5

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(313)

மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னொன்னார்க்
கடிமை புகுத்தி விடும்.

– திருக்குறள் – 608 (மடியின்மை)

புதுக் கவிதையில்...

குடிப்பிறப்பில் உயர்ந்த அரசனிடம்
மடியெனும் சோம்பல் விலகாமல்
குடியிருந்தால்,
அது அவனைக்
கொடிய பகைவர்க்கு
அடிமையாகும் நிலைக்கே
ஆளாக்கிவிடும்…!

குறும்பாவில்...

உயர்குடிப் பிறந்த அரசனிடமும்
சோம்பல் நிலைபெற்றால் அது அவனைப்
பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்…!

மரபுக் கவிதையில்...

உயர்குடி தன்னில் பிறந்தேதான்
உயர்நிலை யுடைய மன்னனிடம்
அயர்வாம் சோம்பல் மிகவாகி
அதுவே அவனிடம் நிலைபெற்றால்,
உயர்வு வாழ்வில் வாராதே
உறுதி யாகிடும் பகையதனால்
வயவருக் கடிமை யாகும்நிலை
வந்து சேரு மவனுக்கே…!

லிமரைக்கூ..

பிறந்தாலுமவன் உயர்ந்த குடி,
போவான் மன்னன் பகைவனுக் கடிமையாய்
நிலைபெற்றால் அவனிடம் மடி…!

கிராமிய பாணியில்...

வேண்டாம் வேண்டாம்
சோம்பலு வேண்டாம்,
வாழ்வக் கெடுக்கிற
சோம்பலே வேண்டாம்..

ஒசந்த குடியில பொறந்தாலும்
ஊருல பெரிய ராசாவும்
ஒதவாத சோம்பலுல உழுந்திட்டா,
அவன்
உருப்பட வழியேயில்ல
எதிராளிக்கிட்ட அடிமயாகிற
நெலமதான் வந்திடுமே..

அதால
வேண்டாம் வேண்டாம்
சோம்பலு வேண்டாம்,
வாழ்வக் கெடுக்கிற
சோம்பலே வேண்டாம்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.