Tag: திருக்குறள்

  • குறளின் கதிர்களாய்… (472)

    குறளின் கதிர்களாய்… (472)

    செண்பக ஜெகதீசன்

    கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
    எல்லாம் ஒருங்கு கெடும்.
    – திருக்குறள் -1056 (இரவு)

    புதுக் கவிதையில்…

    இருப்பதை
    இல்லையென மறைக்கும்
    துன்பநிலை
    இல்லாதவரைக் கண்டால்,
    இல்லாமை என்னும்
    வறுமைத் துன்பம்
    எல்லாம் ஒருசேர
    இல்லாமல் அழிந்துபோகும்…!

    குறும்பாவில்…

    உள்ளதை ஒளிக்கும் துன்பம்
    இல்லாரைக் கண்டால் இரப்பவரின் வறுமைநோய்
    இல்லாமல் மொத்தமாய் அழிந்துபோகும்…!

    மரபுக் கவிதையில்…

    இருப்பாய்க் கையில் உள்ளதையே
    இல்லை என்றே மறைத்திருக்கும்
    பெருத்த துன்பம் அதுதன்னைப்
    பெறாதோர் தம்மைப் பார்த்தாலே,
    வருந்தி இரப்போர் தாம்கொண்ட
    வறுமை என்னும் நோயதுவும்
    இருந்த இடமே தெரியாமல்
    எல்லாம் சேர்ந்தே அழிந்திடுமே…!

    லிமரைக்கூ…

    இல்லையெனும் துன்ப நிலையே
    இல்லாரைப பார்த்தாலே இரப்போர் கொண்ட
    வறுமைத் துன்பமேதும் இலையே…!

    கிராமிய பாணியில்…

    குடுத்து வாழணும் குடுத்து வாழணும்
    எரக்கிறவங்களுக்குக் குடுத்து வாழணும்,
    இருக்கிறத இல்லங்காமக்
    குடுத்து வாழணும் குடுத்து வாழணும்..
    தனக்கிட்ட இருக்கிறத
    இல்லண்ணு மறைக்கிற
    துன்பநெல இல்லாதவங்களப் பாத்தா,
    எரப்பவங்ககிட்ட இருக்கிற
    வறுமத் துன்பம்
    இருந்த எடந்தெரியாம
    எல்லாம் ஒண்ணாப் போயிடுமே..
    அதால
    குடுத்து வாழணும் குடுத்து வாழணும்
    எரக்கிறவங்களுக்குக் குடுத்து வாழணும்,
    இருக்கிறத இல்லங்காமக்
    குடுத்து வாழணும் குடுத்து வாழணும்…!

    Share
  • குறளின் கதிர்களாய்… (471)

    குறளின் கதிர்களாய்… (471)

    செண்பக ஜெகதீசன்

    இன்மை எனவொரு பாவி மறுமையும்
    இம்மையும் இன்றி வரும்.
    -திருக்குறள் -1042 (நல்குரவு)

    புதுக் கவிதையில்…

    வறுமை என்னும் பாவி
    ஒருவனிடம்
    வந்து சேர்ந்தால்
    அவன்
    வருபவர்க்கு ஈவதால் பெறும்
    மறுமை இன்பமும்,
    மண்ணில் தாமே அனுபவிக்க
    ஏதுமின்மையால்
    ஏற்படும்
    இம்மை இன்பமும்
    இல்லாமல் போகுமே…!

    குறும்பாவில்…

    வறுமையாம் பாவியொருவனிடம் வந்தால்
    ஈகையால் பெறும் மறுமை இன்பமும், இல்லாமையால்
    இம்மையின்பமும் இல்லாமல் போய்விடும்…!

    மரபுக் கவிதையில்…

    வறுமை என்னும் பாவியது
    வந்து விட்டால் ஒருவனிடம்,
    மறுமை இன்பம் பெறும்வழியாம்
    மற்றோர்க்கு ஈய ஏதுமிலா
    வெறுமை நிலையே வருவதுடன்
    வேண்டு மட்டும் அனுபவிக்கும்
    உறுதி குலையப் பொருளில்லா
    உண்மை நிலைதான் இம்மையிலே…!

    லிமரைக்கூ…

    இன்பம் தந்திடும் மறுமை
    இலாதுபோகும் ஈயாததால், இன்பமில்லை இம்மையிலும்
    ஒருவனிடம் வந்தால் வறுமை…!

    கிராமிய பாணியில்…

    கொடியது கொடியது
    வறும கொடியது,
    மனுச வாழ்க்கயில
    வறும கொடியது..
    வறுமங்கிற பாவி
    வந்திட்டா ஒருத்தங்கிட்ட
    அடுத்தவங்களுக்குக் குடுக்கிறதுக்கு
    ஒண்ணுமில்லாததால அவனுக்கு
    மேல் ஒலக இன்பம் இல்ல,
    ஓலகத்தில ஆண்டு அனுபவிக்க
    எதுவும் இல்லாததால
    இந்த
    ஓலக இன்பமும்
    இல்லாமப் போவுமே..
    அதால
    கொடியது கொடியது
    வறும கொடியது,
    மனுச வாழ்க்கயில
    வறும கொடியது…!

    Share
  • குறளின் கதிர்களாய்… (470)

    குறளின் கதிர்களாய்… (470)

    செண்பக ஜெகதீசன்

    இரவார் இரப்பார்க்கு ஒன்றீவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர்.
    -திருக்குறள் -1035 (உழவு)

    புதுக் கவிதையில்…

    தம் கைகளால்
    உழவுத் தொழில் செய்து
    உணவு உண்ணும்
    இயல்புடையோர்
    இரவார் பிறரிடம் சென்று,
    இரக்கத் தம்மிடம் வருவோர்க்கு
    இல்லையெனச் சொல்லாமல்
    ஈந்திடும் குணமுள்ளோர் அவரே…!

    குறும்பாவில்…

    தம்கையால் உழுதுண்டு வாழ்வோர்
    பிறரிடம் சென்றே இரவார், தம்மிடம்
    இரப்போர்க்கு இல்லையெனாது ஈவர்…!

    மரபுக் கவிதையில்…

    தமது கையால் உழுதுண்ணும்
    தன்மை கொண்டோர் வாழ்வினிலே
    தமக்கே வறுமை வந்தாலும்
    தடுக்க இரவார் பிறரிடமே,
    நமராய் எண்ணி இரந்திடவே
    நாடி வருவோர்க்கு இலையெனாதே
    சுமக்கும் அளவில் கொடுத்தனுப்பும்
    சொந்தக் குணமாம் அவருக்கே…!

    லிமரைக்கூ…

    தம்கையால் உழுதே உண்பார்
    தாழ்விலும் பிறரிடம் இரவார், இரப்போர்க்கு
    இலையெனாது ஈந்திடும் பண்பார்…!

    கிராமிய பாணியில்…

    ஒசந்தது ஒசந்தது
    தொழிலுல ஒசந்தது,
    ஒலகத்துக்கு ஒணவுதருற
    ஒழவுத்தொழிலே ஒசந்தது..
    சொந்தக் கையால வயலுல
    ஒழச்சிச் சாப்புடுற
    கொணம் உள்ளவுங்க
    ஒருநாளும் அடுதவங்ககிட்ட
    எரந்து சாப்புடமாட்டாங்க,
    அவுங்ககிட்ட வந்து
    எரக்கிறவங்களுக்கு
    இல்லண்ணு சொல்லாமக்
    குடுத்தனுப்புற
    கொணந்தான் அவுங்களுக்கு..
    அதால
    ஒசந்தது ஒசந்தது
    தொழிலுல ஒசந்தது,
    ஒலகத்துக்கு ஒணவுதருற
    ஒழவுத்தொழிலே ஒசந்தது…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(469)

    குறளின் கதிர்களாய்…(469)

    செண்பக ஜெகதீசன்

    எச்சமென்று என்ணெண்ணுங் கொல்லோ ஒருவரால்
    நச்சப் படாஅ தவன்
    -திருக்குறள் -1004 (நன்றியில் செல்வம்)

    புதுக் கவிதையில்…

    வாழ்வில் பிறர்க்கேதும்
    வழங்கி உதவாத காரணத்தால்
    ஒருவராலும்
    விரும்பப்படாதவன்,
    தன் மரணத்துக்குப்பின்
    தன்னை
    நினைவுபடுத்தி நிற்கப்போவது
    என்று
    எதனை எண்ணுவானோ…!

    குறும்பாவில்…

    பிறர்க்கொன்றும் ஈயாததால் ஒருவராலும்
    விரும்பப்படாதவன், சாவுக்குப்பின் தன்னை நினைவுபடுத்தி
    நிற்பதென எண்ண எதுவுமில்லை…!

    மரபுக் கவிதையில்…

    உதவி வேண்டி வருமெவர்க்கும்
    உதவி யேதும் செயாதவனை
    அதனால் யாரும் விரும்பாரே,
    அவனின் காலம் முடிந்தபின்னே
    எதனா லேனும் இவ்வுலகோர்
    எண்ணி யவனை நினைத்திடவே
    அதற்கே தக்க தானதேதும்
    அவனுக் கில்லை எண்ணிடவே…!

    லிமரைக்கூ…

    ஈயாதவன்மீது கொள்வதில்லை விருப்பம்
    இவ்வுலகில், அவன்காலம் முடிந்ததுமவனை நினைவுகொள்ளத்
    தக்கதேது மிலாததே திருப்பம்…!

    கிராமிய பாணியில்…

    ஒதவணும் ஒதவணும்
    அடுத்தவங்களுக்கு ஒதவணும்,
    ஒதவின்னு கேக்கிறதக்
    குடுத்து ஒதவணும்..
    அடுத்தவங்களுக்குக்
    குடுத்து ஒதவாததால
    ஒருத்தராலயும் விரும்பப்படாதவன்,
    தனக்க மரணத்துக்குப் பெறகு
    தன்ன நெனவுல வச்சிக்கிறதுக்கு
    என்ன இருக்குண்ணு
    நெனச்சிப் பாக்க மாட்டானோ..
    அதால
    ஒதவணும் ஒதவணும்
    அடுத்தவங்களுக்கு ஒதவணும்,
    ஒதவிண்ணு கேக்கிறதக்
    குடுத்து ஒதவணும்…!

    Share
  • குறளின் கதிர்களாய்… (468)

    குறளின் கதிர்களாய்… (468)

    செண்பக ஜெகதீசன்

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு.
    -திருக்குறள் -987 (சான்றாண்மை)

    புதுக் கவிதையில்…

    தமக்குத்
    துன்பம் தருவனவற்றைச் செய்தவர்க்கும்
    சான்றாண்மை மிக்கவர்
    தாம் இன்பம் தருவனவற்றைச்
    செய்யாது போவாரானால்,
    அவரது சால்பு
    வேறென்ன பயனைத்
    தர வல்லது…!

    குறும்பாவில்…

    துன்பம் தமக்குத் தந்தவர்க்கும்
    சால்புடையோர் இனியன செய்யாதுபோனால் அவரது
    சால்பினால் எந்தப் பயனுமில்லை…!

    மரபுக் கவிதையில்…

    துன்பம் தமக்குச் செய்தவர்க்கும்
    தூய தான சால்புடையோர்
    இன்பம் தன்னைத் தருகின்ற
    இனிய வற்றைச் செயாதிருந்தால்,
    அன்னார் வசமா யுள்ளதுவாம்
    அரிய பொருளாம் சால்பதுதான்
    என்ன வேறு பயனதைத்தான்
    எடுத்துக் கொடுக்கப் போகிறதோ…!

    லிமரைக்கூ…

    தந்தாலும் பிறர்தமக்குத் துன்பம்,
    சால்புடையோர் சால்பினால் பயனேது மில்லை
    செயாவிடிலவர் பெற்றிட இன்பம்…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும் சான்றாண்ம,
    ஓசந்த கொணமாம் சான்றாண்ம..
    தனக்குத் துன்பம் செஞ்சவனுக்கும்
    அவன் இன்பமடய
    சான்றாண்ம உள்ளவரு
    நல்லது செய்யாம இருந்தா
    அவருகிட்ட இருக்கிற
    சான்றாண்மயால யாருக்கும்
    எந்தப் பயனுமில்ல..
    அதால
    வேணும் வேணும் சான்றாண்ம,
    ஓசந்த கொணமாம் சான்றாண்ம…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(467)

    குறளின் கதிர்களாய்…(467)

    செண்பக ஜெகதீசன்

    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்.
    -திருக்குறள் 980 (பெருமை)

    புதுக் கவிதையில்…

    மற்றவர் குறைகளை
    மறைத்தே அவர்தம்
    பெருமைகளைப்
    பெரிதாய்ப் பேசுவர்
    பெருமைப் பண்புடையோர்,
    சிறுமைப் பண்பு கொண்டோர்
    பிறர் பெருமையை
    மறைத்துக்
    குறைகளைப் பெரிதாய்க்
    கூறுவர்…!

    குறும்பாவில்…

    பிறர் குறைகளை மறைத்துப்
    பெருமையைப் பேசுவது பெருமைப் பண்பு,
    நிறைமறைத்துக் குறைசொல்வது சிறுமை…!

    மரபுக் கவிதையில்…

    மற்றவர் குறைகளை மறைத்து வைத்தே
    மாசிலாப் பெருமையைப் பேசுவது
    சற்றுமே குறைவிலாப் பெருமையாளர்
    சார்ந்திடும் பெருமையின் பண்பதுவே,
    முற்றிலும் பண்பிலாச் சிறுமையாளர்
    முழுவதும் பெருமையை மறைத்துவிட்டே
    குற்றமே பார்த்தவர் கொண்டுள்ள
    குறைகளை மட்டுமே பேசுவரே…!

    லிமரைக்கூ…

    மறைத்து மற்றவர் குறைகளை
    பெருமையைப் பேசுவர் பெருமையாளர், குறைபேசும்
    சிறுமையாளர் மறைத்திடுவர் நிறைகளை…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    பெரும வேணும்,
    ஒலக வாழ்க்கயில
    பெரும வேணும்..
    அடுத்தவன் கொறய
    மறச்சி அவனோட
    பெருமய மட்டும்
    பெருசாப் பேசுறதுதான்
    பெருமக் கொணம்,
    கொறய மட்டும்
    காட்டிப் பேசுறது
    சிறுமக் கொணம்..
    அதால
    வேணும் வேணும்
    பெரும வேணும்,
    ஒலக வாழ்க்கயில
    பெரும வேணும்…!

    Share
  • ஜஸ்வந்த் சிங் – தமிழ் வளர்க்கும் பஞ்சாபி

    ஜஸ்வந்த் சிங் – தமிழ் வளர்க்கும் பஞ்சாபி

    பஞ்சாபியான ஜஸ்வந்த் சிங், தமிழில் கலக்குகிறார். திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் எழுத்தாணியைக் கொண்டு, ஓலைச்சுவடியில் எழுதியுள்ளார். திருக்குறளை அதன் பொருளுடன் சொல்கிறார். உலகின் முதல் மொழி தமிழே என்கிறார். தமிழ் இலக்கியங்களைப் போற்றுகிறார். இந்தித் திணிப்பை எதிர்க்கிறார். இவரைச் சென்னைப் புத்தகக் காட்சியில் சந்தித்தேன். பைந்தமிழராக மாறிவிட்ட இந்தப் பஞ்சாபியின் சிங்கத் தமிழைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(432)

    குறளின் கதிர்களாய்…(432)

    செண்பக ஜெகதீசன்

    கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
    சொற்றெரிதல் வல்லார் அகத்து.

    -திருக்குறள் -717 (அவையறிதல்)

    புதுக் கவிதையில்…

    சொல்லும் செற்களைச்
    சரியாய்ப் புரிந்தே
    அவற்றை
    ஆராய்ந்தறிந்திடும்
    ஆற்றல் மிக்கோர் நிறைந்த
    அவையில்
    கல்வி கற்றவர்
    ஆற்றும் உரையில்,
    அவரது கல்விச்சிறப்பு
    அனைவரும் அறிய
    ஒளிர்ந்திடும்…!

    குறும்பாவில்…

    வழுவின்றிச் சொற்களைப் புரிந்தே
    ஆராய்வோர் அவையில் கற்றறிந்தார் சொல்லிடும்
    சொல்லிலவர் கல்வித்திறன் ஒளிரும்…!

    மரபுக் கவிதையில்…

    சொல்லிடும் சொற்களைப் புரிந்தவற்றைச்
    சொந்தமாய்த் தெளிவுடன் ஆராயும்
    வல்லமை மிக்கவர் நிறைந்திருக்கும்
    வளமிகு மாந்தரின் அவையினிலே
    சொல்லிடும் சொல்லிலே கற்றறிந்தார்
    சொல்லதன் திறத்தினால் அன்னவரின்
    கல்வியின் சிறப்பெலாம் கண்கூடாய்க்
    கண்டிடும் வகையினில் ஒளிர்ந்திடுமே…!

    லிமரைக்கூ…

    சொல்லும் சொற்களைப் புரிந்தே
    ஆராய்வோர் அவையில் உரைக்கும் கற்றவரின்
    கல்வி ஒளிர்ந்திடும் தெரிந்தே…!

    கிராமிய பாணியில்…

    பேசணும் பேசணும்
    தெரிஞ்சிப் பேசணும்,
    பேசுற சபய நல்லாத்
    தெரிஞ்சிப் பேசணும்..
    சொல்லுற சொல்ல
    நல்லாப் புரிஞ்சி ஆராயிற
    தெறம உள்ளவுங்க இருக்கிற
    சப பாத்துப் பேசுற
    படிச்சவனோட
    படிப்புத் தெறமயெல்லாம்
    பளிச்சிண்ணு
    வெளிய தெரியுமே..
    அதால
    பேசணும் பேசணும்
    தெரிஞ்சிப் பேசணும்,
    பேசுற சபய நல்லாத்
    தெரிஞ்சிப் பேசணும்…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(411)

    குறளின் கதிர்களாய்…(411)

    செண்பக ஜெகதீசன்

    ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை விழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.
    -திருக்குறள் -137 (ஒழுக்கமுடைமை)

    புதுக்கவிதையில்…

    ஒழுக்கத்தில் நல்லதாய்
    ஒழுகுவோர் பெறுவர்
    ஒப்பிலா மேன்மை
    உலக வாழ்வினிலே,
    ஒழுக்கம் தவறுவோர்
    பெறுதற்குத் தகாத
    பெரும்பழியே பெறுவர்…!

    குறும்பாவில்…

    ஒழுக்கமுடையோன் பெறுவான் வாழ்வில்
    ஒப்பிலா மேன்மை, இல்லாதான் எய்துவான்
    ஒன்றுமிலாப் பொல்லாப் பழியே…!

    மரபுக் கவிதையில்…

    நிலத்தில் மனித வாழ்வினிலே
    நித்தம் தேவை நல்லொழுக்கம்,
    நலமே பெறுவர் அதனாலே
    நன்மை யோடு மேன்மைசேரும்,
    பலமாம் இதனைப் பேணாதார்
    பயனே இல்லா மாந்தராகிப்
    பலனே இல்லா அழிவுதரும்
    பழியை மட்டும் பெறுவரே…!

    லிமரைக்கூ…

    மேன்மைதரும் நல்லொழுக்க வழியே,
    மேதினி வாழ்வில் இதைப்பேணார் பெற்றிடுவர்
    மிகவும் அழிவுதரும் பழியே…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    ஒழுக்கம் வேணும்,
    வாழ்க்கயில நல்ல
    ஒழுக்கம் வேணும்..

    ஒழுக்கத்தோட வாழுறவுங்களுக்கு
    வாழ்க்கயில நல்ல
    மேன்ம கெடைக்கும்,
    ஒழுக்கமில்லாதவங்களுக்கு
    ஒரு பயனுமில்லாத
    பழிதான் வருமே..

    அதால
    வேணும் வேணும்
    ஒழுக்கம் வேணும்,
    வாழ்க்கயில நல்ல
    ஒழுக்கம் வேணும்…!

    Share
  • குறளின் கதிர்களாய் – 410

    குறளின் கதிர்களாய் – 410

    செண்பக ஜெகதீசன்

    காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
    – திருக்குறள் -122 (அடக்கமுடைமை)

    புதுக் கவிதையில்…

    அவனி வாழ்வில்
    அடக்கத்தை
    அரும்பொருளாய் எண்ணிப்
    பாதுகாக்க வேண்டும்,
    அதனைவிட மதிப்பில்
    உயர்ந்த செல்வம்
    உலகத்தில் வேறில்லை…!

    குறும்பாவில்…

    அடக்கத்தை வாழ்வில் நாம்
    அரும்பொருளாய்ப் பேணிப் பாதுகாக்கவேண்டும்,
    அதைவிட நற்செல்வம் எதுவுமில்லை…!

    மரபுக் கவிதையில்…

    அடக்கம் என்னும் நல்லறத்தை
    அவனி வாழ்வில் அரும்பொருளாய்க்
    கடமை என்றே காத்திடுவாய்
    கண்ணாய் அதையே போற்றிடுவாய்,
    கிடைக்கும் செல்வம் பலதிலுமே
    கீர்த்தி மிக்க வேறெதுவும்
    கிடைப்ப தில்லை இதுபோலே,
    கிட்டாச் செல்வம் அடக்கமாமே…!

    லிமரைக்கூ…

    என்றும் காத்திட வாராய்
    அடக்கத்தை வாழ்வில் அரும்பொருளாய், அதனிலும்
    உயர்செல்வம் வேறிலை பாராய்…!

    கிராமிய பாணியில்…

    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
    ஒலக வாழ்க்கயில
    ஒசந்த செல்வம்,
    அடக்கமுங்கிற அற்புதச் செல்வம்..
    ஒலக வாழ்க்கயில அடக்கமுங்கிற
    ஒழுக்கத்த பெரிய செல்வமா
    நல்ல மொறயில
    காப்பாத்தி வெச்சுக்கோ,
    அதவிட மதிப்புல
    ஒசந்த செல்வம்
    ஒலகத்தில
    வேற எதுவுமேயில்ல..
    தெரிஞ்சிக்கோ
    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
    ஒலக வாழ்க்கயில
    ஒசந்த செல்வம்,
    அடக்கமுங்கிற அற்புதச் செல்வம்…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(409)

    குறளின் கதிர்களாய்…(409)

    செண்பக ஜெகதீசன்

    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க்கு அணி.

    – திருக்குறள் -115 (நடுவு நிலைமை)

    புதுக்கவிதையில்…

    வாழ்க்கையில் தீவினையால்
    வந்திடும் துன்பமும்,
    நல்வினையால்
    நாடிவரும் வளவாழ்வும்
    எல்லோர்க்கும் உள்ளதுதான்
    என்பதை உணர்ந்தே
    அதற்காக
    நல்லறமாம்
    நடுவு நிலைமையில்
    நெஞ்சம் தடுமாறாமல்
    நேராயிருப்பதே
    மேலானவர்களுக்கு
    மேலும் அழகே…!

    குறும்பாவில்…

    வருமிடரும் வளவாழ்வும் எல்லோர்க்கும்
    உள்ளதுதானென உணர்ந்தே நடுநிலை மாறா
    நற்பண்பே மேலானவர்களுக்கு அழகு…!

    மரபுக் கவிதையில்…

    வாழ்வினில் செய்த தீவினையால்
    வந்திடும் இடர்கள் பலவுடனே
    தாழ்விலா நல்ல செயலெல்லாம்
    தந்திடும் வளங்கள் பெருகியேநல்
    வாழ்வதும் எல்லா மக்கட்கும்
    வருமென நன்றாய் உணர்ந்தறிந்தே
    தாழ்ந்திடா நடுவு நிலைமாறாத்
    தன்மையே அழகு சான்றோர்க்கே…!

    லிமரைக்கூ…

    இன்பமும் துன்பமும் வருமே
    எல்லோர்க்கும் என்பதுணர்ந்தே நடுநிலை மாறாதிருத்தல்
    சான்றோர்க்கு அழகைத் தருமே…!

    கிராமிய பாணியில்…

    மாறாத மாறாத
    நடுவுநெலய மாறாத
    நீதி நெலைக்க வாழ்வு செறக்க
    நடுவுநெலய மாறாத..
    எல்லாருக்கும் வரும் வாழ்க்கயில
    எறக்கமாத் துன்பமும்,
    ஏத்தமாச் செல்வப் பெருக்கும்..
    இதயெல்லாம் நல்லா ஒணர்ந்து
    இதுனால
    நடுவுநெலயில மாறாமயிருக்கும்
    நல்ல கொணமே
    பெரியவங்களுக்கு அழகு
    பெரும எல்லாமே..
    அதால
    மாறாத மாறாத
    நடுவுநெலய மாறாத
    நீதி நெலைக்க வாழ்வு செறக்க
    நடுவுநெலய மாறாத…!

     

    Share
  • திருக்குறள் படிப்பது தண்டனையா?

    திருக்குறள் படிப்பது தண்டனையா?

    குற்றவாளிகள், திருக்குறளைப் படிக்க வேண்டும் என்பதைக் காவலர்களும் நீதிபதிகளும் ஒரு நல்ல நோக்கில் சொல்கிறார்கள்.

    ஆனால், ஒரு தண்டனையாகத் திருக்குறளைப் படிக்க வைப்பது, திருக்குறளின் மீது வெறுப்பினை உண்டாக்கும் வாய்ப்பு உண்டு.

    தொண்டு இல்லத்தில் சமூக சேவை செய்யச் சொல்வதற்கும் இது பொருந்தும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(313)

    குறளின் கதிர்களாய்…(313)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(313)

    மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னொன்னார்க்
    கடிமை புகுத்தி விடும்.

    – திருக்குறள் – 608 (மடியின்மை)

    புதுக் கவிதையில்...

    குடிப்பிறப்பில் உயர்ந்த அரசனிடம்
    மடியெனும் சோம்பல் விலகாமல்
    குடியிருந்தால்,
    அது அவனைக்
    கொடிய பகைவர்க்கு
    அடிமையாகும் நிலைக்கே
    ஆளாக்கிவிடும்…!

    குறும்பாவில்...

    உயர்குடிப் பிறந்த அரசனிடமும்
    சோம்பல் நிலைபெற்றால் அது அவனைப்
    பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்…!

    மரபுக் கவிதையில்...

    உயர்குடி தன்னில் பிறந்தேதான்
    உயர்நிலை யுடைய மன்னனிடம்
    அயர்வாம் சோம்பல் மிகவாகி
    அதுவே அவனிடம் நிலைபெற்றால்,
    உயர்வு வாழ்வில் வாராதே
    உறுதி யாகிடும் பகையதனால்
    வயவருக் கடிமை யாகும்நிலை
    வந்து சேரு மவனுக்கே…!

    லிமரைக்கூ..

    பிறந்தாலுமவன் உயர்ந்த குடி,
    போவான் மன்னன் பகைவனுக் கடிமையாய்
    நிலைபெற்றால் அவனிடம் மடி…!

    கிராமிய பாணியில்...

    வேண்டாம் வேண்டாம்
    சோம்பலு வேண்டாம்,
    வாழ்வக் கெடுக்கிற
    சோம்பலே வேண்டாம்..

    ஒசந்த குடியில பொறந்தாலும்
    ஊருல பெரிய ராசாவும்
    ஒதவாத சோம்பலுல உழுந்திட்டா,
    அவன்
    உருப்பட வழியேயில்ல
    எதிராளிக்கிட்ட அடிமயாகிற
    நெலமதான் வந்திடுமே..

    அதால
    வேண்டாம் வேண்டாம்
    சோம்பலு வேண்டாம்,
    வாழ்வக் கெடுக்கிற
    சோம்பலே வேண்டாம்…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(306)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(306)

    ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்
    காழி யெனப்படு வார்.

    – திருக்குறள் – 989 (சான்றாண்மை)

    புதுக் கவிதையில்...

    சான்றாண்மை என்னும்
    கடலுக்குக்
    கரைபோன்ற சால்புடையோர்,
    இயற்கையின் இயல்பு மாறி
    உலக அழிவு ஏற்படும்
    ஊழிக்காலத்திலும்
    தமது நிலையிலிருந்து
    மாறுபட மாட்டார்கள்…!

    குறும்பாவில்...

    சான்றாண்மைக் கடலின்
    கரைபோலும் சான்றோர் நிலைமாறார்,
    அழிவுதரும் ஊழிக்காலத்திலும்…!

    மரபுக் கவிதையில்...

    கடலாம் சால்பதன் கரைபோன்ற
    கண்ணிய மிக்க சால்புடையோர்,
    கடலது தானும் கரையுடைத்தே
    காசினி தனிலே பேரழிவாம்
    இடரது தந்திடும் ஊழியிலும்
    இயல்பது சிறிதும் மாறிடாமல்
    தொடர்ந்தே யென்றும் சால்புடனே
    தூயராய் நிலைத்து வாழ்வாரே…!

    லிமரைக்கூ..

    சால்பாம் கடலதன் கரையே
    சால்புடையோர், மாறிடார் ஆழியழிக்கும் ஊழியிலுமவர்
    ஆவதில்லை யதனுக் கிரையே…!

    கிராமிய பாணியில்...

    வாழணும் வாழணும்
    ஒலகத்தில வாழணும்,
    நல்ல கொணமுள்ள
    சான்றோனா வாழணும்..

    நல்ல கொணமுங்கிற
    கரகாணாக் கடலுக்குக்
    கரதான் நல்லவனா
    சான்றோனா வாழுறவன்..

    காத்து மழவந்து
    கடல்பொங்கி வந்து
    ஒலகத்தயே அழிக்கிற
    ஊழிக் காலத்திலயும்,
    அவன் கொணம் மாறாம
    நல்லவனா
    நெலச்சி நிப்பானே..

    அதால
    வாழணும் வாழணும்
    ஒலகத்தில வாழணும்,
    நல்ல கொணமுள்ள
    சான்றோனா வாழணும்…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(303)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(303)

    தெண்ணீ ரடுபுற்கை யாயினுந் தாள்தந்த
    துண்ணலி னூங்கிய தில்.

           – திருக்குறள் – 1065 (இரவச்சம்)

    புதுக் கவிதையில்...

    இரக்காமல்
    முயற்சியுடன் உழைத்து
    அதன் மூலம்
    உண்ணக் கிடைத்தது,
    தெளிந்த நீர்போல் சமைத்த
    கூழே ஆனாலும்,
    அதனை
    மகிழ்வுடன் உண்பதைவிட
    இனிமையானது
    வேறெதுவுமில்லை…!

    குறும்பாவில்...

    முயற்சியுடன் உழைப்பின் மூலம்
    உண்ணக் கிடைத்த எளிய நீராகாரத்தை
    உண்பதைவிட இனியது வேறில்லை…!

    மரபுக் கவிதையில்...

    பிறரிடம் கையது ஏந்திடாமல்
         பிழைத்திட உழைப்பதன் மூலமாகச்
    சிறிதள வாகக் கிடைத்ததிலே
         சிறப்பாய்ச் சமைத்த நீர்க்கஞ்சி
    குறைவாய் உண்ணக் கிடைத்தாலும்
         குடிக்கு மந்தக் கூழதிலே
    நிறைவாக் கிடைக்கும் இன்பமதன்
         நிகராய் நிலமதில் வேறிலையே…!

    லிமரைக்கூ..

    முயன்றே யுழைத்துமுன் னேறு,          
    அவ்வழி உண்ணக்கிடைத்த நீர்க்கஞ்சிக்கு
    நிகராய் இனியதானதில்லை வேறு…!

    கிராமிய பாணியில்...

    பயம்வேணும் பயம்வேணும்
    எரந்து உண்ணப் பயம்வேணும்,
    இருக்கத உண்ணப் பழகோணும்..

    அடுத்தவங்கிட்டக் கையேந்தாம
    மொயற்சிசெய்து ஒழச்சி
    அது மூலமா
    சாப்புடக் கெடச்ச
    தெளிஞ்ச நீர்போலச் சமச்ச
    கூழப்போல இனிப்பானது
    ஓலகத்தில
    வேற எதுவுமில்ல..

    அதால
    பயம்வேணும் பயம்வேணும்
    எரந்து உண்ணப் பயம்வேணும்,
    இருக்கத உண்ணப் பழகோணும்…!

    Share