Tag: பிச்சினிக்காடு இளங்கோ

  • மூதறிஞர் இராஜாஜியின் “அன்னையும் பிதாவும்” கதை

    —  பிச்சினிக்காடு இளங்கோ.

    அண்மையில் என் கைக்கு ஒரு கனமான கதை கிடைத்தது. நான் படித்ததும் என்னை அழவைத்த கதை அது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற ஒளவையின் வாய்மொழியில் கதையின் தலைப்பைக்கொடுத்தது நுண்ணறிவின் எடுத்துக்காட்டு. அப்பொழுதுதான் அதன் கனத்தை, உட்பொருளை உணர உணர வலி அதிகமானது.

    சாதி என்னும் பேய் இன்னும் நம்மை விடுதலைசெய்யவில்லை. நாமும் விடுதலைபெறவில்லை. ஆனால் அன்றைக்கு அதற்கு விடுதலை தேடிய காலகட்டத்தில் ஒரு கருவியாக இந்தக்கதை அமைந்திருக்கிறது. மனதைப்பரிமாறிப் பழகும் நெஞ்சங்கள் சாதியைப்பார்ப்பதில்லை. இதைத்தான் கண்ணதாசன் மிக எளிதாக “காதலுக்கு சாதியில்லை மதமுமில்லையே” என்று பாடல்வழி சொன்னார்.

    ஆனால் எல்லாம் எழுத்தாகவே இருக்கிறது. ஹரிசன இளஞன் அர்த்தநாரி சேலம் ஜில்லா கோக்கலையைச்சேர்ந்தவன். அகில இந்திய ஹரிசன சேவா சங்கத்தின் காரியதரிசி தென்னாட்டுப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்போது அர்த்தநாரியைக்கண்டு சந்தோசப்பட்டு தன்னுடன் டெல்லிக்கு அழைத்துச்செல்கிறார். அங்கே தன்வீட்டில் தங்கவைத்துப் படிக்கவைத்து வேலையும் வாங்கிக்கொடுக்கிறார். பின்பு அர்த்தநாரி பெங்களூரில் அதே கம்பெனியைச்சேர்ந்த பெரிய நெசவுமில்லில் வேலைக்குவருகிறார். மாதம் இருநூறு ரூபாய் சம்பளத்தில் இரண்டு வருடம் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

    அவருக்குமேல் பணியில் இருந்தவர் கோவிந்தராவ். இங்கிலாந்து சென்று மான்செஸ்டரில் பயிற்சிபெற்றுவந்தவர். இருவரும் நண்பர்களானார்கள். அர்த்தநாரி கோவிந்தராவ் வீட்டுக்குவரும்போது அவரின் தங்கை பங்கஜமும் நன்றாகப் பழகினார்கள். பங்கஜம் தாய் தந்தையைப் பத்து வயதிலேயே இழந்தவர். எல்லாமே கோவிந்தராவ்தான். இருவரும் பழகுவதைக்கண்டு மகிழ்ந்த கோவிந்தராவ் தங்கையிடம் சம்மதம் கேட்கிறார். “சாதியைப்பற்றி என்ன இருக்கிறது? அனால், அவர் மனம் எப்படியோ?” என்கிறார் பங்கஜம்.

    இதை அர்த்தநாரியிடம் சொன்னபோது அவரடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. திடீரென்று அர்த்தநாரியின் முகம் மாறிவிட்டது. “நான் என்ன சாதி? நீங்கள் எந்தச் சாதி? என்றார் அர்த்தநாரி. “சாதியைப்பற்றி என்ன பேச்சு?” முதலியார் என்ன? பிராமணனென்ன? என்கிறார் கோவிந்தராவ். இதையெல்லாம் தள்ளிவைத்து ரொம்ப நாளாயிற்று என்கிறார். அர்த்தநாரியும் பங்கஜமும் மனம்விட்டுப்பேசி சம்மதம் தெரிந்துகொள்கிறார்கள். ஆனால் அர்த்தநாரி தொடக்கத்தில் தன்னை முதலியார் என்று சொல்லிவைத்துவிட்டார். இப்போது மனம் குடைகிறது. சொல்லிவிடலாம் என்றால் திருமணம் தடைபடுமோ என்ற அச்சம் ஒருபக்கம். ஆசை ஒருபக்கம்.

    பங்கஜம் எதார்த்தமாக உங்கள் பெற்றோரைப்பார்க்க நாம் போகலாம் என்கிறார். கோக்கலை கிராமத்தில் காலரா நோய் வந்துவிட்டது. இப்பொழுது போகமுடியாது என்று பொய்சொல்கிறார் அர்த்தநாரி. மிக இயல்பாக பங்கஜம் பயந்து உங்கள் பெற்றோரை வேறு இடத்திற்கு அனுப்பி வையுங்கள் அல்லது இங்கே அழைத்துவிடுங்கள் என்கிறார். அர்த்தநாரி தன்சாதியை பங்கஜம் தெரிந்துகொள்ளாமலிருப்பதற்கு ஒரேவழி திருமணத்தை முடித்துக்கொண்டு டெல்லி செல்வதுதான் என முடிவெடுத்திருந்தார். சொன்னதுபோலவே அப்போது அண்ணனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. ஊரில் விஷபேதி பரவியிருப்பதாக. முப்பது ரூபாய் அனுப்பினால் சேலத்திற்குப்போய்விடலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அர்த்தநாரியின் அப்பா முனியப்பன் குடிகாரர். தாய் குப்பாயி. அண்ணன் ரெங்கன் ஆசிரியர். அப்பாவின்மேல் வெறுப்பிலிருந்தார் அர்த்தநாரி. பணம் அனுப்பச்சொல்லியும் அர்த்தநாரி அனுப்பவில்லை. அடுத்து ஒரு மடல். அதில் அம்மாவுக்கும் பேதி நோய் கண்டிருப்பதாக எழுதியிருந்தார். அன்றிரவே சேலம் போனார். உடனே ஊருக்குப்போகாமல் சேலத்தில் நான்குநாளை கழித்துவிட்டு கோக்கலை கிராமத்திற்குச்செல்கிறார். அப்போது தாயும் அண்ணனும் இறந்துவிட்டார்கள். தந்தை தன்னைப் பெங்களூருக்கு அழைத்துச்செல்லுமாறு அர்த்தநாரியிடம் கெஞ்சி அழுகிறார்.

    தந்தையின் கையில் ஒரு பத்து ரூபாய் நோட்டைக்கொடுத்துவிட்டு சேலம் வந்துவிட்டார். தாயையும் அண்ணனையும் கொன்ற குற்ற உணர்வு அர்த்தநாரியைப் பிடிங்கித் தின்கிறது. பெங்களூர் வருகிறார். யாருக்கும் சொல்லாமல் மீண்டும் ஊருக்குச்செல்கிறார். சேலம் போனதும் கோக்கலையில் ஓர் ஆதித்திராவிடர் கிணற்றில் விழுந்து இறந்தாகச்சொல்கிறார்கள். கோக்கலைசென்று இறந்தது தன் தந்தைதான் என்பதை உறுதிசெய்துகொண்டு சேலத்திலிருந்து பெங்களூருக்கு வந்து பங்கஜத்திடம் நடந்த்தைச்சொல்லி தன்னை மறந்துட வேண்டிக்கொண்டார். ஜுரத்தில்சிக்கிவிடுகிறார் .

    பங்கஜமும் கோவிந்தராவும் நன்குகவனித்துக்கொள்கிறார்கள். குணமானபின்பு “நான் பறையன், பாதகன், உண்மையில் தீண்டத்தகாதவன், பொய்யன், எனக்கு விவாகம் வேண்டாம். என்னை நீங்கள் மறந்துவிடவேண்டும்” என்கிறார் அர்த்தநாரி. பங்கஜம் “நீர் எந்தசாதியாய் இருந்தால் என்ன?” எனச் சமாதானப்படுத்தினார். காதல் உள்ளத்தைக்காட்டினார். கடுகளவும் வேற்றுமையில்லை என்பதை வெளிப்படுத்தினார்.

    “நான் கொலைப்பாதகன், தகப்பனாரையும் தாயையும் கொன்றவன்” என்று நடந்தையெல்லாம் சொல்லிவிட்டு, வேலையை இராஜினாமா செய்துவிட்டு கோக்கலைக்குப்போய்வுடுகிறார் அர்த்தநாரி. கோக்கலைச்சேரியில் மாரியம்மன் கோயிலில் பள்ளிக்கூடம் வைத்திருக்கும் சாமியார் அர்த்தநாரிதான் எனக் கதை முடிகிறது.

    சிறுகதைக்கேயுரிய யுத்திகள், மொழிநடை, திருப்பம் அனைத்தும் கையாளப்பட்டு எழுதப்பட்ட கதைதான் “அன்னையும் பிதாவும்”. கதையின் தொடக்கத்தில் பங்கஜத்தின் அண்ணன் கோவிந்தராவ் “நீங்கள் இருவரும் பிரியமாயிருக்கிறிர்களே. நாம்தான், சாதி குலம் கவனிப்பதை விட்டுவிட்டோமே. ஏன் அர்த்தநாரியை நீ விவாகம் செய்துகொள்ளக்கூடாது? என்றார். “சாதியைப்பற்றி என்ன இருக்கிறது? ஆனால், அவர் மனம் எப்படியோ?” என்றாள் பங்கஜம். இங்கே அடிப்படையில் சாதி முக்கியமல்ல திருமணத்திற்கு மனஒப்புதல் மிக முக்கியம் என்பதை பெண்ணின் குரலாக பதிவுசெய்கிறார்.

    சாதியைச்சொல்லிவிடவேண்டும் என்று முடிவெடுத்த அர்த்தநாரி “நாம் இருவரும் பிரியப்பட்டிருக்கும்போது இந்தச்சாதிப்பிரச்னைக்கு என்ன இடம்? இந்த அநியாயத்தை நாம் ஏன் இடம்கொடுத்து வளர்க்கவேண்டும்? இந்தச்சாதியை யார் நிர்மாணித்தார்கள்? அது சுத்தப்பொய்யல்லவா? அவளிடம் நான் ஏன் அதை பொருளாகக்கருதிச் சொல்லவேண்டும்? அதைச்சொல்லிக் காரியம் முழுதும் கெட்டுவிடவா செய்வது! அவர்களும் சாதியைப்பற்றிக் கவலையில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதற்குமேல் நான் ஏன் அதைப்பற்றிப் பேச வேண்டும்? “ என்று மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டு உண்மையை மறைக்கத்தீர்மானித்தார்.

    “பங்கஜம், உண்மையில் உனக்கு இஷ்டமா? நாமிருவரும் கூடிவாழலாமா?” என்றுமட்டும் கேட்டார். “உங்களுக்கு இஷ்டமா?” என்றாள் பங்கஜம். பங்கஜத்தை விரும்பிய அர்த்தநாரி சாதியை மறைத்துவிடுகிறார். அர்த்தநாரியை விரும்பிய பங்கஜம் சாதியை மறந்துவிடுகிறாள். அர்த்தநாரியின் மனவிருப்பத்தைமட்டுமே அவள் எதிர்பார்க்கிறாள். அவரும் அதைத்தான் எதிர்பார்த்தார். அப்படிப்பட்டவள்முன் சாதியை மறைத்து வாழநினைத்தது தவறு. கட்டிக்கொண்டு டெல்லிக்கு ஓட நினைத்தது தவறு. பெற்றோர் வாழ பணம் அனுப்பினால் போதும் என்று நினைத்ததும் தவறு. இப்படித் தவறுகளின் வடிவமாக அர்த்தநாரி காட்டப்பட்டிருக்கிறார்.

    அர்த்தநாரி நன்றாகப்வெளிப்படையாக சாதியைச்சொல்லி பங்கஜம், கோவிந்த்தராவ் எப்படி நடந்தாலும் கவலையில்லை என்று வாழ்ந்திருக்கவேண்டிய அர்த்தநாரி சாதியை மறைக்க தாய் தந்தையை இழந்த்ததாக கதைமுடிகிறது. “நீர் எந்தச்சாதியாக இருந்தால் என்ன?” என கதையின் இறுதியில் பங்கஜம் பேசியும் குற்ற உணர்வாளனாக அர்த்தநாரியை ஆக்கி கதையை முடிக்கிறார். அது உண்மையும்கூட. எல்லா குற்றமும் அர்த்தநாரிக்கே உரியது. ஒருவகையில் இது அனைவருக்கும் பாடம்.

    ஒன்றை மறைத்து இன்னொன்றைப் பெறுவதில் நன்மை இருந்தாலும் இழப்பது நிம்மதி எனபதை எச்சரிப்பதாகவே உணரமுடிகிறது. ஓரிடத்தில் “உன்கூட நாங்களும் வந்துவிடுகிறோம் “ என்பார் தகப்பன். “முடியவே முடியாது. உன்னைக்கண்டால் என்னை வேலையிலிருந்துநீக்கிவிடுவார்கள்” என்பார் அர்த்தநாரி. பெற்றோரை மறைத்து, பெற்றோர் இல்லாமலேயே வாழ நினைக்கும் இளஞனே அர்த்தநாரி. இவரிடம் தாழ்வு மனப்பான்மையும் ஆசையும் கூடிவிளையாடுவதை உணரமுடிகிறது. தனக்குக்கிடைத்த வாழ்க்கையை ஒருமுறை உணர்ந்திருந்தால் இப்படிப்பொய்யில் வாழ்க்கையை இழந்திருக்கத்தேவையில்லை.

    கடிதமுறை, உரையாடல், திருப்பம் எனச்சேர்ந்து கதையை வலுவாக எழுதியிருக்கிறார் மூதறிஞர் இராஜாஜி அவர்கள். இங்கே தாழ்த்தப்பட்ட இளஞனைத் தாழ்வுமனப்பான்மையுடையவனாகவும் மேல்சாதிக்காரர்களைப் பெருந்தன்மை படைத்தவர்களாகவும் திட்டமிட்டு காட்டியிருக்கிறார் ஆசிரியர் என ஒரு குற்றச்சாட்டைவைக்கலாமா? எனவும் யோசித்தேன். கதையில் அதற்கு இடமில்லை. கதையின் போக்கின்படி எல்லாக்குற்றமும் அர்த்தநாரி தலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. அவர் மனச்சாட்சியைக்கொன்றுவிடுகிறார்.

    மேல்சாதிப்பெண்ணோடு வாழ்வதற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையின் அடிநாதத்தை இழந்த பாவியாகிறார் அர்த்தநாரி. ஆனாலும் அர்த்தநாரி எதையும் மறைத்து வாழவில்லை. உண்மையைச்சொல்லி உணர்ந்து மனச்சாட்சியுடன் வாழும் மனிதனாக மாறிவிடுகிறார். இப்படி அனைவரையும் இழந்து எதையும் பெற யாரும் எண்ணக்கூடாது. தாழ்வு மனப்பான்மை எந்த நிலையிலும் கூடாது என்பதே பொதுச்செய்தியாகிறது. பங்கஜம் அவருடைய அண்ணன் கோவிந்தராவ் போன்றவர்கள் கதாபாத்திரமாக அமையாமல் சமூகத்தின் பாத்திரமாக விளங்கவேண்டும் என்பதே நம் ஆசை.

    ஆக, ஆசிரியரின் கோணம் சரியானது என்பதில் ஐயமில்லை. அதன் ஓட்டம் இயல்பானது. பழுத்த நுட்பமான அரசியல்வாதியிடம் மறைந்திருக்கும் இலக்கியவாதியைக்காட்டும் கதை ‘அன்னையும் பிதாவும்.’

    அழவைத்த கதை மூதறிஞர் இராஜாஜியின் “அன்னையும் பிதாவும்”

    (பிச்சினிக்காடு இளங்கோ- 24.05.2015 5.30மாலை)

    Share
  • நாணயமானவளே…!

    -பிச்சினிக்காடு இளங்கோ

    நீ துணையிருந்தால்
    எனக்கு
    யானைபலம்

    அன்றாடம்
    எல்லாம் எளிதாகிவிடுகிறது                     one-rupee
    இல்லையேல் அரிதாகிவிடுகிறது

    துக்கம்கூடத்
    துக்கமாயில்லை

    கைகுலுக்கக் காத்திருக்கிறார்கள்
    இல்லையேல்
    கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்

    நீ இல்லாதபோதும்
    நிம்மதி இருக்கிறது
    கூட இருந்தால்
    அது கூடிவிடுகிறது

    நீ இல்லாதபோதும்
    எனக்கு
    முகவரியிருக்கிறது

    என் முகவரி
    என்னால் வந்தது
    அதன் ஒவ்வொரு
    அங்குல உயர்விற்கும்
    நானே காரணம்

    எனினும் என்னுடன்
    நீயும் இருந்துவிட்டால்
    பிறரைத்தேட வைக்கிறது

    இதுவரை
    என்னிடமிருந்தாலும்
    என்னிடம் வந்தாலும்
    உனக்குப் பெருமை
    இனி
    உன்னால் எனக்கும்பெருமை

    வாழ்க்கை
    பொருளுடையதாய் விளங்க
    நீதான் அடிப்படை

    நீயா நானா
    என்பதைவிட
    நீயும் நானும்
    சேர்ந்திருப்பதே
    தேவையானது
    நியாயமானது
    நாணயமானது

    நாணயமான
    வாழ்க்கைதானே
    நாகரீகமானது?

     

    Share
  • சொல்லின் செல்வன்

    -பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)

    அவை
    மூலதனம்
    முகவரியும்கூட!

    ஆத்திரத்திலும்
    அரிதாரத்திற்காகவும்
    செலவு செய்ததில்லை
    செலவு செய்வதில்லை

    அனைத்திற்கும்
    முதலீடுசெய்வதில்லை
    செலவுகள்
    தீர்க்கமானவை
    தெளிவானவை

    அவற்றிற்குத்
    திசைகளுமுண்டு
    இலக்குகளுமுண்டு

    பரிணாமத்தின் கிடங்காகி
    அடர்த்தியாகச்
    சேமிக்கப்பட்டிருக்கிறது
    பரிமாணத்தின்
    அடையாளமாக
    அவ்வப்போது வழங்கப்படுகிறது

    வெளிச்சமேடையில்
    விரயம் செய்வதில்லை
    விதைத்தவை
    விளைந்தவை
    அறுவடையாகவேண்டுமென்பதிலேயே
    கவலையும்
    கரிசனமும் கலந்து
    கழிகிறது காலம்!

    Share
  • கர்ணனுக்காக ஒரு கேள்வி !

     

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

     karna

    பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு

    துரோணர்

     

    ஏகலைவனிடம்

    கட்டைவிரல்வாங்கிய

    காரியவாதி

     

    நிழலைவணங்கி

    நேர்மையாய் வளர்ந்த

    ஏகலைவனுக்குத்

    துரோகம்செய்த

    துரோகி

     

    வேடம்போடத்தெரியாத

    வேடனுக்கு

    துரோணர் குரு துரோகி

    துரோகி குரு

     

    அவரிடம் கற்ற

    அரசகுமாரர்களில்

    தனித்தும்

    தினித்துவத்தோடும்

    விளங்கினான் அர்ச்சுனன்

     

    கற்றதில் கவனமும்karna-life

    குரு பக்தியும்

    நிறைந்தவன் அர்ச்சுனன்

     

    குருவிடம் கற்ற

    வித்தைகளை அரங்கேற்றும்

    நிகழ்வு நடந்தது

    மன்னர்கள்

    மன்னர்கள் அறிஞர்கள் ஆசிரியர்கள் சான்றோர்கள்

    படைக்கல வல்லவர்கள் வல்லுநர்கள் மற்றும்பலர்

    முன்னிலையில்

    அரங்கேற்றினர் வித்தைகளை

     

    அனைவரும் வியக்க

    அர்ச்சுனன்

    வித்தைகள் காட்டினான்

    வில்லால்

     

    துரோகத்தின் வடிவம்

    துரியோதனன்

    அர்ச்சுனனின் ஆற்றலைக்கண்டு துடித்தான்

    பொறாமையால்

    பொங்கிவழிந்தான்

     

    அர்ச்சுனனைக் கண்டு

    திடீர்மின்னலாய்

    கர்ஜித்தான் கர்ணன்

     

    வில்லெடுத்து என்னோடு

    வித்தைகாட்டென்றான்

     

    சபையில் சலசலப்பு

    துரியோதனனுக்கு

    உள்ளத்தினுள்ளே

    கிளுகிளுப்பு

     

    கரடிபோல் கர்ணன்

    வந்தாய் எண்ணி

    முகவரி கேட்டார்கள்

     

     

    மக்கள் முன்னிலையில்

    திறன்காட்டவிடாமல்

    தகுதிகேட்டும்

    குலம்கேட்டும்

    குற்றவாளியாக்கினார்கள்

     

    சூரியனுக்குப் பிறந்தவனை

    சூதகனுக்குப்பிறந்தவனா?

    ஏளனம் செய்தார்கள்

     

    தேரோட்டி மகனா?p13

    எங்கள்முன் நிற்பது?

    எங்களைப் போருக்கு அழைப்பது?

    துள்ளிக்குதித்தார்கள்

    எள்ளிநகைத்தார்கள்

    கர்ணனை

    மனம்குமையவைத்தார்கள்

     

    குலம்கேட்ட கொடுமையால்

    கர்ணன்

    முகவரி சொல்லமுடியாமல்

    முகம்வாடிப்போனான்

     

    காலம்கருதி

    ஞானமிகுக் கேள்விக்கணைகளைக்

    கேட்டான் துரியோதனன்

     

    பிறப்பில் இல்லை பெருமை

    செய்யும் செயலில்தான்

    உள்ளது பெருமை என்றான்

     

    அங்கதேசத்து அரசகுமாரனாக்கி

    அறிவித்தான்

    அரவணைத்தான் துரியோதனன்

     

     

    பகலவன் மறைந்ததால்

    அரங்கேற்றம் முடிந்தது

     

    எனினும்

    கர்ணனுக்காக

    தாய்க்குப்பிறக்காத குருவும்

    தந்தைக்குப்பிறக்காத

    தந்தைமுனிலையில்

    பாண்டுக்குப்பிறக்காத

    பாண்டவர்களுமா?

    கர்ணனைக் குலம்கேட்பது? என

    ஒருகேள்வி கேட்டிருந்தால்

    என்னபதில் கிடைத்திருக்கும்?

     

    (தமிழ்ப்பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன்,பேராசிரியர் தி.வேங்கடகிருஷ்ணயங்கார்,

    இலக்கியத்தென்றல் வ.ஜோதி எழுதிய ம்காபாரத உரைபடித்துக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட சிந்தனையில் விளைந்த கவிதை. 20.05.2014)

    Share
  • பகல் நீ!

    -பிச்சினிக்காடு இளங்கோ   

    அறுபதைத் தொடும்போதுதான்                                                          Bhagat-Singh
    உன்னைத் தொட்டேன்
    மன்னிக்கவும்!

    செவிவழியாய்ச் சேர்த்தவை
    ஏராளம் எனினும்
    கண்வழியாய் நீ
    என்மனம் புகக்

    கவிஞர் மலர்மகனே காரணம்!

    பொருளே வாழ்க்கையென
    வாழுவோர்க்கிடையில்
    பொருளுடையதாக வாழ்க்கையை
    ஆக்கப் பார்க்கிறேன்…

    அறுபதை நெருங்கியும்கூட
    ஆகவில்லை அந்தக்கனவு!

    அகவை இருபத்துநான்குக்குள்
    அகப்பட்டுவிட்டது உனக்கு!
    பொருளுடையதாய் மட்டுமல்ல
    புரட்சியுடையதாய்…
    புகழுடையதாய்!

    அழுக்கும்
    இழுக்கும் சேராப்
    புரட்சி நெருப்பாய்
    நூறுவிழுக்காடு
    வாழ்ந்த சூரியன் நீ!

    நீ
    மரித்ததற்குப்பின்
    இன்னும்
    பிறக்கவில்லையே ஏன்?

    சூரியன்
    மரிப்பதுமில்லை!
    பிறப்பதுமில்லை!

    உன்னைப் பேசுகிறவர்களாக
    வாழ்கிறோம்
    உன்னைப்போல்
    வாழ்கிறவர்களாக இல்லை!

    புரட்சியைக்
    கொச்சைப்படுத்தலைத் தவிர
    புரட்சியின் எச்சம்
    எதுவுமே இல்லை

    புரட்சி
    அடைமொழியாய்ச்
    சுவர்மொழியாய் வாழ்கிறது!

    பயம்
    உன்னைக்கண்டுதான்
    பயந்திருக்கிறது!
    மரணம்

    உனக்காகத்தான்
    அழுதிருக்கிறது!

    நகலெடுக்க முடியாத
    அசல் நீ!
    நிழலே இல்லாத
    நிஜம் நீ!
    சிறையைத் திருத்திய
    சீர்திருத்தம் நீ!
    பயணத்திற்குக் கிடைத்த
    பகல் நீ!

    உன் நாத்திக விளக்கம்
    ஆறுபடை வீடிருந்தும்
    அந்நிய மண்ணில்
    அடிபடும் தமிழர்க்குப் பாடம்!

    காந்திக்கு
    நீ வைத்த கேள்விகள்
    அறிவின் சூடு!

    விடம் குடித்தும்
    நேரம் நெருங்கியும்
    படித்துக்கொண்டிருந்தான்
    சாக்ரடீஸ்!

    நீயும்
    மரணம் வரையிலும்
    படித்துக்கொண்டிருந்தாய்
    மாவீரனை!

    நீ படித்தவன்!
    அநீதி கண்டு துடித்தவன்!
    உண்மையை வெடித்தவன்!

    இந்திய மண்ணில்
    நீதான் மாவீரன்!

    (14.12.2011 மலர்மகன் எழுதிய
    பஞ்சாப் சிங்கம் பகத்சிங் நூலைப்படித்ததும் எழுதியது)

     

    Share
  • அபினென்று அழைக்க முடிகிறது எனக்கு!

    -பிச்சினிக்காடு இளங்கோ

    இப்போது பிடிக்கிறது
    உன்னை                                                                                                              varnas  - abin enru

    ஒவ்வொருவருக்கும்
    ஒரு
    குடும்பப் பெயருண்டு

    என் குடும்பத்திற்கு
    என்னால் பெயர்வர
    எண்ணியிருக்கும்போது
    என்னை
    உன் குடும்பத்தில் சேர்த்துவிட்டார்கள்

    உண்மையில் நான்
    உன்குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல
    ஆதியில்
    என்குடும்பத்தின் பெயர்
    வேறு

    வரலாற்றுச் சதியில்;
    சகதியில் வந்ததுதான்
    உன்பெயர்

    உன்பெயரில் இயங்க
    ஒருபோதும் உடன்பாடில்லை
    அதுபோல்
    இன்னொருபெயரில் இயங்க
    எள்ளளவும் விருப்பமில்லை

    என்ன செய்வது?
    ஏதாவது ஒரு
    குடும்பத்தைச் சேர்ந்தவனாக
    இருக்கவேண்டுமே?

    எனவேதான் நான்
    உன்
    குடும்ப உறுப்பினன்

    இதுவரை
    உன்னையும்
    உன்னைப் போன்றவர்களையும்
    பிடிக்காது எனக்கு
    ஆனால்
    உன்னைப்போல் யாருமில்லை

    உன்பெயர்போல்
    ஒருபெயரும் வேண்டாமென்பவர்கள்
    என்னைப்போல் மிகச்சிலரே
    நாங்கள்
    உலகின் சிறுபான்மை
    மிகச் சிறுபான்மை
    நாங்கள்தாம்
    சிறுபான்மையின் குரல்!

    இன்னும் சிலர்
    உன்முகவரி
    இருந்துவிட்டுப் போகட்டுமே
    என்பவர்கள்
    ஆனால்…தன்
    குடும்பத்தைத் தாண்டிச்
    சிந்திப்பவர்கள்

    இன்னும் சிலர்
    என்னினும்
    ஆழமாய்ச் சிந்திப்பவர்கள்

     பிறப்பே
    சாபம் என்பவர்கள்
    சகித்துக்கொண்டே
    சவம் ஆனவர்கள்

    அங்கே
    பெண்களின் நிலையோ
    பேசாநிலை
    பெருமூச்சாய்
    முடிகிறநிலை

    அவர்கள்
    வெளிவரமுடியாப்
    பச்சைப் பசுங்கிளிகள்

    சிலர்
    பச்சையாகவே
    உன் வாரிசு என்கிறார்கள்

    நீங்கள்
    போதித்ததைக் காட்டிலும்
    புதிதாய்ப் போதிக்கிறார்கள்
    உங்கள்
    போதையில் இருக்கிறார்கள்

    இவர்கள்
    உங்கள்
    கங்காணிகள் ஆனதால்
    உங்கள் பெயர்
    களங்கமானது

    அன்பையும்
    மனிதத்தையும்
    மருந்தெனவும் எண்ணாதவர்களால்
    எப்படிப் புனிதம் கிட்டும்?

    அதனால்தான்
    நீங்கள் ’அபினென்று’
    அழைக்கப்படுகிறீர்கள்
    நீயும் அபின்தான்
    உன்கோட்பாடுகளில்
    அபத்தமிருக்கிறது
    ஆபத்தில்லை
    குப்பைகளதிகம்
    கூட்டிப் பெருக்கலாம்
    வஞ்சனைகளுண்டு
    கொடூரமில்லை

    எங்களைப் பிரித்துப்
    பார்த்தாய்
    ஆலயத்திலேயே எங்களை
    வெளியே நிறுத்தி
    வேடிக்கை பார்த்தாய்

    ஆலய நுழைவு
    ஆர்ப்பாட்டம் நடத்தினோம்
    வீதியில் நடக்க
    வேண்டிக் கிடந்தோம்

    பின்பு…
    ஆலயத்திற்குள்வர
    நாங்களே விரும்பவில்லை
    ஆண்டவனால் எதுவும்
    ஆகாதென்பதை அறிந்துகொண்டோம்!!

    ஆண்டவனே
    குருக்களிடம்
    கூனி நிற்கும்போது
    ஆண்டவனா தேவை?
    ஆண்டன் சந்நிதியில்
    ஆயிரம் நடக்கிறது
    ஆண்டவன் என்ன செய்தான்?
    தெளிவு பெற்றோம்

     இப்படியான உன்
    அதர்ம ஏற்றத்தாழ்வுகளுக்காக
    அலட்டிக்கொள்வதை நிறுத்திவிட்டோம்

    நாங்களே விரும்பிக்
    கர்ப்பக்கிரகத்திற்குள்
    நுழைந்து திரும்பினால்
    எங்கள்
    தலைஒன்றும் போகாது

    விழிப்புற்றால்
    வெற்றி பெறுவோம்
    உணர்ந்துகொண்டோம்

    நெருக்கடியில்லாத
    நிழல்மடி
    உன்குடும்பம்

    யாரோடும்
    நாங்கள் போக
    யாரும்
    எங்களோடு சேர
    தடுப்பவரில்லை
    தண்டிப்பவருமில்லை

    அளப்பரிய சுதந்தரத்தை
    அள்ளித்தருகிறாய்
    விளைவு…?
    உன்னையும் கேள்விகேட்கிறேன்
    உலகையும் கேள்விகேட்கிறேன்

    இவ்வளவு சுதந்தரமாய்க்
    கைவீசி நடக்கக்
    கைகொடுத்துதவும் உன்னைப்
    பிடிக்கிறது எனக்கு

    அடுத்த வீட்டில்
    நடப்பதைப் பார்த்து
    நெஞ்சம் குமைகிறது
    எனினும்
    நிம்மதி எஞ்சுகிறது

    ஒருவகையில்
    நான் கொடுத்துவைத்தவன்

    வானமளக்க
    வாய்ப்பிருக்கிறது

    அவரவர் காட்டும்
    அக்கறையைப் பார்த்து
    உன்மீது
    அக்கறை பிறக்கவில்லை
    அனுதாபம் வரவில்லை

    ஆனந்தச்
    சுதந்தரப் பெருமையில்
    பெருமிதம் கொள்கிறேன்

    உன்னைப்போல் யாரும்
    தாராளமாய் இல்லையே!

    விதிகளைப் பேசி
    உயிர்களின்
    விதிகளின் முடிவைக்
    கங்காணிகள் எடுத்தால்
    கடவுளிருந்து என்னபயன்?
    கடவுளென்பதன் பொருளென்ன??

    தேவை
    நீயா? கடவுளா?
    பெரிய கேள்வி

    ’இரண்டுமில்லை’
    இது என்
    எளிய பதில்

    குழப்பத்தில் இருக்கிறது
    உலகம்

    நீயும் அபின்தான்
    எப்போதும் சொல்வேன்

    அப்படிச் சொல்லவும்
    சொல்லித் திரியவும் தந்த
    உன் தாராளம் கருதி
    உன்னைப் பிடிக்கிறது
    எனக்கு!

     

    Share
  • தயாரிப்பாளர்

    -பிச்சினிக்காடு இளங்கோ

    அவர் ஒரு
    தயாரிப்பாளர்!

    இவர் ஒரு                                                                                                 Bookseller
    தயாரிப்பாளர்!

    நீங்கள் ஒரு
    தயாரிப்பாளர்!

    அவரவர் திறமைக்கேற்பத்
    தயாரிப்பு நடக்கிறது!

    அவரவர் விருப்பப்படியும்
    தயாரிக்கப்படுகிறது!

    தயாரிப்பு
    யாருக்காக?
    என்ற கேள்வியும்
    எழுகிறது!

    ’யாருக்காகவும்’
    என்ற பதிலும்
    இருக்கிறது!

    சந்தைக்கும்
    வந்துவிடுகிறது!

    வாங்குவோரும்
    உண்டு!

    வாங்கிப் பார்ப்பவரும்
    உண்டு!

    பரவலாக
    விற்பனையை
    விரும்பும் நீங்கள்
    அந்தக் கடைக்காரருக்கும்
    அது தெரிந்திருப்பது
    அவசியம்!

    மக்கள் மனதில்
    நிற்க விழையும் நீங்கள்
    அந்தக் கடைக்காரருக்கும்
    தெரிந்தவராகுங்கள்!

    அவர் கடையின்
    சரக்குப் பட்டியலில்
    உங்கள் சரக்கும்
    இருப்பது நல்லது!

    பட்டியலில் இருந்தால்
    வரலாற்றில் இருப்பதாய் பொருள்!

     பார்த்துவையுங்கள்
    அந்தப்
    பட்டியல்காரர்களை!

    வாசிப்போர் மனத்தில்
    இருந்தாலும்
    வரலாற்றிலும் இருப்பது
    அவசியம்!!

     

    Share
  • பொம்மைகள்!

    பிச்சினிக்காடு இளங்கோ     

    நாங்கள்
    பொம்மைகள் அல்ல…
    உங்கள்
    பிள்ளைகளின் மகிழ்ச்சி!

    பிள்ளைகளைப் பெற்றதால்                                                                      Angel-Doll-Angel-Baby
    உங்களுக்கு மகிழ்ச்சி!
    எங்களைப் பெற்றால்
    உங்கள்
    பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி!

    எங்களை வாங்காமலிருந்தால்
    உங்களுக்கு நட்டமில்லை!
    பிள்ளைகளின் முகத்தில்
    மகிழ்ச்சியைக் காணாமலிருந்தால்
    உங்களுக்கு லாபமில்லையே!

    நினைவில் வையுங்கள்…
    உங்களைப்போலவே   நாங்களும்
    உங்கள்
    பிள்ளைகளுக்காகவே இருக்கிறோம்!

    நீங்கள்
    உங்கள்
    பிள்ளைகளுடன் விளையாடுகிறீர்கள்!
    உங்கள் பிள்ளைகள்
    எங்களுடன் விளையாடுகிறார்கள்!

    உங்கள் கைகளில்
    பிள்ளைகள்!
    பிள்ளைகளின் கைகளில்
    நாங்கள்!

    மீண்டும் நினைவுபடுத்துகிறேன்…
    நாங்கள்
    பொம்மைகள் அல்ல…
    உங்கள்
    பிள்ளைகளின் மகிழ்ச்சி!

    மகிழ்ச்சியை வாங்குங்கள்!
    மகிழ்ச்சியாய் வாங்குங்கள்!

    (சிராங்கூன் சாலையில் ஒரு பொம்மைக்கடைக்குப் போனபோது ஒரு கவிதை எழுதுங்களேன் என்றார்கள். விளைவு இந்தக் கவிதை!)

    Share
  • பூமரம்

     

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)
    அடுக்குமாடிimages
    கட்டடத்தின் கீழேதான்
    அந்த இடம்

    அமைதியைத்தரும்
    அந்த இடத்தில்
    கவிதையைத்தேடித்தான்
    தினமும் வருகிறேன்

    முதியோர் அமரும்
    மூலையிலிருந்து
    படித்துவிட்டுத்திரும்புவது
    வழக்கம்

    உடற்பயிற்சிக்காக
    முதியவர்கள் வந்து
    பேசாமலிருப்பதும்
    பேசிக்கழிப்பதும் வழக்கம்

    வீட்டிலே வேலையே
    இல்லாமல்
    உடம்பைக்கனக்கவிட்டவர்கள்
    கண்டிப்பாக வந்து
    அங்கேயிருக்கும்
    உடற்பயிற்சிக்கருவிகளோடு
    உரையாடுவதும் வழக்கம்

    வழக்கத்திற்குமாறாக
    மஞ்சள்பூக்களை
    உதிர்த்துவிட்டு நின்றது
    மரம்

    அழகின்வியப்பில்
    தேடிக்கொண்டேவந்தேன்
    என்னையே தோண்டினேன்

    பூக்களைச்
    சிரிப்பாகக்கருதினேன்

    சிரிப்பை உதிர்த்துவிட்டமனிதனை எண்ணினேன்

    சிரிப்பை உதிர்த்துவிட்டு
    நிற்கிறது வெறும்மரம்

    வெறும் மரமா?
    வெறும் மனிதனா?

    நாளைக்கும் யோசிக்கலாமே
    என
    விடுதலையடைந்தேன்
    (21.1.2014 பிற்பகல் 1.30க்கு எழுதியது)

    Share
  • பிறவி வேண்டும்

     

     
    பிச்சினிக்காடு இளங்கோ
    இன்னொரு பிறவிவேண்டும்
    இழந்ததை ஈட்டவேண்டும்

    தூங்கித் தூங்கிக்
    கழித்த பொழுதைத்
    துடிப்பாய் விழித்துச்
    செயல்படவேண்டும்

    ஏங்கி ஏங்கிக்
    கரைந்த காதல்
    மீண்டும் பூக்க
    நீர்விட வேண்டும்

    குடித்துக் குடித்துக்
    களித்த பொழுதைப்
    படித்துப் படித்துப்
    பயனுற வேண்டும்

    எல்லாம் செய்யும்
    பொருளைச் செய்து
    ஏக்கம் இன்றி
    எல்லாம் செய்ய

    இன்னொரு பிறவிவேண்டும்
    இழந்ததை மீட்கவேண்டும்

    விழித்துத் தூங்கும்
    இடைவெளி எல்லாம்
    விழிப்பாய் இருந்து
    செயல்பட வேண்டும்( 07.12.2011)

    மானுடம் வாழ
    மனிதம் செழிக்க
    உடல்பொருள் ஆவி
    உருகிட வேண்டும்

    அன்பால் கலந்து
    அன்பில் கரைந்து
    மலராய்ச் சிரித்து
    மகிழ்ந்திட வேண்டும்

    உயிர்கள் அனைத்தும்
    ஒன்றென எண்ணி
    உள்ளம் கரைந்து
    வாழ்ந்திட வேண்டும்

    இன்னொரு பிறவிவேண்டும்
    இழந்ததை மீடகவேண்டும்

    Share
  • ஒரே பாட்டு

     

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)
    அரவணைப்பில்லை
    என்பது பல்லவி
    அலட்சியம் அனுபல்லவி
    கையில்பணமிருந்தால்
    கவலையில்லை என்பது சரணம்

    இப்போது
    எல்லா இடத்திலும்
    இதுதான் ஒலிபரப்பாகிறது

    சகிப்புத்தன்மை
    சற்றுமில்லா மனசு
    வற்றிய குளமாய்
    ஈரமின்றி

    மனதில் ஏந்தி
    மனம்கரைய பழகுவது
    அத்திபூத்தாலும்
    ஆகாது

    ஆலமரமெனினும்
    காலம் கடந்தால்
    விழுதுகள் இல்லையேல்
    விழுந்துவிட வேண்டியதுதான்

    விழுதுகள் இருந்தும்
    விழுந்தால்
    பழிதான் மிஞ்சும்

    பழுதான விழுதுகளால்
    பயன் எப்படிக்கிட்டும்

    யாரும் யாருக்காகவும்
    விட்டுக்கொடுக்காது
    வாழும் காலத்தில் வாழ்கிறோம்

    அரவணைப்பு என்பது
    இயல்பாய் இருந்துவிட்டால்
    கிடைத்துவிட்டால்
    அதுதான் பிறவிப்பயன்

    இல்லையேல் அதுதான்
    எல்லோரும் சொல்லும்
    விதிப்பயன்

    அரவனைப்பு
    இயல்பாய்க் கிடைப்பதற்கு
    என்னவழி?

    வளர்க்கிறபோது தவறவிட்டால்
    வளர்ந்தபின்
    வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியதுதான்

    அரவணைப்பு என்றும்
    இருவழிப்பாதை

    யாரும் நம்மை
    சுமையாகக் கருதாமல்
    யாருக்கும் நாம்
    சுமையாக இல்லாமல்
    வாழமுடியுமென்றால் வாழலாம்

    இதுதான் இப்போது
    ஒவ்வொரு
    முதுமை உள்ளத்திலும்
    முதியோர் வாழும் இல்லத்திலும்
    ஒலிபரப்பாகிறது

    காலன் இதையெல்லாம்
    கவனத்தில் கொண்டால்
    பெற்றோர் சுமையும்
    பிள்ளைகள் பழியும்
    இல்லாதுபோகுமோர்
    காலம் கிட்டும்

    காலனே
    கைகொடு
    காப்பாற்று

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 28 , 2014

    வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

    **************************************************************************************

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள்

    **************************************************************************************

    pichinikkadu elango

    வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் திரு. பிச்சினிக்காடு இளங்கோ (https://www.facebook.com/pichinikkadu.elango.9) அவர்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தத் தமிழகக் கவிஞர் வல்லமை இதழ் வாசகர்களுக்கு மிகவும் பழக்கமானவர், இன்றுடன் இரண்டு ஆண்டுகளாக (April 27, 2012 இல் இவரது முதல் வல்லமை பதிவு) வல்லமையின் வாசகர்களை தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வரும் திரு. பிச்சினிக்காடு இளங்கோ ஒரு வேளாண்மைப்பட்டதாரி. இவர் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிராமத்தில் குக்கிராமமான பிச்சினிக்காட்டில் பிறந்தவர். திருச்சி அனைத்திந்திய வானொலி நிலையம், சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழம், சிங்கப்பூர் MDIS (Management development Institute of Singapore) என்கிற கல்வி நிறுவனம் எனப்பல நிறுவனங்களும் இவர்  பணியால் சிறப்புற்றிருக்கிறது. சிங்கைச்சுடரின் முன்னாள் ஆசிரியரான இவரது கவிதைகள் தமிழகத்தின் குமுதம், விகடன் போன்ற முன்னணி பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.

    கவிஞனாகிறேன்  என்ற கவிதையில் தான் எப்படிப்பட்ட கவிஞன் என்று தன்னைப்பற்றிக் கூறியுள்ளார்.

    இதை இதை
    எழுதவேண்டுமென்று
    எண்ணியதில்லை
    எண்ணுவதுமில்லை

    அது அது
    வந்து நச்சரிப்பதால்தான்
    எனது எழுதுகோல்
    உச்சரிக்கிறது …..

    இதுவரை இவரது பத்து கவிதை நூல்கள் வெளி வந்துள்ளன. இவர் நெடுங் கவிதைகளையும் எழுதுவதுண்டு. இவரது முதல் தொகுதியான “வியர்வைத்தாவரங்கள்” படித்து விட்டு மறைந்த டாக்டர் பாலா நெடுங்கவிதைகள் எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்திய கவிப்பேரரசு திரு. வைரமுத்து அவர்கள் “உங்களுடைய நெடுங்கவிதை நாவல்போல் உள்ளது” என்றும் பாராட்டியுள்ளார். இவாரத்தில் வல்லமை இதழில் வெளிவந்த இவரது கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன் என்ற கவிதையும் ஒருவகையில் நெடுங்கவிதையே.

    இவருக்கு ஒரு நூலைப் படிப்பது, பேருந்துப் பயணத்தில் ஒரு நிகழ்வைப் பார்ப்பது என அனைத்துமே கவிதைகளை எழுதத் தூண்டுகோலாக அமைந்து விட்டிருக்கிறது. அக்குறிப்புகளையும் இணைத்து கவிதைகளுடன் வழங்கியுள்ளார்.

    இம்முறை இராஜாஜியின் மகாபாரதம் படித்த பிறகு கர்ணன் மேல் கொண்டிருந்த இவரது எண்ணம் மாறிவிட்டிருக்கிறது. நாம் அனைவரும் நட்பிற்கு இலக்கணமாகக்  கர்ணனைப் புகழ்வோம். செஞ்சோற்றுக் கடன் தீர்க்க தனது தம்பிகளையும் எதிர்த்தவன் எனப் பாராட்டுவோம். ஆனால் இவரோ கர்ணன் பெரிய வள்ளலாகத்தான் இருக்கட்டுமே அதனால் என்ன? அவன் நியாயவான் அல்ல … என்று தனது வாதத்தை முன் வைக்கிறார்.

    துவைத வனத்தில் சித்திரசேனனிடம் துரியோதனன் சிக்கிய பொழுது கர்ணன் உதவாமல் தப்பி ஓடினான். தனக்கு நாடு தந்து அவமானம் துடைத்து அழகு பார்த்த துரியோதனனை தவிக்க விட்டவன் கர்ணன். அவன் நியாயத்தின் பக்கம் நின்றதே இல்லை. கௌரவர் சபையில் பாஞ்சாலிக்கு நடந்த கொடுமையில் பாஞ்சாலிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவன் விகர்ணன்தான். கர்ணன் துச்சாதனனுக்கு துகிலுரிக்கச் சொல்லி தூபம் போட்டவன். பாஞ்சாலிக்கு ஆதரவாகப் பேசிய விகர்ணனைக் கண்டித்தவன் கர்ணன்.  இந்தக் காரணத்தால் இக்கவிஞர் கர்ணனை மன்னிக்கத் தயாராக இல்லை.

    கௌரவர்களில் நூற்றில் ஒருவனாக இருந்தாலும் பாஞ்சாலிக்கு நடந்த அநியாயத்திற்கு உடன்படாத விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன் என்று தனது எண்ணத்தைக்  கவிதை மூலம் வடித்துள்ளார். இது போன்ற வேறு விதக் கோணம் கொண்ட விவாதம் இவரது கவிதையை சிறப்புறச் செய்கிறது.

    அக்கவிதையின் சுருக்கமான சாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்
    [முழுக் கவிதையின் சுட்டி: http://www.vallamai.com/?p=44441]

    எல்லாரும்
    எல்லா இடத்திலும்
    கர்ணனையே வியக்கிறார்கள்
    நான் வேறுபடுகிறேன்

    உலகத்தோடு
    நான்
    ஒத்துப்போக விரும்பவில்லை
    எல்லாரையும்போல
    ஓபோட
    விரும்பவில்லை

    கொடை
    கொடுக்கும் இடத்திலும்
    குலம்கேட்ட இடத்திலும்
    நான்
    கர்ணன்பக்கம்தான்

    திறன்காட்டவிடாமல்
    குலம்கேட்டது கொடுமைதான்
    அதற்குமேல்
    அவன்மேல்
    மரியாதையில்லை
    நான்
    அவன்பக்கமில்லை

    செஞ்சோற்றுக்கடன்
    தீர்த்ததிலும் பெருமையில்லை

    பாண்டவர் கெளரவர்
    மற்றும் வேடிக்கை
    பார்ப்பவர்
    நிறைந்த அவையில்
    பாஞ்சாலிக்காக
    யார்பேசினார்கள் நேர்மையாய்?

    பெண்ணெனப்
    பார்த்தவர் அதிகம்
    பெண்ணென்று
    பரிவுகாட்டியவர் யார்?

    சுதந்தரம் இழந்தவன்
    என்னை இழக்க
    என் சுதந்தரத்தை இழக்க
    என்ன உரிமையுண்டு?

    பாஞ்சாலி கேள்விக்கு
    அவை ஆண்மையற்று
    அன்று ஆமைபோல் இருந்தது

    பாஞ்சாலி பேசுவது
    சரியென்று குரல்கொடுத்த
    விகர்ணனைக்
    கண்டித்த கர்ணனைக்
    கண்ணைமூடிக்கொண்டு ஏற்பது
    ஏற்புடையதல்ல எனக்கு

    விகர்ணன்
    அவையில் சின்னவன்
    பெண்ணுக்காய்ப்பேசிய
    பெரியவன் அவன்தான்

    துச்சாதனனைத்
    துகிலுரியத் தூண்டியதே
    கர்வக்காரன் கர்ணன்தான்

    இனி எப்போதும்
    நான் விகர்ணன் பக்கம்

    இராமயணம் என்றால்
    நான்
    கும்பகர்ணன் பக்கம்

    காரணம்
    விகர்ணன்
    நியாத்தின் பக்கம்

    அவன்
    கெளரவர்களுக்கு
    கெளரவம் தந்தவன்

    அவன்
    நூற்றில் ஒருவனல்ல
    ஆயிரத்தில் ஒருவன்

    சிறப்பு மிக்க கவிதை ஒன்றை வல்லமை வாசகர்கள் படித்து மகிழ வழங்கிய திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • என்னுயிர்த்தோழனே..!

     

    பிச்சினிக்காடு இளங்கோ

     

     

    உதிரத்தை வியர்வையாய்
    மொழிபெயர்க்கத்தெரிந்தவனே

    வியர்வையை நதியாக்கி
    நாளும் குளிப்பவனே

    என்னுயிர்த்தோழனே
    உன் வியர்வைத்துளி
    ஒவ்வொன்றும் ரூபாயல்ல
    வெள்ளி…வெள்ளி

    அள்ளி ச்சேர்க்க
    வந்ததை மறந்து
    வெள்ளித்திரைமுன்
    விரயம் செய்வதா?

    வெள்ளி
    சலுகையில் கிடைத்ததல்ல
    உன்னையே நீ
    கசக்கிப்பிழிந்ததில் விளைந்தது

    அடகுவைத்த
    நிலம், நகை,

    கட்டிமுடிக்காத
    சகோதிரியின் திருமணக்கடன்

    பாதியிலேயே நிற்கும்
    கட்டத்தொடங்கிய வீடு

    அப்படியே இருக்கையில்
    எப்படித்தோழா?
    இப்படி
    வேலைக்கு விடுப்புப்போட்டு
    வீணாகவந்து நின்றாய்!

     

     

     

     

    உழைத்துக்களைத்து
    இரவில்
    தொலைபேசியில் தொலைத்து
    தொலைந்து
    கண்டெடுக்கும் வாழ்க்கையை
    கண்டபடி வீணடிப்பதா?

    புதிதாய்ப் பிறந்த
    குழந்தைக்கும் மனைவிக்கும்
    நகையும் உடையும்
    அனுப்புவது எப்போது?

    அங்கேதான் நாம்
    அரிதாரங்களையெல்லாம்
    அவதாரமாய் எண்ணி
    மீட்கப்படாத
    அகதிகளாக இருக்கிறோம்

    அரசியலால்
    அவமானங்களோடு
    அன்றாடம் வாழ்கிறோம்

    இங்கேயும் வந்து
    கேள்விக்குறியாவதா?

    தாய்மொழி வாழும்
    இதுதான் நம்
    தாய் நாடு

    உன் உழைப்புக்கும்
    உயர்வுக்கும்
    கைகொடுத்துதவும்
    இன்னொரு வீடு

    உழைப்பவரெல்லாம்
    ஒன்றெனக் கருதும்
    இந்நாட்டில்
    உழைப்பை விடுத்து
    உடலையும் கெடுத்து
    திரையரங்குமுன்திரள்வது
    சரியா?

     

    பெற்றதிலிருந்து
    எதையும்பெறாத பெற்றோருக்கு
    தரவேண்டியதை மறந்து
    தடம்புரள்வது சரியா?

    பகலில்
    வியர்வையில் குளிக்கிறாய்
    இரவில்
    குளிர்நீரில் குளிக்கிறாய்
    ஆடைமாற்றிக்
    களைப்பைத்தொலைக்கிறாய்

    நீ
    நிலைதடுமாறுவதும்
    நிலைகுலைவதும்
    நியாத்திற்கு எதிரானது

    உனக்கும்
    உன்குடும்பத்திற்கும்
    துரோகமானது

    உன் அபிமான
    அவதார புருசர்களெல்லாம்
    நடிப்பிலும்கூட
    ‘டூப்’ வைத்து
    நடிப்பவர்கள்

    இப்பொழுது திரைப்படத்தில்
    நடிப்பும் இல்லை
    நடிகர்களும் இல்லை

    இருப்பவர்களெல்லாம்
    உடலை நெளிப்பவர்கள்
    பாட்டுக்கு
    உடற்பயிற்சி செய்பவர்கள்

    இவர்களை நம்பி
    ஏன் தம்பி
    ஏமாந்துபோகிறாய்?

    எதிர்காலமில்லாத
    இவர்களிடமா உன்
    எதிர்காலம் இருப்பது?
    நீ செய்வது
    பொழுதுபோக்கா?
    இல்லை
    பொல்லாப்போக்கு

    உனக்கிருப்பது
    கலைமனமா?
    இல்லை
    கவர்ச்சி மனம்

    விலைபோவதை விடு
    நிலைபெற முடிவெடு
    நீடித்த புகழ்பெறு

    (திரையரங்குமுன் கலாட்டா செய்திகேட்டு எழுதிய கவிதை)

    Share
  • கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்

    பிச்சினிக்காடு இளங்கோ

     

    எல்லாரும்images (5)
    எல்லா இடத்திலும்
    கர்ணனையே வியக்கிறார்கள்
    நான் வேறுபடுகிறேன்

    உலகத்தோடு
    நான்
    ஒத்துப்போகவிரும்பவில்லை
    எல்லாரையும்போல
    ஓபோட
    விரும்பவில்லை

    துடுக்குத்தனமும்
    தோற்றப்பொலிவும்
    நடிகர்திலகம்போல்
    இருந்திருப்பானோ என்னவோ
    தெரியவில்லை

    கொடை
    கொடுக்கும் இடத்திலும்
    குலம்கேட்ட இடத்திலும்
    நான்
    கர்ணன்பக்கம்தான்

    திறன்காட்டவிடாமல்
    குலம்கேட்டது கொடுமைதான்
    அதற்குமேல்
    அவன்மேல்
    மரியாதையில்லை
    நான்
    அவன்பக்கமில்லை

    செஞ்சோற்றுக்கடன்
    தீர்த்ததிலும் பெருமையில்லை

    அங்கதேசத்து
    அதிபனாக்கியது
    அதைவிடபெருமை

    கர்ணனின்
    அவமானம் துடைத்தது
    பெருமையிலும் பெருமை

    எந்தஇடத்திலும்
    என்னால் கர்ணனை
    ஏற்கமுடியவில்லை
    கர்ணன்
    அவசரக்காரன்
    அலட்சியக்காரன்
    பெருமிதக்காரன்
    ஏளனக்காரன்
    என்பது என்முடிவு

    மகேந்திரமலையில்
    பரசுராமரிடம் பொய்சொல்லி
    வேதமும் வித்தையும் கற்றவன்

    பாண்டவர் கெளரவர்
    மற்றும் வேடிக்கை
    பார்ப்பவர்
    நிறைந்த அவையில்
    பாஞ்சாலிக்காக
    யார்பேசினார்கள் நேர்மையாய்?

    பெண்ணெனப்
    பார்த்தவர் அதிகம்
    பெண்ணென்று
    பரிவுகாட்டியவர் யார்?

    கொடுமைகண்டு
    கொதித்தான் வீமன்
    காரணம்
    அவள்
    அவனுக்கும் மனைவி

    பாஞ்சாலியை
    அவைக்கு இழுத்துவந்து
    துரோகத்தின் வடிவம்
    நானென்று
    துரியோதனன் நிலைநாட்டினான்

    சுதந்தரம் இழந்தவன்
    என்னை இழக்க
    என் சுதந்தரத்தை இழக்க
    என்ன உரிமையுண்டு?

    பாஞ்சாலி கேள்விக்கு
    அவை ஆண்மையற்று
    அன்று ஆமைபோல் இருந்தது

    போரென்று வரும்போதும்
    போட்டியென்று வரும்போதும்
    கர்ணன் கைகொடுத்தால்
    அது
    கடனென்று கொள்ளலாம்

    பாஞ்சாலி பேசுவது
    சரியென்று குரல்கொடுத்த
    விகர்ணனைக்
    கண்டித்த கர்ணனைக்
    கண்ணைமூடிக்கொண்டு ஏற்பது
    ஏற்புடையதல்ல எனக்கு

    விகர்ணன்
    அவையில் சின்னவன்
    பெண்ணுக்காய்ப்பேசிய
    பெரியவன் அவன்தான்

    துச்சாதனனைத்
    துகிலுரியத் தூண்டியதே
    கர்வக்காரன் கர்ணன்தான்

    ஒருமுறை அவமானப்பட்டவன்
    எந்த இடத்திலும்
    எவர்மானமும் காக்கப்
    பேசியதாய் இல்லை
    பிறர்படும் அவமானம்பற்றி
    அலட்டிக்கொண்டதே இல்லை

    துவைத வனத்தில்
    சித்திரசேனனிடம்
    துவைக்கப்பட்டான்
    துரியோதனன்
    புறம்காட்டி ஓடினான்
    கர்ணன்

    துரியோதனன்
    சித்திரசேன்னிடம் சிக்கியபோது
    கர்ணனும் சிக்கியிருக்கவேண்டும்
    கந்தர்வனால்
    கட்டப்பட்டிருக்கவேண்டும்
    அன்று
    ஓடியவன் கர்ணன்
    அவனா
    பாட்டுடைத்தலைவன்?
    அதில்
    ஒருபோதும்
    துரியோதனனுக்குத்
    துளியும் உடன்பாடில்லை

    அன்றே அந்த
    அவலம்கண்டு
    உயிர்விடத்துணிந்தான்
    துரியோதனன்

    அவமானம் நீக்கி
    அங்கதேசம் தந்து
    தன்மானம் தந்தவனை
    தவிக்கவிட்டு
    ஓடிப்போனதா?
    கர்ணன் தந்த வெகுமானம்?

    அங்கத்தையே தர
    அங்கே
    நின்றிருக்கவேண்டாமா?

    நியாத்தின் பக்கம்
    நின்றதே இல்லை

    எரியும் நெருப்பிற்கு
    எண்ணையாய் இருந்திருக்கிறான்

    எங்கேயும்
    மழைமேகமாய் மாறி
    தீயணைத்ததில்லை

    கர்ணன்
    படம்பார்த்ததால்
    கர்ணனாய்
    சிவாஜி நடித்ததால்
    அப்பாவித்தனமாக
    நான்
    அவன்பக்கமிருந்தேன்

    சக்தி கிருஷ்ணசாமியின்
    சக்திமிகு வசனம்
    சாய்த்தது என்னை
    அவன் பக்கம்

    இராஜாஜி
    மகாபாரதம் படித்தேன்
    இனி எப்போதும்
    நான் விகர்ணன் பக்கம்

    இராமயணம் என்றால்
    நான்
    கும்பகர்ணன்  பக்கம்

    காரணம்
    விகர்ணன்
    நியாத்தின் பக்கம்

    அவன்
    கெளரவர்களுக்கு
    கெளரவம் தந்தவன்

    அவன்
    நூற்றில்  ஒருவனல்ல
    ஆயிரத்தில் ஒருவன்

    {9.04.2014 ) நள்ளிரவு 1.30க்கும் 2 மணிக்கும் இடையில் அர்ச்சுனன் நாடகம் எழுத இராஜாஜி எழுதிய மகாபாரதம் படித்துக் கொண்டிருந்தபோது கிடைத்த பரிசு இக்கவிதை}

    Share
  • கவிஞனாகிறேன்

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

     

    இதை இதைimages (4)
    எழுதவேண்டுமென்று
    எண்ணியதில்லை
    எண்ணுவதுமில்லை

    அது அது
    வந்து நச்சரிப்பதால்தான்
    எனது எழுதுகோல்
    உச்சரிக்கிறது

    அதுவரை தெரியாதது
    அடுத்தடுத்து தெரிகிறது

    இருட்டுக்குள் வெளிச்சம்
    வழிகாட்டுகிறது

    சூத்திரம் இல்லாமல்
    சூட்சுமம் அவிழ்கிறது

    திறவுகோல் இல்லாமல்images (3)
    பூட்டுகள் திறக்கின்றன

    பார்ப்பதால் உடன்
    பாதிக்கப்படுகிறேன்

    எண்ணுவதால் என்னை
    இழந்துவிடுகிறேன்

    கவனம் கூடி
    கரைந்துவிடுகிறேன்

    பறவையாகி
    பறந்துவிடுகிறேன்

    விதவிதமாக
    பொருள்புரிகிறேன்
    புரிந்ததைப் புதிதாய்ப்
    புரியவைக்கிறேன்

    அதிசயம்கண்டு
    அசந்துவிடுகிறேன்

    வியப்புற்று என்னையேteaching-poetry-to-children
    வியக்கிறேன்
    ஆனந்தமாய் ஒரு
    கவிதையடைகிறேன்

    கவிதையைக்கண்டு
    கர்வமடைகிறேன்

    அக்கணத்திலேயே நான்
    கவிஞனாகிறேன்

    (15.04.2014 அன்று 5.50க்கும் 6.30க்கும் இடையில் பேருந்து எண் 67 ல் விளைந்தது)

     

    படத்திற்கு நன்றி :

    http://go2uttyler.blogspot.in/2013/04/experimental-poetry-self-discovery-and.html

    Share