Tag: நாங்குநேரி வாசஸ்ரீ

  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 87

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 87

    நாங்குநேரி வாசஸ்ரீ

    87. பகை மாட்சி

    குறள் 861:

    வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
    மெலியார்மேல் மேக பகை

    பகையாளி நம்மளவிட பலசாலியா இருந்தா எதுக்கக் கூடாது. பலமில்லாத எளச்சவன சட்டுனு எதித்து நின்னுடணும்.

    குறள் 862:

    அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
    என்பரியும் ஏதிலான் துப்பு

    கூட இருக்கவங்க மேல நேசம் வைக்காம, பலமுள்ள தொணையில்லாம, தானும் பலம் இல்லாம இருக்குதப்போ பகையாளிய எங்ஙன செயிக்க ஏலும்?.

    குறள் 863:

    அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
    தஞ்சம் எளியன் பகைக்கு

    ஒருத்தன் தொட நடுங்கியாவும், கூறுகெட்டவனாவும், மத்தவங்களோட சேந்து பழகுத கொணம் இல்லாதவனாவும், கஞ்சாம்பட்டியாவும் இருந்தாம்னா பகையாளி அவன சுளுவா தோக்கடிச்சிடுவான்.

    குறள் 864:

    நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
    யாங்கணும் யார்க்கும் எளிது

    கோவத்தையும், மனசையும் கட்டுக்குள்ள வைக்க ஏலாதவன யார் வேணும்னாலும், எப்பம்னாலும், எங்குட்டுன்னாலும் சுளுவா தோக்கடிச்சிப்போடுவாக.

    குறள் 865:

    வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
    பண்பிலன் பற்றார்க் கினிது

    நல்ல வழிய நாடாம, பொருத்தமானத செய்யாம, பொல்லாப்புக்கு அஞ்சாம, நல்ல கொணமும் இல்லாம ஒருத்தன் இருந்தாம்னா அவன் பகையாளியால சுளுவா செயிக்கப்படுவான்.

    குறள் 866:

    காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
    பேணாமை பேணப் படும்

    யோசிக்காம கோவப்படுதவனாவும், பேராசக்காரனாவும் இருக்கவனோட பகைய ஏத்துக்கிட்டு எதித்து நிக்கலாம்.

    குறள் 867:

    கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
    மாணாத செய்வான் பகை

    தான் கூட இருந்துக்கிட்டே தனக்கு வேண்டாத வேலயச் செய்யுதவன பொருள் கொடுத்தாது பகையாளியா ஆக்கிக்கிடணும்.

    குறள் 868:

    குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
    கினனிலனாம் ஏமாப் புடைத்து

    ஒருத்தன் கொணங்கெட்டவனாவும், தப்புதண்டா செய்யுதவனாவும் இருக்குதப்போ அவன் பக்கத்தொணை இல்லாமப் போவுத நெலம பகையாளிக்கு பலமா ஆகிப்போவும்.

    குறள் 869:

    செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
    அஞ்சும் பகைவர்ப் பெறின்

    கூறுகெட்ட தொடநடுங்கியா பகையாளிங்க இருந்தாகன்னா அவுகள எதித்து நிக்கவங்கள விட்டு மகிழ்ச்சி வெலகாம இருந்துக்கிடும்.

    குறள் 870:

    கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
    ஒல்லானை ஒல்லா தொளி

    போர் செய்யுத மொறையப் படிச்சுத் தெரிஞ்சிக்கிடாம இருக்க பகையாளிய எதித்து நிக்குத சுளுவான காரியத்த செய்யத் தயங்குதவுகள புகழ் அண்டாம எட்டத்துலயே நின்னுக்கிடும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 86

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 86

    நாங்குநேரி வாசஸ்ரீ

    86. இகல்

    குறள் 851:

    இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
    பண்பின்மை பாரிக்கும் நோய்

    எல்லா உசிருங்களையும் மனசு பொருந்தாம இருக்கச்செய்யுத தீய கொணத்த வளக்குத நோய நாம மனவேறுபாடு ங்குதோம்.

    குறள் 852:

    பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
    இன்னாசெய் யாமை தலை

    நம்ம கூட இணங்க ஏலாம ஒருத்தன் நமக்கு எடஞ்சல் செஞ்சாலும் அவன பகையாளியா நெனச்சி தீம செய்யாம இருக்கது நல்லது.

    குறள் 853:

    இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
    தாவில் விளக்கம் தரும்

    ஒருத்தன் மன மாறுபாடுங்குத துன்பம் தருத நோய மனசுலேந்து நீக்கிட்டாம்னா அவனுக்கு அழியாத நெலச்ச புகழ் உண்டாவும்.

    குறள் 854:

    இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்

    துன்பத்துல பெருந்துன்பம் மனவேறுபாடு. அது இல்லாமப் போச்சுதுன்னா சந்தோசத்துலயும் சிறந்த சந்தோசம் கெடைக்கும்.

    குறள் 855:

    இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
    மிகலூக்கும் தன்மை யவர்

    மனவேறுபாடு தோணும்போது அத ஏத்துக்கிடாம வெலக்குதவங்கள எதித்து நிக்குத வலிம யாருக்கு உண்டு.

    குறள் 856:

    இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
    தவலும் கெடலும் நணித்து

    மனவேறுபாட்ட வளக்கது நல்லதுனு நெனைக்கவனோட வாழ்க்க வெரசலா தடம்மாறிப் போய் அழிஞ்சு போவும்.

    குறள் 857:

    மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
    இன்னா அறிவி னவர்

    பகைய மனசுல வச்சிருக்க கெட்டபுத்தி உள்ளவுக வாழ்க்கையில செயிக்க ஒதவுத உண்மப் பொருள அறியமாட்டாங்க.

    குறள் 858:

    இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
    மிகலூக்கின் ஊக்குமாங் கேடு

    மனவேறுபாடு தோணும்போது அத ஏத்துக்கிடாம இருக்கது ஒருத்தனுக்கு சொத்துகணக்கா. ஏத்துக்கிட்டா கெடுதல் தான் வெளையும்.

    குறள் 859:

    இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு

    ஒருத்தன் நன்ம வரும்போது மாறுபாட்டை நெனைக்க மாட்டான். தனக்குத்தானே கெடுதல தேடிக்கிடுதவன் மாறுபாட்ட பெரிசுபடுத்தி நெனைப்பான்.

    குறள் 860:

    இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
    நன்னயம் என்னும் செருக்கு

    மனமாறுபாடு காட்டி பகையாளியா இருக்கவுகள எல்லாத் துன்பமும் அண்டும். சேக்காளியா இருக்க நெனயுதவுகளுக்கு நெறய சந்தோசம் கெடைக்கும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 85

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 85

    நாங்குநேரி வாசஸ்ரீ

    85. புல்லறிவாண்மை

    குறள் 841:

    அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
    இன்மையா வையா துலகு

    புத்தியில்லாம போவுததுதான் கொடும் பஞ்சம். மத்த பஞ்சத்தையெல்லாம் பெரிசா எடுத்திக்கிடமாட்டாக ஒலகத்து பெரிய மனுசங்க.

    குறள் 842:

    அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
    இல்லை பெறுவான் தவம்

    கூறுகெட்டவன் ஒரு பொருளக் கொடுத்தாம்னா அதுக்குக் காரணம் அத வாங்கிக்கிடுதவங்க செஞ்ச நல்லகாரியந்தான்னு நெனச்சிக்கிடணும்.

    குறள் 843:

    அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
    செறுவார்க்கும் செய்தல் அரிது

    பகையாளியால கூட செய்ய ஏலாத அளவு எடஞ்சல கூறுகெட்டவன் தனக்குத்தானே செஞ்சிக்கிடுவான்.

    குறள் 844:

    வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
    உடையம்யாம் என்னும் செருக்கு

    அறியாமைங்கது என்னன்னா ஒருத்தன் தன்னயத்தானே அறிவாளினு நெனச்சி அகராதி புடிச்சு அலயுததுதான்.

    குறள் 845:

    கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
    வல்லதூஉம் ஐயம் தரும்

    புத்தியில்லாதவன் தான் படிக்காத நூலையும் படிச்சாமாரி பேசிக்கிட்டுத் திரிஞ்சாம்னா அவன் நெசமாவே படிச்சு தெரிஞ்சுக்கிட்டது மேலயும் மத்தவங்களுக்கு  சந்தேகம் வரும்.

    குறள் 846:

    அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
    குற்றம் மறையா வழி

    தங்கிட்ட  இருக்க குத்தங்கொறைய களையாம ஒடம்ப மறைக்க உடுப்பு உடுக்க நெனயுததும் புத்திகெட்ட காரியந்தான்.

    குறள் 847:

    அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
    பெருமிறை தானே தனக்கு

    நல்ல புத்திமதிகளக் கேட்டு அதுகணக்கா நடந்துக்கிடாதவக தனக்குத்தானே பெரிய தீங்க செஞ்சுக்கிடுவாக.

    குறள் 848:

    ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவுமோர் நோய்

    சொந்தபுத்தியும் இல்லாம சொல்புத்தியும் கேக்காம இருக்கவங்களுக்கு அதுவே அவுக ஆயுசுக்கும் நோயா வந்துமுடியும்.

    குறள் 849:

    காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
    கண்டானாம் தான்கண்ட வாறு

    கூறுகெட்டவன புத்திசாலியாக்க நெனச்சி பேசுதவன் அவன் முன்ன புத்திகெட்டவனாத்தான் நெனக்கப்படுவான். ஏம்னா கூறுகெட்டவன் தனக்குத் தெரிஞ்சத வச்சிக்கிட்டு தான் பெரிய புத்திசாலினு காட்டிக்கிடுதது தான் காரணம்.

    குறள் 850:

    உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
    தலகையா வைக்கப் படும்

    இருக்குனு ஒலகத்து பெரியமனுசங்க சொன்ன விசயத்த வேணும்னே இல்லன்னு எதித்துப் பேசுதவன பேயா நெனச்சி வெலக்கி வச்சிடுவாக ஒலகத்து மனுசங்க.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 84

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 84

    நாங்குநேரி வாசஸ்ரீ

    84. பேதைமை

    குறள் 831:

    பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
    டூதியம் போக விடல்

    பேதைமைங்கது என்னன்னு கேட்டா நமக்கு நல்லது செய்யுதத விட்டுப்போட்டு தீம தருதத ஏத்துக்கிடதுதான்.

    குறள் 832:

    பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
    கையல்ல தன்கண் செயல்

    பேதைமையிலெல்லாம் பெரிய பேதைமை னு சொல்லப்படுதது தன்னால ஏலாத தனக்கு நன்ம தராத காரியத்த ஆசப்பட்டு செய்யுதது தான்.

    குறள் 833:

    நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில்

    வெக்கப்பட வேண்டிய நேரத்துல வெக்கங்கெட்டு அலையுததும், தேடிப் பெற வேண்டியதுல நாட்டமில்லாம இருக்கதும், நேசம் காட்ட வேண்டிய எடத்துல நேசமில்லாமயும் , காக்க வேண்டியத காவாம இருக்கதும் புத்திகெட்ட பேதைங்களோட கொணம்.

    குறள் 834:

    ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
    பேதையிற் பேதையார் இல்

    படிச்சுப்போட்டு தான் படிச்சத உணந்து பொறத்தியாருக்கு எடுத்துச்சொல்லி இருக்கவங்க தங்க வாழ்க்கையில அத கடைபிடிக்காம உட்டாகன்னா அவுகளப் போல கூறுகெட்ட பேதையர் இருக்க முடியாது.

    குறள் 835:

    ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
    தான்புக் கழுந்தும் அளறு

    புத்திகெட்டவன் தன்னோட ஒரு பொறப்புலயே அடுத்தடுத்து ஏழு பொறப்புலயும் பொறந்து அனுவிக்குத அளவு நரக வேதனய அனுவிப்பான்.

    குறள் 836:

    பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
    பேதை வினைமேற் கொளின்

    நேர்மையான பாத தெரியாத கூறுகெட்டவன் தொடங்கின காரியத்த முடிக்க ஏலாம காரியத்தையும் கெடுத்து தானும் கெட்டு அழிவான்.

    குறள் 837:

    ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
    பெருஞ்செல்வம் உற்றக் கடை

    புத்திகெட்டவன்கிட்ட பணம் குவிஞ்சிச்சின்னா அத அயல் மனுசங்க சுருட்டிக்கிட்டுப் போவாகளே தவித்து அவன்கிட்ட பாசமா இருக்க சொந்தபந்தம் பசியால தான் வாடும்.

    குறள் 838:

    மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
    கையொன் றுடைமை பெறின்

    நல்லதுகெட்டது தெரியாத பேதைகிட்ட பொருள் கெடச்சிச்சின்னா அது கோட்டிக்காரன் கள் குடிச்சு மயங்குதது கணக்கா ஆவும்.

    குறள் 839:

    பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
    பீழை தருவதொன் றில்

    புத்திகெட்ட பேதைகிட்ட வச்சிருக்க சேக்க ரொம்ப இனிமை. ஏம்னு கேட்டா அவுககிட்டேந்து பிரிஞ்சு போகுத நேரம் வெசனப்பட வேண்டியதில்ல.

    குறள் 840:

    கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
    குழாஅத்துப் பேதை புகல்

    படிச்ச புத்திசாலி பெரிய மனுசங்க இருக்க சபையில கூறுகெட்ட பேதை நொழையுதது ஒருத்தன் கழுவாத கால படுக்க மேல வச்சது கணக்கா ஆவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 83

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 83

    நாங்குநேரி வாசஸ்ரீ

    83. கூடா நட்பு

    குறள் 821:

    சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு

    மனசார இல்லாம வெளிஒலகத்துக்கு சேக்காளிமாரி நடிக்கவன்,  பொருளத் தாங்குததுக்கு ஒதவுதது கணக்கா தோணினாலும் பொருள வெட்டி எறிய ஒதவுத பட்டடை கணக்கா தான்.

    குறள் 822:

    இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
    மனம்போல வேறு படும்

    பாக்குததுக்கு வேண்டியவரு கணக்கா இருந்து மனசுக்குள்ளார வேண்டாதவரா இருக்கவங்களோட சேக்க தாசியோட மனசு கணக்கா உள்ளார ஒண்ணும் வெளிய ஒண்ணுமா வித்தியாசப்படும்.

    குறள் 823:

    பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது

    பல நல்ல நூல்களப் படிச்சிருந்தாலும் பகைய மனசுல வச்சிருக்கவன் மனசு திருந்தி நல்ல சேக்காளியாவது நடக்க ஏலாத காரியம்.

    குறள் 824:

    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்

    சிரிச்சுப் பேசி நம்மள சீரளிக்க நெனக்கவுகளோட சேக்கயக் கண்டு பயந்துக்கிடணும்.

    குறள் 825:

    மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
    சொல்லினால் தேறற்பாற் றன்று

    மனசு ஒத்துப்போவாம பழகுதவங்களோட வார்த்தய நம்பி எந்தக் காரியத்திலயும் எறங்கக் கூடாது.

    குறள் 826:

    நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை உணரப் படும்

    சேக்காளி கணக்கா இனிக்க பேசினாலும் பகையாளியோட சொல்லுல இருக்க உண்மய அப்பமே உணந்துக்கிடலாம்.

    குறள் 827:

    சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்

    வில்லோட வளைவு தீம செய்யுததுக்குத்தான். அதுகணக்கா பகையாளி பம்மிக்கிட்டு கும்புடுதத நன்மனு நெனைக்கக் கூடாது.

    குறள் 828:

    தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
    அழுதகண் ணீரும் அனைத்து

    பகையாளி கும்பிடுதப்போ கைக்குள்ளார  கொலைசெய்யுத ஆயுதம் இருக்கும். அவன் அழுகையில வெளிவிடுத கண்ணீரும் அதுமாரிதான்.

    குறள் 829:

    மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
    நட்பினுட் சாப்புல்லற் பாற்று

    வெளிய சேக்காளி கணக்கா பெரிசா காட்டிப்போட்டு மனசுக்குள்ளார எளக்காரமா நெனைக்கவன அவன் மொறையிலயே நாமுளும் போலியா ஒப்புக்கு சேக்காளிமாரி நடிச்சு கவுக்கணும்.

    குறள் 830:

    பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
    டகநட் பொரீஇ விடல்

    பகையாளிகூட பழகுத காலம் வருதப்போ மனசார இல்லாம மேம்போக்கா சேக்காளிமாரி இருந்துட்டு பொறவு அந்த சேக்கய உட்டுப்போடணும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 82

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 82

    நாங்குநேரி வாசஸ்ரீ

    82. தீ நட்பு

    குறள் 811:

    பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
    பெருகலிற் குன்றல் இனிது

    மனசால உருக்கமா இருக்கமாரி பசப்புதவங்களோட சேக்கய வளத்துக்கிடதவிட கொறச்சிக்கிடது நல்லது.

    குறள் 812:

    உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
    பெறினும் இழப்பினும் என்

    தனக்கு தேவப்படுதப்போ சேக்காளி போல நடந்துக்கிட்டு பொறவு தேவையில்லாத நேரம் பிரிஞ்சுபோவுதவங்களோட சேக்க இருந்தா என்ன. இல்லாட்டி என்ன.

    குறள் 813:

    உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
    கொள்வாரும் கள்வரும் நேர்

    என்ன கெடைக்கும்னு எதிர்பாத்து பழகுத சேக்காளி, தாசி, களவாணி இந்த மூணு பேரும் ஒருத்தருகொருத்தர் சமம் தான்.

    குறள் 814:

    அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
    தமரின் தனிமை தலை

    போர்க்களத்துல கீழதள்ளி விட்டுப்போட்டு ஓடுத புத்தியில்லாத குதிர கணக்கா இருக்கவங்களோட சேக்க வைக்கத விட தனியா இருக்கது மேல்.

    குறள் 815:

    செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
    எய்தலின் எய்தாமை நன்று

    நாம பலவிதமா ஒதவி செஞ்சாலும் நமக்கு பாதுக்காப்பா இல்லாத அல்பங்களோட சேக்கயா இருக்கத விட இல்லாம இருக்கது நல்லது.

    குறள் 816:

    பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
    ஏதின்மை கோடி உறும்

    கூறுகெட்டவனோட நெருங்கின சேக்காளியா இருக்கத விட புத்திசாலி ஒருத்தனுக்கு பகையாளியா இருக்கது கோடிமடங்கு மேல்.

    குறள் 817:

    நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
    பத்தடுத்த கோடி உறும்

    மொகத்துல சிரிப்பாணியோட சிரிச்சுப் பேசி நடிக்குதவுகளோட சேக்கய விட பகையாளியால வருத துன்பம் பத்துகோடி மடங்கு நன்ம.

    குறள் 818:

    ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
    சொல்லாடார் சோர விடல்

    முடியும் ங்குத காரியத்தையும் முடிக்க உடாம கெடுக்கவங்க ஒறவ அவுகளுக்கு தெரியாம பையப் பைய வெலக்கிக்கிடணும்.

    குறள் 819:

    கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
    சொல்வேறு பட்டார் தொடர்பு

    சொல்லுதது ஒண்ணு, செய்யுதது ஒண்ணு னு இருக்கவனோட சேக்க கனவுல கூட துன்பத்தக் கொடுக்கும்.

    குறள் 820:

    எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
    மன்றிற் பழிப்பார் தொடர்பு

    நம்ம வீட்டுக்குள்ளார வந்து நல்லதனமா பேசிப்போட்டு பொறவு பலபேர் இருக்க சபையில பொறளி பேசுதவன் ஒறவ வெலக்கிக்கிடணும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 80

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 80

    நாங்குநேரி வாசஸ்ரீ

    80. நட்பாராய்தல்

    குறள் 791:

    நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
    வீடில்லை நட்பாள் பவர்க்கு

    ஒருத்தரப் பத்தி சரியா தெரிஞ்சிக்கிடாம சேக்காளியாப் பழகினோம்னா பொறவு விட்டுப்போட்டு போக ஏலாத அளவு சங்கடத்த உண்டாக்கிப் போடும்.

    குறள் 792:

    ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
    தான்சாம் துயரம் தரும்

    மறுபடி மறுபடி சோதிச்சுப் பாக்காம பழகுத சேக்க(நட்பு) சாவுத அளவு தொயரத்த உண்டாக்கிப் போடும்.

    குறள் 793:

    குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
    இனனும் அறிந்தியாக்க நட்பு

    ஒருத்தனோட கொணம், பொறந்த குடி, செஞ்ச தப்பு, சாதி சனத்தோட தன்ம இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட பொறவு சேக்காளியா இருக்கணும்.

    குறள் 794:

    குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு

    ஒசந்த குடியில பொறந்து பொல்லாப்புக்கு அஞ்சுதவன ஏதாச்சும் விலையாக் கொடுத்தாது சேக்காளியா ஆக்கிக்கிடணும்.

    குறள் 795:

    அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
    வல்லார்நட் பாய்ந்து கொளல்

    தப்பு செய்ய நெனயுதப்போ மனசு நோவ அழவுட்டு செஞ்சபொறவு கண்டிச்சும் சொல்லுத ஒலக நடப்ப அறிஞ்சவுகளோட சேக்காளியா இருக்கணும்.

    குறள் 796:

    கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதோர் கோல்

    கெடுதல் வருததுனால ஒரு நன்மயும் உண்டு. அது எவன் நல்ல சேக்காளின்னு காட்டிக் கொடுத்துப் போடுத சாதனமா அமைஞ்சுக்கிடும்.

    குறள் 797:

    ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
    கேண்மை ஒரீஇ விடல்

    கூறுகெட்டவனோட சேக்கய விட்டுப்போடுதது ஒருத்தனுக்கு லாபத்தக் கொடுக்கும். .

    குறள் 798:

    உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
    அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு

    உற்சாகத்தக் கொறைக்குத எந்தக் காரியத்தயும் நெனச்சிப் பாக்கக் கூடாது. அது கணக்கா சங்கடம் வருதப்போ நழுவி ஓடுத சேக்காளிய கூட வச்சிக்கிடக் கூடாது.

    குறள் 799:

    கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
    உள்ளினும் உள்ளஞ் சுடும்

    சங்கடப்படுத காலத்துல கைவிட்டுட்டுப் போனவுகளோட நெனப்பு, சாவுத நேரத்துல கூட நெஞ்ச சுட்டுப் பொசுக்கும்.

    குறள் 800:

    மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும
    ஒருவுக ஒப்பிலார் நட்பு

    மனசுல மாசு இல்லாதவுகளோட சேக்க வச்சிக்கிடணும். ஒத்துப் போவாதவங்களோட சேக்கய, விலை கொடுத்தாது வெலக்கிப் போடணும்.

    (அடுத்தாப்லையும் வரும்…

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 79

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 79

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    79. நட்பு

    குறள் 781:

    செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்கரிய யாவுள காப்பு

    சேக்கயா (நட்பா) இருக்கது போல ஒசந்த செயல் இல்ல. அதுகணக்கா பாதுகாப்புக்கு ஏத்த செயலும் வேற இல்ல.

    குறள் 782:

    நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்னீர பேதையார் நட்பு

    அறிவுள்ளவங்கள சேக்காளிய வச்சிக்கிடதது வளர் பிறை கணக்கா. கூறுகெட்டவங்க கூட சேக்காளியா இருக்கது தேய்பிறை கணக்கா தேஞ்சுக்கிட்டே போவும்.

    குறள் 783:

    நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு

    நல்ல புத்தகங்களப் படிக்கிதப்போயெல்லாம் சந்தோசம் உண்டாகுதது கணக்கா நல்ல கொணம் இருக்கவங்க கூட எப்பம் பழகினாலும் மகிழ்ச்சி உண்டாவும்.

    குறள் 784:

    நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்சென் றிடித்தற் பொருட்டு

    ஒருத்தங்கூட சேக்காளியா இருக்கது எப்பமும் சந்தோசமா இளிச்சுக்கிட்டே இருக்கதுக்கு இல்ல. அவன் வேண்டாத வேலை செய்யுதப்போ கண்டிச்சு திருத்துததுக்குத் தான்.

    குறள் 785:

    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்

    ஒருத்தங்கூட சேக்காளியா ஆவுததுக்கு ஒட்டுஒறவா இருக்கதோ கூடிக்குலாவுததோ அவசியமில்ல. ரெண்டுபேரோட நெனப்பும் ஒண்ணுபோல இருந்தாப் போதும்.

    குறள் 786:

    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
    தகநக நட்பது நட்பு

    நேர்ல பாக்குதப்போ மொகத்துல மட்டும் சிரிப்பாணிய வச்சிக்கிட்டு மேலோட்டமா பழகுதது நல்ல சேக்க இல்ல. மனசார நேசத்தோட பழகுதது தான் நல்ல சேக்க.

    குறள் 787:

    அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
    அல்லல் உழப்பதாம் நட்பு

    சேக்காளிய கெட்ட வழில போகவிடாம தடுத்து நல்ல வழியக் காட்டி கேடு வருத நேரம் அவன்கூட சேந்து சங்கடப்படுதது தான் உண்மையான சேக்க.

    குறள் 788:

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு

    உடுப்பு அவுந்து போவுத நேரம் கை எங்ஙன வெரசலா சரி செய்யுமோ,அது கணக்கா சேக்காளிக்கு சங்கடம் வருதப்போ வெரசலோ ஒதவுதவன் தான் உண்மையான சேக்காளி.

    குறள் 789:

    நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
    ஒல்லும்வாய் ஊன்றும் நிலை

    சேக்கைக்கு ஒசந்த நெல எதுன்னா எப்பமும் வித்தியாசமில்லாம தன்னால ஏலுத நேரமெல்லாம் சேக்காளிக்கு ஒதவி அவனத் தாங்குதது தான்.

    குறள் 790:

    இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
    புனையினும் புல்லென்னும் நட்பு

    இவரு எம்மேல இத்தன பாசம் வச்சிருக்காரு. நானும் அப்டித்தான்னு ஒருத்தருக்கொருத்தர் அலங்காரப் பேச்சு பேசினாகன்னா சேக்க அல்பமா போயிடும்.

    (அடுத்தாப்லையும் வரும்…

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 78

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 78

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள்

    78. படைச் செருக்கு

    குறள் 771:

    என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
    முன்னின்று கல்நின் றவர்

    போர்க்களத்துல ஒரு வீரன் சொல்லுதான். எங்க தலைவர எதித்து நில்லாதீக. நின்னவனெல்லாம் செத்து இப்பம் நடுகல்லா நட்டமா நிக்கான்.

    குறள் 772:

    கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது

    காட்டுல ஓடுத முயல் மேல குறி தப்பாம எய்து கொன்ன அம்ப கையில வைக்கதவிட, வெட்ட வெளில நிக்க யான மேல குறி தப்பி வீசின வேலக் கையில பிடிக்கது ஒசந்தது.

    குறள் 773:

    பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
    ஊராண்மை மற்றதன் எஃகு

    பகையாளிக்கு பயப்படாம இருக்க வீரத்த ஆண்மை ங்குதோம். அந்தப் பகையாளிக்கு துன்பம் வருதப்போ ஒதவுதத ஆண்மையின் உச்சம் ங்குதோம்.

    குறள் 774:

    கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்

    போர்க்களத்துல கையில வச்சிருந்த வேலை யானை மேல எறிஞ்சு தொரத்தி உட்டுப்போட்டு இன்னொரு வேலத் தேடிக்கிட்டு வாரவன், தன் நெஞ்சுமேல பாஞ்ச வேலப் பாத்து சந்தோசப்பட்டு அதப் புடுங்கி சண்டபோடுவான்.

    குறள் 775:

    விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
    ஓட்டன்றோ வன்க ணவர்க்கு

    எதிருல இருக்க பகையாளிய கோவமா பாத்துக்கிட்டிருக்குத கண்ணு அவன் வேல எறிஞ்ச சமயம் இமைச்சிதுனா அது தோத்துப் போகல்ல செய்யும்.

    குறள் 776:

    விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
    வைக்குந்தன் நாளை எடுத்து

    ஒரு வீரன் தான் வாழ்ந்த நாளக் கணக்குபோட்டுப் பாத்து, போரால தன் ஒடம்புல தழும்பு விழாத நாளயெல்லாம் வீணான நாள்னு வெறுத்து ஒதுக்கிப்போடுவான்.

    குறள் 777:

    சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
    கழல்யாப்புக் காரிகை நீர்த்து

    உசிரப்பத்திக் கவலப்படாம தன்னயச் சுத்தி பரவி இருக்க புகழ மட்டுமே விரும்புத வீரன் காலுல கட்டுத வீரக்கழல் தனி பெரும கொண்டது.

    குறள் 778:

    உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
    செறினுஞ்சீர் குன்றல் இலர்

    போர்க்களத்துல உசிரப்பத்தி கவலப்படாம சண்டபோடுத வீர மறவன், ராசா கோவப்பட்டு வேண்டாம்னு தடுத்தாலும் தன் வீரத்துல கொறைய மாட்டான்.

    குறள் 779:

    இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
    பிழைத்த தொறுக்கிற் பவர்

    சபதம் செஞ்சதுக்குத் தக்கன போர்ல சாவுததுக்கு துணிஞ்ச வீரன யாராச்சும் எளக்காரமா பேச முடியுமா?

    குறள் 780:

    புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
    டிரந்துகோட் டக்க துடைத்து

    தன்னய நல்ல மொறையில பாத்துக்கிட்ட தலைவன் தனக்காக கண்ணீர் உடுததுகணக்கா சாவு வந்துச்சின்னா அந்தச் சாவுத வாய்ப்பு கேட்டுப்பெறுத அளவுக்கு சிறப்பானது.

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 77

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 77

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    77.படை மாட்சி

    குறள் 761:

    உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
    வெறுக்கையுள் எல்லாம் தலை

    எல்லா  வகைப்படையும் கொண்டு எடஞ்சலுக்கு அசராம செயிக்க ஒதவுத படை ராசாவோட செல்வங்கள் எல்லாத்திலயும் ஒசந்தது.

    குறள் 762:

    உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
    தொல்படைக் கல்லால் அரிது

    போர்ல சேதம் ஏற்பட்டு பலம் கொறைஞ்சாலும் எந்தவித எடஞ்சலுக்கும் பயப்படாதநெஞ்சுறுதி பழம்பெருமை கொண்ட படைக்கு இல்லாம வேற எதுக்கு இருக்க முடியும். .

    குறள் 763:

    ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை 
    நாகம் உயிர்ப்பக் கெடும்

    எலிகள் கூட்டமா சேந்து பகையக் காட்டினாலும் பாம்பு மூச்சு விட்டுச்சுன்னா அதுங்க கெட்டழிஞ்சு போவும். 

    குறள் 764:

    அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
    வன்க ணதுவே படை

    எந்த நெலமயிலயும் அழிஞ்சு போவாம பகையாளியோட சதிக்கு தொணை போவாம பரம்பரையாவே பயமில்லாம உறுதியா இருக்கதுதான் படை. 

    குறள் 765:

    கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை

    உசிர எடுக்குத சாவே முன்ன வந்தாலும் பயப்படாம ஒண்ணாநின்னு எதித்து நிக்குத சக்தி உள்ளதே படை. 

    குறள் 766:

    மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
    எனநான்கே ஏமம் படைக்கு

    வீரம், மானம், நல்லவழில நடக்குதது, தலைவனோட நம்பிக்கையப் பெறுதது இந்த நாலும் படையைப் பாதுகாக்குத பண்புகள் ஆவும்.  

    குறள் 767:

    தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
    போர்தாங்கும் தன்மை அறிந்து

    சண்டயத் தடுக்குத மொறையத் தெரிஞ்சுக்கிட்டு மொதல்ல வருத படைய செயிச்சி பின்னால வருதவங்க தாக்காதமாரி தடுக்குதது படை.

    குறள் 768:

    அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
    படைத்தகையால் பாடு பெறும்

    சண்டபோடுத வீரமும் எதித்து நிக்குத பலமும் இல்லன்னா கூட அது தன் அழகான அணிவகுப்பால் பெரும பெத்துக்கிடும். 

    குறள் 769:

    சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
    இல்லாயின் வெல்லும் படை

    தன் அளவுல கொறஞ்சு சிறிசாப் போவுதது, தலைவன வெறுக்குதது, வறுமை இது ஏதும் இல்லன்னா படை செயிச்சிக்கிடும். 

    குறள் 770:

    நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
    தலைமக்கள் இல்வழி இல்

    நெறைய நாள் நெலச்சு நிக்குத வீரர்கள் ரொம்ப பேர் இருந்தாலும் தலைவன் இல்லன்னா அந்தப் படை நெலச்சி நிக்காது.

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 76

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 76

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள்

    76.பொருள் செயல்வகை

    குறள் 751:

    பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
    பொருளல்ல தில்லை பொருள்

    தகுதியில்லாதவங்களக் கூட ஒசத்தி மதிக்க வைக்கது அவுக கிட்ட குவிஞ்சு கெடக்க  பணம் தான். 

    குறள் 752:

    இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
    எல்லாரும் செய்வர் சிறப்பு

    பணம் இல்லாதவுகள எல்லாரும் எளக்காரம் பண்ணுவாங்க. பணம் இருந்திச்சின்னா பெருமப் படுத்துவாங்க. 

    குறள் 753:

    பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று

    பொருள் னு சொல்லுத அணையா விளக்கு நெனச்ச எடத்துக்குப்போயி எல்லா எடஞ்சலையும் தீத்து வச்சிரும். 

    குறள் 754:

    அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்

    நல்ல வழியில கெடுதல் செய்யாம சம்பாதிச்ச பணம் தான் ஒருத்தனுக்கு அறநெறியக் காட்டி சந்தோசத்தக் கொடுக்கும்.

    குறள் 755:

    அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல்

    பொறத்தியார் மேல இரக்கம் காட்டாம, நேசம் இல்லாம சேத்த பணத்த வச்சிக்கிட்டு சந்தோசப்படாம அது கெடுதலத்தான் கொடுக்கும்னு நெனச்சி விட்டுப்போடணும். 

    குறள் 756:

    உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
    தெறுபொருளும் வேந்தன் பொருள்

    வரியும், சுங்கமும், செயிச்ச பகையாளி நாடு கட்டுத கப்பமும் ராசாவோட பொருள்கள் ஆவும். 

    குறள் 757:

    அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
    செல்வச் செவிலியால் உண்டு

    அன்புங்குத ஆத்தா பெத்த அருள் ங்குத பச்சப்புள்ள பொருள் னு சொல்லுத வளர்ப்புத்தாயல வளரக் கூடியது.

    குறள் 758:

    குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
    றுண்டாகச் செய்வான் வினை

    தன் கையில பணத்த வச்சிக்கிட்டு ஒரு காரியத்த தொடங்குதது மலை மேல ஏறி நின்னுக்கிட்டு பதனமா யானைச் சண்ட பாக்குதது போல ஆவும். 

    குறள் 759:

    செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃதனிற் கூரிய தில்

    பொருள சம்பாதிச்சி சேத்துவச்சிக்கிடணும். ஏம்னா பகையாளியோட அகராதிய (செருக்கு) அழிக்குத கூரிய அரிவாள் கணக்கா இருக்கது அதுஒண்ணுதான்.

    குறள் 760:

    ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
    ஏனை இரண்டும் ஒருங்கு

    நல்ல வழியில நெறைய பணம் சேத்தவங்களுக்கு மத்த அறமும், இன்பமும் சுளுவாக் கெடச்சிப்போடும். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 75

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 75

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    75.அரண்

    குறள் 741:

    ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் 
    போற்று பவர்க்கும் பொருள்

    படையெடுத்து சண்டபோடுதவங்களுக்கு கோட்டை ஒதவியா இருக்கும். சண்ட போடப்பயந்து உள்ள பதுங்கி இருக்க நெனைக்கவங்களுக்கும் கோட்டை உதவியா இருக்கும். 

    குறள் 742:

    மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடைய தரண்

    தெளிவான தண்ணி, வெட்ட வெளி, ஒசரமான மலை, அழகான நிழல் தருத காடு இந்த நாலும் இருக்கது தான் அரண். 

    குறள் 743:

    உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
    அமைவரண் என்றுரைக்கும் நூல்

    ஒசரம், அகலம், பலம், பகையாளியால அழிக்க ஏலாத அமைப்பு இந்த நாலும் அமஞ்சிருக்கதுதான் கோட்டை னு படிச்சவுக சொல்லுவாக. 

    குறள் 744:

    சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
    ஊக்கம் அழிப்ப தரண்

    காவல் செய்ய வேண்டிய இடம் சிறுசாவும்  கோட்டையோட சுற்று பெரிசாவும் , சண்ட போட வருத பகையாளிக்கு மலைப்பத் தருததாவும் இருக்கது அரண். 

    குறள் 745:

    கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
    நிலைக்கெளிதாம் நீர தரண்

    பல நாள் முற்றுகைக்குப் பொறவும் எதிரியால கைப்பத்த முடியாம, உள்ள இருக்க மக்களுக்கும், படை வீரர்களுக்கும் தேவைப்படுத சாப்பாட்டு வசதியோட, பகையாளி கூட சண்ட போட ஏதுவாவும் அமச்சிருக்கதே அரண் ஆவும்.   

    குறள் 746:

    எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்
    நல்லா ளுடைய தரண்

    உள்ள இருக்கவங்களுக்கு தேவைப்படுத எல்லாம் இருக்கதாவும், வெளியில இருக்க பகையாளி கூட சண்ட போட பலசாலி வீரர்களைக் கொண்டதாவும் இருக்கது அரண். 

    குறள் 747:

    முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
    பற்றற் கரிய தரண்

    சுத்திவளச்சோ, வளைக்காமலோ, சூதுவாது செஞ்சோ என்னமும் செஞ்சும் பகையாளியால கைப்பத்த முடியாமப் போவுத பலம் கொண்டது அரண். 

    குறள் 748:

    முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
    பற்றியார் வெல்வ தரண்

    சுத்தி வளச்சி முற்றுகையிட்டவங்களையும் உள்ள இருந்துக்கிட்டே சண்டபோட்டு வெரட்டதுக்கு ஏதுவா அமஞ்சது அரண். 

    குறள் 749:

    முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
    வீறெய்தி மாண்ட தரண்

    சண்ட தொடங்கின பொறவு உள்ள இருந்துக்கிட்டே தாக்குத அளவு தனிச் சிறப்பு கொண்டது அரண்.

    குறள் 750:

    எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
    இல்லார்கண் இல்ல தரண்

    எல்லா சிறப்பும் இருக்க கோட்டையில உள்ள இருக்கவங்க சண்ட போடுத தெறம இல்லாம இருந்தாங்கன்னா பிரயோசனம் இல்ல. 

    (அடுத்தாப்லையும் வரும்)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 74

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 74

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    74.நாடு

    குறள் 731:

    தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
    செல்வருஞ் சேர்வது நாடு

    செழிப்புகொறையாத வெளச்சலும், படிச்ச அறிவாளிகளும், சுயநலம் இல்லாத பணக்காரங்களும் சேந்து இருக்க எடம் தான் நாடு.   

    குறள் 732:

    பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
    ஆற்ற விளைவது நாடு

    அதிக பொருள் வளம் இருக்கதாவும், எல்லாரும் விரும்புதமாரியும், கேடு இல்லாம நல்ல வெளச்சலோட இருக்கதும்தான் சிறந்த நாடு.  

    குறள் 733:

    பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
    கிறையொருங்கு நேர்வது நாடு

    மத்த நாட்டுலேந்து வந்து குடியேறுதவங்களோட சுமையத் தாங்கி அரசுக்கு வரி செலுத்துதக்கு ஏதுவா வளமா இருக்கது சிறந்த நாடு. 

    குறள் 734:

    உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
    சேரா தியல்வது நாடு

    வயித்துப் பசி, நோவுநொடி, பகையாளிங்க இவையெல்லாம் இல்லாம இருக்கதுதான் நாடு.

    குறள் 735:

    பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
    கொல்குறும்பும் இல்லது நாடு

    கூட்டங் கூட்டமா கூடவே இருந்து குழிபறிக்குத பகையும், அரச நெருக்கடிக்குத்தள்ளுத கலகக்காரங்க , கொலைகாரங்க இவுகளால வெளையுத பொல்லாப்பும் இல்லாம இருக்கதே சிறந்த நாடு. 

    குறள் 736:

    கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
    நாடென்ப நாட்டின் தலை

    பகையாளியால பாழ்பட்டுப் போவாம ஒருக்கா போனாலும் அத சரி செஞ்சுக்கிடுத அளவு வளமா இருக்கதும் தான் மத்ததவிட சிறந்த நாடு.

    குறள் 737:

    இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
    வல்லரணும் நாட்டிற் குறுப்பு

    ஊத்துத் தண்ணி, மழைங்குத ரெண்டு வகை நீர்வளமும் உயரமாவும் அகலமாவும் இருக்க மலையும் அதுலேந்து கெளம்பி ஓடுத ஆறும் , பலமான கோட்டச்சுவரும் நாட்டுக்குத் தேவைப்படுத உறுப்புக்கள் ஆவும். 

    குறள் 738:

    பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

    நோவுநொடி இல்லாமை, செல்வம், நல்ல வெளச்சல், சந்தோசமான வாழ்க்க, நல்ல பாதுகாப்பு இந்த அஞ்சும் ஒரு நாட்டுக்கு அழகு னு படிச்சவங்க சொல்லுவாக. 

    குறள் 739:

    நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
    நாட வளந்தரு நாடு

    அதிகமா சிரமப் பட்டு முனைஞ்சு ஒழைச்சு வளமா இருக்க நாடுகள விட இயற்கையிலயே எல்லா வளத்தையும் கொண்டிருக்கது தான் சிறந்த நாடு. 

    குறள் 740:

    ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
    வேந்தமை வில்லாத நாடு

    நல்ல ராசா இல்லாத நாட்டுல எல்லாவித வளமும் இருந்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லாமப் போவும்.  

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 73

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 73

    -நாங்குநேரி வாசஶ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    73. அவை அஞ்சாமை

    குறள்721:

    வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்

    அளவா பேசுத கொணம் உள்ளவுகளுக்கு சபையில இருக்க மனுசங்க படிச்சவங்களா, படிக்காதவங்களா ங்குத வகைய உணந்துக்கிடுத சக்தி இருந்திச்சின்னா பேசுதப்போ தப்புசெய்ய மாட்டாங்க. 

    குறள்722:

    கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
    கற்ற செலச்சொல்லு வார்

    படிச்சவங்க முன்ன தாம் படிச்சத அவுக மனசுல பதியுதமாரி சொல்லுதவங்க படிச்சவங்க எல்லாரையும்விட ஒசத்தியானவங்க.

    குறள்723:

    பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
    அவையகத் தஞ்சா தவர்

    பகையாளிகூட சண்டபோட்டு சாவுததுக்கு நெறையபேர் இருப்பாக. படிச்சவங்க முன்ன பயப்படாம பேசுததுக்கு கொறைய ஆட்கள்தான் இருப்பாக. 

    குறள்724:

    கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்

    அறிவாளிங்க சபையில நாம படிச்சத அவுக ஏத்துக்கிடுதமாரி சொல்லிப்போட்டு நம்மளவிட அதிகம் படிச்சவங்ககிட்டேந்து நிறைய விசயத்தக் கத்துக்கிடணும். 

    குறள்725:

    ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
    மாற்றங் கொடுத்தற் பொருட்டு

    பெரியமனுசங்க இருக்க சபையில குறுக்க கேள்விகேக்கும்போது பயப்படாம பதில் சொல்லுததுக்காவ இலக்கணமும், தருக்கம் ங்குத  அளவைத் திறமும் கத்துக்கிடணும். 

    குறள்726:

    வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்
    நுண்ணவை அஞ்சு பவர்க்கு

    பயந்தாக்கொள்ளிக்கு வாள் கூட என்ன சம்பந்தம்? சபையில பேசுததுக்கு பயப்படுதவங்களுக்கு அவுக படிச்ச நூல் கூட என்ன சம்பந்தம்?

    குறள்727:

    பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
    தஞ்சு மவன்கற்ற நூல்

    சபையில பேசுததுக்கு பயப்படுதவன் படிச்ச நூல், போர்க்களத்துல பயப்படுத பேடி கிட்ட இருக்க கூரான வாள் கணக்கா ஆவும். 

    குறள்728:

    பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லா தார்

    அறிவாளிங்க முன்ன அவுக மனசுல பதியுதமாரி சொல்ல ஏலாதவங்க எத்தன நூல்களப் படிச்சிருந்தாலும் பிரயோசனமில்ல. 

    குறள்729:

    கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
    நல்லா ரவையஞ்சு வார்

    அறிவாளிங்க கூடியிருக்க எடத்துல பேச பயந்தவங்க எத்தன படிச்சிருந்தாலும் படிக்காதவனவிட தாழ்த்தியாதான் மதிக்கப்படுவாங்க.

    குறள்730:

    உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
    கற்ற செலச்சொல்லா தார்

    சபைக்கு பயந்து தாம் படிச்சத ஏத்தாமாரி சபையில பேசத்தெரியாதவங்க உசிரோட இருந்தாலும் செத்தவனுக்கு சமானம் தான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 72

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 72

    நாங்குநேரி வாசஸ்ரீ

    72. அவை அறிதல்

    குறள் 711:

    அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்

    சொல்லுத வார்த்தையோட தன்மைய உணந்துக்கிட்ட அறிவாளிங்க சபையில உக்காந்து இருக்கவங்களோட தன்மையையும் புரிஞ்சுக்கிட்டு ஏத்தாமாரி பேசுவாங்க.

    குறள் 712:

    இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர்

    சொற்களோட அர்த்தம் (பொருள்) தருத போக்க புரிஞ்சி வச்சிருக்க நல்லவங்க சொல்குத்தமும் பொருள் குத்தமும் வாராம கேக்குதவங்களோட நிலைமையயும் சரியா புரிஞ்சுக்கிட்டு பேசணும்.

    குறள் 713:

    அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
    வகையறியார் வல்லதூஉம் இல்

    சபையில இருக்கவங்க தன்ம தெரியாம பேசுதவங்களுக்கு சொற்களோட வகையும் தெரியாது, பேசுத தெறமையும் கெடையாது.

    குறள் 714:

    ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
    வான்சுதை வண்ணங் கொளல்

    அறிவாளிக்கு முன்ன தானும் அறிவாளி கணக்கா நடந்துக்கிடணும். புத்தியில்லாதவன் முன்ன வெள்ளசுண்ணாம்பு கணக்கா தன்னய அறிவில்லாதவனா காட்டிக்கிடணும்.

    குறள் 715:

    நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
    முந்து கிளவாச் செறிவு

    அறிவாளிங்க கூடியிருக்க எடத்துல முந்திரிக்கொட்ட கணக்கா பேசாம இருக்க அடக்கம் எல்லா நன்மயிலயும் சிறந்த நன்ம.

    குறள் 716:

    ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
    ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

    அறிவாளிங்க முன்ன பேசுதப்போ தப்பாயிடுச்சின்னா அது ஒழுக்கங்கெட்டதுக்கு சமானம்.

    குறள் 717:

    கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
    சொற்றெரிதல் முன்னர் இழுக்கு

    குத்தமில்லாத சொற்களச் சலிச்சு எடுத்து பேசுதவங்ககிட்ட தான் அவங்க படிச்ச படிப்போட பெரும வெளங்கும்.

    குறள் 718:

    உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
    பாத்தியுள் நீர்சொரிந் தற்று

    உணந்துக்கிடுத சக்தி உள்ளவுக கிட்ட பேசுதது வளருத பயிரு இருக்க பாத்தியில தண்ணியப் பாய்ச்சுதது கணக்கா பலனக் கொடுக்கும்.

    குறள் 719:

    புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லு வார்

    நல்லவங்க சபையில மனசுல பதியுதமாரி பேசுத தெறம இருக்கவங்க முட்டாளுங்க கூட்டத்துல அறவே பேசாம இருக்கது நல்லது.

    குறள் 720:

    அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
    அல்லார்முன் கோட்டி கொளல்

    அறிவுள்ளவங்க தனக்கு சமமில்லாத அறிவுகெட்டவங்க முன்ன பேசுதது அழுக்கான முற்றத்துல சிந்தின அமிழ்தம் கணக்கா வீணா போவும்.

    Share