இசைக்கவி ரமணன்

 

கல்லுக்கு நன்றி

380px-Threejewels.svg

நேற்றைக்கு நீ என்றன்
நெற்றியில் எறிந்த கல்
குறிதவறாமல், முகத்தைக்
கோணல்சிவப்பாய் ஆக்கிய கல்
உடனே சிரித்த ஊரார்கள் ஊடே நீ
தடமின்றி மெல்லக் கடந்து சென்றாய்

என்மீது விழுந்த கல்
என்னைக் கடந்து எங்கே செல்லும்!
உன்போல இன்னும் சிலர்
உரிமையோடு எறிந்த
ஒவ்வொரு கல்லையும்
ஒழுங்காக அடுக்கித்தான்
உறுதியாக நின்றுகொண்டு
உங்களுக்கு நன்றிசொல்லிக்கொண்டிருக்கிறேன்!

ஊட்டி வளர்த்த பலரை விடவும்
உதைத்து வளர்த்த உங்கள் உதவிக்கு
மாட்சிமை அதிகமையா
கல்லெறிந்த மண்ணின் மைந்தர்களே!

அவமானம், வலி
அவையேதும் இன்றில்லை
காறித் துப்பிக் கழுவிய நீரும்
கங்கையாய் எங்கோ விரைவது போலே
கல்லெல்லாம் அனுபவமாகிக்
களைப்பாறிப் பாடுகின்றேன்

என்
நெற்றியைப் பார்க்கும் போது
வரத்தான் செய்யும்
நேற்றைய நினைப்பு உங்களுக்கு
தயங்காமல் வருக!
தழுவக்காத்திருக்கின்றேன்
கல்லெறிந்த கையைக்
கனிவோடு தடவிக்
கண்ணிலொற்றிக் கொள்வேன்

03.01.2015 / சனி / 9.50

 

படத்திற்கு நன்றி

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *