Tag: பழமொழி கூறும் பாடம்

  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: சீர்ந்தது செய்யாதார் இல்

     

    சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
    அற்றத்தால் தேறா அறிவுடையார் – கொற்றப்புள்
    ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
    சீர்ந்தது செய்யாதா ரில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    சுற்றத்தார், நட்டார், எனச் சென்று, ஒருவரை
    அற்றத்தால் தேறார், அறிவுடையார்;-கொற்றப் புள்
    ஊர்ந்து, உலகம் தாவின அண்ணலே ஆயினும்,
    சீர்ந்தது செய்யாதார் இல்.

    பொருள் விளக்கம்:
    சுற்றத்தார், நட்புடையவர் என்ற எண்ணத்தில் அவர்கள் எவரிடத்திலும் தாம் மறைமுகமாகச் செய்வதை வெளிப்படுத்தாதவரே அறிவுடையவர்கள். (அவ்வாறு நம் செயல் பிறருக்குத் தெரிந்துவிட்டால்) வெற்றியுடைய பறவையின் மீதமர்ந்து உலகில் உலாவரும் தலைவனே ஆனாலும் தனக்கு பலனளிக்கும் காரியத்தை செய்யாது விடமாட்டார்.

    பழமொழி சொல்லும் பாடம்: தனக்குப் பலனளிக்கும் செயலை யாராக இருந்தாலும் செய்ய எண்ணுவர், அதனால் செயல் வெற்றியுடன் நிறைவுறும்வரை பிறர் அறிய தமது செயல்களை அறிவில் சிறந்தோர் வெளிப்படுத்த மாட்டார்கள்.

    இதனை வள்ளுவரின் குறள் ஒன்றும் குறிப்பிடுகிறது…

    கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
    எற்றா விழுமந் தரும். (குறள்: 663)

    இக்குறளின் கருத்து, செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.

    தனக்கு ஆதாயம் என்றால் ஒரு  செயலையும் பழிபாவம் அஞ்சாது  கடவுளும் செய்ய விரும்புவார் என்பதை அறிவோம். அதனால் பிறர் நம் செயலை அறிவது நம் செயலுக்கு இடையூறாக அமையலாம்  என்பது இப்பழமொழிச் செய்யுள் குறிக்கும் அறிவுரை. உரைநூல்கள் பொதுவாக, இச்செய்யுளில் வெற்றியையுடைய கருடனில் பறந்து, தாவி உலகளந்த திருமாலே ஆனாலும் தனக்கு பலன் என்றால் பழிபாவம் பாராமல் எதையும் செய்வார் என்று குறிப்பிடுகிறது. இது வாலியை மறைந்திருந்து அழித்து, சுக்ரீவனுக்கு உதவி வானரக் கூட்டத்தை தனது செயலுக்குப் பயன்படுத்திய இராம கதையைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம். மாறாக மாம்பழத்தை அடைய விரும்பி மயில் மேல் பறந்து உலகைச் சுற்றி வந்த முருகனையும் குறிக்க வாய்ப்பிருந்தாலும், இக்கோணத்தைக் குறிப்பிட்ட உரை ஏதும் உள்ளதாகத் தெரியவில்லை.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: வெந்நீரில் தண்ணீர் தெளித்து

     

    செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
    பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
    அந்நீ ரவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
    வெந்நீரிற் றண்ணீர் தெளித்து.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
    பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
    அந் நீர் அவரவர்க்கு தக்கு ஆங்கு ஒழுகுபவே
    வெந்நீரில் தண்ணீர் தெளித்து

    பொருள் விளக்கம்:
    செம்மையான பண்பு உள்ளவரைப் போன்று தமது காரியத்தை சிதைக்க எண்ணுபவரிடமும் (அன்பு காட்டியும்), பொய்யாகப் பொருட்படுத்தாத  பண்பு கொண்டவர் போல செயலை தக்கவாறு முடிப்பவரிடமும், அவரவருக்கேற்ற பண்பினை அவரவரது இயல்புக்குத் தக்கவாறு கையாள்வது, வெந்நீரில் குளிர்நீர் கலந்து அளாவி பதமாகப் பயன்படுத்துவதைப் போன்றது.

    பழமொழி சொல்லும் பாடம்: வெந்நீரில் குளிர்நீர் அளாவி பக்குவமாகப் பயன்படுத்துதல் போல, அவரவர் இயல்பிற்குத் தக்கவாறு செயல்பட்டு தனது செயலை நிறைவேற்றிக் கொள்வார் தமது காரியத்திலேயே கண்ணாயிருப்பவர்.

    ஆடிக்கறக்கும் மாட்டை ஆடியும், பாடிக் கறக்கும் மாட்டைப் பாடியும் கறக்க வேண்டும் என்று பரவலாக இக்காலத்தில் வழங்கப்பெறும் பழமொழி கூறுவதும் இக்கருத்தையே வள்ளுவரும் இதனைப் பின்வருமாறு கூறுகிறார்.

    நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை. (குறள்: 469)

    அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செயல்படாவிட்டால், நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும் என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார். தமது காரியத்தை முடிக்க உதவ இயலாதவரிடம் அக்கறை செலுத்தி அவரை ஊக்கப்படுத்துவது தேவையானது. தனது கடமையை உணர்ந்து செயலாற்றுபவரை தொல்லை செய்யாது அக்கறையின்றி விட்டுவிடுவது அவரது பொறுப்புணர்வை அதிகப்படுத்தும். தன் மேல் வைத்துள்ள நம்பிக்கையை பாழாக்கக் கூடாது என்று அவர் கடினமாகக் காரியமாற்றுவார். அவரவர் செயலாற்றும் இயல்பை உணர்ந்து அதற்கேற்றவாறு நடப்பது அவரவரையும் அவரது பண்பிற்கு ஏற்றவாறு ஊக்கப்படுத்தும் முறையாகும்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: தமக்கு மருத்துவர் தாம்

     

    எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்
    தமக்குந் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
    பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லை
    தமக்கு மருத்துவர் தாம்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    எமக்கு துணையாவார் வேண்டும் என்று எண்ணி
    தமக்கு துணையாவார் தாம் தெரிதல் வேண்டா
    பிறர்க்கு பிறர் செய்வது உண்டோ மற்றில்லை
    தமக்கு மருத்துவர் தாம்

    பொருள் விளக்கம்:
    துன்பப்படும்பொழுது எனக்குத் துணையாக இருந்து உதவுபவர் தேவை என்று கருதி, தனக்குத் துணையாக இருந்து உதவக்கூடியவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. பிறர் ஒருவருக்கு பிறிதொருவர் செய்யக்கூடும் என்று நம்பியிருக்கத் தக்கது ஏதுமில்லை. நமக்கு ஏற்படக்கூடிய நோயை நாமே நமக்கு மருத்துவர் போல இருந்து காத்துக்கொள்ள வேண்டும் (என்பதைப் போன்று பிறர் உதவியை எதிர்பார்க்காது செயல்பட வேண்டும்).

    பழமொழி சொல்லும் பாடம்: நமக்கு வரும் நோயைத் தவிர்க்கக் கூடிய மருத்துவர் நாமே என்பது போல, தன் கையே தனக்கு உதவி என்று உணர்ந்து, நமக்கேற்ற நன்மைகளை நாமே தேடிக்கொண்டு அடுத்தவரை எதிர்பார்க்காது வாழும் வாழ்க்கையே சிறந்தது.

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும். (குறள்: 619)

    தெய்வமே ஒருவருக்கு உதவ முடியாது கைவிட்டாலும், ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியை அவர் நிச்சயம் அடையமுடியும் என்று வள்ளுவர் அறிவுறுத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே …

    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும். (குறள்: 611)

    நம்மால் இதைச் செய்யமுடியாது என்ற மனத் தளர்வைக் கைவிட்டு, முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமைந்துவிடும்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: கண்டது காரணம் ஆம்

     

    பேருலையுள் பெய்த அரிசியைவெந்தமை
    ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு – யார்கண்ணும்
    கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யார்கண்ணும்
    கண்டது காரணமாம் ஆறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை
    ஓர் மூழையாலே உணர்ந்த ஆங்கு யார்கண்ணும்
    கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யாதற்கும்
    கண்டது காரணம் ஆமாறு

    பொருள் விளக்கம்:
    கொதிக்கும் பெரிய உலையினில் இட்ட அரிசி வெந்து சோறாயிற்றா என அறிய ஓர் அகப்பைச் சோற்றினை மட்டுமே சோதித்து அறிவது போல, யாரிடமும் காணும் செயல்பாடுகளைக் கொண்டே அவரைப் பற்றி நாம் அறிந்திராத குணநலன்கள் என்னவாக இருக்குமென்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

    பழமொழி சொல்லும் பாடம்: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறைக் கொண்டு பதத்தை அறிவது போல, ஒருவருடைய செயல்களைக் கொண்டு அவரது பண்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
    மாறாநீர் வையக் கணி. (குறள்: 701)

    ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவர் உலகத்திற்கே அணியாவார் என்று வள்ளுவர் குறிப்பறியும் திறன் கொண்டவரை உலகத்திற்கே அணியாவார் என்று பாராட்டுகிறார். பிறரது இயல்பை குறிப்பாலறிதல் அறிவுடமையாகும்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும் உண்ணுந்துணைக் காக்கும் கூற்று

     

    கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
    எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பரால்
    எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும்
    உண்ணுந் துணைக்காக்கும் கூற்று

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
    எண்ணுந் துணையில் பிறர் ஆகி நிற்பரால்
    எண்ணி உயிர் கொள்வான் வேண்டி திரியினும்
    உண்ணும் துணை காக்கும் கூற்று

    பொருள் விளக்கம்:
    கண்ணின் அருமையான கருமணியைப் போன்று, நட்பாக அன்பு செலுத்தும் தன்னலம் நிரம்பியக் காரியவாதிகள், தனது காரியம் நிறைவேறியது என்று நினைக்கும் பொழுதே தமது போலியான நட்பை விலக்கிப் பிரிந்துவிடுவர். (இத்தகையோர் செயலானது) தக்க தருணத்தில் உயிரை நீக்கிவிடும் விருப்பத்துடன் பின்தொடர்ந்து, நீக்க வேண்டிய உரிய நேரம் வரும் வரை உயிரை விட்டுவைத்திருக்கும் காலனின் செயல் போன்றது.

    பழமொழி சொல்லும் பாடம்: தன்னலம் கருதி நட்புப் பாராட்டுவோரின் நட்பு உண்மையானதன்று, தங்கள் எண்ணம் நிறைவேறும் வரை நட்பு செலுத்துவதாக நடித்து, தாம் விரும்பிய பலன் கிடைத்ததும் விலகிவிடுவர்.

    தன்னலவாதிகளின் நட்பைப் பற்றி…

    சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு. (குறள்: 821)

    மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோலத் தோன்றினாலும் இரும்பைத் துண்டாக்க பயன்படும் தாங்கு பலகை போல இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும் என்று இத்தகையோர் நட்பை விளக்குகிறார் வள்ளுவர்.

    மேலும்,

    உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
    பெறினும் இழப்பினும் என். (குறள்: 812)

    தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன? என்று வள்ளுவர் எழுப்பும் கேள்வியும் சிந்திக்கத்தக்கது. தன்னலவாதியாக இத்தகைய நட்புக் காட்டும் மக்களை விலைமகளிருடனும், கள்வருடனும் ஒப்பிடுகிறார்,

    உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
    கொள்வாரும் கள்வரும் நேர். (குறள்: 813)
    என்ற குறளில் வள்ளுவர்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே

     

    ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக்
    கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே
    விட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே
    நட்டாரை ஒட்டி யுழி

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா
    கட்டங்கம் வெல் கொடி கொண்டானும் கொண்டானே
    விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே
    நட்டாரை ஒட்டியுழி

    பொருள் விளக்கம்:
    மனமொத்த அன்பு கொண்ட உமையவளை தன்னுடைய ஒரு பகுதியாக, கட்வங்கத்தடி கொண்டு பகையழித்து வெற்றிக்கொடி நாட்டும் சிவனும் கொண்டான். (அதுபோல,) தனது உடலை விட்டு நீங்காது உடலுடன் முற்றுமாக இணைந்துவிட்டவரைப் போன்றே தனது நட்புக்குரியவரைக் கருதி அன்புடையவர் நட்பு பாராட்டுவர்.

    பழமொழி சொல்லும் பாடம்: அன்புடையவரின் நட்பின் திறமானது, தான் வேறு நண்பர் வேறென்ற எண்ணம் இல்லாததாக, நண்பரது வாழ்வின் இன்பதுன்பங்களை தன்னுடையதாகவேக் கருதும் சிறந்த நட்பாக இருக்கும்.

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு (குறள்: 788)

    நழுவும் ஆடையைத் தடுத்து மானம் காக்க உதவும் கை போல, நண்பருக்கு வந்த துன்பத்தை தனதாகக் கருதி உதவச் செல்வதே நட்பென வள்ளுவர் கூறிய நட்பின் திறம் இப்பழமொழி கூறும் கருத்துடன் பொருந்துகின்றது.

     

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி:  திங்களை நாய்குரைத் தற்று

     

    நெறியால் உணராது நீர்மையும் இன்றி
    சிறியார் எளியரால் என்று – பெரியாரைத்
    தங்கணேர் வைத்துத் தகவல்ல கூறுதல்
    திங்களை நாய்குரைத் தற்று.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    நெறியால் உணராது நீர்மையும் இன்றி
    சிறியார் எளியரால் என்று பெரியாரை
    தங்கள் நேர் வைத்து தகவு அல்ல கூறுதல்
    திங்களை நாய் குரைத்து அற்று

    பொருள் விளக்கம்:
    உலகநெறிமுறை வழி அறிந்து கொள்ளாது, தகுதியும் இல்லாத அறிவற்ற சிறியோர், எளிமையாகத் தோற்றமளிக்கும் அறிவுடைய பெரியோரை தங்களையும்விடத் தாழ்மையானவர் எனக் கருதிக்கொண்டு, தங்கள் முன் அவர்களை இருக்கச் செய்து தகுதியற்ற சொற்களைக் கூறுவது, தண்ணொளி வீசும் நிலவை நாய் இளக்காரமாக நினைத்து அதனை நோக்கிக் குரைப்பதைப் போன்ற செய்கையாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: பெரியோரை எளியோராக நினைத்து தகுதியற்ற வார்த்தைகளைச் சொல்லும் கீழோரால் பெரியோர் புகழ் மங்குவதைவிட, அவ்வாறு பேசும் சிறியோரது அறியாமையையே வெளிப்படும்.

    நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைப்பிரியாச் சொல். (குறள்: 97)

    பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொற்கள், அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும் என வள்ளுவர் குறிப்பதை உணர்பவர், தனது தகுதியைத் தாழ்த்திவிடும் தகாத சொற்களை உரைக்க விரும்பமாட்டார்கள்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி:  இனநலம் நன்குடையவாயினும் என்றும்மனநலம் ஆகாவாம் கீழ்

     

    மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
    உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் – மிக்க
    இனநலம் நன்குடைய வாயினும் என்றும்
    மனநலம் ஆகாவாம் கீழ்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    மிக்கு பெருகி மிகு புனல் பாய்ந்தாலும்
    உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல் போல் மிக்க
    இன நலம் நன்கு உடையஆயினும் என்றும்
    மன நலம் ஆகாவாம் கீழ்

    பொருள் விளக்கம்:
    மிகுந்த வெள்ளப்பெருக்கெடுத்து மிகுதியான அளவில் ஆற்றின் நன்னீர் கடலில் கலந்தாலும், தனது உப்பின் தன்மை நீங்காது ஆர்ப்பரிக்கும் கடலினைப் போல, மிகுந்த பண்பு நிறைந்தோருடன் இணைந்து பழகி வாழும் சூழ்நிலையிலும், என்றுமே தனது மனதின் கயமைத்தனத்தை கைவிடாது இருப்பார்கள் கீழ்த்தரமான குணத்தைக் கொண்ட மக்கள்.

    பழமொழி சொல்லும் பாடம்: பண்பு நிறைந்தோரோடு சேர்ந்து வாழும் வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும், பண்பற்றோர் தமது குணத்தை உயர்த்திக் கொள்ளாது தங்கள் இயல்பிலேயே சிறுமைக் குணத்துடன் இருப்பார்கள்.

    பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது. (குறள்: 823)

    அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராக வாழாமல் பண்பற்றவர்கள் தனது சிறுமைக் குணத்தைக் கைவிடாதவர்களாக இருப்பார்கள் என்று வள்ளுவம் குறிப்பதும் இதனையே.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி:  புல்லின்றி மேயினும் ஏற்றுக்கன்று ஏறாய் விடும்

     

    ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புர(வு)
    ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் – ஆற்றவும்
    போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
    ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஈட்டிய ஒண் பொருள் இன்று எனினும் ஒப்புரவு
    ஆற்றும் மனை பிறந்த சான்றவன் ஆற்றவும்
    போற்ற படாதாகி புல் இன்றி மேயினும்
    ஏற்று கன்று ஏறு ஆய்விடும்

    பொருள் விளக்கம்:
    தான் உழைத்துச் சேகரித்த மிகுந்த செல்வம் இல்லாது போன வறுமையிலும், உலக நடைமுறையை மதித்து வாழும் குடியில் பிறந்த சான்றோர் தனது சான்றாண்மையைக் கைவிடார். (அவர் கொண்ட இப்பண்பானது) மிகவும் கருத்துடன் போற்றி வளர்க்கப்படாது, பசும்புல்லும் உண்ண வழியின்றி எதையோ மேய்ந்து வளர்ந்தாலும் நல்ல எருதிற்குப் பிறந்த கன்று நல்லதொரு காளையாக வளர்ந்துவிடுவது போன்ற பண்பிற்கு ஒப்பானது.

    பழமொழி சொல்லும் பாடம்: பண்பு நிறைந்த குடும்பத்தில் பிறந்தோர், வாழ்வில் வறுமை சூழ்ந்தாலும் உலக நடைமுறைகளை மதித்து அதற்கேற்ப வாழும் சான்றாண்மை உடையவராகவே இருப்பார்கள்.

    இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
    கடனறி காட்சி யவர். (குறள்: 218)

    என்ற குறளும்; தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராத கடமையுணர்ந்தவர் சான்றோர் எனக் கூறுவதை இங்கு நாம் ஒப்பிடலாம்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி:  தலைமகன் தன்னொளி நூறாயிரவர்க்கு நேர்

     

    நீ(று)ஆர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல்
    வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
    தாறாப் படினும் தலைமகன் தன்னொளி
    நூறா யிரவர்க்கு நேர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியே போல்
    வேறாக தோன்றும் விளக்கம் உடைத்தாகி
    தாறா படினும் தலைமகன் தன் ஒளி
    நூறுஆயிரவர்க்கு நேர்

    பொருள் விளக்கம்:
    நீரினில் கிடந்தாலும் அதனுடன் ஒட்டாது விளங்கும் ஒப்பற்ற வைர மணியைப் போல, நன்கு வேறுபட்டுத் தெரியும் சிறந்த ஒளியை உடைத்தவர் சான்றோர், (தாற்றுதல் என்பது, தாத்துதல், தாத்திப் போடுதல் என்று வழக்கில் வழங்கி வரும், தானியங்களை தூசு தும்பற்று புடைத்துக் கொழித்துப் போடும் ஒரு முறை)  கொழித்துக் குப்பையில் நீக்கப்பட்டுவிட்டாலும் அந்தச் சான்றோரது பெருமை நூறாயிரம் மக்களின் பண்புடனும் ஒப்பிடும்பொழுது மங்காது தன்னொளி வீசி தனித்துத் தெரியும்.

    பழமொழி சொல்லும் பாடம்: சான்றோரின் புகழைப் புறக்கணிக்கலாம், ஆனால் மறைக்க இயலாது.

    இவ்வாறன சான்றோரின் புகழை,

    ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதொன் றில். (குறள்: 233)

    தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை என திருக்குறள் விளக்குவதாகவும் கொள்ளலாம், “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்று கூறும் இக்காலக் கவிதையும் விளக்குவதாகக் கொள்ளலாம்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: புலத்தகத்துப் புள்அரைக்கால் விற்பேம் எனல்

     

    செய்த கருமம் சிறிதானும் கைகூடா
    மெய்யா உணரவுந் தாம்படார் – எய்த
    நலத்தகத் தம்மைப் புகழ்தல் புலத்தகத்துப்
    புள்அரைக்கால் விற்பேம் எனல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    செய்த கருமம் சிறிதானும் கைகூடா
    மெய்யா உணரவும் தாம் படார் எய்த
    நல தக தம்மை புகழ்தல் புலத்தகத்து
    புள் அரைக்கால் விற்பேம் எனல்

    பொருள் விளக்கம்:
    செய்த செயலின் பலன் சிறிதளவும் கைக்குக்கிட்டாது, (அவ்வாறு அவர் சொன்னபடி) செய்து முடிக்கக் கூடியவர் என்ற நம்பிக்கையும் பிறருக்கு அவரிடம் இருக்காது, தன்னல நோக்கோடு தற்புகழ்ச்சி பேசுபவரின் பேச்சானது, (தனது கைவசம் இல்லாது) வயலில் உள்ள பறவையை அரைக்கால் பொன்னிற்கு விற்பேன் என்று கூறும் வீண்பெருமை பேச்சிற்கு ஒப்பானது

    பழமொழி சொல்லும் பாடம்: தன்னால் செய்ய இயலாத காரியத்தைச் செய்வேன் என்று கூறும் வாய்ச்சொல் வீரராக தற்பெருமை பேசுதல் நல்லதல்ல.

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல். (குறள்: 664)

    நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம் என்பது குறள் கூறும் பாடம். அதையுணர்ந்து வெற்றுப்பெருமை பேசாது செயலில் இறங்குவதே ஒருவருக்கு மதிப்பைத் தரும் என்பதை இப்பழமொழி அறிவுறுத்துகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: குழுவத்தார் மேயிருந்த என்றூடு அறுப்பினும் மன்று

     

    அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று
    சிறியர் எனப்பாடும் செய்யும் – எறிதிரை
    சென்றுலாம் சேர்ப்ப ! குழுவத்தார் மேயிருந்த
    என்றூடு அறுப்பினும் மன்று.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    அறிவு அன்று அழகு அன்று அறிவதூஉம் அன்று
    சிறியர் என பாடும் செய்யும் எறி திரை
    சென்று உலாம் சேர்ப்ப குழுவத்தார் மேயிருந்த
    என்று ஊடு அறுப்பினும் மன்று

    பொருள் விளக்கம்:
    அறிவுள்ளோர் செயலும் அல்ல, பண்புடையோருக்கு அழகுமல்ல, அறநெறி கடைபிடிப்போர் செயலும் அல்ல (என்ற வகையில்), சிறுமதி கொண்டோரின் இழிவான செயலாக அமைவது (யாதெனில்); காற்று நீரை வாரி வீசுவதால் அலைகள் கரையில் உலா வரும் இடத்தில் வாழ்பவரே, சூரியனையும் எதிர்க்கத் துணியலாம், ஆனால் அறிஞர்கள் நிரம்பிய சபையில் அவையடகமின்றி பணிவின்றி பேசுவது ஒருவருக்கு மதிப்பைத் தராது.

    பழமொழி சொல்லும் பாடம்: அறிஞர்கள் நிறைந்த அவையில் அவையடக்கத்தை கைவிடல் பெருமை தராது

    பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
    அணியல்ல மற்றுப் பிற. (குறள்: 95)

    அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது என்று திருக்குறள் காட்டும் பண்புகளை இங்கு ஒப்பு நோக்கலாம்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: நனி வெந்நீர் இல்லம் சுடுகலாவாறு

     

    இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
    பிறப்பினால் மாண்டார் வெகுளார் – திறத்துள்ளி
    நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர்
    இல்லம் சுடுகலா வாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    இறப்ப சிறியவர் இன்னா செயினும்
    பிறப்பினால் மாண்டார் வெகுளார் திறத்து உள்ளி
    நல்ல விறகின் அடினும் நனி வெந்நீர்
    இல்லம் சுடுகலாவாறு

    பொருள் விளக்கம்:
    இழிந்த குணத்தை தனது இயல்பாகக் கொண்டவர்கள் துன்பத்தைத் தரும் செயல்களைச் செய்தாலும், மேன்மையான பண்புகளைத் தனது இயல்பாகக் கொண்டவர் அதற்காகாக அவரிடம் சினம் கொள்ள மாட்டார்கள். (இது எவ்வாறு எனில்) நன்கு கவனத்துடன் தேர்ந்தெடுத்த சிறந்த விறகுகளைக் கொண்டு அடுப்பெரித்துக் காய்ச்சினாலும், கொதிக்கும் வெந்நீரால் வீட்டை வேகவைக்க இயலாது என்பதைப் போன்றதாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: சிறுமதி கொண்டோர் செய்யும் கேடுகள் குறித்து அவர்மேல் சீற்றம் கொள்ளாதிருப்பது பண்பிற் சிறந்தோர் இயல்பு.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: நோவச்செய் நோயின்மை இல்

     

    பூவுட்கும் கண்ணாய்! பொறுப்பர் எனக்கருதி
    யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா
    தேவர்க்கும் கைகூடாத் திண்ணன்பி னார்க்கேயும்
    நோவச்செய் நோயின்மை இல்.

     (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    பூ உட்கும் கண்ணாய் பொறுப்பர் என கருதி
    யாவர்க்கே ஆயினும் இன்னா செயல் வேண்டா
    தேவர்க்கும் கைகூடா திண் அன்பினார்க்கேயும்
    நோவ செய் நோயின்மை இல்

    பொருள் விளக்கம்:
    மலரும் தனக்கு இது போல ஒரு கண்ணில்லையே என வருந்தக்கூடிய விதத்தில் அழகிய கண்களை உடையவரே; எவ்வளவு துன்புறுத்தினாலும் பொறுத்துக் கொள்வர் என்ற எண்ணத்தில் எத்துணை எளியராக இருந்தாலும் யாரையும்துன்புறுத்த வேண்டாம். தேவர்களாலும் கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு அன்பு காட்டுபவராக இருந்தாலும் கூட துன்புறுத்தினால் துன்புற்று பொறுமையை இழக்காமல் இருக்க மாட்டார்.

    பழமொழி சொல்லும் பாடம்: எவருக்கும் தீங்கு செய்தல் கூடாது.

    இதே கருத்தைக் கூறும் பிற பழமொழிகள்…
    பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு
    சாது மிரண்டால் காடு கொள்ளாது

    Share