Tag: நாகேஸ்வரி அண்ணாமலை

  • அடித்தாலும் கணவன், மிதித்தாலும் கணவன்

    — நாகேஸ்வரி அண்ணாமலை.

     

    domestic-violenceபிப்ரவரி 28-ஆம் தேதியிட்ட நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த செய்தியின்படி அமெரிக்காவில் ஒரு வழக்கு நடந்து முடிந்திருக்கிறது. ஒரு காதலன் (ஆங்கிலத்தில் உள்ள ‘boy friend’-ஐ எப்படித் தமிழில் குறிப்பிடுவது என்று தெரியவில்லை), இந்தக் கதையில் உள்ளவன் வழக்கமான boy friend கூட இல்லை. மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான்) தன் காதலியை (வழக்கமான காதல் தோழி… ‘girl friend’ இல்லை.) தாறுமாறாக அடித்திருக்கிறான். அவள் வலியால் துடித்துக்கொண்டு அப்பார்ட்மெண்டிற்கு வெளியே ஓடிவந்து படிக்கட்டின் மேல் உட்கார்ந்து அழுகொண்டிருந்திருக்கிறாள். பக்கத்து வீட்டுக்காரர் வெளியே ஓடிவந்து பார்த்து உடனே காவலர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் வருமுன்பே தாமஸ் (அதுதான் காதலனின் பெயர்) அலிஸனை (அலிஸன் என்பது காதலியின் பெயர்) குளித்துவிட்டு அவள் உடம்பின் மீதுள்ள ரத்தக் கறைகளை அகற்றும்படி கூறியிருக்கிறான். அப்பார்ட்மெண்டின் வாசலிலிருந்து படிக்கட்டு வரை வழிந்திருந்த ரத்தக் கறைகளைத் துடைத்தெடுத்திருக்கிறான்.

    காவலர்கள் வந்து நடந்தது என்னவாக இருக்கும் என்று ஓரளவு ஊகித்து இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்திருக்கிறார்கள். அன்று அவள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை. அவளுடைய உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர், மனைவிகளைத் துன்புறுத்தும் கணவன்மார்களின் செயல்களை ஆராயும் ஒரு நிபுணர் ஆகியவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரித்தார்கள். அலிஸன் ஒரு சாட்சியாக வர மறுத்துவிட்டாள். எல்லோருடைய கருத்துகளையும் கேட்டுவிட்டு நீதிபதி தாமஸை குற்றவாளி என்று தீர்மானித்திருக்கிறார். தாமஸுக்கு ஒன்பது ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்.

    தாமஸுக்குத் தண்டனை வழங்கியதன் மூலம் நீதிமன்றம் தனக்குப் பெரிய தீங்கு இழைத்திருக்கிறது என்று அலிஸன் புலம்பியிருக்கிறாள். தாமஸ் தனக்குத் தீங்கு எதுவும் இழைக்கவில்லை என்றும் அவனுக்குத் தனடனை வழங்கியதன் மூலம் அவளுடைய வாழ்க்கையே பாழடைந்துவிட்டதாகவும் தன்னுடைய உயிர் நண்பனைச் சிறைக்கு அனுப்பியதன் மூலம் தான் அவனை இழந்துவிட்டதாகவும் தான் அவனுடன் வசித்துவந்த அப்பார்ட்மெண்டிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் அழுதிருக்கிறாள்.

    domestic-violence2மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கும் ஒருவனோடு கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு அவனைத் தன் உண்மை நண்பனாக ஏற்றுக்கொண்டு அவன் தன்னை அடித்துத் துன்புறுத்தியும் அவனை நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் மூலம் அவன் காவலர்களால் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோதும் அவன் தன்னைத் துன்புறுத்தவில்லை என்று கூறிய அலிஸனின் வாதத்தைக் கேட்ட நீதிபதி “தீங்கிழைக்கப்பட்ட (victim) அலிஸனே தாமஸ் தனக்குத் தீங்கிழைக்கவில்லை என்று கூறினாலும், அது என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கிற்குத் தொடர்பற்ற, பொருத்தமில்லாத, சம்பந்தமில்லாத விஷயம்” என்று கூறியிருக்கிறார். அவர் எப்பேர்ப்பட்ட நீதிபதி! எப்பேர்ப்பட்ட தீர்ப்பு!

    அமெரிக்காவில் குடும்பங்களில் நடக்கும் வன்முறைச் செயல்களுக்கு (அநேகமாக ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தும் விஷயங்களுக்கு) மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; பெரிய தண்டனையும் கொடுக்கிறார்கள். ஒரு முறை நான் கீழே விழுந்து என் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டது. என்னை மருத்துவர் வந்து பரிசோதிக்கும் முன்பே “வீட்டில் உங்கள் கணவர் உங்களைத் துன்புறுத்தி இப்படி ஏற்பட்டதா?” என்று கேட்டார்கள். அந்த வேதனையிலும் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. இது அமெரிக்காவில் மாமூலான விஷயம். பெண்கள் காயம் பட்டு வந்தால் அவர்களைக் கணவனோ மற்ற ஆண்துணையோ அவர்களை துன்புறுத்தியிருக்கலாம் என்று முதலில் நினைக்கிறார்கள். அப்படி நடந்திருந்தால் அதற்குரிய தண்டனையை ஆண்களுக்கு வழங்கத் தவறுவதில்லை.

    domestic-violence--300x214இந்தியாவில் இதற்கு நேர் மாறாக நடக்கிறது. கணவன் மனைவியை அடித்துத் துன்புறுத்தினால், காவலர்களைத் தள்ளுங்கள், உற்றார் உறவினர்கள் கூட ஏன் என்று கேட்பதில்லை. அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற பழமொழி வேறு. ‘இன்று அடித்துக்கொள்வார்கள். நாளை கூடிக்கொள்வார்கள்’ என்று கணவன் கொடியவனாக இருந்தாலும் அவனுடைய மனைவியைக் கணவனிடமிருந்து பிரிப்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை.

    உடல் ரீதியாகத் துன்புறுத்துவதை விடுங்கள். மனரீதியாக எத்தனை கணவன்மார்கள் மனைவிமார்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள். இந்த மனைவிமார்களும் மேலே குறிப்பிட்ட அலிஸன் போல்தான் கணவன்மார்கள் மேல் எந்தக் குற்றமும் கண்டுபிடிப்பதில்லை. காலம் காலமாகப் பெண்களை மூளைச்சலவை செய்திருக்கிறோம்.

    கணவனைப் பரத்தை வீட்டிற்குக் கூட்டிச்சென்ற நளாயினியையும், கட்டிய மனைவியைக் கைவிட்டுவிட்டு மாதவியிடம் தஞ்சம் புகுந்த கணவன் பணத்தை எல்லாம் தொலைத்துவிட்டு மீண்டும் கண்ணகியிடம் வந்தபோது அவள் அவனைக் கடிந்துகொள்ளாமல் திரும்பவும் அவன் தொழில் நடத்தத் தன் சிலம்புகளை விற்றுப் பணம் திரட்டுமாறு கூறிய கண்ணகியையும் கற்புக்கரசிகள் என்று பட்டம் சூட்டிவிட்டோம். பழைய கதைகள் இருக்கட்டும். சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட மனோகரா கதையில் தந்தையின் இரண்டாவது மனைவிக்குத் தன் மகன் தீங்கிழைக்க முயலும் போதெல்லாம் ‘அவள் உன் தந்தை விரும்பும் பொருள். அவளுக்கு எந்தவிதத் தீங்கும் நேரக் கூடாது’ என்று கணவனின் ஆசையை நிறைவேற்றுவதையே – கணவன் தன் நலன்களுக்கு எதிராக நடந்துகொண்டாலும் – அந்த மனைவி தன் கொள்கையாகக் கொண்டிருக்கிறாள்.

    எனக்குத் தெரிந்த எங்கள் உறவினப் பெண் ஒருத்தியின் தந்தை வழிச் சொத்துக்களை எல்லாம் கணவன் தொலைத்துவிட்டான். இருக்கும் ஒரே ஒரு சின்னச் சொத்தையாவது அவளுடைய கணவனிடமிருந்து காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகள் நான் செய்துகொண்டிருக்கிறேன். அவள் எதற்கும் ஒத்துழைக்கவில்லை. எல்லாச் சொத்துக்களையும் இழப்பதற்குக் கணவன் காரணமாக இருந்தாலும் இன்னும் கணவன் தன்னை நன்றாக வாழவைப்பான் என்று நம்பிக்கொண்டிருக்கிறாள். தாமஸ் தன்னைத் துன்புறுத்தவே இல்லை என்று கூறியும் நீதிமன்றம் தாமஸைத் தண்டித்ததுபோல் எங்கள் உறவுக்காரப் பெண்ணைக் காப்பாற்ற இந்தியச் சட்டத்தில் இடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    படம் உதவி:

    A domestic violence attorney can help you

    Domestic Violence Essay Sample, Example


    http://www.abetterwaydomesticviolence.org/Abuse

    Share
  • பிரதமர் மோதிக்கு ஒரு கடிதம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    Narendra_Modi-Oct-12

    புதுதில்லியில் இந்துத்துவவாதிகள் சில கிறிஸ்தவத் தேவாலயங்களையும் பள்ளிகளையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகள் உங்களைப் பார்த்து இந்த மாதிரி வன்முறைகளைத் தடுக்கும்படி 2014 டிசம்பரில் மனுக் கொடுக்க வந்தபோது அவர்களைச் சந்திக்க நீங்கள் மறுத்திருக்கிறீர்கள். இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. பெங்களூரில் நடந்த இந்திய கத்தோலிக்க மாநாட்டில் கலந்துகொள்ள வருவதாகயிருந்த வாடிகனைச் சேர்ந்த இரண்டு முக்கிய அதிகாரிகளுக்கு மத்திய அரசு விசா கொடுக்க மறுத்திருக்கிறது. இவர்கள் டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவுக்கு வருவதற்கு விசாவுக்கான விண்ணப்பங்களை அனுப்பியிருக்கிறார்கள். கடைசி நாள் வரை அவர்களுக்குப் பதில் எழுதாமல் இருந்துவிட்டுக் கடைசி நாளில் நொண்டிச் சாக்குகள் சொல்லி அவர்களுடைய விசா விண்ணப்பங்களை நிராகரித்திருக்கிறார்கள். விண்ணப்பத்தில் எப்படிப்பட்ட தவறு என்று எந்த விளக்கமும் கூறப்படவில்லை. நீங்கள் தெரிந்தும் தெரியாதது மாதிரி இருந்தீர்கள்.

    பா.ஜ.க. மத்தியில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து ஆர்.எஸ்.எஸ்., இந்து மஹாசபா, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற இந்துத்துவவாதக் கட்சிகள் தங்கள் கொள்கைகளையும் அதன் மூலம் செயல்களையும் மக்களிடையே பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மொகலாய மன்னர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முன்னும் பிரிட்டிஷ் காலனீயவாதிகள் இந்தியாவை ஆள ஆரம்பிப்பதற்கு முன்னும் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த எல்லோரும் இந்துக்களே எனவும், அதனால் இப்போது அவர்கள் தங்கள் தாய் மதத்திற்குத் திரும்ப வேண்டும் என்று சொல்லி அப்பாவி மக்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றுகிறார்கள். குடிமக்கள் எல்லோருக்கும் பிரதம மந்திரியான நீங்கள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை.

    ஆர்.எஸ்.எஸ். கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் இந்துக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் இந்தியக் கலாச்சாரமாகவும் பாரம்பரியமாகவும் எடுத்துக்கொண்டு அவற்றைக் காப்பதாகக் கூறிக்கொண்டு இளைஞர்கள் மனதை தங்கள் கொள்கைகளின் பக்கம் திருப்ப முயன்று வருகிறார்கள். இதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் நீங்கள் மௌனம் சாதித்தீர்கள்.

    குஜராத்தில் பி.ஜே.பி.யின் மதவாதக் கொள்கை பற்றிப் பேசுவதற்காகத் தன் மனைவியுடன் சென்றுகொண்டிருந்த கம்யூனிஸ்ட் கடசியைச் சேர்ந்த ஒருவரையும் அவர் மனைவியையும் இந்துத்துவவாதிகள் சுட்டிருக்கிறார்கள். இதைப் பற்றியும் நீங்கள் எதுவும் கூறவில்லை.

    இதுவரை மௌனம் சாதித்துவந்த நீங்கள் திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன்னால் புதுதில்லியில் நடந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பிறரை மதம் மாற்ற முயற்சிப்பவர்களைக் கண்டிப்புடன் எச்சரித்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னதாகப் பத்திரிக்கையில் வந்ததை அப்படியே கீழே தருகிறேன். “மதத்தின் பெயரால் வன்முறை நிகழ்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; சமூக அமைதியைக் குலைக்கும் அத்தகைய வன்முறைகளைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”. மேலும் நீங்கள் கூறியது: “‘சப்கா சாத்; சப்கா விகாஸ்’ என்ற கொள்கையின் அடிப்படையில் எங்கள் அரசு செயல்படுகிறது. இதை ஒவ்வொரு மேஜையிலும் உணவு; ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில்; ஒவ்வொருவருக்கும் வேலை; ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் மற்றும் கழிப்பறை’ என எளிதாகக் கூறலாம். இந்தக் கொள்கைதான் இந்தியாவைப் பெருமையுடைய நாடாக மாற்றும். ஒற்றுமை மூலம்தான் நாம் இதை அடைய முடியும். ஒற்றுமை நம்மை பலமடையச் செய்யும். வேற்றுமை நம்மை பலவீனமடையச் செய்யும்”. மேலும் நீங்கள் கூறியது: “எங்கள் அரசு எல்லா மதங்களுக்கும் சமமான மதிப்பளிக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்ற முழுச் சுதந்திரத்தை அரசு உறுதிசெய்கிறது. பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த மதக் குழுக்களோ அல்லது சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த மதக் குழுக்களோ நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒருவருக்கு ஒருவர் வெறுப்பை உமிழ, மோதலை ஏற்படுத்த விட மாட்டோம். மதத்தின் பெயரால் வன்முறை நிகழ்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அத்தகைய வன்முறைகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.”

    நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் ‘டில்லியில் கிறிஸ்தவப் பள்ளிகள் மீதும் தேவாலயங்கள் மீதும் நடந்த வன்முறைகளை அனுமதிக்க முடியாது. அது தொடர்பான குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு சமுதாயத்தில் இடமில்லை’ என்று கூறியிருக்கிறார்.

    இந்தத் திடீர் மாற்றம் உங்களிடம் எப்படி, எப்போது வந்தது? இந்தியாவிற்கு வந்துவிட்டுப் போன அமெரிக்க அதிபர் ஒபாமா தான் திரும்பிச் செல்வதற்கு கொஞ்ச நேரம் முன்பு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நாசூக்காக மத நல்லிணக்கம்தான் இந்தியாவுக்கு நல்லது. இந்தியர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் இந்தியா முன்னேறும்’ என்று சொன்னதன் விளைவா? பின் அவர்கள் நாட்டிற்குச் சென்ற பிறகு அங்கு நடந்த ஒரு ஜெபக் கூட்டத்தில் இந்தியாவில் இந்துக்களல்லாத இந்தியர்கள் மேல் நடக்கும் வன்முறைகளை அறிந்தால் காந்திஜி அதிர்ச்சி அடைவார் என்று சொன்ன பிறகா?

    இதைவிட முக்கியமாக டில்லி சட்டசபைத் தேர்தலில் மக்கள் உங்கள் கட்சியை மூன்றே இடங்களில் ஜெயிக்கவைத்து உங்கள் கட்சியோடு தொடர்புடைய இந்துத்துவவாதக் கட்சிகள் செய்த செயல்களும் அவற்றை நீங்கள் கண்டிக்காததும் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை உங்களுக்கு உணர்த்திய பிறகா? தமிழ்நாட்டில் நடந்த இடைத்தேர்தலில் உங்கள் கட்சி வேட்பாளர் டிபாசிட் இழந்த பரிதாபத்தைப் பார்த்த பிறகா?

    எந்த நிகழ்ச்சி உங்களை மாற்றியிருந்தாலும் இந்திய மக்களாகிய எங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை பிறக்க வேண்டுமானால் கிறிஸ்தவ நிகழ்ச்சியில் நீங்கள் கூறியவற்றை அப்படியே செயலில் காட்ட வேண்டும். குஜராத்தில் கம்யூனிஸ்ட் தலைவரைச் சுட்டவர்களைத் தீவிரமாகத் தேடிப்பிடித்து அவர்களுக்குரிய தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும். மறுமதமாற்றம் செய்பவர்கள் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்கவேண்டும். மதம் சார்ந்த வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும்படி சட்டம் இயற்ற வேண்டும். இதைப் பயமின்றிச் செய்ய போலீஸ், சி. பி. ஐ., அரசு தரப்பு வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும். ‘லவ் ஜிஹாட்’ என்னும் பெயரில் காதலர்களைப் பிரிப்பவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும். எல்லா மதத்தினரின் முக்கிய தினங்களிலும் அவர்களை இந்தியப் பிரதமர் என்ற முறையில் நீங்கள் மனதார வாழ்த்த வேண்டும். ட்விட்டர் செய்தி எல்லாருக்கும் போய்ச் சேராது. இந்துக்கள் நிறையப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறும் சாமியார்களின் வாயை அடைக்க வேண்டும். நீங்கள் பேசும் மேடைகளில் எல்லாம் மத நல்லிணக்கத்தைப் பற்றிப் பேச வேண்டும். இந்தியா முன்னேற அது ஒன்றுதான் வழி என்று அடித்துச் சொல்ல வேண்டும். பாடப் புத்தகங்களில் மத விரோதத்தைத் தூண்டும் பாடங்களை அகற்ற வேண்டும். கிறிஸ்தவ நிகழ்ச்சியில் நீங்கள் பேசியது உங்கள் உள்ளத்திலிருந்து வந்தது என்று நாங்கள் நம்ப வேண்டுமானால் மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் நீங்கள் செய்து காட்ட வேண்டும்.

    செய்வீர்களா?

    Share
  • அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு கடிதம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இதுவரை உலகம் கண்டிராத ஒரு வெற்றி ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. எந்த நாட்டிலும் எந்தத் தேர்தலிலும் 96 சதவிகித இடங்களையும் 56 சதவிகித ஓட்டுக்களையும் பெற்று ஒரு கட்சி ஜெயித்திருப்பதாகச் சரித்திரம் இல்லை (தனிப்பட்ட ஒரு நபர் ஆட்சியைப் பிடித்துப் பெயருக்குத் தேர்தல்கள் நடத்தி 90 சதவிகிதத்திற்கு மேல் ஓட்டுக்கள் பெற்றதாகப் பறைசாற்றிக்கொள்ளும் சர்வாதிகார நாடுகளில் தவிர). ஆம் ஆத்மிக்குக் கிடைத்தது பெரிய வெற்றி; பி.ஜே.பி.க்குக் கிடைத்தது பெரிய தோல்வி.

    aravind_1886671f

    இந்த வெற்றிக்குப் பல அரசியல் விமரிசகர்கள் பலவித விளக்கங்களைக் கூறுகிறார்கள். ‘மோதியின் மேஜிக்’ முடிந்துவிட்டது என்று சிலர் கூறுகிறார்கள். அவர் கட்சியில் யாரையும் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக முடிவுகள் எடுத்தது பலருக்குப் பிடிக்கவில்லை. பல நாட்டுத் தலைவர்களையும் அழைத்துத் தன்னால் அவர்கள் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்று மார்தட்டிக்கொண்டது பாமர மக்களுக்கு எந்தவிதப் பயனும் விளைவிக்கப் போவதில்லை என்பதை ஏழை மக்கள் உணர்ந்துகொண்டார்கள் என்கிறார்கள். பி.ஜே.பி.யோடு சம்பந்தப்பட்ட பல இந்துத்துவவாதக் கட்சிகள் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை இந்து மதத்திற்கு ஏமாற்றி இழுப்பது, இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான திருமணங்களை ‘லவ் ஜிஹாட்’ என்ற பெயரில் எப்படியாவது தடுத்து நிறுத்துவது, மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்த இந்தியாவை இந்து நாடாக ஆக்க முயற்சிப்பது போன்ற பல அடாவடிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் மோதி இருந்து வருகிறார். இந்தப் போக்கு ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை போல் தெரிகிறது.

    மற்றக் கட்சிகளின் தயவில்லாமல் தாங்களாகவே அரசு அமைக்கலாம் என்று இறுமாந்திருக்கும் பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகவும் ஆம் ஆத்மி கட்சிக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் போலும். மோதி பதவிக்கு வந்தவுடனேயே மோதிக்குச் சார்பாக பல பத்திரிக்கைகள் திரும்ப ஆரம்பித்தன. மோதியின் புகழ்பாடுவதே இவர்களுடைய வேலையாகப் போயிற்று. இப்போது மோதியின் செல்வாக்கு ஆட்டம் கண்டிருப்பதால் இப்பத்திரிக்கைகளும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு.

    பி.ஜே.பி.க்கு மூன்றே இடங்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு டில்லி முதலமைச்சர் என்று அந்தக் கட்சி முன் நிறுத்திய கிரண் பேடியே தோற்றிருக்கிறார். தன் தோல்விக்குக் காரணம் பி.ஜே.பி.யின் கொள்கைகளோ அந்தக் கட்சியின் அடாவடிச் செயல்களோ காரணம் என்று கருதாத கிரண் பேடி தான் தோற்றதற்கு பி.ஜே.பி. தலைமையிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இவர் தோற்றதற்கு இவர் மட்டும்தான் காரணம் என்று கருதுகிறாரா இந்த முன்னாள் போலீஸ் அதிகாரி. இது கூடத் தெரியாதா இவருக்கு? தான் இன்னும் என்ன செய்திருந்தால் ஜெயித்திருக்க முடியும் என்று நினைக்கிறார்?

    இதுவரை எந்தக் கட்சிக்கும் கிடைத்திராத வெற்றியைக் கண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலுக்கு இனிமேல்தான் நிறையப் பொறுப்புகள் இருக்கின்றன. இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என்று வாக்குறுதிகள் கொடுப்பது வேறு, அவற்றை நிறைவேற்றிக் காட்டுவது வேறு. உங்களுக்கு ஓட்டளித்த டில்லி மக்கள் அனைவரும் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.

    எதிலாவது உங்களை மாட்டிவைத்து நீங்கள் பதவியைத் துறப்பதற்கு எல்லா உபாயங்களையும் மத்திய அரசு கையாளலாம். அதற்கு ஒரு போதும் இடம் கொடுக்காதீர்கள். முன்னால் ஆட்சி அமைத்தபோது நடந்துகொண்டதுபோல் சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்யாதீர்கள். டில்லி மக்கள் பூராவுமே உங்கள் பக்கம். அரசு என்ன முடிவெடுத்தாலும் அடிமட்ட மக்களை அதன் பலன்கள் போய்ச் சேருகின்றனவா என்று சிந்தித்துச் செய்யுங்கள். பாரபட்சமின்றி எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உங்கள் கொள்கையை நிறைவேற்றுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முதலில் செய்யுங்கள். மக்களுக்குக் கல்வி புகட்டுவதுதான் உங்கள் முதல் கடமை. மக்கள் எல்லோருக்கும் கல்வி கிடைத்து அவர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் அதன் பிறகு அந்த சமூகமே மேம்பாடடையும்.

    அடுத்தது மக்களுடைய ஆரோக்கியம் முக்கியமானது. பாமர மக்களுக்கும் அவர்களுக்குத் தேவைப்படும்போது வைத்திய உதவி கிடைக்கச் செய்வது. உங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் இருபது அம்சங்களைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். அதில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அதற்கு முன்னுரிமை கொடுங்கள். எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிதானமாக ஒவ்வொன்றாக நிறைவேற்றுங்கள். அரசியலில் நீங்கள் நுழைந்ததற்கே முதல் காரணமான இந்திய அரசியலில் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலை முழுவதுமாகக் களைந்து இந்தியாவிற்கே உதாரணமாக விளங்குங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வெற்றி உங்கள் கண்களை மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    உங்கள் கட்சி இந்திய அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியாக அமைந்தால் இந்தியாவின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை பிறக்கும்.

    Share
  • கோவில்களைக் களங்கப்படுத்தாதீர்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மத்தியில் ஆட்சி செய்யும் பி.ஜே.பி. காந்திஜியின் நினைவுகளை மறக்கடிக்க அவருடைய பிறந்த நாளை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் நாளாக அறிவித்தது. இந்தியா எவ்வளவு தூரம் சுத்தமாகியிருக்கிறது என்று தெரியவில்லை. இப்போது அடுத்ததாக அவரைக் கொன்ற படுபாதகனை இந்தியர்கள் மறக்காமலிருக்க இந்து மஹாசபை இந்தியா முழுவதிலுமுள்ள கோயில்களில் கோட்சேயின் சிலைகளை வைக்கப் போவதாக காந்திஜியை கோட்சே சுட்டுக் கொன்ற நாளான ஜனவரி 30-ஆம் தேதி அறிவித்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் கோட்சேக்குக் கோவில் கட்டவும் சிலை வைக்கவும் நடந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதால் இப்போது நாடு முழுவதும் உள்ள எல்லா இந்துக் கோவில்களிலும் கோட்சேயின் சிலைகளை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இதற்கு பி.ஜே.பி. அரசு எந்தவித மறுப்பும் அளிக்கவில்லை.

    கோட்சேக்கு ஏன் இப்போது இந்து மஹாசபை இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது? மதச்சார்பற்ற நாடாக இருந்துவந்த இந்தியாவை ஏன் இப்போது ‘இந்து ராஷ்ட்ரா’வாக மாற்ற முயற்சிக்கிறது? கொலைகார கோட்சேக்கு இறைவனின் புனித இடமான கோவில்களில் இடம் கொடுப்பதின் மூலம் இறைவனையே இவர்கள் இழிவுபடுத்துவதுபோல் ஆகவில்லையா? பல கோவில்களில் சில பெரிய மகான்கள், துறவிகளின் சிலைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் கோட்சே கொலைகாரனல்லவா? கோவில்களுக்குச் செல்லும் பாமர மக்கள் கோவில்களில் உள்ள எல்லாவற்றையும் தொட்டுத் தொட்டு வணங்குவார்கள். கோவிலுக்குள் நுழையும் வாயிலிலிருந்து வழிநெடுக பார்க்கும் எல்லாப் பொருட்களையும் கையால் தொட்டுத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்வார்கள். கோட்சேயின் சிலையையும் அம்மாதிரி வணங்குவார்கள். இதைத்தான் இந்து மஹாசபா விரும்புகிறதா?

    பல நூற்றாண்டுகளாக இறைவனுக்கும் மக்களுக்கும் இடையில் தாங்கள் இருப்பதாகக் கூறிக்கொண்டு பாமர மக்களை பிராமணர்கள் முட்டாளடித்தது போக இப்போது பல கோவில்களின் தர்மகர்த்தாக்கள் கோவில்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறார்கள். எங்கள் ஊர் கோவில் பூசாரி கோவில் தர்மகர்த்தாவை முதலாளி என்று கூப்பிடுகிறார். பூசாரி தர்மகர்த்தாவைவிட பெரியவர் அல்லவா? இவர்தானே இறைவனுக்கு அவரைவிட அருகில் இருக்கிறார்?

    நேற்று பிரதமர் மோதியையே சவாலுக்கு அழைக்கும் ஒரு விஷயத்தை பி.ஜே.பி. எம்.பியும் இந்து மத குருவுமான சாக்‌ஷி மகராஜ் கூறியிருக்கிறார். ‘இந்தியா என்னும் படகை வளர்ச்சி, முன்னேற்றம் என்ற ஒரு துடுப்பாலும் இந்தியாவை இந்து நாடாகமாற்ற வேண்டும் என்ற இலக்கையுடைய இன்னொரு துடுப்பாலும் மோதி ஓட்ட வேண்டுமாம். இந்த இலக்கை அடைவதில் மோதி அலட்சியம் காட்டினால் படகு ஓட்டத்தான் போக வேண்டுமாம். இவரால் அரசுகளை அமைக்கவும் முடியுமாம். கவிழ்க்கவும் முடியுமாம்’ என்று அகங்காரமாகப் பேசியிருக்கிறார். இந்த மாதிரி பேச்சுக்கள் கூட மோதியை வெறுப்பேற்றவில்லையா? அவரது மௌனத்தைக் கலைக்கவில்லையா

    இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தி வந்திருக்கிறது. புதுதில்லியில் இந்துத்வவாதிகள் சில கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள். இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. பெங்களூரில் நடந்துவரும் இந்திய கத்தோலிக்க மாநாட்டில் கலந்துகொள்ள வருவதாகயிருந்த வாடிகனைச் சேர்ந்த இரண்டு முக்கிய அதிகாரிகளுக்கு மத்திய அரசு விசா கொடுக்க மறுத்திருக்கிறது. இவர்கள் டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவுக்கு வருவதற்கு விசாவுக்கான விண்ணப்பங்களை அனுப்பியிருக்கிறார்கள். கடைசி நாள் வரை அவர்களுக்குப் பதில் எழுதாமல் இருந்துவிட்டு கடைசி நாளில் நொண்டிக் காரணங்களுக்காக (technical reasons) அவர்களுடைய விசா விண்ணப்பங்களை நிராகரித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட டெக்னிகல் தவறு என்று எந்த விளக்கமும் கூறப்படவில்லை.

    இம்மாதிரி கிறிஸ்தவ மதத்தவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதைத் தடுப்பதின் மூலமும் இந்திய முஸ்லீம்களை அலட்சியப்படுத்துவதன் மூலமும் விபரம் அறியாத பாமர மக்களை இந்து மதத்திற்கு கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதன் மூலமும் இந்து மதத்தை வளர்த்துவிடலாம், இந்தியாவை இந்து நாடாக மாற்றிவிடலாம் என்று இந்துத்வவாதிகள் நம்பினால் அது எவ்வளவு பெரிய மடமை.

    இந்தியா பல மதத்தவர், பல இனத்தவர் வாழும் பன்முகம் கொண்ட நாடு என்பதுதான் இந்தியாவின் பலம், பெருமை. இந்தியாவில் வாழும் அனைவரும் ஒரு காலத்தில் இந்துக்கள் என்று நீங்கள் கூறுவது சரியென்றே வைத்துக்கொள்வோம். பல நூற்றாண்டுகளாக அவர்கள் இஸ்லாமியர்களாக, கிறிஸ்தவர்களாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள். சரித்திரத்தில் நடந்த தவறுகளைத் திருத்துவதாகக் கூறிக்கொண்டு இன்றைய சரித்திரத்தைக் களங்கப்படுத்தாதீர்கள்.

    இந்தியாவையும் அமெரிக்காவையும் தவிர வேறு எந்த நாட்டிலும் பல மதத்தினர், பல இனத்தினர் ஒரே நாட்டில் சேர்ந்து வாழவில்லை. அமெரிக்கா உருவாகி 350 ஆண்டுகள்தான் ஆகின்றன. மேலும் அது குடியேறிகளால் உருவாக்கப்பட்டது. பல இனத்தவர், பல மதத்தவர் அங்கு வாழ்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் இந்தியா பல ஆயிரம் ஆண்டுகளாக பன்முகம் கொண்ட நாடாக விளங்குகிறது. அதனுடைய தனித்தன்மையை அழித்துவிடாதீர்கள். அது இந்தியாவுக்கும் நல்லதல்ல; இந்து மதத்திற்கும் நல்லதல்ல.

    Share
  • ஒரு குடும்பத்திற்குப் பத்துக் குழந்தைகள்?

    நாகேஸ்வரி அண்ணாமலை.

    வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேறிய யூதர்கள் பாலஸ்தீனம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தங்கள் மூதாதையர் வாழ்ந்த இடம் என்று கூறிக்கொண்டு அங்கு ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றினர்; இன்னும் வெளியேற்றிக்கொண்டிருக்கின்றனர். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நாட்டை உருவாக்கி அதை ஆள ஆரம்பிக்கும்போது இஸ்ரேல் உருவாகக் காரணமாக இருந்த முக்கிய தலைவர்களுள் ஒருவரான பென்–குரியன் அந்த நாட்டு ஒவ்வொரு யூதப் பெண்ணையும் நான்கு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    உலகத்து நாடுகள் அனைத்தும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த முயன்று வரும்போது பென்–குரியன் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. இஸ்ரேல் யூத நாடாக உருவாக வேண்டும், அங்கு யூத மதச் சட்டங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று யூதர்கள் விரும்பினர். இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடாக உருவாகும்போது அதில் யூதர்கள் பெரும்பான்மையானவர்களாக இருக்க வேண்டும், அதற்கு அரேபியர்களை வெளியேற்றுவதோடு யூதர்களின் எண்ணைக்கையையும் கூட்ட வேண்டும் என்று இஸ்ரேல் தலைவர்கள் திட்டமிட்டனர். யூதப் பெண்கள் நான்கு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு வழி என்று நினைத்தனர்.

    overpopulation-in-indiaஇஸ்ரேலில் யூதர்களின் எண்ணிக்கையைப் பெருக்க நினைத்தது போல் இப்போது இந்துச் சாமியார்கள் எல்லோரும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையைப் பெருக்க நினைக்கிறார்கள். பா.ஜா.வைச் சேர்ந்த எம்.பி. சாக்‌ஷி மகராஜ் ‘இந்துக்கள் அனைவரும் ஐந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி இந்த ‘அறிவுரைக்கு’ பிள்ளையார் சுழி போட்டார். அவரையடுத்து மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ. பிரமுகர் ஷியாமல் கோஸ்வாமி என்பவரும் ‘இந்துக்கள் ஐந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால்தான் எதிர்காலத்தில் பிற மதங்களுடன் சம நிலை காணப்படும்’ என்று முத்து உதிர்த்திருக்கிறார். பிற மதங்களுடன் சம நிலை காணப்படும் என்று இவர் கூறுவது உலக அளவிலா அல்லது இந்திய அளவிலா? இந்த அறிவுரைகளுக்கும் மேலாக சாமியார் வசுதேவானந்த் ஒவ்வொரு இந்துவும் பத்துக்குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

    பத்துக் குழந்தைகளைப் பெற்று அவற்றை என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார் தெரியுமா? விவசாயத்திற்கு ஒரு பிள்ளையாம்; அடுத்த நான்கு குழந்தைகள் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் ராணுவ வீரர் ஆகவும் உள்நாட்டு பாதுகாப்பு வீரர் ஆகவும் சமூகதொண்டர் ஆகவும் மாற வேண்டுமாம். மீதமுள்ள ஐந்து குழந்தைகளை இவரிடம் கொடுத்துவிடவாம். இவர் அவர்களை துறவிகளாகவும் சன்னியாசிகளாகவும் மாற்றுவாராம்! இந்தச் சந்தர்ப்பத்தில் கத்தோலிக்க மத குருவான போப் பிரான்ஸிஸ் பிலிப்பைன்ஸில் நடந்த ஒரு கூட்டத்தில் ‘கத்தோலிக்க மதம் கருத்தடைச் சாதனங்களைத் தடைசெய்திருந்தாலும் முயல்களைப் போல் (நாம் கூறுவதுபோல் கூறுவது என்றால் பன்றிகளைப்போல்) பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுங்கள் என்று அர்த்தம் இல்லை’ என்று கூறியிருப்பதை நினைவுபடுத்தலாம்.

    சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியாவின் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இந்திய அரசு எவ்வளவோ முயன்று இப்போது கிராமத்து ஜனங்கள் கூட குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதில் உள்ள நன்மையை உணர்ந்து ‘நாம் இருவர். நமக்கு இருவர்’ என்ற கணக்கில் குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். இத்தனை காலம் பாடுபட்டு அடைந்த இந்த இலக்கை இந்தச் சாமியார்கள் தங்கள் அறிவுரைகள் மூலம் முறியடித்துவிடுவார்கள் போல் தெரிகிறது.

    இந்துக்கள் இந்தியாவில் பெரும்பான்மையராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்களே. இப்போது இந்தியாவில் அவர்கள்தானே பெரும்பான்மையர். இதற்கு மேல் என்ன பெரும்பான்மை வேண்டும்? இவர்கள் யாரைக் கண்டு தாங்கள் சிறுபான்மை ஆகிவிடுவோம் என்று பயப்படுகிறார்கள்? இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்து மதத்திலிருந்து தோன்றியதாக ஒரு சாமியார் கூறியிருக்கிறார். இது என்ன பிதற்றல்? இந்து மதம்தான் மதங்களிலேயே சிறந்தது என்று வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போகட்டும். இந்து மதத்திலிருந்து மற்ற மதங்கள் பிறந்தன என்று கூறி மற்றவர்களின் கேலிக்கு ஆளாக வேண்டுமா?

    world-population-growth-forecastபத்துக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதால் யாருக்கு நன்மை? நாட்டிற்கா? உலக நாடுகளிலேயே ஜனத்தொகையில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியாவில் இன்னும் ஜனப்பெருக்கமா? தாங்காது இந்தியா. குஜராத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு முன்னாள் குஜராத் முதலமைச்சர் – இன்றைய பிரதமர் – எத்தனை குஜராத் ஏழைகளை வறுமைக் கோட்டிலிருந்து உயர்த்தினார்? எவ்வளவு பொருளாதார மேம்பாடுகள் ஏற்பட்டாலும் உயர்த்தப்பட வேண்டிய ஏழைகள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கின்றனர். இந்தியாவில் இருக்கும் இயற்கை வளங்கள் இப்போது இருக்கும் ஜனத்தொகைக்கே போதவில்லை. இனி ஒவ்வொரு குடும்பமும் பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொண்டால் அதிகரிக்கும் ஜனத்தொகையை எப்படிச் சமாளிப்பது? இப்போதே வெளிநாட்டவரிடம் இந்தியாவின் ஜனத்தொகை 1.2 பில்லியன் என்றால் இவ்வளவு பெரிய ஜனத்தொகையை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஒவொரு குடும்பமும் பத்துப் பிள்ளைகள் பெற்று இந்தியாவின் ஜனத்தொகை இன்னும் பல மடங்கு பெருகினால் உலகத்தாரின் ஏளனத்திற்குத்தான் ஆளாவோம். உலக வங்கி (World Bank), உலகநிதி மையம் (International Monetary Fund) போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்கு நிதி உதவி செய்வதற்குத் தடை போட்டாலும் போடலாம்.

    பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதால் நாட்டிற்கு நன்மை இல்லையென்றால் தனி மனிதனுக்கு நன்மையா? மத்தியதரக் குடும்பங்களில் இரண்டு பிள்ளைகள் பெற்று அவர்களுக்குக் கல்வி புகட்டி வேலை தேடிக் கொடுத்து அவர்களை வாழ்க்கையில் செட்டில் ஆக்குவதற்கே போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மத்தியதரக் குடும்பங்களிலேயே இப்படி என்றால் ஏழைக் குடும்பங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். பத்துக் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் இந்தப் பொறுப்பு ஐந்து மடங்கு ஆகிவிடும். ஒரு குழந்தையை விவசாயம் செய்வதற்கு விட்டுவிட வேண்டுமாம். இப்போது விவசாயத்தில் இருப்பவர்களுக்கே அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் கிடைக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க இன்னும் சிலர் விவசாயிகள் ஆக வேண்டுமா?

    ஒரு குழந்தையை ஐ.ஏ.எஸ். ஆக்க வேண்டுமாம். வீட்டிற்கு ஒரு ஐ.ஏ.எஸ். பதவி வேண்டுமானால் எத்தனை ஐ.ஏ.எஸ். பதவிகளை உருவாக்க வேண்டும். இப்படியே ஐந்து குழந்தைகளுக்கும் வேலை கொடுத்த பிறகு மீதி ஐந்து குழந்தைகளை இந்தச் சாமியார்களிடம் விட்டுவிட வேண்டுமாம். அவர்கள் இவர்களை துறவிகளாகவும் சாமியார்களாகவும் மாற்றுவார்களாம். இப்போதிருக்கும் சாமியார்கள் கூட்டம் போதாதென்று இன்னும் சாமியார்கள் கூட்டத்தை அதிகரிக்கவா? இப்போது உலக அரங்கில் இந்தியாவுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பும் இந்தச் சாமியார் கூட்டங்கள் பெருகினால் போய்விடும்.

    நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களும் பங்கு வகிக்க வேண்டும் என்பது பற்றி இந்தச் சாமியார்கள் என்ன சொல்கிறார்கள்? பத்துப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு வேறு எதற்கு நேரம் இருக்கும்?

    இந்துத்வவாதிகளும் இந்துச் சாமியார்களும் அவர்கள் பாட்டுக்கு என்னென்னவோ உளறிக்கொண்டு போகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க வேண்டியது நாட்டின் நலனுக்கும் எல்லா மக்களின் நலன்களுக்கும் பொறுப்பேற்றிருக்கும் பிரதமரின் கடமை அல்லவா? இதையெல்லாம் கண்டும் காணாததுபோல் இருப்பது எதில் சேர்த்தி? இந்துத்வவாதிகளின் பிரச்சாரங்களும் இந்துச் சாமியார்களின் கேலிக் கூற்றுக்களும் இந்தியாவையே நிலைதடுமாற வைத்துவிடாதா? உலகம் முழுவதும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்க இந்தியா மட்டும் பின்னோக்கிச் செல்வதா? பல நாட்டுத் தலைவர்களையும் ஐ.நா. பொதுச்சபையின் தலைவரையும் (இந்தியா மற்ற நாடுகளோடு செய்யப் போகும் வாணிபம் பற்றிய இந்த மாநாட்டில் இவருக்கு என்ன வேலை என்று தெரியவில்லை) குஜராத்தில் கூட்டி இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகிறேன் என்று சூளுரைத்த மோதியின் முயற்சிகளை இந்தச் சாமியார்களின் உபதேசம் முறியடித்துவிடும் என்பது தெரியவில்லையா? ‘நான் பாட்டுக்கு பொருளாதார வளர்ச்சி, பெருக்கம் (Economic Growth, Development) என்று கூறிக்கொண்டு போகிறேன். இந்துத்வவாதத்தைப் பறைசாற்றுவது உங்கள் பொறுப்பு’ என்று கூறுவதுபோல் இருக்கிறது மோதியின் மௌனம்.

    Picture Credits:
    http://chandigarhenvis.gov.in/beta/EnvisPdfFiles/nl070912.pdf
    http://www.english-online.at/geography/india/india-population-problems.htm

    Share
  • கொலைகாரனுக்கு ஒரு கோவில்

    –நாகேஸ்வரி அண்ணாமலை

    பா.ஜ.க. மத்தியில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து ஆர்.எஸ்.எஸ்., இந்து மஹாசபா போன்ற இந்துத்துவவாதக் கட்சிகள் தங்கள் கொள்கைகளையும் அதன் மூலம் செயல்களையும் மக்களிடையே பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மொகலாய மன்னர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முன்னும் பிரிட்டிஷ் காலனீயவாதிகள் இந்தியாவை ஆள ஆரம்பிப்பதற்கு முன்னும் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த எல்லோரும் இந்துக்களே எனவும், அதனால் இப்போது அவர்கள் தங்கள் தாய் மதத்திற்குத் திரும்ப வேண்டும் என்று சொல்லி அப்பாவி மக்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றுகிறார்கள். குடிமக்கள் எல்லோருக்கும் பிரதம மந்திரியான மோதி இதைக் கண்டுகொள்ளவேயில்லை.

    ஆர்.எஸ்.எஸ். கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் இந்தியக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் இந்துக் கலாச்சாரமாகவும் பாரம்பரியமாகவும் எடுத்துக்கொண்டு அவற்றைக் காப்பதாகக் கூறிக்கொண்டு இளைஞர்கள் மனதை தங்கள் கொள்கைகளின் பக்கம் திருப்ப முயன்று வருகிறார்கள். இதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மோதியின் மௌனம் இவற்றையெல்லாம் அவர் ஆமோதிக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.

    Nathuram Godseஎல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல் இப்போது தேசத்தந்தை காந்திஜியைக் கொன்ற கோட்ஸேக்கு இந்து மஹாசபை மீரட்டில் கோவில் கட்ட முடிவுசெய்திருக்கிறது.

    காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி இந்த ஆண்டோடு நூறு ஆண்டுகள் ஆகின்றன. இதை நினைவுபடுத்தி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளிவந்த தலையங்கத்தின் ஒரு பகுதியைக் கீழே கொடுக்கிறேன்.

    “காந்தி இல்லாமல் இருந்திருந்தாலும் சரி, காந்தி இந்தியாவுக்குத் திரும்பாமல் இருந்திருந்தாலும் சரி இந்தியாவுக்கு எப்படியும் சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று காந்தியின் விமர்சகர்கள் ஒரு கருத்தை வழக்கமாகச் சொல்வார்கள். அது உண்மைதான். காந்தி இல்லாமலும் சுதந்திரம் கிடைத்திருக்கும். ஆனால், இந்த அளவு மாண்புடனும் உலக மக்களின் நன்மதிப்புடனும் அந்தச் சுதந்திரம் ஈட்டப்பட்டிருக்குமா? ஆங்கிலேயர் மீதான வெறுப்பைப் பெரும் நெருப்பாக வளர்த்து சுதந்திரத்தை வென்றெடுக்காமல் அவர்களை நண்பர்களாகவே வழியனுப்பியது இந்தியச் சுதந்திரம். முன்னுதாரணமற்ற நிகழ்வு அது. அது மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு போராட்டங்களுக்கும் அதுவே முன்மாதிரி.”

    Nathuram Godse2சரித்திரம் காணாத ஒரு மாபெரும் ஞானியைக் கொலைசெய்த ஒரு பாதகனுக்கு கோவில் கட்ட முடிவெடுத்திருக்கும் செயல் காந்திஜியைப் போற்றுபவர்கள் எல்லோரையும் வெகுண்டெழச் செய்திருக்கிறது. இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகள் எத்தனையோ பேர் இருக்க காந்திஜிதான் தேசத்தந்தை என்று போற்றப்படுகிறார். அஹிம்ஸை என்ற ஆயுதத்தைக் கொண்டு பிரமாண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வென்ற அவரை உலகமே போற்றுகிறது. இத்தகைய மாமனிதருக்கும் சில எதிரிகள் இருந்தனர். இவர்கள் காந்திஜி பாகிஸ்தானுக்கு – முஸ்லீம்களுக்கு – சாதகமாக நடந்துகொண்டார் என்று நினைத்து அவரை அரசியலிலிருந்தே வெளியேற்ற நினைத்தனர். அவர்களில் ஒருவன்தான் கோட்ஸே. இவனுக்குப் பின் ஒரு இந்துத்துவவாதக் கூட்டமே இருந்தது. காந்திஜியைத் தடுத்து நிறுத்தத் தன்னால் சட்ட முறைகளைக் கையாண்டிருக்க முடியாது என்பதால் அவரைக் கொலைசெய்ததாகத் தன் வாக்குமூலத்தில் கோட்ஸே கூறியிருக்கிறான். ஆனால் இந்திய அரசியல் சட்டத்தைப் பொறுத்தவரை கோட்ஸே ஒரு கொலைகாரன். அதனால்தான் தூக்கிலிடப்பட்டான்.

    வன்முறை இல்லாமல் எந்த சக்தியையும் வெல்லலாம் என்று உலகத்திற்கெல்லாம் நிரூபித்தவர் காந்திஜி. காந்திஜியை உலகுக்குத் தந்த நாடு என்ற முறையில் இந்தியா பெருமை பெற்றிருக்கிறது. உலகின் பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இப்படிப்பட்ட உலகம் போற்றும் மாமனிதரைக் கொன்றவனுக்கு கோவில் கட்டி இந்தியாவிற்கே களங்கம் தேடித் தர சிலர் முயல்கிறார்கள்.

    Nathuram Godse3இந்தியாவை உலக அரங்கில் முதன்மை இடத்தில் வைக்கப் போவதாகப் பறைசாற்றிக்கொள்ளும் பா.ஜ.க. இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்து இந்தியாவுக்கு ஏற்படப் போகும் களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டமா? மத்திய அரசை நடத்தும் பா.ஜ.க.வினர் தங்களுக்கும் கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? மோதி முதல் முதல் பாராளுமன்றத்தில் பிரதமராக நுழைந்து அலுவல்களைத் தொடங்கியபோது காந்திஜியின் சிலையை வணங்கிவிட்டுப் போனார். அமெரிக்காவுக்கு வந்தபோது அமெரிக்க ஜனாதிபதிக்கு காந்திஜி எழுதிய பகவத் கீதை விளக்கப் புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் காந்திஜி சிலையை வணங்கினார். இதெல்லாம் வெறும் நாடகமா? ஒரு பக்கம் காந்திஜியை மதிப்பதாகக் காட்டிக்கொண்டு இன்னொரு பக்கம் காந்திஜியைக் கொன்றவனுக்கு கோவில் கட்டும் முயற்சியை கண்டும் காணாதது போல் இருப்பது நாட்டிலுள்ள அனைவரின் நலன்களையும் காப்பதாகக் கூறிக்கொள்ளும் ஒரு பிரதமருக்கு அழகா? ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களுக்குள்ளேயே இந்தியாவை இந்துத்துவ நாடாக ஆக்க முயல்பவர்களுக்கு முழு ஆதரவு கொடுப்பதும் இந்துத்துவவாதத்தை முழுமையாக எதிர்த்த தேசத் தந்தை காந்திஜியைக் கொன்றவனுக்குக் கோவில் கட்டுவதைத் தடுத்து நிறுத்தாமலும் இருக்கும் மோதியையும் அவரது கூட்டத்தினரையும் உலகம் மன்னிக்காது.

    ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவன், ‘நீங்கள் யாரோடு உணவு உண்ண விரும்புகிறீர்கள்? அப்படி நீங்கள் விரும்புபவர் உயிரோடு இருப்பவரானாலும் சரி, இறந்துவிட்டவரானாலும் சரி’ என்று கேட்ட கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கொஞ்சமும் தயங்காமல், ‘காந்திஜியோடு’ என்று சொன்னார். அவருக்கு காந்திஜி மேல் மிகுந்த மரியாதை உண்டு. அவர் அப்படி மரியாதை செலுத்திய காந்திஜியை கொன்றவனுக்குக் கோவில் எழுப்புபவர்களையும் அதைத் தடுத்து நிறுத்தாமல் தங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறும் பா.ஜ.க. அரசையும் பற்றி என்ன நினைப்பார்?

    Photo courtesy:

    http://timesofindia.indiatimes.com/india/Hindu-Mahasabha-plans-bike-rally-for-Nathuram-Godse/articleshow/45786327.cms
    http://keralasnostalgia.blogspot.com/2012/09/nathuram-godse-before-assassinating-mr.html
    http://www.prmoment.in/1671/modi-appropriates-mahatma-gandhi-and-revives-a-discarded-political-brand.aspx

    Share
  • இருபத்தோராம் நூற்றாண்டு அதிசயம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருபத்தோராம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு அதிசயத்தைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. மொத்த இந்தியாவிலும் குற்றம் புரிந்த ஒன்பது இந்துச் சாமியார்கள் அரசிற்குச் சவாலாக இருந்து தீராத பிரச்சினைகளை உருவாக்கி வருவதாக ஒரு தமிழ்ப் பத்திரிக்கை பட்டியல் கொடுத்திருந்தது. இவர்களில் பலர் பாலியல் குற்றங்கள் புரிந்தவர்கள். இதில் நான் கீழே குறிப்பிடப்போகும் சாமியாரும் அடக்கம். ஆனால் அவருடைய சிஷ்யர்கள் அவர் இறந்த பிறகும் அரசிற்கு இடைஞ்சல் கொடுத்துவருகிறார்கள் என்பது மட்டும் உண்மை.

    இவர் ஒரு பெரிய ஆசிரமம் நடத்திவந்தார். நானூறு ஏக்கர் நிலத்தில் இவரது ஆசிரமம் நடந்துவருகிறது. பல ஏழை மக்கள் அங்கு வாழ்ந்துவருகிறார்கள். அங்கு எல்லோரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். எல்லோரும் சேர்ந்து நிலங்களில் பாடுபடுகிறார்கள். ஆனந்தமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். ஒரு ஆயுர்வேத மருந்தகமும் ஆசிரமத்திற்குள் இருக்கிறது. தினமும் 25 லிட்டர் பால் கொடுக்கும் 750 கறவைப் பசுக்கள் இருக்கின்றன. ஏழை மக்களுக்கு வாழ வழிவகுத்திருக்கும் இந்தச் சாமியாருக்கு ஏராளமான பக்தர்கள். இப்படிச் சில பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன.

    இவர் 2013-ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமாகிறார். ஆனால் அவருடைய சிஷ்யர்களும் பக்தர்களும் அவர் மறுபடியும் உயிர்பெற்று வருவார் என்று நம்பிக்கொண்டு அவருடைய உடலைத் தகனம் செய்யாமல் ஒரு குளிர் பெட்டியில் பத்திரமாக பதப்படுத்தி ஆசிரமத்தின் ஒரு உள் அறையில் வைத்திருக்கிறார்கள். அவருடைய மகன் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வந்து அவருக்கு மகன் என்ற முறையில் ஈமச்சடங்குகள் செய்ய வேண்டும் என்கிறார். ஆனால் அவர் இறக்கவில்லை, எப்படியும் மறுபடி உயிர்பெற்று வருவார் என்று திடமாக நம்பிக்கொண்டிருக்கும் அவருடைய சிஷ்யர்களும் மற்ற பக்தர்களும் இதற்குச் சம்மதிக்கவில்லை. இந்த விஷயம் நீதிமன்றம் வரை கொண்டுசெல்லப்பட்டு பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் பதினைந்து நாட்களுக்குள் இவருடைய உடல் தகனம்செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிட்டது. ஆயினும் நீதிமன்ற ஆணைக்கு ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. இப்போது ஆசிரமத்திற்குள் ஒரு சிலரையே அனுமதிக்கிறார்கள். சாமியார் உயிரோடு இருந்தபோது அவருக்கு வேண்டாதவர்களால் ஆபத்து ஏற்படும் என்பதால் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இப்போதும் அதே பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அதாவது அவருடைய உடலை தகனம் செய்யக் கூடாது என்று அடம்பிடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே பெரிய தகராறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவருடைய ஆசிரமத்தைச் சுற்றிப் பலத்த காவல் இருக்கிறது. இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே அதுபோல் இவருக்கு உயிரோடு இருக்கும்போதும் பாதுகாப்பு, இறந்த பிறகும் பாதுகாப்பு.

    அரசு உயர் அதிகாரிகளில் பலரும் காவல்துறையைச் சேர்ந்தவர்களில் பலரும் இவருடைய பக்தர்கள். இவருடைய ஆசிரமத்திற்கு அடிக்கடி வருபவர்கள். இவர்களுக்கு இப்போது தர்மசங்கடமான நிலை. தாங்கள் கடவுளுக்குச் சமமானவர் என்று நினைத்து மதிக்கப்பட்டவரை உயர்நீதிமன்ற ஆணையின்படி தகனம் செய்வது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதே சமயம் நீதிமன்ற ஆணையை மீறவும் முடியவில்லை. ஆசிரமத்தைச் சுற்றியிருக்கும் சுவர்களுக்கு உள்ளே யூனிபார்ம் அணிந்த காவலர் யாரும் தென்படவில்லை. ஒரு சிலரே ஆசிரமத்திற்குள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ஆசிரமத்திற்கு வெளியே இருக்கும் ஊரில் உள்ள மக்களிடையே அவரது உடலை வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்போரும் அவர் திரும்பி வருவார் என்போரும் ஆக இரு தரப்பினர் இருக்கிறார்கள். அந்த ஊரில் ஒரு சிறிய கடை வைத்திருக்கும் ஒருவர் கடந்த மூன்று வருடங்களாக அவருடைய வியாபாரம் செழித்துவருவதாகவும் அதற்கு அவர் அடிக்கடி ஆசிரமத்திற்குச் சென்று சாமியாரைத் தரிசித்து வந்தது ஒரு காரணம் என்றும் அவர் எப்படியும் உயிர்பெற்று வருவார் என்றும் ஏனெனில் அவருடைய ஆத்மா மிகவும் சுத்தமானது என்றும் வாதிடுகிறார். 81 வயதான ஒரு விவசாயி அவருடைய ஊரில் பலர் சாமியாரின் பக்தர்கள் என்றும் ஆனால் ஒருவர் கூட அவரைப் பார்த்ததில்லை என்றும் கூறுகிறார். முந்தையவர் அவரைத் தான் பார்த்ததாக உறுதியாகக் கூறுகிறார். இப்போது அவர் உயிரோடு இருக்கிறார் என்றால் எழுந்துவந்து எல்லோருக்கும் தரிசனம் கொடுக்க வேண்டியதுதானே என்கிறார் பிந்தையவர். ‘சமாதி’ நிலையில் இருப்பவர் குளிர்சாதனப் பெட்டியில் இருப்பானேன் என்பதும் இவருடைய கேள்வி.

    மற்ற மாநிலங்களிலிருந்து வேலை தேடி வந்திருக்கும் பலருக்கு இவர் வேலைவாய்ப்பும் வாழ்க்கை வசதிகளும் செய்துகொடுத்து அவர்களுடைய ஓட்டுக்களை இவர் வாங்கிக் கொடுத்ததால் சாமியாருக்கு நிறைய அரசியல்வாதிகள் நண்பர்கள். சாமியார் இறந்த பிறகும் அரசியல்வாதிகளும் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இறந்த சாமியாருக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.

    விஞ்ஞான வளர்ச்சியும் சிந்திக்கும் திறனும் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இறந்த ஒரு மனிதர் உயிர்பெற்று வருவார் என்ற நம்பிக்கை மனிதர்களுக்கு இருக்குமானால் சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் சிலுவையில் உயிர்துறந்த இயேசு உயிர்த்தெழுந்தார் என்று அப்போது மக்கள் நம்பினார்கள் என்றால் அதில் வியப்பேதும் இல்லை.

    Share
  • அமெரிக்க-கியூபா உறவு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    141218113913_cuba_640x360_reuters_nocredit

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் – அதாவது 1898-இல் – ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்த கியூபா ஸ்பெயினை எதிர்த்துப் போராடி சுதந்திரம் பெற்றது. அந்த சுதந்திரப் போராட்டத்தின்போது அமெரிக்கா தன் கப்பல் ஒன்றை கியுபாவுக்குப் பக்கத்தில் நிறுத்தியிருந்தது. அந்தக் கப்பல் மூழ்கியபோது அதற்கு ஸ்பெயின்தான் காரணம் என்று கூறி அமெரிக்கா ஸ்பெயின் மீது போர்தொடுத்தது. (ஸ்பெயின் மீது போர்தொடுப்பதற்காக அமெரிக்காவே தன் கப்பலை மூழ்கடித்ததாகவும் கூறப்படுகிறது.) அ,மெரிக்க-ஸ்பெயின் போர் முடிந்த பிறகு கியூபா அமெரிக்காவின் அதிகாரத்தின் கீழ் வந்தது. 1902-இல் கியூபாவுக்கு அமெரிக்கா சுதந்திரம் கொடுத்தாலும் தனக்கு வேண்டியவர்களை அரசில் அமர்த்தி அவர்களில் ஒருவரைச் சர்வாதிகாரியாக்கித் தன் நலன்களுக்கு ஏற்றவாறு ஆட்சி புரியுமாறு செய்துகொண்டது. அமெரிக்கப் பெரும் பணக்காரர்கள், நடிக, நடிகைகள் கியூபாவில் உல்லாசப் பொழுது போக்கினர். கியூபாவின் தலைநகரான ஹவானாவில் அமெரிக்க சொகுசுக் கார்கள் உலா வந்தன. சுமார் அறுபது ஆண்டுகள் அமெரிக்காவுக்குச் சாதகமாக நடந்துகொண்டு தங்கள் பைகளையும் நிரப்பிக்கொண்ட தலைவர்களை ஒழித்துக் கியூபாவின் மக்களுக்கு அந்நாட்டின் வளம் போய்ச் சேர வேண்டும் என்று ஹவானா பல்கலைக்கழகச் சட்டத்துறையைச் சேர்ந்த மாணவர்கள் போராட ஆரம்பித்தனர். இவர்களில் தலையானவர் ஃபிடல் கேஸ்ட்ரோ. அவருக்குத் துணை நின்றவர்கள் அவருடைய தம்பி ராவுல் கேஸ்ட்ரோவும் இன்னும் சில நண்பர்களும்.

    இவர்கள் அப்போது கியூபாவில் ஆதிக்கத்தில் இருந்த சர்வாதிகாரியால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு அமெரிக்காவும் மிகவும் உதவியது. ஆயினும் இறுதியில் 1959-இல் இவர்கள் கியூபாவைச் சர்வாதிகாரியிடமிருந்து மீட்டுத் தங்கள் ஆட்சியை அமைத்தனர். அப்போது கியூபாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் லட்சக்கணக்கானவர்கள் தஞ்சம் புகுந்தனர். இவர்களுக்கு தங்கள் நாடான கியூபாவிற்குத் திரும்பிச் சென்று கேஸ்ட்ரோவின் ஆட்சியைக் கவிழ்த்து தங்கள் ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஐஸன்ஹோவர் இவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க அனுமதி கொடுத்தார். 1960-இல் ஆட்சிக்கு வந்த கென்னடியின் காலத்தில் இவர்கள் எப்படியாவது அமெரிக்க உதவியுடன் கியூபாவைப் பிடித்துவிட வேண்டும் என்று ரகசியமாகத் திட்டமிட்டு கியூபாவின் மீது படையெடுத்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு 1961-இல் அமெரிக்கா கியூபாவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டது. கியூபா மீது வணிகத் தடைகளைப் போட்டது. (இந்த உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி தன் உதவியாளர் ஒருவரிடம் தனக்கு 12,000 கியூபா சுருட்டுகள் வாங்கிவைக்கும்படி கேட்டுக்கொண்டாராம்.) ஐ.நா. சபையில் எப்போதும் அமெரிக்கா கியூபாவுக்கு எதிராக ஓட்டளித்தது.

    கியூபாவை விட்டு வந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் அவ்வப்போது கேஸ்ட்ரோவின் ஆட்சியைக் கவிழ்க்க நினைத்த போதெல்லாம் தோல்வியையே தழுவினர். கேஸ்ட்ரோ கியூபாவின் அரசுக்கு சோஷலிஸக் குடியரசு என்று பெயர் சூட்டினார். ரஷ்யாவைப்போல் கியூபாவும் கம்யூனிஸ நாடானது. தனக்குப் பக்கத்திலேயே – அமெரிக்கத் தென் கோடியிலிருந்து கியூபா 90 மைல் தூரம் மட்டுமே – கம்யூனிஸ நாடு ஒன்று இருப்பதை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியுமா என்ன? கியூபாவின் மேல் பல பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்தது. கேஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பிறகு அங்கிருந்து அமெரிக்காவுக்கு அடைக்கலம் தேடிவந்தவர்கள் எப்படியாவது கேஸ்ட்ரோவை அகற்றிவிட்டுத் தாங்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று முயன்றனர். 600 தடவைகளுக்கு மேல் அமெரிக்கா கேஸ்ட்ரோவைக் கொலைசெய்ய முயன்றது. ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. 1990 வரை கேஸ்ட்ரோ சோவியத் யூனியனின் உதவியுடன் பல இன்னல்களைச் சமாளித்து வந்தார். சோவியத் யூனியன் விழுந்ததும் கியூபாவின் பொருளாதாரம் இன்னும் நலிவுற்றது. இருப்பினும் கேஸ்ட்ரோ எப்படியோ கியூபாவை கம்யூனிஸ நாடாகத் தொடர்ந்து நடத்திவந்தார்.

    2006-இல் நோய்வாய்ப்பட்ட கேஸ்ட்ரோ கியூபாவின் தலைவர் பதவியிலிருந்து இறங்கி அவருடைய தம்பி ராவுல் கேஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார். இவர் அரசில் சில மாற்றங்கள் கொண்டுவந்தாலும் அமெரிக்கா கியூபாவின் மீதுள்ள தன் பிடியைத் தளர்த்தவில்லை. இப்போது ஒரு வருடமாக கனடாவைச் சேர்ந்த ஒருவரின் முயற்சியாலும் தலையீட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையே ரகசியமாக நடந்த பேச்சுவார்த்தைகளால் அமெரிக்க அதிபர் ஒபாமா திடீரென்று அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே உறவு ஏற்படும் என்றும் சீக்கிரமே கியூபாவில் அமெரிக்கத் தூதரகம் அமையும் என்றும் கூறியிருக்கிறார். அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே ஏற்படப் போகும் புதிய உறவுக்குப் போப் ஃபிரான்ஸிஸும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. போப் பிரான்ஸிஸ் நாடுகளுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் நல்லிணக்கம் ஏற்படத் தன்னால் முயன்ற அளவு முயற்சி செய்கிறார். அதிலும் அவர் தென்அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவராதலால் அருகிலுள்ள கியூபா மீது அதிக அக்கறை செலுத்தியதாகத் தெரிகிறது. கியூபாவிலும் நிறைய கத்தோலிக்கர்கள் இருக்கிறார்கள். கத்தோலிக்கர்களுக்குத் தலைவரான போப் கியூபாவிலுள்ள கத்தோலிக்கர்களின் நலன்களுக்காவும் முயன்றிருக்கலாம்.

    ஒபாமாவின் சாதனைகள் என்று எதுவும் இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிவரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலருக்கும், கேஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பிறகு கியூபாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கும் அமெரிக்கா கியூபாவுடன் தூதரக உறவு வைத்துக்கொள்வதில் கிஞ்சித்தும் விருப்பம் இல்லை. முந்தையவர்கள் அமெரிக்க-கியூபா உறவில் இது ஒரு முக்கிய நிகழ்வு என்பதால் அதற்குரிய பெருமை ஒபாமாவைச் சேரக் கூடாது என்று நினைக்கிறார்கள். பிந்தையவர்களோ கியூபாவில் புரட்சியைக் கொண்டுவந்து தாங்கள் கியூபாவை விட்டு வெளியேறியதற்குக் காரணமாக இருந்த கேஸ்ட்ரோவை இனி தாங்கள் பழிவாங்க முடியாது என்று நினைக்கிறார்கள். மேலும் கம்யூனிஸ நாடான கியூபாவை அமெரிக்கா ஏற்றுக்கொண்டு அதனுடன் தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்ளப் போவதால் இதுவரை அங்கு நடந்துவந்த கம்யூனிஸ அரசை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுவிட்டதாக அர்த்தம் என்றும் இனி அங்கு ஜனநாயகம் எப்போதுமே வரப் போவதில்லை என்றும் கூறுகிறார்கள்.

    ஜனநாயக அரசு கியூபாவில் ஏற்படப் போகிறதோ என்னவோ அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரம் அங்கு பரவும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. அமெரிக்கக் கம்பெனிகள் அங்கு போய்ப் பணம் பண்ணப் பார்ப்பார்கள். அமெரிக்கச் சாமான்கள் அங்கு நிறையவே கிடைக்கும். இதற்காகவே ஏங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு அந்த ஆசை நிறைவேறலாம். ஆனால் இப்போது கியூபாவில் எல்லோருக்கும் கல்வி, மருத்துவ வசதிகள் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் கிடைத்துவருகின்றன. கியூபாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அமெரிக்க மாணவர்களே பயில்கிறார்கள். கியூபாவில் எல்லோருக்கும் உள்ள சமத்துவத்திற்கும் சம உரிமைகளுக்கும் பங்கம் வரலாம். ஒபாமாவின் இந்த முடிவை எதிர்ப்பவர்கள் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அமெரிக்காவின் தாக்கம் கியூபாவில் நிறைய இருக்கும் என்றாலும் கியூபா தன்னுடைய தனித்தன்மையை இழக்காமல் இருந்தால் சரி.

    Share
  • அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கை

    நாகேஸ்வரி அண்ணாமலை.

     

    நான் கிறிஸ்தவப் பள்ளியில் படித்தேன். எங்கள் பள்ளியில் வாரம் ஒரு முறை கிறிஸ்தவ மாணவிகளுக்கு கிறிஸ்தவ வேதபாட வகுப்புகள் (Bible Study) உண்டு. கிறிஸ்தவர் அல்லாத மாணவிகளுக்கு நீதி வகுப்புகள் (moral classes) உண்டு. ஆனால் அங்கேயும் பைபிளிலுள்ள கதைகளைத்தான் சொல்வார்கள். கல்லூரிப் படிப்பும் கிறிஸ்தவ நிறுவனத்தில்தான். அந்தக் கல்லூரியை நடத்திய கிறிஸ்தவக் கன்னிமார்கள் (Christian nuns) அடிக்கடி கிறிஸ்தவ மதத்தில் உள்ள நீதி போதனைகளை எடுத்துச் சொல்வார்கள். அதனால் எனக்குக் கிறிஸ்தவ மதம் பற்றி ஓரளவு தெரியும். தங்கள் மதத்தைப் பரப்புவதில் சில கிறிஸ்தவர்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்றும் நன்றாகத் தெரியும்.

    pledge2நேற்று காலையில் ‘வாக்’ போகும்போது என்னை ஒரு அமெரிக்கப் பெண் நிறுத்தினார். ‘உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?’ என்று என்னிடம் கேட்டார். நான் ‘இல்லை’ என்றேன். ‘இதைப் படியுங்கள்’ என்று கூறி என்னிடம் ஒரு சிறு துண்டு வெளியீட்டை நீட்டினார். நான் தயங்காமல் அதைப் பெற்றுக்கொண்டேன். அதோடு ‘அதைக் கண்டிப்பாகப் படிக்கிறேன்’ என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டும் வந்தேன். இந்த மாதிரியான அனுபவங்கள் அமெரிக்காவில் எனக்கு முன்பே பல முறை ஏற்பட்டிருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப விரும்பும் பல பெண்கள் (எல்லாம் பெண்கள்தான்; அது ஏனோ தெரியவில்லை என்னை ஆண்கள் யாரும் அணுகியதில்லை) என்னைச் சாலையில் சந்தித்தால் துண்டுச் சீட்டுகளைக் கொடுத்துப் படிக்குமாறு கூறுவார்கள். ஒரு முறை இரண்டு பெண்கள் வீட்டிற்கு வந்து கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எடுத்துச் சொல்வதாகக் கூறினார்கள். அது வேண்டாம் என்று நான் பணிவாக மறுத்துவிட்டேன். நேற்றுக் கிடைத்த துண்டுச் சீட்டிலும் தேவைப்பட்டால் வீட்டிற்கு வந்து கிறிஸ்தவ மதம் பற்றிப் பேசுவதாகக் கடைசியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கிறிஸ்தவ மதம் பற்றிய புத்தகங்களையும் அனுப்புவதாகவும் வேண்டுமானால் ஒரு முகவரிக்கு எழுதும்படியும் கூறி அதற்குரிய முகவரியையும் கொடுத்திருந்தார்கள்.

    சாதாரண பிரச்சாரகர்கள் மூலம் மதத்தைப் பரப்புவதோடு அமெரிக்காவில் ஆர்கன்ஸாஸ், மிஸிஸிபி, வடக்கு கரோலினா, தென் கரோலினா, டென்னஸி, டெக்ஸாஸ், மேரிலாண்ட் ஆகிய ஏழு மாநிலங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தங்கள் அரசில் வேலை கொடுப்பதில்லை என்ற கொள்கையை இப்போதும் அவர்களுடைய அரசியல் சாசனத்தில் வைத்திருக்கின்றனவாம். ஐம்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் மேரிலாண்ட் மாநிலத்தில் அரசில் வேலைபார்த்த ஒருவர் தனக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதாகக் கூற மறுத்ததால் அவரை நோட்டரியாக நியமிக்க மறுத்துவிட்டதாம். இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்காடினார். இறுதியில் உச்ச நீதிமன்றம் அவருக்குச் சாதகமாக அளித்த தீர்ப்பில் பொதுத்துறையில் வேலைபார்ப்பதற்கு மாநிலங்கள் மத சம்பந்தமான கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று கூறியது. ஆனால் அதற்குப் பிறகு பல வருடங்கள் ஆன பிறகும் அந்த ஷரத்து மேரிலாண்ட் சாசனத்தில் இருக்கிறதாம்.

    மிஸிஸிபி மாநில அரசியல் சாசனத்தில் ‘எல்லோருக்கும் மேலாக இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மாநிலத்தில் பொதுத்துறையில் வேலைபார்க்க முடியாது’ என்று இருக்கிறதாம். வட கரோலினாவின் சாசனத்தில் ‘கீழே குறிப்பிடப்பட்டவர்கள் இம்மாநிலப் பொதுத்துறையில் வேலைபார்க்கும் வாய்ப்பை இழக்கிறார்கள். முதலாவதாக, கடவுள் ஒருவர் இருப்பதை மறுப்பவர்கள்’ என்று கூறப்பட்டிருக்கிறதாம். பென்சில்வேனியா மாநில அரசியல் சாசனம் இதையே வேறு விதமாகக் கூறுகிறது. அது ‘கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கும் சொர்க்கம், நரகம் என்பவற்றில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும் பொதுத்துறை வேலை மறுக்கப்படமாட்டாது’ என்று கூறுகிறதாம்.

    அமெரிக்க அரசியல் சாசனத்தின்படி மத்திய அரசில் வேலைபார்ப்பதற்கு ஒரு போதும் மத சம்பந்தப்பட்ட கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று இருக்கிறதாம். இருப்பினும் மேலே குறிப்பிட்ட ஏழு மாநிலங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்குத்தான் வேலை கொடுப்பது என்ற ஷரத்தை இன்னும் வைத்திருக்கின்றன. ‘இந்த மாதிரி ஷரத்துக்கள் அமெரிக்க அரசியல் சாசனத்துக்குப் புறம்பானவை, இவற்றை அந்த மாநிலங்கள் அமுல்நடத்த முடியாது என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகச் சட்டப் பிரிவில் வேலைபார்க்கும் பேராசிரியர் ஒருவர். ஆனாலும், எந்த அரசியல்வாதி இவற்றையெல்லாம் நீக்கப் போகிறோம் என்று துணிந்து வாக்களித்து வாக்காளர்களிடம் ஆதரவு கேட்கப் போகிறார் என்று கேட்கிறார்.

    god-bless-americaபொதுவாக, கடவுள் நம்பிக்கை வேண்டும் என்ற நிபந்தனை பற்றிய சர்ச்சை எப்போதாவதுதான் வெளியே கொண்டுவரப்படுமாம். 1992-இல் தென்கரோலினாவில் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியர் ஒருவர் நாத்திகர் என்பதால் அவருக்கு நோட்டரி வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டதாம். அவர் வழக்குத் தொடர்ந்து தென்கரோலினா மாநில உயர்நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளித்ததாம். 2009-இல் கூட நாத்திகர் ஒருவர் வட கரோலினாவில் ஆஷ்வில் என்ற ஊரின் நகராட்சியில் உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சிலர் அந்த மாநிலத்திலுள்ள கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இருக்கும் நிபந்தனையைப் பற்றிக் கூறி அவருக்குப் பதவி கிடைக்காமல் செய்ய முயன்றார்களாம். ஆனால் பின்னால் அதை விட்டுவிட்டார்களாம்.

    அமெரிக்காவில் கடந்த ஏப்ரலில் நடந்த ஒரு வாக்கெடுப்பில் 53 சதவிகித அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரைத் தாங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறினார்களாம். போதைப்பொருள் உபயோகித்திருந்தவர்களையோ மனைவிக்குத் துரோகம் இழைத்திருந்தவர்களையோ கூட (இதுவரை பெண்கள் யாரும் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்ததில்லை) ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுப்பார்கள்; ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அமெரிக்கர்கள் விரும்புவதில்லை என்று அந்த வாக்கெடுப்பில் தெரிய வந்ததாம் (திருமணம் ஆகாமலே யாரோடும் சேர்ந்து வாழலாம் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்தபோதும் திருமணம் ஆன பிறகு மனைவிக்கோ கணவனுக்கோ துரோகம் இழைப்பதை அமெரிக்கச் சமூகம் அனுமதிப்பதில்லை).

    IN-GOD-WE-TRUSTஇந்த ஏழு மாநிலங்களில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இருக்கும் இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று சில மதச்சார்பற்ற கழகங்கள் முயன்று வருகின்றன. பல மதத்தினர் வாழும் அமெரிக்க சமூகத்தில் நாத்திகர்களுக்கும் சம உரிமைகள் வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த வாதம் நியாயமானதுதான் என்று ஒப்புக்கொள்ளும் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியல் ரீதியாக அவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இவற்றை நீக்குவதற்குரிய முயற்சிகளை எடுக்கத் தயங்குகிறார்கள். மேரிலாண்ட் செனட்டர் ஒருவர், மதப் பன்மையில் (pluralism) தனக்கு விருப்பம் இருந்தாலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இருக்கும் இந்தத் தடையை நீக்கும்படி மதச்சார்பற்றவர்கள் விடுக்கும் இந்தக் கோரிக்கை நிறைவேறினால் மேரிலாண்ட் மக்களுக்கு கிறிஸ்தவ மதத்தின்மேல் நம்பிக்கை இல்லை என்றாகிவிடும், அது அவர்களைப் புண்படுத்துவதாகும் என்கிறார்.

    பல விஞ்ஞான முன்னேற்றங்கள் நடந்துவரும் அமெரிக்காவிலும் கடவுள் நம்பிக்கைக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் கடவுளை மறுக்கும் கம்யுனிச நாடாக சோவியத் யூனியன் உருவாகிக்கொண்டிருந்தபோது தன்னை அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள அமெரிக்கா தன்னுடைய இருபத்து ஐந்து சென்ட் நாணயத்தில் ‘கடவுளை நம்புகிறோம்’ (In God we trust) என்று எழுதிக்கொண்டதாம். அமெரிக்க அரசியல் சாசனப்படி அரசுக்கு எந்த மதமும் இல்லை. எனவே எந்த மதக் கடவுள் என்று குறிப்பாகக் குறிப்பிடாமல் கடவுள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எந்த மதமாக இருந்தாலும் சரி, அமெரிக்கர்களுக்கு மதமும் கடவுளும் வேண்டும் என்பது புலனாகிறது.

    Share
  • அமெரிக்கக் கருப்பர்களுக்குச் சமஉரிமைகள் எப்போது?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    news

    கொலம்பஸ் ‘புது உலகத்தைக்’ (New World) கண்டுபிடித்த பிறகு நிறைய ஐரோப்பியர்கள் அமெரிக்கா கண்டம் முழுவதிலும் குடியேறினர். அங்கு ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த பல பழங்குடி மக்களைக் கொன்று குவித்தனர். பெரிய நிலப்பரப்புடைய கண்டத்தில் உழைப்பதற்கு ஆள் தேவைப்பட்டது. ஆப்பிரிக்காவிலிருந்து அப்பாவி மக்களை அவர்கள் சம்மதமில்லாமலேயே புது உலகத்திற்குச் சிறைப்பிடித்து அழைத்து வந்தனர். அவர்களுக்குப் பழக்கமே இல்லாத புது இடத்தில் புது சீதோஷ்ண நிலையில் அவர்களின் உழைப்பை உறிஞ்சினர். வெள்ளை அமெரிக்கர்கள் அவர்களை மனிதர்கள் போல் நடத்தவில்லை. தங்களுடைய சொத்துக்களான மாடுகள், குதிரைகள் போல் நடத்தினர். குடும்பங்களைப் பிரித்தனர். தாய் கதறக் கதற குழந்தைகளைத் தாயிடமிருந்து பிரித்தனர். பெண்களைத் தங்கள் இச்சைக்கு உள்ளாக்கினர். ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக 1619-லிருந்து கொண்டுவரப்பட்டதிலிருந்து தொடர்ந்த இந்த அநியாயம் லிங்கன் அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவரை தொடர்ந்தது.

    அதன் பிறகும் அவர்களை நிம்மதியாக வாழவிட்டார்களா? பல கருப்பர்கள் வெள்ளையர்களால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அவர்களைப் பயமுறுத்திவைப்பதற்காக அவர்களைத் தூக்கில் தொங்கவிட்டனர்; உயிரோடு எரித்தனர். அவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை. வெள்ளையர்களுக்குச் சமமான குடிமையுரிமைகள் இல்லை. இவற்றைப் பெறுவதற்கு அவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை கிடைத்த பிறகு நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. குடிமையுரிமையும் ஓட்டுரிமையும் கிடைத்தாலும் அவர்கள் இன்னும் இரண்டாம்தரக் குடிமக்கள் போல்தான் நடத்தப்படுகிறார்கள் என்பது வெள்ளை இனத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் கருப்பின மக்களை எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல் சுட்டுக் கொல்வதிலும் அந்தக் குற்றங்களுக்கு அவர்களை விசாரணைக்கு உள்ளாக்க வேண்டிய ஜூரர்கள் அவர்கள் விசாரணைக்கு உட்பட வேண்டியவர்கள் இல்லை என்று தீர்ப்பு வழங்குவதிலும் புலனாகிறது.

    news4கடந்த பத்து ஆண்டுகளில் நியுயார்க் நகரில் மட்டும் குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு கருப்பர்கள் காவல்துறையைச் சேர்ந்த வெள்ளை அதிகாரிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் இந்த வருடம் ஜூலையில் நியூயார்க்கில் நடந்த பல வெள்ளை இனக் காவல்துறை அதிகாரிகளால் அமுக்கப்பட்டு கருப்பர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும், ஆகஸ்டில் மிஸௌரி மாநில ஃபெர்குஸன் என்னும் ஊரில் நடந்த வெள்ளை இனக் காவல் அதிகாரியால் அநியாயமாகச் சுடப்பட்டு இறந்த சம்பவமும் சிறு தவறு செய்த கருப்பின மக்களுக்கு வெள்ளைக் காவல் அதிகாரிகளால் எப்படிப்பட்ட ஆபத்து காத்திருக்கிறது என்பதையும் அவர்கள் எவ்வளவு எளிதாக, சட்டத்தை மதித்து நடக்கும் அமெரிக்காவில் சட்டத்தின் பிடியிலிருந்து சட்டத்தைக் காப்பவர்களின் உதவியாலேயே தப்பித்துவிடுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.

    சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் என்று நிரூபிக்கும் வகையில் சமூகத்தின் பெரிய புள்ளிகளைக் கூடத் தண்டிக்கும் அமெரிக்கக் காவல்துறையும் நீதிமன்றமும் வெள்ளை-கருப்பின மக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெள்ளை இனக் காவல்துறை அதிகாரிகளுக்குச் சாதகமாகவும் கருப்பின மக்களுக்கு நியாயமில்லாமலும் நடந்துகொள்கின்றன.

    ஃபெர்குஸனில் ஒரு கடையில் பதினெட்டு வயதுள்ள ஒரு கருப்பின இளைஞன் – அவன் பெயர் மைக்கேல் பிரௌன் – ஒருnews2 சாக்கலேட்டை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்காமல் போயிருக்கிறான். கடைக்காரர் அவனை நிறுத்தியும் பேசாமல் தொடர்ந்து வெளியே சென்றிருக்கிறான். கடைக்காரர் காவல்துறையைக் கூப்பிட்டிருக்கிறார். துறை கொடுத்த தகவலின் பேரில் அவ்வழியே காரில் சென்ற காவலர் சாலையின் நடுவே நடந்துகொண்டிருந்த பிரௌனோடு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். பிரௌன் தன்னைத் தாக்க வந்ததாகவும் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பிரௌனைச் சுட்டதாகவும் காவல் அதிகாரி வில்சன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் புரிந்த குற்றம் விசாரணைக்கு உரியதா என்று முடிவுசெய்ய ஒரு கிராண்ட் ஜூரியை (Grand Jury) அமெரிக்காவில் முதலில் நியமிக்கிறார்கள். வில்சன் பற்றிய வழக்கில் பன்னிரெண்டு ஜூரர்கள் – ஒன்பது பேர் வெள்ளையர்கள், மூன்று பேர் கருப்பர்கள் – வில்சன் மீது விசாரணை நடத்துமளவிற்கு அவர் குற்றம் புரியவில்லை என்று தீர்ப்புக் கொடுத்தார்கள். பகலில் முடிவான இந்தத் தீர்ப்பை, கலவரங்கள் வெடிக்கலாம் என்பதால், இரவு எட்டு மணிக்குத்தான் சட்ட அதிகாரி அறிவித்தார். அப்படியும் கலவரங்கள் வெடித்தன. கடைகள் சூறையாடப்பட்டன. கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.

    ஜூரி விசாரணையில் வில்சன் கூறியதை ஜூரிகள் அப்படியே எடுத்துக்கொண்டனர். பிராசிக்கூட்டரின் தந்தை ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தவர். அவர் வேலையில் சுடப்பட்டு இறந்ததால் அதன் தாக்கம் இந்த வழக்கில் அவருக்கு இருக்கலாம் என்பதால் அவரை இந்த வழக்கிலிருந்து விலகிவிடுமாறு பிரௌனின் உறவினர்கள் கேட்டுக்கொண்டாலும், அவர் அப்படிச் செய்யவில்லை. குற்றம் காணும் பொறுப்பை ஜூரர்களிடம் விட்டுவிட்டார். நேரில் கண்ட சாட்சிகள் சொன்னவற்றில் வில்சன் சொன்னவற்றுக்கு ஏற்றவாறு இருந்ததை எடுத்துக்கொண்டு அதற்கு நேர்மாறானவற்றை ஜூரர்கள் ஒதுக்கிவிட்டார்களாம். வில்சன் கைகளைத் தூக்கிகொண்டு சரண் அடையப்போன பிரௌனைச் சுட்டிருக்கக் கூடாது என்று ஒரு பரவலான அபிப்பிராயம் இருக்கிறது. டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ‘நான் என் கைகளைத் தூக்கியிருக்கிறேன். என்னைச் சுட்டுவிடாதே’ என்று வாசகங்கள் எழுதுகிறார்கள். நாடு முழுவதும் கிராண்ட் ஜூரியின் முடிவை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கின்றன.

    நியு யார்க் நகரில் எரிக் கார்னர் என்னும் ஒரு கருப்பர் இறப்பதற்குக் காரணமாக இருந்த ஒரு வெள்ளை இனக் காவல்துறை அதிகாரியும் ஜூரிகளால் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதை எதிர்த்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் பதினெட்டு வயதை அடைந்தவர்களுக்கு அவர்களின் வயதுச் சான்றைப் பார்த்துவிட்டுத்தான் சிகரெட் விற்க வேண்டும். இந்த விதியை மீறி ஒரு கடைக்கு முன்னால் சில்லறையாக சிகரெட் விற்றுக்கொண்டிருந்த கார்னரை காவல்துறையைச் சேர்ந்த பலர் ஒன்று சேர்ந்து தாக்கியிருக்கிறார்கள். அதில் ஒருவர் கார்னரின் கழுத்தில் கைகளைப் போட்டு முறுக்கியிருக்கிறார். பலர் தாக்கியதால் கார்னர் கீழே விழுந்திருக்கிறார். அப்படியும் அவர்கள் தொடர்ந்து அவரைத் தாக்கியிருக்கிறார்கள். அவர் கழுத்தில் கைகளைப் போட்டு அவர் இறப்பிற்குக் காரணமாக இருந்த அதிகாரி, விசாரிக்கும் அளவிற்குத் தவறு செய்யவில்லை என்று ஜூரி முடிவுசெய்திருக்கிறது.

    இன்னொரு சம்பவத்தில் பன்னிரண்டு வயது கருப்பினப் பையன் ஒரு காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். பையன் தன்னுடைய கையில் விளையாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தானாம். அதை பார்த்த காவலர் அது நிஜத் துப்பாக்கி என்று நினைத்துவிட்டதாகவும் அவன் தன்னைச் சுட்டுவிடலாம் என்று நினைத்து அவனைச் சுட்டதாகவும் கூறியிருக்கிறார்.

    தான் பதினைந்து வயதாக இருந்தபோது வெள்ளை இன காவலர்கள் தான் செய்த ஒரு சிறு தவறுக்கு எப்படி மிருகத்தனமாக தன்னை நடத்தினார்கள் என்பதையும் அதன் பிறகு வளர்ந்து பெரியவனானதும் தான் காவல்துறையில் சேர்ந்தது பற்றியும் விவரித்து ஒரு கருப்பர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். காவல்துறையில் சேர்ந்த பிறகு காவல்துறையினர் எப்படி மிருகத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்பது அவருக்கு நன்றாகப் புரிந்ததாம். அவருடைய சக வெள்ளை அதிகாரி ஒருவர் ‘யாராவது ஒரு வெள்ளையர் துப்பாக்கியுடன் இருப்பதைப் பார்த்தால் என்னுடைய பாதுகாப்போடு அவருடைய பாதுகாப்பையும் மனதில் கொண்டு செயல்படுவேன். அதே சமயம் ஒரு கருப்பர் துப்பாக்கியோடு வந்தால் என்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளுவது என்பதைத்தான் நினைப்பேன்’ என்றாராம். இப்போது புரிகிறது ஏன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்படுபவர்கள் எல்லாம் கருப்பர்கள் என்பது. சிறு சந்தேகம் வந்தாலும் உடனேயே கருப்பர்களைச் சுட்டுத் தள்ளுகிறார்கள் வெள்ளை இன காவல்துறை அதிகாரிகள்.

    எல்லாச் சம்பவங்களிலும் சுடப்பட்டவர்கள் வெள்ளையர்களாக இருந்தால் இம்மாதிரி நடந்திருக்காது. என்று கூறுகிறார்கள். வெள்ளை இன இளைஞர்கள் காவலர்களினால் சுட்டுக் கொல்லப்படுவதைவிட இருபத்தியொரு மடங்கு அதிகமாகக் கருப்பின இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்களாம். பிரௌன் விஷயத்திலாவது சாட்சியங்கள் சொல்வதில் முரண்பாடு இருக்கிறது. ஆனால் கார்னரின் விஷயத்தில் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னுடைய செல் போனில் எடுத்த போட்டோக்களில் காவலர்கள் கார்னரைக் கழுத்தை வளைத்துக் கீழே தள்ளி மூச்சுத் திணற வைத்த விதம் பதிவாகியிருக்கிறது. அப்படியும் காவல்துறை அதிகாரி மீது விசாரணை தேவையில்லை என்று ஜூரி முடிவுசெய்திருக்கிறது.

    வெள்ளை அமெரிக்கர்களுக்கும் கருப்பு அமெரிக்கர்களுக்கும் இடையே செல்வத்தில் உள்ள இடைவெளி, படிப்பறிவில் உள்ள இடைவெளி, வேலைவாய்ப்பில் உள்ள இடைவெளி ஆகியவை மறைந்தாலொழிய கருப்பு அமெரிக்கர்கள் வெள்ளை அமெரிக்கர்களுக்கு சமமாக நடத்தப்படும் வாய்ப்பு ஏற்படும் சாத்தியம் இல்லை என்கிறார்கள் பத்திரிக்கையில் பத்தி எழுதுபவர்கள். ஜனாதிபதி ஒபாமா ‘அமெரிக்காவில் சட்டத்திற்கு முன் யாராவது சமமாக நடத்தப்படவில்லை என்றால் அது ஒரு நாட்டின் பிரச்சினை. ஜனாதிபதி என்ற முறையில் அதைச் சரிசெய்வது என் கடமை’ என்று கூறியிருக்கிறார். காவலர்களுக்குப் புதிய முறையில் பயிற்சி அளிக்க வேண்டும், அவர்கள் உடையிலேயே காமராக்களைப் பொருத்த வேண்டும் போன்ற யோசனைகளை ஒபாமா கூறியிருக்கிறார். இதற்கு மேல் அவர் என்ன செய்யப் போகிறார், அவரைச் செய்யவிடுவார்களா, என்றாவது ஒரு நாள் அமெரிக்கக் கருப்பர்களுக்கு வெள்ளை அமெரிக்களுக்குச் சமமான உரிமைகள் தரப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    படம் உதவி:
    http://www.desertsun.com/story/news/2014/11/18/data-blacks-likely-arrested/19257947/
    http://www.nydailynews.com/new-york/eric-garner-grand-jury-evidence-public-thursday-article-1.2033065

    Share
  • ஒரு அமெரிக்கக் குழந்தையின் சோகக் கதை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவின் நியுயார்க் நகர் மருத்துவமனை ஒன்றில் போன வாரம் இரண்டு வயது குழந்தை ஒன்று இறந்துவிட்டது. இந்தக் குழந்தை போன வாரம்தான் ‘இறுதியாக’ இறந்தாலும் அதற்கு ஒரு வாரம் முன்பே அக்குழந்தையின் மூளை செயலற்றுப் போய் அது இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர் . குழந்தை இறந்த பின்பு தாய்க்கும் தந்தைக்கும் இடையே நடந்த போராட்டத்தால் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தின் ஆணைப்படி அந்தக் குழந்தையை செயற்கைக் கருவிகள் மூலம் உயிரோடு வைத்திருந்தனர். அந்தக் குழந்தையின் கதை ஒரு சோகக் கதை.

    அக்குழந்தையின் பெயர் தையா ஸ்ப்ருயில்-ஸ்மித் (Thaiya Spruill-Smith). இக்குழந்தைக்கு சாதாரணமாக மற்றக் குழந்தைகளுக்கு அவ்வளவாகப் பிடிக்காத ப்ரோக்கோலி (broccoli) என்ற காய்கறி மிகவும் பிடிக்கும். மிக்கி மௌஸின் ஜோடியான மின்னி மௌஸைப் (Minnie mouse) பிடிக்கும். ‘ஸ்பேஸ் ஜேம்’ (Space Jam) என்ற சினிமாப் படத்தைப் பார்க்கப் பிடிக்கும். மாற்றாந் தகப்பனால் முரட்டுத்தனமாக உலுக்கப்பட்டு கட்டிலில் தூக்கி எறியப்பட்டதால் மூளையிலும் மற்ற இடங்களிலும் காயமுற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இறந்தாள். தாய்க்கும் தகப்பனுக்கும் இடையே முற்றியிருந்த பிரச்சினையால் இக்குழந்தையின் பிரேத பரிசோதனை, நல்லடக்கம் எல்லாம் பிரச்சினை தீர்ந்த பிறகுதான் நடந்தன.

    தாயும் தந்தையும் ஆரம்பப் பள்ளியிலேயே இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் நட்பு தொடர்ந்தது. ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை.. அதனால்தானோ என்னவோ ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு என்ன ஆயிற்றோ இருவருக்கும் ஒருவரையொருவருக்குப் பிடிக்காமல் போய் தனித் தனியே வாழத் தொடங்கினர். தையாவின் தாய் ஆதாம் என்ற மற்றொருவரை மணந்துகொண்டபின் தன் மகள் மாற்றாந் தகப்பனால் துன்புறுத்தப்படலாம் என்று அஞ்சி தையாவின் தகப்பன் குழந்தை தன் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதுவரை தையா தாயோடு இருந்துவந்தாள். எப்போதாவது தகப்பனோடு சில நாட்களைக் கழிப்பாள். ஒரு முறை தையாவின் தந்தை தையாவை தன் வீட்டிற்குப் பதிலாகத் தன் தாயின் வீட்டில் நான்கு நாட்கள் வைத்திருந்தார். தான் அப்படிச் செய்ததற்குக் காரணம் தையா தாயிடம் போக விரும்பாததே என்று கூறினார். ஆனால் நீதிமன்றம் குறித்திருந்த நாட்களுக்கு மேல் குழந்தையை வைத்திருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார். தையாவின் தந்தைக்குக் கெட்ட சகவாசம் இருக்கிறது என்றும் அவன் தன்னைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்தினான் என்றும் இதனால் தையாவைத் தகப்பனின் பொறுப்பில் இருக்கவிடுவது சரியில்லை என்றும் தையாவின் தாய் நீதிமன்றத்தில் வாதிட்டாள். தாயும் தந்தையும் குழந்தை தங்கள் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று  நீதிமன்றத்தில் வழக்காடிக்கொண்டிருந்தபோது குழந்தை இறந்த துயரச் சம்பவம் நடந்தது.

    மறுமுறை கருவுற்ற தையாவின் தாய் தன்னுடைய முன்னாள் காதலனின் நச்சரிப்பிலிருந்து தப்புவதற்காக வேறு வீட்டிற்கு மாற விரும்பினாள். அதற்குரிய வேலைகளைச் செய்ய வெளியே செல்ல வேண்டியிருந்தது. குழந்தையை தன்னோடு அழைத்துச் சென்றால் அதிக நேரம் ஆகலாம் என்பதாலும் மேலும் கணவன் அந்தச் சமயம் வீட்டில் இருந்ததாலும் குழந்தையை வீட்டில் விட்டுச் சென்றாள். தாய் தன்னை அப்படி விட்டுச் சென்றபோது குழந்தை அழுதிருக்கிறது. ஆயினும் வேறு வழியில்லாமல் விட்டுச் சென்றிருக்கிறாள். ஒரு மணி நேரத்திற்குள்ளேயே தாய் திரும்பி வந்தபோது தையா தூங்கிக்கொண்டிருந்திருக்கிறாள். சில மணி நேரம் கழித்து எழுந்தவள் பேசியிருக்கிறாள். ஆனால் தான் விரும்பிய எதையும் கேட்டு வாங்கிச் சாப்பிடவில்லை. மறு நாள் காலையில் எழுந்தபோது குழந்தை நார்மலாக இல்லை. குழந்தையின் மூச்சு தாறுமாறாக இருந்தது. ஆம்புலன்ஸைக் கூப்பிட்டுக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அன்று இரவே குழந்தை இறந்துவிட்டது. தாய் வெளியே சென்ற பிறகு தொடர்ந்து அழுதுகொண்டிருந்த தையாவை தையாவின் மாற்றாந் தகப்பன் தூக்கிப் பிடித்து முரட்டுத்தனமாக உலுக்கியிருக்கிறான். பின் கட்டிலில் தூக்கி வீசியிருக்கிறான். இதை அவனே பின் ஒப்புக்கொண்டான்.

    குழந்தை இறந்த பிறகு தாய்க்கு அவளுடைய உடல் உறுப்புகளைத் தானம் செய்து அவை பல குழந்தைகளுக்குக் கிடைத்து அதன் மூலம் தன் மகள் உலகில் பல காலம் வாழ்வாள் என்று எண்ணினாள். தையாவின் தந்தைக்கோ மகளின் உடலைத் துண்டுபோடுவது பிடிக்கவில்லை. ‘என் மகளின் அழகிய கண்கள் அப்படியே இருக்க வேண்டும். அவள் எப்படி இருந்தாளோ அப்படியே இறந்த பிறகும் இருக்க வேண்டும்’ என்றார்.

    தையாவின் உடல் உறுப்புகளைக் கொடுக்க வேண்டும் என்று தாயும், கொடுக்கக் கூடாது என்று தந்தையும் சண்டை போட்டதால் இந்தத் தகராறு முடியும்வரை தையாவை ‘உயிரோடு’ வைத்திருக்க வேண்டும் என்றும் அவளுடைய உடலில் இருக்கும் இணைப்புகளை அகற்ற வேண்டாம் என்றும் நீதிமன்றம் மருத்துவமனைக்கு ஆணையிட்டது. இரண்டு பெற்றோர்களின் சம்மதம் இருந்தாலொழிய குழந்தைகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முடியாது என்று சட்டம் இருப்பதால் இந்த ஆணை. கடைசியாக, தந்தைக்கு வெற்றி கிடைத்தது. தையாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படாமலே அவளுடைய உடல் புதைக்கப்பட்டது.

    தையாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருந்தாலாவது அவளுடைய வன்முறை இறப்பிற்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கும்.

    ஜெயகாந்தன் தன்னுடைய சிறு கதை ஒன்றில் குழந்தைகள் எப்படிக் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பாலமாக விளங்குகின்றனர் என்பதை இப்படிக் குறிப்பிடுவார்: …இருவருக்கும் பொதுவானதாய், இருவரிலிருந்தும் பிரிக்க முடியாததுமாய்…..அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தக் கூற்று எவ்வளவு பொருந்தும் என்று தெரியவில்லை. ஏனெனில் அமெரிக்காவில் 40 சதவிகிதம் குழந்தைகள் திருமணமாகாத ஜோடிகளுக்குப் பிறக்கின்றன. குடும்பம் என்ற சமூக நிறுவனம் (Social Institution) அமெரிக்காவில் சிதைந்துகொண்டு வருவதால் குழந்தைகள் தாய், தகப்பன் என்று இரண்டு பெற்றோரோடு வாழும் வாய்ப்பை இழந்து வருகின்றன. இப்போது ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடுள்ள இரண்டு பெண்கள் அல்லது இரண்டு ஆண்கள் சேர்ந்து வாழும்போது அவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளுக்குப் பெற்றோர் இருவரும் ஒரே பாலைச் (gender) சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுமா என்று தெரியவில்லை. தாய், தந்தையரின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படும் சமூகம் குழந்தைகளின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    Share
  • அமெரிக்காவில் தேர்தல் பின்னடைவு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    98f62e054ae1f4328a3471911522cfe05492baa7

    அமெரிக்காவில் 2014-க்குரிய இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற மேலவையில் சில இடங்களில் தோற்றுப் பெரும்பான்மை இழந்திருக்கிறது; கீழவையில் தேர்தலுக்கு முன்பே சிறுபான்மையாக இருந்தது; இப்போது இன்னும் சில இடங்களை இழந்து இன்னும் பலவீனப்பட்டுப் போயிருக்கிறது. 2008-இல் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒபாமா என்னென்னவோ சாதிக்கப் போவதாக அமெரிக்க மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அமெரிக்கா செல்லும் பாதையைத் திசைதிருப்பி உலக அரங்கில் அதன் படிமத்தை உயர்த்த வேண்டும், அமெரிக்காவின் ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய கஷ்டங்களை நீக்குவதற்குக் குறைந்தபட்ச ஊதியம் போன்ற சட்டங்களைக் கொண்டுவர வேண்டும், அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டார். இந்தக் கனவுகளை முறியடிக்கும் விதமாக 2010-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் கீழவையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை போயிற்று. 2012-இல் ஜனாதிபதித் தேர்தலோடு நடந்த இடைத்தேர்தல்களில் எப்படியோ மேலவையில் பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சித் தக்கவைத்துக்கொண்டது. ஆனால் 2014-இல் நடந்த தேர்தலில் மேலவையிலும் பெரும்பான்மை போயிற்று. இப்போது இரண்டு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்து நிற்பதால் ஒபாமா என்ன திட்டங்கள் கொண்டுவந்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடக் குடியரசு உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள்.

    ஜனநாயகக் கட்சி இரண்டு அவைகளிலும் நிறைய இடங்களை இழந்ததற்கு இந்தத் தேர்தலில் ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் குறைந்தது ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். கடந்த எழுபது வருடங்களில் – அதாவது 1942 தேர்தல்களுக்குப் பிறகு – இப்போதுதான் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 36.3 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. பெரும் பணக்காரர்கள் அளித்த ஆதரவோடு குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் செய்த பொய்ப் பிரச்சாரங்களும் இதற்குக் காரணம் என்கிறார்கள். புஷ் காலத்தில் சரிந்த பொருளாதாரத்தை ஒபாமா எழுந்து நடக்கவைத்தார். ஆனாலும் புதிதாக வந்த வளத்தின் நன்மைகள் சிறுபான்மையினரான பணக்கார வர்க்கத்தினருக்கே போய்ச் சேர்ந்தது. மத்தியதர வர்க்கத்தினரும் தொழிலாளி வர்க்கத்தினரும் தங்கள் வருமானத்தில் அதிக வித்தியாசத்தைக் காணவில்லை. இதனால் பொதுமக்களிடையே அதிருப்தி நிலவியது. இதைப் பயன்படுத்திக்கொண்டு ஒபாமாவின் கடந்த ஆறு ஆண்டு சாதனைகளை மறக்கும்படிச் செய்தனர். அவற்றைக் குறைத்து மதிப்பிட்டுச் செய்த பிரச்சாரங்களே வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச் சாவடிகளுக்கு வராமல் போனதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள். கருப்பர்களை வாக்களிப்பதிலிருந்து தடுத்து நிறுத்த சிலர் சில முயற்சிகளை மேற்கொண்டார்கள். கருப்பர்கள் அதிகமாக வாழும் சிகாகோவின் தென்பகுதியில் வாக்குப்பதிவு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்று சிலர் புரளி கிளப்பியதாகச் செய்தி வந்தது. ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் இல்லினாய் மாநிலத்திலேயே ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்ட ஜனநாயக் கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜெயித்திருக்கிறார். எது லோக்சபா தேர்தல், எது அசெம்பிளி தேர்தல் என்று தெரியாத பல அப்பாவி இந்திய மக்கள் இருப்பதுபோல் ஒபாமா போட்டியிடாததால் தாங்கள் ஓட்டுப் போடத் தெவையில்லை என்று நினைத்த அமெரிக்கர்களும் இருக்கலாம்.

    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இரண்டு அவை உறுப்பினர்களும் ஒபாமாவின் முக்கியத் திட்டங்களை முறியடிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு தயாராக இருக்கிறார்கள். முதலாவது பல வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்திருந்து அமெரிக்காவின் குடியுரிமை பெறத் துடிப்பவர்கள் பற்றியது. இவர்களுக்குச் சட்டபூர்வ குடியுரிமை வழங்க ஒபாமா எவ்வளவோ முயன்றார். அவை எல்லாவற்றையும் குடியரசுக் கட்சி அங்கத்தினர்கள் முறியடித்துவிட்டனர். இப்போது இரண்டு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்திருப்பதால் தன்னுடைய ஜனாதிபதிக்குரிய நிர்வாக அதிகாரத்தை உபயோகித்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கப் போவதாக ஒபாமா அறிவித்திருக்கிறார். இதற்குக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கீழவைத் தலைவர் மிகுந்த எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். ‘ஒபாமா நெருப்போடு விளையாடுகிறார். நெருப்போடு விளையாடுபவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொள்வார்கள்’ ஒபாமாவும் தன்னுடைய விஷேச அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுத்தால் தன்னைத் தானே அழித்துக்கொள்வார்’ என்று பயமுறுத்துகிறார். இது ஒரு புறம் இருக்க, ஒபாமா இந்தச் சட்டத்தைத் தன் அதிகாரத்தின் மூலம் கொண்டுவந்தாலும் 2016 தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதிக்குரிய இதே அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தை நீக்கிவிடலாம்.

    இரண்டாவதாக ஒபாமா மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுவந்த மருத்துவக் காப்பிட்டுத் திட்டம். இதைச் சட்டமாக்குவதற்கு குடியரசுக் கட்சியினர் என்னென்னவோ தடைகள் கொண்டுவந்தனர். ஆனாலும் ஒபாமா எப்படியோ அவர்களின் முயற்சிகளை முறியடித்து அதைச் சட்டமாக்கினார். இப்போது அதை எப்படியும் நீக்கிவிடுவது என்று குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாகச் செயல்படப் போகிறார்கள். இதனால் பல ஏழை அமெரிக்கர்களுக்கு மருத்துவ வசதி இல்லாமல் போகும். 65 வயதிற்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு குறைந்த பிரீமியத்தில் வழங்கும் மெடிக்கேர் என்னும் மருத்துவத் திட்டத்தையும் குடியரசு உறுப்பினர்கள் தனியார்மயமாக்க முயற்சிக்கலாம். இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கும் சிரமம் ஏற்படும்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி ஒபாமா மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். கனடாவிலிருந்து கச்சா எண்ணெயை சுத்தீகரிப்பதற்கு டெக்ஸாஸிற்குக் கொண்டுவர ஒரு எண்ணெய்க் கம்பெனி முயன்று வருகிறது. கச்சா எண்ணெயைக் கொண்டுவருவதற்குக் கட்டப்படும் கால்வாயினால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதால் ஒபாமா இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்தக் கால்வாய் கட்டப்பட்டால் பலருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பது குடியரசுக் கட்சியினரின் வாதம். சமீபத்தில் பெய்ஜிங்கில் நடைபெற்ற அப்பெக் (APEC) மாநாட்டில் ஒபாமாவும் சீன அதிபரும் சேர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் கரியமில வாயுவைக் குறைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஒபாமாவின் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கப் பாராளுமன்றம் நிறைவேற்றுமா என்று தெரியவில்லை.

    தங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய பல திட்டங்களைக் கொண்டுவந்த ஒபாமாவின் கைகளைப் பலப்படுத்த அவருடைய கட்சிக்கு அமெரிக்க மக்கள் வாக்களித்திருக்க வேண்டும். மாறாக ஏழைகளின் (இவர்களில் கருப்பர்கள் அதிகம்) நலன்களைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் `கார்ப்பரேட்டுகளின் நன்மைகளையே முதன்மையாகக் கொண்டு இயங்கப் போகும் குடியரசுக் கட்சி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதை அமெரிக்கர்களின் அறியாமை என்பதா? பணம் படைத்த அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் பலம் என்பதா?

    Share
  • பா.ஜ.க.வின் சாணக்கியம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    images (1)

    மத்தியில் ஆட்சியைப் பிடித்ததோடு மற்ற மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அதிலும் அரியானாவில் தனித்து ஆட்சி அமைத்திருப்பதும் மஹாராஷ்டிராவில் சிறுபான்மை அரசு அமைத்திருப்பதும் பா.ஜ.க.வுக்கு பெரிய தெம்பைக் கொடுத்திருக்கிறது. எப்படியாவது நாடு முழுவதும் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்று பல உத்திகளைக் கையாளுகிறது.

    தேசியத் தலைவர்களான காந்திஜியையும் வல்லபாய் பட்டேலையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொண்டிருக்கிறது. தேசத் தந்தை காந்திஜி இல்லாமல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சரித்திரமே இல்லை என்று புரிந்துகொண்டதால் அவரை ஓரம் கட்ட முடியாது. அதனால் அவரை மதிப்பதுபோல் மோதி காந்திஜியின் சிலைகளுக்கு மாலையிடுகிறார்; காந்திஜி பிறந்த நாளை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் நாளாகக் கொண்டாடுகிறார். இப்படிக் காந்திஜியைப் போற்றுவது எல்லாம் அரசியல் ஆதாயத்திற்குத்தான். குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் இரத்தக் கறை தன் கைகளில் இல்லையென்று காட்டும் பாவனைதான். காந்திஜியை இப்படிக் கொண்டாடும்போது ஆர்.எஸ்.எஸ். மீது தனக்குள்ள பாசத்தையும் நன்றிக் கடனையும் விட முடியவில்லை. காந்திஜியைக் கொன்ற ஆ.எஸ்.எஸ்.காரர்களை அரசிலும் கட்சியிலும் முக்கிய பதவிகளில் அமர்த்தியிருக்கிறார்.

    பட்டேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்தவர். சிறுபான்மையினருக்கு நாட்டில் சம உரிமையும் மரியாதையும் கொடுத்தவர். சிறுபான்மையினர் இரண்டாம்தரக் குடிமக்களாகத்தான் இருக்க முடியும் என்று ஆ.எஸ்.எஸ். சொல்கிறது. இதனுடைய சிறுபான்மை வெறுப்பு அரசியல்தான் காந்திஜியின் கொலையில் முடிந்தது. (ஆ.எஸ்.எஸ்ஸுக்கும் காந்திஜியைக் கொன்ற கோட்சேக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதைப் பட்டேலே ஒப்புக்கொள்ளவில்லை. இந்தப் பட்டேலைத் தங்கள் தலைவராகக் கொண்டாடி அவருக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் சிலை எழுப்பப் போகிறார்களாம்.

    நாடு முழுவதையும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசியத் தலைவர்கள் சிலரைத் தங்களுக்குச் சொந்தமாக்க முயலுகிறார்கள்.

    இதற்குத் துணைபோக ஆள் சேர்க்கும்போது கொள்கை கணக்கில் இல்லை. வாக்குகள் வாங்கும் தகுதியே போதும். இதற்கு ஒரு உதாரணம் ரஜினி காந்தைப் பா.ஜ.க. தன் கட்சிக்குள் இழுக்க முயன்றது. ஏராளமான ரசிகர்களைத் தன் கைக்குள் வைத்திருக்கும் இந்த நடிகர் தன்னுடைய அரசியல் கொள்கையென்று இதுவரை எதையும் சொன்னதில்லை.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க.விற்கு விலாசமே இல்லாமல் இருந்தது. இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறிப் பதவிக்கு வந்து மற்ற எந்தக் கட்சிகளையும் உள்ளே நுழையவிடவில்லை. இப்போது அ.தி.மு.க.வின் நிரந்தர தமிழக ‘மக்களின் முதல்வருக்கு’ (அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அவரை முதல்வர் பதவியிலிருந்து இறக்கவே பிடிக்கவில்லை. அதனால் அவருக்குப் புதுப் பட்டம் வழங்கியிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் வேறு; தமிழக மக்கள் முதல்வர் வேறு.) ஏற்பட்டுள்ள இறங்குமுகத்தையும் தி.மு.க. செல்வாக்கு இழந்து நிற்பதையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

    தமிழுக்குப் புகழ் சேர்த்த திருக்குறள் எழுதிய திருவள்ளுவரைப் பற்றி நன்கு அறிந்த ஒரு பா.ஜ.க. உறுப்பினரைத் தமிழகத்திற்கு அனுப்பப் போகிறார்கள். இவர் திருவள்ளுவருடைய ‘இந்து மத’ச் சிந்தனைகளைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்க்கலாம். தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமான திருக்குறள் இந்து மத நூலாக இனங்காட்டப்படலாம். ராஜராஜ சோழன் தமிழர்களின் பெருமையைத் தமிழகத்திற்கு வெளியே எடுத்துச் சென்றவன் என்று திராவிட அரசியல் கட்சிகள் புகழும். இவனுடைய மகன் கங்கைகொண்டசோழபுரத்தைக் கட்டியவன். கங்கையை வென்ற இந்தச் சோழ மன்னனை பா.ஜ.க தனதாக்கிக்கொள்ள முயலுகிறது. இவனுடைய ஆயிரம் ஆண்டு நிறைவை ஆர்.எஸ்.எஸ். கொண்டாடப் போகிறது. சோழ மன்னர்கள் தமிழ் கலாச்சாரத்தை தென்கிழக்காசியாவில் பரப்பினார்கள் என்பது தமிழர்கள் பெருமைப்படும் விஷயம். தாய்லாந்தில் திருவெம்பாவை இன்னமும் பாடப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். கொண்டாட்டத்தில் தமிழ் இலக்கியத்தைவிட இந்து மதம்தான் முன் நிறுத்தப்படும். வேதம் ஓதிய பிராமணர்களுக்கு வரி இல்லாத நிலம் கொடுத்த சோழர்களின் இந்து மத ஆதரவு கொண்டாடப்படும். இப்படித் தமிழ் அடையாளங்கள் எல்லாம் இந்து மத அடையாளங்களாக ஆக்கப்படலாம்.

    இவை பா.ஜ.க.வின் சாணக்கியத்திற்கு சில உதாரணங்கள். இந்தியாவின் பெருமை அதன் பல கலாச்சாரங்கள். ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மை உண்டு; தனி வரலாறு உண்டு. எல்லாவற்றையும் மறைத்து இந்து மதக் கலாச்சாரத்திற்குக் கொண்டுவருவதே பா.ஜ.க.வின் நோக்கம். இதற்கு பல மொழிக் கலாச்சாரங்களின் பெருமையைக் கொண்டாடுவதுபோல் பாவனை செய்கிறது. இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாட்டுப் பா.ஜ.க. தலைவர்களே உடந்தை. சில தமிழர் கட்சிகள் பா.ஜ.க.வோடு அரசியல் ஆதாயத்திற்காகக் கூட்டுச் சேரலாம். இதில் தமிழ் மக்கள் ஏமாறுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    பி. கு. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளர் திருமதி. நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் சொந்த கருத்துகளே.  வல்லமை இதழுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    ஆசிரியர்

    Share
  • இந்திய ஆண்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    gilleswife5

    சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த செய்தி உலகில் எந்தெந்த நாடுகளில் உள்ள கணவன்மார்கள் எத்தனை மணி நேரம் மனைவிக்கு வீட்டுவேலைகளில் உதவுகிறார்கள் என்ற புள்ளிவிபரத்தைக் குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க ஆண்கள்தான் அதிக நேரம் (ஒரு நாளைக்கு இரண்டு மணி நாற்பத்தியொரு நிமிடங்கள்) மனைவிமார்களுக்கு வீட்டுவேலைகளில் உதவிசெய்கிறார்களாம். ‘இந்திய ஆண்களின் இடம் என்ன என்று கேட்கிறீர்களா?’ அது எங்கோ இருக்கிறது’ என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டிருக்கிறது அந்தப் பத்திரிக்கை. இந்திய ஆண்கள் 19 நிமிடங்கள்தான் மனைவிமார்களுக்கு உதவுகிறார்களாம்.

    இந்திய ஆண்கள் ஏன் மனைவிமார்களுக்கு வீட்டுவேலைகளில் உதவுவதில்லை என்று பார்ப்போம். ஜாதிகளில் உயர் ஜாதி, கீழ் ஜாதி என்று இருப்பதுபோல் ஆண்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்ற நிலைப்பாட்டையும் நாம் பல நூற்றாண்டுகளாக நமது சமூகத்தின் கொள்கையாக ஏற்றுக்கொண்டுவிட்டோம். உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் எப்படி மற்ற ஜாதிகள் தங்களுக்குச் சமம் என்று இன்றும் ஒப்புக்கொள்வதில்லையோ அதுபோல் ஆண்களும் பெண்கள் தங்களுக்குச் சமமானவர்கள் என்று கருதுவதில்லை. ஒரு முறை பள்ளியில் எங்களுக்கு இந்தி சொல்லிக் கொடுத்த ஆசிரியரைப் பார்க்கச் சென்றிருந்தோம். அவருடைய மனைவி எங்களுக்கு அருந்துவதற்குப் பால் கொண்டுவந்து கொடுத்தார். நாங்கள் அதைக் குடித்து முடித்த பின் அந்தத் தம்ளர்களை உள்ளிருந்து ஒரு கோல் கொண்டுவந்து எங்கள் முன்னாலேயே அந்தக் கோல் மூலம் அவற்றை ஒரு ஓரத்திற்குத் தள்ளினார். நாங்களே அவரைப் போல் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டார். இது நடந்தது பதினைந்து வருஷங்களுக்கு முன்னால்தான். என் கணவரின் கீழ் வேலைபார்த்த ஒரு பிராமணர் நாங்கள் அவர் வீட்டிற்குச் சென்றபோது அவர் தந்தை இறந்து அவருக்குரிய ஈமச்சடங்குகள் முடிந்திருக்கவில்லையாதலால் எங்களை வீட்டிற்கு வெளியேயே வைத்துப் பேசி அனுப்பிவிட்டார். அவருடைய தந்தை மிகவும் ஆசார அனுஷ்டானங்கள் உடையவராம். அதனால் அவருக்கான ஈமச்சடங்குகள் முடியும்வரை இவர் மடியாக இருக்க வேண்டுமாம். பிராமணரல்லாத எங்களை வீட்டிற்கு உள்ளே விட்டால் அவர் தந்தை சொர்க்கத்திற்குப் போய்ச் சேர மாட்டார் என்று நினைத்துவிட்டார் போலும். இவர்களைப் போன்றவர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு மாறப் போவதில்லை.

    இந்தியப் பெண்களையும் எல்லாக் காலங்களிலும் ஆண்களைவிடக் குறைந்த நிலையிலேயே வைத்துவந்திருக்கிறது இந்தியச் சமூகம். அதனால் இந்திய ஆண்களின் மனதிலும் தாங்கள் தங்கள் மனைவிமார்களை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் நன்றாகவே ஊறிப் போயிருக்கிறது. வயலில் வேலைபார்க்கும் குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறார்கள். ஆனால் வீட்டு வேலைகள் எல்லாம் மனைவிதான் செய்கிறாள். வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த எங்கள் பாட்டனார், தந்தை காலத்தில் மனைவிமார்கள் வெளியே எங்கும் வேலைக்குச் செல்லவில்லை. கணவன்மார்கள்தான் வெளியில் சென்று உழைத்துக் குடும்பத்திற்கு வேண்டிய வருமானத்தை ஈட்டி வந்தார்கள். மனைவிக்கு வீட்டு வேலைகளைச் செய்ய நிறைய நேரம் இருந்தது. இப்போது காலம் மாறிவிட்டது. பல பெண்கள் வெளியே வேலைக்குப் போகிறார்கள். அவர்களுக்கும் கணவன்மார்கள் எந்த உதவியும் செய்வதில்லை. வேலைக்காரர்கள் என்ற ஒரு இனம் இந்தியாவில் இருக்கிறது. அவர்கள் பெண்களுக்கு வீட்டு வேலைகளில் உதவுகிறார்கள். அதற்கு மேல் நவீன சமையல் உபகரணங்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன. அவை ஓரளவு பெண்களுக்குக் கைகொடுக்கின்றன. இந்திய ஆண்கள் தங்கள் மனைவிமார்களை தங்கள் வாழ்க்கைத் துணை என்றும் அவர்கள் தங்களுக்குச் சமமானவர்கள் என்றும் ஒரு போதும் நினைப்பதில்லை.

    மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போதுகூட கணவன்மார்கள் சமையலறைக்குள் நுழைவதில்லை. ஒரு முறை ஒரு கணவனிடம் அவருடைய மனைவிக்கு அடிக்கடி உடல்நலம் கெடுவதால் மனைவிக்குச் சமையலில் உதவுமாறு நான் கூறினேன். என் அறிவுரைக்குச் செவிமடுத்த அவர் ஒரு நாள் தன் மனைவிக்கு பட்டாணி உரித்துக் கொடுத்திருக்கிறார்! இதைப் பார்த்துவிட்ட பக்கத்து வீட்டுக்காரன் ஒருவன் (இந்தச் சிறிய கிராமத்தில் யாரும் யார் வீட்டிற்குள்ளும் எப்போதும் செல்வார்கள். ‘பிரைவசி’ எல்லாம் கிடையாது.) ‘இப்படி ஆண்கள் வீட்டுவேலை செய்வதால்தான் மழை பெய்யவில்லை’ என்றானாம்! இதுதான் இந்தியப் பண்பாடு.

    நாம் பலவாறாகப் போற்றும் நம் இதிகாசங்களும் காலம் காலமாக பெண்ணுக்கு ஒரு நீதி, ஆணுக்கு ஒரு நீதி என்றுதான் வகுத்திருக்கின்றன. கண்ணகியைக் கற்பிற்கு அரசியாகச் சித்தரித்த இளங்கோ அடிகள் கோவலனை கற்புக்கரசனாகச் சித்தரிக்கவில்லையே. கணவனைத் தாசி வீட்டிற்கு நளாயினி கூட்டிச் சென்றாள். எந்த இதிகாசக் கணவனும் மனைவியை அவள் விரும்பியவனிடம் அழைத்துச் சென்றதாகக் கதை இல்லை. இப்படி ஆண்களை உயர்த்திவைத்தே பெண்களைப் பழக்கப்படுத்திவிட்ட இந்திய சமூகத்தில் கணவன்மார்கள் மனைவிமார்களை மதிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஏன் மனைவிமார்களே கூட கணவன்மார்களிடமிருந்து இதை எதிர்பார்ப்பதில்லை.

    அமெரிக்கா போன்ற வளர்ந்துவிட்ட மேலைநாடுகளில் இப்போது நிறையப் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்கு சந்தையில் நிறைய ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் வந்துவிட்டாலும் வீட்டைச் சுத்தப்படுத்துவது, துணிகளைத் துவைப்பது போன்ற வேலைகளை கணவன், மனைவி இருவரில் ஒருவர் செய்தாக வேண்டும். இந்தியாவில்போல் சொற்ப சம்பளத்தில் வேலைக்காரர்கள் கிடைப்பதில்லை. இந்தக் காரணங்களால் ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்கெடுக்க வேண்டியிருக்கிறது. மேலும் இந்தியாவில் போல் பெண்களைவிட ஆண்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் இந்தச் சமூகங்களில் ஒரு காலத்தில் இருந்ததோ என்னவோ இப்போது இல்லை. எந்தக் கணவனும் தான் தன் மனைவியைவிட உயர்ந்தவன் என்று நினைப்பதில்லை. இந்தியாவில் தன்னைவிடப் பணக்காரக் குடும்பத்துப் பெண்களை மணந்துகொள்ள எந்த ஆணும் தயங்குவதில்லை. ஆனால் தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண்ணை, அதிகம் படித்திருக்கும் பெண்ணை மணந்துகொள்ள நிறைய ஆண்கள் முன்வருவதில்லை. எங்கே தன்னை மதிக்க மாட்டாளோ என்று பயப்படுவதே இதற்குக் காரணம். மேலைநாடுகளில் இப்படிப் பயப்படுவது இல்லை. சில கணவன்மார்கள் தேவை ஏற்பட்டால் சில வருஷங்களாவது குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு, வீட்டை நிர்வகித்துக்கொண்டு இருப்பதை தாழ்வாக நினைப்பதில்லை.

    ஒரு முறை ஒரு அமெரிக்கர் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றிருந்தோம். நிறைய சமைத்திருந்தார்கள். விருந்து முடிந்து கிளம்பும்போது ஏதோ வேலையாக நான் சமையலறைக்குள் சென்றபோது சமைக்க உதவிய பாத்திரங்கள், விருந்தினர் உபயோகித்த பாத்திரங்கள் என்று அத்தனை சாமான்கள் சமையலறை முழுவதும் சிதறிக் கிடந்தன. இவற்றை எல்லாம் எப்போது சுத்தப்படுத்துவார்கள் என்று எனக்கே மலைப்பாக இதுந்தது. ‘இவற்றை எல்லாம் இனி நீங்கள் சுத்தப்படுத்த வேண்டுமே’ என்று மனைவியிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘என் கணவர் எல்லாவற்றையும் முடித்துவிடுவார்’ என்றார். எந்த ஒரு இந்தியக் குடும்பத்திலாவது இப்படி நடக்குமா? இதுதான் இந்தியக் குடும்பங்களுக்கும் அமெரிக்கக் குடும்பங்களுக்கும் உள்ள வித்தியாசம். இதனால்தான் அமெரிக்காவில் கணவன் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ இரண்டு மணி நேரம் நாற்பத்தியோரு நிமிடங்கள் செலவழிக்கிறான். இந்தியாவில் பத்தொன்பது நிமிடங்களே செலவழிக்கிறான்.

    Share
  • மறக்கப்பட்ட நம் தலைவர்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    images

    இந்தியா (இனி இந்தியா என்று சொல்வதைத் தவிர்த்து பாரதம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று எப்போது அரசிடமிருந்து ஆணை பிறக்கப் போகிறதோ?) சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் முடிந்துவிட்டன. காந்திஜி படுகொலை செய்யப்பட்டு 67 ஆண்டுகள் முடியப் போகின்றன. ஆர். எஸ். எஸ். காரர்கள் சதிசெய்து அவரைத் தங்கள் வன்முறையால் இந்திய அரசியலிலிருந்து விலக்கிவிட்டனர். ஆனாலும் காங்கிரஸ்காரர்களாவது அவர் பிறந்த நாளன்று அவர் பெயரைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உலகின் பல நாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் காந்திஜியின் அஹிம்ஸை வழிகளைப் பற்றியும் காந்திஜியின் கொள்கைகளைப் பற்றியும் ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் எத்தனை பல்கலைக்கழகங்களில் காந்திஜி பற்றிய ஆராச்சி நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு பள்ளியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது மாணவன் ஒருவன், ‘இறந்தவர்களானாலும் சரி. உயிரோடு இருப்பவர்களானாலும் சரி, யாரோடு உணவருந்த விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டபோது எதிர்பாராத இந்தக் கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல் ‘காந்திஜியோடு’ என்றார். உலகின் பல பெரிய தலைவர்களோ பெரிய விஞ்ஞானிகளோ அவர் நினைவுக்கு வரவில்லை. காந்திஜிக்கு மிகவும் பின்னால் வந்தவர் – காந்திஜி இறந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர் – காந்திஜியை நினைவில் வைத்திருந்தார்.

    காந்திஜியை நம்மில் எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். காந்திஜியைக் கொன்ற ஆர். எஸ். எஸ்ஸிலிருந்து வந்திருக்கும் மோதி இன்னொரு வகையாக நம் மனதிலிருந்து காந்திஜியின் நினைவை அழிக்க முயற்சி செய்கிறார். காந்திஜியை எத்தனை பேருக்கு நினைவிருக்கிறதோ தெரியாது; ஆனால் அக்டோபர் 2 காந்திஜி பிறந்த நாள் விடுமுறை நாள் என்று மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘அக்டோபர் இரண்டா? அன்று காந்திஜி பிறந்த நாளுக்கு விடுமுறை’ என்று எல்லோரும் சொல்லிக்கொள்வார்கள். அன்றாவது அவருடைய பெயர் எல்லோர் வாயிலும் இருக்கும். விடுமுறை என்பதற்காக அந்த ஒரு நாளில் காந்திஜி பெயரை உச்சரிக்கும் பழக்கத்தையும் மறக்கடிக்கும் ஒரு கைங்கரியத்தை இப்போது மோதி மேற்கொண்டிருக்கிறார். அன்றைய தினத்தை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார். அன்று விடுமுறை இல்லாதது மட்டுமல்ல; அன்று காந்திஜி பெயரை உச்சரிக்கும் தேவையையும் இல்லாமல் ஆக்கியிருக்கிறார்.
    காந்திஜி போதித்த உள்ளத் தூய்மையை முதலில் பின்பற்றினால் இந்தியாவின் புறத் தூய்மை தானாகவே வருமே!

    அதே மாதிரிதான் நேருஜியின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவதையும் இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் தினமாக அனுசரிக்கச் சொல்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் நேருஜியின் பங்கையும் அதன் பிறகு சுதந்திர இந்தியாவை நடத்திச் சென்று அவர் இந்தியாவை ஒருங்கிணைந்த நாடாக வைத்திருந்ததையும் வேகமாக மறக்கச் செய்யும் கைங்கரியங்களில் மோதி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    அடுத்து வருவது வல்லபாய் பட்டேல். இன்றைய இந்தியாவை இன்றைய உருவில் ஒருங்கிணைத்ததே பட்டேல்தான் என்று இந்தியர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? காலண்டர் தயாரிப்பவர்கள் மட்டும் எல்லோர் பிறந்த நாளையும் பட்டியலிடும்போது அவர் பிறந்த நாளையும் குறிப்பிடுகிறார்கள். நாள்காட்டியில் அன்றைய தேதிக்குரிய தாளைக் கிழிக்கும்போது ‘இன்று பட்டேலின் பிறந்த நாளா?’ என்று நினைவுபடுத்திக்கொள்கிறோம். தினசரி காலண்டர் இப்போது எத்தனை பேரிடம் இருக்கிறது?

    பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் பல்கலைக்கழகங்கள் நிறுவியாயிற்று, இனி அவர்களுடைய போதனைகளை எளிதாக மறந்துவிடலாம் என்று நினைக்கிறோம். ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்றார் பாரதிதாசன். தலைநிமிர்ந்து நிற்கும்படியாகவா நாம் காரியங்கள் செய்துகொண்டிருக்கிறோம்? ஒரு பிரியாணிப் பொட்டலத்திற்கும் நூறு ரூபாய்க்கும் கூலிக்கு மாரடிக்க நாம் தயாராக இருக்கும்போது எப்படித் தலை நிமிர்ந்து நிற்க முடியும்? தமிழினம் எவ்வளவு அறிவீனமாகிவிட்டது என்பதைத் தெரிந்துகொள்ள ‘ஓம் ஓபாமா’ என்ற திரைப்படத்தைப் பாருங்கள். கட்சித் தலைமையிலிருந்து போன்கால் வரவும் கட்சித் தலைவர் ஒருவர் தன்னுடைய செல்போனைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, எதிரே இல்லாத தலைமைக்கு முன்னே சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பின் தொலைபேசியை எடுத்துப் பேச ஆரம்பிக்கிறார். என்னே நம் சுய மரியாதை! அது திரைக்கதை என்றால் உண்மையில் நடந்த சம்பவம் ஒன்று. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வந்தவுடன் இன்றைய தமிழக முதல்வர் (தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் பிரதிநிதி) முன்னவரின் காலில் விழுந்து வணங்குகிறார். என்னே நம் பக்குத்தறிவுப் பாதை பயணித்த கதை!

    periyar-400மதத்தின் பெயரால் ஜனங்களை முட்டாளடித்து அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்களின் செயல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பெரியாரைப் பற்றிய புரிதலே சரியாக இல்லாதபோது அவரை மறப்பது மிகவும் எளிது. ஊழலில் ஊறிப்போன ஒரு அரசியல்வாதியை, குற்றம் சாட்டப்பட்டவர் கேட்ட வாய்தாக்களை எல்லாம் கொடுத்துப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் அவரைத் தண்டித்தபோது 193 பேர் அந்தச் செய்தி கொடுத்த அதிர்ச்சியில் இறந்திருக்கிறார்கள், அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் (139 பேர் மாரடைப்பால் இறந்தவர்கள் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது). இவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்குப் பெரியாரின் ‘போலிப் பகுத்தறிவு இயக்கம்’ காரணம் என்று சொல்லுமளவுக்கு பெரியாரைப் புரிந்துகொண்டிருக்கிறோம். அவர் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் செல்ல நாம் என்றுமே தயாராக இல்லாதபோது இப்போது மட்டும் நினைவில் வைத்திருப்போமா என்ன?

    காமராஜ் இறந்தபோது அவர் தலைமாட்டில் 160 ரூபாய் மட்டும் இருந்ததாம். லஞ்சம் வாங்குவது, சொத்து சேர்ப்பது என்பது பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாத காமராஜ், கக்கன் போன்ற எளியவர்கள் வாழ்ந்த தமிழகமா இப்போது கணக்கில் அடங்காத அளவு சொத்து சேர்க்கும் தலைவர்களை உருவாக்கியிருக்கிறது? வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் சொத்தின் அளவை மதிப்பிட்டோமானால் அதில் எத்தனை பூஜ்யங்கள் இருக்கின்றன என்பதை எண்ணி மாளாது என்றார் எங்கள் நண்பரின் தந்தை ஒருவர். இதற்கு நேர்மாறாக இறக்கும்போது 160 ரூபாய் வைத்திருந்த காமராஜரின் எளிமையையும் அவரையும் சேர்த்து மறந்துவிட்டோம்.

    எளிமைக்கும் மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதற்கும் அடையாளமாக விளங்கிய தலைவர்களை நாம் மறந்துகொண்டே போக, சொத்துச் சேர்ப்பதையும் மக்களை முட்டாளடிப்பதையும் தங்கள் சாதனைகளாகக் கொண்ட தலைவர்கள் காளான்கள் போல் முளைத்துக்கொண்டேதான் இருப்பார்கள். வளர்க ஊழல் புரிவோர் ஆட்சி! வாழ்க தமிழகம்!!

    பி.கு. இந்தக் கட்டுரையின் கருத்துகள் அனைத்தும் ஆசிரியர் திருமிகு நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் சொந்த கருத்துக்கள் மட்டுமே. வல்லமை இதழுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

    Share