Tag: நெல்லைத் தமிழ்

  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 77

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 77

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    77.படை மாட்சி

    குறள் 761:

    உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
    வெறுக்கையுள் எல்லாம் தலை

    எல்லா  வகைப்படையும் கொண்டு எடஞ்சலுக்கு அசராம செயிக்க ஒதவுத படை ராசாவோட செல்வங்கள் எல்லாத்திலயும் ஒசந்தது.

    குறள் 762:

    உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
    தொல்படைக் கல்லால் அரிது

    போர்ல சேதம் ஏற்பட்டு பலம் கொறைஞ்சாலும் எந்தவித எடஞ்சலுக்கும் பயப்படாதநெஞ்சுறுதி பழம்பெருமை கொண்ட படைக்கு இல்லாம வேற எதுக்கு இருக்க முடியும். .

    குறள் 763:

    ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை 
    நாகம் உயிர்ப்பக் கெடும்

    எலிகள் கூட்டமா சேந்து பகையக் காட்டினாலும் பாம்பு மூச்சு விட்டுச்சுன்னா அதுங்க கெட்டழிஞ்சு போவும். 

    குறள் 764:

    அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
    வன்க ணதுவே படை

    எந்த நெலமயிலயும் அழிஞ்சு போவாம பகையாளியோட சதிக்கு தொணை போவாம பரம்பரையாவே பயமில்லாம உறுதியா இருக்கதுதான் படை. 

    குறள் 765:

    கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை

    உசிர எடுக்குத சாவே முன்ன வந்தாலும் பயப்படாம ஒண்ணாநின்னு எதித்து நிக்குத சக்தி உள்ளதே படை. 

    குறள் 766:

    மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
    எனநான்கே ஏமம் படைக்கு

    வீரம், மானம், நல்லவழில நடக்குதது, தலைவனோட நம்பிக்கையப் பெறுதது இந்த நாலும் படையைப் பாதுகாக்குத பண்புகள் ஆவும்.  

    குறள் 767:

    தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
    போர்தாங்கும் தன்மை அறிந்து

    சண்டயத் தடுக்குத மொறையத் தெரிஞ்சுக்கிட்டு மொதல்ல வருத படைய செயிச்சி பின்னால வருதவங்க தாக்காதமாரி தடுக்குதது படை.

    குறள் 768:

    அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
    படைத்தகையால் பாடு பெறும்

    சண்டபோடுத வீரமும் எதித்து நிக்குத பலமும் இல்லன்னா கூட அது தன் அழகான அணிவகுப்பால் பெரும பெத்துக்கிடும். 

    குறள் 769:

    சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
    இல்லாயின் வெல்லும் படை

    தன் அளவுல கொறஞ்சு சிறிசாப் போவுதது, தலைவன வெறுக்குதது, வறுமை இது ஏதும் இல்லன்னா படை செயிச்சிக்கிடும். 

    குறள் 770:

    நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
    தலைமக்கள் இல்வழி இல்

    நெறைய நாள் நெலச்சு நிக்குத வீரர்கள் ரொம்ப பேர் இருந்தாலும் தலைவன் இல்லன்னா அந்தப் படை நெலச்சி நிக்காது.

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 76

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 76

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள்

    76.பொருள் செயல்வகை

    குறள் 751:

    பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
    பொருளல்ல தில்லை பொருள்

    தகுதியில்லாதவங்களக் கூட ஒசத்தி மதிக்க வைக்கது அவுக கிட்ட குவிஞ்சு கெடக்க  பணம் தான். 

    குறள் 752:

    இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
    எல்லாரும் செய்வர் சிறப்பு

    பணம் இல்லாதவுகள எல்லாரும் எளக்காரம் பண்ணுவாங்க. பணம் இருந்திச்சின்னா பெருமப் படுத்துவாங்க. 

    குறள் 753:

    பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று

    பொருள் னு சொல்லுத அணையா விளக்கு நெனச்ச எடத்துக்குப்போயி எல்லா எடஞ்சலையும் தீத்து வச்சிரும். 

    குறள் 754:

    அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்

    நல்ல வழியில கெடுதல் செய்யாம சம்பாதிச்ச பணம் தான் ஒருத்தனுக்கு அறநெறியக் காட்டி சந்தோசத்தக் கொடுக்கும்.

    குறள் 755:

    அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல்

    பொறத்தியார் மேல இரக்கம் காட்டாம, நேசம் இல்லாம சேத்த பணத்த வச்சிக்கிட்டு சந்தோசப்படாம அது கெடுதலத்தான் கொடுக்கும்னு நெனச்சி விட்டுப்போடணும். 

    குறள் 756:

    உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
    தெறுபொருளும் வேந்தன் பொருள்

    வரியும், சுங்கமும், செயிச்ச பகையாளி நாடு கட்டுத கப்பமும் ராசாவோட பொருள்கள் ஆவும். 

    குறள் 757:

    அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
    செல்வச் செவிலியால் உண்டு

    அன்புங்குத ஆத்தா பெத்த அருள் ங்குத பச்சப்புள்ள பொருள் னு சொல்லுத வளர்ப்புத்தாயல வளரக் கூடியது.

    குறள் 758:

    குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
    றுண்டாகச் செய்வான் வினை

    தன் கையில பணத்த வச்சிக்கிட்டு ஒரு காரியத்த தொடங்குதது மலை மேல ஏறி நின்னுக்கிட்டு பதனமா யானைச் சண்ட பாக்குதது போல ஆவும். 

    குறள் 759:

    செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃதனிற் கூரிய தில்

    பொருள சம்பாதிச்சி சேத்துவச்சிக்கிடணும். ஏம்னா பகையாளியோட அகராதிய (செருக்கு) அழிக்குத கூரிய அரிவாள் கணக்கா இருக்கது அதுஒண்ணுதான்.

    குறள் 760:

    ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
    ஏனை இரண்டும் ஒருங்கு

    நல்ல வழியில நெறைய பணம் சேத்தவங்களுக்கு மத்த அறமும், இன்பமும் சுளுவாக் கெடச்சிப்போடும். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 75

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 75

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    75.அரண்

    குறள் 741:

    ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் 
    போற்று பவர்க்கும் பொருள்

    படையெடுத்து சண்டபோடுதவங்களுக்கு கோட்டை ஒதவியா இருக்கும். சண்ட போடப்பயந்து உள்ள பதுங்கி இருக்க நெனைக்கவங்களுக்கும் கோட்டை உதவியா இருக்கும். 

    குறள் 742:

    மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடைய தரண்

    தெளிவான தண்ணி, வெட்ட வெளி, ஒசரமான மலை, அழகான நிழல் தருத காடு இந்த நாலும் இருக்கது தான் அரண். 

    குறள் 743:

    உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
    அமைவரண் என்றுரைக்கும் நூல்

    ஒசரம், அகலம், பலம், பகையாளியால அழிக்க ஏலாத அமைப்பு இந்த நாலும் அமஞ்சிருக்கதுதான் கோட்டை னு படிச்சவுக சொல்லுவாக. 

    குறள் 744:

    சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
    ஊக்கம் அழிப்ப தரண்

    காவல் செய்ய வேண்டிய இடம் சிறுசாவும்  கோட்டையோட சுற்று பெரிசாவும் , சண்ட போட வருத பகையாளிக்கு மலைப்பத் தருததாவும் இருக்கது அரண். 

    குறள் 745:

    கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
    நிலைக்கெளிதாம் நீர தரண்

    பல நாள் முற்றுகைக்குப் பொறவும் எதிரியால கைப்பத்த முடியாம, உள்ள இருக்க மக்களுக்கும், படை வீரர்களுக்கும் தேவைப்படுத சாப்பாட்டு வசதியோட, பகையாளி கூட சண்ட போட ஏதுவாவும் அமச்சிருக்கதே அரண் ஆவும்.   

    குறள் 746:

    எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்
    நல்லா ளுடைய தரண்

    உள்ள இருக்கவங்களுக்கு தேவைப்படுத எல்லாம் இருக்கதாவும், வெளியில இருக்க பகையாளி கூட சண்ட போட பலசாலி வீரர்களைக் கொண்டதாவும் இருக்கது அரண். 

    குறள் 747:

    முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
    பற்றற் கரிய தரண்

    சுத்திவளச்சோ, வளைக்காமலோ, சூதுவாது செஞ்சோ என்னமும் செஞ்சும் பகையாளியால கைப்பத்த முடியாமப் போவுத பலம் கொண்டது அரண். 

    குறள் 748:

    முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
    பற்றியார் வெல்வ தரண்

    சுத்தி வளச்சி முற்றுகையிட்டவங்களையும் உள்ள இருந்துக்கிட்டே சண்டபோட்டு வெரட்டதுக்கு ஏதுவா அமஞ்சது அரண். 

    குறள் 749:

    முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
    வீறெய்தி மாண்ட தரண்

    சண்ட தொடங்கின பொறவு உள்ள இருந்துக்கிட்டே தாக்குத அளவு தனிச் சிறப்பு கொண்டது அரண்.

    குறள் 750:

    எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
    இல்லார்கண் இல்ல தரண்

    எல்லா சிறப்பும் இருக்க கோட்டையில உள்ள இருக்கவங்க சண்ட போடுத தெறம இல்லாம இருந்தாங்கன்னா பிரயோசனம் இல்ல. 

    (அடுத்தாப்லையும் வரும்)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 74

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 74

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    74.நாடு

    குறள் 731:

    தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
    செல்வருஞ் சேர்வது நாடு

    செழிப்புகொறையாத வெளச்சலும், படிச்ச அறிவாளிகளும், சுயநலம் இல்லாத பணக்காரங்களும் சேந்து இருக்க எடம் தான் நாடு.   

    குறள் 732:

    பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
    ஆற்ற விளைவது நாடு

    அதிக பொருள் வளம் இருக்கதாவும், எல்லாரும் விரும்புதமாரியும், கேடு இல்லாம நல்ல வெளச்சலோட இருக்கதும்தான் சிறந்த நாடு.  

    குறள் 733:

    பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
    கிறையொருங்கு நேர்வது நாடு

    மத்த நாட்டுலேந்து வந்து குடியேறுதவங்களோட சுமையத் தாங்கி அரசுக்கு வரி செலுத்துதக்கு ஏதுவா வளமா இருக்கது சிறந்த நாடு. 

    குறள் 734:

    உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
    சேரா தியல்வது நாடு

    வயித்துப் பசி, நோவுநொடி, பகையாளிங்க இவையெல்லாம் இல்லாம இருக்கதுதான் நாடு.

    குறள் 735:

    பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
    கொல்குறும்பும் இல்லது நாடு

    கூட்டங் கூட்டமா கூடவே இருந்து குழிபறிக்குத பகையும், அரச நெருக்கடிக்குத்தள்ளுத கலகக்காரங்க , கொலைகாரங்க இவுகளால வெளையுத பொல்லாப்பும் இல்லாம இருக்கதே சிறந்த நாடு. 

    குறள் 736:

    கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
    நாடென்ப நாட்டின் தலை

    பகையாளியால பாழ்பட்டுப் போவாம ஒருக்கா போனாலும் அத சரி செஞ்சுக்கிடுத அளவு வளமா இருக்கதும் தான் மத்ததவிட சிறந்த நாடு.

    குறள் 737:

    இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
    வல்லரணும் நாட்டிற் குறுப்பு

    ஊத்துத் தண்ணி, மழைங்குத ரெண்டு வகை நீர்வளமும் உயரமாவும் அகலமாவும் இருக்க மலையும் அதுலேந்து கெளம்பி ஓடுத ஆறும் , பலமான கோட்டச்சுவரும் நாட்டுக்குத் தேவைப்படுத உறுப்புக்கள் ஆவும். 

    குறள் 738:

    பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

    நோவுநொடி இல்லாமை, செல்வம், நல்ல வெளச்சல், சந்தோசமான வாழ்க்க, நல்ல பாதுகாப்பு இந்த அஞ்சும் ஒரு நாட்டுக்கு அழகு னு படிச்சவங்க சொல்லுவாக. 

    குறள் 739:

    நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
    நாட வளந்தரு நாடு

    அதிகமா சிரமப் பட்டு முனைஞ்சு ஒழைச்சு வளமா இருக்க நாடுகள விட இயற்கையிலயே எல்லா வளத்தையும் கொண்டிருக்கது தான் சிறந்த நாடு. 

    குறள் 740:

    ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
    வேந்தமை வில்லாத நாடு

    நல்ல ராசா இல்லாத நாட்டுல எல்லாவித வளமும் இருந்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லாமப் போவும்.  

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 73

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 73

    -நாங்குநேரி வாசஶ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    73. அவை அஞ்சாமை

    குறள்721:

    வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்

    அளவா பேசுத கொணம் உள்ளவுகளுக்கு சபையில இருக்க மனுசங்க படிச்சவங்களா, படிக்காதவங்களா ங்குத வகைய உணந்துக்கிடுத சக்தி இருந்திச்சின்னா பேசுதப்போ தப்புசெய்ய மாட்டாங்க. 

    குறள்722:

    கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
    கற்ற செலச்சொல்லு வார்

    படிச்சவங்க முன்ன தாம் படிச்சத அவுக மனசுல பதியுதமாரி சொல்லுதவங்க படிச்சவங்க எல்லாரையும்விட ஒசத்தியானவங்க.

    குறள்723:

    பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
    அவையகத் தஞ்சா தவர்

    பகையாளிகூட சண்டபோட்டு சாவுததுக்கு நெறையபேர் இருப்பாக. படிச்சவங்க முன்ன பயப்படாம பேசுததுக்கு கொறைய ஆட்கள்தான் இருப்பாக. 

    குறள்724:

    கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்

    அறிவாளிங்க சபையில நாம படிச்சத அவுக ஏத்துக்கிடுதமாரி சொல்லிப்போட்டு நம்மளவிட அதிகம் படிச்சவங்ககிட்டேந்து நிறைய விசயத்தக் கத்துக்கிடணும். 

    குறள்725:

    ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
    மாற்றங் கொடுத்தற் பொருட்டு

    பெரியமனுசங்க இருக்க சபையில குறுக்க கேள்விகேக்கும்போது பயப்படாம பதில் சொல்லுததுக்காவ இலக்கணமும், தருக்கம் ங்குத  அளவைத் திறமும் கத்துக்கிடணும். 

    குறள்726:

    வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்
    நுண்ணவை அஞ்சு பவர்க்கு

    பயந்தாக்கொள்ளிக்கு வாள் கூட என்ன சம்பந்தம்? சபையில பேசுததுக்கு பயப்படுதவங்களுக்கு அவுக படிச்ச நூல் கூட என்ன சம்பந்தம்?

    குறள்727:

    பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
    தஞ்சு மவன்கற்ற நூல்

    சபையில பேசுததுக்கு பயப்படுதவன் படிச்ச நூல், போர்க்களத்துல பயப்படுத பேடி கிட்ட இருக்க கூரான வாள் கணக்கா ஆவும். 

    குறள்728:

    பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லா தார்

    அறிவாளிங்க முன்ன அவுக மனசுல பதியுதமாரி சொல்ல ஏலாதவங்க எத்தன நூல்களப் படிச்சிருந்தாலும் பிரயோசனமில்ல. 

    குறள்729:

    கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
    நல்லா ரவையஞ்சு வார்

    அறிவாளிங்க கூடியிருக்க எடத்துல பேச பயந்தவங்க எத்தன படிச்சிருந்தாலும் படிக்காதவனவிட தாழ்த்தியாதான் மதிக்கப்படுவாங்க.

    குறள்730:

    உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
    கற்ற செலச்சொல்லா தார்

    சபைக்கு பயந்து தாம் படிச்சத ஏத்தாமாரி சபையில பேசத்தெரியாதவங்க உசிரோட இருந்தாலும் செத்தவனுக்கு சமானம் தான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 72

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 72

    நாங்குநேரி வாசஸ்ரீ

    72. அவை அறிதல்

    குறள் 711:

    அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்

    சொல்லுத வார்த்தையோட தன்மைய உணந்துக்கிட்ட அறிவாளிங்க சபையில உக்காந்து இருக்கவங்களோட தன்மையையும் புரிஞ்சுக்கிட்டு ஏத்தாமாரி பேசுவாங்க.

    குறள் 712:

    இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர்

    சொற்களோட அர்த்தம் (பொருள்) தருத போக்க புரிஞ்சி வச்சிருக்க நல்லவங்க சொல்குத்தமும் பொருள் குத்தமும் வாராம கேக்குதவங்களோட நிலைமையயும் சரியா புரிஞ்சுக்கிட்டு பேசணும்.

    குறள் 713:

    அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
    வகையறியார் வல்லதூஉம் இல்

    சபையில இருக்கவங்க தன்ம தெரியாம பேசுதவங்களுக்கு சொற்களோட வகையும் தெரியாது, பேசுத தெறமையும் கெடையாது.

    குறள் 714:

    ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
    வான்சுதை வண்ணங் கொளல்

    அறிவாளிக்கு முன்ன தானும் அறிவாளி கணக்கா நடந்துக்கிடணும். புத்தியில்லாதவன் முன்ன வெள்ளசுண்ணாம்பு கணக்கா தன்னய அறிவில்லாதவனா காட்டிக்கிடணும்.

    குறள் 715:

    நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
    முந்து கிளவாச் செறிவு

    அறிவாளிங்க கூடியிருக்க எடத்துல முந்திரிக்கொட்ட கணக்கா பேசாம இருக்க அடக்கம் எல்லா நன்மயிலயும் சிறந்த நன்ம.

    குறள் 716:

    ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
    ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

    அறிவாளிங்க முன்ன பேசுதப்போ தப்பாயிடுச்சின்னா அது ஒழுக்கங்கெட்டதுக்கு சமானம்.

    குறள் 717:

    கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
    சொற்றெரிதல் முன்னர் இழுக்கு

    குத்தமில்லாத சொற்களச் சலிச்சு எடுத்து பேசுதவங்ககிட்ட தான் அவங்க படிச்ச படிப்போட பெரும வெளங்கும்.

    குறள் 718:

    உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
    பாத்தியுள் நீர்சொரிந் தற்று

    உணந்துக்கிடுத சக்தி உள்ளவுக கிட்ட பேசுதது வளருத பயிரு இருக்க பாத்தியில தண்ணியப் பாய்ச்சுதது கணக்கா பலனக் கொடுக்கும்.

    குறள் 719:

    புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லு வார்

    நல்லவங்க சபையில மனசுல பதியுதமாரி பேசுத தெறம இருக்கவங்க முட்டாளுங்க கூட்டத்துல அறவே பேசாம இருக்கது நல்லது.

    குறள் 720:

    அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
    அல்லார்முன் கோட்டி கொளல்

    அறிவுள்ளவங்க தனக்கு சமமில்லாத அறிவுகெட்டவங்க முன்ன பேசுதது அழுக்கான முற்றத்துல சிந்தின அமிழ்தம் கணக்கா வீணா போவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 71

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 71

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    71.குறிப்பறிதல்

    குறள் 701:

    கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
    மாறாநீர் வையக் கணி

    ஒருத்தங்க பேச வாயத் தொறக்காம இருக்கயிலேயே அவுக மனசுக்குள்ளார என்ன நெனைக்காங்கனு அறிஞ்சுக்கிடுதவன் ஒலகத்துக்கு பூட்டுத நகநட்டு ஆவான். 

    குறள் 702:

    ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
    தெய்வத்தோ டொப்பக் கொளல்

    அடுத்தவன் மனசுக்குள்ளார இருக்கத ஐயமில்லாம கண்டுக்கிடுதவன தெய்வத்துக்கு சமமா மதிக்கணும். 

    குறள் 703:

    குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
    யாது கொடுத்துங் கொளல்

    ஒருத்தரொட மொகத்தப் பாத்தே மனசுல இருக்கத தெரிஞ்சுக்கிடுத தெறம இருக்கவங்கள எதுனாச்சும் சோலியக் கொடுத்தாவது தொணையா வச்சிக்கிடணும். 

    குறள் 704:

    குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
    உறுப்போ ரனையரால் வேறு

    ஒருத்தன் மனசுல இருக்கத அவன் சொல்லாமலே தெரிஞ்சுக்கிடுத தெறம உள்ளவங்க மூஞ்சி,கை,கால்  (உறுப்புக்களால்) பாக்க ஒரேமாரி தோணினாலும் அறிவால வித்தியாசப்படுவாக. 

    குறள் 705:

    குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
    என்ன பயத்தவோ கண்

    அடுத்தவனோட மொகமும் கண்ணும் காட்டுத ஜாடைய (குறிப்ப) புரிஞ்சுக்க முடியாமப் போவுத சமயம் ஒசந்த உறுப்பான கண்ணு இருந்து என்ன பிரயோசனம்? 

    குறள் 706:

    அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
    கடுத்தது காட்டும் முகம்

    அடுத்தாப்ல இருக்குதத தனக்குள்ளார காட்டுத பளிங்கு கணக்கா ஒருத்தன் மனசுல உள்ளத அவன் மொகம் காட்டிப்போடும். 

    குறள் 707:

    முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
    காயினும் தான்முந் துறும்

    ஒருத்தன் எதுமேலயும் ஆசவச்சாலோ வெறுத்தாலோ முந்திக்கிட்டு அதக் காட்டிக்கொடுத்துப் போடுத மொகத்த விட அறிவாளி வேற ஏதும் உண்டா? 

    குறள் 708:

    முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
    உற்ற துணர்வார்ப் பெறின்

    தன் மனசுல இருக்கத மொகத்தப்பாத்து அறிஞ்சுக்கிடுதவர தொணையா வச்சிருக்கவன் அவர் மொகத்துக்கு நேரா நின்னாப் போதும். 

    குறள் 709:

    பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
    வகைமை உணர்வார்ப் பெறின்

    கண் பார்வைல இருக்க வித்தியாசத்த புரிஞ்சிக்கிடுதவங்க அடுத்தவங்களோட கண்ணப் பாத்தே அவுக மனசுல இருக்கது நட்பா பகையான்னு தெரிஞ்சுக்கிடுவாங்க.  

    குறள் 710:

    நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்
    கண்ணல்ல தில்லை பிற

    நாங்க நுண் அறிவுடையவர்கள் னு சொல்லிக்கிடுதவங்க மத்தவங்க மனசுல இருக்கத தெரிஞ்சுக்கிடுதக்கு ஒபயோகிக்க சாதனம் என்னன்னு பாத்தா அவுக கண்ணு தான். 

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 70

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 70

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

    குறள் 691:

    அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
    இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

    ராசா கூட இருக்கவங்க நெருப்புல குளிர் காயுதது போல கிட்டக்க போவாமலும் தூர வெலகாமலும் இடையுல நின்னு பழகணும். 

    குறள் 692:

    மன்னர் விழைப விழையாமை மன்னரான்
    மன்னிய ஆக்கந் தரும்

    ராசா ஆசப்படுதது தான் தனக்கும் வேணும்னு நெனையாம இருக்கவனுக்கு ராசாவால நெலையான செல்வம் கிடைச்சிக்கிடும்.

    குறள் 693:

    போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
    தேற்றுதல் யார்க்கும் அரிது

    ராசாகிட்டேந்து தன்னயக் காத்துக்கிட நெனைக்கவன் தப்பான காரியத்த செய்யக் கூடாது. ஒருக்கா ராசாவுக்கு சந்தேகம் தோணிப்போச்சுதுன்னா  அதத் தெளிய வைக்கது சங்கடந்தான். 

    குறள் 694:

    செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
    ஆன்ற பெரியா ரகத்து

    பெரிய மனுசங்க முன்ன மத்தவன் காதுல ரகசியம் சொல்லுததும், அவன் கூட சேந்து சிரிக்குததும் கூடாது. 

    குறள் 695:

    எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
    விட்டக்காற் கேட்க மறை

    பதவியில இருக்கவங்க ரகசியமா பேசுதப்போ நின்னு ஒட்டு கேக்கக் கூடாது. பொறவு அது என்னனு கேட்டு தொந்தரவும் செய்யக்கூடாது. அவுகளா சொல்லுத வரைக்கும் விட்டுப்போடணும். 

    குறள் 696:

    குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
    வேண்டுப வேட்பச் சொலல்

    ஒருத்தங்களோட மனசப் புரிஞ்சிக்கிட்டு ஏத்த காலத்துல மனசுஒப்பாதத நீக்கிப்போட்டு நல்லதா அவுக விரும்புதாமாரி சொல்லணும். .     

    குறள் 697:

    வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல்

    விருப்பப்பட்டு கேட்டாக ன்னாலும் உருப்படியான விசயத்த மட்டும் சொல்லிப்போட்டு உருப்படாதத விட்டுப்போடணும். 

    குறள் 698:

    இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
    ஒளியோ டொழுகப் படும்

    பதவியில இருக்கவங்கள எனக்கு இன்ன மொறையில சொந்தம், என்னைய விட இளையவன் தான்னு எளக்காரமா பேசாம அவுகளுக்கு இருக்க புகழ நெனச்சி பாத்து நடந்துக்கிடணும். 

    குறள் 699:

    கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
    துளக்கற்ற காட்சி யவர்

    தெளிஞ்ச புத்திக்காரங்க ராசாக்குதான் நம்மளப் புடிக்குமே ன்னு நெனச்சு துணிஞ்சு அவருக்கு பிடிக்காத காரியத்த செய்ய மாட்டாக.  

    குறள் 700:

    பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் 
    கெழுதகைமை கேடு தரும்

    ராசாகிட்ட நெருக்கமா பழகுதோம் ங்குத காரணத்த வச்சிக்கிட்டு தகுதியில்லாத செயலச் செஞ்சாம்னா அது கெடுதலாதான் முடியும்.  

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 69

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 69

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்

    69. தூது

    குறள் 681:

    அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
    பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

    நேசமான கொணமும், நல்ல குடிப்பொறப்பும், ராசா விரும்புதது கணக்கா நல்ல பழக்கவழக்கமும் இருக்கது தான் தூதருக்கு உண்டான தகுதிங்க. 

    குறள் 682:

    அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
    கின்றி யமையாத மூன்று

    தூது போவுதவுங்களுக்கு தேவப்படுத மூணு முக்கியமான பண்பு  நேசம், புத்திசாலித்தனம், பேச்சுத்தெறமை.

    குறள் 683:

    நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் 
    வென்றி வினையுரைப்பான் பண்பு

    வேத்து நாட்டுக்குப் போயி தன் நாட்டு ராசா செயிக்கது கணக்கா சேதி சொல்லுதவன் நூல்களப்படிச்சு அறிஞ்ச அறிவாளிய விட தெறமசாலிய இருக்கணும். 

    குறள் 684:

    அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
    செறிவுடையான் செல்க வினைக்கு

    நல்ல புத்தி, பாக்கவங்க விரும்புத தோற்றம், நல்ல படிப்பு இந்த மூணு பொருத்தமும் இருக்கவன் தான் தூது போவணும்.

    குறள் 685:

    தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
    நன்றி பயப்பதாந் தூது

    கோவத்த உண்டாக்காம சந்தோசம் கொடுக்குத மாதிரி இருக்க சேதிகளாப் பாத்து ஒண்ணுபோலத் தொகுத்து வெறுப்பு ஏத்துதத ஒதுக்கிப்போட்டு உபயோகமா சொல்லுததே நல்ல தூதருக்கு அழகு.

    குறள் 686:

    கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் 
    தக்க தறிவதாந் தூது

    படிச்சவனாவும் எரிச்சுப்போடுதமாரி பாக்க பகையாளிக்கு பயந்துகிடாம, அவன் மனசுல பதியுதமாரி சொல்லவேண்டியதச் சொல்லி தெரிஞ்சுக்கிடவேண்டியத தெரிஞ்சுக்கிட்டு வருதவன் தான் ஒசந்த தூதன். 

    குறள் 687:

    கடனறிந்து காலங் கருதி இடனறிந்
    தெண்ணி உரைப்பான் தலை

    தான் செய்ய வேண்டிய கடம என்னன்னு தெரிஞ்ச பொறவு தகுந்த காலத்தையும் எடத்தையும் பாத்து வச்சி சொல்ல வேண்டியதச் சொல்லுதவன் தான் சிறந்த தூதன். 

    குறள் 688:

    தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
    வாய்மை வழியுரைப்பான் பண்பு

    துணிச்சல். தொணை, ஒழுக்கம் இந்த மூணும் தூதுவர்க்கு தேவையானவைகள் னு சொல்லுதாங்க. 

    குறள் 689:

    விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
    வாய்சோரா வன்க ணவன்

    ஒரு ராசா சொல்லிவிட்ட சேதிய இன்னொரு ராசா கிட்ட சொல்லுதப்போ தெரியாம கூட தப்பான வார்த்தைகளச் சேத்து சொல்லாம இருக்கவனால தான் தூது போவ ஏலும். 

    குறள் 690:

    இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் 
    குறுதி பயப்பதாம் தூது

    தூது போன எடத்துல ஏதும் ஆபத்து வந்து தான் செத்தா கூட பரவாயில்ல தன் ராசாக்கு நல்லது செய்யணும்னு நெனைக்கவன் தான் தூதன்.

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 68

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 68

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    68.வினைச்செயல் வகை

    குறள் 671:

    சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
    தாழ்ச்சியுள் தங்குதல் தீது

    ஒரு காரியத்த செய்யுதப்போ சாதகபாதகத்த யோசிச்சு முடிவெடுக்கணும். முடிவு எடுத்த பொறவு காரியத்த கெடப்புல போடுதது தப்பா போயிடும்

    குறள் 672:

    தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
    தூங்காது செய்யும் வினை

    நிதானமா செய்ய வேண்டியத தாமதமா செய்யலாம். வெரசலா செய்ய வேண்டியத தாமதமா செய்யக்கூடாது. 

    குறள் 673:

    ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
    செல்லும்வாய் நோக்கிச் செயல்

    ஏலுத (இயலுகின்ற) எடத்துல காரியத்த செஞ்சு முடிக்கது நல்லது. ஏலாத எடத்துல அதுக்கேத்த வழியத் தெரிஞ்சுக்கிட்டு செய்யுதது நல்லது. 

    குறள் 674:

    வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
    தீயெச்சம் போலத் தெறும்

    செய்ய ஏத்துக்கிட்ட காரியம், அழிச்சுப் போட நெனச்ச பகை ரெண்டுலயும் முடிக்காம வைக்குத மிச்சம் பாதில அணைக்காம விட்ட தீயப் போல வளந்து கெடுதல வெளைவிக்கும்.

    குறள் 675:

    பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
    இருள்தீர எண்ணிச் செயல்

    ஒரு காரியத்த செய்யுததுக்கு முன்ன அதுக்குத் தேவைப்படுத பணம், சாமான், காலம், இடம், எப்டி செய்யணும் ங்குத மொறை இந்த அஞ்சையும் சந்தேகமில்லாம யோசிச்சு பொறவு தொடங்கணும். 

    குறள் 676:

    முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
    படுபயனும் பார்த்துச் செயல்

    காரியத்த எப்டி முடிக்கணும் ங்கதையும், அதச் செய்யுதப்போ வரப்போகுத தடங்கலையும், காரியம் முடிஞ்ச பொறவு கெடைக்கப்போவுத பயனையும் நெனைச்சுப்பாத்து செய்யணும்.   

    குறள் 677:

    செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
    உள்ளறிவான் உள்ளங் கொளல்

    ஒரு காரியத்த தொடங்குதப்போ அத முன்னமே செஞ்சவங்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு செய்யுதது தான் மொறை. 

    குறள் 678:

    வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று

    ஒரு காரியத்த செய்யுதப்போ அத வச்சி இன்னொரு காரியத்தயும் நடத்திக்கிடதது  ஒரு யானைய வச்சி இன்னொரு யானைய பிடிக்குதது கணக்கா ஆவும்.   

    குறள் 679:

    நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
    ஒட்டாரை ஒட்டிக் கொளல்

    பகையாளியா இருக்கவங்கள சேத்துக்கிடதது சேக்காளிங்களுக்கு தேவைப்படுதத செஞ்சு கொடுக்கதக் காட்டிலும் வெரசலா செய்ய வேண்டிய விசயம். 

    குறள் 680:

    உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற் 
    கொள்வர் பெரியார்ப் பணிந்து

    தங்கள விட பலசாலிய  எதித்து நிக்கதுக்கு கூட இருக்கவங்களே நடுங்குதப்போ  எதிர்பாக்குத பலன் கெடைக்கும்னு தெரிஞ்சா அவுக பலசாலிய பணிஞ்சு ஏத்துக்கிடுவாக. 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 67

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 67

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    67.வினைத்திட்பம் 

    குறள் 661:

    வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
    மற்றைய எல்லாம் பிற

    செயல செஞ்சு முடிக்குணும்ங்குத உறுதி அவன் நெஞ்சுறுதி மட்டுந்தான். மத்ததெல்லாம் வேற தான். 

    குறள் 662:

    ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

    தடங்கல் வரமுன்ன தடுக்கணும். வந்துடுச்சின்னா அந்தால கெடந்து தொவண்டு போவாம இருக்கணும். இந்த ரெண்டும் அறிவுள்ளவங்களோட கொள்க. 

    குறள் 663:

    கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
    எற்றா விழுமந் தரும்

    ஒரு செயல எப்பமும் செஞ்சு முடிச்ச பொறவுதான் வெளிப்படுத்தணும். இடையில வெளிப்படுத்தினா முடிக்க முடியாம தடங்கலா வந்து நிக்கும்.  

    குறள் 664:

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்

    இந்தக் காரியத்த இப்டி செஞ்சு முடிக்கலாம்னு சொல்லுதது எல்லாருக்கும் சுளுவு. சொன்னமேனிக்கு செஞ்சு முடிக்கது தான் சிரமம்.  

    குறள் 665:

    வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்

    செய்யுத தெறமையில பெரும பெத்து ஒசந்தவங்களோட செயல்உறுதி நாட்ட ஆளுத ராசா வரைக்கும் பரவி மதிக்கப்படும்.

    குறள் 666:

    எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்

    ஒண்ணச் செய்யணும்னு நெனைக்கவங்க நெஞ்சுறுதி உள்ளவங்களா இருந்தாங்கன்னா அவங்க நெனச்சத நெனச்சபடி அடஞ்சிக்கிடுவாங்க.

    குறள் 667:

    உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
    கச்சாணி யன்னார் உடைத்து

    உருளுத தேருக்கு வடிவுல சிறுசா இருக்க அச்சாணி எம்புட்டு முக்கியமோ அது கணக்கா தான் ஒலகத்துல மன உறுதி உள்ளவங்களும்.  அவுக உருவத்த வச்சி எளக்காரம் செய்யக்கூடாது. 

    குறள் 668:

    கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கங் கடிந்து செயல்

    கொளம்பாம தெளிவா துணிஞ்சு ஏத்துக்கிட்ட தொழில அசராம, கெடப்புல போடம வெரசலா செஞ்சு முடிக்கணும். 

    குறள் 669:

    துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை

    முடிக்கையில மகிழ்ச்சி கெடைக்கும்னு தெரிஞ்சா ஒரு செயல சங்கடப்பட்டுக்கிட்டேன்னாலும் செஞ்சு முடிக்கணும். 

    குறள் 670:

    எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
    வேண்டாரை வேண்டா துலகு

    வேற எந்த வகையில உறுதி இருந்தாலும் காரியம் செய்யுததுல  உறுதியில்லாதவர ஒலகம் விரும்பாது. 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 66

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 66

    -நாங்குநேரி வாசஶ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    65.வினைத் தூய்மை

    குறள் 651:

    துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
    வேண்டிய எல்லாந் தரும்

    ஒருத்தனுக்கு நல்ல கூட்டாளிங்களால செல்வம் கெடைக்கும். சேந்து செய்யுத நல்ல காரியங்களால எல்லா நன்மையும் கெடைக்கும். 

    குறள் 652:

    என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
    நன்றி பயவா வினை

    புகழையும், அறத்தையும் தராத கெட்ட செயல்கள எந்த நெலமயிலயும்செய்யாம விட்டுப் போடணும். 

    குறள் 653:

    ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
    ஆஅது மென்னு மவர்

    ஒசத்தியான வாழ்க்க வாழ ஆசப்படுதவங்க தான் செய்யுத காரியத்தால புகழுக்கு பாதகம் வராம பாத்துக்கிடணும்.

    குறள் 654:

    இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
    நடுக்கற்ற காட்சி யவர்

    தடுமாறுத கொணம் இல்லாதவங்க சங்கடத்துல மாட்டிக்கிட்டாலும் தாழ்த்தியான செயல செய்ய மாட்டாங்க. 

    குறள் 655:

    எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
    மற்றன்ன செய்யாமை நன்று

    இப்டி செஞ்சுட்டோமேனு நோகுத அளவு செயலச் செய்யக் கூடாது. ஒருக்க செஞ்சிட்டா அத மறுபடி செய்யாம இருக்கது நல்லது. 

    குறள் 656:

    ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை

    பெத்த ஆத்தா பசிச்சிருக்கதப் பாத்தாலும் அதுக்காவ பழிபாவத்த செய்யக் கூடாது. 

    குறள் 657:

    பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
    கழிநல் குரவே தலை

    பழி பாவத்தச் செஞ்சு வக்கணைய வாழுததக் காட்டிலும் நல்லதச் செஞ்சிப்போட்டு ஏழையா வாழுதது மேல். 

    குறள் 658:

    கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
    முடிந்தாலும் பீழை தரும்

    ஆவாது னு ஒதுக்கி வச்ச செயல ஒருத்தன் செஞ்சுமுடிச்சாலும் அதால அவனுக்கு சங்கடந்தான் வெளையும்.  

    குறள் 659:

    அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் 
    பிற்பயக்கும் நற்பா லவை

    மத்தவன அழுவ வச்சி சேத்த சொத்து பூராவும் அழுதுகிட்டே உட்டுப்போயிடும். நல்ல மொறையில சேத்தது கைவிட்டுப் போச்சுதுன்னாலும் திரும்ப வந்து சேந்துக்கிடும்.

    குறள் 660:

    சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் 
    கலத்துணீர் பெய்திரீஇ யற்று

    தப்பான மொறையில பொருளச் சேத்து காப்பாத்த நெனையுதது பச்ச மண்ணால செஞ்ச பாத்திரத்துல தண்ணி மோந்து வச்சது கணக்கா தான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 65

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 65

    -நாங்குநேரி வாசஶ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    65.சொல்வன்மை

    குறள் 641:

    நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத் துள்ளதூஉம் அன்று

    காரியத்த சாதிக்குத மாரி பேசுததும் ஒரு சொத்து தான். அது மத்த எல்லாச் சொத்தையும் விட ஒசந்தது.

    குறள் 642:

    ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
    காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

    ஒருத்தனுக்கு நல்லதும் கெட்டதும் அவன் பேசுத பேச்சுனால வாரதால சொல்லுத வார்த்தையில கொறையில்லாமப் பாத்துக்கிடணும். 

    குறள் 643:

    கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்

    கேக்குதவங்கள வசப்படுத்தி, கேக்காதவங்களும் கேக்கணும்னு விரும்புத அளவுக்கு பேசுததே சொல்வன்மை.  

    குறள் 644:

    திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங் கில்

    என்ன பேசுதோம்னு உணந்துக்கிட்டு பேசணும். அந்த சொல்வன்மையப் போல அறமும் பொருளும் வேற இல்ல.

    குறள் 645:

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

    தான் சொல்லுதத செயிக்க வேற சொல்லு இல்லன்னு தெரிஞ்சுக்கிட்ட பொறவு தான் அத சொல்லணும். 

    குறள் 646:

    வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
    மாட்சியின் மாசற்றார் கோள்

    மத்தவங்களுக்குபிடிச்சா மாரி பேசுததும், அவுக பேசுதப்போ கவனிச்சி புரிஞ்சிக்கிடுததும் தான் அறிவாளிங்களோட செயல். 

    குறள் 647:

    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது

    தான் நெனைக்குதத மத்தவங்க ஏத்துக்கிடதாப்போல சொணக்கமில்லாம சொல்லி, துணிச்சக்காரனாவும் இருக்கவன எதித்து யாராலயும் செயிக்க முடியாது.

    குறள் 648:

    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்

    வகையா இனிக்கப் பேசுதவர் ஏவுத வேலய ஒலகத்தார் உடனடியா கேட்டு நடப்பாங்க. 

    குறள் 649:

    பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
    சிலசொல்லல் தேற்றா தவர்

    தப்பில்லாம கொஞ்சமா பேசி விளங்க வைக்கத்தெரியாதவங்க புரிய வைக்கதுக்காவ நெறையா பேசிக்கிட்டேயிருப்பாக.  

    குறள் 650:

    இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
    துணர விரிந்துரையா தார்

    தான் படிச்சத மத்தவுக விளங்கிக்கிடுத அளவுக்கு எடுத்துச் சொல்லத் தெரியாதவங்க கொத்துக் கொத்தா பூத்திருந்தாலும் வாசனை இல்லாத பூ கணக்கா தான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 64

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 64

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் 

    64.அமைச்சு

    குறள் 631:

    கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்ட தமைச்சு

    ஒரு செயலச் செய்யத்தேவைப்படுத பொருள், ஏத்த காலம், செய்யுத வகை, எல்லாத்தையும் சோதிச்சுப்பாத்து செயல்படுத்துதவன் தான் ஒசந்த அமைச்சர்.  

    குறள் 632:

    வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
    டைந்துடன் மாண்ட தமைச்சு

    செயலுக்கு ஏத்த நெஞ்சுறுதி, மக்களக் காக்குதது, தகுந்த நீதி நூல்களக் கத்துக்கிடுதது ,படிச்சவங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிடுதது, அசராத முயற்சி இந்த அஞ்சும் இருக்கவங்க தான் அமைச்சர்.

    குறள் 633:

    பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
    பொருத்தலும் வல்ல தமைச்சு

    பகையாளிக்கு தோணையா இருக்கவன பிரிக்கதும் , தன் நாட்டுக்கு தொணையா இருக்கவங்களக் காக்குததும், பொறவு பிரிஞ்சவன் திருந்திட்டாம்னா அவனச் சேத்துக்கிடததுலயும் தெறமசாலியா இருக்கவன் தான் அமைச்சர். 

    குறள் 634:

    தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
    சொல்லலும் வல்ல தமைச்சு

    செய்ய வேண்டியதத் தெரிஞ்சுக்கிட்டு அதச் செய்யுததுக்கு ஏத்த வழிமொறையக் கண்டுபிடிக்கதும் தான் நெனைக்குதத துணிச்சலா சொல்லதுதலயும் தெறமசாலிய இருக்கவன் தான் அமைச்சன்.

    குறள் 635:

    அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
    திறனறிந்தான் தேர்ச்சித் துணை

    அறத்தை அறிஞ்சுக்கிட்டு நெறையா படிச்சுபோட்டு அடக்கமா இருந்து செய்யுத முறை தெரிஞ்சு இருக்கவர்கிட்ட தான் கலந்துபேசி முடிவு எடுக்க முடியும்.

    குறள் 636:

    மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
    யாவுள முன்னிற் பவை

    படிச்ச படிப்புக்கு மேல சொந்த புத்திசாலித்தனமும் இருக்கவங்கள எந்த சூது எதித்து நிக்க முடியும்?  முடியாது. 

    குறள் 637:

    செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
    தியற்கை அறிந்து செயல்

    படிச்ச படிப்பால எல்லாந்தெரிஞ்சாலும் ஒலக நடப்ப உணந்துகிட்டு ஏத்தாமாரி செயலச் செய்யணும். 

    குறள் 638:

    அறிகொன் றறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன்

    சொன்னதையும் கேக்காம சொந்த புத்தியும் இல்லாம இருக்க ராசாக்கு அமைச்சன் துணிச்சலா நல்ல யோசனைகளச் சொல்லணும்.  

    குறள் 639:

    பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
    எழுபது கோடி உறும்

    தப்பான வழிமொறையச் சொல்லி வம்புல மாட்டி உடுத அமைச்சன் பக்கத்துல இருக்குதத விட எழுபது கோடி பகையாளிங்க பக்கத்துல இருக்கது எம்புட்டோ நன்மையக் கொடுக்கும். 

    குறள் 640:

    முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
    திறப்பா டிலாஅ தவர்

    எம்புட்டுத் திட்டம்போட்டு செயலத் தொடங்கினாலும் கூறுகெட்டவன் அத அரைகொறையாத் தான் செய்யுவான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள்

    இடுக்கண் அழியாமை

    குறள் 621:

    இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
    அடுத்தூர்வ தஃதொப்ப தில்

    சங்கடம் வரும்போது கலங்காம சிரிக்கணும். சங்கடத்த எதித்து செயிக்கதுக்கு அதப்போல வேற இல்ல. 

    குறள் 622:

    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்

    வெள்ளம் வருதது கணக்கா சங்கடம் கரபுரண்டு வந்துச்சின்னாகூட அறிவாளிங்க அதப்பத்தி மனசுக்குள்ளார நெனச்ச நேரத்துலயே அது விலகி ஓடிப்போவும். 

    குறள் 623:

    இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
    கிடும்பை படாஅ தவர்

    சங்கடம் வருதப்போ வருத்தப்படாம இருக்கவங்க சங்கடத்துக்கே சங்கடத்த உண்டாக்கி அதத் தோக்கடிப்பாங்க.

    குறள் 624:

    மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

    கரடுமுரடான பாதையில கூட வண்டிய இழுத்துக்கிட்டு போகுத காள மாடு கணக்கா அசராம முனையுதவனுக்கு வந்த சங்கடம் சங்கடப்பட்டு போவும். 

    குறள் 625:

    அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்

    தொடர்ச்சியா ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா சங்கடம் வந்தாலும் மனசு தளராதவனுக்கு அந்தச் சங்கடமே சங்கடப்பட்டுக்கிட்டு போயிடும். 

    குறள் 626:

    அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
    றோம்புதல் தேற்றா தவர்

    சொத்துசொகம் சேரும்போது அதுக்காக சந்தோசப்பட்டு காப்பாத்திவச்சிக்கிடாதவங்க அது கைவிட்டுப்போவும் போது வெசனப்படுவாங்களோ?

    குறள் 627:

    இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
    கையாறாக் கொள்ளாதா மேல்

    ஒடம்பு துன்பத்துக்கு இடமானது னு அறிஞ்சுக்கிட்ட பெரியவங்க துன்பம் வருதப்போ அத துன்பமாவே நெனைச்சுக்கிட மாட்டாங்க.  

    குறள் 628:

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசத்த தேடி அலையாம துன்பத்தையும் சாதாரணமா எடுத்துக்கிடுதவன் மனசு தளர்ந்து சங்கடப்பட மாட்டான்.

    குறள் 629:

    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசம் வார நேரம் ஆட்டம் போடாதவன் சங்கடம் வரும்போது துக்கப்படமாட்டான். 

    குறள் 630:

    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
    ஒன்னார் விழையுஞ் சிறப்பு

    சங்கடத்த சந்தோசம் னு நெனைக்குத நெஞ்சுரம் உள்ளவங்களுக்கு பகையாளியும் பாராட்டுத பெரும வந்து சேரும். 

    (அடுத்தாப்லையும் வரும்)

    Share