Blog

  • நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ (Sun Seeds) – கவிதைத் தொகுதி வெளியீடு

    நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ (Sun Seeds) – கவிதைத் தொகுதி வெளியீடு

    நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ – கவிதைத் தொகுதி வெளியீடு

    தர்பார், சர்க்கார், என்னை அறிந்தால், ஐ, சர்வம் தாளமயம், தங்க மீன்கள் போன்ற தமிழ்ப்படங்களுக்கு சப்டைட்டில் செய்த நந்தினி கார்க்கி, Sun Seeds (சூரிய விதைகள்) என்ற பெயரில் ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

    கவிஞர் வைரமுத்துவும் அவரது மனைவி பொன்மணி வைரமுத்து மகன்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து என்ற கவிதைக் குடும்பத்தில் இப்போது அவரது மருமகள் மற்றும் மதன் கார்க்கியின் மனைவி நந்தினி கார்க்கி ஒரு ஆங்கிலக் கவிஞராய் உதயமாகியுள்ளார்.

    இருட்டில் இருந்து விடியலுக்கு என்ற இரு வழிப் பயணத்தை மேற்கொள்கிறது இந்த நூல். இயற்கையின் அழகை, மாற்றங்களை ஒரு வழியில் கண்டு களித்து மனதின் மேடு பள்ளங்களில் இன்னொரு வழியில் பயணம் செய்கின்றன நந்தினி கார்க்கியின் கவிதைகள்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்து, ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்த தன் அனுபவங்களின் சாறு இந்த நூல் என்று நூற்குறிப்பில் நந்தினி கார்க்கி எழுதியுள்ளார். இவர் கடந்த ஓராண்டாக தினமொரு சங்கப்பாடலை பற்றிய விளக்க உரையை இணையவழி பாட்காஸ்ட் செய்து வருகிறார்.

    இந்தக் கவிதைத் தொகுப்பை நோஷன் பிரஸ் வெளியிட்டுள்ளது. அமேசான், அமேசான் கிண்டில் போன்ற தளங்களில் வெளியிடப்படும் இந்த நூல் ஆங்கிலக் கவிதை விரும்பிகளுக்கு மட்டும் விருந்தளிக்காமல் மனம் தளர்பவர்களுக்கும் மருந்தளிக்கும் என்று நம்புகிறார் நந்தினி கார்க்கி.

    Share
  • Invitation – Lecture and Demonstration

    Invitation – Lecture and Demonstration

    About the talk and demonstration

    In this talk, Nrithya Pillai discusses her position as a hereditary woman artist from the isai velalar (formerly devadasi) community of Tamilnadu. She will address socio-political issues related to both identity as well as performance, for she understands these to be deeply related. She will talk about issues such as Indian nationalism, “devadasi reform,” the reinvention of dance in Madras in the 1930s, as well as questions around the deeply political nature of today’s Bharatanatyam as both a discourse and a practice. This event will feature a lecture, demonstration, and also short excerpts of performance.

    About the speaker/performer

    Nrithya Pillai is a dancer, dance composer, singer, writer, speaker, and dance instructor who proudly claims her hereditary nattuvanar-devadasi lineage. Artistic Director of Rajarathnalaya,  a bharathanatyam institution founded by her maternal grandfather Swamimalai Rajarathnam Pillai, she consciously preserves and reanimates the rich repertoire and the teaching and choreographic practices of her celebrated ancestors, who include Vaitheeswarankoil Meenakshisundaram Pillai, T.K Swaminatha Pillai and Padmashri Vazhuvoor B. Ramiah Pillai. Epitomizing the teacher-nattuvanar of the hereditary paramparais, and carving out her own space as a performer with impeccable training and vast creativity, Nrithya nevertheless represents a new kind of artistic and intellectual engagement with the troubled history of bharatanatyam in the long 20th century. She vigorously challenges the power relationships and ideologies that made the form unavailable to women of her community, and advocates fiercely for the restoration of credit for bharatanatyam technique, repertoire, and philosophy to the hereditary isai vellala community of practitioners. Her performances and her writings about the upper caste appropriation of this form, which have evoked both enthusiastic accolades and awards on the one hand and resistance on the other, are at once embodied research, political intervention, and a labour of abiding love towards the traditional custodians of the form–especially towards her foremothers, who include the remarkable Tiruvalaputtur Kalyani. Nrithya’s voice, raised against casteism in the contemporary dance world, is unique in the field today, and her message against historical misrepresentation is relevant and powerful.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 9

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 9

    தி. இரா. மீனா        

    அப்பி தேவய்யா

    “ஈஸ்வரிய வரத மகாலிங்கா“ என்பது இவரது முத்திரையாகும். ”நான்” என்பது அழியவேண்டும். அது அழியாத வரைகுரு- இலிங்கம், ஜங்கமம், பாதோதகம், பிரசாதம் ஆகியவற்றை என்னால் விரும்ப முடியாது என உறுதியாகப் பேசிய தன்மை இவருடையது.

    “பொன்பெண் மண்ணை விடுவிக்காத குருவின் நல்லுரை
    தேவையற்றது.
    கோபம், இன்பத்தை அகற்றாத இலிங்கத்தை வழிபட இயலாது
    மாயை என்பதன் இருட்டை அழிக்காத ஜங்கமனுக்கு என்னால்
    தாஸோகம்  செய்ய இயலாது.
    பேரின்பம் தராத புனித நீரை அருந்த மாட்டேன்.
    பலன் தராத பிரசாதம் வேண்டாம்
    எனது “நான் “என்ற உணர்வை  அகற்றாத ஈஸ்வரிய வரத
    மகாலிங்கத்தை  என்னவென்பேன்?” என்று உறுதியாகப் பேசும் வசனம் இது.

    அவசரத ரேக்கண்ணா

    “சத்தியோஜாத லிங்கா ”இவரது முத்திரையாகும். தத்துவம், அனுபவம், மறைபொருள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்த இவரது வசனங்களில் பெரும்பாலானவை விடுகதை போலான சிறப்பம்சம் கொண்டவை.

    1. “உலகெங்கும் பொன் நிறைந்திருந்தால்
    அரசர்களுக்குள் போரெதற்கு?
    நடைபெறுபவை அனைத்தும் உண்மையென்றால்
    நல்லவர் கெட்டவர் என்ற பேச்செதற்கு?
    பொன், வெள்ளி, முத்து, மரம், செடி, கொடி ஆகியவை
    ஏற்ற இடங்களில்  மட்டுமே உருவாகும், தழைக்கும்
    குலமிருக்குமிடத்தில் ஒழுக்கம் இருக்கும்.
    ஒழுக்கமிருக்குமிடத்தில்   உறுதியிருக்கும்.
    உறுதியான இடத்தில் உண்மை இலிங்கமுண்டு.
    பக்தியை வளர்த்து அறுத்து,அளந்து வாழ்வது
    சத்யோஜாதலிங்கம் என்னும் நெல் குதிருக்குள்ளாம்”

    2. “வேம்பு மரத்தில் அமர்ந்து
    வெல்லம் தின்றால் கசக்குமா?
    அங்ககன் அமுதைச் சுவைத்தால் புளிக்குமா?
    பயணத்திற்கான பாதையில்லை என் முடவன் சொன்னால்
    அவனைக் கொல்பவர்களுண்டோ?
    இந்த உணர்வின் வெளிப்பாடும், ஊக்கமும்
    சத்யோஜாத லிங்கத்திற்கே”

    3. “கனி கொய்ய முடியுமோ மரமேறாமல்?
    மணத்தைச் சூட இயலுமோ மலர்களின்றி?
    உண்மையை மெய்ப்பிக்க முடியுமோ சாட்சியின்றி?
    ஊக்கமின்றி குரு,இலிங்கம்,ஜங்கமம் அடைய இயலுமா?
    குருவிடம் நல்லுறவு,இலிங்கதி யானம்,மூவகை மலவிலக்கு
    ஆகியன சத்யோஜாத இலிங்கத்துக்கு நட்பாம்.”

    ஆய்தக்கி லக்கம்மா

    ஆய்தக்கி மாரய்யனின் மனைவி லக்கம்மா அமரேஸ்வரம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர். வீரசைவத்தில் போற்றுதலுக்குரியவரான பசவேசரின் புகழைக் கேட்டு ஆய்தக்கி மாரையாவும் லக்கமாவும்கல்யாண் நகருக்கு வருகின்றனர் கல்யாண் நகர வீதிகளில்அரிசியைச் சேகரிக்கும் தொழில் இவர்களுடையதாகும். “மாரய்யாபிரிய அமரேஸ்வர லிங்கா “இவரது முத்திரையாகும் காயகம், தாசோகம் ஆகியவற்றின் பெருமைகளை விளக்குவதாக இவர் வசனங்கள் அமைகின்றன.” சூன்ய சம்பாதனையில்” இத்தம்பதியரின் காயக மற்றும் தாசோக மேன்மை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

        1.“உடல் குறையேயன்றி உள்ளக் குறையுண்டோ?
    மலை உறுதியாயிருந்தாலும்
    உளியின் முனை உடைவது இயல்புதானே?
    சரணருக்கு வறுமையில்லை;
    உண்மை உடையவருக்குத் தீவினையில்லை.
    மாரய்யப்பிரிய அமுகேஸ்வரலிங்கம்
    என்னிடமுள்ள வரையில் எவர் தயவும் தேவையில்லை”

    2. “ஆசை அரசனுக்கன்றி சரணருக்குண்டோ ஐயனே?
    கோபமென்பது காலனின் தூதருக்கன்றி
    பிறவியறுத்தவருக்குண்டோ ஐயனே?
    இத்துணை அரிசி நமக்கெதற்கு?சிவன் இதை ஒப்பான்
    மாரய்யா, இது
    மாரய்யப்பிரிய அமுகேஸ்வரலிங்கத்திற்குத் தொலைவாம்.”

    3. “காயகம் போற்றும் சரணர் தானம் வாங்கி
    தாசோகம் செய்யலாமா?
    ஒரு மனதுடன் உழைக்க வேண்டும்
    ஒரு மனம் இரண்டாவதற்கு
    முன்பே ஒரு மனதுடன் தந்து விடவேண்டும்
    மாரய்யா, மாரய்யப்பிரிய அமுகேஸ்வரலிங்கத்திற்கு
    உன்னையே அர்ப்பணித்து விடுவாய்”

    பாச்சிகாயத பசவண்ணா

    இவர் மரத்தச்சன் பணி செய்தவர். காயகம் குறித்த கருத்துகளை அதிகம் வெளிப்படுத்தியவர். ”பசவண்ணப் பிரிய காளிகாவிமல ராஜேஸ்வரலிங்கா ”இவரது முத்திரையாகும்.

    1. “குலம் கோத்திரம் சாதி பேசி அழிந்தவர் கோடி
    பிறப்பு தீண்டாமையால் கெட்டவர் கோடி
    வார்த்தைத் தீட்டால் அழிந்தவர் கோடி முனிவர்கள்
    சிவன், திருமால், பிரம்மன் “யத்ருஷ்டம், தன்னஷ்டம்
    என்றறியாமல் பதினான்கு உலகங்களும்
    மீண்டும் மீண்டும் பிறந்தன.
    அழுக்குகளை நீக்காத அறிவற்ற மனிதர்கள்
    பரப்பிரம்மத்தை அடைய இயலுமோ?
    உணர முடியாத, தொட முடியாத,காண முடியாதவன்
    பெயர், வடிவ , உருவங்களில் அகப்படுவதில்லை.
    பசவண்ணப்பிரிய விஸ்வகர்மட்ட காளிகாவிமல
    ராஜேஸ்வரலிங்கம் அறியாதவரிடத்தில்லை”

    2. “பூமிக்குள் மறைந்திருக்கும் புதையல் போல
    சிப்பியில் மறைந்திருக்கும் முத்துப் போல
    நீரில் மறைந்திருக்கும் நெருப்புப் போல
    ஒளியில் மறைந்திருக்கும் சுடர் போல
    ஆத்மஞானமெனும் உண்மையறியாமல்
    இட்டலிங்கம் ,பிராணலிங்கமெனப் பிரித்தனர்
    பசவண்ணப்பிரிய விஸ்வகர்மட்ட காளிகாவிமல
    ராஜேஸ்வரலிங்கம் உணர்ந்தவர் அறிவர்”

    3. “வைரவுடல் தன்னை ஊசியால் குத்த அனுமதிக்குமா?
    ஆடு தன்னைப் பார்த்துப் பிளிற யானை அனுமதிக்குமா?
    கோழை தன்னை அச்சுறுத்துவதை வீரன் அனுமதிப்பானா?
    புலன்களும் உறுப்புகளும் தனக்கின்னல் தருவதை
    உண்மையறிந்த இலிங்கமணிந்தவன் அனுமதிப்பானா?
    கையிலிருக்கும் அணிகலனைக் காண கண்ணாடியெதற்கு?
    வேண்டியதைக் கண்டபின் பிறரிடம் கேள்வியெதற்கு?
    இதனை அறிந்ததால் பசவண்ணப்பிரிய விஸ்வகர்மட்ட
    காளிகாவிமல  ராஜேஸ்வரலிங்கம் பிறவியழித்தது.”

    பால பொம்மண்ணா

    “வீரசூர ராமேஸ்வரா” இவரது முத்திரையாகும். சோலாப்பூரில் வசனக்கார்களில் முக்கியமானவரான சித்தராமய்யா சிவாலயம் கட்டி இலிங்க வழிபாட்டிற்கான செயல்களைச் செய்து கொண்டிருந்தார். அப்போது தன்னிடம் அவ்வழிபாடு செய்வதற்கான பொருள் இல்லையே என்று பொம்மண்ணா  வருந்தினார். சித்தராமய்யன் கடப்பாரையை அவரிடம் கொடுத்து ஆலய வாசலைத் தோண்டும்படி வற்புறுத்தினார். அவர் கட்டளையையேற்றுத் தோண்ட தங்கப் புதையல் கிடைத்தது என்றும் அதைக் கொண்டு பால பொம்மண்ணா ஆலயம் கட்டி வழிபாடு செய்தார் என்றொரு கதையுண்டு. சரணரைப் போற்றுதல், தத்துவ போதனை ஆகியவை வசனங்களில் வெளிப்படுகின்றன.

     “பாம்பு புற்றில் கம்பொன்றை நட்டால்
    கம்பின் துணையோடு மேலேறும் தன்மை கொண்டது
    பாம்பு, இது நன்கறிந்த உண்மை
    மெய்ப்பொருளில் அன்பு காட்டுவது மனதில் வேண்டும்,
    இருமை நிலை நீக்கவேண்டும்
    வீரசூர ராமேஸ்வரலிங்கத்திடம்”

    பாதோதகம் : அடியார்கள்,ஜங்கமர்கள் ஆகியோரின் பாதங்களைக்  கழுவும் நீர்.

    தாஸோகம்   : “ நான் “ உழைப்பது; “நாம்” உண்பது என்னும்  தத்துவம்.

                                                                                     [தொடரும்]

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-109

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-109

    நாங்குநேரி வாசஸ்ரீ

    109. தகை அணங்குறுதல்

    குறள் 1081

    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலுமென் நெஞ்சு

    நிக்குதது மோகினியா? மயிலா? காதுல பெரிசா தோடு போட்டு நிக்குத அழகான பொம்பளப் பிள்ளையா? எம் மனசு கெடந்து தெவங்குதே.

    குறள் 1082

    நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
    தானைக்கொண் டன்ன துடைத்து

    எம் பார்வைக்கு அவ நேர் பார்வை பாக்குதது தனியாளா எதித்தாப்ல நின்னு அழிச்சிப்போடுத சக்தி இருக்க மோகினி கூட ஒரு படையையும் சேத்துக்கிட்டு வந்து நின்னா எப்டி இருக்குமோ அப்டி இருந்திச்சு.

    குறள் 1083

    பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
    பெண்டகையால் பேரமர்க் கட்டு

    எமன் யாருன்னு முன்ன நான் அறிஞ்சிக்கிடல. இப்பம் புரிஞ்சிக்கிட்டேன்.  அவன் பொம்பள உருவத்துல இருக்க பெரிய கண்ணுமுழிங்குத அம்பால சண்ட இழுக்கவன் அப்டிங்குத உண்மைய.

    குறள் 1084

    கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
    பேதைக் கமர்த்தன கண்

    நல்லதன்மையா இருக்க இந்த பொம்பளப் பிள்ளையோட கண்ணு மட்டும் உசிர எடுக்குதது கணக்கா இருக்கே? ஏன் இந்த மாறுபாடு?

    குறள் 1085

    கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
    நோக்கமிம் மூன்றும் உடைத்து

    உசிர எடுக்க வந்த எமனா? ஒறவு கொண்டாடுத கண்ணா? மிரண்டுபோய் நிக்க பெண்மானா? இந்த பெண்பிள்ளையோட பார்வையில மூணு தினுசும் சேந்தாப்போல இருக்கே.

    குறள் 1086

    கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
    செய்யல மன்னிவள் கண்

    புருவம் வளைஞ்சி கோணி நிக்காம நேரா நின்னு மறைச்சிக்கிடுச்சின்னா இவ கண்ணு நான் நடுங்குதது கணக்கா சங்கடத்த தாராது.

    குறள் 1087

    கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
    படாஅ முலைமேல் துகில்

    மதம் பிடிச்ச யானை மேல இடுத முகபடாம் கணக்கா இருக்கு பொம்பளைங்க சாயாத கொங்கை மேல உடுத்துத சீலை.

    குறள் 1088

    ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
    நண்ணாரும் உட்குமென் பீடு

    போர்க்களத்துல பகையாளிக்கு பீதியக் கெளப்புத எம் பலம் இப்பம் இவ ஒளி வீசுத நெத்தியக் கண்ட பொறவு தோத்து நிக்குதே.

    குறள் 1089

    பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
    கணியெவனோ ஏதில தந்து

    பெண்மான் கணக்கா துள்ளுத பார்வையும், வெக்கப்படுத கொணமும் அசப்புல நக நட்டுகணக்கா இருக்கையில பொறவு என்னத்துக்கு செஞ்சுவச்சிருக்க மத்த நகநட்ட பூட்டி  உட்டிருக்காக.

    குறள் 1090

    உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்
    கண்டார் மகிழ்செய்தல் இன்று

    கள்ளு குடிச்சவனுக்கு மட்டுந்தான் மயக்கத்தக் கொடுக்கும் பாத்தாலே மயக்கத்தக் கொடுக்குதது காதல்தான்.

    Share
  • தீராத விளையாட்டு…..

    தீராத விளையாட்டு…..

    ராதா விஸ்வநாதன்

    அம்மன் கோவில் வாசல்
    நிற்கிறார்கள் வரிசையில்
    பிள்ளை வரத்திற்காக…

    தொட்டிலில் தவழும் கிருஷ்ணனை
    கோவில் மரத்தில் கட்டினால்
    கிட்டிடும் குழந்தை பாக்கியம்

    நம்பிக்கைதான் வாழ்க்கை
    நாளை இருப்போம் எனும்
    நம்பிக்கையில் தான் சுழல்கிறது பூமி

    தொட்டில் கிருஷ்ணன்
    தொங்குகிறான் விற்கும் பெண்ணின்
    துவண்ட கைகளில்….

    எத்தனை தொட்டில் கட்டினாளோ
    இப்பெண் இப்படி வரம் பெற

    காலைச் சுற்றும் பாலகன் ஒருவன்
    இடுப்பில் ஒரு பெண் குழந்தை
    இன்னொன்று காத்திருக்கிறது
    வெளி உலகை எட்டிப் பார்க்க…

    வேண்டும் என்போர் ஒரு பக்கம்
    வேண்டாம் என்போர் மறுபக்கம்
    இதுவே அவனது தீராத விளையாட்டு

    Share
  • சேக்கிழார் பா நயம் – 66 (கற்பனை)

    சேக்கிழார் பா நயம் – 66 (கற்பனை)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி,
    அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிரத்தின் மேலாம்
    சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று,
    பொற்பு உடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி! போற்றி்

    திருவாரூர் இறைவனின் திருவருளால் சுந்தரேசர் பாடிய திருத்தொண்டத் தொகையின் முதலடியில் போற்றப்பெற்ற தில்லைவாழ் அந்தணர் புராணத்தின் தொடக்கத்தில் தில்லை யம்பலவாணரின் சிறப்புக்களை சேக்கிழார் பாடினார். முதற்பாடல் இறைவனின் நிட்களத் திருமேனியாகும். இனி அடுத்தபாடலில் இறைவனின் சகளத் திருமேனியின் சிறப்பையும், திருவடிப்  பெருமையையும் கூறுகிறார்.

    இப்பாடலின் சொற்பொருள்

    கற்பனை என்பதே சற்று சொல்லைக் கடந்த நிலையாகும். அத்தகைய கற்பனைகளைப் பற்பலவாறு  செய்தாலும், அவற்றுக்கு  முதற்காரணமாகிய மாயையைக்  கடந்த வடிவமும், ஒளியும் கலந்த உருவமுடையவரே இறைவன். அந்த ஒளியும் தானே தோன்றிய ஒளியாகும். இதனைக் ‘’கற்பனை கடந்த சோதி‘’ என்ற தொடரால் சேக்கிழார் குறிக்கிறார். தேவாரத்தில் இதனை,

    ‘’இப்படியன் இந்நிறத்தன்  இவ்வண்ணத்தன்
    இவனிறைவன்  என்றெழுதிக்   காட்டொணாதே‘’  என்று அப்பர் பெருமானும் ,

    ‘’துணையென்று  நான்தொழப்  பட்டஒண்  சுடரை,
    முத்தியும்  ஞானமும்  வானவர் அறியா
    முறைமுறை பலபல  நெறிகளும் காட்டிக்
    கற்பனை கற்பித்த  கடவுளை ‘’ என்று சுந்தரரும் பாடினர். மேலும் திருமூலர் திருமந்திரத்தில் ,

    ‘’கதுமெனப்  பாழைக்  கடந்தந்தக் கற்பனை
    உதறிய  பாழில்  ஒடுங்குகின்றேனே!’’ என்று பாடுகின்றார். உமாபதி சிவாச்சாரியார்,

    ‘’ஆரணங்கள்   முடிந்த பதத்து ஆனந்த  ஒளியுலகில்
    காரணம்  கற்பனை கடந்த கருணைத்திரு  உருவாகி‘’ என்றுபாடுகிறார். உயிர்கள் பால் வைத்த கருணையால், அக்கருணையையே திருவுருவம் ஆக்கிக் கொண்டு, தோன்றுகிறார். இதனை சிவஞான சித்தியார்,

    உருமேனி, அருமேனி, அருவுருவான திருமேனி ஆகிய மூன்றும், ‘’நந்தம்கருமே னி கழிக்க வந்த கருணையின் வடிவுதானே’’ என்று கூறும்.

    இறைவனின் அழகிய கோலம் இன்னதென்று உணரவும் கூறவும் இயலாத இன்பம் தரும்  திருவுருவம் ஆகும். இதனைத் திருவிசைப்பா ,

    பத்தியாய்  உணர்வோர்  அருளை வாய்மடுத்துப்
    பருகுதோறு  அமுதம் ஒத்து அவர்க்கே
    சித்தியா   விருக்கும்  தேவர்காள் இவர்தம்
    திருவுரு  இருந்தவா  பாரீர்!’’ என்று போற்றுகிறது. மேலும் திருவுந்தியார் என்ற சாத்திரம் ,

    “அகளமாய் யாரும் அறிவறிது  அப்பொருள்
    சகளமாய்  வந்ததென்று உந்தீ,  பற!
    தானாகத் தந்தது என்று  உந்தீ, பற! இப்பாடலில் களம் உருவத்தைக் குறித்தது. அகளம் என்பது உருவமற்றதைக் குறித்தது.    சகளம்  என்பது தெளிவான உருவத்தைக் குறித்தது.

    இறைவன் நடனமிடும் இடம் வேதத்தின் சிரமாகிய உபநிடதம் ஆகும்; அதனையே ஞானாகாசம் என்பர். சொல்லக் கடந்து நிற்கும் ‘’சிற்பரவியோமம்‘’ என்ற வாக்கு அதனை உணர்த்தும். இதுவே சிற்றம்பலம்!

    மேலும் மேற்பாட்டில் நடம் போற்றி என்று திருவடியைப்  போற்றியவர்  இப்பாடலில்  பூங்கழலைப் போற்றுகிறார். இக்கழலைச் சிவஞானபோதம், ‘’அயரா அன்பின் அரன்கழல் செலுமே’’ என்று போற்றுகிறது. ஆகவே இப்பாடல்களில் போற்றப்பெற்ற இறைவன் தில்லை மூவாயிரவருள் முதன்மை பெற்ற ஒருவர் என்னும் உண்மை கூறப் பெறுகிறது! தம்மைத் தில்லை வாழ் அந்தணருள்  முதன்மையானவர் என்று கருத வைத்து, அவர்தம் அடியார்க்கும் அடியவராக  சுந்தர மூர்த்தி சுவாமிகளைக் கருதச் செய்தார்.

    Share
  • பாரதத்துக்குப் பெருமை சேர்த்த வீரத் துறவி!

    பாரதத்துக்குப் பெருமை சேர்த்த வீரத் துறவி!

    -மேகலா இராமமூர்த்தி

    கொல்கத்தாவிலுள்ள சிம்லா நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞரான விஸ்வநாத தத்தர், புவனேஸ்வரி தேவி இணையருக்குத் தவப்புதல்வராய், 1863ஆம் ஆண்டு, ஜனவரி 12இல் பிறந்தவர் நரேந்திரநாத் தத்தா எனும் இயற்பெயர் கொண்ட சுவாமி விவேகானந்தர். இளமையில் நரேன் என்ற பெயரில் அவர் அனைவராலும் அழைக்கப்பட்டார்.  

    குழந்தைப்பருவத்திலேயே மிகச் சிறந்த நினைவாற்றல் கொண்டவராக விளங்கினார் நரேன். சிறுவயதிலிருந்தே அவருக்கு தியானத்தின்மீது மிகுந்த நாட்டம் இருந்தது. பகுத்தறிவுடனேயே எதனையும் அணுகும் போக்கு இயல்பாகவே அவரிடம் அமைந்திருந்தது.

    நரேன் சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்விது…

    நரேனின் தந்தை புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த காரணத்தால் அவர்கள் வீட்டுக்குப் பலரும் வருவார்கள்; போவார்கள். அவர்களிடமெல்லாம் சிறுவன் நரேன், எவ்வித வேறுபாடுமின்றிக் கலந்து பழகுவார். வங்காள வழக்கப்படி அவர்கள் புகைக்க புகையிலை அல்லது ஹூக்கா (Hookah) தயாரித்துக் கொடுப்பார். அங்குவரும் பல்வேறு சாதியினரும் புகைப்பிடிக்கத் தனித்தனிக் குழாய்கள் இருந்தன. சாதி என்பது நரேனுக்கு அப்போது புரியாத புதிராகவே இருந்தது.

    “ஏன் ஒவ்வொரு சாதியினருக்கும் புகைப்பதற்குத் தனித்தனிக் குழாய்கள்? ஒருவர் புகைத்ததில் இன்னொருவர் புகைத்தால் குழாய் வெடித்துவிடுமா?” என்றெல்லாம் எண்ணமிட்டபடி இருப்பார். இதைச் சோதித்து அறிய, எல்லாக் குழாய்களின் மூலமாகவும் ஒருமுறை புகையிழுத்துப் பார்த்தார். ஒன்றும் ஆகவில்லை! அப்போது அங்குவந்த அவருடைய தந்தையார் ”என்னப்பா செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்க, ”ஒன்றுமில்லை…சாதிப் பிரிவினைகளை உடைத்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்!” என்றாராம் சிறுவன் நரேன். அவருடைய தந்தை சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாராம்.

    பள்ளிப்படிப்பை முடித்த நரேன், கொல்கத்தாவிலிருந்த மாநிலக் கல்லூரியில் ஓராண்டு காலம் படித்தார். அடுத்த ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) சேர்ந்தார். அந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் நரேனின் அறிவுக்கூர்மையைக் கண்டு வியந்தனர். கல்லூரி முதல்வரான ஹேஸ்டி (William Hastie) நரேனைப் போன்றதொரு மாணவனை நான் பார்த்ததே இல்லை என்று பாராட்டினார்.

    உயர்ந்த கருத்துக்கள் குறித்துத் தம் நண்பர்களிடமும் தம்மைவிட வயதில் பெரியவர்களிடமும் விவாதம் செய்வது நரேனின் வழக்கம். தர்க்கரீதியான வாதங்களை முன்வைப்பதிலும் நரேனுக்கு இணை அவரே. இந்தக் காலக்கட்டத்தில் சமயம் தொடர்பான விஷயங்களில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. எனவே பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். ”இறைவன் என்றொருவன் இருக்கின்றானா? இல்லையா? இருக்கின்றான் என்றால் யாரேனும் அவனைப் பார்த்திருக்கிறார்களா?’ என்பன போன்ற வினாக்கள் அவர் மனத்தில் எழத்தொடங்கின. அவை குறித்தே அல்லும் பகலும் சிந்திக்கலானார். தம் வினாக்களுக்கு விடைதேடி, அறிஞர்கள் பலரை அணுகியும் நிறைவான விடை அவருக்குக் கிடைக்கவில்லை.

    அப்போது தம்முடைய ஆசிரியர் ஹேஸ்டியின் மூலம் கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள தக்ஷிணேஸ்வரத்தில் அமைந்துள்ள காளிகோயிலின் பூசாரியான இராமகிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்ட நரேன், அவரைத் தம் நண்பர்களுடன் சென்று சந்தித்தார். நரேனைத் தனியறைக்கு அழைத்துச்சென்ற இராமகிருஷ்ணர் நீண்ட பிரிவுக்குப் பின் நெருங்கிய நண்பரைச் சந்திப்பதுபோல் நரேனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். தம் கையாலேயே நரேனுக்கு இனிப்புகள் ஊட்டிவிட்டார். இராமகிருஷ்ணர் நரேனைத் தொட்டதும் முற்றிலும் புதியதோர் அனுபவத்தை அடைந்தார் நரேன்.

    இராமகிருஷ்ணர் நரேன்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தம்மை நாடிவரும் பிற பக்தர்களிடம் நரேனைப் பற்றிப் பேசும்போது, ”பக்தர்கள் எல்லாரும் நட்சத்திரத்தைப் போன்றவர்கள்; ஆனால் நரேன் சூரியனைப் போன்றவன். அவன் ஒரு முக்தியடைந்த ஆன்மா; பிறருக்கு உதவுவதற்காகவே பிறவியெடுத்தவன்” என்று பெருமிதத்தோடு குறிப்பிடுவார்.

    1884ஆம் ஆண்டு தொடக்கத்தில் நரேனின் தந்தையான விஸ்வநாத தத்தர் மறைந்தார். நரேனின் வாழ்வில் அஃது ஒரு சோதனையான காலக்கட்டமாக அமைந்தது. அப்போது, இராமகிருஷ்ணரும் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஆகவே தம் எதிர்காலப் பணிகளை மேற்கொள்ள அவர் நரேனைத் தயார்செய்ய ஆரம்பித்தார். 1886ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம் நாள் இராமகிருஷ்ணர் மறைந்தார். துக்கத்தில் ஆழ்ந்த நரேன் உள்ளிட்ட இராமகிருஷ்ணரின் சீடர்கள் சில காலம் கழித்துச் காசிப்பூர் எனும் ஊரில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து மடம் அமைத்தனர். அதுதான் இராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் மடமாகும்.

    அந்த இளஞ்சீடர்கள் முறையாகத் துறவறம் மேற்கொண்டு புதிய பெயர்களை ஏற்றனர். ஆனால் நரேன் தனக்கென்று பெயர் எதனையும் அப்போது வைத்துக்கொள்ளவில்லை. ஒரே இடத்தில் தங்கியிருக்க விரும்பாமல் காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் அவர் பயணம் மேற்கொண்டார்.

    ஒரு சமயம் மவுண்ட் அபுவில் (Mount Abu) கேத்திரி (Khetri) சமஸ்தான மன்னர் அஜித் சிங்கைச் சந்தித்தார் நரேன். மன்னரின் விருப்பத்திற்கிணங்க கேத்திரிக்குச் சென்றார். நரேனிடம் ஈடுபாடுகொண்ட மன்னர் அஜித் சிங், நரேனின் சீடரானார்.  பின்பு அங்கிருந்து புறப்பட்ட நரேன் மைசூர் வந்தார்; அங்கிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர ரகுநாத சேதுபதியைச் சந்தித்தார். நரேனின் அறிவாற்றலைக் கண்டு வியந்த பாஸ்கர சேதுபதியும் நரேனின் சீடரானார்.

    அப்போது அமெரிக்காவில் நடைபெறவிருந்த அனைத்துச் சமய மாநாட்டை (Parliament of the World’s Religions) பற்றிய தகவலறிந்தார் நரேன். அதில் தாம் கலந்துகொள்ள வேண்டும் என்பது தம்முள் நிறைந்திருக்கும் குருதேவர் இராமகிருஷ்ணரின் விருப்பம் என்பதை உணர்ந்த அவர், அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். இராமநாதபுரத்திலிருந்து குமரிக்கும் அங்கிருந்து சென்னைக்கும் பயணம் மேற்கொண்டார். அங்கே துடிப்புமிக்க இளைஞர்கள் பலர் அவரைப் பின்பற்றத் தயாராக இருந்தனர். அவர்கள் மத்தியில் சொற்பொழிவுகள் ஆற்றினார். அவர் அமெரிக்கா செல்வதற்கு அவ்விளைஞர்கள் நிதி திரட்டத் தொடங்கினர்.

    அதே சமயம் கேத்ரி மன்னர் அஜித் சிங்கின் அழைப்பு வந்தது நரேனுக்கு. அமெரிக்கப் பயணத்திற்கான பயணச்சீட்டு வாங்குவது முதற்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்தார் மன்னர். ‘விவேகானந்தர்’ என்ற பெயரை நரேனுக்குப் பரிந்துரைத்தவரும் அவரே. அதுமுதல் நரேன் விவேகானந்தர் ஆனார். பின்னர் அந்தப் பெயரிலேயே தம் வாழ்நாள் முழுவதும் அவர் அழைக்கப்பட்டார்.

    1893ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி சிகாகோ மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பம்பாயிலிருந்து கப்பலில் பயணமானார்  விவேகானந்தர். கப்பல் கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரை அடைந்தது; அங்கிருந்து தொடர்வண்டி மூலம் சிகாகோவை அடைந்தார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் திங்கட்கிழமை அனைத்துச் சமயங்களின் மாநாடு சிகாகோவில் தொடங்கியது. ஹால் ஆப் கொலம்பஸ் (Hall of Columbus) எனும் பெரிய கட்டடத்தில் அது நடாத்தப்பட்டது.

    அஃது ஒரு மாபெரும் நிகழ்ச்சியாதலால் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்தது. விவேகானந்தரின் நெஞ்சு இனந்தெரியாத உணர்ச்சியால் அப்போது படபடத்தது. எனவே மாநாட்டுத் தலைவர் அவரைப் பேசப் பலமுறை அழைத்தும் தயக்கத்துடன் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் விவேகானந்தரைக் கேட்காமலேயே அவர் பெயரை மேடையில் அறிவித்துவிட்டார் தலைவர். இனி ஒன்றும் செய்யமுடியாது; பேசித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் பேச எழுந்தார் விவேகானந்தர்.

    அரங்கிலிருந்தவர்களைப் பார்த்தார். ”அமெரிக்கச் சகோதரிகளே! சகோதரர்களே…!” என்று பேச்சைத் தொடங்கினார். அவரால் அந்த வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. எப்போதும் “Ladies and Gentlemen!” என்ற விளிப்பையே கேட்டுப் புளித்துப் போயிருந்த மேற்குலக மக்களின் செவிகளுக்கு அவ்வாஞ்சையான அழைப்பு ஓர் பரவசத்தை ஏற்படுத்திவிட்டது. உணர்ச்சிவயப்பட்டவர்களாய் மக்கள் கைதட்ட ஆரம்பித்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் எழுந்துநின்று உற்சாக ஆரவாரமும் வாழ்த்தொலியும் எழுப்பியதால் அவை அடங்கப் பல நிமிடங்களாயின!

    அனைவரும் அமைதியானதும் விவேகானந்தர் கம்பீரமாகத் தம் பேச்சைத் தொடங்கினார். எல்லா மதங்களும் உண்மையே! எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே இந்து மதத்தின் கொள்கை” என்ற கருத்தை முன்வைத்தார் அவர். மாநாட்டுக்கு வந்திருந்த மற்ற சொற்பொழிவாளர்கள் அனைவரும் தத்தமது மதத்தைப் பற்றி மட்டுமே பேசினர். ஆனால் விவேகானந்தரோ அனைத்து மதங்களில் இருக்கும் உண்மைகளையும் மதக் காழ்ப்பின்றிப் பேசினார்.

    கிறித்தவப் பார்வையாளர்கள் மிகுதியும் கலந்துகொண்ட, பதினேழு நாள்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற, அந்தச் சமய மாநாட்டில் செப்டம்பர் 20 அன்று விவேகானந்தர் முன்வைத்த சில துணிச்சலான கருத்துக்களாவன:

    ”கிறித்தவர்களாகிய நீங்கள் நல்ல விமரிசனங்களை ஏற்றுக்கொள்ளும் இயல்புடையவர்களாகையால் என்னுடைய சிறிய விமரிசனத்தைத் தவறாகக் கருதமாட்டீர்கள் என்றெண்ணி உங்கள்முன் வைக்கின்றேன். நீங்கள் உங்கள் மதத்தைப் பரப்பும் நோக்கில் இந்தியாவுக்கு மதபோதகர்களை ஆர்வத்தோடு அனுப்புகிறீர்கள்! ஆனால் எம் மக்களோ அங்கே கொடும் பஞ்சத்திலும் கடும் பசியிலும் துடித்து ஆயிரக்கணக்கில் மடிந்துகொண்டிருக்கின்றார்கள்.

    அவர்களின் பசிபோக்கவும் பஞ்சம்நீக்கவும் நீங்கள் எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, இந்தியாவெங்கும் தேவாலயங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களுக்குத் தேவை பசிதீர்க்கும் உணவு; ஆனால் நீங்கள் தருவதோ பயனற்ற கற்களை! பசியில் துடித்துக்கொண்டிருப்பவனிடம் மதபோதனை செய்வதைவிடவும் பெரிய குற்றம் வேறெதுவுமில்லை; பஞ்சத்தில் அடிபட்டு நெஞ்சுவெந்து கொண்டிருப்பவனிடம் தத்துவத்தைப் போதிப்பதைவிடப் பேரவலம் வேறெதுவுமில்லை!

    ஐயன்மீர்! எங்கள் இந்தியாவில் போதுமான மதங்கள் ஏற்கனவே இருக்கின்றன. எனவே எங்களுக்கு மதம் தேவையில்லை. ஆதலால் எங்கள் ஆன்மாவுக்கு நீங்கள் நல்வழிகாட்ட முயல்வதைவிட எங்கள் வயிற்றுப்பசிக்கு உணவிடுதலே உடனடித் தேவையும் நல்ல சேவையுமாகும். நான் இங்குவந்ததுகூட ஏழ்மையில் துயருறும் எம் மக்களுக்கு உங்களிடம் உதவி வேண்டித்தான்! ஆனால் கிறித்தவ பூமியில் வாழுகின்ற கிறித்தவர்களிடம் எம் இந்திய மக்களுக்கு உதவிபெறுவது எத்துணைக் கடினமானது என்பதையும் நான் உணர்ந்தே இருக்கின்றேன்!” என்று மொழிந்துவிட்டு இந்திய வேதாந்தக் கருத்துக்கள் குறித்துப் பேசலானார்.

    பத்திரிகைகள் அவரது உரைகளை வெகுவாய்ப் புகழ்ந்து எழுதின. சிறந்த பேச்சாளர் ஒருவருக்கு இருக்கவேண்டிய வெண்கலக்குரல், மொழிவளம், சிந்தனைகளை அழகாய் வகைப்படுத்தி அடுக்கும் திறம் ஆகியவற்றோடு கம்பீரத் தோற்றமும் கொண்டிருந்த இளந்துறவி விவேகானந்தர் உலகம் விரும்பும் பேச்சாளராக மிளிர்ந்ததில் வியப்பேதுமில்லை.

    மாநாடு முடிந்த பின்னர், மக்களின் அழைப்பிற்கிணங்க அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சொற்பொழிவுகள் ஆற்றினார் அவர். 1895 செப்டம்பரில் இங்கிலாந்து சென்றார். அங்கும் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவருக்கு நண்பர்களும் சீடர்களும் பெருகினார்கள்.  அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மார்கரெட் எலிசபெத் நோபில் (Margaret Elizabeth Noble) எனும் இளம்பெண். இவர்தாம் பின்னாளில் ’சகோதரி நிவேதிதை’யாக (Sister Nivedita) புகழ்பெற்றவர். மகாகவி பாரதியின் ஞானகுருவாக விளங்கியவரும் இவரே!

    இங்கிலாந்து அல்லாமல் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார் விவேகானந்தர். சில ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின் தாயகம் திரும்பினார். 1897 ஜனவரி 15ஆம் நாள் கொழும்புத் துறைமுகத்தில் வந்திறங்கினார். அங்கே அந்த வெற்றித் திருமகனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு மக்களால் அளிக்கப்பட்டது. அங்கிருந்து பாம்பனை அடைந்தார். இராமநாதபுரம் அரசர் பாஸ்கர ரகுநாத சேதுபதி உள்ளிட்ட பலர் அங்கே விவேகானந்தரைப் பேரன்போடும் பெருமகிழ்ச்சியோடும் வரவேற்றனர்.  அவரை இரதத்தில் ஏற்றி, இரதத்தின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு, பாஸ்கர சேதுபதியும் பிறரும் அதனை இழுத்துச் சென்றனர். இவ்வியத்தகு செயலை அறிகின்றபோது விவேகானந்தரின் அறிவாற்றலால் நமக்குப் பெருமிதமும், இராமநாதபுரம் மன்னரின் தன்னடக்கத்தாலும் பணிவாலும் நெகிழ்ச்சியும் ஏற்படுகின்றன!

    பிறகு கொல்கத்தாவுக்குச் சென்ற விவேகானந்தர், ஆலம்பஜார் (Alambazar) என்ற இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த இராமகிருஷ்ண மடத்தில் ஏனைய துறவிகளோடு தங்கினார். அப்போது, ஒரு துறவி என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து அவர் மற்ற துறவிகளுக்குப் போதித்தார். வழிபாடு, தியானம், இறைவனை அறியும் முயற்சி இவை மட்டுமே ஒரு துறவிக்குரிய செயல்கள் ஆகா. துறவியானவன் மக்கள் தொண்டில் தன்னைக் கரைத்துக்கொள்வது, பள்ளிகள், மருத்துவமனைகள் நடத்துவது போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்தியப் பெண்களுக்கு உதவ வேண்டும் என்பது விவேகானந்தரின் நெடுநாளைய இலட்சியம். இந்தியப் பெண்கள் நற்குணங்கள் நிரம்பியவர்களாக இருந்தும் கல்வியறிவு பெற்றவர்களாகவும், வெளியுலகில் செயலூக்கத்துடன் இயங்குபவர்களாகவும் இல்லையே என்று வருந்திய அவர், பெண்களுக்குக் கல்வி அளிப்பதன் மூலமே இக்குறைகளைக் களையமுடியும் என்று உறுதிபடக் கூறிவந்தார். சகோதரி நிவேதிதை பெண்களுக்கான பள்ளி ஒன்றைத் தொடங்கி விவேகானந்தரின் இந்த எண்ணத்தை ஈடேற்றினார். இன்று அந்தப் பள்ளி நல்ல வளர்ச்சிபெற்றுப் பெண்கள் முன்னேற்றத்துக்கான பல சீரிய பணிகளை ஆற்றிவருகின்றது.

    1899இல் மீண்டும் ஒருமுறை மேனாட்டுப் பயணம் மேற்கொண்ட விவேகானந்தர் அங்கே பல இடங்களில் தம்முடைய வேதாந்தக் கருத்துக்களைப் பரப்பினார். ஆயிரத்துத் தொள்ளாயிரமாவது ஆண்டு (1900) டிசம்பர் 9-இல் பேலூர்(Belur) மடத்தை வந்தடைந்தார். அவருடைய உடல்நிலை அப்போதே நலிவுகாணத் தொடங்கிவிட்டது. எனினும் அதனைப் பொருட்படுத்தாது சொற்பொழிவுகளும் சீடர்களுக்கு வகுப்புகளும் தொடர்ந்து நடத்திவந்தார். மக்கள் தொண்டையும் அவர் நிறுத்தினாரில்லை.

    தம்முடைய முடிவு நெருங்குவதை அகக்கண்ணில் கண்டார் விவேகானந்தர். தம் மரணத்துக்கு மூன்று நாள்களுக்குமுன் சுவாமி பிரேமானந்தருடன் பேலூர் மடத்தில் உலவிக்கொண்டிருந்த அவர், ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி, “நான் என் உடலை விட்டவுடன் அதை இந்த இடத்தில் தகனம் செய்!” என்று சொல்லியிருக்கின்றார். இன்று அதே இடத்தில்தான் சுவாமி விவேகானந்தரின் திருக்கோயில் எழுப்பப்பட்டிருக்கின்றது என்பது அறியத்தக்கது.

    1902ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள், வீரமும் விவேகமும் மிக்க ஞானத் துறவியான விவேகானந்தர் இம்மண்ணுலகில் வாழ்ந்த இறுதிநாளாகும். அன்றிரவு தியான நிலையிலேயே அவர் தம் பொன்னுடலை நீத்தார். மக்களிடையே ஆன்ம விழிப்பையும் வேதாந்தத்தையும் விளங்கவைக்க வந்த அந்த அறிவுச்சுடர் முப்பத்தொன்பது ஆண்டுகளிலேயே ஒளியவிந்து அடங்கியது இந்திய மக்களின் தவக் குறைவே!

    எனினும் அந்த வீரத்துறவி விட்டுச்சென்றிருக்கும் அற்புதமான அறிவுரைகள் நமக்கு, குறிப்பாக, இளைய சமுதாயத்துக்கு நல்வழிகாட்டுவனவாக அமைந்திருக்கின்றன; அவற்றில் ஓரிரண்டை அறிந்துகொள்வோம்!

    1. என் அருமை மாணவர்களே! கல்லூரிப் படிப்பு முடிந்ததும் மக்கள் தொண்டில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். விலைமதிப்பற்ற செல்வமும் புதையலும் உங்களுக்குக் கிடைத்தால்கூட இந்தத் தொண்டில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அது ஈடில்லை.

    2. நமது குற்றங்களைச் சுமத்துவதற்கு வேறொருவர் இருக்கும்வரை நாம் நம்முடைய பலவீனங்களையும் தவறுகளையும் மெதுவாகத்தான் புரிந்துகொள்கிறோம். மனிதர்கள் பொதுவாகத் தங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதே தங்கள் குற்றங்களைச் சுமத்துகிறார்கள். இல்லாவிட்டால் விதி என்பார்கள். நம் விதிக்கு நாமே காரணம்! நாம் விதைத்ததைத்தான் நாம் அறுக்கிறோம். நமக்குக் கிட்டும் பழியாகட்டும் புகழாகட்டும், அதற்கு வேறுயாரும் பொறுப்பல்லர்!

    அறிவும் ஆற்றலும் துடிப்பும் துணிச்சலும் கொண்ட நூறு இளைஞர்கள் தம்மோடு இருந்தால் போதும்! இவ்வுலகையே புரட்டிப்போட்டு விடலாம் என்று நம்பினார் விவேகானந்தர்.

    பொருள்பொதிந்த அருள்வாழ்வை வாழ்ந்துகாட்டியதோடல்லாமல் கருத்தாழமிக்க அறிவுரைகளையும் நமக்கு வழங்கிச் சென்றிருக்கின்றார் விவேகானந்தர். அந்தப் பேரருளாளரின் நன்மொழிகளை – பொன்மொழிகளைக் கற்றுக் கடைப்பிடிப்போம்! வாழ்வில் உயர்வோம்!

    *****

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. சுவாமி விவேகானந்தரின் வரலாறும் அறிவுரைகளும் – ராமகிருஷ்ண மடம் & ராமகிருஷ்ண மிஷன், பேலூர் மடம்.

    2. https://en.wikipedia.org/wiki/Parliament_of_the_World%27s_Religions

    3. https://en.wikipedia.org/wiki/Religion_not_the_crying_need_of_India

     

    Share
  • இரட்டை விண்மீன் சுற்றமைப்பு நடனத்தில் கால-வெளி அரங்கு இழுப்பு உறுதி ஆயிற்று

    இரட்டை விண்மீன் சுற்றமைப்பு நடனத்தில் கால-வெளி அரங்கு இழுப்பு உறுதி ஆயிற்று

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    The white dwarf-pulsar binary system

    [PSR J1141–6545.]

    Credit: Mark Myers/ARC Centre of Excellence for Gravitational Wave Discovery

    Animation depicting a neutron star orbiting a rapidly-spinning white dwarf. The white dwarf’s spin drags the very fabric of space-time around with it, causing the orbit to tumble in space.

    +++++++++++

    Credit: Mark Myers, OzGrav ARC Centre of Excellence.

    ++++++++++++++++++++

    The precession effect of Gravity Probe B.

    Credit: Gravity Probe B Team, Stanford, NASA

    Image result for binary stars rotation"

    இரட்டை விண்மீன் சுற்றமைப்பு 

    [PSR J1141-6545]

    +++++++++++++++++++

    2020 ஜனவரியில் ஈர்ப்பியல் அலைகள் நியதி கண்டுபிடித்த விஞ்ஞானப் பெரு மையத்தின் புதிய அறிவிப்பு

    விரைவாய்ச் சுற்றும் நியூட்ரான் விண்மீன் ஒன்று, வெண்குள்ளி விண்மீன் ஒன்றைச், சுற்றும் போது, கால-வெளிப் பின்னல் நாரை இழுத்துக்கொண்டு சுற்றுவதை, உலக நாடுகளின் வானியல் பௌதிக நிபுணர்கள் புதிதாய்க் கண்டுள்ளார்கள்.  அக்குழுவின் தலைவர் ஆஸ்திரேலியப் பேராசிரியர் மாத்தியூ பைல்ஸ்.  அந்தச் செய்தி  ஜனவரி 31, 2020இல் பிரதான விஞ்ஞானத் தாள்களில் வெளியாகி உள்ளன.  சிறப்பு என்னவென்றால், அச்செய்தி நூறாண்டுக்கு முன்பு, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்ட “பொது ஒப்பியல் நியதியை” மெய்பித்துக் காட்டியுள்ளது.  அந்த நியதி ஐன்ஸ்டைன் நோபெல் பரிசு பெறவும் வழி வகுத்தது.  செய்தி வெளியிட்ட மதிப்புக்குரிய ஈர்ப்பியல் அலைகள் நியதி கண்டுபிடித்த விஞ்ஞானப் பெரு மையம் :    [ARC Centre of Excellence of Gravitational Wave Discovery (OzGrav)].  2016 ஆம் ஆண்டில் ஈர்ப்பியல் அலைகள் நியதி கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டது.  2019ஆம் ஆண்டில் முதன் முதல் கருந்துளை நிழல் படம்  வெளியானது  அதே ஆண்டில் நமது பால்வீதி மையத்தில் உள்ள மாபெரும் கருந்துளையைச் சுற்றிவரும் விண்மீன்களைப் பற்றி தகவல் அறிவிக்கப்பட்டது.

    Pulsar-white dwarf binary system confirms general relativistic frame-dragging

    +++++++++++++++

    ஒளியிழந்து முடமான பெரும்பளு நியூட்ரான் விண்மீன்கள் வெண்குள்ளி என்று அழைக்கப்படுபவை.  விந்தையான இந்த இரட்டை விண்மீன் சுற்றமைப்பைக் [PSR J1141-6545] கண்டுபிடித்தவர் ஓர் இந்திய விஞ்ஞானி.  அவரது பெயர் : டாக்டர் விவேக்  வெங்கட்ராமன் கிருஷ்ணன். ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் ஆய்வுக்கூடத்தின் [Max Planck Institute]  ரேடியோ வானியல் பகுதியைச்  சேர்ந்தவர். இந்தக் குழுவில் [INTERNATIONAL CENTRE FOR RADIO ASTRONOMY RESEARCH (ICRAR)] RAMEESH BHAT என்ற இந்தியரும் பங்கேற்றவர்.  மையத்தில் இருக்கும் பெரும்பளு வெண்குள்ளி ஒன்றை விரைவாய்ச் சுற்றுவது ஓரிளம் சிற்றெடைத் துடிப்பு விண்மீன்  [Pulsor].  கண்டுபிடிக்க உதவியது : [CSIRO Parkes 64 metre Radio Telescope].  மையத்தில் உள்ள வெண்குள்ளி நமது பூமி அளவு,  ஆனால் அது பூமியை விட 300,000 மடங்கு திணிவு கொண்டது.  விரைவாய்ச் சுற்றிவரும் சிற்றெடை வெள்குள்ளி 20 கி.மீ [12 மைல்] விட்டம் உள்ளது.  ஆனால் பூமி போல் 100 பில்லியன் மடங்கு திணிவு கொண்டது.

    +++++++++++++++++++++++

    நியூட்ரான் விண்மீன் கண்டுபிடிப்பு

    2007ஆம் ஆண்டு ஆகஸ்டு 20ஆம் தேதி வானியல் விஞ்ஞானிகள் ராபர்ட் ரூத்லெட்ஜ் & டிரெக் பாக்ஸ் (Robert Rutledge & Derek Fox) இருவரும் தொலைநோக்கிகள் மூலமாகவும், ஜெர்மன்-அமெரிக்க “ரோஸாட்” விண்ணுளவி (ROSAT Space Probe) மூலமாகவும் உளவு செய்ததில் பூமிக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் ஒரு நியூட்ரான் விண்மீனைக் கண்டுபிடித்தார்கள்! அந்தக் கதிர்ப்பிண்டம் உர்ஸா மைனர் (Ursa Minor Constellation) என்னும் விண்மீன் மந்தைக்கு அருகில் காணப்பட்டது. 1990-1999 ஆண்டுகளில் ரோஸாட் இதுவரை விண்வெளியை உளவி 18,000 எக்ஸ்-ரே வீசும் முடத்துவ விண்மீன்களைப் பதிவு செய்துள்ளது. மேலும் அந்த விண்ணுளவி ஒளி வீசி வெளிப்புறம் புலப்பட்டு உட்புறச் செவ்வொளி, ரேடியோ அலைகளை (Objects with Visible Light, Infrared Light & Radio Waves) எழுப்பும் விண்வெளிப் பிண்டங்களின் பட்டியலையும் ஆக்க உதவியிருக்கிறது.

    அந்த நியூட்ரான் விண்மீனை எட்டாவது எண்ணிக்கையாகக் கொண்டு “கல்வேரா” (Calvera) என்று பெயர் வைத்துள்ளார். இதுவரை ஏழு தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நியூட்ரான் விண்மீன்களில் எதுவும் சிதைவு பெற்ற சூப்பர்நோவா மிச்சத்துடன் (Supernova Remnant) ஒட்டியதில்லை! அதனுடைய இரட்டைத் துணைப்பகுதியும் (Binary Companion) இல்லை! மேலும் அதனுடைய கதிரலைத் துடிப்புமில்லை (Radio Pulsations)! கால்ரா நியூட்ரான் விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டதும், ஹவாயியின் 8.1 மீட்டர் தொலைநோக்கியில் துருவி ஆராய்ந்து அது ஒரு விந்தையான முடத்துவ விண்மீன் என்பது அறியப்பட்டது. நமது பால்மய வீதி காலக்ஸித் தட்டுக்கு மேலாக கால்ரா அமைந்துள்ளது. கால்ரா நியூட்ரான் விண்மீனின் தூரம் 250-1000 ஒளியாண்டுக்குள் இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது !

    Pulsar geometry

    Pulsar Star

    நியூட்ரான் விண்மீன் என்று எதைக் குறிப்பிடுகிறார் ?

    பிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம். சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன்! பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன! அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது. விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னாபின்னம் ஆகச் சிதைகிறது ! அப்படிச் சிதைவாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து (1 புரோட்டான் + 1 எலெக்டிரான் = 1 நியூட்ரான்) நியூட்ரான்களாக மாறுகின்றன. அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.

    Structure of a Neutron Star

    ஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீட்டர் (12 மைல்) விட்டம் கொண்டது. அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது. அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density). நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட, பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும். நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது. ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் [2 x 10 to the power of 11 (2 X 10^11)] மடங்கு மிகையானது ! அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி, பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு பெருத்தது !

    சூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் ! தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம்! இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் ! அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது. அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது! கருந்துளைகள் (Black Holes) மிகவும் கனமானதால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது !

    Colliding Neutron Stars

    துடிப்பு விண்மீன்கள் (Pulsars) என்பவை யாவை ?

    1967ஆம் ஆண்டில்தான் ஜோசிலின் பெல் பர்னெல் (Jocelyn Bell Burnell) என்னும் ஒரு கல்லூரி மாணவி ஒரே அதிர்வு வீதத்தில் விட்டுவிட்டு மின்னும் துடிப்பு விண்மீன்களை ரேடியோ அலைவீசும் மூலப் பிண்டங்களாகக் கண்டுபிடித்தார்! சுழலும் நியூட்ரான் விண்மீன்களே துடிப்பு விண்மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன! அவை ஓர் அச்சில் சுற்றுவதால் விட்டுவிட்டு மின்னுகின்றன! இப்போது நாம் அனைத்து அலை வேகங்களிலும் துடிப்பு விண்மீன்களைக் காண முடிகிறது. ஒளி வேகத்தை ஒட்டிய விரைவில் உந்திச் செல்லும் பரமாணுக்கள் கொண்டு சுழலும் நியூட்ரான் விண்மீனே துடிப்பு விண்மீன் என்று அறியப்படுகிறது. கப்பலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு போல துடிப்பு விண்மீன்கள் வெளிப்படுத்தும் ஒளி விட்டுவிட்டு மின்னுகிறது.

    Neutron Star Inside

     

    சில துடிப்பு விண்மீன்கள் எக்ஸ்ரே கதிர்களை உமிழ்கின்றன. புகழ்பெற்ற நண்டு நிபுளா எனப்படும் நியூட்ரான் விண்மீன் ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் பிறந்ததுதான். கி.பி. 1054ஆம் ஆண்டில் வெறும் சூப்பர்நோவா மட்டும் காணப்பட்டதாக அறியப் படுகிறது! ஐன்ஸ்டைன் எக்ஸ்ரே வானோக்ககத்தில் (Einstein X-Ray Observatory) உளவப்பட்ட நண்டு நிபுளாவின் நடுவில் விட்டுவிட்டு மின்னும் ஒளிமிக்க துடிப்பு விண்மீன் ஒன்று காணப்பட்டது.

    இரட்டை ஏற்பாட்டில் ஓர் ஆரோக்கிய விண்மீனும், சிதைவில் தோன்றிய ஒரு நியூட்ரான் விண்மீனும் பின்னிக் கொள்கின்றன. அசுரத்தனமான வலுக்கொண்ட நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பாற்றல் ஆரோக்கிய விண்மீனின் பண்டங்களைத் தன்வசம் இழுத்துக்கொள்கிறது. அந்தப் பண்டங்கள் நியூட்ரான் விண்மீனின் துருவப் பகுதிகளில் புகுந்து செல்கின்றன! இந்த இயக்கமானது “விண்மீன் பிண்டப் பெருக்கம்” (Accretion Process between Binary System Stars) என்று சொல்லப்படுகிறது. அப்படிப் பெருக்கம் உண்டாகும் போது நியூட்ரான் விண்மீன் சூடேறி எக்ஸ்ரே கதிர்களை உமிழ்கிறது !

    Pulsar Signals

    விண்மீன்களின் சிதைவுக் கோலங்கள் !

    கோடானு கோடி விண்மீன்களின் பிறந்தகமும், அழிவகமும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பால்வீதி ஒளிமயத் திடலே [Milky Way Galaxy]! தோன்றிய எந்த விண்மீனும் அழியாமல் அப்படியே உருக்குலையாமல் வாழ்பவை அல்ல! பூமியில் பிறந்த மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் எப்படி ஆயுட்காலம் என்று குறிக்கப் பட்டுள்ளதோ, அதே போன்று அண்டவெளியிலும் விண்மீன் ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது! இதுவரைப் பத்து பில்லியன் ஆண்டுகள் விண்வெளியில் கண்சிமிட்டி வாழ்ந்து வந்த சில விண்மீன்கள், இன்னும் 100 பில்லியன் ஆண்டுகள் கழித்து அழிந்து போகலாம்! சில விண்மீன்கள் சூரியனை விடப் பலமடங்கு பெரியவை! சில வடிவத்தில் சிறியவை! கொதிப்போடு கொந்தளிப்பவை சில! குளிர்ந்து கட்டியாய்த் திரண்டவை சில! ஒளிப் பிழம்பைக் கொட்டுபவை சில! ஒளியிழந்து குருடாகிப் போனவை சில! பல பில்லியன் மைல் தூரத்தில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பற்றிய விஞ்ஞானிகளின் அறிவெல்லாம், அவற்றின் ஒளித்திரட்சியைப் பார்த்து, ஒளிமாற்றத்தைப் பார்த்து, இடத்தைப் பார்த்து, இடமாற்றத்தைப் பார்த்து, ஒளிநிறப் பட்டையைப் [Light Spectrum] பார்த்துத், தமது பெளதிக ரசாயன விதிகளைப் பயன்படுத்திச் செய்துகொண்ட விளக்கங்களே!

    Life & Death of Pulsars

    ஒரு விண்மீன் தனது உடம்பைச் சிறிதளவு சிதைத்து வாயு முகிலை உமிழ்கிறது. அப்போது விண்மீன் முன்பு இருந்ததை விட 5000-10,000 மடங்கு ஒளி வீசுகிறது! அது நோவா விண்மீன் [Nova Star] என்று அழைக்கப்படுகிறது. சூப்பர்நோவா [Supernova] விண்மீன்கள் வெடிப்பில் சிதைவுற்றுச் சிறு துணுக்குகளை வெளியேற்றிச் சூரியனை விட 100 மில்லியன் மடங்கு ஒளிமயத்தைப் பெறுகின்றன. சூரிய குடும்பத்தின் அண்டங்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் உண்டானவை என்றும், அவற்றைப் பின்னால் சூரியன் கவர்ந்து கொண்டதாகவும் கருதப்படுகிறது!

    Pulsar Beams & Spins

    பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு [1.4 times Solar Mass] மேற்பட்ட விண்மீன் இறுதியில் ஒரு வெண்குள்ளியை [White Dwarf] உருவாக்குவதில்லை என்று சந்திரசேகர் கூறினார். [வெண்குள்ளி என்பது பரிதியின் பளுவை (Mass) அடைந்து, அணுக்கருச் சக்தியற்றுச் சிதைந்த விண்மீன் ஒன்றின் முடிவுக் கோலம். அது வடிவத்தில் சிறியது! ஆனால் அதன் திணிவு [Density] மிக மிக மிகுதியானது!] அதற்குப் பதிலாக அந்த விண்மீன் தொடர்ந்து சிதைவுற்று, சூப்பர்நோவா வெடிப்பில் [Supernova Explosion] பொங்கித் தனது வாயுக்களின் சூழ்வெளியை ஊதி அகற்றி, ஒரு நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] மாறுகிறது. பரிதியைப் போல் 10 மடங்கு பருத்த விண்மீன் ஒன்று, இன்னும் தொடர்ந்து நொறுங்கி, இறுதியில் ஒரு கருந்துளை [Black Hole] உண்டாகிறது. சந்திரசேகரின் இந்த மூன்று அறிவிப்புகளும் சூப்பர்நோவா, நியூட்ரான் விண்மீன் மற்றும் கருந்துளை ஆகியவற்றை விளக்கிப் பிரபஞ்சம் ஆதியில் தோன்றிய முறைகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

    Making a neutron star

    சில சமயங்களில் இறுதி நொறுங்கல் [Final Collapse] விண்மீனில் ஹைடிரஜன், ஹீலியம் ஆகியவற்றை விடக் கனமான மூலகங்களில் [Heavier Elements] திடீரென அணுக்கரு இயக்கங்களைத் தூண்டிவிடலாம்! பிறகு அவ்வணுக்கரு இயக்கங்களே சூப்பர்நோவாவாக [Supernova] வெடித்து ஆயிரம் ஒளிமயக் காட்சிகளை [Galaxies] விடப் பேரொளி வீசக் காரணமாகலாம்! ஓராண்டுக்குப் பிறகு பேரொளி மங்கி, பரவும் முகில் வாயுக்கள் கிளம்பி, மூல விண்மீனின் நடுக்கரு [Core] மட்டும் மிஞ்சுகிறது! அம்முகில் பயணித்து, அடுத்து மற்ற அகில முகிலோடு கலந்து, ஈர்ப்பியல் நொறுங்கலில் புதிய ஒரு விண்மீனை உண்டாக்கும்! எஞ்சிய நடுக்கரு பேரளவுத் திணிவில் [Extremely Dense] இறுகி வெப்பமும் வெளிச்சமும் அளிக்க எரிப்பண்டம் இல்லாது, முடமான நியூட்ரான் விண்மீனாய் [Neutron Star] மாறுகிறது!

    தட்டாய் ஆக்கும் முறைப்பாடு

    நியூட்ரான் விண்மீன் முதல் நூறாயிரம் ஆண்டுகள் வானலைக் கதிர்க் கற்றைகளை [Beams of Radio Waves] வெளியாக்கி, விண்மீன் சுற்றும் போது கதிர்கள் பூமியில் உள்ள வானலைத் தொலைநோக்கியில் துடிப்புகளை [Pulses] உண்டாக்குகின்றன! ஓர் இளைய நியூட்ரான் துடிப்பு விண்மீன் [Pulsar] என்றும் குறிப்பிடப்படுகிறது. துடிப்பு விண்மீனின் குறுக்களவு சுமார் 9 மைல்! ஆயினும் அதன் பளு பிரம்மாண்டமான நமது பரிதியின் நிறைக்கு ஒத்ததாகும்!

    +++++++++++++

    தகவல்:

    1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4. Internet Article “Stellar Evolution”

    5. Majestic Universe By: Serge Brunier (1999)

    6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)

    7. Possible Closest Neutron Star to Earth Found – Eberly College of Science [ http://www.science.psu.edu ] (August 20, 2007)

    8. http://www.natureworldnews.com/articles/9814/20141023/evidence-starquakes-neutron-star.htm

    9. http://nautil.us/issue/31/stress/the-inside-of-a-neutron-star-looks-spookily-familiar

    10.  https://en.wikipedia.org/wiki/Neutron_star  [June 30, 2016]

    11. https://science.nasa.gov/science-news/science-at-nasa/2011/04may_epic

    12. https://www.msn.com/en-gb/news/techandscience/space-time-is-swirling-around-a-dead-star-proving-einstein-right-again/ar-BBZuFFb

    13. https://www.nanowerk.com/news2/space/newsid=54461.php

    14. https://www.rt.com/news/479738-binary-star-spinning-bending-spacetime/

    15. https://scitechdaily.com/einsteins-general-relativity-confirmed-astronomers-witness-the-dragging-of-space-time/

     

    Share
  • தச்சர் பற்றிய கல்வெட்டு

    தச்சர் பற்றிய கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பதினெண் விஷயத்தார் எனப்படுகின்ற விஸ்வகர்மா சாதியான தச்சர் ஆற்றிய கோவில் பணிகள் பற்றி சில கல்வெட்டுக் குறிப்புகள் உள. இவர்கள் கோவில் அருகிலேயே நான்மாடத் தெருவிலேயே வாழ்ந்ததற்கான சான்றுகளை இக்கல்வெட்டுகள் நம் கண்முன்னே வைக்கின்றன. அவை குறித்த ஒரு பார்வை கீழே.

    நாகபட்டினம் மாவட்டம், செம்பியன் மாதேவி ஊரில், கைலாசநாதர் கோவிலின் சண்டிகேசுவரர் சன்னதிக்கு வடக்கு சுவர், 47 வரிக் கல்வெட்டு  சாய்வுக் கோடுகளாக.

    ஸ்வஸ்தி ஸ்ரீ கோற்சடையபந் / மர்திரிபுவனச் சக்கரவத்திகள் / வீரபாண்டிய தேவர்க்கு 9 ஒ / ன்பதாவது செம்பியன் மா / தேவிச் சருப்பேதி மங்கலத்து / உடையார் கைலாசமு / டையார் கோயில் தான / த்தார் _ _ _ _ / த் தச்சர் சாமுதாயம் பண்ணி / உத்தம வேதப் பெருமா / ஆசாரியனுக்கு இன்னாய / னார் திருமடைவிளாகத்து / தெற்கில் திருவீதியில் உவ / ச்சன் திருவகம்பாம _ _ ராய / ன் மனைக்கு கிழக்கு மனை ஒன் / று விட்டு இதன் கிழக்கு மனை ஒ / ன்றுக்கு

    ற் கெல்லை மொண்ணை / நாயகப்பிச்சன் மனைக்கு / மேற்கு நடுவுப்பட்ட மனை ஒ / ன்றுக்கு மனை நீளம் கோல் / மூன்று.  இக்கோல் மூன்றுக்கு / ம் இத்தால் உள்ள புழைக்க / டை உண்ணீள மறுதியாக / _ _ _ _ கொண்டு இருக்கும் / _ _ _ _ பாகா / யமும் மற்றும் / எற்பேர்பட்ட / னவும் இவனுக்கு சந்திராதி / த்தவரையும் [விற்]றொற்றித்  / திரவியங்களுக்கு மு(ரி)த்தாவு / தாகவும் இப்படி சம்மதித்து / புரட்டாசி மாத  முதல் திய / தி இ(ன்)று னூறென்ற பெ / ருமாள் [திருக்கா]_ _ _ _

    இருந்து குடுத்தோம் / உத்தம வேதப் பெருமா / ள் ஆசாரியனுக்கு தான / த் தாரோம். இப்படிக்கு / திருச்சிற்றம்பல பட்டன் எ / ழுத்து. இவை  வீதிவிடங் / கப்பட்டர் எழுத்து. இக்கோ / யில் ஸ்ரீ மா(ய்)யேசுரக் / கண்காணி / காலகால தே / வர் எழுத்து. இக்கோயி(ல்) க் / கணக்கு பொய்கைக்குடை  / யான் கணக்கு பொன்னன் / _ _ _ லக் க[ண]க்கு எழுத்து.

    தானத்தார் – ஸ்தானத்தார் ஆகிய கோயில் பொறுப்பாளர்கள்; சாமுதாயம் – சாதியர்; பண்ணி – ஏற்பாடு செய்து, arrange; உவச்சன் – இசைக் கருவிக் கலைஞன்; புழைக்கடை – கொல்லைப்புறம்; அறுதியாக – முடிய; மகேசுவரக் கண்காணி – சிவனடியார் கண்காணி.

    விளக்கம்: சடையவர்மன் திரிபுவன வீரபாண்டியனின் 9- ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1345) நாகை மாவட்டம் செம்பியன் மாதேவி என்னும் ஊரில் அமைந்த கைலாசநாதர் கோவிலுக்கு தச்சர் சாதிமார் உத்தமவேதப் பெருமாள் என்னும் தச்சனை கோவில் தச்சு வேலைக்கு ஏற்பாடு பண்ணிக் (arrange) கொடுத்தனர். இக்கோவில் பொறுப்பு அதிகாரிகள் உத்தம வேதப் பெருமாள் ஆசாரிக்கு இக்கோவிலைச் சூழ்ந்த திருவீதியில் இசைக் கலைஞன் திருவகம்பாம__ராயன் வீட்டிற்கு கிழக்கே அமைந்த வீட்டிற்கு ஒரு வீடு தள்ளி கிழக்கே உள்ள ஒரு வீட்டைத் தந்தனர். இந்த வீட்டின் எல்லையை கூறி விட்டு, இதன் நீளம் மூன்று கோல் அளவினது, இதன் கொல்லைப்புற உள் நீளம் முடியும் வரையான இடம் இவனுடையது. இதை இவன் விற்றுக்கொள்ளவோ ஒத்திக்கு (lease) விடவோ செய்யலாம். இதற்கு ஒப்புக் கொண்டு புரட்டாசி மாதம் முதல் நாளான இன்று உத்தம வேதப் பெருமாள் ஆசாரிக்கு கொடுத்தோம் என்று கோவில் பொறுப்பாளர் கையொப்பமிடுகின்றனர்.  இக்கல்வெட்டு மூலம் கோவிலில் பணி செய்பவருக்கு கோவில் சார்பில் வீடு வழங்கப்பட்டது என்பது தெரிகின்றது. இசைக் கலைஞர் போன்றோர் கோவிலைச் சூழ்ந்த தெருவில் வாழ்ந்த நிலைமையை நோக்கும்  போது மேல் சாதிக்காரான பிராமணர், வெள்ளாளர் மட்டுமே கோவில் ஊரில் வாழ்ந்தனர் மற்ற கைவினை சாதியார் பிடாகையான உள்கிராமங்களில் ஒதுக்கப்பட்டு ஏற்றத் தாழ்விற்கு உள்ளாயினர் என்ற சாந்தினி பீ, J.S. கிரேவால் போன்ற சிலரது கூற்றைத் தவறு எனக் காட்டுகின்றது.

    பார்வை நூல்: நாகபட்டின மாவட்டக் கல்வெட்டுகள், பக்கம் 85 – 86, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுதமங்கலம் சோமனாத சுவாமி கோவிலின் முதல் பிரகாரம் கிழக்குச் சுவரில் உள்ள 5 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜாதிராஜ தேவர்க்கு யாண்டு 3 நாள் 192 னால் 
    2. _ _ _ விலை கொண்டு புகுந்த கல்தச்சரில் முளைத்தான் ஆன சண்டேசுரப்
    3. [பெருந்தச்சனும் இ]வன் அகமுடையாள் சொன்னவாரறிவாளும் இவள் மகன் நல்லானான 
    4. _ _ _ ருந்தச்சனும் இவன் தம்பி உலகனும் இவன் தம்பி யம்பலவனும் இவன் தம்பி
    5. _ _ _ _ ன நங்கைப் பனை ஆண்டாளும் மடவடிமை.

    மட அடிமை – மடைபள்ளி அடிமை; புகுந்த – கோவிலை அடைந்த

    விளக்கம்: திரிபுவனச் சக்கரவத்திகள் என்ற பட்டம் முதன்முதலாக முதற் குலோத்துங்கனுக்கு ஏற்பட்டதைக் கருதி இது சோழ வேந்தன் மூன்றாம் இராஜராஜனின் 3-ம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி. 1219) அச்சுதமங்கலம் சோமனாதர் கோவிலார் 192 காசு கொடுத்து முளைத்தான் என்ற சண்டேசுர பெருந்தச்சனையும் இவன் மனைவி சொன்னவாரறிவாளையும் மகன் நல்லான் பெருந்தச்சன், இன்னொரு மகன் உலகன், இன்னொரு மகன் அம்பலவன், பெயர் சிதைந்துள்ள இன்னொரு மகன், தங்கை பனை ஆண்டாள் ஆகிய 5 ஆடவரும் 2 பெண்டிரும் மடைப்பள்ளி வேலைக்கு  அடிமைகளாக வாங்கப்பட்டு கோவில் புகுந்தனர் என்கின்றது இக்கல்வெட்டு.

    கோவில் அடிமைகளாக வாங்கப்பட்ட அடிமைச் செய்திகளை தாங்கிய கல்வெட்டுகள் இது போல சில உள. அவற்றொடு இக்கல்வெட்டை ஒப்பிட்டு ஆய்ந்தால் இத்தச்சன் குடும்ப வறுமை நிலை அல்லது கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு விற்றுக்கொண்டான் என ஊகிக்க முடிகின்றது. மக்கள் ஏன் இப்படி கோவிலுக்குத் தம்மை விற்றுக் கொண்டனர் என்றால் இதனால் கோவிலுக்கு அடிமையாக விற்கப்பட்டவர் கோவில் பணியாளாகிப் போகிறார். அதன்படி அவர்களுக்கு கோவிலில் வழங்கப்படும் இரு பொழுதுச் சோறு கிடைப்பதுடன் தங்கும் வசதி ஆகியனவும் கிட்டுகின்றது. அதோடு பிரிந்து போய்விடாமல் குடும்பத்தாரொடு ஒன்றாக வாழ முடிகின்றது. இந்த அடிமைத்தனம் எவ்வளவு காலத்திற்கு? அதில் இருந்துவிடுபட முடிந்ததா? என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இதுவரை அறியப்பட வில்லை.  இந்த அடிமைத்தனம் ஒருவகையில் அவர்களுக்கு கிடைக்கும் உடனடி விடுபாடு (relief) என்பதை நம்மால் உணர முடிகின்றது.

    மேலும் சில அடிமைக் கல்வெட்டுகளை அறிய சொடுக்குங்கள்

    https://groups.google.com/d/msg/vallamai/TPdzGwj03sw/pgM-gAzyAgAJ

    https://groups.google.com/d/msg/vallamai/1Fn_eB9DWKk/MlaXDkXDAgAJ

    பார்வை நூல்: நன்னிலம் கல்வெட்டுக்கள், தொகுதி 2, எண் 270/1978, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ஆலந்தூர் சிவன் கோவில் மேற்கு குமுதத்தில் பொறிக்கப்பட்ட 3 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு முப்பத்தாறாவது  இரும்பேடு கீழ் _ _ _ நாற்ப்பேரெல்லையுள் நாலு _ _ _
    2. ஒரு கூறாய் ஆடியனமார் _ _ _ கொட கூறாய் தச்சர்க்குப்  புதுக்குப்புறம்  ஸ்ரீ வேலி விஷ்ணுக்ரஹப் பெருந்தச்சினு தேவனும் பலதேவனும் ஒரு கூறாய் பெருந்தச்சனுக்கு நன்செய் காற் கூறு
    3. ம் மூர் தேவனுக்கு ஒரு கூறும் பலதேவனுக்கு ஒரு கூறும் ஆக நாற்பெரெல்லையிலுமுள்பட விளை நிலத்துள் நாலிலொன்றும்  இத்தச்சனு _ _ _

    ஸ்ரீவேலி – கோவில் நிலம், புதுக்குப்புறம் – கட்டடத்தை சீர்செய்து புதுப்பித்ததற்கான நிலம்.

    விளக்கம்சோழன் முதற் பராந்தகனின் 36 –ம் ஆட்சி ஆண்டில் (பொ.ஆ. 942) வந்தவாசி ஆலந்தூர் சிவன் கோவிலில் கட்டடம் கட்டியதற்காக இரும்பேடு கிராமத்தின் கிழக்கில் நாற்பேரெல்லையுள் பட்ட நிலத்துள் நாலில் ஒரு கூறை (1/4) ஆடியனமார் கொடையாகவும், கட்டடம் புதுப்பித்ததற்காக பெருந்தச்ச தேவனுக்கும் பலதேவனுக்கும் ஒரு பங்கும், நன்செய் நிலத்தில் பெருந்தச்சனுக்கு 1/4 பங்கும் மூர் தேவனுக்கு ஒரு பங்கும் பலதேவனுக்கு ஒரு பங்கும். இப்படி நாற்பேரெல்லை உடைய விளை நிலத்தில் 4 ல் ஒர் பங்கு இந்த தச்சனுக்கு கொடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது. கல்வெட்டு ஆங்காங்கே சிதைந்துள்ளது எனவே தெளிவான பொருளை கொள்ள முடியவில்லை. இதன் மூலம் தச்சர் விளை நிலங்களையும் கோவில் பணிக்காகப் பெற்றனர் எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்: தமிழ்நாடு கல்வெட்டுகள் தொகுதி XIII, திருவண்ணாமலை மாவட்ட கல்வெட்டுகள் 2, பக். 124. தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    தச்சர் பற்றி மேலும் சில கல்வெட்டுகளை காண சொடுக்குங்கள்

    https://groups.google.com/d/msg/vallamai/arn7n2ljNjc/urDDtXKiCgAJ

    Share
  • சிவபூமி காத்தோர் பட்டியல்

    சிவபூமி காத்தோர் பட்டியல்

    இலங்கையைச் சிவ பூமியாகக் காத்தோர் பட்டியல்                   

    தொகுப்பு: மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    இலங்கைத் தீவு சிவ வழிபாட்டின் தாயகம் = சிவ பூமி. இலங்கைத் தீவைச் சிவ பூமியாக நீடிக்க, ஆண்டோர், தளபதியானோர், புரவலர், புலவர், நாயன்மார், சான்றுகள் கூறியோர் எனப் பட்டியல் நீளும். அகத்தியர் தொடக்கம் இரண்டாம் சங்கிலியன் வரையான காலப் பகுதியின் 145 பெயர்களின் பட்டியல். வரலாற்றாசிரியர், தொல்லியல் அறிஞர் இலக்கியப் படைப்பாளிகள் இதுநாள் வரை எடுத்துக் கூறிய பங்களிப்பாளரின் பெயர்ப் பட்டியலைத் தொகுத்தேன். இப்பட்டியல் முழுமையானது அல்ல. சேர்க்கை, நீக்கம், திருத்தம் தேவையான பட்டியல்.

    1. புலவர் அகத்தியர் (திமு. தமிழ் மொழி தோன்றிய காலம்)
    2. அருளாளர் துவட்டர் (திமு. 25000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
    3. சிற்பி விசுவகன்மா (திமு. 25000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
    4. அரசன் இராவணன் அரசி வண்டோதரி (திமு. 10,000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
    5. அரசன் இராமன் அரசி சீதை (திமு. 10,000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
    6. அரசன் சிவ நாகன் (திமு. 554-505)
    7. புலவர் ஈழ நாகனார் (திமு. 543-205)
    8. புலவர் நன்னாகனார் (திமு. 543-205)
    9. புலவர் பொன்னாகனார் (திமு. 543-205)
    10. புலவர் வெண்ணாகனார் (திமு. 543-205)
    11. புலவர் முப்பேர் நாகனார் (திமு. 543-205)
    12. அரசன் மால நாகன் (திமு. 545-514)
    13. அரசன் குல நாகன் (திமு. 545-514)
    14. அரசன் மணி இயக்கன் (திமு. 515-485)
    15. அரசன் விசயன் (திமு. 452-414)
    16. அரசன் பாண்டிய வாசுதேவன் (திமு. 413-383)
    17. அரசன் அபயன் (திமு. 382-362)
    18. அரசன் மண்டு நாகன் நாகர்முனை மட்டக்களப்பு (திமு. 362)
    19. அரசன் மூத்த சிவன் (திமு. 362-276)
    20. அரசன் மீட்ட சேனன் மட்டக்களப்பு (திமு. 282)
    21. புலவர் ஈழத்துப் பூதன்தேவனார் (திமு. 276-228)
    22. அரசன் கூத்த நாகன் மட்டக்களப்பு (திமு. 275)
    23. அரசன் கோவேந்தன் ஆனைக்கோட்டை (திமு. . 228-200)
    24. புலவர் மாமூலனார் (திமு. 200-140)
    25. வணிகன் ஈழக் குடுமிகன் (திமு. 150-100)
    26. வணிகன் ஈழப் பரதவன் (திமு. 150-100)
    27. அரசன் சேனன் (திமு. 146-133)
    28. அரசன் குடிகன் (திமு. 133-124)
    29. அரசன் எல்லாளன் (திமு. 134-70)
    30. அரசன் புலவர் கல்லாட நாகன் (திமு. 78-71)
    31. அரசன் புலத்தியன் (திமு. 13-10)
    32. அரசன் வாகையன் (திமு. 11-9)
    33. அரசன் பனை மாறன் (திமு. 9-2)
    34. அரசன் பாண்டிய மாறன் (திமு. 1- திபி.1)
    35. அரசன் பிள்ளை மாறன் (திபி. . 1-2)
    36. அரசன் சோழ நாகன் (திபி. 28-40)
    37. அரசன் கோட்டையன் திருகோணமலை (திபி. 39)
    38. அரசன் சிவன் (திஇபி. 43-44)
    39. அரசி ஆடகசவுந்தரி திருகோணமலை (திபி. 109)
    40. அரசன் சோழ அபயன் (திபி. 124-125)
    41. அரசன் சிவ சேனன் (திபி. 125)
    42. அரசன் ஈழ நாகன் (திபி. 126-131)
    43. புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் (திபி. 150-220)
    44. அரசன் சந்திரமுக சிவன் அரசி தமிழ்த்தேவி (திபி. 150-220)
    45. பயணி கிரேக்கத் தாலமி (திபி. 158-182)
    46. அரசன் கரிகாலன் (திபி. 185-200)
    47. காவியத் தலைவி கண்ணகி (திபி. 190-270)
    48. அரசன் சேரன் செங்குட்டுவன் (கிபி. 190-270)
    49. அரசன் கயவாகு (திபி. 202-234)
    50. அரசன் மாமல்ல நாகன் (திபி. 224-231)
    51. புலவர் தீவதிலகை (திபி. . 240-250)
    52. காவியத் தலைவி மணிமேகலை (திபி. . 250-280)
    53. அரசன் சாவகத்துப் புண்ணியராசன் (திபி. 260)
    54. அரசன் கொட்டியாறன் திருகோணமலை (திபி. 269)
    55. வணிகன் வீரவராயன் செட்டியார் (திபி. 270-330)
    56. அரசன் குச்ச நாகன் (திபி. 272-274)
    57. அரசன் குஞ்ச நாகன் (திபி. 275-279)
    58. அரசன் நாக திலகன் (திபி. 280-306)
    59. அரசி பால்வள்ளி என்ற பீலிவளை (திபி. 280-306)
    60. அரசன் மேக வண்ணன் (திபி. 331-359)
    61. அரசன் குணசிங்கன் (திபி. 340-400)
    62. அரசன் அரசசேனன் மட்டக்களப்பு (திபி. 395)
    63. அரசி கலிங்க உலகநாச்சி மண்முனைப் படிகலிங்கர் (திபி. 390-430)
    64. அரசன் நல் நாடன் சேரன் (திபி. 420-460)
    65. அரசன் முகல்லன் (திபி. 528-546)
    66. அரசன் சிவ நந்தி (திபி. 600-680)
    67. அருளாளர் திருஞானசம்பந்தர் (திபி. 630-650)
    68. அரசன் வங்காலடன் மட்டக்களப்பு (திபி. 664)
    69. அரசன் மானவர்மன் (திபி. 690-725)
    70. அரசன் பல்லவன் நரசிம்ம வர்மன் (திபி. 690-725)
    71. அருளாளர் சுந்தரர் (திபி. 790-820)
    72. அரசன் உக்கிரசிங்கன் (திபி. 810-850)
    73. அரசி மாருதப்புரவிவல்லி. 810-850)
    74. அரசன் பாலசிங்கன் – யாழ் மணற்றிடர் (திபி. 851-900)
    75. அரசன் முதலாம் சேனன் – சிவ சேனன் (திபி. 910-950)
    76. அருளாளர் மாணிக்கவாசகர் (திபி. 891-920)
    77. அரசன் முதலாம் பராந்தகச் சோழன் (திபி. 938-986)
    78. அரசன் ஆரியச் சக்கரவர்த்தி சேதிராயன் (திபி. 938-986)
    79. அருளாளர் திருமூலர் (திபி. 951-1040)
    80. அரசன் அருளாளர் கண்டராதித்தர் (திபி. 986-996)
    81. அரசன் அரிஞ்சயன் (திபி. 997-1007)
    82. அரசன் சுந்தர சோழன் (திபி. 1008-1014)
    83. அரசன் ஆதித்த கரிகாலன் (திபி. 1015-1016)
    84. அரசன் முதலாம் இராசராச சோழன் (திபி. 1016 -1045)
    85. தளபதி தாழிக்குமரன் (திபி. 1016 -1045)
    86. வணிகன் நான்கு நாட்டார் (திபி. 1016 -1045)
    87. வணிகன் குமாரகணத்துப் பேரூரார் (திபி. 1017 -1045)
    88. வணிகன் சேக்கிழான் (திபி. 1018 -1045)
    89. வணிகன் அஞ்ஞூற்றுவர் (திபி. 1019 -1045)
    90. வணிகன் மணிக்கிராமத்தார் (திபி. 1020 -1045)
    91. அரசன் முதலாம் இராசேந்திர சோழன் (திபி. 1043-1075)
    92. தளபதி செயங்கொண்ட மூவேந்த வேளார் (திபி. 1043-1075)
    93. அரசன் இராசாதிராச சோழன் (திபி. 1075-1086)
    94. அரசன் இரண்டாம் இராசேந்திர சோழன் (திபி. 1082-1094)
    95. இளவரசன் பாண்டியன் மாறவர்மன் (திபி. 1089-1121)
    96. அரசன் பாண்டியன் முதலாம் விசயபாகு (திபி. 1096-1151)
    97. தளபதி குருகுலத்தரையன் (திபி. 1096-1151)
    98. இளவரசி அயோத்தி இலீலாவதி (திபி. 1096-1151)
    99. இளவரசி கலிங்கத் திரிலோகசுந்தரி . 1096-1151)
    100. இளவரசன் வீரப்பெருமாள் இளவரசி சோழச் சுத்தமல்லி ஆள்வார் (திபி. 1110-1171)
    101. இளவரசி மித்திரை இளவரசன் குலசேகர பாண்டியன் (திபி. 1080-1141)
    102. அரசன் சிங்கை பரராசசேகர ஆரியக் கோமான் (திபி. 1140-1174)
    103. வள்ளல் சடையப்பர் (திபி. 1149-1174)
    104. புலவர் புகழேந்தி (திபி. 1149-1174)
    105. அரசன் விக்கிரமபாகு (திபி. 1152-1161)
    106. அரசன் இரண்டாம் கயவாகு (திபி. 1162-1171)
    107. அரசன் முதலாம் பராக்கிரமபாகு (திபி. 1195-1228)
    108. அரசன் மாகோன் மட்டக்களப்பு (திபி. 1246)
    109. அரசன் கலிங்க மாகன் (திபி. 1229-1299)
    110. இளவரசன் குளக்கோட்டன் – சோழ கங்கன் (திபி. 1229-1299)
    111. அரசன் இரண்டாம் பராக்கிரமபாகு (திபி. 1271-1306)
    112. தளபதி காலிங்கராயன் (திபி. 1298)
    113. அரசன் குலசேகரச் சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1315-1347)
    114. அரசன் நான்காம் பராக்கிரமபாகு (திபி. 1326-1350)
    115. அரசன் குலோத்துங்க சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1347-1352)
    116. அரசன் விக்கிரம சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1352-1364)
    117. அரசன் வரோதைய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1364-1382)
    118. பயணி அரபு இபன் பற்றுற்றா (திபி. 1375)
    119. அரசன் மார்த்தாண்ட சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1382-1397)
    120. அரசன் குணபூசண சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1397-1422)
    121. அரசன் விரோதைய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1422-1441)
    122. அரசன் சயவீர சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1441-1448)
    123. அரசன் ஆறாம் பராக்கிரமபாகு (திபி. 1441-1493)
    124. அரசன் குணவீர சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1448-1470)
    125. தளபதி சீனச் செங்கோ (திபி. 1445)
    126. புலவர் நல்லுருத்திரனார் அழகியவண்ணன் (திபி. 1450-1530)
    127. அரசன் கனகசூரிய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1470-1482)
    128. அரசன் செண்பகப் பெருமாள் புவனேகவாகு யாழ்ப்பாணம் (திபி. 1482-1498)
    129. அரசன் கனகசூரிய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1498-1509)
    130. அரசன் பரராசசேகரன் யாழ்ப்பாணம் (திபி. 1509-1550)
    131. அரசன் சங்கிலி யாழ்ப்பாணம் (திபி. 1551-1591)
    132. அரசன் எதிர்மன்னசிங்கன் மட்டக்களப்பு. 1569)
    133. அரசன் காசிநயினார் யாழ்ப்பாணம் (திபி. 1591-1617)
    134. அரசன் பெரியபிள்ளை யாழ்ப்பாணம் (திபி. 1617-1620)
    135. அரசன் புவிராச பண்டாரம் யாழ்ப்பாணம் (திபி. 1621-1628)
    136. அரசன் எதிர்மன்னசிங்கம் யாழ்ப்பாணம் (திபி. 1628-1637)
    137. அரசன் சங்கிலிகுமாரன் யாழ்ப்பாணம் (திபி. 1637-1650)
    138. அரசன் வீதியபண்டாரம் (திபி. 1646)
    139. தளபதி மலையாளக் குஞ்சலி வீரர் (திபி. 1647)
    140. தளபதி நாயக்க வருண குலத்தான் (திபி. 1648)

    Share
  • கண்கள் இரண்டும் இன்று உம்மைக் கண்டு பேசுமோ!

    கண்கள் இரண்டும் இன்று உம்மைக் கண்டு பேசுமோ!

    பாஸ்கர் சேஷாத்ரி

    “எக்ஸ்கியூஸ் மீ மேடம் / சார்.” முன்னால் கருப்புக் கண்ணாடியுடன் கையில் குச்சி வைத்துக்கொண்டு ஒருவர் இருந்தார்.

    “சார் என்ன வேணும் சொல்லுங்க” என்றேன்.

    “சார் என்னை அந்த பஸ் ஸ்டாண்டுகிட்ட விட்டுட முடியுமா?”

    “நிச்சயம்” எனச் சொல்லி அவர் கையைப் பிடித்துக்கொண்டேன்.

    “நான் குச்சியை வச்சுக்கலாமா?”

    “நோ பிராபளம், எனக்கு அதுதான் பலம்” என்றார்.

    “நீங்க எங்க போகணும்?”

    “பாண்டி பஜார்.”

    “பக்கத்துல தான் ஸ்டாண்ட். நாம நெருங்கிட்டோம்ல?”

    “ஆமா! எப்படிச் சரியா சொன்னீங்க?”

    “இல்லை மல்லிப்பூ வாசனை வந்தது” என்றார்.

    “உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன்”

    “அதெல்லாம் ஒண்ணுமில்லை”

    “இல்லை உங்க வேலை கெட்டுப் போயிடும் இல்லையா?”

    “இப்ப ஒன்னும் வேலை இல்லை”

    “உங்களுக்கு சுமார் நாற்பது வயசு இருக்குமா?”

    “அறுபது நெருங்கப் போகிறது” என்றேன். “எதுக்கு கேட்டீங்க?”

    “இல்லை கை மிருதுவா இருக்கு. அதான் கேட்டேன்.”

    “ஒங்களை ஒன்னு கேக்கலாமா?”

    “ம்” என்றார்

    “ஆர் யு பார்ன் விஷன்லஸ்?”

    “இல்லை. நாற்பது வயசுல ஆச்சு. ஒரு நாள் சாயந்திரம் பளிச்செனு ஒரு வெளிச்சம். என் இடது கண்ணுல அன்னிலேந்து பார்வை இல்லை.”

    “ஹௌ அபௌட் ரைட்?”

    “அதுல ஒன்னும் அப்ப பிரச்சனை இல்லை.”

    “பட் மூணு வருஷம் முன்னாடி ஒரு நாள் தூங்கி எழுந்த போது ஐ லாஸ்ட் தி ரைட் ஐ டூ .”

    “எல் ஐ சி ல இருந்தேன். கருணை அடிப்படையில் கொஞ்ச நாள் பொறுத்துக் கொண்டார்கள். பிறக்கும்போதே கண் இல்லேன்னா விஷயமே வேற சார். எனக்கு மரம் செடி கொடி சினிமா வண்ணம் எல்லாம் தெரியும் . அதைத் தெரிஞ்சு அனுபவிச்சு, கண் போறது பெரிய வேதனை சார். பை தி வே . உங்க பேரு”

    “பாஸ்கர்”

    “நான் சந்துரு . எல் ஐ சி சந்துரு என்றால் இங்க கொஞ்சம் பேருக்குத் தெரியும்.

    “உங்களைக் கஷ்டப்படுத்தறேனா கேள்வி கேட்டு?”

    “இல்லை சார். எங்க உலகத்தை புரிஞ்சிக்க முயற்சி பண்ண வேண்டாம்.”

    “ஏன் சார்? அது நரகம். எனக்கு நல்ல பார்வை உண்டு. நாற்பதைத் தாண்டியும் கண்ணாடி போடலை.

    “கேரம் போர்ட் சாம்பியன். பாடவும் செய்வேன் குட் அட் டைப்பிங். பார்வை இல்லை என்றவுடன் இட் வாஸ் ஆல் லாஸ்ட். மெண்டலி ஐ வாஸ் டௌன்.”

    “உங்களை ஒன்னு கேக்கலாமா?”

    “ம்” என்றார்

    “கண்கள் மூடி இருப்பது சுகம் எனும்போது அது பெரிய வலியில்லை எனக் கடந்து போக முடியாதா?”

    “சார். சுகம் என்ற விஷயம் கண்கள் திறந்த பின் பார்வை உண்டு என்ற ரீதியில் சொல்லப்பட்ட விஷயம். கண்களே இல்லை எனும் போது அதில் சுகம் காண முடியுமா?”

    “கண்கள் மனசோட வாயில். அதுதான் புத்தியைத் தீர்மானிக்கும். நல்லது கெட்டது என்கிற விஷயத்துக்கு அது காரணி.”

    “சார் உங்க பஸ் வரது”

    “என்னோட கொஞ்ச நேரம் இருக்க முடியுமா?” எனக் கேட்டுக் கைகளைத் தேடினார்.

    “நிச்சயம். இதில் என்ன. – பிளெஷர் இஸ் மைன்.”

    “உங்க ரொட்டீன் என்ன சார்?”

    “தேடுவது தான்!” எனச் சொல்லிச் சிரித்தார்.

    “எல்லா உருவத்தையும் நான் மனுசுல வாங்கிண்டாச்சு. நிஜம் கூட எனக்குக் கற்பனை உலகம். புரியறதா?”

    “இல்லை!”

    “எனக்கு எம் ஜி ஆர் என்றவுடன் ஒரு பிம்பம் தெரியும். ஆனால் பாஸ்கர் எப்படி என என்னால் கற்பனை பண்ண முடியாது. ஒரு உருவம் கொடுக்க முடியும் . ஆனால் அது ஒரிஜினல் இல்லை.”

    இது ஒரு வலியா எனக் கேட்க முற்படுவதற்குள் அவரே சொன்னார் .

    “இது கண்ணு உள்ளவங்களுக்கு ஒரு ரிலீப். எனக்கு இல்லை”

    “ஈர மண் வாசம் வருது இல்லை. மேகம் மூடி இருக்கா?”

    “கொஞ்சம் இருட்டா இருக்கு . அவ்வளவு தான்”

    “இதுக்குத் தீர்வே இல்லையா?”

    “எல்லாம் பார்த்தாச்சு. சாரி எல்லா டாக்டர்கிட்டயும் காட்டியாச்சு. நோ வே என்று சொல்லிவிட்டார்கள்.”

    “என் உலகம் இருட்டு. அதுல நான் யாரைத் தேடுவேன்?”

    கொஞ்சம் கழிவிரக்கம் தான். ஆனாலும் முடியல.

    “எப்படி நீங்க உலகத்தைப் பாக்கறீங்க?”

    “தெரிந்த பிம்பமோ இல்லையோ, எல்லோருக்கும் இதே சிரிப்பு தான்.”

    “ஏன்?:

    “என்னை சந்தோஷமா வச்சுக்க?”

    இனி பார்வை இல்லை என்றவுடன் நான் தயாராக இல்லாமல் போனது என் தப்பு. இப்ப கொஞ்ச நாளா என் அகக் கண் தெளிந்து போனது. இறுதி வரை இது தான் உலகம் எனத் தெரிந்துகொண்டேன். பட் ஆல் லேட்.

    ஏன் சார்? உண்மை ஒரு ப்ளாஷில் வரும் என்பதை நான் புறக்கணித்தது பெரிய தப்பு. புலன் போனா முதிர்ச்சியும் போகஸ் வரும்னு நினைக்கிறது தப்பு. எளிமையாக இதைப் பார்க்கத் தவறிவிட்டேன். இப்ப கஷ்டப்படறேன்.

    “சாரி.”

    “ஒன்னு தெரியுமா? என் பார்வை போன பின்பு என் கோபமும் அகந்தையும் அதிகமாகிப் போனது.”

    “அப்படியா சொல்றீங்க?”

    “உண்மை சுடும். உண்மையை நேசிக்கிறவங்க சூட்டைப் பொறுத்துக்க வேண்டும். நான் தப்பிக்கப் பார்த்தேன்- கைகளை விலக்கிக்கொண்டேன். ஐ ஆம் பேயிங் நவ்.”

    “திரும்பவும் எனக்குப் பார்வை தெரியுறா மாதிரி கனவுகள் வருது. இப்ப கொஞ்ச நாளா எனக்குக் கண்ணு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறேன்.”

    “ஐயோ?”

    “இந்தக் கண்ணில்லாத உலகத்தோட நான் உண்மையில் ஐக்கியம் ஆகியிருந்தா நான் சந்தோஷமா இருந்து இருப்பேன். இப்ப எனக்கு முக்கியம் சந்தோஷம். கண்கள் இல்லை.”

    “உங்க கிட்ட மொபைல் இருக்கா?”

    “இருக்கு. ஆனா போட்டவுடன் உங்கள் பெயரைச் சொல்லிப் பேசுங்கள் பாஸ்கர்.”

    “சரி சார். பஸ் வருது சார்.”

    “சீ யு” எனச் சொல்லிச் சிரித்தார் .

    என் பெயரை நினைவு வைத்துக்கொள்ளுங்கள் என அவரைப் பேருந்துக்குள் ஏற்றினேன்.

    “பாஸ்கர். உங்களுக்கு நான் ஏதோ உருவம் கொடுத்து கை கால்களை அமைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார். டூப்ளிகேட் தான். ஆனால் உங்கள் பொறுமை பெரிய அழகு .

    “கிரேட் பெர்சன்” என நான் சொன்னது அவர் காதில் விழவில்லை.

    அவர் காற்றுக்குக் கையாட்டிக்கொண்டிருந்தார்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-108

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-108

    நாங்குநேரி வாசஸ்ரீ

    108. கயமை

    குறள் 1071

    மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பாரி யாங்கண்ட தில்

    கொணத்துல மோசமானவரா (கயவரா) இருக்கவுக பாக்கதுக்கு நல்ல மனுசன்கணக்காத்தான் தெரியுவாக. மனுசங்களத் தவித்து வேற எந்த இனத்திலயும் இப்டி ஒப்பும கண்டதில்ல.

    குறள் 1072

    நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
    நெஞ்சத் தவலம் இலர்

    எப்பமும் நல்லதையே நெனைச்சி ரோசன பண்ணுதவங்களவிட எதையும் மனசுல போட்டுக்கிடாம அலையுத மோசக்காரங்க ஒருவகையில குடுத்துவச்சவகதான்.

    குறள் 1073

    தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
    மேவன செய்தொழுக லான்

    பொறத்தியார் கட்டுப்பாடு இல்லாம தம் மனசுக்குத்தக்கன ஆட்டம்போட்டு வாழுத மோசக்காரங்களும் தேவர்கள் கணக்காதான்.

    குறள் 1074

    அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
    மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்

    கொணங்கெட்ட மோசக்காரங்க தன்னையக்காட்டிலும் கேடுகெட்டவனப் பாத்தா, தாங்க ஒசந்தவுகனு நெனச்சி மண்டக்கனம் புடிச்சி அலையுவாங்க.

    குறள் 1075

    அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
    அவாவுண்டேல் உண்டாம் சிறிது

    மோசக்காரங்க ஒழுக்கசீலனா காணிச்சிக்கிடுதது பயத்தால மட்டுந்தான். அதையும்மீறி தான்  ஆசப்படுதது கெடைக்கும்னு தெரிஞ்சுக்கிட்டாலும் கொஞ்சம் ஒழுக்கமா இருக்காமாரி நடிப்பாங்க.

    குறள் 1076

    அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க் குய்த்துரைக்க லான்

    மோசக்காரங்க தான் தெரிஞ்சிக்கிட்ட ரகசியத்த வலியபோய் ஊர் முழுக்க பறை அடிக்கதால அவுங்க அடிக்கப்படுத பறைக்கு சமானம் தான்.

    குறள் 1077

    ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
    கூன்கையர் அல்லா தவர்க்கு

    கைய மடக்கி கன்னத்துல ஓங்கிகுத்தி மூஞ்சியப் பேத்துஎடுக்கவனத் தவித்து மத்தவங்களுக்கு எச்சிக்கையக்கூட ஒதற மாட்டாங்க மோசக்காரங்க.

    குறள் 1078

    சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
    கொல்லப் பயன்படும் கீழ்

    கிட்ட அண்டி சங்கடத்த சொல்லுத நேரமே இரக்கப்பட்டு ஒதவுவாக பெருமக்க. மோசக்காரனுவள கரும்பு கணக்கா சக்கயா பிழிஞ்சா தான் நாம கேட்ட ஒதவி கெடைக்கும்.

    குறள் 1079

    உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
    வடுக்காண வற்றாகும் கீழ்

    மோசக்காரனுவ மத்தவங்க திங்கதையும் உடுக்கதையும் பாத்து வயித்தெரிச்சப்பட்டு வேணும்னே குறை சொல்லிக்கிட்டே இருக்குத தெறம உள்ளவனுவ..

    குறள் 1080

    எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
    விற்றற் குரியர் விரைந்து

    சங்கடம் வருத நேரம் அதிலேந்து தப்பிச்சிகிட தன்னையே பொறத்தியார்கிட்ட விலைக்கு வித்துப்போடுத தகுதிதான் மோசக்காரங்களோட தகுதியாவும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(286)

    குறளின் கதிர்களாய்…(286)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(286)

    உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.
    -திருக்குறள் -592(ஊக்கமுடைமை)

    புதுக் கவிதையில்…

    உள்ளத்தில்
    ஊக்கமுடைமையே ஒருவனுக்கு
    உண்மையான நிலையான
    உடமையாகும்,
    செல்வம் உடைமை என்பது
    சென்றுவிடும்
    நிலைக்காமல் நீங்கி…!

    குறும்பாவில்…

    ஊக்கமுடைமையே உண்மையில் உடைமை,
    ஒருவன் சேர்த்த செல்வ உடைமையெல்லாமவனிடம்
    நிலைக்காமல் நீங்கிச் சென்றுவிடும்…!

    மரபுக் கவிதையில்…

    உலக வாழ்வில் உடைமைகளில்
    உண்மை உடைமையாய் நிலைப்பதுதான்
    நலமுடை நெஞ்சின் ஊக்கமதே
    நடைமுறை உண்மை இதுதானே,
    பலவகைப் பொருட்கள் உடைமையாகப்
    பாடு பட்டுச் சேர்ப்பதெல்லாம்
    நிலைத்தே நம்மிட மிருப்பதில்லை
    நீங்கிச் சென்றிடும் நமைவிட்டே…!

    லிமரைக்கூ..

    உண்மை உடைமைமன ஊக்கம்,
    சேர்க்கும் செல்வவுடைமை நிலைக்காது நீங்கி
    அதனால் இலையே ஆக்கம்…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    ஊக்கம் வேணும்,
    ஓலக வாழ்க்கயில
    மனுசனுக்கு
    மன ஊக்கம் வேணும்..

    ஒலகத்துல உண்மயா
    நெலச்சி நிக்கிற ஒடம
    நம்ம மன ஊக்கம்தான்..

    அதுயில்லாம நாம சேக்கிற
    சொத்துசொகம் செல்வமெல்லாம்
    உண்மயான ஒடமயில்ல,
    அதெல்லாம் நெலைக்காம
    நம்மவிட்டு நீங்கிப்போயிடுமே..

    அதால
    வேணும் வேணும்
    ஊக்கம் வேணும்,
    ஓலக வாழ்க்கயில
    மனுசனுக்கு
    மன ஊக்கம் வேணும்…!

    Share
  • Annakannan Ideas – 38

    Annakannan Ideas – 38

    How mosquitoes are biting us, little away from the reach of our hands? Mostly in back body, back arms, legs, thighs, forehead, neck… etc? I was wondering & observing this so long. If it is in front of us, we will kill them on the spot. Now, before we reach the spot, they will flee & stay safe.

    Yesterday I found the reason, when a mosquito was biting me. It’s similar to Newton discovered Gravity when he saw a falling apple .

    Mosquitoes have an ability to sense human eyes. They have a sensor to detect our vision in microseconds. Also whether the eye is active or sleepy, the direction and the concentration. So, it’s avoiding the focus point of eyes. You may notice, if we look or concentrate somewhere else, it will sit straight on top of the nose. In normal, it will prefer to bite, where we are not looking.

    How are mosquitoes able to sense the vision?

    I remember an unique feature of eyes. If someone look us from anywhere, from any distance, even we look in the opposite side, we will turn to them immediately. There is a connection / contact in between eyes.

    This eye contact exists even with animals including snakes, dogs, elephants. In general, we understand this as a power of human eyes. Humans  make eye contact with other animals. Now we have to look in reverse. Animals and other species make eye contact with one another & also with humans. This research will be really an eye opener.
    In this background, mosquito is reading human eyes to select the safe spot to bite. But, human beings don’t have the ability to read a mosquito’s eyes.

    Quote from Orkin.com:

    Male and female mosquitoes see by using their two compound eyes for vision. Compound eyes are located on each side of the adult mosquito’s head and each eye is made up on hundreds of small lenses called ommatidia. The multitude of ommatidia enables the mosquito to see from many directions at once.

    We need to create a device or sensor to detect mosquito eyes; also to create an artificial vision to send signals to mosquitoes that the human vision is active and following / focusing mosquito. If we make this, there is a chance to restrict mosquitoes.

    In another way, we can detect mosquito eyes and send a nano laser light with more blink or bright or sound; if it happened, they will not come close to the object and surrounding. This should be only observed by mosquitoes; not by human or any other species. An artificial intelligence system can easily detect mosquito eyes by it’s unique design. If we blind that eye with a sharp light, that will be the end of mosquito.

    I request biomedical scientists to take this research forward.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 1

    பழகத் தெரிய வேணும் – 1

    நிர்மலா ராகவன்

    பெண் என்றால் தியாகியா?

    ஆண் என்பவன் அடக்கி ஆள்பவன். பெண் அவனுக்கு அடங்குபவள்.

    பல்லாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட நியதி.

    ”இது இக்காலத்திற்கும் பொருந்துமா?” என்ற யோசனை எழுகிறது.

    ’காலம் மாறினால் என்ன, நாங்கள் மாற மாட்டோம்!’ என்று விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர் ஆண்கள். ஏனெனில் அடக்குவது அவர்களுக்குத்தானே சாதகமாக அமைந்திருக்கிறது!

    எப்படியெல்லாம் அடக்குகிறார்கள்?

    தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்மணி ஒருத்தி கூறினாள்: ”நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. என் கணவருக்குப் பிடிக்காது”.

    “விதவிதமான ஜாக்கெட் அணிவீர்களா?”

    “கிடையாது. அவருக்குப் பிடிக்காது”.

    “நான் திருமணத்திற்குப்பிறகு படிப்பைத் தொடரலாம், வேலை பார்க்கலாம் என்றார். ஆனால் விடவில்லை”.

    இப்படியாக, கணவருடைய விருப்பங்களுக்கு மட்டுமே மதிப்புக் கொடுத்து நடக்கும் பெண்ணுக்கு வெளிப்படையாக எதிர்ப்பது அழகாகுமோ என்ற குழப்பம். குடும்பத் தகறாறுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளவும் தயக்கம்.

    நாளடைவில், தன் சுயவிருப்பங்களை மறைத்து, மறந்ததுபோல் நடந்துகொள்ள முற்படுகிறாள். கணவருக்காகவும் குழந்தைகளுக்காகவும் நாள் முழுவதும் செலவிடுவதுதான் தான் பெண்ணாகப் பிறந்ததன் பயன் என்பதுபோல் நடக்கிறாள்.

    அவளை எவர் பாராட்டுகிறார்களோ, என்னவோ, அவளுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஒருவித அயர்ச்சிதான்.

    ’நான் என் வாழ்க்கையைப் பிறருக்காகத் தியாகம் செய்துவிட்டேன்!’ என்று சொன்னால் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். அந்தத் `தியாகி’யின் மனப்போராட்டம் எவருக்குப் புரியும்?

    சில ஆண்கள் நான்குபேருக்கு முன்னிலையில் மனைவியை அவமரியாதையாகப் பேசித் திட்டினால், தமது கௌரவம் உயர்ந்துவிட்டதென நம்புகிறார்கள். பிறரைத் தாழ்த்தினால், நாம் உயர்ந்துவிடுவோமா?

    மனைவி எதிர்ப்பு காட்டாமல், `அவர் குணம் அப்படி!’ என்று விட்டுக்கொடுக்கிறாள். இதனால் துணிச்சல் பெருக, பிற பெண்களிடமும் அப்படியே நடந்துகொள்ள முற்படுகிறார்கள் சிலர்.

    பல குடும்பத்துடன் ஒன்றாக வெளியே செல்லும்போது, தன் அனுமதி பெற்றுத்தான் ஒவ்வொரு பெண்ணும் செயல்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள் இப்படிப்பட்டவர்கள்.

    அனேகமாக, எல்லாப் பெண்களும் அடங்கிப்போய்விடுவார்கள். அபூர்வமாக ஒரு பெண் எதிர்த்தால், முதலில் கோபமும், பிறகு அச்சமும் எழும். இத்தகைய ஆண்களுக்குத் தாம் செய்யும் தவறு என்னவென்று புரிவதில்லை.

    மிருக இனங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

    கதை

    ஓர் அறுவை சிகிச்சை முடிந்து நான் வீடு திரும்பியபோது, எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி நான் அமர்ந்திருந்த நாற்காலியின்மேல் பத்திரமாக ஏறி, ஊசி குத்தியதால் மிகவும் வலித்த பாகத்திற்குச் சற்று கீழே அருமையாக நக்கிக் கொடுத்தது. (அதற்கு எப்படித் தெரியும், எங்கு ஊசி குத்தப்பட்டதென?)

    குட்டியாக இருக்கையில் என் மடியிலேயேதான் உட்கார்ந்திருக்கும். இடி இடித்தால், பயந்து ஓடிவந்து, என் மடியில் புகல் தேடும். நான் பாடும்போது, பூனையின் முதுகில் தாளம் போட, அதன் வாலும் தாளத்திற்குச் சரியாக ஆடும்! நன்றாகத் தமிழ் புரியும். `விஷமம் பண்ணினா அடி!’ என்று நான் மிரட்டியதில் புத்தகங்களைக் கிழிப்பதில்லை.

    நான்தான் தினமும் இரு பூனைகளுக்கும் (இப்போது மூன்று) ஆகாரம் போடுவேன். அது எனக்குப் பெரிய விஷயமில்லை. ஆனால், அவற்றுக்கு முக்கியம். பரஸ்பர அன்பை வளர்க்கும் ஒரு செயல். அதைவிட முக்கியம் அன்பாகப் பேசி நடத்துவது. ஒரு சிறு காகிதத்தைச் சுருட்டி தரையில் போட்டால், மிகுந்த மகிழ்ச்சியுடன் `கால்பந்து’ விளையாடும்.

    இப்போது, ’பூனை’ என்ற இடத்தில் மனைவியை வைத்துப் பாருங்கள். அவளிடம் அருமையாக நடந்துகொள்ளாது, `நான் சம்பாதித்து உனக்குச் சாப்பாடு போடுகிறேன். அதனால் நீ எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்,’ என்பதுபோல் நடத்தி, பிற ஆண்களிடம், `என் மனைவி நான் சொல்வதைத் தட்டமாட்டாள்!’ என்று பெருமை பேசுவார்கள் சிலர்.

    பெண்ணுக்கென தனி மனமே இருக்காதா? அப்படியே இருந்தாலும், அதை அடக்கினால்தான் நல்லவளா?

    வாய்ப்பு கிடைக்கும்போது, மனைவி நெருக்கமான ஓரிருவரிடம் தன் ஏக்கங்களைக் கொட்டக்கூடும். அதனால் நிலைமை என்னவோ மாறப் போவதில்லை.

    குழந்தைகளுக்காகத் தியாகம்

    ’எனக்குத்தான் ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கவில்லை. என் குழந்தைகள் கஷ்டமே படக்கூடாது.’

    நடக்கிற காரியமா?

    எவ்வளவுதான் கவனமாக வளர்க்கப்பட்டிருந்தாலும், மனிதனாகப் பிறந்த எவருமே கஷ்டமே இல்லாமல் வாழ்க்கை நடத்திவிட முடியாது.

    ’என் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக என் ஆசைகளை ஒடுக்கிக்கொண்டுவிட்டேன்!’

    இந்த மனப்பான்மையால் ஒரு தாயின் மகிழ்ச்சி குன்றிவிடும். ஏதோ ஒரு வகையில், குழந்தைகளையும் பாதிக்கும்.

    ’நான் உனக்காக எவ்வளவு செய்கிறேன்!’ என்று சுட்டிக் காட்டியபடி இருந்தால், அதுவும் ஒருவகையான வதைதான் – உணர்ச்சிபூர்வமான வதை.

    பயந்த குழந்தை குற்ற உணர்ச்சியுடன், தாய் சொல்லைத் தட்டாது நடக்க முற்படுகிறான். இதனால் தாய், மகன் இருவருக்குமே சுதந்திரம் கிடைப்பதில்லை. அவள் எண்ணியதுபோல் அவன் சிறப்படையாது போய்விட வாய்ப்புண்டு. இருவருக்குமே ஏமாற்றம்தான்.

    தியாகம் எதற்கு?

    எழுத்தாளர்களான பெண்கள் பலர், திருமணத்திற்குப் பிறகு எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் கூறும் காரணம்: `குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது! எழுதினால் என்ன கிடைக்கிறது!’

    இது தம்மையே சமாதானப்படுத்திக்கொள்ளும் முயற்சி.

    நமக்குப் பிடித்த காரியங்களைச் செய்யவும் சிறிது நேரத்தை ஒதுக்கினால், முதலில் ’சுயநலம்’ என்று நமக்கே தோன்றலாம். அல்லது, பிறர் அவ்வாறு பழி சுமத்தலாம்.

    ஆனால், ஒருவர் தன் சொந்த விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்காது நடப்பதால் சிரிப்பையே இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. அப்படியே சிரித்தாலும், அது பிறரிடம் குறைகண்டு, அதனால் ஏற்படும் அற்ப மகிழ்ச்சியால் இருக்கும்.

    ஒப்பீடும் நிம்மதியும்

    நாம் ஒவ்வொருவரும் தனிப்பிறவி. வெவ்வேறு திறமைகளைக் கொண்டு பிறக்கிறோம். பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்ளும்போதுதான் வேண்டாத குழப்பங்கள் எழுகின்றன.

    பெரிய படிப்பு படித்தால்தான் மதிக்கத்தக்கவர் என்பதில்லை.

    பெரும்பாலும், ’தான் அதிகம் படிக்கவில்லையே, பெரிய உத்தியோகத்தில் அமரவில்லையே!’ என்ற ஏக்கத்தை உள்ளடக்கி வைத்திருக்கும் ஆண்கள் வீட்டிலிருக்கும் பெண்களை அடக்கியாள்வார்கள். தங்கள் நிலையை உள்ளபடி ஏற்றால் வருத்தம் எழாது.

    இக்குணத்தைப் பெண்களிடமும் காணலாம்.

    கணவர் கல்வித் தகுதியிலோ, செல்வச் செழிப்பிலோ தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரை ஆட்டி வைப்பார்கள்.

    இருப்பினும், ஆண்கள் வீட்டில் கழிக்கும் நேரத்தைவிட அதிகமாக வெளியில் செலவிடுவதால் அதிக உளைச்சலுக்கு ஆளாகிறார்களோ, என்னவோ! நிலைமையை மாற்றமுடியாது என்று புரிந்தபின், அதை மாற்றும் வழி தெரியாது, ’உத்தியோகமே கதி!’ என்று சிலர் காலத்தைக் கழிக்கிறார்கள். இதனால் நஷ்டம் பெண்ணுக்குத்தான். கணவர் தன்னைவிட்டு ஏன் விலகுகிறார் என்று புரியாது, மனஉளைச்சலுக்கு ஆளாவாள்.

    கல்யாணமும் உல்லாசமும்

    ’அவர் எப்போதும் சிரித்த முகத்துடன், ஜாலியாக இருக்கிறார்! காரணம் — அவர் கல்யாணமே செய்துகொள்ளவில்லை!’ என் சக ஆசிரியர் ஒருவரைப்பற்றி நாங்கள் கணித்தது.

    முட்டாள்தனமாக மணவாழ்க்கையில் சிக்கி, பலரும் திண்டாடுகிறார்களே என்று பயந்து, எத்தனைபேர் ’கல்யாணமே வேண்டாம்’ என்று வைராக்கியமாக இருக்கிறார்கள்!

    இல்லறத்தில் எப்போதும் ஒருவர் கை மட்டுமே ஓங்கி இருந்தால் இன்னொருவருக்கு கசப்புதான் மிஞ்சும். இல்லையேல், எந்தவித எதிர்பார்ப்புமின்றி வாழ்க்கையைக் கடத்தும் வெறுமை.

    அன்பு என்பது…

    ’சாப்பிட்டாயா? தூங்கினாயா?’ என்று விசாரிப்பதுடன் அன்பு நின்றுவிடுவதில்லை.

    கணவனோ, மனைவியோ, மற்றவருடைய தனிப்பட்ட ஆசைக்கும் மதிப்பு கொடுத்து, இயன்றவரை தானும் அதற்கு உறுதுணையாக இருந்தால்தான் அன்பும் மரியாதையும் நிலைக்கும்.

    (தொடரும்….

    Share