மார்கழி மலர்கள் – பராசக்திக்கு நினைவூட்டல்
இசைக்கவி ரமணன்
அன்புநெஞ்சில் கண்விழிக்கும் அன்னை சக்தியே!
அழகு மயிலை பழகி வளரும் ஆற்ற லரசியே!
என்னைப் பெற்றெ டுத்து விட்டு எங்கு சென்றனை?
ஏறெ டுத்தும் பார்ப்ப தில்லை என்ன சிந்தனை?
கண்மு ழுக்கக் கனல் தெறிக்கும் கவிதைகள் தந்தாய்
காளிமகன் கவிஞனென்னும் கர்வமும் தந்தாய்
பண்மு ழுக்க பவனிவரும் பரவசம் தந்தாய்
பலர்வாழப் பாடிடுமோர் பரவசம் தந்தாய்
விண்ணளக்கும் என்னைப்போய் வீட்டில் பூட்டினாய்
வீதியிலே மேடையிலே வித்தை காட்டினாய்
எண்ணமறி யாதவர்கள் ஏசிட வைத்தாய்
என்னைப்போய் பிறர்முன்னில் கூசிட வைத்தாய்
என்தமிழைக் கேட்டுபோதை ஏறிவிட்டதா? இல்லை
எவர்சொல்லோ கேட்டுமனம் மாறிவிட்டதா?
என்னம்மா? இன்றுனக்கு என்ன ஆனது? உன்
இடைவிடாத நேசமின்று எங்கு போனது?
அந்த நாளைப் போலவந்து ஆடிட வேண்டும், நீ
சந்தம் தந்து தலையசைக்கப் பாடிட வேண்டும்
நொந்த நெஞ்சை மொந்தையாக்கி நுங்கிட வேண்டும், எந்த
நொடியும் நீயே எந்தன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்!
23.12.2014 / செவ்வாய் / 13.10 /ப்ருஹத்வனி