நான் அறிந்த சிலம்பு – 167
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை
கவுந்தி மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தல்
பசுக்களைப் பிணிகளிலிருந்து காத்து
அவற்றுக்கு உணவு நீர் கொடுத்து
கவனத்துடன் வளர்த்து வரும்
இடையரின் வாழ்க்கையில்
துன்பமொன்றும் இல்லை.
குற்றமற்றவள் முதுமகள்
நேரான குணமுடையவள்
இரக்கத்துடன் பிறர்க்கு உதவுபவள்;
எனவே இம்மாதரியிடத்தில்
கண்ணகியை அடைக்கலமாய் வைப்பது
பொருத்தமாக இருக்கும்
என்று எண்ணிய கவுந்தி
இங்ஙனம் கூறலானார்:
மாதரியே கேள்!
இப்பெண்ணின் கணவருடைய தகப்பனின்
பெயரைக் கேட்டால்
அவர் குலப்பிறப்பான இந்நகரில் வாழும்
பெருவணிகர் யாவரும்
தாம் பெறுதற்கு அரிய
செல்வத்தைப் பெற்றோம்
என்றே எண்ணி
அவர்களை எதிர்கொண்டு
விருந்தினராக்கி உபசரிப்பர்.
அங்ஙனம் இந்தப்பெண்
பெருஞ்செல்வம் பெற்றவரது இல்லம்
அடைக்கலம் புகும் வரையில்
இடைக்குலப் பெண்ணாகிய உனக்கு
இவளை அடைக்கலம் கொள்ளும்
பொறுப்பைத் தருகிறேன்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 120-130
படத்துக்கு நன்றி: கூகுள்