மே 25, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு சமூகப் போராளி மாணவி நந்தினி அவர்கள்

miss.nandhini.anandhan

மக்களை பேரழிவிற்கு இட்டுச் செல்லும் மதுவை ஒழிப்பதற்காகத் தொடர்ந்து போராடிவருபவர்  சமூகப் போராளி, மதுரை சட்டக் கல்லூரிமாணவி நந்தினி ஆனந்தன் அவர்கள். தனது தொடர் போராட்டத்தின் ஒருபகுதியாக… தமிழக அரசு “டாஸ்மாக்” மதுக்கடைகள் வழியாக மதுவிற்பனையில் ஈடுபடுவதைக் கண்டிக்கும் நோக்கில் இவர் போராட்டங்கள் நடத்தி வருவது தமிழகம் அறிந்த நிகழ்வுகள். மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீண்டும் பதவி ஏற்கும் நாளான சென்ற வாரம் மே 23 அன்று தனது போராட்டத்தின் தொடர்ச்சியாக சென்னை தலைமைச் செயலகம் முன் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட நந்தினி திட்டமிட்டிருந்தார். இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை அடிப்படையில் இவரைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு நந்தினியையும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட இருந்த அவரது தந்தை ஆனந்தனையும் மதுரை மாநகரக் காவல் துறையினர் மே 22 ஆம் நாள் கைது செய்தார்கள். முதல்வரின் பதவியேற்பிற்குப் பிறகு காவல்துறையினர் இவர்களை விடுதலை செய்துள்ளனர். நாளிதழ்கள் அறிவித்த இச்செய்தியை நந்தினியும் தனது ஃபேஸ்புக் தளத்திலும் பதிவு செய்துள்ளார். சென்றவாரக் கைது உட்பட மது ஒழிப்பு போராட்டத்திற்காக இவர் இதுநாள் வரை 27 முறைகள் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூகநலனில் அக்கறை கொண்டு தளராது தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் திருமிகு நந்தினி ஆனந்தன் அவர்களின் முயற்சியைப் பாராட்டும் வகையில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

nandhini.anandhan

நந்தினியின் போராட்டங்களுக்கு உந்துதலாகவும், அவருக்கு ஆதரவாகவும் இருப்பவர் தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி, தற்பொழுது விருப்ப ஓய்வு பெற்றுள்ள இவரது தந்தை. மதுரை புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்த இவரது தந்தை திருவாளர் ஆனந்தன் அவர்கள் தனது மகளின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்துவருகிறார். சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவியான நந்தினியுடனும், தந்தை ஆனந்தனுடனும், இவரது சகோதரி நிரஞ்சனாவும் போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

nandhini.anandhan2

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக; மதுரை சட்டக்கல்லூரி, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர், சேலம், ஏற்காடு, பெருந்துறை உள்ளிட்ட பல இடங்களில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் மதுவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியதற்காகவும் நந்தினி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமை அலுவலகம், முதல்வரின் இல்லம் , முதல்வரின் கொடநாடு ஓய்வில்லம் எனப் பிற இடங்களில் உண்ணாவிரதப்போராட்டம் இருக்க முயன்ற பொழுது முன்னெச்சரிக்கையாகவும் அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நந்தினி2

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது கண்முன்னர் அழியும் குடும்பங்களின் துயரைப் பொறுக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நூறு குழந்தைகளுடன் முதல்வரைச் சந்தித்து நியாயம் கேட்க முயன்றதில் துவங்கியது நந்தினியின் போராட்டம். இந்திய குற்றவியல் சட்டம் 328 பிரிவின் கீழ் அரசே மதுவிற்பது சட்டவிரோதமான செயல் என்பது நந்தினி முன்வைக்கும் வாதம்.

Central Government Act – Section 328 in The Indian Penal Code: 328. Causing hurt by means of poison, etc., with intent to commit an offense.—Whoever administers to or causes to be taken by any person any poison or any stupefying, intoxicating or unwholesome drug, or other thing with intent to cause hurt to such person, or with intent to commit or to facilitate the commission of an offense or knowing it to be likely that he will thereby cause hurt, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine. [Source: http://www.indianpenalcode.in/ipc-328/]

“போதைப் பொருள்களைத் தவறு எனத் தெரிந்தே விற்பது சட்டப்படி குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டே மதுவை அரசு விற்பது சட்டத்தை மீறிய செயல் இல்லையா? கள்ளச் சாராயம் காய்ச்சுவது குற்றமென்றால் உரிமம் பெற்று டாஸ்மாக் நடத்துவது சரியானதுதானா? அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47 இன் படி மதுவிலக்கை மாநில அரசு அமல்படுத்த வேண்டும்” என்பது நந்தினி அரசிற்கு வைத்த கோரிக்கை.

சட்டப்படி அரசின்மீது நடவடிக்கை எடுத்தால் நீதி கிடைக்க ஆண்டுகள் பல ஆகலாம் என்ற நாட்டின் நடைமுறை நிலமையாலும், பள்ளி மாணவர்களும் தற்காலத்தில் குடிக்கு அடிமையாவதும், குடிப்பழக்கம் உள்ள குடும்பங்களில் தற்கொலைகள் அதிகரிக்கும் நிலையும் இவரை போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் ஆகியவற்றின் வழியாக நீதி கேட்கும் முறையைத் தேர்ந்தெடுக்கச் செய்துள்ளது. இவரது போராட்டங்களுக்கு இவரது கல்லூரி நண்பர்களும், மாணவர் சமுதாயமும், அரசியல்வாதிகள் சிலரும், பொதுமக்களும், பத்திரிக்கைகளும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர்.

nandhini.anandhan1a

சென்ற வெள்ளியன்று நந்தினியின் கருப்புக்கொடி போராட்டத்தை முறியடிக்கும் விதமாகக் காவல்துறையினர் இவரைக் கைது செய்து, பின்னர் மறுநாள் விடுதலை செய்த பிறகு நந்தினி தனது ஃபேஸ்புக் சமூகவலைத்தளத்தின் மூலம் கீழ் காணும் செய்தியை தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பியுள்ளார்.

“ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜெயலலிதா அவர்களே,
“ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் அதைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் மோசமாகிவிடும்”- என அரசியல்சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் 100% பொருந்தும். நீங்கள் இருவரும்தானே தமிழக மக்களைத் திட்டமிட்டு குடிக்கு அடிமைப்படுத்தி, பல லட்சம் குடும்பங்களை நாசப்படுத்திய குற்றவாளிகள். ஆம், நீங்கள் இருவரும் கொடிய குற்றவாளிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவது? தூக்குதண்டனை கூடப் போதாது. அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும். சட்டத்தில் இருந்து தப்புவது உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் என்றுமே தப்பிக்க முடியாது. மதுவிற்பனை அதிகரிக்க, அதிகரிக்க உங்களது பாவக்கணக்கும் அதிகரிப்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக, ஒருநாள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது. நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது..அநீதிக்கு எதிரான போர்க்குரல் இம்மண்ணிலிருந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். யாராலும் இதனைத் தடுக்க முடியாது.ஆ.நந்தினி சட்டக்கல்லூரி மாணவி,மதுரை.”

[Source: https://www.facebook.com/photo.php?fbid=1711403399087192&set=a.1415621265332075.1073741828.100006526451390&type=1&theater]

சமூக நலன் கருதி அயராது போராடும் நந்தினியின் முயற்சியைப் பாராட்டி அவரது மதுஒழிப்புப் போராட்டத்தில் வெற்றிபெற வல்லமைக் குழுவினர்களின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

நன்றி: செய்திகள் படங்கள் இணையத்தளங்களின் உதவியால் கிடைத்தவை

நந்தினையத் தொடர்பு கொள்ள:
https://www.facebook.com/nandhini.anandhan.35?

தொலைபேசி தொடர்புக்கு: 97507 24220

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

  1. இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு சமூகப் போராளி மாணவி நந்தினி அவர்களுக்கு
    எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    எல்லையில் ஆயிரக்கணக்காய் பகைவர்களை 
    விரட்டியடிக்கும் வீரத்துக்கு 
    சற்றும் குறைந்த தல்ல இந்த வீரம்.
    மது அரக்கன் சுவடு படாத இடம் இல்லை.
    வீடும் நாடும்
    காடு ஆகிடும் 
    தலை கீழ் பரிணாமம்
    இந்த பாட்டிலுக்குள்ளிருந்து தான்.
    வாக்குப்பெட்டியும் கூட 
    இதன் வசம் ஆகிப்போகும் முன்
    ஜனநாயகத்தின் இதயம் காக்கப்படவேண்டும்.
    குடி எனும் இந்த நச்சுமரத்தை  
    வெட்டிவீழ்த்தும்  சமூகப்போராளியான‌
    இந்த வீராங்கனைக்கு எங்கள் வணக்கங்கள்.

    பாராட்டுக்கள்.

    அன்புடன் ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *