Blog

  • அமெரிக்காவுக்கு அக்கினிப் பரீட்சை

    அமெரிக்காவுக்கு அக்கினிப் பரீட்சை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கா என்ற நாடு நிறுவப்பட்டு கிட்டத்தட்ட 350 வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவுக்கு இப்போது ஒரு அக்கினிப் பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. இந்த அக்கினிப் பரீட்சையில் அமெரிக்கா தேறுமா அல்லது இதுவரை அதற்கு இருந்துவந்த உலகிலேயே ஒரு சிறந்த ஜனநாயக நாடு என்ற பெயரை இழந்துவிடுமா என்ற கேள்வி அமெரிக்கர்கள் பலர் மனதில் இப்போது இருக்கிறது.

    2016-இல் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே அந்த முடிவு அமெரிக்க மக்களின் உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்துவதாக இல்லை என்று பலர் குரல் எழுப்பினர். இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அமெரிக்கத் தேர்தல் விதிகளின்படி இரண்டு கட்சி வேட்பாளர்களில் (அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான் இருக்கின்றன; எப்போதாவது தனிப்பட்ட ஒருவர் கட்சி ஒன்றை ஆரம்பித்து அந்தக் கட்சிச் சார்பில் போட்டியிடுவதுண்டு;  அவர்களில் யாரும் இதுவரை வெற்றிபெற்றதில்லை. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் ஓட்டுக்களைப் பிரிப்பதற்குத்தான் அவர்கள் பெற்ற ஓட்டுக்கள் உதவியிருக்கின்றன) யாருக்கு electoral college-இல் அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவர்தான் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார்.  இந்த electoral college என்ன என்று பார்ப்போம்.

    ஒவ்வொரு மாநிலத்தின் ஜனத்தொகையைப் பொறுத்து அந்த மாநிலத்திற்கு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க தேர்தல் ஓட்டுக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஜனத்தொகை அதிகம் உள்ள கலிஃபோர்னியா மாநிலத்திற்கு 55 தேர்தல் ஓட்டுக்கள்; அளவிலும் ஜனத்தொகையிலும் சிறியதான நியூஹேம்ஷையர் மாநிலத்திற்கு 4 தேர்தல் ஓட்டுக்கள்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தக் கட்சிக்கு மக்களின் பெரும்பான்மை ஓட்டுக்கள் கிடைக்கின்றதோ அந்தக் கட்சி வேட்பாளருக்கு அந்த மாநிலத்தின் அத்தனை தேர்தல் ஓட்டுக்களும்  கிடைக்கும். அடுத்த கட்சிக்கு எதுவும் இல்லை. ஒரு சில மாநிலங்களில் இரு கட்சிகளுக்கும் போட்டி தீவிரமாக இருக்கும்.  அங்கு ஒரு கட்சிக்கு மிகச் சிறிய வித்தியாசத்தில் பெரும்பான்மை கிடைத்தாலும் அந்த மாநிலத்தின் எல்லா தேர்தல் ஓட்டுக்களும் அந்தக் கட்சிக்குக் கிடைத்துவிடும். 2016-இல் இப்படித்தான் நடந்தது.  ட்ரம்ப்புக்கு electoral college தேர்தல் ஓட்டுக்களில் ஹிலரியைவிட அதிக ஓட்டுகள் கிடைத்தன; ஹிலரிக்கோ பொதுமக்கள் வாக்குகளில் ட்ரம்ப்பைவிட முப்பது லட்சம் வாக்குகள் அதிகமாகக் கிடைத்தன. இருந்தாலும் ட்ரம்ப்தான் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி ஆனார். இதனால்தான் இந்தத் தேர்தல் விதியை மாற்றி நாடு முழுவதும் பொதுமக்கள் அளிக்கும் ஓட்டுக்களில் பெரும்பான்மை யாருக்குக் கிடைக்கிறதோ அவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவ்வப்போது குரல்கள் எழும்பும்.  ஆனாலும் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.

    இப்படி மொத்த ஜனங்களின் ஓட்டுக்களில் பாதிக்குமேல் பெறாமல் பதவிக்கு வந்த ட்ரம்ப்பின் மேல் பலருக்கு அதிருப்தி நிலவி வருகிறது. இருந்தாலும் அவருடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை 40% சதவிகிதத்திலிருந்து குறையவில்லை என்கிறார்கள். ஒபாமா ஏழைகளுக்காகவும் அமெரிக்காவின் பிம்பத்தை நல்லபடியாக உயர்த்துவதற்காகவும் என்னென்ன செய்தாரோ அவை எல்லாவற்றையும் ஒபாமா செய்தார் என்பதற்காகவே மாற்றிவருகிறார் ட்ரம்ப். அமெரிக்க நாடு வெள்ளை இனத்தவருக்கே என்ற வாதத்தை மறைமுகமாகக் கூறி வருகிறார். வெள்ளை இன அமெரிக்கர்களுக்கு இந்த வாதம் மிகவும் பிடிக்கிறது. அமெரிக்கா இப்போது பொருளாதாரத்தில் உலகிலேயே முதன்மை நிலையில் இருப்பதற்கு முதலில் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக இங்கு கொண்டுவரப்பட்ட அடிமைகளின் உழைப்பும் அதன் பிறகு உலகின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் பங்களிப்பும் காரணம் என்பதை இந்த வெள்ளை இனவாதிகள் மறந்துவிடுகிறார்கள். வெளியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் அமெரிக்காவை விட்டுப் போய்விட்டால் அமெரிக்காவின் வளம் அனைத்தும் தங்களுக்கே என்று இவர்கள் நினைக்கிறார்கள். அமெரிக்காவின் பன்மைத்தனம்தான் அமெரிக்காவின் சிறப்பம்சம், அதன் வலிமை என்று இவர்கள் நினைப்பதில்லை. அமெரிக்காவில் வெள்ளை இன மக்களின் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டுவருவார் என்று ட்ரம்ப்பின் பின்னால் இவர்கள் கானல் நீரை நோக்கி ஓடுபவர்கள்போல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு தலைமுறையில் வெள்ளை இனத்தவர் சிறுபான்மையினராக ஆகிவிடுவார்கள் என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது.

    இவர்கள் கொடுக்கும் தைரியத்தில் ட்ரம்ப்பும் தான்தோன்றித்தனமாக, தான் அமெரிக்காவுக்கே அரசன்போல் நடந்துவருகிறார். ரஷ்யாவின் புதின் போல், சீனாவின் ஷி போல், துருக்கியின் எர்டோவன் போல், இந்தியாவின் மோதிக்கு இருக்கும் வாய்ப்பு போல், சவூதி அரேபியாவின் சல்மான்கான் போல், வட கொரியாவின் கிம் ஜாங்-அன் போல் தான் வாழ்நாளுக்கும் அமெரிக்காவின் அதிபராக இருந்துவிட முடியாதா என்று ஏங்குகிறார். உலக அரங்கிலும் அமெரிக்காவின் பல நட்பு நாடுகளுடன் எதையும் சிந்திக்காமல் மனதில் தோன்றுவதைப் பேசி வருகிறார், நடந்து வருகிறார். அமெரிக்கா உலகிலேயே பணக்கார நாடு,  ராணுவ பலம் வாய்ந்த நாடு என்பதால் பல நாட்டுத் தலைவர்களும் ட்ரம்ப்பைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல் நடந்துகொள்கிறார்கள். உள்நாட்டிலும் 40 சதவிகித மக்களின் ஆதரவு இருப்பதாலும் வெளிநாடுகளிலும் அமெரிக்காவின் பலத்திற்குப் பயந்து பல தலைவர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டிருப்பதாலும் ட்ரம்ப்பின் அட்டகாசங்களுக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

    இதற்கிடையில் 2020 தேர்தலில் தன்னை எதிர்க்கக்கூடிய ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஜோ பைடன் முதலிடம் வகிக்கலாம் என்று பயந்த ட்ரம்ப் அவர்மேல் எப்படியாவது சேற்றைப் பூசிவிட வேண்டும் என்று நினைத்தார். துணை ஜனாதிபதியாக இருந்த பைடனின் மகன் உக்ரைன் நாட்டின் ஒரு ஊழல் மலிந்த, எரிசக்தி கம்பெனியின் உயர்பதவியில் இருந்தார்; அந்தக் கம்பெனியில் வேலை பார்த்தாலும் அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை.  பைடனையும் அவரையும் விசாரிக்க வேண்டும் என்றும், அப்படி விசாரித்தால்தான் உக்ரைனுக்குக் கொடுப்பதாக அமெரிக்கப் பாராளுமன்றம் தீர்மானித்த 391 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அளிப்பதாகவும் 2019 ஜூலை மாதம் 25-ஆம் தேதி உக்ரைன் அதிபர் ஸெலின்ஸ்கியைத் தொலைபேசியில் கூப்பிட்டுக் கூறியிருக்கிறார்.  அமெரிக்கப் பாராளுமன்றம் அனுமதி கொடுத்த பிறகு அந்நிய நாடுகளுக்கு ராணுவ உதவியை பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமலேயே நிறுத்திவைப்பது அமெரிக்கச் சட்டப்படி குற்றம்.  நிறுத்திவைத்தது எப்படியோ உள்தகவலாளி (whistle blower) ஒருவர் மூலம் வெளியே வந்துவிட்டது.

    ஏற்கனவே ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்கப் பல முறை முயன்ற ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்கள் இப்போது ட்ரம்ப்பின் இந்த அடாவடிச் செய்கையை முன்வைத்து அவரைப் பதவி இறக்க விசாரணை (impeachment) செய்து எப்படியாவது பதவியிலிருந்து இறக்கிவிட வேண்டும் என்று முயல்கிறார்கள்.  இவர்களுடைய முயற்சி வெற்றி பெற்றால் அமெரிக்கா சட்டப்படி நடக்கும் நாடு, ஜனாதிபதியானாலும் சட்டத்திற்கு மேற்பட்டவர் அல்ல என்பது நிரூபணமாகும். இதுதான் அமெரிக்காவுக்கான இப்போதைய அக்கினிப் பரீட்சை.

    முதலில் ட்ரம்ப் உக்ரைன் அதிபரோடு தான் பேசவேயில்லை என்றார். பிறகு பேசியதாகவும் பைடனைப் பற்றியும் அவருடைய மகனைப் பற்றியும் விசாரிக்கச் சொல்லவில்லை என்றும் விசாரித்தால்தான் ராணுவ உதவி என்று நிபந்தனை போடவில்லை என்றும் கூறிவந்தார்.

    இப்போது எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிட்ட பிறகு இந்தச் செய்திகள் எல்லாம் பொய்ச் செய்திகள் (fake news) என்று சொல்லிவருகிறார். (இவரிடமிருந்துதான் இந்திய அரசியல் தலைவர்களும் fake news என்ற வார்த்தையைக் கற்றிருக்கிறார்கள்.)  தான் மட்டுமே உண்மை பேசுவதாகவும் மற்றவர்கள் எது கூறினாலும் அது பொய் என்றும் ட்விட்டரில் கூறுவது ட்ரம்ப்பின் பொதுவான வழக்கம்.  இப்போதும் அதைத்தான் செய்துவருகிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையால் இதைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. சில தினங்களுக்கு ஒரு முறை ‘உண்மை எப்போதும் வெல்லும்’ என்று விளம்பரம் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.

    எப்படியாவது ட்ரம்ப்பின் இந்தக் குற்றத்தை நிரூபித்துவிட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சிக்காரர்கள் முயன்றுகொண்டிருக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அமெரிக்காவின் கீழவையில் ஏற்கனவே ட்ரம்ப் பதவி இறக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  இருந்தாலும் மேலவை அங்கத்தினர்கள் 100 பேரில் 67 பேர் ஓட்டுப் போட்டால்தான் ஜனாதிபதியைப் பதவி இறக்கம் செய்ய முடியும்.

    செனட்டில் 47 ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்களும் 53 குடியரசுக் கட்சி அங்கத்தினர்களும் இருக்கிறார்கள்.  47 ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்கள் ஓட்டுப் போடத் தயாராக இருக்கிறார்கள்; குடியரசுக் கட்சியில் இப்போதைக்கு யாரும் பதவி இறக்க ஓட்டைப் போடத் தயாராக இல்லைபோல் தெரிகிறது.  இத்தனைக்கும் இன்று (ஜனவர் 27, 2020) ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த போல்ட்டன் என்பவர் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி (இது இன்னும் வெளியாகவில்லை; மார்ச் 17 அன்று வெளியாகிறது.) ஒரு பத்திரிக்கைக்குக் கிடைத்து ட்ரம்ப்பிற்குப் பாதகமான செய்திகள் நிறையக் கிடைத்திருக்கின்றன. அப்படியும் குடியரசுக் கட்சி செனட்டர்கள் யாரும் பதவி இறக்கத்திற்கு ஓட்டுப் போடத் தயாராக இல்லைபோல் தெரிகிறது. நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் ட்ரம்ப்பை எப்படியாவது இறக்கிவிட வேண்டும் என்று தங்களாலான எல்லா முயற்சிகளையும் செய்துவருகின்றன. கீழவையின் பதவி இறக்கத் தலைவர் தன் வாதங்களை முடிக்கும்போது, ‘இப்போது உலகம் முழுவதும் அமெரிக்காவைத்தான் ஜனநாயகத்திற்கு உதாரணமாகப் பார்க்கிறது. அதனால் இப்போது ட்ரம்ப் மட்டுமல்ல, அமெரிக்காவே விசாரணைக்குள்ளாகி இருக்கிறது’ என்று முடித்தார். பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒருவர், ‘உலகிற்கே ஜனநாயக வழிகாட்டியாக இருந்த, உண்மை அதிகாரம் மக்களிடம் இருந்த,  அமெரிக்கக் குடியரசு இருந்த இடம் தெரியாமல் காற்றில் கரைந்துவிடும் அபாயம் இருப்பதுபோல் இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார்.

    அமெரிக்காவுக்கு இது சோதனைக் காலம். ட்ரம்ப்பை குடியரசுக் கட்சி செனட்டர்கள் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்த பிறகும் பதவியிலிருந்து இறக்கவில்லையென்றால், இந்த அக்கினிப் பரீட்சையில் அமெரிக்கா தோற்றுவிட்டால் உலகிற்கே இது நல்ல சகுனமில்லை.

    Share
  • திருப்பூர் இலக்கிய விருது 2020  

    திருப்பூர் இலக்கிய விருது 2020  

    திருப்பூர் இலக்கிய விருது 2020  (Tiruppur Literary Award  2020)

    படைப்பிலக்கியம், கலை இலக்கிய, சமூக மேம்பாட்டுப் பணிக்காக, சிறந்த படைப்பாளிகளுக்கு திருப்பூர் இலக்கிய விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர். 2020ஆம் ஆண்டு விழாவில்  28 படைப்பாளிகள் இதன் கீழ் கவுரவிக்கப்படுகிறார்கள்.

    விழா நாள் : 9/2//20  ஞாயிறு, பிற்பகல் 36  மணி.

    இடம்: திருப்பூர் புத்தகக் கண்காட்சி அரங்கம்,  கேஆர்சி செண்டர், டைமண்ட் திரையரங்கு எதிரில், மங்கலம் சாலை , திருப்பூர்

    2020 திருப்பூர் இலக்கிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்:

    கோவை முனைவர் சித்ரா

    ஈரோடு செழியன் கோ. (கலைக்கோவன்)

    திருப்பூர் கனல்

    பொள்ளாச்சி வாமனன்

    சக்திமங்கலம்  உமையவன்

    சென்னை கணேச குமாரன்

    செஞ்சி தமிழினியன்

    கம்பம் மானசீகன்

    ஈரோடு சந்திரா மனோகரன்

    கோவை  கா சு வேலாயுதம் -பத்திரிகையாளர்

    கோவை மு. வேலாயுதம் –பதிப்பாளர்

    திருநெல்வேலி ராமபாண்டி-பேராசிரியர்/ செயல்பாட்டாளர்

    திருப்பூர் ஓவியர் பித்தன் நடராஜன்

    கோவை கவிஜி

    சென்னை கு. விநாயகமூர்த்தி

    அயலகம் :

    சிங்கப்பூர் சித்ரா ரமேஷ்

    ஆஸ்திரேலியா ஆ சி கந்தராஜா

    இலங்கை ஜே. வஹப்தீன்

    புதுவை எழுத்தாளர்கள்

    சுந்தர முருகன் 

    தெ. குப்புசாமி

    டேவிட் பிரபாகர்

    கு.அ. தமிழ்மொழி

    கு. சிவமணி

    வளவ துரையன்

    திருப்பூர் இலக்கிய   விருது 2020 குழுவுக்காக:  (துருவன் பாலா  99941 49922). தபால் முகவரி : 44, ராமையா காலனி பிரதான சாலை , திருப்பூர் 641 602/ email: tiruppurawards@gmail.com

    திருப்பூர் இலக்கிய   விருது 2020 குழு. (துருவன் பாலா, எஸ்.ஏ காதர் , சுப்ரபாரதிமணியன்)

    Share
  • ஆகாயப் பந்தலிலே

    ஆகாயப் பந்தலிலே

    பாஸ்கர் சேஷாத்ரி

    ஊஞ்சல் எழுப்பும் கிறீச்சிடும் சப்தங்களுக்கு
    என் சுவாசம் இசையே கை கொடுக்கும்
    மேலே சென்று கால் தேய்த்து முன்னே சென்றாலும்
    தானாய் தன்னிச்சையாகப் பின்செல்லும் சுகத்தின் உச்சம்
    பழைய நினைவு அசை போட பின் பக்கமே கண்
    ஒரே சீரான பயணம் -தூக்கத்தின் ஒரே கனவு போல
    கட்டிலும் மேஜையும் சுற்றி ஆட்டம் போடும்
    குதூகலம் கண்களை மூட, அறையே நடுங்கியோடும்
    ஆட்டங்களே இங்கு கோலோச்சும் ராஜ்ஜியம்
    எதிரில் வரப் பூனையும் நடுங்கும், எலியும் பம்மும்
    ஊஞ்சல், கவலைகளுக்குக் கல்லறை
    இலவச இன்பச் சுற்றுலா
    ஆடி ஆடி ஓய்ந்த பின்னர் சப்தம் என்றும் ஓயாது
    செவிகள் தீர்மானிக்கும் வாழ்வு இது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 107

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 107

    நாங்குநேரி வாசஸ்ரீ

    107. இரவச்சம்

    குறள் 1061

    கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும்

    இருக்கத ஒளிச்சிவையாம குடுக்குத கொணம் ஒடையவங்ககிட்ட கூட, ஒண்ண குடு னு கையேந்தாம இருக்குதது கோடி மடங்கு நல்லது.

    குறள் 1062

    இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்

    இந்த ஒலகத்தப் படைச்சவன் சிலபேர பிச்சை எடுத்துதான் வாழணும்ங்குத நெலமையில வச்சிருந்தாம்னா அவனும் அதே நெலைமையில கெட்டொழிஞ்சி திரியட்டும்.

    குறள் 1063

    இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
    வன்மையின் வன்பாட்ட தில்

    வறுமையால வருத சங்கடத்த ஒழைக்காம கையேந்தி போக்கிக்கிடலாம்னு நெனையுததக் காட்டிலும் கொடும வேற இல்ல.

    குறள் 1064

    இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
    காலும் இரவொல்லாச் சால்பு

    பொழைப்புக்கு வழியத்துப் போனாலும் மத்தவங்கிட்ட கையேந்த நெனையாத கொணம் இந்த ஒலகமே கொள்ளாத அளவு பெருமயக் கொண்டது.

    குறள் 1065

    தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
    துண்ணலின் ஊங்கினிய தில்

    நீத்த கஞ்சி யின்னாலும் சொந்த ஒழைப்புல சம்பாரிச்ச துட்டுல குடிச்சா அதக் காட்டிலும் சந்தோசம் வேற ஒண்ணுமில்ல. ‘

    குறள் 1066

    ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
    கிரவின் இளிவந்த தில்

    பசுமாட்டுக்கு தண்ணிவேணும்னு கையேந்தி நின்னாலும், அப்டி கேக்குத நாக்குக்கு அதவிட கேவலம் வேற ஒண்ணுமில்ல.

    குறள் 1067

    இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
    கரப்பார் இரவன்மின் என்று

    கையேந்திதான் நிக்கணும்னாலும் ஒளிச்சிவச்சிக்கிட்டு இல்லைன்னு சொல்லுதவன்கிட்ட கையேந்தி நிக்காதீகன்னு கையேந்தி நிக்கவங்க எல்லாரையும் கையேந்தி கேட்டுக்கிடுதேன்.

    குறள் 1068

    இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
    பார்தாக்கப் பக்கு விடும்

    இருக்கத ஒளிச்சுவச்சிக்கிட்டு இல்லன்னு சொல்லுத கல்நெஞ்சுக்காரன் மேல கையேந்துதல்னு சொல்லுத தோணி மோதிச்சுன்னா அது ஒடைஞ்சு நொறுங்கிப் போவும்.

    குறள் 1069

    இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
    உள்ளதூஉம் இன்றிக் கெடும்

    கையேந்தி நிக்குதவங்கள நெனச்சா மனசு உருகுது. ஒளிச்சுவச்சிக்கிட்டு இல்லன்னு சொல்லுதவங்களப் பாத்தா உருகுத மனசு இல்லாம அழிஞ்சே போவுது.

    குறள் 1070

    கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
    சொல்லாடப் போஒம் உயிர்

    மனசில்லாதவனோட இல்லைங்குத சொல்ல கேக்குத நேரமே கையேந்துதவன் உசிரு போவுதே அப்டி சொல்லுதவன்உசிரு மட்டும் எங்ஙன ஒளிஞ்சுகிட்டு கெடக்குமோ?

    Share
  • படக்கவிதைப் போட்டி – 243

    படக்கவிதைப் போட்டி – 243

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பிரேம்நாத் திருமலைச்சாமி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 242-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 242-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. அய்மான் பின் முபாரக்கின் புகைப்படக்கருவி எழிலாய்ப் பதிவுசெய்திருக்கும் இந்தப் படத்தைப் படக்கவிதைப் போட்டி 242க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    அன்பின் வழியது உயிர்நிலை” என்று பேராசான் வள்ளுவர் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில் அன்பில் பி(இ)ணைந்திருக்கும்  கவிக்குலங்கள் நம்மை நெகிழவைக்கின்றன!

    கவிஞர்களே! இந்தக் கவிக்குலத் தோழர்களைப் பாடுக பாட்டே என்று சொல்லி உங்களை அன்போடு அழைக்கின்றேன்!

    *****

    ”கடுவனே! வெட்கங்கொண்ட மந்தியினை நீ வேட்கையுடன் சேர்ந்து குறிஞ்சிக் காவியம் தளிர்க்கச் செய்திடுவாய்” என்று குறிஞ்சிப்பண்ணில் கவிதை பாடுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    குறிஞ்சிப் பண்

    வண்டு சுழன்றிடும் சோலைமிடைக் காதல்
    கண்டு உயிர்வாழ்ந்து பரிணமிப்பாய்
    வெட்கங் கொண்ட கொடிச்சியினை – கடுவனே
    வேட்கையுடனே சேர்ந்திருப்பாய்!

    கொட்டும் சாரல் வெக்கைத் தவிர்க்கக்
    கானவன் தோள்களில் சாய்ந்திடுவாய் – அது
    வானவர் உலகையே காட்டுமென்ற
    வள்ளுவன் வாக்கை மெய்ப்பிப்பாய்!

    நேற்று இன்று நாளையின்றி
    நித்தமும் நிலைக்க வைத்திடுவாய்
    காற்றிடை நுழையாக் காதல் கொண்டு – குறிஞ்சிக்
    காவியம் தளிர்க்கச் செய்திடுவாய்

    *****

    நல்ல கவிதையை யாத்தளித்த தோழருக்கு நன்றி!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    மனிதன் மட்டும்…

    குரங்கி லிருந்து பிறந்தவன்தான்
    குணமதில் மனிதன் மாறிவிட்டான்,
    மரத்தை உறைவிடம் ஆக்கியேதான்
    மனம்போல் வாழ்ந்திடும் குரங்கினமே,
    மரத்தின் கிளையி லிருந்தாலும்
    மரத்தை யழிக்க நினைப்பதில்லை,
    தரத்தி லுயர்வாம் மனிதனவன்
    தாழ்கிறான் மரங்கள் தனையழித்தே…!

    தம் மனம்போல் வாழ்ந்திடும் குரங்கினங்கள் மரத்தினை அழிப்பதில்லை. ஆனால் பகுத்தறிவு பெற்றதால் குரங்கினும் தரமுயர்ந்துவிட்ட மனிதனோ மரங்களை அழித்தொழிக்கின்றான் என்று மனிதனின் மடமையைச் சுட்டிக்காட்டும் கடமையைச் சரியாய்ச் செய்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • (Peer Reviewed) பேரரசுச் சோழர்களின் நீர் மேலாண்மை உத்திகள்

    (Peer Reviewed) பேரரசுச் சோழர்களின் நீர் மேலாண்மை உத்திகள்

    மு. கயல்விழி
    உதவிப்  பேராசிரியர், தமிழ்த் துறை, பச்சையப்பன்  மகளிர்  கல்லூரி, காஞ்சிபுரம்.
    மின்னஞ்சல்: kayalarul22@gmail.com

    திட்டச்சுருக்கம்

    சோழர்கள் வேளாண் நலன் சார்ந்த ஆட்சியாளர்கள். இவர்கள் காலத்தில் வேளாண்மையில் பெரும் புரட்சி ஏற்பட்டது. காவிரிக் கரையின் இரு மருங்கும் நன்கு உயர்த்தப்பட்டன. காவிரி நதிகளிலிருந்து பல புதிய வாய்க்கால்கள் வெட்டப்பட்டு அவை மூலமாக ஆற்று நீர், ஏரிகளிலும் குளங்களிலும் பாய்ச்சப்பட்டன. சோழர் காலத்தில் ஏரிகளிலிருந்து புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன, பழைய கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. நதிகளின் குறுக்கே பல புதிய தடுப்பணைகள் கட்டப்பட்டன. குளங்ளும் தூர் வாரப்பட்டன.   சோழர்கள் நன்னீரைத் தேக்கி வைத்து விவசாயம் செழிக்கப் பாடுபட்டனர் “சோழ நாடு சோறுடைத்து” என்பதற்கு சோழர்களின் நீர்ப் பாசன உத்திகளே காரணங்கள் ஆகும்.

    முன்னுரை 

    “மேழிச் செல்வம் கோழைபடாது” என்பார்கள் பெரியோர். இம் மேழிச் செல்வத்தை மையமாகக் கொண்ட மக்கள் வாழ்ந்த நாடு சோழ நாடு. இது வளமையும் செழுமையும் தன்னகத்தே கொண்டது. இது வற்றாத காவிரி நதி பாய்ந்து வளப்படுத்தும் பூமி. நைல் நதி   எவ்வாறு எகிப்து நாட்டுக்கு உயிராய்த் திகழ்ந்ததோ அவ்வாறே காவிரி நதியும் சோழ நாட்டுக்கு உயிராய்த் திகழ்ந்தது. இதனால் காவிரியைப் புகழப் போந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார் தன் பட்டினப்பாலையில் “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி” என்று புகழ்கின்றார். பொங்கிப் பாய்ந்த இந்தக் காவிரியை ஆற்றுப்படுத்தி இதை நன்முறையில் விவசாயத்துக்குப் பயன்படுத்திய பெருமை சோழ மன்னர்களைச் சாரும். அவர்கள் பல்லாற்றானும் முயன்று இந்நீரைக் கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கும் குளங்களுக்கும் பாய்ச்சி நன்முறையில் நீரைத் தேக்கி வேளாண் வளம் செழிக்கப் பாடுபட்டனர்.

    சோழ மன்னர்கள், சோழ நாடு மட்டுமன்றி பருவ மழையை மட்டுமே நம்பியிருந்த தொண்டை நாட்டிலும் விவசாயம் செழிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு நீர் நிலைகளைக் காத்தனர். சோழ நாடு வளமுடன் திகழ்ந்ததற்குச் சோழ மன்னர்களின் சிறப்பான திட்டமிட்ட நீர்ப் பாசன உத்தியே காரணமாகும். நீரை நன்முறையில் தேக்குவதிலும் அதை முறையாகப் பயிர்களுக்குப் பயன்படுத்தச் செய்வதிலும் சோழ மன்னர்களுக்கு இணையாக இந்தியாவில்  வேறு  அரசர்களைக் காணவியலாது (சோழர்களின் சமகால ஆட்சியாளர்களான சாளுக்கியர்கள் போர்களில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டினர். சேரநாடு, இயற்கையாகவே நீர் வளம் நிறைந்த பகுதியாகும். பாண்டிய நாடு, வானம் பார்த்த பூமி என்பதால் அவர்கள் வேளாண்மைக்கு அதிக அக்கறை  காட்டவில்லை. எனவே சோழரைப் போன்று பிற அரசர்கள் வேளாண்மைக்கு அதிகம் முக்கியத்துவம் நல்கினாரில்லை). சோழர்களின் சிறந்த நீர் மேலாண்மை முறையால் வேளாண்மை செழித்தது, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது, நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது, மக்கள் நிம்மதியாய் வாழ்ந்தனர்.

    நீர்ப்பாசன நிர்வாகம் 

    நீர்ப் பாசன மேலாண்மை என்பது நன்னீரை  ஒரு துளியேனும் வீணாக்காமல் நன்முறையில் வேளாண்மைக்குப் பயன்படுத்தி வேளாண் வளம் செழிக்கச் செய்தலாகும். நீர்ப் பாசன மேலாண்மையை நன்கறிந்த சோழர்கள், அதை நன்முறையில் செயல்படுத்தி வெற்றி கண்டனர். இயற்கையாய்க் கிடைக்கும் நீரை நன்கு பயன்படுத்தி வேளாண்மை வளம் பெறச் செய்வதில் சோழர்களுக்கு ஈடு இணை ஒருவரும் இலர். சோழர் காலத்தில் அவர்களின் ஆட்சியின் கீழ் தொண்டை நாடு இருந்தது. சோழ நாடு ஆற்று நீர்ப் பாசனத்தை மையமாகவும், தொண்டை நாடு கிணறு மற்றும் ஏரி நீர்ப் பாசனத்தையும் நம்பியிருந்தன. சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் யாவற்றிலும் பாரபட்சம் பாராமல் விவசாயத் திட்டங்களைச் செயல் படுத்தி வந்தனர்.

    அக்காலத்தில் ஏரிகள், குளங்கள், கிணறுகள், கால்வாய்கள், ஆறுகள் யாவற்றையும் முறையே பராமரிப்பது இன்றியமையாததாயிற்று. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏரி வாரியத்தவர், இப்பணியைச் கிராமங்களில் செய்து வந்தனர். பல பகுதிகளில் இந்நீர் பாசனத்தைக் கண்காணிப்பதற்காக பிரத்தியேக வரிகளும் விதிக்கப் பட்டன. இதற்காகப் பொது மக்களும் நன்கொடையைத் தாராளமாக வழங்கினர் (SII.Vol:6.No:294).  இது தவிர்த்து 1 மா நெல் விளைச்சலுக்கு, 2 மரக்கால் நெல்லும் இதற்கு பொதுமக்கள் ஏரி வாரியத்துக்கு வழங்கினர். இவ்வாறு வழங்கப்பட்ட வரிக்கு “ஏரி ஆயம்” என்று பெயர் (SII.Vol:7.No:805). குளங்களைப் பராமரித்தல், ஏரிகளின் கரைகளைக் கண்காணித்தல், கால்வாய்களை நிர்வகித்தல் போன்ற பணிகளை ஏரி வாரியத்தவர் முறையுடன் செய்து வந்தனர். இதனால் நீர் வீணாகாமல் முறையாக நிலங்களைச் சென்றடைந்தது. விவசாயத்துக்குத் தொண்டு செய்வதில் சோழ மன்னர்கள் மிகவும் முனைப்புடன் செயல்பட்டனர். மன்னர்கள் தவிர அரசு அலுவலர்களும் ஊர் பிரமுகர்களும் தன்னார்வலர்களும் நீர்ப் பாசன உத்திக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர் என்பதற்குச் சான்றுகள் உள.

    ஆற்றுநீர்ப் பாசனம் 

    தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்ட நீர்ப் பாசன முறை, ஆற்று நீர்ப் பாசன முறையாகும். காவிரி, தென்பெண்ணை, பாலாறு, சேயாறு, வேகவதி போன்ற ஆறுகள் பாய்ந்து நிலங்களை வளப்படுத்தின. அக்காலத்தில் காவிரி ஆற்றின் கரைகள் நன்கு பலப்படுத்தப்பட்டன காவிரிக் கரையின் இரு மருங்கும் நன்கு உயர்த்தப்பட்டன. (ARE.No:11/1911). பல புதிய கிளை ஆறுகளும் இக்காலத்தில் வெட்டப்பட்டன. வீரசோழன் வடவாறு, மதுராந்தகன் வடவாறு, மண்ணியாறு போன்ற ஆறுகள் புதியதாக வெட்டப்பட்டன, தஞ்சாவூருக்கு வடக்கே ஓடும் வீரசோழன் வடவாறும், திருப்பனந்தாளுக்கு வடக்கே ஓடும் மதுராந்தகன் வடவாறும், முதலாம் பராந்தகனால் (கி.பி.907-53) வெட்டப்பட்டன.

    இது தவிர திருவைக்காவூர், திருப்புறம்பியம், திருவாய்ப்பாடி, திருப்பனந்தாள், பந்தணைநல்லூர் வழியாகப் பாய்ந்தோடும் மண்ணியாறு, முதலாம் பராந்தகனால் திருத்தி அமைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மற்றும் கோனேரிராஜபுரம் வழியாக ஓடும் கீர்த்திமான் ஆறு, முதலாம் இராஜராஜனால் (கி.பி. 985-1014) வெட்டப்பட்டது. குடமுருட்டியில் பிரியும் முடிகொண்டான் ஆறு, முதலாம் இராஜேந்திர சோழனால் (கி.பி.1012-44) வெட்டப்பட்டது (ARE.No:75/1927-28). திருவாரூர் மாவட்டம் திருமணஞ்சேரிக்கு அருகிலுள்ள வீரசோழன் ஆறு, வீரராஜேந்திரனால் (கி.பி.1063-70) வெட்டப்பட்டது (SII.Vol:8.No:243). மேலும் குத்தாலத்துக்கு அருகிலுள்ள விக்கிரமனாறு, விக்கிரம சோழனால் (கி.பி.1118-36) வெட்டப்பட்டது. இவை தவிர தடுப்பணைகள் பல கட்டப்பட்பட்டு, நீர் தேக்கப்பட்டது. திருவரங்கத்துக்கு அருகிலுள்ள கோவிலடியில் காவிரிக்கு குறுக்கே ஒரு பேரணை, வீர இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

    ஆற்றுக் கால்வாய்கள் 

    நதிகளிலிருந்து பல புதிய வாய்க்கால்கள் வெட்டப்பட்டு, அவை மூலமாக ஆற்று நீர் ஏரிகளிலும் குளங்களிலும் பாய்ச்சப்பட்டன. சோழர் காலத்தில் பழைய கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. பொதுவாக வற்றாத ஜீவ நதியாகத் திகழ்ந்த காவிரி நதியிலிருந்து கால்வாய்கள் பல வெட்டப்பட்டு, நீர் கொண்டுவரப்பட்டன. இந்தக் கால்வாய்கள் ஆண்டு முழுவதும் ஏரி வாரியத்தால் முறையாகப் பராமரிக்கப்பட்டன. பல கால்வாய்கள் அவற்றை வெட்டிய சோழ மன்னர்கள் பெயரிலே அழைக்கப்பட்டன. இராஜராஜன் வாய்க்கால், திருச்சி மாவட்டம் திருமழபாடியில் வெட்டப்பட்டது (SII.Vol:15No:644).  அவரது மகனான இராஜந்திர சோழன் வாய்க்கால், இதே மாவட்டத்திலுள்ள கீழ்ப்பழுவூரில் வெட்டப்பட்டது. (SII.Vol:3.No:71).  மேலும் அன்பில் என்ற கிராமத்தில் இவனது பெயரிலே மற்றொரு வாய்க்காலும் வெட்டி, நீர் கொண்டு வரப்பட்டது (SII.Vol:8.No:192).  சோழன் மூன்றாம் இராஜராஜன் (கி.பி.1216-56) காலத்தில் திருச்சி மாவட்டம் திருவானைக்காவில் பிள்ளைக்கொல்லி வாய்க்கால் வெட்டப்பட்டது (SII.Vol:3.No:76).  ஆந்திராவில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருச்சானூரில் வேள்குல பீமன் வாய்க்கால் வெட்டப்பட்டது. (SIIVol:13.No:36).

    இவை தவிர  பல புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907), ஆதிச்ச வாய்க்காலை வெட்டி, நீர் கொண்டு வந்தான். முதலாம் பராந்தக சோழன் காலத்தில் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உத்தமசீலி வாய்க்கால் வெட்டப்பட்டது (SII.Vol:3.No:133). முதலாம் இராஜராஜன் திருச்சியில், புகழ் மிக்க உய்யக்கொண்டான் வாய்க்காலை அமைத்தான். (ARE.No:24/1925). திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசத்தில் பராந்தக சோழன் பரமேஸ்வர வாய்க்காலை வெட்டி, பாலாற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்தான் (ARE.No:160/1940). இதே மாவட்டம் உக்கலில் இரண்டாம் இராஜேந்திர சோழன், பராக்கிரம சோழ வாய்க்காலை வெட்டினான் (ARE.No:160/1940). முதலாம் இராஜராஜன், வேலூர் மாவட்டம் திருமால்பூரில் விமலாதித்த வாய்க்காலை வெட்டினான் (SIIVol:13.No:30).  திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகிலுள்ள பெருவள வாய்க்கால் மற்றும் இதே ஊரில் பைங்கணி வாய்க்கால்களும் இவன்  காலத்தில்தான்  வெட்டப்பட்டன (SII.Vol:2.No:5).

    ஏரிப் பாசனம் 

    சோழர் காலத்தில் ஏரிப்பாசனம் சிறப்புற்றது. மற்ற பாசன முறைகளை விட ஏரிப்பாசன முறை சிறப்பானது, பாதுகாப்பானது, எளிதானது. எனவே சோழ மன்னர்கள் நாடு முழுவதுமுள்ள பல ஏரிகளைப்  புதுப்பித்தும் தேவைப்படும் இடங்களில் புதிய ஏரிகளை வெட்டுவித்தும் சிறப்பாகப் பணியாற்றினர். சோழ மன்னர்கள் பலர், தம் பெயரில் புதிய ஏரிகளை அமைத்தனர். விழுப்புரம் மாவட்டம் உலகபுரத்தில் கண்டராதித்த ஏரியைக் கண்டராதித்த சோழன் (கி.பி.950-57) வெட்டினான் (ARE.No:140/1919).   திருச்சி மாவட்டம் திருமழப்பாடியில் செம்பியன் மாதேவ ஏரியை செம்பியன் மாதேவி என்ற அரசி வெட்டினாள் (SII.Vol:5.No:644). காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திலுள்ள ஏரியை மதுராந்தக சோழன் (கி.பி.970-85)  வெட்டினான். இதே மன்னன் பாண்டிச்சேரியிலுள்ள திருபுவணியிலும் தன் பெயரில் ஓர் ஏரியினை வெட்டுவித்தான் (ARE.No:192/1919). திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசத்தில் சுந்தரப் சோழப் பேரேரி, குந்தவைப் பேரேரி என்ற இரு ஏரிகளை குந்தவை என்ற சோழ இளவரசி வெட்டினாள் (SII.Vol:3.No:147).  முதலாம் இராஜேந்திர சோழன் தன் வட இந்திய வெற்றியை நினைவுகூருமுகமாய் பெரம்பலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ கங்கம் என்ற ஏரியை ஏற்படுத்தினான்.

    முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120) சித்தூருக்கு அருகிலுள்ள புங்கனூரில் இராஜேந்திர சோழப் பேரேரியை வெட்டினான். (SII.Vol:3.No:205).  இதே மன்னன் பாபநாசத்துக்கு அருகே முனியூரில் ஒரு ஏரியை வெட்டினான் (ARE.No:540/1906). சிதம்பரம் வட்டம் வீராணத்தில் தமிழகத்தின் மிகப்  பெரிய வீராணம் ஏரியை முதலாம் பராந்தகன் வெட்டினான். (ARE.No:615/1920). இவன் காலத்தில் வேலூர் மாவட்டம் சோளிங்கபுரத்தில் சோழவாரிதி ஏரி வெட்டப்பட்டது (Epi.Gra.Ind.No:3.P:91). இதே மன்னன் விண்ணமங்கலம் ஏரியையும், (SIIVol:2.No:380). திருவண்ணாமலை மாவட்டம் சோதியம்பாக்கம் ஏரியையும் வெட்டினான் (SII.Vol:3.No:11).   இவன் காலத்தில் குளித்தலைக்கு அருகேயுள்ள நங்கவரம் ஏரியும் (SII.Vol:8.No:651), திருக்கோவிலூரில் புத்தேரியும் வெட்டப்பட்டன (SII.Vol:7.No:798). முதலாம் இராஜராஜன் புதுக்கோட்டை மாவட்டம் திருவேழ்ப்பூர் ஏரியை வெட்டினான், பாண்டிச்சேரியிலுள்ள பாகூர் ஏரியும் இக்காலத்தில்தான் வெட்டப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் கீழ்ப்பழுவூரில் உள்ள பன்மகேஸ்வரப் பேரேரி இக்காலத்தில் வெட்டப்பட்டது (SII.Vol:5.No:724). முதலாம் இராஜராஜன் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஏரியை வெட்டுவித்தான் (ARE.No:355/1917). புகழ்பெற்ற செம்பரம்பாக்கம் ஏரி மூன்றாம் இராஜராஜன் காலத்தில் வெட்டப்பட்டது (ARE.No:191/1930). பிற்காலச் சோழர்கள் காலத்தில் சித்தூருக்கு அருகேயுள்ள மேகலாசப் பல்லி ஏரியும், யோகி மல்லாவரத்து நாராயண புத்தேரியும் வெட்டப்பட்டன.

    சோழர் காலத்தில் ஏற்கெனவே இருந்த பல ஏரியின் கரைகள் உயர்த்தப்பட்டன. முதலாம் இராஜராஜன் காலத்தில் பரமேஸ்வரப் பேரேரியின் கரையை அம்பலக்கூத்தன் என்பவன் உயர்த்தினான் (ARE.No:191/1977). மேலும் நரசிங்க மங்கலத்து ஏரியை அருணிதிக் கலியன் என்ற அரசு அதிகாரி புனரமைத்தான் (SII.Vol:3.No:106). புயலால் உடைந்த திருக்காஞ்சி ஏரிக்கரையை இவ்வூர்த் தலைவனே தன் சொந்தச் செலவில் புனரமைத்தான் (ARE.No:215/1919). ஏரிகள் மூலம் நல்ல பாசன வசதி பெறவேண்டும் என்பதற்காகப் பல ஏரிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதற்காகும் செலவை அந்தந்த ஊர்க் கோயில்களே ஏற்றுக்கொண்டன. சான்றாக திருவள்ளூர் மாவட்டம் திருக்கச்சூரில் உள்ள ஏரியைப் புனரமைக்கும் பணியை அவ்வூர்க் கோயிலே ஏற்றுக்கொண்டது (ARE.No:295/1909).

    சில சமயங்களில் ஏரிகளிலிருந்து புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. இது நிலங்கள் அதிக பாசன வசதி பெறவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. சான்றாகத் திருவாய்ப்பாடி கிராமத்தில்  உள்ள ஏரியிலிருந்து புதிய வாய்க்கால் வெட்டப்பட்டது. அதற்காகும் செலவை ஈடுகட்ட, அவ்வூர் தரிசு நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. இதன் மூலம் புதிய நிலங்கள் பாசன வசதி பெற்றன (ARE.No:88/1931-32).  சோழர் காலத்தில் அரசும் அரசு அலுவலர்களும் தவிர, தனி மனிதர்களும் நீர்ப் பாசனத்திற்குத் தொண்டுகள் பல புரிந்துள்ளனர். சான்றாகப் பதக்கம் என்ற ஊரில் ஏரியின் குமிழியை அவ்வூர்ப் பிரமுகன் புஷ்ப மாணிக்க செட்டி    என்பவன் கட்டுவித்தான் (ARE.No:171/1942). விழுப்புரம் மாவட்டம் பெருமுக்கல் கிராமத்தில் உள்ள ஏரியின் தூம்பைக் காக்கு நாயகன் என்பவன் கட்டுவித்தான். வேலூர் மாவட்டம் ஒழுகூர் ஏரியின் தூம்பை மாவலி வாணராயன் என்ற சிற்றரசன் கட்டுவித்தான். காவேரிப் பாக்கத்தில் உள்ள ஏரியின் தூம்பை வீர வினோதச் சம்புவராயன் கட்டுவித்தான் (ARE.No:390/1905).   ஏரிகளில் உள்ள தூம்புகள் கல்லிலே அமைக்கப்பட்டன. அவை நீர் வெளியேறுவதைத் தடுத்தன. மேலும் வெளியேறும் நீரின் அளவையும் கட்டுபடுத்தின. சோழர் காலத்தில் ஏரிப் பாசனம், உள்ளூர் ஏரி வாரியத்தின் மூலம் செம்மையான முறையில் நிர்வகிக்கப்பட்டது.

    குளத்து நீர்ப் பாசனம் 

    சோழர் காலத்தில் குளத்துப் பாசன முறை சிறப்புடன் காணப்பட்டது. பல ஊர்களில் ஆற்று நீர்க் கால்வாய்கள் மூலம் குளங்களை  அடைந்து அவை விவசாயத்துக்கும் கால்நடைகளுக்கும் பொதுமக்கள் நீர் அருந்தவும் பயன்பட்டன. குளங்களில் இருந்து நீர் வெளியேறுவதைத் தடுப்பதற்காக “மாண்டுகள்” (தடுப்புகள்)  அமைக்கப்பட்டன. சோழர் காலத்தில் பல புதிய குளங்கள் வெட்டப்பட்டன. சான்றாகப் புதுக்கோட்டை மாவட்டம் திருவெறும்பூரில் முதலாம் பரந்தக சோழன் கவிர் குளம் என்ற குளத்தை வெட்டினான் (SII.Vol:17.No:336). பல குளங்களுக்கு மதகுகளும் மாண்டுகளும் அமைக்கப்பட்டன. ஏரிகளுக்குத் தூம்பு போல், குளங்களுக்கு மாண்டுகள் செயல்பட்டன. சான்றாக மூன்றாம் இராஜராஜன் காலத்தில் விழுப்புரம் மாவட்டம் துரிஞ்சம் பூண்டியிலும், சிறுவாங்கூரிலும் உள்ள குளங்களில் புதிய மாண்டுகள் அமைக்கப்பட்டன. அவை தடுப்புகள் போன்று செயல்பட்டன.

    குளங்களிலிருந்து நீரை வெளியேற்றும் கால்வாய்கள் கற்களால் கட்டப்பட்டன. இவை குழாய்கள் போன்று காணப்பட்டன. இந்த குளங்களை முறையாகப் பராமரிக்க, அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர் (SII.Vol:8.No:652). பொதுவாக ஏரி வாரியத்தவர்களே இக்குளங்களை நிர்வகித்தனர். குளங்களில் உள்ள வண்டல்களை அகற்ற, தனிப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். சான்றாக திருவண்ணாமலை மாவட்டம் காப்பளூரில் குளத்து வண்டல் எடுக்க. பராந்தக சோழன் காலத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டனர் (ARE.No:284/1939).  இப்பணிக்காக அவர்களுக்குக்  கருவிகளும் ஓடங்களும் வழங்கப்பட்டன. கோடைக் காலங்களில் குளங்களில் நீர் வற்றிய பின் அவற்றின் அடியில் தேங்கும் வண்டல்கள் எடுக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டன. இதற்குக் “குளவடை” என்று பெயர்.

    கிணற்றுப் பாசனம் 

    கிணற்றுப் பாசனம் தொண்டை மண்டலத்தில் அதிகம் காணப்பட்டது. பருவ மழையை மட்டும் நம்பிய பகுதிகளில் கிணற்றுப் பாசனம் காணப்பட்டது. கிணற்று நீர்மட்டம் உயர வேண்டும் என்பதற்காக ஏரிகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டது. சால்கள் மூலம் நீர் இறைக்கப்பட்டுப் பயிரிடப்பட்டன. ஏற்றம் இறைக்கும் வழக்கம்  நாடு முழுவதும்  பரவலாகக் காணப்பட்டது.

    முடிவுரை 

    சோழர் காலம், தமிழகத்தின் ஈடு இணையில்லாப் பொற்காலமாகும். பசி, பட்டினி, பஞ்சம் போன்றவை மக்களை அண்டாமல் சோழ மன்னர்கள் காத்தனர். நாட்டின் வளர்ச்சிக்கு வேளாண்மையே அடிப்படை என்பதால் அதை வளர்ப்பதில் அதிக முனைப்பு காட்டினர். வேளாண்மைக்கு அடிப்படையான நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கக் கூடாது என்பதற்காக ஏரிகள், குளங்கள் வெட்டி, அவற்றைப் பாசனத்துக்கு நன்முறையில் பயன்படுத்தினர். சோழர்கள் நீர்ப் பாசன உத்தியைப் போன்று சிறப்பான முறையை வேறு எந்நாட்டிலும், எக்காலத்திலும் காணவியலாது. சோழர்கள் அரசு வேளாண் நலன் சார்ந்த அரசாகத் திகழ்ந்தது. சோழ மன்னர்கள் கால வெள்ளத்தில் மறைந்தாலும், அவர்கள் வெட்டிய ஏரிகளும் கால்வாய்களும், குளங்களும் இன்றும் நிலைத்து நின்று அவர்கள் புகழைப் பறைசாற்றி வருகின்றன. சோழர்களின் அரசு மக்கள் நலன் சார்ந்த அரசு (Benevolent Government) என்பதற்கு அவர்களின் நீர் மேலாண்மை உத்தியே சாலச் சிறந்த சான்றாகும்.

    சுருக்கம் (Abbreviations)

    1.ARE-Annual Report on Indian Epigraphy

    2. SII-South Indian Inscriptions

    3. Epi.Gra.Ind-Epigraphica Indica

    பார்வை நூற்பட்டியல்

    1. Neelakanta Sastri.K.A,(1975), The Cholas, University of Madras, Chennai.

    2. Neelakanta Sastri.K.A,(1939), Studies in Cola History and Administration, University of Madras, Chennai.

    3. Appadorai. A. (1990).Economic Conditions in South India (1000-15000), University of Madras, Chennai.

    4.பிள்ளை.கே.கே. (1977) ,சென்னை,தமிழ் நாட்டு வரலாறு- மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

    5.சதாசிவப் பண்டாரத்தார்.தி.வை,( 2008), பிற்காலச் சோழர் சரிதம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

    6.பிள்ளை.கே.கே. (1997) ,சென்னை, சோழர் வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

    7.பாலசுப்பிரமணியம்.மா (1979), சென்னை, சோழர்களின் அரசியல் கலாச்சார வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சோழ மன்னர்களின் நீர் மேலாண்மை முறைகள் குறித்த செய்திகளை ஆய்வாளர் சிறப்புற எடுத்துரைத்துள்ளார். மேலும் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட ஏரிகள், கால்வாய்கள் முதலியனவற்றையும் வரிசைப்படுத்தியுள்ளார். சோழர்கள் காலத்து நிர்வாகம், வாழ்வியல் முதலியனவற்றை ஆய்வு செய்வோருக்கும் இக்கட்டுரை துணைநிற்கும்.  


     

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 8

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 8

    தி. இரா. மீனா                            

     அமுகே ராயம்மா

    அமுகே தேவய்யாவின் மனைவி அமுகே ராயம்மா. இவருக்கு வரதாணியம்மா என்றொரு பெயருமுண்டு. இவர்களது தொழில் ஆடை நெய்வதாகும். அமுகேஸ்வர இலிங்கா என்பது இவரது முத்திரையாகும். சமூக விமர்சனம், மனிதர் நடத்தை ஆகியவற்றை முதன்மைப்படுத்தி இவர் வசனங்கள் அமைகின்றன.

    1.“இகசுகத்திற்காக இலிங்கத்தை மறந்து அலைகின்ற
    பிறவிகளை என்னென்பது ஐயனே?
    இலிங்கத்தில் நம்பிக்கையில்லை
    ஜங்கமத்தில் அன்பில்லை மனவுறுதியில் தெளிவில்லை
    சிவனைக்  கண்டேனெனச் சொல்லும் மூடரின் முகம்
    பார்ப்பதும் அவர்வழிச் செல்வதும் பெரும்பிழை அமுகேஸ்வரனே”

    2.“அறிய முடிபவரை பற்றற்றவரென்பேன்
    ஒழுக்கமறிந்தவரை வெல்லுதற்கு அரியவரென்பேன்
    போற்றுதல் தூற்றுதலுக்கு அப்பாற்பட்டவரை மகிழ்வாளனென்பேன்
    தத்துவமறிந்தும் குழந்தை போலானவரை
    சிவஞானி என்பேனய்யா அமுகேஸ்வரனே“

    3.“விண்ணில் சஞ்சரிப்பவனுக்கு கம்பின் தயவெதற்கு ஐயனே?
    மண்ணைத் தொடாமல் நடப்பவனுக்கு பூமியின் தயவெதற்கு ?
    தன்னை அறிந்தவனுக்கு ஞானியரின் உரையெதற்கு ?
    துறவிக்கு மங்கையரின் தயவெதற்கு ?
    அமுகேஸ்வரனை அறிந்தால் மற்றவரின் தயவெதற்கு ஐயனே?”

    4. “ஞானமென்பது தெருவின் பொருளா?
    பையில் நிரப்பிக் கொள்ளும் கொள்ளா?
    பையில் இருக்கும் சீரகமா?
    செக்கினுள் இருக்கும் புண்ணாக்கா?
    ஞானமென்பது வெளிப்படையாக அறிய இயலாதது
    வெற்றி தோல்வியில் வெற்றி பேசப்படக் கூடாதது
    இது பற்றற்றவரின் பண்பென்பேன்
    அமுகேஸ்வர இலிங்கனென்பேன்”

    5. “மூக்கிழந்தவன் கண்ணாடியைப் பார்ப்பதேன்?
    கையற்றவனுக்கு குதிரை ஏற்றமெதற்கு?
    முடவன் ஏணியில் ஏறலாமா?
    பக்தி, ஞானம், பற்று ஆகியவை அற்றவருக்கு
    இஷ்டலிங்கமெதற்கு் அமுகேஸ்வரனே?”

    6. “வேடமேற்று உணவிற்கு அலையும்
    வேடதாரிகளைக் கண்டு மனம் வெட்கும்
    இலிங்கமறியாது அதோடு இணைந்தோம் என்பவரைப்
    பார்க்க விரும்பாதென் மனம்
    உபசரித்தேனெனும் அறிவற்றவரைச் சரணர் வி்ரும்புவாரோ?
    அமுகேஸ்வரரின் இலிங்கம் அறியாதவரை இலிங்கம்
    உணர்ந்தவரென எப்படிச் சொல்வேன் ஐயனே ?”

    அநாமிகா நாச்சய்யா

    மாருடிகே என்னும் கிராமத்தைச் சேர்ந்த இவர் செக்காட்டும் தொழில் செய்தவர். ’நாச்சய்யபிரிய சென்னராமன்” என்பது இவரது முத்திரையாகும்.

    “பசிக்கு அழிவில்லை புலனிச்சைக்குக் குலமில்லை
    இறப்பிற்கு மதிப்பில்லை,ஆசைக்கு அளவில்லை
    அநாமிக நாச்சய்யாபிரிய சென்னராமய்யன்
    அனைத்திலிருந்தும் விலகியவன்”

    அங்கசோகினலிங்கதந்தே

    இவருடைய முத்திரை “போக பங்கேஸ்வர லிங்கா” என்பதாகும். தத்துவப் பார்வை, அருவ-உருவ நிலை இணைப்பு என்ற தன்மையில் இவர் வசனங்கள் அமைகின்றன.

    “மரத்திற்குள்ளிருக்கும் அக்னி தானே எரிவதுண்டா?
    கல்லினுள்ளிருக்கும் ஒளி தானே சுடர் தருவதுண்டா?
    வஞ்சகனின் பக்தி இழிவானவனின் பற்றுறுதி
    அறியாமல் மெய்யை அறிய இயலாது
    உண்மை, பொய் சாட்சி அறியாமல்
    மெய்யை அறிய இயலாது
    குரு, இலிங்கம், ஜங்கமம் அறியாமல் காட்டும் பக்தி
    ஓட்டைப் பாத்திரத்தின் நீர்,கயிரற்ற பொம்மை
    கண்களற்ற பார்வை போல வீணானது.
    உச்சியில் வேருள்ள செடிக்கு நீர் விட இயலுமா?
    எண்ணத் தெளிவு வேண்டும் போக பங்கேஸ்வரனுடைய
    ஐக்கியம்தான் சரணரின் இன்பம்”

    அறிவின மாரிதந்தே

    பசவேசரின் சீடரான இவர் சிவசாரணர் கூட்டத்தில் மிக்க மதிப்புடையவராகப் போற்றப்பட்டவர். இவருடைய பெயருடன் கூடிய அடைமொழியைப் போலவே இவர் வசனங்கள் அறிவு பற்றியதிகம் பேசுகின்றன. குரு, இலிங்கம், ஜங்கமம், சைவம், வீரசைவம் குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. ’சதாசிவ மூர்த்திலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    1. “உருவம் நிலைத்துத் தெரியும் சலனமற்ற நீரில்,
    பிரதிபிம்பத்திற்கு இடமுண்டோ நீர் அசைந்தால்?
    அறிவு அலைபாய்ந்தால் அதிலுறையும்
    உருவத்திற்குக் கட்டுப்பாடு இருக்குமோ?
    இந்த இருநிலையின் விடுகதை தெரியும்
    ஒளியான சதாசிவமூர்த்திலிங்கத்தில்”

    2. “மனதின் செயலின்றி கல், மரத்திற்குப் பின்னால்
    வழிபடுவது கடவுளாகுமா?
    சதாசிவமூர்த்தியின் லிங்கமாக
    இருப்பதை அறிகின்ற அறிவுதான் மெய்”

    3. “மணமுடைய மலரைப் பறிப்பதன்றி
    மணமான தென்றலைப் பறிக்க முடியுமா?
    ஆன்மாவைக் கொண்ட உடலை அறியலாம்
    உடலை உள்ளடக்கிய ஆன்மாவை?
    கடவுள் அங்கமெடுப்பின் அறியலாம்
    அங்கமே கடவுளானால்?
    முதல், இடை, கடை என்பது மலருக்குண்டு, மணத்திற்கு?
    அறிவதற்கும் அறிந்ததற்கும் இட்டலிங்கம்
    அடையாளமாக சதாசிவமூர்த்தி இலிங்கவடிவமுண்டு”

    4. “கூர்முனை மழுங்கினால் வாளின் உடலென்ன செய்யும்?
    அறிவு மழுங்கினால் செயல்பாடு என்ன செய்யும்?
    ஒழுக்கம் தவறினால் உயர்வு அடையாளமென்னசெய்யும்?
    மனம், வாக்கு, மெய் தீயசெயல்
    செல்வத்துக்கும் பக்திக்கும் கேடு.
    இது போல சதாசிவமூர்த்திலிங்கம் அறியவேண்டும்”

    5. “பாலற்ற பசுவிடம் கன்றை விட்டால்
    உதைக்குமேயன்றி பால்புகட்டுமா?
    அறிவற்றவனால் செயல்பட முடியுமா?
    செயலென்பது பசு,அறிவென்பது பால்
    வேட்கையென்பது கன்று
    இம்மூன்றையும் உணர்ந்தவன் சதாசிவமூர்த்தி இலிங்கம்.”

    –  [தொடரும்]

    Share
  • குத்தாலம் குமார்

    குத்தாலம் குமார்

    பாஸ்கர் சேஷாத்ரி

    நேற்று நான் வாசுவைப் பார்த்தேன். பெரிய நட்பில்லை என்றாலும் ஒரு பத்து வருடப் பழக்கம் உண்டு.

    வேகத்துக்குப் பேர் போனவர். சமையல் கலையில் கெட்டி. அவனுக்கு உள்ள வியாதி பேசிப் பேசி எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டும் என்பதுதான். அவனுக்கு அது குறை இல்லை. ஆனால் பலருக்கு அவன் பேச்சு பிடிக்காது. கேட்கப் பொறுமையும் இருக்காது. அந்தக் கல்யாண வீட்டில் அவன், பெண்ணுக்குக் கொஞ்சம் தள்ளிய உறவாம்.

    பக்கத்து இலை. அவனுக்குப் பொறுமையில்லை.

    “சிங்கப்பெருமாள் கோயில்ல ஒரு காபி சாப்பிட்டேன், முடியல!” என்றான்

    இப்ப பாஸ்ட் வண்டி டயத்தை மாத்திட்டான் தெரியுமா?

    நேற்று இரண்டு மாடு அடிபட்டுப் போச்சு

    “சார், உங்க இலை கிழிஞ்சிருக்கு”.

    “பரவாயில்லை. டிபன் தானே!” என்றேன்

    இப்பல்லாம் பிளாஸ்டிக் இலையாமே?

    “அப்பிடியா?” என்றேன்

    சரி. அப்பிடியே எதனா கல்யாண காண்ட்ராக்ட் சொல்லேன். நார்த் இந்தியனும் செய்வேன் கரண்டி பிடிச்ச கை. சும்மா இருக்க முடியல. பணமும் இல்லை, பையன் ஏதோ சம்பாதிக்கிறான்.

    நிச்சயம் சொல்றேன். உன் நம்பரைச் சொல்லு.

    தரேன். உனக்கு ரொட்டிக்காரன் தெரு சம்பத் ஞாபகம் இருக்கா?

    கொஞ்சம் யோசிச்சா தெரியும்.

    அவனும் என்னை மாதிரி. ஆனால் கை நீளம். நடுவுல கொஞ்சம் வீட்டு புரோக்கர் வேலையும் செய்றேன். இப்பல்லாம் ஒரு பெர்சென்ட் கமிஷன். ஆனா பார்டிங்க ரொம்ப கெட்டி. கழட்டி விட்டுட்ரானுங்க.

    ஆமா செல் போன் ரிப்பேர் பண்றவன் யாரானா தெரியுமா?

    தெரியும். நம்பர் வேணுமா?

    அப்புறம் வாங்கிக்கறேன்.

    ஆமா வாசு சார், உன் ஒய்ப் லக்ஷ்மி என்ன பண்றா?

    அவ போய் எட்டு வருஷம் ஆச்சு. ஹை சுகர். அவ அப்பன் சொத்து.

    சரி உங்க ஊர்ல எங்கயோ பிளாஸ்டிக் ரோடு போடறங்காளமே. எந்த தெரு?

    அவன் பேசிக்கொண்டு இருந்தான். நான் அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

    அவனை ‘வாட்டர்பால் வாசு’ என்பார்கள் எங்கள் தெருவில்.

    அவன் பேசுவது அவனை மறக்கத்தான் என்பது இப்போது புரிந்தது.

    வாசு சார் என அவர் முதுகில் கை வைத்தபோது அவர் சிலிர்த்ததில் நான் அவரை வாங்கிக்கொண்டேன்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 106

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 106

    நாங்குநேரி வாசஸ்ரீ

    106. இரவு

    குறள் 1051

    இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
    அவர்பழி தம்பழி அன்று

    குடுக்குத அருகத இருக்கவருகிட்ட கையேந்துதல தப்பு ஒண்ணுமில்ல. அப்பம் ஒளிச்சிவச்சிக்கிட்டு இல்லன்னு சொன்னாவன்னா பொல்லாப்பு அவருக்குதானேதண்டி கையேந்துதவனுக்கு இல்ல.

    குறள் 1052

    இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
    துன்பம் உறாஅ வரின்

    கையேந்தி கேக்குத பொருள மனசு சங்கடமில்லாம அந்தாக்ல தந்தாகன்னா அப்டி கையேந்துததும் சந்தோசம் தான்.

    குறள் 1053

    கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
    றிரப்புமோர் ஏஎர் உடைத்து

    ஒளிவுமறைவு இல்லாம பொறுப்பா தருதவுக முன்ன நின்னு வறும அண்டுத நேரம் பொருளக் கேட்டு கையேந்துததும் அழகு தான்.

    குறள் 1054

    இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
    கனவிலும் தேற்றாதார் மாட்டு

    வச்சிக்கிட்டே இல்லன்னு கைய விரிக்குத குணத்த கனவுல கூட நெனையாதவுக கிட்ட கையேந்துததும் மத்தவுகளுக்கு தானம் தருத ஒசந்த கொணத்துக்கு சமானம் தான்.

    குறள் 1055

    கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
    றிரப்பவர் மேற்கொள் வது

    தாருங்கன்னு கையேந்தி நிக்கவங்க ஏன் அதச்செய்யுதாகன்னா இல்லன்னு சொல்லாம கொடுக்கவுக இந்த ஒலகத்துல இருக்கதாலதான்.

    குறள் 1056

    கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
    யெல்லா மொருங்கு கெடும்

    வச்சிக்கிட்டு இல்லன்னு சொல்லுத நோய் இல்லாதவுகளப் பாத்தாலே வறுமையால கையேந்த நெனையுதவங்களோட சங்கடமெல்லாம் அழிஞ்சு போவும்.

    குறள் 1057

    இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
    உள்ளுள் உவப்ப துடைத்து

    எளக்காரஞ்செய்யாம தாழ்ச்சியா நெனையாம பொருளக் குடுக்குதவங்களக் கண்டா கையேந்தி நிக்கவங்க மனசுக்குள்ளார சந்தோசம் பொங்கும்.

    குறள் 1059

    ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
    மேவார் இலாஅக் கடை

    பொருள் இல்லன்னு கையேந்தி நிக்கவங்க அறவே அத்துப்போவுத நேரம் குடுக்குத மனசு உள்ளவங்களுக்கு எங்ஙன புகழ்ச்சி உண்டாவும்.

    குறள் 1060

    இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
    தானேயும் சாலும் கரி

    இல்லைன்னு வெரட்டுதவன்கிட்ட பொருளக் கேட்டு கையேந்துதவன் கோவப்படக் கூடாது. தன் நெலைம அவனுக்கும் இருக்கலாம்னு புரிஞ்சிக்கிடுததுக்கு வறும உதாரணமா இருக்கே.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 65 (ஆதியாய் )

    சேக்கிழார் பா நயம் – 65 (ஆதியாய் )

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ஆதியாய்   நடுவுமாகி  அளவிலா  அளவு   மாகிச்
    சோதியாய்   உணர்வுமாகித்   தோன்றிய  பொருளு மாகிப்
    பேதியா  ஏகமாகிப்   பெண்ணுமாய்   ஆணு   மாகிப்
    போதியா  நிற்கும்   தில்லைப்   பொதுநடம்   போற்றி போற்றி

    சொற்பிரிப்பு :
    ஆதி ஆய்  நடுவும் ஆகி அளவு இலா அளவும் ஆகி
    சோதி ஆய் உணர்வும்  ஆகி தோன்றிய  பொருளும் ஆகி
    பேதியா   ஏகம்  ஆகி  பெண்ணும் ஆய் ஆணும் ஆகி
    போதியா   நிற்கும்  தில்லை  பொது நடம்  போற்றி, போற்றி!

    சொற்பொருள் :

    திருவாரூர் அடியார்களை இறைவன் எடுத்துக் கொடுத்த அடியை முதலாகக் கொண்டு ‘’திருத்தொண்டத்தொகை‘’என்றமுதல்நூலை சுந்தரர் இயற்றினார்!

    அதனைச் சேக்கிழார் விளக்குகிறார். அப்போது தில்லைவாழ் அந்தணர் போற்றிய சிவப்பரம்பொருளைஇரண்டு பாடல்களால்  தாமும் போற்றுகிறார். இப்பாடல்கள் மூலம்  சைவ சித்தாந்தத்தின் வழியே சிவப்பரம்பொருளின் திருவருள் தோற்றத்தை சிவஞானப் பிழிவாகவே சேக்கிழார் அருளுகின்றார்.

    இப்பாடலின் பதவுரை :

    ஆதியாகியதுடன் நடுவும் ஆகி; அளவிலா அளவும் ஆகி – பாசஞான பசுஞானங்களால் அளந்தறியப்படாது. சிவஞானத்தால் அறியப்படும் பொருளாகி; சோதியாய் உணர்வும் ஆகி – காட்டும் அறிவாகிய ஒளியும், அது காட்டக் காண்கின்ற அறிவுமாகி; தோன்றிய பொருளும்……ஏகம் ஆகி – இருவகை மாயைகளினின்றுந் தோன்றிய எப்பொருளும் ஆகி அவையனைத்தினும் அத்துவிதமாய்க் கலந்ததொரு பொருளேயாகி; பெண்ணும் ஆய் ஆணும் ஆகி – பெண்ணும் ஆய் அதனோடு இணைந்த ஆணுமாகி; போதியா நிற்கும்…… போற்றி – போதித்து நிற்கும் தில்லையின் பொதுவிலே ஆடுகின்ற திருக்கூத்தினைப் புறத்தும் அகத்தும்  இருமுறை வணங்குவோம்   என்பதாகும்!

    தில்லைப்பொதுமன்றத்துள் இயங்கியும் இயங்காமலும் ஆடுகின்ற இறைவன் எவ்வாறெல்லாம் ‘ஆகி’க்  காட்சியளிக்கின்றார் என்பதை இப்பாடலில் உள்ள ஆகி என்ற எச்சவினை ஆறுமுறை அடுக்கி வந்து உணர்த்துகின்றது. முதலில் ‘ஆதியாய் நடுவுமாகி’  என்ற தொடரால், இறைவனின்  முதல் இடை நடு என்ற முத்திறங்கள் உணர்த்தப் பெறுகின்றன! ஆதி என்பது இறைவனின் முதன்மைத்  தோற்றத்தை உணர்த்துகிறது.

    விளக்கம்: 

    தாமே அனைத்துக்கும் முதலானவர்; தம்மிலிருந்தே உலகங்கள் அனைத்தையும் தோற்றுவித்தவர், இதனைச்  சிவஞானபோதம் ,

    ‘’அவன் அவள் அதுவென அவைமூ  வினைமையின்
    தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
    அந்தம் ஆதி என்மனார் புலவர் ‘’

    என்று தொகுத்துரைக்கின்றது. எல்லாவற்றையும் உருவாக்கிய முதற் பொருளாகவும், அனைத்தையும் சங்கரித்துத் தம்முள்ளே ஓடுக்கிக் கொள்ளும் ஈற்றுப்பொருளாகவும் இருப்பதை ‘’அந்தம் ஆதி என்மனார்‘’ என்ற தொடர் விளக்குகிறது. அனைத்துப் பொருள்களும் சங்கார காலத்தில் மறைந்து சிருட்டிக் காலத்தில் மீண்டும் அவரிடமிருந்தே தோன்றி  நிற்கும் என்பதை , ‘ஒடுங்கி மலத்துளதாம்’ என்ற தொடர் விளக்கும். சிருட்டிக் காலத்திலும் மீண்டும் உருவாகும் காலத்திலும் முதலாகி நிற்பதை ‘ஆதி’ என்ற சொல்லே விளக்கும். இதனால் ‘திதி‘ என்னும்  நிலைபெறுத்தல் உணரப்படும்.  இவை  அனைத்தையும்  ‘ஆதியாய் நடுவுமாகி’ என்ற தொடர் விளக்குகிறது. அழிவுக் காலத்தில் படைக்கும் பிரமனும் காக்கும் திருமாலும்  பிரளயத்தில் மூழ்கி மறைவர்;  அப்போது மீண்டும்  அனைத்தையும்  உருவாக்கி, மீண்டும் நிலைபெறுத்த   இறைவன் நல்வீணை வாசிப்பார்  என்பதை  அப்பர் பெருமான்,

    ‘’பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
    இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேவரமுங்
    கருங்கடல் வண்ணன் களேவர முங்கொண்டு கங்காளராய்
    வருங்கடல்  மீளநின்று  எம்மிறை நல்வீணை வாசிக்குமே.’’

    என்று பாடினார். இதனையே  திருஞானசம்பந்தர்,

    ‘’புவம்வளி  கனல்புனல்  புவிகலை உரைமறை  திரிகுணம் அமர்நெறி
    திவம்மலி    தருசுரர்   முதலியர்   திகழ்தரும்    உயிரவை     அவைதம
    பவம்மலி   தொழில்அது   நினைவொடு  பதுமநன்  மலரது    மருவிய
    சிவனது   சிவபுரம்   நினைபவர்   செழுநில  னினில்நிலை   பெறுவரே!’’

    என்று பாடுகிறார். பொருள்களை உணர்வதற்குத் தேவை அளவை எனப்படும் பிரமாணங்களாகும் இதனை  ஆன்ம சிற்சக்தி என்பர். அளவைகளுள்  உய்த்துணர்தல் என்பதும் ஒன்று! இதனை உள்ளத்தால் அளவிடல் என்பர். இந்த அளவீட்டில் அடங்காமல் விரிந்திருப்பதே தில்லை மன்று! அத்தகைய சிற்சக்தியால் அளந்தறியப்படுவதே  இறைமை!  அளவும், அளத்தலும் ஆகுபெயராய் இறைவன் அளவைக் குறித்தன. இதனைச்  சிவஞானமே காட்டும்!  இதனைச் சேக்கிழார் ‘’அளவிலா அளவுமாகி‘’ என்கிறார். இந்த அளவை அறிவால் அனுமானிக்கலாம். அறிகின்ற மெய்ப்பொருளாகவும் பொருளைக்  கடந்து, அறிவையம்   கடந்து விரிந்த சுடரும், வான்வெளியும், இடமும்  அவனே என்கிறார் காரைக்காலம்மையார். இதனை,

    ‘’அறிவானும்   தானே  அறிவிப்பான்  தானே
    அறிவாய்  அறிகின்றான் தானே –  அறிகின்ற
    மெய்ப்பொருளுந்  தானே  விரிசுடர்பார்  ஆகாயம்
    அப்பொருளும்   தானே  அவன்!

    என்றுபாடுகிறார். எப்பொருளிலும்இரண்டறக்கலந்துசொல்லுலகம், பொருளு லகம் இரண்டிலும் வேறுபாடின்றி ஒன்றாகி நிற்பவர் அவர்! இதனைச்  சேக்கிழார் ‘’பேதியா ஏகம் ஆகி ‘’ என்கிறார்.

    எல்லாவுயிர்களும் ஆண், பெண் என்ற இருவகை  உயிரணுக்களாய்த்  தாயின் கருவில் கலந்து உருவாகி உறவாடி வளர்கின்றன.  சக்தி சிவம் எனப் பிரிந்து நிற்பதே இறைத்தோற்றம்ஆகும். இதனைச்  சிவஞான சித்தியார்,

    ‘’சத்தியும்  சிவமும்   ஆய  தன்மையில்  உலக   மெல்லாம்
    ஒத்துஒவ்வா   ஆணும்   பெண்ணும் உணர்குண  குணியு  மாகி
    வைத்தன  அளவால்   வந்த ஆக்கம்இவ்   வாழ்க்கை ‘’

    என்று பாடுகிறது!  இதனையே

    ‘’பெண்ணுமாய்  ஆணுமாகிப் போதியாநிற்கும்’’ என்று பாடியருளுகின்றார்! இங்கே போதித்தல் என்பது இறைவனின் எல்லா  நிலைகளிலும் அழியாமல் நின்று கூத்தாடும் திருநடம் ஆகும்! இதனை ஞானசாத்திரங்களும், திருமந்திரமும்‘’ திருக்கூத்து தரிசன’’மாககே கூறுகின்றன! இதனையே  தில்லையம்பலக்கூத்து  உணர்த்துகிறது!

    பொதுவாக சித்தாந்த முறைப்படி இப்பாடலில், ஆதி என்பது பிரமனையும், நடு என்பது திருமாலையும் சோதி என்பது மறைப்புச் சத்தியாகிய  மகேசுரனையும், தோன்றிய பொருளாகிய சதாசிவத்தையும் குறித்தன! சேக்கிழாரின் சைவப்பெருஞானம் விளங்கும் திருப்பாடலாக இப்பாடல் அமைந்து நம்மை ஈர்க்கின்றது!

    Share
  • திருக்குடமுழுக்கில் வடமொழி-திருமுறைகள் சொல்வதென்ன?

    திருக்குடமுழுக்கில் வடமொழி-திருமுறைகள் சொல்வதென்ன?

    -மரபின் மைந்தன் முத்தையா
     
    தஞ்சைப் பெருவுடையார் திருக்கோவில் திருக்குடமுழுக்கு பற்றிய விவாதங்கள் வளர்ந்துகொண்டே போகின்றன. ஆலயத்தோடும் ஆன்மீகத்தோடும் அணுவளவும் தொடர்பில்லாத பலரும் அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் தம் நிலைப்பாடு என்னவென்பதை ஆன்மீக ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் அறிவிக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.
     
    தொடர்பில்லாதவர்கள் துள்ளிக் குதிப்பதும் தொடர்புள்ளவர்கள் தள்ளி நிற்பதும் தமிழ்ச் சூழலுக்கு புதிதல்லவே!
     
    மாமன்னன் இராஜராஜன் கட்டிய ஆலயம் என்பதால் அவனிடமிருந்தே தொடங்குவோம். இன்று பல்லோரும் ராஜராஜன் தமிழ் மன்னன். ஒரு தமிழ் மன்னன் கட்டிய தமிழ்க் கோயில். அங்கே திருக்குடமுழுக்கு தமிழில் நடைபெற வேண்டும் என்றெல்லாம் வாதங்களை வைக்கிறார்கள்.
     
    ராஜராஜன் தமிழ் மன்னனாக இருக்கலாம். ஆனால் அவருடைய ஆன்மீக குரு யாரென்று பார்த்தால் சதுரானன பண்டிதர் என்ற பெயருடைய காளாமுகச் சைவர் . அதேபோல அவருடைய மகன் ராஜேந்திர சோழனின் குரு யார் என்று பார்த்தால் லகுலீச பண்டிதன் என்னும் காளாமுகச் சைவர்.
     
    சொல்லப் போனால் ராஜராஜன் காலத்திற்கு முன்னரே திருமுறைகள் பாடக் கூடியவர்களுக்கு கல்வெட்டுகள் உண்டு. (திருமுறைகளை ராஜராஜன் கண்டெடுத்ததாக உமாபதிசிவம் பெயரில் ஒரு புராணம் வழங்கி வருகிறதே தவிர, அது அவரால் எழுதப்பட்டது அல்ல என்றுதான் ஆறுமுக நாவலர் உள்ளிட்ட ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்). எனவே இராஜராஜன் காலத்துக்கு முன்பிருந்தே ஆலயங்களில் திருமுறைகள் ஓதப்பட்டன.
     
    ஆனால் ராஜராஜன் காலத்தில் தேவார மூவர் திருநாமங்கள் கூட, தீக்ஷா நாமம் தரப்பட்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. திருநாவுக்கரசு அகோர சிவன், ஞானசம்பந்தன் வாமதேவ சிவம் என்றெல்லாம் சமய ஆச்சாரியர்கள் திருநாமங்கள் பின்னால் தீக்ஷா நாமம் சேர்க்கும் அளவு ராஜராஜன் வடமொழி சார்ந்தவனாக இருந்திருக்கிறான். எனவே அவர் எழுப்பிய ஆகம முறைப்படியான ஆலயத்தில் அந்த மரபு சார்ந்த முறையிலேயே திருக்குடமுழுக்கு நடைபெற வேண்டும்.
     
    இரண்டாவதாக சைவர்களுக்கு உயிர்நாடியாக விளங்கக் கூடியவை திருமுறைகள். குறிப்பாக தேவாரம் திருவாசகம் ஆகியவை. அவை சமஸ்கிருதத்தை முழுமையாக ஒப்புக்கொள்கின்றன. திருமுறைகள் முழுவதிலும் வேதங்களும் வடமொழியும் சிறப்பிக்கப்படுவது கண்கூடு.
     
    “வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்
    வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்”
     
    என்றும்
     
    “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்”
     
    என்றும் சிவபெருமான் சிறப்பிக்கப்படுகிறார்.
     
    இன்று பலரும் வடமொழி என்பது தமிழ்நாட்டில் சைவ மரபுக்கு முரணானது என்பது போல ஒரு பிம்பத்தை வலிந்து கட்டமைக்கிறார்கள். தமிழ்ச் சைவர்களின் மேல் வரிச் சட்டம் ஆகிய திருமுறைகள் அவ்வாறு நமக்குச் சொல்லவில்லை. எனவே சமஸ்கிருதம் அந்நிய மொழி என்பது நாத்திகவாதிகள் கொண்டுவரும் பொய்யான பரப்புரை ஆகும்.
     
    ஆகமங்கள் என்பவை ஆலயங்கள் எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் பேசுபவை அல்ல. ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவை. அவை ஆழமான ஆன்மீக அறிவியல். மேலும் இன்று சிலர் திருக்குடமுழுக்கு நிகழும்போது சொல்லப்படும் மந்திரங்கள் புரிய வேண்டும் என்கிறார்கள். எல்லோருக்கும் புரியும் விதமாய் அமைய அவை வாய்பாடுகள் அல்ல. அவை மிக நுட்பமான ஒலி ஒழுங்குகளும் முத்திரைகளும் கூடிய தொன்மையான ஞானக் கலை.
     
    வடமொழியில் மந்திரங்கள் சொல்லி திருக்குடமுழுக்கு நடத்துவதால் தமிழ் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் ஆன்மீகம் என்பதையே அறியாதவர்கள் சொல்வது. காலங்காலமாகவே ஆலய வழிபாட்டு மரபில் தமிழ் என்பது இரண்டாம் மொழி அல்ல. இணைமொழி.
     
    “இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்”
     
    என்று ஆலயச் சூழலை மணிவாசகப் பெருமான் வர்ணிக்கிறார். இங்கே இருக்கு என்பது ரிக்வேதம் ஆகிய சாஸ்திரத்தையும் தோத்திரம் என்பது தமிழில் ஓதப்படும் திருமுறைகளையும் குறிக்கும்.
     
    ஆலயங்களில் தமிழ் அர்ச்சனை தாராளமாகச் செய்யலாம். ஆனால் திருக்குடமுழுக்கு என்பது ஆலயத்தில் இருக்கிற விக்கிரகத்துக்கு இருக்கும் சக்தியைப் புதுப்பிக்கும் மெய்ஞான விஞ்ஞானம். அந்த மந்திரங்களின் பொருளைக் காட்டிலும் அது ஏற்படுத்தும் அதிர்வுகள் தான் மிகவும் முக்கியம்.
     
    ஆகமங்கள் என்பவற்றை “வந்தவை” என்று பொருள். எனவே தமிழிலிருந்து வடமொழிக்கு வந்தது என்பதாக திரு. சத்தியவேல் முருகனார் போன்றவர்கள் சொல்லி வருகிறார்கள். சிவபெருமானிடமிருந்து வந்தது என்றுதான் அதற்குப் பொருள்.
     
    சிவபெருமான் வேதங்களை திருவாய் மலர்ந்தருளியதைப் போலவே ஆகமங்களையும் அருளினார் என்கிறார் திருமூலர்.
     
    “வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
    ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உன்னுக”
     
    என்பது திருமந்திரம்.
     
    ” ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க”
     
    என்பது சிவபுராணம்.
     
    எனவே ஆகமங்கள் என்பவை, வழிபாட்டு நெறியின் உயிர் நாடி. அவற்றை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.
    —————————————————————
    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா
    Share
  • 2022இல் ககன்யான் – நான்கு விமானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி

    2022இல் ககன்யான் – நான்கு விமானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்
    உளவிச் சென்று நாசா
    துணைக்கோளுடன் தென் துருவத்தில்
    ஒளிமறைவுக் குழியில்
    பனிப் படிவைக் கண்டது !
    நீரா அல்லது வாயுவா என்று
    பாரதமும் நாசாவும் ஆராயும் !
    சந்திரனில் சின்னத்தை இறக்கியது
    இந்திய மூவர்ணக் கொடி !
    யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
    பந்தயமில்லை !
    விந்தை புரிந்தது இந்தியா !
    இரண்டாம் சந்திரயான் விண்சிமிழ்
    2019  செப்டம்பரில்
    முதன்முதல்  இறக்கும்  தளவுளவி
    தகவல் இணைப்பு இழந்து,
    சரிந்துபோய் விழுந்தது !
    மூன்றாம் சந்திரயான் விண்சிமிழ்
    நிலவைச் சுற்றி  இறக்கும்
    மீண்டும் ஓர் தளவுளவி.
    மூவர் இயக்கும் 
    விண்கப்பல் பூமி சுற்றப்
    போகிறது 2022ஆம் ஆண்டில் .  

    +++++++++++

     

    Image result for 2022 ISRO MANNED SPACE MISSION"

    2022ஆம் ஆண்டில் மூன்று இந்தியர் இயக்கும் விண்கப்பல் பயணம்
     
    இந்திய விண்வெளி ஆராய்ச்சி வாரியம் [Indian Space Research Organization (ISRO)]  2022 ஜனவரி மாதத்தில் ஏவப் போகும் மூவர் இயக்கும் முதல் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரஷ்யாவில் பயிற்சி பெற அனுப்பப்படுகிறார்கள் என்று 2020 ஜனவரி 22ஆம் தேதி, அதன் தலைவர் கே. சிவன் அறிவித்தார்.  அவர்கள் இந்திய விமானப் படையிலிருந்து எடுக்கப்பட்டவர்கள்.  11 மாதப் பயிற்சிக்கு அவர்கள்  ரஷ்யாவுக்குப் போகிறார்.  1.31 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் நிகழப் போகும் ஓர் மகத்தான இந்திய விண்வெளிச் சாதனையாக அது வரலாற்று முக்கியத்துவம் பெறும். பாதுகாப்பாக மனிதர் இயக்கி விண்வெளியில் பயணம் செய்து, மீட்சி அடையும்  விண்கப்பல் எடை 3.7 டன் உள்ளது.  மனிதர் இயக்கும்  அந்த விண்கப்பல் திட்டத்தின் பெயர் “ககன்யான்”  [Gaganyaan].  அதன் வெற்றிகர நிகழ்ச்சி, இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்ற நினைவு நாளாகக் கொண்டாடப்படும்.
     

    +++++++++++++++++++++++++

    India says it will try again to land on moon in 2020

    with Chandrayaan -3

    India targets New Moon Mission Chandrayaan -3 in 2020

     
    *******************************

    ++++++++++++++++++++++

    Related image

    2020ஆம் ஆண்டில் இந்தியா மீண்டும் சந்திரயான் – 3 அனுப்பி  நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது.

    2019 செப்டம்பரில் வெற்றிகரமாகச் சந்திரயான் -2 நிலவைச் சுற்றி, தளவுளவியைப் பாதுகாப்பாக இறக்கினாலும், நேராக நிற்க இயலாமல், சரிந்து போய் தளவூர்தி நகர்ந்து ஊர்ந்திட முடியாமல் சிக்கிக் கொண்டது.  மேலும் தளவுளவி மெதுவாக இறங்கி, நிலவைத் தொடும் முன்பே, தகவல் அனுப்புவது தடைப்பட்டது.  ஆகவே சந்திரயான் -2 அனுப்புத் திட்டப்பணி 95% அளவு வெற்றிதான் பெற்றது.  இப்போது 2020 ஆண்டில் மேற்கூறிய தவறுகளைத் திருத்த, சந்தியான் -3 புதிய நிலவுப் பயணத்தை இந்தியா மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.  அதை 2020 ஜனவரி முதல் தேதியில் அறிவித்தவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி வாரியத் தலைவர் கே. சிவன்.  திட்டம்  நிறைவேறும் மாதம் 2020 நவம்பர் அல்லது 2021 முதல் மாதங்கள்.  அதற்குச் செலவாகும் நிதித் தொகை : சுமார் 35 மில்லியன் டாலர் என்றும் டாக்டர் சிவன் அறிவித்தார்.  மேலும் 2022 ஆண்டு நடுவ மாதங்களில் மூன்று விண்வெளி விமானியர் இயக்கும், மனித விண்வெளிச் சிமிழ் பூமியைச் சுற்றிவரும் திட்டம் தயாராகி வருகிறது.  அதற்கு  நால்வர் இம்மாதம் ரஷ்யாவில் பயிற்சி தொடங்குவார் என்றும், அப்பெரிய நிகழ்ச்சி இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு பூர்த்தி நினைவாக இருக்கும் என்றும் பெருமையாகக் கூறினார்.

    ++++++++++++++++++++++++++++++++++

    Related image

    Image result for vikram lander failure

    விக்ரம் தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடிப்பு

    Image result for ISRO CHANDRAYAAN -3
     
    +++++++++++++++++++++
     
     
     
    ++++++++++++++++++++
     

     

     
    Image result for nasa finds indian moon lander
     
     
     
    தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடித்த ஐ.ஐ.டி. மாணவர் சண்முக சுப்ரமணியன்
     
     
    +++++++++++++++++++++
     
     
     
    +++++++++++++++++++
     
     
    Image result for ISRO CHANDRAYAAN -3
     
    +++++++++++++++++++++

    Related image

    2019 செப்டம்பரில் தவறி விழுந்த சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் மூன்று மாதம் கழித்து நிலவில் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டது.  அதைக் கண்டுபிடித்த தமிழர் பெயர் சண்முக சுப்ரமணியன்.  அவர் ஓர் விண்வெளி ஆர்வலர் [Amateur Space Enthusiast].  33 வயதானர்.  பழைய ஐ.ஐ.டி. சென்னை மாணவர். நாசா டிசம்பர் 2 ஆம் தேதி தனது நிலவு உளவிச் சுற்றி  [Lunar Reconnaissance Orbiter (LRO] மூலம் செப்டம்பர் 6 இல் கிடைத்த தளப் படமுடன் இந்தச் செய்தியை வெளியிட்டது. நிலாச் சுற்றி அனுப்பிய செப்டம்பர் 17  தளப்படத்தில் விக்ரம் விழுந்த இடம் அறிய முடியவில்லை.  அப்படங்களை வைத்துக் கொண்டு சண்முக சுப்ரமணியன் தனது மடிக்கணினிகள் மூலம், சவாலான தளவுளவி விழுந்த இடத்தைத் தேடினார்.  நாசா அனுப்பிய பழைய படங்கள் ஒரு மடிக்கணனியிலும், புதிய படங்களை அடுத்தோர் மடிக்கணனியிலும் இட்டு ஒப்பு நோக்கினார். நாசா 100% மெய்யாக சரிபார்த்த பிறகுதான், இந்த அரிய கண்டுபிடிப்புச் செய்தியை வெளியிட்டது.  இந்தியா ஏவிய சந்திரியான் -2 தளவுளவி நிலவில் பாதுகாப்பாக, வெற்றிகரமாக இறங்கி, ரஷ்யா, அமெரிக்கா, சைனா  நாடுகளோடு உலகில் நான்காவது நாடாகப் பெயர் பெற்றுள்ளது. ஆயினும் தளவுளவி சமிக்கை அனுப்பி இன்னும் உரையாட வில்லை.  தளவுளவி நேராகித் தளவூர்தியை இறக்கவில்லை.

    +++++++++++++++++++++++++

    Image result for vikram lander failure

    இந்தியச் சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் இறுதித் தோல்வி முன்னேர்ச்சியில் பெற்ற ஒரு பின்னேர்ச்சி.

    2019 செப்டம்பர் 7 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிலவை நோக்கி ஏவிய சந்திரயான் -2 பேரார்வத் திட்டம்  95% வெற்றி அடைந்து, இறுதியில் மெதுவாக இயங்கிய தளவுளவி, நிலவுக்கு மேல் சுமார் ஒரு மைல் உயரத்தில் தகவல் அனுப்பத் தவறி,  செங்குத்து நிலை சரிந்து, முறியாமல் விழுந்துள்ளது, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.  சரிந்து நொறுங் காமல், நிலவின் தென் துருவத்தில், திட்டமிட்ட இடத்தில் இறங்கியுள்ள விக்ரம் தளவுளவியைச் சந்திரயான் – 2 இன் விண்சிமிழ் கண்டுபிடித்துள்ளது.  அதே சமயத்தில் நிலவைச் சுற்றி வந்த அமெரிக்க நிலவுக் கண்காணிப்புச் சுற்று துணைக் கோள்  [(LRO) -LUNAR RECONNAISSANCE ORBITAL] சந்திரயான் -2 விக்ரம் தளவுளவியைத் தேடிய போது, நிலவில் இருட்டாகி விட்டதால், காண முடியாமல் போனது.  அடுத்து சூரிய ஒளி நிலவின் தென் துருவத்தில் விழும்போது, அமெரிக்கத்  துணைக்கோள் தேடிக் காண வாய்ப்புகள் உள்ளன.

    Image result for vikram lander failure

    தொடர்ந்தெழும் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள்

    சந்திரயான் -2 விண்வெளித் திட்ட வினைப்பாடுகள் யாவும் சமீபத்தில் இந்தியா சாதித்த உன்னத விஞ்ஞான பணிகளாகக் கருதப் படுகின்றன.   அதுபோல் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி, இந்தியா ராணுவப் பாதுகாப்பு முன்னணியில் இருப்பது, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சவாலாக உள்ளது.  இந்தியா நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும், விண்சிமிழ்களை அனுப்பி, விண்வெளித் தேடல் முயற்சிகளை, 50 ஆண்டுகட்கும் மேலாக நடத்திக் கொண்டு வருவது பெருமைக்கு உரிய வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.

    Related image

    1969 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிறுவகம் ஆனது.  ஆரம்ப காலங்களில் ராக்கெட் ஏவுகணைகள் விருத்தி செய்யப்பட்டு, துணைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர அனுப்பப் பட்டன.  2008 இல் சந்திரயான் -1 நிலவு நோக்கி ஏவப்பட்டது.  அதுவே நிலவில் நீர் இருப்பதை முதல் கண்டுபிடித்தது.  2014 இல் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கி, இந்தியா மங்கல்யான் விண்சிமிழ் ஏவி வெற்றிகரமாக, சுற்றி வந்தது.  2019 இல் சந்திரயான் -2 மீண்டும் நிலவு நோக்கிச் சென்று, முதன்முதல் விக்ரம் தளவுளவியை  நிலவின் தென் துருவத்தில் இறக்கி விட்டது.  இதுவரை எந்த நாடும் துணிந்து புரியாத தீரச் செயலாகக் கருதப்படுகிறது.   அடுத்து இந்தியாவின் திட்டம், மூவர் இயக்கும் விண்கப்பல் 2022 ஆண்டில் ஏவப் பட்டு வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றிவரும்.

    +++++++++++++++++

    Image result for vikram lander

    விக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு

    +++++++++++++++++++++

    1. https://www.space.com/topics/india-space-program
    2. https://www.space.com/india-moon-lander-time-running-out.html
    3. https://www.space.com/lro-fails-see-india-moon-lander-vikram.html
    4. https://www.space.com/india-chandrayaan-2-moon-south-pole-landing-site.html

    +++++++++++++++++

    Image result for isro chandrayaan -2 vikram lander

    விக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது

    சூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.

    2019 செப்டம்பர் 17 இல்  நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை.  அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற்றியின் சக்தி வாய்ந்த காமிரா காண முடியாமல் போனது.  இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.

    ஆயினும் நிலவைச் சுற்றிவரும்  சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப் பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும்.  அதற்குப் பிறகு விழித்து தகவல் அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.

    An artist's depiction of India's Chandrayaan-2 lander and rover on the surface of the moon, near its south pole.

    விக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப் பட்டது.

    +++++++++++++++++++

    1. https://economictimes.indiatimes.com/news/science/nasa-joins-isro-to-track-vikram-calling-home/articleshow/71097087.cms
    2. https://www.moneycontrol.com/news/india/chandrayaan-2-nasa-helps-isro-to-establish-communication-with-vikram-lander-4432871.html?fbclid=IwAR3zEJRhzpwcwWipD2mgPMutgpMNpCfHXFSbq2-APrec5utl-ucVeEW5VJY
    3. https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-not-only-isro-nasa-also-sends-messages-lander-vikram-moon/story/378594.html?fbclid=IwAR3aeAO2h152zc0uRLO90Ym7FpPyrmXXHIMpqtJ3jXX1qA145d_NBuz_Pgs
    4. https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-landing-failed-isro-loses-contact-with-lander-vikram/story/377813.html?utm_source=recengine&utm_medium=WEB&referral_sourceid=378149&referral_cat=Trends
    5. https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-vikram-landing-somersault-isro-exlusive-1598882-2019-09-13
    6. https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14

    ++++++++++++++++++++++++++++++

    ISRO OFFICIALY CONFIRMS THAT ORBITER HAS LOCATED VIKRAM LANDER

    சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.

    இப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது.  சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது.  இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது.  இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும்.  மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும்.  இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன.  இந்திய விஞ்ஞானி களுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர்.  காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன.  இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.

    https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14

    WHAT NOW?

    It’s been nearly a week since the Indian Space Research Organisation lost contact with the Chandrayaan-2 lander. Since then, Isro, which continues to remain tight-lipped over the matter, has been making constant efforts to re-establish communication with the spacecraft.

    A day after losing contact with Vikram, Isro said it had been able to locate the Chandrayaan-2 lander on the Moon. However, communication with the lander remains elusive.

    Next week, a lunar orbiter operated by the United States’ National Aeronautics and Space Administration (Nasa) is set to fly over the area where Vikram is located. The orbiter is expected to take pictures and offer clues to Vikram’s fate.

    Meanwhile, the Chandrayaan-2 orbiter remains safe in its orbit around the Moon. In fact, it was the Chandrayaan-2 orbiter that, on Sunday, managed to locate Vikram on the lunar surface.

    The orbiter’s mission life has been extended from one year to seven years, due fuel savings made during the trip to the Moon. Over the course of its mission life, the Chandrayaan-2 orbiter will perform several experiments, including one to estimate the quantity of iced water on the Moon.

     

    Image result for cHANDRAYAAN -2 lost contact

    சந்திரயான் -2 திட்டம்  95% நிறைவு பெற்று, இறுதியில் 

    தகவல் அனுப்பத் தவறியது. 

    [ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]

    ++++++++++++++++

    1. https://youtu.be/q7Omv4EX8RM
    2. https://economictimes.indiatimes.com/news/science/chandrayaan-2-setback-india-loses-contact-with-vikram-lander-during-descent/articleshow/71018277.cms?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=mlpdaily&ncode=4b749efe6f3285bfc668b352f29b8270
    3. https://youtu.be/phN5S9cHeWM
    4. https://frontline.thehindu.com/static/html/fl2619/stories/20090925261913200.htm
    5. http://www.cnn.com/2009/WORLD/asiapcf/08/30/india.moon.mission/index.html
    6. https://youtu.be/sd6grEvZn1A
    7. https://youtu.be/ANyg9VGSqbY
    8. http://www.moondaily.com/reports/NASA_finds_Indian_Moon_lander_with_help_of_amateur_space_enthusiast_999.html?
    9. https://news.abplive.com/news/india/indian-techie-shanmuga-subramanian-helps-nasa-find-chandrayaan-2s-vikram-lander-on-moon-1117529
    10. https://www.nytimes.com/2019/12/02/science/india-moon-mission-vikram-lander-found.html
    11. http://www.moondaily.com/reports/India_targets_new_moon_mission_in_2020_999.html
    12. http://www.moondaily.com/reports/India_says_it_will_try_again_to_land_on_moon_999.html
    13. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/president-ram-nath-kovind-addresses-to-the-nation-on-the-eve-of-the-71st-republic-day/videoshow/73616426.cms
    14. https://en.wikipedia.org/wiki/Indian_Human_Spaceflight_Programme  [January 24, 2020]
    15. https://www.isro.gov.in/update/01-jan-2020/press-meet-briefing-dr-k-sivan-chairman-isro

    +++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathan.wordpress.com/]  January 26, 2020

    Share
  • “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்

    “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்

    அண்ணாகண்ணன்

    பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நூலகத் துறையும் தமிழ் அநிதமும் (அமெரிக்கா) இணைந்து, 25.01.2020 அன்று, “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்னும் பொருண்மையிலான பன்னாட்டுப் பயிலரங்கை மிகச் சிறப்பாக நடத்தின.

    இதில், பேராசிரியர் அ.காமாட்சி, ஏற்றம் தரும் எழுதுகருவிகள் என்ற தலைப்பில் குரல்வழித் தட்டச்சு, எந்திர மொழிபெயர்ப்பு, பிழை திருத்தும் மென்பொருள் உள்ளிட்டவற்றை அரங்கில் நிகழ்த்திக் காட்டி விளக்கினார்.

    பெய்கான் நிறுவனத்தின் நிறுவனர் செந்தில் முருகன், ஒலி ஒளி உள்ளடக்கம் என்ற தலைப்பில், ஒலி நூல், அதை உருவாக்கும் விதம், அதற்குள்ள சந்தை, யூடியூப் அலைவரிசையைத் தொடங்கும் விதம் உள்ளிட்டவற்றை அழகுற எடுத்துரைத்தார்.

    நான், மையக் கருத்துரை வழங்கியதோடு, வலை ஊடக வாய்ப்புகள் என்ற தலைப்பில், மின்னிதழ்கள், செய்திச் செயலிகள், மீம்ஸ் எனப்படும் பகடிப் படங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் தற்போதைய நிலையைச் சுட்டிக் காட்டி, இவற்றில் உள்ள வானளாவிய வாய்ப்புகளை விரித்துரைத்தேன்.

    செங்கோட்டை ஸ்ரீராம், மின்னூல்கள் என்ற தலைப்பில், மின்னூல்களின் வகைகள், உருவாக்கும் விதம், அதற்கு உதவும் கருவிகள், கிண்டில், ஃபிரீதமிழ்ஈபுக்ஸ் உள்ளிட்டவற்றைக் காட்சியுரையாக வழங்கினார்.

    மாணவர்கள், பங்கேற்பாளர்கள் அத்தனை பேரும் கடைசி வரை இருந்து உற்சாகமாகப் பங்கெடுத்தார்கள். இந்த நல்வாய்ப்பினை நல்கியமைக்காக, கல்லூரி நிர்வாகத்திற்கும் தமிழ் அநிதம் அமைப்பிற்கும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாலச்சந்திரன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

    Share
  • டாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்

    டாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்

    சுப்ரபாரதிமணியன்

    திருப்பூரில்  கனவு அமைப்பு நடத்திய ஒருநாள் திரைப்பட விழாவில் டாலர் சிட்டி, இன்ஷா அல்லாஹ் ஆகிய படங்கள், 24.1.2020 அன்று திரையிடப்பெற்றன. இதில் டாலர் சிட்டி பற்றிய அறிமுகம் இங்கே.

    டாலர் சிட்டி ஆவணப் படம் – இயக்குநர் ஆர்.பி. அமுதன் – 77 நிமிடங்கள்

    பனியன் தொழிலாளி, கைத்தறி நெசவுத் தொழிலாளி, விசைத்தறித் தொழிலாளிகள், பனியன் உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் பார்வையில் – அவர்களின் நேர்காணல்கள் மூலம் இப்படம் சொல்லப்பட்டிருக்கிறது. திருப்பூர் நொய்யல் பற்றியும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் தொழில்ரீதியான ஆவணப்பட இயக்குநர் ஒருவரிடமிருந்து திருப்பூரைப் பற்றிய படமாக இதைக் கொள்ளலாம்.

    தலித் முதிய பெண் ஒருவரின் பார்வையில் இப்படம் தொடங்குகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்  திருப்பூரில் இருந்த சாதிய அடுக்குகள், அது இன்றும் நகர வளர்ச்சியில் மறைந்துள்ளதை வெளிப்படுத்துகிறார். 1000 கோடி மதுச் சரக்கு விற்பனையாகும் ஊர். கஞ்சாப் பூங்கா,  பொழுதுபோக்கிற்குத் திரைப்பட அரங்குகள், உற்பத்தியாளர்கள் பார்வை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ’25 ஆண்டுகளாக பின்னலாடைத் தொழிலில் வேலை நிறுத்தமே இல்லை’ என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர்.

    போடப்படும் சம்பள ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று தொழிற்சங்கத் தலைவர்கள் சொன்னாலும்  போராட்டங்கள் ஆதி காலத்து மே தின விழா  முதல் சாதாரண கூலி உயர்வு வரைக்கும் என்று நீண்டு வருவது காட்டப்பட்டிருக்கிறது. ஒரு பனியன்  தொழிலாளியின் தினப்படி வாழ்க்கை மெதுவாகக் காட்டப்படுகிறது. வீட்டில் இருந்துகொண்டு பனியன் சம்பந்தமான வேலை செய்யும் ஒரு பெண்ணின் தினப்படி வாழ்க்கை (வீடு, பனியன் பிரிக்கும் வேலை, அலர்ஜி, ஆத்துமா, சுகாதாரமின்மை) மெதுவாகக் காட்டப்படுகிறது. ஆனால் திருப்பூர் தொழில் வளர்ச்சி, கூலி இவையெல்லாம் அடிப்படை உரிமைகளை விட பெரிதாகப்பட்டுவிடுகிறது தொழிலாளர்களுக்கு.

    மேதினக் கொண்டாட்டம் போதும் தங்களின் உரிமைகளை பறைசாற்றிக் கொள்ள. எதிர்காலம் பற்றிய கணிப்பில் 1 லட்சம் கோடி ரூபாய் அந்நிய சொலவாணி, மற்றும் எதிர்காலத்தில் தொழிற்கொள்கைகளைக் கடைப்பிடிக்காமல் போனால் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளுமே இங்கிருப்பர் என்று ஒரு முதலாளி சொல்கிறார். பழைய திருப்பூராகும் என்று பயமுறுத்துகிறார். ஆனால் வேலை, சமூகப் பாதுகாப்பின்மையை  மையப்படுத்தி தொழிலாளர் குரல்கள்  தொனிப்பதைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டக் கால நிலைமை அவர்களின் வாழ்நிலையைச் சரியாகக் காட்டுகிறது. இயக்கமில்லாமல் நிற்கும்  விசைத்தறி மனத்தை உறுத்துகின்றது. (போராட்டக் காலக் கஞ்சித் தொட்டிச் சம்பவங்கள் பேச்சில்லாமல் பலவற்றை உணர்த்திப் போகின்றன).

    நெசவாளர்களின் சுதந்திரமான தொழில் நிலை கதர் முதற்கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. பனியன், பின்னலாடை, விசைத்தறி போன்றவற்றில் இளைஞர்கள் காட்டப்படுகையில் நெசவு தொழில் மட்டும் வயதானவர்கள் மூலம்  சொல்லப்படுகிறது.  நெசவை இளைய தலைமுறை கை விட்டிருப்பதை அது காட்டுகிறது. பனியன் தொழிலாளி வீட்டுக் கண்ணாடிப் புட்டி மீன், முதலாளி வீட்டு வாஸ்து 50 ஆயிரம் ரூபாய் தொட்டி மீன், கேட்பாரற்றுக் கிடக்கும்  நெசவுப் பாவடிக் கற்கள்… அபாரமான குறியீடுகள்.

    சமூக நீதி, மெய்யான நாகரீகம் என்று தொழிலாளர்களுக்குக் கோரும் பார்வையில் தென்படும்  இடதுசாரித்தனம் மே தினக் கூட்டம், ஊர்வலம்  முதற்கொண்டு மோடி பற்றிய விமர்சனம் வரை நீள்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் ‘Rise and raise of Tiruppur’ என்ற படத்தின்  பல பகுதிகள் இப்படத்தை ஆக்கிரமித்துள்ளது. அதிகாரம் செலுத்துகிறவர்கள் தமது அதிகாரத்தின் மூலமாகவோ அல்லது ஆதிக்கம் செலுத்துகிறவர்களை மூளை சலவைச் செய்வதன் மூலமோ மட்டும் ஒடுக்குவதில்லை. ஒடுக்கப்படுபவர்களுக்கும் தேவையான ஏதோ ஒன்று கிடைப்பதாலேயே ஒடுக்குமுறைகள் சம்மதமாகின்றன. சுரண்டலுக்கு ஒத்திசைவு  கூடி விடுகிறது  என்ற அந்தோனி கிராம்சியின் கருத்து நாசூக்காகச் சொல்லப்படுகிறது. சுரண்டலுக்கு ஒத்திசைவாக தொழிலாளிகளின் போக்கு அதிர்ச்சி தருகிறது. ஒடுக்குமுறைகள் இதனால் சாதாரணமாகின்றன. வன்முறை மூலம் மட்டும் அல்ல, ஒத்த கருத்தின் மூலம் ஆதிக்கம் உருவாக்கப்படுகிற ஆபத்தை பின்னலாடைத் தொழிலை முன் வைத்து இப்படம் சொல்கிறது.

    இதில் பின்னாலாடைத் தொழிலைக் காப்பாற்ற வேண்டிய, முன்னேற்ற வேண்டிய ஒத்த கருத்தாகும். குஜராஜ் மாதிரியில் இருக்கும் பேரமைதி பற்றிப் பலர் பேசுகிறார்கள். அந்நிய செலவாணியை முன்வைத்து  இவ்வகை ஒத்த கருத்துடன் திருப்பூர் அதற்கு முன்பே உருவாகி வளர்ந்து நிற்பது தெரிகிறது. தொழில் பாதுகாப்பின்மை தெரிகிறது. தொழிலாளர் நலன் புறக்கணிக்கப்பட்டே செல்கிறது. உழைப்பு அந்நியமாகும் நிலை விரிந்திருக்கிறது. எவ்வளவு பெரிய மோசடியும் கடுகாகிறது. அடிமாட்டுத் தொழிலாளர்கள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

    விவசாயம் புறக்கணிக்கப்பட்டு, திருப்பூர் போன்ற நகரங்கள் விரிவாகிக்கொண்டே  இருக்கின்றன. வெற்றுச் சம்மதங்கள் அபாயகரமானவை. தொழிலுக்குக் குந்தகம் வந்துவிடக்கூடாது என்ற கூட்டு எண்ணம் வியாபார நியதிகளுக்கும் கூட ஒத்து வராது என்று  குற்றம் பேசும் விமர்சனப் பார்வை இதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. தொழிலாளி, முதலாளி, தொழிற்சங்கம் முதற்கொண்டு எல்லோருமே அன்னியச் செலவாணியை குறிக்கோளாக வைத்துச் சமரசமாக இயங்கும் ஊரின் அசலான தன்மை இதில் தெரிகிறது.

    காலாவதியான மார்க்சியம், காணாமல் போன காந்தியம்.. இவற்றையெல்லாம் தூக்கிப் பிடிப்பதாய்க் கிண்டல்கள் எழுகின்றன. கூட்டுக் களவாணித்தனம்: தொழிற்சங்க உணர்வு இல்லாத தொழிலாளி, சுரண்டலுக்குப் பேர் போன முதலாளி, சந்தா வசூலிக்கிற தொழிற்சங்கம் முதற்கொண்டு எல்லாருக்குமே அன்னிய செலவாணிதான் குறிக்கோள். எல்லாரும் சேர்ந்து செய்கிற  திருப்பூர் கூட்டுக் களவாணித்தனம் என்று கடுமையாகவும் இதைப் பார்க்கலாம்.

    உலகச் சந்தையை முன்வைத்துப்  பின்னலாடை உற்பத்தி அதன் தொழிலாளிகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதைக் காட்டுகிறது. இது குறித்த தொழிலாளி, மக்களின் மவுனம் வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்குமான இடைவெளியைக் காட்டுகிறது. சிவப்புக்கொடிகளின் பட்டொளி வீசும் காட்சிகள் படத்தின்  ஆரம்பத்திலும் இறுதியிலும் அஞ்சலி போல் அமைந்துவிடுகிறன. சேரிகள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. பின்னலாடையிலே  சுமங்கலித் திட்டக் கொடுமை வந்துவிட்டது. இடம் பெயர்ந்து வந்த வேற்று மாநிலத் தொழிலாளர்கள்… பாரீசின் சொகுசுத்தனம், ஆப்பிரிக்காவின் வறுமை இரண்டும் இங்கு சேர்ந்திருக்கிறது. வட மாநில பெண்களின் உழைப்புச் சுரண்டல், வார இறுதிகளில் அவர்கள்  விபச்சாரத்துக்கு பயன்படுகிற நிலை போன்றவை சொல்லப்படாதது குறையாக பலர் முன்வைக்கிறார்கள். இவற்றை முன்வைத்தே திருப்பூரைப் பற்றி இருபத்தைந்து ஆவணப் படங்களாவது எடுக்க பல பிரச்சினைகள் தலை விரித்து ஆடுகின்றன. ஆர்பி அமுதனின் முந்தைய 20 ஆவணப் படங்களின் நேரடித்தன்மை போல் இதில் இல்லை. ஆனால் ஒரு தொழில் நகரைக் காப்பாற்றும் ஆதிக்கச் சக்திகளின் மாயக் குரல்களின் கலவையை மறைமுகமாக அடங்கிய குரலில்  கேட்க வைக்கிறார்.

    Share