Tag: சத்தியமணி கவிதைகள் தமிழ் அவ்வை

  • கவியரசும்  கடவுளும்

    கவியரசும் கடவுளும்

    [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

    கவியரசும் கடவுளையும் கண்டதெங்கே

    கண்குளிர கவிதைகளை பொழிந்ததெங்கே

    மண்மகிழ மனங்குளிர கவர்ந்தனால்

    பண்ணிசையில் கலந்தபல பாடலிங்கே

    கவியரசு இறைவனையும் பார்த்தவிதம்

    கண்மூடி கொண்டவனைக் கண்டவிதம்

    ஒவ்வொன்றாய் நானிங்கே சொல்லட்டுமா

    ஒருநாளும் போதாது யுகமும் வேண்டும்

    மதுவெனும் பேயணங்கை கொண்ட போதும்,

    மங்கையரின் மஞ்சனையில் துஞ்சும் போதும்,

    தங்கமகள் செந்தமிழாள் கொஞ்சும் போதும்,

    மெல்லிசை விஸூவோடு கெஞ்சும் போதும்,

    பக்திபட கதைகளிலே கலந்த போதும்,

    வீணையுடன் மகாதேவன் மீட்டும் போதும்,

    கண்ணனுடன் கீதையுடன் கலந்த போதும்,

    கட்டுமீசை பாரதியை படித்த போதும்,

    கழகமென கொடுத்து சொத்தை இழந்த போதும்,

    பகுத்தறிவை தேடி பக்தி சுவைத்த போதும்,

    தனக்கு என்று தன்னுள்ளே நின்ற போதும்,

    தயங்காது உண்மைசொலும் நேரம் போதும்,

    போதும் போதுமென தெய்வம் கண்டார்

    கவியரசு

    போகின்ற போக்கினிலே நமக்கும் தந்தார்

    திரைப்பாடல் என்றதனால் எளிதில் ஈர்க்கும்

    தினம்தினமும் கேட்பதனால் செவிகள் ஏற்கும்

    இசையோடு மூளையிலே பதிந்ததெலாம்

    எப்போதும் இனிக்கிறது  ஆமாம்  என்பீர்

     

    Share
  • தீபாவளி 21

    நேர்மறை எழுக எதிர்மறை விழுக
    பார்மறை ஒதும் படி………………………………………………..1

    புகையும் பகையும் அகலும் அகலால்
    குகையும் ஒளியாகவே………………………………………….2

    ஒளியும் ஒலியும் வழியும் அறியும்
    விழியும் மனதும் களி……………………………………………..3

    சக்கரம் சுற்றிட சங்கடம் கலைய
    இக்கணம் இறையைப் பிடி……………………………..4

    புத்தாடை அணியும் இந்நாளில்
    பக்தியும் வளர்க்கப் பார்…………………………………….5

    கசப்பினை மறந்து இனிப்புச் சுவைத்தாலும்
    கசப்பிலே அகலும் பிணி……………………………………6

    நடிப்பும் நாடகம் (தீப)ஒளியில் தெரிந்தபின்
    படிப்பினை பயனாக முயல்……………………………7


    தெரியாதென நினைத்துப் பிழைகள் செய்தாரை
    சரியாகக் காட்டும் நாள்…………………………………….8


    குருவிடமே திருடும் மாணவர் பலருக்கும்
    குருடுமே அளிக்கும் விதி…………………………………..9


    தீயால் வண்ணம் தீட்டிடும் வளியதை
    தூய்மை ஆக்க முனை……………………………………….10

    இல்லோர் அகமகிழ இருப்பதைப் பகிரவே
    இருப்போர் பெற்ற பயன்…………………………………….11

    வாழ்த்தோடு மட்டும் பயனிலை வையத்தில்
    வீழ்ந்தோரை எழுப்பி விடல்……………………………….12

    முறுக்கோடு காரம் சுவைக்கும் போதிலே
    பொறுப்போடு பற்கள் துணை………………………..13

    கங்கை நீராடின் கசடுபோம் வினையகல
    அங்கை யால்தானம் செய்………………………………….14

    ஊசியின் பட்டாசு வெடிப்பது அன்றி
    ஓசியில் மனதும் கெடும்……………………………………15

    தலையாய் தீபாவளி பலருக்கு சிலருக்கு
    தலையில் தீராத வலி…………………………………………….16

    இருட்டில் ஒளியான பின்னரும் சிலருக்கு
    இருட்டில் தான்வயிர் வளர்ப்பது…………………17

    கெடுவது இனுமென்ன இருக்கிறது ஆட்சியில்
    சுடுவதே கொள்கை யானபின்……………………18

    கற்றவர்க்குச் சிறப்பிலை தேர்வில் தோற்று
    உற்றவர்க்கு ஊடகம் இனி………………………………..19

    எரிவாயு கடனேற சம்மதம் ஊடகமே
    கரிவாயு வந்தால் பிணி…………………………………….20

    வாழ்த்தினை வழங்கினால் கீர்த்தி வெறுத்து
    காழ்ப்பினை அளித்தே அழி………………………….21




    Share
  • கோட்டையினில் கவியரசு

        புது கோட்டைகளில்  உன் முடியரசு
         மது  ஊற்றுகளில்      தமிழ்  குடியரசு
         உள  மாளிகையில்    பெருமா நிலஅரசு
         நீ  மாத்திரம்  தான்  கவி புவியரசு       ()
        செட்டினில்  நுழைந்ததும் மெட்டுவரும்
        மெட்டினில்  கலந்ததும்  சந்தம் வரும்
        சட்டென  சொற்களில் ஆற்றல்வரும்
        தட்டினில்  பதிவிடும் பாட்டுவரும்
        பள்ளி களறியா பாமரர்க்கும்
        கல்வி களறியா  காதலருக்கும்
        மல்யுத்தமறியா கோழையருக்கும்
        புரிந்திடும் உரந்தரம்  பொருளிருக்கும்   ()
        கண்ணனும் பிறந்து தவழ்ந்திடுவான்
       ஆயரின்  மடியினில் உறங்கிடுவான்
       மூங்கில்  காடுகள் குழலோதும்
       தூங்கிட   மருத்துவம் இது போதும்
        ஏய்த்தவர் இன்னும்   இருந்தாலும்
       ஏமாற்றியவர்  தான்  இளித்தாலும்
       கோட்டைகள்  உன்கொடி  பறக்குதய்யா
       கோபுரங்கள் பார் வணங்குதய்யா !!   ()
    Share
  • என்னதவம் செய்தனையோ!-இரங்கற்பா

    சத்தியமணி

     

    அன்னல் அட்டல் பிஹாரி !!

    சினத்தையும் சிரிப்பால் சொன்னவர் இன்றுயில்லை
    சிரத்தையும் சிரசில் கொண்டவர் இன்றுயில்லை
    சிறப்பிலும் அமைதிக் காத்தவர் இன்றுயில்லை
    இறப்பிலும் எளிமை யேற்றவர் இன்றுயில்லை

    ஆட்சிகள் கவிழும்போதும் கலவரம் எழுப்பவில்லை
    காட்சிகள் கனத்தபோதும் நம்பிக்கை நழுவவில்லை
    கட்சிகள் அத்துணைக்கும் கலங்கரை விளக்கமாக
    மாட்சிமை பெற்றுயர்ந்தார் மதிநலம் பிறழவில்லை

    வன்முறை தூண்டவில்லை வாக்குகள் மாற்றவில்லை
    பன்முறை பரிகசிப்பில் பாரதம் சாய்க்கவில்லை
    மொழிவெறி இனவெறி பேசிடும் தலைவரில்லை
    குலவெறி கொண்டு ஆளும்குண வெறி கொள்ள‌வில்லை.

    ஏளனம் செய்தவர்க்கும் தண்டனை கொடுக்கவில்லை
    நூதனம் மாற்றம்செய்ய என்றுமே தயங்கவில்லை
    அரசாங்க கூட்டம் தன்னில் அவரிடம் கண்டதென்னில்
    அரவணைத்த நகைச்சுவைதான்! ஆணவம் கடுகுமில்லை!!

    எண்ணிய இன்பமெல்லாம் கவிதையாய் விளம்புபோதும்
    கண்ணிய மாககட்சி தலைவர்கள் வாழ்த்தும்போதும்
    விளம்பரம் செய்யவில்லை வெறுப்பினில் பேச்சுமில்லை
    புண்படு ம்படிபேசும் சுயநலக் காரரில்லை.

    இலஞ்சமுடன் இலாவன்ய ஊழல்கள் செய்துவிட்டு
    இலவசம் ஆட்சி கேட்டு ஏந்திடும் தலைவனில்லை.
    சொத்துகள் குவித்தாங்கே சொகுசினில் வாழுமந்த‌
    வித்தையும் அறியவில்லை!! விண்ணேகி சென்றாரே!!

    அட்டலின் கர்ஜனைக்கும் அவரிடும் கட்டளைக்கும்
    அணுகுண்டு போக்ரானில் அந்நியர் அச்சம்கொண்டார்
    சதியினில் வீழவைக்க எத்தனை எதிரியிங்கே
    விதியினில் சென்றபோதும் மீண்டிது ஆளுமென்றார்

    இப்படியோர் தலைவன் இனிமேலும் கிடைப்பாரோ!!
    இப்படியோர் கவிஞன் இனிமேலும்     பிறப்பாரோ!!
    இப்படியோர் மகனை பெற்றவளே ! பாரதமே ! – பெற்று
    இவனுறங்க உன்மடியில் என்னதவம் செய்தனையோ!!

    Share
  • சொல்லடா கேசவா….. சொல்லடா கேசவா

    சத்தியமணி

    7e602867b3481610dcea7e365857e599_500

    சிரிக்கிறாய்  அழுகிறாய்  அழைக்கிறாய் மெதுவாய்

    தெரிகிறாய்  மறைகிறாய்  அணைக்கிறாய்  சுகமாய்

    மண்ணிலெங்கும் தேடிதேடி உன்னிடத்தில் வந்தேன்

    மாதவனே கோவிந்தனே ‍ என்னிடத்தில் கண்டேன் க்ருஷ்ணா கேசவா  ()

     

    மாதுள‌ம் பூநிற‌ பாத‌ம்…. அதில் தாம‌ரையாகிட‌ நானும்

    வாரண‌‌ம் சூடிய‌ நீயும்… அதில் வாச‌னையாகிட‌ நானும்

    பிறவிகள் தொடர்ந்து வரும்…நம்உறவினைக் காத‌ல் என்கோ.

    சொல்ல‌டா கேச‌வா.. சொல்ல‌டா கேச‌வா ()

     

    ஒருவ‌ரும் இருவ‌ர‌ல்ல‌…நாம் இருவ‌ரும் ஒருவ‌ர‌ல்ல‌

    பிரிவ‌து ஒருமைய‌ல்ல‌.. சொல் ! பிழைவ‌ரும் உன‌க்குமெல்ல‌ !

    பிறவிகள் தொடர்ந்து வரும்…நம்உறவினை பக்தி என்கோ..

    சொல்ல‌டா கேச‌வா….. சொல்ல‌டா கேச‌வா ()

     

    பி.கு இதன் இசை வடிவ பகிர்வு  http://youtu.be/XmxkF8nHpDY

    Share
  • ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே (பகுதி 3)

    சத்தியமணி

    காஞ்சியில் காமாட்சி மதுரையில் மீனாட்சி

    தில்லியம் பதியில்ஆளும் தேவியே வாழியவே

    ஆஞ்சியில் மன்னர்நாட தலைநகர் வந்துஆள‌

    கொற்றவை கொடிபிடித்த கொலுவீற்று வாழியே

    நாஞ்சிலின் நுனிகண்ட நாரணி சீதையாகி

    மங்கள நாண்காக்கும் மாதாவே வாழியவே

    ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

    எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !   5

     

    வித்தையில் விஜயனாக பக்தியில் அனுமனாக

    சங்கீத மாமேதை நாரத முனிவனாக‌

    சித்திரை கதிராக சிங்கார வேலனாக

    மதியில் கண்ணனாக கவிதையில் தாசனாக

    இத்தரையில் உதித்த ஞானியர் வடிவமாக‌

    என்றும் வாழியவே ! எம்உடனுறை வாழியவே

    ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

    எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !   6

     

    பக்தியில் பதித்து அனுதின‌ம் துதித்து

    சக்தியின் தாளிலே ச‌ரண‌மடைந்தேன்

    வெற்றியை தருவாய் வினைகள் களைவாய்

    பற்றினேன் உன்பத‌மலர் அடியே

    தாயின் மலரடி போற்றி போற்றி

    குருவின் மலரடி போற்றி போற்றி

     

    Share
  • ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே (பகுதி 2)

    சத்தியமணி

    நவமணிகள் மின்னும் மாலைகள் அழகுபார்த்து

    பெருத்த மார்பகத்தில் அலங்கரித்து வாழியவே

    நலங்களைக் கவரியாக்கி கவிகளை கிரிடமாக்கி

    சொகுசாய் வீற்றிருக்கும் பேரழகே வாழியவே

    தாடங்கம் மின்னலிடும் அகிலாண்ட நாயகியோ

    இல்லையந்த திருக்கடவூர்  அபிராமியோ

    ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

    எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !  3

     

     

    கிளிகள் நாடும்கனி வண்டுகள் நாடும்மது

    பொருளை நாடுவோர்க்கு திருமகளே வாழியவே

    கவிகள் தேடும்சபை களிக்கும் உந்தன்அவை

    அருளைத் தேடுவோர்க்கு மலைமகளே வாழியவே

    துளிகள் வெள்ளமாகும் துயரம் யாவும்தீறும்

    ஒளியில் ஆனந்தமாய் தெரிபவளே வாழியவே

    ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

    எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !   4

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன் – சத்தியமணி

    முன்னுரை

    ஓராயிரம் பார்வையிலே என் பார்வையை நீயறிவாய்  , என் பார்வையில் உன்வடிவம்  ஓர் மாபெரும் கவியரங்கம். முத்தய்யா, உன்னை யொன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்  என்னைக் கட்டுரை  எழுதச் சொன்னால் ஒரு நாள்  போதுமா ஒரு மாதம் தான் போதுமா? எத்தனைப் படைப்புகள் …அப்பப்பா ! சின்ன கண்ணன் புன்னகையில் என்னத்தான் ரகசியமோ ? தட்டு தடுமாறும் எனைப் பார்த்து கேட்கிறீர் மயக்கமென்ன இன்னும் மெளனமென்ன என்று கேளிக்கையுடன்.? ஆயிரம் மலர்களே மலருங்கள் ஆயிரம் வார்த்தைகள் பகிருங்கள் கவியரசே என்றே தொடர்கிறேன்.  கவியரசே எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன், உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார் ?

    புகழுரை

    வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்று வாழவில்லை நீ.  எந்தஊர் என்றவனே என்று கேட்பவர் முன் இருந்தவூரைப் பெருமையுற செய்தவன் நீ. தமிழகம் பிறந்தாலும் உலகம் பிறந்தது எனக்காக …ஓடும் நதிகளும் எனக்காக என்று உரிமையாய் பாடியவன் நீ ? கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கவியென்றால் கவியரசுன்றன் வரியாகுமா எனக் காட்டியவன் நீ? புவியரசு தான் விதிக்குமா! கவியரசின் வரிகளும் வாடிக்கையாய் கேளிக்கைவரிகள் விதிக்குமய்யா! மெல்லிசை மன்னரின் மெட்டுகளும் உங்களின் வரிகளின் சொட்டுகளும்  அற்புத அலை வரிசைகளை செவிகளில் நுழைத்தன ! அனுபவம் புதுமை என்று பல்லவி பாடிய பின் விஸ்வநாதன் வேலை வேண்டும் என்றும் ஆடினாய். பளிங்கினால் ஒரு மாளிகையும் அமைத்து அதன் மஞ்சத்திலிருந்து  எல்லோரது   நெஞ்சத்தில் அமர்ந்தவன் நீயல்லவோ ? கருமை நிறக் கண்ணா !

    காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது போன்றது உங்கள் கவி பெருக்கு! கற்பனை  முறுக்கு!!. பல்லவியிலிருந்து சரணம் வரை அருவி போல் தொடராய் கவிதை வரும். இந்தத் திறன் இப்போது எவருக்கு இருக்கிறது ?   மலர்ந்தும் மலராத பாதி மலரானப் பாச மலராகட்டும் கண்ணே கலைமானே என்ற வாச மலராகட்டும் காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என்ற தாலாட்டாகட்டும் எதிலும் உங்களின் கை வண்ணம். இந்த கை வண்ணம் அங்கே கண்டேன் மை வண்ணம் இங்கே கண்டேன் என்று உங்களின் கவி தொகுப்பினில் எத்தனை ஆளுமைகள் ?  உண்மையில் பாடல் வந்ததும் தாளம் வந்ததா இல்லை தாளம் வந்ததும் பாடல் வந்ததா,  சொல்லுங்கள் பார்க்கலாம்? எனக்கு மட்டும் எனக்கு மட்டும் ரகசியம் சொல்வாய்,அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிட மாட்டேன்.

    எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா? நம் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?.வயற்காடாகட்டும் ஏரிகரையாகட்டும் கல்லூரி வளாகமாகட்டும் அயல்நாட்டு சங்கமாகட்டும் உம் பாட்டையே பாட வைத்தது யார்?

    சிறப்புரை

    என்னைப் போன்ற பூஜ்ஜியத்துக்குள், ஒரு ராஜ்ஜியம் அமைத்தவன் நீ.  புரியாமல் நின்றவன் இவன்.

    அத்தனையும்   முத்தமிழ் காவியமோ ஆன்றத் தமிழ் ஓவியமோ ? கோப்பையில் உன் குடியிருப்பாகலாம் ஒரு கோலமயில் உன் துணையாகலாம் வாசிக்கும் எங்களுக்கு அத்தனையும்  கள் போதை அமுதம் தான்.

    கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம் போல் தமிழ் மக்களுக்கு வாய்த்தது உங்களின் பாடல்கள்.   எளிமையாகவும் இனிமையாகவும் படிக்காத பாமர மக்களாகட்டும் ஆராய்ச்சி செய்யும் முனைவராகட்டும் அனைவருக்கும் உம் கவிதை தேனீர் விருந்து.  எப்படி ?  பார்த்தேன் ரசித்தேன் பக்கங்களை இசைத்தேன். பாட்டு பாடவா  பார்த்து பேசவா என்று தமிழை அழைத்ததால் என்னவோ?  அவளும் ஜல் ஜல் யெனும் சலங்கையொலி கூட்டி நடனமாடினாள் உங்கள் முன்.

    அறிவுரை

    புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி யில்லை என்பதில் உன் போராட்ட வாழ்க்கையை அறிய முடிகிறது. வந்து பிறந்துவிட்டேன்  ஆனால் வாழத் தெரியவில்லை என்பதில் காயங்கள் தெரிகிறது. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று வனவாசத்தில் வரித்த போது சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் என்றே மது போதையில் அடிமையானாய்.  போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே என்று ரசிகர்கள் அழுத போது மயக்கம் எனது தாயகம் மெளனம் எனது தாய் மொழி என்று ஆறுதல் அளித்தாய் . உங்கள் சொத்துகளை கபளீகரம் செய்த தொண்டர்களுக்கும்  யாரைத் தான் நம்புவதோ என்று குட்டு வைத்தாய்.  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று நிலைகுலைந்தாய். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததல்லவா ? யாரை நம்பி நான் பிறந்தேன் என்ற எழுச்சியுடன் நிமிர்ந்தாய்.  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று சவாலை சமாளித்தாய். நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு , உன்னை யறிந்தால் நீ உன்னை யறிந்தால் வரிகளும்  படிப்பில்லாத மக்களுக்கும் நம்பிக்கை கொடுத்தது.உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்பது  தாழ்ந்த மனப்பாண்மை நோயாளிகளுக்கும் ஊக்க மருந்து , ஆறுதல் அரவணைப்பு. செல்வத்தை சொல்லும் போது காசே தான் கடவுளடா

    என்றாய். பால் தரு பசுவுக்கு “இணங்காதோர் மனம் கூட இணங்கும் (கருணை) ,

    நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும் (நம்பிக்கை), வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும் (சிறப்பு), உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும் (பயன்) என்றாயே. தற்கால  அரசாங்கத்திற்கு கைக்குக் கைமாறும் பணமே – உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே, வரவு எட்டணா செலவு பத்தணா இக்கால நிலைக்கு ஏகப் பொருத்தம். அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் என்பதும் ஒரு ஏவுகணை தான்.”மலை போலே வரும் சோதனை யாவும்

    பனி போல் நீங்கி விடும்,நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்..,கூட இருந்தே குழி பறிச்சாலும் கொடுத்தது காத்து நிக்கும்” ஆகா அற்புதம்.

    இல்லறவுரை / காதல் உரை

    ‘நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை,காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை”  வல்லவன் இப்படி சொல்லலாமா ? பாலிருக்கும் பழமிருக்கும் பசியெடுக்காது உங்களின் பாட்டை கேட்டால். சிட்டு குருவி முத்தங் கொடுத்த இளமை காதலும் உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்  உதிரம் கொட்டுதடி என்ற முதிர்ந்த காதலும்  திரைப் பாடல்களாய் யார் தரப் போகிறார்கள்? மலர் போன்ற இதழ் இன்று பனிகண்டு துடிக்கும் என்ற வரிகளில் காமம் தெரிக்கிறது. ஆபாசம் தெரியவில்லை. ” சுக்கு மிளகு தட்டி சூப்பு வைச்சு”    என்றால் இன்று பாரத விருது !  அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பதுக்காகாது என்பதில் மின்னல். மனைவிக்கு வளர்ந்த கலை மறந்து விட்டாள் …..குடும்பக் கலை போதுமென்று … – அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா? என்ற அறவுரை  வழங்கினாய்.  திருமண அர்த்ததிற்கு “

    சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை

    சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை – (சண்டையே வராது பாருங்க) ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை”. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்  என்பதை உணர்ந்தார் போல் உன் கஜானாவும் எனது என்ற நிலையின்று.  காதலின் அர்த்தத்திற்கு  “பொன்னை விரும்பும் பூமியிலே,என்னை விரும்பும் ஓருயிரே,புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே” என்றாய். காதல் சிறகை காற்றினில் விரித்து பறந்தாய். என்னதான் ரகசியமோ இதயத்திலே, நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே என்றும் மயங்கினாய். “நடமாடும் மேகம் நவநாகரீகம் … நடமாடும் செல்வம் பணிவான தெய்வம் பழங்கால சின்னம் உயிராக மின்னும்”  என்று கன்னிகளின் பண்பைக் கூறினாய். பெண்மையை போற்றும் முகமாக ” ஈன்ற தாயை நான் கண்டதில்லை எனது தெய்வம் வேறெங்கும் இல்லை

    ”  என்றாய்.  ஊடலைச் சொல்லி “கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது,என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு,ஆசையில் விழுந்தேன் அங்கே,காலையில் கனவுகள் எங்கே” உறவாக்கினாய்.

    “மலராத பெண்மை மலரும், முன்பு தெரியாத உண்மை தெரியும்” என்றும் உசுப்பினாய். “ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன

    அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன” என்று பரிமளித்தாய்.

    கற்புக்கு  ” தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை,தெருவினிலே விழலாமா

    ,வேறோர் கை தொடலாமா,ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா,ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா” என்ற வர்ணித்தாய். குழந்தைக்கு ‘வாழாத மனிதரையும் வாழ வைக்கும் சேயல்லவோ, பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ’ என்றாயே பார்க்கலாம்.

    பகுத்தறிவு உரை

    அண்ணன் என்னடா என்ற பல்லவியில் குடும்ப அரசியலை கலக்கியவர் நீங்கள். அராஜகம் செய்ய வடக்கே முளைத்தவரை ராணி மகா ராணி யென்று பாடி,  கவியரசை புவியரசு வெற்றி கண்டதுண்டா என்று வரிகள் விட்டதை மூன்றாம் வகுப்பில் ரசித்தவன் நான். அது தான் நான் கவி யெழுத வித்திட்டதும். இன்றும் தில்லி ராஜபேட்டையில் நிமிர்ந்து நடக்க  வைக்கிறது செந்தமிழ் கவிதைகளை இயற்றி கொண்டு!புதியதல்லவே தீண்டாமை யென்பது புதுமையல்லவே அதை நீயும் சொன்னது  சமூகப் பிரச்சனைக்கு பகிரங்க கண்டனம்.இளம் பகுத்தறிவில் கடவுள் ஏன் கல்லானான் என்றும் இறைவன் இருக்கிறானா என்றும் எழுதிய வரிகள்,  முதிர்வில் இறைவன் வருவான், கடவுள் ஒருநாள் .. தனியே வருவான்,  இருக்கும் இடத்தைவிட்டு என்றும் பல்லவிகள் சரணங்களோடு உதயமாயின. ஆள்பவர்களின் அடிபணிவாயாயின் உனக்கு கவிபேரரசு,கவிமாபேரரசு எல்லாம் கிடைத்திருக்கும். “நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா , தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா”  நம்பிக்கை துரோகிகளுக்கோர் கணை. சமத்துவத்திற்கு “அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி… பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் பூமி சிரிக்கும்” . மனிதநேயத்திற்கு “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”  சுட்டிகாட்டினாய்.

    எழிலுரை

    இயற்கையை கையாளுவதில் கடவுளுக்கு பின் கவிதான். இயற்கையென்னும் கன்னியை வர்ணிக்கும் பால் “அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே,ந‌தி அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே! ” , “அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்…..பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன், பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்” கவிஞன் கடவுளுடன் பேசுகிறான். தமிழும் கவியுமாக “நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே….தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே….” வரிகள்.

    கண்ணனுரை

    யமுனைக் கண்ணனுக்கு கங்கை கரைத் தோட்டம் என்ற பல்லவியை போட்டாலும் பிரசிதம்! . ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதை காணுங்கள் என்றாய் குருவாயூரப்பனை? ஆனால் அவனோ நின்றபடி யிருக்கிறான்! நீங்கள் சொல்ல வந்தது அன்னப் பிரசனம் செய்ய அன்னை முன் அமர்ந்திருக்கும் குட்டி கோபாலர்களை அல்லவா ? அவ்வப்பொழுது கீதையையும், இதிகாசங்களையும், காவியங்களையும், பாசுரங்களையும், பாரதியையும் உமர்கயாமையும் காளிதாசையும் வரிகளில் படைத்தாய்.

    ஞான உரை

    கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா என்ற ஞானக் கேள்விக்கு  ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது ,அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது, ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது என்றே பதிலளித்தாயே ! நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா  அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா என்ற சித்த மந்திரம் எத்தனை திறம் !  பொதுவுடமையாய் “ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது நீரோடும் பாதைதன்னைக் குறிக்கும் – நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி  ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும் ” சொன்னது உன்னுள்ளும் பாரதி. “உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

    உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்” ஏகத்தின் அனுபவம். ” தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்,அது தெரியாமல் போனாலே வேதாந்தம்,மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி,என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி,உண்மை என்ன பொய்மை என்ன ?”  என்ன வரிகள்? “படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா

    பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா”  இன்றைய வாழ்க்கை நெறி.

    “சொர்க்கமும் நரகமும் நம் வசமே, நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே…..

    சத்தியம் தர்மங்கள் நினைக்கட்டுமே…. இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே” ஒரு சமாதானம்.

    முடிவுரை

    உங்களுடன் அமர்ந்து என் கவிதைகளை பகிர ரொம்ப ஆசைப் பட்டேன். உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை  காலம் செய்த கோலமய்யா கடவுள் செய்யும் ஜாலமய்யா ! அதற்கு  வாய்ப்பே வரவில்லை.  நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லைதான். அதற்காக இழந்தா நிற்பது ? நெஞ்சம் மறப்பதில்லை  அது நினைவை இழப்பதில்லை அல்லவா . அதற்காக போனால் போகட்டும் போடா என்று சொல்ல வேண்டாம்.   யார் பெறுவார் அந்த அரியாசனம் கவியரசோடு தனக்கும் ஒரு சரியாசனம் என்றே பாடுவேன். ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது உன்னைப் பார்த்த பின்னால். பார்த்தால்/படித்தால் பசி தீருமா என்று கேட்டால் ஆம் என்பேன் .  எனது பாட்டும் நீ  பாவமும் நீயானாய்.  நலந்தானா ! நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா என்பது என் கைப்பேசி அழைப்பு மணி. காவியப் பேரரசு வாலி படித்து சபாஷ் கொடுத்த இவன் எழுதிய உனக்கோர் இரங்கற்பாவின் வரிகள்

    கவிமகள் உன்னையே கணவனாய் எண்ணியே

    கற்புடை ம‌ங்கையாய் வாழ்ந்திருந்தாள்

    கவிநீ பிரிந்ததால் கண்டவர் நாவிலே

    கற்பிழந்து  இங்கே தவிக்கிறாள்

    கவியரசு கண்ணதாசனுக்கு இந்த தாசனின் சமர்ப்பணம்.

    Share
  • வல்லமைத் தமிழே !

    எப்படி வந்தாய் உள்ளே என்
    இதயக் கருவரைக் குள்ளே
    கற்பனை யென்றெனும் உடல் கலக்காமல்
    கவிதை யெனும்பெண் கருசிதைக்காமல் – தமிழே ()

    பாரத பூமியில் பழம்பெரும் நாடினில்
    பாரதி வாணியை யாழுடன் நாவினில்
    ஏற்றி நவின்றிடும் வாக்கினில் அருளுடன்
    ஏட்டில் பள்ளியில் வல்லமைத் தமிழே()
    ஊற்றிட ஊற்றிட உவந்திடும் கள்ளாய்
    காற்றிட சுவாசப் பைக்குள் துள்ளாய்
    வேற்றிட மென்றெனை வெறுப்பார்க் கில்லாய்
    போற்றி புகழ்தரு வல்லமைத் தமிழே ()

    மாறுதல் த‌ந்திடும் காலமும் வந்திடும்
    ஆறுதல் மொழிகளும் வாழ்த்துகள் சிந்திடும்
    ஊறுதல் இன்றினி ஊர்வலம் என்றிடும் – வாகை
    தேறுதல் பெற்றிட வல்லமைத் தமிழே()

    Share
  • மணிமொழியே ஒரு மடல்

    தில்லி-16                            உ                            23-02-14

     

    மணிமொழியே மின்மினி மொழியே!

    மின்வழியால் ஒரு மடல் செம்மொழி அருட்பெருங்கடல்

    காதற்கடிதம்  கவியானால் சாதற்கடிதமும் கவிதானே

    காதில்சேரும் இசையெனவே தொடர்ந்தேன்நா மணிவழியே!

     

    மறந்திடும் உன் குணம் சுகந்தானா ? மறைத்திடும் வதனமும் சுகந்தானா?

    உறைந்தவுன் இன்குரல் சுகந்தானா? மனமிருந்தால் அது சுகந்தானா?

    பக்க பக்கமாய் எழுவதற்கு பாச(ர)மும் இல்லை சுமப்பதற்கு

    படிக்க நேருமுன் கசக்கிடுவாய் பகுத்துசுருக்கி எழுதுகிறேன்

     

    முப்பது வருடங்கள் கழிந்ததன்பின் முகப்பினில் இட்ட அத்திகதி

    இப்பவும் மூலையில்கிடக்குது பார்..இன்னும் மூளையில் கிடைக்குது பார்

    அப்பவும் முகவரி அறியாமல் அயலான் தேசம் சென்றவளே

    கப்பலின் பயணம் காற்றாலே! காதலும் அப்படி யென்றவளே!

     

    மஞ்சள் அட்டையில் கடிதமெலாம் அழியாதெனநீ சொன்னதடி

    நெஞ்சில் பதியவைத்து விட்டாய்! மணவாளன் பெயர் மாற்றியடி

    பின்கோடிட்டு காட்டவென பெயராகல்லில் செதுக்கியடி – அடி

    உள்ளூடிட்டு  வலித்த‌ வண்ணம் காலமும் நேரமும் கடந்ததடி

     

    இட்டப் பசையது விட்டதனால் அஞ்சல்தலையும் விட்டதடி

    வட்டப் பொறிப்புரு  முத்திரையால் தொலைந்த குப்பையும் ஆனதடி

    நட்டதை வேருடன் பிடுங்குதல்போல் நலம்தரு யாழினைப் பாழாக்கி

    இட்டதை வேடிக்கை யாக்குதலோ இத்தமிழ் நாட்டினர் மரபாமோ ?

     

    கற்புயர்க் கண்ணகி குலத்தாரும் கம்பனின் இராமன் இனத்தாரும்

    நற்பெயர் ஆர்த்தக் குறளாரும் நலிந்திடின் மானுடம் பாழாகும்

    முற்பிறப் பளித்த பயனெனவே மூடர்திருமண பந்தமெலாம்

    கற்பனைக் கட்டிலில் நாடிடுவார் கர்ப்பங்கலைத்திட ஓடிடுவார்

     

    பணத்தைத் தேடிடும் பரிவாரம் மணநாண் மந்திரம் ஓதிடினும்

    குணத்தை நாடாக் குணத்தாலே குலத்தை கெடுக்கும் காலமிது

    முகவரி மாற்றிட போய்சேரும் முத்திரைப் பெற்றிடும் கடிதமென

    தலைவரைத் தேடிச் சார்பவர்க்கு  வணிகந்தானோ திருமணமும்?

     

    இல்லறம் இன்பம் அன்பாலே சொல்லறம் என்பது அறிவாலே

    நல்லறம்  காண்பாள் வாழ்வாலே  நலமென்றென செய்த‌தெல்லாம்

    வில்லங்க மாக்கி விட்டவர்யார் ? விவாகராத்தில் முடித்துவிட்டாய்

    கல்மனந் தாங்கியும் ஆகிடநீ  காலமும் விதியெனச் சபித்துவிட்டாய்

     

    இப்படி எத்தனை எத்தனையோ இக்கலி தன்னில் நடக்குதடி

    தப்படி  என்றும் சொன்னாலும் தவறிய மங்கையர் பலகோடி

    அப்படி ஆகா(தினி) செய்திடவே அபாய மணிஒலி எழுப்புகிறேன்

    எப்படி  யுமவர் திருந்திடுவார் என்றே கடிதம் அனுப்புகிறேன்

     

    தன்நலங் காணும் நிலைவிட்டு  தவிக்கும் மனதைப் பண்படுத்து

    உன்நலங் காணும் உறவுகளை  அடைந்து உறவைப் பலப்படுத்து

    முன்நலங் கூறும் மொழியாலே எழுந்து வாழ்வைச் சீர்படுத்து

    பின்நலம் சேரும் வகையாலே வாழ்வின் அர்த்தம் நிலைநிறுத்து!!

     

    Share
  • மறைந்திருந்தே கேட்கும் மர்மமென்ன?

    (மெட்டு : மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன )

    மறைந்திருந்தே கேட்கும் மர்மமென்ன?

    இவள் கவி அழகா இல்லை தமிழ் அழகா வென்று ()

     

    கவிரசமும்

    கருத்தில்  கவிரசமும்

    கவி         தரும்   கருத்தில்    கவிரசமும் – காதல்

    மொழி    வரும்  விதத்தின்   மதுரசமும்   கேட்டு ()

     

    எங்கிருந்தாலும் உன்னை நான் அடைவேன் – உன்னை

    என்னையல்லால் வேறு யார் அடைவார்

    முத்தமிழ் சதிராட  மோகமா இதழ்

    மொத்தமும் உனக்கென்றேன் போதுமா

    மாதவா மாயவா ஸ்ரீதரா கோவிந்தா ()

     

    மயக்கிடும் முரளி இசைக் கேட்டேன் – அதன்

    வசியத்திலே யமுனையில் நான் மிதந்தேன்

    காதலிலே என்னைத் தவிக்கவிட்டு   ஒரு

    பாவமும்  செய்யாப் பிள்ளையைப் போல்

    மாதவா மாயவா ஸ்ரீதரா கோவிந்தா ()

     

    சொல்ஆட  பொருளாட அணியாட  சந்தமாட,  சந்தமுடன் சிந்துமாட‌

    எழுத்தாட   அசையாட  சீராட   தளையாட,  அடியோடு  தொடையுமாட‌

    (நேராட நிறையாட நிறைவோடு நாவுமாட , புணர்ச்சியின் உணர்ச்சியாட‌)

    இடையாட நடையாட சுரமாட நடமாடி நீயும் வாராய்
    மாயனே மாதவா கண்ணனே கேசவா எனையாளும் வேங்கடா வா!

    Share
  • சொர்க்க வாசல் ?!

    வாசலில் செம்மண் கோலமிட்டால் வருபவர்க்கு சொர்க்க வாசல்
    ஓசையில் மணியுடன் கதவுகள் திறந்தால் வந்த‌வர்க்கு சொர்க்க வாசல்
    வாவென் றழைக்க அன்பர்கள் இருந்தால் திறப்பவர்க்கு சொர்க்க வாசல்
    புன்னகை புரிந்து வந்தனங்கிடைத்தால் விருந்தினர்க்கு சொர்க்க வாசல்

    அன்புடன் வார்த்தை அருவிடப் பகிரும் வாயுமேயொரு சொர்க்க வாசல்
    பண்புடன் விருந்து பகிர்வுடன் அன்புச் சமைத்திடும் உள்ளம் சொர்க்க வாசல்
    அருசுவை யேற்று தொந்தியில் செரிமன் ஆகிடும் இல்லற சொர்க்க வாசல்
    அருமை உங்களின் சமையல் என்ற ஆசிகள் காதினில்! சொர்க்க வாசல்

    அழுதிடும் குழவியின் அரவங் கேட்டு சுரபிகள் திறப்பதும் சொர்க்க வாசல்
    தொழுதிடும் அடியார் குறைகளை கேட்டு வரங்கள் வருவது சொர்க்க வாசல்
    பழுதுடன் பிணிதனை நீக்கும் இலவச மருத்துவர் இல்லம் சொர்க்க வாசல்
    படிப்புடன் பண்புகள் கற்றுகொடுத்திடும் பள்ளிவாசலும் சொர்க்க வாசல்

    தாயகம் காப்போம் என்றே சேவைகள் தந்தவர் வாசல் சொர்க்க வாசல்
    ஆயுதம் யேந்தி கடும்பனி குளிரினில் ஆள்பவர் அடிகள் சொர்க்க வாசல்
    பாதகம் செய்வோர் திருந்திட சிறையின் வாசலும் அவர்க்கே சொர்க்க வாசல்
    சாதனைப் புரிவோர் மகத்துவந் தன்னைச் சாற்றும் காற்றும் சொர்க்க வாசல்

    ஏகாதசிதமில் ஆழ்வார் சுரங்களைப் பாடிமால் தரிசனம் சொர்க்க வாசல்
    தீராபசியினில் தீந்தமிழ்க்கவிதை ஆக்கும் கணினியில் சொர்க்க வாசல்
    தேன்மொழி யானதும் செம்மொழிசங்க மேடையுந்தானே சொர்க்க வாசல்
    மின்மொழி யாகிட வல்லமைத் தளத்தில் நுழைவதும் தானே சொர்க்க வாசல்

    Share
  • ஊழல் நாற்பது

    இல்லறத்தில்

    1. கொட்டுகிற குழாய்களை நிறுத்த வேண்டாம்
    2. குடியிருப்பில் குப்பைகளை அகற்ற வேண்டாம்
    3. மின்சாரம் வீணடிக்க வருந்த வேண்டாம்
    4. அண்டை வீட்டு சண்டைகளை நிறுத்த வேண்டாம்
    5. அறிவுரைகள் என்று குட்டை குறைக்க வேண்டாம்

    கல்லூரியில்

    1. சிகப்பு சிக்னல் விளக்குகளை மதிக்க வேண்டாம்
    2. சீக்கிரத்தின் த்ரில் ஸ்பீடு குறைக்க வேண்டாம்
    3. கட் அடித்து வகுப்பறைக்கு செல்ல வேண்டாம்
    4. பிட் அடித்து மாட்டும் வரை அசர வேண்டாம்

    வாலிபத்தில்

    1. சீக்கிரத்தில் பணம் சேர்க்க நேர்மை வேண்டாம்
    2. பெட் அடித்து  சூதாட தயங்க வேண்டாம்
    3. அடிதடியில் இறங்காமல் தடுக்க வேண்டாம்
    4. சகிப்புத்தனம் சலிப்பு தரும் சேர்க்க வேண்டாம்
    5. நல்லவரின் அறிவுறையை நினைக்க வேண்டாம்
    6. வல்லவரின் கால்பிடிக்க தயங்க வேண்டாம்
    7. படித்தால் தான் பட்டம்யென அஞ்ச வேண்டாம்

    வேலை கிடைத்த பின்

    1. நம்மைவிட முன்னேற்றம் யெவர்க்கும் வேண்டாம்
    2. நட்புதனில் இலாபமின்றி சேர்க்க வேண்டாம்
    3. கொடுக்கும் குணம் எடுக்கும் வரை குறைய வேண்டாம்
    4. கெடுக்கும் மனம் இருக்கும் வரை மறைய வேண்டாம்
    5. எடுக்கும் தனம் திருட்டுஅல்ல விடவும் வேண்டாம்
    6. அலுவலக தூக்கத்தை நிறுத்த‌ வேண்டாம்
    7. தொலைபேசி அரட்டைகளை குறைக்க வேண்டாம்

    ஆட்சிக்கு வந்தபின்

    1. எதிரிகூட கூட்டுசேர வெட்கம் வேண்டாம்
    2. வாக்குறுதி தொகுதி பற்றி நினைக்க வேண்டாம்
    3. அன்பளிப்பாய் தருவதைநீ மறுக்க வேண்டாம்
    4. அரசியலில் இதுசகஜம் மறக்க வேண்டாம்
    5. பொய் சொல்வார் முன் மெய்யை பேச வேண்டாம்
    6. புறம் கூறி களிப்பாற்று கலைக்க வேண்டாம்
    7. விதிகளை மீறிடவே தயங்க வேண்டாம்
    8. விளயாட்டு கலவரங்கள் அழிக்க வேண்டாம்
    9. பதவி தரும் உரிமைகளை அறுக்க வேண்டாம்

    வியாபார யுக்தி

    1. தொலைகாட்சி நாடகங்கள் தவிர்க்க வேணடாம்
    2. விளம்பரங்கள் கண்டு மனம் வெம்ப வேண்டாம்
    3. ஆபாச ஆடைகளை தடுக்க வேண்டாம்
    4. கலப்படத்தில் கஞ்சத்தனம் பிடிக்க வேண்டாம்
    5. பணம் கொடுத்து காரியங்கள் இழிவு வேண்டாம்
    6. பிறர் செய்யும் பிழைகளை மறக்க வேண்டாம்
    7. தன்னிச்சை செயல்படுத்த தயங்க வேண்டாம்
    8. சுதந்திரமாய் தப்பு செய திகைக்க‌ வேண்டாம்

    சாரம்

    குடிகளின் செயல்பாட்டில்  இத்தனை ஊழல்

    கோனென்ன மந்திரியும் அத்தனை ஊழல்

    நடப்பதுதான் நடக்கும்மென அறிந்த பின்னும்

    கிடைப்பதுதான்கிடைக்கும் என புரிய வேண்டும்

    கண்மூடி கொண்டாலும் இத்தனையும் நடக்கும்

    கண்திறந்து கண்டாலும் இத்தனயும் நிகழும்

    ஊழலில் உலகமெல்லாம் ஊறிஊறி போனதனால்

    நீயும் நானுமென விதிவிலக்கா! சொல்லுங்கள்

    Share
  • என்றும் புரியா இரகசியம் !

    என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
    எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()

    கண்கள் விளம்பிய இரகசியம் – உன்
    காதணி ஆடிய இரகசியம்
    முறுவல் உதிர்த்த இரகசியம் – பின்
    முணுமுணுத்த இதழ் இரகசியம்
    என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
    எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()

    கால்கள் சிணுங்கிய இரகசியம் மென்
    காலடி ஓசை இரகசியம்
    மூச்சும் பேச்சும் இரகசியம் – வெண்
    முத்து பற்கள் இரகசியம்
    கருமை எழுதிய இரகசியம் – இமைக்
    கற்றை வளைவதும் இரகசியம்
    என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
    எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()
    அன்பாய் குழைவதும் இரகசியம் – உன்
    அரவணைப் பெல்லாம் இரகசியம்
    அடம்பிடி வாதமும் இரகசியம் – பின்
    அடிமைப் படுத்திடும் இரகசியம்
    என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
    எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()

    Share
  • எந்திர வாழ்க்கையிலே !

    எந்திர வாழ்க்கையிலே மந்திரம் தேடுகிறார்
    தந்திரங் கற்றுபின்னர் மந்திரி ஆகவென()

    கம்மென் றிருந்திருந்தால் கணபதி தெரிவான்
    சம்மென் றிருந்திருந்தால் சண்முகன் வருவான்
    சிவனென் றிருந்திருந்தால் சிற்சபை கிடைக்கும்
    அவமான மின்றியிங்கே அருட்சபை மதிக்கும் ()

    அரியென் றிருந்திருந்தால் அறியாமை விலக்கும்
    சரிபுத்தர் வழியெனினும் சத்புத்தி பிறக்கும்
    ஒமென்றிருந்தாலும் உள்ளம் அமைதியிலே
    ஆமென்றிருந்தாலும் ஏசுவும் அன்பினிலே()

    அல்லா வென்றிருந்திருந்தால் எல்லாமும் உண்டு
    கல்லா லானச்சிலைக்குமே கருணையும் உண்டு
    சொல்லா முதுமைவரை பொல்லாகுணம் யெடுத்து
    எல்லாம் பெற்றிடினும் அருளின்றி யேதுபயன்()

    Share