Tag: பழமொழி கூறும் பாடம்

  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய்

    மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப்
    பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க் கென்கொலோ?
    மையுண் டமர்ந்தகண் மாணிழாய்! சான்றவர்
    கையுண்டும் கூறுவர் மெய்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    மொய்கொண்டு எழுந்த அமரகத்து, மாற்றார் வாய்ப்
    பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலோ?-
    மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்!-சான்றவர்,
    கை உண்டும், கூறுவர் மெய்.

    பொருள் விளக்கம்:
    ஒருவருக்கொருவர் கொண்ட பகையினால் தோன்றிய போரில், எதிரி வழங்கும் பொய்யான உறுதிமொழியில் மயங்கி, பொருளாசை கொண்டு எதிரியுடன் இணைந்து இரண்டகம் செய்பவரை என்னவென்பதோ? அழகிய மைதீட்டிய கண்களையும் அணிகலன்களையும் கொண்டவரே; சான்றோர் (எனப்படுபவர் தனது) வாழ்வாதாரமே அடுத்தவரை நம்பி இருந்தாலும்கூட அவருக்காகச் சார்புநிலையினை மேற்கொள்ளாது நடுநிலை வழுவாது உண்மை மட்டுமே உரைப்பர். ‘அறைபோய்த் திரிபவர்’ என்பது கையூட்டு பெற்று எதிரணியில் சேர்ந்து தீமைக்கு உடன் போவாரைக் குறிக்கிறது.

    பழமொழி சொல்லும் பாடம்: சான்றோர் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய சூழ்நிலையிலும் அவர்களுக்காகச் சார்புநிலை கொள்ளாது, நடுநிலை தவறாது மெய்யுரைப்பர். நடுநிலை மாறாத சான்றோர் சிறப்பினைக் கூறுமிடத்து வள்ளுவர்,

    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 115)

    ஏற்றத் தாழ்வுகள் வாழ்க்கையில் இயல்பாக இருப்பினும், எந்த நிலையிலும் மனதில் நடுநிலை மாறாது செயல்படுவது சான்றோருக்கு அழகு என்கிறார். மேலும்,

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 118)

    எப்பக்கமும் சாராது, சமநிலை கொண்ட துலாக்கோல் போல நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகு என்றும் அறிவுறுத்துகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: ஈடில்லதற்குப் பாடில்லை

     

    மாட மழிந்தக்கான் மற்று மெடுப்பதோர்
    கூட மரத்திற்குத் துப்பாகு மஃதேபோற்
    பீடில்லாக் கண்ணும் பெரியார் பெருந்தகைய
    ரீடில்லதற் கில்லைப் பாடு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    மாடம் அழிந்தக்கால், மற்றும் எடுப்பது ஓர்
    கூடம் மரத்திற்குத் துப்பு ஆகும்; அஃதேபோல்,
    பீடு இல்லாக்கண்ணும், பெரியார் பெருந் தகையர்;
    ஈடு இல்லதற்கு இல்லை, பாடு.

    பொருள் விளக்கம்:
    உயர்ந்த மாடங்களைக் கொண்ட ஒரு மாளிகை சிதைந்துவிட்டால், (இடிபாடுகளைக் கொண்டு) மற்றொரு வீட்டின் கூடம் கட்டுவதற்கு அதன் மரங்கள் உதவும். அதுபோலவே, (பெருமையுடன் வாழ உதவும்) செல்வம் இல்லாது அழிந்து போனாலும், பண்பிற் சிறந்த பெரியோர் பெருந்தன்மை கொண்டவராகவே வாழ்வார்கள். (வறுமையிலும் நற்பண்புகளைக் கடைபிடிக்கும்) இணையற்ற அவர்களது பெருமையை அவர்கள் துன்பத்தில் படும்பாடு வெளிக்கொணரும்.

    பழமொழி சொல்லும் பாடம்: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, மேன்மை குணம் பொருந்தியவர்கள் துன்பம் வந்த போதும் தம் உயர் குணத்திலிருந்தும் மாறுபடாதவர்கள் என்பதனை விளக்குகிறது இப்பழமொழிப் பாடல். உளி தாங்கும் கற்கள் சிலையாக உருவாகும் சிறப்பைப் பெறுவது போல, துன்பத்திலும் செம்மையாக வாழும் அவர்களது நற்பண்பு அவர்களது பெருமையை வெளிக்கொணர உதவுகிறது. எந்த இடரிலும் தன்மை மாறாத சான்றோர்களின் சிறப்பைக் கூற விரும்பிய வள்ளுவர்,

    ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
    ஆழி எனப்படு வார். (குறள்: 989)

    சான்றாண்மையின் கடலாக விளங்குபவர்கள், அழிவு தரக்கூடிய ஊழிக்காலத்தின் பொழுது கூடத் தனது உயர் குணங்களில் இருந்து பிறழாது, பண்பு மாறாதவர்களாகவே இருப்பார்கள் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல்

     

    தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
    வாயின்மீக் கூறு மவர்களை ஏத்துதல்
    நோயின் றெனினும் அடுப்பின் கடைமுடங்கும்
    நாயைப் புலியா மெனல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    தாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி,
    வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்-
    நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்
    நாயைப் புலியாம் எனல்.

    பொருள் விளக்கம்:
    (காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்ற மனநிலையைக் கொண்டவர்களான) பெற்ற தாயும் தந்தையும் கூட பெருமையுடன் கூறவழியற்ற பண்புகளின் இருப்பிடமானவர்,
    தானே தன்னைப் புகழ்ந்து பொய்யுரைத்துப் பேசிக் கொண்டிருப்பார் என்றால், பிறரும் அவர் மொழியினை நம்பி அவர்மேல் புகழுரைகளைக் கூறிக்கொண்டிருப்பது எந்தத் துன்பத்தையும் விளைவிக்காது. ஆயினும், அது அடுப்பின் அருகில் சோம்பலுடன் முடங்கிக்கிடக்கும் நாயொன்றினை வீரம் நிறைந்த புலி எனப் பாராட்டும் (நகைப்பிற்குரிய செயலாக அமைந்துவிடும்).

    பழமொழி சொல்லும் பாடம்: தற்புகழ்ச்சி கொண்டவரை அவர் மகிழும் வண்ணம் போற்றிப் புகழ்ந்துகொண்டிருப்பது முறையற்ற புகழ்ச்சியின் வகைப்படும். சிறியோர்களது  பண்பு என்றும் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருப்பது என்பதைச் சுட்டுகிறார் வள்ளுவர்,

    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து. (குறள்: 978)

    செருக்கின்றி யாவருடனும் பணிவன்புடன் பழகுவது பண்பில் சிறந்த பெரியோர்களின் குணம், சிறுமைக்குணம் படைத்த பண்பற்றோரே ஆணவத்துடன் தற்புகழ்ச்சியாகத் தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொண்டிருப்பர்.

    அத்தகையோரே விரும்பிக் கேட்டாலும் அவர்களுடன் பயனற்றவற்றைப் பேசத் தேவையில்லை எனக் குறிப்பிடும் வள்ளுவர்,

    வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல். (குறள்: 697)

    ஒருவரிடம் உரையாடும்பொழுது பயன்தருபவற்றை மட்டுமே பேசவேண்டும். அவரே விரும்பிக் கேட்டாலும் பயன்தராதா உரைகளைத் தவிர்த்துவிடுதல் வேண்டும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடல்

     

    எல்லாத் திறத்தும்இறப்பப் பெரியாரைக்
    கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் சொல்லின்
    நிறைந்தார் வளையினாய்! அஃதால் எருக்கு
    மறைந்துதியானை பாய்ச்சி விடல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரை,
    கல்லாத் துணையார் தாம் கைப்பித்தல் சொல்லின்,-
    நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்கு
    மறைந்து, யானை பாய்ச்சிவிடல்.

    பொருள் விளக்கம்:
    எல்லா வகைத் திறனும் கொண்ட மேன்மை பொருந்திய அறிஞர்களை, கல்லாமையைத் துணையாகக் கொண்ட கற்றறியாதோர், தங்கள் அறிவின்மையில் மூழ்கி மறைந்து கொண்டு, வெறுப்பேற்றும் சொற்களை உமிழ்வது, அழகு நிறைந்த ஒலிக்கும் வளையல்களை அணிந்தவரே; அத்தகைய செயல், எருக்கம் புதரின் பின் மறைந்து கொண்டு யானையைச் சீண்டி சினமூட்டும் செயல் போன்றது (சிறிய எருக்கம் புதரை பாதுகாப்பு என்று நினைத்து, அதன் பின் மறைந்து கொள்ளும் அறிவிலி, யானையைச் சினம் கொள்ளச் செய்தால் யானை மிதித்தே அழித்துவிடும், ஆதலால் அது துன்பம் வரவழைத்துக் கொள்ளும் செயலென அறிக)

    பழமொழி சொல்லும் பாடம்: மேன்மை மிகு அறிஞர்களை, அறிவிலிகள் துன்புறுத்த எத்தனித்தால் அது தங்கள் அழிவைத் தேடிக் கொள்ளும் செயலாக அமைந்துவிடும். இக்கருத்தை வள்ளுவர்,

    கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
    ஆற்றாதார் இன்னா செயல். (குறள்: 894)

    ஆற்றல் உள்ளோரிடம், அந்த ஆற்றல் இல்லாதவர் தீங்கு விளைவிக்க முயல்வது மரணத்தைக் கையசைத்து அழைத்து வலிந்து ஏற்றுக்கொள்வது போன்றதாகும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: நெடும்பகை தன்செய்யத் தானே கெடும்

     

    உற்றதற் கெல்லா முரஞ்செய்ய வேண்டுமோ?
    கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
    நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை
    தற்செய்யத் தானே கெடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ?
    கற்று அறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்;
    நெல் செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை,
    தன் செய்ய, தானே கெடும்.

    பொருள் விளக்கம்:
    எதிர்கொள்ளும் இடர் ஒவ்வொன்றுக்கும் தன்னை வலிமை படுத்திக் கொள்வது தேவையா? சான்றோர்களைச் சினம் கொள்ளச் செய்யாமல் நன்னெறி வழி நடப்பதே தற்காப்பாக அமைந்து பகையை அழித்துவிடும் (கற்றறிந்த சான்றோர் தமக்கு ஏற்படும் சினத்தைக் கட்டுக்குள் வைத்தாலே பகையை வென்றுவிடலாம் என்றும் பொருள் கொள்ளலாம்). உழவு செய்து நெல்பயிரிடும் வயலில் நெல் செறிந்து வளர்ந்தால் அங்குள்ள புல் தானே அழிந்துபடும் (களை நீக்கவென தனியான முயற்சி எதுவும் தேவையில்லை). அவ்வாறே தீராத பகையும், ஒருவர் தன்னை வலிமைப்படுத்திக் கொள்வாரானால் தானே அழிந்துவிடும் (பகை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்காமலே, எதிராளியின் வலிமையை அறிந்து கொண்ட பகைவர் தாமே ஒடுங்கிவிடுவர்).

    பழமொழி சொல்லும் பாடம்: கற்றோருக்கு சினமூட்டி பகைத்துக் கொள்ளாமல் நன்னெறி வழி நடப்பவர்க்குச் சான்றோர் பலர் ஆதரவாளராக இருப்பதன் காரணமாக வலிமை மிகுந்தவராகவும் இருப்பார். வலிமை மிகுந்த அவரை எதிரிகள் தாக்கத் துணிய மாட்டார்கள். கற்றோர்கள் தங்கள் சினத்தைக் கட்டுப்படுத்தி சீராகச் சிந்திக்கும் திறன்மூலம், பதற்ற மற்றவர்களாய் தங்களை வலிமைப்படுத்திக் கொள்ளும் வழி அறிவர். அந்த வலிமை பகையை அழித்துவிட உதவும் எனவும் பொருள் கொள்ளலாம். தன்னை வலிமைப் படுத்திக் கொள்ளும் வகை அறிந்தவரிடம் பகைமை பாராட்டுபவர் இருக்கமாட்டார் என்பதை விளக்க விரும்பும் வள்ளுவரும்,

    வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு. (குறள்: 878)

    வழிமுறைகளை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பை ஏற்படுத்திக் கொண்டவரை எதிர்கொள்ள இயலாமல் பகைவரின் ஆணவம் தானே அழியும், பகையும் ஒழியும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: போற்றான் கடையடைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கௌவி விடும்

    ஆற்றா ரிவரென் றடைந்த தமரையும்
    தோற்றத்தா மெள்ளி நலியற்க – போற்றான்
    கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
    உடையானைக் கௌவி விடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘ஆற்றார் இவர்’ என்று, அடைந்த தமரையும்,
    தோற்ற தாம் எள்ளி நலியற்க!-போற்றான்,
    கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும்
    உடையானைக் கௌவி விடும்.

    பொருள் விளக்கம்:
    எதிர்ப்புக் குரல் எழுப்பும் ஆற்றலற்றவர் இவர் என்ற எண்ணத்தில், தன்னிடம் தஞ்சமடைந்த உறவினரை, பிறர் அறியும்வண்ணம் இகழ்ச்சியாகப் பேசி வருந்துமாறு செய்தல் வேண்டாம். தன்னைப் பேணிக் காக்காமல் வாசல் கதவை அடைத்துப் பூட்டிய அறையினுள் நையப் புடைத்தால், (வெறுப்படைந்த) நாயும் தன்னை வளர்ப்பவரையே கவ்விக் கடித்துக் குதறி விடும்.

    பழமொழி சொல்லும் பாடம்: நலிவடைந்த தனது உறவுகளைப் பேணிக்காக்காது பலரறிய அவரை இகழ்ந்து பேசுவது கேடு விளைவிக்கும், பொறுத்தது போதும் என அவர் பொங்கி எழுந்துவிடுவார். உடைமையாளரிடம் நன்றி பாராட்டும் நாயும் அவர் தன்னைத் துன்புறுத்தினால் எதிர்த்துத் தாக்கத் தயங்காது. தன்னிடம் உதவி நாடி வந்தவரை இகழாது இருந்தால் அவர் மகிழ்வார் என்பதை,

    இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
    உள்ளுள் உவப்பது உடைத்து. (குறள்: 1057)

    இகழ்ந்து எள்ளி நகையாடாமல் தனக்கு உதவுபவரைக் கண்டு உதவிநாடி வந்தவர் மகிழ்வார் என்றும்,

    நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
    பண்புள பாடறிவார் மாட்டு. (குறள்: 995)

    வேடிக்கை என நினைத்து ஒருவரை இகழ்ந்து பேசுவதும், விளையாட்டு வினையாக முடிவது போல கேட்டை விளைவிக்கும். பகைவரிடத்திலும் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுள்ளோர் அறிந்திருப்பார் என்று குறள்கள் விளக்கம் தருகின்றன.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு

     

    கள்ளியகிலுங் கருங் காக்கைச் சொல்லும்போ
    லெள்ளல் கயவர்வா யின்னுரையைத் – தெள்ளிதி
    னார்க்கு மருவி மலைநாட! நாய்கொண்டாற்
    பார்ப்பாருந் தின்பா ருடும்பு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல்,
    எள்ளற்க, யார் வாயும் நல் உரை!-தெள்ளிதின்
    ஆர்க்கும் அருவி மலை நாட!-நாய் கொண்டால்,
    பார்ப்பாரும் தின்பர், உடும்பு.

    பொருள் விளக்கம்:
    கள்ளியில் கிடைக்கும் அகிலையும் (அதன் மணத்திற்காகவும்), கருங்காக்கை கரைவதையும் (நல்நிமித்தம் சொல்கிறது என்று கருதியும்) ஏற்றுக் கொள்வதைப் போன்று, இகழாது கயமைப் பண்புள்ளோர் கூறும் நல்ல கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தெளிவாக, ஒலிக்கும் அருவி வீழும் மலைநாட்டைச் சேர்ந்தவரே (வேட்டையின் பொழுது) நாய் கவ்விக் கொண்டுவந்ததாயிற்றே என்று புறக்கணிக்காமல், பார்ப்பனரும் உடும்பின் தசையின் சுவை கருதி அதனை உண்ணுவர்.

    பழமொழி சொல்லும் பாடம்: பிறப்பிடம் நோக்காது, உயர்ந்த பண்புகளைக் கண்டால் அதனை மதிக்க வேண்டும். கள்ளியில் தோன்றும் நறுமணம் கொண்ட அகிலையும், கருமையான காக்கையின் கத்தலை விருந்தினர் வருவதைக் கூறும் நல்ல நிமித்தம் என்றும் உயர்வாக மதிப்பது அல்லாமல், அவை தோன்றிய இடம் கண்டு இகழ்ச்சியாகக் கருதும் வழக்கமில்லை. வேட்டை நாய் தனது வாயால் கவ்விப் பிடித்த உடும்பினைக்கூட நாய் கவ்வியதாயிற்றே என்று பார்ப்பனரும் புறக்கணிக்காமல் அந்தப் புலாலின் சுவை கருதி உண்பர். அவ்வாறே, இழிந்தோர் நல்லுரை கூறினால் இகழாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தும் இப்பாடல் கருத்தினுக்கு இணையாக வள்ளுவர் கூறும் குறள்,

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்: 423)

    எந்த ஒரு பொருள் குறித்து எவர் என்ன கூறினாலும், அக்கருத்தில் காணும் உண்மையைக் கண்டறிந்து ஏற்றுக் கொள்வது அறிவுடமையாகும் என்கிறது.

    குறிப்பு: இப்பாடலில் பாடபேதங்கள் காணப்படுகின்றன. நாராயண ஐயங்கார் அவர்களின் நூலில் காணும் பாடல் “எள்ளல் கயவர் வாய் இன்னுரை” என்று கூறுவதை “எள்ளற்க யார் வாயும் நல்லுரை” என்று மற்ற சில நூல்கள் காட்டுகின்றன. அவ்வாறே, “நாய் கொண்டால்” என்பது பாடபேதமாக, “நோய் கொண்டால்” எனவும் இருக்கலாம் என்கிறார் நாராயண ஐயங்கார். அதனை ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும், என்ற உடல் நலம் கெட்ட நிலையில், உடல் நலம் கருதி உடும்பைக் கூட பார்ப்பனர் உண்பர் என்ற வகையிலும் பொருள் கொள்ளலாம். எப்படியாயினும், பொதுவாகப் பாடலின் கருத்து “சேற்றில் மலர்ந்த செந்தாமரை”, சிப்பியில் பிறக்கும் முத்து” ஆகியவற்றை எத்தகைய தாழ்ந்த நிலையில் தோன்றினாலும் இகழ்வாகக் கருதாது, அவற்றின் உயர்ந்த பண்பினைக் கண்டு ஏற்றுக் கொள்வது போலவே; கள்ளியில் பிறந்த அகிலையும், காக்கையின் கரைதலையும், நாய் கவ்விய உடும்பையும் மக்கள் ஏற்றுக் கொள்வதே வழக்கம். அவ்வாறே இழிவானவராக இருந்தாலும் அவர் கூற்றில் உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதே இப்பழமொழிப் பாடல் தரும் அறிவுரை.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: இருள் நீக்கும் பல்மீனும் காய்கலாவாகும் நிலா

     

    ஆயிரவ ரானு மறிவில்லார் தொக்கக்கான்
    மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்
    பாயிரு ணீக்கு மதியம்போற் பன்மீனுங்
    காய்கலா வாகு நிலா.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஆயிரவரானும் அறிவில்லார் தொக்கக்கால்,
    மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்;-
    பாய் இருள் நீக்கும் மதியம்போல், பல் மீனும்,
    காய்கலாவாகும் நிலா.

    பொருள் விளக்கம்:
    ஆயிரக்கணக்கான அறிவற்றவர் ஒன்று திரண்டாலும், பரந்து விரிந்திருக்கும் இப்பெரிய உலகில் மாட்சிமை பொருந்திய அறிவிற்சிறந்த ஒருவரைப் போல விளங்க மாட்டார். (அது போலவே) பரவியுள்ள இருளைப் போக்கும் வெண்மதி போல, பல விண்மீன்கள் ஒருங்கிணைந்தாலும் நிலவைப்போலக் காய்ந்து ஒளிதர அவற்றால் இயலாது.

    பழமொழி சொல்லும் பாடம்: அறியாமை கொண்டோர் ஆயிரமாயிரம் பேர் ஒன்று திரண்டாலும், அறிவில் சிறந்துள்ள ஒருவருக்கு ஒப்பாக மாட்டார். அறிவிற் சிறந்தவரின் சிறப்பை எடுத்துரைக்க விரும்பிய வள்ளுவர்,

    அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர். (குறள்: 430)

    அறிவுடையவர் எல்லாச் செல்வமும் உடையவராக உலகத்தாரால் மதிக்கப்படுவார், அறியாமை சூழ்ந்தவர் ஒருவர் எத்தனைச் செல்வம் பெற்றிருப்பினும் அவர் ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படுவார் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: சிறிதேனும் இன்னாது இருவர் உடன் ஆடல் நாய்

     

    ஒருவ ருரைப்ப உரைத்தால், அதுகொண்
    டிருவரா வாரும் எதிர்மொழியற் பாலா.
    பெருவரை நாட! சிறிதேனும் இன்னா
    திருவர் உடனாடல் நாய்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    ஒருவர் உரைப்ப உரைத்தால், அது கொண்டு
    இருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலா;-
    பெரு வரை நாட!-சிறிதேனும் இன்னாது,
    இருவர் உடன் ஆடல் நாய்.

    பொருள் விளக்கம்:
    ஒருவர் ஒரு கருத்தினை உரைக்க, அவருக்கு மாற்றுக் கருத்துள்ளவர் அதனை மறுத்து மறுமொழி சொன்னால், அதைப் பற்றி மேற்கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் எதிர்த்து வாதிட்டுக் கொண்டிருப்பது சரியாகுமா? (அது சரியான முறையல்ல). பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவரே, சிறிது காலப்பொழுதிற்குத்தான் என்றாலும் அது நன்மை பயக்காது. (அச்செயல்) இருவர் ஒரே ஒரு நாயின் உதவி கொண்டு தங்கள் இருவரது வேட்டையாடுதலையும் செய்வது போல (மிகுந்த துன்பத்தைக் கொடுப்பதாக) அமையும்.

    பழமொழி சொல்லும் பாடம்: தங்கள் வாதக் கருத்தை எடுத்துக் கூறுபவர்கள் ஒரே நேரத்தில் எதிர்த்து உரையாடிக் கூச்சலிடுவது பயன் தராது. வேட்டையாடச் செல்லும் இருவர், அவரவருக்கென்று ஆளுக்கொரு ஒரு நாயைப் பயன்படுத்தினால் மட்டுமே வேட்டையாடுவது எளிதாக இருப்பது போல; வாதிடுவோர் ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் கருத்தை முன் வைத்தாலே அவ்வாதத்தால் பயன் விளையும். இருவரும் ஒரே நேரத்தில் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பது வாதத்திற்கு உதவாது. நேரத்தையும் நிலைமையையும் அறிந்து கருத்தை முன்வைக்க வேண்டும் என்பதை வள்ளுவர்,

    இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர். (குறள்: 712)

    சொற்களின் தன்மையை நன்கு உணர்ந்தவர்கள், கேட்பவர்கள் விரும்பிக் கேட்கும் வகையில், நிலைமையைக் கருத்தில் கொண்டு, சொல்வதைத் தெளிவாகச் சொல்லத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: வினா முந்துறாத உரை இல்லை

    பழமொழி: கனா முந்துறாத வினை இல்லை

    கல்லா தான் கண்ட கழி நுட்பங் கற்றார்முற்
    சொல்லுங்காற் சோர்வு படுதலா – னல்லாய்
    வினாமுந் துறாத வுரையில்லை யில்லைக்
    கனாமுந் துறாத வினை.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்
    சொல்லுங்கால், சோர்வு படுதலால், நல்லாய்
    வினா முந்துறாத உரை இல்லை;-இல்லை,
    கனா முந்துறாத வினை.

    பொருள் விளக்கம்:
    முறையாகக் கல்வியைக் கற்றிராத கல்லாதவர் ஒருவர் மிக நுட்பமான மெய்ப்பொருளினை அறிந்து கொண்டாலும், அதனைக் கற்றார் முன் விளக்கிக் கூறுவதற்கு தக்க கல்வியறிவினைப் பெறாததால் அவர் கூற்று முக்கியத்துவம் பெறாமல் போகும். நற்பண்புகள் அமைந்த பெண்ணே, கேள்வி கேட்பதற்குமுன் அதற்குரிய பதில் எழுவதில்லை, ஒன்றை விரும்பிக் கனவு காணாது அதற்கேற்ற செயல் துவங்குவதில்லை (அவ்வாறே, அடிப்படைக் கல்வியற்றவர் தக்க அறிவு பெற்றிருக்கவும் வழியில்லை என அறிவாயாக)

    பழமொழி சொல்லும் பாடம்: சிறந்தவகையில் பொருள் புரிந்து கொள்ள அதற்கேற்ற முறையான அடிப்படைக் கல்வியைக் கற்றிருத்தல் அவசியம், கல்வியின்றி நுண்ணறிவு பெறுதல் இயலாது. டாக்டர் அப்துல் கலாம் சொன்ன “கனவு காணுங்கள்” என்பதன் அடிப்படையைக் காட்டுகிறது “கனா முந்துறாத வினை இல்லை” என இப்பாடல் கூறும் பழமொழி. குறிக்கோளினை எண்ணியபிறகுதான் அதை அடையும் செயல் துவங்குகிறது. பதில் வருவதற்குக் காரணம் அதற்கேற்ற கேள்வி எழும்புவது. தக்க அடிப்படைக் கல்வி இல்லாத பொழுது ஆராயும் மனப்பான்மை பெறாத காரணத்தினால் கண்டுகொண்ட நுட்பத்தின் அடிப்படையும் விளங்காது. பல அறிவியல் நிகழ்வுகளை அறிந்திருந்தாலும் அது ஏன் நிகழ்கிறது என்ற அடிப்படைப் புரிதல் இல்லாதவர்களைக் கொண்டு இக்கூற்றைப் புரிந்து கொள்ளலாம். அதனால் இயற்கையறிவு பெற்றிருப்பினும் நுண்பொருளை அறிவதற்குத் தக்க அடிப்படைக் கல்வி தேவை என்பதை விளக்குகிறது இப்பழமொழிப் பாடல். தேவையான கல்விப் பயிற்சியின்றி கற்றோரை எதிர்கொள்வதை வள்ளுவர்,

    அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றிக் கோட்டி கொளல். (குறள்: 401)

    தேவையான நூல்களைக் கற்று கல்வியைப் பெறாத ஒருவர் கற்றறிந்த சான்றோருடன் கலந்துரையாடுவது, விளையாட்டிற்குத் தேவையான கட்டங்களை வரைந்து கொள்ளாமல் தாயக்கட்டையை உருட்ட முற்படுவதற்கு ஒப்பாகும் என்கிறார். அத்தகையவர் நிலையை,

    கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும். (குறள்: 405)

    கல்லாத ஒருவர் கற்றறிந்த மேதைகள் முன்னிலையில் எல்லாம் அறிந்தவர் போல உரையாட முற்படும்பொழுது அவரது உண்மையான அறிவுத் தகுதி எளிதில் வெளிப்பட்டுவிடும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: கற்றொறும் தான் கல்லாதவாறு

     

    சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
    கற்றொறும் கல்லாதே னென்று வழியிரங்கி
    உற்றொன்று சிந்தித் துழன்றொன் றறியுமேல்
    கற்றொறுந்தான் கல்லாத வாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    சொல்தொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக்
    கல்தொறும், ‘கல்லாதேன்’ என்று, வழி இரங்கி,
    உற்று ஒன்று சிந்தித்து, உழன்று ஒன்று அறியுமேல்,
    கல்தொறும் தான் கல்லாதவாறு.

    பொருள் விளக்கம்:
    (கற்றறிந்தோருடன் உரையாடுகையில்) செய்துவிடும் சொற்குற்றம் காரணமாகத் தடுமாறினால், அதனால் மனத் தளர்வு கொள்ளாமல், நன்கு கற்றறியும் வரை நான் கல்லாதவரே என்று உணர்ந்து, தனது கல்லாமை நிலைக்காக வருந்தி, மனதை ஒருமைப்படுத்தி கற்பேன் என்ற உறுதிகொண்டு, முயன்று ஒன்றைக் கற்க வேண்டும். அவ்வாறு கற்றறியும் வரை தான் ஒரு கல்லாதவரே என்பதையும் உணர வேண்டும்.

    பழமொழி சொல்லும் பாடம்:  கல்வி கற்கும் ஒவ்வொருவரும் தான் அதனைக் கற்றறியும் வரை கல்லாதவரே என்பதை உணர்ந்து கற்கவேண்டும். கற்றறிந்தோருடன் அச்சமின்றி உரையாடத் தனது கல்வியறிவை ஒருவர் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை வள்ளுவர்,

    ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
    மாற்றங் கொடுத்தற் பொருட்டு. (குறள்: 725)

    கற்றறிந்தோர் அவையில் அச்சமின்றி விவாதிக்க உதவும் வகையில் இலக்கண, இலக்கிய வாதக்கலை ஆகியவற்றைக் கற்றறிந்து திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: கொல்லிமேல் கொட்டு வைத்தார்

     

    அடங்கி யகப்பட வைந்தினைக் காத்துத்
    துடங்கிய மூன்றினான் மாண்டீண் – டுடம்பொழியச்
    செல்லும்வாய்க் கேமஞ் சிறுகாலைச் செய்யாரே
    கொல்லிமேற் கொட்டுவைத் தார்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    அடங்கி, அகப்பட ஐந்தினையும் காத்து,
    தொடங்கிய மூன்றினான் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய,
    செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்யாரே
    கொல்லிமேல் கொட்டுவைத் தார்.

    பொருள் விளக்கம்:
    அடக்கம் என்னும் பண்பினைக் கடைப்பிடித்து, தனது கட்டுக்குள் அகப்படுமாறு ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒழுக்கத்துடன் வாழத் துவங்கி மாண்புடன் வாழ்ந்து, இவ்வுலக வாழ்வில் கொண்டுள்ள உடல் அழிந்து மறுமைக்குச் செல்லும் வழிக்குப் பயன் தரும் நன்னெறியைத் தக்க காலத்தில் செய்து வாழாதவர், உயிர் எடுக்கும் நச்சு உணவை நாடுவதற்கு ஒப்பாகும் செயலைச் செய்யும் அறிவிலியாவார்.

    பழமொழி சொல்லும் பாடம்: நன்னெறியைக் கடைப்பிடித்து, தக்க அறச்செயல்களைச் செய்யாமல் வாழ்வது அறிவற்ற செயலாகும். மண்ணுலகில் வாழும் முறைப்படி வாழ்க்கையை நடத்துபவர் தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவார் என இதனைச் சுருக்கமாக,

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும். (குறள்: 50)

    என்று கூறும் வள்ளுவர்,

    அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை. (குறள்: 36)

    பின்னர் செய்வோம் என்று காலம் தாழ்த்தாது அறவழியைக் கடைப்பிடித்து ஒருவர் வாழ்ந்தால், அவரது மரணத்திற்குப் பின்னரும் அவர் நிலைத்த புகழுடன் வாழ அது உதவியாக அமையும் என்று மேலும் விளக்குகிறார்.

    குறிப்பு:
    ஒப்பிட்ட நான்கு* பழமொழி நானூறு உரையாசிரியர்களும் வெவ்வேறு வழியில் பொருள் சொல்லும் பாடலாகவும், பாடபேதங்கள் உள்ள பாடலாகவும் விளங்குவது இந்தப் பழமொழி நானூறு பாடல். ‘செய்யாரே’ என்பது செய்தாரே எனவும். ‘கொல்லி’ என்பது ‘கொள்ளி’ எனவும், ‘கொட்டு வைத்தார்’ என்பது ‘கோட்டு வைத்தார்’ எனவும் பேதங்கள் காணப்படுகின்றன. அத்துடன் கொல்லி என்று (உயிரை) அழிக்கும் செயலாகவும், கொல்லி என்பது கொல்லி மலையாகவும், கொள்ளி என்று நெருப்பாகவும் உரையாசிரியர்களால் பொருள் கொள்ளப்படுகிறது. கொட்டு என்று களைக்கொட்டு போல நிலத்தை அகழப் பயன்படும் கருவியாகவும், கோட்டு என்பது நெற்கூடையாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. கொண்ட பொருளிற்கேற்ப கொல்லி மலையின் மேல் நெல்லை குமித்து பிற்காலத் தேவைக்கு சேர்த்து வைக்காதவர் எனவும், நெருப்பின் மீது விதை நெல்லைச் சமைத்து உண்ணும் செயலைச் செய்பவர் எனவும், உயிர் கொல்லும் கிழங்கை கொட்டுக் கருவியால் அகழ்ந்து உண்ண முற்படுபவர் எனவும் பலவாறாகப் பொருள் கொள்ளப்படுகிறது. அவ்வாறே துறவற நெறியைக் கடைப்பிடித்தல், சனாதன நெறிப்படி வாழ்தல், மூன்று தீய குணங்களான செருக்கு, சினம், வஞ்சம் என்றவற்றைக் கட்டுப்படுத்துதல் என்று பாடலுக்குப் பலவகையில் உரையாசிரியர்கள் தங்கள் கருத்தினை ஏற்றிப் பொருள் உரைத்துச் செல்கிறார்கள்.

    எனவே, பொதுவாக, பிற்கால நலனைக் கருத்தில் கொண்டு தக்க காலத்தில் அறநெறியைக் கடைப்பிடித்து வாழாத ஒருவரது செயலை, விதை நெல்லைச் சமைத்து உண்டுவிடுபவர் செயல் போன்றோ, அல்லது நச்சுத் தன்மை கொண்ட உணவை உண்ண முயல்பவர் செயல் போன்றோ ஒரு அறிவற்ற, தொலைநோக்கற்ற செயலாக இப்பாடல் குறிக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். இக்குழப்பங்களுக்குக் காரணம் இப்பழமொழி வழக்கொழிந்து போனதால் காலமாற்றத்தில் பொருள் புரியாத நிலை ஏற்பட்டிருக்கக் கூடும்.

    *1. செல்வக்கேசவராய முதலியார் (1917); 2. நாராயண ஐயங்கார் (1918); 3. ம. இராசமாணிக்கனார் (1948); 4. புலியூர்க் கேசிகன் (2010)

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: சுரத்திடைப் பெய்த பெயல்

     

    கரப்புடையார் வைத்தகடையும் உதவா
    துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால்
    நிரப்பிடும்பை மிக்கார்க் குதவஒன் றீதல்
    சுரத்திடைப் பெய்த பெயல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கரப்பு உடையார் வைத்த, கடையும் உதவா,
    துரப்புடைய மன்னர்க்கே துப்புரவு; அது அல்லால்,
    நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்-
    சுரத்திடைத் பெய்த பெயல்.

    பொருள் விளக்கம்:
    (வறுமையில் வாடுவோருக்குக் கொடுத்து உதவாது) ஒளித்து வைப்பவரின் செல்வம் இறுதியில் அவர் சந்ததிக்கும் உதவாது போகும். (பின்னர் புதையலாக அது கண்டெடுக்கப்பட்டு) பகைவரைத் துரத்தி விரட்டும் தொழிலைச் செய்யும் அரசுக்கு உரிமை உடையதாக உலக வழக்குப்படி சென்று சேரும். அவ்வாறின்றி, வறுமையில் துன்பம் மிகக் கொண்டவருக்கு உதவுமாறு அப்பொருள் மூலம்  ஒரு உதவி செய்வது வறண்டப் பாலை நிலத்திற்குப் புத்துயிர் ஊட்டும் மழைக்கு ஒப்பாகப் பயன் அளிக்கும்.

    பழமொழி சொல்லும் பாடம்: செல்வத்தை மறைத்து வைக்காமல், வாடும் வறியவர்க்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் கொடுத்து உதவுவதே சிறந்த ஈகையாகும். தேடிச் சேர்த்த பொருளைத் தக்கவருக்கு உதவப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தைத் திருக்குறள்,

    தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
    வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள்: 212)

    ஒருவர் முயன்று சேர்க்கும் செல்வத்தைத் தக்கவருக்கு பயன்படுமாறு கொடுத்துதவ வேண்டும் என்று விளக்குகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: எய்ப்பினில் வைப்பென்பது

     

    வைத்ததனை வைப்பென் றுணரற்க தாமதனைத்
    துய்த்து வழங்கி யிருபாலு மத்தகத்
    தக்குழி நோக்கி யறஞ்செய்க வஃதன்றோ
    வெய்ப்பினில் வைப்பென் பது.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வைத்ததனை வைப்பு என்று உணரற்க! தாம் அதனைத்
    துய்த்து, வழங்கி, இரு பாலும் அத் தகத்
    தக்குழி நோக்கி, அறம் செய்க!-அஃது அன்றோ,
    எய்ப்பினில் வைப்பு என்பது?

    பொருள் விளக்கம்:
    தாம் தேடி வைத்துள்ள செல்வம் எல்லாம் தளர்வுற்ற பிற்கால பயனுக்காக என்று எண்ண வேண்டாம், தாமும் அப்பொருளைப் பயன்படுத்தி, பிறருக்கும் கொடுத்து உதவி செய்து, இம்மை மறுமை என்ற இரு வகை வாழ்வும் சிறப்படையுமாறு, உதவத்தக்கவர்களுக்கு நிதி வழங்கி நல்லறம் செய்வீர் எனில், அதுவன்றோ கேடு சூழும் காலத்தில் உதவும் சேமநிதி போன்றதாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: உதவி தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் அறம் செய்வதே இம்மை மறுமை என்ற இருவகை வாழ்வையும் சிறப்படையச் செய்யும். அந்த அறச்செயலே இடருற்ற காலத்தில் உதவும் செல்வம் போன்றது. ஈட்டும் பொருளின் பெருமை அதனைத் தக்கவாறு பயன்படுத்தி அறம் செய்து எவ்வாழ்விலும் சிறப்புற வாழ்வதில்தான் உள்ளது. இம்மைக்கும் மறுமைக்கும் என இரு வாழ்வையும் செய்யும் அறம் சிறப்புறச் செய்யும் என உணர்த்த விரும்பிய வள்ளுவர்,

    இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு. (குறள்: 23)

    இம்மை மறுமை என இரு வாழ்வின் தன்மை உணர்ந்து, அறத்தைச் செய்பவரின் பெருமையே உலகில் சிறப்படைகிறது என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: எல்லாம் பொய் அட்டூணே வாய்

     

    சேர்ந்தா ரொருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
    தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் – தேர்ந்தவர்க்குச்
    செல்லாமை காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
    எல்லாம்பொய் அட்டூணே வாய்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுகப்பட்டவர்
    தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்து அவர்க்குச்
    செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?-
    எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய்.

    பொருள் விளக்கம்:
    தன் சுற்றத்தார் ஒருவரை; உதவிநாடி தன்னிடம் வந்தவரை விருந்தோம்பும் ஒருவர், வந்தவர் தன்னுடன் தொடர்பில் இருப்பவரல்ல என்று தெளிவாகத் தெரிந்தாலும், அந்த உறவினர் வறுமையில் இருந்து மீள முடியாதிருப்பதை ஆராய்ந்து அதை நீக்கும் முறையை அறிந்திராவிடில், அவருக்கு வேறு என்னதான் வழி இருக்கிறது? (பசி நீக்கும் உணவளித்துக் காப்பதைத் தவிர பிற உதவிகள்) எல்லாமே பொய்; சமைத்து உணவளித்து உதவுவதே மெய்யான உதவி.

    பழமொழி சொல்லும் பாடம்: அறங்களுள் சிறந்த அறமாகக் கருதப்படுவது வறியவரின் பசி நீங்க உணவளிப்பது மட்டுமே. பசி தீர்க்கும் அறத்தின் சிறப்பை வள்ளுவர்,

    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி. (குறள்: 226)

    வறுமையில் உழல்பவரின் பசியைத் தீர்த்திடுக. அந்த அறம் ஒன்றே பொருள் பெற்றோர் தனது செல்வத்தை தம் பிற்கால நலனுக்காகச் சேமித்து வைக்கும் கருவூலம் என்கிறார்.

    Share