குறளின் கதிர்களாய்…(306)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(306)
ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்.
– திருக்குறள் – 989 (சான்றாண்மை)
புதுக் கவிதையில்...
சான்றாண்மை என்னும்
கடலுக்குக்
கரைபோன்ற சால்புடையோர்,
இயற்கையின் இயல்பு மாறி
உலக அழிவு ஏற்படும்
ஊழிக்காலத்திலும்
தமது நிலையிலிருந்து
மாறுபட மாட்டார்கள்…!
குறும்பாவில்...
சான்றாண்மைக் கடலின்
கரைபோலும் சான்றோர் நிலைமாறார்,
அழிவுதரும் ஊழிக்காலத்திலும்…!
மரபுக் கவிதையில்...
கடலாம் சால்பதன் கரைபோன்ற
கண்ணிய மிக்க சால்புடையோர்,
கடலது தானும் கரையுடைத்தே
காசினி தனிலே பேரழிவாம்
இடரது தந்திடும் ஊழியிலும்
இயல்பது சிறிதும் மாறிடாமல்
தொடர்ந்தே யென்றும் சால்புடனே
தூயராய் நிலைத்து வாழ்வாரே…!
லிமரைக்கூ..
சால்பாம் கடலதன் கரையே
சால்புடையோர், மாறிடார் ஆழியழிக்கும் ஊழியிலுமவர்
ஆவதில்லை யதனுக் கிரையே…!
கிராமிய பாணியில்...
வாழணும் வாழணும்
ஒலகத்தில வாழணும்,
நல்ல கொணமுள்ள
சான்றோனா வாழணும்..
நல்ல கொணமுங்கிற
கரகாணாக் கடலுக்குக்
கரதான் நல்லவனா
சான்றோனா வாழுறவன்..
காத்து மழவந்து
கடல்பொங்கி வந்து
ஒலகத்தயே அழிக்கிற
ஊழிக் காலத்திலயும்,
அவன் கொணம் மாறாம
நல்லவனா
நெலச்சி நிப்பானே..
அதால
வாழணும் வாழணும்
ஒலகத்தில வாழணும்,
நல்ல கொணமுள்ள
சான்றோனா வாழணும்…!