Tag: இசைக்கவி ரமணன்

  • மார்கழி மலர்கள் – புதிய வருடமும் பழைய கோயிலும்

    இசைக்கவி ரமணன்

     

    புதிய வருடமும் பழைய கோயிலும்

    Tamil-Daily-News-Paper_14554560185

    தேதிகள் கிழிந்தன சேதிகள் மறந்தன
    தெருமட்டும்
    களைத்ததுபோல் தென்பட்டாலும்
    சலிக்காமல் கிடக்கிறது
    சதா வளைந்து

    அந்தத்
    தெருவின் முனையில்
    மீண்டுமொரு தொடுவான நெருடல்
    தோதுபடாது என்றே
    தோன்றுகிறது எனக்கு

    திருவிழா இல்லாத வெறும் நாட்களில்
    தேரடியில் சும்மா இருக்கும் மொட்டை ரதம்போல்
    அனுபவ விழைவுகள் அடங்கிவிட்டன
    ஆர்வங்களும் ஆச்சரியங்களும்
    அயர்ச்சியின்றியே ஒடுங்கிவிட்டன
    மூடும்போது உள்ளே
    மூச்சை இழுத்துக்கொள்ளும் சுருதிப்பெட்டி போல

    கால்வைத்ததுமே
    கடந்தகாலக் காட்சிகள், நம்மைக்
    கண்பனிக்க வைப்பதற்கு முன்பே
    நேரே ஆன்மாவை நெருடுகின்ற
    நிலத்தில் வேறெங்கும் இல்லாத வாசனையோடு
    நிகழ்ந்தது நிகழ்ந்தபடி
    நெளிவுகளும் சுளிவுகளுமான சிற்பங்கள்
    நிறைந்திருக்கும் ஒரு
    கோயிலைக் கோருகிறேன்

    பலபேர் நடந்த கடற்கரை மணலை விடவும்
    பலமுகில் திரிந்த பரந்த வானத்தை விடவும்
    பரமும் இகமும் பல்லாங்குழி ஆடும்
    பழைய கோவில் விசேடமானது

    ஒரு
    காய்ச்சல் நேரத்துக் கனவில், அதிலோர்
    காலைப் பனியின் தேவதை நெளிவுகளின் நடுவே
    பாசை நடுவே பளபளக்கும் வெள்ளி மூக்குத்திபோல
    மொத்தமாய்க் கோயிலொன்று
    முளைத்து நிற்கிறது

    நெய்தொட்டுத் திரிவருடி, முத்துச் சுடர்களை
    நிமிர்த்திய விரல்களைத் தரிசிக்க ஆசை, அது
    நிழலிருட்டில் கன்னம் வருடி
    தழலேந்தியவனின் சினமுகத்தில்
    தருவித்திருக்கலாம் புன்னகையை
    யாரோ சிந்திய கண்ணீர்த் துளி
    தீரா விளக்காய் எரிந்துகொண்டிருக்கலாம்
    சிவகாமியின் ஒற்றைச் சதங்கை
    பவசாகரமாய்ப் பதறிக்கொண்டிருக்கலாம்

    கவலைகள் கவலைகளாய்
    களிப்புகள் களிப்புகளாய்
    அமைதி அயராத அமைதியாய்
    களேபரமில்லாத ஒரு கம்பீரத் தனிமையில்
    எம்பெருமான்
    ஓசையின்றி ஒரு களிநடம் புரிந்துகொண்டிருக்கலாம்

    பழைய கோயில்! ஆ!
    பழைய கோயில்!
    தமிழ்தந்த பேரிறைவன் தலையசைத்து ரசிப்பதற்காய்
    தரையிறங்கித் தானமர்ந்த கவிக்காவில்!

    எப்போதுமே யாருமே வராதது போலவும்t3
    இப்போதுதான்
    குந்தவை வந்து சந்தனம் தடவிச் சென்றது போலவும்
    மாயம் செய்கிறது, என்
    மாதேவன் கோயில்

    எட்டுவைத்தால்
    எத்தனை எத்தனையோ கண்கள் என்னை
    உற்றுப் பார்ப்பதுபோல்
    உயிரில் ஒரு மயிலிறகு வருடல்

    மீண்டுவிடவே முடியாத சரிவுகளில்
    மீண்டும் மீண்டும் என்னைத்
    தூண்டித் தள்ளிய துளிமனம்தான்
    மீளவே முடியாத தாளடியை நெருங்குகையில்
    தஞ்சத்திற்கு மிகவஞ்சித் தடுக்கிறது

    திசைகளொடுங்கும் மாடத்தில்
    தியானத்தில் இருந்து திமிர்ந்தெழுந்து
    திரியொன்று சிரிக்கிறது

    அதுவோ? அவளோ?

    சிறிய சிரிப்பில் பெருங்கோயில் மறைந்திருக்கத்
    திரும்பிய வேளையில்
    தொலைந்துபோய் விட்டிருந்தது
    தெரு

    03.01.2015 / சனி / 9.15

    Share
  • மார்கழி மலர்கள் – இது மாசுகள் நிறைந்த உலகம் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]//https:www.mixcloud.com/Vallamai/%E0%AE%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE/[/mixcloud]

    36b30z-dhakshinamurti

    இது
    மாசுகள் நிறைந்த உலகம், இதில்
    மாண்புகள் எங்கே ஜெயிக்கும்
    காசுகள் தானே நம்மைப் பார்த்துக்
    கையைக் கொட்டிச் சிரிக்கும்

    விதி
    ஆசையை நம்பிப் பிழைக்கும், அதன்
    ஆட்சி வேறெங்கு பலிக்கும்
    ஈசா நீதான் கதியென நின்றேன்
    என்கதை எப்படி நடக்கும்

    ஏதோ தெருவில் ஏதோ பாடி
    எங்கோ செல்வது நன்று
    ஏழையென்றாலும், பசியென நின்று
    ஏந்தாதிருப்பது நன்று
    ஆதரவிங்கே யாரும் இல்லை
    அவரவர்க் கவரவர் பாடு
    அன்பே தெய்வம் என்றே பாடி
    அழகாய்க் கண்ணை மூடு (இது)

    வென்றது கருமம் நின்றது தருமம்
    ஏதடி இதிலே மர்மம்
    வேதனை யாவும் வெகுமதி என்றே
    வேதம் பாடும் உள்ளம்
    சென்றது செலவு வந்தது வரவு
    ஏதடி உறவு பிரிவு
    சின்னஞ் சிறுவுயிர் சிறகு விரிக்க
    எத்தனை எத்தனை கதவு!

    அது
    ஆலய மணியின் ஓசை, அதன்
    ஓசையில் ஓயும் ஆசை
    காலன் வந்தெனைத் தழுவும் முன்னே
    கவிதையை முடிக்க ஆசை

    ஒரு
    தேகம் கொடுத்த ஈசா, மலைத்
    தேனாய் இனிக்கும் நேசா
    தாகம் பசியெனக் கையேந்தாமல்
    சாகும் தரத்தை நீ தா

    29.12.2014 / திங்கள் / 22.00

    Share
  • மார்கழி மலர்கள் – வாசலே இல்லாத குடிலில் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]//https:www.mixcloud.com/Vallamai/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%A4/[/mixcloud]

     
    வாசலே இல்லாத குடிலில்shiva_parvati_close_large
    வந்துநட மாடுமிளங் களிறே!
    நேசமே தள்ளாடும் அன்பே!
    நெஞ்சுகொள் ளாத என் அழகே!

    பேசவே அறியாத நாவில்
    பெருவெள்ளம் கங்கை போல் பெருக
    ஈசனே நீயாக வருக
    இனியென்னை நீங்காமல் வருக!

    ஆசையாய் உனைப்பாட வருக
    அமிழ்தூறும் செந்தமிழைத் தருக
    ஏதுமே இல்லா பேதையேன் ஐயே
    ஏழையின் வாழ்வே வருக!
    ஈசனே எனக்காக வருக வருக (வாசலே)

    திருந்தாத வருந்தாத உள்ளம், அதில்
    திருமயிலைக் காபாலி வருக
    பொருந்தாத உறவு புரிந்ததென்றாலும்
    போகுமோ நீ தந்த மோகம்? நீ
    வாராமல் தாராமல் தீராது தாகம் (வாசலே)

    திருஞான சம்பந்தன் உயிர்தந்த தமிழ்வாழும்
    தென்கயிலை தானெந்தன் மயிலை
    திரைவீசும் கடலோரம் திசைகாட்டும் சுடராகத்
    திகழ்கின்ற தேதேனின் திவலை
    அருள்செய்ய வேநிற்கும் அன்னையென் அன்னையவள்
    அன்பென்னும் அலைவீசும் குளமே, அதன்
    அந்தப் புறம்நின்று சொந்தக் கதைசொல்லி
    அழுகின்ற மழலையுன் மகனே! அதை
    ஆதரித் தருள்வதுன் கடனே!

    26.12.2014 / வெள்ளி / 9.15

    Share
  • மார்கழி மலர்கள் – எண்ணமெல்லாம் வண்ணமாய் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]//https:www.mixcloud.com/Vallamai/%E0%AE%8E%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%AF/[/mixcloud]

    732_radha-krishna-wallpaper-009
    வண்ணமெல்லாம் கண்ணனாய்
    கண்ணனெல்லாம் காதலாய்
    காதலெல்லாம் ராதையாய்
    ராதை அன்பு தாரையாய், அந்த
    தாரையே என் கூரையாய்
    கூரையின் ஓரம் குழலோசை நெஞ்சில்
    கொடிவளரும் எண்ணமாய் (எண்ணமெல்லாம்)

    கண்ணில் படாமலே என்னைத் தொடாமலே
    நெஞ்சைக் கொள்ளை கொண்டான் நித்தமும் ஏங்கவைத்தான்
    தன்னைத் தராமலே என்னை அடிமை செய்தான்
    தாழ்திறந்தே என் தலைவன் எதிரில் நின்றான்
    கண்ணா கண்ணா அபயம் அபயமென்றேன்
    கண்ணீரின் நதியில் கனவாய்க் கரைந்துநின்றேன்
    ஏழ்கடல் விழியாலே என்னடா என்றான்
    ஏழைநான் வாழவே எங்கிருந்தோ வந்தான்
    என் அன்பன் என் தலைவன் என் மன்னன் என் துணைவன்
    என் தோழன் நண்பன் நேசன் ஈசன் என் என் என் கண்ணன்
    (எண்ணமெல்லாம்)
    ஒருபுறம் தேகம் ஒரு புறம் ராகம்
    ஒருபுறம் ஒன்றுமில்லா வெளி வானம்
    மறுபுறம் இல்லாத மன்னரின் மன்னன்
    மாயைகள் வீழ்ந்திடும் நேயத்தின் நாயகன்
    அன்பே கண்ணனின் ஆலயமாகும்
    அவன்நினை வொன்றே ஆனந்த கீதம்
    தாள்களில் தாள்களில் தஞ்சம் தஞ்சம்
    தழுவிய பொழுதே தணிந்தது நெஞ்சம்
    என் அன்பன் என் தலைவன் என் மன்னன் என் துணைவன்
    என் தோழன் நண்பன் நேசன் ஈசன் என் என் என் கண்ணன்

    (எண்ணமெல்லாம்)
    23.12.2014 / செவ்வாய் / 19.15

    Share
  • மார்கழி மலர்கள் – சிரித்து வாழ்வேன்!

    இசைக்கவி ரமணன்

    images (1)

    நம்புவோர்க்கு விளக்கங்கள் தேவையில்லை
    நம்பார்க்கு விளக்கத்தால் பயனே இல்லை
    அன்பிருந்தால் ஐயங்கள் வாழ்வதில்லை
    அன்பிலையம் சேர்ந்துவிட்டால் வாழ்வே இல்லை
    தும்பியெலாம் தேவாரம் பாடிக் கொண்டு
    துள்ளிவரும் மயிலைவளர் தூய அன்பே!
    நம்பியுன்னை நாடிவந்தேன் ! நீயும் என்னை
    நம்புகின்றாய் என்றுநன்கு நம்பி வாழ்வேன்!

    பொங்குவதும் மங்குவதும் நெஞ்சியல்பு
    பூரணனே! காத்தருளல் நின்னியல்பு
    தங்காமல் பறப்பதுதான் வாழ்வியல்பு
    தாள்பொருந்தித் தங்கிடவே தழைத்த வாய்ப்பு
    எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்தும்
    என்னைக்கரை சேர்க்கின்ற கருணையாலே
    பொங்குகடல் ஓரத்தே புடைத்திருக்கும்
    பூரிப்பே! உன்னடியே பொருந்திக் கொண்டேன்!

    மந்தைவெளி அடுத்திருக்கும் மயிலாப்பூரில்
    மயில்நாணும் ஒயிலோடு மலர்ந்திருக்கும்
    சிந்தைவளர் கற்பகத்தின் சிரிப்பைக் கண்டு
    சிலிர்த்திருக்கும் காபாலி! சிரத்தைத் தாழ்த்தி
    வந்தனைகள் பலவிதமாய் வாழ்த்துகின்றேன்
    வாழ்வெல்லாம் நீயென்றே வாழுகின்றேன்
    தந்திக்கும் கந்தனுக்கும் தந்தையான
    தான் தோன்றி! நீயே என் தலைவனென்பேன்!

    சிவன்மகனைக் கவலைகள் சீந்தலாமோ?
    சீயென்றே இகழ்ந்தென்ன? புகழ்ந்தாலென்ன?
    சிவனே! உன் சித்தமென்றே சிரிக்க வேண்டும்
    சிரம்தாழ்த்தி நன்றிசொல்லி வாழ்த்த வேண்டும்
    தவமுனிவோர் மிகவுவந்து தங்கி வாழும்
    தமிழோங்கும் நன்மயிலை தழைக்கும் கோவே
    அவன்சொன்னான் இவள்சொன்னாள் என்றில்லாமல்
    சிவன்சொன்னான் என்றுசெல்வேன் தெருவினூடே!

    கல்வியெதும் ஒருதுளியும் கற்கவில்லை
    கடுகளவும் கையிலொரு திறமையில்லை
    நல்லழகு முகமுமில்லை ; செல்வமில்லை
    நல்லவர்கள் மெச்சுமெந்த நலமுமில்லை
    பல்விதமாய் உனைப்பாடும் சொல்லும், கொஞ்சும்
    பசுமழலை நெஞ்சுமல்லால் பாவி எனக்கு
    வல்லவனே! நீயேதும் வழங்கவில்லை
    வழங்கியதை வழங்கிவிட்டே வருவேன் ஐயே!

    ஊர்புகழும் ; பார்புகழும் ; உள்வீட்டுக்குள்
    உற்றவர்கள் நமைக்காறி உமிழக் கூடும்
    தேர்நடந்து தேர்நடந்து தெரு நொறுங்கிப்
    போனாலும் தெருவுக்கோர் போக்கும் உண்டோ!
    சீர்குலவும் மயிலையிலே சிந்தை யெங்கும்
    சிறகடிக்கும் பரஞானக் குயிலே! உன்றன்
    சீரடியின் ஓரடிக்கீழ் சிரசே ஒற்றைச்
    சிறுதெருவாய் விரித்தபடிச் சிரித்து வாழ்வேன்!

    ரமணன்
    23.12.2014 / செவ்வாய் /9.40

    Share
  • மார்கழி மலர்கள் – பராசக்திக்கு நினைவூட்டல்

    இசைக்கவி ரமணன்

    images

    அன்புநெஞ்சில் கண்விழிக்கும் அன்னை சக்தியே!
    அழகு மயிலை பழகி வளரும் ஆற்ற லரசியே!
    என்னைப் பெற்றெ டுத்து விட்டு எங்கு சென்றனை?
    ஏறெ டுத்தும் பார்ப்ப தில்லை என்ன சிந்தனை?

    கண்மு ழுக்கக் கனல் தெறிக்கும் கவிதைகள் தந்தாய்
    காளிமகன் கவிஞனென்னும் கர்வமும் தந்தாய்
    பண்மு ழுக்க பவனிவரும் பரவசம் தந்தாய்
    பலர்வாழப் பாடிடுமோர் பரவசம் தந்தாய்

    விண்ணளக்கும் என்னைப்போய் வீட்டில் பூட்டினாய்
    வீதியிலே மேடையிலே வித்தை காட்டினாய்
    எண்ணமறி யாதவர்கள் ஏசிட வைத்தாய்
    என்னைப்போய் பிறர்முன்னில் கூசிட வைத்தாய்

    என்தமிழைக் கேட்டுபோதை ஏறிவிட்டதா? இல்லை
    எவர்சொல்லோ கேட்டுமனம் மாறிவிட்டதா?
    என்னம்மா? இன்றுனக்கு என்ன ஆனது? உன்
    இடைவிடாத நேசமின்று எங்கு போனது?

    அந்த நாளைப் போலவந்து ஆடிட வேண்டும், நீ
    சந்தம் தந்து தலையசைக்கப் பாடிட வேண்டும்
    நொந்த நெஞ்சை மொந்தையாக்கி நுங்கிட வேண்டும், எந்த
    நொடியும் நீயே எந்தன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்!
    23.12.2014 / செவ்வாய் / 13.10 /ப்ருஹத்வனி

    Share
  • நீ யாரோ (பாடல்)

     

    இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]//http:www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%B0/?utm_source=widget&utm_medium=web&utm_campaign=base_links&utm_term=resource_link/[/mixcloud]

     

    lord-shiva

    நீ யாரோ ஏதும் அறியேனே
    மனமெனும் பனியில் குலவிடும் கதிரே
    மலையிலும் மனதிலும் மருவிடும் குளிரே
    அருளே பரிவே அழகிய சிவனே! (நீ யாரோ)

    அருகில் வருவதும் விரல்தொடும் நொடியினில்
    விலகி விலகி நீ விரைவதும்
    விண்ணை மீறி நீ விரிவதும்
    உருகி உருகி நான் கரைவதும், உயிர்
    பருகிப் பருகி நீ மகிழ்வதும்
    அருவி பெருகுவதும் குருவி திணறுவதும்
    அன்பு கொடுமையென மனது பதறுவதும்
    நீ தலைவன் நான் அடிமை என்றே
    நீயே நீயே கதி என்றே
    ஆவியினுள்ளே தாவிடும் களியே
    அள்ளிட வந்த என் அழகிய சிவனே!

    ஆனந்தமே உன் ஓரியல்பா! என்
    அன்பே அன்பே உன்வடிவா!
    நானென தென்பதும் நடனங்களா! அவை
    நடந்தடங்கும் அரங்கம் சுடலையிலா?
    தானந்தம் இல்லாத ஜோதி, அது
    நான்சொந்தம் என்றான தென்ன நீதி!

    தேன்சிந்தும் வானந்தி மேனி
    தான்தந்து தான்கொண்ட தேவி
    ஊன் காண ஆனேறி வருமே
    நான்காணும் என் அழகிய சிவனே

    21.12.2014 / 7.45 / ஹைதராபாத்

    Share
  • மார்கழி மலர்கள் – காதலிலே வரும் கண்ணீர்த் துளியும் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]//http:www.mixcloud.com/Vallamai/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE/[/mixcloud]

    1443Krishna

    கண்ணன்
    காதலிலே வரும் கண்ணீர்த் துளியும்
    கவிதை நாடும் கானமாகும்
    காந்தனவன் தரும் தாபத்திலே எழும்
    தாகம் கூட ராகமாகும்
    பனிகுளிரும் அவன் பாதத்திலே மன
    மோகம் கூட மோகனமாகும்

    ஒரு மார்கழி மாதக் காலைப் பொழுது
    பாதையெங்கும் பனி விழுது, அதில்
    உருவாய் அருவாய் ஒரு நீலக் கதிர்
    உருக்கும் உயிரை உழுது
    அது
    குழலோ கன்னக் கோலோ? அதில்
    கொள்ளை போகவே உயிரோ? வெறும்
    விழலாய்க் கிடந்த வெற்று மனத்தினில்
    வீணை நரம்புகள் விம்மிவிம்மி எழ
    விண்ணைக் குடைந்தது காற்று, அதில்
    வீழ்ந்து போனதடி நேற்று, அந்தக்
    கண்ணனென்னும் என் மன்னவன் அன்புக்
    கண்களே யாவுமம்மா! அவன்
    கனவிலும் காவலம்மா! நிரந்தரக்
    களவுதான் காதலம்மா!

    பட்ட மரத்தில் பல பாரி ஜாதங்கள்
    கொட்டமடிக்கும் கதை உண்டோ?
    சொட்டச் சொட்ட நனைந்தும் முட்டிமுட்டி உயிரைச்
    சுட்டுப் பொசுக்கும் தாகம் உண்டோ?
    கிட்டவந்தால் விலகி எட்டிநின்றால் நெருங்கித்
    தொட்டுச் சிரிக்கும் மாயம் உண்டோ?
    அட்டக் கறுப்பில் மின்னும் வட்டக் கரியவிழி
    திட்டமெதுவும் அதில் உண்டோ?

    மாதவன் வந்ததும் நொந்த மனத்தினில்
    நந்தவனம் பல பூக்கும், அவன்
    மயிலிறகும் விழியும் இதழும் அதன்
    செவ்வரியும் எனைத் தாக்கும்
    இங்கு
    உயிரே இலையெனும் போது, அதில்
    உறவுகள் உரிமைகள் ஏது? ஒரு
    உணர்வே தவமாய் வரமாய் லயமாய்
    ஒருகுழல் ஊதிடும் போது
    கண்ணன் என்றொரு மயக்கம், அவன்
    காலடி மிகவும் பழக்கம், அவன்
    காதல் பரம்பரை வழக்கம், அந்தக்
    கள்வனே நெஞ்சில் நெருக்கம்

    19.12.2014 / வெள்ளி / 15.00

    Share
  • மார்கழி மலர்கள் – ஒரு மனம் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE/[/mixcloud]

     

    Mylapore-Kapaleeshwar-Temple-Tank

     

    ஒருமனம் உன்னைப் பாடும்200px-karpagambalkapaleeswrar1
    ஒருமனம் உலகை நாடும்
    இருமனம் என்னும் அவலம்
    என்று தீரும்?
    என்று தீரும்?

    திருவளர் மயிலைக் குடிலில்
    தினம் வளர் அழகே தேனே
    கருவளர் முன்பே உன்னைக்
    கண்டும் மறந்தேனே (ஒருமனம்)

    ஒன்றும் அறியாத கன்று
    ஊரெங்கும் தாயைத் தேடும்
    நின்று யாரைக் கேட்கும்?
    நெஞ்செலாம் துன்பம் தாக்கும்

    கன்றும் தாயைப் பிரிந்தால்
    தாயும் மறந்திடப் போமோ?
    இன்றும் வருவாய் என்றே
    என்றும் உருகி நின்றேனே! (ஒருமனம்)

    19.12.2014 / வெள்ளி / கபாலீஸ்வரர் கோயிலில் / காலை 10.30?

    Share
  • மார்கழி மலர்கள் – இதுதான் இதுதான் அதுவா (பாடல்)

     

    இசைக்கவி ரமணன்

     

    இசைக்கவியாரின் இசையில் இலயிக்க இதோ..

    https://soundcloud.com/vallamai/mp3

     

    sivan
    இதுதான் இதுதான் அதுவா
    இதயம் முழுதும் மதுவா
    இகமும் பரமும் சுகமா
    இதற்கொரு பெயர்தான் சிவமா

    உருவில் மயங்கிடும் உள்ளம், அதை
    உருவால் மயக்கும் கள்ளம்
    அருவே அறியா நெஞ்சம், அதன்
    அருமை கவிதையில் கொஞ்சும்

    அகமும் புறமும் ஆனந்தம், அது
    அலையலையலையாய்ப் புரளும்
    உருவும் அருவும் பிரியும் தருணம்
    ஒருவித மர்மம் புரியும், அங்கு
    உமையின் உயிரின் ஒளிமுகம் விரியும் (இதுதான்)

    இளமை நிலையாய் வளரும், சிறு
    இதயம் லஹரியில் இளகும்
    உளமுழுதும் ஒரு புளகம், அதில்
    உயரிய நிலைபல குலவும்
    குளமாய் விழிகள் பொங்கும், ஒரு
    துளியில் உலகே தங்கும்
    சிவமே லயமே உயிரே எனவே
    சின்னச் சின்ன வார்த்தைகள் மிளிரும், அந்தச்
    சித்திரக் கணங்களிலென் சிவன்முகம் ஒளிரும் (இதுதான்)

     
    22.12.2014 / 8.40 / ஹைதராபாத் விமான நிலையம்

    Share
  • பாரதி்க்குச் சொன்னது

    இசைக்கவி ரமணன்

    Bharathy

    ராத்திரி அஞ்சும் ராட்சச இருளின்
    ரகசிய மடியினி லிருந்து, ஒரு
    பூத்திரி போலப் புறப்பெட் டெழுந்து
    புயலாய்ச் சீறிய புதிரே
    நேத்திரம் முழுதும் நெருப்பு ததும்ப
    நெஞ்சினில் நேசம் எழும்ப
    ஆத்திரம் கொண்ட அறவடி வாய்த் தமிழ்
    ஆர்த் தெழுந்ததென வந்தாய்

    அப்படி வந்தது நீயா? உனை
    அறவே அறிந்த நான்தானா?

    எத்தனை பெரியதிவ் வண்டம்! அதிலேimages
    எத்தனை சிறியவன் மனிதன்!
    எத்தனை சிறியவன் மனிதன்! அவனுள்
    எத்தனை சிறியது மனது!
    எத்தனை சிறியது மனது! மனதில்
    எத்தனை எத்தனை அண்டம்!
    அத்தனை அண்டமும் யாரோ ஒருத்தியின்
    நித்திரை யில் சிறு கனவு!

    அப்படிச் சொன்னது நீயா! உனை
    அறவே அறிந்த நான்தானா?

    எழுதா திருக்கும் வேளையில் தானே
    முழுதாய்க் கவியென் றுணர்ந்தோம்
    எண்ண மிலாவெளி நிலையில்தானே
    எல்லாம் எல்லாம் அறிந்தோம்
    பழுதோ விதியோ மானுடன் போலே
    பல்லோர் நடுவே திரிந்தோம்
    பலகணி திறந்து பரவச ஒளியைப்
    பக்குவக் கோப்பையில் குடித்தோம்

    அப்படி உணர்ந்தது நீயா? உனை
    அறவே அறிந்த நான்தானா?

    தேசம் தெய்வம் என்னும் கொள்கையில்
    தேகம் முடைந்து கொடுத்தாள்
    திரும்ப மறந்து விடலா காதெனத்
    தீரா ஏக்கம் தொடுத்தாள்
    நேசம் புரியா மோசச் சந்தையில்
    நிம்மதி நன்கு கெடுத்தாள், ஒரு
    நிமிடம் தெய்வ நிலையைத் தந்து
    நீக்கிப் பார்த்துச் சிரித்தாள்

    அப்படித் தவித்தது நீயா? உனை
    அறவே அறிந்த நான்தானா?

    அன்றைக் காலையில் அயர்ந்த தேகம்
    அனலில் வெடித்துச் சிதற
    ஆற்றங் கரையில் திலக மிட்டவள்
    அடிமனம் கொஞ்சம் பதற
    இன்றைக் கொருவன் இதுவாய் அதுவாய்
    இறந்தும் இருந்தும் உள்ளான்
    ஏடி! செல்லம் மாவென அழைத்தால்
    எவரு மிலாமல் நின்றான்

    அந்தக் குழப்பம் எனதா? என்னில்
    அழுந்தித் தொடரும் உனதா?

    புதிய கூட்டில் புகுந் திசைப்பது
    புராதானத்துப் பறவை; சித்தம்
    புடைக்க உள்ளே பொதிந்த சித்திரம்
    பூத்துக் காட்டும் உறவை
    அதிசயம் கொஞ்சம் விதிவசம் கொஞ்சம்
    அதனால் உழலும் நெஞ்சம்
    ஆதியும் அந்தமும் இல்லாத் தொடர்வில்
    அவளருள் ஒன்றே மிஞ்சும்

    இந்த ஞானமேனும் எனதா? இதுவும்
    எதுவும் போலே உனதா!!

    எனக்கு நீயார் உனக்கு நான் யார்
    எவரிடம் எப்படிச் சொல்ல?
    எதையும் காட்டும் கண்ணாடியிலே
    தெரிவதை எப்படித் தள்ள?
    உனக்கு நான் யார் உணரா திருந்ததே
    உனக்கு மிகவும் நன்று
    எனக்கு நீ யார் என்பதை அறிந்தேன்
    இதுவே எனக்கு நன்று

    இப்படிச் சொல்வது நான்தான்! இதை
    இன்றைக்கேனும் அறிவாய் நீதான்!

     

    Share
  • அன்பின் தாரை

    இசைக்கவி ரமணன்



    ஒவ்வோர் இலையும் ஒவ்வொரு துளியையும்images
    உணர்ந்து உணர்ந்து ரசிக்கிறது
    ஒவ்வொரு முறையும் ஒரேவிதமாய்த்தான்
    உயிர்முழு தாக நனைகிறது
    செவ்விய மழையின் சேதியை வாங்கிச்
    செடியும் கொடியும் படிக்கிறது
    செகம் முழுதுமே அகம் குளிருமொரு
    சிந்தனைக் கோட்டம் விரிகிறது

    மண்ணின் ஒவ்வொரு சின்னத் துகளும்
    மழையைப் பருகிக் கரைகிறது
    மலையில் அருவிகள் சிலிர்க்கும் குருவிகள்
    காட்சியில் முரணே கவர்கிறது
    தண்ணீர் என்னும் அமிழ்தம் பண்ணாய்
    தரையில் இசைத்து நடிக்கிறது, அதன்
    தாள லயத்தில் ஸ்வரத்தில் கிறங்கித்
    தரையே கரவொலி செய்கிறது

    மண்ணின் காதலும் விண்ணின் கருணையும்
    மழையாய்த் தொடர்ந்து வருகிறது
    மகா சக்தியின் மண்டும் தயையை
    மழையே எனக்குச் சொல்கிறது
    கண்ணாய் வாழ்வைக் காக்கும் அன்புக்
    கடவுளின் பொழிவைக் காணீர், ஒரு
    காதல் போதையில் காளி இசைக்கும்
    கவிதையைக் கேட்போம் வாரீர்!

    03.11.2014 / திங்கள் / 10.42

    Share
  • காகிதக் கப்பல்

     

    இசைக்கவி ரமணன்

     

    ar

     

    பள்ளிக் கூடம்; பிற்பகல் பொழுது
    வெள்ளி போலப் பளபளத்த
    தகரக் குழாய்கள் சற்றே கறுத்தன
    கூரைக் கதவைத் தட்டித் தட்டிப்
    பொத்தல்கள் வழியே எத்தர்கள் போலப்
    பொத்துக் கொண்டு வந்தது பெருமழை

    வானம் கொடுத்த ஆரவாரத்தை
    வாங்கிக் கொண்டது மழலைக் கூட்டம்
    மொழிகளை மிஞ்சும் மொழியைக் கேட்டு
    விழுந்த மழையெலாம் வியந்து கொண்டது

    வகுப்புக்கும் ஒரு வகுப்புக்கும் இடையே
    வகுத்துக் கிடந்த வறண்ட வாய்க்கால்
    ஆடிக் காவிரி போலப் பெருகவும்
    அவள் பாவாடை நனைந்து நாணியது

    விடைதெரியாத கணக்கைக் கண்டு
    விழித்துக் கிறுக்கி வியர்த்துக் கிடந்த
    பக்கத்திற்கெலாம் அப்பால், ஒரு
    புத்தம் புதிய பக்கம், அந்தப்
    புத்தகத்திடம் விடைபெற்றது

    கடவுளுக்கு மட்டுமே கண்ணில் தென்படும்
    எழுதப் படாத கவிதை ஒன்றினை
    ஏந்திக் கொண்டே இறங்கிய படியால்
    காகிதம் ஒன்று கப்பலானது

    கணக்குகளாலெ களங்கப்பட்டு
    கண்ணீர் கழுவ முயன்று காய்ந்து
    காற்றில் பறக்கும் காகிதம் இல்லை!

    ஒரு மைத்துளியும் உறுத்தவில்லை
    தாங்கி மட்டுமே பழக்கப்பட்ட
    தன்னைத் தாங்குவதார் தெரியவில்லை
    சபையறியாத என் சவலைக் கவிதையால்
    சாகா வரம்பெற்றது காகிதம்

    நீரில் நைந்து நலிந்து விடாது
    யார்கையிலும் சிக்கிவிடாது
    சீறும் புயலால் சிறிதும் அஞ்சாது
    திரும்ப வராது

    எனக்கே எனக்காய் விண்ணிலிருந்து
    இறங்கி வந்த மழைத்துளியில்
    கவிதை ஏந்திக் கனிந்த காகிதம்
    கனவைப் போலக் கரைந்து கொள்ளும்

    மழையை அனுப்பிய மன்னவன் காலில்
    குழையும்; சிறுவிரல் குறுகுறுக்கும்
    தனக்கே தனக்காய் இருந்தவன் பாடு
    இதற்குப் பிறகு என்னவாகுமோ?
    எனக்கெதற்கடி இந்தக் கவலை?

    கொடுத்தவனுக்கு நன்றி என்பதும்
    கொண்டதை முறையாய்க் கொண்டாடுவதும்
    கொடுத்ததைத் திருப்பிக் கொடுப்பதுதானே !

    02.11.2014 / ஞாயிறு / 07.37

    Share
  • இலை விளக்கியது

    இசைக்கவி ரமணன்

    istock_000009756153xsmall
    அந்த இலைக்குத் தெரிந்திருக்காது
    மீண்டும் அந்தக் கிளையில் ஏறித்
    தன்வகுப்புத் தோழிகளுடன் அமர்ந்து
    சளசளக்க முடியாதென்று

    தெரிந்திருந்தால், ஒரு
    சித்தனுக்கு விசிறுவதற்காகச்
    சென்றுகொண்டிருந்த தென்றலைச்
    சீழ்க்கையடித்து நிறுத்தி, ஓர்
    அரசகுமாரியின் ஒய்யாரத்தோடு
    அப்படி சாவகாசமாய் இறங்கியிருக்காது

    இறந்து, கொஞ்ச நேரம் பிடிக்கிறது
    இறந்துவிட்டது புரிவதற்கு

    இறங்கவில்லை
    இறக்கிவிடப்பட்டோம் என்பது
    கறுப்புச் சாலை சுட்டபின்புதான்
    உறுத்தியது இலைக்கு

    உயரே இருக்கும் தோழிகள்
    ஒருத்தரும் இதைக் கவனிக்காமல்
    ஒருத்தி இருந்த நினைப்பே இல்லாமல்
    ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

    உறவு உணர்வு நினைவு எல்லாம்
    ஒரேயடியாய் முட்டியபோதும்
    உடம்பில்லை
    உலகில் இருந்தது
    உலகம் இருக்க
    உலகம் இன்றி
    உதிர்ந்து போனது
    உலகில்
    கிளை தரித்த இலையை
    விதி வரித்துக்கொண்டது

    மனதும் உயிரும் முழுக்க முழுக்க ஒரு
    முனையில் குவியும் மரணத் தருணம்தான்
    விதியின் துவக்கம் என்று
    விளக்கியது விழுந்த இலை

    சலனமற்ற கிளையில்
    சளசளத்துக் கொண்டிருக்கின்றன இலைகள்
    அடிமரத்தில் முதுகு சொறிந்துகொண்டு
    அவசரமாக எங்கோ சென்றது தெரு நாய்

    28.10.2014 / செவ்வாய் / 22.06

    Share
  • ஜீவாவின் நாற்காலி தெரிவித்த சேதி

     

    இசைக்கவி ரமணன்

     

    chair
    தனிமை என்பது மிகநிஜமானது, அதன்
    தாழ்வாரத்து நிழல் உட்பட

    தனிமை என்பதை இனிமை என்பதா?
    தீக்குள் வைக்கும் எந்த விரலும், கண்ணனைத்
    தீண்டும் இன்பத்தைக் காணுமா?

    தனியே இருப்பது தனிமையாகாது
    எந்த உயிரும் எந்தக் கணமும்
    எங்கும் தனிமையில் இல்லை
    ஏதோ ஒன்றைச் சார்ந்தே இருப்பதை
    ஏதோ ஒன்று பார்த்துக்கொண்டே இருக்கிறது

    நான்போய் உட்கார்வதால் தீர்ந்துவிடாது
    நாற்காலியின் தனிமை
    ஆளைப் போல அதுவும்தான்
    அமர்ந்திருக்கிறது தரைமீது
    தரையும் கூடச் சதா சுழலும்
    பூமியின் மடியில் பொருந்திக்கொண்டிருக்கிறது

    அடுக்கிக்கொண்டே போனால்
    அயரவைக்கிறதே ஆண்டவனின் தனிமை!

    அலையலையாகப் பரவும் எண்ணங்களை
    அபிப்பிராயம் கொள்ளாமல்
    அதிர்ச்சி அடையாமல்
    அதற்குப் பொறுப்பே ஏற்காமல்
    அயராமல் இடைவிடாமல்
    அப்படியே பார்த்திருந்தால்

    எல்லாம் ஒடுங்கி
    ஏதோ ஒன்று மிஞ்சும்
    எதிரெதிரே உறவின்றிப் பிரிவின்றி
    இடைவெளி மட்டும் சற்றும் குறையாமல்
    இருப்பதே தனிமையின் தறுவாய்

    எது மிஞ்சியதோ அதுவே
    எது பார்த்துக்கொண்டிருந்ததோ அதனில்
    எத்தனமின்றிக் கரைந்து தீரும்

    எதுவுமே இன்றியும்
    எல்லாமாகவும்
    மல்லாந்து கிடக்கும் இருப்பே
    மகோன்னதத் தனிமை

    நன்றி : படம்: ஓவியர் ஜீவானந்தன்

    Share