Tag: இசைக்கவி ரமணன்

  • தீர்ந்தேன் நான்

    இசைக்கவி ரமணன்

    kamakshi

    வானில் வசிப்பது தெரியாமல்தான்
    வண்ண நிலவு சுடர்கிறது
    மீனின் கதையும் அப்படித்தான்
    இயற்கையில் எல்லாம் இப்படித்தான்
    நானிங்கு எதற்கு மயங்குகிறேன்?
    நானா எதையும் நடத்துகிறேன்?
    நமச்சிவாயன் முன்னிலையில்
    நந்திபோல் வாழ்ந்தால் நான் பிழைத்தேன்!

    தேனில் எழுதிய இதழ்களுடன்
    தேவி ஒருத்தி இருக்கின்றாள்
    தேடுவோர்க்குப் புதிராவாள்
    தெரிந்தவருக்கோ பதிலாவாள்
    கானில் அவளே பெருமெளனம்
    கடலில் அவளே பேரோசை
    கவிதையில் இரண்டும் அவளாகிக்
    கலந்து விரிந்து சிரிக்கின்றாள்!

    நெற்றியில் கமலக் கரம்வைத்து
    நித்திரை கலைத்து நீங்குகிறாள்
    நெஞ்சின் ஒவ்வொரு நினைவினையும்
    நேரே அவள்தான் தாங்குகிறாள்
    பற்றிய வினையை நீக்குகிறாள்
    பாவ நிழலையும் போக்குகிறாள்
    பாமரன் எனக்குப் பரம்காட்டிப்
    பல்லாங் குழியாய்ச் சிரிக்கின்றாள்!

    உருப்படாத கூளத்தை
    உயர்ந்த வீட்டில் வைத்திருந்தேன்
    உயிர்க்குயிரான வடிவத்தை
    உடைத்தும் வருந்தா துண்டிருந்தேன்
    விருத்த வடிவில் சயனத்தில்
    விவரம் கேட்டாள் சினந்தேன் நான்
    வீணனை ராஜா என அழைத்தாள்
    விழியைத் திறந்து விம்மவைத்தாள்

    சித்துகள் நித்தம் ஆடுகிறாள்
    சிறிதே உயிரைச் சூடுகிறாள்
    சென்ற கணக்கின் விதம் காட்டி
    சேர்த்த பிணக்கை அழிக்கின்றாள்
    மத்து கடைந்தாள் நொந்தமனம்
    மறுகணமே அது நந்தவனம்
    மல்லாந்தவள்விழி பார்க்கின்றேன்
    மடியின் மையலில் ஆடுகிறேன்

    இருவினை என்பதும் இனியில்லை
    இரவும் பகலும் தனியில்லை
    இன்பமும் துன்பமும் இல்லாத
    இவளே இவளே என் எல்லை
    தெருவின் முனையில் திருக்கோயில்
    தேவ தருக்களின் ஒருகாவில்
    தெரிந்த வழியே சேர்ந்தேன் நான்
    தேவியின் அருளால் தீர்ந்தேன் நான்

    Share
  • விடாது வந்த வினையெலாம் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

    விடாது வந்த வினையெலாம்
    தொடாமல் எங்கு சென்றன?
    தொடாத அந்த உயர்வெலாம்
    விடாமல் என்னைத் தொடர்ந்தன
    படாமல் பட்ட பாடெலாம்
    அவன் கை பட்டு நின்றன (விடாது)

    மனத்தில் இன்று வரையிலும்
    இலாத மெளனம் வந்தது
    நினைப்பு நின்ற போதிலும்
    நில்லாமல் இன்பம் நீண்டது

    வனத்திலே சுனைக்குளே
    இனித்திடும் தனிமை வந்தது
    நினைப்பிலே நிஜத்திலே
    நிழலில்கூட இனிமை வந்தது
    எனக்குளே எனக்குளே எனக்குளே எல்லாம் நின்றது (விடாது)6

    நினைத்ததே நடந்ததால்
    நெஞ்சம் வேர்த்தது
    நிழல்களும் நிஜங்களும்
    கொஞ்சிப் பார்த்தது

    வனத்திலே தனித்தவோர்
    கணத்திலே யாவும் நேர்ந்தது
    தனித்தவோர் கணத்திலே
    வளைக்கரம் வழிமறித்தது

    கடலொடுங்கி மலையெழுந்து
    மரம்விளைந்து மலர்சிரித்தது
    (விடாது)

    Share
  • ஜாகேச்வரத்தில் நான்…

    இசைக்கவி ரமணன்

    BAJNATH

     

     

    ஆடா மரங்கள் அணிவகுத்து நின்றிருக்கும்
    மூடாத வானில் முகடு முளைத்துவரும்
    நாடா நலம்யாவும் நாடி நமையழைத்து
    வீடாய் விளங்கும் வியன்மிகுஜா கேச்வரத்தில்

    கோடானு கோடி கொடியவினை யால்பட்ட
    பாடாவும் தூளாகிப் பாட்டாகப் பல்கிவர
    ஈடேது மில்லாத இன்பத் தனிமையிலே
    ஓடெல்லாம் வானாய் உருகி இனிக்குதம்மா!

    காயாத பிஞ்சு கனியாவ தென்றென்றே
    வேயாத வானை வெறித்தபடிப் பார்த்தவன்தான்
    தாயத்தே தோற்றதெல்லாம் தான்மீண்டும் பெற்றதாய், ஓர்
    மாயத் தலைவி மடியில் விழுந்தெழுந்தேன்

    மாயத் திரைநீக்கி, மன்னவனாய் என்னையாக்கி
    நேயத் தறியினிலே நெய்ததெல்லாம் நெஞ்சாக்கி
    காயைக் கனியாக்கி, சாறாக்கி, கிண்ணத்தே
    தோய அதையூற்றித் தூக்கினாள் வான்சிலிர்க்க!
    வெட்ட வெளியெங்கும் விந்தை மிகுநீலம்
    கொட்டிக் கிடக்க, குளிர்மலையின் கூர்முடியைத்
    தொட்டுவந்த காற்று துளைக்கும் உயிர்மீது
    பட்ட கரத்தைப் பராசக்தி என்பேனா?

    கொட்ட மடிக்கின்ற கூத்தன்கை என்பேனா?
    பட்ட மறுந்த பரவசம் என்பேனா?
    நட்டநடு நெஞ்சில் நமச்சிவா யன்வந்து
    தொட்டுச் சிரிக்கின்ற தூயவுண்மை என்பேனா?

    நாள்முடிந்து, ஓடை கருத்த இரவினிலே
    தாள்பதித்து சம்போ நடமாடும் பூமியிது
    தோள்தொட்டுப் பின்னே முறுவலித்து, பேச்சுக்குச்
    சூள்கொட்டிச் சூலமுடன் கூடவரும் சாமியிது

    நிற்பனவெல் லாம்வெறும் நெட்டை மரங்களல்ல
    விற்பனர்கள்! வேத விழிதிறந்தோர்! சத்தியத்தைச்
    சொற்பட வைத்துச் சுருதி இசைத்தவர்கள்!
    முற்பட்ட மாமனிதர்! முன்னோர்கள்! மாமுனிவர்!

    பண்டை உமையரசி பாதச் சதங்கையெனத்
    தண்டை குலுங்கச் சடகங்கா செல்கிறது
    உண்மையினைக் கண்டுரைத்த ஒப்பற்ற சங்கரன்
    தண்டுவைத்த கோயிலைத் தான்தழுவி நீள்கிறது

    கண்ணெதிரே தேவியின் கன்னம் வியர்க்கிறது
    விண்குலவும் பாதத்தில் வெள்ளிநகம் பூக்கிறது
    மண்ணதிர மாதேவன் மத்தநடை கேட்கிறது
    பண்ணவொன்று மின்றிப் பரநிலை வாய்க்கிறது

    வேந்தரும் யோகியரும் வித்தகரும் தாமுவந்து
    சார்ந்த தவநிலையம்! சார்ந்தோர்க்கு முக்தியை
    ஏந்தி வழங்க எமதுசிவன் கால்நடந்து
    பூந்துகள் காற்றில் பொலியும்ஜா கேச்வரத்தில்

    ஏழையைப் பிள்ளையென ஏற்ற குருநாதன்
    வாழவைத்துத் தான்மகிழ வையத்தில் தானிறங்கிச்
    சூழ்ந்த வினைமலையைச் சுண்டுவிரல் தட்டியவன்
    ஆழ்ந்த தவம்கலையா தாசி மழைபொழிவோன்

    கூட்டிவந்தான்; தானாய்க் கொலுவிருக்கும் தேவனுடன்
    கூட்டிவைத்தான்; நான்முயன்று கூடாத இன்பத்தைக்
    கூட்டுக்குள் கொட்டிவைத்தான் கூடாமல் எட்டிநின்றான்
    கூட்டுக்குள் வீட்டைப்போய்க் குந்தி இருக்கவைத்தான்

    எந்தைத் திருவருளால் ஏகாந்த வாசத்தில்
    சிந்தை தெளிவாச்சு; சித்தம் ஒளியாச்சு;
    முந்தை வினையோ முற்றும் விழுந்தாச்சு
    மொந்தைக்கள் ளின்தயவில் மொத்தமும் நேராச்சு

    தேகம் வசப்பட்டு சிந்தை உருப்பட்டோர்
    யோகம் ஒருப்பட்டு ஞானம் வெளிப்பட்டு
    சோகச் சுவடுமின்றி, சொல்லாய் அமர்ந்துள்ளேன்
    ஜாகேச் வரத்தில் தனித்து.

    Share
  • எனது தேவி புஷ்டிமா (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

     

    (ஜாகேஷ்வரில் மஹிஷாஸுர மர்த்தினியாய் வீற்றிருக்கும் அன்னை, புஷ்டி தேவி என்னும் பெயருடன் விளங்குகிறாள். தேசம் காக்க அவளைத் தேரிலேறி வரச்சொல்லும் கூட்டுப் பாடல்)

     

     

     

    எனது தேவி புஷ்டிமா
    எழுந்து வெளியில் வருக
    தேசம் காவல் வேண்டுதம்மா
    தேரில் ஏறி வருக
    உனது காலில் தலைபதித்து
    உயிரைத் தந்தோம் வருக
    உலகம் போற்ற உனது நாட்டை
    உயர்த்தி அருள வருக!

    உனது இமையை உயர்த்தி எம்மை
    ஒருமுறை நீ பார்க்க
    உடலை மனதை உயிரையெல்லாம்
    உன்னிடத்தில் சேர்க்க (எனது)

    கலியின் பழைய கடிகாரம்
    காளி முன்பு செல்லுமோ? நீ
    காலைவைத்தால் உன்னைத் தடுக்க
    எங்கும் எதுவும் எண்ணுமோ?
    புலியில் ஏறி வருக! சிங்கப்
    புரவி ஏறி வருக!
    புயலைப் போலச் சீறிச் சினந்து
    பொய்யைப் புடைக்க வருக!
    புனிதம் நெஞ்சில் தருக! (எனது)

    நீசர் கையில் வாடுதம்மா
    நீ நடந்த தேசம்
    நினைக்க நெஞ்சில் துணிவுமில்லை
    நிழலும் கூட மோசம்
    நேசம் வாழ வேண்டும், தர்ம
    நீதி வாழ வேண்டும்
    நீ வளர்த்த பிள்ளைகளாய்
    நாங்கள் மாறவேண்டும், பழைய
    நலங்கள் சேரவேண்டும்! (எனது)

    Share
  • நவராத்திரி நாயகி (2)

     

    இசைக்கவி ரமணன்

     

    nishkrodh-copy

    என் தேச நாயகி
    எனையாளும் உன்மணி
    என் நேச ராணி நீ
    எப்போதும் தேவை நீ

    என் நினைவும் என் கனவும்
    நின் விரலில் சோழி
    இடையில் நீ இளைப்பாறும்
    ஏகாந்த ரேழி
    உன் கண்கள் உன் கால்கள்
    போதாது நாழி
    உயிருக்குள் முத்தமிடும்
    ஒய்யாரத் தோழி
                                                                 (என் தேச)

    உற்றுற்றுப் பார்க்கின்ற
    ஒற்றை விழி ஒன்று
    ஒருபோதும் திறவாத
    மர்மவிழி ஒன்று
    பற்றுற்று நோகாமல்
    பாலிக்கும் நின்று
    பாதமே பாரென்று
    பணிக்கின்ற தின்று
    என்றைக்கும் என் வாழ்க்கை
    நீகொண்ட கொள்ளை
    எதுவந்து போனாலும்
    என்றுமுன் பிள்ளை
    சற்றைக்கும் அகலாமல்
    சந்நிதியில் வாழ்வேன்
    சங்கீத மணிகேட்டு
    மலர்ப்பாதம் வீழ்வேன்
                                                                     (என் தேச)

    Share
  • நவராத்திரி நாயகி (1)

     

    இசைக்கவி ரமணன்

     

    இமயமலை – ஜாகேஷ்வரிலிருந்து திரு இசைக்கவி ரமணன் அவர்களின் தேவி வந்தனம்!

     

    amman

    ஆடவருக தேவி
    ஆடவருக
    அகலாத வினையாவும்
    அடியோடு பெயர்ந்தோட
    பகலிரவு புரியாமல்
    பரவெள்ளம் தரைமேவ
    இகமோடு பரம்யாவும்
    இதழ்சேர்ந்து விளையாட
    சுகமான பலஜதிகள்
    சுவையாக நான்பாட
                                                               (ஆட)

     

    பாடவருக தேவி
    பாடவருக
    கண்ணோடு காதலென
    பண்ணோடு கவிபெருகி
    மண்ணோடு விண்குலவி
    மானுடம் இன்பமுற
    எண்ணங்கள் ஒவ்வொன்றும்
    இசையென்னும் சிறகேறி
    மண்வீட்டில் மகனோடு
    மடித்தாளம் போட்டபடி
                                                               (பாட) 

     

    கூடவருக! தேவி
    கூடவருக!
    கூட்டுக்குள் வானத்தை
    கொண்டுவருக தேக
    ஓட்டுக்குள் அமிழ்தத்தை
    ஊற்றிவிடுக என்றன்
    பாட்டுக்குள் பண்ணாகப்
    பண்ணில் கவியாக, இனி
    கூட்டுக்குள் மீளாமல்
    கூட வருக! என்றும்
    கூடவருக!

    Share
  • தசமஹா வித்யா – 7 ஆம் வித்யை – தூமாவதி

    இசைக்கவி ரமணன்

    நண்பர்களே

    வணக்கம்.

    நேற்று மாலை பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் மாதாந்திரத் தொடர் சொற்பொழிவில், தசமஹா வித்யையில் ஏழாவதாய் வரும் தூமாவதி தேவியைப் பற்றி சொற்பொழிவு சிறப்பாய் நடந்தது. மிகவும் கடினமான, பிரச்சினைக்குரிய, ஜனரஞ்சகமாகப் பேச வாய்ப்பே இல்லாத ஒரு துறை!

    என்னுடைய குறிப்புகளை உங்களுடன் இதோ பகிர்ந்து கொள்கிறேன்.

    அன்புடன்,
    ரமணன்

    தசமஹா வித்யா – 7 ஆம் வித்யை – தூமாவதி

    dhumavathi

    காளி, தாரா, த்ரிபுர சுந்தரி, ஸ்ரீ புவனேஸ்வரி, த்ரிபுர பைரவி, சின்ன மஸ்தா இவர்களைத் தொடர்ந்து இன்று நாம் தரிசிக்கவிருக்கின்ற தேவி தூமாவதி.

    அணுகுவதற்கோ, புரிந்துகொள்வதற்கோ, ஆராதிப்பதற்கோ மிகவும் சிக்கலான, ஆனால் தேவியின் அரிய வடிவங்களில் ஒன்று தூமாவதி.

    எல்லாம் பராசக்திதான் என்றாலும், எல்லா வடிவங்களும் எல்லோரும் தொழுவதற்கு ஏற்றதாக இருக்க முடியும் என்று எதிர்பார்க்கலாகாது.

    நமக்குப் புரியவில்லை என்பதால், ஒன்று தனது மகிமையை இழந்துவிடாது. நம்மால் தொழமுடியவில்லை என்பதால் அது தெய்வமில்லை என்றாகி விடாது.

    வேதப் பிரகடனம்

    ”ஆதியில் இருட்டை இருட்டு மறைத்தது. ஞானத்தின் எதிர்மறையான அஞ்ஞானமெனும் பெருங்கடல் இருந்தது. மனித ஞானம் என்னும் வெளிச்சம் புக முடியாத அக இருட்டு எங்கும் பரவி இருந்தது.” (ரிக்:10, 129, 3)

    ”ஆதியில் ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து இருப்பது எல்லாமே எழ்ந்தது.” (யஜுர் வேதத்தின் தைத்திரீய உபநிஷத்)

    “தேவர்களுக்கு முன்னால், இல்லாததிலிருந்து இருப்பது தோன்றியது.” (ரிக்:10, 72, 2)

    இருளும் ஒளியும்

    இல்லாததில் இருந்துதான் இருப்பது வந்தது என்றே எல்லா நூல்களும் கூறுகின்றன.

    ஒளியை, இருள் தோற்றுவிக்கிறதோ இல்லையோ, இருளிலிருந்துதான் ஒளி தோன்றுகிறது

    ஒளியின்றி ஒளியின்றி இருள்பிரியாது
    இருளின்றி இருளின்றி ஒளிபுரியாது, அந்த
    உண்மைக்கும் வண்ணங்கள் வேண்டும், அந்த
    வண்ணங்கள் உண்மையைத் தூண்டும்
    உள்ளம் பண்படுமானால், அது
    உண்மையில் வண்ணத்தைத் தாண்டும் (ஒளியின்றி)

    வானத்தை மறைத்தது மேகம், மழை
    வந்தபின் மறுபடி வானம்
    ஞானத்தை மறைத்தது மோகம், அவை
    நடுவினில் எழுந்தது மோனம், இங்கு
    ஒருவழி தானெனும் போது, அதில்
    மறுவழி சிறுவழி ஏது?
    நகரும் நகர்த்தும் ஓடம்! அந்த
    நடுநிலை அதுதான் பாடம்! (ஒளியின்றி)

    இசை, மெளனத்தைத் தோற்றுவிக்கவில்லை என்றாலும், இசையில் மனம் ஒரு லயம் பெறுகிறது.

    ஆன்மா எப்போதும் திருப்தியாகத்தான் இருக்கிறது. தன்னைத்தான் அறிந்தபடிதான் இருக்கிறது. இரண்டு நான்கள் இல்லை. இரண்டு ஆன்மாக்கள் இல்லை. இதைச் சொன்னது ரமணர் போன்ற ஞானியர் என்பதால் நம்புகிறோம்; ஆனால் உடனடியாக உணர்கிறோம் இல்லை. தடுமாறுகிறோம்.

    அறிவின் குரல், அறியாமையின் நடுவிலிருந்துதான் எழுகிறது.

    அறிவை நாடுகின்ற குரல், வேட்கையாக எழுகிறது.

    அறிவை நம்புகின்ற குரல், ஏக்கமாக எழுகிறது.

    அறிவின் குரல் பசுவின் குரலாக நின்று ஒலிக்கிறது. அறியாமையின் குரல் கன்றின் குரலாக விட்டு விட்டு ஒலிக்கிறது.

    நின்ற இடத்தில் நிற்கிறது பசு. நில்லாமல் அலை பாய்கிறது கன்று.

    பாரதி கேட்கிறான்:

    ஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய்? ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா? கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா?”

    ”இருள் நினக்குப் பகையா? இருள் நின் உணவுப் பொருளா? அது நின் காதலியா? இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா? நின்னைக் கண்டவுடன் நின்னொளி தானுங்கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா?”

    ”நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா? முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா? உங்களுக்கு மரண மில்லையா? நீங்கள் அமுதமா? உங்களைப் புகழ்கின்றேன்”

    ஞாயிறே,உன்னைப் புகழ்கின்றேன்?”

    இது, படைப்புக்கு முந்தைய நிலைமையை, அதாவது எதுவும் இல்லாத நிலையை அறிந்துவைத்திருப்பவனின் கேள்வி. அதனால்தான் அவனுக்கு ஒளியைக் கண்டபின்னும் இருட்டின் ஞாபகம் இருக்கிறது.

    ஆனால், முழுமையான ஒளியுமில்லை, முழுக்க முழுக்க இருளுமில்லை.

    இருட்டு எவ்வளவு பெரியது? மின்மினிப் பூச்சி எத்தனை சிறியது? மின்மினிப் பூச்சியால் இருட்டை விழுங்க முடியாது என்பதென்னமோ உண்மைதான் என்றாலும், அத்தனை பெரிய இருட்டால் இந்தச் சின்னஞ்சிறு மின்னம் மினியின் கண்சிமிட்டும் ஒளியை ஒருபோதும் விழுங்க முடிவதுமில்லை.

    ஒளி, ஒளிரத்தான் செய்கிறது.

    பாரதி கேட்ட அந்தக் கேள்வி, காலை நேரத்துக் கேள்வி. அதையே அவன் ராத்திரியில் எப்படிக் கேட்டிருக்கக் கூடும், யோசித்துப் பாருங்கள்:

    “இருளே! நீ என்ன செய்துவிட்டாய், சூரியனை விழுங்கிவிட்டாயா? நாளைக்கு அவன் உண்டா இல்லையா? நாங்கள் அவனை ஓயாமல் புகழ்வதைக் கேட்டு வெகுண்டு அவனை உண்டுவிட்டாயா? மோகவெறி தலைக்கேறி நீ கொடுத்த முத்தத்தில் அவன் மூர்ச்சை போட்டுவிட்டானா? உன் கலவி வெறி தாங்கொணாது, அவன் தலைகுப்புறக் கிடக்கிறானா என்ன?

    ”இதோ பாரடி இருட்டு ராணி! நீ நீங்குவதுமில்லை. ஒளியரசன் தூங்குவதும் இல்லை. நீங்கள் ஒருவர் மீதொருவர் தீராத காதல் கொண்டிருக்கிறீர்கள். நீங்களிருவருமே இன்றித் தீர்ந்து போகின்ற நிலை ஒன்று உண்டோ? அதைக் கற்பனை செய்து பார்க்கவும், கவிதையால் வருடவும் ஆர்வமாய்த்தான் இருக்கிறது. ஆனால், நீங்கள் ஒருவரை ஒருவர் ஒருபோதும் தீர்க்கவே முடியாது. உங்களை அப்படிப் பண்ணியிருக்கிறாள் பராசக்தி.”

    அறிவும் அறியாமையும்

    ஒளியும் இருளும் என்பது அறிவும் அறியாமையும் போலே.

    நம்முடைய அறிவு, நம்முடைய அறியாமையைத்தான் நீக்கும். படர்ந்து கிடக்கும் மாயையை அதனால் ஒன்றும் செய்ய முடியாது.

    நம்முடைய அறியாமை நம்முடைய அறிவைத்தான் மறைக்கும். பரந்து கிடக்கும் அறிவை அது பருகிவிட முடியாது.

    படைப்பு என்பதே இருளின் ஒளி விளையாட்டு,

    பிரளயம் என்பது ஒளியின் இருள் விளையாட்டு.

    வாழ்க்கை என்பது இருளும் ஒளியும் இடைவிடாது ஊடியும் கூடியும் ஆடும் சிங்கார விளையாட்டு.

    அதனால்தான் ஜகத் சித்திரத்தைக் காணுங்கால், ’சித்தினை அசித்துடன் இணைத்தாய், அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்’ என்று இருளுக்கும் ஒளிக்கும் தாயான பராசக்தியைப் பாடுகிறான் பாரதி.

    சொல்லுக்குச் சிக்காத சூதாட்டி ஒருத்தி
    சோழி குலுக்கையிலே, வானத்துல
    சொளகு பொடக்கையிலே, அண்டமெல்லாம்
    சொடக்கு எடுக்கையிலே

    மல்லுக்கு நிக்காம மனசும் குளுந்து
    மல்லாந்திருக்கையிலே, முத்து முத்து
    மழையும் விழுகையிலே, பட்டுப்பட்டு
    மலரும் விரிகையிலே

    கொட்டிக் கெடக்குற வெட்ட வெளியெங்கும்
    கோலகலமாச்சு, வெள்ளியிலே
    கோலாட்டம் போட்டாச்சு, எட்டுத் திக்கும்
    கொலுவையும் கேட்டாச்சு!

    பட்டப் பகலுல படுத்துக் கெடக்குது
    பழைய பரமசிவம்! கிட்டவந்து
    பாரடி என்ன சொகம்!
    நட்ட நடுநெஞ்சில் நல்ல நள்ளிரவில்
    கொட்டக்கொட்ட முழிச்சு, வண்ண வண்ணக்
    கோலங்களை விரிச்சு, இந்த
    அட்டக் கருப்பி ஆடுற கூத்துல
    அண்டம் பொளக்குதடி, அதிலொரு
    துண்டு தெறிக்குதடி, அது பாட்டில்
    விண்டு விழுந்ததடி!

    துள்ளிக் குதிக்குற வெள்ளிக் கெண்ட , ஆத்தைத்
    தொறக்க முடியுமா? ஒருதுளி
    மறக்க முடியுமா?

    பூவுல புகுந்து காயான புழுவுக்குப்
    போக்கிடம் ஒண்ணும் உண்டோ? பழத்தைப்
    பாக்க வழியுமுண்டோ?

    உள்ளே வளத்தவ ஊரில் கொடுத்தவ
    அள்ளி எடுப்பாளோ? இன்னும் கொஞ்சம்
    தள்ளிக் கெடுப்பாளோ? என்னிக்கிந்த
    முள்ளை முறிப்பாளோ?

    எப்படி மனதுக்கும், பிராணனுக்கும் மூலம் ஒன்றோ, அப்படியே, இருளுக்கும் ஒளிக்கும் தாய் ஒருத்தியே!

    ஒளிர்வதால் ஒளியைப் போற்றுகிறோம்

    கருப்பியான பராசக்தியைப் பாடப்போன பட்டர், ”உதிக்கின்ற செங்கதிர்” என்று ஏன் துவங்குகின்றார்?

    ஒளிக்குப் புறப்பாடு உண்டு. இருட்டு எப்போதும் படுத்தே கிடக்கும்.

    ஒளிக்குத் தோற்றமுண்டு. இருட்டுக்கு சொரூபம் கிடையாது. உண்மையில், இருட்டைக் காணவே முடியாது.

    ஒளிக்கு விளக்கமுண்டு. இருட்டுக்கு விளக்கமேது, துலக்கமேது, திகழ்ச்சியேது?

    இன்மையிலிருந்தே இருப்பு

    ஆனால், ஒளிக்கு இத்தனை சிறப்பிருப்பதற்குக் காரணம், இருள் என்று ஒன்று இருப்பதால். அதாவது இல்லாத ஒன்று இருப்பதால். அந்த இல்லாத ஒன்றாகிய இருட்டிலிருந்துதான், இருப்பு என்னும் ஒளி தோன்றுகின்றது.

    அந்த இல்லாதது என்பது மூன்று வகைப்படும்:

    1. ப்ராக் அபாவம் – இருப்பது எழுவதற்கு முந்தைய நிலை – விதையிலிருந்து மரம் எழும். அது எழுவதற்கு முன் அங்கே மரம் இல்லை

    2. ப்ரம்வம்ச அபாவம் – இருப்பது அழிந்த நிலை – பானை உடைந்ததால் இல்லாமல் போன நிலை

    3. அத்யந்த அபாவம் – எப்போதுமே இல்லாதது – முயல்கொம்பு, கானல் நீர்

    ஆனால், இல்லாதது என்பது அறவே இல்லாத சூனிய நிலை இல்லை:

    · விதையில் மரத்தின் கருத்து இருப்பதால்தான், அது உந்துவதால்தான் விதை விழிக்கிறது

    · மண்ணிலிருந்து விளைந்த பானை மண்ணிலேயே சேர்வது, தோற்றத்தின் மாற்றமே

    · நீரைக் கண்ட நினைப்புதான் கானலில் நீரைக் காண வைக்கிறது. கொம்பின் ஞாபகம்தான் அதை, அது இல்லாத முயலில் பொருத்திப் பார்க்கிறது

    அறியாமைக்கும் அறிவுக்கும்

    இருளுக்கும் ஒளிக்கும்

    அழிவுக்கும் தோற்றத்திற்கும்

    ப்ரளயத்திற்கும் படைப்புக்கும்

    இடையில் இருக்கின்ற இருட்டும் வெளிச்சமுமான நிலை,

    அழிவின் ஆயாசத்திற்கும் ஆக்கத்தின் ஊக்கத்திற்கும் இடையே உள்ள நிலை, அந்த நிலையின் உருவகம்தான் தூமாவதி!

    ஆதிப் பரம்பொருளின் ஊக்கம், அவளை
    அன்னையெனப்பணிதல் ஆக்கம் என்பான் பாரதி.

    சந்திகளின் உருவகம்

    இரவுக்கும் பகலுக்கும் இடையே ஒரு சந்தி, அது வைகறை
    பகலுக்கும் இரவுக்கும் நடுவெ ஒரு சந்தி, அது அந்திப் பொழுது
    முதல் சந்திக்கும், இரண்டாவது சந்திக்கும் மத்தியில் ஒரு சந்தி, அது உச்சிப் பொழுது

    அது போல, படைப்புக்கும், பிரளயத்துக்கும் இடையே ஒரு சந்தி
    பிரளயத்துக்கும், படைப்புக்கும் நடுவே ஒரு சந்தி

    தூமாவதி, இந்த இரண்டு சந்திகளைக் குறிக்கிறாள்.

    ஒன்று, படைப்புக்கு முந்தைய நிலை.
    இரண்டு, அழிவுக்கு முந்தைய நிலை.

    அழிவுக்குப் பின் நேரும் ஆயாசம் இளைப்பாறத் தோதான மடியாகவும் இருக்கிறாள்.

    ஆக்கத்திற்கு முன்னிருக்கும் எண்ணமற்ற தன்னந்தனிமையாகவும் இருக்கிறாள்.

    வீட்டைக் கூட்டும் விளக்குமாறாகவும் இருக்கிறாள். விளக்கு ஏற்றப்படும் முன் எண்ணெயும் திரியும் நிமிண்டும் நேரமாகவும் இருக்கிறாள்.

    அவள், அன்னையாகவோ, தந்தையாகவோ தோற்றம் அளிக்கவில்லை. நம்கண்ணில் தென்படாமல் நமக்குப் பலசேவைகள் செய்யும் ஒரு மூளி அத்தையாக இருக்கிறாள். (அம்மைக்கு நல்லவன் கண்டீர்! மூளி அத்தைக்கும் அங்ஙனே! என்று தீராத விளையாட்டுப் பிள்ளையைச் சினப்பான் பாரதி)

    வைணவத்தில் அவளே விஷ்ணு

    dhumavathi-sleeping-vishnu

    விதானமற்ற வானிலே வினோதமான கடலிலே
    சதா சுழன்றெழுந்தொளிர்ந்து சர்ப்பமான அணையிலே
    நிதானமான நீள்துயில் நிறம்தவிர்ந்த நீலமே!
    இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!

    மனம்தவிர்ந்த போதிலே மலர்ந்தெழுந்த ஜோதியே
    கனம்தவிர்ந்த சிந்தையில் கலந்திருக்கும் ஆதியே
    தினம்விளங்கும் புதுமையே திசைவியந்த பதுமையே
    இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!

    மிகத்தெரிந்த இன்பமே மிகைதொலைந்த உண்மையே
    நகத்தெரிந்த போதெலாம் நலம்பொழிந்த வண்மையே
    புகத்தெரிந்த வானிலே புகைமிளிர்ந்த தீபமே
    இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!

    மனோமயக்க மேமிகுந்த மாயவாழ்வி லேதினம்
    வினாவிலே வெதும்பினேன் வினைசுமந்து விம்மினேன்
    அனாதையாய் அலைந்தபோ தணைக்கவந்த அன்னையே
    இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!

    எனைத்தொலைத்த போதெலாம் மனத்திருந்து பொங்குமே
    வினைத்தடத்தையே புரட்டும் விந்தையுந்தன் சங்கமே
    நினைத்திருந்த தேநிலைத்த தால்நெகிழ்ந்த தென்னுயிர்
    இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!

    நிறைந்திருக்கும் வெள்ளமே நினைந்துறங்கும் கள்ளமே
    மறைந்திருக்கும் யாவையும் மலர்த்துமுந்தன் கண்களே
    விரைந்திருக்கும் வாழ்விலே விரிந்துகொண்ட வானமே
    இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!

    மஹாவினோதமே உனை மனம்களிப்பதெங்ஙனம்
    மனம் களித்த கொஞ்சமும் பதம்பிரிப்பதெங்ஙனம்
    பதங்களில் ததும்பும் தேனைப் பருகி வாழ்வதெங்ஙனம்
    இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!

    ஏற்றிவைத்த துன்கரம் ஏறவைத்த துன்பதம்
    போற்றவைத்த துன்முகம் போதவிழ்ந்த தென்மனம்
    மாற்றிவைத்த கருணையில் மாலையான கண்களே
    இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!

    அலுப்பிலாத அமிழ்தம் நீ அயர்விலாத தமிழும் நீ
    சலிப்பிலாத சாந்தி நீ சதாயிழுக்கும் காந்தி நீ
    கெலிப்பிலாத கீர்த்தி நீ கேள்வியற்ற வார்த்தை நீ
    இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!

    உயிர்கலந்த இன்பமே உனக்குவேள்வி ஆனது
    இயல்பு தர்மமானது இசைவு புத்தியானது
    பயம்விழுந்த கண்ணிலே பரம்நுழைந்து மின்னுதே
    இதே தவம் இதே வரம் இதம் நிறைந்த மாதவம்!
    தன்னுடைய காக்கும் தொழிலிலிருந்து ஓய்வு பெற்று, ஆதி சேடனாகிய பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலின் அரிதுயிலான யோகநித்திரை அவளே!

    நாம் மேலே கண்ட சந்திகளெல்லாம், பிரளயத்திற்கும் படைப்புக்கும், முதலுக்கும் முடிவுக்கும் இடையே உள்ள ஒடுக்கத்தைக் குறிக்கின்றன. இன்னும் சரியாய்ச் சொல்லப் போனால் முதலும் முதலல்ல, முடிவும் முடிவல்ல. இரண்டுமே ஒரு தோற்றமே, ஓர் அனுமானமே!

    ஒன்று, இரண்டாகத் தெரிந்துவிட்டால், அந்த இரண்டுக்கும் நடுவே ஓர் இடைவெளி ஏற்படத்தான் செய்கிறது. அதுதான் ஒடுக்கம் என்பது. அதுவும் தோற்ற மயக்கமே!

    இந்த ஒடுக்கத்தை வைணவம் விஷ்ணு என்கிறது; தாந்த்ரம் தூமாவதி என்கிறது.

    இவளே காலராத்ரி, மோஹராத்ரி, மஹாராத்ரி.

    ஒவ்வொரு தேவிக்கும் தேவன் உண்டு. ஆனால் தூமாவதிக்குக் கணவன் கிடையாது. ஏன்?

    பிரளயத்துக்கும், படைப்புக்கும் உள்ள இடைவெளியில், சக்தியைப் பிரிந்த சிவன் சவமாக இருக்கிறான்.

    அந்த இடைவெளியின் உருவகம்தான் தூமாவதி.

    அது, இருட்டு முழுவதும் அகலாத, ஒளி சரியாய்ப் புலர்ந்துவிடாத புகை நிலை. புகை, நெருப்புக்கு அறிகுறி. தூமாவதி, இனி தோன்றப் போகும் படைப்புக்கு அறிகுறி.

    images

    படைப்புக்கெல்லாம் மூத்தவளாயிற்றே, அதனால் மூத்த தேவி, மூதேவி, ஜ்யேஷ்டா, தவ்வை.

    எல்லோருக்கும் முந்தியவள் என்பதால் கிழவி. உடைந்த பற்கள், குறைந்த பற்கள் கொண்டவள்.

    உயிர்களைப் புடைத்து அகற்றுபவள் என்பதால் கையில் முறம் வைத்திருப்பவள்.

    அவ்விதம், காலனின் தன்மை இருப்பதால் அவளுடைய வாகனமும், கொடியும் காக்கைதான்.

    வெளுத்த முகம், நீண்ட கைகள், கால்கள், தொங்கும் முலைகள், பெரிய காதுகள், கொடூரமான பார்வை.

    அழுக்கடைந்த உடைகள் கொண்டவள். மங்களங்களுக்கு விரோதமான குணங்களையும் தோற்றத்தையும் கொண்டிருப்பதால் இவள் துஷ்டா எனப்படுகிறாள்.

    இன்னொரு தோற்ற வருணனை:
    கையில் செம்பும், விளக்குமாறும் வைத்திருப்பவள். பெருக்கிக் கழுவுகிறாளே!

    உயரத் தூக்கி அபயம் அளிக்கும் ஒரு கை. வரமளிப்பது போல் ஒரு கை.

    பெரியம்மை போன்ற கொள்ளை நோய்கள், அதிஸாரம் என்னும் வயிற்றுப் போக்கு இவற்றை அளிப்பவள்.

    இவைகளை அகற்ற, இவளுடைய ஓரெழுத்து மந்திரம் ‘தூம்.’ (DHOOM)

    பாழடைந்த வீட்டில் அமர்ந்து ஜபம் செய்தால் நோய்கள் அண்டாது.
    மனம், ஒளியில் சாந்தமடையும்.
    யோக, மந்திர ரகசியங்கள் தெளிவாகும்.
    தீயவர் தீமை செய்யவும் பயன்படும்.

    Pallavi – பல்லவி

    ஆதியில் இருளை இருளே மறைத்தது
    இல்லாததிலிருந்தே இருப்பு வந்தது
    இருளுக்கும் ஒளிக்கு இடையினிலே
    தோற்றம், அழிவின் நடுவினிலே
    தோன்றி எழுந்தவள் தூமாவதி!

    Anupallavi – அனுபல்லவி
    காலராத்திரி மஹாராத்திரி மோஹராத்திரி இவளே
    மாலவன் யோக நித்ரை இவளே
    மணாளன் இல்லா முதியவள் இவளே

    CharaNam – சரணம்
    நீண்ட கரத்தில் மாண்ட உயிர்களை நித்தம் புடைக்கும் முறம்
    காண்பவர் அஞ்சும் கடும்பார்வை காக்கை கொடி வாகனம்
    தனிமையில் தொழுதால் நோய்தீரும் சாந்திவரும்
    தாயே இவளைத் தழுவிட, தக்க மந்திரம் ‘தூம்’

    படங்களுக்கு நன்றி

    Share
  • ஆறாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    வல்லமை மின்னிதழ், 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தத் தருணத்தில், நாம் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்ப்போம். இன்று வரை சுமார் 8 ஆயிரம் இடுகைகள், 9.7 ஆயிரம் பின்னூட்டங்கள், 2.2 லட்சம் வாசகர்கள், 8.1 லட்சம் பக்க நோக்குகள் ஆகியவற்றுடன் வல்லமை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

    161 நாடுகளிலிருந்து வாசகர்கள்,வல்லமைக்கு வந்திருந்தாலும், 70 நாடுகளுக்கும் மேலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வந்துள்ளார்கள். இந்தியா, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, அமீரகம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாடுகள், இதே வரிசையில் முதல் 10 இடங்களை வகிக்கின்றன.

    Vallamai_6th_year_300x1251

    கடந்த ஓராண்டில் வல்லமை, 4 போட்டிகளை நடத்தியுள்ளது. என் பார்வையில் கண்ணதாசன், மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் ஆகிய கட்டுரைப் போட்டிகளைக் கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் அவர் நண்பர்களுடன் இணைந்து நடத்தி முடித்துள்ளது. எழுத்தாளர் வையவனின் ஆலோசனைப்படி, பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற மாதாந்திரக் கட்டுரைப் போட்டியை அறிவித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறது. வாராந்தரப் படக்கவிதைப் போட்டியை வாசகர்களின் அமோக ஆதரவுடன் நடத்தி வருகிறது. தேமொழியின் யோசனையை ஏற்றுத் தொடங்கப்பட்ட இந்தப் போட்டிக்காக, சாந்தி மாரியப்பன் படங்களைத் தேர்ந்தெடுத்து அளிக்க, மேகலா, இதற்கான நடுவராக இருந்து, உரியவர்களை நன்முறையில் தேர்ந்தெடுத்து வருகிறார்.

    வாரந்தோறும் ஒருவரை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஆண்டு முழுவதும் சிறந்த ஆற்றலாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்துள்ளோம். இந்தப் பணியை அன்பர்களின் பரிந்துரைகள் அடிப்படையில், ஆசிரியர் குழுவுடன் கலந்தாலோசித்துத் தேமொழி சிறப்பாகத் தொடர்கிறார்.

    இந்த ஓராண்டில் பல்வேறு தொடர்களை வல்லமை வெளியிட்டுள்ளது. சொற்சதங்கை – கவியுள்ளம் – காற்று வாங்கப் போனேன் (கே.ரவி), திருமால் திருப்புகழ் – கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம் (கிரேசி மோகன்), இசைக்கவியின் இதயம் (இசைக்கவி ரமணன்), என்னதான் இருக்கிறது வேதத்தில் (சு.கோதண்டராமன்), அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (சுபா), ஐந்து கை ராந்தல் (வையவன்), சுட்டும் விழிச்சுடர் (பவளசங்கரி), இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (சக்தி சக்திதாசன்), கவியரசு கண்ணதாசன் (காவிரி மைந்தன்), அவன், அது , ஆத்மா – காலம் (மீ.விசுவநாதன்), உன்னையறிந்தால் (நிர்மலா ராகவன்), நான் அறிந்த சிலம்பு (மலர்சபா), குறளின் கதிர்களாய் (செண்பக ஜெகதீசன்), தேகமும் யோகமும் (கவியோகி வேதம்), காதல் நாற்பது (ஜெயபாரதன்), ஓலைத் துடிப்புகள் (கவிஞர் ருத்ரா), சிகரம் நோக்கி (சுரேஜமீ)… எனத் தொடரும் தொடர்கள், வல்லமைக்கு வளமையும் பெருமையும் சேர்ப்பவை.

    இவையல்லாமல், நாகேஸ்வரி அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வெவ்வேறு நடப்புகளைக் குறித்துப் பத்திகளை எழுதி வருகிறார்கள். ஆய்வறிஞர்களும் பேராசிரியர்களும் தங்கள், ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்கள். இவை வாசகர்களின் சிந்தனைக்கு விருந்து படைத்து வருகின்றன.

    கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுத்து வடிவில் மட்டுமின்றி,ஒலி வடிவிலும் வல்லமையில் கேட்க முடியும். கே.ரவி, இசைக்கவி ரமணன், ஆர்.எஸ்.மணி உள்ளிட்ட பலரின் பாடல்கள், வல்லமை நேயர்களின் நெஞ்சம் கவர்ந்தவை. எழுத்தும் ஒலியும் இணை சேர்ந்து வருவதைப் போல், எழுத்தும் ஓவியமும் சு.ரவியின் ஆக்கங்களில் இணை சேர்ந்து, வாசகர்களை வசீகரிக்கின்றன.

    வல்லமையின் இடுகைகளின் தொகுப்பினை ஒவ்வொரு நாளும் உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கே கொண்டு சேர்க்கும் வசதியும் வல்லமையில் உண்டு. சிறிது காலம் செயல்படாமல் இருந்த இந்த வசதி, நம் தள நிர்வாகி ஸ்ரீநிவாசன் அவர்களின் உதவியால், இப்போது மீண்டும் செயல்படுகிறது. வாசகர்களும் படைப்பாளர்களும் வல்லமை முகப்பில் பின்னூட்டங்களுக்கு மேலே உள்ள பெட்டியில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை இட்டு, வல்லமையின் எல்லா இடுகைகளையும் அறியலாம்.

    வல்லமையின் சீரிய வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. கனிவும் அர்ப்பணிப்பும் மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழுவினர், எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள்.

    இந்த இனிய தருணத்தில் இசைக்கவி ரமணன் அவர்களின் கனிந்த வாழ்த்து, நமக்கு உற்சாகம் ஊட்டுகிறது.

    இணையதளம் என்றாலும் இனிமையினால் நற்பண்பால்
    இதயதள மாகிவிட்ட வல்லமையே வாழ்க!
    அணைத்தபடி அனைவரையும் அரவணைத்துச் செல்லுகின்ற
    அன்னையவள் கரம்போன்ற வல்லமையே வாழ்க!

    கணப்பாகக் குளிர்நீக்கும்! கடுங்கோடைப் பொழுதினிலே
    கற்கண்டுப் பனித்துளியாய்க் கால்நனைத்து மனம்குளிரும்!
    பிணைப்பாகி, ஒரு குழுமம் பெருங்குடும்ப மாகியதே!
    பிரிவில்லா உறவொன்றில் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறதே!

    ஏதேதோ மரம்கொடிகள் எத்தனையோ மலர்வகைகள்
    எல்லோர்க்கும் தனித்தனியாய் சேர்ந்திருக்க இடமுண்டு!
    காதலுண்டு கவிதையுண்டு வாதமுண்டு பேதமுண்டு
    கடுகளவும் பகையின்றிக் கைகுலுக்கும் பண்புண்டு!

    எனத் துல்லியக் கவிபாடி, நம் உள்ளங்களை அள்ளிய தெள்ளியர், அவர்.

    பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
    பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
    வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
    வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!

    என்ற அவரின் வாழ்த்து, வல்லமைக்கு மேன்மேலும் வலிமை ஊட்டுகிறது. அவரது கூற்றின்படி, பைந்தமிழின் களஞ்சியமாய் விரிவோம். பாரெங்கும் தொண்டுகள் புரிவோம்.

    Share
  • ஆண்டுவிழாக் காணும் வல்லமைக்கு வாழ்த்து!

    — இசைக்கவி ரமணன்.

     

     

    butterfly-border-vவல்லமையின் வல்லமைக்கு எல்லோரும் காரணம், அதில்
    எல்லோரின் வல்லமைக்கும் வல்லமையும் காரணம், இது
    நல்லவர்கள் கூடியேற்றும் நற்றமிழின் தோரணம், இனி
    நாற்றிசையும் பரவட்டும் நமதுதமிழ்ப் பூமணம்

    இணையதளம் என்றாலும் இனிமையினால் நற்பண்பால்
    இதயதள மாகிவிட்ட வல்லமையே வாழ்க!
    அணைத்தபடி அனைவரையும் அரவணைத்துச் செல்லுகின்ற
    அன்னையவள் கரம்போன்ற வல்லமையே வாழ்க!
    கணப்பாகக் குளிர்நீக்கும்! கடுங்கோடைப் பொழுதினிலே
    கற்கண்டுப் பனித்துளியாய்க் கால்நனைத்து மனம்குளிரும்!
    பிணைப்பாகி, ஒரு குழுமம் பெருங்குடும்ப மாகியதே!
    பிரிவில்லா உறவொன்றில் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறதே!

    ஏதேதோ மரம்கொடிகள் எத்தனையோ மலர்வகைகள்
    எல்லோர்க்கும் தனித்தனியாய் சேர்ந்திருக்க இடமுண்டு!
    காதலுண்டு கவிதையுண்டு வாதமுண்டு பேதமுண்டு
    கடுகளவும் பகையின்றிக் கைகுலுக்கும் பண்புண்டு!

    பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
    பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
    சொல்லாண்டு வாழ்க! சுவைபலவும் காண்க!
    சோகமே இல்லாத சொர்க்கமாக விரிக!
    எல்லோர்க்கும் இடம்தந்தே மிகவிரிந்து வளர்க! இந்த
    ஏழைக்கும் இடம்தந்தீர் என்நன்றி ஏற்க!
    வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
    வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!

     

     

    அன்புடன்,
    ரமணன்
    16.05.2015

    Share
  • இறைவா! இறைவா! இறைவா!

    இசைக்கவி ரமணன்

    images

     

     
    எங்கும் நீயே நிறைந்தாலும்
    எங்கோ இருப்பது போலிருப்பாய்
    எதிரில் ஒருமுறை வருவாயா?
    என்னுள் சிரிக்கும் இறைவா?
    என்னுயிர் ஆளும் தலைவா?

    நீயும் நானும் ஒன்றென்றால்
    யாரே யாரைத் தேடுவது
    நானும் நீயும் வேறென்றால்
    எங்கே உன்னைச் சேருவது?
    நாயேன் ஒன்றும் அறியவில்லை, இந்த
    நரகத்தின் காரணம் புரியவில்லை
    நீயாய்த் திரையை நீக்காமல்
    நெஞ்சினில் நிம்மதி வருவதில்லை

    கண்ணோ உன்னைக் காணாது
    மனமோ உன்னை மறவாது
    எண்ணம் உன்னைத் தீண்டாது, உன்னை
    எண்ணாதிருக்க முடியாது
    இறைவா! இறைவா! இறைவா!

    தவறுகளே என் தவமேடை
    தவிப்பே எந்தன் ஆராதனை
    வருவாய் வருவாய் என்றேதான்
    நம்பி நம்பி தினம் ஏங்குகிறேன்
    கண்ணீர்த் துளிகள் மலராகி
    கணந்தோறும் உன்னைப் பூசிக்கிறேன்\
    கருணைக் கடலே உன் முன்னே, ஒரு
    கவளம் ஏழை யாசிக்கிறேன்
    இறைவா! இறைவா! இறைவா!

    ஏதோ வந்ததைப் பாடுகிறேன்
    இமைகளை மெதுவாய் மூடுகிறேன்
    மடியில் ஓரிடம் தேடுகிறேன், நான்
    மரணமில்லாமல் வாடுகிறேன்
    இறைவா! இறைவா! இறைவா!

     
    25.03.2015 / புதன் / 09.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy
    சக்கர வர்த்தி(வசுதேவன்) சிறையில், திருமகன்,
    சக்கர வர்த்தி சகடனின் , -சக்கர,
    வத்தியைக் காலால் வதம்செய்(து) அணைக்கின்ற,
    வித்தையே பாத(க) வதம்”….கிரேசி மோகன்….

    Share
  • தாயே சரணம்

    இசைக்கவி ரமணன்

    sakthy

    விசைத்துநிற்கும் சூலம் வியந்தடங்கும் காலம்
    விரல்கள்பத்தும் தங்கம் நகங்கள் வெள்ளிமின்னும்
    இசைக்குளே ஸ்வரங்களாய்த் துளிர்க்கும் விந்தைக் கோலம்
    இதற்குமேல் பதங்களில் அகப்படாத மாயம்

    சிலிர்த்த தங்க அருவிபோலச் சிங்கமொன்றின் பிடரி
    பணிந்துவென்ற வாழ்வினைப் பரப்பும் இன்பப் புலரி
    புலிக்குகை புகுந்தமான் நிலைநிகர்த்த பாதம்
    இகம்பரம் சுகம்துயர் இலாது நீளும் மாயம்

    சினக்கணப்பி னுள்ளே புனத்துழாயின் வாசம்durga
    தனிக்கணத்தில் வந்து தனைக்கவிழ்க்கும் நேசம்
    இனிப்பிறப்பிறப்பிலாத இன்பம் மண்டும் பாதம்
    அணுக்கணுப் பிளந்துபொங்கும் அந்த மந்தகாசம்

    வினாக்களில் விடைகளாய் விளங்கும் ஞான வெள்ளி
    விடைகளில் வினாக்களாய்க் குழப்பும் மோனக் கள்ளி
    அனைத்தும்நீ எனப்பணிந்த போதொடுங்கும் புள்ளி
    நினைப்பிலா வியப்பிலே தனைவழங்கும் அள்ளி

    நரைவிழாத நெஞ்சம் கறைபடாத சித்தம்
    மறைவிலாத காதல் மனம்விடாத போதை
    குறைவிலாத வாழ்வெலாம் இவள்கொடுத்த பிச்சை
    நிறைவெலாம் தகர்த்து மீறும் இவள்பதத்தின் இச்சை

    அனைத்திலும் இவள்முகம் ஜனித்து நெஞ்சம் கூசும்

    அகத்திலே சுகந்தமாய் அமிழ்தவார்த்தை பேசும்
    இதற்குமேலும் ஏதுமில்லை என்றெழுந்த சொல்லைச்
    சிதைக்கவே மனத்திலே சிலிர்த்தெழுந்த முல்லை

    தலைவணங்கும் போது தனைவழங்கும் தேவி
    தலைமணக்கும் தமிழின் தரம்வளர்க்கும் ஆவி
    கரங்களும் ஒடுங்க கண்ணில் கங்கை வந்து பொங்க
    கரைகிறேன் கரைகிறேன் உன் கால்கள் மட்டும் தங்க

    தொடர்ந்துகொஞ்சும் தோழியேவுன் தோள்கள் சரணம் சரணம்
    தொடர்ந்திடும் வினைவிரட்டும் வாள்கள் சரணம் சரணம்
    படர்ந்தகண்கள் பட்டுவீழ்ந்த பாதம் சரணம் சரணம்
    தடங்கள் தீர்த்துத் தழுவிக்கொண்ட
    தாயே சரணம் சரணம்!

    Share
  • கொடு இல்லை கொண்டு போ

    இசைக்கவி ரமணன்

    Tamil-Daily-News-Paper_20323908330
    அடர்ந்தி ருக்கும் காட்டிலே அமர்ந் திருக்கும் சோதியே
    படர்ந் திருக்கும் அண்ட ரண்டம் பார்த்தி ருக்கும் ஆதியே
    குடங்க விழ்த்த நீரெனத் தடம்பு ரண்ட வாழ்வுதான்
    அடங்க வேண்டி அண்டினேன் அள்ளிக் கொள்க கையிலே

    எனைப்பி றக்க வைத்தனை உனைம றக்க வைத்தனை
    வினைதுளைக்க வைத்தனை விதிக்கு நேர்ந்து விட்டனை
    எனைமறித்த பின்னும்நீ சுனையடைத்த தென்னவோ
    உனைமதித்த என்னைநீ தினம்மிதிப்ப தென்னவோ?

    வெடித்து வீழ்ந்த தொருவிதை புதைத்தெழுந்த தொருவிரல்
    துடித்துநின்ற உயிருளே நுழைந்துகொண்ட தொருதுளி
    வடித்தகஞ்சி வழியவும் சோறுவாயு வானதே
    கடித்த கார மொன்றுதான் கடைவழிக்கு மிச்சமே

    கூட்டிவைத்த என்குரு கூடவந்த என்குரு
    மாட்டிவைத்த தேதுக்கோ மறந்துவிட்ட தென்னமோ
    ஆட்டிவைக்கும் மாயமோ ஆடுகின்ற தாயமோ
    ஈட்டிமுனையில் உயிருடன் ஏழைவாழ்கி றேனடா!

    உற்றதுன்பம் தீர்த்திடு, இல்லை உயிரினைப் பறித்திடு
    உன்றன்சித்தம் என்னும் தங்க ஓடையில் கலந்திடு
    பெற்றவுன்னை அன்றியிந்தப் பிள்ளை வேறும் அறியுமோ
    பேச்சுபோதும் வாழ்வுதா! இல்லை மூச்சைக் கொண்டுபோ

    04.01.2015 / ஞாயிறு / 23.30

    Share
  • திருவாதிரை விண்ணப்பம்

    இசைக்கவி ரமணன்

    scale

    ஆதிரைத் திருநாள் அலர்ந்திடவே
    அம்பலத் தரசே ஆடுகவே
    அண்ட மனைத்தும் ஆட்டத்தில்
    அதிர்ந்த அதிர்வில் உயிர்பெறவே
    பாதி மதிக்கும் முழுமைகதி
    பாயும் கங்கைக்கும் தந்தாய்
    பாரே வியக்கும் படியிந்தப்
    பாவியின் குடிலில் ஆடுகவே!

    அருளை நம்பிப் பிழைக்கின்றேன்
    அறிவுக் கெங்கே நான்போவேன்
    அன்பே உயிரின் இயல்பானேன்
    அமெரிக் கைக்கோ என்செய்வேன்
    இருளைத் துழவிய விழியிடையே
    எதிர்ப்பட் டாயே சுடராக
    இதுவே தருணம் வந்திடுக
    ஏழைக் கொருகதி தந்திடுக

    நம்பீ! உன்னை நம்பித்தான்
    நாளும் இரவும் நடக்கிறது
    நம்பு கின்றாய் என்றேதான்
    நடுநெஞ்சில் உயிர் துடிக்கிறது
    நம்பிக் கிடக்கும் என்னை நீ
    நம்ப மறுத்தால் அம்மம்மா
    நானென் செய்வேன் என்னுயிரே
    நரக மனைத்தும் மயிர்க்காலே

    அருந்தவம் செய்தவர் உனையடைந்தார்
    ஆணவக் காரரும் உனையடைந்தார்
    அன்பால் எளிதாய் உனையடைந்தார்
    ஆலயம் தொழுதே உனையடைந்தார்
    ஒருசிறு தரமும் இல்லாமல்
    ஓரத் தினில்நான் கிடந்தாலும்
    உன்னவன் தானே என்னன்பே
    உதைத்தருள் புரிவாய் என்னுயிரே

    உலக மனைத்தும் உனதன்றோ
    ஒழியெனில் எங்கே நானொழிய? நீ
    ஒன்றே என்றன் உறவன்றோ
    ஒன்றில் என்றும் பிரிவுண்டோ?
    கலக மனதின் நடுமார்பில்
    காலை அழுத்தி வைத்திடுக
    கண்ணைச் சிறிதே திறந்திடுக
    கவிஞனை எரித்துப் பூசிடுக!

    04.01.2015 / ஞாயிறு / 23.00

    Share
  • மார்கழி மலர்கள் – கல்லுக்கு நன்றி

    இசைக்கவி ரமணன்

     

    கல்லுக்கு நன்றி

    380px-Threejewels.svg

    நேற்றைக்கு நீ என்றன்
    நெற்றியில் எறிந்த கல்
    குறிதவறாமல், முகத்தைக்
    கோணல்சிவப்பாய் ஆக்கிய கல்
    உடனே சிரித்த ஊரார்கள் ஊடே நீ
    தடமின்றி மெல்லக் கடந்து சென்றாய்

    என்மீது விழுந்த கல்
    என்னைக் கடந்து எங்கே செல்லும்!
    உன்போல இன்னும் சிலர்
    உரிமையோடு எறிந்த
    ஒவ்வொரு கல்லையும்
    ஒழுங்காக அடுக்கித்தான்
    உறுதியாக நின்றுகொண்டு
    உங்களுக்கு நன்றிசொல்லிக்கொண்டிருக்கிறேன்!

    ஊட்டி வளர்த்த பலரை விடவும்
    உதைத்து வளர்த்த உங்கள் உதவிக்கு
    மாட்சிமை அதிகமையா
    கல்லெறிந்த மண்ணின் மைந்தர்களே!

    அவமானம், வலி
    அவையேதும் இன்றில்லை
    காறித் துப்பிக் கழுவிய நீரும்
    கங்கையாய் எங்கோ விரைவது போலே
    கல்லெல்லாம் அனுபவமாகிக்
    களைப்பாறிப் பாடுகின்றேன்

    என்
    நெற்றியைப் பார்க்கும் போது
    வரத்தான் செய்யும்
    நேற்றைய நினைப்பு உங்களுக்கு
    தயங்காமல் வருக!
    தழுவக்காத்திருக்கின்றேன்
    கல்லெறிந்த கையைக்
    கனிவோடு தடவிக்
    கண்ணிலொற்றிக் கொள்வேன்

    03.01.2015 / சனி / 9.50

     

    படத்திற்கு நன்றி

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

    Share