ரகசிய முடிச்சு அவிழ்ப்பதற்கில்லை…நாம் வெறும் பொம்மையம்மா!
-கவிஞர் காவிரிமைந்தன்
எந்த இடத்தில் இந்த மூச்சு நிற்கப்போகிறதோ
எந்த நொடியில் இந்த ஓட்டம் களைத்துவிழுகிறதோ
அந்த இடமும் அந்த நொடியும் ஆண்டவன் கையிலம்மா
ரகசிய முடிச்சு அவிழ்ப்பதற்கில்லை…நாம் வெறும் பொம்மையம்மா!
எவரின் கணக்கு எத்தனை நாட்கள் விவரம் தெரியாமல்
எத்தனை ஆசைகள் எத்தனை ஆணவம் எதற்கிங்கே அர்த்தமுண்டு?
கொடுத்தவன் கேட்கிறான்…கொட்டியே கவிழ்க்கிறான்!
கணக்கினில் பேதமில்லை! சமத்துவம் சாவதில்லை!!
நினைத்து நீ பார்க்கவே நெஞ்சத்தைக் கொடுத்திட்டான்!
வருத்தங்கள் மாறவே மறதியைச் சேர்த்திட்டான்!
அடுத்த நொடியிலே நடப்பதுகூட அத்தனை ரகசியமாய்
படைத்தவன் வகுத்ததால் சுழலும்சக்கரம் தடுப்பவர் யாருமில்லை!!