நான் அறிந்த சிலம்பு – 162
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை
தமக்கு அழகு செய்யும்
மேகலையை அணிந்த
ஆயிரம் கணிகையர் ஒன்றுகூடி,
அக்குழந்தையை ”மணிமேகலை” என்ற
பெயரிட்டு அழைத்தனர்.
அந்த நாளில்
அழகான மங்கல மடந்தை
மாதவியோடு சேர்ந்து
செம்பொன்னை நீ நினது
சிவந்த கைகளால்
மழைபோல் வழங்கினாய்.
சிறந்த ஞான நெறிக்கே எல்லையானவன் எனும்
பெருமை மிக்க மறையவன் ஒருவன் முதியவன்
தானம் பெறும் எண்ணத்துடன்
ஊன்றுகோல் ஊன்றித் தளர்ந்த நடையுடன்
மூப்பால் வளைந்த முதுகுடன்
மெதுவாக வந்தான் அங்கே.
அப்போது தன் பாகனுக்கு அடங்காமல்
பறை போன்ற முழக்கத்துடன் ஓடி வந்த
மதம் பிடித்த யானை
சினத்துடன் அந்த மறையவனைத்
துதிக்கையால் பற்றிக் கொண்டது.
அந்த நேரத்தில் விரைந்து சென்று
அம்மறையோனை
யானையின் கைகளில் இருந்து விடுவித்து
அதன் கையில் நீயே புகுந்து,
அது உன்னை வளைத்து இறுக்கியபோது
அதன் துளைபொருந்திய கையை விலக்கி
அதன் தந்தங்களைப் பிடித்து
அதன் மீது ஏறி அமர்ந்து
பெரிய கரிய குன்றின் மீது இருக்கும்
வித்தியாதரனைப் போலவே
அதன் பிடரிப்பகுதியில் நீ அமர்ந்து
அந்த யானையை அடக்கினாய்;
அத்தகைய கருணைமிக்க வீரன் நீ.
*கீரியைக் கொன்ற பார்ப்பனியின் துயர் தீர்த்தமை*
தம் பிள்ளை நலம் காக்க
கீரியைக் கொன்றாள் பார்ப்பனப் பெண் ஒருத்தி.
அதனால் ஏற்பட்ட தீங்கு நீங்குதற்பொருட்டு
அவள் கணவன் பரிகாரம் தேடி வடக்கே சென்றான்
கங்கையில் நீராடிவர...
துயருற்ற அவன் மனைவியும்
அவன் பின்னே சென்றாள்.
‘உன் கையால் இனியும்
உணவு உண்டு வாழ்வது முறைமையன்று.
இந்த வடமொழி ஏட்டினைக் கொடுத்து,
பிறருக்காக என்று வாழும் வாழ்க்கை கொண்ட
மனிதன் ஒருவனைச் சந்தித்து இதைக் கொடுப்பயாக’
எனக் கூறிச் சென்றான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 36 – 59
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
படத்துக்கு நன்றி: கூகுள்