டாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்

0

சுப்ரபாரதிமணியன்

திருப்பூரில்  கனவு அமைப்பு நடத்திய ஒருநாள் திரைப்பட விழாவில் டாலர் சிட்டி, இன்ஷா அல்லாஹ் ஆகிய படங்கள், 24.1.2020 அன்று திரையிடப்பெற்றன. இதில் டாலர் சிட்டி பற்றிய அறிமுகம் இங்கே.

டாலர் சிட்டி ஆவணப் படம் – இயக்குநர் ஆர்.பி. அமுதன் – 77 நிமிடங்கள்

பனியன் தொழிலாளி, கைத்தறி நெசவுத் தொழிலாளி, விசைத்தறித் தொழிலாளிகள், பனியன் உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் பார்வையில் – அவர்களின் நேர்காணல்கள் மூலம் இப்படம் சொல்லப்பட்டிருக்கிறது. திருப்பூர் நொய்யல் பற்றியும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் தொழில்ரீதியான ஆவணப்பட இயக்குநர் ஒருவரிடமிருந்து திருப்பூரைப் பற்றிய படமாக இதைக் கொள்ளலாம்.

தலித் முதிய பெண் ஒருவரின் பார்வையில் இப்படம் தொடங்குகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்  திருப்பூரில் இருந்த சாதிய அடுக்குகள், அது இன்றும் நகர வளர்ச்சியில் மறைந்துள்ளதை வெளிப்படுத்துகிறார். 1000 கோடி மதுச் சரக்கு விற்பனையாகும் ஊர். கஞ்சாப் பூங்கா,  பொழுதுபோக்கிற்குத் திரைப்பட அரங்குகள், உற்பத்தியாளர்கள் பார்வை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ’25 ஆண்டுகளாக பின்னலாடைத் தொழிலில் வேலை நிறுத்தமே இல்லை’ என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர்.

போடப்படும் சம்பள ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று தொழிற்சங்கத் தலைவர்கள் சொன்னாலும்  போராட்டங்கள் ஆதி காலத்து மே தின விழா  முதல் சாதாரண கூலி உயர்வு வரைக்கும் என்று நீண்டு வருவது காட்டப்பட்டிருக்கிறது. ஒரு பனியன்  தொழிலாளியின் தினப்படி வாழ்க்கை மெதுவாகக் காட்டப்படுகிறது. வீட்டில் இருந்துகொண்டு பனியன் சம்பந்தமான வேலை செய்யும் ஒரு பெண்ணின் தினப்படி வாழ்க்கை (வீடு, பனியன் பிரிக்கும் வேலை, அலர்ஜி, ஆத்துமா, சுகாதாரமின்மை) மெதுவாகக் காட்டப்படுகிறது. ஆனால் திருப்பூர் தொழில் வளர்ச்சி, கூலி இவையெல்லாம் அடிப்படை உரிமைகளை விட பெரிதாகப்பட்டுவிடுகிறது தொழிலாளர்களுக்கு.

மேதினக் கொண்டாட்டம் போதும் தங்களின் உரிமைகளை பறைசாற்றிக் கொள்ள. எதிர்காலம் பற்றிய கணிப்பில் 1 லட்சம் கோடி ரூபாய் அந்நிய சொலவாணி, மற்றும் எதிர்காலத்தில் தொழிற்கொள்கைகளைக் கடைப்பிடிக்காமல் போனால் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளுமே இங்கிருப்பர் என்று ஒரு முதலாளி சொல்கிறார். பழைய திருப்பூராகும் என்று பயமுறுத்துகிறார். ஆனால் வேலை, சமூகப் பாதுகாப்பின்மையை  மையப்படுத்தி தொழிலாளர் குரல்கள்  தொனிப்பதைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டக் கால நிலைமை அவர்களின் வாழ்நிலையைச் சரியாகக் காட்டுகிறது. இயக்கமில்லாமல் நிற்கும்  விசைத்தறி மனத்தை உறுத்துகின்றது. (போராட்டக் காலக் கஞ்சித் தொட்டிச் சம்பவங்கள் பேச்சில்லாமல் பலவற்றை உணர்த்திப் போகின்றன).

நெசவாளர்களின் சுதந்திரமான தொழில் நிலை கதர் முதற்கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. பனியன், பின்னலாடை, விசைத்தறி போன்றவற்றில் இளைஞர்கள் காட்டப்படுகையில் நெசவு தொழில் மட்டும் வயதானவர்கள் மூலம்  சொல்லப்படுகிறது.  நெசவை இளைய தலைமுறை கை விட்டிருப்பதை அது காட்டுகிறது. பனியன் தொழிலாளி வீட்டுக் கண்ணாடிப் புட்டி மீன், முதலாளி வீட்டு வாஸ்து 50 ஆயிரம் ரூபாய் தொட்டி மீன், கேட்பாரற்றுக் கிடக்கும்  நெசவுப் பாவடிக் கற்கள்… அபாரமான குறியீடுகள்.

சமூக நீதி, மெய்யான நாகரீகம் என்று தொழிலாளர்களுக்குக் கோரும் பார்வையில் தென்படும்  இடதுசாரித்தனம் மே தினக் கூட்டம், ஊர்வலம்  முதற்கொண்டு மோடி பற்றிய விமர்சனம் வரை நீள்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் ‘Rise and raise of Tiruppur’ என்ற படத்தின்  பல பகுதிகள் இப்படத்தை ஆக்கிரமித்துள்ளது. அதிகாரம் செலுத்துகிறவர்கள் தமது அதிகாரத்தின் மூலமாகவோ அல்லது ஆதிக்கம் செலுத்துகிறவர்களை மூளை சலவைச் செய்வதன் மூலமோ மட்டும் ஒடுக்குவதில்லை. ஒடுக்கப்படுபவர்களுக்கும் தேவையான ஏதோ ஒன்று கிடைப்பதாலேயே ஒடுக்குமுறைகள் சம்மதமாகின்றன. சுரண்டலுக்கு ஒத்திசைவு  கூடி விடுகிறது  என்ற அந்தோனி கிராம்சியின் கருத்து நாசூக்காகச் சொல்லப்படுகிறது. சுரண்டலுக்கு ஒத்திசைவாக தொழிலாளிகளின் போக்கு அதிர்ச்சி தருகிறது. ஒடுக்குமுறைகள் இதனால் சாதாரணமாகின்றன. வன்முறை மூலம் மட்டும் அல்ல, ஒத்த கருத்தின் மூலம் ஆதிக்கம் உருவாக்கப்படுகிற ஆபத்தை பின்னலாடைத் தொழிலை முன் வைத்து இப்படம் சொல்கிறது.

இதில் பின்னாலாடைத் தொழிலைக் காப்பாற்ற வேண்டிய, முன்னேற்ற வேண்டிய ஒத்த கருத்தாகும். குஜராஜ் மாதிரியில் இருக்கும் பேரமைதி பற்றிப் பலர் பேசுகிறார்கள். அந்நிய செலவாணியை முன்வைத்து  இவ்வகை ஒத்த கருத்துடன் திருப்பூர் அதற்கு முன்பே உருவாகி வளர்ந்து நிற்பது தெரிகிறது. தொழில் பாதுகாப்பின்மை தெரிகிறது. தொழிலாளர் நலன் புறக்கணிக்கப்பட்டே செல்கிறது. உழைப்பு அந்நியமாகும் நிலை விரிந்திருக்கிறது. எவ்வளவு பெரிய மோசடியும் கடுகாகிறது. அடிமாட்டுத் தொழிலாளர்கள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

விவசாயம் புறக்கணிக்கப்பட்டு, திருப்பூர் போன்ற நகரங்கள் விரிவாகிக்கொண்டே  இருக்கின்றன. வெற்றுச் சம்மதங்கள் அபாயகரமானவை. தொழிலுக்குக் குந்தகம் வந்துவிடக்கூடாது என்ற கூட்டு எண்ணம் வியாபார நியதிகளுக்கும் கூட ஒத்து வராது என்று  குற்றம் பேசும் விமர்சனப் பார்வை இதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. தொழிலாளி, முதலாளி, தொழிற்சங்கம் முதற்கொண்டு எல்லோருமே அன்னியச் செலவாணியை குறிக்கோளாக வைத்துச் சமரசமாக இயங்கும் ஊரின் அசலான தன்மை இதில் தெரிகிறது.

காலாவதியான மார்க்சியம், காணாமல் போன காந்தியம்.. இவற்றையெல்லாம் தூக்கிப் பிடிப்பதாய்க் கிண்டல்கள் எழுகின்றன. கூட்டுக் களவாணித்தனம்: தொழிற்சங்க உணர்வு இல்லாத தொழிலாளி, சுரண்டலுக்குப் பேர் போன முதலாளி, சந்தா வசூலிக்கிற தொழிற்சங்கம் முதற்கொண்டு எல்லாருக்குமே அன்னிய செலவாணிதான் குறிக்கோள். எல்லாரும் சேர்ந்து செய்கிற  திருப்பூர் கூட்டுக் களவாணித்தனம் என்று கடுமையாகவும் இதைப் பார்க்கலாம்.

உலகச் சந்தையை முன்வைத்துப்  பின்னலாடை உற்பத்தி அதன் தொழிலாளிகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதைக் காட்டுகிறது. இது குறித்த தொழிலாளி, மக்களின் மவுனம் வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்குமான இடைவெளியைக் காட்டுகிறது. சிவப்புக்கொடிகளின் பட்டொளி வீசும் காட்சிகள் படத்தின்  ஆரம்பத்திலும் இறுதியிலும் அஞ்சலி போல் அமைந்துவிடுகிறன. சேரிகள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. பின்னலாடையிலே  சுமங்கலித் திட்டக் கொடுமை வந்துவிட்டது. இடம் பெயர்ந்து வந்த வேற்று மாநிலத் தொழிலாளர்கள்… பாரீசின் சொகுசுத்தனம், ஆப்பிரிக்காவின் வறுமை இரண்டும் இங்கு சேர்ந்திருக்கிறது. வட மாநில பெண்களின் உழைப்புச் சுரண்டல், வார இறுதிகளில் அவர்கள்  விபச்சாரத்துக்கு பயன்படுகிற நிலை போன்றவை சொல்லப்படாதது குறையாக பலர் முன்வைக்கிறார்கள். இவற்றை முன்வைத்தே திருப்பூரைப் பற்றி இருபத்தைந்து ஆவணப் படங்களாவது எடுக்க பல பிரச்சினைகள் தலை விரித்து ஆடுகின்றன. ஆர்பி அமுதனின் முந்தைய 20 ஆவணப் படங்களின் நேரடித்தன்மை போல் இதில் இல்லை. ஆனால் ஒரு தொழில் நகரைக் காப்பாற்றும் ஆதிக்கச் சக்திகளின் மாயக் குரல்களின் கலவையை மறைமுகமாக அடங்கிய குரலில்  கேட்க வைக்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *