நெல்லைத் தமிழில் திருக்குறள்- 79

-நாங்குநேரி வாசஸ்ரீ
79. நட்பு
குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
சேக்கயா (நட்பா) இருக்கது போல ஒசந்த செயல் இல்ல. அதுகணக்கா பாதுகாப்புக்கு ஏத்த செயலும் வேற இல்ல.
குறள் 782:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு
அறிவுள்ளவங்கள சேக்காளிய வச்சிக்கிடதது வளர் பிறை கணக்கா. கூறுகெட்டவங்க கூட சேக்காளியா இருக்கது தேய்பிறை கணக்கா தேஞ்சுக்கிட்டே போவும்.
குறள் 783:
நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
நல்ல புத்தகங்களப் படிக்கிதப்போயெல்லாம் சந்தோசம் உண்டாகுதது கணக்கா நல்ல கொணம் இருக்கவங்க கூட எப்பம் பழகினாலும் மகிழ்ச்சி உண்டாவும்.
குறள் 784:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு
ஒருத்தங்கூட சேக்காளியா இருக்கது எப்பமும் சந்தோசமா இளிச்சுக்கிட்டே இருக்கதுக்கு இல்ல. அவன் வேண்டாத வேலை செய்யுதப்போ கண்டிச்சு திருத்துததுக்குத் தான்.
குறள் 785:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
ஒருத்தங்கூட சேக்காளியா ஆவுததுக்கு ஒட்டுஒறவா இருக்கதோ கூடிக்குலாவுததோ அவசியமில்ல. ரெண்டுபேரோட நெனப்பும் ஒண்ணுபோல இருந்தாப் போதும்.
குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு
நேர்ல பாக்குதப்போ மொகத்துல மட்டும் சிரிப்பாணிய வச்சிக்கிட்டு மேலோட்டமா பழகுதது நல்ல சேக்க இல்ல. மனசார நேசத்தோட பழகுதது தான் நல்ல சேக்க.
குறள் 787:
அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
சேக்காளிய கெட்ட வழில போகவிடாம தடுத்து நல்ல வழியக் காட்டி கேடு வருத நேரம் அவன்கூட சேந்து சங்கடப்படுதது தான் உண்மையான சேக்க.
குறள் 788:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
உடுப்பு அவுந்து போவுத நேரம் கை எங்ஙன வெரசலா சரி செய்யுமோ,அது கணக்கா சேக்காளிக்கு சங்கடம் வருதப்போ வெரசலோ ஒதவுதவன் தான் உண்மையான சேக்காளி.
குறள் 789:
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
சேக்கைக்கு ஒசந்த நெல எதுன்னா எப்பமும் வித்தியாசமில்லாம தன்னால ஏலுத நேரமெல்லாம் சேக்காளிக்கு ஒதவி அவனத் தாங்குதது தான்.
குறள் 790:
இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு
இவரு எம்மேல இத்தன பாசம் வச்சிருக்காரு. நானும் அப்டித்தான்னு ஒருத்தருக்கொருத்தர் அலங்காரப் பேச்சு பேசினாகன்னா சேக்க அல்பமா போயிடும்.
(அடுத்தாப்லையும் வரும்…