Tag: மலர் சபா

  • நான் அறிந்த சிலம்பு – 167

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    கவுந்தி மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தல்

    பசுக்களைப் பிணிகளிலிருந்து காத்து
    அவற்றுக்கு உணவு நீர் கொடுத்து
    கவனத்துடன் வளர்த்து வரும்                      idaiyar
    இடையரின் வாழ்க்கையில்
    துன்பமொன்றும் இல்லை.

    குற்றமற்றவள் முதுமகள்
    நேரான குணமுடையவள்
    இரக்கத்துடன் பிறர்க்கு உதவுபவள்;
    எனவே இம்மாதரியிடத்தில்
    கண்ணகியை அடைக்கலமாய் வைப்பது
    பொருத்தமாக இருக்கும்
    என்று எண்ணிய கவுந்தி
    இங்ஙனம் கூறலானார்:

    மாதரியே கேள்!
    இப்பெண்ணின் கணவருடைய தகப்பனின்
    பெயரைக் கேட்டால்
    அவர் குலப்பிறப்பான இந்நகரில் வாழும்
    பெருவணிகர் யாவரும்
    தாம் பெறுதற்கு அரிய
    செல்வத்தைப் பெற்றோம்
    என்றே எண்ணி
    அவர்களை எதிர்கொண்டு
    விருந்தினராக்கி உபசரிப்பர்.
    அங்ஙனம் இந்தப்பெண்
    பெருஞ்செல்வம் பெற்றவரது இல்லம்
    அடைக்கலம் புகும் வரையில்
    இடைக்குலப் பெண்ணாகிய உனக்கு
    இவளை அடைக்கலம் கொள்ளும்
    பொறுப்பைத் தருகிறேன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 120-130

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 166

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    கவுந்தியும் மாடலனும் கோவலனுக்குக் கூறிய ஆறுதல் உரைகள்

    மாதவம் செய்த கவுந்தியடிகளும்
    மாமறையோன் மாடலனும்
    கோவலனிடன் இவ்வாறு கூறினர்:             kovalan
    இங்கே இங்ஙனம் தங்கியிருப்பது
    துறவறம் மேற்கொண்ட
    முனிவர்களுக்கு மட்டுமேயல்லாது
    இல்லறத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பொருந்தாது

    இந்நகரில் இருக்கும் வணிகர்
    உன் பெருமையறிந்து உன்னை ஏற்றுக் கொள்வர்
    எனவே இவ்விடத்தை விடுத்து நீங்குக.
    சூரியனின் கதிர்கள் மேற்கில் மறையும்முன்
    உன் காதலி அவளோடு மதுரை நகர் புகுக.

    மாதரி என்னும் ஆயர்குல முதுமகள் கவுந்தியை வணங்குதல்

    அந்த நேரத்தில்
    அறம் செய்வதைப் பெரிதும் விரும்புகின்ற
    அறம் செய்பவர்கள் நிறைந்துள்ள
    புறஞ்சேரி எனும் மூதூரில் குடிகொண்டுள்ள
    பூப்போன்ற கண்களையுடைய
    ‘இயக்கி’ எனும் பெண் தெய்வத்திற்குப்
    பால் அன்னம் படைத்துவிட்டுத்
    திரும்பிக்கொண்டிருந்த
    அன்பும் பண்பும் நிறைந்த
    ஆயர்குல முதுமகள் மாதரி என்பவள்
    கவந்தியடிகளைக் கண்டு
    அவரடி தொழுது நின்றாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 107 -119
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 165

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    கோவலன் தான் கண்ட கனவைக் கூறல்

    கோவலன் மாடலனிடம் கூறலானான்:
    கீழ்மகன் ஒருவன் செய்த சூழ்ச்சியால்
    காவல் காப்பதில் வல்லவனாம் பாண்டியனின்     kovalan kannagi
    இம்மதுரை நகர்தன்னில் ஐந்து பிரிவுகளாய்ப் பிரிக்கப்பட்ட
    மணம் மிக்க கூந்தலையுடைய கண்ணகி
    நடுங்கும் வண்ணம் துயரடைந்தாள்.

    நான் உடுத்திருந்த ஆடை
    பிறரால் பறித்துக்கொள்ளப்பட்டுக்
    கொம்புகள் உடைய எருமையின் மீது
    ஏறிச் சென்றேன்;
    அழகான சுருண்ட கூந்தலையுடைய
    கண்ணகியும் நானும்
    பற்றுகளைத் துறந்த சான்றோர் பெரும்
    பேற்றினைப் பெற்றோம்.

    தன் மலரம்புகளை நிலத்தில் வீசிவிட்டு
    மன்மதன் ஏக்கம் கொண்டுச் செயலற்று நிற்கும்படி,
    மாதவி அழகுமிக்க மணிமேகலையைப்
    போதி மரத்தின் அடியில் உள்ள
    புத்தர் முன் துறவியாக்கினாள்.

    நள்ளிரவு யாமத்தில்
    நனவேதான் போல் தோன்றும்
    இக்கனவினைக் கண்டேன்
    அதன் பயன் விரைந்து வந்து சேரும்
    என நினைக்கிறேன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 95 -106

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 164

    -மலர் சபா

    பூதம் கொன்ற தீயோனின் சுற்றத்தாரைப் பாதுகாத்தமை

    கற்பில் சிறந்த பத்தினி ஒருத்தி
    பொய்ப்பழி மேற்கொள்ளும் வண்ணம்
    அவள் கணவனை  நம்பவைப்பதற்காக              sathukkaboodham
    நடந்தே இல்லாத ஒன்றைப்
    பொய்சாட்சியாகக் கூறினான் ஒருவன்
    இவ்வாறு தவநெறி மறந்து ஒழுகுபவரைக்
    கரிய கயிற்றால் கட்டித்
    தரையில் அறைந்து உண்ணும் பூதம் சதுக்கபூதம்
    இவனையும் அவ்வாறே பற்றி நிற்க,
    அவன் தாய் பெருந்துன்பமுற்றாள்

    அதனைத் தாங்காத நீ விரைந்து சென்று
    அக்கயிற்றினுள் கட்டுப்பட்டு
    ‘என் உயிர் எடுத்து இவன் உயிர் தருவாய்’
    என வேண்டினாய்
    நேர்மையுடைய அப்பூதம்
    அதற்குச் சம்மதிக்கவில்லை

    ‘கீழ்மையான இவனின் உயிருக்குப் பதிலாய்
    நல்லவன் ஒருவனின் உயிரை
    மாய்க்கும் வழக்கம்
    என்னிடத்தில் இல்லை
    உன் எண்ணத்தை விட்டுவிடு’ என்றே கூறி
    அக்கணமே அவர்கள் முன்னே
    அவனை அறைந்து கொன்று தின்றது.

    துன்பம் கொண்ட தாய்க்கும்
    அவள் சுற்றத்தாருக்கும் சேர்த்து
    பொருள் வழங்கி அவர் பசிப்பிணி போக்கி
    உன் சொந்தம் போலவே அவர்களை நடத்தினாய்
    அத்தகைய மனமுடைய
    இல்லாதோர்க்கு அள்ளி வழங்குபவன் நீ

    அறிவில் முதிர்ந்த கோவலனே!
    எனக்குத் தெரிந்தவரை இப்பிறப்பில்
    நீ செய்தவை எல்லாம்
    நல்வினைகள் தாம்;
    எனவே, இலக்குமியை ஒத்த
    மாணிக்கத் தளிர்போன்ற கண்ணகியுடன்
    மிக்க துன்பமுற்று இங்கே வந்திருப்பது
    முற்பிறப்பில் நீ செய்த தீவினையின்
    காரணமாய் இருக்குமோ” என்றே
    கோவலனிடம் கூறினான் மாடலன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 76 – 94
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 163

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    அந்த ஏட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு
    கடை வீதிகளிலும்
    வணிகர் வாழும் மாட மாளிகைகள் உள்ள           paarpani
    வீதிகளிலும் சென்று
    “தானம் செய்து என் பாவத்தைப் போக்கி
    நீவிர் புண்ணியம் பெறுக” என்றே கூறிச்
    சென்று கொண்டிருப்பாள் அப்பார்ப்பனப் பெண்.
    நீயும் அவளைக் கூவியே அழைத்து
    அவள் கையேட்டைப் பற்றியும் துன்பத்தைப் பற்றியும்
    கேள்விகள் கேட்டாய்.
    அவளும் தான் உற்ற துயர் உன்னிடம் சொன்னாள்.

    “இந்தப் பொருள் வரும்படி எழுதிய
    செய்திகளையுடைய  ஏடு இதுதான்.
    இதனை வாங்கிக்கொண்டு
    உம் கைப்பொருள் தந்து
    எம் கடுந்துயர் நீக்குக” என்றாள்.

    நீயும் அவளிடம், ‘அஞ்சாதே!
    உன் கடுந்துயர் யான் போக்குவேன்.
    உன் மனதில் உள்ள துயரம் நீக்குக” என்றே கூறி,
    அக்கணமே வேதம் ஓதும்
    அந்தணர் எழுதிய அறநூல்களில் கூறியபடி
    அவள் துயரம் நீங்கும் வண்ணம்
    தானங்கள் பல செய்தாய்.

    கானகம் சென்ற அவள் கணவனையும்
    அவளிடம் சேர்த்துச்
    சுருங்காது பெருகும் செல்வமும் கொடுத்து
    அவர்களை நல்வாழ்க்கைப் படுத்தினாய்.
    அத்தன்மை வாய்ந்த
    உன்னை விட்டு விலகாத
    செல்வம் உடையவன் நீ!
    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 60 – 75
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 162

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    தமக்கு அழகு செய்யும்
    மேகலையை அணிந்த
    ஆயிரம் கணிகையர் ஒன்றுகூடி,
    அக்குழந்தையை ”மணிமேகலை” என்ற
    பெயரிட்டு அழைத்தனர்.
    அந்த நாளில்
    அழகான மங்கல மடந்தை                                    elephant
    மாதவியோடு சேர்ந்து
    செம்பொன்னை நீ நினது
    சிவந்த கைகளால்
    மழைபோல் வழங்கினாய்.
    சிறந்த ஞான நெறிக்கே எல்லையானவன் எனும்
    பெருமை மிக்க மறையவன் ஒருவன் முதியவன்
    தானம் பெறும் எண்ணத்துடன்
    ஊன்றுகோல் ஊன்றித் தளர்ந்த நடையுடன்
    மூப்பால் வளைந்த முதுகுடன்
    மெதுவாக வந்தான் அங்கே.

    அப்போது தன் பாகனுக்கு அடங்காமல்
    பறை போன்ற முழக்கத்துடன் ஓடி வந்த
    மதம் பிடித்த யானை
    சினத்துடன் அந்த மறையவனைத்
    துதிக்கையால் பற்றிக் கொண்டது.

    அந்த நேரத்தில் விரைந்து சென்று
    அம்மறையோனை
    யானையின் கைகளில் இருந்து விடுவித்து
    அதன் கையில் நீயே புகுந்து,
    அது உன்னை வளைத்து இறுக்கியபோது
    அதன் துளைபொருந்திய கையை விலக்கி
    அதன் தந்தங்களைப் பிடித்து
    அதன் மீது ஏறி அமர்ந்து
    பெரிய கரிய குன்றின் மீது இருக்கும்
    வித்தியாதரனைப் போலவே
    அதன் பிடரிப்பகுதியில் நீ அமர்ந்து
    அந்த யானையை அடக்கினாய்;
    அத்தகைய கருணைமிக்க வீரன் நீ.

    *கீரியைக் கொன்ற பார்ப்பனியின் துயர் தீர்த்தமை*

    தம் பிள்ளை நலம் காக்க
    கீரியைக் கொன்றாள் பார்ப்பனப் பெண் ஒருத்தி.
    அதனால் ஏற்பட்ட தீங்கு நீங்குதற்பொருட்டு
    அவள் கணவன் பரிகாரம் தேடி வடக்கே சென்றான்
    கங்கையில் நீராடிவர...
    துயருற்ற அவன் மனைவியும்
    அவன் பின்னே சென்றாள்.

    ‘உன் கையால் இனியும்
    உணவு உண்டு வாழ்வது முறைமையன்று.
    இந்த வடமொழி ஏட்டினைக் கொடுத்து,
    பிறருக்காக என்று வாழும் வாழ்க்கை கொண்ட
    மனிதன் ஒருவனைச் சந்தித்து இதைக் கொடுப்பயாக’
    எனக் கூறிச் சென்றான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 36 – 59
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 161

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05. அடைக்கலக் காதை

    கோவலன் செய்த அறங்களை மாடலன் பாராட்டி, அவன் மனைவியுடன் தனியாக மதுரை வந்ததற்கு இரங்குதல்

    நாவன்மை மிக்க மாடலன்
    கோவலன் அங்கு வந்த காரணம் யாது
    என்ற கேள்வி எழுப்பி,
    அவனது நிலையறிந்து பேசத் தொடங்கினான்.                              manimekala

    முதுமறையோனை மத யானையிடமிருந்து விடுவித்தமை

    அரசன் அளித்த தலைக்கோலின் சிறப்பால்
    புகழ்பெற்ற மாந்தளிர் போன்ற
    மென்மையான மேனியளாம் மாதவி
    நல்வினை வாய்க்கபெற்ற காரணத்தால்
    ஒரு பெண் சிசுவை ஈன்றாள்.
    தூய்மையற்ற குழந்தைப்பேறு
    தீட்டு நாட்கள் கழிந்தபின்,
    வயதில் மூத்த பிற கணிகையர்
    அந்தக் குழந்தைக்கு
    நல்லதொரு புகழ்வாய்ந்த
    பெயரினை இடுவோம் என்று
    அழகிய பெயர் ஒன்று சூட்டும்படி
    நின்னை வேண்டி நின்றார்.
    அவர்களின் தகுதிமிக்க பேச்சைக்கேட்டு
    நீ அவர்களிடம் உரைக்கலானாய்:

    ”முன்னொரு நாளில் இருள் நிறைந்த ஒரு யாமத்தில்
    அலைமோதும் பெரிய கடலில் எழுந்த சூறைக்காற்றால்
    எம் குலத்தவன் ஒருவனின் மரக்கலம் உடைந்தது.
    கரைசேர வழியொன்றும் இல்லாத போதும்
    அவன் செய்த அறத்தாலும் தானத்தாலும்
    சிறிது காலம் நீந்தியபடி இருந்தான்.
    அவன் முன்னே ஒரு தெய்வம் தோன்றி…
    “அசுரர் துன்பப்படாமல் இருப்பதற்காக
    இத்தீவிற்கு இந்திரன் ஏவல் காரணமாய்
    நான் இங்கு வாழ்ந்து வருகிறேன்.
    உனது பெரிய சிறந்த தானத்தின் பயன்
    உன்னைவிட்டு நீங்காது.
    எனவே கடலில் நீந்திய நின்துயர்
    தீரும் வண்ணம்
    தண்ணீரில் நீ படும் இத்துன்பம் நீங்குக!
    எனக்கூறித் தம் மந்திரத்தால்
    அவனைக் கரையில் சேர்த்தது.
    அத்தெய்வத்தின் பெயரை என் குழந்தைக்கு இடுங்கள்!”
    என்று நீ கூறினாய்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 20 – 35
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 160

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    கவுந்திக்கு மதுரையின் காட்சியையும் அரசனின் கொற்றத்தையும் கோவலன் உரைத்தல்

    நிலத்திற்குப் பலவகைச் செல்வங்களும் தரும்
    அருள்மிக்க ஆணையையும் முறைமையும்
    மேற்கொண்டு செலுத்தும்
    பாண்டியர்களின் சிறப்புவாய்ந்த செங்கோலும்   man
    குடையின் குளிர்ச்சியும்
    வேலின் வெற்றிச்சிறப்பும்
    இவையெல்லாம் விளங்கிநிற்கும்
    சிறப்பான நகரம் இந்த மதுரை.

    இந்த நகரில் வாழ்வதில் மகிழ்ந்து
    வேறு எந்த இடத்துக்கும் சென்று
    தங்க விரும்பாத
    சிறப்பான நகரம் இந்த மதுரை,
    மூதூரான மதுரை நகர்
    கண்டுகளித்த கோவலன்
    அங்கே
    அறத்தினைப் பலருக்கும் அறிவுறுத்தும்
    உள்ளமுடைய அறவோர்கள் வாழும்
    புறமதிலின் இடத்து உள்ள
    மூதூர்ச் சோலையுள் புகுந்து
    தீமைகள் நீங்கிய
    மதுரை நகரின் சிறப்பையும்
    பாண்டியனது அரசாட்சியின் சிறப்பையும்
    கவுந்தியடிகளுக்குக் கூறினான்.

    மாடல மறையவன் வர, கோவலன் அவனை வணங்குதல்

    தாழ்ந்த நீரை வேலியாகக் கொண்ட
    தலைச்செங்காடு எனும் ஊரில் உள்ள
    நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்து
    நன்மையை விரும்பும் கொள்கையுடைய
    மறையோர்களின் தலைவனாகிய
    மாடலன் என்பவன்
    தவத்தில் சிறந்த அகத்திய முனிவரின்
    பொதிய மலையை வலம் வந்து
    குமரியின் பெரிய துறையில்
    முறையான கொள்கைப்படி நீராடி
    அங்கிருந்து,
    தன் சுற்றத்தார் இருக்கும் இடத்துக்குச் சென்று
    திரும்பி வந்தான்.
    திரும்பி வரும் வழியில்
    நடந்து வந்ததால் உண்டான
    களைப்பு நீங்கும்வண்ணம்
    நல்ல நிழல் படிந்த சோலையில்
    கவுந்தியடிகள் இருந்த தவப்பள்ளிக்கு
    வந்து சேர்ந்தான்.
    கோவலன் அவனிடம் சென்று
    அவன் தாள் பணிந்தான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 201 – 218
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 159

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    பொன் கடைத்தெரு

    சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் எனும்
    புகழ்பெற்ற நான்குவகைப் பொன்னின்
    வேற்றுமைகளைப் பகுத்தறியும் பொன்வணிகர்   gold shop
    பொன்னை வாங்க வருவோர்க்கு
    ‘எது எது எங்கு எங்கு இருக்கிறது’ என்று
    குழப்பம் ஏற்படாமல் இருக்க,
    ‘இது இது இங்கு இருக்கிறது’ என்று அறிவிக்கும்படி,
    கொடிகள் நாட்டப்பெற்றிருந்த
    பொன் கடை வீதிகள் இருந்தன.

    அறுவை வீதி

    நுண்ணிய பருத்தி நூலாலும்
    எலி மயிராலும்
    பட்டு நூலாலும்
    அழகுதோன்ற நெய்யப்பட்டு
    பலப்பல நூறுகளாக அடுக்கிவைக்கப்பட்ட
    அழகிய மணம் கொண்ட புடவைகள்
    நெருக்கமாக வைக்கப்பட்டிருந்த
    கடைத்தெருவும் இருந்தது.

    கூல வீதி

    நிறுத்து அளக்கும் துலாக்கோலும்
    முகந்து அளக்கும் பறை, மரக்கால்
    ஆகியவற்றைக் கையில் கொண்டு,
    தரகு வேலை செய்பவர்கள்
    அங்கும் இங்குமாகத் திரிந்து கொண்டிருந்தனர்.
    அங்கே
    இந்தக் காலம் அந்தக் காலம் என்று
    காலம் கருதாமல்
    எக்காலத்திலும் கிடைக்கும்
    கரிய மிளகுப் பொதிகளுடன்
    பிற தானியங்களும் கலந்து
    விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த
    கூல வீதியும் இருந்தது.

    பற்பல வீதிகளையும் கண்டு, கோவலன் புறஞ்சேரிக்கு மீளுதல்

    மேற்கூறிய வீதிகளுள்
    அரசர், அந்தணர், வணிகர், வேளாளர்
    ஆகியோர் இருக்கும்
    நால்வகைத் தெருக்களிலும்
    முச்சந்தியும் நாற்சந்தியும்
    கோயில் கடைத்தெருவும் மன்றங்களும்
    பல தெருக்குகள் கூடும் முடுக்குகளும்
    குறுந்தெருக்களும் எல்லாம்
    கோவலன் உலாவித் திரிந்து,
    வானில் சூரியனின் வெம்மை மிகுந்தபோதும்
    அதன் கதிர்கள் உட்புகாவண்ணம்
    பசுமையான கொடிகள் படர்ந்த
    பந்தலின் கீழ் நிழலில் நடந்து,
    பாண்டி மன்னனின் பெரிய தலைநகரைக்
    கண்டு மகிழ்ந்தான்.
    பின் கொடிகள் இருந்த மதிலைக் கடந்து
    கவுந்தியடிகளும், கண்ணகியும் இருந்த
    இடத்தை அடைந்தான்.

    ஊர் காண் காதை முற்றியது; அடுத்து வருவது அடைக்கலக் காதை

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 201 – 218

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 158

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    இரத்தினக் கடைத்தெரு

    குற்றங்கள் பன்னிரண்டுள்
    மிகவும் கொடுமையானதான
    காகபாதம் களங்கம் விந்து இரேகை
    இவை நான்கும் நீங்கி,

    குணங்களில் குன்றாத வண்ணம்
    நூலோர் கூறும் சிறப்புகளான
    மிக்க நுண்மையுடைய முனைகளையும்        gems
    நால்வகை நிறத்தையும்
    நன்மைமிக்க ஒளியையும் உடைய
    வைரக்கற்கள் இருந்தன.

    இரேகை மாலை இருள் எனும்
    குற்றங்கள் நீங்கிய
    இளங்கதிர்களையுடைய பச்சைநிற
    மரகத மணியால் ஆன மாலைகள் இருந்தன.

    பூச மீனின் வடிவினையுடைய,
    பொன்னைக் களங்கமில்லாமல்
    தெளித்துவைத்தது போன்ற
    புருடராக மணிவகைகள் இருந்தன.

    நூலோர் விதித்த முறைப்படி
    குற்றமற்று விளங்கும்
    பதுமம், நீலம், விந்தம், படிதம் எனும்
    நால்வகை மாணிக்கக் கற்களும் இருந்தன.

    குற்றமில்லாத கதிரவன் ஒளியும்
    தேன்துளி நிறமும் இழைந்த
    வைடூரிய மணிகளும்
    இருளைத் தெளிய வைத்தது போன்ற
    நீலமணிகளும் இருந்தன.

    ஒன்றுபட்ட பிறப்பினை உடையனவும்
    வண்ணங்களால் ஐந்து வகைப்பட்டனவாகவும் இருக்கின்ற
    நன்மை பொருந்திய
    மாணிக்கம் புருடராகம் வைடூரியம் நீலம் கோமேதகம்
    இந்த மணிகளும் இருந்தன.

    காற்று, மண், கல், நீர்
    இவற்றால் ஏற்படும் குற்றங்கள்
    சிறிதும் இல்லாமல்
    வெள்ளியைப் போல வெண்மை நிறமும்
    செவ்வாயைப் போலச் செம்மை நிறமும் கொண்ட
    உருண்டு திரண்ட முத்துவகைகளும் இருந்தன.

    நடுவே துளை கொண்டவையும்
    கல்லிடுக்கில் புகுந்து வளைவு கொண்டவையும்
    திருகல் முருகல் ஆகிய குற்றங்கள் நீங்கிய
    சிவப்பு நிறமுடைய கொடிப்பவளங்களும்
    அந்த வீதியில் குவிந்து கிடந்தன.

    இந்த நவரத்தினங்களின்
    பிறப்பும் சிறப்பும் அறிந்து சொல்லக்கூடிய
    வணிகர்களையும் மிகுதியாகக் கொண்ட
    அந்த இரத்தினவீதி
    பகைவர்களால் எக்காலத்துக்கும்
    அழிக்கப்படாத வண்ணம்
    சிறப்பில் மேலோங்கி இருந்தது.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 180 – 200
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி: http://www.thebesthotels.org/room-photo-gems-ID263760.htm

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 157

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04. ஊர் காண் காதை

    அங்காடி வீதி

    இரண்டு உருளையுடைய வண்டிகள்,
    மூடு வண்டிகள், அழகிய தேர் கொடிஞ்சி,
    உடலுக்குத் தேவையான கவசம்,                                      weapons.
    அனைவராலும் விரும்பப்படும்
    மணிகள் பதிக்கப்பெற்ற அங்குசங்கள்,
    தோலால் செய்யப்பட்ட கைகளுக்கான உறைகள்,
    இடுப்பில் அணியும் கச்சை உடைகள்,
    வளைதடிகள், வெண் சாமரங்கள்,
    பன்றிமுகக் கேடயங்கள்,
    சிறிய கேடயங்கள்,
    காட்டின் உருவம் பொறித்த கேடயங்கள்,
    குத்தும் கோல்கள்…

    செம்பு மற்றும் வெண்கலப் பொருட்கள்,
    கயிற்றால் முடிந்த பொருட்கள்
    நெட்டிப் புல்லால செய்யப்பட்ட மாலைகள்,
    ஈர்வாள் முதலிய கருவிகள்,
    தந்தத்தைக் கடைந்து செய்த வேலைப்பாடுகள்,
    வாசம் மிக்க புகைக்கான பொருட்கள்,
    பல வகைச் சாந்துகள்,
    பூவால் கட்டப்பட்ட மாலைகள்…

    இந்தப் பொருட்கள் அனைத்தும்
    ஒன்றுக்கொன்று வேறுபாடு தெரியாதபடி
    அனைத்தும் தம்முள் கலந்து கிடக்கின்ற
    அங்காடி வீதிகள்…

    இவ்வீதிகள் அரசரும் கண்டு மகிழும் வண்ணம்
    செல்வச்செழிப்பை உடையனவாய் இருந்தன.
    இவ்வீதிகளைக் கண்டுகொண்டே
    கோவலன் சென்றான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 168 – 179

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 156

    மலர் சபா.

     

    மதுரைக் காண்டம் – 04. ஊர் காண் காதை

    1382096459

    பதியிலாரின் இரு பெரு வீதிகள்
    குடிப்பழி இல்லாச் சிறப்பினையுடைய,
    முடிசூடிய அரசரும் கூடப் பிறர் அறியாவண்ணம்
    வந்திருந்து தங்குகின்ற தன்மை உடைய மனைகளில்
    குற்றம் ஏதும் செய்யாத காரணத்தால்
    செங்கல் தலையில் சுமக்கும் தண்டனை அனுபவித்திடாத
    நாடகக் கணிகையர் வாழ்ந்து வந்தனர்.
    வேத்தியல் பொதுவியல் எனும்
    இருவகைக் கூத்தின் திறமறிந்து,
    அவை மயங்காமல் ஆடும்
    முறைமையான ஆடலும் பாடலும் தாளங்களும்
    தாளங்களின் வழிவரும் ஏழுவகைத் தூக்குகளும்
    இவற்றுடன் சேர்ந்து இசைக்கும்
    குயிலுவக் கருவியும் தெளிவாக உணர்ந்தவர்கள்.

    நால்வகைப்படும் அபிநயங்களில் வித்தகர்கள்.
    குரல் முதலாய் ஏழ்வகைச் சுரங்களும் பொருந்திய
    ஆடல் பாடல்களை எங்கேயும் நிகழ்த்தும் இயல்புடையவர்கள்.
    அனைவரும் கண்டு மலைத்து வியக்கும் வண்ணம்
    தலைக்கோலி பட்டம் பெற்ற கூத்தாடுபவர்களும்
    வாரப்பாட்டினைப் பாடும் தோரிய மடந்தையும்
    தலைப்பாட்டைப் பாடும் கூத்தியும்
    இடைப்பாட்டைப் பாடும் கூத்தியும்..
    இத்தகைய நால்வகை மரபினரும்
    அம்மனைகளில் இருந்தனர்.

    அவர்களுடன்
    அனைவரும் விரும்பும் வண்ணம்
    நாள்தோறு ஆயிரத்தெட்டு கழஞ்சுப்பொன்னைத்
    தவறாமல் பரிசாகப் பெறும்
    பிறரைத் தம் அழகால் தாக்கும் கணிகையர் பலரும்
    அங்கே இருந்தனர்.

    இவர்கள் கண்களாகிய வலைகளில் அகப்பட்டு,
    பெறுவதற்கு அரியதான அறிவைத் தொலைத்துவிட்டு,
    தவநெறியில் ஒழுகுவோராயினும்,
    அழகிய மலர்தோறும் சென்று
    தேனைப் பருகும் வண்டு போல,
    புதுப்புதுப் பரத்தையரைப் புணரும்
    இளையவராக இருந்தாலும்,
    காம இன்பத்தை முனு அனுபவித்திராத
    புதியவராக இருந்தாலும்,
    நாள்தோறும் அனுபவிக்கும் புணர்ச்சியில்
    மயங்கி இன்பத் துயில் கொள்வார்கள்.
    அவர்கள் பண்ணினையும்
    கிளியின் மொழியையும் பழிக்கும் வண்ணம்
    இனிய சொல்லை உடையவர்கள்.
    அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத்
    தேர்ந்து விளங்கினர் அப்பெண்கள்.
    இத்தகையோர் இருந்த இருவகை வீதிகளைக்
    கடந்து சென்றான் கோவலன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 146 – 167

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி: கூகிள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 155

    மலர் சபா
    மதுரைக் காண்டம் – 04. ஊர் காண் காதை

    amalar

    சிவந்த இலவம் போன்ற இதழ்களால்
    இளமுத்துப் பற்கள் தெரியச் சிரிப்பர்.
    ஊடியிருந்த காலத்தில்
    கூறாமல் விட்ட மொழிகளையெல்லாம்
    நீலோறபவம் போன்ற
    கண்களையுடைய மகளிர்,
    நெஞ்சில் உள்ள வார்த்தைகளுக்கு
    எழுத்துருவம் கொடுத்து
    இப்போது மயக்கத்துடன்
    குழறிக் குழறிப் பேசுவர்.

    காண்பவர் எல்லாம் சிரிக்கும் வண்ணம்
    அக்காட்சி அமைந்திருந்தது.
    அழகிய செங்கழுநீர்ப்பூ போன்ற
    கயலை ஒத்திருக்கும் சிவந்த நீண்ட கண்கள்
    தம் கடைப்பகுதி திறந்து பூசலுடன் நிற்க
    கொல்கின்ற வில் போன்ற
    புருவங்களின் வளைவுகள்
    உள்நோக்கி வளைந்திருக்க

    திலகம் அணிந்த சின்ன நெற்றியில்
    அரும்பிய வியர்வையுடன்
    தாம் கொண்டுள்ள ஊடல்
    தீரும் வேளையை எதிர்பார்த்து,
    செழுமையான குடியில் பிறந்த
    செல்வந்தர்கள் மட்டுமின்றி
    வையத்தைக் காத்து நிற்கும் அரசர்களும்
    விரும்பி நிற்கும் சிறப்புக்கொண்ட
    காமக்கிழத்தியர் வீதிகளைக் கண்டவாறு
    சென்றான் கோவலன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 137 – 145

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 154

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04. ஊர் காண் காதை

    வேனில் காலக் கடை நாளில் பொழுது போக்கு

    தம் கன்றுகளை விரும்பும் பெண்யானைகள் கூட்டத்தோடு
    அவற்றை விரும்பும் ஆண்யானைகளும் நடுங்கும்வண்ணம்
    நன்கு வெயில் சூழ்ந்து காணப்படும்
    குன்றுகள் சார்ந்த நாட்டில் உள்ள
    காடுகள் முழுதும் தீப்பிடிக்கும் வண்ணம்          kanigai
    நெருப்பை மூட்டி,
    கோடைக்காற்றுடன் வந்து புகுந்து,

    கூடல் நகரை ஆட்சி செய்யும் வேனில் வேந்தன்
    வேறு இடம் தேடிச்செல்ல முயல்கின்ற
    வேனில் காலத்தின் கடைசி நாளில்-

    பெருஞ்செல்வர்களும் மன்னர்களும் விரும்பும்
    கணிகையர் வீதியில்
    கூடார வண்டியும் பல்லக்கும்
    மணிகள் இழைத்த கால்கள் உடைய கட்டிலும்
    ஆகிய இவற்றுடன்
    சோலைகளில் மன்னர்களுடன்
    விளையாடி மகிழும் உரிமையும்
    வெண்சாமரக் கவரியும்
    பொன் வெற்றிலைப்பெட்டியும்

    கூர்மையான முனையுடைய வாளும்
    தம் அரசன் கொடுக்க…

    இங்ஙனம் பெற்ற செல்வங்கள்
    எந்தக்காலத்திலும் மாறாத வண்ணம்
    அரசப் பரத்தையரும்
    அந்த வீதியில் வாழ்ந்து வந்தனர்.

    அவர்கள் அன்றாடம்
    புதுமணம் புரிந்து வாழ்ந்து வருவதால்
    உண்டான களைப்பு தீரும் வண்ணம்,
    ஏவல் பணி புரியும் பெண்கள் ஏந்திய
    செம்பொன் கிண்ணங்களில் இருக்கும்
    இனிய கள்ளின் தெளிவைப் பருகி மயங்குவர்.

    அவ்வாறு மயங்கி
    அவர்கள் பூவிழி மூடும்போது
    பூவின் இதழுக்குள்
    தம் இனமான வண்டுதான்
    மறைகின்றதோ என்றெண்ணி

    புள்ளிகள் பொருந்திய பாடல் இசைக்கும் வண்டுகள்
    அக்கண்களைத் தழுவ வரும்.

    அவற்றை விரட்ட எண்ணும் அம்மாதர்கள்
    வண்டுகள் இல்லாத இடத்தில் மலர்மாலை வீசி
    அவற்றை விரட்ட எண்ணுவார்கள்.
    பின் தம் அறியாமை அறிந்து
    சிவந்த இலவம்பூ போன்ற தம் இதழால்
    புன்னகை புரிவார்கள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 120 – 136
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி: http://kadaitheru.blogspot.in/2011_04_01_archive.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 153

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    முன்பனிக் காலம்
    வளம் மிக்க வீட்டில் மகளிரும்

    அவர் மைந்தரும் விரும்பி
    இளநிலா முற்றத்தில்
    இளவெயிலை விரும்பி நுகரும்படி              garden
    விரிந்த கதிரை உடைய சூரியன்
    தெற்கே எழுவதனால்
    வெண்மழை அரிதாகத் தோன்றும்
    முன்பனிக்காலம் எங்குள்ளது?

    பின்பனிக் காலம்
    அம்முன்பனிக்காலம் அன்றியும்
    மிகப்பெரிய கடலில் உள்ள
    நாவாயின் கூட்டத்தாலே
    தொண்டி எனும் இடத்தின் அரசர்
    திறையாகக் கொடுத்த
    அகில் பட்டு சந்தனம் கற்பூரம்
    இவற்றின் வாசம் ஒன்றாய்ச் சுமந்து வந்த
    கீழ்த்திசைக் காற்று
    மன்னனின் கூடல் நகருள் புகுந்து
    காமன் அவன் கொடிய வில்லானது
    வெற்றிவிழாக் காணும்
    பங்குனித்திங்கள் பொருந்திவரும்
    பின்பனிக்காலத்தின் அரசன் எங்குள்ளான்?

    இளவேனிலை வரவேற்றல்
    குருக்கத்தி அழகிய கொடி எடுக்கவும்
    இளஞ்சோலையும் நந்தவனமும்
    நறுமண மலர்களை ஏந்தவும்
    பாண்டிய மன்னன் பொதிய மலைத் தென்றல்
    கூடல் நகரில் புகுந்து
    தாம் விரும்பும் துணைகளைத் தழுவி இன்புறவைக்கும்
    இந்த இளவேனில் அரசன் எங்குள்ளான்?

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 102 – 119
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி: கூகிள்

     

    Share