மார்கழி மலர்கள் – காதலிலே வரும் கண்ணீர்த் துளியும் (பாடல்)

0

இசைக்கவி ரமணன்

 

[mixcloud]//http:www.mixcloud.com/Vallamai/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE/[/mixcloud]

1443Krishna

கண்ணன்
காதலிலே வரும் கண்ணீர்த் துளியும்
கவிதை நாடும் கானமாகும்
காந்தனவன் தரும் தாபத்திலே எழும்
தாகம் கூட ராகமாகும்
பனிகுளிரும் அவன் பாதத்திலே மன
மோகம் கூட மோகனமாகும்

ஒரு மார்கழி மாதக் காலைப் பொழுது
பாதையெங்கும் பனி விழுது, அதில்
உருவாய் அருவாய் ஒரு நீலக் கதிர்
உருக்கும் உயிரை உழுது
அது
குழலோ கன்னக் கோலோ? அதில்
கொள்ளை போகவே உயிரோ? வெறும்
விழலாய்க் கிடந்த வெற்று மனத்தினில்
வீணை நரம்புகள் விம்மிவிம்மி எழ
விண்ணைக் குடைந்தது காற்று, அதில்
வீழ்ந்து போனதடி நேற்று, அந்தக்
கண்ணனென்னும் என் மன்னவன் அன்புக்
கண்களே யாவுமம்மா! அவன்
கனவிலும் காவலம்மா! நிரந்தரக்
களவுதான் காதலம்மா!

பட்ட மரத்தில் பல பாரி ஜாதங்கள்
கொட்டமடிக்கும் கதை உண்டோ?
சொட்டச் சொட்ட நனைந்தும் முட்டிமுட்டி உயிரைச்
சுட்டுப் பொசுக்கும் தாகம் உண்டோ?
கிட்டவந்தால் விலகி எட்டிநின்றால் நெருங்கித்
தொட்டுச் சிரிக்கும் மாயம் உண்டோ?
அட்டக் கறுப்பில் மின்னும் வட்டக் கரியவிழி
திட்டமெதுவும் அதில் உண்டோ?

மாதவன் வந்ததும் நொந்த மனத்தினில்
நந்தவனம் பல பூக்கும், அவன்
மயிலிறகும் விழியும் இதழும் அதன்
செவ்வரியும் எனைத் தாக்கும்
இங்கு
உயிரே இலையெனும் போது, அதில்
உறவுகள் உரிமைகள் ஏது? ஒரு
உணர்வே தவமாய் வரமாய் லயமாய்
ஒருகுழல் ஊதிடும் போது
கண்ணன் என்றொரு மயக்கம், அவன்
காலடி மிகவும் பழக்கம், அவன்
காதல் பரம்பரை வழக்கம், அந்தக்
கள்வனே நெஞ்சில் நெருக்கம்

19.12.2014 / வெள்ளி / 15.00

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *