நான் அறிந்த சிலம்பு – 156
—மலர் சபா.
மதுரைக் காண்டம் – 04. ஊர் காண் காதை
பதியிலாரின் இரு பெரு வீதிகள்
குடிப்பழி இல்லாச் சிறப்பினையுடைய,
முடிசூடிய அரசரும் கூடப் பிறர் அறியாவண்ணம்
வந்திருந்து தங்குகின்ற தன்மை உடைய மனைகளில்
குற்றம் ஏதும் செய்யாத காரணத்தால்
செங்கல் தலையில் சுமக்கும் தண்டனை அனுபவித்திடாத
நாடகக் கணிகையர் வாழ்ந்து வந்தனர்.
வேத்தியல் பொதுவியல் எனும்
இருவகைக் கூத்தின் திறமறிந்து,
அவை மயங்காமல் ஆடும்
முறைமையான ஆடலும் பாடலும் தாளங்களும்
தாளங்களின் வழிவரும் ஏழுவகைத் தூக்குகளும்
இவற்றுடன் சேர்ந்து இசைக்கும்
குயிலுவக் கருவியும் தெளிவாக உணர்ந்தவர்கள்.
நால்வகைப்படும் அபிநயங்களில் வித்தகர்கள்.
குரல் முதலாய் ஏழ்வகைச் சுரங்களும் பொருந்திய
ஆடல் பாடல்களை எங்கேயும் நிகழ்த்தும் இயல்புடையவர்கள்.
அனைவரும் கண்டு மலைத்து வியக்கும் வண்ணம்
தலைக்கோலி பட்டம் பெற்ற கூத்தாடுபவர்களும்
வாரப்பாட்டினைப் பாடும் தோரிய மடந்தையும்
தலைப்பாட்டைப் பாடும் கூத்தியும்
இடைப்பாட்டைப் பாடும் கூத்தியும்..
இத்தகைய நால்வகை மரபினரும்
அம்மனைகளில் இருந்தனர்.
அவர்களுடன்
அனைவரும் விரும்பும் வண்ணம்
நாள்தோறு ஆயிரத்தெட்டு கழஞ்சுப்பொன்னைத்
தவறாமல் பரிசாகப் பெறும்
பிறரைத் தம் அழகால் தாக்கும் கணிகையர் பலரும்
அங்கே இருந்தனர்.
இவர்கள் கண்களாகிய வலைகளில் அகப்பட்டு,
பெறுவதற்கு அரியதான அறிவைத் தொலைத்துவிட்டு,
தவநெறியில் ஒழுகுவோராயினும்,
அழகிய மலர்தோறும் சென்று
தேனைப் பருகும் வண்டு போல,
புதுப்புதுப் பரத்தையரைப் புணரும்
இளையவராக இருந்தாலும்,
காம இன்பத்தை முனு அனுபவித்திராத
புதியவராக இருந்தாலும்,
நாள்தோறும் அனுபவிக்கும் புணர்ச்சியில்
மயங்கி இன்பத் துயில் கொள்வார்கள்.
அவர்கள் பண்ணினையும்
கிளியின் மொழியையும் பழிக்கும் வண்ணம்
இனிய சொல்லை உடையவர்கள்.
அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத்
தேர்ந்து விளங்கினர் அப்பெண்கள்.
இத்தகையோர் இருந்த இருவகை வீதிகளைக்
கடந்து சென்றான் கோவலன்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 146 – 167
படத்துக்கு நன்றி: கூகிள்