அபினென்று அழைக்க முடிகிறது எனக்கு!
-பிச்சினிக்காடு இளங்கோ
ஒவ்வொருவருக்கும்
ஒரு
குடும்பப் பெயருண்டு
என் குடும்பத்திற்கு
என்னால் பெயர்வர
எண்ணியிருக்கும்போது
என்னை
உன் குடும்பத்தில் சேர்த்துவிட்டார்கள்
உண்மையில் நான்
உன்குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல
ஆதியில்
என்குடும்பத்தின் பெயர்
வேறு
வரலாற்றுச் சதியில்;
சகதியில் வந்ததுதான்
உன்பெயர்
உன்பெயரில் இயங்க
ஒருபோதும் உடன்பாடில்லை
அதுபோல்
இன்னொருபெயரில் இயங்க
எள்ளளவும் விருப்பமில்லை
என்ன செய்வது?
ஏதாவது ஒரு
குடும்பத்தைச் சேர்ந்தவனாக
இருக்கவேண்டுமே?
எனவேதான் நான்
உன்
குடும்ப உறுப்பினன்
இதுவரை
உன்னையும்
உன்னைப் போன்றவர்களையும்
பிடிக்காது எனக்கு
ஆனால்
உன்னைப்போல் யாருமில்லை
உன்பெயர்போல்
ஒருபெயரும் வேண்டாமென்பவர்கள்
என்னைப்போல் மிகச்சிலரே
நாங்கள்
உலகின் சிறுபான்மை
மிகச் சிறுபான்மை
நாங்கள்தாம்
சிறுபான்மையின் குரல்!
இன்னும் சிலர்
உன்முகவரி
இருந்துவிட்டுப் போகட்டுமே
என்பவர்கள்
ஆனால்…தன்
குடும்பத்தைத் தாண்டிச்
சிந்திப்பவர்கள்
இன்னும் சிலர்
என்னினும்
ஆழமாய்ச் சிந்திப்பவர்கள்
பிறப்பே
சாபம் என்பவர்கள்
சகித்துக்கொண்டே
சவம் ஆனவர்கள்
அங்கே
பெண்களின் நிலையோ
பேசாநிலை
பெருமூச்சாய்
முடிகிறநிலை
அவர்கள்
வெளிவரமுடியாப்
பச்சைப் பசுங்கிளிகள்
சிலர்
பச்சையாகவே
உன் வாரிசு என்கிறார்கள்
நீங்கள்
போதித்ததைக் காட்டிலும்
புதிதாய்ப் போதிக்கிறார்கள்
உங்கள்
போதையில் இருக்கிறார்கள்
இவர்கள்
உங்கள்
கங்காணிகள் ஆனதால்
உங்கள் பெயர்
களங்கமானது
அன்பையும்
மனிதத்தையும்
மருந்தெனவும் எண்ணாதவர்களால்
எப்படிப் புனிதம் கிட்டும்?
அதனால்தான்
நீங்கள் ’அபினென்று’
அழைக்கப்படுகிறீர்கள்
நீயும் அபின்தான்
உன்கோட்பாடுகளில்
அபத்தமிருக்கிறது
ஆபத்தில்லை
குப்பைகளதிகம்
கூட்டிப் பெருக்கலாம்
வஞ்சனைகளுண்டு
கொடூரமில்லை
எங்களைப் பிரித்துப்
பார்த்தாய்
ஆலயத்திலேயே எங்களை
வெளியே நிறுத்தி
வேடிக்கை பார்த்தாய்
ஆலய நுழைவு
ஆர்ப்பாட்டம் நடத்தினோம்
வீதியில் நடக்க
வேண்டிக் கிடந்தோம்
பின்பு…
ஆலயத்திற்குள்வர
நாங்களே விரும்பவில்லை
ஆண்டவனால் எதுவும்
ஆகாதென்பதை அறிந்துகொண்டோம்!!
ஆண்டவனே
குருக்களிடம்
கூனி நிற்கும்போது
ஆண்டவனா தேவை?
ஆண்டன் சந்நிதியில்
ஆயிரம் நடக்கிறது
ஆண்டவன் என்ன செய்தான்?
தெளிவு பெற்றோம்
இப்படியான உன்
அதர்ம ஏற்றத்தாழ்வுகளுக்காக
அலட்டிக்கொள்வதை நிறுத்திவிட்டோம்
நாங்களே விரும்பிக்
கர்ப்பக்கிரகத்திற்குள்
நுழைந்து திரும்பினால்
எங்கள்
தலைஒன்றும் போகாது
விழிப்புற்றால்
வெற்றி பெறுவோம்
உணர்ந்துகொண்டோம்
நெருக்கடியில்லாத
நிழல்மடி
உன்குடும்பம்
யாரோடும்
நாங்கள் போக
யாரும்
எங்களோடு சேர
தடுப்பவரில்லை
தண்டிப்பவருமில்லை
அளப்பரிய சுதந்தரத்தை
அள்ளித்தருகிறாய்
விளைவு…?
உன்னையும் கேள்விகேட்கிறேன்
உலகையும் கேள்விகேட்கிறேன்
இவ்வளவு சுதந்தரமாய்க்
கைவீசி நடக்கக்
கைகொடுத்துதவும் உன்னைப்
பிடிக்கிறது எனக்கு
அடுத்த வீட்டில்
நடப்பதைப் பார்த்து
நெஞ்சம் குமைகிறது
எனினும்
நிம்மதி எஞ்சுகிறது
ஒருவகையில்
நான் கொடுத்துவைத்தவன்
வானமளக்க
வாய்ப்பிருக்கிறது
அவரவர் காட்டும்
அக்கறையைப் பார்த்து
உன்மீது
அக்கறை பிறக்கவில்லை
அனுதாபம் வரவில்லை
ஆனந்தச்
சுதந்தரப் பெருமையில்
பெருமிதம் கொள்கிறேன்
உன்னைப்போல் யாரும்
தாராளமாய் இல்லையே!
விதிகளைப் பேசி
உயிர்களின்
விதிகளின் முடிவைக்
கங்காணிகள் எடுத்தால்
கடவுளிருந்து என்னபயன்?
கடவுளென்பதன் பொருளென்ன??
தேவை
நீயா? கடவுளா?
பெரிய கேள்வி
’இரண்டுமில்லை’
இது என்
எளிய பதில்
குழப்பத்தில் இருக்கிறது
உலகம்
நீயும் அபின்தான்
எப்போதும் சொல்வேன்
அப்படிச் சொல்லவும்
சொல்லித் திரியவும் தந்த
உன் தாராளம் கருதி
உன்னைப் பிடிக்கிறது
எனக்கு!
பல ிடங்களில் வார்த்தையின் ஆளுமை அருமை.