

    தத்து வங்களில் ஒளிகிறாய் – தர்க்கம்

    செய்யும் போதுநீ நெளிகிறாய்

    பித்த னாகநான் பேசும் போதுசிறு பிள்ளை யாகவந் தமர்கிறாய்

    சித்தர் பாடலில் சிரிக்கி றாய்ப்பின் ஷெல்லி கவிதையில் ஜொலிக்கிறாய்

    ஷேக்ஸ்பியர் கீட்ஸ் மாயா கெளஸ்கியெனத் தோழர் சூழநீ நடக்கிறாய்

    கால காலமாய் நீயும் நானுமாய்

    ஆடினோம் பல நாடகம் – நாம்

    அணிந்த வேடங்கள் ஆயிரம்

    தாயிலாமலே குழந்தையா – உன்

    தயவிலாமல் ஒரு கவிதையா

    தழலும் தென்றலும் நிழலும் வெய்யிலும்

    கலந்து நிற்பதுன் சாயலே

    நீயி லாமலிதழ் பாடுமா – சுடு

    தீயி லாமல் சுடர் கூடுமா

    சிறிய வன்மனம் திரி யதில்தினம்

    தீபம் ஏற்றுதிரி சூலியே

    சிகாமணி ஏதோ சொல்ல வாயெடுக்கிறான். வார்த்தை வராமல் அவன் வாய் குழறுகிறது. மனோன்மணி எங்கே? ஒரு மின்னல் இழை வான் நடுவே சுழன்று, சுழன்று ஆடிக் கொண்டிருக்கும் அதிசயக் காட்சி மட்டும் தெரிகிறது. ‘அரோரா போரியாலிஸ்’ என்றெல்லாம் கானடா நாட்டில் போய்ப் பார்த்து வியப்பார்களே, அது போல்! அந்த இழையில் கலந்து மனோன்மணியும் ஆடுகிறாளோ?

    இப்படி நான் பாடிக் கேட்டுப் பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அவள் பதில் சொல்லவில்லையே! ஆடிக் கறக்கவோ, பாடிக் கறக்கவோ மாடில்லை அவள். வாசிக்கலாம் என்றால் ஏடில்லை அவள். வசிக்கலாம் என்றால், வீடில்லை அவள். பிறகு யாரவள்?

    புன்னகை யோசின்ன பூவிதழோ – ஒளி

    பொங்கித் ததும்பும் வெண்ணிலவோ

    கண்வழி யேநுழைந்(து) என்னுயிரை – மெல்லக்

    கவர்ந்திழுக் கும்,எழில் காரிகையோ

    காலையி லேதங்கத் தேரினிலே – வரும்

    கனகதுர்க் காபர மேஸ்வரியோ

    மாலையி லேமலர்ச் சோலையென – உரு

    மாறும் மாயா மோகினியோ

    புவியினி லேஉயிர்க் குலம்தழைக்கப் – பசும்

    பாய்விரிக் கும்,அருள் தாய்மடியோ

    வியனுல காய்விதை மூலமுமாய் – நித்தம்

    விரிந்துகொண் டேவரும் விழிச்சுடரோ

    கவிதையி லேசிறு கால்பதித்துக் – கொஞ்சம்

    களிநடம் செய்யும் பேரழகோ

    த்யானத்தி லேயெழும் தழல்வடிவோ – அது

    அவனோ அவளோ வேறெதுவோ

    த்யானத்திலே எழும் தழல்வடிவோ! எனக்கெதிரே, எதிரே இல்லை, உள்ளே, ஆம், எதிரும் புதிருமாய், உள்ளும் புறமுமாய், மூண்டெழுந்து சிரிக்கிறது ஒரு மூலத் தழல்வடிவம். ஒன்றென்றா சொன்னேன்? இரண்டோ, இல்லை இரண்டு போல் தோன்றும் ஒன்றோ? உற்றுப் பார்த்தால் அதற்குள், இல்லை, அதுவாய், நானே தெரிகிறேனா? நானா, இல்லை அவனா, அவளா, அதுவா?

    சிகாமணி ஓரிழையாய், மனோன்மணி மற்றோர் இழையாய் ஒன்றிக் கலந்த அர்த்தநாரியாய், இல்லை, அர்த்த ஆடைகளைக் களைந்து எறிந்துவிட்டு அம்மணமாய் ஆடும் ஆவேசமாய் . . . என்ன குழப்பம்?

    மேலே எத்தனை முறை ‘இல்லை’, ‘இல்லை’ என்று மறுத்துச் சொல்லியிருக்கிறேன் என்று எண்ணிப் பாருங்கள். இந்தத் திண்டாட்டத்தைத்தான் “நேத்தி நேத்தி” என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு ரிஷி கூவினானோ?

    என் மூச்சை ஒரு நிலைக்குக் கொண்டு வருகிறேன்.

    ‘அப்பா, புலம்பாதே. நீ என்னதான் சொல்கிறாய். புரியும் படிச்சொல்.’

    உங்களில் யாரோ கேட்பது என் செவியை எட்டுகிறது. சொல்வதற்கு என்ன இருக்கிறது? சோர்வு மேலிட மெளனத்தில் ஆழ்கிறேன்.

    முதல் தரிசனம், அதாவது, “தெளிவுறவே அறிந்திடுதல்” என்ற பாரதி பாட்டைக் கவிமாமணி தேவநாராயணன் பாடக் கேட்டு நான் உருகினேன் இல்லையா, அதற்குப் பின் என் கவிதையின் போக்கு மாறியது. அப்படிச் சொல்வதைவிட, கவிதை பற்றிய என் நோக்கு மாறியது என்று சொல்வதே மேலும் பொருத்தமாக இருக்கும். நான் கவிதை எழுதுகிறேன் என்ற நினைப்புப் போய், கவிதையே என்மூலம் தன்னை எழுதிக் கொள்வதுபோல் உணரத் தொடங்கினேன். இப்படிச் சொல்வது பகுத்தறிவுக்கு ஒத்து வராததாகத் தோன்றலாம். அந்தச் சமயத்தில்தான் தத்துவக் கதவு திறந்தது.

    unnamed

    புகுமுக வகுப்பு முடிந்து பி.ஏ. சேர வேண்டும். அதிலும் ஒரு போராட்டம். ஒரே சமயத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியிலும், தத்துவத் துறையில் மயிலை விவேகானந்தா கல்லூரியிலும் எனக்கு இடம் கிடைத்தது. நேராக, விவேகானந்தா கல்லூரி தத்துவத் துறைக்குச் சென்று, அப்போது துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் த.ந.கணபதி அவர்களிடம் இந்தப் பிரதாபத்தைப் பற்றி அளந்து விட்டு, இலக்கியத் துறைக் கடிதத்தை அவர் முன்னிலையிலேயே கிழித்து விட்டுத் தத்துவத் துறையில் சேர்ந்தேன். அப்போது நினைத்தேன், சொன்னேனா என்று நினைவு இல்லை, ‘இலக்கியம் எப்படியும் படித்துக் கொள்ள முடியும், அதனால் பி.ஏ. ஃபிலாஸஃபி சேர்வதே சரி.’ என்ன ஆணவம்!

    unnamed (1)அப்புறம்தான் தத்துவ மேதைகளின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த தாலீஸ், ஹிராக்லிட்டோஸ், சோக்ரட்டீஸ், ப்லேடோ, அரிஸ்டாட்டுல் போன்ற சிந்தனையாளர்கள் தொடங்கி, முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த டேகார்ட், ஸ்பினோட்ஸா, லைப்னீட்ஸ், லாக், பார்க்லீ, ஹ்யூம் போன்ற மேலை நாட்டுத் தத்துவ ஞானிகளின் நூல்களைப் படித்தேன். அப்போதுதான் பதினெட்டாம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த இம்மானுவல் கண்ட் என்ற தத்துவ மேதையின் சிந்தனைகள் என்னை ஆட்கொண்டன. ‘தூய அறிவு பற்றிய ஆய்வு’ என்ற தலைப்பில் அவன் ஜெர்மானிய மொழியில் படைத்திருந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ‘க்ரிடிக் ஆஃப் ப்யூர் ரீஸன்’ என்னை மிகவும் பாதித்தது. அந்த நூலைத் தந்து என்னை ஆற்றுப் படுத்திய பேராசிரியர் கணபதிக்கு நான் என்றும் நன்றிக் கடன் பட்டவனாகிறேன். அந்த நூலில் இம்மானுவல் கண்ட் பகுத்தறிவின் எல்லைக் கோடுகளை வரைந்து காட்டியிருந்தான். அந்தக் கோட்டுக்குள் மட்டுமே பகுத்தறிவு செல்லுபடியாகும் என்பதையும், அந்தக் கோட்டுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் உள்ளன என்பதையும் தெளிவாக விளக்கியிருந்தான். “அறிவினால் ஆகுவ துண்டோ” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கேட்ட கேள்வியின் அர்த்தம் அப்போதுதான் எனக்கு விளங்கியது. சங்கரரின் அத்வைதக் கொள்கை என்னை அதற்கு முன்பே ஈர்த்திருந்தாலும், அது வெறும் மாயா வாதமாகவே தோன்றிய தப்பெண்ணத்தை மாற்றி அதன் யதார்த்தத்தை நான் உணரக் கண்ட்டின் நூல்தான் உதவியது.

    இலக்கியத்தை நான் விட்டாலும் அது என்னை விடுவதாகத் தெரியவில்லை. இந்தக் காலக் கட்டத்தில்தான் பாரதியின் பாட்டு மூலம் எனக்கு முதல் தரிசனம் கிடைத்தது. கண்ட் வரைந்து காட்டிய கோட்டை அலட்சியம் செய்துவிட்டு கோட்டுக்கு உள்ளும் புறமும் போய்வரக் கூடிய ஆற்றல் கவிதைக்கு உண்டு என்பதை உணரத் தொடங்கினேன். அந்தப் போக்குவரத்தின் அனுபவத்தில் தத்துவத் தாக்கம் அல்லது தத்துவத் தாகம் இழையோடும் கவிதைகள் வரப்பெற்றேன்.

    சிந்தனைக் கனலில் வெந்துகொண் டிருக்கிறேன்

    (என்) சிந்தனைக் கனலில் (நானே) வெந்துகொண் டிருக்கிறேன்

    முழுதும் எரிந்து முடிந்த பின்னர்

    சாம்பலை எடுத்துச் சலித்துப் பாருங்கள்

    காதல் கிடைக்கும் கவிதைகள் கிடைக்கலாம்

    கருகிப் போன லட்சியங்கள் கண்ணில் படலாம்

    (என்) அஸ்தியைக் கரைக்க ஆறுகள் வேண்டாம்

    என்னைப் போலவே எங்கோ ஒருவன்

    சிந்தனைக் கனலில் வெந்துகொண் டிருப்பான்

    அவனுக் காவது அழது தீருங்கள் – அந்தக்

    கண்ணீர்க் கடலில் கரைந்து போகிறேன்

    இருபது வயது கூட ஆகாத ஒரு வாலிபன் எழுதிய பாடலா இது!

    ஏன், கீட்ஸ் மிக இளம் வயதில் கனமான கவிதைகள் எழுதவில்லையா? ஓ, சிகாமணி வந்து விட்டான், கேள்வி கேட்க. என்ன பதில் சொல்லப் போகிறேன்?

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 23

    கே.ரவி

    1968-ல் என்று நினைக்கிறேன், பங்களூரிலிருந்து என் குடும்ப நண்பர் கரியப்பா என்பவர் சொன்ன யோசனையின்படிச் சிந்தனைக் கோட்டத்தில் கூட்டு வழிபாடு என்ற வாராந்திர பிரார்த்தனைக் கூட்டம் நடத்தும் வழக்கம் தொடங்கியது. அதை, அதன் ஆங்கிலப் பெயரில் ‘மாஸ் ப்ரேயர்’ என்றே அழைத்து வந்தோம். சனிக்கிழமை தோறும் மாலை 6-30 மணிக்கு என் தந்தை விஸ்வம் நடத்தி வந்த வித்யா ஸாகர் பள்ளியில் கூடுவதும், பலவிதமான பக்திப் பாடல்கள் பாடுவதுமாக அந்த நிகழ்ச்சி அமைந்தது.

    முதலில் நான் எழுதிய ஒரு வெண்பாவுடன் தொடங்கும். பிறகு கவியோகி சுத்தானந்த பாரதியாரின் சர்வ மத சமரசப் பாடல் ஒன்றைப் பாடுவோம்:

    வெண்பா

    ஒற்றுமை ஓங்கிட உள்ளிருள் நீங்கிட

    நற்றவம் நாளும் நனிசிறக்கக் – கற்றவர்க்

    கண்வாழும் நாதனே காப்பென்று பற்றினோம்

    பண்வாழும் நின்றன் பதம்

    சுத்தானந்த பாரதியாரின் பாடல்

    எல்லோரும் வாருங்கள் எல்லோரும் சேருங்கள்

    ஈசனை அன்புசெய்வோம்

    எல்லோரும் பாடுங்கள் எல்லோரும் ஆடுங்கள்

    இன்பமே நமதுதெய்வம்

    அல்லா பரமபிதா ஹரிஹர ப்ரும்ம மென்றும்

    அம்மையப் பாவென்றும்

    சொல்லில் அடங்கா ஜோதியைப் பாடிச்

    சுகித்திருப் போம்வாரீர்

    பிறகு “பார்த்தாய ப்ரதி போதிதாம்” என்று தொடங்கும் பகவத் கீதையின் பாராயண ஸ்லோகம் சொல்லி விட்டு அதன் பிறகு ஒவ்வொருவரும் அவரவர் கொண்டு வந்திருக்கும் பாடலைப் பாடச் சுமார் அரை மணி நேரத்தில் கூட்டு வழிபாடு நிறைவு பெறும். ஆவலுடன் அதுவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொங்கல், சுண்டல் போன்ற எதோ ஒன்றை அருந்தி விட்டுக் கலைந்து செல்வோம்.

    இந்தக் கூட்டு வழிபாட்டில் பாடப்பட்ட பல பாடல்கள் தமிழ் இலக்கிய வராற்றில் நிச்சயமாக இடம்பெறப் போகும் பாடல்கள் என்பது என் நம்பிக்கை. அது சோதிடம் இல்லை சாமி! நான் சோதித்துச் சொல்லும் உண்மை. ஏற்கனவே, இந்தக் கூட்டு வழிபாட்டில் சுகி சிவம் இயற்றிப் பாடிய பாடல்களில் இருந்து சில வரிகளை இத்தொடரின் முந்தைய பகுதிகளில் சுட்டிக் காட்டி விட்டேன். அதில் ஒரு பாட்டில் வரும் இரண்டு பத்திகளை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். தேவி கருமாரி மீதான பாடல் அது:

    என்கண் கனிச்சாறே நெய்வேதனம் – எந்தன்

    பாடல்களில் உந்தன் நீராடனம்

    என்னுள்ளம் தானுந்தன் அரிவாகனம் – ம்!

    ஆகட்டும் உடனேயுன் ஆரோகணம்

    நகர்கின்ற போதெல்லாம் ரதவுத்ஸவம் – நீரில்

    நனைகின்ற போதெல்லாம் தெப்போத்ஸவம்

    பகர்கின்ற வாக்கெல்லாம் நின்பாசுரம் – உன்னைப்

    பாராட்டிச் செய்கின்ற அஷ்டோத்திரம்

    முதலில் இந்த வரிகளின் சொல்வளத்தில், ஓசைச்சிறப்பில் சொக்கி நிற்கும் மனோன்மணியைப் பார்க்கிறேன். அருகில் இருக்கும் புத்தி சிகாமணி புன்னகை பூக்கிறான். அவன் புன்னகையின் அர்த்தம் எனக்குப் புரிந்து விட்டது. ‘என்கிட்ட வந்து உட்கார்ந்து பாடம் கேட்க வேண்டும் ஓய்’ என்பது போல் ஒரு கர்வப் புன்னகை அது. சரி, கேட்டு வைப்போமே! அவன் சொல்கிறான்:

    “முதலில், தன்னிலிருந்து வேறாகத் தனக்கு வெளியில் அன்னையைப் பார்க்கிறான் பக்தன். தன் பரவசக் கண்ணீர்த் துளிகளை எடுத்தே அவளுக்கு நெய்வேதனமாகப் படைக்கிறான். தன் பாடல்களில் அவளை நீராட்டுகிறான். தன் உள்ளத்திலேயே அவள் அரோகணித்து எழுந்தருள வேண்டும் என்று வேண்டுகிறான்”

    மனோன்மணி இடைமறித்துப் பேசுகிறாள்:

    “ஆனால் எவ்வளவு கம்பீரமாக வேண்டுகிறான்! அந்த ஒற்றைச் சொல், “ம்” இருக்கிறதே, அது இடம் நிரப்பும் வெற்றுச் சொல் இல்லையப்பா. மற்றைச் சொற்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு முன்னிற்கும் வெற்றிச் சொல்.”

    சிகாமணி தொடர்கிறான்:

    “சபாஷ் மனோன்மணி, என் சகவாசத்தால் நீயும் இப்படிப் பேசக் கற்றுக் கொண்டு விட்டாய். சரி, என்ன சொல்லிக் கொண்டிருந்தேன், ஆம், ஆரோகணம். கருமாரி அன்னை பக்தனின் உள்ளத்தில் ஆரோகணித்ததும் என்ன ஆச்சு தெரியுமோ? பக்தன் நகர்கின்ற போதெல்லாம் அவளுக்கு ரதவுத்ஸவம், அவன் நீரில் நனைகின்ற போதெல்லாம் தெப்போத்ஸவம். குளிக்கும் போதெல்லாம் என்று கொச்சைப் படுத்தாமல், நீரில் நனைகின்ற போதெல்லாம் என்று போட்டான் பாருங்காணும், அதுக்குத்தான் துட்டு! ஆம், அவன் மழையில் நனையும் போது கூடன்னு அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். முதலில் அன்னையை முன்னிலைப் படுத்திப் பாடிய சிவம் அவளைத் தன்னிலைப் படுத்திப் பார்க்கும் அபூர்வ தரிசனத்தை விவரிக்கும் பாடலுக்கு இலக்கிய வரலாற்றில் இடம் கிடைக்காமல் போகுமா? மனோன்மணி விட்டு விடுவாளா? எப்படியும் சங்கப் பலகையை வரவழைத்து விடுவாள்.”

    மனோன்மணி உரக்கப் பாடுகிறாள்:

    வேண்டுமடி உன்னுடைய பாத நீழலே – தாயே

    வேண்டுமடி உன்னுடைய பாத நீழலே

    என்ன, சாமி வந்தது போல் மனோன்மணி ஆவேசமாகப் பாடுகிறாள்? ஓ, அது நண்பன் சு.ரவியின் பாட்டு. அவன், அதாவது, சு.ரவி; இந்த ‘அவர், இவர்’ மரியாதையைத் தவிர்த்து விடுகிறேன். அது கருத்தோட்டத்துக்குத் தடையாகிவிடும். அவன் அப்படித்தான் பாடுவான். பாரதியின் “வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா” என்ற சந்தத்திலேயே அமைந்த அந்தப் பாடலைத் தொடர்ந்து பாடுகிறாள் மனோன்மணி:

    வெய்ய காம னெஞ்சிடாது வீழ வைத்தவன்br

    துய்ய மாமணிப் புறத்துச் சோதியானவன்

    அஞ்சும் அமரர் நெஞ்சு குளிர

    நஞ்சு கொண்ட கண்ட னங்குக்

    கொஞ்சு கின்ற போதில் உன்னை

    தஞ்சம் என்ற டைந்து விட்டோம்

    வேண்டுமடி உன்னுடைய பாத நீழலே

    சிகாமணி எதுவும் பேசவில்லை. ஒரு கனத்த மெளனம் சூழ்ந்து கொள்கிறது. அந்தச் சொற்களின் சந்தச் சுவையில், சொற்சதங்கையின் ‘கலீர் கலீர்’ நாதத்தில் லயித்து விட்ட பரவச மெளனம் அது!

    வெய்ய காமன் நெஞ்சிடாது என்று படிப்பதா, இல்லை, எஞ்சிடாது என்று படிப்பதா? நஞ்சுண்டதால் சிவனின் கண்டம் சூடேறியதும், அமரர் நெஞ்சு குளிர்ந்தனர் என்ற முரண்பாட்டை ரசிப்பதா? அன்னையாக நீ தனித்திருக்கும் போது வராமல், அம்மையப்பனாக நீங்கள் சேர்ந்திருக்கும் தருணம் பார்த்துத் தஞ்சம் என்று வந்து விட்டோம், ஆட்கொள்வதைத் தவிர உமக்கு வேறு வழியில்லை என்று சொல்லாமல் சொல்லும் நயத்தை வியப்பதா?

    கேள்விகள் சிகாமணியின் தொண்டை வரை வந்துன. மனோன்மணி ஒரு பிடிபிடித்ததால் அவை அங்கேயே தங்கி விட, விடம் உண்ட கண்டனைப் போல் சிகாமணி, கேள்விக் கணைகள் தொன்டையிலேயே சிக்குண்ட கண்டனாகப் பேச்சிழந்து நின்றிருக்கிறான். பாவம்!

    சிந்தனைக் கோட்டம் செயலிழந்த பிறகும் மாஸ் ப்ரேயர் தொடர்ந்து சில ஆண்டுகள் நடந்தது. நடக்கும் இடங்கள் அவ்வப்போது மாறிக் கொண்டிருந்தன. அது நின்று போன பிறகு இரண்டு, மூன்று முறை அதை மீண்டும் தொடர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டும், நாளடைவில் அது நின்று விட்டது.

    “மோகத்தைக் கொன்று விடு அல்லாலென்றன் மூச்சை நிறுத்தி விடு” என்ற பாரதி பாடல் நண்பன் அ.பாபுவின் குரலில் ஒலித்ததையும், நண்பன் ரமணன், சிவகுமார் போன்றவர்கள் பாடிய பாடல்களையும் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம், ‘ஓ அந்த இனிய நாட்கள்!’ என்றுதான் பெருமூச்சு விடத் தோன்றுகிறது.

    தெய்வ பக்தியற்ற வரட்டுச் சித்தாந்த வாதியாக இருந்த என்னை மெல்ல மெல்லப் பக்குவப் படுத்தி, உருகச் செய்து, பக்தி மார்கத்தின் மகோன்னதத்தை உணரச் செய்த கூட்டு வழிபாட்டுப் பாடல்கள் என்றும் என் நெஞ்சை விட்டகலாதவை. நானும் உருகி, உருகிப் பாடத் தொடங்கினேன்:

    ராம மணி மந்த்ரம் ஶ்ரீ ராகவ முகுந்தம்

    ரட்சகம் அளிக்கின்ற தேவாம்ருதம்

    விழிகள் அரவிந்தம் அதில் கருணை மகரந்தம்

    விதிகதி கலங்க வரும் கோதண்டம் – கொடும்

    விதிகதி கலங்க வரும் கோதண்டம்

    எழில்மிகு வசந்தம் என் கவிதை ப்ரபந்தம் – நீ

    எழுந்தருளி வைகுமொரு வைகுந்தம்

    ராம மணி மந்த்ரம் ஶ்ரீ ராகவ முகுந்தம்

    தோளழகு கண்டு விழி தோற்ற கதையுண்டு – உன்

    தோளழகு கண்டு விழி தோற்ற கதையுண்டு – நீ

    தொட்டவுடனே சிவன்வில் இற்றதன்று – உன்

    காலடியிலே கல்லும் உயிர்த்ததென்றால் – கண்

    நீர்த்துளிகளும் கவிதை யாவதுண்டு – என்கண்

    ணீர்த்துளிகளும் கவிதை யாவதுண்டு

    ராம மணி மந்த்ரம் ஶ்ரீ ராகவ முகுந்தம்

    “ஏம்பா, உன் கவிதையே வைகுந்தமா, உன் கண்ணீர்த் துளிகளும் கவிதை ஆகணுமா? என்னப்பா, காதல்னாலும் கவிதை, கடவுள்னாலும் கவிதை, உனக்கு எல்லாமே கவிதைதானா?” கேட்டானே ஒரு கேள்வி, புத்தி சிகாமணி.

    வாயடைத்துப்போய் நின்று விட்டேன். மனோன்மணி மட்டும் மெல்லச் சிணுங்குகிறாள் . . . .!

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 22

    கே.ரவி

    1980-ஆம் ஆண்டு, ஒருநாள் மாலை, தொலைக்காட்சியில் (அப்பொழுதெல்லாம் ஒரே சேனல் ‘தூர்தர்ஷன்’ மட்டுமே) ஒரு கவியரங்கம். கவிஞர் கண்ணதாசன் தலைமையில் கல்லூரி மாணவர்கள் கவிதை படித்தனர். கவிதை படித்த எல்லாக் கவிஞர்களுமே பாரதியைக் குறிப்பிடத் தவறவில்லை. கவிஞர் கண்ணதாசனும் பாரதி பற்றிய உணர்வை அவருக்கே உரிய பாணியில் பகிர்ந்து கொண்டார்.

    பாரதி பற்றி நிறைய கவிதைகள் கேட்டிருக்கிறேன். அதிலும் உணர்ச்சி பூர்வமான அற்புதக் கவிதைகள் நிறையவே கேட்டிருக்கிறேன். அன்று அந்தக் கவியரங்கில் படிக்கப் பட்ட கவிதைகள் மிகச்சிறப்பாக இருந்தன என்று சொல்ல முடியாவிட்டாலும், அக்கவியரங்கம் முழுதும் பாரதியின் உணர்ச்சிப் பெருக்கு, நீறு பூத்த நெருப்புப் போல இழையோடியிருந்தது. அன்று படிக்கப்பட்ட கவிதை வரிகளைக் காட்டிலும், அவை நினைவு படுத்திய பாரதியின் வரிகளிலும், அவன் வாழ்க்கையில் சந்தித்த சோதனைக் களங்களிலும் என் மனம் தோய்ந்து விட்டது. என்னை அறியாமல் அந்தக் கவிதைகளின் நடுவிலிருந்து முண்டாசுக் கவிஞன் முளைத்தெழுந்து என் மனத்திரையை ஆக்கிரமித்துக் கொண்டான். ஓர் உத்வேகத்தோடு என் உள்ளத்திலிருந்து சில கவிதை வரிகள் ஊற்றெடுத்து வந்தன. வந்த வரிகளை எழுதி வைத்துவிட்டுப் படித்துக் கூடப் பார்க்காமல் காத்திருந்தேன்.

    shobaஷோபனா செய்தி படித்து முடித்துவிட்டு வந்து வீட்டுக்குள் நுழைந்ததும், பரபரப்பாக அவளிடம் அந்தக் கவிதையைப் படித்துக் காட்ட முயன்று, படிக்க முடியாமல் குரல் தழுதழுக்க, நான் அழ, ஷோபனாவும் அழச் சற்று நேரம் ஒரே உணர்ச்சி மயமாகக் கழிந்தது. அதை அழுகை என்று சொல்வதா, உள்ளத்தின் ஆழத்திலிருந்து பீறிட்டெழுந்து வந்த உணர்ச்சிப் பிரவாகம் என்று சொல்வதா?

    இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு பாரதி கலைக்கழகத்தில், ஹா.கி.வாலம் அம்மையார் நினைவுக் கவியரங்கத்தில் அந்தக் கவிதையைப் படிக்கத் துணிந்தேன். படித்து முடிக்கும் போது மீண்டும் தொண்டையடைக்கக் கண்ணீர் பெருக்கினேன்.

    அந்தக் கவிதை:

    அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

    புதைமண லில்சில விதைகள் தூவப் புறப்பட்டானே

    போகும் வழியில் எல்லாம் நெஞ்சு மிதிபட்டானே

    அதையும் மீறிச் சென்றே கனவுப் பயிர் வைத்தானே

    அதற்குத் தன்னை ஆகுதி யாக்கி உயிர்விட் டானே

    அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

     

    கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே

    காட்டு வெளியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே

    தேடிச் சென்ற திசையெல் லாம்பெருந் தீ வளர்த்தானே

    தேகம் எடுத்தத னாலே அவனும் தேய்ந்து விட்டானே

    அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

     

    கனவுக் கொடிகள் காற்றில் ஆடும் காட்சி தெரிகிறது

    காட்டு வெளியில் எல்லாம் பாடல் காவல் இருக்கிறது

    தினமும் இங்கே தெய்வ நெருப்பு நெஞ்சில் உதிக்கிறது

    தேய்ந்து போகும் தேகங் களுக்குத் தெம்பு கொடுக்கிறது

    நட்சத்திரங்கள் மண்ணில் விழக்கூடாதா

    இந்தக் கவிதையைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் நண்பன் சுகி சிவம் சொன்ன போது, பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களெல்லாம் அதை மிகவும் ரசித்ததாக அவனே சொல்லக் கேட்டு நெகிழ்ந்தேன்.

    இந்தக் கவிதையில் அப்படி என்ன இருக்கிறது என்று இதுவரை சிகாமணி செய்த ஆராய்ச்சியில் அவனுக்கு எதுவுமே அகப்படவில்லை. ஆனால், மனோன்மணிக்குத் தெரியும், பின்னணி உணர்ச்சியாக, கனமாக, அதில் பொதிந்திருக்கும் சுமை என்ன என்று. கவிதைச் சுவையா, கவிதைச் சுமையா? பட்டிமன்றம் போல் சிகாமணி கேலியாகக் கேட்ட கேள்விகளை அவள் பொருட்படுத்தவே இல்லை. அது சுவையின் சுமை, சுமையின் சுவை.

    sardarஒருநாள் தொலைபேசியில் சர்தார் சிங் என்ற கவிஞர் என்னைக் கேட்டார்: யாரும் அழுவதை பாரதி விரும்ப மாட்டான். அவனை நினைத்தாலே வீரம்தான் பொங்கியெழும், அழுகை வராது. பின் ஏன் நீங்கள் அவனுக்காக அழச்சொல்கிறீர்கள்?”

    நான் அவரை மறுத்து எதுவும் பேசவில்லை. அவர் சொன்னது முற்றிலும் சரியென்றே தோன்றியது. அறிவு பூர்வமாக நிறுவவே முடியாத இரண்டு விஷயங்கள், கடவுளும், கவிதையும். அந்த முயற்சியில் ஈடுபடுவது வியர்த்தம்தம்தான்.

    சென்ற பகுதியில், பாரதியின் பாடல் ஒன்றை அமரர் தேவநாராயணன் பாடக் கேட்டு, “என் கண்கள் கலுழ்ந்தன” என்று நான் எழுதியிருந்ததைப் படித்து விட்டுக் ‘கலுழ்ந்தன’ என்ற சொல் கடினமான புலமைச் சொல்லாக இருக்கிறதே, அதை எளிய சொல்லாக மாற்றக் கூடாதா என்று ஷோபனா கேட்டாள்.

    அவள் கேட்டு நான் எதைச் செய்யாமல் இருந்திருக்கிறேன்? உடனே, ‘கலங்கின’ என்று திருத்தி எழுதினேன். ஆனால், மறுநாளே நண்பன் சு.ரவி ‘வல்லமை’ மின்னிதழில் எழுதிய ஒரு கட்டுரை மீண்டும் அந்தச் சொல்லைக் ‘கலுழ்ந்தன’ என்று பழையபடித் திருத்தம் செய்ய என்னைத் தூண்டியது. சு.ரவியின் கட்டுரை மிகவும் சூடாகவே இருந்தது:

    நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை. பிறந்ததற்காக அழுதால் பயனேதும் இல்லை. கண்ணீர்மன அழுத்தத்தைக் கரைக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதை.

    அது உன் திறமையையும் தன்னம்பிக்கையையும் தகர்த்து விடுகிறது. அழுகை ஆன்மாவைப்புனிதமாக்குகிறது என்பது வேலையற்றவரின் வெட்டி வேதாந்தம்.

    அழுவது வேறு; கண்கள் கலுழ்வது வேறு. உருகிக் கரைவதைக் கூடப் பெரிய புலவர்கள் ‘அழுகை’ என்றே குறிப்பிட்டிருந்தாலும், அந்தச் சொல், சு.ரவி சொல்வது போல் இயலாமையையும், துயர் மிகுதியையும் குறிக்கக் கூடும் என்பதால், ‘கலுழ்தல்’ என்ற சொல்லே பொருத்தம் என்று முடிவு செய்தேன்.

    நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருகச் செய்யும் சரணாகதி நிலைதானே ஆன்மிகப் பாதையில் அடிப்படை உந்து சக்தி! அதுதானே “நாமார்க்கும் குடியல்லோம்” என்ற துணிவோடு, கடவுளாகிய “கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்மலர்ச் சேவடியே” குறுகி நிற்கும் பணிவையும் அப்பரடிகளுக்குத் தந்தது! அதுதானே, “பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்” என்று முழங்கிய பாரதியை, “பரிபூரணர்க்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று நெகிழ்ந்துருகச் செய்தது!

    இமைகள் நனைந்தேன் இதய புரீஸ்வரா

    என்று நெக்குநெக்குருகி சபரிகிரீசனைப் பாடிய நண்பன் சு.ரவி, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் பரமானந்த நிலையை மறுக்கவோ, வெறுக்கவோ முடியுமா?

    தொலைக்காட்சியில் கண்ணதாசன் தலைமையில் ஒளிபரப்பாகிய கவியரங்கம் எனக்குள் ஏற்படுத்திய அனுபவத்தை நான் மறுப்பதற்கோ, மறப்பதற்கோ இல்லை.

    கவிதைக்குத் தெரியுமா எது சரி, எது தவறென்று? ஆனால் கவிதையில், அதன் த்வனியில் மூழ்கினால், மூழ்கினால் . . . !

    ‘மூழ்கினால் மூச்சிழந்து மரணமடைய நேரிடும்’ என்று சிரித்தான் சிகாமணி. மூச்சிழந்தபின் முத்து மண்டபம் காத்திருக்கும் என்று சொன்னால் அவனுக்குப் புரியாது. கவிதையாகவே சொன்னேனே, 1979-ல்:

    தடம் புரண்டன சொற்கள்

    தவிக்க வைத்தது தாகம் – இருட்டில்

    தடவிக் கொண்டே நடந்து செல்லும்

    குருட்டு மனத்தின் குமுறல்

    நடுங்க வைக்கும் நள்ளிர வைப்போல்

    நகர மறுக்கும் தனிமை

    ஓவென் றலறி உதவக் கூட

    நாவின்றி நின்ற வேளை

    உருவற்ற மேகத்தில் ஒருகோடி மின்னல்

    உருவான தோகவிதை ஓசைப் பிரவாகம்

    உடைகின்ற மெளனத்தை அடைகாத்த நெஞ்சம்

    உயிர்க்கின்ற பயிர்க்கென்(று) உதிர்க்கின்ற முத்தெல்லாம்

    சரித்திரக் கடலில் சங்கம மாகும்

    சான்று தேவை யென்றால்

    மூழ்க வேண்டும்

    மூச்சிழந்த பின்னே

    முத்து மண்டபம் காத்தி ருக்குமே

    baba1கவிதை ஒரு வாசல், அனுபவ வாசல். அதைத் திறந்து கொண்டு உள்ளே நுழையத் துணிந்தால், அது உதித்த அதே அனுபவக் களத்துக்கு, அதற்குள் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் அதே அனுபவக் களத்துக்குச் செல்ல முடியும் என்று நான் சொல்வதை விட என்றாவது ஒருநாள் கவிஞர் சர்தார் சிங் சொல்வார் என்று காத்திருக்கிறேன்.

    ஷீர்டி சாய்பாபாவை நினைந்துருகி ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் பாடிய பாடலொன்றை மெல்லிய குரலில் மனோன்மணி இப்போது பாடுகிறாளே!

    அழுதழுது வரண்ட கண்கள் – உன்னைbaba

    அழைத்தழைத்து வாடும் நெஞ்சம்

    தொழுவதற்கும் வலுவிழந்த கைகள் – நீ

    தோன்றிவிடு என்னெதிரில் கொஞ்சம்

    நிழல்கொடுக்கும் தூயவொளி நீயே

    நேரில்வரும் தெய்வமிங்கு நீயே

    உழல்கின்ற மனமாயை தீர – வந்(து)

    உதிக்கின்ற தழலேயென் தாயே

    ஶ்ரீ சாயிராம் ஜெய் சாயிராம்

    சீரடிக் கமல க்ருபா சாயிராம்

    . . . . . . .

    சிந்தனைக் கோட்டத்தின் “கூட்டுவழி பாடு” என்ற வாராந்திரப் பிரார்த்தனைக் கூட்டங்கள் ஒரு சிறிய நண்பர் குழுவைக் கட்டிப் போட்டு வைத்திருந்த பொற்காலம் என் நெஞ்சத் திரையில் நிழலாடுகிறது.

    ஓ அந்த இனிய நாட்கள் . . . .!

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் பகுதி – 21

    கே. ரவி

    ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் அருட்செல்வர் திரு.நா.மகாலிங்கம் அவர்கள் நடத்தி வரும் வள்ளலார்-காந்தியடிகள் விழாவில் ஒருநாள், 1970 என்று நினைக்கிறேன், கவிஞர் தேவநாராயணன் இறைவணக்கம் பாடினார். அவர் பாடிய பாடல், பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வரும் கலைமகள் துதி.

    தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்

    சிந்திப் பார்க்கே

    களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல

    காட்டல் கண்ணீர்த்

    துளிவரவுள் ளுருக்குதலிங் கிவையெல்லாம் நீயருளும்

    தொழில்க ளன்றோ

    ஒளிவளரும் தமிழ்வாணீ அடியனேற் கிவையனைத்தும்

    உதவு வாயே

    அவர் பாடும் போது ஏனோ தெரியவில்லை என் கண்கள் கலுழ்ந்தன. என்னைச் சுற்றி நிறைய பேர் இருந்தனர் என்பதை மறந்து நான் கண்ணீர் சொரிந்து நின்றது எனக்கே அதிசயமாய் இருந்தது. அது என்னை மீறி நடந்த செயல். காரணம் புரியவில்லை. என் அகங்காரத்தை ஊடுருவிச் சென்று உயிர்நிலையை அளாவிப் பிசைந்து, சுற்றம் மறக்கச் செய்து, ஏன், என்னையே நான் மறக்கச் செய்த அந்தப் பாட்டு வரிகளை எண்ணி எண்ணி வியந்தேன். ‘மெய்மறத்தல்’ என்பதை எனக்கு நிதர்சனமாக உணர்த்தியது அந்தப் பாடல். உருக்கம் விளைவிக்கும் ஆற்றல் கவிதைக்கு உண்டு என்பதை உணர்ந்து கொண்டேன். “அழுதால் உன்னைப் பெறலாமே” என்ற அரற்றலின் பொருள் புரியத் தொடங்கியது. இதுவே மெய்யான தரிசனம் என்று குதிக்கத் தொடங்கினாள் மனோன்மணி.

    சிகாமணியோ தன் வேலையைக் கச்சிதமாகச் செய்யத் தொடங்கினான்.

    “நமக்கு என்ன தெரியும் என்பதில் தெளிவு வேண்டும். அதைப் பிறர்க்குச் சொல்ல முயலும் போதும் தெளிவாகச் சொல்ல வேண்டும். சிந்திப்பார்க்கே களிபெருகுமாறு அவர்கள் உள்ளங்களில் ஆனந்தக் கனவுகள் பல காட்ட வேண்டும். கேட்போர் மனமுருக வைத்து, அவர்களறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கச் செய்ய வேண்டும். ஈதனைத்தும் உன் அருளால் மட்டுமே கிடைக்கக் கூடியவை. இவை அனைத்தையும் எனக்கு நீ அருள வேண்டும். இவ்வாறு தன்னுள் தமிழ்க் கவிதைகள் ஊற்றெடுக்கும் சுடராக விளங்கும் கலைமகளை பாரதி வேண்டுகிறான்.”

    இப்படி ஒரு நீண்ட வியாக்யானப் பிரசங்கம் செய்தான் சிகாமணி. உண்மைதான், கவிஞனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவள் கலைவாணி. அந்தப் பாட்டை நான் கேட்கும் போதே, என் உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டி, என்னையறியாமல் கண்ணீர் பெருகும் உருக்கத்தை விளைவித்தவள் அந்த ஸ்வேத பத்மாஸனி தானே!

    மனோன்மணி அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆனந்தக் கூத்தாடினாள். ஆனந்தக் கனவு பல காட்டுவதும், கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குவதும் ஆகிய இரண்டு தொழிலையும் ஒரே சமயத்தில் நடைபெறச் செய்யும் அதிசயத்தில் திளைத்துப் பரவசம் அடைகிறாள். தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் . . .!

    அர்த்தம் முழுதாகப் புரியாத போதும் வானொலியில் “ஓ துனியா கே ரக்குவாலே”, “ஓ ரே தால் மிலே நதீகி ஜல் மே” போன்ற ஹிந்தி பாடல்களைக் கேட்டு உருகிக் கண்பனித்திருக்கிறேன். அது த்வனியின் சிறப்பு. த்வனி என்ற தென்றல் வீசும் போது தலையசைக்கும் நாணல்தானே அர்த்தம்! கவிதையின் ஊற்றுக்கண் எங்கே என்பதை ஒருவாறு புரிந்து கொண்டேன்.

    என் கவிதைப் பயணத்தில் இரண்டு திருப்புமுனைகள்: பாரதி கலைக்கழகமாகிய அடியார்கள் திருக்கூட்டத்தில் நான் சேர்ந்தது ஒன்று; பாரதியின் விஸ்வரூப தரிசன அனுபவம் நேர்ந்தது மற்றொன்று. இரண்டுக்குமே கவிமாமணி தேவநாராயணன் காரணமானார்.

    ஆயிரம் மேதைகள் பிறந்திடலாம் – அதில்

    ஒருவந்தான் கவியம்மா – அந்த

    ஒருகவிஞன் சொல்லும் ஒவ்வொரு கவியும்

    உன்னருட் துளியம்மா – அதற்கிவ்

    வுலகம் விலையம்மா

    இப்படி மனம் நெகிழச் செய்யும் கவிதைகள் பல எழுதியவர் தேவநாராயணன். படிப்போர் நெஞ்சில் நம்பிக்கைச் சுடரேற்றும் வரிகளையும் வாரி வழங்கியவர் அவர்:

    உழைக்கத் தெரிந்த என்னை உலகம்deva

    ஒருநாள் உணருமடா

    ஒவ்வொரு கல்லாய் அடுக்கி வைத்தே – என்

    மாளிகை உயருமடா

    எப்பொழுதும் என் மனத்தின் ஒரு மூலைல் ஒலித்துக் கொண்டே இருக்கும் அவர் பாடல்:

    பாரதியே ஒரு பாரதம் – அவன்

    பாட்டெல்லாம் தமிழ் மாருதம்

    பாரத மண்ணின் காவிய வளம்தான்

    பாரதி தோன்றக் காரணம்

    அந்தப் பாட்டில் வரும் ஒரு வரி:

    ஏட்டில் எழுத்தில் இனிவரப் போகும் எழுச்சிகள் எல்லாம் பாரதி

    இந்தச் சத்தியப் பிரகடனத்தைச் செய்த அவருக்கு வெறும் சொற்களில் நான் புகழஞ்சலி செய்வதைக் காட்டிலும், அவர் அமரரானதும் அவருக்கு நண்பர் வ.வே.சு. சூட்டிய அற்புதமான கவிதைப் பாமாலையை நினைவு கூர்வதே பொருத்தம்:

    யுகமொன்று மறைந்ததைப்போல் உணர்வளித்துச் சென்றுவிட்டாய்;

    சகமீதோர் வெற்றிடத்தை சாட்சியெனத் தந்துவிட்டாய்;

    எங்கிருந்து வந்தாய்நீ; இன்றெங்கே சென்றுவிட்டாய்?

    தங்கிய காலமெல்லாம் தமிழிசைத்தே வாழ்ந்திருந்தாய்;

    கலைக்கழகக் கவியரங்கில் கணீரென்று நீபாடத்

    தலையசைத்து இரசிக்காதோர் தமிழறியாச் செவிடரன்றோ!

    பல்லவிகள் நீபாடப் பல்லக்காய் எம்செவிகள்

    அள்ளிச் சுமந்து ஆடியதை மறப்போமோ?

    உள்ளும் புறமும் வெள்ளையென வந்திடுவாய்;

    கள்ளமிலா நெஞ்சோடு கவிக்கணைகள் வீசிடுவாய்;

    பொய்ம்மைக்கு எதிரிநீ; புன்மைக்கு எதிரிநீ;

    இன்மைக்கு எதிரிநீ; இயலாமைக்கு எதிரிநீ.

    கடிவாளம் போடாத கவிதைப் புரவிகட்கும்

    பிடிதாளம் எனச்சொல்லிப் பின்னலிசை போட்டவன்நீ!

    உன் கவிதைகள் –

    உலாவரும் இடம்தான் உதடுகளே யன்றி

    உதிக்கின்ற இடமென்றும் உள்ளிருக்கும் இதயமன்றோ!

    பாடம் நாக நந்தியார் எடுக்கப்

    பாத்திரங்கள் நீ துலக்க

    நாடகம் நடத்தியதை யாமின்றும் மறப்போமோ!

    சகுனியென நீவந்து சபைகண்ட அழகெல்லாம்

    பகரவொணாப் பரவசந்தான் மாமனே மறப்போமோ!

    தேசமொழியில் வந்த தெய்வத் திருக்கதையை

    பாசமொழி நம்தமிழில் பேசவைத்துப் பார்த்தவனே!

    வண்ணத் திரையதனில் கண்ணனை ஆடவைத்தாய்;

    எண்ணத்தில் உயர்ந்ததனால் எங்கும் உயர்ந்து நின்றாய்;

    மண்வளத்தால் பிறந்தவன்நம் மாகவிஞன் என்றுரைத்தாய்;

    மண்ணுக்கு வளம்சேர்த்து மனதில் நிறைந்துவிட்டாய்.

    உனையிழந்த வருத்தம் எமக்குண்டு; உனக்கில்லை.

    வினைமுடிந்த நண்பர்களின் விருந்தாகச் செல்வதனால்;

    இளங்கார் வண்ணன்முதல் நாகநந்தி, நாசீ.வ.

    வளஞ்சார் வ.சா.ப., ரா.பு.த. என்று பலர்

    வரவேற்கக் காத்துள்ளார் வாயிற் படிகளிலே!

    ஞாலம் தந்த உறவா நம்முறவு இல்லையில்லை

    காலம்தந்த வரவு நம் கவிஞர்களின் உறவு;

    காலம் பிரிக்கும்; காலமே இணையவைக்கும்;

    காலம் பெரிது நம் களம்சிறிது; விடைபெறுவேன்

    எனக்குக் கவிதா தேவியின் தரிசனத்தை முதன்முதலாகக் காட்டிய தேவநாராயணனை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். அந்த தரிசனத்தில் விசுவரூபம் காட்டிய பாரதியே கீதாச்சாரியனாகிய கண்ணன். எவ்வளவு சொன்னாலும் தெளிவுபெறாத நானே பார்த்தன்.

    அடுத்த தரிசனம் நான்பெறக் காரணமானவர் கண்ணதாசன். அதைப் பற்றி அடுத்த சந்திப்பில் சொல்கிறேன்.

    Share
  • காற்று வாங்கப் போனேன் பகுதி 20

    கே.ரவி

    கவிதை எழுதத் தொடங்கிய சில மாதங்களிலேயே காவியங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை என்னைப் பற்றிக் கொண்டது. முதல் முயற்சியாக, சாம்ராட் அசோகனின் மனமாற்றத்துக்கு வழிவகுத்த கலிங்கத்துப் போரை மையமாகக் கொண்டு ஒரு குறுங்காவியம் நாலைந்து நாட்களில் எழுதி முடித்தேன். கலிங்கத்துப் பரணியில் தொடங்கிய என் தமிழ்ப் பயிற்சி, அதற்குக் காலத்தால் மிகவும் முற்பட்ட அசோகனின் கலிங்கப் போரில் வளர்ந்தது பற்றி மகிழ்ந்தேன். “வீரமா ஈரமா” என்ற தலைப்பில் எழுதிய சாம்ராட் அசோகன் சரித்திரக் காவியத்தின் கைப்பிரதியை முதலில் என் ஆசான் தண்டமிழ்க் கொண்டலிடம் தந்தேன். தவறுகள் இருந்தால் திருத்திக் கொடுக்க வேண்டினேன். பல நாட்கள் ஆகியும் அவருக்கு ஏனோ அதைப் படித்துப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. “ராஜா, முதலில் இதைப் படித்துச் சரி பார்க்க குப்புசாமி வாத்தியாரிடம் கொடு, நான் பிறகு பார்க்கிறேன்,” என்று அவர் சொன்னதும் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியிலேயே இன்னொரு தமிழாசிரியராக இருந்த குப்புசாமி அவர்களிடம் அதைத் தந்தேன். மறுநாள் அவர் என்னை அழைத்து, கவிதை நாடகம் நன்றாக இருப்பதாகப் பாராட்டி விட்டு, “உன் வீடு எங்கே?” என்று கேட்டார். சென்னை, மந்தைவெளி, ராமகிருஷ்ணா மடம் சாலையில், ராணி மெய்யம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு எதிரில் என்று நான் சொன்னதும், வெகு அருகிலேயே இருக்கும் அவர் இல்லத்திற்கு மாலை 7 மணிக்கு என்னை வரச் சொன்னார். சென்றேன். தினமும் வரச் சொன்னார். இரண்டு வாரங்கள் தொடர்ந்து சென்றேன். என் கவிதை நாடகத்தின் ஒவ்வொரு பாடலையும் வரிவரியாகப் படித்து, சிறு திருத்தங்களும் செய்து, பல இடங்களில் நயம் வியந்து பாராட்டி, மிகப் பெரிய கவிஞர்களின் புகழ்மிக்க வரிகளுடன் ஒப்பு நோக்கி, இரண்டு வாரங்கள் தினமும் மாலை அவர் எனக்காகச் செலவழித்த கணங்களுக்கு என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தாலும் போதாது. அந்த நாடகத்தின் கவிதைகளை நான் அடியோடு மறந்து விட்டாலும், நான் என்றும் மறக்க முடியாதவராய் என் நெஞ்சில் குப்புசாமி வாத்தியார் இடம்பெற்று விட்டார்.

    கோழியைக் கேழி என்று எழுதிக் கேலிக்கு ஆளான நான் தமிழ் வகுப்பில் எழுதிய கட்டுரைகள் பாராட்டுப் பெற்றன. கண்ணகி பற்றிய ஒரு கட்டுரையை இப்படி முடித்திருந்தேன்: “கண்ணகியின் புகழைச் செங்குட்டுவன் வடித்த கல்லும் சொல்லும்; இளங்கோவின் சொல்லும் சொல்லும்”. அந்த வரிகளின் பக்கத்தில் என் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் எழுதியிருந்தார்:

    கல்லும் சொல்லும் சொல்லும் சொல்லும்
    என்னும் சொல்லும் என்னை வெல்லும்

    ஓராண்டுக்கு முன் என் விடைத்தாளை விட்டெறிந்த ஆசானே இப்படி எழுதியதும் எனக்கு எப்படி இருந்திருக்கும்!

    என் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன் அவர்களிடம் நான் பயின்றது சொல்லாளுமை. சொற்கள் எப்படி அடுக்கடுக்காக நெருங்கி வர வேண்டும், அதே சமயத்தில் ஒன்றிலொன்று கோக்கப்பட்டு ஊடுபாவி இருக்க வேண்டும் என்ற நுட்பத்தை அவருடைய கவிதைகளில் இருந்தே கற்றுக் கொண்டேன். அருவிபோல் பொழியும் சொல்லோட்டம் அவர் நடையின் தனிச்சிறப்பு:

    கொஞ்சுமொழி மழலையைக் கோலத் தியற்கையைக்ravi
    கோயிலாக் கொண்ட இறைவா
    அஞ்சுதலை உடையார்கள் ஆறுதலை அடைகின்ற
    அற்புதம் புரிகின்றவா
    தஞ்சமென யாங்களே பஞ்சனைய பதமலர்கள்
    பற்றினோம் பற்றற்றவா
    வஞ்சமறு நெஞ்சிலே விஞ்சுமருள் கொஞ்சவரு
    வள்ளலே வரமருளவா

    கருத்துச் செறிவும் சொல்லழகும் கைகோத்து நடக்கும் அவர் பாடல்களில்:

    பாறைக் கதவைப் பார்க்கும் விதவை
    கூறைப் புடவை கொடுவொரு தடவை

    எழுத்தெண்ணிப் பாடும் கட்டளைக் கலித்துறைக்கு அவருடைய ஒரு பாடலே கட்டளைக்கல்:

    துலங்குவெண் ணீறு துணிப்பிறைக் கோடு துணைக்கரங்கள்
    இலங்குநற் றொந்தி இறைவனென் புந்தி இருக்கையிலே
    விலங்கெனும் வாழ்வு விளங்கிடும் தாழ்வு விரைந்தழியும்
    கலங்கிடும் உள்ளம் களிப்பெனும் வெள்ளம் கலந்திடுமே

    இந்தச் சொற்கட்டுக்கோப்பே வெகுநாட்களுக்குப் பிறகு எனக்குள் இருந்து வியக்கத் தக்க கட்டளைக் கலித்துறை பாடல்களை வரவழைத்தது.

    1984-ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் சபரி மலை செல்லும் நான் எப்பொழுதும் மலையேற மிகவும் சிரமப் படுவேன். மூச்சுத்திணறித் திண்டாடுவேன். மலையில் இருந்து இறங்குவதில் எனக்கு அவ்வளவு சிரமம் நேர்ந்ததில்லை. பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை அதிக சிரமமில்லாமல் மலையில் ஏறிவிட்டதும் மகிழ்ச்சியாக, அடாடா, இவ்வளவு எளிதாக ஏறி வந்து விட்டேனே, இனி இறங்குவது இன்னும் சுலபமாக இருக்கப் போகிறது என்று மனத்துக்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டேன். ஆனால், அந்த ஆண்டு மலையில் இருந்து இறங்கும் போது, காலிரண்டும் துவள, உடல் ஒத்துழைக்க மறுக்க, முடியவில்லை ஐயப்பா என்று வாய்விட்டுக் கதறியழும் நிலை ஏனோ ஏற்பட்டது. காரணமே புரியவில்லை. எல்லாவற்றுக்கும் நமக்குக் காரணம் புரிந்து விடுகிறதா? என்ன சிகாமணி, சத்தமே காணோம்! அப்படி அழுது, தொழுது இறங்கியபின், சென்னை திரும்பும் வழியில்தான் ‘பிறவா வேட்கைப் பஞ்சகம்’ என்று ஐந்து கட்டளைக் கலித்துறைப் பாக்கள் வந்தன:

    எழச்செய்தாய் சென்னி முடிதாங்கி மாமலை ஏறிவந்து
    தொழச்செய்தாய் கால்கள் துவளத் துவள இறங்குகையில்
    அழச்செய்தாய் ஆனால் அடுத்த பிறவிக் கருங்குகையில்
    விழச்செய்தால் உன்னை விடமாட்டேன் வீர மணிகண்டனே

    விழலுக் கிரைத்தநீர் இல்லை விரதம் நுதல்விழியின்
    அழலுக் கெரிந்தவன் சாட்சி ஹரிஹரா உன்பதத்தின்
    நிழலை அடைய நெடுந்தூரம் வந்தேன் மறுபிறவிச்
    சுழலில் தவிக்க விடவேண்டாம் சோதி மணிகண்டனே

    புகலின்றி வாழ்க்கைப் புதைமணல் சிக்கிப் புலம்புகின்றேன்
    பகலை இரவாக்கும் பேரொளி யேயுந்தன் பாதமலர்
    அகலா திருக்கும் அனுபூதி வேண்டும் கருவறையில்
    புகச்செய்ய வேண்டாம் புனிதனே புண்ணிய பாலகனே

    மறைவா யிருந்தாலும் காடு மலைகள் கடந்துவந்தே
    இறைவா உனைநான் இருகண்க ளாலும் பருகிவிட்டேன்
    மறவாமல் எந்தன் மனத்துக் கினிய வரம்தருவாய்
    பிறவாமை யன்றிப் பிறிதொன்றும் வேண்டாப் பிடிவாதமே

    துறவிக்கும் உண்டு துளியச்சம் நீடு துயில்நடுவே
    மறலிக் குயிரைப் பறிகொடுக் கின்ற மரணபயம்
    பிறவிப் பிணிதீர மட்டுமே நெஞ்சைப் பிணித்துவைத்தேன்
    மறந்தும்நான் வேறு வரம்கேட்க மாட்டேன் மணிகண்டனே

    மீண்டும், 1966-க்கே போவோம். வீரமா ஈரமா நாடகத்தைத் தொடர்ந்து, நூர்ஜஹான் கவிதை நாடகம், இன்னொரு சமூகக் கவிதை நாடகம், அதாவது, முற்றிலும் சொந்தச் சரக்கு, எழுதினேன். அந்த நாடகங்களின் பிரதிகள் எதுவுமே என் வசம் இல்லை. ஓரிரு பாடல்கள் மட்டும் நினைவில் உள்ளன.

    நாட்டைக் காக்கும் பணியில் காதலன் போர்முனைக்குச் சென்றுவிடத் தனிமையில் அழுதபடிப் படுத்திருக்கும் காதலியின் நிலையைச் சொல்லும் ஒரு விருத்தம் நினைவுக்கு வருகிறது:

    நீர்த்துளிகள் நித்திலத்தின் குவியல் போலே
    நேரிழையின் கன்னத்தில் வழிய ஓசை
    சேர்த்துளிகள் செதுக்காத சிற்பம் அங்கே
    தேம்பிக்கொண் டிருந்ததுதன் மேனி யெங்கும்
    வேர்த்திருப்ப தாலவளும் முனக லோடு
    மெல்லத்தான் புரண்டுபடுத் தாள்அக் காட்சி
    தேர்த்திருப்பம் போலிருந்த(து) அந்தத் தேரின்
    தெய்வமோ போர்முனையில் இருந்த தம்மா

    இப்படி என் கவிதைப் பயணம் நடந்து கொண்டிருந்த போது, 1967-ல் என்று ஞாபகம், திரைப்படத் துறையில் என் வளர்ப்புத் தந்தைக்குப் பரிச்சயமாயிருந்த கவிஞர் தேவநாராயணன் என் வீட்டுக்கு ஒருநாள் வந்திருந்தார். என் கவிதை ஈடுபாடு பற்றிக் கேள்விப் பட்டதும் அடுத்த வாரம் தம் வீட்டில் நடைபெற இருந்த ஒரு கவியரங்கத்தில் நான் பங்குபெற்றுக் கவிதை படிக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார். மறுநாள் சென்றேன், மந்தைவெளி, செயிண்ட் மேரிஸ் சாலையில் இருந்த அவர் இல்லத்துக்கு. சிறிய கூடத்தில் சுமார் இருபத்தைந்து நபர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவர் தலைமை. அவர் அழைக்க ஒவ்வொருவராகக் கவிதை படிக்க, வந்திருந்தோர் ரசிக்க, எனக்கு எல்லாமே அதிசயமாக இருந்தது. அது பாரதி கலைக் கழகம் என்ற நிறுவனத்தின் மாதமொரு கவியரங்க நிகழ்ச்சி என்று பிறகு தெரிந்து கொண்டேன். அன்று பாரதியின் புதிய ஆத்திசூடியில் இருந்து ஒவ்வொருவருக்கும் ஒரு வரி தலைப்பாகத் தரப்பட்டிருந்தது. எனக்குத் தரப்பட்ட வரி, “சைகையில் பொருளுணர்”. என் முறை வந்தது. எழுந்து நின்று என் கவிதையைப் படித்தேன்:

    அன்றொருநாள் ஆலமரம் விரித்த நீழல்
    அமைதியுடன் அழகுமிக அமைந்த சூழல்

    கல்லால மரத்தடியில் மெளனமாக வீற்றிருந்து, சின்முத்திரை காட்டிச் சைகையில் பொருளுணர்த்திய தட்சிணாமூர்த்தி பற்றிய என் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    நான் தொடர்ந்து பாரதி கலைக் கழகத்தின் கவியரங்குகளில் பங்கேற்று நிறைய கவிதைகள் படித்தேன். பாரதி கலைக் கழகத்தின் தலைவர் பாரதி சுராஜ் மிகப் பெரிய கவிதை ரசிகர். நான் சந்தித்த மிகநல்ல மனிதர்களில் ஒருவர். அவரைப் பற்றித் தனியாக ஒரு பகுதியில் பிறகு சொல்கிறேன்.

    பல கவியரங்கங்களில் பங்கு கொண்டு பாராட்டுப் பெற்றேன். ஆனாலும், என் மனத்தில் ஏதோ நெருடல். நான் என் திறமையைக் காட்டிக் கொள்ளும் ஒரு சாதனமாகக் கவிதையைப் பயன்படுத்துவதில் மனோன்மணிக்குச் சம்மதம் இல்லை. அவள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். விரைவில் நான் தலைப்புகளுக்குப் பாடல் எழுதுவதை நிறுத்தி விட்டேன். அந்தச் சூழலில்தான் ஏற்கனவே சொன்னதுபோல் கம்பன் வந்து கதவை இடித்ததும், வாத்ஸ்யாயனன் என்னை வம்புக் கிழுத்ததும். இலக்கியம், தத்துவம், அரசியல் சித்தாந்தம்; இப்படிப் பலதுறைகளிலும் நிறைய படித்தேன். நிறைய எழுதினேன். அந்தச் சமயத்தில்தான், முன்பகுதியில் குறிப்பிட்டது போல எனக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது; இல்லை, தரிசனம் கிட்டியது. அதற்கும் தேவநாராயணனே காரணமாக இருந்தார்.

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 19

    கே.ரவி

    என்னிடம் மிகுந்த பாசத்தோடு பழகியவர், அன்பே வடிவான கவியரசி செளந்தரா கைலாசம் அம்மையார். பத்து ஆண்டுகளுக்கு முன், ‘மின்னற் சுவை‘ என்ற என் நூலுக்கு நான் அவர்களுடைய அணிந்துரை வேண்டுமென்று கேட்ட போது கண்நோயால் பாதிக்கப்பட்டுப் படிக்க முடியாத நிலையில் தாம் இருந்த போதும், மறுக்காமல், தருகிறேன் என்று சொல்லிக் கவிமாமணி, புதுவயல் செல்லப்பன் அவர்களைக் கொண்டு முழு நூலையும் படிக்கச் சொல்லிக் கேட்டு, மிக நல்ல அணிந்துரை வழங்கினார். அவருடைய அன்பை நான் மறக்க முடியுமா?

    அவர் ஒரு சிறந்த கவிஞர். கவிதையின்மேல் அளவு கடந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தெய்வ பக்தியும், தேச பக்தியுமே தம் இரு கண்களாகக் கொண்டிருந்தார். இந்திய சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில் ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்த போது அவரை அழைக்க நான் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது, என்னைத் தம் இல்லத்தின் பூஜை அறைக்குள் அழைத்துச் சென்று அங்கே வைக்கப் பட்டிருந்த ஒரு கலசத்தைக் காட்டினார். அதில் வெறும் மண் இருந்தது. “தம்பி, இது வெறும் மண் இல்லீங்க. நான் இந்த பாரத நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து இந்தக் கலசத்தில் போட்டு வைப்பேன். இது எப்பொழுதும் பூஜை அறையில்தான் இருக்கும். இதை நான் பாரத மாதாவாகவே ஆவாகனம் செய்து பூஜை செய்து வருகிறேன்” என்று அவர் சொன்னதும் நான் நெகிழ்ந்து போனேன். அவர் எப்போதும் சிரித்த முகமாகவே காணப்பட்டதற்கு, அவருடைய அசைக்க முடியாத தெய்வ பக்தியே காரணம். அவரே கவிதையிலேயே இதைச் சொல்கிறார்:

    சுடும்போதும் சிரிப்பேன் துன்பம் சுட்டபின் தென்றல் வந்து

    தொடும்போதும் சிரிப்பேன் தீய சொல்லினால் நெஞ்சில் காயப்

    படும்போதும் சிரிப்பேன் இந்தப் பாரெலாம் போற்றி மாலை

    இடும்போதும் சிரிப்பேன் என்றன் இதயமே இறைவன் சோலை

    கொதிக்கும் சுண்ணாம்புக் காளவாயில் நின்று கொண்டு, சிவபெருமான் திருவடியை எண்ணித் தம் ஐம்புலன்களுக்கும் அது குளிர்ச்சி தந்த பரவசத்தை ஒரு பெருங்கிழவர் பாடினாரே, அந்தப் பாட்டு இதில் எதிரொலிக்கிறதே!

    மாசில் வீணையும் மாலை மதியமும்

    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

    ஈசன் எந்தை இணையடி நீழலே

    1999, கார்கில் போர் நடந்த போது, நம் வீரர்களுக்கு உற்சாகமும், உத்வேகமும் தர வானவில் பண்பாட்டு மையம் ஒரு முழுநாள் கவியரங்கம் நடத்தியது. அந்தக் கவியரங்கத்தில், சென்னையில் இருந்த முன்னணிக் கவிஞர்கள் அத்தனைப் பேரும் கலந்து கொண்டு கவிதை படித்தார்கள். அந்தக் கவியரங்கம் முழுதும் ஒலிப்பேழையாகப் பதிவு செய்யப்பட்டது. அதன் நூறு பிரதிகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்று தீவுத் திடலுக்குப் பின்புறம், ஜிம்கானா கிளப்புக்கு எதிரில் உள்ள போர்ப்படைத் தளபதி அலுவலகத்தில் தலைமைத் தளபதியைச் சந்தித்து அவரிடம் நேரில் வழங்கத் திட்டமிட்டோம். அந்த ஒலிப்பேழைகளைப் போர்முனையில் இருந்த தமிழ் தெரிந்த வீரர்களுக்கு கொண்டு சேர்க்குமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளவும் தீர்மானித்தோம். நடக்க முடியாமல் கால் எலும்புகள் பாதிக்கப்பட்டிருந்த போதும் கவியரசி அம்மையார் தாமே முன் வந்து, அந்த ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கிப் படைத்தளபதியிடம் அந்தப் பேழைகளைத் தந்த நிகழ்ச்சியை மறக்கவே முடியாது.

    1

    நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதை முழக்கங்களைக் கொண்ட இசைப்பேழைகளைப் போர்முனைக்குக் கட்டாயம் அனுப்பி வைப்பதாக அன்றைய படைத்தளபதி உறுதியளித்தார்.

    2

    ‘கவிதைகளைப் போர்முனைக்கு அனுப்பிய முதல் ஆள் நீதானப்பா’ என்று புத்தி சிகாமணி முணுமுணுக்கிறான்.

    ‘அப்பா சிகாமணி, முன்காலத்தில் போர்க்களத்திலேயே நின்று புலவர்கள் போர்ப்பரணி பாடியிருக்கிறார்கள். ஜயங்கொண்டான் என்ற புலவர் அப்படிப் பாடிய காவியம்தான் ‘கலிங்கத்துப் பரணி’. சாதாரண வார்த்தைகளை விடக் கவிஞர்களின் கவிச்சொற்களுக்கு வலிமை அதிகம் என்பதுதான் என் கட்சி. ‘வல்லமை’ மின்னிதழில் நம் இலக்கியப் பேழைக்கு என்ன பெயர் கொடுத்திருக்கிறார்கள் பார்த்தாயா? சொற்சதங்கை! மற்றவர் நாவில் நடக்கும் சொற்கள், கவிஞர் நாவில் மட்டுமே நடனமாடும். அந்தத் தாண்டவத்தை, அதுவும் ருத்ர தாண்டவத்தை நம் போர் வீரர்கள் கண்டால், போர்முனையில் அவர்களுக்கு மேலும் வீர உணர்ச்சி உண்டாகும். நீ ஏட்டுச் சுரைக்காய், இதெல்லாம் உனக்கு விளங்காது, விடு’ என்கிறேன்.

    3

    இந்த விவாதத்தை ஒதுங்கி நின்று கேட்டுக் கொண்டிருந்த மனோன்மணி திடீரென்று குரல் எடுத்துக் கலிங்கத்துப் பரணியிலிருந்து ஒரு பாடலைத் தன் கணீரென்ற குரலெடுத்துப் பாடுகிறாள்.

    பொருதடக்கை வாளெங்கே மணிமார்(பு) எங்கே

    போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத

    பருவயிரத் தோளெங்கே எங்கே என்று

    பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்

    மனோன்மணியின் குரல் அதிர்வுகளுக்கு ஏற்றவாறு பைரவியின் நடன அசைவுகள் நிழற்படங்களாக, என் நினைவுத் திரையில் மெல்ல . . மெல்ல. .! மெய்சிலிர்க்கிறது! அட, ஒரு நோக்கில் மனோன்மணிதான் பைரவியோ!

    சிகாமணி சொல்கிறான்: ‘நீர் சொன்னதெல்லாம் எனக்கு வெளங்கலே. ஆனா அவ பாடினதும் புரிஞ்சுடுத்து ஓய், பாட்டு எப்படி வீர உணர்ச்சியத் தூண்டும்னு. மயிர்க்கூச்செறியுது!!’

    எனக்குள் இருந்து பாரதியின் குரல் ஒலிக்கிறது:

    பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா

    . . . . . . .

    பூதங்கள் ஒத்துப் புதுமைதரல் விந்தையெனில்

    நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ!

    நான் கவிதை எழுதத் தொடங்கிப் பல நாட்கள், இல்லை, பல ஆண்டுகள் கழித்தே பாரதிக்கு நான் முழுமையாக ஆட்பட்டேன். நான் விரும்பிய கவிஞர்களில் ஒருவனாக மட்டுமே இருந்த அவன் என் நெஞ்சின் நாயகனாக விஸ்வரூபம் எடுத்தது ஒரே கணத்தில். அந்த தரிசனத்தை எனக்கு முதலில் சூசகமாகக் காட்டியவர் கவிமாமணி தேவநாராயணன். அது நடந்தது சென்னை ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில், 1971-ஆம் ஆண்டு. பிறகு அந்த தரிசனத்தில் என்னை முழுமையாக மூழ்கச் செய்தவர் அருமைக் கவிஞர் கண்ணதாசன்; அது நடந்தது 1975-ல் என்று நினைக்கிறேன். இந்த இரண்டு தரிசனங்களையும் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டும்.

    (தொடரும்)

    Share